எனக்கு நம்பி கிருஷ்ணன். எஸ். ராமகிருஷ்ணனால் பாடல் பெற்றவர். பி.ஏ. கிருஷ்ணன் மூலமாக அறிமுகம் ஆனவர். பாண்டியாட்டம், அவதரிக்கும் சொல், நரி முள்ளெலி டூயட் போன்ற நூல்களை எழுதியவர். சொல்வனம் என்றில்லாமல் பதாகை, தமிழினி, கனலி, வனம் என்று எல்லாவிடங்களிலும் விஷயதானம் வழங்குபவர்.
கோட் என்றால் ?
—> கோட்டம் – நம்பி தனக்கென நாடு வைத்திருக்கிறார். நாட்டம் பிடித்தவர்களை வாசிக்கிறார். விலாவாரியாக அனுபவிக்கிறார். நமக்கும் தருகிறார்.
—> கோட்டை – நம்பி அறிமுகப் படுத்திய டாவன்போர்ட் பற்றி இப்படிச் சொல்வார்கள். எட்கர் ஆலன் போ-வின் இறுதி ஊர்வலத்தில் கவிஞர் வால்ட் விட்மான் வருவார் குகையோவியங்களில் பிகாஸோ நடமாடுவார். எமர்சனும் தொரோவும் உரையாடுவார்கள்.
நம்பியின் அபுனைவுகளில் அந்தப் பாய்ச்சல் இருக்கும். ஒவ்வொரு பத்திக்கும் சில பல கூகுள் தேடல் தேவை. வார்த்தைகளுக்கு அகரமுதலியில் அர்த்தம் போதாது. பிரிட்டானிக்கா வேண்டும். முழு அனுபவமும் கிடைக்க மூல நூலையும் படித்து, அசல் இடங்களையும் சுற்றிப் பார்த்து, நம்பியுடனும் நான்கைந்து முறை பேசிவிட வேண்டும்.
அவருக்கு பிறந்த நாள். ’கோட்’ நம்பிக்கு வாழ்த்துகள்.
அவரின் புத்தம் புதிய கதையை சொல்வனத்தில் வாசித்து விட்டீர்களா?
1. சினிமாவில் எவ்வாறு செவ்வியல் இசை இடம் பிடிக்கிறது? அருமையான பதில் வந்தது. கூடவே… அது பதில் கேள்வி போட்டு தொக்கி நின்றது:
உங்களுக்குப் பிடித்த படத்தின் பின்னணி இசை, எவ்வாறு செவ்வியல் தாக்கத்துக்கு உள்பட்டது?
2. புகழ் பெற்ற ஹாலிவுட் படங்களையும் அதில் வரும் பாரம்பரிய இசையையும் சொல்லுக: மீண்டும் தகவல்களும் துல்லியமும் கொண்ட விடை. அதன் கேள்வி:
மீளொலி (Leitmotifs) எவ்வாறு திரைப்படங்களில் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரியுமா?
3. இல்லை. சொல்லேன்… சொன்னது. என்னிடம் சற்றே கடுப்பு எட்டிப் பார்க்கிறது. அதன் மறுவினா:
எளிமையியின் உச்சம் (மினிமலிசம்) எவ்வாறு கதாமாந்தர்களோடும் காட்சியோடும் ஒன்ற வைக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறீரா?
பிரமிக்க வைக்கும் பிரவாகம்! அசரடிக்கும் அறியாவினாக்கள். எனக்கு ‘கற்றது விரலளவு’ என்று உணரும் தருணம். சாட்ஜிபிடி-யை பார்த்து நகையாட வைத்தது… அது வரை ஆங்கிலம். இனி… கேட்டேன் பார் கேள்வியை – தமிழில்.
4. எனக்கு ராஜாவின் இசையில் தனித்துவம் தெரியும். அவரின் ராஜ்ஜியத்தில் சக்திவாய்ந்த அணுகுமுறை சாத்தியம். அதற்கு உதாரணங்கள் தர வேண்டுகிறேன்
ரொம்ப நேரம் யோசித்தது:
“மூன்றாம் பிறை” படத்தில் “வாழ்வே மாயம்” பாடல் இதற்கு ஒரு உதாரணம்.
இன்றைக்கு கே. என். செந்தில், தமிழினி கோகுல் பிரசாத், முகமூடி ராஜேஷ், வெ. சுரேஷ், போகன், தமிழ்நதி என்று எண்ணற்ற ஃபேஸ்புக் பதிவுகளின் தொடர்ச்சியும் உண்டு.
பிழைத்துக் கிடந்து, கடவுளின் நல்லாசியும் கொண்டு, அத்யந்தமான அனுபங்களும் கிடைத்து, தொடர்ச்சியாக எனக்குக் கிடைத்த விஷயங்களைப் பகிர வேண்டும்.
