Tag Archives: நூல்

நூலகம் – 2015 புத்தகங்கள்

தந்தையர் தினத்திற்காக பரிசு என்ன தரலாம் என்று மகள் கேட்டாள். புத்தகக் கடையில் கொஞ்ச நேரம் என்னை தனியே விட்டு வைக்குமாறு சொன்னேன். சனிக்கிழமை மாலை அன்று அத்தனை பேரை பார்ன்ஸ் அண்ட் நோபிள் கடையில் பார்த்ததில் மழையைக் கண்ட கலிஃபோர்னியா போல் மகிழ்ச்சி ஏற்பட்டது. இலக்கின்றி மேய ஆரம்பித்தேன்.

முதலில் புத்தம் புதிய அதிவிற்பனை நூல்களைப் பார்த்தேன்.

”Make Something Up: Stories You Can’t Unread By Chuck Palahniuk”Make-Something-Up அட்டைப்படம் கவர்ந்தது. ‘ஃபைட் கிளப்’ (Fight Club) எழுதியவரின் கதைத் தொகுப்பு. புகழ்பெற்ற பள்ளியில் படிக்கும் பிரகாசமான பதின்ம வயது மாணவர்கள் புத்தம்புது போதை மருந்தின் தாக்கத்தில் வீழ்ந்து கிடப்பதை ‘Zombies’ சொல்கிறது என்கிறார்கள். தந்தையின் அந்திமக் காலத்தின் கடைசி நிமிடங்களில் சொல்லக்கூடாத நகைச்சுவையை ஜோக்கடிக்க விரும்புவதை ‘Knock, Knock’ல் எழுதுகிறார். தன்னிடம் தசைப்பிடிப்பை நீக்க வரும் சாகக்கிடப்பவர்களுக்கு ‘விடுதலை’ அளிக்கும் ‘Tunnel of Love’ என பலதரப் பட்ட கதை இருப்பதாக உள் அட்டை சொல்லியது.

ronda-rousey-when_things_Get_Bad_Back_Cover_Motivation_Inspiration

அடுத்தது “My Fight / Your Fight by Ronda Rousey”. கருப்பு வெள்ளைப் படம் கவர்ந்தது. பெண்களுக்கான சுய முன்னேற்ற நூல். எனக்கு எப்போதுமே ரஜினிகாந்த் பிடித்தேயிருக்கும் என்பது போல், இது மாதிரி உற்சாகப்படுத்தி, ஊக்கமூட்டும் வார்த்தைகளைச் சொல்லும் வாழ்கை அனுபவப் புத்தகங்களும் பிடித்தே இருக்கிறது. இரண்டு மூன்று அத்தியாயங்கள் வாசித்தேன். ‘ஏதாவது சாதிக்கணும்ப்பா…’ என்னும் எண்ணம் கரைபுரண்டோட வைக்கிறது. சகட்டு மேனிக்கு ஃபக் உபயோகிக்கிறார். அதை விட சரளமாகத் தோல்விகளைத் தாங்கிக் கொண்டு வெற்றிப் படிக்கட்டுகளை ஏறி இருக்கிறார்.

கதைப் புத்தகம் ஆச்சு; டானிக் பூஸ்ட் ஆச்சு; கடைசியாக கொஞ்சம் இலக்கிய அரட்டை + வம்பு.

Harold Bloom delivers the chosen ones unto the multitudes. (From left: Willa Cather, Edith Wharton, Edgar Allan Poe, Philip Roth, Ernest Hemingway, and James Baldwin.)

Harold Bloom delivers the chosen ones unto the multitudes. (From left: Willa Cather, Edith Wharton, Edgar Allan Poe, Philip Roth, Ernest Hemingway, and James Baldwin.)

Harold Bloom எழுதிய “The Daemon Knows: Literary Greatness and the American Sublime”. ப்ளூம் – இந்தப் பெயர் எப்படி எனக்கு அறிமுகம் ஆனது?

வழக்கம் போல் செய்திகளில் அடிபட்டுதான் அறிந்துகொண்டேன். 2004ஆம் வருடம். நவோமி வொல்ஃப் (Naomi Wolf) உடைய உள்தொடயில் கைவைத்து பல்லிளித்து அத்துமூறிய இன்னொரு பேராசிரியர் என்ற வகையில்தான் தெரிய வந்தார். பெண்களைக் கருதுவது போல்தான் இலக்கிய மதிப்பீடுகளையும் முன்வைக்கிறாரோ என்னும் சர்ச்சை தொடர்ந்தது. 1994ல் இனம், நிறம், பால் அடிப்படையில் புத்தகங்களை வகைப்படுத்தி, பல தரப்பட்ட நூல்களை வாசிக்க வேண்டும் என்னும் கருத்தை ‘அழுகுணிக்காரர்களின் போதனாசாலை’ என்று இவர் கருதினார். அது இப்போது மாறி இருக்கிறதா என்பதை இந்த நூலை வாசித்தால் தெரியும்.

நூல்கள் ஆச்சு. அடுத்தது சஞ்சிகைகள்.

ஆங்கிலத்தில் வெளியாகும் பத்திரிகைகளைப் பார்த்தால், தமிழ் எழுத்துக்களைப் போல் எக்கச்சக்கம். தமிழில் வெறும் 26 எழுத்துக்கள் மட்டும் இருந்துவிட்டு, இத்துணை நூல்களும் காத்திரமான மாதாந்தரிகளும் வெளியாகிக் கொண்டிருந்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்!

பார்டர்ஸ் சென்றால் மட்டுமே வழக்கமாகப் புரட்டும், மெண்டல் ஃப்ளாஸ், நி.வொய்.ஆர்.பி., எல்லாம் இப்போது நூலகத்திலேயேக் கிடைப்பதால், அதை அப்படியே விட்டு வைத்தேன்.

லஃபாம்ஸ் குவார்ட்டர்லி மனிதநேயம், அருளுடைமை (philanthropy) குறித்து, சிறப்பிதழ் வெளியிட்டு இருக்கிறார்கள்.

Lapahams_Quartterly_Philanthropy

காரல் மார்க்ஸ், பில் கேட்ஸ், கர்ட் வானகட் என்று பல முக்கியமான எழுத்தாளர்கள். ஏதன்ஸ், எகிப்து, பாரிஸ் என்று முக்கியமான நகரங்கள். தற்கால கருத்துருவாக்கிகள் – என பலதரப்பட்ட விஷயங்களைக் கோர்வையாக ஒரே நூலில் அடக்கி இருக்கிறார்கள்.

ப்ரமத்தீயஸ் (Prometheus) பற்றிய குறிப்பு கூட கவர்ந்தது. இந்த உலகின் முதல் பரோபகாரி. கிரேக்கத் தொன்மத்தில் மிகவும் புகழ்பெற்றவர். தேவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த தொழில்நுட்பமான ‘நெருப்பு செய்யும் கலை’யை உலகெங்கும் எடுத்துக் கொடுத்தவர். சாதாரண மனிதர்களுக்கும் தீ வளர்க்கும் வித்தையைக் கற்றுக் கொடுத்தக் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டார். பாறையில் கட்டப்பட்டு வைத்திருக்கப்பட்டார். ஒவ்வொரு நாளும் கொஞ்ச கொஞ்சமாக அவருடைய ஈரற்குலையை, கழுகுகள் உண்டு வரும். இந்தக் கதை கூட நமது ஊர் வேதங்களின் ’ப்ரா மத்’ (திருடுவது) என்னும் சொல்லில் இருந்து வந்திருக்கிறது. பிரா மத் செய்தவன் பிரமாத்தியஸ், என்னும் நாடகமும் இந்தக் கருப்பொருள் சார்ந்த வெளியீட்டில் இடம் பெற்று இருக்கிறது.

Monkey_business_Mag_Stanford_Creative

ஜப்பானில் வெளியாகும் ’குரங்குத் தொழில்’ (Monkey Business International) முழுக்க முழுக்க ஜப்பானிய மொழி எழுத்தாளர்களை மொழிபெயர்க்கிறது. தற்கால சப்பானிய இலக்கியத்தை அமெரிக்காவிற்கும் மேற்குலகிறகும் அறிமுகம் செய்கிறது. ஜப்பானிய எழுத்தாளர்களை அமெரிக்காவிற்கு அழைக்கிறது. வாசகர் சந்திப்புகளை ஏற்பாடு செய்கிறது. புனைவிலக்கிய கர்த்தாக்களையும், அவர்களின் மொழிபெயர்ப்பாளர்களையும், இவற்றை ஒருங்கிணைக்கும் வர்த்தகர்களையும், எல்லாவற்றையும் வெட்டி, ஒட்டி, கருத்துச் சொல்லும் எடிட்டர்களையும் ஒருங்கிணைக்கிறது. ஐந்து இதழ்கள் வெளியாகி இருக்கின்றன.

Makeshift_Magazines_Covers_Law_Order

”நீங்க எப்படி வாழ வேண்டுமென்று போதிக்காமல், நான் ஆலோசனைகளை சொல்லித் தருவதை விட, உங்க வாழ்க்கை எப்படி நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற தீர்வுகளைத் தருவது முக்கியமானது” என்னும் கொள்கைப்படி மேக்‌ஷிஃப்ட் (Makeshift) நடக்கிறது. நைஜீரியாவின் குக்கிராமங்களில் வீட்டிலேயே தயாராகும் விமானங்களைச் சொல்கிறார்கள். மெக்சிகோவின் போதைக் கடத்தல்காரர்களோடு உலாவி, அதையும் பதிகிறார்கள். சீனாவின் கொந்தர்கள், எவ்வாறு சீனப் பெருஞ்சுவரை உடைத்து கணினி சுதந்திரத்தை நாடுகிறார்கள் என்பதையும் செய்திக் கட்டுரை ஆக்குகிறார்கள். பன்னிரெண்டு இதழ்கள் வெளியாகி இருக்கிறது.

Esopus_22

இலக்கியம் படித்து களைத்துப் போனது மூளை. கொஞ்சம் கலை வெளியீடுகள் பக்கம் ஒதுங்கினேன்.

கலையும் மருத்துவமும் ஒருங்கிணையும் புள்ளியை ஈஸோப்பஸ் (Esopus) சிறப்பிதழாகக் கொணர்ந்து இருக்கிறது. செம தடிமனான பத்திரிகை. ஐநூறு பக்கங்களுக்கு மேல் இருக்கும். எல்லாத் தாள்களும் கெட்டித் தாள். நடு நடுவே இடைச் செருகலாக பதாகைகள், அந்தக் கால மருத்துவக் குறிப்புகள், வெளியீடுகள். இந்த இதழுக்குப் பங்களிப்போர் பட்டியல் மேலும் மலைக்க வைக்கிறது: ஓவியக் கலைஞர்கள், அறுவை மருத்துவர்கள் போல் விதவிதமான வைத்தியர்கள், எழுத்தாளர்கள், மனநோய் வைத்தியர்கள், மனநலக் காப்பகக்காரர்கள், மனநல சிகிச்சை தருபவர்கள், சினிமாக்காரர்கள், பல் வைத்தியர்கள், செவிலிகள், கவிஞர்கள், பொறியாளர்கள், மருத்துவ கலன் தயாரிப்பவர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள், வைத்தியசாலை நிர்வாகிகள், மருத்துவமனை சிப்பந்திகள், இசை விற்பன்னர்கள், புகைப்பட நிபுணர்கள், உள்ளரங்கு வடிவமைப்பாளர்கள், இரத்தம் எடுப்பவர்கள், வரைபுத்தகம் எழுதுபவர்கள், பேராசிரியர்கள்…

புரட்ட புரட்ட சரித்திரமும், சிற்பமும், உருவாக்குதலும், இறப்பும், கருவியாக்கமும், உயிரும் நிறைந்து இருக்கிறது.

BR-MayJune2015_cover-medium

சபீல் ரஹ்மான் பெயரைப் பார்த்துதான் பாஸ்டன் ரிவ்யூ பத்திரிகையை எடுத்தேன். தற்கால செய்தியை அலசி இருந்தார்கள். ஒரு பிரச்சினை. அதைக் குறித்து ஒரு முக்கிய கட்டுரை. அதற்கு பத்து விதமான எதிர்வினைகளையும் மாற்றுக் கருத்துகளையும் வெளியிட்டு இருந்தார்கள்.

இன்றைய பொழுதில் வேலைக்காரர் இன்றி கொள்ளை இலாபம் சம்பாதிப்பதே இலட்சியம். கார்களே வைத்துக் கொள்ளாமல், கார் ஓட்டுனர்களையும் பணிக்கு அமர்த்தாமல், பில்லியன் பில்லியனாகப் புரட்டும் ஊபர் (Uber); ஹோட்டல்களை வைத்துக் கொள்ளாமல், தங்குமிடங்களையும் வாடகைக்கு எடுக்காமல், உலகெங்கும் விடுதிகளை நடத்தும் ஏர் பி அண்ட் பி (Airbnb); செய்தியார்களே இல்லை என்றாலும் உலகின் அனைத்து மக்களும் நொடிக்கு நொடி செய்தி அறிந்து கொள்ளும் தளமாக இயங்கும் ஃபேஸ்புக்; இதே போல் அலிபாபா, அமேசான், பே-பால் (Paypal) என பல நிறுவனங்கள் அசையாச் சொத்து வைத்துக் கொள்வதில்லை; ஊழியர்களையும் நியமிப்பதில்லை; அதனால், மிகக் குறைந்த விலையில் தங்கள் சேவையை, வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறார்கள்.

அரசாங்கம் எப்பொழுது மூக்கை நுழைக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்? மக்கள் நலன் பாதிக்கும் போது, அதற்கேற்ற சட்டதிட்டங்களை அரசு நிறைவேற்ற வேண்டும் எனக் கோருகிறோம். நாம் அதிகம் பணம் செலவழித்து, பொருள்களை வாங்கும்போது, நம்முடைய ஆதாயத்திற்காக அரசு, அந்த அநியாயக் கொள்ளைக்கார நிறுவனத்தைக் கட்டுப்படுத்தப் போராடுகிறோம்.

ஒரு பொருளின் விலையை மட்டும் பார்த்து, அந்தத் துறையில் போதிய அளவு போட்டி நிலவுகிறதா என்பதையும் கணித்துப் பார்த்து, முடிவெடுத்தது அந்தக் காலம். இன்றோ, அந்த நிறுவனம் எவ்வாறு தன் அசுரபலத்தை பிரயோகிக்கிறது, எவ்வாறு தன் வீச்சை பயன்படுத்துகிறது என்பதை ஆராய்ந்து, அதன் படி முடிவெடுப்பது அவசியம் என சபீர் வாதிடுகிறார். அமேசானுக்குப் போட்டியாக கூகுள் இருக்கலாம். ஆனால், அவர்களின் அரசியல் என்ன? தூரயியங்கி முதல் பிட் காயின் வரை எப்படி அவர்கள் தங்களுடைய நுகர்வோருக்கும், சிப்பந்திகளுக்கும், பொருள் விற்போருக்கும் ஆக்கபூர்வமான வகையில் இயங்குகிறார்கள் என்பதை ஆய்ந்தறிந்து, புரிந்து கொண்டு, அதற்கேற்ப சட்டவரையறைகளை உருவாக்க வேண்டும் என்கிறார்.

இணையம் என்றால் என்ன என்றே ரெஹ்மானுக்கு புரியவில்லை என்பது முதல் அனைவரும் தொழிலாளிகளாவும், உற்பத்தியாளராகவும், வர்த்தகராகவும் இருக்கும் திறமூல சமூகம் எவ்வாறு வருங்காலத்தில் இயங்கும் என்பது வரை பலதரப்பட்ட விமர்சனக் கட்டுரைகள் தொடர்கின்றன.

இப்பொழுது மண்டை மெல்ல ‘போதும்’ என்றது. இருந்தாலும் Trans/lation என்று சொன்னதால் விட்னெஸ் எடுத்தேன்.

Witness_Lit_Magz_Online_Issues_Translation

வாசியுங்கள்.

Kids book writer R Ponnammal’s Interview in Dinamalar

நன்றி: குழந்தை இலக்கியங்களுக்கு நூலகங்களில் இடம் கிடைக்குமா? – தினமலர்

R_Ponnammal_Interview_Dinamalar_Children_Books_Author_Writers

ஆன்மிகம், வரலாறு, அறிவியல், கணிதம் என, எல்லாவற்றையும், கதைகள் மூலம், குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கியமானவர், குழந்தை இலக்கிய எழுத்தாளர் ஆர்.பொன்னம்மாள்.

கடவுளின் கருணை, மகாபாரதம், மரியாதைராமன், தெனாலிராமன் கதைகள், ராஜராஜ சோழன் வரலாறு, திருக்குறள், மூதுரை, நன்னெறி கதைகள், பறவைகள் பலவிதம், எண்கள் எனும் பொக்கிஷம் என, இவரின் குழந்தை நுால்கள் நுாற்றுக்கும் மேல் உள்ளன. தற்போது, சிறுவர்களுக்கான தொடர்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி வரும் இவர், குழந்தை இலக்கியம் குறித்து கூறியதாவது:

இங்கு, தற்போது, எல்லா துறைகளுக்கும், நிறைய பருவ இதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், குழந்தைகளுக்கான இதழ்கள் விரல்விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளன.

குழந்தைகளிடம், கதைகள் மூலமாகவே, நன்னெறிகளையும், ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் கொண்டு செல்ல முடியும். நீதிக்கதைகள்,புராண கதைகள் மூலம், வாழ்வின் நோக்கத்தையும், தீமைகளின் முடிவையும் சொல்ல முடியும். அரச கதைகள் மூலம், அரசியல் குறித்த எண்ணங்களை சொல்ல முடியும். அறிவியலையும், கணிதத்தையும், கதைகள் மூலம் சொல்லி, எளிதாக புரிய வைக்க முடியும்.

ஆனால், கதை கேட்கும் ஆர்வத்தையும், கதை சொல்லும் ஆர்வத்தையும், குழந்தைகளிடம் நாம் தான் உண்டாக்க வேண்டும். அதற்கு, பள்ளிகளில், நீதிநெறி சார்ந்த தலைப்புகளில், பேச்சு, எழுத்து போட்டிகளை நடத்த வேண்டும். அப்போது தான், குழந்தைகள், வித்தியாசமான புத்தகங்களை தேடுவர். நுாலகங்களுக்கு செல்லும் பழக்கம் ஏற்படும். அதனால், தேடுதலும், திறனறிதலும் மேம்படும். ஆனால், இங்கு உள்ள நிலைமை வேறு. பாடப்புத்தகங்களை தவிர மற்ற புத்தகங்களை வாங்க, பள்ளிகள் ஊக்குவிப்பதில்லை. அரசு நுாலகங்களில், குழந்தை இலக்கியங்களை, வாங்குவதில்லை. அப்படி இருக்கும் போது, எப்படி, பதிப்பாளர்கள், குழந்தை இலக்கியங் களை பதிப்பிக்க முன்வருவர்? எழுத்தாளர்கள், எழுத முன்வருவர்?

குழந்தைகளிடம், படிக்கும் ஆர்வமும், படைக்கும் ஆர்வமும் அதிகமாக உள்ளது என்பதற்கு, பருவ இதழ்களுக்கு வரும் கடிதங்களும், படைப்பு களுமே சான்றுகளாக இருக்கின்றன.

கடந்த 15 ஆண்டுகளாக, நான், ஆன்மிகம் மற்றும் குடும்பப்பாங்கான சிறுகதைகளை எழுதி வந்தாலும், குழந்தைகளுக்காக எழுதும் போது தான், மனதில், திருப்தி ஏற்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Uncharted: Big Data as a Lens on Human Culture by Erez Aiden, Jean-Baptiste Michel

kim-kardashian-donut-Glazed_Break_The_Internet

ரஜினிகாந்த் குறித்து எத்தனை பேருக்குத் தெரியும்! என் பாட்டனார் தலைமுறையில் ஆரம்பித்து என்னுடைய பேத்தி தலைமுறை வரை எல்லோருக்குமே அறிமுகமான பெயர் – ரஜினி. ஆனால், திருவள்ளுவர் என்று சொன்னால், என் மகளுக்கே தட்டித் தடுமாறி, “இந்த வசனமாகப் பேசித் தள்ளும் சீரியல் படம் எல்லாம் எடுப்பாரே? ரெண்டு பொண்டாட்டி ‘ஒகே’ என்பாரே! அவரின் படத்தில் வருபவர்தானே?” என்பாள். திருவள்ளுவரைக் குறித்து எத்தனை புத்தகம் இருக்கும்? சூப்பர் ஸ்டாரைக் குறித்து எத்தனை புத்தகம் இருக்கும்?

எவர் காலத்தினால் அழியாமல் இருக்கிறார்? எப்படி ஆராயப்படுகிறார்? எவ்வாறு அந்தந்தக் காலத்தில் முக்கியமானவர் அறியப்படுகிறார்? எங்ஙனம் இவற்றை தெரிந்துகொள்வது?

இதுதான் இந்தப் புத்தகத்தின் மூலக்கரு. 1800களில் ஆரம்பித்து இதுகாறும் 130 மில்லியன் புத்தகங்களுக்கு மேல் வெளியாகி இருக்கிறது. தூரத்தில் இருப்பதைப் பார்ப்பதற்கு டெலஸ்கோப் இருக்கிறது. கிட்ட இருப்பதை நுண்மையாக நோக்குவதற்கு மைக்ரோஸ்கோப் இருக்கிறது. அதே போல் இந்த பதின்மூன்று கோடி நூல்களை எப்படி ஆராயலாம்? அவற்றில் சொல்லி இருக்கும் கலாச்சாரக் குறியீடுகளையும், அரசியல் நிலைப்பாடுகளையும், சரித்திர தகவல்களையும், பொருளாதார ஆராய்ச்சிகளையும் எப்படி வரலாற்றுப் பார்வையோடு கணினி துணையோடு அணுகுவது?

கூகுள் ஸ்காலர் நுழைகிறார். உலகின் மிகப் பெரிய நூலகமான ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸி’ல் முப்பத்தி ஆறு மில்லியன் புத்தகம் இருக்கிறது. ஹார்வார்டு பல்கலை வாசகசாலையில் பதினேழு மில்லியன் புத்தகங்கள். இவற்றில் கிட்டத்தட்ட முப்பது மில்லியன் நூல்களை கூகிள், கணினி மூலம் கிடைக்க வகை செய்கிறது. இவற்றைக் கொண்டு, அதில் இருக்கும் வார்த்தைகளை அளக்க என் – கிராம் வசதியை கூகுள் தருகிறது.

அடக்குமுறையாக சமூகத்தில் சத்தமாகப் பேசுவோரின் குரல் மட்டுமே ஒலிக்குமா? நாஜி ஜெர்மனியில் மார்க் ஷகால் ஓவியங்களையும் பால் க்ளீ வரைபடங்களையும் பேசவிடாமால் வைத்திருந்தார்கள். கருத்துகளை மொத்தமாக ஜடமாக்கமுடிகிறது. ஒரே ஒரு சித்தாந்தத்தை மட்டுமே முழங்குபவர்களை கல்லூரிகளிலும் ஆட்சி பீடங்களிலும் வைத்திருந்தால் என்ன ஆகும் – என்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால், ஹிட்லர் வீழ்ந்த பின் இவர்களின் புகழ் பன்மடங்கு உயர்வதையும் பார்க்க முடிகிறது.

ரஷியாவின் ஸ்டாலின் ராஜாங்கம் இன்னும் மோசம். ஸ்டாலின் வீழ்ந்தபின்னும், அவரால் கொன்று குவிக்கப்பட்ட அரசியல் தலைவர்களின் பெயர்களும் சிந்தனாவதிகளின் சித்தாந்தங்களும் வெளிவரவே இல்லை. 1980களில் கம்யூனிசம் மொத்தமாக நொறுங்கிய பிறகே, அந்த மனிதர்களின் வாழ்க்கையையும் செயல்பாட்டையும் அறிய முடிகிறது.

அப்படியானால்… புத்தகங்களில் பிழையே இருக்காதா? ஒட்டுமொத்தமாக அலசினால் கூட ஆட்டுமந்தை சிந்தை வெளிப்படுவதை தடுக்க இயலாதா?

புகழ்பெற்ற ஜப்பானிய பழமொழியை எடுத்துக் கொள்வோம்: “ஓராயிரம் வார்த்தைகளால் சொல்வதை ஒரேயொரு படம் உணர்த்திவிடும்!” – இது ஜப்பானில் உதித்ததே அல்ல! அமெரிக்காவின் செய்தி ஆசிரியர் ஆர்த்தர் ப்ரிஸ்பேன் 1911ல் சொன்னது. இந்த மாதிரி மூல ஆராய்ச்சிகளை செய்யவும் எந்த வார்த்தை எப்பொழுது புழக்கத்திற்கு வந்தது என்பதை ஆராயவும் கூகுள் என்-கிராம் தேடுபொறி உதவுகிறது. அவற்றை எப்படி பயன்படுத்தலாம் என்னும் சிந்தனையை விசாலமாக்க இந்தப் புத்தகம் உதவுகிறது.

சரி… இவ்வளவு சொல்லியாகி விட்டது. கடந்த இரு நூற்றாண்டுகளின் அதிநாயகர்கள் எவர்?

  1. அடால்ஃப் ஹிட்லர்
  2. காரல் மார்க்ஸ்
  3. சிக்மன்ட் ப்ராய்ட்
  4. ரொனாலடு ரேகன்
  5. ஜோசஃப் ஸ்டாலின்
  6. விளாடிமிர் லெனின்
  7. ட்வைட் ஐஸனோவர்
  8. சார்லஸ் டிக்கன்ஸ்
  9. பெனிடோ முஸோலினி
  10. ரிச்சர்டு வாக்னர்

Fame is a bee.
It has a song—
It has a sting—
Ah, too, it has a wing.
– by Emily Dickinson

Uncharted_Big_data_As_lens_On_Human_Culture

ஜெயமோகன் எழுதக்கூடிய கட்டுரை: விளையாட்டும் குழந்தைகளும்: Jeyamohan

அசல் கருத்து: தொலைக்காட்சியும் குழந்தைகளும்http://www.jeyamohan.in/?p=36539

இனி ஜெ. எழுதியிருக்கக் கூடிய அடுத்த பதில் இங்கே…

முந்தைய அறுவடை: நமது இலக்கியநுட்பம்

நானும் என் மனைவியும் 1992 வாக்கில் தொலைக்காட்சியில் குழந்தைகளிடம் விளையாட்டுப் போட்டிகள் உருவாக்கும் எதிர்மறை விளைவுகளைப்பற்றிய விவாதத்தைப் பார்த்தோம். விளையாட்டுச் சிறுமியாக இருந்த என் மகளுக்கு அந்த “அரட்டை அரங்கத்”தில் இருந்ததை நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தேன். எங்கள் கொல்லைப்புறத்தில் கிரிக்கெட் தேவையில்லை என்ற முடிவை அவளும் நாங்களும் சேர்ந்து எடுத்தோம். அப்போது எம்.எஸ்.தோனி சின்னக்குழந்தை. அன்றுமுதல் இன்றுவரை வீட்டில் தொலைக்காட்சி இணைப்பு இல்லை.

கிரிக்கெட் மட்டுமல்ல ஒட்டுமொத்த விளையாட்டுகளே குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் பாதகமானது. பல பெற்றோர் தங்களுக்குத் விளையாட்டுப் பித்து இருப்பதை மறைக்க ‘ஓடியாடி விளையாடினால் உடற்பயிற்சி இல்லியா? அட்ரெனலின் சுரப்பது கூட நல்லதுதானே!’ என்றெல்லாம் வாதிடுவதைக் கேட்டிருக்கிறேன். உண்மையில் விளையாட்டு எல்லாவகையிலும் எதிர்விளைவுகளை மட்டுமே உருவாக்கக்கூடியது. மைதானத்தில் விளையாட்டு இருந்தால் குழந்தைகள் அதைப் பார்ப்பார்கள். அது அவர்களுக்குத் தீங்களிக்கக்கூடியது.

காரணங்களை இவ்வாறு தொகுத்துச் சொல்லலாம். விளையாட்டு மிகப்பிரம்மாண்டமான ஒரு பொது கேளிக்கை. கோடிக்கணக்கான பேருக்கு ஒரேசமயம் அது மகிழ்வூட்டியாகவேண்டும். ஆகவே அது மிகவும் முன்னரே ஒத்துக் கொண்ட விதிப்படியே நடக்க முடியும். சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு சிந்திப்பதை விளையாட்டுகள் முடக்கிப் போடுகின்றன.

ஆகவே விளையாட்டு அதிகம்பேர் பார்க்கக்கூடிய அந்த சராசரியான மனநிலையை உருவாக்கும். உச்சகட்ட ஊசலாட்டல் மூலம் அவற்றை அனைவரும் பார்க்கவைக்கும்.

கச்சிதமான சிறப்பாக ஆடக்கூடியவரே வெற்றிபெறுகிறார், அதற்குத்தான் அதிக கோப்பைகள் கிடைக்கும். ஆகவே அதற்குத்தான் அதிகமான நிதிமுதலீடு இருக்கும். அதுதான் பிரம்மாண்டமானதாகவும் கவர்ச்ச்சியானதாகவும் இருக்கும்.

அதிகமாக வெற்றி பெறும் அணி, அதாவது மிக அற்புதமாக ஆடுபவர் மட்டுமே ஒலிம்பிக்ஸுக்கு செல்வார். அதைத்தான் பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் நமக்கு அமையும்.

இதன் விளைவாக விளையாட்டை பார்ப்பவர்கள் அனைவரும் அவர்களைப் போல் விளையாட சிக்கவைக்கப்படுகிறார்கள். அவர்களின் தன்னம்பிக்கை வீழ்ச்சியடைகிறது. உடல் திறன் சராசரியில் கட்டிப்போடப்படுகின்றது.

இது மாந்தர் குலத்திற்கே மிக ஆபத்தானது. ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய சோம்பேறித்தனத்தைக் கண்டடைந்து அதை வளர்த்துக்கொள்ளவேண்டிய வயதில் சராசரித்தன்மையில் சிக்கிக்கொள்கிறார்கள். சராசரி கிட்டிப்புள்ளும் உறியடிகளும் உப்புமூட்டைகளும் மட்டும் அவர்களுக்குக் கிடைக்கின்றன. அவர்கள் சராசரிகளாக வளர்கிறார்கள்.

விளையாட்டுகள் நமக்குத் தரிசனங்களை அளிப்பதில்லை. ஆட்டகளத்தில் சிலர் கலக்குவதை மிதமிஞ்சி வலியுறுத்துகிறது அது. பந்துகளைக் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அது நம்மை பியரிலும் கோக்கோ கோலாவிலும் அடித்துச்செல்லும் தன்மை கொண்டது. மைதானத்திற்கு சென்று பாருங்கள். சிலநாட்களில் அவை உங்களை முழுமையாக உள்ளே இழுத்துக்கொள்ளும். நீங்களும் தினசரி பால் பாட்மிண்டனோ கால்பந்தோ ஆடிக்கொண்டே இருப்பீர்கள்.

ஆனால் ஒருவாரம் முழுக்க இந்த ஆட்டங்கள் மூலம் நீங்கள் பயிற்சி பெற்றது ஒரு உள்ளூர் லீக் ஆட்டத்திற்குக் கூட தகுதி இருக்காதென்பதை யோசித்தால் புரிந்துகொள்ளலாம்.

என்.எஃப்.எல், என்.பி.ஏ., ரக்பி, கால்பந்து, ஐ.பி.எல். போன்ற மேற்கத்திய ஆட்டங்கள் இன்னும் நுட்பமான வலை. அவை சர்வதேச அளவில் துடுப்பாட்டக்காரர்களின் பொதுவான பலவீனங்கள் விருப்பங்கள் ஆகியவற்றை big data மூலம் ஆராய்ந்து மேம்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டவை. ஆகவே அணிகளை மிக பயங்கரமானப் சரிசமமான போட்டியாக கொண்டு சென்றுவிடுகின்றன.

இந்நிகழ்ச்சிகளைப் பாருங்கள். சில அடிப்படைக்கூறுகள் இருக்கும். மிக பயங்கரமான வலிமை கொண்ட சக்திகளை பலவீனமான, குழந்தைகளான சிலர் எதிர்த்து வெல்வது போல. சாகசம் மூலம் புதையல்களை அடைவதுபோல. மறைமுகமாக இவை குழந்தைகளின் போர்க்குணங்களையே தொட்டு வளர்க்கின்றன. அந்தப் போர்க்குணம் குழந்தைக்கு அதன் தங்கிவாழ்தலுக்காக, தாக்குப்பிடித்தலுக்காக இயற்கையால் வழங்கப்பட்ட ஆயுதம். காமம் போலவே அடிப்படையான ஓர் இச்சை அது. அதை இவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இதற்கு அப்பால் இன்னும் முக்கியமான காரணம் ஒன்று உண்டு. உடல் விளையாட்டு அடிப்படையில் கல்விக்கு எதிரானது. கல்வி என்பது மொழியுடன் சம்பந்தப்பட்டது என்றே நான் என்றும் நினைத்து வருகிறேன். சமீபத்தைய ஆய்வுகள் இதை உறுதிசெய்கின்றன. மொழியில்தான் சிந்தனை நிகழ்கிறது. ஓவியம் இசை போன்ற கலைகளுக்குக் கூட கொள்கைகள் மொழியாகவே அகத்தில் பதியமுடியும்.

மொழிவழிக்கல்விதான் மூளையின் இயல்பான செயல்பாடு. நாம் அறிந்தவற்றை நாம் நினைப்பது மொழியில்தான். ஒன்றை நாம் நம் மொழியில் சொல்லத்தெரிந்திருந்தால்தான் நாம் அதை அறிந்திருக்கிறோம் என்று பொருள்.

விளையாட்டுகள் மொழித்திறனையே அழிக்கின்றன. மொழியில் நுழைந்து தன் சொந்த அகமொழியைக் கண்டடையவேண்டிய காலகட்டத்தில் குழந்தை இந்தக் விளையாட்டுகளில் நுழைவதனால் அது சிந்திக்கத்தெரியாததாக ஆகிவிடுகிறது.

கடைசியாக, விளையாட்டு போன்ற ஆட்படுத்தும் தன்மை கொண்ட சாதனம் குழந்தைக்கு பிறருடனான உறவுகளை இல்லாமலாக்குகிறது. விளையாட்டில் எதிர் அணி என்கிறோம், போட்டியாளர் என்கிறோம். “யாதும் ஊரே! யாவரும் கேளிர்” என்னும் தொன்மையான பண்பாட்டில் வாழ்ந்த சமூகம், களரியிலும் சடுகுடுவிலும் சண்டை போடுவது ஆபத்தான போக்கு.

என் புரிதலில் செயலை விட, ஆக்கத்தை விட குழந்தைகள் பேசிக்கொண்டிருக்க மிகவும் பிரியப்படக்கூடியவை. ‘கதையளப்பதை’ விரும்பாத குழந்தை இல்லை. குழந்தைகள் கணினியில் விளையாடுவதும் அவர்கள் இனையத்தில் அரட்டையடிப்பதும் மிக மிக முக்கியம். அதனூடாகவே குழந்தை அதைச்சூழ்ந்திருக்கும் சமூக வலைப்பின்னலுடன் உறவு கொள்கிறது. அதைப்புரிந்துகொண்டு கையாளக் கற்கிறது. மைன்கிராஃப்டிலோ போர்ட்டல்-இலோ தன் இடத்தைக் கண்டடைகிறது.

நான் இளமையிலேயே என் குழந்தைகளுடன் மணிக்கணக்காக கணிவிளையாட்டுகளில் இருந்தேன். அவர்கள் அடுத்தடுத்த கட்டங்களுக்குப் போய்க்கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் அவர்களின் உண்மையான உலகை நம்மிடம் அமைத்துக் காட்டுவார்கள். கூடவே ஒரு கற்பனை உலகையும் நமக்காக உருவாக்கிக் காட்டுவார்கள். கற்பனை நகரம், கற்பனை மனிதர்கள். அது அவர்களின் ஆளுமையின் மிக முக்கியமான அம்சம். அவர்களைப் புரிந்துகொள்வதற்கான வாசல் அது. கற்பனையில் கடைசி பந்து சிக்ஸர் அடிக்காதவர் இருக்கிறோமா? கனவுகளில் இறுதி நிமிடத்தில் கோல் அடிக்காதவர் உண்டா? அதை நேரடி விளையாட்டுகள் உடைக்கின்றன.

உரையாடல்மூலம் நாம் குழந்தைகளை அறிகிறோம். அவை நம்மை அறிகின்றன. இவ்வாறுதான் ஃபேஸ்புக் உருவாகிறது. சமூக வலைப்பின்னல் உருவாக்கிறது. அதை விளையாட்டு அடிமைத்தனம் அழிக்கிறது.

விளையாட்டு குழந்தைகளை கணி உலகிலிருந்து அன்னியப்படுத்தும். என்ன சொன்னாலும் இன்று கணினிகளே வருங்காலத்திற்கான ஒரே வழி. நாளெல்லாம் விளையாடும் ஒருவன் முட்டாளாகத்தான் இருப்பான். அரைமணிநேரம் எதையாவது ட்விட்டரில் வாசித்தால்கூட அவனுடைய அறிவிலும் ரசனையிலும் பெரும் வளர்ச்சி காணப்படும்.

ஏனென்றால் கணினிகள் நம்மை செயல்படச்செய்கின்றன. நாம் மேயும்போது அந்த நிலைத்தகவல் நம் கற்பனையாலும் நம் தர்க்கத்தாலும் நாம்தான் உருவாக்கிக்கொள்கிறோம். அது ஓர் கண்டுபிடிப்பு. எந்த Call of Duty® ஆக இருக்கட்டும். நம்மை மேலும் தகுதிகொண்டவர்களாகவே ஆக்கும்.

ஆனால் விளையாடுகையில், எந்த மகத்தான நிகழ்ச்சியானாலும், நாம் அதற்கு செல்வதில்லை. வியர்வை நம் மீது அருவிபோல கொட்டிக்கொண்டிருக்கிறது. அதன் வழியாக நாம் சில கலோரிகளைக் களைந்து உப்பை மட்டுமே அடைகிறோம். நாம் அதன் வழியாக தகுதிப்படுத்திக்கொண்டு ரஞ்சி டிராபிக்கு செல்வதில்லை.

கூகிள்+ முடிவில்லாதவை. உலக ஞானமே அவற்றில் உள்ளது. அவை அளிக்கும் தெரிவுக்கான சாத்தியங்க்ள் முடிவில்லாதவை. சமூக வலைப்பின்னலில் நுழையும் குழந்தை தான் யாரென தானே கண்டுகொள்ளும். சிந்திக்கவும் உரையாடவும் கற்றுக்கொள்ளும்.

அதேசமயம் விளையாட்டை முழுக்க நிராகரிக்கவும் முடியாது. விளையாட்டிற்குப்பதிலாக ரவி சாஸ்திரி ஆட்டங்களை, சித்துவின் வருணணைகளை அவர்களுக்கு யூடியிபில் கண்டுபிடித்துக்கொடுத்தேன். மிகநல்ல ஒரு ப்ளே லிஸ்ட் (play list) அவர்களிடம் உள்ளது. அது அவர்களுக்கு play. இன்று உலகின் மிகத்தரமான புதிய கணிக்கட்டிடம் எது என என் மகளிடம்தான் நான் கேட்டறிகிறேன். இன்று வந்த எந்த மைண்க்ராஃப்ட் கலைத்தரம் மிக்கது என என் மகளிடம்தான் தெரிந்துகொள்கிறேன்.

என் இரு குழந்தைகளும் மகத்தான கணி பயனர்கள். அதற்கு நான் விளையாட்டை விலக்கியதுதான் காரணம் என உறுதியாக நம்புகிறேன்.

நன்றி: ஜெ.

State of Tamil Cinema Reviewers: Movies vs Books

கடந்த பதினைந்து வருடங்களாக பட அறிமுகங்களை எழுதுபவன் + இணையத்திலும் பத்திரிகைகளிலும் விமர்சனங்களை அவ்வப்போது வாசித்தும் வருபவன் என்ற முறையில் எனக்குப் பட்டது….

* பெரும்பலான சமயம் படம் வெளியானவுடன் டாரெண்ட் தரவிறக்கத்தில் படம் பார்ப்பதால், திரையரங்கின் மன ஒருமை கிடைப்பதில்லை. அதை விடக் கொடுமை, ஆங்கிலப் படத்திற்கு ப்ளூ ரே ப்ரிண்ட்டும் தமிழ்ப்படங்களுக்கு திருட்டு விசிடியும் பார்க்க வேண்டும் என்னும் மனப்பான்மை.

* விகடன் விமர்சனம் போல் மார்க் போட்டு வாடிக்கை. எல்லாப் படத்திற்கும் மதிப்பெண் மட்டுமே வழங்கத் தெரியும்.

* திக்குவாய், குருடி போன்ற குறைபாடுகளை நல்ல நடிப்பு என்றும் ரஜினி, விஜய் படங்களை மசாலா என்றும் வகைப்படுத்துவோம்.

* கேமிராவில் ஒளிப்படம் எடுப்பதாலும், நாலைந்து முறை குழந்தைகள் நிகழ்ச்சியை வீடியோ எடுத்ததாலும் சினிமா எடுக்கும் அனைத்து வித்தையும் தெரிந்ததாக நினைக்கிறோம்.

* தொலைக்காட்சி சீரியல் (என்னைப் போல் ஆசாமிகள் தூர்தர்ஷன் நாடகம்) பார்த்தே பழக்கம். திரைப்படங்களிலும் அதே வாசனை எதிர்பார்க்கிறோம்.

* புத்தகத்திற்கு அறிமுகம் எழுதுவதை விட சினிமாவிற்கு அறிமுகம் கொடுப்பது எளிதானது. உதாரணமாக இயக்குநர் பாலா போன்ற புகழ்பெற்ற எழுத்துலக ஜாம்பவானை விமர்சிக்க நிறைய திராணி வேண்டும். ஆனால், ‘பாலா’ போன்றவரை விமர்சிப்பதால் சாதாரண மனுஷனாக அடையாளம் காட்டிக் கொள்ளலாம். இன்னும் விரிவாகச் சொன்னால் ஆயிரம் பக்க புத்தகத்தை தாக்கி எழுதினால் இலக்கியவாதியாக ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. ‘கடல்’ படத்தையும் பரதேசியையும் விமர்சித்தால் humble ஆளாகி விடலாம்.

* மோசமான படத்தைப் பாராட்டியும், சுவாரசியமான படைப்பை மட்டம் தட்டியும் எழுதினால் மட்டுமே கவனம் கிடைக்கிறது.

* சென்ற கால சினிமாவில் இருந்து வித்தியாசமாய் நின்று தமிழ்த் திரைப்படங்களை எது முன்னகர்த்துகிறது என்று கவனித்து பகிர்வதை விட, அந்தத் திரைப்படங்களின் கதையை வைத்து மன்றாடுவது எளிது.

என்னுடைய ஆண்டிராய்ட் போனிற்கு புதிதாக ஏதாவது நிரலியை நிறுவிக் கொண்டே இருப்பேன். சில சமயம் அதைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவேன். சில சமயம் உடனடியாக நீக்கிவிடுவேன். அது எனக்கு எப்படி உபயோகமாகிறது, ஏற்கனவே இருக்கும் மற்ற அப்ளிகேஷன்களில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது என்பதைப் பொறுத்து என் முடிவு அமைகிறது. வைரஸ் போன்ற தாக்குதல் கொடுத்தால் மட்டுமே, கூகுள் கடை சென்று மட்டகரமான தரமதிப்பீடு தருகிறேன்.

சினிமாவிற்கும் அதே அளவீடு பயன்படுத்தலாம். நோய்க்கிருமி போல் கலையை கீழே இழுக்கிறதா? அல்லது தனிப்பட்ட முறையில் உபயோகமான விதத்தில் முன்னேற்றுகிறதா?

புத்தகத்திற்கு நன்றி நவிலலா? நன்றியுரைப்பதற்காக புத்தகம் எழுதலா?

ஃபேஸ்புக் தலைவி ஷெரில் சாண்ட்பெர்கு (Sheryl Sandberg) புத்தகம் எழுதியிருக்கிறார். அடுத்த மாதம் நான்காம் தேதி ப்ரூக்ளின் புக்ஸ்மித்தில் வாசகர்களை சந்திக்கிறார். புத்தகத்தின் பெயர் சாய்ந்து கொள் – (‘Lean In: Women, Work, and the Will to Lead’)

அமெரிக்காவில் எல்லோரும் புத்தகம் எழுதுகிறார்கள். நிறுவனத்தின் தலைவர், வக்கீலாக இருந்து நீதிபதியாக விரும்புபவர், நீதிபதியாக இருந்து அரசியல்வாதியாகப் போகிறவர், வழிப்போக்கர், ஆசிரியர், கணினி நிரலி எழுதுபவர், நிரலி எழுதத் தெரியாதவர்… சொந்த வாழ்க்கையை கொஞ்சம் வெளிப்படையாக எழுதத் தெரிந்தால் போதுமானது.

அதைப் புத்தகமாக எடிட் செய்து, கோர்வையாகத் தொகுத்து, உன்னத கோட்பாடுகளை வெளிக் கொணர்ந்து, வாசிப்பவருக்கு சுவாரசியமும் லட்சியப் பாதை வகுப்பதில் புத்துணர்ச்சியும் சாதனைகளுக்கான வழியும் கிடைக்குமாறு அமைத்து நியு யார்க் டைம்ஸ் பெஸ்ட்செல்லர் ஆக்கிவிடுகின்றனர்.

பேஸ்புக் அம்மணி எழுதியது அந்த வகை புத்தகம்.

‘பெண்களே… வீறு கொண்டு எழுக!’
‘நிற்காதே… ஓடிக் கொண்டே இரு’
‘தேங்கி விடாதே… தளும்பினாலும் கொட்டினாலும் பொங்குவது முக்கியம்!’
’சிறப்பாக செய்வதை விட, செய்து முடிப்பதே வீரருக்கு அழகு!’
’நீங்கள் எதற்கும் கவலைப்படாமல் இருந்தால், என்ன செய்து கொண்டிருப்பீர்கள்?’

இந்த மாதிரி ஆலோசனை + ஊக்க பூஸ்ட் எல்லாம் பில்லியன் டாலர் ஐ.பி.ஓ. கண்டு செட்டில் ஆனவர்கள் சௌகரியமாக சொல்லலாம்.

காந்திஜி சேஃப்டி பின் எடுத்து வைத்துக் கொண்ட நிகழ்வு போல் இந்தப் புத்தகத்திலும் எனக்கு ஒரு மேட்டர் கிடைத்தது. ஒன்பது பக்கத்திற்கு நன்றிகள் போட்டு இருக்கிறார். அது தவிர முன்னுரை, முகவுரை, பின்னுரை என்று தமிழ்ப் புத்தகங்களை மிஞ்சும் அளவு தெரிந்தவர்களையும் விமர்சகர்களையும் நெஞ்சு நக்கியிருக்கிறார்.

என்னுடைய நூலில் நிச்சயம் பத்து பக்கத்திற்காவது வந்தனம், வணக்கம், தோத்திரம், துதி பாடல் இருக்கும்.

போப் ராஜினாமா: என்னுள்ளே ஏதோ

நாம் ஒவ்வொருவரும் தனித் தனி நாடு. அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளை பல உயிரினங்கள் ஆக்கிரமித்துள்ளன. நம்முடைய சோத்தாங்கையில் இருக்கும் பாக்டீரியாக்களுக்கும் பீச்சாங்கை பாக்டீரியாக்களுக்கும் மாமன், மச்சான் உறவு கூட இல்லை. இரண்டுமே வெவ்வேறு நுண்ணுயிரி இனங்களைச் சேர்ந்தவை.

அப்படித்தான் ஆரம்பிக்கிறது இந்த அறிவியல் கட்டுரை. The Teeming Metropolis of You | CAA

தூய பிரதேசங்களில் சௌகரியமாக வளர்ந்தவர் துணிச்சலான காரியங்களில் பயப்படாமல் இறங்குவதற்கும், சராசரியான மனிதர்கள் செட்டில்ட் வாழ்க்கைக்கு பிரியப்படுவதற்கும் கூட நமக்குள்ளே குடித்தனம் செய்யும் உயிரிகள் காரணம்.

உடலையும் சிந்தனையையும் பிரித்துப் பார்க்க முடியாது என்பதை இருபதாம் நூற்றாண்டின் மருத்துவ சாதனையாக சொன்னால்… என்னுள்ளே இருக்கும் கோடிக்கணக்கான உயிரினங்களின் தொகுப்புதான் நான் என்றும் என்னுடைய செயல்பாடுகள் என்றும் அறிவது இக்கால கண்டுபிடிப்பு.

Alice Munro: Too much happiness: Short Story Collection Intro

ஆலிஸ் மன்ரோ குறித்து பல முறை கேட்டு இருந்தாலும் முதன்முறையாக அவரின் சிறுகதைத் தொகுப்பில் சில கதைகளை வாசித்தேன். வழக்கம் போல் ‘டூ மச் ஹேப்பினெஸ்’ புத்தகத்தில் ஆங்காங்கே கிடைத்த சிலதை மட்டுமே படித்தேன்.

உரையாடல் இருக்கிறது. கரடு முரடான பல்லுடைக்கும் சிறுபத்திரிகை நடை கிடையாது. சமூகப் பிரச்சினைகள கூட த்ரில்லர் போல் எப்படி முடிக்கப் போகிறார் என்று எதிர்பார்க்க வைக்கிறது. விநோத மனிதர்களின் வித்தியாசங்களை நியாயப்படுத்தாமல், அவர்கள் தரப்பின் எண்ணங்களை விதைக்கிறது.

அறம் பாடாமல் அறம் எழுதுவது எப்படி என்றும் நேர்மையாக எழுதினால் அலுப்பு தட்டும் என்பதை உடைப்பது எப்படி என்றும் கிரிமினல்களின் வாழ்க்கையை விவரித்தால் ஒரு பக்கம் மட்டும் சொல்லாமல் மறுபக்கங்களையும் செண்டிமெண்ட் கலக்காமல் உணர்ச்சிகரமாக சொல்வதெப்படி என்றும் அறியலாம்.

108 Divya Desangal: R Ponnammal Books

The Hindu Book Intro

108 Divya Desangal - Tamil Books


Kumudham Jothidam

108 Thiviya Thesangal

Tamil Books Wishlist – 2012 தமிழ்ப் புத்தகங்கள்: ஆலோசனை (aka) விழைப்பட்டியல்

சமீபத்திய புத்தகங்களில் எதை வாங்க வேண்டும் என்று ஆசை பிறக்கிறது?

என்னிடம் இருக்கிறது தவிர, எந்த நூல்களை தருவிக்க ஆர்வம் கிடைக்கிறது?

இணையத்தில் உள்ள புத்தகக் கடைகளில் மேய்ந்தால் எவை ‘என்னை வாங்கு’ என்று அழைக்கிறது?

இதில் பிரபலமான எழுத்தாளர்கள் நிச்சயம் இருப்பார்கள்; தவிரக்க வேண்டிய நூலாசிரியர்கள் தவற விடப் பட்டிருப்பார்கள்.

பட்டியல்களுக்கேயுரிய விடுபடுதல்களும் இருக்கலாம்.

உங்கள் பரிந்துரையில் சமீபத்திய நூல் வரவுகளில் முக்கியமானவை எவை?

முதலில் நூலகம் தொடர்பான சில வலையகங்கள்:

  1. நியூ ஹொரைசன் மீடியா – கிழக்கு – காமதேனு – https://www.nhm.in/shop/home.php
  2. சென்னை ஷாப்பிங் – http://www.chennaishopping.com
  3. உடுமலை –http://www.udumalai.com/
  4. தினமலர் புத்தக விமர்சனம் + அறிமுகம்: http://books.dinamalar.com/index.asp
  5. நம்ம கோடம்பாக்கம்: http://600024.com/store/books/
  6. நூல் உலகம்.காம் – http://www.noolulagam.com/
  7. டிஸ்கவரி புக் பேலஸ்: http://discoverybookpalace.com/
  8. நியு புக் லான்ட்ஸ் – http://www.newbooklands.com/new/home.php
  9. தமிழ் புக்ஸ் ஆன்லைன்: http://www.tamilbooksonline.in/booklist1.php
  10. கன்னிமரா பப்ளிக் லைப்ரரி – http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-main.pl
  11. சிங்கப்பூர் நூலகம் –http://catalogue.nlb.gov.sg/

இப்பொழுது என்னுடைய பரிந்துரை புத்தக லிஸ்ட்:

1. என்னைத் தீண்டிய கடல் By வறீதையா — வகை : கட்டுரைகள்
2. கவிதை என்னும் வாள்வீச்சு By ஆனந்த் — வகை : கட்டுரைகள்
3. கரை தேடும் ஓடங்கள் By ராமச்சந்திரன் உஷா
4. நாமார்க்கும் குடியல்லோம் By கரு.ஆறுமுகத்தமிழன்
5. எங்கள் நினைவில் சு.ரா. (குடும்பத்தாரின் நினைவுகள்)
6. தாயார் சன்னதி By சுகா
7. தோள்சீலைக் கலகம் : தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் By கணேசன்
8. சினிமா அனுபவம் (அடூர் கோபாலகிருஷ்ணன்) By அடூர் கோபாலகிருஷ்ணன்
9. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது By அ.முத்துலிங்கம்
10. ஒன்றுக்கும் உதவாதவன் By அ.முத்துலிங்கம்
11. நளிர் — நாகார்ஜுனன்
12. சொல்லாததும் உண்மை (பிரகாஷ்ராஜ்)
13. முக்குவர்: வரலாறு, வாழ்வியல், எதிர்காலம் By வறீதையா கான்ஸ்தந்தின்
14. மயிலிறகு குட்டி போட்டது By பிரபஞ்சன்
15. எழுத்தென்னும் நிழலடியில் By பாவண்ணன்
16. அமெரிக்காவில் மூன்று வாரம் By ம.பொ.சிவஞானம்
17. இலக்கிய ஆராய்ச்சி காலாண்டு இதழ் ( பாகம் – 1 ) By இந்திரஜித்
18. பிறக்கும் ஒரு புது அழகு By காலச்சுவடு கண்ணன்
19. காலத்தைச் செரிக்கும் வித்தை By குட்டி ரேவதி
20. ஓவியம் கூறுகளும் கொள்கைகளும் By புகழேந்தி
21. புனைவின் நிழல் By மனோஜ்
22. நான் கண்ட ரஷ்யா By அகிலன்
23. பல நேரங்களில் பல மனிதர்கள் By பாரதி மணி
24. அடடே! By மதி கார்ட்டூன்கள்
25. உவன் இவன் அவன் By சந்ரு
26. ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு
27. அக்கிரகாரத்தில் பெரியார் By பி.ஏ.கிருஷ்ணன்
28. நம் தந்தையரைக் கொல்வதெப்படி By மாலதி மைத்ரி
29. இருப்பும் விருப்பும் By கி.பி. அரவிந்தன்
30. கர்ப்பமாய் பெற்ற கன்னிகள் By அ.கா.பெருமாள்
31. கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் By தொகுப்பாசிரியர்: ராஜமார்த்தாண்டன்.
32. அம்மாவின் ரகசியம் By சுநேத்ரா ராஜகருணாநாயகதமிழில் :- எம். ரிஷான் ஷெரீப்
33. அனுபவங்களின் நிழல் பாதை By ரெங்கையா முருகன் ,வி .ஹரி சரவணன் — வகை : குறுநாவல்கள்
34. நஞ்சையில நாலு மா By சுந்தரபுத்தன்
35. விழா மாலைப் போதில் By அசோகமித்திரன்
36. குருதியில் நனையும் காலம் By ஆளுர் ஷாநவாஸ் (முன்னுரை: ஆ.மார்க்ஸ்)
37. எழுதுவதெல்லாம் எழுத்தல்ல By பாமரன்
38. ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க! By கோபிநாத்
39. சினிமாவின் மூன்று முகங்கள் By சுதேசமித்திரன்
40. எசப்பாட்டு By இந்தியா டுடெ தமிழ்ப் பதிப்பின் எக்ஸிக்யூட்டிவ் எடிட்டர் ஆனந்த் நடராஜன்
41. கலி புராணம் By மு.தளையசிங்கம்
42. இராசேந்திரசோழன் குறுநாவல்கள்
43. பேய்க்கரும்பு By பாதசாரி
44. சனங்களின் சாமிகள் கதை By அ.கா.பெருமாள்
45. தெரிந்த கோவை தெரியாத கதை By கவியன்பன்.கே.ஆர்.பாபு
46. இவன்தான் பாலா By பாலா
47. சுண்ணாம்பு கேட்ட இசக்கி By அ.கா.பெருமாள்
48. நான் நீ மீன் By கலாப்ரியா (கவிதை)
49. முதல் 74 கவிதைகள் By யுவன் சந்திரசேகர்
50. சூரியன் தகித்த நிறம் By பிரமிள்
51. மேன்ஷன் கவிதைகள் By பவுத்த அய்யனார்
52. எனது மதுக்குடுவை By மாலதி மைத்ரி
53. திரும்பிச் சென்ற தருணம் By பி.ஏ.கிருஷ்ணன்
54. பலார்ஷாவிலிருந்தும் நாக்பூருக்கு By தெலுங்கில் ஸ்ரீ விரிஞ்சி (தமிழில் :- கெளரி கிருபானந்தன்.)
55. களவு போகும் புரவிகள் By வேணுகோபால்
56. பூரணி பொற்கலை By கண்மணி குணசேகரன்
57. தஞ்சை ப்ரகாஷ் கதைகள் By காவ்யா சண்முகசுந்தரம்
58. மரணத்தின் வாசனை By அகிலன்
59. மயில்வாகனன் மற்றும் கதைகள் By அஜயன் பாலா
60. மிதமான காற்றும் இசைவான கடலலையும் By தமிழ்ச்செல்வன்
61. லீலை By சுகுமாரன்
62. பிரமிள் படைப்புகள் (முழுத் தொகுப்பு)
63. வெள்ளி விரல் By ஆர்.எம்.நெளஸாத்
64. நான் கொலை செய்யும் பெண்கள் By லதா (காலச்சுவடு)
65. நகரத்தில் மிதக்கும் அழியா பித்தம் By ம.தவசி
66. பதுங்குகுழி By பொ.கருணாகரமூர்த்தி
67. ஒரு பனங்காட்டுக் கிராமம் By மு.சுயம்புலிங்கம்
68. இலட்சுமணப்பெருமாள் கதைகள்
69. கருப்பாயி என்கிற நூர்ஜஹான் By அன்வர் பாலசிங்கம்
70. தொலைகடல் By உமா மகேஸ்வரி
71. லயோலா என்ற பெரும்பாம்பின் கதை By சுகுமாரன்
72. கனவுகளுடன் பகடையாடுபவர்கள் By ஜி.குப்புசாமி (மொழிப்பெயர்ப்பு )
73. என் தாத்தாவுக்கொருதூண்டில் கழி By ஜெயந்தி சங்கர்
74. அப்பாஸ்பாய் தோப்பு By எஸ்.அர்ஷியா
75. லண்டன் டயரி By இரா.முருகன்
76. ஆறா வடு By சயந்தன்
77. எட்றா வண்டியெ By வா.மு.கோமு
78. ராஜூ ஜோக்ஸ் (கார்டூன் நகைச்சுவை)
79. இதழாசிரியர்கள் மூவர் By விக்கிரமன்
80. அதிமனிதர்களும் எதிர்மனிதர்களும் By பிரேம்
81. கரித்தாள் தெரியவில்லையா தம்பீ… By பெருமாள் முருகன்
82. உடைந்த மனோரதங்கள் By பெருமாள் முருகன் (கு.ப.ரா. பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு)
83. சிலுவையின் பெயரால் By ஜெயமோகன்
84. கர்நாடக சங்கீதம் : ஓர் எளிய அறிமுகம் By மகாதேவன் ரமேஷ்
85. சுபமங்களா மொழிப்பெயர்ப்புக் கதைகள்
86. சங்க இலக்கியத்தில் பொது மக்கள் By முனைவர் கு.ராச ரத்தினம்
87. கோப்பை தேநீரும் கொஞ்சம் கவிதையும் By ஹரி கிருஷ்ணன்
88. டயலாக் By ஜூனியர் விகடன்
89. தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள் By யு.சுப்ரமணியன்
90. மதன் ஜோக்ஸ்
91. காவல் தெய்வங்கள் ( காலங்களை கடந்தும் நிக்கிற கிராம தேவதைகள் வழிபாடு ) By பி.சுவாமிநாதன்
92. சுதந்திரப் போரில் தமிழ் சினிமா By அறந்தை நாராயணன்
93. நான் எப்படிக் கம்யூனிஸ்ட் ஆனேன்?..வி.பி.சிந்தன் (இளையபாரதி )
94. :நேரு வழக்குகள் – ஆசிரியர் : ஞாலன் சுப்பிரமணியன்
95. சகுனம் By எஸ்.வி.ராமகிருஷ்ணன்
96. ஆ மாதவன் கதைகள்
97. ஒரு புகைப்பட நிருபரின் அனுபவங்கள். : ஆசிரியர்: மதுரை எஸ்.எஸ். ராமகிருஷ்ணன்
98. சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதைகள் : ஆசிரியர் : சபீதா ஜோஸப்
99. சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1,2) : ஆசிரியர் : பாக்கியம் ராமசாமி
100. உரையாடலினி By   அய்யனார் விஸ்வநாத்
101. கு.அழகிரிசாமி கடிதங்கள் (கி.ரா.வுக்கு எழுதியது) By கி. ராஜநாராயணன்.
102. தொலைக்காட்சி விளம்பரத்தின் உள்முகங்கள் By கழனியூரன்
103. ஆறுமுகசாமியின் ஆடுகள் By சா.கந்தசாமி
104. புதுமொழி 500 – ரவிபிரகாஷ் (விகடன் பிரசுரம்)
105. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் – தொகுப்பு: பி.இ.பாலகிருஷ்ணன்
106. விட்டில் – சமகால அரசியல் பகுப்பாய்வு By இராகவன் (காலச்சுவடு பதிப்பகம்)
107. ஈழத்து நாட்டார் பாடல்கள் By ஈழவாணி
108. தமிழினி ஒரு வருட உள்நாட்டு சந்தா

இப்பொழுது உங்களுக்கான வினாக்கள்:

2012-ல் என்ன வாங்கினீர்கள்?

முக்கியமாக புனைவுகளில் சுவாரசியமானவை எவை?

புதிய புத்தகங்களில் தங்களைக் கவர்ந்த கதாசிரியர் யார்?