Category Archives: Tamil Blog

தொய்யில் எழுதுதல்: புனைந்த ஓவியம்

கல்யாண்ஜியைத் தெரியும்.
வண்ணதாசன் சிறுகதைகளை விரும்பி வாசிப்பேன்.

அவர் ஒரு ஓவியரும் கூட – என்பதை வேலாயுத முத்துக்குமார் அவர்கள் மூலமாகத்தான் அறிகிறேன்.

செத்த காலேஜ் எனப்படும் ”இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்” (Museum of Natural History) போனால் நிறைய மிருகங்களையும் பறவைகளையும் விதம் விதமாக பாடம் செய்து வைத்திருப்பதைப் பார்க்கலாம். ஊர்வன, நடப்பன, பறப்பன, நீந்துவன, என்று கண்டம் கண்டமாகக் காணக்கிடைக்கும் விலங்குகளை தத்ரூபமாக அதன் ஒய்யாரத்துடனும் அலங்காரங்களுடனும் தீட்சண்யமான பார்வைகளுடனும் அருகருகே நிறுத்தி வைத்திருப்பார்கள். சிறுகதையையோ நாவலையோ வாசிப்பது அந்த வகை.

அதை எப்படி அனுபவிப்பது என்று #vannadasan -க்குள் சற்றே உள்ளிழுக்கிறார் வேலாயுத முத்துக்குமார்.

அதன் பிறகு ஆசிரியரை சந்திப்பது… வண்ணதாசனின் எழுதுபடங்களை உணர்வாக்கி நமக்குள் ”நெடுமண் இஞ்சி நீள் நகர் வரைப்பின் ஓவு உறழ் நெடுஞ் சுவர் நாள் பல எழுதி செவ்விரல் சிவந்த அவ் வரி அணங்கொழிலை”யும் பகிர்கிறார்.

எழுத்தை படிப்பது என்பது செத்த கல்லூரி அரும்பொருளகம்.
எழுத்தாளர்களை நேரில் பார்ப்பது என்பது விலங்குகளை சுதந்திரமாக உலவ விட்டு நாம் கூண்டுக்குள் இருக்கும் மிருகக்காட்சிசாலை விலங்காலயம்.
எழுத்தாளரை சந்தித்து உரையாடுவது என்பது அடர்காட்டின் உள்ளே பயணம் செய்து யாருமில்லா தனிமையில் அந்த உயிரினமும் நாமும் தூரத்தே நின்று ஒருவரையொருவர் நோட்டம் விடும் அபாயம் கொண்ட துணிகரச் செயல்.

நமக்காகச் சென்றிருக்கிறார். காசியபனின் அசடு, பூமணியின் பிறகு, கலாப்ரியாவின் தீர்த்த யாத்திரை, ”ஸ்வப்ந புஷ்பங்கள்” (யார் எழுதியது?), இராகுல தாசனின் அக்க்ரைப் பூக்கள், கதைப்பிதனின் தவிப்பு நூல்களுக்கான அட்டை ஓவியங்களை நம்முடன் பகிர்கிறார்.

#solvanam இதழில் முகப்புக் கட்டுரையாக கல்யாணியின் எழுத்துக்களையும் சந்திப்புகளையும் தூரிகை தீட்டல்களையும் அறிமுகம் செய்கிறார்.

#சொல்வனம் தளத்திற்கும் வண்ணதாசன் அவர்களுக்கும் நன்றி!

“உருத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்”

(குறுந். 276; 3-4)

உற்சவருக்கு உற்சவர்

பதினைந்தாண்டுகளுக்கு முன்பு எடுத்த படம்.

மைலாப்பூர் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் உற்சவத்தின் கிளை வைபவம்.

அடுத்த தலைமுறையை உருவாக்குவது எப்படி?

ஒரு பாரம்பரியத்தின் தொடர்ச்சியைத் தக்கவைப்பது எப்படி?

வாழையடி வாழையாக உங்களின் கலாச்சாரத்தையும் கொண்டாட்டத்தையும் கற்றுக் கொடுத்து, உணர்வுபூர்வமாகவும் செயல்ரீதியாகவும் பங்கெடுக்க வைத்து அர்ப்பணிப்புடன் ஈடுபட வைப்பது எப்படி?