அதுதான் ”சகுனங்களும் சம்பவங்களும்”.
வெளியிட்ட சொல்வனம் இதழுக்கு நன்றி. படித்துப் பார்த்து உங்கள் எண்ணங்களைப் பகிருங்களேன்!
தலைப்புக் கட்டுரையாக அனுபவப் பகிர்வு – லோகமாதேவி: உண்மை என்பதாலும் அயல்நாடு விஷயத்தினாலும் உணர்ச்சிகரமாக, நெருக்கமாக எழுச்சியுற வைக்கிறது. விஷ்ணுபுரம் விருது நாயகரின் 77ஆம் அத்தியாயம் – மிளகு: இரா. முருகன் என் ஆசிரியர். அவர் ஊக்குவிக்கா விட்டால் எழுதவே வந்திருக்க மாட்டேன்.
இந்த இதழை ஓவியச் சிறப்பிதழ் எனலாம். எஸ் எச் ராஸா வந்த அரா கவிதைகள். மாதுரி தீட்சித் வந்த ‘வருணன் கவிதைகள்’ ஆர் ஸ்ரீனிவாசன் எழுதிய ஓவியர் ஃப்ரான்சிஸ் பேகன் (Francis Bacon) அனுபவம் + ஆராய்ச்சிக் கட்டுரை வெங்கட் ரமணன் வழக்கம் போல் உச்சங்களைத் தொடும் ரெனே மக்ரிட் (René Magritte) – அஞ்சனம் + ஆஞ்சநேயம்
இந்தக் கட்டுரை சொல்வனத்தில் வெளிவருமா! சரியான தளத்தில் தான் இருக்கிறோமா? என சற்றே தொடர்புயர்வுநவிற்சி கொள்ள வைத்த பாகிஸ்தானிய சமூகவியலாளரும், முற்போக்கு எழுத்தாளருமான ரஸா நயீம் எழுதிய சிந்து சமவெளியின் சோஷலிச சூஃபியின் தியாகம் – வாசிக்க வேண்டிய பட்டியலில் காத்திருக்கிறது!
ஆனால், வாசித்து ரசித்த கதை = ஸ்ரீருத் எழுதிய அமானுஷ்யம்: திவ்வியதிருஷ்டியும் மந்திரசித்தியும் உபசுருதி ஏற்றிய கனவு. நான் எழுதுவதை செயற்கை நுண்ணறிவு இன்னும் நன்றாக எழுதுமோ என யோசிக்க வைக்கும் ரவி நடராஜன் புகைப்பட க(வ)லை கட்டுரை – வாசிக்க லகு.
AI Generated
அப்படியெல்லாம் நான் யோசிக்காமல் எழுதிய சகுனங்களும் சம்பவங்களும் – இரண்டாம் பகுதி.
முதலில் பி.ஜி. பகிரப்பா குருபசப்பா ஹலகட்டி (PG Phakirappa Gurubasappa Halakatti) தென்பட்டார். அவரிடம் இருந்து வசன சாஹித்தியம் கிடைத்தது. அடுத்தது பிரபு தேவா நடனம். அவரிடம் இருந்து இடுப்பொடிக்கும் ஆட்டம். எவர் சிறப்பாக ஆடுகிறார் என்னும் போட்டி. கடைசியாக, அந்தாதி போன்று அகமாட்சி – ரேவதி என்னும் நடிகையை வைத்து ஒரு ஆட்டம்.
தான் எழுதுவது மற்றவர்களுக்குப் பிடிக்கிறதா? புரிகிறதா? புதியதாக இருக்கிறதா? என்பது ஒட்டக்கூத்தர் காலத்தில் இருந்து தோன்றும் மனக்கிலேசம்.
மஹராஜ் – அசப்பில் மோடியைச் சொல்கிறார்களோ என்னும் சம்சயம்.
எல்லோருக்கும் குழந்தையைத் தருகிறேன் என்கிறார். தான் மனிதனே அல்ல என நம்புகிறார். தெய்வாம்சம் ஆகவே நடந்து கொள்கிறார். அவரின் சீடர்கள் மகராஜை தெய்வமாகவேப் பார்க்கிறார்கள்.
நல்ல வேளை. கவனமாக எந்த நேரடி ஒப்பிடலோ, மறைமுக வசனமோ, குறிப்பால் உணர்த்தும் காட்சியோ பா.ஜ.க.வையோ பிரதம மந்திரி நரேந்திர மோடியையோச் சொல்லவில்லை.
