Tag Archives: அறிமுகம்

டபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ?

I suppose it is submerged memories that give to our dreams their curious air of hyper-reality. But perhaps there is something else as well, something nebulous, gauze-like, through which everything one sees in a dream seems, paradoxically, much clearer. A pond becomes a lake, a breeze becomes a storm, a handful of dust is a desert, a grain of sulfur in the blood is a volcanic inferno.                    —W. G. Sebald, The Rings of Saturn

செபால்ட் எழுத்துக்களின் அடிநாதம் நினைவுகள். பழைய விஷயங்களை நினைவில் வைத்திருப்பதால் சித்திரவதைக்குள்ளாவோம். அதனால், பழையதை மறக்க எத்தனிக்கிறோம். ஆனால், நடந்ததை மறப்பதால் எவ்வளவு பெரிய கொடூரத்தை அரங்கேற்றுகிறோம்?

அவரின் ஆஸ்டர்லிட்ஸ் நாவல் முழுக்க ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைகிறது. இடங்களும் மனிதர்களும் மனிதர்களின் வாழ்க்கைக் கதைகளும் அவர்களின் அனுபவங்களும் இடறி, அகஸ்மாத்தாகவோ அல்லது வலிந்தோ தட்டுப்பட்டு உரசிக் கொண்டேயிருக்கின்றன. அதுவும் எனக்கு இது நடந்ததாக நான் சொல்லும்போது, அந்த சம்பவத்தின் மாந்தர்கள் கிடைக்கிறார்கள். நான் சொல்லும் வார்த்தை என்னும்போது அந்த நிகழ்வின் உண்மைத்தன்மை உணரப்பட்டு ஆவணப்படம் போல் உரைக்கிறது.

செபால்ட் எழுத்துக்களைக் குறித்த அறிமுகத்தையும் சீபால்ட் குறித்த விமர்சனங்களின் மொழிபெயர்ப்புகளையும் தாங்கி இந்த சொல்வனம் இதழ் வெளியாகி இருக்கிறது.

“It seems to me then as if all the moments of our life occupy the same space, as if future events already existed and were only waiting for us to find our way to them at last, just as when we have accepted an invitation we duly arrive in a certain house at a given time.” 

WG Sebald, Austerlitz

  • ஸெபால்டின் நடையை சுருக்கமாகச் சொன்னால்
    • மனப்பதிவு கலந்த பயணக்குறிப்புகள்
    • புனைவில் கொஞ்சம் சரித்திரமும் தொன்மமும்
    • கதைசொல்லி என்பவர் சில சமயம் செபால்ட்; பல சமயங்களில் செபால்டுக்கே கதை சொல்லுபவர்
    • அந்தக் கதைசொல்லி அலைபாயும் தன்மை கொண்டவர்; மற்றவரின் அந்தரங்கங்களை அனுசரணை கலந்த பரிவுடன் அணுகுபவர்.
    • நாவலில் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவிக் கொண்டேயிருக்கும் போக்கு
    • ஸெபால்டின் கதைக்களன் அனைத்தும் ஐரோப்பாவையும் அதன் வரலாற்றையும் மட்டுமே சுற்றி வருபவை.
    • அவரின் எழுத்தில் பத்திப் பிரிவினைகள் எதிர்பார்க்கக் கூடாது.
    • ஒப்புமைகள், உருவகங்கள், உவமானங்கள் கிடையாது. வெறும் நேரடி.
    • புகைப்படங்கள் நிறைந்திருக்கும்; கருப்பு-வெள்ளை நிழற்படங்கள் அவை; அந்தப் படங்களுக்கு எந்த அடிக்குறிப்பும் இராது; அவை தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தும்.
    • யோர்ஹே லூயி ஃபோர்ஹே (Jorge Luis Borges) அவரின் ஆதர்சம்

செபால்ட் படிக்கும்போது கோணங்கியின் கல்குதிரை படிப்பது போல் இருக்கலாம். அவரின் வாசகங்கள் சுழல்பவை; ஆரம்பித்த இடத்திற்கு திரும்ப வருபவை; பிரதிபலிக்கும் கண்ணாடி போல் நிகழ்வை சொல்பவை. கதை கொஞ்சம் முன்னே நகர்வது போல் தோன்றினாலும் நடந்த அந்தக் கால விஷயத்திற்கே கவனத்தைக் கோரி திரும்பத் திரும்ப பழைய காலத்திற்கு கொண்டு நிறுத்துபவை.

“We learn from history as much as a rabbit learns from an experiment that’s performed upon it.” 

― W.G. Sebald

பொட்டு வைத்த சிறுத்தை

சொல்வனத்தின் இந்த இதழ் எழுத்தாளர் அம்பை குறித்த விமர்சனங்களையும் அவரின் சமீபத்திய கட்டுரைகளையும் தாங்கி வந்திருக்கிறது. இந்த இதழ் தயாரிப்பில் சற்றே பங்கு கொள்ள முடிந்தது.

அம்பையின் ஆக்கங்களைக் குறித்தும் அவருடன் பழகிய சில நாள்கள் குறித்தும் எழுத நினைத்திருந்தேன். எனக்கு மறதி அதிகம். ஒருவரை சந்தித்த உடன் அவரைப் பற்றி எழுதி விட வேண்டும். இல்லையென்றால் மொத்த கருத்தும் உருமாறி, பட்டாம்பூச்சி ஆகி பறந்து போய் விடும். பட்டாம்பூச்சி என்னும் எழுத்தாளர்களை ஏன் என் பார்வையில் புழுவாகக் குறுக்க வேண்டும் என்றும் யோசிக்க ஆரம்பித்ததால், இந்த மாதிரி குறுக்குவெட்டுத் தோற்ற மதிப்பீடுகளைக் குறைத்துவிட்டேன்.

எனினும், மற்றவர்கள் எழுதும் கட்டுரைகள் உதவியாக இருக்கின்றன. அவற்றை எங்கிருந்தாலும் (நியு யார்க் ரிவ்யூ ஆஃப் புக்ஸ் முதல் ஜெயமோகன் வரை) வாசிக்கிறேன். இந்த இதழில் அம்பை குறித்த மதிப்பீடுகள் வந்திருக்கின்றன.


In hot dry summer, the grass becomes drier, some part of the grass get burned. When grasshoppers feel the fire (more than warm), they begin to sweat, which can make the environment so wet that can effectively damp the prorogation of the fire

The Turing Guide
By Jack Copeland, Jonathan Bowen, Mark Sprevak, Robin Wilson

பெரியதொரு சோலை இருக்கிறது. அந்த சோலையின் தரை முழுக்க பச்சை பசேலென்று புல் முளைத்து கணுக்கால் காணாமல் போகுமளவு உயர்ந்திருக்கிறது. அங்கே நெருப்பு பற்றிக் கொள்கிறது. சோலை முழுக்க எரிந்து சாம்பலாக வேண்டியதுதான் பாக்கி. அந்த இடத்தில் வெட்டுக்கிளிகளும் இருக்கின்றன. அது வரை அங்கும் இங்கும் தாவி மண்ணில் கிடைத்த புழுக்களையும் காட்டு மலரின் அரும்பையும் சாப்பிட்டு பரவலாக ஓடித் திரிகின்றன.

பெருகும் நெருப்பின் வெம்மை வெட்டுக்கிளிகளையும் தாக்குகின்றன. அந்த வெட்டுக்கிளிகள் ஆங்காங்கே ஒன்று சேர்கின்றன. சிறு சிறு கூட்டங்களாக அமைத்துக் கொள்கின்றன. தீயினால் வெட்டுக்கிளிகளுக்கு வேர்க்கிறது. வியர்வையையும் பதற்றத்தையும் கட்டுப்படுத்த இறக்கைகளை அடித்துக் கொள்கின்றன. வியர்வைத் துளிகள் மண்ணை அடைகின்றன. படபடவென்று அடித்துக் கொள்ளும் இறக்கைகள் புல்வெளியின் பிரதேசங்களைக் குளிர்விக்கின்றன.

சோலை பெரும்பாலும் வெந்து எரிந்து சாம்பல் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. அப்போது, அதில் ஆங்காங்கே பசும்புல் இன்னும் தெரிகிறது. அது எப்படி சாத்தியம்?

மொத்த சோலையும் அல்லவா எரிந்து போயிருக்க வேண்டும்? எப்படி அந்த பாலைவனச் சோலைகள் உருவாகின?

அதற்கு அந்த வெட்டுக்கிளி கூட்டம்தான் காரணம். அவை ஒன்றாக ஒற்றுமையாக சேர்ந்து அருகருகில் நின்று கொண்டன. தங்களின் அச்சத்தை உழைப்பை வியர்வையாக சிந்தின. தங்கள் குட்டி சிறகுகளைக் கொண்டு விசிறி வீசின. அதில் பூமி குளிர்ந்தது. அந்தக் குளிர்ச்சி பசுமை எச்சத்தை விட்டு வைத்தது.

இந்த சொல்வனம் இதழ் அப்படி பல பெண்களின் பங்களிப்போடு உருவாகி இருக்கிறது.

சிறுத்தைப்புலியின் உடலைப் பார்த்தால் ஆங்காங்கே கரும்புள்ளிகள் தென்படும். அந்த மாதிரி ஆங்காங்கேதான் பெண்களின் பங்களிப்பு இந்த இதழில் தென்படுகிறது. எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கிறது.

வரிக்குதிரையின் முதுகைப் பார்த்தால் பத்து வெள்ளைக் கோடு இருக்கிறது என கணக்கிட மாட்டேன். சற்றே ஏறக்குறைய கருப்பும் வெண்மையும் சமமாக இருப்பதை உணர்வேன். ஆண்களும் பெண்களும் சமமாக மக்கள்தொகை கொண்ட நிலையில் இப்படி ஒரு கணக்கு போட்டு பட்டியல் போடுதல் அஞ்சத்தக்க நிலையே.

இருந்தாலும் காலங்கார்த்தாலே எழுந்து இன்று என்ன ஸ்டேட்டஸ் போடலாம் என்று இருபாலாரும் இன்று சமமாகவே யோசிக்கிறார்கள். நிலைத்தகவலுக்கு அடுத்த நிலைக்குச் செல்ல ஊக்கமும் எழுச்சியும் கிடைத்து வெட்டுக்கிளிகளும் பருந்தெனப் பறக்க வேண்டும்

குக்குரன்

அரூ: கனவுருப்புனைவு காலாண்டிதழ் – அறிவியல் சிறுகதைப் போட்டி முடிவுகளை முன்வைத்து சில அறிமுகக் குறிப்புகள்

ஒவ்வொரு கதையும் ஒரு நாயைப் போல. சில வளர்ப்பு நாய்கள் தங்களின் எசமானர்கள் சொன்னபடி கேட்டு நடக்கும். பெரும்பாலான ஜாதி நாய்கள் தங்கள் பெருமைக்கேற்ப நடந்து கொள்ளும். தெருவில் சுயம்புவாக விடப்பட்ட அனாதரவான நாய்கள் விதவிதமாக தங்கள் சுயரூபத்தை சமயத்திற்கேற்ப காட்டும்.

இந்தப் போட்டில் வெற்றிபெற்ற கதைகளும் அந்த நாய்களைப் போன்றவை. சில கதைகள் தங்கள் புனைவாளரின் நடைக்கும் பாவனைக்கும் கட்டுப்பட்டவை. அனேக கதைகள், ஜாதி நாய்களைப் போல், தமிழில் வரும் அறிவியல் புனைவுகளுக்கே உரிய வகையில் அமைக்கப்பட்டவை. தெரு நாய்கள் போல் சுதந்திரமான போக்கில் தான்தோன்றித்தனமான கதைகளும் இருக்கிறது.

போட்டி முடிவுகளை இங்கே பார்க்கலாம்.

அரூ போட்டியில் வெற்றி பெற்ற கதைகள் - தமிழ் எழுத்தாளர்கள்

ஒவ்வொரு கதைக்கும் ஒரு குறியீட்டை வைத்து அறிமுகம் செய்து வைக்கலாம். இன்று எடுத்துக் கொண்டிருக்கும் படைப்பு: பல்கலனும் யாம் அணிவோம்ரா.கிரிதரன்.

அப்பாவுடன் புராதனமான கோயில் வளாகத்துக்குச் சென்றபோது, “மயக்கும் கண்களைப் பாருடா. எப்படிச் செருகிக்கிடக்கு பார். தூங்கறான்னு நினைச்சியா? மனசு அப்படியொரு விழிப்போடு இருக்கு.” என்பார். “மனசா?”. “ஆமாம்,” எனச் சொன்னவர் என் கண்களை நேராகப் பார்க்கவில்லை. மனசு என்பது புராணப்பொருள். இன்றைக்கு மனசுக்குள் இருக்கும் பல அடுக்குகளுக்கு இடையே செய்தி பகிர்ந்துகொள்ளும் விதம் பற்றி எல்லாருக்கும் தெரியும். அப்பாவிடம் கேட்டால், அந்தச் செய்திகளை முழுமையாகத் தெரிந்துகொண்டால்கூட மனதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியாது என்பார். மனசு எனப் பேசுவதுகூடப் பழைய பாணி ஆகிவிட்டது. பல தலைமுறைகளுக்கு முன்னர் வாழ்ந்த மூத்தக்கிறுக்கர் வரிசையில் உங்களைச் சேர்த்துவிடுவார்கள்.

நாய்க்குட்டியை வளர்ப்பதற்கென்று விதிமுறைகள் இருக்கின்றன. அதனுடன் நிறைய நேரம் செலவிட வேண்டும். அது பீ பெய்வதற்கு, அந்த நாய்க்குட்டி எங்கெல்லாம் இழுக்கிறதோ அங்கெல்லாம் செல்ல வேண்டும். அந்த நாய்க்குட்டி திடீரென்று பின்னிரவு இரண்டரை மணிக்கு உங்களை எழுப்பும். அப்பொழுதும் கவனமாக விழிக்க வேண்டும். நாய்க்குட்டிகள் அச்சுபிச்சென்று வெறி கொண்டு துள்ளியோடும். அப்பொழுது அதைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு, கொஞ்சினால், உறவாடினால்… உங்களிடம் பெட்டிப் பாம்பாக உள்ளடங்கி வசப்படும். அதற்கு பதிலாக, அந்த மாதிரியான வெறியாட்டா நேரங்களில், அதனுடன் முரண் கொண்டு விளையாடினால், கவனமாக நம் உடம்பை ரணமாக்காமல் பாதுகாப்பாக ஓட வேண்டும். நாய்க்குட்டிகள் வளர்ந்து முதிர்ச்சியடைய இருநூறு நாள்களுக்கு மேல் காத்திருக்க வேண்டும். நன்றியுள்ள நாயை அடைய எருமைப் பொறுமை அவசியம்.

இந்தக் கதையும் நாய்க்குட்டி போல் தறிகெட்டு ஓடுகிறது. எதற்காக எந்த வாயிலைப் பிராண்டுகிறது என்பது புலப்படுவதற்குள் அடுத்த ஏவுகணையை நோக்கி ஓடுகிறது. நிறைய நேரமும் சிரத்தையும் கவனத்தையும் கோருகிறது. மீண்டும் மீண்டும் சொன்னதையேத் திரும்பச் சொல்லி நாய்க்குட்டிக்கு புரிய வைப்பது போல், சில பத்திகளை மீண்டும் மீண்டும் வாசித்து புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. முக்கியமான திறப்புகளை இந்தக் கதை மூலம் அடைய எருமைப் பொறுமை அவசியம்.

கதையின் பலங்கள்

  • அக்காவிற்கும் தம்பிக்குமான பாசம்
  • அப்பா மேல் உள்ள ஆதர்சம்
  • வேதாந்த மேற்கோள்கள்
  • கனவு விவரிப்புகள்

கதையின் சவால்கள்

  • தற்கால சிறு பத்திரிகை வாசிக்கும் தமிழ் வாசகர்களை குறிவைத்த அசுவாரசிய நடை
  • கதாமாந்தர்கள் மீது ஈர்ப்போ இரக்கமோ ஏற்படாத தன்மை
  • நிறைய பொறுக்கு தகவல்கள் ஏற்படுத்தும் குவியமின்மை

இங்கே வாசிக்கவும். உங்கள் வாசிப்பின் முடிவில் என்ன தோன்றுகிறது என்பதைப் பகிருங்கள்.

உடன்வந்தி அருநிழல்

தெளிவு, உறுதி, இறுதி, உண்மை போன்றவற்றையும் மையம், நிர்ணயம், முழுமை என்பவற்றையும் ஓயாமல் வலியுறுத்தும் ஆதிக்க கருத்தியல்களுக்கும் கேள்விகள் இன்றி ஒப்படைப்பையும் முழு நம்பிக்கையைம் கொண்டியங்கும் பொதுக்கள மதிப்பீடுகளுக்கும் இடையில் உள்ள நுண் இணைப்புகள் கேள்வி மறுப்பு, ஆய்வு மறுப்பு என்பவற்றின் மூலமே உறுதிப்படுத்தப்படுகின்றன. இந்த நுண் இணைப்புகளைத் துண்டித்து கேள்விகளைப் பெருக்கும் சொல்லாடல், கதையாடல், எடுத்துரைப்பு என்பவற்றை உருவாக்கும் செயல்தான் சமூகத்தை அறம்சார் அரசியல் நோக்கி நகர்த்தக் கூடியது.
: பிரேம் – ரமேஷ்
16-03-2006

அமெரிக்கக்காரி சிறுகதையை முன்வைத்து

புழல் சிறையில் சிறைக்கம்பிகளை எண்ணும்போதுதான் அந்த ஈ அவன் கண்ணில் பட்டது. அதற்கு மெள்ள பயிற்சி தர ஆரம்பித்தான் அந்தக் கைதி. கயிற்றில் மேல் நடப்பது, ஒற்றைச் சக்கர வண்டியை கயிற்றின் மேல் விடுவது, சாதத்தில் கல் பொறுக்குவது போன்றவற்றை அந்த ஈ கற்றுக்கொண்டது. நாளடைவில் இளையராஜாவின் எல்லாப் பாடல்களையும் ஹம்மிங் கொடுக்கவும் தெரிந்துகொண்டது. “நான் இன்னும் ஒரு வாரத்தில் ரிலீஸ் ஆயிடுவேன். நாம் இரண்டு பேரும் இந்த ஜெயிலை விட்டு வெளியே போனப்புறம் உன்னை வைத்து வித்தை காட்டப் போகிறேன். இருவரும் பெரும் புகழடைவோம்.” என்று அதனிடம் சொல்லி வைத்திருந்தான். விடுதலையும் ஆனான். ஈயை ஒரு வத்திப் பெட்டியில் பத்திரமாக வைத்து, சட்டைப்பையில் கீழே விழாதபடிப் பார்த்துக் கொண்டு வெளியுலகை அடைந்தான். டாஸ்மாக் வளாகத்தில் ஈயை திறந்து விட்டு, ‘அந்த நிலாவத்தான் நான் கையிலப் புடிச்சேன்…’ பாடலைப் பாட வைத்தான். “பார்த்தியா அந்த ஈய?!” என்று சக குடிகாரரிடம் சொல்லவும் அவர் தி இந்து நாளிதழை வைத்து அந்த ஈயைப் பட்டென்றுக் கொல்வதற்கும் சரியாக இருந்தது.

இந்த நகைச்சுவை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமென்றால், நான் ஈ + சிறை எனத் துவங்கியவுடனே என்னை அடித்து நிறுத்தி சிரித்துக் கடந்துவிடுவீர்கள். ஏனென்றால், தெரிந்ததை எதற்கு மறுபடி சொல்லிக் கொண்டிருப்பானேன் – என்பது எண்ணமாக இருக்கும். இதற்கு நாளடைவில் ஜோக் #73 என்று எண் கூட கொடுத்து வெறும் எண்ணைச் சொல்லி நாமிருவரும் சிரித்துக் கொண்டிருக்கலாம். அ. முத்துலிங்கம் எழுதும் சிறுகதைகளைக் கூட இப்படி தடாலடியாக தட்டையாக விமர்சிக்கலாம் என கோகுல் பிரசாத் பதிவு மூலம் தோன்றியது.

அ முத்துலிங்கத்தின் எழுத்துகளிடையே ஆறு வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியாது. இலக்கிய உலகில் இந்த மாதிரி நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். எதனிலிருந்தும் விலகி நிற்க வேண்டும் எனும் தத்துவத்தை அ முத்துலிங்கம் தவறாக புரிந்து கொண்டு விட்டார் என நினைக்கிறேன்.

அமெரிக்கக்காரி சிறுகதையை நான் இங்கே சுருக்கித் தரப் போவதில்லை. அது மே 2009 காலச்சுவடு இதழில் வெளியாகி இருக்கிறது. அங்கேயே வாசிக்கலாம்.

அந்தக் கதை எங்கே என் வாழ்வை உணரவைத்தது என்றும் எவ்வாறு இன்றைய அமெரிக்காவின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ஓவியமாகத் தீட்டுகிறது என்பதையும் அ. முத்துலிங்கம் என்னும் மனிதர் எவ்வாறு இந்தப் புனைவில் தெரிகிறார் என்றும் பதிந்து வைக்கிறேன்.

~oOo~

காதலில் கூச்சங்கள் கிடையாது

confidence_confession

ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது ஒரு வகை. உங்களை நம்பகமானவராக நினைத்து என்னுடைய அத்யந்த ரகசியங்களை தனிமையில் சொல்வது என்பது விசுவாசம் கலந்த துறவுநிலை. இந்த இரண்டு நிலைகளும் வெவ்வேறாகத் தோன்றினாலும் சொல்லும் விதத்திலும் நிபந்தனையற்ற விதிகளில்லா திறந்தவெளிகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் நேரெதிர் நிலைப்பாடுகளை உருவாக்குபவை. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்காகாரி’ கதை இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்த வகை. உங்களிடம் நம்பிக்கை வைத்து சினேக மனோபாவத்தோடு விஷயத்தைச் சொல்கிறார்.

அமெரிக்கா வந்த புதிதில் அந்தச் சிக்கல் என்னிடம் இருப்பதே எனக்குத் தெரியவில்லை. பெரிய பெரிய புலமையான வார்த்தைகளான rationale என்பதில் ஆரம்பித்து Amazon நிறுவனம் வரை எல்லாவற்றையும் அமெரிக்கர்களிடம் சொல்வேன். அவர்களுக்குப் புரியாது. நாலைந்து முறை சொன்னால்தான் விளங்கும். இப்போது இந்த சிக்கல் என் பேச்சோடு இருப்பது என நான் அறிந்திருக்கிறேன். நிறுத்தி நிதானமாகச் சொல்லப் பார்க்கிறேன். இந்த மாதிரி குழப்பங்களை கதைப் போக்கில் சொல்லிச் செல்லும்போது, ‘அட… மதி என்பவளைப் பார்த்தால் என்னைப் பார்ப்பது போலவே இருக்கிறது!’ என்னும் அன்னியோன்யம் எழ வைக்கும் லாவகம் அனாயசமாக வந்து போகிறது.

இந்த மாதிரி விஷயங்களை எழுதும்போது தன்னிரக்கம், தவிப்பு, சலிப்பு, துக்கம் எல்லாம் மேலிட்டு விடலாம். புரிந்து கொள்ளாத சமூகத்தின் மேல் அறச்சீற்றம் கூட எழலாம். இப்படி சிதைவுக்குள்ளாக்குகிறார்களே எனக் கோபம் தோன்ற வைக்கலாம். அது ஒப்புதல் வாக்குமூல எழுத்து. அதில் முத்துலிங்கத்திற்கு நம்பிக்கை கிடையாது. உங்களை கொம்பு சீவி விட்டு, உணர்ச்சிகளைத் தூண்டுவது அவர் நோக்கமல்ல. ”இந்த மாதிரி எனக்கு நடந்தது… ஏன் அப்படி நடந்தது தெரியுமா?’ என்று நமக்கு நன்கு அறிமுகமானவர்களின் ரகசியங்களை கிசுகிசுவாக இல்லாமல் விசுவாசமாகப் பகிர்கிறார். பாவ மன்னிப்பு வேண்டாம்; புரிந்து கொண்டால் போதும் என்பது அவரின் உத்தி.

~oOo~

a-shadow-on-the-cloud-is-the-shadow-of-this-very-same-plane-on-the-picture-taken-on-a-flight-from-4

உடன்வந்தி அருநிழல்

இதே சிறுகதை குறித்த விமர்சன அறிமுகத்தில் ரா. கிரிதரன் இவ்வாறு எழுதுகிறார்:

கதையில் இலங்கைக்காரி தனது அமெரிக்கக்காரியை வென்று எடுக்கும் இடமாக இப்பகுதி அமைந்துள்ளது.

யுத்தம் நடந்து கொண்டிருக்கும் நகரத்தில் பஸ் பிடித்துச் சென்று அமெரிக்காவுக்குத் தொலைபேசும் தாயார் என்ன குழந்தை, பெயர் என்ன எனப் பெரும் இரைச்சலுக்கு நடுவே கேட்கிறாள். இவள் சொல்வதெல்லாம் குழந்தை ஒரு அமெரிக்கக்காரி என்பதுதான். ஆம், இவளைப் போல் இல்லாமல், அமெரிக்கா எதுவோ அதிலெல்லாம் இயல்பாய் பொருந்திப் போகும் அமெரிக்கக்காரியாக அவள் வளர்வாள்.

விமானப் பயணங்களின் போது நீங்கள் அந்த விமானத்தின் கூடவே பயணிக்கும் நிழலை கவனித்து இருக்கலாம். அ முத்துலிங்கத்தின் எழுத்தும் அது போல் நம்முடன் எப்போதும் வரும். அது நம்மைப் பற்றி சொன்னாலும், நாமே அதில் இருந்தாலும் கூட, விண்ணில் நாம் பறந்து திரிந்தாலும் அதை மண்வாசனையோடு தரையில் கொணர்ந்து நம் பயணத்தை பிரதிபலிக்கும். அதில் நம்முடைய வாழ்க்கையின் சாயல் இருக்கும்; ஆனால், அதற்காக கண்ணாடியைப் போல் பிரதிபலிக்காது. உங்கள் வயதிற்கேற்ப, அனுபவத்திற்கேற்ப, பிரபஞ்ச ஞானத்திற்கேற்ப அது சில சமயம் விரிவடையும்; சில சமயம் சுருங்கும்; சில சமயம் காணாமலே கூட போகும். விமானத்தினுள் பெருச்சாளி ஓடுகிறதா என்பதில் அசட்டையாக தூங்கிவிட்டு, அ முத்துலிங்கம் என்னும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால் புதிய தரிசனங்கள் கிட்டிக் கொண்டேயிருக்கும்.

அமெரிக்காகாரிக்கும் இந்தியக்காரிக்கும் இலங்கைக்காரிக்கும் என்ன வித்தியாசம்?

நிழலைப் பார்த்தால் மனிதர் தெரிவார். நிஜத்தைப் பார்த்தால் என் தலைமுடியின் வண்ணம் தெரியும். அது பிறந்த தேசத்தையும் வயதின் ரேகையையும் உணர்த்தும். தோலின் நிறம் காட்டிக் கொடுக்கும். குரல் எடுத்து பேசினால் இங்கிலாந்தா ஆப்பிரிக்காவா ஆசியாவில் சீனாவா ஜப்பானா என்று அறியலாம். உங்களின் மொழி, உடை எல்லாமே உங்களைக் குறித்த பிம்பங்களை உணர்த்தும். தெற்காசியரா… இப்படித்தான் பேசுவார்; இன்ன தொழில் செய்வார். ஆப்பிரிக்க அமெரிக்கரா… கொண்டாட்டத்தில் திளைப்பவராக இருக்கக் கூடும் என்று முன்முடிவுகளை நீங்கள் ஒரு வார்த்தை சொல்வதற்கு முன் அடுத்தவரை ஒருதலைப்பாடான பாதைக்கு இட்டுச் செல்லும்.

இதில் நிழலைப் பார்த்தால் எப்படி அமெரிக்காகாரி, எவர் இலங்கைக்காரி என்று கண்டறிவோம்? இருவரும் வீடு வாங்க பணம் சேமிக்கிறார்கள். இருசாராரும் தங்களின் கணவர்களைத் தேர்ந்தெடுக்க சில பொதுவான சித்தாந்தங்களை வைத்திருக்கிறார்கள். ஒருவர் வேகமாக முடிமெடுப்பவர், இன்னொருவர் பந்தத்திற்காக எதையும் செய்பவர் என்றெல்லாம் பிரிக்கலாம். அதற்குத் தகுந்த வினா எழுப்பி, ஒவ்வொருவரின் குணாதிசயங்களைக் கண்டடையலாம். அது சாத்தியம். ஆனால், அமெரிக்காகாரி இப்படித்தான் நடந்துப்பாள் என்றும் இலங்கைக்காரி அப்படித்தான் செய்வாள் என்பதும் சொல்லமுடியாது. அதை இப்படி போட்டுடைத்த மாதிரி சொல்லாமல் பூடகமாக உணர்த்துவது எப்படி?

அ முத்துலிங்கத்தின் கதையைப் படியுங்கள். உங்களுக்கும் சூட்சுமமாக விளங்கலாம்.

டால்ஸ்டாயின் அன்னா கரீனினாவின் தொடக்க வாசகம் புகழ்பெற்றது. ‘மகிழ்ச்சியான எல்லா குடும்பங்களும் ஒரேமாதிரியாக இருக்கின்றன, துயரமான குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் துயரப்படுகின்றன’. அதை இந்தக் கதையில் இவ்வாறு வருவதாக சொல்லலாம்: “மனிதர்களின் அடையாளங்கள் எல்லா நாடுகளிலும் ஒரேமாதிரியாக இருக்கின்றன. அவர்களின் குணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வசப்படுகின்றன.”

~oOo~

உண்மை கலந்த நாட்குறிப்புகள்

‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்னும் முத்துலிங்கம் எழுதிய நாவலின் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்:

டேவிட் பெனியோவ் என்ற புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஒரு நாவல் எழுதினார். 1942ல் ஜேர்மன் படைகள் ரஸ்யாவின் லெனின்கிராட் நகரத்தை முற்றுகையிடுவதுதான் நாவலின் பின்னணி. பதினெட்டு வயது இளைஞராக அப்போஉது இருந்த அவருடைய தாத்தா, டேவிட்டுக்கு அந்த சம்பவங்களை விவரிக்கிறார். எவ்வளவு விவரித்தாலும் டேவிட்டுக்கு அவை நாவல் எழுதும் அளவுக்கு போதுமானவையாக இருக்கவில்லை. ‘அன்று காலநிலை என்ன? ஆகாயம் எந்த நிறத்தில் இருந்தது? அந்தப் பெண்ணின் தலைமுடி குட்டையானதா, நீளமானதா?’ என்று தாத்தாவை கேள்விகளால் திணறடித்தார். அதற்கு தாத்தா சொன்ன பதில், ‘டேவிட், நீதானே நாவலாசிரியர். இட்டு நிரப்பு. அதுதானே உன் வேலை.’

டேவிட்டுக்கு அவர் தாத்தா சொன்ன புத்திமதிகள், நினைவலைகள் எழுதும் எவருக்கும் தேவை என்றாலும், வாசகருக்கும் தேவை.

உதாரணத்திற்கு லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரேனினா நாவலை எடுத்துக் கொள்வோம். அது லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாயைப் பற்றியது அல்ல. ஆனால், அவரைப் போன்ற மனிதர்களைப் பற்றிய சித்தரிப்பு அந்த நாவல். அல்லது, தான் எப்படிப்பட்ட மனிதராக இருந்திருக்க வேண்டும் என நினைத்தாரோ அதன் பிரதிபலிப்பாக அந்தக் கதைமாந்தர்கள் இருக்கிறார்கள். அந்தக் கதாமாந்தர்கள் சில சமயம் உங்களுக்கு அசூயை தரலாம்; அல்லது உத்வேகம் தரலாம். இரண்டுமே நாவலாசிரியரின் வெற்றியே.

முத்துலிங்கம் குறித்து வாழ்க்கை வரலாறு எழுதுபவர்கள் சீக்கிரமே சலித்துவிடுவார்கள். அன்றாடம் என்ன செய்தார், எந்த ஊரில் தங்கினார், எவருடன் உரையாடினார், என்ன கோப்புகளை முன்னெடுத்தார், எவ்வாறு பழகினார், எதைக் குறித்து கதைத்தார், எப்பொழுது உண்டார் என்பதெல்லாம் வெகு எளிதாக கண்டுபிடிக்கலாம்; பதிவு செய்யலாம். அவர் எதைக் குறித்து யோசித்தார் என்பதும் இருபது புத்தகங்களுக்கு மேல் அச்சில் வெளிவந்து அனைவருக்கும் ஏற்கனவே வாசிக்கக் கிடைக்கிறது. அப்படியானால் விமர்சகரின் கடமை என்பது ’அமெரிக்காகாரி’ சிறுகதையோ, நாவல் விமர்சனமோ, கதாசிரியரின் கருத்தொட்டி, தொக்கி நிற்கும் ஆசிரியரை புனைவில் இருந்து விடுவித்து பொருள்காணுதல் என்பதேயாகும்.

சுதந்திரம் அடையாத சிலோனில் பிறந்தவர். பதின்ம வயதில் இலங்கை விடுதலை அடைவதைப் பார்க்கிறார். மின்சாரம் இல்லாத கிராமத்தில் வாழ்க்கையைத் துவங்கியவர். பெரிய குடும்பம் – ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். அங்கிருந்து உலகெலாம் பயணிக்கிறார். நவீன வசதிகளின் கண்டுபிடிப்பையும் அதன் பயன்பாடையும் பார்க்கிறார். அவருடைய வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால், ‘தென்னம் பொச்சில் நெருப்பை வைத்து மூட்டி ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு நெருப்பை எடுத்துச் சென்று, ஒரு குச்சி நெருப்பு ஒரு கிராமம் முழுவதற்கும் போதுமானதாக இருந்ததில்’ வாழ்க்கையைத் துவங்கி, ஒரு நொடி இணையம் இல்லாவிட்டால் வாழ்க்கை சலித்து அபலையாய்த் தவிக்கும் நகர சமூகத்திற்கு குடிபெயர்ந்தவர்.

roulette-wheel

சூதாட்ட மையங்களில் ரூலே சக்கரத்தைப் பார்த்திருப்பீர்கள். அந்தச் சக்கரத்தில் பல்வேறு எண்கள் தாறுமாறாக கலைந்து கிடக்கும்; சிவப்பு, கருப்பு நிறம் இருக்கும். சக்கரத்தை சுழலவிட்டு பந்தை அதன் தலையில் போடுவார்கள். பந்தோ எங்கும் நிற்காமல் குதித்து, தாவி ஓடும். எந்த எண்ணில் பந்து நில்லாமல் ஓடாமல் இறுதியில் நிலைத்திருக்கிறதோ, அந்த எண்ணில் பந்தயம் கட்டியவருக்கு வெற்றி. அன்றைய சிலோன் இதைப் போன்ற சூதாட்டக் களம் என்றால், சுதந்திரம், விடுதலைப் புலி, டொனால்ட் டிரம்ப் என்று எந்தக் காலகட்டத்தை வேண்டுமானாலும் இதே போன்ற நிலையற்ற சுழல்பந்தின் குதியோட்டத்தோடு தொடர்பாக்கலாம். ஆனால், அ. முத்துலிங்கம் தன் ஒவ்வொரு கதையிலும் சுழலுகிறார். மாணவன், அசட்டைப் பேர்வழி, மோசடி பிரகிருதி, போர்வீரன், வாத்திய வாசிப்பாளர், எல்லாம் தெரிந்தவர், சூதாட்டக்காரர், துப்பறியும் சாம்பு, நிருபர், ஆசிரியர், தந்தை, தாயுமானவன், பண்டிட், இயற்கையை நேசிப்பவர், போராளி, நம்பிக்கைவாதி – உங்களுக்கு இதில் எத்தனை பேர் இந்தக் கதையில் தெரிகிறார்கள்?

பிடிப்பிடம்

கொஞ்சம் கம்மி எதிர்பார்ப்புடன் இந்தக் கதையைப் படிக்கத் துவங்கினேன். ஹரன்பிரசன்னாவின் ’வியாழன் இரவு’ மற்றும் ’சீடன்’ இந்த ஏமாற்றம் கலந்த தயார் உணர்வைத் தந்திருந்தது.

ஆனால், இதுதான் இவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பிற்கான தலைப்பு ஆக்கம் – ‘புகைப்படங்களின் கதைகள்’. புனைவின் முகப்பிற்கு ஏற்ற பன்முகம் காட்டும் தலைப்பு என்பதால் இதை வைத்திருப்பார்கள். அது பொருந்தும்.

சிறுகதையை இங்கு சுருக்கித் தரப் போவதில்லை. பதினைந்து நிமிடங்களுக்குள் நீங்கள் வாசித்து விடலாம். வாசித்தால் நல்ல அனுபவம் கிடைக்கும். எனவே, வாசித்து விட்டு வாருங்கள். அதுவரை பொறுமையாகக் காத்திருக்கிறேன்.

haranprasanna : புகைப்படங்களின் கதைகள் – சொல்வனம்

ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு, அந்த விஷயத்தில் முழுமையாக மூழ்கி எழுவதற்கு நல்ல உதாரணக் கட்டுரையாக இதைச் சொல்லலாம்: Pyre | Amitava Kumar | Granta Magazine. இந்தக் கதை ஒருவரை எடுத்துக் கொண்டு, அவரின் வாழ்க்கையில் மூழ்கி எழுவதற்கு நல்ல உதாரணம்.

ஜான் பெர்கர் கதை வாசிப்பைப் பற்றி கூறும்போது ‘ஒரு கதையை வாசிக்கும்போது நாம் அதனுள் குடிகொள்கிறோம், அதனுள் ஜீவிக்கிறோம். அடுத்து நடப்பவை எல்லாம் அந்தக் கதையின் நான்கு சுவர்களுள் மாத்திரமே நடக்கும். ஒரு கதையின் குரல் அனைத்தையும் தன் சொந்தமாக மாற்றுவதால் மட்டுமே இது சாத்தியமாகிறது’ என்கிறார். இந்தக் கதையில் அது நடக்கிறது. எதோவொரு வரியில் என் வேட்டி விலகியிருப்பதையும், அதை ஒழுங்கு செய்வதையும் உணர்ந்தேன். இன்னுமொரு இரண்டு பத்தி கழித்து, என் குடும்பத்தின் அங்கத்தினர்களை மரமாக வரைந்து, ஒவ்வொருவரின் மலரும் நினைவுகளையும் ஆவணமாக்கிப் பதிந்தேன்.

இந்த ஆக்கம் நாவலுக்கான விதை. ராம் என்னும் பேரனிடம் தாத்தாவின் அனுபவங்கள் எவ்வாறு அவன் வாழ்வின் முடிவுகளை எடுக்க வைக்கிறது என்று சொல்வது, தாத்தாவிற்கும் அவரின் மகனுக்கும் நடுவில் இருக்கும் கடமையில் ஊறிய பாச நிர்ப்பந்தங்களும் கோடிட்டு மட்டுமே காட்டப் பட்டிருக்கிறது. இதன் அடுத்த அத்தியாயங்களை முழுமையாக்கி முழுநீள புனைவாக்க வேண்டும் என்பது நாராயண் ராவின் ஆசையாக இருந்திருக்கும்.

prasanna

பாதை தெரியுது பார்?

ழான் பால் சார்த்தர் எழுதிய வெளியேறாதே (“No Exit”) படித்திருப்பீர்கள். அதில் மூன்று தொலைந்து போன ஆத்மாக்கள் ஒருவரையொருவர் காலாகாலத்திற்கும் படுத்திக் கொண்டேயிருக்கும். அந்த மூவரின் முந்தைய வாழ்க்கையின் நுண்ணிய மறந்துவிட வேண்டிய தகவல்களையும் ஒவ்வொருவரும் நினைவில் வைத்திருந்து, சமயத்திற்கேற்ப நினைவு கூர்ந்து அசௌகரியமாக்கிக் கொள்ளும். மற்றவர்களை எவ்வாறு கோபத்தின் உச்சிக்குத் தள்ளுவது என்பதை பரிசோதித்துப் பார்த்துக் கொள்வார்கள்.

அதில் இருக்கும் புகழ்பெற்ற வரி: “நரகம் என்பது பிற மாந்தர்கள்” (“Hell is other people.”)

இது குழம்பிக் கொள்ளக் கூடிய கவித்துவமான வரி. எல்லாவிதமான உறவுகளும் நட்புகளும் தவிர்க்கவியலாமல் கசப்பில் போய் முடியும் என்னும் அனர்த்தம் – நேரடி கற்பிதம். ஆனால், மற்றவர் எப்படி நம்மை அவதானிக்கிறார்களோ, அப்படிதான் நாமே நம்மை மதிப்பிடுகிறோம்.. பிறர் எவ்வாறு நினைப்பார்கள் என்பது பொதுபுத்தி ஆக நம் மனதில் தங்கியிருக்கிறது; அதற்கேற்ப நம்மை இலக்காக்கிக் கொள்கிறோம்.

சொல்வனத்தில் வெளியான ’பழனி’ கதை – மற்றவர்கள் எவ்வாறு தங்களின் தீர்ப்பை பழனியின் மீது எழுதுகிறார்கள் என்பதைச் சொல்கிறது. வழக்கமான பாணி; சாதாரணமான நடை. ஆனால், அந்தக் கதைக்கு இப்படியொரு பருந்துப் பார்வை பார்க்க முடியும் என்பது — கபாலி பாஷையில் *மகிழ்ச்சி*
mw-hell-is-other-people-natalie-dee-jean-paul-sartre-play_no-exit

பெருநகரங்களின் தனிமை

எனக்கு ஒரு இடத்தை எடுத்துக் கொண்டு, அந்த நகரத்தின் இண்டு இடுக்குகளையும், பிரதேசத்தின் எல்லைகளையும், நாட்டின் குணங்களையும் ஊடே கொடுத்துக் கொண்டு, கதை சொல்லும் பாணி பிடிக்கும். சொல்வனத்தில் வெளியான இந்தக் கதையை வாசித்தவுடன் ZYZZYVA இதழில் Héctor Tobar எழுதிய “Secret Stream” கதை நினைவிற்கு வந்தது.

அந்தக் கதையில் ஒரு இளைஞனும் இளைஞியும் அகஸ்மாத்தாக சந்திக்கிறார்கள். இளைஞனோ லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் சைக்கிளில் பயணித்து விநோத வரைபடங்கள் தயாராக்கி நண்பர்களுடன் நகரின் ஆழங்களைக் கண்டறிபவன். இளைஞியோ ’எல்லே’ (LA) நகரின் நீர்த்தளம் காண்பவர். தொலைந்து போன நதிகளை அறிந்து கொள்ள விழையும் தன்னார்வலர். இருவரும் தனியர்கள். கரணம் தப்பினால் காதல் வந்துவிடும். ஆனால், உருவாகவில்லை. அவர்கள் எல்.ஏ. நகரத்தின் ஹாலிவுட் மலைப்பகுதிகளில் உலா வருகிறார்கள். காடு, மேடு, தனியார் சொத்து, அத்துமீறி உள்நுழைதல் எல்லாம் சாகசமாகச் செய்கிறார்கள்.

என்னுடன் நட்பு கொண்ட, கூட வேலை பார்த்த எவரோ எப்போதாவது என்னுடைய நகரத்திற்கு வருவார்கள். என்னை சந்திக்க இயலுமா என வினவுவார்கள். அவர்களின் பிசி கடமைகளிலும் எனக்காக நேரம் ஒதுக்குவார்கள். கொஞ்ச நேரம் அவர்களுடன் பழங்கதை பேசுவேன்; கொஞ்சம் மது; நிறைய கொண்டாட்டம் நிறைந்த தருணங்கள். அவர்கள் என்னை உதாசீனப்படுத்தி, ஊருக்கு வந்த சுவடே தெரியாமல் போயிருக்கலாம். என்னுடைய அதிகப்பிரசங்கித்தனங்களும் போதாமைகளும் அவர்கள் உள்ளூற அறிந்தே இருக்கிறார்கள். இருந்தாலும் என்னை சந்திப்பதை முக்கியப்படுத்தி, எனக்கு மதிப்பு கொடுத்து, நேரம் ஒதுக்குவார்கள். அது கோடையைப் போல் சுகமானது (“That Summer Feeling”) என்பார் Jonathan Richman.

சொல்வனத்தில் வெளியான இந்தக் கதை அந்த அந்தர்வாகினி ஆற்றுக்கு எதிராக ஓடுகிறது. இந்தக் கதையில் வரும் மூன்று, நான்கு துண்டுச் சம்பவங்களை எது இணைக்கிறது என்று உடனடியாகப் புலப்படாது. இளைஞன், முதியவர், பின் குழந்தை என்று மூன்று பருவத்தில் Protagonist-ஐ தொடர்பவர்கள் உண்டு. என்ன பிராயங்களில் இந்த மூவரைக் கடக்கிறாள் என்பதும் தெளிவாக இராது. சம்பவங்களில் முதல் சம்பவம் சுட்டுகிற சிறு அச்சம் இரண்டாவதில் இல்லை, மூன்றாவதில் அந்த அச்சம் சொல்லப்பட்டாலும் ஏனென்பது தெளிவில்லை.

காலம் ஒரு myth , மாயை என்பதற்கான குறியீடு. இந்தக் கதை வாசகனின் கற்பனையில் பல அடுக்குகளோடு, பல விதமான சாத்தியக்கூறுகளோடு விரிவடையும் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்டிருக்கிறது. எனக்கு இந்த மாதிரி பூடகமான விஷயங்களைச் சொல்ல இன்னும் மெனக்கிட வேண்டும் என்பது சொந்தக் கருத்து. அதாவது முன்னூறு பக்கம் எழுதிவிட்டு, உள்ளடக்கமாக சில விஷயங்களை சொருகியிருக்கிறேன் என்றால் நம்புவேன்; அந்தப் புனைவை சிரத்தையாக வாசிப்பேன். முன்னூறு வார்த்தைகள் எழுதிவிட்டு ’பொருள் தொக்கி நிற்கிற மாதிரி எழுதுகிறேன்’ என்றால் பொறுமையின்மை என்றே சொல்லவேண்டும்.

கதை என்றால், எழுதப்பட்ட இடத்தில் வசிப்பதற்கு மனம் ஏங்க வேண்டும். அல்லது அந்த இடத்திற்கு செல்வதற்கே கூச்சமும் அச்சமும் எழ வேண்டும். கதையில் உலவும் கதாபாத்திரங்களுடன் உரையாட, அந்த உரையாடல் நீங்காமல் தொடர்ந்து கொண்டேயிருக்க பிரியப்பட வேண்டும். புனைவில் சொல்லப்பட்டவர்களிடம் கேட்பதற்கு கேள்விகள் எழ வேண்டும். இந்தக் கதையில் அந்த இலக்கு நிறைவேறுகிறது. எனவே, படிக்கக் கூடிய கதை.

கதையை நீங்களும் வாசித்து உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள்.

clock_brain_human_rock_tree_oil_water_flow_house_home_think_alone_art_painting_imagine

மத்திய தர வகுப்பினர்களின் அகமகிழ்வை கருத்துருவகம் ஆக்கும் புனைவு

க்யூபா குறித்தும் சே குவெராவின் எழுத்து குறித்தும் ஃபிடல் காஸ்ட்ரோவின் அரசியல் புரட்சிகள் குறித்தும் ஹுலியோ கோர்தஸார் என்ன நினைக்கிறார்? அதை எவ்வாறு தன் புனைவில் வெளிப்படுத்தியுள்ளார்? அதற்கு நீங்கள் அவருடைய ‘மறுசந்திப்பு’ கதையை வாசிக்க வேண்டும்.

இந்த சொல்வனம் இதழில் வெளியாகி இருக்கிறது.

சேகுவேரா சொந்தமாக எழுதிய ”Reminiscences of the Cuban Revolutionary War” என்னும் அனுபவ நூலின் அடிப்படையில் இந்தக் கதை இயங்குகிறது. சே எழுதிய புத்தகத்தில் வரும் பத்திகளின் மறுபக்கத்தை, கோர்தஸார் நமக்கு இங்கே உணர்த்துகிறார். சந்திப்பில் லூயிஸ் என்பவரும் மருத்துவர் சே என்பவரும் மீண்டும் ஒன்றிணைகிறார்கள். லூயிஸ் என்பது அவருடைய அசல் பெயர் அல்ல என்பது கதையின் துவக்கத்திலேயே சொல்லப்படுகிறது. லூயிஸ் என்பது பிடல் காஸ்ட்ரோ.

புரட்சி என்பதும் போராட்டம் என்பதும் காதலியுடன் ஆன முதல் உறவு போல் கனவுகளும் அபிலாஷைகளும் மிக்கவை. ஆனால், விஷயம் நடந்து முடிந்த பிறகு,,.?

தன்னுடைய முகத்தையே முகமூடியாக அனைவரும் அணியுமாறு ஃபிடல் காஸ்ட்ரோ சொல்வது, கதையின் மிக முக்கியமான தருணம். ஃபிடல் என்பருக்கு இருக்கும் சுய லாபம், மற்றவர்களுக்கும் எப்படி நலம் பயக்கும்?

இன்று கிறிஸ்துமஸ். மத்தேயு, மார்க், லூக்கா, ஜான் என்போர் யார்? ஒருவர் மருத்துவர் (சே குவேரா); ஒருவர் மீனவர்; ஒருவர் வரி வசூலிப்பவர்; மற்றொருவர் அறியா பதின்ம வயதுச் சிறுவர். அவர்கள்தான் வேதாகமங்களும் விவிலியமும் எழுதுகிறார்கள். யேசு கிறிஸ்துவை கண்மூடித்தனமாக வழிபட கைகோர்க்கிறார்கள். இந்தக் கதையிலும் பாப்லோ (பால்), லூகாஸ் (லூக்) வருகிறார்கள்.

கடைசியாக இசை. கொர்த்தஸார் எழுதும் கதைகள் எல்லாவற்றிலும் செவ்வியல் இசை முக்கிய பங்கு வகிக்கும். இந்தக் கதைக்கு Alejo Carpentier -ன் எழுத்தாளுமையை பின்பற்றுகிறார் கொர்த்தசார். அவருடைய நடை என்னவென்றால், வரலாற்று முக்கியமான தருணங்களை இசையை அடிநாதமாகக் கொண்டு நடத்திச் செல்வது. சரித்திரத்தால் சரிபர்க்கக் கூடிய விஷயத்தை லயமும் ராகமும் கீதவொளியும் கலந்து பின்னிப் பிணைந்து தருவது. இந்தக் கதையில் கோர்த்தஸார், மொசார்ட் உருவாக்கிய ‘ஹண்ட்’ (Hunt) நாற்கூட்டு சங்கீதத்தைப் பின்னணியில் ஒலிக்க விடுகிறார்..இசையென்றால் மெதுவாய்ச் செல்லும்; சில இடங்களில் பறக்கும். வேட்டையாடும் போது விரைந்து போகும் கதை, பலியான பிறகு அடங்கி ஒலிக்கும்.

கதையின் இறுதியில் வானத்தைப் பார்க்கிறார் சே குவெரா. அங்கே தெரியும் நட்சத்திரம் செவ்வாயா அல்லது புதனா என்று தெரியவில்லை. செவ்வாய் என்றால் சண்டை. புதன் என்றால் வியாபாரம். வானில் தெரியும் நம்பிக்கை நட்சத்திரம் தோழமையான புதனா அல்லது சதா சர்வகாலமும் போரில் மூழ்கும் செவ்வாய் கிரகமா? இல்லை… வர்த்தகம் என்றாலே சச்சரவு நிரந்தரமா? தோளில் கைபோடும் நட்பான பன்னாட்டுப் பரிமாற்றங்கள் என்றாலும் முரண்பாடுகளிலேயே விடிவெள்ளி மூழ்கிவிடுமா என யோசிக்கிறார்.

கதையை வாசியுங்கள்: ஹுலியோ கோர்தஸார்- தமிழில் :நம்பி கிருஷ்ணன் : சந்திப்பு – சொல்வனம்

நன்றி: Understanding Julio Cortázar by Peter Standish

ஸ்ரீமத் ராமானுஜ வைபவம்: ஆர்.பொன்னம்மாள்

Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Cover

Via Senkottai Sriram

வானதி பதிப்பகத்தின் சார்பில் நூலாகியுள்ளது. ஆர்.பொன்னம்மாள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு திருநட்சத்திரத்தை ஒட்டி வெளியிடப்பெற்றுள்ள தொகுப்பு!

வழக்கமாக தற்போது நடைபெறும் புத்தக வெளியீடுகள் போல் அல்லாது, வித்தியாசமாக யோசித்தார் வானதியின் பெயரன் சரவணன்.

ஒருநாள் காலை… கைபேசியில் அழைத்தார். அண்ணா, ஸ்ரீமத் ராமானுஜர் புத்தகம் போடுகிறோம்.. என்று சொல்லி, நூல் தலைப்பு, உள்ளடக்க குறிப்பு தொடர்பாக சில விளக்கங்களைக் கேட்டார். சொன்னேன். அடுத்த சில நாட்களில் மீண்டும் அழைத்தார். அண்ணா… நாம ஸ்ரீபெரும்புதூர் போய், அங்கேயே உடையவர் சந்நிதியில் நூலை வெளியிட்டு உடையவர் பாதத்தில் வைத்து வந்துடலாம். நீங்கதான் வெளியிட வரணும். உங்க கையால் வெளியீடு. ராமானுஜ நூற்றந்தாதி பாடிய உஷா பத்மநாபன் அம்மாவ அழைச்சிண்டு வரேன். அவர் முதல் பிரதியை வாங்கிப்பார் என்றார்.

மறுக்கவில்லை. சரியாக நேற்று திருவாதிரை. எம்பெருமானார் திருநட்சத்திரம். காலை அடியேன் பொத்தேரியில் இருந்து வண்டியில் ஸ்ரீபெரும்புதூருக்கு சென்றுவிட்டேன். அவர்களும் வந்தார்கள். சந்நிதிக்குச் சென்று பெருமாளை, உடையவரை ஸேவித்தோம். பாதத்தில் புத்தகக் கட்டை வைத்து ஆசி பெற்றோம். அப்போது நம் எம்பார் ஜீயர் நினைவுக்கு வர, சரவணனிடம் சொன்னேன்…. நம் ஜீயர் ஸ்வாமிதான் புத்தகத்தை வெளியிட சிறப்பானவர். அவர் திருமாளிகைக்குப் போய், அவர் கையாலேயே வெளியிட்டுவிடுவோம் என்றேன்.

Senkottai_Sengottai_Sriram_Book_Release_Ramanujar_Ponamal_Vaishnaivism

அவ்வாறே சென்றோம். ஜீயர் ஸ்வாமி திருமாளிகையில் அன்று அன்பர் குழாம் அதிகம்! அதோடு அதாக, ஜீயர் ஸ்வாமி புன்னகையுடன் நூலை வெளியிட்டு, பிரதியை உஷா பத்மநாபனுக்கும் அடியேனுக்கும் வழங்கினார்.

பின்னர், அப்படியே எல்லாரும் அமருங்கள். பிரசாதம் சாப்டுட்டு போயிடலாம் என்றார் ஸ்வாமி. அருமையான கதம்ப சாதம், தயிர் சாதம்..! பக்கத்தில் உள்ள மதுரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சிஷ்ய கோடிகள் பாகவத சிரோமணிகள் வழக்கமாக திருவாதிரை நட்சத்திரத்தில் கோயிலுக்கு வந்துவிட்டு ஸ்வாமி சந்நிதிக்கு வந்து மதியம் சாப்பிட்டு விட்டுச் செல்வார்களாம். அதனால் ஒரே தடபுடல்!

பரம திருப்தியுடன் எளிய, ஆனால் ஆத்மார்த்தமான ஒரு நிகழ்வுடன் அங்கிருந்தே அலுவலகம் விரைந்தேன்.

பின் இணைப்பு:
புத்தகம் குறித்து பலரும் விசாரிப்பதால், வானதி பதிப்பக எண் தருகிறேன்… போனில் விசாரித்துக் கொள்ளுங்கள்..
VANATHI PATHIPPAKAM
23,Deenadayalu street,T.nagar, Chennai-17
Ph-no: 044 – 2434 2810 / 2431 0769

செங்கோட்டை ஸ்ரீராம்

Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Back_Cover_Book

நூலின் முன்னுரையில் சுதா சேஷய்யன் எழுதியதில் இருந்து சில பகுதிகள்:

(இந்த நூலின்) சிறப்பு, நூலின் எழுத்தமைப்பால் ஏற்படுகிறது. பன்னெடுங்காலமாகப் புழக்கத்தில் உள்ள செய்திகளை, அதுவும் மரபும், சமயமும் சார்ந்த செய்திகள, எடுத்துரைக்கும்போது, அவ்வாறான நூலின் மொழி நடை, பாரம்பரியமும், பரிபாஷையும் சார்ந்ததாக அமைந்துவிடும் வாய்ப்பு உண்டு. மிகுதியான பரிபாஷைச் சொற்களும் வடமொழி மணிப்ரவாளச் சொற்களும் கலந்துவிடுமானால், வாசகர்கள் பால்ர் ஒதுங்கிவிடுவார்கள். குறிப்பாக இளைய தலைமுறை வாசகர்கள் அத்தகைய நூலைக் கையிலெடுக்கவே தயக்கம் காட்டுவார்கள்.

Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Sudha_Seshayyan_1

நூலின் மூன்றாவது சிறப்பு, கருப்பொருளுக்கு முன்னாலும், பின்னாலும் உள்ள வரலாற்றுக் குறிப்புகளைத் தக்க இடங்களில், தக்க முறைகளில் அமைத்திருக்கும் பாங்கு. …

Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Sudha_Seshayyan_2_Munnurai_Preface

… வைணவ குரு பரம்பரையின் பிரபாவத்தை வாசகனுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்த நூலாசிரியர், அதற்கான தகவல்களை, திருமலை நம்பி – ராமானுஜர் ஆகியோரின் உரையாடல்களில் பொதித்துக் கொடுப்பது மிகச் சிறந்த யுத்தி.

வைணவ உரைகளில் ‘ஈடுகள்’ முக்கிய இடம் பெறுகின்றன. ஈடு என்பது என்ன, எதைக் கொண்ட ஈட்டுக் கணக்கு வருகிறது போன்ற தகவல்களையும் நூலாசிரியர் போகிற போக்கில் விளக்கியுள்ளார்.
Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Sudha_Seshayyan_3

பொண்டாட்டீஸ் ஆர் அஸ்

  1. குறும்படத்தின் துவக்கத்தில் வரும் அறிவிப்புகள், இந்தப் படம் முழு நீள நகைச்சுவைப் படம் என கபர்தார் செய்கிறது.
  2. வேட்டையாடு விளையாடு, சி.எஸ்.ஐ மியாமி போல் பதினாறு, முப்பத்திரண்டு என்று நொடிக்கு நொடி பல் அடுக்கு பிரிவாக விரிந்து மாறும் குட்டித்திரைகள், விலை உயர்ந்த மருத்துவ சாதனங்கள், என காட்சியமைப்பிலும் அரங்கப் பொருள்களிலும் நல்ல கவனம் செலுத்திய தயாரிப்பு.
  3. கொலாஜ் போல் ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு துணுக்கு காட்சி, அதன் மேல் நாலைந்து சம்பவங்கள் என்று வசனங்கள் குறைவாக இருப்பது பலே!
  4. ஒரே சமயத்தில் அஷ்டலஷ்மியாக நாலைந்து நபர்கள் வெவ்வேறு சட்டகங்களில் வெவ்வேறு லஷ்மிகளாக தோன்றியிருப்பது சிரத்தை.
  5. உயிர்ப்போலி (க்ளோனிங் டிராக்கர்) உருவாக்கும் கணித்திரையாகட்டும்; அலுவல் திட்டத்தில் வரும் உளுத்தம் பருப்பு, தயிர் ஆகட்டும்; கோப்புகளையும் கணினி இடைமுகத்தையும் பாவ்லா காட்டாமல், உண்மையாகவே தயாரித்திருக்கிறார்கள்.
  6. பெண்ணுக்கு ஆண் குரல் மாற்றம் எல்லாம் கச்சிதமாக இருந்தாலும், ஹேமா ஏன் அவ்வளவு மோதிரம் அணிந்திருக்கிறார் என்பதும், லஷ்மி ஏன் சீமந்தம் போல் அத்தனை வளையல் அணிந்திருக்கிறார் என்பதும் அவிழாத முடிச்சு.
  7. உணர்ச்சிகரமான தருணங்களில் ஆங்கிலத்தில்தான் வசனம் அமைந்திருக்கிறது என்பது நெருடல்

 

Clone_Pondaatis R Us