Tag Archives: விமர்சனம்

Uncharted: Big Data as a Lens on Human Culture by Erez Aiden, Jean-Baptiste Michel

kim-kardashian-donut-Glazed_Break_The_Internet

ரஜினிகாந்த் குறித்து எத்தனை பேருக்குத் தெரியும்! என் பாட்டனார் தலைமுறையில் ஆரம்பித்து என்னுடைய பேத்தி தலைமுறை வரை எல்லோருக்குமே அறிமுகமான பெயர் – ரஜினி. ஆனால், திருவள்ளுவர் என்று சொன்னால், என் மகளுக்கே தட்டித் தடுமாறி, “இந்த வசனமாகப் பேசித் தள்ளும் சீரியல் படம் எல்லாம் எடுப்பாரே? ரெண்டு பொண்டாட்டி ‘ஒகே’ என்பாரே! அவரின் படத்தில் வருபவர்தானே?” என்பாள். திருவள்ளுவரைக் குறித்து எத்தனை புத்தகம் இருக்கும்? சூப்பர் ஸ்டாரைக் குறித்து எத்தனை புத்தகம் இருக்கும்?

எவர் காலத்தினால் அழியாமல் இருக்கிறார்? எப்படி ஆராயப்படுகிறார்? எவ்வாறு அந்தந்தக் காலத்தில் முக்கியமானவர் அறியப்படுகிறார்? எங்ஙனம் இவற்றை தெரிந்துகொள்வது?

இதுதான் இந்தப் புத்தகத்தின் மூலக்கரு. 1800களில் ஆரம்பித்து இதுகாறும் 130 மில்லியன் புத்தகங்களுக்கு மேல் வெளியாகி இருக்கிறது. தூரத்தில் இருப்பதைப் பார்ப்பதற்கு டெலஸ்கோப் இருக்கிறது. கிட்ட இருப்பதை நுண்மையாக நோக்குவதற்கு மைக்ரோஸ்கோப் இருக்கிறது. அதே போல் இந்த பதின்மூன்று கோடி நூல்களை எப்படி ஆராயலாம்? அவற்றில் சொல்லி இருக்கும் கலாச்சாரக் குறியீடுகளையும், அரசியல் நிலைப்பாடுகளையும், சரித்திர தகவல்களையும், பொருளாதார ஆராய்ச்சிகளையும் எப்படி வரலாற்றுப் பார்வையோடு கணினி துணையோடு அணுகுவது?

கூகுள் ஸ்காலர் நுழைகிறார். உலகின் மிகப் பெரிய நூலகமான ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸி’ல் முப்பத்தி ஆறு மில்லியன் புத்தகம் இருக்கிறது. ஹார்வார்டு பல்கலை வாசகசாலையில் பதினேழு மில்லியன் புத்தகங்கள். இவற்றில் கிட்டத்தட்ட முப்பது மில்லியன் நூல்களை கூகிள், கணினி மூலம் கிடைக்க வகை செய்கிறது. இவற்றைக் கொண்டு, அதில் இருக்கும் வார்த்தைகளை அளக்க என் – கிராம் வசதியை கூகுள் தருகிறது.

அடக்குமுறையாக சமூகத்தில் சத்தமாகப் பேசுவோரின் குரல் மட்டுமே ஒலிக்குமா? நாஜி ஜெர்மனியில் மார்க் ஷகால் ஓவியங்களையும் பால் க்ளீ வரைபடங்களையும் பேசவிடாமால் வைத்திருந்தார்கள். கருத்துகளை மொத்தமாக ஜடமாக்கமுடிகிறது. ஒரே ஒரு சித்தாந்தத்தை மட்டுமே முழங்குபவர்களை கல்லூரிகளிலும் ஆட்சி பீடங்களிலும் வைத்திருந்தால் என்ன ஆகும் – என்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால், ஹிட்லர் வீழ்ந்த பின் இவர்களின் புகழ் பன்மடங்கு உயர்வதையும் பார்க்க முடிகிறது.

ரஷியாவின் ஸ்டாலின் ராஜாங்கம் இன்னும் மோசம். ஸ்டாலின் வீழ்ந்தபின்னும், அவரால் கொன்று குவிக்கப்பட்ட அரசியல் தலைவர்களின் பெயர்களும் சிந்தனாவதிகளின் சித்தாந்தங்களும் வெளிவரவே இல்லை. 1980களில் கம்யூனிசம் மொத்தமாக நொறுங்கிய பிறகே, அந்த மனிதர்களின் வாழ்க்கையையும் செயல்பாட்டையும் அறிய முடிகிறது.

அப்படியானால்… புத்தகங்களில் பிழையே இருக்காதா? ஒட்டுமொத்தமாக அலசினால் கூட ஆட்டுமந்தை சிந்தை வெளிப்படுவதை தடுக்க இயலாதா?

புகழ்பெற்ற ஜப்பானிய பழமொழியை எடுத்துக் கொள்வோம்: “ஓராயிரம் வார்த்தைகளால் சொல்வதை ஒரேயொரு படம் உணர்த்திவிடும்!” – இது ஜப்பானில் உதித்ததே அல்ல! அமெரிக்காவின் செய்தி ஆசிரியர் ஆர்த்தர் ப்ரிஸ்பேன் 1911ல் சொன்னது. இந்த மாதிரி மூல ஆராய்ச்சிகளை செய்யவும் எந்த வார்த்தை எப்பொழுது புழக்கத்திற்கு வந்தது என்பதை ஆராயவும் கூகுள் என்-கிராம் தேடுபொறி உதவுகிறது. அவற்றை எப்படி பயன்படுத்தலாம் என்னும் சிந்தனையை விசாலமாக்க இந்தப் புத்தகம் உதவுகிறது.

சரி… இவ்வளவு சொல்லியாகி விட்டது. கடந்த இரு நூற்றாண்டுகளின் அதிநாயகர்கள் எவர்?

  1. அடால்ஃப் ஹிட்லர்
  2. காரல் மார்க்ஸ்
  3. சிக்மன்ட் ப்ராய்ட்
  4. ரொனாலடு ரேகன்
  5. ஜோசஃப் ஸ்டாலின்
  6. விளாடிமிர் லெனின்
  7. ட்வைட் ஐஸனோவர்
  8. சார்லஸ் டிக்கன்ஸ்
  9. பெனிடோ முஸோலினி
  10. ரிச்சர்டு வாக்னர்

Fame is a bee.
It has a song—
It has a sting—
Ah, too, it has a wing.
– by Emily Dickinson

Uncharted_Big_data_As_lens_On_Human_Culture

That Girl In Yellow Boots: திரைப்பட விமர்சனம்

That Girl In Yellow Boots_Kalki_Anurag_Kashyap_Movies_Films_Cinema
’கற்றது தமிழ் எம்.ஏ.’ இயக்குநர் ராமின் ’தங்க மீன்கள்’ இன்று வரவில்லை. எனவே, அதற்கு மாற்றாக That Girl In Yellow Boots படத்தைப் பார்த்தேன். இதுவும் தந்தைக்கும் மகளுக்குமான கதை.

ஸ்மிதா பட்டீலையும் ஷபனா ஆஸ்மியையும் எண்பதுகளில் கொண்டாடினால், கொன்கொனா சென்னையும் நந்திதா தாஸையும் இப்பொழுது இவர்கள் நடித்த படங்களை, ”இன்னார் இருக்கிறார்கள்… ஏமாற்ற மாட்டார்கள்” என்னும் நம்பிக்கையுடன் பார்க்க முடிகிறது. இருவரையும் அலேக்காக சாப்பிடுகிற மாதிரி வந்திருக்கிறார் கல்கி கோச்லின். அவரே கதை, வசனம் என்று சகல துறைகளிலும் நுழைந்திருக்கிறார்.

