த்ரிஷாவையும் நயன் தாரா போன்றோரை அழைப்பதை கிண்டல் செய்தது அந்தக் காலம். துரை முருகனாரையும் நக்கீரன் கோபாலையும் அழைப்பதை எண்ணிக் கூனிக் குறுகுவது இக்காலம்.
நடிகைகளைக் கொண்டாடுவதில் நேர்மை இருக்கிறது. பதவியில் இருக்கும் தலைவரை வரவழைப்பதில் டிரம்ப் தனம் இருக்கிறது.
இது டிரம்ப்பிஸ்தான். உண்டியலும் அதிகாரமும் அமெரிக்கா. இலாவணமும் அரசியலும் தமிழர் தேசி?
இன்றைய தேதியில் மாற்று சந்திப்புகள், மாபெரும் ஒருங்கிணைப்புகள், இந்திய கருத்தரங்குகள் நிறைய நடக்கின்றன. வருடந்தோறும் நடக்கும் தமிழ்நாடு ஃபவுண்டேஷன் ஒரு புறம். அடுத்த ஆண்டு நடக்கப் போகும் ஜெயமோகனின் அமெரிக்க இலக்கிய விழா மாநாடு இன்னொரு புறம். செவ்வியல் நடனம், கர்னாடக சங்கீதம் என பாரம்பரியக் கலைகளுக்கென்றே க்ளீவ்லாண்டில் நடக்கும் தியாகராஜர் ஆராதனை.
இந்தியாவில் த.க.இ.பெ அழைக்கும் பேச்சாளர்கள் கூட தமிழர் சந்திப்புக்குப் பொருத்தமானவர்கள்.
அமெரிக்க இந்தியர்/தமிழர் என்று இன்னொரு பட்டியல் போட்டால்… செந்தில் ராமமூர்த்தி கால் பென் பூர்ணா ஜெகன்னாதன் மிண்டி காலிங் கார்த்திக் முரளீதரன் அனுக் அருட்பிரகாசம் வி.வி. கணேசநாதன் எழுத்தாளர் எஸ் சங்கர்
எத்தனை பொருளியல் வல்லுநர்கள்! எம்புட்டு அசல் பேராசியர்கள்!! ரகரகமான சிந்தனையார்கள்!!! புனைவு எழுத்தாளர்கள்… கருத்தாளர்களை விட்டு கிரீடதாரிகளைக் கொண்டு வருவது ஆப்பிள் ஃபோன் இருக்கும் போது ஓப்போ நாடுவது.
பாரதி யார் நாடகம் முடிந்தவுடன் இதை எழுதியிருக்க வேண்டும்! அமரன் படத்தில் ‘அச்சமில்லை! அச்சமில்லை!!’ பார்த்த பிறகாவது பகிர்ந்திருக்க வேண்டும்!! டிச. 11 பிறந்த தினத்திற்காகவாது முடித்திருக்க வேண்டும்.
மனதிலேயே இருப்பதை எப்படி முகநூலிற்கான கவர்ச்சிகரமான பதிவாக்குவது?
அமெரிக்காவில் வசிக்கும் முக்கால்வாசி (நான்கில் மூன்று) பேர் தங்கள் மழலைச் செல்வங்கள் பங்கேற்காவிட்டால் பார்க்க வர மாட்டார்கள் என்னும் அங்கலாய்ப்பு எழக்கூடாது. பாரதியார் பற்றித்தான் எல்லாம் தெரியுமே என்று பாக்கி 25% சதவிகிதத்தினர் ‘பாரதி சின்னப் பயல்’ ஆக தங்களை எண்ணுகிறார்கள் என்னும் விமர்சனம் சொல்லக்கூடாது. ஞாயிறு பின் மதிய வேளையில் – சாப்பிட்டோமா… தூங்கினோமா! என்று ஓய்வு வேளையில் இந்த அரங்கப் புயலைக் கொணர்ந்தோம் என்னும் ஏற்பாட்டு புலம்பல்களைப் பகிரக் கூடாது.
இதை எழுதுவதால் பாஸ்டன் தமிழர் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு வரமாட்டார்கள் என்னும் முன் முடிவு. நியு இங்கிலாந்து தமிழ்ச்சங்கமோ; தமிழ் மக்கள் மன்றமோ; மாஸசூஸட்ஸ் தமிழ் அமைப்புகளோ; தமிழ்ப் பள்ளிகளோ; சிஷு பாரதி ஆசிரியர்களோ – எல்லோருமே ‘நல்லா நடக்கட்டும்!’ என வாழ்த்தினார்களே தவிர, நுழைவ்வுச்சீட்டையோ, தங்கள் நண்பர்களையோ, குடும்பத்தினரையோ முடுக்கிவிட்டு அலைகடலென திரளாமல் ஐபிடிவி.யில் அரதப் பழசான ‘கயல்’, ‘இdli சட்னி காபி’ என்று நெடுந்தொடர் பிக் பாஸாக உதாசீனாம் செய்தது பின் விளைவு.
புலம்பல் போதும்.
இரமணன் வந்தார்; Isaikkavi Ramanan நியூ ஜெர்சி தமிழர்கள் அரங்கேறி ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ் என துணை நின்றார்கள். தமிழ் மக்கள் மன்ற அறங்காவலர்களும் அமைப்பாளர்களும் நிகழ்ச்சிக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை கரம் பற்றி கூட நடந்தார்கள்.
நன்றி டி.எம்.எம். Tamil Makkal Mandram, USA பாரதியை எங்களுடன் கர்ஜிக்கவிட்ட இசைக்கவிக்கு நன்றி. பிராட்வே அரங்கை உருவாக்கிய எஸ்.பி. கிரியேஷன்சுக்கு நன்றி. SB Creations / Raman Sbs அவரை பாஸ்டனுக்கு அழைத்து நாடக நடிகர்களை உபசரித்து என் தொல்லைகளைப் பொறுத்துக் கொண்ட ரமணனின் மகன் ஆனந்திற்கு அவர் குடும்பத்திற்கும் கோடானுகோடி நன்றி.
சரி…. நாடகம் எப்படி?
இரமணன் எழுதிவிட்டார். இணையத்திலும் கிடைக்கிறது.
அந்த நிகழ்வு முடிந்தவுடன், நம்மவர், என்னிடம் கேட்ட கேள்வி: “வீடியோ கிடைக்குமா?”
இந்த மாதிரி கொண்டாட்டம் எல்லாம் மனதிற்கு விரும்பியவர்களுடன் நேரில் பார்த்து ரசிக்க வேண்டிய நிகழ்ச்சி. தமிழர்கள் எதையும் திருட்டி விசிவி-யில் பார்த்து ரசிப்பவர்கள். அவர்களுக்கு இந்த மனநிலை வாய்க்குமா! அந்த அரங்கிற்குள் பாராதியார் காலத்திற்கு சென்றிருப்பார்களா!? அப்படியே அவரின் எண்ணங்களுக்குள், பாடல்களுக்குள், வசன கவிதைகளுக்குள் தங்களை மீட்டெடுப்பார்களா!
இருநூறு டாலர் கொடுத்து (நியூ யார்க்கில்) லயன் கிங் பார்ப்பார்கள். வேட்டையனுக்கு (ஒருவருக்கு) 28$ கொடுப்பார்கள். இளையராஜாவின் திரைப் பாடல்களை ரஞ்சனி – காயத்ரி பாடினால் ($50) காசு கொடுத்து லயித்துக் கேட்பார்கள்.
அவர்களிடம் எட்டயபுரத்துக்கும் காசிக்கும் புதுச்சேரிக்கும் திருவல்லிக்கேணிக்கும் அழைத்துச் செல்கிறோம் என்றால் – ‘நாங்களே போயிக்கிறோம்!’ என்று ஒதுங்கி விடுகிறார்கள். ’என் பையன்…’, ‘என் மகள்…’, என் குடும்பம் என்று ரத்தமும் சதையுமாக தங்களின் வழித்தோன்றலின் தத்தக்கா பித்தக்கா ஆட்டத்தை ரசிப்பர்வகள், – பாரதிதாசன், சுப்பிரமணியம் சிவா, வ.உ.சி. என்றால் எதற்கு அந்த ஆளையும் அவரின் விழுமியங்களையும் இலட்சியங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்… என ஜகா வாங்குகிறார்கள்.
’பாரதி யார்’ நாடகம் என்பதை விட அனுபவம். பாரதியாரின் வாழ்வு; பாரதியின் நியாயங்கள்; பாரதியின் பாடல்கள்; பாரதியின் சொற்றொடர்கள்; பாரதியின் எண்ணங்கள் – ஏற்கனவே நீங்கள் சீனி. விசுவநாதனாக இருந்தாலும் பாரதியைக் கண் முன்னேக் கொணரும் மகா காவ்யம். ’பாரதி யார்’ அரங்க அனுபவம் என்பது சொல்லால் எழுதப்பட்டு புரிந்து கொள்வது அல்ல. அந்த அரங்கத்தில் பல்வேறு பார்வையாளர்களருடன் ஒருங்கிணைந்து இலட்சியப் பாதையில் பயணிக்க உறுதி மொழி கொள்வது.
“கமலாவா டிரம்பா என்பதை விட வெல்லப்போவது இலான் மஸ்க், பாலாஜி ஸ்ரீனிவாசன் முதலியவர்களின் conviction-ஆ அல்லது அமெரிக்காவின் (டிவி) ஊடகங்களின் கணிப்பு (எ) பிரசாரமா என்பதில்தான் எனக்கு அதிகம் சுவாரசியம்! என்னுடைய மற்றுமொரு கணிப்பு என்னவென்றால் அமெரிக்கவாழ் இந்தியர்கள் டிரம்ப் வருவதை (அவர் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரானவர் என்பதனாலேயே) விரும்பவில்லை. கமலாம்மா இந்தியர் என்பதைக் காட்டிலும் டிரம்ப் வந்தால் என்ன பண்ணித் தொலைவாரோ (னோ) என்பதுதான் அவர்களின் கவலையாக உள்ளது.” ———-
இனி என் பார்வை:
அமெரிக்க இந்தியர் கொள்கைப் பற்றாளர் கிடையாது. அமெரிக்க இந்தியருக்கு மூன்றே குறிக்கோள்: 1. பணம் – பங்குச் சந்தையில் காசு பார்த்தல் 2. குழந்தை – அவர்களை ஒரு வழியாக்குதல் 3. சோம்பேறி – ஓய்வு, டிவி, வம்பு பேசுதல்
அவர் செங்கொடி ஏந்தி சித்தாந்தத்தைத் தூக்கிப் பிடித்ததில்லை. அவர் அரியணையில் அமர்ந்து மார்கஸ் அரேலியஸ் (Marcus Aurelius) மாதிரி ‘தியானங்களின் சுருக்கம்’ சிந்திப்பதில்லை. அவர் அரசியல் பற்றி கவலைப்படாத நடுத்தர வர்க்கம்.
அவருக்கு தங்கம் வேண்டும். திருட்டு டிவி வேண்டும். கிசுகிசு வேண்டும். கிளுகிளுப்பு வேண்டும். முகப்புத்தகமும் இன்ஸ்டா ரீலும் வேண்டும். விஜய்யும் அஜீத்தும் வேண்டும். சொல்லப் போனால் தமிழ்நாட்டில் வசிப்பதாகவே நினைப்பு. அவருக்கு தமிழக அரசியல் விவரமாகத் தெரியும். அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கையோ உக்ரெயினுக்கான உதவிக்கான பின்புலமோ அறிய வேண்டிய ஆர்வமோ தேவையோ இல்லாத ஜந்து.
புலம் பெயர்ந்தோருக்கு எதிரானவர் டிரம்ப் என்பதே ஆதிசங்கரரை ‘மாயாவாதி’ எனத் திட்டுவது போல் அர்த்தமற்றது. சட்டபூர்வமாக உள்நுழைந்தோருக்கு குடியுரிமை தருவதற்கு தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும் கமலா ஹாரிசும் இழுத்தடிக்கிறார்கள். அந்த மாதிரி எச்1.பி., பி1 விசாக்களில் வந்தவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் சட்டு புட்டென்று குடியுரிமைத் தருவதாக விவேக் ராமசாமியும் டொனால்ட் டிரம்ப்பும் உறுதியளிக்கிறார்கள்.
எல்லோருக்கும் இருபது டாலர் குறைந்த பட்ச ஊதியம் தருவதாக கமலா ஹாரிஸ் வாக்குறுதி அளிக்கிறார். அது வாங்க முடியாமல் அல்லாடும் அப்பாவி அத்துமீறி ஊடுருவல்வாதிகளை, அவர்களின் சொந்த ஊருக்கே திருப்பி அனுப்புவதாக வாக்குறுதி அளிக்கிறார் டிரம்ப்.
கமலா வழிப்படி பார்த்தால் ஏழைகளை உறிஞ்சும் சக்தி டெமொகிரட்ஸ் தான். டிரம்ப் வழிப்படி பார்த்தால் சட்டபூர்வமாக வசிப்போருக்கு சரியான சம்பளம் வரும் பாதைக்கான கால்கோள் இடுபவர் ரிபப்ளிகன் தான்.
முழு ராஜ்ஜியமும் கையில் இருந்த போதும் துப்பாக்கிகளைத் தடை செய்யும் திட்டமோ, புவி வெப்பமயமாதலைக் குறைக்கும் சட்டமோ இயற்றாத ஒபாமா போன்ற ஹாரிஸை நம்பும் இந்திய வம்சாவழியினர் அதிகம். அவர்கள் மாற்றத்தை விரும்பாதவர்கள். ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால் பங்குச் சந்தை சரியாது. பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும். ஆள் குறைப்பு நடக்காது. நேற்று போல், நாளையும் இருக்கும்.
டிரம்ப் வந்தால் களை பிடுங்கப்படும். அரசாங்க ஊழியர் முதல் கடைநிலை இட்லி கடை எல்லோரும் ஓராண்டிற்காவது சிரம தசைக்கு உள்ளாவார்கள். ட்ரம்ப் ஆதரவாளர்கள் இந்த அறுவை சிகிச்சையை விரும்புகிறவர்கள். குற்றங்கள் குறைய வேண்டும் என நினைப்போர் டிரம்ப் பக்கம். குழந்தைகளுக்கு அறியா வயதிலேயே பாலியல் கல்வி கூடாது என நினைக்கும் பழமைவாத கலாச்சார காவலர்கள் டிரம்பின் பக்கம். முந்தா நாள் போல் நாளையும் இருக்கும்!
என் வாக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத மாநிலத்தில் வசிக்கிறேன். நான் ஹாரிஸுக்கோ டிரம்ப்பிற்கோ வாக்களித்தாலும் – எங்கள் ஊரில் 100% ஜெயிக்கப் போகிறவர் கமலா ஹாரிஸ்.
மாஸசூஸட்ஸ் – முழுக்க முழுக்க டெமொகிரட்ஸ் சார்பு மாகாணம். 60-65 விழுக்காடு ஜனாதிபதியாக கமலாவையே விரும்புகிறார்கள். திரளாக ஆதரவைச் சொல்லிவிடுவார்கள். பாஸ்டனில் இரவு எட்டு மணிக்கு வாக்களிப்பு முடியும். அடுத்த நிமிடமே பாஸ்டனில் துணை ஜனாதிபதி, தேர்தலில் வென்றதாக கணித்து முடிவை திட்டவட்டமாகத் தெரிவித்து விடலாம். அமெரிக்காவில் இருக்கும் 50 மாநிலங்களில் 42/43 – இந்த மாதிரி ரகம்.
அப்படியானால், நம் வாக்கை உருப்படியாக எப்படி மாற்றுவது?
எனவே, நான் மூன்றாம் கட்சிப் பிரியன். லிபரேடேரியன் (libertarian) – சேஸ் ஆலிவர் (Chase Oliver) நிற்கிறார்.
இவர் ஓரினச்சேர்க்கையாளர். அந்த மாதிரி சமூகக் கொள்கைகளில் டெமொகிராட் போல் தோன்றுவார். போர் வேண்டாம் என்கிறார். பொருளாதாரம் தழைக்க கம்மியான சட்டதிட்டங்கள் போதும் என்பார். இதில் ரிபப்ளிகன் போல் தோன்றுவார். முக்கிய இரு கட்சிகளுக்கு மாற்று தேவை. எங்களைப் போன்ற சிறு ஆதரவாளர்கள் மட்டுமே மாற்று சக்தியாக, புதிய மக்கள் குரலாக விளங்குவார்கள். அவர்களுக்கு ஐந்து சதவிகிதமாவது வாக்கு விழ வேண்டும்.
தாராளவாதம் எனலாம். முற்போக்கு கட்சி எனலாம். கன்சர்வேடிவ் எண்ணங்கள் கொண்ட பழமைவாத ரிபப்ளிகன் சித்தாந்தத்திற்கு மாற்று – லிபரல் வேட்பாளர்.
இரண்டாம் வினாவிற்கான பதிவு, இன்னும் ஆழமாகச் செல்ல வேண்டியது: ”இந்திய diaspora யாரை ஆதரிக்கிறது ?”
நீங்கள் அமெரிக்காவில் வாக்குரிமை பெற்றவரா? எவருக்கு உங்கள் வாக்கு?
2. பொர்த்தோ ரிக்கோ-வும் வாஷிங்டன் டி.சி. (கொலம்பியா மாவட்டமும்) மாகாணங்களாக அமெரிக்காவுக்குள் நுழையும், தற்போதைய ஐம்பது மாவட்டங்கள் 52 ஆக அதிகரிக்கும். டெமோகிரட்சுக்கு நாலு செனேட்டர்கள் ஜாஸ்தி கிடைப்பார்கள்.
3. இரான் நாட்டின் கைவிலங்கும் கால்தளையும் தளர்வுறும். இஸ்ரேல் நாடு கட்டுக்குள் கொணரப்படும். காசா பாலஸ்தீனமாக தனி நாடாக உருவாகும். உக்ரெயின் போர் இன்னும் அமர்க்களமாகத் தொடரும். கமலாவிற்கு அமைதிக்கான நோபல் தரப்படும்.
4. சீனாவின் ஷி ஜின்பிங் தன் பலத்தை பரிசோதிப்பார். வட கொரியாவை தகாத செயலுக்குத் தூண்டுவார். இந்த சோதனை பலபரீட்சையாக தாய்வான் நாட்டிலும் தெற்காசியாவிலும் ரத்தகளறி ஆகும். இந்தியாவையும் இந்த போரின் பாதிப்புகள் தொடும். அகண்ட வங்காளம் அல்லது சுதந்திர மேகாலயா அமையும்.
5. அணு சக்திக்கு ஜே! காற்றாலைகளுக்குப் பச்சைக் கொடி!! சூரிய ஆற்றல் அனைத்து வீடுகளுக்கும் ஆலைகளுக்கும் சென்றடையும் திட்டம். நிலக்கரிச் சுரங்கம் போன்ற புதைபடிம எரிபொருள்கள் முற்றிலும் மூடப்படும். சுத்தமான தூயசக்தி மட்டுமே அமெரிக்காவில் கிடைக்கும். புவி வெப்பமாதல் குறையும்.
6. LGBTQIA+ – தற்பாலினத்தவர், இருபாலீர்ப்பு, மாற்றுப் பாலினத்தவர், ஊடுபால், பால்புதுமையர், அல்பாலீர்ப்பு குறித்த பாடங்கள் மூன்றாம் வகுப்பிலேயே பள்ளிக்கூடத்தில் சொல்லித்தரப்படும். குழந்தைகளின் குழப்பங்களை பெற்றோர் அறியாமல் பார்த்துக் கொள்ளப்படும். மருவிய பால் என நினைப்போருக்கான அறுவை சிகிச்சை ரகசியமாக, இலவசமாக செய்யப்படும்.
7. லிஃப்ட், ஊபர், போல்ட், ஓலா, டோர்டாஷ் போன்ற அலுவல்சாரா பகுதிநேரத் தொழிலாளர்களுக்கு சங்கம் அமைக்கப்படும். டாக்ஸியை அழைப்பதற்கும் ஊபரைக் கூப்பிடுவதற்கும் எந்தப் பெரிய வித்தியாசமும் இல்லாமல் போகும். ஹோட்டல் அறைக்கும் ஏர்பிஎன்பி வீட்டிற்கும் எந்த வித பாகுபாடுகளும் இன்றி ஒரே மாதிரி அனுபவம் ஆகிவிடும்.
8. மருந்துகளின் விலை இன்னும் எகிறும். வீடற்றோருக்கும் நலிந்த சமூகத்திற்கும் சேமநலம் தாராளமாக்கப்படும். அனைவருக்கும் சிகிச்சை; எந்த நோய்க்கும் வைத்தியம் என்பது பணம்படைத்தோருக்கு மட்டுமல்லாமல், சாதாரணருக்கும் சாத்தியமாகும்.
9. ப்ராஜெக்ட் 2025 நிறைவேறாது. எங்கும், எதிலும் அரசாங்கத் தலையீடு; செவ்வாய் செல்லும் ஏவூர்தி, செயற்கை நுண்ணறிவு முதல் வேண்டப்பட்ட குணாதிசய மரபணுவால் அமைக்கப்பட்ட குழந்தைகள் வரை தொழில்நுட்பம் சுதந்திரமாக உலாவரும் சீனா முன்னேறிய நாடாகி விடும்.
10. இதெல்லாம் செய்ய வேண்டும் என ஆசைப்படுவார்; மசோதாக்களும் கொண்டு வருவார்; கொள்கை பரப்பும் செய்வார். ஆனால், காங்கிரசும், செனேட்டும், உச்சநீதிமன்றமும் எதையும் செய்ய விடாது. அரியணையில் பொம்மையாக வீற்றிருப்பார்.
ஏற்கனவே லோக்சபா (காங்கிரஸ் எனப்படும் ஹவுஸ் ஆஃப் ரெப்ரசேண்டேடிவ்ஸ்) அவரின் கட்சி கைவசம். செனேட் எனப்படும் மேல்சபையிலும் அவர்களே பெரும்பான்மை ஆகப் போகிறார்கள். ஜனாதிபதியும் ரிபப்ளிகன் ஆக இரண்டாண்டுகளாகவது இருக்கட்டும் என மாற்றம் வேண்டுவோரின் வாக்கு விழும்.
வந்தாரை வாழவைக்கும் அமெரிக்கா – இப்பொழுது வந்தேறிகள் மேல் ஆத்திரம் கலந்த கலக்கத்தில் இருக்கிறது. கமலா இந்தியர் – புலம்பெயர்ந்தோர் தானே!? என எண்ணுவோரின் வாக்கு ட்ரம்பிற்குக் கிடைக்கும்.
வங்காளத்தில் போர் வேண்டாமா? மேகாலயா தனி நாடாக வேண்டாமா? தய்வான், கொரியா, மியான்மர், மாலி என உலகெங்கும் சின்னச் சின்ன சின்னாபின்னங்கள் உதயமாக வேண்டாம் என நினைக்கும் அமைதிப் பிரியர்களின் ஓட்டு டிரம்பிற்கு விழும்.
பென்சில்வெனியா, நெவாடா, விஸ்கான்சின், மிச்சிகன், வட கரோலினா, ஜியார்ஜியா, அரிசோனா – எல்லாவற்றிலும் ஆண் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ‘என் இனமடா!’ வர்க்க வங்கி.
காசு… பணம்… .துட்டு… மணி… மணி – நான்காண்டுகளுக்கு முன்பு பணவீக்கம் இப்படி கேவலமாக இல்லை. வேலையில்லா நிரந்தர அன்றாடங்காய்ச்சி திரிசங்கு தொங்கல் இல்லை. அப்பொழுது நல்லா இருந்தோம் என நினைக்கும் வெள்ளையினத்தோரின் ஆதரவு.
குழந்தைகளை தகாத இடத்தில் தொடுபவர் பைடன்; எப்ஸ்டெயின் போன்ற மாமாக்களோடு லீலை நடத்தியவர்கள் டெமொகிரட்ஸ்; ஆட்சியில் இருந்தபோதே அராஜகம் செய்தவர் பில் க்ளிண்டன். ட்ரம்ப் அப்படியெல்லாம் அனுமதியில்லாமல் அத்து மீறாத அழகிய அமெரிக்கமகன் என நினைக்கும் பெண்டிர்.
ஐம்பதாண்டுகள் முன்பு கருப்பர்கள் இருந்த நிலை என்ன… பெண்கள் ஒழுங்காக வேலைக்கு போகாமல் வீட்டில் சமைத்து போட்ட காலம் திரும்ப வருமா! நனவோடையில் மூழ்கிய ‘பழைய நெனப்புதான் பேராண்டி’ வாக்காளர்கள்.
ட்ரம்ப் செய்யாத தவறு கிடையாது; மாட்டாத இடம் இல்லை; அவரின் அந்தரஙம் என்று தெரியாத எந்தப் புதிரும் இல்லை. அவர் பொல்லாதவன் + போக்கிரி + பில்லா II வேண்டும் என நினைப்போர்
துணை ஜனாதிபதியாக கடந்த நான்காண்டுகளாக என்னக் கிழித்து விட்டார் கமலா ஹாரிஸ் என கடுப்பானோர்.
கொசுறு: இப்பொழுது இந்தக் கருப்பர் ஜெயித்தால் மிஷேல் ஒபாமா ஜெயிக்க வாய்ப்பு கிட்டாது என நினைக்கும் உள்வட்ட உயர்மட்ட குழு. கிடைக்கிற வரைக்கும் கொடுக்கிற காசை வாங்கி வைத்தால் ஈரண்டு கழித்து அடுத்த தேர்தலுக்கு அன்னை மிஷேலுக்கு உதவுமே!
பிரபுதாஸ் பட்வாரி அன்றைய ஆளூநர். 1977-80 வரை தமிழக கவர்னராக இருந்ததாக விக்கிப்பிடியா சொல்கிறது.
அவரின் சிறப்பு என்னவென்றால், எந்த விழாவிற்கு அழைத்தாலும் ஆஜராகி விடுவார். எங்கே அழைத்தாலும் வந்துவிடுவார். எப்பொழுதும், எந்தத் தருணத்திற்கும் சொற்பொழிவைத் தயாராக வைத்திருப்பார். எந்த அரங்கத்திலும் பொருத்தமாகப் பேசுவார்.
கலாமிற்கு முன்னுதாரணம் எனலாம். எளிமையானவர். எனக்கு ரொம்பப் பிடித்த சிரிப்பைக் கொண்டவர். அவரைப் போல் ஆக வேண்டும் என்பது என் பால்ய காலம் லட்சியம்.
திராவிட கலாச்சாரம் அதை பாதுகாத்தது. எனினும், எவர், எதற்குக் கூப்பிட்டாலும் சென்று விடுவதைப் பழக்கமாக்கி இருக்கிறேன்.
அவ்வாறு ரோட் ஐலண்ட் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பகிர்ந்த பேச்சு
அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்ப் பள்ளியை நடத்தும் ரமா சுப்ரமணியன், கார்த்திக் பால்சுப்ரமணியன், விஜயகுமார் சபாபதி, சாருலதா ரவிஷங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்
ஆக்டன் தமிழ்ப் பள்ளி மணி அவர்களுக்கும் நெட்ஸ் ராஜ் அவர்களுக்கு பணிவு கலந்த வணக்கங்கள்
அமெரிக்காவில் பத்தில் ஒருவர் மட்டுமே பன்மொழி வித்தகர். பாக்கி தொண்ணூறு சதவிகிதம் ஒரு மொழி மட்டுமே அறிந்தவர்கள்.
இரு மொழியைக் கற்றுக் கொள்பவர்களுக்கு இயல்பாகவே மூளையில் சிக்கலான புதிர்களை விடுவிக்கும் அடுக்குகளும் இணைப்புகளும் உருவாகின்றன. ஒரே சமயத்தில் எதிரும் புதிருமான வாதங்களை அவர்களால் மனதிலும் சிந்தையிலும் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. லத்தீன் மொழி வழிவந்த ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்த்துகீசிய, இத்தாலிய பாஷை போன்றவற்றை மட்டும் கற்றவர்கள் மூளை ஒரு மாதிரியாகவும். தமிழ் போன்ற திராவிட மொழிகளைக் கற்று அறிந்தவர்கள் மூளை மேலும் தீவிர இயக்கத்துடனும் ஆற்றலுடனும் செயல்படுவதாக ஆராய்ச்சியின் முடிவுகள் தெள்ளத் தெளிவாக தெரிவிக்கின்றன.
தேவையில்லாதவற்றை நினைவில் இருந்து நீக்குதல்,
கூடுதல் கவனம்,
சிக்கலைத் எவ்வாறு தீர்ப்பது மற்றும்
முடிவெடுத்தலில் தீர்க்கம் – எல்லாவற்றுக்கும் இரட்டைமொழி அவசியம்.
உதாரணமாக – S-O-R-R-Y
இதைப் பார்த்தால் ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர்க்கு ஒரே அர்த்தம்தான் விளங்கும். “தெரியாமப் பண்ணிட்டேன்… மன்னிச்சுடுங்க!”
தமிழ் அறிந்தவர்க்கு பல அர்த்தங்கள் ஓடும்.
சாரி – புடைவை எடுக்கலாம் என்று மனைவி சுட்டுகிறாரோ?
சாரி – ரங்காச்சாரி, வெங்கடாச்சாரி என்று எவரையாவது அழைக்கிறாரோ?
சா… ரிகமபதநி என்று தொடங்குவதற்கு முஸ்தீபு போட்டு ராகம் – தானம் – பல்லவி போட்டு தாளத்தை இழுக்கிறாரோ?
சாரி சாரியாக தமிழ் கற்க தன் மகவுகளை பெற்றோர் அனுப்ப வேண்டும் என்கிறாரோ?
சரி என்று சொல்லி வைப்போம். அதற்கும் ஆங்கிலத்தில் ஏறக்குறைய அதே எழுத்துகள்தானே!
கூழாங்கல்லை எடுத்து நதியில் வீசுங்கள்.
ஒரு மொழி அறிந்தவர் அதை தொப்பென்று ஒரே இடத்தில் வீசி முடிப்பவர்.
பல மொழி அறிந்தவர் என்றால் அந்தக் கல் பல்வேறு அலைகளை ஏற்படுத்தி தீர்க்கமானத் தொடர் தாக்கத்தை உருவாக்கும்.
பெற்றோர்களுக்கு
பல விதமான குழந்தைகளுடன் உங்களின் மகளும் மகனும் பழகுவதற்கு இந்தத் தமிழ்ப் பள்ளி உதவுகிறது.
திங்கள் முதல் வெள்ளி வரை அமெரிக்க நண்பர்கள்.
வாரயிறுதியில் நம் வரலாறும் பாரம்பரியமும் கைகோர்த்து ஒத்த மனங்கள் இணைவதற்கு இது ஒரு வாய்ப்பு.
அலுவல் நண்பர்களிடம் ஒரு விதமானப் பேச்சுகள் எடுபடும். அண்டை அயலார், பக்கத்து வீட்டுக்காரர்களோடு இன்னொரு விதமானப் பேச்சுகள் எடுபடும். நண்பர்கள் என்பது இங்கு இருப்பவர்கள். அவர்களிடம் மனம் விட்டு எதையும் கொண்டு வரலாம். அதற்கு இந்த முறைமை உதவுகிறது.
ஆய்வுகளும் தரவுகளும் இருக்கட்டும். ஒரு குட்டிக் கதை
வெந்நீர் சூடு போதுமா?
பண்ணையாருக்கு தினசரி வெந்நீர் தேவை. அந்தக் காலத்தில் தானியங்கியாக இயங்கும் தண்ணீர் சூடேற்றி – கீஸர் கிடையாது. காலையில் எழுந்து வெந்நீர் போடவென்று ஒருவரை வேலைக்கு வைத்து இருந்தார்.
சரியான பதத்தில் வெந்நீர் இருக்கிறதா என்று ஒவ்வொரு நாளும் அவனும் கேட்பான். பண்ணையார் எப்பொழுதுமே ஏதாவது குறை சொல்லி வந்தார்.
இன்னிக்கு சூடு போதலே என்பார்
இன்னிக்கு சூடு ஜாஸ்தி என்பார்.
ஒரு நல்ல நாளில் கொதிக்க கொதிக்க வென்னீரை வைத்துக் கொடுத்து, அவர் மேல் கொட்டி விட்டு ஓடியே போய் விட்டான் அந்த வெந்நீர் போடுபவன்.
அந்த வெந்நீர் போடுபவன் மாதிரிதான் ஒரு ஆசிரியரின் வேலை. பண்ணையாராக நம் பசங்களைப் பாருங்கள்.
அவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். ஒன்னும் புரியலே; கஷ்டமா இருக்கு என்பார்கள்.
இதெல்லாம் எதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று புலம்புவார்கள்.
ஏற்கனவே தெரிந்த விஷயம் என்று போன வருடம் படித்ததை நினைவூட்டும் போது அங்கலாய்ப்பார்கள்.
ஆசிரியர்களும் (பெற்றோர்களும்தான்) தட்ப வெட்பம் பார்த்து அதற்கேற்ப இதமாக ஒத்தடமாக வென்னீர் வைக்க வேண்டும்.
வானவில்லில் வெறும் ஏழு வண்ணங்கள் மட்டுமல்ல. அதையும் தாண்டி பல்வேறு வண்ணங்கள் ஊடுருவி இருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
வீட்டை வெள்ளையடிக்க ஹோம் டிப்போ போனால் ஐயாயிரம் வண்ணங்களைக் காட்டுவார்களே…
அது மாதிரி வானவில். அது மாதிரிதான் வாழ்க்கையின் வண்ணங்களும்.
அது போல் வானவில் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அறிவதற்கான பாதை இந்தக் கல்வி.
தமிழ் மழை போல் எங்கும் பொழிகிறது. அதில் சூரியனாக ஆசிரியர்கள் ஒளி வெள்ளம் பாய்ச்சி பாதையைக் காட்டுகிறார்கள். அப்பொழுது வானவில்லையும் அதன் சாத்தியங்களையும் உணர உங்கள் குழந்தைகளைத் தொடர்ச்சியாக தமிழ் பயில வைக்கிறீர்கள்.
தமிழ் ஆசிரியர் என்பவர் நம் வரலாற்றை உணர்த்துபவர்
தமிழ் மொழி நமக்கு அறத்தையும் வாழ்க்கை முறையையும் உலகையும் கற்றுத் தருவதற்கான பாதை
ஐயாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக புழக்கத்தில் இருக்கும் பழக்கத்தைத் தொடர்ச்சியாக பயில்வோம்! வெல்வோம்!!
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு. (௲௱௭ – 1107)
தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் உழைப்பில் வந்தவற்றைத் தனக்குரியவர்களுடன் பகிர்ந்து உண்ண வரும் மாபெரும் மகிழ்ச்சி, ஆசான் இடத்தில் முரண்டு தெளிவாகும்போதும் கிடைக்கும்.
இந்தக் குறளை வைத்து ஜெயமோகன் சந்திப்பான பூன் முகாம் கட்டுரையைத் துவங்கினேன்.
மூன்று நாளும் எப்படி இப்படி பம்பரமாக சிந்திக்கிறார்! எல்லாவற்றையும் எப்படி நினைவகங்களில் இருந்து பொருத்தமாகத் தேர்ந்தெடுத்து சந்தர்ப்பத்திற்கேற்ப கனகச்சிதமாகக் கொடுக்கிறார்!! அணுகுவதற்கு ஆர்ப்பாட்டமில்லாமல், வயது வித்தியாசம் பாராமல் கேள்விகளின் அறியாமையை நக்கலிடாமல், எவ்வாறு உண்மையாக, காத்திரமாக, அறத்துடன் உங்களுக்கேற்ப விளக்க முடிகிறது!!!
ஒவ்வொரு முறை அவரை சந்திக்கும் போதும் வரும் ஆச்சரியங்கள்தான். இந்த முறையும் தொடர்ந்தது. ஆஸ்டின் சௌந்தர், இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம், தேயிலை மணக்க காபி போட்ட மகேஸ்வரி, உபசரிப்பு முத்து காளிமுத்து, பவா செல்லத்துரையின் செல்லக்குட்டி பிரகாசம், தத்துவவியலாளர் விவேக், மேய்ப்பர் சிஜோ – விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் ஒவ்வொருவராலும் விழா அமர்க்களமாகியது
எனவே, முடிவில் கம்பரின் இந்தப் பாடல் பொருத்தமாக பட்டது:
”எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே. இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ”
அந்நகரில் வாழ்பவர்கள் எல்லோரும் கல்வி. பொருள் ஆகிய எல்லாச் செல்வமும் அடைந்திருப்பதாலே, அந்த நகரத்திலே இல்லாதவரும் இல்லை. உடையவர்களும் இல்லை. இப்பாடல் அந்நகரத்தவரின் அறிவுப் பெருக்கத்தையும். செல்வச் சிறப்பினையும் தெரிவிக்கிறது. அங்குக் கற்றவர்-கல்லாதவர் என்ற வேறுபாட்டையோ.; செல்வர், வறியவர் என்ற வேறுபாட்டையோ காண இயலாது என்பது கருத்து.
(உரை): ஆதிசேடன் தாங்கும், இந்த நிலமே-அகலாகவும்; கடலே நெய்யாகவும், மேருமலை திரியாகவும், ஞாயிறு.விளக்காகவும். அமைந்திருக்க, : அந்த விளக்குப் புகையினால், வானம் இருண்டது. போன்று வானத்தில் முகில் மூட்டம் காணப் பட்டது.
மேகமூட்டம் என்பதை விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் என நினைக்கிறேன். அமெரிக்கத் தமிழர் கடல்நீர்; அதில் அகல் விளக்கின் குழிவில், இலக்கியத்தை விரும்புவோர் என்னும் நெய்யினை சிக்கெனப் பற்றிக் கொண்டு பூன் மலை என்கின்ற பொன்திரி கொழுந்து விட்டெரியவே அதிலிருந்து கிளம்பிய சிந்தனை மூட்டமே மேகமூட்டம் எனலாமா?
அதன் தொடர்ச்சியாக திசையைக் காண்பிக்கும் கொல்லன், அந்த மேகக்கூட்ட மழைக் காலத்துக் கரிய மேகமாகிய கரிக் குவியலில் வாடைக் காற்றாகிய பெரிய ஊதுலைத் துருத்தியின் வலிமையைக் கொண்டு ஊதி, மின்னல் நெருப்பெழச் செய்து வெளிப்படுத்துகினற கொல்லன்பட்டரையாகப் பார்க்கிறார் கம்பர்:
“மாதிரக் கருமகன் மாரிக் கார்மழை யாதினும் இருண்ட விண் இருந்தைக் குப்பையின் கூதிர் வெங்கால் நெடுந் துருத்திக் கோள் அமைத்து ஊது வெங்கனல் உமிழ் உலையும் ஒத்தவே.”
இந்த மாதிரி எல்லாம் வெம்மையான நெருப்புச் சுடர்கள் பொறி பறக்கும் என எண்ணி என்னுடைய கம்பளிச்சட்டையை கழற்றி விட்டு ஒயிலாகக் குளிரில் நின்றிருந்தேன். உஷ்ணம் மூளைக்குள் அனலாக தகித்தாலும் நெஞ்சில் கபம் தங்கி ஜலதோஷம் பிடித்துக் கொண்டது. அடுத்த முறை மறக்காமல் தலைக்கு குல்லா, காதுக்கு மஃப்ளர், கழுத்துக்குப் போர்வையுடன் பவ்வியமாகச் செல்ல வேண்டும்.
அறிவுப்பூர்வமான தருக்கத்திற்கும், எதார்த்தத்திற்கும் — இடையே உள்ள உறவை ஜெயமோகனின் மொழியில் அவரின் நூல்களின் வாயிலாகவும் சொற்பொழிவுகளின் மூலமாகவும் அன்றாடப் பதிவுகளின் வழியாகவும் நுழையலாம். எனினும், மொழி என்பது பேசப்படுவது. அந்த மொழியை அவரின் நேரடி பிரவாகமாக, ஊற்றாகக் கிடைப்பதற்கு இந்த பூன் முகாம் அரிய வாய்ப்பு.
வாழ்க்கையின் மிகப்பெரிய கேள்விகளுக்கு தத்துவம் நுண்ணறிவை வழங்க முடியுமா? அதை வெளிப்படுத்த மொழியின் எல்லை என்ன? மீமெய்யியலும் நெறிமுறைகளும் வெறும் முட்டாள்தனமான பேச்சுதானா? இவற்றை நேரே எதிர்கொண்டு அதற்கான பதில்களை உணர்த்தும் பேச்சு, இந்தச் சந்திப்பின் உச்சகட்டம். அவர் அர்த்தமுள்ள மொழியின் எல்லைகளை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டு, உணர்வை முட்டாள்தனத்திலிருந்து பிரிக்க மெய்யியலை வாயிற்கதவாக்கும் விரிவுரையைத் தந்தது — விடையில்லா வினாக்களுக்கு விவாதங்களை உள்ளுக்குள் புலப்பட வைத்த தருணம் ஆகி நிறைந்து நிற்கிறது.
சென்ற முறை வந்தவர்களைப் பற்றிய விரிவான பதிவை, ஒவ்வொருவரைப் பற்றிய சிறு குறிப்பையும் எழுத முடிந்தது. இந்த முறை (கிட்டத்தட்ட) அத்தனை பேரும் மீண்டும் வந்தது ஜாக்பாட். நீண்ட கால உறவுகளை, பால்ய காலத் தோழமைகளை மீண்டும் காணும் சந்தோஷம். சென்ற வருடம் ஐம்பது என எல்லை வைத்திருந்தார்கள். இந்த வருடம் எழுபது. அந்த எண்ணிக்கையும் சட்டென்று நிரம்பி காத்திருப்பு பட்டியல் நிரம்பி வழிந்தது. அந்த எழுபதில் ஒருவராக இடம் கிடைத்தது மகிழ்ச்சியைத் தந்தது.
ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்திருந்தார்கள். விமானம் வரும் நேரம் பார்த்து, ஒத்த காலத்தில் வந்து சேர்பவர்களை வாசஸ்தலத்திற்கு அழைத்துச் செல்லும் கார்கள்; வேளா வேளைக்கு உணவு, காபி, டீ, சிற்றுண்டி; அனைவருக்கும் சௌகரியமான ஓய்வெடுக்கும் வசதி; பக்கத்து பக்கத்தில் குடில்கள்; ஆசானுடன் அதிகாலை முதல் பின்னிரவு நள்ளிரவு வரை நேரம் கழிக்கும் வாய்ப்புகள்; விடிய விடிய நட்புகளுடன் அளவளாவும் தனிமை – சென்ற ஆண்டைப் போலவே இவ்வளவு சிறப்பாக செய்து முடித்திருக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் ஒத்த மனதுடன் போட்டி போட்டுக் கொண்டு நிகழ்ச்சியை ஜமாய்த்தார்கள்.
இந்த மாதிரி மாநாடு என்றால் அதற்கான பேச்சாளர்கள் அதிமுக்கியம். ஒவ்வொருவரும் காத்திரமாக தயாரித்து வந்திருந்தார்கள். கச்சிதமாகப் பேசினார்கள். இத்தனை பரந்துபட்டத் தலைப்புகள் ஆயிற்றே! எவ்வாறு பேரவையில் எல்லாவற்றையும் அகல உழப் போகிறார்கள்? மீண்டும் கருத்தரங்கை களை கட்ட வைப்பார்களா? என்னும் அச்சம் இல்லாவிட்டாலும், சென்ற ஆண்டு மாதிரியே சுவாரசியமாகவும் ஆழமாகவும் நயமாகவும் கலந்தாய்வார்களா என்னும் முன்னுதாரணம் சற்றே நிழலாடிக் கொண்டிருந்தது. இந்த முறையும் புடமிட்ட பொன் ஆக ஜொலிக்க வைத்தார்கள்.
எல்லோருக்கும் நன்றி. ஒருவருக்காகக் கூடுகிறோம். அவரின் நிழலில் தழைக்கிறோம். அடுத்த சந்திப்பை எதிர்நோக்குகிறோம்.
“எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே. இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ.”
ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்: அ) இந்தியாவில் உயிர்களுக்கு மதிப்பு கிடையாது. ஆ) பதவியோ, பணமோ இருந்தால் மட்டுமே இந்தியாவில் மதிப்பு. இ) நூற்றைம்பது கோடி பேரில் 15,000 பேர் இறப்பதெல்லாம் ஒரு சங்கதியே கிடையாது. ஈ) மறுபிறவி, ஜனனமும் மரணமும் சுழற்சி என்றிருப்பதை இந்தியர்கள் அறிவதால் பிற உயிர்கள் இறப்பதை அலட்சியம் செய்கிறார்கள்.
1984-இல் ‘தி ஹிந்து’ நாளிதழின் கடைசி பக்கங்களைத் தவிர முகப்புப் பக்கத்தையும் படிக்கத் துவங்கிய காலம். நவம்பர் 84 முழுக்க இந்திரா காந்தியும் அவரைத் தொடர்ந்து வாரிசு ராஜீவ் அரசராக ஆன கதையும் அலங்கரித்தது. டிசம்பரில் போபால் விபத்து குறித்து அந்தத் தலைப்புச் செய்தியை பார்த்தபோது, கையாலாகாத்தனமும் கோபமும் ஆத்திரமும் அழுகையும் எல்லாமுமாக குழப்பமாக, இந்த அரசு மீதும், அதன் அதிகாரிகள் மீதும், நாடு மீதும், நாட்டின் விதிகள் மீதும், அசூயை கலந்த வெறுப்பு எழுந்தது.
எனக்குத் தெரிந்த யூனியன் கார்பைட் நிறுவனம் ‘எவரெடி’ (Eveready) பாட்டரி தயாரித்தது. என்னவர்களின் கண்களையும் எண்ணற்றவர்களின் உயிர்களையும் பறிக்கக் காரணமுமாய் இருந்தது. ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ என்று படங்கள் வந்த காலம். வெள்ளித்திரையில் கண்கவர் நாயகிகள் எளிதில் காதலில் விழுவது போல், திரைப்படங்களில் மட்டுமே புரட்சி வெடிக்கும் என விளங்கத் துவங்கியது. நிஜத்தில் வில்லன்கள் சௌகரியமாக படகுக் கார்களில் பவனி செல்வார்கள். ஐந்தரை இலட்சம் பேரை முடமாக்கினாலும் எந்தவித பின் விளைவுகளும் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல் சொகுசாக அடுத்த கைங்கர்யத்தில் இறங்கி விடுவார்கள்.
எத்தனை சாலை விபத்துகள்? ஒவ்வொரு மாதமும் எவ்வளவு இரயில் தடம்புரண்டு, எதிருக்கெதிர் ட்ரெயின் மோதிக் கொண்ட இறப்புகள்? சூரத்தில் கொடுந்தொற்று, சென்னையில் புயல், கடலில் சூறாவளியில் மீனவர்கள், நிலநடுக்கம், பூகம்பம், மழை வெள்ளம்… அதெல்லாவற்றையும் விட திறமைக்கு வேலைகொடுக்காத சூழல். கொடும் பசி நிலவிய சமூகம்.
இந்திய தினசரிகளுக்கு எதிர்மறையாய் செய்திகளைத் தருவதில் இருந்த அசுரத்தனமா? அல்லது நம் நாட்டில் நிஜமாகவே அலட்சியமும் அசட்டைத்தனமும் அசமஞ்சமும் சேர்ந்த நிர்வாகத் திறமையின்மையா? ஒவ்வொரு அதிகாரியும் லஞ்சம் வாங்கக் கூசாதவர்களாக, அராஜகம் செய்தால் எந்தவித எதிர்விளைவும் கிடைக்காத சாக்கடைத்தனமா?
நெட்ஃப்ளிக்ஸில் ’ரெயில்வே மென்’ (The Railway Men) பார்த்தவுடன் தோன்றியது —> இன்று இதெல்லாம் மாறியிருக்கிறதா? அல்லது செயல்துடிப்புடன் புத்திசாலித்தனமாக செயல்பட்டவர்கள், ‘கடமையைச் செய! பலனை எதிர்பாராதே!!’ ரகமா?
குறைந்த பட்சம் நல்லவர்களும் நேர்மையாக இயங்கியவர்களும் தன்னலம் பாராது இயங்கியவர்களும் இருந்திருக்கிறார்கள். என் ‘துரியோதனப்’ பார்வைக்கு அவர்கள் தென்படவில்லை. பாலும் தேனும் இன்னும் இந்தியாவில் ஓடவில்லை. அவற்றை ஒடவைப்பதற்காக உண்மையாக உழைப்பவர்களை நாமும் கண்டுகொள்ளவில்லை.
Isaikkavi Ramanan is a prolific poet and writer in Tamil, a composer, and a singer. He has published about 32 books. Notable among them is Sikaram, the biography of the famous movie director, K. Balachandar. His books in English include Chips Down? Chin Up!; Business Mantras, a Pictorial on N. Mahalingam; and A Sublime Sacrament, an interpretation of Hindu marriage rites.
Day: September 16th Sunday The speech starts at 3 PM Place: Burlington’s Recreation Center Address: 61 Center St, Burlington, MA 01803
He has addressed audiences of various age groups in multiple forums on diverse topics, including series on Thirukkural, Bharathiar’s works, Kannadasan’s film songs, and motivational talks. He has anchored and acted in several programs on many popular TV channels relating to social and spiritual themes. He has written a Tamil play Bharathi Yaar? and plays the lead role. He has also dabbled in English theatre and has traveled widely across the globe for his lecture tours in English and Tamil. Besides pursuing his interest in literary works, Mr. Venkateswaran is an avid photographer and a nature enthusiast. He is an ardent pilgrim and has made 35 visits to different parts of the Himalayas so far.
Please join us for his talk and Q&A in Boston.
கவிஞர், பாடகர், எழுத்தாளர், இலக்கிய-ஆன்மீகச் சொற்பொழிவாளர் என்று பல தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர் இசைக்கவி ரமணன். 35 முறை இமாலயப் பயணம். ‘கோடுகள் இல்லா உலகம்’, ‘யோகக் குறள்’, ‘ரமணனைக் கேளுங்கள்’, ‘வண்டி போய்க் கொண்டிருக்கிறது’, ‘திருமணம் என்பது’ போன்ற நூல்களின் ஆசிரியர். இயக்குனர் கே.பாலச்சந்தரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்; திருக்குறள் சொற்பொழிவு, ஆன்மீகச் சொற்பொழிவு, தொலைக்காட்சி நிகழ்ச்சி என்று பம்பரமாகச் சுழல்பவர்.
அவரின் பேச்சை செப். 16 – ஞாயிறு அன்று பாஸ்டன் பக்கமாக கேட்க வாருங்கள்.
நேரம்: மதியம் மூன்று மணி ஒருங்கிணைப்பு: Tamil Makkal Mandram, USA தலைப்பு: கண்ணதாசன் நினைவலைகள் – வசந்த கால நதிகளிலே
இந்த நிகழ்வைத் தவற விடாதீர்கள்! அவசியம் நேரில் வாருங்கள்!!
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde