விஸ்வரூபம் வெளியிடுவதில் பிரச்சினை. இந்தியில் ‘ஓ மை காட்’ வெளியாவதில் பிரச்சினை எதுவுமே இல்லை.
விவகாரமான விஷயங்களை நாடகமாகப் போட்டால் எந்தப் பிரச்சினையும் வராது. கிரேசி மோகனின் ‘சாக்லேட் கிருஷ்ணா’ போல். அதை விட கதையாக எழுதி புத்தகமாகப் போட்டால் எந்த அரசியல்வாதியும் தடா போட மாட்டார்.
கடந்த இருபதாண்டுகளாகத்தான் பரேஷ் ராவல் படங்களுக்கு அறிமுகமாகி இருக்கிறேன். இதிலும் கலக்குகிறார். சிரமமான கருத்துகளை எதார்த்தமாக வாதாடுவதில் ஆகட்டும். புனித தொன்மங்களை இன்றைய நிலைக்கு ஏற்ப கேள்வி கேட்பதில் ஆகட்டும். காலத்திற்கு ஒவ்வாத கண்மூடி நம்பிக்கையை கிண்டல் அடிப்பதில் ஆகட்டும். வசனகர்த்தாவும் பரேஷும் பின்னுகிறார்கள்.
‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ படத்தில் வருவது போல், தெய்வத்துடன் டீல் போடாதீர்கள் என்கிறார்கள். ‘பித்தா புறைசூடி’ சுந்தரர் போல் கடவுளுடன் தோள் மேல் கை போடு என்கிறார்கள். தினகரன் & கோ, நித்தியானந்தா அண்ட் கோ மாதிரி சேல்ஸ் பசங்களை நம்பாமல் இறைவரை ஏழையின் சிரிப்பில் கண்டு கொள்ள அழைக்கிறார்கள்.
ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு எதிராகவும் தேவதூதர்களுக்கு போட்டியாகவும் விஸ்வரூபம் எடுக்க படத்தின் ஹீரோவிற்கும் மீடியா தேவைப்பட்டிருக்கிறது என்பதுதான் புதிய கடவுள் தரிசனம்.