Tag Archives: cricket

குற்றுழிஞை

ஏன் காவ்யா மாறன் தனியே, தன்னந்தனியே அமர்ந்து சன்ரைசர்ஸ் ஆட்டங்களை ரசிக்கிறார்?

ஏதாவதொன்றை தேர்ந்தெடுக்கவும்:

1. அப்பா கலாநிதி படம் எடுத்துக் கொண்டிருப்பதால்
2. ஹைதராபாத் பிரியாணியில் மற்றவர்கள் எல்லாம் பங்கு கேட்பதால்
3. ஸ்டெல்லா மேரீஸ் பொண்ணுங்களே இப்படித்தான்… இதுவே இராணி மேரி ஆகவோ எத்திராஜாகவோ பெண்கள் கிறித்துவக் கல்லூரியாகவோ இல்லாமல் போனதால்
4. கண்ணா பன்றிங்க தான் கூட்டமா வரும்! சிங்கம் சிங்கிள் ஆ தான் வரும் என ஜெயிலர் சிவாஜி பன்ச் பேசியதால்
5. ஆந்திரப் பிரதேசம் வேண்டுமென்றால் தெலுங்கானா எனப் பிரிந்து போயிருக்கலாம். ஹைதராபாத் என்றைக்கும் கொல்ட்டிகளின் ஒரே தலைநகரமாக இருப்பதால்
6. கூட வர பிசினாறிகளுக்கு எல்லாம் விமானத்தில் பயணச்சீட்டு எடுத்து இந்தியா எங்கும் சுற்றிக் காண்பிக்க விரும்பாததால்
7. அணியில் வேண்டுமானால் பதினொன்று பேர் ஆடலாம். எல்லோர்க்கும் தலைவி ஒருத்தியாக புதிய அம்மாவாக உருவாவதால்
8. தேர்தல் நேரம் – உறவினர் முக ஸ்டாலின் அவர்களும் அமைச்சர் உதயநிதி அவர்களும் பிரச்சாரத்திலும் பதற்றத்திலும் இருப்பதால்
9. அதுதான் இராசி என்பதால்… அப்பொழுதுதான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஜெயிக்கும் என்பதால்

பத்தாவது காரணத்தை பின்னூட்டத்தில் சொல்லவும்

ஒரு தானாகி மலைதல் (குற்றுழிஞை)

https://www.tamilvu.org/courses/degree/d021/d0213/html/d0213665.htm#:~:text=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20(%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%88)

அம்பையர் அவுட்!

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!’ என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்லலாம்.
கிராண்ட் ஸ்லாம்களில் சிறந்தது அமெரிக்க ஓப்பன் டென்னிஸ்.

ஏன் என்றால், இங்கே பந்து, ‘உள்ளேவா? வெளியேவா?’ என சோதிக்கும் நடுவர்கள் கிடையாது.

கிரிக்கெட்டுக்கும் இது தேவை. சுவாரசியமான ஆட்டத்தின் நடுவே அந்த கறுப்பு+வெளுப்பு ஆடை மத்தியஸ்தர்கள் தேவையே இல்லை.
ஏன்?

1. எல்லாவற்றுக்கும் தொலைக்காட்சியில் அசரீரியாக ஒலிக்கும் மூன்றாம் நடுவர் இருக்கிறார். அவர் போதும்.

2. ஒரு ஓவருக்கு ஆறு பந்து. அதை அரங்கில் இருக்கும் வெள்ளித்திரை காண்பிக்கும். அது போதும்.

3. தொப்பியையும் கம்பளி ஜாக்கெட்டையும் தாங்கிக் கொள்ள கோட் தலைப்பாமாட்டி போதும்.

4. பந்து வீசுபவர் எல்லைக் கோட்டைத் தொட்டாரா; இடுப்புக்கு மேல் போட்டாரா என்பற்கு எல்லாம் கேமிராக்கள் போதும்.

5. காலில் வாங்கி ஓடினாரா, கையைத் தொட்டுப் போனதா எல்லாம் தப்பு தப்பாகவோ, குத்துமதிப்பாகவோ சொல்லாமல் இருக்க கணினி போதும்.

6. சண்டையோ கலகலப்போ சூடான தடித்த வார்த்தைகளோ இருந்தால்தான் ஆட்டம் களை கட்டும். அவற்றை விலக்கி விடாமல் இருக்க நடுவர் இல்லாவிட்டால் போதும்.

7. பந்து, ஆடுகளம் எல்லாம் தேர்ந்தெடுக்க ஐ.சி.சி (அல்லது பி.சி.சி.ஐ.) போதும்

8. இடக்கை ஆட்டக்காரரும் வலக்கை ஆட்டக்காரரும் ஆடும் போதும் அங்குமிங்கும் ஒட சதுரக்கால் அம்பையர் வேண்டாம். ஃபீல்டிங் அரணை மாற்றுவது மட்டும் போதும்.

9. அம்பையர் மாதிரி நடுவில் நின்று கொண்டு ஆட்டத்தைப் பார்க்க வேண்டுமென்றால் காசு கொடுத்தால் போதும் என்னும் ஷரத்து வரவேண்டும்.

அந்த இரண்டு பேர் இன்னும் தேவையா? என்ன சாதிக்கிறார்கள்? எதற்காக இன்னும் ஏதோ வேலை செய்வது போல் நடிக்கிறார்கள்?

களவுபூசல் – லடாய் ப்ளே

ஜிம்பாப்வே இன்னும் கிரிக்கெட் ஆடுகிறது. தெரியுமா?