இப்படித்தான்…

பெருமாளுக்கு பெரிய தேரா? இவர்கள் சின்னஞ்சிறிய தேரை இழுப்பார்கள்.

நந்தகோபாலனாக உற்சவர் மாறுகிறாரா? குட்டி கிருஷ்ணனும் பின்னாடியே சின்ன்னஞ்சிறிய பாலகர்களின் கைவண்ணத்தில் உலா வருவார்.

வீதி ஊர்வலங்களின் போது யானையின் தும்பிக்கை மட்டும் தனித்து ஆடும். யானை வாகனத்தின் பின் அர்ச்சகர் சாமரம் வீசினால், அதே போல் வேலைப்பாடுகள் நிறைந்த அம்பாரி கொண்ட சிற்றுரு கஜ வாகனமும் அதே ஒய்யாரங்களுடன் மாடவீதியுலா வரும்.

அலங்காரம் ஆகட்டும்; பக்தி ஆகட்டும்; திவ்விய பிரபந்த கோஷம் ஆகட்டும் – எந்தக் குறையும் இருக்காது.

எந்தவொரு இயக்கத்தையும் சித்தாந்தத்தையும் இரத்தமும் சதையுமாக நரம்பெல்லாம் பாய்ச்சுவது இப்படி வழித்தோன்றல்களை உருவாக்குவதில் உள்ளது.

அவர்களுக்குள் தென்கலையா… வடகலையா? என்னும் கோஷ்டிச் சண்டையும் இப்படித்தான் உருவேற்றம் காண்கிறதா என்றால்…

உற்சவமூர்த்தியும் பால்யமூர்த்தியும் ஒன்று என்பது அத்வைதம்,

பெரிய வாகனத்தில் வரும் பெருமாள் வேறு; குழந்தைகளுக்கான பொம்மைப் பெருமாள் வேறு என்பது துவைதம்,

வேறெனினும், பரமாத்மாவுக்குள் ஜீவாத்மா அடக்கம் என்பது விசிஷ்டாத்வைதம்.

Elemental – எலிமெண்டல்

டிஸ்னியுடன் சேர்ந்த பிறகு பிக்ஸாரின் படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதல பாதாளத்திற்குச் செல்ல ஆரம்பித்தன, அதன் உச்சகட்ட தீவிரமாக சமீபத்திய படத்தைச் சொல்லலாம்.

கலக்கல் படங்களை எடுத்தவர்கள்: அப், இன்கிரெடிபிள்ஸ், கோக்கோ, டாய் ஸ்டோரி, இன்சைட் அவுட், மான்ஸ்டர்ஸ் இன்க், கார்ஸ், ஃபைண்டிங் நீமோ, இன்சைட் அவுட்.

கடந்த படமான “டர்னிங் ரெட்” (சிவப்பாக மாற்றம்) – பெரும் ஏமாற்றம். இந்தப் படம் அதன் அடுத்த கட்டம்.

எல்லோரையும் திருப்தி செய்யும் விதமாக கதை எழுத முடியாது! அனைவரையும் உள்ளடக்கி பூர்வகுடி முதல் பல்லுயிர் பேணல் வரை வோக் கலாச்சாரமாக சர்வ ரோக நிவாரணியாக சினிமா எடுக்கக் கூடாது. லத்தீன் அமெரிக்கர்கள், இஸ்லாமிய மதப் பற்றாளர்கள், ஐரிஷ் வந்தேறிகள், ஆஃப்கன் அன்னியமாக்கப்பட்டவர்கள், தெற்காசிய அயல்வாசிகள் – எல்லோரையும் குறிப்பால் உணர்த்துகிறார் இயக்குனர் – நெருப்புக்காரர்கள்.

வெள்ளையர்கள் போல் தண்ணீர்காரர்கள். அவர்கள் இயல்பாக அவர்களின் நாடாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். கலை, பண்பாடு என்று செழுமையாக்கிக் கொண்டிருப்பவர்கள். நதி போலே ஓடிக் கொண்டிருப்பவர்கள். வளைந்து கொடுப்பவர்கள்.

அயல்தேசிகளும் உள்ளூர்வாசிகளும் – தீயும் நீரும் – இணைந்தால்?

இதுதான் முடிச்சு.

வழக்கம் போல் சுவாரசியமான வசனங்கள். பிரமிப்பான ஜவலிப்புகள். ரசனையான பின்னணி அணிகலன்கள். அர்த்தபுஷ்டியான கதாமாந்தர்கள். நுணுக்கி செதுக்கப்பட்ட சின்னச் சின்ன வர்ணணைகள். எல்லாமே பிக்சார் தரம்.

எல்லாவற்றிலும் வென்று உச்சத்தை எட்ட விரும்பும் பொறியும் + ஏதொவொன்றில் திருப்திப்பட்டு கிடைத்த வாழ்க்கையில் திருப்தியுறும் ஓடையும் – ஒரு குடித்தனத்தில் மணமுடிக்க இயலுமா!?

இதெல்லாம் வைத்து கலக்கியிருக்க வேண்டாமா அனிமேஷன் படம்? இந்த பின்பிலத்தைக் கொண்டு பிக்சார் பின்னி சிம்மாசனமிட்டிருக்கலாமே!

ஆனால் – அன்னியோன்யம்? மனதில் நிற்கும் சித்தரிப்பு?? உள்ளுணர்வை உரசி சிந்தையை ஆக்கிரமித்து உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உணர்வு பூர்வமான கொந்தளிப்பு!? எல்லாம் கோட்டை விடுகிறார்கள்.

ஒரு காலத்தில் பாரதிராஜா என்றால் நம்பிக்கையாகப் போவேன். என்னுயிர் தோழன். புது நெல்லு புது நாத்து, நாடோடித் தென்றல் என்று தொடர் சறுக்கல்களில் ‘சரக்கு தீர்ந்து போச்சு மாஸ்டர்!’ என்று விட்டு விட்டேன். அது போல் பிக்சரும் தங்களின் காயல்கல்பத்தை காற்றில் தொலைத்து இன்னும் தங்களின் ஆன்மாவை ரத்தமும் சதையுமாக மென்று கடித்து துப்பியிருக்கிறார்கள்.

சற்றே இலகுவாக, ஜாலியாக, உண்மையாக லேசாக்கி ஊதியிருக்கலாம்.

Solvanam #297

புத்தம்புதிய சொல்வனம் இதழ் #297 வெளியாகி இருக்கிறது.

நான் இருக்கும் இடத்தில் மூன்று மாதம் வெயில் அடிக்கும். கோடைக் காலங்களில் கொண்டாட்டம், சுற்றங்களோடு ஊர் சுற்றல் என்றிருப்பதால் இதழை ஆற, அமர படிக்கவில்லை.

இதழ்-297 – சொல்வனம் | இதழ் 297 |25 ஜூன் 2023 (solvanam.com)

எனினும், தொடர்களை விடக்கூடாது.

இரா முருகன் எழுதும் மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு வெளியாகி இருக்கிறது.
(48 அம்மாடீ! 24 மாதங்கள்!! இரண்டு வருடங்களுக்கும் மேல்!!!)

நாகரத்தினம் கிருஷ்ணா மொழியாக்கத்தில் அதிரியன் நினைவுகள் – 16ஆம் பாகம் கிடைக்கிறது.
அதே போல் பானுமதி. ந. தமிழாக்கத்தில் ராஜேஷ்குமாருக்கு முன்பே எட்கர் ஆலன் போ எழுதிய துப்பறியும் கதையான மார்க் தெரு கொலைகள்- இறுதிப் பகுதியுடன் முடிகிறது.

இதெல்லாம் இலக்கியம்.

தற்கால உலகத்தை அமெரிக்க மேற்குலகை அற்புதமாக அறிமுகம் செய்து சமீபத்திய வரலாற்றை செவ்வியல் ஆக்கும் அமர்நாத் அவர்களின் உபநதிகள் – ஒன்பது உள்ளது.
அவர் ஜாஜா-வின் தெய்வநல்லூர் கதைகள் – ஐந்தாம் அத்தியாயத்திற்கு சரியான போட்டி.