இயக்கத்தை மட்டும் Black Friday & தேவ் டி புகழ் புருஷன் அனுராக் கஷ்யபிற்கு விட்டுக் கொடுத்துவிட்டார். சப்பை மேட்டரை எடுத்துக் கொண்டு எப்படி படம் பண்ணுவது என்பதை அறிய வைக்கிறார். கல்கியின் ரூத் தசை பிடித்து விடுபவர். உடலுக்கு மட்டும் ஒத்தடம் கொடுக்காமல் சகலமும் கை வேலையாக செய்கிறார். ”உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி” பாடல் சொல்கிறது. ரூத் முகபாவத்திலேயே அருவறுப்பும் அசிரத்தையும் பதற்றமும் ஏக்கமும் திரைக்கதையை நகர்த்துகிறது.

முடிவை முன்பே யூகிக்க முடிகிறது. ஆனால், அதனூடாக சுவாரசியமான கதாபாத்திரங்களின் போக்கை ஊகிக்க முடியவில்லை. போதைக்கு அடிமையான காதலன் எப்படி எதில் இருந்து மீள்கிறான்? கண்டபடி மிரட்டி பணம் கறக்கும் கன்னட மாஃபியா தாதா-விடம் இருந்து எப்படி தப்பிப்பது?

மும்பையும் முக்கிய நடிகராக ஈடு கொடுத்திருக்கிறது. பணக்காரர்களின் வெர்ஸொவா, கப்பல் உடைக்கும் சேரி துறைமுகம், ஆட்டோவும் டாக்ஸியும் ஓடும் சந்துக்கள், ஆற அமர ஊழியம் செய்யும் அரசாங்கத்தின் முகம் எல்லாம் துணை நடிகர்கள். அன்னிய நகரத்தில் முகம் தெரியாத அப்பாவை தேடும் மகளின் துப்பறிதல் நடுவே ஓஷோ வருகிறார். மகளிரின் நிலை பேசப்படுகிறது. பதின்ம வயதின் குழப்பங்கள் உணர்த்தப்படுகின்றன.

நேர்க்கோட்டில் பிரசங்கம் கலந்த பிரச்சாரம் மட்டும் காணவில்லை.

Kochadaiyaan – கோச்சடையான் விமர்சனம்

தமிழராக இருப்பதற்காக இரண்டு பேரை மரியாதையுடன் பாராட்டத் தோன்றும். ஒருவர் சாங் முதற்கொண்டு எல்லாவற்றிலும் பரிபூரணமாய் இயக்கும் சாங்கர் எனப்படும் இயக்குநர் ஷங்கர். இவரோடு ரஜினிகாந்த் இரண்டு படம் செய்திருக்கிறார். இரண்டாவது விமர்சனத்தில் கறார்தன்மையும் அந்த மாதிரி விமர்சனம் தன்னிடம் வராமல் இருக்க செதுக்கும் ஸ்வச்ச எழுத்துக்காரர் ஜெயமோகன். இவருடன் மணிரத்னம் படம் செய்திருக்கிறார்.

அதன் பிறகு “கோச்சடையான்” போன்ற ஆக்கங்களும் தமிழ்ச்சூழலில் இயங்குகின்றன.

கதை மட்டும் வெகு சிரத்தையாக முழுமையாக உருவாக்கி இருக்கிறார்கள். அந்தக் கதைக்கு எந்த மாதிரி காட்சிகள் வைத்தால் அசைப்படம் (அனிமேஷன்) சிறப்பாக இருக்கும் என்பதையும் அறிந்தே இருக்கிறார்கள். ஆனால், அந்த நுட்பம் ஓரளவாவது பார்க்க சகிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறதா என்பதில் அசிரத்தையா? அலட்சியப் போக்கா? அறியாமையா? என விவாதிக்க வைக்கிறார்கள்.

“வேட்டையாடு விளையாடு” படம் பார்த்தவுடன் அமெரிக்கத் தொலைக்காட்சியில் வாராவாரம் ஒளிபரப்பாகும் சி.எஸ்.ஐ. போன்ற எந்த போலீஸ் சீரியலும் நம்பகத்தன்மையிலும் கதாம்சத்திலும் பரபரப்பிலும் “வே… வி.”ட்டை விட பன்மடங்கு சிறப்பாக இருக்குமே என தமிழ்ப்படங்களின் நிலையை எண்ணி வருத்தப்பட வைத்தது. அதே போல் சாதாரண டிவி அனிமேஷன் கூட உயிர்ப்போடும் உள்வாங்க வைக்கும் விவரங்களோடும் சூழலின் தீர்க்கமான துல்லியமான விவரணைகளுடனும் அமைந்திருக்கும். அந்த அளவு தர உந்துதல் கூட இல்லாத அசிரத்தை ஒவ்வொரு ஃப்ரேமிலும் கோச்சடையானில் மின்னுகிறது.

வெறும் ரஜினிகாந்த் பெயரை வைத்து கல்லா கட்டலாம் என மகள் நினைக்கிறார். அதற்கேற்ப அரங்குகளும் அகிலமெங்கும் நிறைகிறது. எவருக்கும் மோசமானப் படைப்பை பார்க்கிறோம் என தர்மசங்கடம் எழவில்லை. படம் உருவாக்கியவருக்கும் அல்ப பவிஷுடன் பழுதான பொருளை சந்தையில் தள்ளுகிறோம் என்னும் மனக்கிலேசமும் எழவில்லை. இப்படியான அரசியல், கலை, விளையாட்டு, சூழலில் இயங்க இந்தியாப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது.

எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஒன்றரைக்கண். அவர்களின் பின்புலத்தில் படு கேவலமான கிராபிக்ஸ். நடுவில் சலனப் பதிவு சல்லியடிப்பு. தீபிகா படுகோனேயை ஒரு கோணத்தில் பார்த்தால் ஐஷ்வர்யா ராயைப் போல் இருக்கிறார். சண்டைக் காட்சியிலும் சிரிக்கும் முகபாவனை. காதலனை சிறையில் போட்டாலும் அதே சிரிக்கும் முகபாவம். அசப்பில் ரானா (ரஜினி கதாபாத்திர)த்தின் தங்கையைப் போலவே இருக்கிறார். இருவருக்கும் ஆடை மட்டுமே வித்தியாசம்.

“அரவான்” ஆதியைப் பார்த்தால் ராம்ராஜ் வேட்டிகள் விளம்பரத்தில் வரும் நட்சத்திரங்கள் போல் முகமற்று சொரணையற்று பாவமற்று பூசி மெழுகின களிமண் சிற்பம் போல் இருக்கிறது. டிஸ்னி படங்களில் வரும் வர்ணஜாலம் வேண்டாம். டோரா போல் கொஞ்சமாவது மினுக்கியிருக்கலாம்.

இவ்வளவு சிரமப்பட்டு சலனப் பதிவு அசைவூட்டப் படம் எடுப்பதற்கு பதிலாக அசல் ரஜினியை வைத்து எடுத்திருந்தாலே படம் பாந்தமாயிருந்திருக்கும்.

Fiction: Zadie Smith: “MOONLIT LANDSCAPE WITH BRIDGE”

ஜேடி ஸ்மித்தின் முழுக் கதையும் நியு யார்க்கரில் வாசிக்கக் கிடைக்கிறது.

Van_der_Neer_-_Moonlit_Landscape_with_Bridgeஇது தேர்தல் காலம். தர்மபுரி இளவரசன் இறந்தால், தொல் திருமாவளவன் தலைவராகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் தீக்குளித்தால், இரவிக்குமாருக்கு தொகுதி கிடைக்கிறது. அந்த மாதிரி மந்திரி ஒருவரின் வாழ்க்கையை இந்தப் புனைவு சித்தரிக்கிறது.

சிறுகதையை நீங்கள் எப்படித் துவங்குகிறீர்கள்? முடிவுக்கு மிக அருகேவா? அல்லது கதையின் சாரத்தைக் குறியீடாக முன்வைத்தா? பிணத்தை அலங்கரித்து நடுக்கூடத்தில் வைப்பது போன்ற தோரணையுடன் கதை துவங்குகிறது. ஆப்பிரிக்காவிலோ அல்லது ஃபிலிப்பைன்ஸிலோ அல்லது அது போன்ற சுரண்டல் தேசத்தின் தலைவர், தன்னுடைய சொந்த நாட்டை விட்டு சொர்க்கபுரிக்கு ஓடுவதுதான் கதை.

கதையின் நடுவில் தலைப்பு வந்து சேர்கிறது. வான் டெர் நீர் (Aert van der Neer) வரைந்த ஓவியத்தை எடுத்துப் போகிறார் அமைச்சர். அவருக்கு அது சொந்த ஊரை நினைவூட்டுகிறது. அயல்நாட்டு ஓவியனை வைத்துதான் தன்னுடைய பிறந்த கிராமத்தை அறியுமளவு அவர் அன்னியப்பட்டுப் போயிருக்கிறார். நெதர்லாந்து எப்படி இவ்வளவு பெரிய சக்தியாக மாறியது? கடல் கொள்ளையர்களாக இருந்த ஆதி டட்ச்காரர்கள், ஊர் விட்டு ஊர் வந்தவுடன் முதலீட்டாளராக மாறுகிறார்கள். அதே போல் லஞ்ச அமைச்சரும் தன்னுடைய திருட்டுப் பணத்தைக் கொண்டு பிரெஞ்சு நாட்டில் செல்வந்தராகிறார்.

ஏழ்மையை விவரிக்கும்போது பச்சாதாபத்தை சிலர் உருவாக்குவார்கள். அதன் மூலம் பணத்தை நன்கொடையாக வழங்கும் எண்ணம் உருவாகும். சிலர் பசியையும் பட்டினியையும் காரண காரியத்தோடு விளக்குவார்கள். அதன் மூலம் அறிவும் தர்க்கமும் பெருகுவதாக நினைப்பு உருவாகும். இந்தக் கதையில் வறியவர்களின் நிலை, இயற்கையைப் போல் சூறாவளியாக, இயற்கையாக தரப்படுகிறது. இயற்கை நிகழ்வு நடந்தபிறகுதான் தெரிந்து கொள்ள முடிகிறது. கொஞ்சம் அசௌகரியமாக இருக்கிறது. கொஞ்சம் போல் ஆத்திரமும் கோபமும் எழுகிறது. பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றுகிறது.

கதையின் உவமைகளும் செழுமையானவை.

தன்னுடைய கொட்டில் கதவை மெல்ல முட்டும் பசு போல் அமைச்சருடைய கையை வேலைக்காரி பற்றினாள்.

அமைச்சர் கட்டப் போவதாக சொல்லி பாதியில் நிற்கும் அணைக்கட்டைப் பார்த்தால் கிரேக்க காலத்து நாடக மேடையின் காலி இருக்கை போல் தென்பட்டது.

கதையின் முடிவு எல்லாவற்றையும் விட அதிர்ச்சியானவை. நல்லவன் வாழ்வான்; அல்லது செய்தவன் அழிவான என்னும் நீதிக்கதை படித்து வந்தவனுக்கு, இந்த முடிவு ஏற்பில்லைதான். ஆனால், நிஜத்தில் அதுதானே நடக்கிறது?

கல்லுக்குள் ஈரம்: திரைப்பட விமர்சனம்

‘கல்லுக்குள் ஈரம்’ பார்த்த போது ஏழு வயசு. இந்தப் பக்கத்தில் அம்மாவும் அந்தப் பக்கத்தில் அண்ணாவும் அமர்ந்திருப்பார்கள். தேவி காம்ப்ளெக்ஸா, வெலிங்டனா, சித்ராவா என நினைவில் இல்லை. இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு 21ல் உட்கார்ந்திருக்கும் தூக்கக் கலக்கத்தில் இப்படி சேர்த்து வைக்காமல் சாகடிச்சுட்டாங்களே என்பது மட்டுமே தோன்றியது.

சினிமாகாரர்களை கொஞ்சம் சொல்வதால் மனம் இன்றும் ‘க.ஈ.’ படத்தை நினைவில் வைத்திருக்கவைக்கிறதோ? மற்ற பாரதிராஜா எடுத்த, தற்போதைய அமீர் / சசிகுமார் வகையறா எடுக்கும், மதுரைப் பக்கத்தில் உள்ள டவுன் பஸ் மட்டுமே நிற்கும் சந்து பொந்துகளை முதலில் காட்டியதால் நிழலாடுகிறதோ? மனோபாலா, ரங்கராஜன், மணிவண்ணன் போன்ற பிற்கால பிரபலங்களின் கன்னி தொடக்கம் இங்கே இருந்திருக்குமே?

தெரியவில்லை. எனவே, மீண்டும் பார்த்தேன்.

‘முதல் மரியாதை’யின் இளவட்டக் கல் இருக்கிறது. அந்தப் படத்தில் ஜெயிலில் இருந்து திரும்பும் சத்யராஜ் போலவே பாசமிகு மாமன் (சேனாதிபதி?) இருக்கிறார். கவுண்டமணிக்கு மிக விரிவான கதாபாத்திர உருவாக்கம். ’க.ஈ.’ வந்ததற்கு அடுத்த ஆண்டு வந்த பாலைவனச் சோலை கும்பலில் இருந்து இதில் உடல் ஊனமுற்றவராக சந்திரசேகரும், பள்ளி ஆசிரியராக ஜனகராஜும் இருக்கிறார்கள்.

மனதிற்கு நெருக்கமான கதை. திரைப்பட கதாநாயகனை கணவனாக அடைய விரும்பும் சினிமா மோக மனம் கொண்ட விஜயசாந்தியும் டீக்கா டிரெஸ் போட்டிருக்கும் ஆங்கிலம் பேசும் அடாவடி ஆதர்ச இயக்குநரை விரும்பும் அருணாவும் வசிக்கும் கிராமம். நாள் முழுக்க உழைத்து, அரை வயிற்றுக்கு சாப்பிட்டு, கோலமிக்க ஆறும், ஓய்வெடுக்க மலைமுகடுகளும், அடர்த்தியான காடுகளும் கொண்ட கனவு கிராமம். முனிக்கு படையல் போட்டதில் தெய்வ குற்றமும், அடுத்தவர் வாழ்க்கையை மெல்வதில் சுகமும் காணும் நெருக்கமான உறவு வேண்டாமலேயே உங்களைத் துரத்தும் கிராமம்.

படத்தில் உள்ள அத்துணை கதாபாத்திரங்களை ஆழமாக உலவவிடவில்லை. மாடன் வழிபாட்டை விரிவாகக் காட்டவில்லை. உள்ளூர் பெண்ணொடு ”டைரக்டர்” இப்படியெல்லாம் நடந்து கொள்வது சாத்தியமேயில்லை. இதற்கு முந்தைய ஆண்டு வந்த “புதிய வார்ப்புகள்” போல் அசல் தெருக்கூத்தைக் காணமுடியவில்லை, என்றெல்லாம் விமர்சிக்கலாம்.

ஆனால், இரண்டு மணி நேரத்தில் கட் அவுட் மாந்தர்களையும் தோட்டி குடும்பத்தையும் இன்று கூட யாரும் இவ்வளவு இயல்பாக கோர்க்கவில்லை என்பதால் சபாஷ் போட வைக்கிறது. அப்படி கோர்த்தால் என்ன ஆகும் என்பதை நிதர்சனமாக முடிப்பதால் முக்கியமாகவே நிற்கிறது. எல்லாவற்றையும் விட ஊரில் இருப்போர் வாழ்க்கையையும் வருகை தருவோர் இயல்பையும் உணர்த்துவதால் இன்றும் விருப்பத்துடன் ரசிக்க வைக்கிறது.

