புதுமையான சூழ்நிலை உதவுகிறது. சந்தேகமற்ற முறையில் மனவலுவால் நகர்த்தப்படுகிறது. தன்னைக் கட்டுப்படுத்திய சங்கிலிகளையும் உடல் பலவீனங்களையும் தள்ளிவைத்து துள்ளி எழுகிறாள் அம்மையார். அவளது “இல்லை” மறைந்து, அதன் இடத்தில் “புதியது” மற்றும் “இப்பொழுது” மலருகின்றன.
மார்ச், மா, மற்றும் சகுரா – கீதாஞ்சலி ஷ்ரீ எழுதிய இந்த கதையை அனுராதா கிருஷ்ணசாமி மொழிபெயர்த்துள்ளார். கதையின் மையமாக எழுபதுகளில் உள்ள முதியோள், ஜப்பானில் தனது மகனை சந்திக்க வருகிறார். ஆரம்பத்தில், அவள் தயக்கத்துடன் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்தாள்; தெரு முனைக்குக் கூட செல்ல மறுக்கிறாள். ஆனால் பிப்ரவரி, மார்ச் மாதங்கள் உருண்டோடிக்கொண்டிருக்கும் போது, அவளது மாற்றம் வெளிப்படுகிறது. மகனின் பார்வையில்—அதே நேரத்தில் கதையாசிரியையின் பார்வையிலும்—ஒரு முழு தேசமே அவளுடன் இணைந்து மலர்கிறது.
மகனின் பயணமும் கதைக்கு அவ்வளவு முக்கியமானது. தாய் மாறுவதோடு, ஒரு தாய், ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான மகனின் உள்ளார்ந்த எண்ணங்கள் வெளிப்படுகின்றன—அச்சத்துடனும் சந்தேகத்துடனும். பழையதை விட்டு வெளியேறுவது, மகனுக்கும் அவ்வளவு அவசியமான செயலாக மாறுகிறது.
சொல்வனம்.காம் மொழியாக்கங்கள் முக்கியமானவை. தி. இரா. மீனா, எம். ஏ. சுசீலா போன்றோர் தொடர்ந்து எழுதுவடு சிறப்பு,
அனுராதா கைவண்ணத்தில் தமிழுக்குக் கிடைத்த மறக்க முடியாத கதை.
”பொற்குகை ரகசியம்” எழுதிய ஜெகதீஷ் குமார் நோபல் பரிசு பெற்ற ஹான் காங் என்னும் எழுத்தாளரை அறிமுகம் செய்கிறார்.
இரண்டே மணி நேரம்தான் கெடு. அதற்குள் அப்படி ஒரு அடர்த்தி; அதே சமயம் எளிமை; எந்தவித சமரசங்களும் அவசரமும் இல்லாத அற்புதமான விருதுக் குறிப்பு!
இப்படிப்பட்ட எழுத்தாளர்கள் இருப்பது தமிழுக்குக் கிடைத்த கொடை. புனைவிலும் பின்னுகிறார்கள். விமர்சனங்களிலும் மிளிர்கிறார்கள். மொழியாக்கங்களுக்கும் சளைத்தவர்கள் அல்ல.
இலக்கியம் இனி நிறைய வளரும். வியுற்பன்னர்கள் நிறைய உருவாகும் தமிழ்.
எனக்கு நம்பி கிருஷ்ணன். எஸ். ராமகிருஷ்ணனால் பாடல் பெற்றவர். பி.ஏ. கிருஷ்ணன் மூலமாக அறிமுகம் ஆனவர். பாண்டியாட்டம், அவதரிக்கும் சொல், நரி முள்ளெலி டூயட் போன்ற நூல்களை எழுதியவர். சொல்வனம் என்றில்லாமல் பதாகை, தமிழினி, கனலி, வனம் என்று எல்லாவிடங்களிலும் விஷயதானம் வழங்குபவர்.
கோட் என்றால் ?
—> கோட்டம் – நம்பி தனக்கென நாடு வைத்திருக்கிறார். நாட்டம் பிடித்தவர்களை வாசிக்கிறார். விலாவாரியாக அனுபவிக்கிறார். நமக்கும் தருகிறார்.
—> கோட்டை – நம்பி அறிமுகப் படுத்திய டாவன்போர்ட் பற்றி இப்படிச் சொல்வார்கள். எட்கர் ஆலன் போ-வின் இறுதி ஊர்வலத்தில் கவிஞர் வால்ட் விட்மான் வருவார் குகையோவியங்களில் பிகாஸோ நடமாடுவார். எமர்சனும் தொரோவும் உரையாடுவார்கள்.
நம்பியின் அபுனைவுகளில் அந்தப் பாய்ச்சல் இருக்கும். ஒவ்வொரு பத்திக்கும் சில பல கூகுள் தேடல் தேவை. வார்த்தைகளுக்கு அகரமுதலியில் அர்த்தம் போதாது. பிரிட்டானிக்கா வேண்டும். முழு அனுபவமும் கிடைக்க மூல நூலையும் படித்து, அசல் இடங்களையும் சுற்றிப் பார்த்து, நம்பியுடனும் நான்கைந்து முறை பேசிவிட வேண்டும்.
அவருக்கு பிறந்த நாள். ’கோட்’ நம்பிக்கு வாழ்த்துகள்.
அவரின் புத்தம் புதிய கதையை சொல்வனத்தில் வாசித்து விட்டீர்களா?
ஆசானின் தளத்தில் அம்மாவைப் பற்றி பார்த்தபொழுதில் பெரிதும் மகிழ்ச்சியாக இருந்தது.
அதிலும் எங்கோ சிம்மாசனத்தில் காந்தியைப் போல், ராமானுஜரைப் போல், ரஜினியைப் போல் அமர்த்தி வைத்து பின்பற்றுவோனை “நண்பர்” என்று வேறு சொல்லியிருந்தது ஊக்கமும் பெருமிதமும் கொள்ள வைத்தது.
ஜெயமோகன் எப்பொழுதுமே செயல்வேகமும் தண்மையான பரிந்துணர்வும் கொண்டவர். அம்மாவும் ஒரு வகையில் அவ்வாறே. ஜெ.மோ. எப்பொழுது கடிந்து கொள்வார், எவ்வாறு அறச்சீற்றம் என்னை இடித்துரைக்கும் என்று புயல் கடந்த பிறகே உணர முடியும். அம்மாவும் ஒரு வகையில் அவ்வாறே. ஜெயம் என்றால் எழுத்துப் பிசாசு, கதைசொல்லி. அம்மாவும் ஒரு வகையில் அவ்வாறே.
விக்கி பக்கத்தைக் குறித்து அம்மாவிடம் காண்பித்தேன்; சொன்னேன்.
“நீயும் விக்கிப்பீடியா பக்கம் செய்யறேன்னு சொன்னே… என்னிக்காவது நேரம் கிடைக்கும்போது, ரிடையர் ஆனபிறகு செஞ்சுடுவே! நம்பிக்கை இருக்கு… ஒண்ணும் அவசரமில்ல!” என்றார்.
சொல்வனம் ஒலிவனம் வழியாக: தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி : ஒவ்வொரு புதன்கிழமையும் கேட்கத் தவறாதீர்கள்!
கூடிய சீக்கிரமே, Saraswathi Thiagarajan சரஸ்வதி தியாகராஜன் ‘தினம் ஒரு தொடர்’ போர்டு போட்டுவிடுவார்.
இப்போதைக்கு இவற்றை ஒலியும் ஒளியுமாகக் கொடுத்து வருகிறார்: 1. இரா. முருகனின் ‘மிளகு’ – #சொல்வனம் தளத்தில் வெளியாகும் பெருங்காப்பியம் (மாதத்தின் இரண்டாம் ஞாயிறு மற்றும் நான்காம் ஞாயிறு)
2. கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம்: செவ்வியல் இலக்கியங்கள்
அவருடன் ஜமீலா. ஜி என்பவரும், வித்யா அருண் என்பவரும் கூட இணைந்து செயல்படுகிறார்கள். சுகா எழுதிய கட்டுரைகளை வித்யா சுபாஷ் வாசித்து இருந்தார்.
தரையில் இறங்கும் விமானங்கள் இந்துமதியால் 1982-ல் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதப்பட்டு பின்னர் நூல்வடிவம் பெற்றது. பொதுவாசிப்புக்குரிய படைப்பு எனினும் நாடகத்தன்மை கொண்ட நிகழ்வுகளோ செயற்கையான உணர்வுகளோ இல்லாமல் எளிய உரையாடல்கள், ரசனையின் பரிமாற்றங்கள் வழியாகச் சென்று நிறைவுறுகிறது. எண்பதுகளின் உணர்வுநிலைகளை மிகச்சரியாக வெளிப்படுத்திய பொதுவாசிப்புக்குரிய நூல்களில் ஒன்று என அடையாளப்படுத்தப்படுகிறது (நன்றி: ஜெ. விக்கி)
இந்த நாவல், துரை இயக்கி அஜித் நடித்த திரைப்படமான ‘முகவரி’யை எனக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தது. இசைத்துறையில் ஆர்வமும் திறமையும் கொண்ட ஓர் இளைஞன் சினிமாவில் முட்டி மோதி தோற்றுப் போய் குடும்பச் சூழல் காரணமாக இறுதியில் பணிக்குச் செல்லும் கதை. இந்துமதியின் நாவலில் இருந்து துரை தூண்டுதல் பெற்றிருந்தாலும் ஆச்சரியமில்லை. அண்ணன், அண்ணி பாத்திரம் உட்பட திரைப்படத்திற்கும் நாவலுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இந்த நாவல், தொலைக்காட்சி தொடராக படமாக்கப்பட்ட போது விஸ்வம் பாத்திரத்தில் ரகுவரன் நடித்திருந்தார் என்று நினைவு. ஆனால் ‘முகவரி’யில் நாயகனுக்கு அண்ணனாக, அதாவது பரசு பாத்திரத்தை அவர் ஏற்றிருந்தார். (நன்றி: பிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணன்)
வலைபரப்பு – உங்களுக்குப் பிடித்த பாட்காஸ்டிங் வலையொலி நிரலி வழியாகக் கேட்கலாம் காணொளி – யூடியுப் கன்னல் வழியாகப் பார்க்கலாம்.
சொல்வனம் ஒலிவனம் வழியாக: தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி : ஒவ்வொரு புதன்கிழமையும் கேட்கத் தவறாதீர்கள்!
அன்னிய தேசத்திற்கு ஆயா வேலை பார்க்க போகும் எந்த இந்திய தாத்தா, பாட்டிக்கும் நடக்கக் கூடிய விஷயம் இது.
இதைப் போல் பல கதைகள் ஏற்கனவே வந்திருக்கின்றன:
“Everyday Use” by Alice Walker: ஆப்பிரிக்க அமெரிக்க சூழல்
“The Third and Final Continent” by Jhumpa Lahiri: இந்தியச் சூழல்
“The Joy Luck Club” by Amy Tan: சீன குடியேறிகளும், இரண்டாம் தலைமுறை அமெரிக்க மகள்களும்
எனினும் Gish Jen எழுதிய Who’s Irish? அதன் தமிழ் மொழிபெயர்ப்பால் மிளிர்கிறது. திறமையான மொழியாக்கம். எளிமையான, அணுகலான, சிக்கலற்ற நடை.
#Solvanam தளத்தில் படிக்கலாம்
Culture is the values, beliefs, thinking patterns and behavior that are learned and shared and that is characteristic of a group of people.Identities are constructed by an integral connection of language, social structures, gender orientation and cultural patterns.
மணி ரத்தினம் ஏன் பொன்னியின் செல்வன் சரித்திர புதினத்தைப் படமாக்கினார்? மூன்றாவது காரணம்: பாசிசம் அதன் வேர்களை அறிவொளியில் காண்கிறது.
யோஹான் வொல்ஃப்காங் வொன் கோயத் (Johann Wolfgang von Goethe) அமர்ந்த மரத்தடி ஜெர்மனியில் புகழ்பெற்றது. ஜெர்மானிய இலக்கியத்தில் இந்த கோயத் புலவருக்கு பெரிய இடம் கொடுத்திருக்கிறார்கள்.
