Tag Archives: Books

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கி

Imposter syndrome is a predictor of success. If you feel like a fraud, research suggests you may be on the right track.

இந்தியாவில்தான் நாடி ஜோசியம், ஜாதகம், பரிகாரம், கைரேகை, கிளி சீட்டெடுத்தல் என்று நினைத்திருந்தேன். அமெரிக்காவும் அதே கதிதான் என்பது ஜார்ஜ் டபிள்யூ புஷ் (பெரியண்ணன்) நீதிபதிகள் என்னும் கிளிகளின் சீட்டுக்களில் ஜெயித்தபோது தெரிந்தது. அதன் பின் நேற்றைய தேர்தலில் யேசு கிறிஸ்துவின் உதவியுடன் டெட் குரூஸ் (ஜோ. டி. குரூஸ் மாதிரியே பெயர் கொண்டிருப்பவர்) ஜெயிப்பது வரை உறுதியாகிக் கொண்டே இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக அறிவியல்தனமான இரு புத்தகங்கள்:

Medical Medium: Secrets Behind Chronic and Mystery Illness and How to Finally Heal by Anthony William

Medical Medium - Secrets Behind Chronic and Mystery Illness and How to Finally Heal

அறிவியல் என்றால் கவனிப்பது, கவனித்ததை அளவெடுப்பது, அளவுகளைப் பரிசோதிப்பது, பரிசோதனையை மீண்டும் மீண்டும் செய்து பார்ப்பதன் அடிப்படையில் இறுதி முடிவை நிரூபிப்பது என்பார்கள். அந்தோணி வில்லியம் அந்த வகையைச் சேர்ந்தவர் அல்லர்.

கியானு ரீவ்ஸ் நடித்து ‘கான்ஸ்டாண்டின்’ என்று ஒரு பேய் + சாமியார் + கிறித்துவ பூதம் படம் வரும். அதில் வருவது மாதிரி நான்கு வயதில் அவருக்கு முன் அரூப உருவங்கள் தோன்றி அவருக்கு ஞானப்பால் கொடுத்திருக்கிறது. நான்கு வயதிலேயே நேராகச் சென்றார். பாட்டியின் மார்பில் கை வைக்கிறார். ‘பிஞ்சிலேயேப் பழுத்திடுச்சு’ என்போமே… அது போல். அப்பொழுதே கையடித்து சொல்லி இருக்கிறார்: “நுரையீரல் புற்றுநோய்” (தமிழில் சொல்லவில்லை; லங் கேன்சர் என்று ஆங்கிலத்தில் மழலையாகச் சொன்னதை கற்பூரம்… சாரி… மெழுகுவர்த்தி அடித்து சத்தியம் செய்கிறார்).

அடுத்த நாள் காலையே மருத்துவமனைக்கு பாட்டியை அழைத்துச் செல்கிறார்கள். சரியான கருநாக்கு. அப்படியே பலித்துவிட்டது.

நீங்கள் வில்லியமை நினைத்தவுடன் தரிசிக்க முடியாது. அதற்கு பெரிய க்யூ நிற்கிறது. லாட்டரியில்தான் நோயாளிகளைத் தேர்ந்தெடுக்கிறார். அவர் தேர்ந்தெடுத்தாலே உங்களின் பிணி பரிபூரண குணமடையும். அறுவை சிகிச்சையின்றி மருந்தின்றி மாத்திரையின்றி குமுதம் பிரார்த்தனை கிளப் இல்லாமல் நலமடைவீர்கள்.

இவருக்கு வரும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்று சொல்லவும் வேண்டுமோ! நீங்கள் விசுவாசியா?

Cure: A Journey into the Science of Mind Over Body by Jo Marchant

Cure - A Journey into the Science of Mind Over Body by Jo Marchant

எஸ்.வி. சேகரின் ‘காட்டுல மழை’யில் சில புகழ்பெற்ற கடிஜோக்குகள் உண்டு. கீழ்கண்ட சம்பவத்தைப் படித்தால் வடிவேலு, விவேக் கூட நினைவிற்கு வரலாம்.

”முதல் நாள் கொதிக்கும் தண்ணீரில் கால் வைத்தேன். என்னால் அதைத் தாங்கவே முடியவில்லை.

அடுத்த நாள் என்னுடைய பிடித்தமான விளையாட்டை ஐ-பேட் எடுத்து விளையாடிக் கொண்டே, அதே கொதிக்கும் வென்னீரில் காலை வைத்தேன். என்ன ஆச்சரியம்… சூடே தெரியவில்லை!”

திருநாவுக்கரசர் அன்றே பாடினார்:

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.

காதலன் காதலியிடம் மயங்குகிறான். சிலர் ஃபேஸ்புக்கில் விழுகிறார். சிலர் ஆசானிடம் அடிமையாகிறார்கள். மனவசியம் எனலாம். தொழுகையில் லயிக்கலாம்.

எல்லாம் நம் சிந்தையில்தானே இருக்கிறது. பூதம் இருக்கிறது என நினைத்தால் அது நம்மை விழுங்கும். பூச்சிதான் இருக்கு, என்று நினைத்து எல்லாப் பிரச்சினைகளையும் நசுக்கு என்கிறார்.

’ஏமாறாதே… ஏமாற்றாதே’ என்று வாத்தியார் பாடியிருக்கலாம். கடைபிடிக்கவில்லையே!

திருக்குறள் : 1160

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.

க.நா.சு.தான் வென்றார் – தமிழவன்

திராவிடம் – தமிழ்த் தேசம் – கதையாடல்: ஒரு நூற்றாண்டுத் தமிழ்ச் சிந்தனை வரலாறு – நூலில் இருந்து ஒரு நறுக்

நான் கேரளத்தில் எம்.ஏ. முதலாண்டுக்குச் சேர்ந்த போதுதான் இலக்கியம் என்பது கதை, நாவல், கவிதை இவற்றைத் தாண்டிய ஒன்று என்பது விளங்கியது. ஆனால், அதற்குப் பிறகு எவ்வளவோ வாசித்தாலும் இன்றும் ‘இதுதான்’ என்று ஒரு வாக்கியத்தில் இலக்கியம் பற்றிச் சொல்ல என்னால் முடியவில்லை.

அதனால்தான் இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியோடு மல்லாடியவர்களைப் பற்றி கேள்விப்படும் போது அவர்களைச் சந்திக்க விரும்பியிருக்கிறேன். இலக்கியம் என்றால் என்ன என்ற தலைப்பில் ழான் பவுல் சார்த்தர் எழுதிய நூலை என் அலமாரியில் எப்போதும் வைத்திருக்கிறேன்.

இன்றுவரை தமிழில் இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியோடு வாழ்ந்தவர்களில் முக்கியமானவர் க.நா.சு. என்பது என் கருத்து. வேறு ஏதாவது வேலை செய்தால் இந்தக் கேள்வி மனசிலிருந்து மறைந்துவிடும் என்று பயந்து எந்த வேலையும் செய்யவில்லை க.நா.சு.

க.நா.சு.வை முதன்முதலில் நான் சந்தித்தது பெங்களூரில் நண்பர் ப.கிருஷ்ணசாமியின் வீட்டில். க.நா.சு. ஒரு வாரத்துக்கு மேல் வந்து தங்கினார். கையோடு ஒரு சிறிய போர்ட்டபிள் டைப்ரைட்டர் கொண்டு வந்திருந்தார். ஓய்வு நேரத்தில் அதில் ஆங்கிலத்தில் டைப் செய்தது தவிர எப்போதும் பேசிக் கொண்டேயிருந்தார் என்பது என் நினைவு. இன்னுமொரு நினைவு வெள்ளைக் கதராடையில் எப்போதும் காட்சி தந்தார்.

இந்தக் காலத்துக்குச் சற்று முந்தி நான் அப்போது தமிழகத்தில் இருந்த நக்சலைட்டுகள் ஓரிருவரைப் பார்த்திருக்கிறேன். அதாவது எமர்ஜென்சி நடைமுறையில் இருந்த காலகட்டம். அவர்கள் ரொம்பவும் கோபமாக இருந்தார்கள் என்பது என் கருத்து.

இந்த இரண்டு ரக மனிதர்களும் மற்ற தமிழர்களைவிட தனிமைப்பட்டு ஒரு வகையான இரகசிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மற்ற தமிழர்கள் தமிழ்சினிமாவில் தங்கள் தங்கள் கனவுகள் நிறைவேறியதைக் கண்டார்கள். இன்னும் சொல்லப்போனால் கனவை நிறைவேற்றியவர்களுக்கு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஓட்டு போடக் கற்றிருந்தார்கள்.

ஆனால், க.நா.சு. அப்படிப்பட்டவர் அல்லர் என்பது அவரைப் பார்த்தவுடன் தெரிந்தது. அவருடைய வெள்ளைக் கதர் ஜிப்பாவும் (அவர் காலத்தில் எழுத்தாளர்கள் ஜிப்பா போட வேண்டும். புதுமைப்பித்தன் புகைப்படம் ஜிப்பாவோடுதான் எப்போதும் பிரசுரிக்கப்பட்டது), அவருடைய கறுப்புக் கண்ணாடியும் என்னை அவர் வேறுபட்டவர், வேறொரு காலத்திலிருந்தும் வேறொரு இடத்திலிருந்தும் வந்தவர் என்று நினைக்க வைத்தது. அதுபோல் அவருடைய ஆங்கிலம்.

Thamizahvan_Books_Dravidam_Tamil_Desam+Kadhai_Aadal

நன்றி: திராவிடம் – தமிழ்த் தேசம் – கதையாடல்: ஒரு நூற்றாண்டுத் தமிழ்ச் சிந்தனை வரலாறு
எழுதியவர் தமிழவன்
முதல் பதிப்பு: 2014
வெளியீடு: அடையாளம்
விலை: ₹ 180
பக்கங்கள்: 237

மார்டின் லூதர் கிங் திருநாள்

Martin-Luther-King-Jr.-Day-Best-Quotes

நான் அமெரிக்காவில் கால் பதித்த பிறகுதான், இந்த நாள், மார்ட்டின் லூதர் கிங் நாளாகக் கொண்டாடப்படுகிறது. 1983இலேயே கால்கோள் இடப்பட்டு, 1986இல் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பரவினாலும், அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களும் 2000ஆவது ஆண்டில்தான் ஜனவரி மாதத்தின் மூன்றாவது திங்கள்கிழமையை எம்.எல்.கே. தினம் என்று அனுசரிக்கத் துவங்கினார்கள்.

இந்தியாவில் எங்கு திரும்பினாலும் மகாத்மா காந்தி சாலை. தமிழகத்தில் அண்ணா தெரு. அமெரிக்காவில் 730 நகரங்களில் இவர் பெயரைத் தாங்கிய தெருக்கள் இருக்கின்றன.

கடந்த வருடம் வெளியாகிய ‘செல்மா’ படத்தின் இயக்குநருடன் உரையாடும் பகுதியை கீழே பார்க்கலாம்:

வாக்குரிமைக்காக போராட்டம். சம உரிமைக்காக குரல் எழுப்புதல். காவல்துறையின் அத்துமீறல்கள் குறித்த விழிப்புணர்வு முழக்கங்கள். பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்டவர்களை ஒருங்கிணைத்தல். வன்முறையில் இறங்க விரும்புவோரை வலியுறுத்தி சத்தியாகிரகத்தில் ஈடுபட வைத்தல். கிறித்துவ மதத்தின் அடிப்படையிலான சமூக அறத்தையும் புதிய ஏற்பாட்டில் இருந்து அன்பையும் எடுத்துக் கொண்டாலும், அதை கிழக்கத்திய சித்தாந்தங்களான காந்தியின் அரசியல் எழுத்தையும் புத்தரின் ஒவ்வொரு உயிரும் மற்றொரு உயிரினத்தோடு ஒன்றி ஒருங்கிணைந்து வாழும் மதக் கோட்பாடுகளையும் தன் சொற்பொழிவுகளில் முன்வைத்தல்.

மார்டின் லூதர் கிங்கின் அஹிம்சை கொள்கை என்றால் என்ன என்பதை ஆறு வகையாகப் பிரித்து முன் வைக்கிறார்:

1. அகிம்சை என்பது கோழைத்தனம் அல்ல: கோழைகளால் தைரியமாக இயங்க முடியாது. நீங்கள் தைரியமானவராக இருந்தால் மட்டுமே, சத்தியாகிரகத்தில் ஈடுபடவும். வெறும் பயத்தினாலோ, ஆயுதம் கிடைக்காததாலோ, வன்முறையின்மையை நீங்கள் கடைபிடிக்கக் கூடாது.

2. எதிரியை தாழ்வாகக் காட்ட நினைப்பதோ தோற்கடிப்பதோ அகிம்சையின் நோக்கம் அல்ல: எதிரியை நட்புறவு பேணவைத்து, எதிரியாக நினைக்கவைக்காமல், நம்முடைய நிலையைப் புரிய வைப்பதுதான் வன்முறையின்மையின் நோக்கம் ஆகும். பகிஷ்கரிப்பதும் ஒத்துறையாமை இயக்கமும் நம்முடைய வழிமுறை ஆகும். ஆனால், அந்தப் பாதையில் நம் நோக்கம் நிறைவேறியவுடன் எதிரியின் அகம் திறந்தவுடன் அவருடன் கைகோர்த்து வாழ்வதற்குப் பழக வேண்டும். அகிம்சாமுறை சத்தியாகிரகத்தின் இறுதியில் அன்பார்ந்த சமூகம் உருவாகி இருக்கும். துப்பாக்கி எடுத்து நடக்கும் வன்முறையின் முடிவில் பழிவாங்கும் வெறுப்பு மேலோங்கியிருக்கும்.

3. நம்முடைய எதிரி — தீவினைகளின் ஏவுகணைகள் அல்ல; அந்தப் பொல்லாத்தனமான வழிமுறை மட்டுமே நம் எதிரியாகும்: எய்தவன் எங்கோ இருக்க அம்பை நோவானேன்? எங்கோ, எவரோ தீங்கான செய்கைகளை வழிவகுத்து, அந்தத் தீவினைகளுக்கு காரியகர்த்தாவாக களத்தில் வேறொருவரை ஏவுகிறார்கள். நம்முடைய குறிக்கோள் அந்தப் பொல்லாத சித்தாந்தத்தை முறியடிப்பது மட்டுமே. இனவெறி என்பதைத் தாண்டி, இந்தப் பிரச்சினை அக்கிரமத்திற்கும் தர்மநீதிக்கும் நடுவே நடக்கும் போராட்டமாக அகிம்சாவாதி உணர்வான். வெள்ளைக்காரனை வீழ்த்துவது அல்ல குறிக்கோள். வெளிச்சத்தின் பாதையில் அனைவரையும் இட்டுச்செல்வதே நம் குறிக்கோள்.

4. தப்பித்துச் செல்லாமல் இருப்பது: ஜெயில் தண்டனையோ… லத்தியடியோ… அதைத் தாங்கும் மனோதிடம் வாய்த்தவரே அகிம்சாவாதி. எப்படி திருப்பி அடிக்கலாம் என்று எண்ணாதே!

5. அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை: குண்டு வீசி எதிரியை அழிக்க நினைப்பது புறவயமான வன்முறை. அதே சமயம், மனத்தினுள்ளே வன்மமும் குரோதமும் கொழுந்துவிட்டெரிவது அகவயமான வன்முறை. வெறுப்பைக் கக்கும் பிரச்சாரங்களையும் அடுத்தவரை அழிக்கத் தூண்டும் கோபதாபங்களையும் அகிம்சாவாதி தூண்டமாட்டான். அவன் வழி அன்புமயமானது. குறள்மொழியில் சொல்வதானால்

அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈ.னும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.

பொருள் : அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.

காதலியிடம் அன்பு பாராட்டுவது போல், தோழமையிடம் நட்பு பாராட்டுவது போல், நம்மை வெறுத்து ஒதுக்குபவரிடம் எவ்வாறு பாசமாகப் பழகுவது? அது இயலாத செயல் அல்லவா?

இங்கு Agape எனப்படும் கிரேக்கத் தத்துவத்தை மார்டின் லூதர் கிங் ஜூனியர் முன்வைக்கிறார். இவ்வாறு விரும்புவதற்கு எவ்விதமான லாபநோக்கங்களும் கிடையாது. எதிரியின் மீதான விருப்பம் கொள்வதற்கு அவர் மீதான பற்றோ, அல்லது அவரின் பொருள் மீதான வாஞ்சையோ காரணம் கிடையாது. இது பற்றற்ற பாசம். அவரின் மீது பரிதாபம் கலந்த பாசம். அடுத்தவரின் நன்மைக்காகவே நாம் உருவாக்கி கொள்ளும் பாசம். பாசம் வைப்பதால் நமக்கு நயா பைசா நன்மை கிடைக்காது. எனினும், அந்தத் தருவாயிலும் பாசம் மட்டுமே தோன்ற வைக்கும் அகவயமான அகிம்சையை நீங்கள் உங்கள் எதிரியின் மீது பாய்ச்ச வேண்டும்.

பௌத்தத்தைப் பொறுத்தளவில் அதன் மையக் கோட்பாடாக அன்பும் கருணையும் உள்ளன. மெத்தா(அன்பு), கருணா (கருணை), முதிதா (கருணை அன்பின் விளைவாகத் தோன்றும் மகிழ்வும் களிப்பும்) , உபேகா (அமைதி, சாந்தி) என்பன மிக அழுத்தமாக அதில் வலியுறுத்தப்படுகின்றன. இங்கு உபேகா எனக் குறிப்பிடப்படுவது, வெறுப்பு, பகைமையைப் போக்கி உள்ளம் அமைதியும் நிம்மதியும் அடைவதாகும். உள்ளமானது கோபம், வெறுப்பு, பகைமை உணர்விலிருந்து மீட்சிபெற்ற நிலையிலேயே அன்பும் கருணையும் உருவாக முடியும் என பௌத்தர் கூறுகின்றார். உள்ளத்தில் நல்ல சிந்தனைகளைக் கொண்டிருப்பது வெறுப்பை நீக்குவது, அன்பு, கருணை என்பன உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும். கோபமும் வெறுப்பும் பகைமை உணர்வும்- மன உளைச்சல், மோதலுக்கு இட்டுச் செல்கின்றன என்பது புத்தரின் கோட்பாடாகும்.

6. நீதி சார்ந்தே இந்த உலகம் இயங்குகிறது: உங்களுக்கு வருங்காலத்தின் மீது நம்பிக்கை இருந்தால் அறவழியில் போராடுவீர்கள். இப்போது அடிவாங்கினாலும், நாளை நமதே என்னும் விசுவாசம் இருந்தால் மட்டுமே உடனடியாக தடியெடுத்து எதிராளியை அடிக்காமல் இருக்க முடியும். உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். மதநம்பிக்கை வேண்டாம். ஆனால், நல்லது மட்டுமே வாழ்வாங்கு வாழும்; அகிலத்தில் தீயது அழிந்து பொசுங்கும் என்று உணர்வீர்களானால் அகிம்சையின் பக்கம் நிற்பீர்கள். அதற்கு என்ன பெயராக வேண்டுமானாலும் இருக்கலாம். பிரம்மம் என்றுகூடச் சொல்லலாம்.

Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage – Book Reviews

இன்னொருத்தருடன் உங்களுடைய இதயம் இணக்கமாக இருக்க ஒத்திசைவு மட்டும் காரணம் அல்ல. இரண்டு பேருக்கும் இடையே பொதுவாக நடந்த ரணங்களால்தான் இதயங்கள் இணைகின்றன. – சுகுரு டசாகி

ஜப்பானிய பழமொழியில் சொல்கிறார்கள்: ‘தலையைத் துருத்திக் கொண்டு தெரியும் ஆணியை, அடித்து உள்ளே தள்ளு!’

ஜப்பானில் சுற்றம் என்பது குடும்பத்தையும் தாண்டியது. வாழ்க்கையின் ஒவ்வொரு பாதையிலும் அந்த ஐக்கியமாகும் எண்ணம் பாய்கிறது. நீங்கள் தனித்துத் தெரிந்தால், பத்தோடு பதினொன்றாக ஆக்கப்படுவீர்கள். ஆமே (甘え) என்னும் சித்தாந்தம் இந்தக் குழுமப் பண்பாட்டை புரிந்து கொள்ள உதவும். ஆமே (甘え) என்பதன் அர்த்தம் ’அடுத்தவரிடம் அன்பைத் தேடு’. குழந்தைப்பருவத்திலேயே இது மூளையில் ஏற்றப்படுகிறது. இன்னொருவரிடம் பரிபூரண விசுவாசம் கொண்டிருப்பதற்கும் சமூகக் கூட்டமைப்பாக வாழ்வதற்கும் இந்த உணர்வு முக்கியம் என்று கற்றுத் தருகிறார்கள். சொல்லப் போனால், ஜப்பானிய மொழியில் சுய ஆளுமையைச் சொல்லும் கொஜின் ஷுகி (こじん-しゅぎ) என்றால் அது சுயநலம்/பேராசை போன்ற மோசமான அர்த்தத்திலேயே பயன்பாட்டில் இருக்கிறது.

ஆமே (甘え) என்பது குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே உள்ள உறவு போன்றது. அது எழுதப்படாத சமூக விதி. உங்களின் சக தொழிலாளரை, உங்களுடன் கூடப் படிக்கும் மாணவரை, உங்களுடன் கூட்டத்தில் வரும் பயணியை – ஒவ்வொருவருக்கும் நீங்கள் வாக்கு கொடுக்கிறீர்கள். நின்ஜோ (にんじょ) என்றால் உள்ளார்ந்து எழும் அனிச்சையான செயல்பாடு. அதாவது, ’நான் என்னுடைய கடமையாக, உங்களுக்கு பரிபூரண அன்பையும் எதிர்பார்ப்பற்ற அர்ப்பணிப்பையும் நல்குவேன்.’ அனைவரும் அனைவருடன் கைகோர்த்து வாழ்வோம் என்பதை பாலபாடமாக பதித்துக் கொள்கிறார்கள். இவ்வாறான சமூகக் குழுமங்களை கிரி (ぎり) என்கிறார்கள்.

இந்த மாதிரி உள்வட்டத்தில் இல்லாதவர்களை டனின் (たにん) என அழைக்கின்றனர். நின்ஜோ (にんじょ) உள்வட்டத்திலோ, கிரி (ぎり) குழுமத்திலோ இல்லாதவர்களை டனின் (たにん) எனக் கருதுகின்றனர். அதாவது, குடும்பமோ, பள்ளித் தோழமையோ, அலுவல் சகாக்களோ, அல்லாதவர்கள். டனின் (たにん)களுடன் எந்தப் பற்றுதலும் கிடையாது.

கடைசியாக வா (わ) என்னும் பதம். வா (わ) என்றால் ஒத்திசைவு; இணக்கம். இதுதான் ஜப்பானிய அறம். பழங்காலத்தில், நெல் விளைவிக்க தேவைப்படும் நதிநீரைப் பகிர வேண்டும். நெல்விளைச்சலைப் பாதுகாக்க வேண்டும். இந்த சமயத்தில்தான் குடியானவ சமூகத்தில் அமைதி நிலவ, வா (わ) சட்டத்தை அரசர் ஷொடொகு டைஷி முன்வைக்கிறார். விளையாட்டில், வர்த்தகத்தில் என்று எந்தத் துறையிலும் வா (わ) சித்தாந்தத்தைக் காணலாம். பரஸ்பர நம்பிக்கை, விட்டுக் கொடுத்து வாழ்தல், ஒத்துழைப்பு, மேலதிகாரியிடம் அசைக்கவியலா பற்றுறுதி, ஆகியவையே வா (わ)கருத்தியல். தனிமனித விளையாட்டான டென்னிஸ் போன்றவற்றில் ஜப்பானியர்கள் ஓரளவிற்கு மேல் எழும்ப முடியாததற்கும் இந்த அடிப்படைக்கும் பெரும் தொடர்பு உண்டு.

ஜப்பானில் தனித்துவம் தழைத்தோங்க, ஒரு சில துறைகளே இருக்கிறது: மலர் அலங்காரங்களைச் செய்யும் பணி, கவிதை புனைதல், கலை வெளிப்பாடு மற்றும் இசை.

உசாத்துணை: Phyllis Kepler, Brook S. Royse and John Kepler. Windows to the World: Themes for Cross-Cultural Understanding. Glenview, IL: GoodYearBooks, 1996

Haruki_Murakami_Colorless_Tsukuru_Tazaki_Novel_NYT

oOo

ஹருகி முரகமி எழுதிய ”நிறமற்ற சுகுரு டஸாகியும் அவன் யாத்திரை மேற்கொண்ட வருடங்களும் (Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage) படித்து முடித்தேன். ’மனிதரில் இத்தனை நிறங்களா’ என படம் வந்திருந்தது. இந்தக் கதையில் ஐந்து இளைஞர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம். ஒருத்திக்கு கருப்பு, இன்னொருத்திக்கு வெள்ளை; ஒருவனுக்கு சிவப்பு; இன்னொருவனுக்கு நீலம். கடைசியாக இருக்கும் ஐந்தாமவன் கதாநாயகன் – நிறமற்றவன்.

ஹருகி முரகமி எல்லா இடங்களிலும் ரசிகர்களை வைத்திருக்கிறார். அவருடைய புத்தகங்கள் பரபரவென்று விற்றுத் தள்ளுகின்றன. மகாரஷ்டிரா அளவில் இருக்கும் ஜப்பானில் மட்டுமே ஒரு மில்லியன் புத்தகங்கள் விற்கிறது! அதன் பிறகு, அதே புத்தகம் ஐம்பது மொழிகளில் மொழியாக்கம் காணப்பட்டு மேலும் ரசிகர்களைக் கவர்கிறது. இத்தனைக்கும் சிட்னி ஷெல்டன் போல், கென் ஃபாலெட் போல் பரபரப்பான துப்பறியும் மசாலா நாவல்களை முரகமி படைக்கவில்லை. நோபல் பரிசுக்கான ஓட்டத்தில் நெடுங்காலமாக இருக்கிறார். ஜேகே ரவுலிங் எழுதிய ஹாரி பாட்டார் போல் ஹருகி முரகமியின் நூல் நாயகர்களும் தங்களுக்கென்று உலகை சிருஷ்டித்துக் கொள்கிறார்கள். அவருடைய நூல்களின் கதாபாத்திரங்களின் அக மனது அபிலாஷைகள், யாரும் எதிர்பார்க்காத திசைகளில் பயணித்து, நமக்கு அறிமுகமான எண்ணங்களை பரிச்சயம் செய்வித்து, திக்கற்ற முக்குகளுக்கு இட்டுச் சென்று நம்முடைய சிந்தனையில் நீண்ட நாள் நிலைக்கும் பாதைகளை உருவாக்கவல்லது.

நாகர்கோவில் போன்ற குறுநகரத்தில் இருந்து டோக்கியோ நகரத்துக்கு வருகிறான் சுகுரு டஸாகி. அவனுக்கு கலைகளில் நாட்டம் கிடையாது. எந்தவிதமான பொழுதுபோக்கும் கிடையாது. எந்த கைவினைத் தொழிலும் தெரியாது. எளிதாக புன்னகைப்பான். சட்டென்று யாரோடும் பழக மாட்டான். புதியதாக எவராவது அறிமுகமானால், அவருடன் நட்பு பயில சிரமப்படுவான். வெளிப்படையாக பட்டெனப் பேசுவதில் சிரமம். தனியாகவே உலா வருகிறான். எவருடைய துணையும் இன்றி வாழ்க்கையை நடத்துகிறான். பேச்சுத் துணை கிடையாது. செல்பேசி அரட்டை கிடையாது. அலுவலில் நண்பர் கிடையாது. உண்ணும்போது சம்பவங்களைப் பகிர எவரும் கிடையாது. டிவி மாந்தர்களைக் கூட தொலைக்காட்சியில் பார்ப்பது கிடையாது.