எழுத்தாளர் அமர்நாத் கதைகளும் சரி…
சிரித்தே சொக்க வைக்கும் ஜா. ராஜகோபாலன் புனைவும் சரி…
எந்தப் பாணியிலும் இல்லாமல், ஏற்கனவே தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகமான எழுத்தாளர்களின் நடையையும் நினைவுறுத்தாமல், அது பாட்டிற்கு செவ்வனே சிறப்புற அமைக்கப் பெற்று “பேஷ்!” போட வைக்கிறது.

இந்த மாதிரி தொடர்கதைகளை வாசிக்கிறீர்களா?
இன்றைய ஆறு நொடி டிக்-டாக் சமூக அவசரத்தில் பொறுமையாக ருசித்து ரசிக்கிறீர்களா?
சமீபத்திய “தொடரும்” போடும் இணையக்கதைகளில் எதை விரும்பீனீர்கள்?

Solvanam 296th Issue: சொல்வனம் மின்னிதழ்

296ஆம் இதழை – சொல்வனம்.காம் புதிய பதிப்பை – கவிதை குவிமைய இதழ் எனலாம்.

முகப்புக் கட்டுரையாக நம்பி கிருஷ்ணன். நான் அறிந்ததெல்லாம் ஷெல்லி, ஷேக்ஸ்பியர். இவர் வழக்கம் போல் தெரிந்து கொள்ளத்தக்க, வாசிக்க வேண்டிய மற்றுமொரு முக்கியமான எழுத்தாளரை ரசித்து, விதந்தோதுகிறார்: ”*எலிசபெத் பிஷப்*: இரு மொழிபெயர்ப்புகளும் சில குறிப்புகளும்”

அடுத்ததாக, மீனாக்ஷி பாலகணேஷ். ஆங்கிலத்தில் அரவிந்தரை வாசிக்க இலகுவாக இல்லை என்று சொன்னவுடன், அவரின் உன்னத காவியமான ஊர்வசீயை அழகுத் தமிழில் கொணர்ந்திருக்கிறார். இந்திய இலக்கியம் பலவிதமான தொன்மங்கள் மற்றும் புனைவுகளில் நிறைந்துள்ளது. அதில் அப்ஸரசுகளுக்கு முக்கிய சிம்மாசனம் உண்டு. இங்கே ரிக் வேதத்தில் வந்த புராணக் கதையை கவிதையாக்கின ஸ்ரீ அரவிந்தரை தமிழாக்கம் செய்துள்ளார்.

காம்பின்றித்‌ தானே மலர்ந்த மலரென ஊர்வசியை வர்ணிக்கிறார்‌. அவள்‌ இந்தியக்‌ கவிகளை வரலாறு நெடுகிலும்‌ கடுக்க முடியாத வலிமையுடன்‌ ஈர்க்கும்‌ தன்‌ கவர்ச்சிக்கு உட்படுத்தியிருக்கிறாள்‌. ஸ்ரீ அரவிந்தர்‌ இவ்விஷயத்தை மிகமேம்பட்ட முறையில்‌ தீட்டியுள்ளார்‌. இக்காவியத்தின்‌ மாண்பு அவலச்சுவை அடங்கியிருக்கும்‌ நிலையிலோ காமத்தின்‌ வெறியுணர்ச்சி துடிதுடிக்கும்‌ நேரத்திலோ, ஓவ்வொரு நிலையிலும்‌ வெளிப்படுகின்‌றது.

உட்பொருளானது இரு காதலரும்‌ தாம்‌ தகுதியுடன்‌ பெற்ற இன்பத்தைக்‌ கடந்து இருக்கின்றது. உண்மையாகவே, புரூரவஸ்‌ மரணத்திற்குட்பட்ட இம்மண்ணுலக மானுட நிலையிலிருந்து மரணமிலாத்‌ தேவர்‌ வாழும்‌ விண்மண்டலத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளான்‌. காதலர்‌ இப்புவியை அடியோடு துறந்து விட்டனர்‌. ஆயினும்‌, கீழே தொலைவிடத்தில்‌ மோனம்‌ நிறைந்ததும்‌ வல்லமை வாய்ந்ததுமான அண்டவெளியின்‌ ஊடே பசுமை நிறைந்ததும்‌, விடாமுயற்சியும்‌ சுறுசுறுப்பும்‌ உடையதுமான இப்பூமி இடைவிடாமல்‌ சுழன்று கொண்டேதான்‌ வருகின்றது.

சுழல்வது என்றவுடன் 300ஆம் இதழ் நினைவிற்கு வருகிறது. நீங்கள் வாசித்த புதிய எழுத்தாளர்களை, தற்கால புனைவுகளை, சமீபத்திய புத்தகங்களைக் குறித்து எழுதி விட்டீர்களா?

உடனடியாக அவற்றை solvanam.editor@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

மந்திரவாதியும் மணி ரத்தினமும் – பொன்னியின் செல்வன் இரண்டு

மணி ரத்னம் ஏன் பொன்னியின் செல்வன் எடுக்கிறார்?

ஏற்கனவே பத்து காரணங்களைப் பார்த்து அலுத்து இருப்பீர்கள்.

இருந்தாலும் #PS2 வந்த பிறகு 11வது காரணம்:

டைரக்டர் ஷங்கர் தியாகராஜன் மகன் நடிகர் பிரசாந்த்தை வைத்து ஜீன்ஸ் இயக்குகிறார்.
அது மதுராந்தாகன்.
தகுதி இல்லாதவர்.
பணத்தினால் பதவியை அடைபவர்.
இதுவே மாந்திரீக யதார்த்தம்.

டைரக்டர் மணி ரத்தினம் புகழ்பெற்ற விஜய் சேதுபதியையும் பணம் படைத்த அருண் விஜய்யையும் வைத்து செக்கச் சிவந்த வானம் இயக்குகிறார்.
இது பொன்னியின் செல்வன் – அருண் மொழி – ராஜராஜன்.
இது பணம் படைத்த தயாரிப்பாளர் மகன் ‘ஜெயம்’ ரவி.
இது குறிப்பால் பொருளுணுர்த்துவது.

இத்தனை காலமாய் நான் ஏன் இதை புரிந்து கொண்டு உணரவில்லை… என் போதாமைதான்!

இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹ்மான் தன் மச்சான் ரகுமானுக்காக “சங்கமம்” கொடுக்கிறார்.
உறவினரால் வாய்ப்பளிக்கப் படுகிறார் ஒருவர்.
அது மதுராந்தாகன்.
தகுதி இல்லாதவர்.
இதுவே ஒன்றைக் கொண்டு இன்னொன்றைச் சொல்வது.
அதற்கு பெயர் மாந்திரிகம்; எதார்த்தம்.

இது போன்ற சமரசங்களை மேஜிக்கல் ரியலிசமாகக் கொடுப்பதுதான் #பொசெ2 திரைப்படம்.

கொலைவெறியில் உண்மையான ஆதிக்க அரசர் அரக்கராக – ஆதித்த கரிகாலன் உதாரண இயக்குநர்.
அவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா போன்றவர்.
அவரிடம் கொடுத்தால் ‘ஓரம் போ’, அல்லது ‘மாடர்ன் லவ்: சென்னை’ போன்ற அசல் பதார்த்தம் வரும்.

உண்மையான சூத்திரதாரி என்பவர் திறைமறைவில் எக்சியூடிவ் ப்ரொடியூசர் ஆக இயங்குபவர்.
அவர் அசல் வாழ்வில் தோல்வியுற்றவர்.
அவர் தனியாக படையெடுத்து போரிட்டால் வெற்றி பெற மாட்டார்.
அந்த ஆள் தன் சொந்தக் காலில் சுய முயற்சியாக படம் எடுத்து படுதோல்வி கண்டிருப்பார்,
அது ‘சிவா’ – “ஓகே காதல் கண்மணி” படத்தின் அண்ணனாக வருவாரே… அவர்.
பொ.செ. கதையில் வல்லவரையன் வந்தியத் தேவன்.

நந்தினி என்பார் ‘ஐஷ்வர்யா ராய்’ என்பாரே தான்.
அவர் அசல் நடிகையாக மதிக்கப் பெறாதவர்.
ஒரு ராதிகா ஆப்தே-விற்கோ. கொன்கொனா சென்-னிற்கோ… அவ்வளவு ஏன் தற்போதைய என்னுடைய நாயகி ‘தேவி’ தபூ-விற்கோ கிடைக்கும் அந்தஸ்து கிடைக்கப் பெறாதவர்.
அதே போல் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அரசியாகக் கொண்டாடப் படாதவர்.
அவரை குறித்துணர்த்தத் தான் நந்தினிக்கு அய்ஷ்வர்யா ராயே நடிக்கிறார்.

அவரின் வயதை நேரடியாக மந்தாகினியாக மேக்கப் இல்லாமல், பூச்சுகள் இல்லாமல் உலா வருகிறார்.
டிம்பிள் கபாடியாவிற்கும் கனவுக்கன்னி ஹேமமாலினிக்கும் வயதாகும்.
இருந்தாலும் இளமையாக நினைப்போம். நடிக்கிறோம்.
நாடக மேடை.
அரச சபை.
அரசி என்பவள் நடிகை
அரசன் என்பவன் தந்தையை ரவுடியாகக் கொண்டவன்.
இயக்குநர் என்பவர் ராஜகுரு.
அனிருத்த பிரும்மராயர்.
காதில் ஒதுவார்.
ஒதுவது புரிந்தத்தா?

PS1 | Snap Judgment (snapjudge.blog)

வனபோசனம்

சென்ற மாதம் லண்டன் சென்ற வர நேரம் வாய்த்தது.
போன சமயத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக #சொல்வனம் பதிப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் பிரபுவையும் கிரியையும் சந்திக்க வாய்ப்பும் அமைந்தது.
அலுவல் நெருக்கடியினாலும் கடைசி நிமிட திட்டமிடலினாலும் சிவாவினால் தலை காட்ட இயலவில்லை.
அவருக்காக இன்னொரு தடவை இங்கிலாந்து போக வேண்டும்.

வழக்கம் போல் சுவாரசியப் பேச்சு.
நிறைய இலக்கிய அரட்டை.
கொஞ்சம் போல் சொந்தக் கதை.

ஒரு தசாப்தம் முன்று சென்றிருந்தபோது ரதசாரதியாக கையில் குழலுக்கு பதில் ஸ்டியரிங் வளையத்தைப் பிடித்து விமானதளத்தில் இருந்து அழைத்துச் சென்ற கிரியின் வீட்டிற்கு சென்று சுவையான தமிழக சிற்றுண்டிகளை வெட்ட முடிந்தது.
இந்த தடவை பிரபுவின் வீட்டிற்கு செல்ல முடிந்தது. இரு வால் பெண்கள். படு சுட்டி. இங்கிலீஷ் டீ. வாயில் கரையும் இனிப்புகள்.

Jeyamohan’s Stories of the True : Translated from the Tamil கொண்டு வந்திருந்தார் கிரி.

Solvanam முன்னூறாவது இதழ் குறித்து ஆக்கபூர்வமான ஆலோசனையை முன்வைத்தார்.

நாள் முழுதும் உழைத்து, பேசிக் களைத்த சோர்வு தெரியாமல் உற்சாகமாக விவாதித்து, ஆரோக்கியமான விஷயங்களை முன்னெடுத்து, நான்கு மணி நேரத்திற்கும் மேல் என் தர்க்கங்களுக்கு செவி மடுத்த பிரபுவிற்கும் கிரிக்கும் நன்றி!

பூன் கேம்பிற்கு உள்ளாவது ஆங்கிலக் கதைகளை வாசித்து விட வேண்டும்.

சொல்வனம் 294ம் இதழ்

சொல்வனத்தின் புத்தம் புதிய இதழில் 23 உருப்படிகள் வந்திருக்கின்றன.
ஆறு கதைகள்; மூன்று நாவல் தொடர்கள்; மூன்று கவிதைகள் – விட்டு விடலாம்.

கட்டுரைகளில்:

  1. அந்நியனின் அடிச்சுவட்டில் – நம்பி
  2. நாடும் சுவை, தேடும் தொல்லியல் – அருணாசலம் ரமணன்
  3. நோயுற்ற சுயத்தின் அரற்றல் – மௌனியின் படைப்புகளை முன்வைத்து – சுரேஷ் பிரதீப்
  4. சர்க்கரை பூஞ்சை – லோகமாதேவி
  5. நவீனப் போர்விமானங்கள் – ஒரு அரிசோனன்
  6. இன்று நேற்று நாளை – பானுமதி ந.
  7. இந்து மதத்தில் தந்த்ரா நெறிகள் – ஷாராஜ்
  8. காசி – லதா குப்பா (தொடரில் இறுதிப் பாகம்)
  9. ஊர்வசி – அரவிந்தரின் பார்வையில் – மீனாக்ஷி பாலகணேஷ்

இரண்டு கட்டுரைகளை அவசியம் வாசிக்க கோருகிறேன்.

ஆல்பர்ட் காம்யூவைக் குறித்த நம்பி கிருஷ்ணனின் அலசல் – அமர்க்களம் + அட்டகாசம் + அன்னியோன்யம்.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-294/


ஸ்ரீ அரவிந்தரின் கரடு முரடான கவிதையை உள்வாங்கிக் கொண்டு அற்புதமாக மொழியாக்கம் செய்துள்ள மீனாக்‌ஷி – திறம்பட செயல்படுகிறார். – தேவையான அளவு புராணம்; கச்சிதமான செதுக்கிய கவித்துவம்; மூலத்துக்கு இம்மியளவும் பிசகாத தமிழாக்கம் – ஆன்மிகமும் தத்துவமும் தொன்மமும் சரியாகக் கலந்த உச்சம்!

அரிசோனனின் சண்டை விமானங்கள் தொடர் இந்த இதழோடு நிறைவடைகிறது. நிறைய தகவல்.
இரு போதைகள் – மனிதன் எவ்வாறு மிதக்கத் துவங்கினான் என்பதை அருணாச்சலம் ரமணனும் லோகமாதேவியும் கோடிட்டு விவரிக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் சிகரம் – வழக்கம் போல் சுரேஷ் ப்ரதீப்பின் மௌனி குறித்த பதிவு.
இதுவரை எழுதிய, வெளியாகிய எல்லா விமர்சனங்களையும் தொகுத்து வைத்துக் கொள்கிறார். அதன் பின் தன் பார்வையை முன் வைக்கிறார்.
தமிழுக்கு சிறப்பே இந்த மாதிரியான காத்திரமான தீவிரமான உரையாடல் எழுத்து தான். செமையாக இருந்தது!

நன்றி!

ஆத்தி… இது வாத்துக் கூட்டம்!

கோழி மிதித்து குஞ்சு சாகுமா?

சாகும்.

முந்தாநாள் பார்த்தபோது ஆறு வாத்துக்குட்டிகள் இருந்தன.
நேற்று ஐவரானது.
இன்று நால்வர் மட்டுமே காணக் கிடைத்தனர்.

சாட்ஜிபிடி இடம் ஏன் இப்படி என்று கேட்டால்,

  1. இங்கே நிறைய குள்ளநரிகளும் பெருச்சாளிகளும் பருந்துகளும் உண்டு. அவை வேட்டையாடுகின்றன
  2. குழந்தையாக இருப்பதால் நோய்க்கு எளிதில் உள்ளாகும். அந்த உடல்நல பாதிப்பால் இறக்கின்றன
  3. பாஸ்டன் பக்கம் திடீரென்று பூஜ்யம் டிகிரிக்குச் சென்று குளிரும். நாலு நாளாக நல்ல மழை. அந்த தட்பவெட்ப மாற்றங்களினால் மரணமடைகின்றன
  4. தந்தை வாத்திற்கு தன் குழந்தைதானா என்று சந்தேகம் வந்தால் குட்டிகளைக் கொன்றுவிடுகின்றன

அது சரி, சாட்ஜிபிடியிடம் ஆதித்த கரிகாலன் எப்படி இறந்தார் என கேட்டால் அது மணி ரத்தினத்தை உதிர்க்கிறது.

பொன்னியின் செல்வன் – இரண்டாம் பாகம்

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் தேவலாம்.
அதாவது ரஜினியின் ‘பாபா’ படத்தைப் பார்த்த பிறகு ‘சந்திரமுகி’ தேவலாம் என்று தோன்றுமே… அந்த மாதிரி தேவலாம்!

கல்கியின் ‘நந்தினி’ என்ன ஆனாள்? பொன்னியின் செல்வன்/முடிவுரை – விக்கிமூலம் (wikisource.org)

ஆபத்துதவிகள் பாண்டிய ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் முயற்சிகளில் மேலும் ஈடுபட்டு வருகிறார்கள். நந்தினி உயிரோடு இருந்த வரையில் ஆதித்த கரிகாலனுடைய அகால மரண இரகசியம் பற்றி விசாரிக்கப்படவில்லை. அதில் நந்தினியின் பெயரும் வரும் என்ற காரணத்தினால்தான். நந்தினியின் மரணத்துக்குப் பிறகு, இராஜராஜ சோழன், ரவிதாஸன் முதலிய ஆபத்துதவிகளைக் கைப்பற்றித் தண்டனை விதித்து அவர்களுடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் கட்டளை பிறப்பிக்கிறான்.

நந்தினி அமரபுஜங்கன் இறந்த பிறகு தானும் உயிர் துறக்கிறாள். அதற்கு முன்னால் அவளை இராஜ ராஜ சோழர் சந்திக்கிறார். அவரிடம் தன் பிறப்பைக் குறித்த உண்மையையும், கரிகாலனின் மரணத்தைப் பற்றிய உண்மையையும் கூறிவிட்டு இறக்கிறாள்.

ஆனால், ஜெயமோகன் என்ன செய்து விடுகிறார்?

அந்த மாதிரி ஒரு தைரியசாலி சட்டென்று முடிவை எடுத்து விடுவதாகச் சொல்கிறார். நந்தினியைப் போன்று பல்வேறு சிக்கல்களை சாதுரியமாக எதிர்கொண்ட கதாபாத்திரம் அவ்வாறான இறுதியைத் தேடிக்கொள்ளும் என்பது மஹாபாரதத்தை வெண்முரசாக்கிய போதும் மாற்றப்பட்டது போல் இங்கும் பெண்களுக்கான அவருடைய பொதுமைப்படுத்திய சிறுமையாக்கம்.

சில அசல் வசனங்களும் அதற்கு ஆசானின் அசல் எண்ணங்களும்:

அசல்: குதிரை உங்களுடையதாக இருக்கலாம்; காடு என்னுடையது.
ஆசான்: கதை கல்கி உடையதாக இருக்கலாம்; கோணி என்னுடையது.

அசல்: மக்களை நம்பாதவன் மக்களை ஆள முடியாது.
ஆசான்: வாசகரை நம்பாதவன் வாசகரை வரவழைக்க முடியாது.

அசல்: அரசர் அறம் தவறினால் மக்கள் எப்படி இருப்பார்கள்?
ஆசான்: நான் அறம் உபயோகிக்காவிடில் மக்கள் எப்படி என்னை நினைப்பார்கள்?

பல இடங்களில் #PS2 இன்ன பிற படங்களையும் பாடல்களையும் நினைவுக்கு மீட்டன. #பொசெ2 -க்கு என்று தனித்துவமான மனதில் நிற்கும் காட்சி என்றால் ஒன்றே ஒன்றுதான்: கடம்பூர் மாளிகைக்குள் அபிமன்யு போல் தன்னந்தனியே குதிரை மேல் எகத்தாளமோடு சுற்றி நிற்கும் சிற்றரசர்களிடமும் பாட்டா-விடமும் ஆதித்த கரிகாலன் பொங்கி கர்ஜிக்கும் இடம்.

மற்ற எல்லா காட்சியமைப்புகளும் கதாபாத்திரங்களும் வுட்வர்ட்ஸ் கிரைப்வாட்டர் தேய்வழக்காக, ஃப்ரிட்ஜ் கஞ்சியாக, ஏற்கனவே எங்கேயோ பார்த்த குரலாக, முன்பெங்கோ கண்ட காட்சியாக இருக்கிறார்கள்.

என் பங்கிற்கு:
1. நெஞ்சில் ஓர் ஆலயம்
2. பாசமலர்
3. 96
4. திரிசூலம்

உங்களுக்கு என்னவெல்லாம் படம் நினைவிற்கு வந்து தொலைத்தது?

PS1 | Snap Judgment (snapjudge.blog)