யூதர்களைக் கொன்று குவிக்க பல வதை முகாம்களை நாஜிக்கள் கட்டினார்கள். அந்தக் கட்டிடங்களுக்கு அங்குள்ள பகுதிகளில் உள்ள எல்லா மரங்களையும் வெட்டி சாய்த்தார்கள். ஒரேயொரு மரத்தை மட்டும் விட்டு வைத்தார்கள். அந்த மரத்தின் நிழலில் அமர்ந்துதான் கோயத் தன்னுடைய கவிதைகளையும் காவியங்களையும் இயற்றினார். கோயத் என்ன எழுதினார் என்பதை நாஜிக்கள் மறந்து விட்டார்கள். கோயத் எழுத்தின் அர்த்தத்தை உணராமல் வெறும் நினைவுச்சின்னத்தை – கொலைகூடத்திற்கு நடுவாந்தரமாக குலப்பெருமையாக வைத்துக் கொண்டார்கள்.
இது போல் பொன்னியின் செல்வன் நாவல் என்ன சொல்கிறது என்பதைத் திரையில் கொணராமல், “சோழர்கள் நம் பெருமிதம்!” என்று நினைக்க வைக்க மணிரத்னம் கல்கியின் வரலாற்றுப் புனைவை சினிமாவாக மாற்றுகிறார். – இது மூன்றாவது காரணம்.
புஷென்வல்ட் (Buchenwald) கிராமத்தின் எல்லா மரங்களையும் வெட்டிச் சாய்த்திருந்தால் கோயத் அமர்ந்த மரமும் பத்தோடு பதினொன்றாகப் போயிருக்கும். சுஜாதாவின் “கரையெல்லாம் செண்பகப்பூ” மாதிரி… எந்த இயக்குநருக்கும் இலக்கிய கதையை வெள்ளித்திரைக்குக் கொணரத் தெரியாது என்று போயிருக்கும். ஆனால், லட்சக்கணக்கில் மக்களை அடைத்து வைக்க பயன்பட்ட முகாமின் முக்கிய இடத்தில் — கோயத் என்னும் பெரும்புள்ளியைக் கொண்டாட அந்தப் புலவரின் கருவாலி மரத்தை கூட்டாக இணைக்கிறார்கள். நாஜிக்களைப் பொறுத்தமட்டில், மரம் அழிக்க முடியாத அளவுக்கு மதிப்புமிக்கதாக இருந்தது.
இரண்டாம் உலகப் போரில் நடந்த குண்டு வெடிப்பில் அந்த மரம் இறக்கிறது. பட்டுப் போகிறது. தங்களின் பாரம்பரியத்தில் தாங்களே மண் வாரிப் போட்டுக் கொண்டதை இது உணர்த்துகிறது.
இந்த மரத்தைக் குறித்து கர்ண பரம்பரைக் கதை ஒன்றைச் சொல்லுகிறார்கள். இது இலையுதிர்க்கும் மரம். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் தன் இலைகள் அனைத்தையும் உதிர்த்து மொட்டை மரம் ஆகி விடும். அதன் பிறகு ஏப்ரல் மாதத்தில் துளிர்விட்டு பூப்பூக்கும். இந்த மரத்தை பார்க்கும் யூதக் கைதிகள், “இந்த மரத்தில் எந்த இளவேனிற்காலத்திலாவது மீண்டும் மொட்டுக்கள் மலராமல் இருக்கிறதோ, அப்பொழுதுதான் நமக்கு விடுதலை!” என விளையாட்டாகச் சொல்லிக் கொள்வார்கள். அதாவது, எப்போதும் நமக்கு சுதந்திரம் கிடைக்காது. வருடா வருடம் அது மீண்டும் மீண்டும் இலை உதிர்க்கும்; மீண்டும் மீண்டும் இலை மலரும்.
கை கூடா கனவு ஒரு நாள் நிறைவேறியது. விமானத்தில் போட்ட குண்டுத் தாக்குதலில் அந்த மரம் தீப்பிடித்து எரிந்தது. அதனால், அந்த வசந்த காலத்தில் மரத்தில் இலைகள் மீண்டும் மலரவேயில்லை. அது போல், பொன்னியின் செல்வன் கதையும் சிறைக்குள் பூட்டுண்டு இருந்தது. இன்று வெளியே வந்து சோழ வரலாறு பலரைச் சென்றடைந்துள்ளது.
“பொன்னியின் செல்வன்” கதை வாசித்து #PS1 பார்த்தவர்களை அந்த வதை முகாமில் சித்திரவதைக்குள்ளானவர்களாகப் பார்க்கலாம். பொ.செ.1 படம் எடுத்தவர்களை – நினைவுகூறப் பட வேண்டிய சரித்திரக் கதையைப் படமாக்குகிறோம் என்று சொல்லி புலவரின் பெருமையாக கருவாலி மரத்தை நடுக்கூடத்தில் கும்பிட்டவர்களாகப் பார்க்கலாம்.
அந்த மரம் போரின் இறுதியில் வெட்டப்பட்டது. இந்தக் கதை படத்தின் இறுதியில் சமாதி ஆகிறது.
இந்த மாதிரி நம் பாரம்பரியத்தை தமிழரின் பெருமையை இனத்தின் கலாச்சாரத்தை பல்லிளிக்க வைப்பது – – 3ர்ட் ரீசன்.
கோதண்டராம நதி என்பது, கழுகுமலைப் பிரதேசத்தில் உற்பத்தியாகும் சிறு வாய்க்கால். இதன் நீர் சிறிது உப்பாயிருப்பதால் உப்போடையென்றும் வழங்கப் பெறும்.
இந்த நதியைப் பற்றி கதையொன்று உண்டு. மானைத் தேடி வந்த இராமபிரான், தாக மிகுதியினால் பக்கத்திலிருந்த ஆனைமலையில் இருந்து ஆனைநதி (கஜநதி – கயத்தாறு) வருமாறு பணித்தார். இதில் வந்த நீர் உப்பாயிருக்கவே, தம் கோதண்டத்தைப் பூமியில் ஊன்றிக் கங்கையை வரவழைத்துத் தாகத்தைத் தீர்த்துக் கொண்டார்.
முக்கூடல் என்பது திருநெல்வேலி ஜில்லாவில் தாமிரவருணி நதியின் வடகரையிலுள்ள சிறு கிராமம், மூன்று ஆறுகள் கூடுமிடத்தில் இருப்பதால் முக்கூடலாயிற்று. முன் காலத்தில் சித்திரா நதியும் கோதண்டராம நதியும் இவ்வூரில் வந்து பொருநையில் கலந்தமையால், இவ்வூருக்கு இப்பெயர் வந்தது.
நடுத்தர வர்க்கம். சென்னைக்கு இடப்பெயர்வு. வானொலிப் பாடல் என அந்த நாள் நினைவும் நெல்லையும் கலந்துகட்டி வந்திருக்கிறது.
திருநெல்வேலி அல்வாவை விழுங்குவது போல எளிதாக எழுதுகிறார் வ.நி. அது வாசிப்பிற்கு நல்ல சௌகரியம்.
என் அம்மாவிற்கு சொந்த ஊர் கல்லிடைக்குறிச்சி. அது எழில் மிக்க சிற்றுார். கனடியன் வாய்க்கால் பற்றி கதை கதையாகச் சொல்வார். அதை எழுத வேண்டும் என்று நினைத்தேன். இங்கே வண்ணநிலவன் அமர்க்களமாகத் துவங்கியிருக்கிறார்.
நம்பியின் கட்டுரைகள் பல சமயம் நுழைவதற்கு தடுமாற வைக்கும். அதற்காக முன் பின்னாக வாசிப்பேன். கடைசி பத்தி, நடுவில் ஒரு பத்தி. இடையில் வரும் இன்னொரு அத்தியாயத்தின் முதல் பத்தி. அதன் பின் மீண்டும் இரண்டாம் பக்கத்தில் விட்ட இடத்தில் தொடர்வேன்.
ரொபெர்ட்டோ கலாஸ்ஸோ குறித்த அவரின் கட்டுரை அந்த மாதிரி தாவலை வேண்டாமல், நேரே வாசிக்க வைத்தது.
ஒன்று நம்பி வெகுஜன எழுத்தாளர் ஆகியிருக்க வேண்டும். அல்லது எனக்கு நம்பியின் எழுத்துக்கள் பிடிபட்டிருக்க வேண்டும்.
ஆனால், காரணம் இரண்டுமில்லை. இது எடுத்துக் கொண்ட துறை. அதன் பிறகு கொஞ்சம் லகுவாக சொன்ன விதம். வாசகரை எப்படி உள்ளே இழுப்பது என்பதை நம்பி திறம்படக் கற்றுக் கொண்டு விட்டார். அதனால், சற்றே அடர்த்தியையும் விஷய தானத்தையும் கட்டுரை நெடுகத் தூவ விட்டிருக்கிறார்.
இன்னொன்று இந்து மதக் கதைகள்; நன்றாக அறிந்த புராண விஷயங்கள்; இதிகாசங்களிலும் கர்ண பரம்பரையாகவும் சுலோகங்களாகவும் வேதங்களாகவும் சொல்லப்பட்ட தகவல்களை உவமானங்களை தத்துவங்களை அவர் கோர்த்துத் தந்திருக்கும் விதம் அபாரம்.
இப்படி படிக்கட்டு படிக்கட்டாக ஏற்றி நம்மை எங்கெங்கோ அழைத்துப் போகிறார். கிரேக்க தொன்மங்கள், எகிப்திய கடவுள்கள், ரோமானியப் புனைவுகள் – அப்புறம் தற்கால நபகோவ், டி.எஸ். எலியட் என்று நிகழ்கால ஜாம்பவான்களையும் கதம்பமாக்கி மாலையாக்கி இருக்கிறார்.
தமிழுக்கு எப்போதுமே நல்ல எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டேயிருப்பார்கள். இப்போது நம்பி.
விடியல் இலக்கிய இதழ் – பெண் எழுத்தாளர்களின் ஆக்கங்களை தாங்கி வெளியாகி இருக்கிறது.
இந்த இதழில் என் அம்மாவின் பேட்டியைக் கேட்டு வாங்கிக் கொண்டார் புதுவை ரா. ரஜினி. அவரின் தொடர்ச்சியான நினைவூட்டல்களும் நிலையான உறுதிப்பாடும் விடாமுயற்சியும் இல்லாவிட்டால் இந்த நேர்காணல் சாத்தியமாகி இருக்காது.
பலரும் இலக்கியம் என்றால் இன்ன வரைமுறை என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிலருக்கு ஆதர்சங்கள் – தலைவர்களைப் போன்ற ஆளுமைகள். சிலருக்கு கொள்கைகள் – மார்க்சியம், பெண்ணியம், சுற்றுச்சூழல் சிலக்கு கட்சிகள் – திராவிடம், கம்யூனிசம், இந்துத்துவம் சிலருக்கு கோட்பாடுகள் – முதலியம், சமத்துவம், சூழலியம் சிலருக்கு இயக்கன் க்கள் – செம்மொழி இயல், அறிவொளி இயக்கம், அபத்தவியல், இருத்தலியல், கட்டமைப்பு இயல், புனைவியல், புது புனைவியல், எதார்த்தம், மீ எதார்த்தம், நவீனத்துவம், பின் நவீனத்துவம், பின்காலனியத்துவம், பின்-பின் நவீனத்துவம்
இதெல்லாம் நம்பிக்கை சார்ந்தது. புதுவை எழுத்து என்றில்லாமல் எல்லோருக்கும் இடம்; புகழ் பெற்றவர்கள் என்றில்லாமல் அனைவரையும் அனைத்துப் போகும் குணம்; சுமார், பரவாயில்லை என்று பூரணத்துவத்தை மட்டும் எதிர்நோக்காமல் ஊக்குவிக்கும் மனோபாவம் – இதழுக்கும் இதழாசிரியர்களுக்கும் என் நன்றிகளும் வாழ்த்துகளும்.
குழந்தை இலக்கிய எழுத்தாளர் ஆர். பொன்னம்மாள் பேட்டியைப் படிக்க வாருங்கள். சந்தா கட்டுங்கள். ஆதரியுங்கள்!
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde