இந்த உலகக் கோப்பையில் நான் ரசித்த முதல் அம்சம் மயந்தி லங்கர்.
வெறுமனே கவர்ச்சிக்கும், ஊறுகாயாகத் தொட்டுக் கொள்ள பெண் தொகுப்பாளினியும் இருந்த காலகட்டம் காணாமல் போயிருக்கிறது. இவர், “நீயா… நானா?” கோபிநாத் ரகம். தரமான கேள்விகள்; சுனில் கவாஸ்கார் போல் ஒயிலான மிடுக்கு; காதில் வருவதையும் எதிராளி பேசுவதையும் நேரமும் இடமும் அறிந்து முன்னெடுக்கிறார்.
நான் மந்திரா பேடி காலத்தவன். அவர் டி.டி.எல்.ஜே (தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே) படத்தில் நடித்த ஒரே குற்றத்திற்காக, கிரிக்கெட் போட்டிகளிலும் நடுவே வந்து போனார்.
அதற்கும் முந்தைய ஹிந்தி மட்டுமே அரசாண்ட பிஷன் சிங் பேடி, லாலா அமர்நாத், கிஷோர் பேமானி, சுஷில் ஜோஷி போன்றவர்கள் பேச்சைக் கேட்டால், குளக்கரையில் கரையும் காகங்களின் இனிமை புரியவரும். ஹிந்தி தெரிந்திருந்தால் அந்த மொழியை இப்படியாக உபயோகிக்கக் கூடாது என்பதும் தெரியவரும். டிவியின் ஒலியை மொத்தமாகக் குறைத்துவிட்டு, வெறுமனே காட்சியை மட்டும் பார்க்கலாம். அதாவது, இளையராஜா பாடலை ரேடியோவில் ஒலிக்க விடுங்கள். தொலைக்காட்சியில் ஒரு நாள் போட்டி ஓடும்.
ஆங்கில காமெண்டரி எப்பொழுதுமே தேவலாம். நரோத்தம் பூரி போன்றவர்கள் ஜமாய்ப்பார்கள். எனினும், பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வர்ணனையாளர்களை எந்த இங்கிலீஷ்காரராலும் தொட இயலவில்லை. ரிச்சி பெனாட், டோனி கிரெக் – இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் சரிந்தால் கூட மென்மையாகச் சொல்வார்கள். ஸ்டீவ் வாக் வெளுத்து வாங்கினால் கூட குறைகளைச் சுட்டுவார்கள்.
அதன் பிறகு நிறைய பேர் வந்ததாகக் கேள்விப்பட்டேன். ஹர்ஷா போக்ளே, சித்து – இவர்கள் மைக்கை பிடித்த போது எனக்கு கிரிக்கெட் எட்டாத கனியாகி விட்டிருந்தது.
மீண்டும் ஐ.பி.எல். மூலமாக வந்த போது அறிமுகமான பெண் வர்ணனையாளர் மாயாந்தி. லட்சணமாக இருந்தார். இன்னொரு மந்திராவோ என மிரட்சியுடன் அலட்சியமாகக் கேட்டேன். சுனில் கவாஸ்கரின் ஒய்யாரமும் ரவி சாஸ்திரியின் ஆங்கிலப் புலமையும் கவனிக்க வைத்தது. ஆனால், அவரை பின் தொடர வைத்தது — அந்த ஆஸ்திரேலியாக்காரர்களின் வாக்கு வன்மை.
கொஞ்சம் தேடினால், என்னென்னவோ சாதித்து இருக்கிறார் மாயந்தி. எப்பொழுது இருந்தோ அளவளாவுகிறார் லங்கார். எதெதற்கோ நேரடி ஒலிபரப்பாளர் ஆக இருந்திருக்கிறார் லங்கர். கணவன் கூட புகழ் பெற்றவராம். நம்ம 83 ரோஜர் பின்னியின் மகனை மணமுடித்திருக்கிறார்.
சந்தோஷமாக இருந்தது. கிளப் ஆட்டம் போல் இறக்கிவிடப்பட்ட மசாலா பதார்த்தங்கள் இன்று லியோ சிங்கமாக முழுமுதல் திரையையும் காத்திரமாக ஆக்கிரமித்து விவரணையை விவரமாகத் தருவது – புதிய தலைமுறையின் சாதனை.
விடியல் இலக்கிய இதழ் – பெண் எழுத்தாளர்களின் ஆக்கங்களை தாங்கி வெளியாகி இருக்கிறது.
இந்த இதழில் என் அம்மாவின் பேட்டியைக் கேட்டு வாங்கிக் கொண்டார் புதுவை ரா. ரஜினி. அவரின் தொடர்ச்சியான நினைவூட்டல்களும் நிலையான உறுதிப்பாடும் விடாமுயற்சியும் இல்லாவிட்டால் இந்த நேர்காணல் சாத்தியமாகி இருக்காது.
பலரும் இலக்கியம் என்றால் இன்ன வரைமுறை என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிலருக்கு ஆதர்சங்கள் – தலைவர்களைப் போன்ற ஆளுமைகள். சிலருக்கு கொள்கைகள் – மார்க்சியம், பெண்ணியம், சுற்றுச்சூழல் சிலக்கு கட்சிகள் – திராவிடம், கம்யூனிசம், இந்துத்துவம் சிலருக்கு கோட்பாடுகள் – முதலியம், சமத்துவம், சூழலியம் சிலருக்கு இயக்கன் க்கள் – செம்மொழி இயல், அறிவொளி இயக்கம், அபத்தவியல், இருத்தலியல், கட்டமைப்பு இயல், புனைவியல், புது புனைவியல், எதார்த்தம், மீ எதார்த்தம், நவீனத்துவம், பின் நவீனத்துவம், பின்காலனியத்துவம், பின்-பின் நவீனத்துவம்
இதெல்லாம் நம்பிக்கை சார்ந்தது. புதுவை எழுத்து என்றில்லாமல் எல்லோருக்கும் இடம்; புகழ் பெற்றவர்கள் என்றில்லாமல் அனைவரையும் அனைத்துப் போகும் குணம்; சுமார், பரவாயில்லை என்று பூரணத்துவத்தை மட்டும் எதிர்நோக்காமல் ஊக்குவிக்கும் மனோபாவம் – இதழுக்கும் இதழாசிரியர்களுக்கும் என் நன்றிகளும் வாழ்த்துகளும்.
குழந்தை இலக்கிய எழுத்தாளர் ஆர். பொன்னம்மாள் பேட்டியைப் படிக்க வாருங்கள். சந்தா கட்டுங்கள். ஆதரியுங்கள்!
ஒவ்வொருவரைப் பற்றியும் அறிமுகக் குறிப்பு வேண்டும். ஒவ்வொரு படைப்பாளியுடனும் உசாவ வேண்டும். அனைத்து சமகால இலக்கியகர்த்தாக்களுடனும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
அருங்காட்சியகங்கள் சென்றிருப்பீர்கள். அதில் ஒவ்வொரு ஓவியத்தின் பக்கத்திலும் ஒரு குறிப்பு இருக்கும். எந்த வருடம் வரையப்பட்டது; எவர் வரைந்தார்; எந்த மாதிரிச் சூழலில் வரைந்தார்; அதற்கு முன் அவருடைய முக்கிய படைப்புகள் என்னென்ன? அதற்குப் பின் அவருடைய ஆக்கங்கள் எவ்வாறு உருமாறின? யாரைப் பற்றி அல்லது எதைப் பற்றி இந்த ஓவியத்தைப் படைத்தார்?
இன்னும் கொஞ்சம் ஆராய்ந்தால், அந்தத் தளத்தின் ஈசானிய மூலையில், அந்தத் தளத்தில் இடம் பெற்ற ஓவியர்களைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட காலகட்டங்களைக் குறித்தும் அரும்பொருட்களைக் குறித்தும் விரிவான வெளியீடு இருக்கும். அதில் ஓவியரின் பேட்டிகள், தற்கால ஆய்வாளர்களின் விமர்சனங்கள், முந்தைய ஆய்வுகள் குறித்த மேற்கோள்கள் – இன்ன பிற தாங்கிய நூலோ புத்தகமோக் காணக்கிடைக்கும்.
பேட்டிகளும் நேர்காணல்களும் முக்கியமானவை. முன்னுமொரு காலத்தில் காலச்சுவட்டின் ஒவ்வொரு இதழிலும் பாரிஸ் ரிவ்யூ போல் விரிவான சந்திப்புகள் காணக்கிடைத்தன. இன்றையச் சூழலில் படைப்பாளிகளும் இலக்கிய ஆளுமைகளும் பெருகி விட்ட காலத்தில் இந்த மாதிரி ஆழமான உரையாடல்கள் பன்மடங்கு அதிகரித்திருக்க வேண்டும். இதை இக்காலத்தில் அருண்பிரசாத் சற்றே சமரசங்களுடன் செய்கிறார். ஹிந்து நாளிதழின் தமிழ்ப் பதிப்பில் வெளியாவதால், அச்சுப் பதிப்புகளுக்கே உரித்தான இட நெருக்கடியுடன் அவர் செயல்படுகிறார்.
நேர்காணல்கள் வரலாறு – வாசிப்பு – அறிவியல்
ஆனால், இப்பொழுது இந்த மாதிரி தீவிர வாசிப்பும் அதன் தொடர்ச்சியான விரிவான பேச்சும், அதன் இறுதியில் அவற்றை வரிவடிவத்தில் பதிவாக்குவதும் அருகியேக் காணப்படுகிறது.
இருபதாண்டுகள் முன்பு நண்பர் பா ராகவனும் நேசமுடன் / கல்கி ஆர் வெங்கடேஷும் எனக்கொரு ஆலோசனையை முன்வைத்தார்கள். ஒருவரின் எல்லாப் புத்தகங்களையும் எடுங்கள். தி ஜானகிராமனோ அகிலனோ ஃபிலிப் ராத்தோ – அவரின் ஆக்கங்கள் அனைத்தையும் வாசியுங்கள். எதையும் விடாதீர்கள். கட்டுரைகள், துணுக்குகள், வாழ்க்கை வரலாறுகள், நினைவுக் குறிப்புகள், சண்டைகள், சச்சரவுக் கடிதங்கள், அறிவியல் புனைவுகள், துப்பறியும் கதைகள், சமூகக் கதைகள், அபுனைவுகள், ஓவியங்கள், கிறுக்கல்கள், கவிதைகள், மொழியாக்கங்கள், புனைப்பெயரில் எழுதியவை, அவர் எழுதியிருக்கக் கூடியதாக நம்பப்படும் கர்ண பரம்பரைக் கட்டுக்கதைகள் – எல்லாமும், எதையும் வாசியுங்கள்.
ஒரு வாரமோ / ஒரு மாதமோ கெடு வைத்துக் கொள்ளவும். அதன் பின் அவற்றைப் பற்றி நீங்கள் எடுத்தக் குறிப்புகளைத் தொகுங்கள். அவரிடம் என்ன கேள்வி கேட்க வேண்டுமோ, அவரின் படைப்பு குறித்த சந்தேகங்களைப் பற்றியோ, அவர் எழுத்து குறித்த விமர்சனங்களை முன் வையுங்கள். சும்மா, ஒரேயொரு சிறுகதையையோ, ஓரிரு நாவலையோ வாசித்துவிட்டு – எந்தக் கேள்வியையும் முன்வைக்காதீர்கள்.
நான் வி எஸ் நைபாலை கையில் எடுத்தேன். நான் கேள்விகளைத் தொகுப்பதற்குள் அவர் போய் சேர்ந்துவிட்டார்.
எனவே, இனிமேலும் இவ்வாறு முழுக்கக் காத்திருக்கப் போவதில்லை. ஒருவரின் அனைத்துப் படைப்புகளையும் முழுக்க வாசித்து, ஜீரணமான பின்பே – அவரிடம் கேள்விகளைக் கேட்கப் போவதில்லை. அந்த முடிவின் தொடக்கமாக கிரிதரன் அவர்களை #சொல்வனம் இதழுக்காக பேட்டி கண்டேன்.
இந்தியாவில் இருந்து வருபவர்கள் சொல்லும் கதைகள் சினிமாப் படங்கள் போல் நம்ப முடியாத காட்சிகள் கொண்டிருக்கின்றன.
இவர் டெல்லி பட்னியில் வேலை பார்த்தவர். வழக்கம்போல் நேர்காணல் எடுக்க சென்றிருக்கிறார். எட்டு விரல்களில் மோதிரம். கழுத்தில் காசு மாலை போல் தங்கச் சங்கிலி. கேட்ட கேள்விகளுக்கு போட்டிருக்கும் இரத்தினாபரங்கள் மாதிரி இல்லாமல் ஒற்றை வார்த்தை பதில்.
“மூன்று எண்களைக் கொடுத்து, அதற்குள் பெரிய எண்ணை கண்டுபிடிக்கச் சொல்லும் நிரலி எழுது.”
“எதற்குங்க எழுதணும்? பார்த்தாலே எது பெருசுனு தெரிஞ்சுடாதா…”
“உங்களுக்கு பிடித்தமான கணினி மொழி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சி++, ஜாவாஸ்க்ரிப்ட்… நீங்கள் எப்படி எழுதுவீர்கள்?”
“அதான் சொன்னேன் இல்ல… சின்னக் கணக்கு கூட தெரியாமலா, கோடிங் செய்வாங்க?”
வார்த்தைகள் ஆக்ரோஷமாக வந்து, இண்டர்வ்யூவிற்கு வந்த ஆபரணதாரி கையை ஓங்கி விட்டார். அலறிக் கொண்டு ’ஆதிமூலமே என்னைக் காப்பாற்று’ என்று மனிதவளத்திடம் சரணாகதி அடைகிறார் கதைசொல்லி. அவர்களும் தங்களின் வாயிற்காப்போனை அழைத்து, வில்லனை விரட்டி விடுகிறார்கள்.
சில மணி நேரம் கழிகிறது. ஜிப்ஸியில் பதினான்கு பேரை அடைக்க முடியுமா? அடியாட்களுடன் வந்த ஆபரணதாரி, இப்பொழுது சோடா பாட்டில் வீசுகிறார். பட்னி சிப்பந்திகள் எல்லோரும் கொல்லைப்புறம் வழியாக பத்திரமாக அனுப்பிவைக்கப் படுகிறார்கள். அதிகாரபூர்வமாக மூன்று நாள் ஓய்வு விடுமுறை எடுத்துக் கொள்ளுமாறு பட்னி பணிக்கிறது.
வாரயிறுதி முடிந்து வந்து பார்த்தால், புதிதாக ஐந்து பேர் வேலையில் இணைந்திருக்கிறார்கள். கஃபேடேரியா பக்கத்தில் உள்ள முக்கு கலந்தாய்வு அறையை அவர்களின் அலுவலகமாக மாற்றி இருக்கிறார்கள். ஆபரணதாரியும் அவனுடன் சோடா பாட்டில் வீசிய பதினால்வரில் நால்வர் மட்டும் அவன் உடன் வேலைவாய்ப்பு பெற்றிருக்கின்றனர்.
விக்கித்துப் போனவனைத் தட்டிக் கொடுத்து மனிதவளம் சொல்கிறது: “இனிமேல் நீ எசகு பிசகாக கேள்வி கேட்டாலும் பிரச்சினையில்லை. நம்ம கிட்டயும் ஆள் இருக்காங்க. கவலைப்படாம இண்டர்வ்யூ செய்!”
சித்த மருத்துவராய்ப் பணியாற்றும் இவர், சென்னையில் வசிக்கிறார். சில செய்திப் படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். 15-6-1974-இல் திருவெறும்பூரில் பிறந்தவர். இனவரை மருந்தியல் துறையில் (சித்த மருத்துவத் துறையில்) முனைவர் பட்ட ஆராய்ச்சி. இவர் 90களில் எழுதத் தொடங்கினார். ‘பனிக்குடம்’ எனும் இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்தார், பெண்சார் திரைப்படங்கள் குறித்துத் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். பெண்சார் திரைப்பட இயக்கமான ‘கண்ணாடி’யில் முனைப்பாகப் பங்கு கொண்டுள்ளார். சில செய்திப் படங்களின் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். தற்போது துணை இயக்குநராக இருக்கிறார். ஆங்கிலக் கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார்.
அவர் சிறந்ததொரு புகைப்படக் கலைஞர். காந்திக்கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையும் பாரதியார் ஆய்வகமும் நடத்திய “பாரதிக்குப் பின் : பெண்ணும் கவிதையும்” கருத்தரங்கில் “பெண்ணியக் கவிதை : அதன் கலைச்செயல்பாடும் சமூகப் பயன்பாடும்” தலைப்பில் பேசினார். இடிந்தகரை அணு உலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். 2011ல் Audi Ritz Icon விருது பெற்றார். சிவகாமியின், ‘கதவடைப்பு’ கவிதை நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார்.
இவர் கவிதைகளில் பிரமிளை நினைவூட்டும் உணர்வுத் தீவிரம் தெரிகிறது. தேவதேவனின் இயற்கை ஈடுபாடு ஆகிய பாதிப்பும் உண்டு. இருவரும் இவருக்கு ஆதர்சங்கள். K.M. இசை நிறுவனத்தின், ‘பெண் எழுச்சியை’ மையமாகக் கொண்ட “இரசாயன ரோஜாக்கள்” ஆல்பத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இஷ்ரத், ரிஹானாவின் குரல்களில் ‘என்னிலே மகா ஒளியோ!’ என்றொரு பாடல் எழுதியிருக்கிறார். இவருடைய கவிதைகளை கல்யாணராமனும் லஷ்மி ஹோம்ஸ்ட்ரமும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
பரதவர்களின் வாழ்வியலை ‘ஆழி சூழ் உலகு’ புதினத்தில் பதிவு செய்த ஜோ.டி. குரூஸ் வசனகர்த்தாவாகப் பணியாற்றியுள்ள ‘மரியான்’ திரைப்படத்தில், இரண்டாண்டுகளுக்கு மேலாக கவிஞர் குட்டி ரேவதியும் இணை இயக்குநராகப் பணியாற்றியதோடு ஒரு பாடலையும் எழுதியுள்ளார். இயக்குநர்களுக்கு திரைக்கதையை எழுதும் பணியைச் செய்து வருகிறார். சில திரைப்படங்களுக்கும், ஆல்பங்களுக்கும் பாடல்கள் எழுதுகிறார். மெல்ல, தான் இயக்கவிரும்பும் திரைப்படத்திற்கான பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வேன் என்கிறார்.
பெண் இயக்குநர்களுடன் இணைத்து, ‘விறலி விடு தூது’ என்னும் திரைத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். மூலக்கதை ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர், திரை இயக்குநர், திரைத் தயாரிப்பாளர் இவர்களை ஒருங்கிணைத்துத் திரைப் படைப்புகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதுதான் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மையான நோக்கம். ’விறலி’ என்றால் கலைகளை வளர்ப்பவள் என்பது பொருள்.
கடவுள் நம்பிக்கை இல்லாத இவர், கௌதம புத்தரின் ‘விபாஸனா’ என்ற யோகக்கலையின் மீது விருப்பம்கொண்டு அதைக் கடைப்பிடித்து வருகிறார்.
அவரின் குரலில், அவரைப் பற்றி:
” மலைகள் சூழ்ந்த இயற்கை சூழலில்தான் நான் வளர்ந்தேன். பதினைந்து வயது வரையில் எனக்கு திருவெறும்பூர் தவிர்த்து வேறு எந்த ஊருடனும் பெரிதாகத் தொடர்பு இல்லை. என்னுடைய அந்தக் காலகட்டங்களை முழுக்க முழுக்க திருவெறும்பூர்தான் ஆக்கிரமித்து இருந்தது. அங்குதான் நான் எட்டாம் வகுப்புவரை ஒய்.டபிள்யூ.சி.ஏ. எனும் தமிழ்ப் பயிற்றுப் பள்ளியில் படித்தேன். என்னுடைய இளமைப் பருவத்தில் எனக்குத் தேவையான நம்பிக்கையையும் தெம்பையும் அந்தப் பள்ளிதான் வழங்கியது. அங்கு இருந்த ஆசிரியர்கள் பள்ளிக் குழந்தைகளை தங்கள் குழந்தைகளாகப் பாவித்துக் கல்வி கற்பித்தனர். எங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே அப்படி ஓர் இணக்கமான சூழல் நிலவியது. கட்டுரை, பேச்சு என அனைத்து போட்டிகளிலுமே நான் பங்கெடுத்துப் பரிசுகள் பெற்றிருக்கிறேன். இன்றுகூட என்னால் 1,330 திருக்குறளையும் முழுதாகச் சொல்ல முடியும். இதற்கெல்லாம் காரணம், என் பள்ளி ஆசிரியர்கள்தான்.
திருவெறும்பூரில் எறும்பீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆதிச்சசோழன் காலத்தில் அவன் பெற்ற வெற்றிகளைத் தொடர்ந்து காவிரிக் கரையோரம் வரிசையாகக் கட்டிய பல கோயில்களில் இதுவும் ஒன்று. மாலை நேரங்களில் பள்ளி முடித்துவந்து உடை மாற்றிவிட்டு எறும்பீஸ்வரர் கோயில் வளாகத்தில் எங்கள் அப்பாவோடு நானும் என் தம்பி தங்கையும் நடப்பதை வழக்கமாகவே வைத்து இருந்தோம். அப்போது என் தந்தை எனக்கு சொல்லிக்கொடுத்த தேவாரமும் திருவாசகமும் அப்படியே என் மனதில் பதிந்துள்ளது. பொதுவாக எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், அந்த இலக்கியங்களில் இருந்த மொழிநடை என்னை மிகவும் ஈர்த்தது. எறும்பீஸ்வரர் கோயில் பற்றிப் பேசும் இந்த நேரம் எனக்குக் கோயில் பிரகாரத்தில் வீசும் காற்றின் சுகந்தம் நினைவுக்கு வருகிறது.
பி.ஹெச்.எல். டவுன்ஷிப்பில் இருந்த நூலகம் எனக்கு இன்றியமையாத ஒன்று. பள்ளியில் படிக்கும்போது பேச்சு, கட்டுரை போட்டிகளுக்குத் தேவையான தகவல்களைச் சேகரிக்கச் சென்றபோதுதான் அந்த நூலகம் அறிமுகம் ஆனது. கூடவே எழுத்தின் வழி சுஜாதாவும் பாலகுமாரனும் அறிமுகமானார்கள். சங்க இலக்கியங்களைத் தேடித்தேடி படிக்க ஆரம்பித்தேன்.
பி.ஹெச்.எல். போகும் அந்தப் பிரதான சாலையை என்னால் மறக்கவே முடியாது. ஏனெனில், அங்குதான் நான் முதன்முதலாக சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டேன். இன்றும் அந்த இடத்தைப் பார்க்கும்போது என்னால் அந்த நினைவுகளை மீட்க முடிகிறது.
