எனது அமெரிக்காவின் காந்தி: டாக்டர் ரான் பால் என்ற பதிவிற்கு வந்த கேள்விகளுக்கு எனக்கு தெரிந்தவரை இங்கு பதிலலித்துள்ளேன்.
வருமான வரி கட்டாமல் அரசை ஏய்ப்பவரும் ‘கான்ஸ்டிடியூஷன்’ சொல்கிறபடிதான் நடக்கிறார்களா?
வருமான வரியே தேவையற்றது எனும் போது, வருமான வரி கட்டாதவர்கள் தவரிழைப்பவர் ஆக மாட்டார்கள். நீங்கள் FOX Business news பார்ப்பவர்களாக இருந்தால் பீட்டர் ஹிப் பற்றித் தெரிந்திருப்பீர்கள். அவரது தந்தை இர்வின் ஹிப் பற்றியும் படித்துப் பாருங்கள். சில உண்மைகள் புரியும்.
வசதியாக வாழ்பவர்கள் வரி கட்டாமல் இருப்பது நாட்டிற்கு நன்மை விளைவிக்குமா?
மிக நல்ல கேள்வி. இதற்கு சுருக்கமாக பதில் சொல்வது இயலாது. இருந்தாலும் முடிந்தவரை முயற்சிக்கிறேன். 1) குடியரசு கட்சியின் கொள்கையே சிரமப்பட்டு வேலை செய்பவன், அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் முழு பலனையும் அனுபவிக்க வேண்டும் என்பது. அரசாங்கம் எல்லாம் செய்து கொடுக்கும் என்று எண்ணுபவர்கள் பெரும்பாலும் ஜனநாயக கட்சியை ஆதரிப்பவர்கள். ஆனால் தற்போது இரண்டு கட்சிக்களின் கொள்கையிலும் பெரிய வித்தியாசம் இல்லை. இருவரில் யார் அதிக சமதர்மவாதி (social) என்ற போட்டி நடந்து கொண்டிருக்கிறது. பணக்காரனிடம் வாங்கி எழைகளுக்குக் கொடுக்கும் சமதர்மம், நடைமுறையில் அவ்வளவு சாத்தியமில்லை என்பது அமெரிக்காவில் ஏழைகளின் எண்ணிக்கை பெருகுவதிலும், மத்திய வர்க்கத்தின் எண்ணிக்கை குறைவதிலும், ஏழை-பணக்கார வித்தியாசம் அதிகமாவதிலும் தெரிகிறது. 2) எனக்குத்தெரிந்த வரை ரான் பால் வருமான வரியை மட்டும்தான் வேண்டாம் என்கிறார். மற்ற வரிகளை அல்ல. காரணம்: Federal reserve அந்தப் பணத்தை என்ன செய்கிறது என்பது தெளிவாக இல்லை. அவ்வளவு பணத்தையும் வீணாக செலவு செய்ததால் இப்போது ஒவ்வொரு அமெரிக்கனும் பெரும் கடனாளியாகிக் கொண்டிருக்கிறான். இதற்கு பதிலாக, சிரமப்பட்டு வேலை செய்கிற ஒவ்வொருவரும் அதன் பலனை, அரசாங்கத்திற்கு கொடுத்துவிட்டு அவர்களை எதிர்பார்க்காமல், தானே அனுபவித்தல் சிறப்பு. நேரம் கிடைத்தால் இந்த வீடியோவைப் பாருங்கள்.
இராக்கின் மீது போர் தொடுத்தது தப்பு; ஆனால், நீங்கள் ‘ஆப்கானிஸ்தானை தாக்கியது மட்டும் சரி’ என்று சொல்வது ஏன்?
டாக்டர். ரான் பால் ஆப்கானிஸ்தானை தாக்கியது சரியென்று சொல்லவில்லை. 9/11 -க்குப் பிறகு நடந்த காங்கிரஸ் ஓட்டெடுப்பில் புஷ்ஷின் செயல்களுக்கு ஆதரவாக ஓட்டழித்தது உண்மைதான். அவர் எதிர்பார்த்தது பின் லேடனை குறிவைத்துத் தாக்குவதைத்தான். ஆனால் நடந்ததோ ஈராக்கை ஆக்கிரமிப்பதும், முசரப் போன்ற சர்வாதிகாரியிடம் பணத்தைக் கொட்டுவதும், ஈரான் மீது போரைத் தொடங்குவதும். MTV-யில் கொடுத்தப் பேட்டியில் இதைப்பற்றி (3-வது பதில்) கூறியிருக்கிறார்.
தற்போதைய ஜனாதிபது புஷ் முதற்கொன்டு அனைத்து அமெரிக்க அதிபர்களும், ஆப்பிரிக்காவிற்கு (கிள்ளுக்கீரை அளவாவது) உதவுவதை தார்மீக நெறியாகக் கொண்டிருக்கிறார்கள். நீங்களோ… அள்ளி வழங்குவது இருக்கட்டும்; ‘ஐ.நா., உலக வங்கி போன்ற எல்லாமே குப்பை’ என்று தாங்கள் சொல்கிறீர்கள். எனவே, ஆப்பிரிக்கா போன்ற இல்லாதோருக்கு கை கொடுப்பதும் அமெரிக்காவின் ‘கான்ஸ்டிடியூஷனிற்கு’ எதிரான ஒன்றுதானா?
டாக்டர். ரான் பால் முந்தைய பதிலில் உள்ள வீடியோவில் முதல் கேள்விக்கான பதிலில் கூறியதில் இருந்து நான் அறிந்து கொண்டது, அவர் அமெரிக்க அள்ளி வழங்குவதை எதிப்பதில்லை. அவர் கருதுவது அந்தப்பணம் பெரும்பாலான சமயத்தில் சரியான மக்களுக்குச் சென்றடவதில்லை, அதை யாரும் சரியாக கவனிப்பதில்லை என்றுதான். மேலும் இப்போதைய அமெரிக்க பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டால், நீண்ட நாட்களுக்கு சீனா போன்ற நாடுகளிடம் கடன் வாங்கியும், வெறும் காகிதப்பணத்தை அச்சடித்தும் வீண் செலவு செய்ய முடியாது. அது சரியென்றே படுகிறது.
அமெரிக்காவில் எனக்குப் பிறந்த குழந்தை, இந்த நாட்டின் பிரஜையாக மாறுகிறது. முறையற்ற வழியில் குடிபுகலை தடுப்பது வேறு; இந்த மாதிரி நியாயமாக எச்1-பி வைகயறாவில் வந்து பெற்றுக் கொள்ளும் புதிய தலைமுறையையும் அமெரிக்க குடிமகளாக ஆகாமல் இருக்க வைக்க வேண்டும் என்பது சுயநலத்தின் உச்சமல்லவா? அமெரிக்காவே குடிபுகுந்தவர்களால் உருவான நாடு என்பதை நினைவில் நிறுத்திப் பார்த்தால், தாங்கள் கூறும் ‘கான்ஸ்டிடியூசனுக்கும்’ எதிரானது அல்லவா?
டாக்டர். ரான் பால் அவர்களது குடியேறுதல் பற்றிய அவரது கொள்கை விளக்கத்தில், சட்ட விரோதமாக வந்தவர்களின் குழந்தை தானகவே குடியுரிமை பெருவதைத்தான் எதிர்ப்பதாகத்தான் எனக்குப் புரிகிறது. அது எனக்கு நியாயமாகவும் படுகிறது. உண்மையாக சொல்லப்போனால், சில விசயங்களில் நம்மை போன்று சட்டதிற்குட்பட்டு வருபவர்களை விட சட்ட விரோதமாக வருபவர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக படுகிறது. உதாரணமாக நியூயார்க் நகரத்தில் சட்ட விரோதமாக இருப்பவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் அளிப்பது பற்றி விவாதம். என்னைப் பொருத்தவரை சட்ட விரோதமாக வருபவர்களுக்கு எந்த உரிமையும், வேலையும், சலுகைகளும் கொடுக்கக்கூடாது. இவைகள் கிடைப்பதால்தான் ஒவ்வொருதினமும் பல மெக்சிகோவினர் எல்லையைக் கடக்க முற்பட்டு உயிரிழக்கின்றனர். ரான் பால் கூறுவது போல், அமெரிக்க பொருளாதாரம் நன்றாக இருக்கும்போது இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. இப்போது பொருளாதாரம் விழ்ந்து கொண்டிருக்கும்போது எல்லாவற்றையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. 14-வது மசோதா திருத்தத்தின் படி சட்ட விரோதமாக வருபவர்களின் குழந்தைகள் தானாகவே குடியுரிமை பெருவது அனுமதிக்கப்பட்டுள்ளது. ரான் பால் அந்த திருத்தத்தை எதிர்க்கிறார். அவருடன் நான் உடன்படுகிறேன்.