உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
வெட்டிப்பயல் எழுத்து இளநீர் மாதிரி. சல்னு நேச்சுரலா உண்மையா இருக்கும்; கொஞ்சம் தேங்காய் சரக்கும் உள்ளே இருக்கும். அப்படி ஒன்று.
உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?
பாலாஜி, பாஸ்டன் என்னும் மின்னஞ்சல் கையெழுத்தை மாற்றிப் போட்டவர் பாரா(கவன்). பாபா என்றழைத்து மரத்தடியில் மதிமயங்கச் செய்தது பின்னர் பலர்.
உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர்; ஆயிரம் பேரில் வலைப்பதிபவர் அரை எழுத்தாளர் என்றால் ம்ஹும்; மற்றபடி பவர்லெஸ் பாபா என்பதால் ம்ம்ம்.
கடைசியாக அழுதது எப்போது?
போட்டு உடைத்த மாதிரி சொல்ல வெட்கப்படுவதால், சிறுகதையே உகந்தது; எனினும், ‘குட்டி‘ மாதிரி சினிமாப் படங்களுக்கு கூட கண் தளும்பும்.
உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
ஆங்கிலம் – ரொம்ப; தமிழ் – ஐஸ் க்ரீம் மாதிரி; துவங்கும்போது சப்புக் கொட்டும்; போகப் போக உருகி ஆறாக ஓடி, குச்சி குச்சியாய் நிற்கும்.
பிடித்த மதிய உணவு?
அலுவலில் இருந்தால் சத்து bar; அலுவல் உலாவில் அமெரிக்க நளபாகம்; வீட்டில் மோர்க்குழம்பு + ரசம் + பருப்புசிலி; சுற்றுலாவில் பீட்ஸா.
நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?
ஃபேஸ்புக்கில்தானே? உடனடியாய் நானும் பின் தொடர்ந்து விடுவேன். Hi5, Piczo, Bebo, Tagged எல்லாம் நட்பு வைத்துக் கொள்வதில்லை.
கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
பிறந்ததில் இருந்து சென்னை, நியு யார்க், சிகாகோ, பாஸ்டன் என்று கடற்கரை அலுப்பிலேயே வாசஸ்தலம் என்பதால், அருவி மீது பற்று.
ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
அறிமுகமானவர் என்றால் கையை – குலுக்க; இல்லை என்றால் முகத்தை – புன்சிரித்து வைக்க; அவர் பார்க்கவில்லை என்றால் – மே.கீ டு இ.வ.
உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
எதுவும் முடியும் என்று நம்பிக்கை வைப்பது; அதுவும் நம்மாலும் இயலும் என்று முயலாதது.
உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விசயம் எது?
பொறுமை; நான் புத்தகம் வாங்கிய நூல் மூட்டை தபாலில் வரும்போது, அதை காற்றில் பறக்க விடுவது.
மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்?
சமையல்.
இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
அக்கா.
இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
வெள்ளை அரைக்கை சட்டையில் சிவப்பு கோடுகள்; பழுப்பு காக்கி முழுக்கால் சராய்.
என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
வெக்கை பிடுங்கும் இரவில், குளிரூட்டப்படாத அறையின் மின்விசிறியில் காற்று வருகிறதா என்னும் சத்தம்.
வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கறுப்பு.
பிடித்த மணம்?
சந்தனம்; காபி; பட்சண வாசம்.
பிடித்த விளையாட்டு?
நான் கலந்து கொண்டால் கால்பந்து, ஃப்ரிஸ்பீ, ராக்கெட் பால்; கண்டு களிக்க கூடைப்பந்து, டென்னிஸ்.
கண்ணாடி அணிபவரா?
ஆமென்.
எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
எழுபத்தியோரு விமர்சனம் படித்தால் மட்டும் புரியக்கூடிய படமாக இராமல், அதே சமயம் சிறார்களும் நிராகரிக்கும் அறிவுகூர்மையற்ற மசாலாகவும் இல்லாதவை.
கடைசியாகப் பார்த்த படம்?
தொலைக்காட்சியில் ‘சேது‘; வெள்ளித்திரையில் முப்பரிமாண ‘Up‘
பிடித்த பருவ காலம் எது?
பிடிக்காதது – வசந்த காலம்; மற்றது எல்லாம் நேசிப்பேன்.
என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
1. What every American should know about the Middle East / Melissa Rossi
2. The Pushcart prize: Best of the small presses
உங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
படம் எல்லாம் போட்டால், கணினி வேகத்தைக் கட்டுப்படுத்தி இடத்தை அடைக்கும் என்பதால், வெறும் நீல நிறம்.
பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
நேரத்தே ட்ரெயின் வருவதன் அறிகுறியாக எழுப்பும் ஒலி இனிமை; அதைப் பிடிப்பதற்கு எழுப்பிவிடும் கடிகாரம் அலறம்.
வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
முதன் முதலாக நுழைவுத் தேர்வு எழுத தன்னந்தனியாக சென்ற காரைக்குடி. புதிய அறிமுகங்களுடன் அப்படியே பிள்ளையார்பட்டி, திருச்சி என்று உலாவியது.
உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
நாலாயிரம் வார்த்தை கட்டுரையின் சக்கை இதுதான் என்று முழுக்கப் படித்தோ படிக்காமலோ ட்விட்டுவது.
உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
கருக்கலைப்பும் செய்யாமல் காப்பாற்றவும் முடியாமல், வதவதவென்று மக்களைப் பெற்றுப்போட்டு, கடவுள் நம்பிக்கையில் பழிபோடும் பொறுப்பற்றவருக்கு வக்காலத்து வாங்குபவர்.
உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
சும்மாயிருக்காத பொழுதுகள்… நண்பரைக் குத்திக் கிழிக்கும்; பயனிலருக்கு சாமரம் வீசும்.
உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
ஜார்ஜ் ஏரி, ப்ளாசிட் ஏரி, நியு யார்க்.
எப்படி இருக்கணும்னு ஆசை?
இருபது கிலே கம்மியாக; ஒரு மணி நேரத்தில் ஐந்து மைலாவது ஓடுபவனாக; அம்மாவுடன் இன்னும் நேரஞ்செலவழிப்பவனாக; சம்பளத்தில் 5%க்கு மேல் தொண்டு நிதி ஒதுக்குபவனாக.
வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்க்கை வரிக்குதிரை மாதிரி. கருப்பு நிறைய இருக்கா, வெள்ளைக் கோடு நிறைந்திருக்கா என்றெல்லாம் கணக்கு பார்க்காவிட்டால் டக்காரா பறக்கும். Life Is What Happens When You Are Busy Making Other Plans.
நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
1. வார்த்தைகளின் விளிம்பில் – இவரைக் குறித்து அதிகம் தெரியாது. சமீப காலத்தில் நான் படிக்கத் துவங்கியதில், கவனிக்கத்தக்க வகையில், பொருளடக்கத்துடன் எழுதுகிறார்.
2. குரல்வலை – முன்பொருமுறை இந்த மாதிரி மீம் அழைப்பு விட்டிருந்தார். இன்னும் நான் அதை நிறைவேற்ற இயலவில்லை. அதற்காகவும், நீண்ட நாளாக அவரின் பதிவு கிடப்பில் இருப்பதாலும்.
3. கண்ணோட்டம் – நானும் இலக்கியவாதி என்பதற்கு அடையாளமாக, தமிழ்ச்சூழலில் புரியாத பெயர்கள் பலவற்றை அவிழ்த்துவிடும் பெரும்புள்ளியை அழைக்கும் ஒதுக்கீடு.
4. இகாரஸ் பிரகாஷ்: வித்தியாசமாக யாரையாவது தொடர அழைப்பார்; பதில்களில் அன்னியோன்யம் தொற்றிக் கொள்ளும்.
5. தேன் துளி: இவர்களை சந்தித்தவுடனேயே பதிவு போட வேண்டுமென்று ட்ராஃப்டில் வைத்து அது ஊசிப் போனதால், மன்னிப்பு விடு தூது.
பொறியியல் – கல்விக்கு அப்பால்: வாசகர் மறுவினை
பொறியியல் – கல்விக்கு அப்பால் கட்டுரை வாசித்தேன். தமிழ் பதிப்புலகில் அதிகம் பேசப்படும் சினிமாவும் அரசியலும் தவிர்த்த கட்டுரை என்ற அளவிலேயே கட்டுரை எடுத்துக் கொண்ட பேசுபொருளும், அதன் தொடர்பான எண்ணங்களும் முக்கியமானவை. மதிப்பெண்களைத் துரத்தும் கல்விமுறை குறித்தும் அசலான ஆய்வுகளை ஊக்குவிக்கும் வழிமுறைகள் குறித்த ஆசிரியரின் கருத்தோடு பெரும்பாலும் ஒத்துப் போகிறேன்.
எனினும், கட்டுரையில் ஆங்காங்கே தடாலடி பொதுமையாக்கங்கள் இருக்கின்றன. தான் அறிந்த சூழலை வைத்து, அதை இந்தியா முழுக்க நீட்டும் சூத்திரங்களும் இருக்கின்றன. இவை இரண்டும் கட்டுரை சொல்லும் கருவிற்கு பங்கம் உண்டாக்குகின்றன. பின்குறிப்பின் மூலம், இந்த வாதத்தை நிராகரித்து முற்றுப்புள்ளியும் வைக்கிறார்.
இப்பொழுது கேள்விகள்:
1. ஆராய்ச்சியைத் தூண்டும் கல்வியை ஊக்குவிக்க மூன்று காரணிகள் இருக்கின்றன: புதிய கண்டுபிடிப்புகளினால் ’செல்வம்’ சேர்க்கும் வாய்ப்பு; தேடலின் முடிவில் கிடைக்கும் சமூக ’அந்தஸ்து’; நாம் வாழும் உலகை மாற்றியமைக்கும் நாகரிகத்தை முன்னெடுத்தோம் என்னும் ஆத்ம ’திருப்தி’. இவற்றை இந்திய அமைப்புகள் தரும் சூழல் நிலவுகிறதா?
2. டிப்லோமா படிப்புகள் – இவை செயல்முறையை முன்னிறுத்தும் கல்வி. அவற்றை பொறியியல் படிப்போடு ஒப்பிட்டுப் பார்க்க இயலுமா?
3. மேற்குலகில் பொறியியல் படிக்காதவர்களும் பொறியியல் சார்ந்த வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இந்தியச் சூழலில் பொறியியல் பட்டயம் என்பது ”இவர் பொறுப்பானவர்; ஒழுங்காக வேலை செய்வார்; எதைக் கொடுத்தாலும் கற்றுக் கொள்வார்.” என்பதற்கான சான்றாதாரமாக விளங்குகிறதா?
4. கணிமொழியியல் – அமெரிக்காவில் கணித்துறை சார்ந்த வேலைக்கு பொறியியல் படிப்பு தேவையாக இருப்பதில்லை. பத்தாவது படித்தவரை வேலைக்கு அமர்த்துகிறார்கள். கணிவிளையாட்டுகளைக் கொண்டு பரிசோதித்து, அதில் திறம் வாய்ந்தவராக இருந்தால் கணினித்துறையில் நல்ல பதவியில் அமர்த்துகிறார்கள். இந்த நிலை இந்தியாவில் உருவாகுமா? (அதாவது பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்து, ஓரளவு பக்குவம் வந்தவுடனேயே, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள், மாணவர்களைப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றுவிடும். மூன்று வருடக் கால வேலை+பயிற்சிக்குப் பின் அசல் வேலையில் அமர்த்திக் கொள்வார்கள்.)
5. ஆராய்ச்சிக் கல்வி – இதற்கான சமூக அந்தஸ்து இந்தியாவில் எப்படி இருக்கிறது? நிறுவனத்தில் டைரக்டர், வைஸ் பிரசிடெண்ட் என்றால் அதிக மதிப்பு கிடைக்கிறதே! அதே சமயம் கண்டுபிடிப்புகளை காசாக்கும் சூழல் இந்தியாவில் எப்படி நிலவுகிறது?
6. மேற்குலகில் mentor எனப்படும் வழிகாட்டியை வாழ்நாள் முழுக்க துணையாக வைத்துக் கொள்கிறார்கள். இந்தியச் சூழலில், இதை மாமா, சித்தப்பா போன்ற குடும்ப உறவுகளும் கிராம சமூகங்களும் நிரப்பின. இன்றைய நகரமயமாக்கப்பட்ட நிலையில் உற்றாரின் ஆலோசனைகளும் கேட்பதில்லை. அண்டை வீட்டாரும் சொந்த விஷயங்களில் கருத்துச் சொல்வதை அந்தரங்கத்தின் குறுக்கீடாகவே எடுத்துக் கொள்கிறோம். இந்த வழித்துணைகளின்ம் உதவி கிடைத்தால் ஒவ்வொருவரின் தனித்தன்மையும் ஆர்வமும் தூண்டப் பெற்று ஆராய்ச்சிப் பாதைகளில் தெளிவு கிடைக்குமோ?
7. இதன் தொடர்ச்சியாக பத்ரி சேஷாத்ரி எழுதிய ”தமிழகத்தின் பல பொறியியல் கல்லூரிகளில் ஐ.டி என்ற பாடப்பிரிவை நீக்கியிருக்கிறார்கள்”, த.நி. ரிஷிகேஷ் ராகவேந்திரன் எழுதிய “தரகர், அலுவலர்,வேலை பெற்றுத் தருபவர் தேவை- ஆசிரியர்கள் தேவையில்லை” வாசிக்கப் பெற்றேன். தங்கள் கட்டுரையைப் போன்றே பெங்களூரூ சாணக்கியன் எழுதிய ‘வேலை’ கடிதம் வாசித்தீர்களா?
8. ஜெயமோகன் தளத்தில் கல்வியைக் குறித்தும் பாடத்திட்டத்தின் தேர்வுமுறைகள் குறித்தும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். அவற்றில் அவர் குழந்தைகளுக்குக் கொடுக்கும் சுதந்திரத்தையும் தான் பழகிய ஆசிரியர்களையும் கல்வி குறித்த செய்திகளையும் அலசுகிறார். அதில் குறிப்பாக பெற்றொரின் பங்கு குறித்து நிறைய எழுதியிருக்கிறார். நம்முடைய பெற்றோர் இட்ட கட்டளைக்குப் பணிந்து நடப்பது போல், பொறியியல் கல்விக்கு அப்புறமும் மேலாளரின் கட்டளைக்கு அடிபணிய விழைகிறோமா?
9. வேலைக்குப் புதியதாகச் சேரும் எவரையும் எந்த நிறுவனமும் உடனடியாக பொறுப்புகளை சுமத்துவதில்லை. அதிலும் கல்லூரியில் இருந்து புத்தம்புதிதாக வருபவரை இரண்டு வாரங்களுக்காவது தனிப் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். தங்கள் அலுவலில் பயன்படுத்தும் நுட்பங்களையும் வழிமுறைகளையும் விவரமாகக் கற்றுத் தருகிறார்கள். அதன் பிறகு இரண்டு மாதங்களுக்காவது, பரீட்சார்த்தமான வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்துகிறார்கள். மூன்று மாதம் ஆன் பிற்பாடு, நிஜ வேலைக்குள் நுழையும்போது துணை நிற்க அனுபவசாலி ஒருவரை கூடவே கண்காணிப்பாக வைக்கிறார்கள். இதை முதலீடாகக் கருதுகிறார்கள். இந்தியாவின் ஆய்வுத்துறையில் இவ்வாறு ஒவ்வொரு ஆராய்ச்சியாளருக்கும் தனிப்பட்ட கவனம் வழங்க பொருளும் மனிதவளமும் இருக்கின்றதா?
10. வாழ்க்கை ஆதாரமாக கல்வியும், அந்தக் கல்வியினால் கிடைக்கும் வேலையும் அமைந்திருக்கிறது. மேற்குலகில் இருபதில் இருந்து முப்பது வரை பரீட்சார்த்தமாக வாழ்வதை நடைமுறையாக வைத்திருக்கின்றனர். அதாவது, தனக்குப் பிடித்த விஷயத்தில் இளவயதில் தீவிரமாக இயங்குவது; அதில் வெற்றி பெற்றால் கோடிகளை அள்ளுவது; தோல்வி அடைந்தால் மீண்டும் கல்லூரிக்குச் சென்று வேறொரு பாதையைத் தேர்ந்தெடுப்பது. – ஒரு முறையோ, பல முறையோ கீழே விழுந்தால், அஞ்சாமல், கைதூக்கி ஊக்கமும் மீண்டும் நிதியும் கொடுக்கும் சமூக அமைப்பு இந்தியாவில் வர வேண்டுமா?
பின்னூட்டமொன்றை இடுக
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Analysis, ஆசிரியர், ஆய்வு, ஆராய்ச்சி, கல்வி, சம்பளம், சொல்வனம், ஜெயமோகன், திறமை, படிப்பு, பதில், பொறியியல், மாணவன், வேலை, Colleges, Comments, Compensation, Education, Employment, Engg, Engineering, Feedback, Jobs, Opportunities, Professors, Reply, Research, salary, Students, Study, Teachers, Tech, Technology, Thesis, University