எனக்கு அப்போது வசந்தி, ஜோதி, மீனா என மூன்று நெருங்கிய தோழிகள் இருந்தனர். நாங்கள் மூவரும் திருச்சியின் அழகை முழுதாக ரசித்தோம். 80-களின் இறுதியில் அப்படி எல்லாம் பெண் பிள்ளைகள் சுதந்திரமாக இருப்பது சாதாரண விஷயம் இல்லை. அந்த விஷயத்தில் என் அப்பா எனக்கு முழு சுதந்திரத்தை அளித்திருந்தார்.
என் அப்பா சுயம்புலிங்கம் பி.ஹெச்.எல். நிறுவனத்தில் ஒரு சாதாரண கடைநிலை ஊழியராகப் பணியாற்றியவர். இருப்பினும் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க மிகவும் பாடுபட்டவர். அப்படிப்பட்ட என் தந்தையை நான் கடைசியாகப் பார்த்தது திருவெறும்பூர் ரயில் நிலையத்தில்தான். நான் சென்னையில் இருந்தபோது அவர் மாரடைப்பால் இறந்துபோனார். அதன் பிறகு நான்கு வருடங்கள் திருவெறும்பூருக்கு வரவே இல்லை. ஏனெனில், அவருடைய ஞாபகங்கள் என்னை மிகவும் பாதித்து இருந்தது. நான் மிகவும் நேசித்த திருவெறும்பூரை அந்தக் காலகட்டத்தில் கொஞ்சம் வெறுத்திருந்தேன் எனச் சொல்லலாம்.
இன்றும் திருவெறும்பூர் திருவேங்கட நகரில் எங்களுடைய சொந்த வீடு இருக்கிறது. வேலை காரணமாக அடிக்கடி ஊருக்கு வரமுடியவில்லை என்றாலும், வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் தவறாமல் இங்குவந்து திருவெறும்பூரின் அழகை ரசிக்க நான் மறப்பதில்லை!”
2012 புத்தகக் கண்காட்சி
1. மாமத யானை – புதிய கவிதைத் தொகுப்பு (வம்சி வெளியீடு)
இது என்னுடைய ஆறாவது கவிதைத் தொகுப்பு! எத்தனை நூல்கள் வந்தாலும் கவிதை நூல் தரும் களிப்பை வேறு ஏதும் தர முடிவதில்லை!
கவிதைக்குள் தான், நான் என் முழு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் நிறைத்துத் தரமுடிகிறது! பல சமயங்களில், நான் கவிஞரின்றி வேறு யாருமல்ல என்று கூடத் தோன்றுகிறது! மற்ற எனது ஆளுமைகள் எல்லாம் அதை ஒட்டியிருக்கும் பிசிறுகள் தாம்! அடுத்தடுத்தக் கட்டத்திற்கான முந்தைய கட்டமாக ஒரு கவிதை நூல் மாறி, என் அகவெளியை உறுதிசெய்கிறது! உரமூட்டுகிறது! சகப் படைப்பாளிகளினும், வாசகர்கள் தாம் என்றும் என் ஊக்கமாயிருந்திருக்கிறார்கள்! எனக்கு நிழலாயிருந்திருக்கிறார்கள்! இந்தப் படைப்பும் அவர்களால் தான் சாத்தியமாயிற்று என்று நம்புகிறேன்!
2. ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப்பிரதிகள் – தம் உடலரசியலால் தமிழ் எழுத்தின் மரபை மாற்றியமைத்த தமிழ்ப்பெண் கவிதைகள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு (நாதன் வெளியீடு)
3. இந்தக் கோடைக்காலத்தை உனக்காகவே அழைத்துவந்தேன் – காதல் கவிதைகள் தொகுப்பு (ஆழி பப்ளிஷர்ஸ்)
4. முதல் காதல் அனுபவங்கள் – வெவ்வேறு படைப்பாளிகளின் உணர்ச்சிப்பூர்வமான முதல் காதல் அனுபவங்களின் தொகுப்பு (ஆழி பப்ளிஷர்ஸ்)
5. நிழல் வலைக்கண்ணிகள் – பெண்ணிய அரசியல் கட்டுரைகள் (வம்சி வெளியீடு)
– Book of feminist essays, predominantly discuss caste, gender and body.
பெண்ணியக் கட்டுரைகளளின் பெருந்தொகுப்பு. தமிழகத்தில் பெண் உரிமை கோரும் இயக்கங்கள், நிறுவனங்கள், தளங்கள், உரையாடல்கள் பலமுறை எழுந்தும் அவை முழுமையான வடிவம் எடுக்காதபடிக்கு, தனி நபர் அல்லது குழுவினரின் ஆதிக்கத்தால் தீவிரமாக ஒடுக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் அது சுயநலம், சுயலாபம் பொருட்டாகவே இருந்திருக்கிறது. இன்று அதற்கான விளைவுகளைப் பெருவாரியாக நாம் அனுபவித்தும் இறுக்கமான மெளனம் கடைபிடிக்கப்படுகிறது. அந்நிழல் வலைக்கண்ணிகளை எழுத்தின் வழியாக என் இடத்திலிருந்து பார்த்திருக்கிறேன். அவ்வலைக்கண்ணிகளை நாம் இனம் காண இந்நூல் ஒரு கையேடாக இருப்பின் மகிழ்வேன்!
6. யானுமிட்ட தீ – கவிதைத் தொகுப்பு (அடையாளம் வெளியீடு) (2010)
சாதியப்படுத்தப்பட்ட மூடுண்ட மனித உடலை இக்கவிதைகள் இயல்பூக்கத்துடன் திறக்கின்றன. உடலையே இயக்கமாக்கி அதை அதன் ஆதி நிலைக்குத் திருப்புகின்றன. தொல் அறத்தை மீட்டெடுக்கின்றன. வரலாற்றிலிருந்து உடலின் விடுதலை என்பது மோதலில் மட்டுமே நிகழ முடியும். அத்தகைய மோதலின் உக்கிரமான ஒரு புள்ளியில் இக்கவிதைகள் பீறிடுகின்றன. இதுவே இக்கவிதைகளை உயிர்த்துடிப்புடன் இயங்க வைக்கிறது.
7. ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’ (2000)
தொண்ணூறுகளில் கவனம் பெற்ற முக்கியமான கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இக்கவிதைகள் கோபம் கொள்கின்றன; காதல் வயப்படுகின்றன; காமம் துய்க்கின்றன.. வாழ்வின் வெம்மை பொறுக்க முடியாமல் போகும்போது நிழலைத் தேடும் மன நிலை, ஜீவிதத்தின் உயிர்த்துடிப்பு, பேரனுபவத்தை சுட்டிக் காட்டும் தன்மை; இருமை எதிர்வுகளை வெகு இயல்பாகப் படிமமாக்கிக் காட்டும் அழகியல் ஆகியவற்றுடன் இயங்கும் இக்கவிதைகள் தங்கள் அளவில் தனித்து நிற்கின்றன. ஆணால் வடிவமைக்கப்பட்டு பெண்ணுக்கு வழங்கப்பட்ட பெண் சிந்தனையைப் பார்த்து கெக்கலி கொட்டிச் சிரிக்கின்றன. புதிய சொல்லாட்சிகளும், புதுப்புது சொல்லிணைகளும், மின் தெறிப்பாய் தெரிந்து மறையும் படிமங்களும் இக்கவிதைகளை நினைவுகூறுமாறு செய்கின்றன.
8. ‘முலைகள்‘ (2002)
பெண்ணின் உடலரசியலைப் பேசும் இந்தப் பிரதி முலைகள் துடைத்தகற்ற முடியாத இரு கண்ணீர்த்துளிகள் என்று அறிவித்து பெண்ணை நுகரும் உடலாகப் பார்க்கும் ஆணாதிக்கப் பொதுப்புத்தியைத் தகர்க்கிறது. இத்தொகுப்பில் இயங்கும் கவிதை மனம் வாழ்க்கையின் முட்களில் சிராய்த்துக் கொண்டு கண்ணீர் வடிக்கிறது. அதே சமயத்தில் வாழ்வின் அதீதமான தருணங்களை போகிற போக்கில் தரிசிக்கவும் செய்கிறது. உத்வேகத்துடன் அலைவுறும் கவிதை மனம் விடுதலை வேட்கையுடன் இயங்கும் இக்கவிதைகளில் படிமங்கள் அழகாகக் கைகோர்க்கின்றன. இயல்பான தன்மையுடன் நடனமாடுகின்றன.
9. ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’
நவீன தமிழ்க்கவிதை வெளியில் பெண் குரல், பெண் உடல், உடலரசியல் போன்ற தளங்களில் ஒலிக்கும் ஒரு குரலை இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பதிவு செய்திருக்கின்றன. ஏக்கம், நிராசை,காமம், மரணம் போன்ற அனுபூதிகள் இக்கவிதை வரிகளில் சாகாவரம் பெற்று இயங்குகின்றன. இயற்கையின் மீதான அவதானிப்பு இக்கவிதைகளில் பெண்ணியத்தின் குறியீடுகளாக மிளிர்கிறது. பெண்ணிடமிருந்து விலக்கப்பட்ட சொற்களை இவை துணிந்து உச்சரிக்கின்றன. அந்தச் சொற்கள் ஆணாதிக்க மனத்தின் செவிப்பறைகளில் போய் மோதி அதிர்கின்றன. இதுவே இத்தொகுப்பை பிற கவிதைத் தொகுப்புகளிலிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டுகிறது.
10. ‘உடலின் கதவு’ கவிதை நூல் அடையாளம் பதிப்பகத்தால் மறு பதிப்பும் பெற்றுள்ளன.
ஆணாதிக்கச் சமூகத்துக்கெதிரான ஒரு பெண் மனத்தின் சீற்றம் இக்கவிதைகளில் தெறிக்கிறது.காமம், புணர்ச்சி,கருவுறுதல் என்று விரியும் குறியீடுகள் இந்தப் பிரபஞ்சத்தையே ஒரு பெண்ணின் உடலாகவும், ஒரு பெண்ணின் உடலையே பிரபஞ்சமாகவும் உருவகித்துக் காட்டுகின்றன. கவிதை வரிகள் தோறும் படிமங்களும், தொடர் உருவகங்களும் காட்டாற்று வெள்ளம் போல் பிரவகித்துப் பாய்கின்றன. சில தருணங்களில் வெள்ளம் வடிந்த பின் படியும் நுரையாய் மனத்தில் ஒட்டிக் கொள்கின்றன. கவிதையில் உற்பவிக்கும் உணர்ச்சிப் பெருக்கு கவிஞரிடமிருந்து வாசகனையும் தொற்றிக் கொள்ளும் அதிசயம் இந்தத் தொகுப்பில் சாத்தியப்பட்டிருக்கிறது.
11. கட்டுரை நூல் – காலத்தைச் செரிக்கும் வித்தை (2009)
12. முத்தத்தின் அலகு
ஆழி பதிப்பகத்தின் செந்தில்நாதன், என் காதல் கவிதைகளை நூலாக வெளியிட தொகுத்துத் தரக் கேட்டபோது, உண்மையில் அது ஒரு விநோதமான அனுபவமாகவே இருந்தது. ‘காதல்’ பற்றிய நமது சமூகத்தின் குரல்களும் தனிமனிதக் குரல்களும் எப்போதுமே முரண்பட்டிருக்கின்றன. நுணுகிப் பார்த்தால், ஒடுக்குமுறையை ஆதரிக்குமொரு மனம் தான் காதலை எதிர்க்கிறது! அல்லது, தன்னளவில் உருவான ‘காதல் உணர்வை’ எதிர் நபருக்குச் சரியான முறையில் தெரிவித்து, அதைச் சாத்தியப்படுத்திக் கொள்ள முடியாமல் போனவர்கள் தாம் காதலை எதிர்த்திருக்கிறார்கள்! இன்னொரு மனிதருடன் என்றால், அம்மனிதரின் குடும்பம், வர்க்கம், சாதி, மதம், மனம், உடல், நிறம் என எல்லா பேதங்களுடனும் மோத வேண்டியிருக்கிறது, இல்லையா! ஆனால், இதையெல்லாம் தாண்டி காதல் என்பது தனிமனித அளவில் மிகவும் தூய்மையா கவும் நேர்மையுடனும் உணர்ச்சிப்பூர்வமாகவும் இருக்கிறது!
என்னளவில் காதல் இன்னும் இன்றும் அழகானதாகவே இருக்கிறது! என் காதல் கவிதைத் தொகுப்பிற்கு, ‘முத்தத்தின் அலகு’ என்று பெயரிட்டிருக்கிறேன்.
13. ‘இடிந்த கரை’ நூல் – கடல், பெண்கள், கவிதைகள்
14. ‘முள்ளிவாய்க்காலுக்குப் பின்’ என்ற பெயரில் ஈழத்து இனப்படுகொலையை வைத்து புலம்பெயர்ந்த ஈழப் படைப்பாளிகள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
காதல் குறித்து:
நான் எப்பொழுதும் காதலின் பக்கம்.
எல்லா ஆண்களும் ஒரே மாதிரி தான் என்பதே என்னுடைய கருத்து என்றாலும், பெண்ணிடம் காதலை வெளிப்படுத்துவதில் மட்டும் தான் ஒருவரிடமிருந்து மற்றவர் வேறுபடுகிறார் என்பது என் முடிந்த முடிபு.
வீட்டில் ‘தந்தை அன்பின்’ போதாமையால், ‘சகோதர அன்பின்’ போதாமையால், ‘ஆண் அன்பின்’ போதாமையால் மகளின் காதல் வேகம் பெறுகிறது, வீர்யம் பெறுகிறது. காதல் வழியாக எல்லா ஆண்களிடமும், மகள் தந்தையைத் தான் தேடுகிறாள். தவறாகி, பிழையாகி, பின் ஏதோ ஒரு மட்டில் காதல் நிறைவாகும் வழிகளைத் தேடிக் கொள்கிறாள். தந்தையின் முழுமையான அன்பைப் பெறும் மகளும் காதலில் தன் தந்தையைத் தான் தேடிக் கொண்டிருப்பாள், ஆண்களில் காதலைத் தேடுவதற்குப் பதிலாக.
நான் எப்பொழுதும் காதலின் பக்கம். இன்னும் மானுடம் வெல்ல நம்மிடம் இருக்கும் ஒரே அறிவு காதலே. இதே வார்த்தைகளில் அம்பேத்கர் சொல்லவில்லை என்றாலும், சாதியை வெல்லவும் நம்மிடம் இருக்கும் ஒரே வெளிப்பாடு காதலே.
///ஆண்கள் எப்படி பெண்களைக் கொச்சைப்படுத்துகிறார்களோ பாலியல் உறுப்புகள் குறித்து எழுதுகிறார்களோ அதைப் போலத்தானே இவர்களும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்… இவர்கள் எப்படிப் பெண்ணியவாதிகளாக இருக்க முடியும் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். அதற்கு என்னுடைய பதில் என்னவென்றால் ‘நாங்கள் முன்வைக்கும் அரசியல் வேறு’என்பதாகும்.///
இதற்கு கவிஞர் சரியான பதிலை சொல்ல வில்லையோ என்று தோன்றுகிறது.
http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/I_Year/matt01/html/mat01007pp2b.htm
‘ஒளி சொட்டச் சொட்டக் குளித்து வந்தாய், பாதங்களில் வழிந்து பாதையெல்லாம் தீக்காயங்கள்’, ‘சுண்ணாம்பு வெயில்.. தன் ஒற்றைக் காலால் என் முகத்தின் மீது நடந்து சென்றது வெயில்’ என்பனபோன்ற அழகும் தீவிரமும் கொண்ட படிமங்களை இவர் கவிதைகளில் காணலாம். காலவெளி, பிரபஞ்ச ஓவியம், பாழ்விண், உட்குகை இருள், இருட்சுவர், காலாதீதம், உதிரநதி, புவனம் போன்ற சொல்லாட்சிகளும் படிமங்களும் பிரமிளின் செல்வாக்கைத் தெளிவாகக் காட்டுவன.
‘ஆண்டாள் தன் காதல்நோய் பற்றிப் பேசியதன் உணர்வுத் தொடர்ச்சியைப் பல நூற்றாண்டுகள் கழித்து ரேவதியிடம் கேட்கிறோம்’ என்கிறார் க.மோகனரங்கன். கவிதை சொல்லியின் பாலியல் அடையாளங்களுடன் தனித்துவமும் தீவிரமும் கூடிய பெண்குரலாக வருவது குட்டி ரேவதி கவிதை என்கிறார். சமூகத் தணிக்கைக்கு உட்படாத சுதந்திரமான ரேவதியின் மொழி, விமர்சனத்திற்கு உள்ளாகலாம் எனவும் அவர் குறிப்பிடுகிறார் (சொல் பொருள் மௌனம், ப.187)
ஊ) தலித்துகளைக் காப்பாற்றும் பொறுப்பு – கண்ணன் http://www.kalachuvadu.com/issue-91/kannottam.asp
உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பெரும் பான்மை ஆட்சி, தலித்-உயர்சாதிச் சமூகக் கூட்டணியால் ஏற்பட்டுள்ள பின்னணியில் ‘அவுட்லுக்’ ஜூன் 24, 2007 இதழ், தெற்கில் மேற்படி நிகழ்வு ஏற்படுத்தியுள்ள எதிர்வினைகளைச் செய்திக் கட்டுரையாக வெளியிட்டுள்ளது. இக்கட்டுரையில் கவிஞர் குட்டி ரேவதி மேற்கோள்காட்டப்பட்டுள்ளார். அவரது கருத்து இது:
”பிராமணர்கள் உத்தரப் பிரதேசத்தில் ஆதிக்கம் செய்யத் தொடங்கிவிடுவார்கள். அவர்கள் தலித்துகளை விழுங்கிவிடுவார்கள் . . . இது பற்றி கருத்துக் கூறும் நேரம் வரவில்லை.”
எ) SEA, OH SEA YOU ARE MY BODY – documentary PMANE
in the background of the evocative song Kadale, Kadale by famous Tamil Poetess Kutti Revathi set to tune by S. Sreekumar of M.B.S.Youth Choir.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு மக்களின் குரலாய் எழுதிய பாடல் இது. கேரளத்து நண்பர்கள் சதீஷ், அனிதா மற்றும் நண்பர்கள் இணைந்து இதற்கு பாடல் வடிவம் கொடுத்துள்ளனர். இசையமைப்பாளர் எஸ். ஶ்ரீகுமார் அவர்கள் இசை அமைத்துள்ளார்
ஏ) interview to Vani Viswanathan of the Spark magazine: http://www.sparkthemagazine.com/?p=4399
Language is the One Tool that can Liberate Women’s Bodies: Kutti Revathi
ஓ) ஒரு மேற்கோள்
“In writing about a woman’s body and its sexuality, one is also writing about the political history of the human body!”.
கொசுறு:
எழுத்தாளர் நிலையிலிருந்து, கட்சி அரசியல் நிலைக்கு நகர்ந்தது என்பது பெரும்பாலும் பெண் எழுத்தாளர்களுக்குத் தான் நடந்திருக்கிறது! சமூக அசைவின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படவேண்டும்! ஆனால், சமூகத்தின் அரசியல் ஊக்கத்தை மதிக்காத அப்பெண்கள், தன் சுயநிலைகளை மட்டுமே பொருட்படுத்தியவர்களாக இருந்த நிலை உள்ளங்கை நெல்லிக்கனி போல இன்று! எல்லா அரசியல் ஆதாயங்களையும் தன் தனிமனித கோபுரங்களை எழுப்பிக் கொள்ளவே பயன்படுத்தினர்! தி.மு. க. அரசியலின் அடித்தளம் ஆட்டம் கண்டிருக்கும் இந்நேரத்தில், அதில் ஈடுபட்டு முதுகெலும்பு இழந்தவர்கள், சமூகத்தின் பிற ஒடுக்கப்பட்டப் பெண்களின் குரலாய் மாறாத இந்த அரசியல் பெண்கள் இனி எப்படி தம் சமூகக் குரலை அடையாளப்படுத்துவார்கள்? ’அவர்கள் அறச்சீற்றம் கொண்டால் எத்தகையதொரு கேலிக்கூத்தாகிறது என்று சொல்லத்தேவையில்லை!”
கொசுறுக்கு கொசுறு:
‘தனித்த’ தமிழ்த்தேசியம் பேசுவோர் கொஞ்சம் எல்லாவற்றிலும் மிகையான உணர்ச்சிகளுடன் கொந்தளிப்பது, நடக்க இருப்பதையும் நடக்கவிடாமல் செய்துவிடுகிறது என்பதைப் பலமுறைப் பார்த்திருக்கிறேன். ‘தலித்தியம்’, அல்லது ‘சாதி மறுப்பியம்’ என்பதே தமிழ்த்தேசியம் என்று ஆகிவிடக்கூடாதே என்ற பதற்றம் தான் இந்தக் கொந்தளிப்பின் ரகசியம் என்பதையும் பலமுறைகள் உணரமுடிந்திருக்கிறது.
‘காமம் தாண்டி காதல்’ என்பதே கடுமையானதொரு சாதிய மனப்பான்மை. உடலை அவமதிக்கும் செயல். எப்படி தீண்டாமை உடலை அவமதிக்கிறதோ அதையே பின்பற்றும் ஒரு சாதிய மனநிலை தான் இது. காலங்காலமாக நம்மில் ஊறிய சாதிய மனநிலையே, ‘காமம் தாண்டிய காதல்’ என்ற கண்டுபிடிப்புகளை நிகழ்த்தத்தூண்டுகிறது.
தமிழ் இனம் – சாதி மறுப்பு = தமிழ்த்தேசியம், என்பதை பலரும் பல சமயங்களில் வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றனர்.
யாருக்கு இதனால் நட்டம்? நம்மைப் பிளவு படுத்திக் குளிர்காயும் சனாதனிகளுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியையும், கொண்டாட்டத்தையும் கொடுக்கும். தமிழகம் என்று தனியே ஒரு நாடு உருவானால் கூட, பின் இருக்கப்போகும் ஒரே பிரச்சனை நீங்கள் தாம்: தீண்டாமையின் புதிய வடிவமைப்பை, பெண் பாலியல் ஒடுக்குமுறையின் புதிய வழிமுறையை நீங்கள் செயல்படுத்துவீர்கள்!
இந்தியா சுதந்திரமடைந்து 67 ஆண்டுகளுக்குப்பின்னும் சாதிய வன்முறை பகிரங்கமாக, காட்டுமிராண்டித்தனத்தின் அடையாளமாக நடக்கிறது. தொடர்கிறது. சக மனிதனை மலம் அள்ள வைக்கிறோம். இசுலாமியர்கள் மீதான வன்முறைகளும் பாரபட்சமும் தொடர்கின்றன. பெண்கள் மீதான பாலியல் வன்முறை முன்னெப்பொழுதையும் விட தற்பொழுது அதிகமாயிருக்கிறது.
6400 சாதிப்பிரிவுகளையும் அதற்கான ஏற்றத்தாழ்வுகளையும் அது ஏற்படுத்தும் ஊழலையும் வைத்துக் கொண்டு ஒருமித்த இந்தியா என்று போற்றுவதும் பாராட்டுவதும் உணர்ச்சிப் பெருக்கெடுப்பதும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது இல்லையா? இது கண்டிப்பாக சுதந்திர இந்தியா இல்லை. இன்னொரு சுதந்திரத்திற்காக நாம் எல்லோரும் போராடவேண்டியிருக்கும் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்கிறேன்.
ங) ’இந்தியா டுடே’யின் ரஜினி சிறப்பிதழ் கட்டுரை http://kuttyrevathy.blogspot.com/2011/12/blog-post.html
– ‘நான் நம்பர் ஒன், என் புருஷன் நம்பர் டூ’ என்ற வசனமும் ரஜினி என்ற கதாநாயகனும்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை, ரஜினி என்ற கதாநாயகனின் ஆணாதிக்க வசனங்களைப் பற்றிய சிறிய அலசல்!
Breasts: (original ‘Mulaigal’ by Kutti Revathi), translated by N. Kalyan Raman
Breasts are bubbles, rising
In wet marshlands
I wondrously watched- and guarded-
Their gradual swell and blooming
At the edges of my youth’s season
Saying nothing to anyone else,
They sing along
With me alone, always:
Of Love,
Rapture,
Heartbreak
To the nurseries of my turning seasons,
They never once failed or forgot
To bring arousal
During penance, they swell, as if
straining
To break free; and in the fierce tug of
lust,
They soar, recalling the ecstasy of music
From the crush of embrace, they distil
The essence of love; and in the shock
Of childbirth, milk from coursing blood
Like two teardrops from an unfulfilled
love
That cannot ever be wiped away,
They well up, as if in grief, and spill over
இத்தகைய நிதானமான நேர்காணலை எடுக்கும் பணிக்கு நண்பர்கள் ரவிச்சந்திரன், பிரவீண், ராஜ், கஜேந்திரன், ஜே. ஜெய்கணேஷ் தங்களின் நிறைய நேரத்தைச் செலவழித்தார்கள். நான் முன்வைக்கும் அரசியல் நிலைப்பாடு குறித்தும், அதை நோக்கிய என் எழுத்துப் பயணம் குறித்துமான நேரடியான பதிலை திருத்தமானதோர் உரையாடல் வழியாக என்னிடமிருந்து பெற்றார்கள்! வழக்கத்திற்கு மாறாக, நிறைய நண்பர்கள் இந்நேர்காணலை வாசித்துவிட்டு தங்கள் வாழ்த்துகளையும் கருத்துக்களையும் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழியாகப் பகிர்ந்து கொண்டார்கள்.
என்னை ஒரு தனிமனிதராகப் பார்க்காமல், எழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாகவே என்னைப்புரிந்து கொண்டு, இதைத் தன் இணையத்தளத்தில் பதிப்பித்த, ‘தமிழ் ஸ்டுடியோ’ அருண் அவர்களுக்கும் என் நன்றி!
கோரி டாக்டொரொவ்: தொழில்நுட்பத்தினால் உலகம் மெருகேறியுள்ளதாக உணர்கிறீர்களா?
புரூஸ் ஸ்டெர்லிங்: நம்மைப் போல் மனிதர் அல்லாத எந்த ஜீவனிடமும் இந்தக் கேள்வியை கேட்டால், அதன் கோணத்தில் பார்த்தால், சர்வ நிச்சயமாய் ’முன்னேறவில்லை’ என்பதுதான் பதில். நிறமிழந்த முயல்களும் மரபணு ஒட்டு போட்ட புகையிலைச் செடிகளும் ‘ஆமாம்’ வாக்கு போடலாம். தொழில்நுட்பம் என்னும் வார்த்தையை புழங்க ஆரம்பித்த கிரேக்கர்கள் காலம் துவங்கி வாழ்ந்து வரும் பவளப் பாறைகளிடமோ கற்பகத்தரு மரங்களையோ கேளுங்கள். நிறைய சோகக் கதைகளை கேட்பீர்கள்.
மாத்யூ பாட்டில்ஸ்: நாளைக்கு என்ன நடக்கும் என்று எண்ணுவதே மனிதனின் நித்திய கலக்கம். வருங்காலம் இப்படி சொக்குப்பிடி போட்டு வைத்திருப்பதில் பிரத்தியேகமாக எதாவது உண்டா?
புரூஸ் ஸ்டெர்லிங்: நம்மைப் போன்ற புதிய தலைமுறையிnar, சரித்திர காலத்தில் இருந்து வரும் ஜோசியர் கையில் எதிர்கால ஆருடங்களை ஒப்படைக்க மாட்டோம். சமீபகாலமாக, வருங்கால ஆருடம் என்று பார்த்தால் நிறைய விஷயம் இருக்கிறது. முதலாவதாக, “வளர்ச்சி” என்றால் என்ன என்றே இப்பொழுது தெரியவில்லை. நம் பழமைவாதிகள் எல்லோரும் புரட்சியாளராகி விட்டார்கள். முற்போக்காளர்கள் எல்லோரும் பழமைவாதிகளாகி விட்டார்கள்.
நம்முடைய எல்லா வகையான சமூகப் போக்கு குறித்தும் அனைவரின் பழக்கவழக்கங்கள் குறித்தும் சேதி சேகரிக்க விரும்புகிறோம். முன்னெப்போதும் இருந்ததை விட அதி பிரும்மாண்டமாக, ஒவ்வொருத்தருடைய அந்தரங்க வாழ்க்கையையும் சமூகச்சங்கிலித் தொடர்புகளையும் கோர்த்து விஷயங்களை பெரிய அளவில் சேமிக்கிறோம். புதுக்கருக்கு இன்னும் போகாமல் இருப்பதால் இப்பொழுது இதில் நிறைய ஆர்வம்; இதெல்லாம் பயனுள்ளதாக மாற்றும்வரை இதில் நமக்கு ஆச்சரியம் இருக்கும்.
ஜியுஸெப்பி கிரானியெரி: உங்களுடைய ‘காதல் விநோதாமானது’ புத்தகத்தில் காவின்ஸ் சொல்வார்: ‘நான் கணினி கிறுக்கன் போல் ஆடை அணிவதில் கவனம் செலுத்தாதவனாக இருக்கலாம்; ஆனால், என்னால் மக்களின் போக்குகளை கணிக்க முடியும்.’ உங்களால் அடுத்த ஐந்தாண்டுகளில் கவனிக்கப்பட வேண்டிய ஐந்து போக்குகளை பொறுக்க முடியுமா?
புரூஸ்: உங்களுடைய கற்பனையை எப்படியாவது குதிரையாக்கினால்தான் என்னுடைய வருங்கால போக்குகளை பொறுக்கமுடியும்.
எதிர்கால கணிப்புகளிலேயே மிக மிக முக்கியானதென்றால், அது வானிலை மாற்றம். மனிதருக்கு அதைப் பார்ப்பதற்கே வெறுப்பாக இருக்கிறது. குற்றவுணர்ச்சியால் குமைகிறார்கள்; அல்லது தோள் குலுக்கி கண்டுங்காணாமல் ஒதுக்குகிறார்கள். ஆனால், நாளைய தேதியில் பெரிய வித்தியாசத்தை, வேறு எந்த சமகால நிகழ்வை விட வெகு ஆழமான பாதிப்பை உருவாக்குவதென்றால், அது இதுதான்.
தனிப்பட்ட முறையில் பார்த்தால், எனக்கு பல விஷயங்களில் நாட்டம் உண்டு. அமெரிக்காவில் தோன்றாத ஆனால் உலகத்தின் பிற நாடுகளின் புகழ் பெற்ற இசை பிடிக்கும். அருகிப் போன ஊடக சாதனங்களை நோட்டமிடுவேன். எண்வய மிடையத்தில் தோன்றும் புதுப் புது கணிமொழிகள் கற்பேன். ஊட்டம் சேர்த்த எதார்த்தம் கொண்டு இயங்கும் கணிப்பொறிகளை விரும்புகிறேன். இணையத்தின் பொருளாக ஒவ்வொரு பொருளிலும் நீக்கமற இணையம் நிறைந்திருக்கும் சாத்தியத்தினை ஆராய்கிறேன்.
உலகத்தில் இதெல்லாம் முக்கியமான போக்குகள் அல்ல. ஆனால், எனக்கு முக்கியமாகப் படுபவை. புரிந்து கொண்டு, ஆழமாகப் படித்து அறிந்து கொள்ள விரும்புபவை. இவை எல்லாமே என்னுடைய வலைப்பதிவில் முக்கியமானதாகவும் அடிக்கடி எழுதப்படுவதாகவும் இருக்கிறது.
இந்த உலகம் முழுக்க பல்வேறு போக்குகாளால் ஆனவை. ஆயிரக்கணக்கில் புத்தம்புது பாதைகள் இருக்கின்றன. ஆனால், ஒன்றே ஒன்றை எடுத்து அதனுள் சென்றால்தான், அந்த நுட்பத்தின் சூட்சுமத்தை நம்மால் பயன்படுத்திக்க முடியும்.
உதாரணத்திற்கு புகை பிடித்தால் உடல்நலம் கெடலாம் என்பதை எடுத்துக்கலாம். அனைவரும் அதை சொல்கிறார்கள். இவ்வளவு ஏன்… அந்த சிகரெட் பாக்கெட்டிலேயே புற்றுநோய் படம் எல்லாம் போட்டிருக்கு. எனவே, விளைவுகளில் எந்த ரகசியமும் இல்லை. ஆனால், முழிப்பு வருகிற வரைக்கும் விடப்போவதில்லை. நமக்குனு வந்துச்சுனாத்தான் வெளங்கும். இது ஒரு பாதிப்பு. அது நம்மைத் தாக்கி உணரவைக்கிற வரைக்கும் தெரியப் போவதில்லை. இப்படித்தான் ஒவ்வொரு ‘போக்கு’ம். நமக்கு அந்தப் போக்கின் விளைவுகள் சொந்தமாவதற்கு நாம் அது கூட உறவாடணும்.
கோரி டாக்டொரொவ்: கணினியில் உருவாக்கும் ஓவியத்திற்கும் பேப்பரில் வரைவதற்கும் நடுவே உள்ளே பிரிவினை என்றாவது இல்லாமல் ஆகுமா? அல்லது ஏற்கனவே மின்னணுவியல் கலைக்கும் துணியில் தீட்டும் கலைக்குமான வித்தியாசங்கள் நீங்கிவிட்டதா?
புரூஸ்: இந்த பாகுபாடு எல்லாம் பாம்பு இரப்பை மாதிரி. மோனே, வான் கோ மாதிரி புகழ்பெற்ற ஓவியர்களின் வேலையை வாங்குவதற்கு ஏலப் போட்டி எதை வைத்து நடக்கிறது? அந்த ஓவியத்தின் கணினி பிரதியை வைத்துதானே.
மின்னணுவியல் கலைகளில் ஒரு வகையை மட்டும் சர்வ நிச்சயமாய் “மின்னணுவியல்” என்று பொதுமைப்படுத்தலாம் — அந்த கலை வடிவத்தில் கம்பிகள் காணக் கிடைக்கும்; மின்சக்தி பாயும்; நிஜமாகவே ஷாக் அடிக்கலாம். அந்த மாதிரி கலைப் படைப்பு நீடித்த தாக்கத்தை உண்டாக்காது.