எப்படி தெரிய வைப்பது… இப்படித்தான்!

அயர்லாந்து நாட்டுடன் ஆன போட்டியில், சிக்கந்தர் ராஜா தன் மட்டையை ஓங்கிக் காண்பித்து ‘ஒண்டிக்கு ஒண்டி வரியா’ என ஜோஷ் லிட்டில் என்னும் பந்து வீச்சாளரை அழைத்திருக்கிறார். கர்ட்டிஸ் காம்ஃபர் என்னும் அயர்லாந்து வீரரும் சண்டைக்குத் தயாராக சிக்கந்தருடன் மல்லுக்கட்ட களமிறங்குகிறார். நடுவர் ஒருவழியாக கைகலப்பை விலக்கி விட்டிருக்கிறார்.

அதே போல் இந்தியாவில் கேப்பிடல்ஸ் அணியும் குஜராத் ஜியண்ட்ஸ் அணியும் போட்டியில் ஆடியிருக்கின்றனர்.

இந்த ஆட்டம் எல்லாம் எவர் பார்ப்பார்கள்? ஆனால், கவுதம் கம்பீரும் ஸ்ரீசாந்த்தும் இதைத் திரும்பிப் பார்க்க வைக்கின்றனர். இருவரும் அரசியல்வாதிகள். அதனால், வாய்ச் சவடாலுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டுமா… என்ன!?

ஆட்டத்தின் நடுவில் ஸ்ரீசாந்த்தை “எத்தன்” (ஃபிக்ஸர்) என அழைக்கிறார் கௌதம் கம்பீர். அசாரூதீன், ஜடேஜா, தோனி என்னும் நெடிய வரிசையில் ஸ்ரீசாந்த் சகதலப்புரட்டன். எந்த ஆட்டத்தில் எவர் ஆடுவார், எப்பொழுது தலைக்கு மேல் பந்து போடுவார், துடுப்பாட்டத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை முன்கூட்டியே ஆரூடம் சொல்வது மட்டும் அல்லாமல், சொன்னதை சொன்னபடி நிறைவேற்றிக் காட்டுபவர்.

இப்பொழுது அவரிடம் புதிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கிரிக்கெட் மழையில் மூழ்கித் தவிக்கும் பார்வையாளரை எப்படி உப்பு சப்பில்லாத உள்ளூர் போட்டிகளையும் பார்க்க வைப்பது?

எனவே, கீழ்க்கண்ட புதிய பவர்ப்ளே – லடாய் ப்ளே முறையை அறிமுகம் செய்யுமாறு பரிந்துரைக்கிறேன்:

  1. ஓரு போட்டியில் மூன்று சண்டைகள் வரை போடலாம். (டி10 ஆட்டம் என்றால் அதிகபட்சமாய் இரண்டு சண்டைகள்)
  2. ஒரு அணிக்கு ஒரு சண்டை. நடுவர்களும் ஒரு சண்டையைத் துவக்கலாம். சண்டைகள் ட்விட்டரில் வைரல் ஆனால், துவக்கிய அணிக்கு ஒரு புள்ளி கிடைக்கும். நடுவர் துவங்கினால், மூன்றாவது அம்பையரின் முடிவே இறுதி முடிவாகக் கொண்டு புள்ளிகள் கொடுக்கப்படலாம்/
  3. மட்டையை வைத்துக் கொண்டு அடித்துக் கொள்ளக் கூடாது. குறிபார்த்து பந்தை எறிவது என்றால் நாற்பது மீட்டராவது தள்ளி நின்று வீச வேண்டும்.
  4. ஒரு பந்தயத்தில் ஒருவர் அதிகபட்சமாய் ஒரு முறை மட்டும் களத்தில் குதித்து கட்டிப் புரண்டு சேற்றை வாரி இரைக்கலாம்

சண்டைகளை சமூக ஊடகத்திலும் தொடரலாம். விரைவிற் பரவுகின்ற வரையில் கொண்டு செல்லும் அணிக்கு ஒரு புள்ளி தரப்படும்.

பார்வையாளர்கள் பகுதியில் நடக்கும் கைகலப்புகளுக்கு மதிப்பெண் கிடையாது.

அப்படியாவது இந்த ஆட்டங்களை தொலைக்காட்சியில் பார்ப்பீர்களா? என்ன விதிகளை சேர்க்கலாம்? யார், யார் சிறப்பாக வாய்ச் சவடால் விடுபவர்கள்?

காற்றும் கழுகும் பறந்த சேப்பாக்கம்

சேப்பாக்கத்தை சி.எஸ்.கே ஆடும் போது பார்க்க வேண்டும் என்பது வாழ்க்கையில் பாக்கி இருக்கும் 47 இலட்சியங்களுள் ஒன்று. அது இல்லாத பட்சத்தில், ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் மோதிய ஒரு நாள் ஆட்டம் காணக் கிடைத்தது.

நுழைவுச்சீட்டை வாங்கிக் கொண்டுத்த என் அண்ணாவிற்கு எம்.ஏ. சிதம்பரமே தெரியும் போல… அவர் விருந்தோம்பல் வழியாக அழைத்துச் சென்றார்.

பூரி, பிரியாணி, பிஸிபேளே பாத், பப்படாம், பாயாசம், பொறித்த கோழி, பரோட்டா என ஒரு மணி நேரத்திற்கு மெனுவை மாற்றி மாற்றி கொடுத்துக் கொண்டே இருந்தனர். கே. பாலச்சந்தருக்குப் பிடித்த கோத்தாஸ் காபியும் வணிகச்சின்னம் போடாத தேநீரும் திரிவேணி சங்கமாக ஓடிக் கொண்டிருந்தன. கொஞ்சம் பியரும் கூடக் கிடைத்தால் எப்படியிருந்திருக்கும் என அந்த மரத்தின் கீழ் படுத்து பேயை ஆட்கொள்ளவைத்தவன் கதையாக கற்பனையில் திளைத்தேன்.

ஆட்டம் என்னவோ இரண்டு மணிக்குத்தான் துவக்கம். ஆனால், அமர்க்களம் எல்லாம் மதியம் பன்னிரெண்டு மணிக்கேத் துவங்கி விட்டது. வாசலில் பாரம்பரிய ஆஃப்கன் ஆடையில் மிளிர்ந்தார்கள். முகத்தில் பாகிஸ்தான் கொடியை பச்சைக் குத்திக் கொள்ள வைக்கப்பட்டார்கள் சிறுவர்கள். பாபர் ஆசாம் பெயர் தாங்கிய தெற்காப்பிரிக்க சொக்காய் கூட விற்றுக் கொண்டிருந்தார்கள்.

தி ஹிந்து நாளிதழின் அந்நாள் ஆசிரியர் என். ராம் காணக் கிடைத்தார். தற்படம் எடுத்துக் கொள்ள சபலப்பட்டேன். அவர் ஆட்டத்தைப் பார்க்காமல், செல்பேசியிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார். பாதி பாகிஸ்தான் ஆட்டத்தில் கிளம்பிப் போய்விட்டார்.

பாடகர் உன்னி கிருஷ்ணன் எல்லோருடனும் தற்படம் எடுத்துக் கொள்ள இன்முகத்துடன் ஒத்துழைத்தார். பிரபலங்களை நினைத்தால் சற்றே பாவமாக இருந்தது. பொது இடத்தில் வந்தாலும் நிம்மதியாக நாலு தயிர் வடை சாப்பிட்டோமா, நான்குகள் விளாசுவதைப் பார்த்தோமா என சும்மா விடாமல், துரத்தித் துரத்தி காதலிக்கிறார்கள்.

அவர்களை விட எல்லைக்கோட்டில் நின்றவர்கள் இன்னும் பாவம் செய்தவர்கள். நவீன் என்று பக்கத்து வீட்டுப் பொடிசை அழைப்பது போல் திசை திருப்பினார்கள். அவர்களும் பந்திலேயே கண்ணும் கருத்துமாக இருக்க இந்த விசிலடிச்சான் குஞ்சுகளை கண்டுகொள்ளவில்லை.

அதைவிட முக்கிய சந்தேகம்… ஏன், எல்லா வீரர்களும் முட்டி போட்டு தங்கள் பானங்களை அருந்துகிறார்கள்? சாட்ஜிபிடி-யிடம் கேட்க வேண்டும். அல்லது நான் பார்த்த ஆட்டம் அந்த மாதிரி இருக்க வேண்டும். ஓரிருவர் அவசரமில்லாவிட்டால் கூட ஹாராமாக நின்றே குடித்தார்கள்.

அப்புறம், புகைப்படத்தில் இருக்கும் இந்த ஸ்தூபி, நினைவுச் சின்னம் என்னது? அதையும் கூகுள் லென்ஸிடம் தேட வேண்டும்.

கடைசியாக பாகிஸ்தான் கிஷான் (கிசான்?) என்னும் கொடியை ஆட்டிக் கொண்டே இருந்தார்கள். அதனாலோ என்னவோ தரையில் உருண்டு புரண்டு உழுதார்களேத் தவிர பந்துகளையும் பந்தயத்தையும் பாக். கோட்டைவிட்டது.

Mayanti Langer – Indian Cricket Commentators

இந்த உலகக் கோப்பையில் நான் ரசித்த முதல் அம்சம் மயந்தி லங்கர்.

வெறுமனே கவர்ச்சிக்கும், ஊறுகாயாகத் தொட்டுக் கொள்ள பெண் தொகுப்பாளினியும் இருந்த காலகட்டம் காணாமல் போயிருக்கிறது. இவர், “நீயா… நானா?” கோபிநாத் ரகம். தரமான கேள்விகள்; சுனில் கவாஸ்கார் போல் ஒயிலான மிடுக்கு; காதில் வருவதையும் எதிராளி பேசுவதையும் நேரமும் இடமும் அறிந்து முன்னெடுக்கிறார்.

நான் மந்திரா பேடி காலத்தவன். அவர் டி.டி.எல்.ஜே (தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே) படத்தில் நடித்த ஒரே குற்றத்திற்காக, கிரிக்கெட் போட்டிகளிலும் நடுவே வந்து போனார்.

அதற்கும் முந்தைய ஹிந்தி மட்டுமே அரசாண்ட பிஷன் சிங் பேடி, லாலா அமர்நாத், கிஷோர் பேமானி, சுஷில் ஜோஷி போன்றவர்கள் பேச்சைக் கேட்டால், குளக்கரையில் கரையும் காகங்களின் இனிமை புரியவரும். ஹிந்தி தெரிந்திருந்தால் அந்த மொழியை இப்படியாக உபயோகிக்கக் கூடாது என்பதும் தெரியவரும். டிவியின் ஒலியை மொத்தமாகக் குறைத்துவிட்டு, வெறுமனே காட்சியை மட்டும் பார்க்கலாம். அதாவது, இளையராஜா பாடலை ரேடியோவில் ஒலிக்க விடுங்கள். தொலைக்காட்சியில் ஒரு நாள் போட்டி ஓடும்.

ஆங்கில காமெண்டரி எப்பொழுதுமே தேவலாம். நரோத்தம் பூரி போன்றவர்கள் ஜமாய்ப்பார்கள். எனினும், பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வர்ணனையாளர்களை எந்த இங்கிலீஷ்காரராலும் தொட இயலவில்லை. ரிச்சி பெனாட், டோனி கிரெக் – இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் சரிந்தால் கூட மென்மையாகச் சொல்வார்கள். ஸ்டீவ் வாக் வெளுத்து வாங்கினால் கூட குறைகளைச் சுட்டுவார்கள்.

அதன் பிறகு நிறைய பேர் வந்ததாகக் கேள்விப்பட்டேன். ஹர்ஷா போக்ளே, சித்து – இவர்கள் மைக்கை பிடித்த போது எனக்கு கிரிக்கெட் எட்டாத கனியாகி விட்டிருந்தது.

மீண்டும் ஐ.பி.எல். மூலமாக வந்த போது அறிமுகமான பெண் வர்ணனையாளர் மாயாந்தி. லட்சணமாக இருந்தார். இன்னொரு மந்திராவோ என மிரட்சியுடன் அலட்சியமாகக் கேட்டேன். சுனில் கவாஸ்கரின் ஒய்யாரமும் ரவி சாஸ்திரியின் ஆங்கிலப் புலமையும் கவனிக்க வைத்தது. ஆனால், அவரை பின் தொடர வைத்தது — அந்த ஆஸ்திரேலியாக்காரர்களின் வாக்கு வன்மை.

கொஞ்சம் தேடினால், என்னென்னவோ சாதித்து இருக்கிறார் மாயந்தி. எப்பொழுது இருந்தோ அளவளாவுகிறார் லங்கார். எதெதற்கோ நேரடி ஒலிபரப்பாளர் ஆக இருந்திருக்கிறார் லங்கர். கணவன் கூட புகழ் பெற்றவராம். நம்ம 83 ரோஜர் பின்னியின் மகனை மணமுடித்திருக்கிறார்.

சந்தோஷமாக இருந்தது. கிளப் ஆட்டம் போல் இறக்கிவிடப்பட்ட மசாலா பதார்த்தங்கள் இன்று லியோ சிங்கமாக முழுமுதல் திரையையும் காத்திரமாக ஆக்கிரமித்து விவரணையை விவரமாகத் தருவது – புதிய தலைமுறையின் சாதனை.

IPL, LPL, LTTE, IPKF – T20 and Team Names

பத்து வயதிருக்கும். வீட்டில் எதையும் படிக்கும் சுதந்திரம். அந்த அட்டை கிழிக்கப்பட்ட நூல் வாசிக்கக் கிடைத்தது. ரஜினியின் படமான ‘தர்ம் யுத்தம்’ போல் அந்த 1983 கொலைகாரர்கள், கறுப்பு ஜூலை அராஜகவாதிகள் எல்லோரையும் தீர்த்துக் கட்ட எவராவது பிறக்க மாட்டார்களாக என மனம் துடிதுடிக்க வைத்த புத்தகம். கற்பனையில் பல்வேறு சண்டைகளை எண்ணிப் பார்த்து சமாதானம் அடைவேன்.

இன்றைய காலகட்டத்தில் இலங்கை பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் நடத்துகிறது. அதற்கான அணிகளின் பெயர்களில் இயக்கங்களின் பெயரைப் போட்டால் எப்படி இருக்கும்!?

இலங்கையில் இருக்கும் தமிழருக்கான சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பல நிலைகளில் பல்வேறு காலகட்டங்களில் இயக்கங்கள் செயல்பட்டன. ஈழ இயக்கங்களில் புகழ்பெற்றவற்றின் பெயர்கள் (அகரவரிசைப்படி):

1. ஈழ தேசிய விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எஃப். – Eelam National Democratic Liberation Front (ENDLF))
2. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) (Eelam People Democratic Party (EPDP))
3. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈ.பிஆர்.எல்.எஃப். – Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF))
4. ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ் – Eelam Revolutionary Organization of Students (EROS) – ஈ.ஆர்.ஓ.எஸ்.)
5. தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ – Liberation Tigers of Tamil Eelam (LTTE) – எல்.ரி.ரி.ஈ.)
6. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (ப்ளாட் (அ) புளொட் – People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE) – பி.எல்.ஒ.டி.ஈ.)
7. தமிழீழ விடுதலை இயக்கம் (டெலொ (அ) ரெலா – Tamil Eelam Liberation Organization (TELO) – டெலோ)
8. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (டி.எம்.வி.பி. – Tamileela Makkal Viduthalai Pulikal (TMVP))
9. தமிழர் விடுதலைக் கூட்டணி (அரசியல் கட்சி) (டுல்ஃப் (அ) ரி.யு.எல்.எப் – Tamil United Liberation Front (TULF) – டி.யு. எல்.எஃப்)

இலங்கை ப்ரீமியர் லீக் எல்.பி.எல் டி20 அணிகளின் பெயர்கள்:

1. Colombo Strikers – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் என்பதற்கு பதில்: கொழும்பு கொமாண்டோக்க‌ள்
2. Dambulla Aura – டம்புல்லா ஆரா என்பதற்கு பதில்: தம்புள்ளை துள்ளர்கள்
3. Galle Titans – கேலே டைட்டன்ஸ் என்பதற்கு பதில்: கல்லே கெரில்லாக்கள்
4. Jaffna Kings – ஜாஃப்னா கிங்ஸ் என்பதற்கு பதில்: யாழ்ப்பாண புலிகள்
5. B-Love Kandy – கண்டி பி-லவ் என்பதற்கு பதில்: கண்டி கழுகுகள்

இன்னும் ஆர்வமாக இலங்கை டிவெண்டி 20 பார்ப்போமோ?

சென்னை வீரர்களும் சி.எஸ்.கே.வும்

சென்னை சூப்பர் கிங்ஸ் என்று பெயர்.
ஆனால், தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு வீரர் கூட இல்லை.

சோனு யாதவ் – ஆர்.சி.பி – பெங்களூர்
சாய் சுதர்சன் – குஜராத் டைட்டன்ஸ்
முருகன் அச்வின் – ராஜஸ்தான் ராயல்ஸ்
என் ஜெகதீசன் – கல்கத்தா க்நைட் ரைடர்ஸ்
விஜய் ஷங்கர் – குஜராத் டைட்டன்ஸ்
ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் – குஜராத் டைட்டன்ஸ்
டி நட்ராஜன் – சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
ரவிச்சந்திரன் அச்வின் – ராஜஸ்தான் ராயல்ஸ்
தினேஷ் கார்த்திக் – ஆர்.சி.பி – பெங்களூர்
வருண் சக்கரவர்த்தி – கல்கத்தா க்நைட் ரைடர்ஸ்
வாஷிங்டன் சுந்தர் – சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
ஷாருக் கான் – பஞ்சாப் கிங்ஸ்

பிசாத்து இருபது லட்சம் கொடுத்து, ஒருவரைக் கூடவா ஏலத்தில் எடுக்கவில்லை?

புரிகிறது…

இதே போல்தானே கால்பந்து கிளப்புகள் நடக்கின்றன!?
அமெரிக்க ஃபுட்பால், கூடைப்பந்து எல்லாம் கூட இப்படித்தானே…
பாஸ்டன் நகரத்தில் பிறந்த வீரர் –> சிகாகோ அணிக்காக ஆடுவாரே!?

இருந்தாலும்…

துலீப் கோப்பையிலும், ரஞ்சி டிராபியிலும் நம்ம உள்ளூரு பசங்க ஜெயிக்க வேண்டும் என்னும் நினைப்பு வரும்.
இப்பொழுது ராஜஸ்தான் ராயல் ஜெயிக்கணும்னு நெனப்பு வருது.

எது எப்படியோ…

இருபது ஓவர் பந்தயத்தில் கடைசி பந்து வரை இருக்கை நுனியில் இருபத்தைந்து பேர் உட்கார்த்தி வைக்கிறார்கள்.
அதற்கு தனி மேலாண்மை நிர்வாகமும் நடுங்காத அமரிக்கையும் சூது தகிடுதத்தங்களும் வேண்டும்.
அத்தனையும் ஒருங்கிணைக்கிறார்கள். அரங்கேற்றுகிறார்கள்.

லலித் மோடி இல்லாவிட்டால் என்ன? எத்தனையோ எத்தர்கள்!

Million Dollar Arm

மில்லியன் டாலர் புஜம்

லாரி ஓட்டுபவரின் மகன், பல்லாயிரம் கோடி இரசிகர்களின் கனவு நாயகனாக மிளிர முடியுமா? கான்பூரின் அருகே உள்ள கிராமத்தில் இருப்பவரும்; லக்னௌவில் இருந்து காத தூரம் இருக்கும் குக்கிராமத்தில் இருப்பவரும்; அமெரிக்கா வந்து அங்கே பேஸ்பால் பந்து வீசும் நட்சத்திரங்கள் ஆவார்களா? ஒன்பது குழந்தைகள் உள்ள வீட்டில் ஒற்றை அறையில் வளர்பவர், அமெரிக்கர்களுக்கு சொந்தமான அவர்களுடைய விளையாட்டில், அவர்களுக்கு எதிராக மிளிர்வது சாத்தியமா?

இந்த மாதிரி சம்பவங்களைக் கோர்த்து எவராவது புனைவு அமைத்திருந்தால், இதெல்லாம் கதையிலும் சினிமாவிலும் மட்டுமே நடக்கும் என்றிருப்பேன். ஆனால், நிஜத்தில் நடந்திருக்கிறது. வாரநாசிக்கு அருகில் இருக்கும் ஊரில் பிறந்து வளர்ந்த தினேஷ் படேலும், ’கம்பள நகரம்’ என்றழைக்கப்படும் பாதோஹி நகரத்தில் ஒன்பதில் ஒருவராக பிறந்த ரிங்கு சிங்கும் – அமெரிக்கா வருகிறார்கள். பிட்ஸ்பர்க் நகர அணியில் பந்து போடுகிறார்கள்.

