உலகின் வலிமை மிகுந்த தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் அமெரிக்க அதிபர். அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கோ, அமைச்சரவைக்கோ கட் டுப்பட்டவரல்ல. எந்தப் பிரச்னையிலும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும்.
அவரைப் பதவியிலிருந்து நீக்குவதும் சாதாரண விஷயமல்ல. தேசத்துரோகம், கொள்ளை போன்ற மோசமான குற்றங்களுக்காக மட்டுமே அவர்மீது நாடாளுமன்றம் குற்றவிசாரணை செய்து பதவியி லிருந்து நீக்க முடியும். வேறு தண்டனை எதுவும் வழங்கிவிட முடியாது. உலகிலேயே ராணுவம், பொருளாதாரம், தொழில்நுட்பத்தில் வல்லரசாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் ஒரு நாட்டின் அதிபருக்கு இவ்வளவு அதிகாரங்கள் தரப்பட்டிருக்கின்றன என்பதால் அவரே உலகிலேயே அதிக வல்லமை படைத்தவராகிறார்.
இவருக்கு நேரெதிர் அமெரிக்காவின் துணை அதிபர். காலையில் எழுந்தவுடன், ‘அதிபர் நலமாக இருக்கிறாரா?’ என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, மீண்டும் தூங்கப் போய்விடலாம் என்று துணை அதிபரின் பணிகளைப் பற்றி நகைச்சுவை யாகக் குறிப்பிடுவதுண்டு. அதிபருக்கு உடல்நிலை சரியில்லாமல்போய் செயல்படமுடியாத நிலைக்குப் போனாலோ, அவர் இறந்துபோனாலோ துணை அதிபர், அதிபராவார். இது தவிர, செனட் அவையை வழிநடத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி மற் றும் குடியரசுக் கட்சி ஆகிய இரு தேசிய கட்சிகள் மட்டுமே தற்போது முக்கியக் கட்சிகளாக இருக்கின்றன. மூன்றாவது தேசியக் கட்சி உருவாவதற்கோ, மாநிலக் கட்சிகள் எழுச்சி பெறவோ வாய்ப்பு மிகவும் குறைவு. அதனால் இப்போதைக்கு இரு தேசியக் கட்சிகளின் வேட்பாளர்களே தொடர்ந்து அதிபராகவும் துணை அதிபராகவும் இருந்து வருகின்றனர்.
நாடாளுமன்ற அவைகளையும் இரு கட் சிகளின் உறுப்பினர்கள்தான் நிரப்புகி றார்கள். அரிதாக வேறு கட்சி அல்லது சுயேச்சைகள் இடம்பெறுவதுண்டு.
மற்ற நாடுகளைப் போல் அல்லாமல் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடை முறை மிகவும் சிக்கலானது. தேர்தல் நடப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர்.
தேர்தல் பிரசாரம்:
அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இரு கட்டங்களைக் கொண் டது. முதலாவது கட்சிகள் நடத்தும் வேட்பாளர் தேர்தலுக்கான பிரசாரம்.
இரண்டாவது, வேட்பாளர்கள் அறிவிக் கப்பட்டதும் இரு கட்சிகளுக்கு இடையே நடக்கும் போட்டி பிரசாரம்.
பொதுவாக அதிபராக இருப்பவரோ அல்லது துணை அதிபராக இருப்பவரோதான் அடுத்த தேர்தலுக்கு அந்தக் கட்சியின் சார்பில் வேட்பாளராவதற்கான வாய்ப்புகள் அதிகம். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் அதிபராக இருக்கிறாரோ அந்தக் கட்சியின் வேட்பாளர் முன்னரே முடிவு செய்யப்பட்டுவிடுவார். அதில் போட்டி இருந்தாலும்கூட, அதில் அவரே வெற்றிபெறுவார். அதிபர் புஷ் இரண்டு முறை பதவி வகித்துவிட்டதாலும் துணை அதிபர் டிக் சீனி போட்டியி டப் போவதில்லை என அறிவித்துவிட்ட தாலும் 2008-ம் ஆண்டுத் தேர்தலில் இந்த நிலை இல்லை.
வேட்பாளர் தேர்தல்கள்:
நமது நாட்டில் நடப்பதுபோல் வேட்பாளர்களைக் கட்சி மேலிடப் பிரதிநிதிகள் மட்டுமே முடிவு செய்வதில்லை. கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் முக்கியப் பங்குவகிக்கின்றனர். வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கட்சிகளின் மாநிலப் பிரிவு கள் நடத்தும் தேர்தல்களே வேட்பாளர் தேர்தல் எனப்படுகின்றன. ஒரு கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இந்தத் தேர்தலில் ஒவ்வொரு மாநிலமாகப் பிரசாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டுவார்கள்.
பொதுவாகத் தேர்தல் நடக்கும் ஆண் டின் துவக்கத்தில் இருந்தே வேட்பாளர் தேர்தல்கள் நடக்கின்றன.
வேட்பாளர் தேர்தல்களைப் பொறுத்த வரை ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன.
கட்சிகளும் வெவ்வேறு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்துக்கென இரு கட்சிகளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் வாக்கை ஒதுக்கியிருக்கின்றன. இந்த எண்ணிக்கை நிலையானதல்ல. மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுவதுடன், கட்சிகளும் தங்களது விதிமுறைகளின்படி வெவ்வெறு எண்ணிக்கையிலான பிரதிநிதிகளை ஒதுக்குகின்றன. எடுத்துக்காட் டாக, 2008-ம் ஆண்டில் நாடுமுழுவதும் சேர்த்து ஜனநாயகக் கட்சிக்கு 4029 பிரதிநிதிகள் வாக்கு உண்டு. வேட்பாளர் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் 2025 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றாக வேண்டும்.
குடியரசுக் கட்சியைப் பொறுத்தவரை மொத்த பிரதிநிதிகள் வாக்குகள் 2380. வெற்றிபெறுவதற்கு 1191 வாக்குகள் தேவை.
வேட்பாளர் தேர்தல்கள் காகஸ் மற்றும் பிரைமரி என்ற இரு பிரிவுகளைக் கொண் டது. இவற்றுக்கும் உட்பிரிவுகள் உண்டு.
சில மாநிலங்களில் காகஸ் முறையிலிலும் சில மாநிலங்களில் பிரைமரி முறையிலும் வேட்பாளர் தேர்தலைக் கட்சிகள் நடத்துகின்றன. ஒரு மாநிலத்தில் ஒரு கட்சி காகஸ் முறையில் தேர்தலை நடத்தினா லும் மற்றொரு கட்சி பிரைமரி முறையில் தேர்தலை நடத்தக்கூடும்.
பொதுவாக வேட்பாளர் தேர்தல்கள் முதலில் நடப்பது அயோவா (காகஸ்) மற் றும் நியூஹாம்ப்ஷயர் (பிரைமரி) மாநிலங்களில்தான். இதற்கு எந்தவொரு பிரத்யேகக் காரணமும் இல்லை. ஆண்டுத் தொடக்கத்தில் அயோவாவில் தொடங்கும் வேட்பாளர் தேர்தல்கள் ஜூன் மாதம் வரை ஒவ்வொரு மாநிலமாக நடக்கும்.
இந்தத் தேர்தல்களில் கட்சியின் சார் பில் அதிபர் தேர்தலில் களமிறங்க விரும்புபவர்கள் போட்டியிடுவார்கள். வேட்பாளர் தேர்தலில் பொதுமக்கள் (அல்லது கட்சி உறுப்பினர்கள்) அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் அந்தந்தப் போட்டியாளர்களுக்குப் பிரதிநிதிகள் வாக்கு கிடைக்கும். அனைத்து மாநிலங்களிலும் வேட்பாளர் தேர்தல்கள் முடிந்த தும் கட்சிகளின் தேசியக் கூட்டம் நடக்கும். இக் கூட்டத்தில் அதிபர் வேட்பாள ரைப் பிரதிநிதிகள் தேர்வு செய்வார்கள்.
வேட்பாளர்கள் விவாதம்:
இரு முக்கியக் கட்சிகளும் வேட்பாளர்களை அதிகாரப் பூர்வமாக அறிவித்ததும், அவர்கள் இருவ ரும் ஒரே மேடையில் தோன்றி விவாதம் நடத்துவார்கள். தேர்தலுக்கு முன்பாக குறைந்தது 2 முறையாவது இந்த விவாதம் நடக்கும்.
தேர்தல் நாள்:
அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது அதிபர் மற்றும் துணை அதி பர் ஆகிய இருவருக்குமான தேர்தலாகும்.
இது 220 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது. அமெரிக்காவின் அனைத்துத் தேர்தல் நடைமுறைகளும் நாள்காட் டியின் அடிப்படையில் நடத்தப்படுவது சிறப்பம்சம். ஒவ்வொரு லீப் ஆண்டும் நவம்பர் முதல் திங்கள்கிழமைக்கு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமையில் (இந்த ஆண்டு நவம்பர் 4) அதிபர் தேர்தல் நடக்கிறது. அரசியல் சட்டப்படி தேர்வாளர் குழு மூலமாகவே அதிபர் தேர்ந்தெ டுக்கப்படுகிறார். எனினும் இந்தத் தேர்வாளர் குழுவினர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால் அதிபர் வேட்பாளருக்கு மாநில வாரியாக மக்கள் செல்வாக்கு இருந்தாக வேண்டும்.
அமெரிக்காவின் 50 மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் ஆளுகைக்கு உள் பட்ட தலைநகரப் பகுதியான கொலம்பியா மாவட்டம் ஆகியவற்றிலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இந்த எண்ணிக்கை அந்தந்த மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற (செனட் மற்றும் பிரதிநிதிகள் அவை) உறுப்பினர்களின் எண்ணிக்கைக்குச் சமம். கொலம்பியா மாவட்டத்துக்கு நாடாளுமன்றத் தில் பிரதிநிதித்துவம் இல்லை என்றபோ திலும் 1964-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தப்படி 3 தேர்வாளர் களைத் தேர்ந்தெடுக்கலாம்.
கட்சியின் மாநிலத் தலைமை தங்களுக்குரிய தேர்வாளர்களை முன்னரே நியமித் துவிடுகின்றன (இதற்கும் மாவட்ட அளவிலான தேர்தல் மற்றும் பிரசாரம் உண்டு). வாக்காளர்கள் எந்தக் கட்சியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்களோ அந்தக் கட்சி நியமித்த தேர் வாளர் குழுவுக்கு வாக்களிக்க வேண்டும்.
அதாவது வாக்குச் சீட்டில் அதிபர் வேட் பாளரின் பெயருக்குப் பதிலாக அவரது கட்சியின் தேர்வாளர் குழுவினரின் பெயர்களோ அல்லது சுருக்கமாக கட்சிக ளின் பெயர்களோ இருக்கும். வாக்காளர்கள் அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பல்வேறு மாநிலங்களிலும் தேர்ந்தெடுக்கப்படும் தேர்வாளர் குழுவினர் பின்னர் கூடி அதிபரைத் தேர்ந்தெடுப்பார்கள்.
ஒரு மாநிலத்தின் அதிக வாக்குகளை (சில மாநிலங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான) வேட்பாளர் ஒருவர் பெற்று விட்டால், அந்த மாநிலத்தின் அனைத்துத் தேர்வாளர் வாக்குகளையும் அவரே பெற்றுவிடுவார். உதாரணமாக ஒரு மாநிலத்தின் தேர்வாளர்கள் குழுவின் எண் ணிக்கை 30 என வைத்துக் கொண்டால் அந்த மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் ஒரு வேட்பாளர் மற்றவர்களைவிட அதிக (அல்லது 50 சதவீதத்துக்கும் அதிக மான) வாக்குகளைப் பெற்றுவிட்டால் அவர் அந்த மாநிலத்தின் 30 தேர்வாளர்க ளையும் பெற்றுவிடுவார் (மெய்ன் மற்றும் நெப்ராஸ்கா ஆகிய மாநிலங்கள் மட்டும் வேட்பாளர்கள் பெறும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் தேர்வாளர்களை ஒதுக்கீடு செய்கின்றன).
தேர்வாளர்கள் அனைவரும் அந்த வேட்பாளரின் கட்சியால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் பின்னர் நடக்கும் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் அவருக்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள். ஒரு கட்சியால் நியமிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வாளர்கள் மாற்றுக் கட்சி வேட்பாளருக்கு வாக்களிப்பதும் உண்டு.
இதைத் தடுப்பதற்கு சில மாநிலங்களில் சட்டம் இருக்கிறது. ஆனால் இதுவரை யாரும் தண்டனை பெற்றதில்லை.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடை முறையை உற்று நோக்கினால் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் நாடு முழுவதும் மக்களின் பெரும்பான்மையான வாக் கைப் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தெரியவரும். அதாவது மாநில ரீதியில்தான் அதிபரின் வெற்றி கணக்கிடப்படுகிறதே தவிர, நாட்டின் ஒட் டுமொத்த வாக்குகளின் அடிப்படையில் அல்ல.
உதாரணமாக 2000-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான புஷ், நாடு முழுவதும் பதிவான வாக்குகளில் 47 சதவீதத்தையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜன நாயகக் கட்சி வேட்பாளர் அல்-கோர் 48 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.
ஆனால் தேர்வாளர் வாக்குகளின் அடிப்ப டையில் புஷ் வெற்றி பெற்றார்.
அதிபர் தேர்தலை மத்திய அரசு நடத்துவது இல்லை என்பது கவனிக்க வேண் டிய மற்றொரு விஷயம். ஒவ்வொரு மாநிலமும் அந்தந்த மாநில சட்டத்துக்கும் மத்திய அரசியல் சட்டத்துக்கும் உட்பட்டு வெவ்வேறு முறைகளில் ஒரே நாளில் தேர்தல்களை நடத்துகின்றன. அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்வாளர்களைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே தேர்தலின் நோக்கம்.
நாடு முழுவதும் 538 தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இது நாடாளுமன்ற செனட் அவை (ஒரு மாநிலத்துக்கு 2 உறுப்பினர் வீதம் மொத்தம் 100) உறுப்பினர்களின் எண்ணிக்கை, பிரதிநிதிகள் அவை (மொத்தம் 435) உறுப்பினர்களின் எண்ணிக்கை, கொலம்பியா மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தேர்வாளர்களின் எண்ணிக்கை (3) ஆகியவற்றின் கூடுதலுக்குச் சமம்.
தேர்வாளர்கள் கூட்டம்:
மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களின் முடிவுகள் வெளியானதுமே அதிபர் யார் என்பது கிட்டத் தட்ட முடிவாகிவிடும். ஏனெனில் எந்த வேட்பாளருக்கு எத்தனை தேர்வாளர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.
தேர்தல் முடிந்த பிறகு, வரும் டிசம்பர் மாதத்தின் இரண்டாவது புதன்கிழ மைக்கு அடுத்துவரும் திங்கள்கிழமையன்று அந்தந்த மாநிலத் தலைநகரங்க ளில் (கொலம்பியா மாவட்டத்துக்கு வாஷிங்டனில்) கூடுவார்கள். ஆக, 51 இடங்களில் ஒரே நேரத்தில் தேர்வாளர்கள் கூட்டங்கள் நடக்கும். வாக்குச் சீட்டு அல்லது வெற்றுத்தாள் மூலமாக அதிபருக்கான வாக்கைத் தேர்வாளர்கள் அளிப்பார்கள். நடைமுறையில் பெரும் பாலான மாநிலங்களில், அனைத்து வாக்குகளும் ஒரே வேட்பாளருக்குச் செல்லும். அதிபர் தேர்தலுக்கான முடிவு அறி விக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதே நடைமுறைப்படி துணை அதிபருக்கான தேர்தலும் நடக்கும்.
மொத்தமுள்ள 538 தேர்வாளர் வாக்குகளில், ஒரு வேட்பாளர் குறைந்தபட்சம் 270 வாக்குகளைப் பெற்றால் அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். சில நேரங் களில் எந்த வேட்பாளரும் 270 வாக்குகளைப் பெறாவிட்டால், அதிபரைத் தேர்ந் தெடுக்கும் பொறுப்பை நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவை ஏற்கும். நடைமுறையில் இரண்டு வேட்பாளருக்கு அதிகமானோர் தேர்தலில் போட்டியிட்டாலோ அல்லது இரு வேட்பாளர்களும் 269 வாக் குகளைப் பெற்றாலோ இந்த நிலை ஏற்படலாம். இதுவரை 1800-களில் இருமுறை மட்டுமே நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவை மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.