ஆனால், எப்பொழுது இது துவங்குகிறது? எங்கே முடிகிறது? இந்த அனுபவத்தை சொல்லால் அளந்து விடுவது மிகவும் சிரமமான காரியம். விழியங்கள் எப்பொழுது கலை உன்னதத்தைத் தொடுகிறது? படம் பார்த்த பின்பு அந்த படத்தின் பாதிப்பு எப்பொழுது தீர்ந்து போகிறது?
ஐ-போனில் கிடைத்த அனுபவத்தையும் கம்பிப் பின்னல்களின் நடுவே குவிந்து கிடக்கும் கம்ப்யூட்டர் கலைத் தோற்றங்களையும் கணிமொழியில் நிரலியாளர் நிகழ்த்திய அற்புத சாத்தியங்களையும் எப்படி அந்த விஷயங்களின் நுட்பங்களை தோற்றமும் மறைவும் என்று அறுதியிட்டு பகிர முடியும்?
முன்பு நாடகம் இருந்தது. அது மட்டுமே கலை. இப்பொழுது சினிமாவும் அதற்கு நிகரான கலை. நாளைக்கு மின்னணுவியலில் உருவானவை மட்டுமே கலாவடிவமாகுமா என்பதை மேடையில் கூத்து கட்டின காலத்தில் திரைப்படம் கலையாக ஆகுமா என்று வினவுவதற்கு ஒப்பிடலாம்.
எனக்கு அப்படி மின்கல கலைக் காலத்தை கற்பனை செய்ய இயலுகிறது. ஆனால், நிஜத்தில் நிகழுமா என்றால் மாட்டேன் என்று மனசு சொல்கிறது. ரத்தமும் சதையுமான வடிவத்தை விட்டு விலகும் சமுதாயம் எனக்கு அன்னியமாகப் படுகிறது.
பால் டி ஃபிலிப்போ: எண்பதுகளிலே நீங்கள் அறிவியல் புனைவுகளை எழுத ஆரம்பித்ததற்கு பதிலாக, இன்றைக்கு நீங்கள் அறிபுனை எழுத்தாளராக எழுதத் துவங்கினால், என்ன உத்தியை உபயோகிப்பீர்கள்? புதிய அறிபுனை எழுத்தாளர்களுக்கு தங்கள் பெயரை பரவலாக்க, புகழ்பெற எந்த வியூகம் சரியானது? சுருக்கமாக சொன்னால், 2013ன் நிதர்சனங்கள் என்ன?
புரூஸ்: இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி. ஒரு விஷயத்தை மட்டும் சிருஷ்டிகர்த்தாவாக பிடித்துக் கொண்டு காலந்தள்ளுவதென்பது இப்பொழுது இயலாதது. இன்றைக்கு அறிபுனை படைப்பாளியாக கலக்க வேண்டுமானால் உங்களுக்கு வலைப்பதிய தெரிய வேண்டும்; கருத்தரங்குகளில் பேச வேண்டும்; காமிக்ஸ் உலகிலும் வளைய வர வேண்டும்; கொஞ்சம் தொலைக்காட்சி; கொஞ்சம் சினிமா…
அறிபுனை எழுத்தாளராக இருந்து கொண்டு புத்தகங்கள் போட்டு, பத்திரிகைகளில் மட்டும் எழுதிக் கொண்டிருந்ததெல்லாம் இறந்த காலமாகிப் போயாச்சு.
எழுத்தாளராவதற்கான முதல் அடி என்பது உங்களுக்கு என்ன வாசிக்க பிடித்திருக்கிறதோ, அதைப் பற்றி எழுதுவது. அதற்கு அடுத்ததாக, நீங்கள் எழுதுவதை எவர் கவனமூன்றி வாசிக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் ஏன் நீங்கள் எழுதுவதை விரும்புகிறார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.
உங்களுடைய அதிமுக்கியமான, மிகப் பெரிய அலைகளை உருவாக்கக்கூடிய படைப்புகளுக்கு, எந்த வெளியீட்டாள்ரும் பணம் தரவோ, எவரும் புத்தகமாக வெளியிடவோ வராவிட்டால் ஆச்சரியமே பட வேண்டாம்.
டெட் ஸ்ட்ரிஃபாஸ்: உங்களுடைய எழுத்து நடையையோ, கதைகளின் கருவையோ, தற்கால கணினி உலகிற்காக மாற்றிக் கொண்டீர்களா? வைய விரிவு வலை காலத்தின் புத்தகத் தயாரிப்பும் விநியோகமும் வாசகரோடு தொடர்பு கொள்ளும் முறையும் மாறினதால் எழுத்தாளருக்கு என்ன பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளன?
புரூஸ்: இந்தப் பிரச்சினையால், எண்பதுகளில் இருந்தே என்னுடைய எழுத்துலகம் மிகவும் சிரமதசையில் இருக்கிறது. இணையத்திற்காக நிறைய எழுதுகிறேன்; அதற்கும் என்னுடைய புத்தகங்களுக்கும் சம்பந்தமேயில்லை. இந்த கஷ்டத்தின் பின்விளைவுகளை சொல்வது சிரமம். ஆனால், அனுமானித்து வைக்கிறேன்.
என்னுடைய நடை கெட்டுப் போயிருக்கிறது. என்னால் எப்படி எல்லாம் பலவிதமாக வெளிப்படுத்திக் கொள்ள முடியும் என்று நான் முழுக்க முழுக்க முனைப்பு எடுத்து பயிலவே இயலவில்லை. ஆனால், அதுவே என்னை விழிப்பாகவும் நெகிழ்வாகவும் வைத்திருந்திருக்கிறது. இதற்கு, தற்கால இசைக் கலைஞரிடம் உள்ள டிஜிட்டல் இசையின் பாதிப்பை ஒப்பிடலாம். நிறைய புதுமையான சத்தங்களை உண்டாக்குகிறார்கள். அவற்றை அவசரமாக உருவாக்குகிறார்கள். ஆனால், அதனால் மட்டும் இசையில் லயிக்க முடிவதில்லை.
என்னுடைய எழுத்தின் மூலம் உலகத்தின் மூலை முடுக்கில் உள்ள அனைவரிடமும் பேச முடிகிறது என்று உணர்ந்தபோது மிகவும் கடமை கொண்ட படைப்பை கொடுக்க முடிந்தது. ஆனால், உலகளாவிய பார்வையினால், தேசிய பதிப்பாளரின் சட்டதிட்டங்களுக்கு அப்பால் என் எழுத்து என்னைக் கொண்டு போய்விட்டது. உலக மக்களுக்காக சர்வதேச சந்தையில் புத்தகம் போடும் பதிப்பாளர்கள் கிடைக்காத காரணத்தால் நூல் எழுதி வெளியிடும் ஆர்வம் குறைந்து போனது.
நடுவண் குடிமக்களுக்காக மட்டுமே அச்சடிக்கும் புத்தக வெளியீட்டாளர்கள் என்னை மறைத்து ஒதுக்குகிறார்கள். ஆங்கிலத்தில் எழுதும் எந்த மேற்கத்திய படைப்பாளிக்கு இந்த மாதிரி புறந்தள்ளல் சகஜமானது. உலகமயமாக்கலின் பொதுப் பிரச்சினை இது.
டெட் ஸ்ட்ரிஃபாஸ், ஜான் சண்ட்மான்: பெருங்கதைகளின் அந்திமக் காலம் நெருங்கி விட்டதாகவும், இனி வரும் காலம் சின்னச் சின்ன கதைகளிலும் குட்டிக் கதைகளை கோர்த்ததாகவும் விளங்கும் என்று சிலர் சொல்கிறார்களே. அதைப் பற்றிய தங்கள் கருத்து என்ன?
புரூஸ்: கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 2062ல் எவராவது ‘2012ஆம் ஆண்டின் மிகச் சிறந்த ட்வீட்கள்’ என்னும் நூலை வாங்கிப் படிப்பாரா? ‘தலை சிறந்த லைக் பட்டியல்’ என்று கற்பனை செய்ய முடியுமா? நான் வலையில் பதிபவன். கலைத்துப் போட்டு தொகுக்கும் விவரணை எனக்கு பிடிக்கும்தான். வலைப்பதிவு என்பது குறைந்த காலத்தில் கெட்டுப் போகும் பதார்த்தம் போன்றது. நீங்கள் வடிவேலுவின் அவ்வ்வ்வ் காமெடியை ரசிக்கலாம்; பகிரலாம்.
டெட் ஸ்ட்ரிஃபாஸ்: நல்ல அறிபுனை எழுத்தாளர்களைப் போல் நீங்களும் புதிய சொல்லாட்சிகளை ஆங்கிலத்தில் உலவ விட்டிருக்கிறீர்கள். தெரிந்த வார்த்தைகளை வித்தியாசமாகக் கலைத்துப் போட்டு புதிய மொழியை உருவாக்குவது எழுத்தை உயிர்ப்போடு வைத்திருந்தாலும், தேவைதானா?
புரூஸ்: சமூக மாற்றம் மொழியில் உள்ள போதாமையை உணர்த்துகிறது. அதனால், நான் மொழியை அடுத்த கட்டத்திற்கு தள்ளுவதாக தோன்றுகிறது. உதாரணமாக, ’பொருட்களின் இணையம்’ என்னும் உபயோகத்தை எடுத்துக்கலாம். ’பொருள்’ என்றால் எதைக் குறிக்கிறது? எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களின் கார், ஃப்ரிட்ஜ், செல்பேசி… இப்படி… எந்தப் பொருளாக வேண்டுமானாலும் இணையத்தின் முழு சாத்தியத்தை உள்ளடக்கி இருக்கலாம்.
அடுத்ததாக ‘ஸ்பைம்’ – விண்வெளிகளில் கால வர்த்த பரிமானங்களை அளப்பதற்கான எளிய சொல். மறு சுழற்சி, முப்பரிமாண உருவாக்கம், பொய்த் தோற்றங்களுக்கான மெய்நிகர் என்றெல்லாம் விலாவாரியாக விளக்குவதற்கு பதிலாக ஸ்பைம் என்று சொல்லிப் போய்விடலாம். வேணுங்கிறவங்களுக்கு இருக்கு.
ஒரு பிரச்சினை இருக்கு; அதைக் குறித்து பேசணும்; பொது வெளியில் பரவலாக விவாதிக்கணும்; அதைக் குறித்து முன் கதை சுருக்கம் எல்லாம் சொல்லாமல் சுலபமாக எல்லோரையும் சென்றடைய வார்த்தை உபயோகங்களை உருவாக்குவதில் என்ன கொறஞ்சு போச்சு? ஆங்கிலத்தில் கொச்சை மொழியில் ஆயிரக்கணக்கான புது கிளைமொழிகள் உருவாகிக் கொண்டே இருக்கிறது.
‘பக்கிஜங்க்’ என்று நான் புது வார்த்தை உருவாக்குவதால் ஆங்கிலம் அழிந்துவிடப் போவதில்லை. மறு சுழற்சிக்கு உள்ளாக்க முடியாத கரிம நுண்குழாய்கள் குப்பை போடுகின்றன என்பதற்கு வட்டார வழக்கு உருவாக்குகிறேன்.
‘குப்பைவெளி’ (junkspace) என்றும் உருவருபெருவுரு (blobject) என்றும் கவித்துவமாக நான் பேசுவதாக சிலர் நினைக்கிறார்கள். அது நான் இல்லை. இந்த சொல்லாட்சிகளை கண்டுபிடித்து புழக்கத்தில் விட்டது மட்டுமே நான். அதனால் என்ன போச்சு? நான் அறிபுனை எழுத்தாளன். புது வார்த்தைகளை பயன்படுத்துவதற்காக நான் கைதாகப் போவதில்லை.
மாத்யூ பேட்டில்ஸ்: நாம் எதிர்பாரா வகையில் எது நம் காலங்கடந்து நிற்கும்?
புரூஸ்: பெரும்பாலும், பழங்கால சமாச்சாரங்கள்தான் நம் காலங்கடந்து தாக்குப் பிடிக்கிறது. பிரமிடுகளை எடுத்துக் கொள்ளலாம். மனிதனின் மற்ற எல்லா விஷயங்களை விட நீண்டகாலமாக இருக்கிறது. நாம் சேமிக்கும் இணையக் கோப்புகளை விட பேப்பர் நிலைத்து நீடிக்கும் என்று சொன்னால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், வன்தட்டுகள் எளிதில் அழியக் கூடியவை; பிட்டு பிட்டாக பிட்டுகள் உதிர்ந்து போகும்.
மற்ற நாகரிகத்தைப் போல் நாமும் இருந்தால், நம்முடைய குப்பை கூளங்களில்தான் சிறப்பான துப்புகளை விட்டுச் செல்வோம். குப்பை நம்மிடம் நிறையவே இருக்கிறது. பிரமிடு கோபுரம் மாதிரி நிலம் நிரப்பி, குப்பை மலை கொண்டிருக்கிறோம்.
ரிச்சர்ட் நாஷ்: நீங்க முன்பொரு முறை பேசும்பொழுது ’என்னிடம் வருங்காலத்தைப் பற்றி அறுதியிட்டு சொல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டால், நமக்கு வயதாவது மட்டுமே’ என்று குறிப்பிட்டீர்கள். அனைவரின் ஆயுளும் அதிகரித்து வரும் இந்தச் சூழலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்று சொல்வீர்கள்?
புரூஸ்: இன்றைய முதியோர் பாதுகாப்பங்களில் நம்முடைய வருங்காலத்தை உணரலாம். ஐரோப்பாவில் மூத்த நகரமாக ஜெனீவாவை சொல்கிறார்கள். அதிக அளவில் வயதானோர் வாழ்வதால் அந்த அடைமொழி கிடைத்திருக்கிறது.
ஒவ்வொரு நிறுத்தத்திலும் நின்று நிதானித்து, தடுமாறி ஏறி இறங்கும் முதியோர் நிறைந்த பயணங்களினால் பேருந்துகள் தாமதமாக ஓடுகின்றன. தாத்தா, பாட்டி நிறைந்த காபி கடைகளில் அவசரம் இல்லை; சத்தம் இல்லை.
குழந்தைகளோ அவர்கள்பாட்டுக்கு தங்கள் வயதொத்தவர்களுடன் தனியாக சேர்ந்து அவர்கள் இடங்களில் சுற்றுகிறார்கள். ஜெனீவா கிழவிகளானால் நிறைந்த இடமாக இருக்கிறது. மருத்துவ முன்னேற்றத்தினால் ஆயுள் எதிர்பார்ப்பு அதிகரிக்க, அதிகரிக்க, ஆண் – பெண் பால் சமநிலை சரிகிறது.
இது ஒன்றும் ஆச்சரியமான மாற்றம் அல்ல. ஆனால், மாஸ்கோவுடன் ஒப்பிட்டு பார்ப்போம். அங்கே ஆயுள் எதிர்பார்ப்பு ஜெனீவா போல் நீண்ட நாள் அல்ல. இரைச்சலும் கவர்ச்சியும் கூச்சலும் நிறைந்திருக்கும் மாஸ்கோவில் வாழ்வதும் கடினமே.
ரிச்சர்ட் நாஷ்: ஆயுள் எதிர்பார்ப்பு எல்லோருக்கும் கூடி வரும் காலகட்டத்தில் கலாச்சார மாற்றங்களாக என்ன நடக்கும்? ஒரு பக்கமோ அபரிமிதமான வளம்; இன்னொரு பக்கத்திலோ கடுமையான கருவுறுதிறன் பஞ்சம். வயதாகிப் போன முதியோரும் இந்த செழுமை ஏற்றத்தாழ்வும் எவ்வாறு ஒன்றை ஒன்று தொடுகிறது?
புரூஸ்: கருவளம் கம்மியாவதெல்லாம் கொஞ்ச காலம்தான் நடக்கும். அதற்கப்புறம் எந்த குழுவோட கருத்தரிக்கும் திறன் கம்மியாச்சோ, அவங்கள இன்னொரு குழு ரொப்பிரும். இன்னொரு வார்த்தையில் சொல்லணும்னா, பணக்காரங்களுக்கு குழந்தை பிறக்கவில்லையென்றால், புது பணக்கார வர்க்கம் முளைச்சுரும்.
ஆயுசு ஜாஸ்தியாகிக் கொண்டே போனால், முதியவர்களின் மக்கள்தொகை அதிகரிக்கும்; அதனால், இளசுகளின் குறைவான மக்கள்பேறு விகிதத்திற்கும், கிழவர்களின் எண்ணிக்கைக்கும் சமனாகிப் போச்சு என்று சிலர் வாதிடுகிறார்கள். அந்த மாதிரி கணக்கு என்னிக்குமே வேலை செய்ததில்லை.
இப்பொழுது நிறைய பேர் நிறைய ஆயுட்காலம் வரை வாழ்கிறார்கள். அது கொஞ்சம் எளிது. ஆனால், எல்லாவிதமான மனிதர்களும் நிறைய ஆயுள் வாழவில்லை. அதை சாத்தியமாக்க ரொம்பக் குறைவான முயற்சியே செய்திருக்கிறோம். நான் முடியாதுனு சொல்லவரல. இந்த மாதிரி நோய்வாய்ப்பட்டவர், மூன்றாம் உலகத்தவர்னு எல்லோருடைய வயதும் நீடித்து இருக்கக்கூடியதைப் பற்றி நிறைய அறிபுனை கதை கூட நான் எழுதியிருக்கிறேன். ஆனால், நிஜத்தில் பார்த்தால், ஒண்ணும் நடக்கல.
சோதனை எலியின் ஆயுளைக் கூட ஐந்து அல்லது பத்து மடங்கு அதிகரிக்க முடியல. இரண்டு வருஷம் வாழுகிற எலி, இன்னொரு வருஷம் கூடுதலாக வாழுது. அதை பத்து வருஷமா மாற்ற இன்னும் இயலவில்லை. அப்படி செய்ய முடிஞ்சா என்னோட கருத்து உடனடியாக மாறும்; கூடவே நிறைய கவலையும் வரும்; அரசியலில், சட்டத்தில், பொருளாதாரத்தில், அறத்தில், சமூகத்தில் என்று எல்லா துறைகளிலும் திரும்பிச் செல்ல முடியாத மாற்றங்களுக்கு உட்படுவோம்.
மரியான் டி பியர்ஸ்: நெடுங்காலம் வாழ்வதைப் பற்றி பேசும் இந்த சமயத்தில் மனித குலத்தை காப்பாற்றும் குணாதிசயமாக எதை சொல்வீர்கள்? வருங்காலத்தில் உங்களுக்கு எந்த விஷயம் பெருத்த நம்பிக்கையைத் தருகிறது?
புரூஸ்: என்ன நடக்குதுனே தெரியாமல் பொதுஜனங்கள் இருப்பதுதான் எனக்கு பெருத்த நிம்மதியைத் தருகிறது. கணிக்கவே முடியாத தகவல்களுக்குள் தடுக்கி விழுவதுதான் காலங்காலமாக நடந்து வருகிறது. புதுசு புதுசா தப்பு செய்யும்போதுதான் நாம குண்டுசட்டிய விட்டு வெளியே வருகிறோம். அகிலத்தில் பல ஆச்சரியங்கள் நமக்காக காத்திருக்கின்றன.
நம்மைக் காப்பாற்றி வருவது தூரதிருஷ்டி பார்வை அல்ல… சூது வாதில்லாத தன்மைதான்.
நீல்ஸ் கில்மேன்: உலக இலக்கியங்களில் இருந்து வருங்காலமறியும் தரிசனமும் ஞானதிருஷ்டியும் கொண்ட பார்வை தந்ததில் முக்கியமானது எவை என்று பட்டியலிடுங்களேன்?
புரூஸ்: நிச்சயமாய் வன்னேவார் புஷ் எழுதிய ‘நாம் யோசிக்கும்படி’ (As We May Think) சொல்வேன். ஆனால், அது தற்கால அறிவியல் குறித்த கட்டுரை. அதனால், ‘இலக்கியம்’ என்று ஒத்துக் கொள்ள மாட்டார்கள். எனினும், அசாத்தியமானது.
‘வீரமிக்க புது உலக’த்தில் (Brave New World) ஆல்டஸ் ஹக்ஸ்லி நிறைய கணிப்புகளை சரியாக சொல்லி இருந்தார். அவை நம்மை பயமுறுத்தா விட்டாலும், ஹக்ஸ்லியை அச்சுறுத்தியது.
ஜூல்ஸ் வெர்னின் முதல் நாவலான ’இருபதாம் நூற்றாண்டின் பாரிஸு’ம் அநாயசமாக ஆருடம் கணித்திருந்தது. ஆனால், வெர்னால் அதை அச்சுப் புத்தகமாக்க முடியவில்லை. அதனால் அநாயசமாகவில்லை.
பின்வருவதை முன்பே சொன்னதில் ஆல்பர்ட் ரொபிதாவின் கேலி சித்திரங்களும் சாதனை படைத்தவை.
ஜியூலியானா க்வாஜரோனி: ஊட்டம் சேர்த்த எதார்த்தம் கொண்டு இயங்கும் பொறிகள், நம் வருங்கால தொழில்நுட்பத்திற்கும் இணையத்திற்கும் புனைவுகளுக்கும் எவ்வளவு முக்கியம்?
புரூஸ்: நான் ’மிகைப்படுத்திய எதார்த்த’த்தின் மிகப் பெரிய விசிறி. இந்தத் துறை பலவிதங்களில் பிளவுபடப் போகிறது. விதவிதமான மென்பொருள்களும், கருவிகளும், பிரத்தியேகமான வழிகளும் இந்தத் துறையில் வரும். சிலது பெரிய அளவில் புகழடையும்; சில காணாமல் போகும்.
கணினித்துறை ’ஊட்டம் சேர்த்த எதார்த்தம்’ மூலமாக மீமெய்யியல் லட்சியங்களைத் தொடுகிறது. எது நிஜம்? நிதர்சனத்திற்கு நான் என்ன செய்ய முடியும்? கணினித் துறையினால் யதார்த்தத்திற்கு எந்த ஆபத்துமில்லை.
“விழியத் துண்டுகளை எவ்வாறு கைபேசியில் ஒட்டி வெட்டலாம்?” போன்ற எளிமையான கேள்விகளின் பதிலிலேயே சுவாரசியமான எதார்த்தங்கள் ஒட்டியிருக்கும்.
கமலஹாசனின் ‘மருதநாயகம்’ மாதிரி ரொம்ப நாளாக பெட்டியில் பூட்டி இருந்தது… அசலாக வினவியது: 2009 – யூலை முப்பது
1. ஸ்வைன் ஃப்ளூ எப்போது ஒழிந்து போகும்? என் உயிருக்கு ஆபத்து வருமா? வருடா வருடம் காய்ச்சல் வருவதுதானே… ஏன் இந்த வருஷம் இப்படி மிரட்டுகிறார்கள்?
2. அமெரிக்கா எதற்கெடுத்தாலும் அச்சுறுத்துகிறது. வேலை போய் விடுமோ என்னும் நிரந்தர பாதுகாப்பின்மை; இல்லறம் முறிந்துவிடுமோ என்னும் சுதந்திர தேவி தாம்பத்தியம்; அல் க்வெய்தா முதல் பள்ளிச் சிறுவர் வரை போட்டுத் தள்ளிவிடுவாரோ என்னும் மனமுறிவு மடமை. உண்மைதானா? இந்தியா நிம்மதி தேசமா?
3. தமிழ்ப்பதிவுகளை நான் படித்த மட்டும் பெண்கள் பெரிதும் பதிவு எழுதுவதில்லை. ஆங்கிலத்துடன் ஒப்பிட்டால் வாசகி கூட்டம் கூட இடுகைகளாகத் தொடர்ந்து இயங்குவதில்லை. அப்படியா? மகளிருக்கென்று தனியாக டாபிக்குகள் உண்டா? தேவையா?
4. ஆணுக்குப் பெண் அடங்கித்தான் போக வேண்டும் என்பதன் வெளிப்பாடுதான் ஒபாமாவின் கீழ் ஹில்லரி செயல்படுகிறாரா? அமெரிக்க அரசியலில் பெண்கள் நிலை எவ்வாறு இருக்கிறது?
5. டெஹல்கா போன்ற மாற்று இந்திய ஊடகங்கள் கூட ராகுல் காந்தியை முன்னிறுத்துகின்றன. ராஜீவுடன் நேரில் பழகியவர் நீங்கள். காங்கிரஸ் அரசியலின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் ராகுல் குறித்து…
6. தங்களின் இளமைக்கால ஊர்களான பாண்டிச்சேரி, பெங்களூரூ, கும்பகோணம் எல்லாம் சமீபத்தில் மறுபடி எப்போது சென்றீர்கள்? என்ன மாற்றம் உணர்கிறீர்கள்?
7. கல்வித்துறை எப்போதுமே அலுவல், அரசியல் போன்ற சக இடங்களை விட முன்னோடியாக செயல்படுவது. பெண்களுக்கு கல்லூரியிலும் பல்கலையிலும் சம உரிமை கிட்டுகிறதா? படிப்பிலாவது அட்ஜஸ்ட்மென்ட் இல்லாமல் காலம் தள்ள முடிகிறதா?
8. நேரில் சந்தித்தபோது பெண்களின் ஆடைத் தேர்வை சமூகம் எவ்வாறு நிர்ப்பந்திக்கிறது என்பது குறித்து சொல்லிக் கொண்டிருந்தீர்கள். ஸ்கர்ட் அழகான ஆடை அல்லவா? உங்களுக்கு பாவாடை மீது ஏன் இத்தனை கோபம்?
9. ரொம்பப் பெண்கள் குறித்த கேள்விகளாகி விட்டது. அமெரிக்காவில் ஆண்களின் நிலை எப்படி இருக்கிறது? ஆடவருக்கு மட்டுமே உரித்தான பிரச்சினை என்று ஏதாவது இருக்கிறதா? என்ன இடர்களை எதிர்நோக்குகிறார்கள்?
அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியக்கூறுகள் மிகப்பிரகாசம் – பேராசிரியர் எரிக் அஸ்லானர் நேர்காணல் :: வீரகேசரி நாளேடு – 10/27
கேள்வி: இலங்கை போன்ற நாடுகளில் கடைசி நேர அனுதாப அலைகள் தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்துவது வரலாற்றில் நிருபணமாகியுள்ளது அந்தவகையில் தற்போது பின்னிலையிருக்கும் மக்கெய்னுக்கு சாதகமாக ஏதேனும் திடீர் திருப்பங்கள் ஏற்படச்சாத்தியமுள்ளதா?
::: கேள்வி: இந்தத்தேர்தலுக்கு முன்னர் அதிகம் அறியப்படாத பராக் ஒபாமாவின் எழுச்சிக்கு காரணம் யாது?
பதில்:
ஒபாமா ஒரு ரொக் இசைக்கலைஞர் போன்று மக்களை வசீகரிக்கக்கூடிய அபார பேச்சாற்றல் மிக்கவர்
தேர்தலில் முன்பெல்லாம் அதிக நாட்டங்காண்பிக்காத இளைஞர் யுவதிகளை தேர்தல் பிரசார மேடைகளுக்கு இழுத்துவந்தமை அவரது வெற்றிக்கு காரணம்
இணையம் கைத்தொலைபேசி குறுஞ்சேவை உட்பட நவீன தொலைதொடர்பு சாதனங்களை மிக உச்சளவில் பயன்படுத்தியமையும் அவரது ஏற்றத்திற்கு காரணம்
மிகவும் நோயுற்றிருக்கும் அவருடைய தாய் வழிப் பாட்டியைப் பார்க்க ஹவாய்க்குப் போயிருக்கும் ஒபாமா தான் அமெரிக்கப் பிரஜை இல்லை என்பதற்கான ஆவணங்களை அழிக்கப் போயிருக்கிறார் என்ற வதந்தியைக் கிளப்பியிருக்கிறது.
:::
ஸ்பெயினைத் தோற்கடித்து கியூபாவை அமெரிக்கா தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. அது மட்டுமல்ல, பிலிப்பைன்ஸ், போர்ட்டரீகோ மற்றும் பசிபிக் கடலில் உள்ள குவாம் என்னும் தீவு ஆகியவற்றையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது.
:::
இந்திய பத்திரிக்கையாளர் எம்.ஜே. அக்பர் கூறுவது போல் உள்நாட்டைப் பொறுத்தவரை அமெரிக்கா ஜனநாயக நாடு என்றாலும் உலகைப் பொறுத்தவரை ஒரு சர்வாதிகாரி.
:::
அமெரிக்காவின் முழு ஆளுமையிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றிய பெருமை, மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைத்தான் சேரும்.
:::
தன் சிறு வயதில் இந்தோனேஷியாவின் ஜாகர்த்தாவில் வளர்ந்து வந்த போது எப்போதும் சண்டை போட அமெரிக்கா தயாராக இருப்பதையும், தன்னுடைய பொருளாதார அமைப்பை மற்ற நாடுகளின் மீது திணிக்க விரும்புவதையும், தன் நலனுக்காக ஊழல் நிறைந்த சர்வாதிகார்களை அமெரிக்கா ஆதரித்து வந்ததோடு அந்த நாடுகளில் நடக்கும் ஊழலைக் கண்டுகொள்ளாமல் இருந்ததையும் அறிந்ததாகவும் தன் புத்தகத்தில் கூறியிருக்கிறார்.
அமெரிக்கத் தேர்தல் முடிவை விட அங்குள்ள மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது பொருளியல் பிரச்சினைக்கான தீர்வைத்தான். ஓராண்டுக்கு முன் அதிபர் தேர்தல் பிரசாரம் தொடங்கியபோது, அமெரிக்கப் பொருளியல் நிலைத் தன்மையோடு இருந்தது.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde
Mayanti Langer – Indian Cricket Commentators
இந்த உலகக் கோப்பையில் நான் ரசித்த முதல் அம்சம் மயந்தி லங்கர்.
வெறுமனே கவர்ச்சிக்கும், ஊறுகாயாகத் தொட்டுக் கொள்ள பெண் தொகுப்பாளினியும் இருந்த காலகட்டம் காணாமல் போயிருக்கிறது. இவர், “நீயா… நானா?” கோபிநாத் ரகம். தரமான கேள்விகள்; சுனில் கவாஸ்கார் போல் ஒயிலான மிடுக்கு; காதில் வருவதையும் எதிராளி பேசுவதையும் நேரமும் இடமும் அறிந்து முன்னெடுக்கிறார்.
நான் மந்திரா பேடி காலத்தவன். அவர் டி.டி.எல்.ஜே (தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே) படத்தில் நடித்த ஒரே குற்றத்திற்காக, கிரிக்கெட் போட்டிகளிலும் நடுவே வந்து போனார்.
அதற்கும் முந்தைய ஹிந்தி மட்டுமே அரசாண்ட பிஷன் சிங் பேடி, லாலா அமர்நாத், கிஷோர் பேமானி, சுஷில் ஜோஷி போன்றவர்கள் பேச்சைக் கேட்டால், குளக்கரையில் கரையும் காகங்களின் இனிமை புரியவரும். ஹிந்தி தெரிந்திருந்தால் அந்த மொழியை இப்படியாக உபயோகிக்கக் கூடாது என்பதும் தெரியவரும். டிவியின் ஒலியை மொத்தமாகக் குறைத்துவிட்டு, வெறுமனே காட்சியை மட்டும் பார்க்கலாம். அதாவது, இளையராஜா பாடலை ரேடியோவில் ஒலிக்க விடுங்கள். தொலைக்காட்சியில் ஒரு நாள் போட்டி ஓடும்.
ஆங்கில காமெண்டரி எப்பொழுதுமே தேவலாம். நரோத்தம் பூரி போன்றவர்கள் ஜமாய்ப்பார்கள். எனினும், பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வர்ணனையாளர்களை எந்த இங்கிலீஷ்காரராலும் தொட இயலவில்லை. ரிச்சி பெனாட், டோனி கிரெக் – இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் சரிந்தால் கூட மென்மையாகச் சொல்வார்கள். ஸ்டீவ் வாக் வெளுத்து வாங்கினால் கூட குறைகளைச் சுட்டுவார்கள்.
அதன் பிறகு நிறைய பேர் வந்ததாகக் கேள்விப்பட்டேன். ஹர்ஷா போக்ளே, சித்து – இவர்கள் மைக்கை பிடித்த போது எனக்கு கிரிக்கெட் எட்டாத கனியாகி விட்டிருந்தது.
மீண்டும் ஐ.பி.எல். மூலமாக வந்த போது அறிமுகமான பெண் வர்ணனையாளர் மாயாந்தி. லட்சணமாக இருந்தார். இன்னொரு மந்திராவோ என மிரட்சியுடன் அலட்சியமாகக் கேட்டேன். சுனில் கவாஸ்கரின் ஒய்யாரமும் ரவி சாஸ்திரியின் ஆங்கிலப் புலமையும் கவனிக்க வைத்தது. ஆனால், அவரை பின் தொடர வைத்தது — அந்த ஆஸ்திரேலியாக்காரர்களின் வாக்கு வன்மை.
கொஞ்சம் தேடினால், என்னென்னவோ சாதித்து இருக்கிறார் மாயந்தி. எப்பொழுது இருந்தோ அளவளாவுகிறார் லங்கார். எதெதற்கோ நேரடி ஒலிபரப்பாளர் ஆக இருந்திருக்கிறார் லங்கர். கணவன் கூட புகழ் பெற்றவராம். நம்ம 83 ரோஜர் பின்னியின் மகனை மணமுடித்திருக்கிறார்.
சந்தோஷமாக இருந்தது. கிளப் ஆட்டம் போல் இறக்கிவிடப்பட்ட மசாலா பதார்த்தங்கள் இன்று லியோ சிங்கமாக முழுமுதல் திரையையும் காத்திரமாக ஆக்கிரமித்து விவரணையை விவரமாகத் தருவது – புதிய தலைமுறையின் சாதனை.
பின்னூட்டமொன்றை இடுக
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது மயந்தி லங்கர், மாயாண்டி லாங்கர், Commentators, Compere, Comperer, Comperers, Coordinator, cricket, DJ, Doordarshan, Events, icc, Interviewer, Interviews, IPL, Live, Mayanti Langer, Sports, Tournaments, TV, wc23, world cup