இந்த உண்மைக் கதையைப் பின்னணியாக வைத்து ”மில்லியன் டாலர் புஜம்” (Million Dollar Arm) வெளிவந்திருக்கிறது. இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரெஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்திற்கு இசையமைக்க ஒத்துக் கொண்டேபோது கொடுத்த பேட்டியில் ரெகுமான் இவ்வாறு சொல்கிறார்: ”ஸ்லம் டாக் மில்லியனரு’க்குப் பிறகு ஆங்கிலப் படங்களுக்கு இசையமைக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. ‘கப்பிள்ஸ் ரிட்ரீட்’, ’வாரியர்ஸ் ஆஃப் ஹெவன்’, ‘127 அவர்ஸ்’, ’எர்த்’, ‘பீப்பிள் லைக் அஸ்’னு இப்படி நிறைய நிறைய! அதில் நான் விரும்பித் தேர்ந்தெடுத்தது ‘127 அவர்ஸ்’ மட்டும்தான். அது ஆஸ்கர் பரிந்துரை வரை போனது. ஆனால், அடுத்த மூன்று வருடங்களுக்கு இந்தியாவை அடிப்படையாக வைத்து வரும் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்க நான் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படி, ஒத்துக் கொண்டால், ’ரெஹ்மானை – தெற்காசியா களத்தில் நடக்கும் கதைகளுக்குத்தான் பயன்படுத்தலாம்’ எனத் தேங்கிப் போயிருப்பேன். மேலும், இந்தியச் சூழலில் இசையமைக்க, எனக்கு தமிழும் ஹிந்தியும் இருக்கின்றன. அவற்றிலும் நான் தொடர்ந்து படங்கள் செய்து கொண்டுதானே இருக்கிறேன். நாலு வருடங்களுக்குப் பின்னால் மறுபடியும் ஒரு இங்கிலீஷ் படம் பண்ணலாம்னு நினைச்சேன். அந்த சமயத்தில் ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ படத்தின் இயக்குநர் கிரெய்க் கில்லஸ்ப்பியும் என்னை அணுகினார். இது இந்தியாவில் நடக்கும் கதை, வால்ட் டிஸ்னி தயாரிப்புனு நிறைய ஊக்கப்படுத்தும் விஷயங்கள் இந்தப் படைப்பில் இருந்தன. இது விளையாட்டு குறித்த திரைப்படம்தான். ஆனால், உள்ளுக்குள்ள ரொம்ப அற்புதமான இன்னொரு கதையும் மனித மனங்களின் ஊசலாட்டங்களும் ஓடுகிறது. ‘லகான்’ மாதிரினு சொல்லலாம்.”

படத்தில் எல்லா மொழிகளிலும் பாடல்கள் வருகிறது. படத்தின் இறுதியில் ‘என் சுவாசக் காற்றே’ படத்தில் இடம்பெற்ற சித்ராவும் உன்னிகிருஷ்ணனும் பாடிய ‘திறக்காதக் காட்டுக்குள்ளே’ பாடல் உணர்ச்சிப்பிழம்பான கணத்தில் ஒலிக்கிறது. படத்தின் நடுவே பாங்ரா பஞ்சாபி, டிஸ்கொத்தே ஹிந்தி, ஆங்கில ராப் என கலவையாக – எல்லா மொழிகளும் ரசனைகளும் இசைப்பிரிவுகளும் வருகின்றன.

இந்தப் படம் ஆஸ்கார் விருதுகளுக்கான நெடும் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், மூன்று/நான்கு பேர் மட்டுமே சொல்லப்படும் இறுதிப் பரிந்துரையில் இடம்பிடிக்கப் போவதில்லை என வல்லுநர்கள் கருதுகிறார்கள். ஸ்டீஃபன் ஹாகிங் வாழ்க்கையை சொல்லிய ‘தியரி ஆஃப் எவரிதிங்’ திரைப்படத்திற்கு இசையமைத்த யோஹான் ஜோஹான்ஸன், அல்லது இண்டெர்ஸ்டெல்லார் படத்தின் ஹான்ஸ் ஜிம்மர் அல்லது ஆலன் டூரிங் வாழ்க்கையை திரையாக்கிய ’தி இமிடேஷன் கேம்’ படத்தின் அலெக்ஸாண்டர் என முன்னிறுத்துகிறார்கள்.

ஆஸ்கார் விருதுகளுக்கு வாக்களிப்பவர்களுக்கு மறதி அதிகம். டிசம்பர் மாதத்தில் திரைப்படம் வெளியானால் மட்டுமே நினைவில் நிற்கும். ”மில்லியன் டாலர் புஜம்” திரைப்படமோ மே மாதமே வெளியாகி, இப்பொழுது திரையரங்குகளை விட்டு வெளியேறி விட்டது. இந்த நிலையில், அந்தப் படத்திற்கு எந்தப் பரிந்துரையும் கிடைப்பது சந்தேகமே. கோச்சடையான், ஐ போன்ற திரைப்படங்களுக்காகவும் ஏ ஆர் ரெஹ்மானின் பெயர் ஆஸ்கார் நீள்பட்டியல் பரிந்துரையில் இடம் பெற்றிருப்பதால், ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ பரிந்துரையையும் பத்தோடு பதினொன்றாகக் கருதி விட்டுவிடலாம்.

அது ஆஸ்கார் விருதிற்கான சாஸ்திரோப்தமான பட்டியல். இனி ஏ ஆர் ரெஹ்மானின் கோலோச்சல் குறித்த பாமரனின் பார்வை.

துவக்கத்தில் டிஸ்னியின் கோட்டை வரும்போதே பட்டாசு கிளம்பி விடுகிறது. இராணிகளும் மஹாராஜாக்களும் துள்ளலாக வெடி வெடிப்பது போல் ஐரோப்பிய பவனங்களுக்கு இந்திய ‘ஸ…ஸா… ஸரி’ வரும்போதே ”இது நம்ம இசை” என்று தோன்றவைத்து விடுகிறது. சிக்கன் டிக்கா மசாலாவில் இருக்கும் மணம் போல், பாரதத்திற்கேயுரிய வாசம்.

பதினான்காவது நிமிடத்தில் அந்த டிக்கா மசாலாவில் கொஞ்சம் சாம்பாரும் நிறைய தஹியும் கொத்து பரோட்டாவும் ஒருங்கே ஓங்கி ஒலிக்கிறது. சத்தமான இந்தியா. கசகச இந்தியா. சல்பேட்டா வாசனையான இந்தியா. கொண்டாட்ட இந்தியா. பரபர ஓட்டத்தின் நடுவே சாந்தமான இந்தியா. இப்படியெல்லாம் எழுத முடிகிறது… இதையெல்லாம் ஒலியில் கொண்டு வாருங்கள் என்று இயக்குநர் சொன்னாரா அல்லது இந்தியா என்றால் இதுதான் நாதம் என்று ஏ ஆர் ரெஹ்மான் சொன்னாரா? தெரியவில்லை. கேட்டுப் பார்த்தால் இந்தியா ஒலிக்கிறது. ஒளி கண்ணில் படாவிட்டால், மொழி புரியாவிட்ட்டால் கூட, அந்த லயம் காட்டிக் கொடுக்குமாறு அமைக்கப்பட்ட துள்ளலோசை.

அடுத்த ஓட்டம் இருபத்தி இரண்டாம் நிமிடம். ’சைய்யா சையா’ பாடிய சுக்விந்தர் சிங் ஒலிக்கிறார். அதே ஆட்டம்; பாட்டம். நிஜ நாடகம் தோன்றுவதற்கான ஒத்திகை நடக்கும் இடத்தை அறிமுகம் செய்யும் உறுமும் இசை.

அங்கே விட்டதை இருபத்தைந்தாம் நிமிடத்தில் சுக்வீந்த சிங் தொடர்கிறார். அவரை அப்படியே மாற்றி மேற்கத்திய இசைக்குத் தாவி விடுகிறார். இக்கி (Iggy Azalea) இங்கு வருகிறார்.

முப்பத்தி மூன்றில் ரெஹ்மானின் அமைதியான பாலட் ஒலிக்கிறது. பம்பாய் திரைப்படத்தில் ‘கண்ணாளனே’ துவக்கத்தில் வரும் இஸ்லாமிய சங்கீதம் போல்.

இனிமேல் திரைப்படத்தில் உற்சாகம் பிறக்க வேண்டும். ஏழைச் சிறுவர்கள் பந்து வீசும்போது அவர்களை ஒட்டி பாசமும், ஒட்டுதலும், ஜெயிக்க வேண்டுமே என்னும் ஏக்கமும் உண்டாக வேண்டும். டிஸ்னிக் கோட்டை வந்ததே… அதே இசை இப்பொழுது.

நாற்பதாவது நிமிடத்தில் நிஜப் போட்டி. இது ஏ ஆர் ரெஹ்மானின் சொந்த வீடு. முதல் படத்தில் ‘ஒட்டகத்தைக் கட்டிக்கோ’வில் ஆரம்பித்து மணி ரத்னத்திற்கு ’ருக்குமணி ருக்மிணி’ அயிட்டம் பாட்டு போட்டது போல் இலா அர்ஜுனும் அல்கா யாக்னிக்கும் குத்துகிறார்கள். அவர்கள் குத்துப்பாட்டு எப்பொழுது முடிகிறது, எப்பொழுது லகான் திரைப்படத்தில் வரும் “பார் பார் ஹோ…!! ஹஜார் பார் ஹோ!!!” வருகிறது என உணர முடியாத உருமாற்றம். அப்படியே, அந்த வீரர்களுக்காக கரகோஷமிடுகிறோம்.

நாற்பத்தியெட்டாம் நிமிடத்தில் வீடு திரும்புதல். அயல்நாடு செல்வதற்கு முன் வீட்டில் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு விடை பெறும் தருணத்திற்கான முன்னுரையாக கொண்டாட்ட பாங்ரா. அது அப்படியே, உருக்கமான பிரிவுபசார பாந்தமாக மாறுகிறது. அங்கிருந்து அமெரிக்காவின் ராப், கெண்ட்ரிக் லமார் குரலில் தோன்றுகிறது.

இதன் பிறகு கிட்டத்தட்ட படம் முழுமையாக ஆட்கொள்கிறது. இசை தனியாக, பாடல் தனியாக, பாடகர் தனியாக துருத்திக் கொண்டு தெரிவதில்லை.

இசை ஒலிக்காமல் மௌனமாக இருக்க வேண்டிய நேரம். தோல்வியுறும் போது சந்திக்கும் நிசப்தம். அதிர்ச்சியும் பிரிவும் சொல்லும் குரல் எல்லாமே இருக்கிறது. ஆனால், இந்தியப் பகுதிகள் போல் “நான் ரெஹ்மான். நான் இங்கே இருக்கிறேன்” என்பது தெரிவதில்லை.

படத்தின் இறுதியில் இருவருக்கும் கடைசி வாய்ப்பு. இதில் வென்றால்தான் அமெரிக்கா கனவு பலிக்கும். தோற்றால் கூனிக் குறுக நேரிடும். இசை மெதுவாகவே ஆரம்பிக்கிறது. கொஞ்சம் ஹம்மிங். கொஞ்சம் ‘அ…ஆ…’. அப்படியே சட்டென்று ரிங்குவின் பந்து வேகமாகப் பாய்வது போல், தினேஷின் இதயம் துடிப்பது போல் துள்ளுகிறது. கையிலிருந்து ஏவப்பட்ட வில்லாக பாய்கிறது.

இந்தியர்கள் வெற்றிக்கான முதல் படியில் கால் வைத்ததை ஒலியிலும் திரையிலும் கலந்துருகிய உச்சகட்ட தருணமான படத்தின் இறுதியில் நிஜக்கதையிலும் வல்லவர்கள் வெற்றி கண்டார்கள் என்பதால் கண்கள் கலங்கியதா… அல்லது ரெஹ்மானின் இசையில் மனம் உருகியதா… தெரியவில்லை. ஆனால், ரெஹ்மான் தெரிந்தார். ஆஸ்கார் தெரியவில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் கேட்க வைத்து மயங்க வைக்கும் இசை தெரிந்தது. என்ன சுருதி, என்ன ராகம், என்ன தாளம், என்ன ஜானர் என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், இதயத்தைத் தொடும் இசை தெரிந்தது.

Pain vs. Hope: Fears vs. Dreams: Public Elections x Personal Decisions

பயத்திற்கும் நம்பிக்கைக்கும் நடுவே தேர்தல் நடக்கிறது.

அச்சமூட்டுவது எப்படி?

‘அன்னியர் இத்தாலியர் இந்தியப் பிரதமர் ஆகலாமா?’ – சோனியா காந்தியை பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கிறது. ‘மோடி மட்டும் பி.எம். ஆனால், மொத்த பாரதமும் பாகிஸ்தான் மாதிரி ஆகிவிடும்!’ – சந்தேகப் புகையை கிளப்பி துன்பப் பாதையை காட்டுகிறார் ஷிண்டே.

நம்பிக்கையை விற்பது எப்படி?

நான்காண்டுகளுக்கு முந்தைய அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஒபாமா எல்லோருக்கும் தெரிந்த உதாரணம். வாஜ்பேயி ‘இந்தியா ஓளிர்கிறது’ என்றார்; தோற்றார். ‘நிலையான அரசாங்கம்’ என்பதை இந்திரா காங்கிரஸ் முன்வைத்து வி.பி. சிங் + தேவி லால் – சந்திரசேகர் ஜனதாவை வென்றது.

உலகின் எல்லா தேர்தல்களிலும் பீதிக்கு எதிராக ஆசை வார்த்தை போட்டியிடுகிறது.

என்னிடம் சிக்ஸர் அடிக்க விருப்பமா அல்லது விக்கெட் விழாமல் இருக்க விருப்பமா என்று கேட்டால், எளிதாக விடை சொல்லி விடுவேன். ஒவ்வொரு பந்தையும் தூக்கி அடிப்பேன். ஆனால், விக்கெட்டிற்கு பதில் விரை என்று மாற்றினால், சிக்சர் பக்கமே செல்ல மாட்டேன்.

சூதாட்டம் – இருபதுத்துவம்

முந்தைய ட்வீட்ஸ் தொகுப்பு: ட்விட்டரும் நானும் (2)

http://twitter.com/#!/snapjudge/status/54903018038104065
http://twitter.com/#!/writerpara/status/54226168085360640
http://twitter.com/#!/snapjudge/status/54226479332069376
http://twitter.com/#!/snapjudge/status/54217823819546624
http://twitter.com/#!/snapjudge/status/54213601187205120
http://twitter.com/#!/snapjudge/status/54213335381573632
http://twitter.com/#!/snapjudge/status/54210123412930560
http://twitter.com/#!/snapjudge/status/54198400379392001
http://twitter.com/#!/snapjudge/status/54189480202076163
http://twitter.com/#!/snapjudge/status/54188632029925377
http://twitter.com/#!/snapjudge/status/54167139350888449
http://twitter.com/#!/snapjudge/status/54164963031400448
http://twitter.com/#!/snapjudge/status/54161211050311680
http://twitter.com/#!/snapjudge/status/54152895637094400
http://twitter.com/#!/snapjudge/status/54149115784855552
http://twitter.com/#!/snapjudge/status/54146559855697920
http://twitter.com/#!/snapjudge/status/54145866642100224
http://twitter.com/#!/snapjudge/status/54144336492888064
http://twitter.com/#!/snapjudge/status/54143336524677120
http://twitter.com/#!/snapjudge/status/54135831354556417
http://twitter.com/#!/snapjudge/status/54139015644983296
http://twitter.com/#!/snapjudge/status/54136867972591616
http://twitter.com/#!/snapjudge/status/54133130109526016
http://twitter.com/#!/snapjudge/status/54132370466553856
http://twitter.com/#!/snapjudge/status/54129114726150144
http://twitter.com/#!/snapjudge/status/54124683116818432
http://twitter.com/#!/snapjudge/status/54123752539164672
http://twitter.com/#!/snapjudge/status/54122292044763136
http://twitter.com/#!/snapjudge/status/54121828318318592
http://twitter.com/#!/snapjudge/status/54120715615617024
http://twitter.com/#!/snapjudge/status/54119168714342400
http://twitter.com/#!/snapjudge/status/54118470194958337
http://twitter.com/#!/snapjudge/status/54115845051383808
http://twitter.com/#!/snapjudge/status/54114371827269632
http://twitter.com/#!/snapjudge/status/54111978167353344
http://twitter.com/#!/snapjudge/status/54110589462659073
http://twitter.com/#!/snapjudge/status/54109319439990786
http://twitter.com/#!/snapjudge/status/54130021735993344
http://twitter.com/#!/snapjudge/status/53439389321269248