சுகுரு என்பது அவனுடைய அப்பா, அவனுக்கு இட்ட பெயர். அந்தப் பெயருக்கு அர்த்தம் ‘பொருள்களைச் செய்பவன்’. இதனால், அவனுக்கு ஸ்திரமான விஷயங்கள் பிடித்துப் போகிறது. சின்ன வயதில் இருந்து தொடர்வண்டிகள் மேல் காதல். நாள் முழுக்க ரயில் நிலையத்தில் உட்கார்ந்திருக்கிறான். பயணிகளின் அவசரத்தைப் பார்க்கிறான். விற்கப்படும் பொருள்களை கவனிக்கிறான். தண்டவாளங்களில் தாண்டவமாடும் சுருதியை ரசிக்கிறான். இம்மி பிசகாமால், மாறி மாறிப் போகும் புகைவண்டிகளைப் பார்ப்பதோடு நில்லாமல், அந்தத் துறையிலேயே வேலை தேடவும் நாட்டம் கொள்கிறான்.

kuro_pottery

சுகுரு டஸாகியினுடைய குறுநகரத்தில் அவனுக்கு நான்கு நண்பர்கள் இருக்கிறார்கள். எப்பொழுதும் ஒன்றாகவே வளைய வருகிறார்கள். சுகுரு டஸாகி மட்டும் டோக்கியோவிற்கு கல்லூரியில் சேருகிறான். அதன் பிறகு நண்பர்களை இழக்கிறான். நண்பியைக் காமத்துடன் பார்க்கிறான். மூக்கு அரிப்பெடுத்தால் சொறிந்துகொள்வது போல், தன்னியல்பாக தினசரி பல மைல் தூரம் நீந்துகிறான். தற்பால் விருப்பமோ என கனவுறுகிறான்.

உங்களின் அத்யந்த சிநேகிதர்கள், சடாரென்று ஒரு நாள் – உங்களை ஒதுக்கி வைத்து விட்டால் என்ன செய்வீர்கள்? நிராகரிப்பை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? காதல் தோல்வி என்பது போல் தோழர்களின் தோல்வி என்று இந்த நிலையைச் சொல்லலாம். அவர்களிடம் சென்று ‘ஏன் என்னுடன் பேச மாட்டேன் என்கிறீர்கள்?’ என விசாரிப்போம். அவர்கள், நம்மை புறந்தள்ளும் காரணத்தை அறிய முயற்சிப்போம். நட்பை மீண்டும் உயிர்ப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று முயல்வோம். சுகுரு டஸாகி அவ்வாறெல்லாம் எதுவும் செய்வதில்லை. டஸாகிக்கு அந்த மாதிரி ஆராய இயலாத உள்ளுக்குள்ளேயே மருகும் மனம். தானாகவேப் புழுங்கி தனக்குள்ளேயே குற்றங்களை உருவாக்கி அதற்கான தண்டனைகளை ஏற்றுக் கொண்டு நிர்க்கதியாக அலையும் சிந்தையைக் கொண்டிருக்கிறான் டஸாகி.

துப்பறியும் கதை போல் வேகமாக விரைகிறது இந்த நாவல். ஏன் அவனை வெறுத்து ஒதுக்கினார்கள் என்பது முதல் முடிச்சு. அப்படி வெறுத்து ஒதுக்கிய, பதின்ம வயது தோழமை எல்லோரையும் எதிர் கொள்வானா என்பது இரண்டாம் முடிச்சு. ஒவ்வொருவரையும் சந்திக்கும் போது, அவர்கள் சொல்லும் மனப்பதிவுகளும் அதன் தொடர்ச்சியான தகவல்களும் ‘அடுத்து என்ன… அடுத்து என்ன?’ என்று ஆர்வமூட்டுகிறது.

ஒவ்வொரு நண்பரும், பிறரை அவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை வெளிக்கொணர்ந்தது நன்றாக இருந்தது. பியானோ இசைக் குறிப்புகளும் அதன் தொடர்ச்சியான ஆபரா, சிம்பொனி விமர்சனங்களும் வாழ்க்கையைச் சொல்கிறாரா, இசையைச் சொல்கிறாரா என எண்ண வைத்தது. ஃபிரான்ஸ் லிஸ்ட் என்பவரின் பியானோ இசைத்தட்டு ஆன Années de pèlerinage நாவல் நெடுக இடம்பெறுகிறது. கதையின் தலைப்பான ’யாத்திரை மேற்கொண்ட வருடங்களும்’ என்பதற்கும் பொருந்துகிறது.

tsukuru_overboard

கதைக்குள்ளேயே பல உபகதைகளும், கிளைக்கதைகளும், சிறுகதைகளும் உண்டு. நாவலின் நடுவே பியானோ வாசிப்பவர் குறித்த அத்தியாயம் வருகிறது. இது இந்த நாவலின் மிக சுவாரசியமான இடம். பியானோ கலைஞருக்கு சிறப்பு சக்தி வந்து இருக்கிறது. அவர் சாத்தானை சந்தித்து இருக்கிறார். அதனிடம் இருந்து, ஒருவரைப் பார்த்தவுடன் அவருடைய நிறம் என்ன என்பது அவருக்குத் தெரிந்து விடும் சக்தியைப் பெறுகிறார். தன்னுடைய நிறம் போலவே இருப்போருடன் அவருக்கு ஒத்துப் போகும், என்பதையும் அறிகிறார். இந்த ஞானமும், பிறரைப் பார்த்தவுடன் உணர்ந்து கொள்ளும் உள்ளுணர்வும் வந்ததால், அவரது நெடுநாள் ஆயுள், மாதங்களாகச் சுருங்கிவிட்டது. இந்த சிறப்புப் பார்வை கிடைக்கும் சூட்சுமத்தை அவர் யாருக்கு வேண்டுமானாலும் தாரை வார்க்கலாம். ஆனால், யாருக்குக் கொடுக்கிறாரோ, அவருடைய ஆயுள்காலமும் எண்ணப்படும் நாள்களாகிக் குறைந்து விடும். அவர் எப்பொழுது பியானோ வாசித்தாலும், தன்னுடைய ஜாடியை, பியானோ மேல் வைத்து விட்டு வாசித்தால்தான், பியானோ வாசிப்பு களை கட்டும். அவருக்கு ஆறாம் விரல் இருந்திருக்கிறது. ஆனால், ஆறாம் விரலோ, பியானோ வாசிப்பிற்கு இடையூறாக இருந்திருக்கும். அதை வெட்டி எடுக்கச் சொல்லி இருப்பார்கள். அந்த ஆறாம் விரல்தான் ஜாடியில் இருந்ததா? ரொம்ப நாளைக்கு, இந்த இடம் மனதிலே சிந்தையைக் கிளறிக் கொண்டே இருக்கும்.

நியு யார்க் டைம்ஸில் சொல்லி இருந்தார்கள். கனவை சிலர் நன்றாக எழுதுவார்கள். அற்புதமாக விவரிப்பார்கள். நிஜம் போலவே இருக்கிறமாதிரி கதையில் உருவாக்கி விடுவார்கள். ஆனால், முரகாமியோ, எது கனவு, எங்கே நிஜம் என சிந்தை திகைக்கும் அளவு கொண்டு செல்கிறார். இதை மீ எதார்த்தம் (surrealism) எனலாம். குழந்தைகளுக்கான கற்பனை உலகம் என்றும் எளிமையாக்கலாம்.

முரகாமியிடம் என்னவெல்லாம் எதிர்பார்த்தேனோ, அவை எல்லாமும் இந்தப் புத்தகத்திலும் கிடைத்தது: கொஞ்சம் போல் பாலுறவு வர்ணனை; இசையும் அதன் தாளங்களையும் வாழ்க்கையோடு சங்கமிக்கும் லயம்; அமானுஷ்யமான உணர்வுகளை காற்றோடு உலவவிடுதல்; அர்த்தமற்ற வாழ்க்கையை தேடல் நிறைந்ததாக ஆக்கிக் கொள்ளும் முட்டாள்தனம்; பிறரோடு ஒட்டாமல், குழுவாகத் திரிய விரும்பும் விசித்திரம்; ஓட்டப்பந்தயம் போல் முடிவைத் தொடும் பயணமாக இல்லாமல், 4×100 தொடர் பந்தயமாக மாரத்தான் ஓடும் உயிர் வித்தை – எல்லாம் போதிய அளவில் கலந்திருக்கிறது.

டிரெயின் ஸ்டேஷன் போல் வாழ்க்கை. போக நினைக்கும் ஊரை மனதில் வைத்து அவசரமும் ஆர்வமும் பதற்றமும் கொண்டு தொடர்வண்டியில் ஏறுகிறோம்; இறங்குகிறோம். பயணங்களில் நிறைய பேரை சந்திக்கிறோம். சிலருடன் அதே இடங்களில் வசிக்கிறோம். சில சமயம் வழியனுப்ப மட்டும் ரெயில்வே ஸ்டேஷனுக்குச் செல்கிறோம். மேலிருந்து ஒருத்தன், இந்த கால அட்டவணையை உருவாக்கி, மின்வண்டியைப் போல் எல்லோரையும் இயந்திர கதியில் செலுத்துகிறான்.

tsukuru_train

பிறரின் இறப்பிற்கு நாம் காரணமாக இருக்கும்போது எப்படி உணர்கிறோம்? எதை உருவாக்குகிறோம்? யாரை திருப்தி செய்ய வாழ்கிறோம்? காதல் என்றால் என்ன? வெற்றி பெறுவது எப்போது? நிறைய யோசிக்க வைக்கிறது.

“நினைவுகளை மறைத்து விடலாம். ஆனால், அந்த நினைவை உருவாக்கிய சம்பவங்களை அழித்துவிட இயலாது.” – சுகுரு டசாகியிடம் சாரா சொல்வது

Kids book writer R Ponnammal’s Interview in Dinamalar

நன்றி: குழந்தை இலக்கியங்களுக்கு நூலகங்களில் இடம் கிடைக்குமா? – தினமலர்

R_Ponnammal_Interview_Dinamalar_Children_Books_Author_Writers

ஆன்மிகம், வரலாறு, அறிவியல், கணிதம் என, எல்லாவற்றையும், கதைகள் மூலம், குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கியமானவர், குழந்தை இலக்கிய எழுத்தாளர் ஆர்.பொன்னம்மாள்.

கடவுளின் கருணை, மகாபாரதம், மரியாதைராமன், தெனாலிராமன் கதைகள், ராஜராஜ சோழன் வரலாறு, திருக்குறள், மூதுரை, நன்னெறி கதைகள், பறவைகள் பலவிதம், எண்கள் எனும் பொக்கிஷம் என, இவரின் குழந்தை நுால்கள் நுாற்றுக்கும் மேல் உள்ளன. தற்போது, சிறுவர்களுக்கான தொடர்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி வரும் இவர், குழந்தை இலக்கியம் குறித்து கூறியதாவது:

இங்கு, தற்போது, எல்லா துறைகளுக்கும், நிறைய பருவ இதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், குழந்தைகளுக்கான இதழ்கள் விரல்விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளன.

குழந்தைகளிடம், கதைகள் மூலமாகவே, நன்னெறிகளையும், ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் கொண்டு செல்ல முடியும். நீதிக்கதைகள்,புராண கதைகள் மூலம், வாழ்வின் நோக்கத்தையும், தீமைகளின் முடிவையும் சொல்ல முடியும். அரச கதைகள் மூலம், அரசியல் குறித்த எண்ணங்களை சொல்ல முடியும். அறிவியலையும், கணிதத்தையும், கதைகள் மூலம் சொல்லி, எளிதாக புரிய வைக்க முடியும்.

ஆனால், கதை கேட்கும் ஆர்வத்தையும், கதை சொல்லும் ஆர்வத்தையும், குழந்தைகளிடம் நாம் தான் உண்டாக்க வேண்டும். அதற்கு, பள்ளிகளில், நீதிநெறி சார்ந்த தலைப்புகளில், பேச்சு, எழுத்து போட்டிகளை நடத்த வேண்டும். அப்போது தான், குழந்தைகள், வித்தியாசமான புத்தகங்களை தேடுவர். நுாலகங்களுக்கு செல்லும் பழக்கம் ஏற்படும். அதனால், தேடுதலும், திறனறிதலும் மேம்படும். ஆனால், இங்கு உள்ள நிலைமை வேறு. பாடப்புத்தகங்களை தவிர மற்ற புத்தகங்களை வாங்க, பள்ளிகள் ஊக்குவிப்பதில்லை. அரசு நுாலகங்களில், குழந்தை இலக்கியங்களை, வாங்குவதில்லை. அப்படி இருக்கும் போது, எப்படி, பதிப்பாளர்கள், குழந்தை இலக்கியங் களை பதிப்பிக்க முன்வருவர்? எழுத்தாளர்கள், எழுத முன்வருவர்?

குழந்தைகளிடம், படிக்கும் ஆர்வமும், படைக்கும் ஆர்வமும் அதிகமாக உள்ளது என்பதற்கு, பருவ இதழ்களுக்கு வரும் கடிதங்களும், படைப்பு களுமே சான்றுகளாக இருக்கின்றன.

கடந்த 15 ஆண்டுகளாக, நான், ஆன்மிகம் மற்றும் குடும்பப்பாங்கான சிறுகதைகளை எழுதி வந்தாலும், குழந்தைகளுக்காக எழுதும் போது தான், மனதில், திருப்தி ஏற்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Dataclysm: Who We Are (When We Think No One’s Looking) by Christian Rudder

Dataclysm Who We Are When We Think No Ones Looking Hardcover

புத்தகத்தை கிடுகிடுவென படித்துவிட முடிகிறது. ஏற்கனவே அரைத்த மசாலாவைப் போட்டு தமிழ் சினிமா எடுப்பது போல் சுவையாகவும் எளிமையாகவும் இருக்கிறது. மீண்டும் மீண்டும் வாசித்து, புதிய தரிசனங்களை, காலந்தோறும் சேமித்து வைக்கும் இரகசியங்களை எல்லாம் சொல்வதில்லை. மாலை நேரத்தில் சமீபத்தில் எம்.பி.ஏ முடித்த நண்பர் ஒருவருடன் நேர்ப்பேச்சு உரையாடல் போல் இலகுவான, ஆழ்ந்து பத்தி பத்தியாக வாசிக்க வேண்டாத நடை.

இந்தியாவின் பிக் பஜார் போல் அமெரிக்காவில் டார்கெட். தான் கருவுற்று இருக்கிறோமா என்பதை சோதிக்கும் சாதனத்தை பெற்றொருக்குத் தெரியாமல் பதின்ம வயது மகள் வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் போகிறாள். இரண்டே நாளில் அவருக்கு “தாய்மை”, “குழந்தை வளர்ப்பு” போன்ற பத்திரிகைகளுக்கு இலவச சந்தா கொடுக்கும் விளம்பரங்கள் முதல் ஆரோக்கியமான குழந்தை பிறக்க என்ன உட்கொள்ள வேண்டும் என்பதற்கான மாதிரி மருந்துகள் வரை, வந்து கொண்டேயிருக்கின்றன. பெற்றொருக்கும் பெண்ணின் இரகசிய கர்ப்பம் அம்பலமாகிறது.

அது போல் கூகுள் தேடலின் மூலம் ஜுரம் பரவுவதைக் கண்டுபிடிப்பது போன்ற பரவலாகப் பேசப்பட்ட தகவல்களையும் ஆராய்ச்சிகளையும்தான் புத்தகம் பேசுகிறது.

இளை தளபதி விஜய் பாஷையில் சொல்ல வேண்டுமானால், ‘இதயத்தை நம்பி முடிவெடுக்காமல், தகவலையும் அதன் மேற்சென்ற ஆய்வையும் வைத்து முடிவெடுப்பது என் விருப்பம்.’ இப்படிச் செய்தால் “நன்றாக அமையும்” என்று குருட்டாம் போக்கில் கடவுளை நம்பி காலை விடக் கூடாது. விரிவான தரவுகளை சேமிப்பது; அந்தத் தரவுகளின் நம்பகத்தன்மையை கூடிய மட்டும் அலசுவது; அந்தத் தரவுகளைக் கொண்டு தெளிவு அடைவது; தெளிந்த போக்குகளைக் கண்டு கொண்டு அறுவிதி அடைவது – இதுவே முறைமை.

1854ஆம் வருடம். லண்டனில் எங்கு பார்த்தாலும் காலரா நோய். இப்பொழுது எபோலா பரவி ஒபாமாவையும் அவருடைய டெமொகிராட் கட்சியையும் வீழ்த்த பயன்பட்டது மாதிரி, ஏதேனும் அரசியல் சதி இருக்குமோ என எல்லோரும் ஆராய்கிறார்கள். ஜான் மட்டும் வேறு மாதிரி ஆராய்கிறார். “நோய் எங்கே அதிகமாக காணப்படுகிறது?” கேம்ப்ரிட்ஜ் தெரு முக்கில் இருந்துதான் பெரும்பாலானோருக்கு நோய் வந்திருக்க வேண்டும் என அவருக்கு தரவுகள் தெரிவிக்கிறது.

ஆனால், அதே தெரு முக்கில் சிறைச்சாலை இருக்கிறது. அங்கிருக்கும் கைதிகளுக்கு காலெரா வரவில்லை. சாராயக்கடை உபாசகர்களுக்கும் காலரா வரவே இல்லை. ஏன்? மேலும் உள்ளே சென்று தீவிரமாக ஆராய்கிறார். சாராயக்கடையே கதியென இருப்பவர்கள், வேறு நீரை உட்கொள்ளவே இல்லை. அதே போல் ஜெயிலுக்கென்று பிரத்தியேகமாக கிணறு இருக்கிறது. அதனால்தான் அந்த இரு குழுக்களும் பாதுகாப்பாக காலரா நோயை தடுத்துவிட்டார்கள். அதே தெரு மக்களின் மூச்சுக் காற்றை சுவாசித்தாலும், நோய் தீண்டவே இல்லை.

இது போல் சுவாரசியமான விஷயங்களும் தற்கால ஆராய்ச்சிகளும் காதலில் விழுவதற்கான அட்டவணைகளும் இனக்கவர்ச்சிக்கான சூட்சுமங்களும் இதில் கிடைக்கிறது. உங்கள் மேலாளர் gut-feeling கொண்டு முடிவெடுப்பவராக இருந்தால், இந்தப் புத்தகத்தைப் பரிசளிக்கலாம்.

State of Tamil Cinema Reviewers: Movies vs Books

கடந்த பதினைந்து வருடங்களாக பட அறிமுகங்களை எழுதுபவன் + இணையத்திலும் பத்திரிகைகளிலும் விமர்சனங்களை அவ்வப்போது வாசித்தும் வருபவன் என்ற முறையில் எனக்குப் பட்டது….

* பெரும்பலான சமயம் படம் வெளியானவுடன் டாரெண்ட் தரவிறக்கத்தில் படம் பார்ப்பதால், திரையரங்கின் மன ஒருமை கிடைப்பதில்லை. அதை விடக் கொடுமை, ஆங்கிலப் படத்திற்கு ப்ளூ ரே ப்ரிண்ட்டும் தமிழ்ப்படங்களுக்கு திருட்டு விசிடியும் பார்க்க வேண்டும் என்னும் மனப்பான்மை.

* விகடன் விமர்சனம் போல் மார்க் போட்டு வாடிக்கை. எல்லாப் படத்திற்கும் மதிப்பெண் மட்டுமே வழங்கத் தெரியும்.

* திக்குவாய், குருடி போன்ற குறைபாடுகளை நல்ல நடிப்பு என்றும் ரஜினி, விஜய் படங்களை மசாலா என்றும் வகைப்படுத்துவோம்.

* கேமிராவில் ஒளிப்படம் எடுப்பதாலும், நாலைந்து முறை குழந்தைகள் நிகழ்ச்சியை வீடியோ எடுத்ததாலும் சினிமா எடுக்கும் அனைத்து வித்தையும் தெரிந்ததாக நினைக்கிறோம்.

* தொலைக்காட்சி சீரியல் (என்னைப் போல் ஆசாமிகள் தூர்தர்ஷன் நாடகம்) பார்த்தே பழக்கம். திரைப்படங்களிலும் அதே வாசனை எதிர்பார்க்கிறோம்.

* புத்தகத்திற்கு அறிமுகம் எழுதுவதை விட சினிமாவிற்கு அறிமுகம் கொடுப்பது எளிதானது. உதாரணமாக இயக்குநர் பாலா போன்ற புகழ்பெற்ற எழுத்துலக ஜாம்பவானை விமர்சிக்க நிறைய திராணி வேண்டும். ஆனால், ‘பாலா’ போன்றவரை விமர்சிப்பதால் சாதாரண மனுஷனாக அடையாளம் காட்டிக் கொள்ளலாம். இன்னும் விரிவாகச் சொன்னால் ஆயிரம் பக்க புத்தகத்தை தாக்கி எழுதினால் இலக்கியவாதியாக ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. ‘கடல்’ படத்தையும் பரதேசியையும் விமர்சித்தால் humble ஆளாகி விடலாம்.

* மோசமான படத்தைப் பாராட்டியும், சுவாரசியமான படைப்பை மட்டம் தட்டியும் எழுதினால் மட்டுமே கவனம் கிடைக்கிறது.

* சென்ற கால சினிமாவில் இருந்து வித்தியாசமாய் நின்று தமிழ்த் திரைப்படங்களை எது முன்னகர்த்துகிறது என்று கவனித்து பகிர்வதை விட, அந்தத் திரைப்படங்களின் கதையை வைத்து மன்றாடுவது எளிது.

என்னுடைய ஆண்டிராய்ட் போனிற்கு புதிதாக ஏதாவது நிரலியை நிறுவிக் கொண்டே இருப்பேன். சில சமயம் அதைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவேன். சில சமயம் உடனடியாக நீக்கிவிடுவேன். அது எனக்கு எப்படி உபயோகமாகிறது, ஏற்கனவே இருக்கும் மற்ற அப்ளிகேஷன்களில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது என்பதைப் பொறுத்து என் முடிவு அமைகிறது. வைரஸ் போன்ற தாக்குதல் கொடுத்தால் மட்டுமே, கூகுள் கடை சென்று மட்டகரமான தரமதிப்பீடு தருகிறேன்.

சினிமாவிற்கும் அதே அளவீடு பயன்படுத்தலாம். நோய்க்கிருமி போல் கலையை கீழே இழுக்கிறதா? அல்லது தனிப்பட்ட முறையில் உபயோகமான விதத்தில் முன்னேற்றுகிறதா?

Letters to the Author: Importance of sending mails to Writers and Editors

புத்தகம் படிப்பதோடு நிற்காமல் எழுதியவருக்கு மடல் போடவும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். பத்து வயதில் கோகுலம் ஆசிரியரான அழ. வள்ளியப்பா பதில் போட்டது என்னை ஊக்குவித்தது. அப்புறம் பதில் போடாத சுஜாத இன்னும் நிறைய.

வாழ்க்கையினால் ஏதாவது உபயோகம் இருக்க வேண்டும். என்னுடைய உயிரினால் ஏதாவது பலன் இருக்க வேண்டும்.

எழுத்தாளரை வாசிப்பதால், பிறருக்கும் தம் எண்ணங்களைப் பகிரவேண்டும். வெறுமனே கருத்துகளை உறிஞ்சிக் கொண்டு இருக்கக் கூடாது. கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டு சாலிட்டேர் மட்டும் விளையாடுவது போல் தனிமையைக் கொண்டாட, எதற்காக குழுமத்தில் இருக்க வேண்டும்?

கன்ஃபூசியசு சொன்னது: ‘reading without thinking gives one a disorderly mind; thinking without reading makes one flighty’

ஜெயமோகன்.காம் மட்டும் படித்துவிட்டு, அவருடைய குழுமத்தில் பதில் போடாவிட்டால் அலட்சியம் கலந்த சோம்பேறித்தனம் பெருகிவிடும். புத்தகம் வாசித்து முடித்தவுடன் எழும் எண்ணங்களைத் தொகுத்து அஞ்சல் செய்யாவிட்டால் எதிர்வினையாற்றவே பயம் நிறைந்த அசிரத்தை தோன்றிவிடும்.

உங்கள் பதிவுகளுக்கு சாதாரணமாக யார் பதில் போடுகிறார்கள்? இரண்டு மூன்று வரிகளுக்குள்ளேயே பதில் எழுதிப் போடுவதால், மறுமொழி எழுத அயர்ச்சி ஏற்படுகிறதா? எழுதுபவரை விமர்சித்து காயப்படுத்துவதற்கு பதிலாக, மௌனம் காப்பது சிறந்ததா?

Susan Cooper’s The Boggart: Monsters and Interesting Life

சிறுவர்களுக்காக சூசன் கூப்பர் எழுதிய ‘தி பொகார்ட்’ நாவலின் சில பகுதிகளை வாசித்தேன்.

விட்டலாச்சார்யா உதவியுடன் குட்டிப் பிசாசுகளை முதன் முதலாக பார்த்தபோதே பாசமும் சிரிப்பும் வந்தது. அதன் பிறகு ஹாரி பாட்டரில் கண்டிப்பும் விஷமும் கொண்ட குட்டி சாத்தான்கள் அறிமுகம். நடுவே ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ல் வில்லத்தனமும் பச்சோந்தி குணமும் கொண்ட குள்ள பூதங்கள்.

Susan Cooper’s The Boggart – விஷமத்தனமான பூதம். வீட்டில் வைத்த பொருள்களை இடம் மாற்றி வைக்கிறது. தினமும் காலையில் சவரம்; அப்புறம் கடியாரம் கட்டுதல் என்று ஓடும் வாழ்க்கையை சுவாரசியமாக்குகிறது. ஒரு நாள் போல் அடுத்த நாள் இல்லை. வரிசைக்கிரமமான மியூசியம் போன்ற இல்லத்த கலைத்துப் போடுகிறது.

பொருள்களைத் தேடிக் கண்டுபிடிக்கிறோம். மற்றவர்களின் உதவியை நாடுகிறோம்.

இன்று காலை வாசித்த Why You Love That Ikea Table, Even If It’s Crooked விஷயமும் இதோடு ஒத்துப் போனது. நானே சிரம்ப்பட்டு செய்தால், அந்த மேஜை மிகவும் ரசிக்கிறது. எவருக்கோ காசு எறிந்து செய்து முடித்தால், அத்தனை வாஞ்சையுடன் அந்த நாற்காலியை தடவித் தடவி பயன்படுத்துவதில்லை.

Haruki Murakami’s After the Quake: Short Story Collection: Book Intro

ஹரூகி முரகாமி எழுதிய சிறுகதை தொகுப்பை வாசித்தேன். ஜப்பானில் நடந்த நிலநடுக்கத்திற்கு பின் நிகழ்ந்த சம்பவ மாந்தர்களை அறிமுகம் செய்கிறது. கூடவே கொஞ்சமாய் தொட்டுக்க பயங்கரவாத செயலான நச்சுப்புகை கொலைகளையும் வைத்துக் கொள்கிறது.

திருமணமான பிறகு நிலவும் வெறுமை; பதின்ம வயது வெறுமை; எல்லா கதைகளிலும் ‘எதற்காக ஓடுகிறோம்? என்ன வாழ்க்கை இது? என்னத்த செஞ்சு… என்னத்த பண்ணி…’ என்று திடீரென்று விட்டேத்தியானவர்களின் நிலையை விவரிக்கிறது. ஏன் அவர்கள் இப்படி ஆகிப் போனார்கள் என்பதை கொஞ்சம் தொட்டுக் காட்டி, வாசகனுக்கே பாக்கியை விட்டுவிடுகிறார்.

அமைதியான ஆரம்பம்; நேர்க்கோட்டில் கதை பயணித்தாலும், எல்லாவற்றையும் விளம்பாத விவரிப்பு. சூட்சுமமாக முடிக்க வேண்டும் என்பதற்காக வலிந்து திணிக்காத முடிவுகள்.

பூகம்பமும் தீவிரவாதமும் நம்முடைய இயலாமையை உணரவைத்தாலும், உதவுவதும் தெனாவட்டும் நம்மை மீட்டெடுப்பது கதைகளின் அடிநாதம்.

தொகுப்பின் பெயர் ‘ஆஃப்டர் தி க்வேக்’