’தி இந்து’ நாளிதழ் தமிழில் – சிந்தனைக் களம் கட்டுரைகள்

தி இந்துவின் தமிழ்ப் பதிப்பு வெளியாக ஆரம்பித்திருக்கிறது. ”சிந்தனைக் களம்” பகுதியில் ’சிறப்புக் கட்டுரைகள்’ வெளியிடுகிறார்கள். தினமணி போன்ற பெத்த பெயரை வைத்துக் கொண்டு (தினகரனின்) தமிழ் முரசு போன்ற உள்ளடக்கம் கொண்டிருக்கிறது.

சிரியாவைக் குறித்து பாரா எழுதிய மேலோட்டமான கட்டுரை கிடைக்கிறது. ஜெயமோகன் பத்தி எழுத்தாளர் ஆனால் நடக்கப் போகும் அபாயமும் தெரிகிறது.

என்னைப் போன்ற சாதாரண விமர்சகர் கூட நாவலின் ஓரிரு பக்கங்களை மட்டும் ஆங்காங்கே படித்துவிட்டு தேர்ந்த அறிமுகத்தைக் கொடுத்துவிட முடியும். அந்த மாதிரி அவ்வப்போது சந்தித்த மனிதர்கள், ஆங்காங்கே பார்த்த தொலைக்காட்சி, இணையத்தில் மூழ்கடிக்கும் நிலைத்தகவல்கள் மட்டுமே கொண்டு மேக்ரோ பார்வை கொடுப்பதன் ஆபத்தை மீண்டும் மீண்டும் ஜெயமோகன் உணர்த்திக் கொண்டேயிருக்கிறார். ஊடகத்தை கவனிப்பதற்கென்றே பிரத்தியேகமாக இயங்கும் medianama.com , fourth-estate-critique, thehoot.org போன்ற பல்வேறு தளங்களின் உதவியைக் கோரி கொஞ்சமாவது ஆராய்ந்து எழுதியிருக்கலாம்.

அந்தக் காலத்தில் நேருவும் கென்னடியும் மட்டுமே செய்தியாளர்களுக்கு முக்கியமானவர்கள். இந்தக் காலத்தில் பக்கத்து மாநகராட்சி கவுன்சிலரும், பையன் ஆடும் கிரிக்கெட் அணியும், முக்குத்தெருவில் உதயமான பவானி அம்மனும் செய்தியை ஆக்கிரமிக்கிறார்கள். எங்கோ 2ஜி கொள்ளை அடிப்பதை நினைத்து அங்கலாய்ப்பதை விட உள்ளூர் ஊழல்களைத் தடுப்பதிலும், பக்கத்து வீடு காதல்களை அங்கீகரிப்பதிலும் செயலூக்கத்தோடு இயங்கவும் ஊடகங்கள் உதவுகின்றன.

செய்தித்தாள் என்பது மேற்கை பொறுத்தவரை இறந்த காலம். வாஷிங்டன் போஸ்ட் கிட்டத்தட்ட திவால் ஆகி அமேசான்.காம் எடுத்துக்கொண்டுவிட்டது. சிகாகோ ட்ரிப்யூன், நியு யார்க் டைம்ஸ் என்று இணையத்துக்கு முந்தைய முன்னுமொரு நூற்றாண்டில் கோலோச்சிய பதிப்புகள் எல்லாம் கணக்கு வைப்பு புத்தகங்களில் சிவப்பு மையை கக்கி கடைசி இரத்தங்களை சுரண்டிக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க இந்தியாவில் மட்டும், எப்படி புதுப் புது பத்திரிகைகள், தினசரிகள், நாவல்கள், வார இதழ்கள் முளைக்கின்றன?

காலை எழுந்தவுடன் ஐ-பேட் கொண்டு கக்கூஸ் போகுபவர்கள் குறைந்த அளவில் இருப்பதால்… வலை மேய்வதற்கான கட்டணம் இரவு நேரங்களில் மட்டும் சல்லிசாக இருப்பதால்… எல்லோருடைய செல்பேசியிலும் தமிழ் எளிதாகத் தெரியாததால்… கட்சிக்கொரு பேப்பர் நடத்துவதால்…

”நாவலாசிரியயர்கள் சொற்றொடர்களாக சிந்திப்பதில்லை; அத்தியாயங்களாக யோசிப்பவர்கள்” என்பார் வர்ஜீனியா வுல்ஃப். நல்ல புனைவாளர்களை முன்னூறு வார்த்தைகளுக்குள் வாரா வாரம் கிறுக்க வைக்கும் சுரேஷ் கண்ணன்கள் ஆக்கி விடாதீர்கள் என்று எண்ண வைத்திருக்கிறது தமிழில் வரும் ’தி இந்து’.

John Abraham’s Madras Cafe – Movie Review

அசல் தலைப்பு: மெட்ராஸ் கஃபே
வைத்திருக்க வேண்டிய தலைப்பு: ராஜீவ் காந்தியைக் கொன்றதை ஏன் இந்தியாவால் தடுக்க முடியவில்லை என்பதற்கான சப்பைக்கட்டு

சான் ஓஸே பக்கம் போனீர்கள் என்றால் மெட்ராஸ் கஃபே நிச்சயம் எட்டிப் பாருங்கள் என்பார்கள் பே ஏரியாவசிகள். இந்தியா – இலங்கை – ஈழ முக்கோண பிரச்சினை அறிவதற்கு மெட்ராஸ் கஃபே உதவும்.

ராஜீவ் காந்தி இறந்ததற்காக நாடே வருத்தப்படுகிறது. ஆனால், எண்ணற்ற தனி மனிதர்களின் சொந்த இழப்புகளை பிரச்சார தொனியின்றி போகிற போக்கில் இந்தப் படம் இயல்பாக முன்வைப்பது பிடித்திருந்தது. அன்னிய நாட்டின் அமைதிக்காக செல்லும் தூதுவர் ஈ.பி.ஆர்.எல்.எஃப்.புக்கும் புலிகளுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு சாவது; துப்பறிபவர்களின் குடும்பம் சீரழிவது போன்றவை போகிற போக்கில் வந்து போகின்றன.

படம் என்றால் வில்லன் இருக்கவேண்டும். இதுவோ கிட்டத்தட்ட ஆவணப்படம். விறுவிறுப்பாக சம்பவங்களைக் கோர்த்து, நடுநடுவே லட்சணமான மனைவியை ஊறுகாய் போல் தொட்டுக் கொண்ட சாகசப்படம். சுட்டுவிரல் நீட்டி தப்பு செய்தவர்கள் இவர்கள்தான் என்று குற்றஞ்சாட்டாமல், என்ன நடந்தது, எப்படி நடந்தது, எப்பொழுது நடந்தது என்பதை மட்டும் விவரிக்கிறார்கள்.

இலங்கையா… அவர்கள் 1983 படுகொலைகளை நிறைவேற்றினார்கள்.
விடுதலைப் புலிகளா… அவர்கள் நிறைய முதுகில் குத்தல்களும் கண்மூடித்தனமான கொள்கைகளும் கொண்டிருந்தார்கள்.
இந்திய ராணுவமா… மேலிடத்து உத்தரவை சிரமேற்கொண்டு பணிந்தார்கள்.
உளவுத்துறையா… எவர் யாருக்கு விசுவாசமாக இருந்தார்கள் என்பது அவர்களே அறியாமல் இயங்கினார்கள்.
இந்தியாவா… எந்த இந்தியர் என்பதைப் பொறுத்து விதவிதமாக மனிதருக்கே உரிய மாபாதகங்களுடன் நடந்துகொண்டார்கள்.
ராஜீவ் காந்தியா… யேசுவிற்குப் பிறகு உலகத்தில் உதித்த மகான். புத்தர் வழியில் அகிம்சையை போதித்து சென்னைக்கு வந்தவர். மகாத்மாவிற்குப் பிறந்த இந்தியாவில் உதயமான உத்தமர்!

படத்தின் குறைகள்? சென்னைத் தமிழுக்கும் ஈழத்தமிழுக்கும் வித்தியாசம் காட்டவில்லை என்று பொங்கலாம். மட்டக்களப்பு பிரதேசங்களையும் யாழ்ப்பாணத்தையும் குழப்புகிறார்கள் எனலாம். ஜான் ஆபிரகாம் படகில் போகும்போது சவரம் செய்த வழவழ முகத்துடன் பயணிக்கிறார் என விசனிக்கலாம். எனினும், அந்த நிருபர் ஜெயா கதாபத்திரத்தை அனிதா பிரதாப் போல் கோர்த்து வைக்காத துரோகத்தை மன்னிக்கவே முடியாது. அந்த ஒரு சங்கதிக்காகவே மேதகு தலைவரின் கட்டை வேகாது!

படத்தில் எல்லா மொழியும் பேசுகிறார்கள். நடுவே தமிழக திராவிட கட்சித் தலைவரை விளித்து, ‘தலைவா… பணம் வந்துடுச்சு! காரியத்த முடிச்சுடலாம்!’ போன்ற பேச்சுகள் பின்னணியில் ஓடுகின்றன. பொருளியல் வரலாற்று அறிவும், திரைமொழியின் நுணுக்கமான பார்வையும், பல்வேறு அரசியல்களை கிரகிக்கும் சக்தியும் கிடைக்கப் பெற்றவர்கள் மட்டுமே இந்தப் புலனாய்வுப் புனைவை புரிந்து கொண்டு பார்க்க இயலும்.

நல்ல வேளை… படம் எல்.டி.டி.ஈ. பிரபாகரன் இறந்த பிறகு வந்திருக்கிறது. இல்லையென்றால், கொஞ்ச நாளில் ஜான் ஆபிரஹாம் போட்டுத் தள்ளப்பட்டிருப்பார்.

State of Tamil Cinema Reviewers: Movies vs Books

கடந்த பதினைந்து வருடங்களாக பட அறிமுகங்களை எழுதுபவன் + இணையத்திலும் பத்திரிகைகளிலும் விமர்சனங்களை அவ்வப்போது வாசித்தும் வருபவன் என்ற முறையில் எனக்குப் பட்டது….

* பெரும்பலான சமயம் படம் வெளியானவுடன் டாரெண்ட் தரவிறக்கத்தில் படம் பார்ப்பதால், திரையரங்கின் மன ஒருமை கிடைப்பதில்லை. அதை விடக் கொடுமை, ஆங்கிலப் படத்திற்கு ப்ளூ ரே ப்ரிண்ட்டும் தமிழ்ப்படங்களுக்கு திருட்டு விசிடியும் பார்க்க வேண்டும் என்னும் மனப்பான்மை.

* விகடன் விமர்சனம் போல் மார்க் போட்டு வாடிக்கை. எல்லாப் படத்திற்கும் மதிப்பெண் மட்டுமே வழங்கத் தெரியும்.

* திக்குவாய், குருடி போன்ற குறைபாடுகளை நல்ல நடிப்பு என்றும் ரஜினி, விஜய் படங்களை மசாலா என்றும் வகைப்படுத்துவோம்.

* கேமிராவில் ஒளிப்படம் எடுப்பதாலும், நாலைந்து முறை குழந்தைகள் நிகழ்ச்சியை வீடியோ எடுத்ததாலும் சினிமா எடுக்கும் அனைத்து வித்தையும் தெரிந்ததாக நினைக்கிறோம்.

* தொலைக்காட்சி சீரியல் (என்னைப் போல் ஆசாமிகள் தூர்தர்ஷன் நாடகம்) பார்த்தே பழக்கம். திரைப்படங்களிலும் அதே வாசனை எதிர்பார்க்கிறோம்.

* புத்தகத்திற்கு அறிமுகம் எழுதுவதை விட சினிமாவிற்கு அறிமுகம் கொடுப்பது எளிதானது. உதாரணமாக இயக்குநர் பாலா போன்ற புகழ்பெற்ற எழுத்துலக ஜாம்பவானை விமர்சிக்க நிறைய திராணி வேண்டும். ஆனால், ‘பாலா’ போன்றவரை விமர்சிப்பதால் சாதாரண மனுஷனாக அடையாளம் காட்டிக் கொள்ளலாம். இன்னும் விரிவாகச் சொன்னால் ஆயிரம் பக்க புத்தகத்தை தாக்கி எழுதினால் இலக்கியவாதியாக ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. ‘கடல்’ படத்தையும் பரதேசியையும் விமர்சித்தால் humble ஆளாகி விடலாம்.

* மோசமான படத்தைப் பாராட்டியும், சுவாரசியமான படைப்பை மட்டம் தட்டியும் எழுதினால் மட்டுமே கவனம் கிடைக்கிறது.

* சென்ற கால சினிமாவில் இருந்து வித்தியாசமாய் நின்று தமிழ்த் திரைப்படங்களை எது முன்னகர்த்துகிறது என்று கவனித்து பகிர்வதை விட, அந்தத் திரைப்படங்களின் கதையை வைத்து மன்றாடுவது எளிது.

என்னுடைய ஆண்டிராய்ட் போனிற்கு புதிதாக ஏதாவது நிரலியை நிறுவிக் கொண்டே இருப்பேன். சில சமயம் அதைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவேன். சில சமயம் உடனடியாக நீக்கிவிடுவேன். அது எனக்கு எப்படி உபயோகமாகிறது, ஏற்கனவே இருக்கும் மற்ற அப்ளிகேஷன்களில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது என்பதைப் பொறுத்து என் முடிவு அமைகிறது. வைரஸ் போன்ற தாக்குதல் கொடுத்தால் மட்டுமே, கூகுள் கடை சென்று மட்டகரமான தரமதிப்பீடு தருகிறேன்.

சினிமாவிற்கும் அதே அளவீடு பயன்படுத்தலாம். நோய்க்கிருமி போல் கலையை கீழே இழுக்கிறதா? அல்லது தனிப்பட்ட முறையில் உபயோகமான விதத்தில் முன்னேற்றுகிறதா?

Paradesi – FIR: Quick Review

பரதேசி பாலாவின் படம். டிஸ்னி படம், ஜேம்ஸ் பாண்ட் படம், குவெண்டின் டாரெண்டினோ படம் என்று சொல்வது போல் பாலாவின் படம் பார்த்து கொஞ்ச நாளாச்சு.

ஆறு படம்தான் செய்திருப்பவருக்கு டிரேட்மார்க் இருக்குமா?

கடவுள் நம்பிக்கையை வைத்து ஏமாற்றுபவரை நையாண்டி செய்வது; ஒடுக்கப்படுபவர்களின் பரிதாப நிலையை கதைக்களானாக்குவது; புதிய முகங்களை கதாபாத்திரங்களாக்குவது; இளகிய மனம் படைத்தோரையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சமரசமில்லா காட்சியாக்குவது… இவை இயக்குநர் பாலா பட முத்திரைகள்.

வலிந்து திணிக்கப்பட்ட நகைச்சுவை; சிம்ரன் போன்ற அயிட்டம் பாடல்; இவை எல்லாம் முந்தையவற்றில் துருத்தி நிற்கும்; இங்கே காணோம். ‘பரதேசி’யின் ஒவ்வொரு பாடலையும் திரையில் காண்பித்த விதத்தில் பாலு மகேந்திராவின் கோர்வையும் மணி ரத்னத்தின் செதுக்கலும் ஒருங்கே கிடைக்கின்றன.

எஸ் ராமகிருஷ்ணன் வசனம் எழுதும் படங்களில் சாதாரண தமிழ்ப்பட எழுத்து மட்டுமே தென்படும். ஜெயமோகன் சம்பந்தப்பட்ட படங்களில் மொழி ஆக்கிரமித்து நிற்கும். இரா முருகன் படங்களில் டைட்டிலில் மட்டுமே காணப்படுகிறார். ’பரதேசி’ நாஞ்சில் நாடனோ, “யாருங்க வசனம்” என்று விசாரிக்க வைக்கிறார்.

சமீபத்திய எதிர்பார்ப்புகளான ‘கடல்’ பல கோணங்களில் சென்று அலைபாய்ந்து மூழ்கடித்தும், ‘விஸ்வரூபம்’ சர்ச்சைகளில் மட்டும் பிரமிக்க வைத்தும் ‘நீதானே என் பொன் வசந்தம்’ சாக்லேட் கல்லூரி காதலை மறுஒளிபரப்பியும் குண்டுசட்டி கோடம்பாக்கத்தினுள் ஆமை ஓட்டிய நேரத்தில், உருப்படியான தமிழ் சினிமாவிற்கான அடி பரதேசி.

கடல் திரைப்படம் – விமர்சனம், சுட்டிகள்

என்னைக் கவர்ந்த வசனங்களில் சில

* ‘கெட்டவங்களுக்குத்தான் கடவுள் துணை தேவை. நோயாளிதான் டாக்டர்கிட்ட போவாங்க… அது மாதிரி தப்பு செய்யறவங்கதான் தெய்வத்துகிட்ட வருவாங்க!.’

* சாத்தான் சொல்வதாக… ‘ஜீஸஸ் ஜெயிச்சுட்டார். என்னைக் கொல்வதன் மூலம் பாஸ்டர் சாமுவேல் போராளி ஆயிட்டார். சாத்தானை சாகடிப்பதன் மூலம் நேர்மையும் அமைதியும் வென்று விட்டதா?’

எல்லாம் நினைவில் இருந்து தோராயமாக எழுதியது. என்னுடைய புரிதலுக்கு ஏற்ப மாற்றி விட்டேன்.

அடுத்ததாக சமகால தமிழ்ப்படங்களை பார்க்கலாம். ஒரு வகை நவீன மொழியில் திரைக்கதையை நம்பி வருபவை. பீட்சா, நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம், நான் ஈ வகையறா.

இன்னொன்று எண்பதுகளின் தேய்வழக்கோடு வருபவை. தாண்டவம், ’கண்ணா லட்டு திங்க ஆசையா’, மாற்றான் போன்றவை.

இந்தச் சூழலில் கடல் போன்ற படங்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. எண்பதுகளின் காலகட்ட திரைப்படம், பீரியட் படம் என்றெல்லாம் சகஜமாக ஹாலிவுட்டில் வரும். அந்த மாதிரி ஒன்றாக கடல் படத்தைப் பார்க்கிறேன்.

சாதாரண கதை. வில்லன் மகளை ராபின்ஹுட் வளர்க்கும் அனாதை ஹீரோ காதலிக்கிறான். ரஜினி அல்லது கமல் நடித்து வெளியான பல படங்களில் சொல்லப்பட்ட விஷயம்.

அதை எப்படி புதுசாக சொல்வது?

ஆனால் முப்பதாண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையை சொல்வதா அல்லது கிறித்துவ இறையியலை மையப்படுத்துவதா என்று அங்குமிங்கும் அலைபாய்கிறது.

எதிர்பார்ப்புகளை பொய்ப்பதில் அர்விந்த்சாமி முன்னணியில் இருக்கிறார். டச் விட்டுப் போனதோ, அல்லது அடக்கி வாசித்தாரோ… தமிழருக்கு ஓவர் ஆக்டிங் பிடிக்கும்; அவர் தேமே என்று ஏம்போக்கி மாதிரி வந்து போகிறார்.

எவராலும் தவறு மட்டுமே செய்து வாழ முடியாது. உற்றார் உறவினருக்கோ அல்லது கூட்டாளிக்கோ… எங்காவது யாருக்காவது நன்மை செய்து விடுவார்கள். ஆனால், குற்றம் மட்டுமே வாழ்க்கையாக பெர்க்மான்ஸ் கொண்டிருக்கிறார்.

ஆனால், ஒரே ஒரு நன்மை செய்கிறார். மிக இறுதியில். தேவனின் பாதைக்கு வந்து விடுகிறார். ஒரு நல்ல காரியம் மட்டுமே போதும்… அதன் சுவை அப்படியே மெதுவாக நம்மை திருத்தி விடும் என்பதாக யேசுவின் வழியை குறிக்கிறார்கள். இதை பொருளாதாரத்தில் multiplier effect என்பார்கள்.

ஏ ஆர் ரெகுமானின் இசையைக் குறித்து விமர்சனம் செய்யும் முன் மூன்று விஷயம் செய்தாக வேண்டும்.

1. படத்தை இரு முறையாவது பார்த்திருக்க வேண்டும்
2. மூன்றாவது முறை படத்திற்கு நீங்கள் செல்லும்போது, தயவு செய்து கண்னை இறுகக் கட்டிக் கொண்டு முழுப்படமும் பார்க்க வேண்டும்.
3. இந்த மாதிரி குறைந்த பட்சம் ஏழெட்டு திரைப்படங்களையாவது பார்த்திருக்க வேண்டும்.

இப்படி எல்லாம் அனுபவிப்பதற்கு முன்பே, இங்கே வயலின் வந்திருக்கலாம்; அங்கே குழைந்திருக்கலாம் என்று அனுமாணிக்க இயலாது.

இரண்டாவதாக அருமையான நாவலை காட்சிப்படுத்தல். வசந்த பாலன் ஒரே ஒரு விஷயத்தைத்தான் ‘காவல் கோட்டம்’ போன்ற மிகப் பெரிய புத்தகத்தில் இருந்து எடுக்கிறார். மிக மிக ஜனரஞ்சகமாக ‘லிங்கன்’ எடுக்கும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எப்பொழுதுமே ஒரே ஒரு குறிக்கோளை நோக்கித்தான் பயணிக்கிறார்.

சட்டதிருத்தத்தை கொண்டு வர லிங்கன் என்ன செய்கிறார் என்பதுதான் முக்கிய புள்ளி. அது செய்தார் என்பதை படம் பார்க்கும் அனைவருமே அறிந்திருந்தாலும், இருக்கை நுனிக்கு வரவைக்கிறார். கறுப்பர்களுக்கு நேர்ந்த அநீதிளை கொடூரமாக சித்தரிக்கவில்லை. தேர்தலில் எப்படி வென்றார் என்பதை விளக்கவில்லை. போரை எப்படி நடத்தினார் என்று காட்சியாக்கவில்லை. இந்த உபகதை அனைத்துமே தொட்டுக் கொள்ள கொஞ்சமாய் வைத்துக் கொண்டார்.

நாவலை ஒரே தினத்தில் வாசித்து முடிப்பதில்லை. திரைப்படத்தை இரண்டரை மணி நேரத்தில் முடித்து விடுகிறேன். அனேக திரைப்படங்களை ஒரு தடவைதான் பார்க்கிறேன். நாவல்களை இரண்டு முறையாவது படிப்பது சகஜம்.

அதனால், ‘கடல்’ திரைப்படத்தில் இந்த மாதிரி ஃபோகஸ் இல்லாதது என்னை அலைக்கழித்தது.

ஆய்வுகள், சுட்டிகள் & விமர்சனங்கள்:

1. மனவெளிப் பயணம்: கடல்:

அர்ஜுன், யாருடனோ தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருக்கும் வசனமிது. ”பாவம் செய்றது, மனுசன் இயல்பா நடக்குற மாதிரி.. ஈசியா பழக்கிடலாம்.. நன்மை செய்றதுதான் வானத்துலே பறக்க செய்ற மாதிரி.. ரொம்ப கஷ்டம்”. இந்த வசனம்தான் படத்தின் மூலம்.

களங்கமற்ற தன்மை, அறிவாளிகளை விட அசடுகளுக்கே கைக்கூடும். எனவே அவர்களின் களங்கமற்ற தன்மையால், எளிதாக இயேசுவை நெருங்குவார்கள். சாம் பாத்திரத்தால், ஒருபோதும் தீமையை செய்ய முடியாது என்று படம் முழுவதும் நாம் உணர்கிறோம். இறுதியில், அவனுடைய களங்கமற்ற தன்மை, சாத்தானால் பரிசோதிக்கப்பட்டு உடைக்கபடுகிறது. பரிதாபமாக தோல்வியை தழுவுகிறான் சாம். புனிதனான சாம் தனது நற்குணத்தை இழந்து, பெர்க்மான்ஸை தண்ணீரில் முழ்க விட எத்தனிக்கையில், சாத்தான் வெற்றி களிப்பில் எக்காளமிடுகிறான். தேவதை போன்ற பியாட்ரிஸினால் மன்னிக்கப்பட்டு தேவனான தாமஸ், பெர்க்மான்ஸை மன்னித்து மீட்கிறான். இப்போது, மன்னிக்கப்பட்டு உயிர்தெழும் பெர்க்மான்ஸால், இயேசுவை மிக எளிதாக நெருங்க முடியும்தானே.

2. கலங்கிய குட்டை: மணிரத்னத்தின் ‘கடல்’ | எம்.டி.முத்துக்குமாரசாமி:

சிறுவன் ‘அம்மா அம்மா’ என்று அலறுவது மணிரத்னத்தின் அஞ்சலி படத்தில் ‘எந்திரி அஞ்சலி எந்திரி அஞ்சலி’ என்று ஒரு அலறல் வருமே அது போல நீடிக்குமோ என்ற என் பீதியை ‘மகுடி மகுடி’ உற்சாகப்பாடல் நீக்கி என்னை அமைதிப்படுத்திவிட்டது.

பிணத்தின் காலை மண்வெட்டியால் உடைத்து சவப்பெட்டிக்குள் அலட்சியமாக இருத்தினானே அவனிடம் சாத்தானின் சாயல் இருக்கிறது

‘அடியே எங்கே கூட்டிப் போறெ’ என்று சித் ஶ்ரீராம் உருகி உருகி பாடும் காட்சியில் துளசி டிசைனர் சேலை கட்டிக்கொண்டு பாசி மணியெல்லாம் அணிந்து இடுப்பை நோக்கி முக்கோணமாய் வளைந்த இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு பூதகி போல நிற்கிறார். பூதகி நடனத்தில் எங்கே நீ கூட்டிபோறே அடியே என்று கேட்டு கதாநாயகன் பாடும்போது அவன் மேல் நமக்கு கழிவிரக்கம் பிறக்கிறது.

3. The Hindu : Life & Style / Metroplus : Sea of imagination:

According to him, Kadal narrates the “story of a wounded boy who is transformed or elevated to a higher spiritual plane by a girl called Beatrice who comes into his life. It is a film on two youngsters from the fishing community, but not in the genre of Malayalam films such as Chemeen and Amaram, which was on the fishing community. The sea in Kadalis merely a backdrop to the story of a man’s transformation.”

Pointing out that Beatrice was the name of the angel who takes Dante to heaven in the epic work Divine Comedy, he says that the movie’s theme is about how it takes just one step or action to turn man into God but it takes several steps to turn a man into the devil.

4. “Kadal”… Coast analysis « Baradwaj Rangan:

When done, they lower the body, now inside an open coffin, and find a leg sticking out – that old joke about the whore who couldn’t keep her legs crossed comes to mind – and one of them sets about breaking the limb, in order to make it fit inside.

5. கடல் – அலைகளைக்கடந்து ஆழம் ~ வேழவனம்:

தான் தான் மிகுந்த அறிவாளி, சைத்தானின் பிரதி என நினைக்கும் அவரை, தான் எதிரியாக நினைக்கும் அனைவரையும் அவர்கள் யோசிக்க இடம் கொடுக்காமல் தனது திறமையால் தோற்கடித்துக்கொண்டே வரும் அவரை, தன் அறிவால் யோசிக்க கூட முடியாத ஒரு சிறு பெண், எளிய அன்பினால் வெற்றி கொள்வதே இந்தக் கடல்.

துணை நடிகர்களின் பங்களிப்பு அபாரம். ஃபாதருக்கு உதவியாக வருபவர்(யேசுவையே நேருல பார்த்தவரு), மீன் விற்கும் பெண் என பலர்.

6. Karundhel:

தாந்தேவைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். புகழ்பெற்ற இடாலியன் கவிஞர். இவரது ‘Divine Comedy’ என்ற கவிதையைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கலாம். நரகம், சொர்க்கம் மற்றும் இதனிடையே இருக்கும் purgatory என்ற மூன்று உலகங்களுக்குள் தாந்தேவின் பயணத்தைப் பற்றிச் சொல்லும் ஒரு நீண்ட கவிதை இது. இந்தப் படத்துக்காக அந்தக் கவிதையைப் படித்துப் பார்த்தேன். மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்தக் கவிதையில், சொர்க்கத்தில் தாந்தேயின் பயணத்தை வழிநடத்திச் செல்லும் பெண்ணின் பெயர் – Beatrice. சொர்க்கத்தில் பல்வேறு புனிதர்களையும் சந்தித்துப் பேசுகிறார் தாந்தே. பியாட்ரிஸ் என்ற இந்தக் கதாபாத்திரம், தாந்தேவின் நிஜவாழ்வில் அவருக்கு மிகவும் பிடித்தமான பெண்ணின் பெயர். இந்தப் பெண்ணை தாந்தே இரண்டே தடவைகள் மட்டுமே சந்தித்திருக்கிறார். இருந்தும் பியாட்ரிஸின் மீதான அவரது காதலை அவரது படைப்புகளில் வெளியிடும் அளவு அவருக்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்துப் போயிருந்தது. அவரது டிவன் காமெடியில் பியாட்ரிஸ், அன்பின் மொத்த உருவமாக சித்தரிக்கப்படுகிறாள். அதேபோல், கடவுளிடம் நேரடியாகப் பேசக்கூடிய ஒரு உயரிய நிலைக்கு (beatific vision) தாந்தேவை உயர்த்தவும் செய்கிறாள் பியாட்ரிஸ்.

7. கடல் « Charu’s blog:

கடலின் முதல் பத்து நிமிடங்கள் ஜெயமோகனின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியைப் போல் இருந்ததும் “தொலைந்தோம்” என்று பயந்து விட்டேன். பாதிரியார் உடையில் எல்லோரும் அப்படித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். பாரதி மணியைப் பார்த்ததும் நம் நாஞ்சில் நாடனும் பாதிரியார் உடையில் வந்து பேசுவாரோ என்று நடுங்கி விட்டேன். அப்புறம் பார்த்தால் படம் வேறு எங்கோ போய் விட்டது. படத்தின் ஹீரோக்கள் என்று பலரைச் சொல்லலாம் போல் இருக்கிறது. முதல் ஹீரோ ஏ.ஆர். ரஹ்மான். இப்படி ஒரு பின்னணி இசையையும் பாடல்களையும் தமிழ் சினிமாவில் பார்த்து பல காலம் ஆகி விட்டது. பல இடங்களில் கண்களைக் கலங்கச் செய்து விட்டது இசை. ஒரு ஐரோப்பியப் படத்தைப் பார்ப்பது போல் இருந்தது இசை.

படத்தின் ஒரே குறை, அந்த ஹீரோயின். அவருடைய அபரிமிதமான எடை. அவர் கௌதமின் சைக்கிளில் முன் சீட்டில் உட்காரும் போது பார்வையாளர்கள் கேலிச் சிரிப்பு சிரிக்கிறார்கள். தமிழில் வேறு நடிகையா கிடைக்கவில்லை?

8. அந்த டேப் ரிகார்ட் சீன் போன்ற நிகழ்வுள்ள ஒரு கட்டுரை :: என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன? (16-1-07 அன்று பாளையங்கோடை தூய சவேரியார் கல்லூரி தமிழ்துறை சார்பில் ஆற்றிய நினைவுச்சொற்பொழிவு)

” ஏன் அவன் அழுகிறான்? குற்ற உணர்வாலா? இல்லை. அதைவிட நுட்பமான ஓர் உணர்வு. சிந்தனைகளின் உச்சியை அடையவும் ,பெரும் வல்லமையுடன் இயற்கையை வெல்லவும் பொருட்டு படைக்கப்பட்ட ஒரு மானுட ஆத்மாவான அவன் வெறுமொரு தெருவாழ் மிருகமாக வாழ நேரிட்டமை குறித்தே அவன் அழுதான். சற்றுமுன் கோபமாக வெளிப்பட்டதும் அந்த அழுகைதான்”

நித்யா தொடர்ந்தார்.” இந்த அழுகை மானுடனைப்பற்றி நான் என்றென்றும் கொண்டிருந்த அழுத்தமான நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை உறுதிசெய்கிறது. மனிதன் இயற்கையின் சாராம்சமான ஒரு வல்லமையை தன்னுள் கொண்டிருக்கிறான். இயற்கையின் உள்ளுறையாக ஒரு பெரும் கருணை, ஒரு மாபெரும் நன்மை உறைகிறது என நான் எப்போதுமே உணர்ந்துவருகிறேன். அதுவே நாம் காணும் இவையனைத்தையும் ஆக்கி நம் முன் விரித்துள்ளது. அந்த சாரம் மானுடனின் உள்ளும் உறைகிறது.”

9. பிச்சைக்காரன்: கடல் – மீட்பு அளிக்கும் தேவதை:

ஹிரோ ஒரு ரவுடியை போட்டு அடிப்பதில் இருந்து தமிழ் சினிமா காதல் ஆரம்பிக்கும். இதை இந்த படம் உடைத்து இருக்கிறது. யோசித்து பாருங்கள் . நம்முடைய சிறந்த நட்போ,. காதலோ காரணம் ஏதுமின்றி இயல்பாகத்தான் அமைந்து இருக்கும் . இயல்பான நெருக்கம் அருமையாக சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் கொஞ்சம் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படி இல்லாததைத்தான் படத்தின் பெரிய மைன்சாக சொல்ல முடியும்.

10. Dyno Buoy – Google+ – கடல் – http://www.imdb.com/title/tt2344672/ குருடர்கள்…:

இன்னொருத்தர் நஸரீன் (அதையும் ஒரு எலக்ஸ் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட “நஸ் ரீன்”றார் லூயின்றார். அது லுயிஸ்தான், ஃபிரெஞ்சு போல லூயி பண்ணவேண்டியதில்லை மிஸ்டர் எம்கே டீ காபிஜி). படத்தை பார்த்துட்டு வந்து அவசரசரமா விக்கிபீடியா ஐஎம்டிபி துலாவி அப்படிக்கா இப்படிக்கான்னு அடிச்சி விடவேண்டியது.

எனக்கு தெரிஞ்சது / புரிஞ்சது – ஒவ்வொரு நல்லவனுக்குள்ளயும் ஒரு கெட்டவன், ஒவ்வொரு கெட்டவனுக்குள்ளும் ஒரு நல்லவன். ஏதோ ஒன்னு இன்னொன்னை கொல்லும் அந்த ஒரு நொடிப்பொழுது அவரவர் வாழக்கையை நிர்ணயிக்குது.

ஹேமாமாலினி பொண்ணு போல் இருந்த அந்த பெண்மணி மோகன் பாபுவின் மகளாம். அவரும் கச்சிதமாய் மனதில் நிற்கும் கேரக்டர்.

எல்லாத்துக்கும் மேல் காமெடியன் ஒருவரை கூடவே சுத்தவிட்டு காட்சியில் வருவதை பார்வையாளனுக்கு விளக்காமல் பார்வையாளன் மேல் நம்பிக்கை வைத்ததிற்கு நன்றி மணி ரத்னம் (அந்த காமெடியன் இல்லாத்தால்தான் பலருக்கு படம் புரியவில்லையஓ என்றும் எண்ணம் வருகிறது).

லெ மிஸ்ஸரப் (Les Meserables) பார்த்திருந்தால், கடல் படத்தின் ஓட்டத்தில் சிலலிடங்களில் ஒத்து போவதை பார்க்கலாம்.

11. bogan R – Google+ – கடல் விமர்சனம் ஜான் ச்டீன்பேக்கின் East of Eden என்றொரு…:

நேரடியாக அறம் போதிப்பதை /விவாதிப்பதை பொதுவாகவே இளைஞர்கள் விரும்புவதில்லை .எதிர் அறம் தான் இன்று மிகப் பெரிய ஆளுமையை அவர்களிடம் செலுத்துகிறது.ஆரண்ய காண்டம் போன்ற படங்கள் பெற்ற பெரிய வரவேற்பைக் கவனத்தில் கொள்ளவும்

12. கடல் – சினிமா விமர்சனம் ~ உண்மைத்தமிழன்:

துளசியின் அறிமுகக் காட்சியிலேயே அவளது லேசான மனநிலை பிறழ்ந்த நிலை அறிமுகப்பட்டிருந்தாலும் பின்னாளில் கலைராணி சொல்லும்போதுதான் நமக்கு உணர முடிகிறது.. படம் பார்த்து 2 நாட்கள் கழித்துதான் இந்தக் காட்சியை மணி ஏன் வைத்திருக்கிறார் என்பதே புரிகிறது..!

13. Narendiran M – Google+ – கடல் வெயிலும் உதிர் மணலும் தினம் மீட்டெடுக்கும் கருவாட்டு…:

“எனக்கு வீட்ல சோறு இல்லை, அதான் விடுதியில சேர்ந்தேன்” – “எனக்கு வீட்ல தியானம் இல்லை. அதை தேடி தான் இங்க சேர்ந்தேன்”என வசனங்களிலேயே கதையின் தளங்களை நிறுவிக்கொண்டே செல்கிறார் ஜெ.எம். உன்னிப்பாக கவனித்தால் குறைந்தபட்சம் அறுபது நாகை வட்டார வசவு சொற்களை கற்கலாம். நாவல் வடிவிற்க்காக காத்திருப்போம்.

14. பிச்சைப்பாத்திரம்: கடல் – மணிரத்னத்தின் Intellectual menopause ..:

தீவிரவாதம்+காதல், நிஜ ஆளுமைகளின் நிழலுருவாக்கம் என்கிற வார்ப்புருக்களின் வரிசையில் மணிரத்னத்திற்கு பிடித்தமானது இதிகாச ரீமிக்ஸ். அவ்வகையில் விவிலியத்தின் சில கூறுகளை எடுத்துக் கொண்டு கிருத்துவப் பின்னணயில் உருவாக்க்கப்பட்டிருக்கும் ‘கடல்

அர்விந்த் தேவனின் மகிமையை தொண்டை நரம்பு புடைக்க உச்சஸ்தாயியி்ல் கத்திச் செல்வதோடு படம் நிறைவு பெறுகிறது.

15. ஆழமும் அலைகளும் அற்ற கடல் | தமிழ் பேப்பர்:

பொருளாதார பலத்தைப் பெற ஆரம்பித்ததும் மேற்கத்திய கிறிஸ்தவ நிறுவனங்கள் எப்படியாகத் தங்கள் மத மதிப்பீடுகளை வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல் ஏற்றுவார்கள் என்பதற்கு சமீபத்தில் வெளியாகும் படங்களே சான்று. கென்னி விக்ரம் – ஜீவா அன்கோவின் டேவிட் என்ற படமும் இதே நாளில்தான் வெளியாகியுள்ளது. விண்ணைத் தாண்டி வருவாயா, பயணம், நான் ஈ, நீர்ப்பறவை, தாண்டவம் என கிறிஸ்தவச் சார்பு படங்கள் சாரைசாரையாக வர ஆரம்பித்திருக்கின்றன. ஏற்கெனவே, பாரதிராஜாவில் ஆரம்பித்து கமலஹாசன் வரை கிறிஸ்தவ மென் சாய்வுடன் பழைய ஏற்பாட்டில் இயங்கிவந்திருக்கிறார்கள்.

இன்னும் பலர்: கடல் – Google Groups