இரு நூறாண்டுகள் முன்பு நடந்த அசல் சம்பவங்கள். நிஜ நாயகரின் பெயர் கர்சன் தாஸ் முல்ஜி – தயானந்த சரஸ்வதி போல்… ராஜா ராம் கோகன் ராய் போல்…
சமூக சீர்திருத்தவாதிகளைக் குறித்து பள்ளி புத்தகங்களில் படித்தவுடன், இவர்களை ஏன் படமாக எடுக்காமல், தூர்தர்ஷனில் நாடகமாக மட்டுமே போடுகிறார்கள் என்னும் சந்தேகம் கலந்த சோகம் எழுந்ததுண்டு. அப்பொழுது ஆமிர் கான் நடிக்க வந்த காலம்.
இப்பொழுது, ஆமிர் கான் மகனின் முதல் படம். முந்தையத் தலைமுறை நாயகர்கள் எல்லாம் மசாலாப் படங்களில் அறிமுகம் ஆனவர்கள்.
ஃபூல் அவுர் காண்டே – அஜய் தேவ்கன் மைனே பியார் கியா – சல்மான் கான் சான்வரியா – ரன்பீர் கபூர் கஹோ நா பியார் ஹை – ஹ்ரிதிக் ரோஷன் பான்ட் பாஜா பாராத் – ரன்வீர் சிங் பாபி – ரிஷி கபூர் ஹீரோ – ஜாக்கி ஷ்ராஃப் பர்சாத் – பாபி தியோல் கயாமத் ஸே கயாமத் தக் – ஆமிர் கான் தீவானா – ஷாரூக் கான்
எல்லோரும் ஆடலும், பாடலும், காதலும், அடிதடியும் கொண்டு வெள்ளித்திரைக்குக் கொணரப்பட்டவர்கள். ஆனால், ஜுனைத் கான் வேறு மாதிரி களத்தில் இறங்கி இருக்கிறார்.
ஆஸ்காருக்கு பாடுபட்ட ‘டைட்டானிக்’ நாயகர் லியொனார்டோ டிகப்ரியோ வரலாற்று நாயகர்களாக பல படங்களில் நடித்தவர். அவர்களின் சரித்திரங்களையும் சாகசங்களையும் தகிடுதத்தங்களையும் நடித்து அகாதெமி விருது பெற்றவர்.
ஆமிர் பையனுக்கும் அதே ஆசை. ஹாலிவு படங்களில் கொஞ்சம் நியாயம் இருக்கும். வில்லனுடைய பார்வையைச் சொல்வார்கள். சமய, சந்தர்ப்பங்களை விளக்குவார்கள். சூழ்நிலைக் கைதியாவதை உணர்த்துவார்கள்.
மஹாராஜ் – இங்கெல்லாம் சறுக்குகிறது. ஹவேலி ஏன் உருவானது? எவ்வாறு அதன் உறுப்பினர்களைக் கட்டுக்குள் வைத்திருந்தது? பெரிய சமாஜ், சங்கர மடம் போன்றவற்றிற்கு ஏன் அவ்வளவு செல்வாக்கு கிடைத்தது? எப்படி வியாபாரத்தை உள்குழுவிற்குள் வைத்து, செல்வத்தைப் பெருக்கினார்கள்? – இது போன்ற சம்பவங்களைக் கொணர்ந்திருக்க வேண்டும். மகராஜின் இன்னொரு முகத்தைக் காண்பித்திருக்க வேண்டும்.
ஒரு வில்லன்; ஒரு கெட்ட விஷயம்; ஒரு நல்லவன் – எவ்வாறு தன் நாவன்மையாலும் எழுத்துத் திறமையாலும் அதிகாரத்தை வீழ்த்துகிறான் என்பதற்கு ஊறுகாயாக இரண்டு காதலிகளை வைத்து கச்சிதமாகக் கதையை முடித்து இருக்கிறார்கள். சுவாரசியமான, பார்க்க வேண்டிய படம்.
ஜெய்தீப் அலாவத் – வாழ்ந்திருக்கிறார். அடுத்த படத்தில் நவாசுதின் சித்திக்கி மாதிரி ரஜினி கையால் அடி வாங்குமளவு அசத்தியிருக்கிறார்.
ஆமிரும் புத்திரரும் அடுத்து எந்த மதகுருவை கையில் எடுப்பார் என நினைக்கிறீர்கள்?
பூடான், பாகிஸ்தான், இலங்கை, ஆஃப்கானிஸ்தான், நேபாளம், பங்களாதேசம், மாலத்தீவுகள் என்பதெல்லாம் நம்மவங்க செஞ்ச மோசம். இதெல்லாம் வெறும் சார்க் என்னும் கனவாக, ராஜீவ் காந்தியின் இந்திய ஐக்கிய நாடுகள் என்னும் திட்டமாக சுருங்காமல், ஒழுங்காக, ஒன்றாக திரண்டு எழுந்து உருவாகியிருக்க வேண்டியவை.
அமெரிக்கா என்பது ஐம்பது நாடுகள். யூரோ என்பது சில பல சிற்றரசுகள். சீனா போல்… UAE போல்…
ஒரு அகண்ட பாரதமாகத் தோன்றியிருக்க வேண்டிய நாடு.
எவரிடம் கோபம் கொள்வது? காந்தியா – அவர் பதவியில் இருந்தவர். இன்றைய ராகுல் காந்தி போல் நிறைய பேசியவர்; தூண்டியவர்.
எவரை நினைத்து வருத்தம் கொள்வது? சுபாஷ் சந்திர போஸா – அவர் நாஜிக்களிடமும் ஃபாசிசத்துடனும் தன்னுடைய லட்சியத்திற்காக துணை போனவர். குறிக்கோள் உன்னதமாக இருந்தாலும் பாதை முக்கியம் அல்லவா?
எவரிடம் பரிதாபம் அடைகிறேன்? சர்தார் வல்லபாய் படேல் – அவர் நிச்சயம் அந்த மகாராஜாக்களிடம் பேசியிருப்பார். கெஞ்சியிருப்பார். என்ன வேண்டுமென்றாலும் தந்திருப்பார். இருந்தாலும், கூட்டை உடைத்து விட்டார்.
எவரிடம் அச்சப்படவேண்டும்? நேரு – பதவியாசை. பெண்ணாசை. பணத்தாசை. பரம்பரை ஆசை. பொம்மையாக இருந்தாலும் பிரதம மந்திரியாகும் வெறி. அதைத் தன் சந்ததியிடம் ஊட்டிய விஷம்.
தெளிவுரை : எம்பெருமானே, குற்றமுடைய வேடுவரே கூடி, வழிப்பறி செய்த பொருளின் பங்காகிய பொருளை உடையவராய் வாழ்கின்ற இம்முருகன் பூண்டி மாநகர் அவர்கள் கிழிந்த உடையை உடுத்திக் கொண்டு அதற்குள் உடைவாளையும் கட்டிக் கொண்டு வருவோரை அவ்வுடைவாளால் வெட்டி, நாள்தோறும் அவர்களது உடைகளைப் பறித்துக் கொள்ளும் இடம்; உமது எருது கால் ஒடியாமல் நன்றாக இருந்தால் அதன் மேல் ஏறி அப்பாற் போகாமல் இதன்கண் இங்கு எதற்காக இருக்கின்றீர்?
பிரபுதாஸ் பட்வாரி அன்றைய ஆளூநர். 1977-80 வரை தமிழக கவர்னராக இருந்ததாக விக்கிப்பிடியா சொல்கிறது.
அவரின் சிறப்பு என்னவென்றால், எந்த விழாவிற்கு அழைத்தாலும் ஆஜராகி விடுவார். எங்கே அழைத்தாலும் வந்துவிடுவார். எப்பொழுதும், எந்தத் தருணத்திற்கும் சொற்பொழிவைத் தயாராக வைத்திருப்பார். எந்த அரங்கத்திலும் பொருத்தமாகப் பேசுவார்.
கலாமிற்கு முன்னுதாரணம் எனலாம். எளிமையானவர். எனக்கு ரொம்பப் பிடித்த சிரிப்பைக் கொண்டவர். அவரைப் போல் ஆக வேண்டும் என்பது என் பால்ய காலம் லட்சியம்.
திராவிட கலாச்சாரம் அதை பாதுகாத்தது. எனினும், எவர், எதற்குக் கூப்பிட்டாலும் சென்று விடுவதைப் பழக்கமாக்கி இருக்கிறேன்.
அவ்வாறு ரோட் ஐலண்ட் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பகிர்ந்த பேச்சு
அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்ப் பள்ளியை நடத்தும் ரமா சுப்ரமணியன், கார்த்திக் பால்சுப்ரமணியன், விஜயகுமார் சபாபதி, சாருலதா ரவிஷங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்
ஆக்டன் தமிழ்ப் பள்ளி மணி அவர்களுக்கும் நெட்ஸ் ராஜ் அவர்களுக்கு பணிவு கலந்த வணக்கங்கள்
அமெரிக்காவில் பத்தில் ஒருவர் மட்டுமே பன்மொழி வித்தகர். பாக்கி தொண்ணூறு சதவிகிதம் ஒரு மொழி மட்டுமே அறிந்தவர்கள்.
இரு மொழியைக் கற்றுக் கொள்பவர்களுக்கு இயல்பாகவே மூளையில் சிக்கலான புதிர்களை விடுவிக்கும் அடுக்குகளும் இணைப்புகளும் உருவாகின்றன. ஒரே சமயத்தில் எதிரும் புதிருமான வாதங்களை அவர்களால் மனதிலும் சிந்தையிலும் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. லத்தீன் மொழி வழிவந்த ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்த்துகீசிய, இத்தாலிய பாஷை போன்றவற்றை மட்டும் கற்றவர்கள் மூளை ஒரு மாதிரியாகவும். தமிழ் போன்ற திராவிட மொழிகளைக் கற்று அறிந்தவர்கள் மூளை மேலும் தீவிர இயக்கத்துடனும் ஆற்றலுடனும் செயல்படுவதாக ஆராய்ச்சியின் முடிவுகள் தெள்ளத் தெளிவாக தெரிவிக்கின்றன.
தேவையில்லாதவற்றை நினைவில் இருந்து நீக்குதல்,
கூடுதல் கவனம்,
சிக்கலைத் எவ்வாறு தீர்ப்பது மற்றும்
முடிவெடுத்தலில் தீர்க்கம் – எல்லாவற்றுக்கும் இரட்டைமொழி அவசியம்.
உதாரணமாக – S-O-R-R-Y
இதைப் பார்த்தால் ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர்க்கு ஒரே அர்த்தம்தான் விளங்கும். “தெரியாமப் பண்ணிட்டேன்… மன்னிச்சுடுங்க!”
தமிழ் அறிந்தவர்க்கு பல அர்த்தங்கள் ஓடும்.
சாரி – புடைவை எடுக்கலாம் என்று மனைவி சுட்டுகிறாரோ?
சாரி – ரங்காச்சாரி, வெங்கடாச்சாரி என்று எவரையாவது அழைக்கிறாரோ?
சா… ரிகமபதநி என்று தொடங்குவதற்கு முஸ்தீபு போட்டு ராகம் – தானம் – பல்லவி போட்டு தாளத்தை இழுக்கிறாரோ?
சாரி சாரியாக தமிழ் கற்க தன் மகவுகளை பெற்றோர் அனுப்ப வேண்டும் என்கிறாரோ?
சரி என்று சொல்லி வைப்போம். அதற்கும் ஆங்கிலத்தில் ஏறக்குறைய அதே எழுத்துகள்தானே!
கூழாங்கல்லை எடுத்து நதியில் வீசுங்கள்.
ஒரு மொழி அறிந்தவர் அதை தொப்பென்று ஒரே இடத்தில் வீசி முடிப்பவர்.
பல மொழி அறிந்தவர் என்றால் அந்தக் கல் பல்வேறு அலைகளை ஏற்படுத்தி தீர்க்கமானத் தொடர் தாக்கத்தை உருவாக்கும்.
பெற்றோர்களுக்கு
பல விதமான குழந்தைகளுடன் உங்களின் மகளும் மகனும் பழகுவதற்கு இந்தத் தமிழ்ப் பள்ளி உதவுகிறது.
திங்கள் முதல் வெள்ளி வரை அமெரிக்க நண்பர்கள்.
வாரயிறுதியில் நம் வரலாறும் பாரம்பரியமும் கைகோர்த்து ஒத்த மனங்கள் இணைவதற்கு இது ஒரு வாய்ப்பு.
அலுவல் நண்பர்களிடம் ஒரு விதமானப் பேச்சுகள் எடுபடும். அண்டை அயலார், பக்கத்து வீட்டுக்காரர்களோடு இன்னொரு விதமானப் பேச்சுகள் எடுபடும். நண்பர்கள் என்பது இங்கு இருப்பவர்கள். அவர்களிடம் மனம் விட்டு எதையும் கொண்டு வரலாம். அதற்கு இந்த முறைமை உதவுகிறது.
ஆய்வுகளும் தரவுகளும் இருக்கட்டும். ஒரு குட்டிக் கதை
வெந்நீர் சூடு போதுமா?
பண்ணையாருக்கு தினசரி வெந்நீர் தேவை. அந்தக் காலத்தில் தானியங்கியாக இயங்கும் தண்ணீர் சூடேற்றி – கீஸர் கிடையாது. காலையில் எழுந்து வெந்நீர் போடவென்று ஒருவரை வேலைக்கு வைத்து இருந்தார்.
சரியான பதத்தில் வெந்நீர் இருக்கிறதா என்று ஒவ்வொரு நாளும் அவனும் கேட்பான். பண்ணையார் எப்பொழுதுமே ஏதாவது குறை சொல்லி வந்தார்.
இன்னிக்கு சூடு போதலே என்பார்
இன்னிக்கு சூடு ஜாஸ்தி என்பார்.
ஒரு நல்ல நாளில் கொதிக்க கொதிக்க வென்னீரை வைத்துக் கொடுத்து, அவர் மேல் கொட்டி விட்டு ஓடியே போய் விட்டான் அந்த வெந்நீர் போடுபவன்.
அந்த வெந்நீர் போடுபவன் மாதிரிதான் ஒரு ஆசிரியரின் வேலை. பண்ணையாராக நம் பசங்களைப் பாருங்கள்.
அவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். ஒன்னும் புரியலே; கஷ்டமா இருக்கு என்பார்கள்.
இதெல்லாம் எதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று புலம்புவார்கள்.
ஏற்கனவே தெரிந்த விஷயம் என்று போன வருடம் படித்ததை நினைவூட்டும் போது அங்கலாய்ப்பார்கள்.
ஆசிரியர்களும் (பெற்றோர்களும்தான்) தட்ப வெட்பம் பார்த்து அதற்கேற்ப இதமாக ஒத்தடமாக வென்னீர் வைக்க வேண்டும்.
வானவில்லில் வெறும் ஏழு வண்ணங்கள் மட்டுமல்ல. அதையும் தாண்டி பல்வேறு வண்ணங்கள் ஊடுருவி இருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
வீட்டை வெள்ளையடிக்க ஹோம் டிப்போ போனால் ஐயாயிரம் வண்ணங்களைக் காட்டுவார்களே…
அது மாதிரி வானவில். அது மாதிரிதான் வாழ்க்கையின் வண்ணங்களும்.
அது போல் வானவில் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அறிவதற்கான பாதை இந்தக் கல்வி.
தமிழ் மழை போல் எங்கும் பொழிகிறது. அதில் சூரியனாக ஆசிரியர்கள் ஒளி வெள்ளம் பாய்ச்சி பாதையைக் காட்டுகிறார்கள். அப்பொழுது வானவில்லையும் அதன் சாத்தியங்களையும் உணர உங்கள் குழந்தைகளைத் தொடர்ச்சியாக தமிழ் பயில வைக்கிறீர்கள்.
தமிழ் ஆசிரியர் என்பவர் நம் வரலாற்றை உணர்த்துபவர்
தமிழ் மொழி நமக்கு அறத்தையும் வாழ்க்கை முறையையும் உலகையும் கற்றுத் தருவதற்கான பாதை
ஐயாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக புழக்கத்தில் இருக்கும் பழக்கத்தைத் தொடர்ச்சியாக பயில்வோம்! வெல்வோம்!!
ஏன் காவ்யா மாறன் தனியே, தன்னந்தனியே அமர்ந்து சன்ரைசர்ஸ் ஆட்டங்களை ரசிக்கிறார்?
ஏதாவதொன்றை தேர்ந்தெடுக்கவும்:
1. அப்பா கலாநிதி படம் எடுத்துக் கொண்டிருப்பதால் 2. ஹைதராபாத் பிரியாணியில் மற்றவர்கள் எல்லாம் பங்கு கேட்பதால் 3. ஸ்டெல்லா மேரீஸ் பொண்ணுங்களே இப்படித்தான்… இதுவே இராணி மேரி ஆகவோ எத்திராஜாகவோ பெண்கள் கிறித்துவக் கல்லூரியாகவோ இல்லாமல் போனதால் 4. கண்ணா பன்றிங்க தான் கூட்டமா வரும்! சிங்கம் சிங்கிள் ஆ தான் வரும் என ஜெயிலர் சிவாஜி பன்ச் பேசியதால் 5. ஆந்திரப் பிரதேசம் வேண்டுமென்றால் தெலுங்கானா எனப் பிரிந்து போயிருக்கலாம். ஹைதராபாத் என்றைக்கும் கொல்ட்டிகளின் ஒரே தலைநகரமாக இருப்பதால் 6. கூட வர பிசினாறிகளுக்கு எல்லாம் விமானத்தில் பயணச்சீட்டு எடுத்து இந்தியா எங்கும் சுற்றிக் காண்பிக்க விரும்பாததால் 7. அணியில் வேண்டுமானால் பதினொன்று பேர் ஆடலாம். எல்லோர்க்கும் தலைவி ஒருத்தியாக புதிய அம்மாவாக உருவாவதால் 8. தேர்தல் நேரம் – உறவினர் முக ஸ்டாலின் அவர்களும் அமைச்சர் உதயநிதி அவர்களும் பிரச்சாரத்திலும் பதற்றத்திலும் இருப்பதால் 9. அதுதான் இராசி என்பதால்… அப்பொழுதுதான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஜெயிக்கும் என்பதால்
ரீடர்ஸ் டைஜஸ்ட் என்றால் இரண்டு விஷயம் நினைவிற்கு வருகிறது.
ஆர்.டி. மாதாந்தரியில், காசே கொடுக்காமல் நீங்கள் சந்தாதாரர் ஆகலாம் என்னும் துண்டுச் சீட்டு எப்பொழுதும் வரும். நயா பைசா முன் பணம் கொடுக்காமல், சென்ற வருடத்தின் எல்லா இதழ்களையும் வி.பி.பி. அஞ்சல் மூலம். பெற்றுக் கொள்ள வசதி உண்டு. நான் எண்பதுகளின் துவக்கத்திலேயே, திருட்டு வி.சி.டி. கிடைக்காதா என கற்பனை நுட்பத்தை, வீட்டில் இருந்தே தேடியவன்.
குடும்பத்தில் உள்ள பெரியோருக்கும் பெற்றோருக்கும் தெரியாமல், அந்தத் தபால் தலை தேவையில்லாத மடலை போஸ்ட் செய்து, தபால்காரரும் பொதியோடு வந்தார். அம்மா கையில் விழுந்தோ கத்தியில் மிரட்டியோ அவரை அதை அனுப்பித்தவருக்கேத் திரும்ப அனுப்ப வைத்தார்,
அன்று கற்றுக் கொண்ட பாடம்: எங்காவது முகவரி கொடுத்தால் – உன் சொந்த முகவரியைத் தராதே. எவராவது பெயரைக் கேட்டால், புனைப்பெயரைச் சொல்லு.
பணம் இல்லாமல், இந்த உலகில் எதுவும் கிடைக்காது என்பது இன்னொரு தரிசனம்.
அடுத்த தரிசனம் – நடிகை ஸ்ரீதேவிக்கு முந்தைய காலழகிகள்.
ஆனி ஃப்ரெஞ்ச் என்றொரு விளம்பரம் வரும். எல்லோரும் நல்ல கதையைக் கத்தரி போட்டு சேகரத்தில் வைப்பார்கள். எழுத்தாளர் அனுராதா ரமணன் என்றால் தினசரி நாளிதழில் வரும் செய்திகளை சேமிப்பேன் என்பார். எனக்கு சாடின் துணியில் வலக்காலை நீட்டி இடக்காலை தலைக்கு முட்டுக் கொடுத்து, பட்டென்று மயிர் நீக்கும் குழைமப் பெண்மணிகளின் சாந்தமான மோவாய் தாங்கிய மோனப் புன்னகை – சில்வானம்.
அதுதான் என் ரீடர்ஸ் டைஜஸ்ட். மழைக்கு ஒதுங்கியது போல் இன்னும் அந்த விளம்பரங்களின் பின் பக்கங்களை வாசிக்க வைத்திருப்பேன்.
தமிழ் ஊடகங்களில் லங்காஸ்ரீ மட்டுமே கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. அவர்களின் அஞ்சலிக் குறிப்பில் இருந்து:
“கணிதம் மற்றும் தரவு சார்ந்த அணுகுமுறையால் நிதிச் சந்தைகளில் முதலீடு செய்வதில் புரட்சியை ஏற்படுத்தியவர் ஜிம் சைமன்ஸ் (Jim Simons). 31 பில்லியன் டொலர்கள் நிகர மதிப்புள்ள ஜிம் சைமன்ஸ் உலகின் பணக்காரர்களில் ஒருவர் ஆவார். வர்த்தகம் குறித்த முடிவுகளுக்கு கணினி சிக்னல்களை பயன்படுத்தி முன்னோடியாக திகழ்ந்ததால் ”Quant King” எனும் பெயரால் ஜிம் சைமன்ஸ் அழைக்கப்பட்டார்.”
நினைத்துப்பார்க்க முடியாத அளவு பணத்தை கணித ஆராய்ச்சிக்காக களத்தில் குவித்தவர். கணிதவியல் ஆராய்ச்சியாளர்கள், கணக்கில் ஆர்வம் கொண்டோர் என அனைவரையும் சொகுசாக ஒன்று சேர்த்து மாநாடுகளை நடத்தியவர். ஸ்டோனி ப்ரூக் பல்கலையில் SCGP (Simons Center for Geometry and Physics), நியு யார்க் நகரில் சைமன்ஸ் மையம், Mathematical Sciences Research Institute (MSRI) என்று அழைக்கப்பட்ட Simons Laufer Mathematical Sciences Institute (SLMath); தொழில்நுட்பத் துறையிலும் அறிவியல் ஆய்வு என உலகின் அனைத்து ஆராய்ச்சிகளையும் இலவசமாகக் கொடுக்கும் arXiv தளத்திற்கு பல பில்லியன்கள்; மாக்மா ஒப்பந்தம்; AMS-Simons மானியங்கள்; சைமன்ஸ் இணைவாக்க நிதிநல்கை; குவாண்டா சஞ்சிகை (Quanta); கணக்கை சுவாரசியமாகச் சொல்லிக் கொடுக்கவும் புதிய விஷயங்களை விளக்கவும் Numberphile யூடியுப் கன்னல்; Math for America; தேசிய கணித அருங்காட்சியகம்; சைமன்ஸ் வானாய்வகம்
உதவித் தொகைகளை பட்டியல் போட்டால் பில் கேட்ஸ் ஃபவுண்டேஷன் கூட ‘எச்சில் கையால் காகத்தை விரட்டுவது’ போல் தோன்றிவிடும்.
ஆய்வு மாணவர்களிடம் புழங்கும் நகைச்சுவையைக் கேட்டிருப்பீர்கள்: வேறெந்தத் துறையைக் காட்டிலும் வடிவகணிதம் சார்ந்த ஆராய்ச்சி முடித்தவருக்குத்தான் சராசரியாக அதிகபட்சமாக ஒரு மில்லியன் டாலர் சம்பளம் கிடைக்கும். சைமன்ஸ் மூன்று பில்லியன் சம்பாதிக்கிறார். மற்ற எல்லோரும் வருடத்திற்கு அறுபதாயிரம் டாலர் வாங்குவோம்.
“Be guided by beauty. I really mean that. Pretty much everything I’ve done has had an aesthetic component, at least to me. Now you might think ‘well, building a company that’s trading bonds, what’s so aesthetic about that?’ But, what’s aesthetic about it is doing it right. Getting the right kind of people, and approaching the problem, and doing it right […] it’s a beautiful thing to do something right.”
”லவ்வர்” திரைப்படத்தைக் குறித்து பக்கம் பக்கமாக நண்பர்கள் எழுதி இருக்கிறார்கள்.
பட்டியல் கொஞ்சம் பெரிய பட்டியல்: சுரேஷ் கண்ணன் மட்டும் ஐந்தாறு தடவை; அபிலாஷ் இரண்டு, மூன்று முறை; அரவிந்த் வடசேரி; ச.ந. கண்ணன்; ஹரன் பிரசன்னா கொஞ்சம் காண்டாகி இருக்கிறார்; சுகுணா திவாகர்; தாமிரா ஆதி; அய்யனார் விஸ்வநாத்; விஷ்வக்சேனன்; பிரபு தர்மராஜ்; தமிழினி கோகுல் ப்ரசாத்; பக்கம் பக்கமாக எழுதித் தள்ளும் யமுனா இராஜேந்திரன் (நாலந்து வரிகள்தான்); சௌம்யா ராகவன்; தனுஜா ஜெயராமன்; ப்ரீதம் பீதாம்பரம்; தமிழ்ப்பிரபா; சிவகுமார் வெங்கடாசலம்
இவர்களின் விரிவான பார்வையைத் தாண்டி என்ன புதியதாய் எழுதி விட இயலும்?
முன்னெல்லாம் விகடன் மதிப்பெண் போட்டால் சரியாக இருக்கும் என்பார்கள். இப்பொழுது வெ. சுரேஷோ ஹரன் பிரசன்னாவோ சுரேஷ் கண்னனோ சொன்னால் சரியாக இருக்கும் எனலாம்.
லவ்வர் நல்ல படம். தமிழில் இந்த மாதிரி தரமான சம்பவங்கள் எப்பொழுதாவது மட்டுமே நிகழும். வசனம், கதாபார்த்திரம், இடம், சூழல், என எல்லாம் களை கட்டும் படம்.
எல்லா பிம்பங்களையும் இரு வேறு பார்வையால் உடைக்கும் ஆக்கம்: 1. பெண்கள் பின்னாடி போகும் ஆண் என்றால் அந்தக் காரணம் மட்டுமே. 2. கல்லானாலும் காதலன்; புல்லானாலும் புருஷன் என்பது ஆணுக்கும் பொருந்தும். 3. கல்லூரி காலத்தில் ‘மின்னலே’ என ‘அலைபாயுதே’ மணம் புரிந்து ஐந்தாண்டுகள் ஆனால் என்ன நடக்கும்? 4. தம் அடித்தால் கெத்தாக இருக்கும்; ஆனால், ஜம்மென்று மலையேறுவது எல்லாம் நாக்கு தள்ளும். 5. 96 மாதிரி கல்லூரி மீள் சந்திப்பிற்கு வருவோருக்கு எல்லாம் ஒரே குறிக்கோள்: ‘நீ நல்ல, பெரிய ஆளாயிட்டியா? உன்ன விட எனக்கு சம்பளம் ஜாஸ்தியா?’ 6. அர்ஜுன் ரெட்டி, அனிமல், வரிசையில் படம் எடுத்தால் பெண்களும் ரசிப்பார்கள்
7. படமே ஒரு பெரிய குறியீடு:
அ) மணிகண்டன் – திராவிடக் கட்சிகள்
ஆ) கௌரி ப்ரியா – தமிழக மக்கள் / வாக்காளர்கள்
இ) சாஃப்ட்வேர் நிறுவனத்தில் அவளுடைய மேலாளராக (அல்லது டீம் லீடர்) – அண்ணாமலை
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde