Tag Archives: Reviews

தர்ஜமா

மொழிபெயர்ப்பு நிலையானது அல்ல – கலாச்சாரமும், மொழியியலும் சமூகச் சூழல்களும் காலத்திற்கேற்ப மொழியாக்கத்தை உருவாக்குகின்றன. ‘மறு-மொழிபெயர்ப்பு சார்பு’ காலப்போக்கில் நியாயங்களை, விளக்கங்களை மாற்றுவது.

ஹோமரின் இலியட் டஜன் கணக்கான முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆரம்பகால மொழிபெயர்ப்புகள் வீரத்தையும் பிரம்மாண்டத்தையும் வலியுறுத்தின, அதே நேரத்தில் கரோலின் அலெக்சாண்டரின் நவீன பதிப்பு, மனிதநேயத்தையும் போர் எதிர்ப்பு உணர்வுகளிலும் கவனம் செலுத்தின. இந்தச் சார்பு நிலையினால் ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் சமூகத்தின் அசல் அகநிலைக்கு விசுவாசமாக இருக்கிறார்.

மொழிபெயர்ப்பு இலக்கியம் கதைகளைப் பகிர்வதற்கு மட்டுமல்லாமல், மொழிபெயர்ப்பாளரின் தேர்வுகளையும் கலாச்சாரத் தாக்கங்களின் அடிப்படையிலும் அவற்றை மறுவடிவமைப்பதற்கும் மறுவரையறை செய்வதற்கும் ஒரு சக்திவாய்ந்த செயலாகும்.

சொல்வனத்தின் 331-ஆம் இதழ் அப்படியான செயலூக்கம் நிறைந்த தமிழக வாசகர்களுக்காக கவனமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-331/

1. டோபையாஸ் ஓல்ஃப் எழுதிய ‘கணப்பின் ஒளி’: தமிழில் மைத்ரேயன்
2. சதாஅத் ஹஸன் மண்டோ எழுதிய ‘வான வேடிக்கை’ : தமிழில் – அனுராதா க்ருஷ்ணசுவாமி
3. அருண் கொலட்கர் எழுதிய கவிதைகள்: தமிழில் – ஆர் சீனிவாசன்
4. ஆண்டன் செகாவ் உத்வேகத்தில் அசல் தமிழ்க்கதை – வார்ட் நம்பர் 6 நிர்மல்
5. ஃபிரெஞ்சுப் படங்களை தமிழில் அறிமுகம் செய்யும் கே.வி. கோவர்தனன்
6. ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை-என உலக விஷயங்களை அறிவியல் தகவல்களை சுவாரசியமாக்கும் அருணாச்சலம் ரமணன்
7. ஜப்பானியப் பழங்குறுநூறு 99-100 கமலக்கண்ணன்
8. அரவிந்தரை ‘நீ இவ்வாறு இருப்பதனால்’ என தத்துவமும் பருப்பொருள் சார்பற்றதாகவும் கவித்துவமாகக் கொணரும் மீனாக்ஷி பாலகணேஷ்

மூன்றாண்டுகளுக்கு மேலாக வெண்பாக்களில் அக்கால ஆசிய இலக்கியத்தை கமலக்கண்ணன் ஜப்பானியப் பழங்குறுநூறு என நூறு கவிதைகளாக மொழிபெயர்த்து முடித்துள்ளார்.

அவரை வாழ்த்த வாருங்கள்.

இன்னும் நிறைய ஆக்கங்கள்; படைப்புகள். நீங்களும் உங்கள் எழுத்துக்களை அனுப்புங்கள்.

உலகளவில் புகழ்பெற்ற சில எழுத்தாளர்கள் அசல் உரையை விட தங்களின் பிறமொழியாக்கத்திற்காக இலக்கிய அங்கீகாரம் பெறுவர். மன்டோவிற்கும் டோபியாஸ் வுல்ஃப்-க்கும் செகாவிற்கும் டாட்டி-க்கும் இதெல்லாம் புகழாரம்.

ஒத்தக் குடிச அவுட்டரிலும் கொடுக்கலியே எங்களுக்கு

நேற்றோடு நவராத்திரி + தசரா முடிவு.

இன்றோடு நோபல் பரிசு அறிவிப்பு முடிவு.

முதலில் இதைக் கொண்டாட வேண்டும் என்று அருணாச்சலம் ரமணன் முன்மொழிந்தார்.

பானுமதி, காரைக்குடி சுபா, ஜெகதீஷ், நட்பாஸ் எல்லோரும் அதை முன்னெடுத்தனர்.

மருத்துவம், பௌதிகம், வேதியியல், இலக்கியம், சமாதானம், பொருளியல் – ஒவ்வொரு நாளும் சொல்வனத்தில் சுடச்சுட விரிவான, விவரமான கட்டுரை.

இன்று பணக்காரர்கள் ஏன் மேலும் பெருஞ்செல்வந்தர்களாக ஆகிறார்கள் என்பதை எளிமையாகச் சொன்னவர்களுக்கான விருது குறித்த விமர்சனம் வெளியாகி இருக்கிறது.

பரிசு பெற்றவர்களின் கருத்தோடு ஒப்புக் கொள்கிறீர்களா?

ஒரு நாடு உள்கட்டமைப்பைக் திட்டமிட்டு, கல்வியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, ​​வளங்கள் எவ்வாறு ஒதுக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க சந்தை விலையைப் பயன்படுத்தினால், அது வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. இது நோபல் பெற்றவர்கள் முன்மொழியப்பட்டதை விட தெள்ளத் தெளிவைக் கொண்டுள்ளது, காலப்போக்கில் என்ன நடந்தது என்பதற்கான உண்மைகளுடன் பொருத்தமாக இருக்கிறது. – பில் கேட்ஸ் பார்வை

ந. பானுமதி பார்வை:

Merry Christmas: Movie Review

‘மெரி கிறிஸ்துமஸ்’ ரசிக்க வேண்டிய படம்.

வசந்தபாலனின் ‘வெயில்’ மாதிரி மறந்துவிடக் கூடிய அபாயம் இருந்தாலும்…
ஆதவனின் சிறுகதைகள் மாதிரி இந்தக் கால இளைஞரைக் கவராமல் போனாலும்…
எம்.எஸ்.வி.யின் குரல் ஏ.ஆர்.ரெஹ்மானுக்கும் குரல் கொடுத்து ‘காதலா… காதலா’விலும் நடித்தது போல் விஜய் சேதுபதி தமிழிலும் ஹிந்தியிலும் பின்னி இருந்தாலும் திராவிட நிறம் என்பதாலும்…

எவளாவது மொத முத நாளன்று ஊரு பேரு தெரியாதவன வீட்டுக்குக் கூப்பிடுவாளா?
இந்தக் கால Badoo, Bumble, eHarmony, Grindr, HER, Hinge, Match, OkCupid, Plenty of Fish, Tinder, Zoosk காலகட்டத்தில் இது சகஜம்.
இது முதல் முடிச்சு.

’96’ மாதிரி பள்ளிலிக்கும் பள்ளி பிராய அபிலாஷை எல்லாம் தாடி நரைத்த காலகட்டத்தில் நடக்கிற காரியமா?
காதல் என்பது காமத்தில் துவங்கி சற்றே ஒற்றை மோற்று விஸ்கி கலந்து வருங்காலத்தை யோசித்து வருவது என்பது நிஜம்.
இது இரண்டாம் முடிச்சு

கிறிஸ்துமல் படங்களுக்கு என்று ஹாலிவுட்டில் ஒரு சூத்திரம் இருக்கிறது. அது மீறுகிற விஷயமா?
விடுமுறைக் காலம். எல்லோரும் ஜோடி ஜோடியாக உலாவுகிறார்கள். குடும்பத்திற்கு பாரம்பரியமும் LGBTQIA2S+ அல்லாததும் முக்கியம். இந்த நிர்ப்பந்தத்தை கேலி செய்வது ஸ்ரீராம் ராகவனுக்கு அவசியம்.
இது மூன்றாம் முடிச்சு,

நான்காம் முடிச்சு முக்கியமான முடிச்சு. அதை நெட்ஃப்ளிக்ஸ் திரையில் பாருங்கள்.

இந்தப் படம் கொண்டாட்ட மனநிலையில் உணர்ச்சிகரமாக ருசிக்க வேண்டியது. Domaine de la Romanee-Conti சரக்கு ஏன் அதிக விலை என்றெல்லாம் கேட்காமல் விரும்பப்படுவது போல் சுவைக்க வேண்டியது.
நீங்கள் மும்பை நகரத்தை பம்பாய் என்று அழைக்கப் பட்ட காலத்தில் இருந்து உழன்றவரா?
கத்தோலிக்கர்கள் மட்டும் நத்தார் தினத்தைக் கொண்டாடுவார்கள் என்று நம்பாமல் அஞ்சலையையும் மேரியையும் டாவு அடித்தவரா?
ஐயங்கார் பேக்கரியில் கேக்கும்; திருப்பலியில் ரொட்டிக்காவும் வைனுக்காகவும் பங்கெடுக்காமல் குட்டைக் கால் பாவாடைகளுக்காவும் ஜெஸ்ஸிக்காவும் யேசுவை ஸ்தோத்திரம் செய்தவரா?

அதெல்லாம் நினைவேக்கம். கழிவேற்ற சிந்தனை. பழைய நெனப்புடா பேராண்டி!
ஆனால், படம் என்பது பின்னணி இசை; துள்ளல் திரைக்கதை; நினைவில் நிற்கும் நற்செய்தி!!
வெள்ளித்திரையில் பார்க்கவில்லையே என வருத்தப்பட வைக்கும் ஆக்கிரமிப்பும் இப்படியெல்லாம் கத்ரினா கைஃபை இதுவரைக்கும் சாகடித்திருக்கிறீரகளே என்னும் கடுப்பும் கொண்டிருப்பவர்களுக்கு சாலச் சிறந்த ஆக்கம்!!

சொல்வனம் #312

புதிய சொல்வனம் இதழில் பல முக்கிய ஆக்கங்கள் இருக்கின்றன. முகப்புக் கட்டுரையை விட்டுவிடலாம். எழுதியவரும் எழுதப்பட்டவரும் சொல்வனம் ஆசிரியர் குழுவில் தொடர்ந்து காத்திரமாகப் பங்களிப்பவர்கள். பத்து சிறுகதைகள். ஒவ்வொன்றையும் தனித்தனியாக பின்னொரு ரத சப்தமி அன்று அறிமுகம் செய்யலாம். ஐந்தாறு தொடர்கள்; இரண்டு வாசகர் கடிதங்கள் போன்றவற்றையும் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என எங்கேனும் ஏற்கனவே எழுதியிருப்பேன்.

312ஆம் சொ.வ. இதழில் என்னைக் கவர்ந்தவை:
1. செமிகோலன் எழுதிய கவிப்பித்தனின் சாவடி தொகுப்பிற்கான எண்ணங்கள்
2. வெங்கட்ரமணன் எழுதிய கிணற்றிலிருந்து வெளிவரும் உண்மை

முதல் பதிவு நேர்மையாக சக காலப் படைப்பாளியின் ஆக்கங்களை அணுகுகிறது. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் பத்து, பதினைந்து புதிய எழுத்தாளர்களின் புத்தம்புதிய நாவல்களையும் தொகுப்புகளையும் வாங்கினாலும், எவரைக் குறித்தும் பதிவு செய்வதில்லை. அந்தக் குறையை அரைப்புள்ளி நீக்குகிறார். அதற்காக “வாழ்க!” (“தொடர்க”வும் கூடவே சொல்லி வைக்கிறேன்).

கனடா வெங்கட் எழுதிய கட்டுரையை அலுவலில் திறந்து விடாதீர்கள். அக்கம்பக்கம் பார்த்துப் படியுங்கள். (சரோஜாதேவி புத்தகம் என்று ராம்பிரசாத் எழுதியதைப் பொதுவிடங்களில் பலர் பார்க்க புரட்டுவதில் எந்த ஆபத்தும் இல்லை). க.வெ. (இவர் டொரொண்டோ பக்கம் இருப்பதால் என்னைப் போன்றோரால் டொரொண்டொ வெங்கட் என்றும் அழைக்கப்படுகிறார்) தத்துவத்தில் துவங்கி, ஓவியத்திற்கு பாய்ந்து கர்ண பரம்பரைக் கதைகளைச் சொல்லி சிறுவாணியாகப் பாய்ந்தோடுகிறது.

உண்மையாக ஓவியத்தைப் பார்த்தால் இளமையாக இருக்கிறது. இன்றைய டிக்டாக் காலத்தில் போலி முகத்தைப் பொருத்தி உலா வருவது சகஜம். அந்தக் காலத்தில் செயற்கை நுண்ணறிவு இல்லாமலே சொந்தமாக வேஷம் போட்ட பொய்யை எல்லோரும் தீட்டிக் கொண்டிருக்க, உண்மையை படம் வரைந்தவரின் கதையைப் படியுங்கள்.

சிறுகதை – பரிந்துரை

நல்ல மலையாளப் படம் போல் தத்ரூபமான கதை.
வெண்முரசு எழுதியதின் மிகுதியில் உருவான சேடி.
தத்துவமும் குட்டிக்கதையும் பின்னிப் பிணைந்திருக்கும் பாதை.

கலைமகள், அமுதசுரபி, மஞ்சரி, ஞானபூமி போன்ற இதழ்களில் படித்திருக்க வேண்டியது;
பார்த்தனும் முராரியும் உரையாடுவது;
சாந்தமாக நிச்சிந்தையாக நேரம் எடுத்துக் கொண்டு நீண்ட காலம் நெஞ்சில் நிலைத்திருப்பது.

இந்த 310ஆம் சொல்வனம் இதழில் ராமராஜன் மாணிக்கவேல் எழுதிய “கொடை” குறிப்பிடத்தக்க ஆக்கம்.
வாசியுங்கள்

அஞ்சனி

நல்ல சிறுகதை என்பது நல்ல நாவலைப் போல. முழு வாழ்க்கையையும் உணர்த்தும்.

நியு யார்க்கரில் லாரா (Lara Vapnyar) எழுதிய Siberian Wood அந்த ரகம்.

கதை எதைப் பற்றியது?

அ) திருமணம்; விவாகரத்து; மறுமணம் என்னும் சுழற்சியில் எவ்வாறு சிக்குகிறார்கள்?

I was too focussed on the struggles of motherhood at that age to see the magnitude of suffering that childlessness could cause. I’d spend hours discussing with other young mothers how tied down we felt. It was so much easier to list the hardships of having a child than to pinpoint the things that made it worthwhile. What was it that made it worthwhile, anyway? It was not about being fulfilled, no, though it was about being full—full of care, full of worry, full of affection, full of a love so great and pressing that it was almost indistinguishable from pain, full of something heavy and real that made you feel grounded, rather than weightless. You felt more there. That was precisely what Daria desperately wanted—to feel rooted, securely tied down.

ஆ) அமெரிக்காவில் குடிபுகுவதற்காக காதல் பாவ்லா கல்யாணம் செய்யும் வந்தேறி நிலைமை என்ன?

He was in awe of New York City—the streets, the buildings, the traffic, the people, the energy, the art! The Met was just stunning, especially the wooden sculptures made by the Asmat people. They were breathtakingly complex—it was as if tree roots were growing out of a person’s body, connecting her to her ancestors, who had roots growing out of their bodies, too, connecting them to the deeper past, and it went on and on. It was a brilliant way to show continuity of life, to hint at immortality.

இ) எல்லோருக்கும் பிடித்தமாக இருக்கும் டாரியா (Daria), குழந்தையைப் போன்ற பேரெல்லை இலட்சியக் கனவாக, எவ்வாறு எல்லாவற்றிலும் முழுமையை எதிர்பார்த்து நிராசையை எதிர்கொள்கிறாள்?

Mark thought that there was something silly and artificial about Daria’s fantasies. As if she had no idea what a family was or how it operated but took her clues from children’s picture books.

ஈ) நெகிழ்ந்து வளையும் நாணலையும் நெடிந்து தனித்து நிற்கும் பனை மரத்தையும் கடற்கரையில் பார்ப்போம். வாழ்வில் இணைத்தால்?

She was vegetarian and knew her way around vegetables, often using ingredients that Mark hadn’t even heard of, like kohlrabi or Japanese turnips or chicory.

உ) நிச்சயமின்மையை எண்ணிப் பார்த்து விளையும் பயங்களைக் கண்டு அஞ்சி நடுங்கி எலிவளையத்துக்குள் சிக்குறுகிறோமா? அடுத்த வேளை எங்கு இருப்போம், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், இன்னொருவருடன் ஓப்பிடாமல் — இலக்கை அடைய உயரப் பறக்கும் பட்டாம்பூச்சியாக பறந்து திரியலாமா?

There was a photo of Daria in the middle of a sea of volcanic ash, kneeling over a puny tree. She had her head cocked to one side, and her self-conscious smile suggested that she knew some people might find her endeavor ridiculous, like that of a child “planting” a stick in the sand. And yet she was doing it anyway. There was something inspiring in her insistence on continuing to try when most people would have given up, in her ability to preserve hope, no matter how absurd it was.

வாரயிறுதி விருந்தில் கதை ஆரம்பிக்கிறது. அந்த சந்திப்பில் நமக்கு கதாமாந்தர்கள் அறிமுகம் ஆகிறார்கள்.

துள்ளலான துவக்கம். தொடர்ந்து வாசிக்க வைக்கும் ஆர்வம். நடுநடுவே அருங்காட்சியக விமர்சனம்; கலையரங்க நையாண்டி; பலான விஷயம்; சுவையான தகவல் சரடு. எல்லாவற்றையும் விட சம்பவங்களினால் கோர்க்கும் லாவகம். இருபதாண்டு கால விஷயங்களை பத்து பக்கங்களில் பசுமையாகத் தரும் சாமர்த்தியம்.

தமிழ்ச் சிறுகதைகளோடு ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.

நீதி போதனை இல்லை. “இது மட்டுமே சரி!” என்னும் தீர்ப்புகள் இல்லை. வட்டார வழக்கு ஜாலங்கள் இல்லை. கேள்விகளை எழுப்பி, பக்கத்து வீட்டு மனிதர்களை உணர்த்தி, உக்ரெயின் – ரஷியா போரையும் நினைவிற்குக் கொணர்ந்து, நீண்ட நாள் நினைவில் தங்கும் குணச்சித்திரங்களை சிந்தையில் தேக்கும் ஆக்கம்.

கச்சிதம்.

இராசாளி – ஜெயிலர்

அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு. அந்தக் கழுகைப் போலவே நாலைந்து போலிப் பறவைகள் உண்டு,

கழுகைப் போலவே உலா வரும். Prairie Falcon (Falco mexicanus), Red-Tailed Hawk (Buteo jamaicensis), Turkey Vultures (Cathartes aura), Black Kite (Milvus migrans) என நால்வரை உடனடியாக நினைவு கூறலாம். பருந்து, ராசாளி, கூளி, சுவணம் எனத் தமிழில் சொல்கிறார்கள்.

தூரத்தில் இருந்து பார்த்தால் எல்லாம் பெரிதாக இருக்கிறது. இறக்கையைப் பெரிதாக விரித்து பிரும்மாண்டமாகப் பறக்கிறது. கூகை குழறும் என்பார்கள்; கழுகு வீருடுகிறது என்பார்கள்; இரண்டும் முன்னே பின்னே கேட்காதவருக்கு அனைத்தும் கத்தல் சப்தம்.

உயரப் பறக்கும் கழுகிற்கும் இராஜாளிக்கும் என்ன வித்தியாசம் என்று இப்பொழுது ஏன் ஆராய வேண்டும்?

ஏன் என்றால், தலைவர் ஏதோ கழுகு, காகம் உவமேயம் சொல்லியிருக்கிறார் அல்லவா!?

கங்க பத்திரம் ஓர் கோடி கை விசைத்து அரக்கன் எய்தான்;
கங்க பத்திரம் ஓர் கோடி கணை தொடுத்து இளவல் காத்தான்;
திங்களின் பாதி கோடி, இலக்குவன் தெரிந்து விட்டான்
திங்களின் பாதி கோடி தொடுத்து, அவை அரக்கன் தீர்த்தான்.
6.18.109 (௧௦௯)

–கம்பராமாயணம், நாகபாசப் படலம்–இந்திரஜித், இலக்குவன் போர்.

பொருள்:– இநத்திரஜித், கழுகின்‌ சிறகுகளையுடைய அம்புகள்‌ ஒரு கோடியைக்‌ கைகளால்‌ தொடுத்து விரைந்து எய்தான்‌ ; இளவலாகிய இலக்ஷ்மணனும்‌ கழுகின்‌ சிறகுகளையுடைய ஒரு கோடி அம்புகளைத்‌ தொடுத்து அவ்வம்புகளைத்‌ தடுத்தான்‌ ; அரைச்சந்திரன்‌ போன்ற முகப்பினையுடைய கோடி அம்புகளை இலக்குவன்‌ ஆராய்ந்து இந்திரசித்தின்மேல்‌ விட்டான்‌ ; இந்திரசித்தும்‌ அரைச்சந்திர அம்புகளை கோடி தொடுத்து அவ்வம்புகளை அறுத்தான்‌.

குறிப்பு: – கங்கம்‌ – கழுகு. பத்திரம்‌ – சிறகு. கழுகின்‌ சிறகுகள்‌ பொருந்திய அம்புகள்‌ கங்கபத்திரம்‌ எனப்பட்டன. பாதிமதி போன்‌.ற முகப்பினை உடைய அம்புகள்‌ என்பார்‌, ’திங்களில்‌ பாதி’ என்றார்‌. இதுகாறும்‌ இந்திரசித்து விடுத்த அம்புகளை மட்டுமே அறுத்துக்‌ கொண்டிருந்த இலக்குவன்‌ இப்போது திங்களிற்‌ பாதியை ஒத்த அம்புகளை இந்திரசித்தின்மேல்‌ விடுத்தான்‌ என்றவாறு. தீர்த்தல்‌ – அழித்தல்‌.

விக்ரம் படத்தில் கமல் விதவிதமானத் துப்பாக்கிகளை வைத்து சுட்டுத் தள்ளுவார். அவருக்கு சளைக்காமல் ஜெயிலரில் ரஜினியும் ‘மனிதன்’ போல் ரகரகமாக குண்டு போடுகிறார்.

நடுவில் எதற்கு கம்பராமாயணம் என்று கேட்கிறீர்களா?

1993ல் ’கலைஞன்’ படத்தில் இந்திரஜித் என்னும் கதாபாத்திரத்தில் கலைஞானி நடிக்கிறார். அந்தக் கலைஞன் விக்ரமில் விட்ட அம்புகளை சமாளிக்க இளவல் ஜெயிலரில் எய்கிறார். இதைத்தான் அன்றே கம்பர் பாடியிருக்கிறார். அந்த கங்கபத்ரம் = பின் நுனியில் கழுகின் சிறகுகள் பொருத்தப்பட்ட அம்புகளை (பத்ரம் என்றால் சிறகு) இசை வெளியீட்டு விழாவில் குறிப்பால் உணர்த்துகிறார் இரஜினி.

அதெல்லாம் இருக்கட்டும்? படத்தை ரசித்தேனா? மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறதா? தமிழ் சினிமாவின் மைல் கல்லா? ரஜினியின் நடிப்பிற்கு சிகரமா? அடுத்த ஆர்.ஆர்.ஆர். மாதிரி ஆஸ்காருக்கு அனுப்பலாமா?

அகாடெமி விருதுகளில் புதியத் தலைப்பாக ‘செயற்கையாக தானியங்கியாக உருவாக்கிய உயிர் போன்ற இயக்கம் காட்டும் படங்களுக்கான விருது’ ஒன்றை வழங்கினால், அது நிச்சயம் ஜெயிலருக்குக் கிடைக்கும்!

Elemental – எலிமெண்டல்

டிஸ்னியுடன் சேர்ந்த பிறகு பிக்ஸாரின் படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதல பாதாளத்திற்குச் செல்ல ஆரம்பித்தன, அதன் உச்சகட்ட தீவிரமாக சமீபத்திய படத்தைச் சொல்லலாம்.

கலக்கல் படங்களை எடுத்தவர்கள்: அப், இன்கிரெடிபிள்ஸ், கோக்கோ, டாய் ஸ்டோரி, இன்சைட் அவுட், மான்ஸ்டர்ஸ் இன்க், கார்ஸ், ஃபைண்டிங் நீமோ, இன்சைட் அவுட்.

கடந்த படமான “டர்னிங் ரெட்” (சிவப்பாக மாற்றம்) – பெரும் ஏமாற்றம். இந்தப் படம் அதன் அடுத்த கட்டம்.

எல்லோரையும் திருப்தி செய்யும் விதமாக கதை எழுத முடியாது! அனைவரையும் உள்ளடக்கி பூர்வகுடி முதல் பல்லுயிர் பேணல் வரை வோக் கலாச்சாரமாக சர்வ ரோக நிவாரணியாக சினிமா எடுக்கக் கூடாது. லத்தீன் அமெரிக்கர்கள், இஸ்லாமிய மதப் பற்றாளர்கள், ஐரிஷ் வந்தேறிகள், ஆஃப்கன் அன்னியமாக்கப்பட்டவர்கள், தெற்காசிய அயல்வாசிகள் – எல்லோரையும் குறிப்பால் உணர்த்துகிறார் இயக்குனர் – நெருப்புக்காரர்கள்.

வெள்ளையர்கள் போல் தண்ணீர்காரர்கள். அவர்கள் இயல்பாக அவர்களின் நாடாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். கலை, பண்பாடு என்று செழுமையாக்கிக் கொண்டிருப்பவர்கள். நதி போலே ஓடிக் கொண்டிருப்பவர்கள். வளைந்து கொடுப்பவர்கள்.

அயல்தேசிகளும் உள்ளூர்வாசிகளும் – தீயும் நீரும் – இணைந்தால்?

இதுதான் முடிச்சு.

வழக்கம் போல் சுவாரசியமான வசனங்கள். பிரமிப்பான ஜவலிப்புகள். ரசனையான பின்னணி அணிகலன்கள். அர்த்தபுஷ்டியான கதாமாந்தர்கள். நுணுக்கி செதுக்கப்பட்ட சின்னச் சின்ன வர்ணணைகள். எல்லாமே பிக்சார் தரம்.

எல்லாவற்றிலும் வென்று உச்சத்தை எட்ட விரும்பும் பொறியும் + ஏதொவொன்றில் திருப்திப்பட்டு கிடைத்த வாழ்க்கையில் திருப்தியுறும் ஓடையும் – ஒரு குடித்தனத்தில் மணமுடிக்க இயலுமா!?

இதெல்லாம் வைத்து கலக்கியிருக்க வேண்டாமா அனிமேஷன் படம்? இந்த பின்பிலத்தைக் கொண்டு பிக்சார் பின்னி சிம்மாசனமிட்டிருக்கலாமே!

ஆனால் – அன்னியோன்யம்? மனதில் நிற்கும் சித்தரிப்பு?? உள்ளுணர்வை உரசி சிந்தையை ஆக்கிரமித்து உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உணர்வு பூர்வமான கொந்தளிப்பு!? எல்லாம் கோட்டை விடுகிறார்கள்.

ஒரு காலத்தில் பாரதிராஜா என்றால் நம்பிக்கையாகப் போவேன். என்னுயிர் தோழன். புது நெல்லு புது நாத்து, நாடோடித் தென்றல் என்று தொடர் சறுக்கல்களில் ‘சரக்கு தீர்ந்து போச்சு மாஸ்டர்!’ என்று விட்டு விட்டேன். அது போல் பிக்சரும் தங்களின் காயல்கல்பத்தை காற்றில் தொலைத்து இன்னும் தங்களின் ஆன்மாவை ரத்தமும் சதையுமாக மென்று கடித்து துப்பியிருக்கிறார்கள்.

சற்றே இலகுவாக, ஜாலியாக, உண்மையாக லேசாக்கி ஊதியிருக்கலாம்.

Solvanam Stories – 292nd Issue

சொல்வனம் இதழின் 292வது வெளியீட்டில் நிறைய கதைகள் வந்திருக்கின்றன.

ஒவ்வொன்றையும் பற்றி எனக்குத் தோன்றியவை:

  1. 1/64, நாராயண முதலி தெரு: சித்ரூபன் எழுதியிருக்கிறார்

அந்தக் கால நினைவுகள். சொல்வனம் என்றாலே நொஸ்டால்ஜியா என்னும் தேய்வழக்கிற்கு பொருத்தமான ஆக்கம். அவ்வப்போது, அந்தக் கால ‘ரெட்டை வால் குருவி’, ‘அழியாத கோலங்கள், ‘கோகிலா’ என்று பழைய படங்களைப் பார்ப்பேன். இதுவும் அது போன்ற ஒண்டுக் குடித்தன பதிவு. இங்கு சென்றிருக்கிறேன். பார்த்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். அனுபவித்திருக்கிறேன். அதை சிறப்பாக மலரும் நினைவுகள் கொடுக்கிறார்.

  1. இப்படியும் ஒரு நாள், ஒரு கதை: மோஹன் ஹரிஹரன் எழுதியிருக்கிறார்

இது “Everything Everywhere All at Once” போன்று எல்லாமுமாக இருக்கிறது.
அதி புனைவா… உண்டு
அறிவியல் புனைவா… உண்டுங்க அம்மா
நிஜ சம்பவங்கள்… உண்டு ஐயா
கட்டுரை தளத்தில் தகவல்கள்… அதுவும் உண்டு
இதையெல்லாம் கிண்டலடிக்கும் சுய எள்ளல்… எல்லாம் உண்டு

  1. ஒரு குழந்தையும் இரு உலகங்களும்: விக்னேஷ்

இது சிறப்பான ஆக்கம். மனதில் பதியும் சித்திரங்கள். பாத்திரப் படைப்பு. இருண்மையைக் கோரும் விவரிப்பு. நல்ல படைப்பு!
வாழ்த்துகள்!!

  1. Femino 16: சப்னாஸ் ஹாசிம்

இதை விமர்சித்தால் மாட்டிக் கொள்வீர்கள். முதலில் கதை புரிந்ததா என்று கேட்டுக் கொள்ளுங்கள்… அப்புறம் பெண்ணியம், அரசியல் சரிநிலை, இஸ்லாம் மதம் – வேண்டாம்… மாட்டிக்குவேன். விளங்கிக் கொண்டு வருகிறேன்.

நீங்கள் படித்துப் பார்த்து உங்களுக்குப் புரிந்ததை சொல்லுங்கள்

  1. சுத்தமும் ஐரீனும்: பிரதீப் நீலகண்டன்

கோகுலம் படித்த திருப்தி கிடைக்கிறது. குழந்தைகள் பகுதி துவங்கியிருப்பதை அறிவிக்க மறந்து விட்டார்கள் #Solvanam

  1. ஒரு தபலா, சாரங்கி, கே.கே மற்றும் நான்: தேஜூ சிவன்

தமிழ் தொலைக்காட்சிகளின் சீரியல் பார்த்த நிறைவைத் தரும் நெகிழ்வான உருக வைக்கும் கண்ணீர் காட்சிகள் நிறைந்த சிந்து பைரவி. ‘சுந்தரி’, ‘எதிர் நீச்சல்’, ‘மிஸ்டர் மனைவி’, ‘இனியா’, ‘கயல்’, ‘இலக்கியா’, ‘அன்பே வா’, ‘அருவி’ எல்லாம் பார்த்து கொலை வெறியில் உருவாகிய கதை.

  1. பனிக்காலத்தின் பகல்: ராஜேஷ் வைரபாண்டியன்

தேவலாம். முடிவை நோக்கி ஓடும் கதை. Everything Everywhere All at Once பார்த்ததன் மல்டிவெர்ஸ் விளைவு!

தமிழில் இவ்வளவு பேர் தீவிரமாக இலக்கியத்தை பேணுவது ஆரோக்கியமான விஷயம். பல்சுவையும் உண்டு. உட்பொதியும் கிடைக்கிறது.

உங்களுக்கு எந்தக் கதை கவர்ந்தது?

Review of Vikramadithyan Documentary | Vishnupuram Awards 2021

Vikramadithyan Documentary | Vishnupuram Awards 2021: ‘வீடும் வீதிகளும்’, 2021ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களைப் பற்றிய ஆவணப்படம் பார்த்தேன்.

சில எண்ணங்கள்:

1. துணையெழுத்து இல்லாமை: தமிழ்க் கவிஞரைப் பற்றிய அறிமுகப் படத்தில் வரும் உரையாடலை, உரையாடற் மொழியிலோ பிற வேற்று மொழியிலோ எழுத்து வடிவில் காட்டப்படும் உரை; ஆங்கிலத்தில் துணையுரை இல்லாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

2. அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டும் என்று அவசர கதியில் மிச்சம் மீதியைப் போட்டு செய்யும் வடகறி கொத்து பரோட்டா போல் வந்திருக்கிறது. வடகறி சுவையாக இருக்கும். ஆனால், இங்கே சாஸ்திரோப்தமான சூப், சிற்றுண்டி பலகாரம், தலைவாழை இலை சாப்பாடு, பீடா எல்லாம் எதிர்பார்க்கிறேன்.

3. இந்தப் படங்கள் எவரைக் குறிவைத்து எடுக்கப்படுகின்றன?

அ) தமிழ்க் கவிஞர்களை அதிகம் அறியாத தமிழ் தெரிந்தோர்

ஆ) விக்கிரமாதித்தனை நன்கு அறிந்தோர்

இ) தமிழ் இலக்கியத்தில் நிறைய பரிச்சயம் இருந்தாலும் விக்கிரமாதித்தனை அறியாதோர்

ஈ) தமிழ் புரிந்தாலும் எழுத/வாசிக்கத் தெரியாத தலைமுறை

உ) விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்

என்னை (இ) பிரிவில் வைத்திருக்கிறேன். என் மனைவியை (அ) பிரிவில் வைக்கிறேன். எங்கள் குழந்தைகளை (ஈ) பிரிவில் வைக்கலாம். இந்த மூவருக்குமே இந்தப் படம் எதையும் கொண்டு சேர்க்கவில்லை.

4. நான் எதை எதிர்பார்த்தேன் – இந்தப் படத்தில்?

i) தமிழ்க் கவிஞர்கள் – சுருக்கமான பாரம்பரியம்; எந்த இடத்தில் விக்கிரமாதித்தன் வருகிறார்?

ii) விக்கிரமாதித்தன் தோற்றமும் வளர்ச்சியும் – எவ்வாறு அந்தக் கவியாளுமை உருவானது?

iii) சமகால கவிஞர்களை எவ்வாறு அவர் ஊடுருவுகிறார்? அவரின் நெடிய இலக்கிய பயணத்தில் என்னென்ன மாற்றங்கள் தோன்றின?

iv) கவிஞரை வாசித்ததால் அவரவருக்கு என்ன கிடைத்தது? போகன் சங்கர், லஷ்மி மணிவண்ணன், வண்ணதாசன் – சுய அனுபவம் / நேர்மையான தன்மை நிலைப் பார்வை / அகப் பகிர்வு – இது இல்லாமல் பீடத்தில் இருந்து கொண்டு சொற்பொழிவாற்றுவது ‘ராஜாதி ராஜ ராஜ கவிராய ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர விக்கிரமாதித்தாய நமஹ!’ என அலறுகிறது.

5. அறிமுகமாக அந்த வீணை இசை மெல்லிய அபாரம். படம் முழுக்கவே சத்தமாக, “நான் இருக்கிறேன்!” என்று கத்தாமல், படத்தோடு இயைபான இசை.

6. ஏன் பேசுபவர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் போடுகிறார்கள்? பேசுபவர் யார், எங்கிருக்கிறார், என்ன எழுதியிருக்கிறார், ஏன் பேசத் தகுதியானவர் என்றெல்லாம் போட வேண்டும்.

7. கவிஞரைக் குறித்த ஜெயமோகனின் அறிமுகம் முகஞ்சுளிக்க வைத்தது. இன்னாரைப் பாராட்டி சீராட்டும் தருணத்தில் “சட்டையில்லாமல் வந்தார்! சண்டைக்காரராக முன்வந்தார்!!” என்று சொல்லிவிட்டு, “நான் எழுதியதுதான் அவரைப் பற்றிய முதல் கட்டுரை!” என்று ஜம்பமும் தட்டிக் கொள்வது உவ்வேக். கொஞ்சம் தன்னடக்கத்தோடு உரையாடியிருக்கலாம்.

8. இறுதியில் போடப்படும் பெயர் பட்டியல் – அகர வரிசைப்படி இருக்க வேண்டும். இது ஏதோ இலக்கிய அந்தஸ்து பீடம் போல் வயதை வைத்து போடப்பட்டிருக்கிறது.

9. ஒரே ஒரு பெண்ணாக சுபஸ்ரீ வந்து போகிறார். நன்றாகப் பேசினார்.

10. விக்கிரமாதித்தன் உரையாடலை இன்னும் தீவிரமாக ஆழமாக நடத்தியிருக்க வேண்டும். குடியோடு என்றால் குடியோடு. ஏழெட்டு நாள்கள் என்றால் அத்தனை பொறுமையோடு. அதன் பின் கத்திரி போட்டு ஆங்காங்கே கிடைத்த நறுக்குகளைக் கொண்டு அவரின் பேச்சு வந்திருக்க வேண்டும். இப்பொழுது ஏதோ தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த்தை வைத்து பொம்மை கோச்சடையான் எடுத்த மாதிரி தீட்டியிருக்கிறார்கள்.