Tag Archives: Education

அமெரிக்காவில் தமிழ்க் கல்வி – தமிழ்ப் பள்ளி கொண்டாட்டங்கள்

பிரபுதாஸ் பட்வாரி அன்றைய ஆளூநர். 1977-80 வரை தமிழக கவர்னராக இருந்ததாக விக்கிப்பிடியா சொல்கிறது.

அவரின் சிறப்பு என்னவென்றால், எந்த விழாவிற்கு அழைத்தாலும் ஆஜராகி விடுவார். எங்கே அழைத்தாலும் வந்துவிடுவார். எப்பொழுதும், எந்தத் தருணத்திற்கும் சொற்பொழிவைத் தயாராக வைத்திருப்பார். எந்த அரங்கத்திலும் பொருத்தமாகப் பேசுவார்.

கலாமிற்கு முன்னுதாரணம் எனலாம். எளிமையானவர். எனக்கு ரொம்பப் பிடித்த சிரிப்பைக் கொண்டவர். அவரைப் போல் ஆக வேண்டும் என்பது என் பால்ய காலம் லட்சியம்.

திராவிட கலாச்சாரம் அதை பாதுகாத்தது. எனினும், எவர், எதற்குக் கூப்பிட்டாலும் சென்று விடுவதைப் பழக்கமாக்கி இருக்கிறேன்.

அவ்வாறு ரோட் ஐலண்ட் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பகிர்ந்த பேச்சு

அனைவருக்கும் வணக்கம்.

தமிழ்ப் பள்ளியை நடத்தும் ரமா சுப்ரமணியன், கார்த்திக் பால்சுப்ரமணியன், விஜயகுமார் சபாபதி, சாருலதா ரவிஷங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்

ஆக்டன் தமிழ்ப் பள்ளி மணி அவர்களுக்கும் நெட்ஸ் ராஜ் அவர்களுக்கு பணிவு கலந்த வணக்கங்கள்

அமெரிக்காவில் பத்தில் ஒருவர் மட்டுமே பன்மொழி வித்தகர். பாக்கி தொண்ணூறு சதவிகிதம் ஒரு மொழி மட்டுமே அறிந்தவர்கள்.

இரு மொழியைக் கற்றுக் கொள்பவர்களுக்கு இயல்பாகவே மூளையில் சிக்கலான புதிர்களை விடுவிக்கும் அடுக்குகளும் இணைப்புகளும் உருவாகின்றன. ஒரே சமயத்தில் எதிரும் புதிருமான வாதங்களை அவர்களால் மனதிலும் சிந்தையிலும் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. லத்தீன் மொழி வழிவந்த ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்த்துகீசிய, இத்தாலிய பாஷை போன்றவற்றை மட்டும் கற்றவர்கள் மூளை ஒரு மாதிரியாகவும். தமிழ் போன்ற திராவிட மொழிகளைக் கற்று அறிந்தவர்கள் மூளை மேலும் தீவிர இயக்கத்துடனும் ஆற்றலுடனும் செயல்படுவதாக ஆராய்ச்சியின் முடிவுகள் தெள்ளத் தெளிவாக தெரிவிக்கின்றன.

தேவையில்லாதவற்றை நினைவில் இருந்து நீக்குதல்,

கூடுதல் கவனம்,

சிக்கலைத் எவ்வாறு தீர்ப்பது மற்றும்

முடிவெடுத்தலில் தீர்க்கம் – எல்லாவற்றுக்கும் இரட்டைமொழி அவசியம்.

உதாரணமாக – S-O-R-R-Y

இதைப் பார்த்தால் ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர்க்கு ஒரே அர்த்தம்தான் விளங்கும். “தெரியாமப் பண்ணிட்டேன்… மன்னிச்சுடுங்க!”

தமிழ் அறிந்தவர்க்கு பல அர்த்தங்கள் ஓடும்.

சாரி – புடைவை எடுக்கலாம் என்று மனைவி சுட்டுகிறாரோ?

சாரி – ரங்காச்சாரி, வெங்கடாச்சாரி என்று எவரையாவது அழைக்கிறாரோ?

சா… ரிகமபதநி என்று தொடங்குவதற்கு முஸ்தீபு போட்டு ராகம் – தானம் – பல்லவி போட்டு தாளத்தை இழுக்கிறாரோ?

சாரி சாரியாக தமிழ் கற்க தன் மகவுகளை பெற்றோர் அனுப்ப வேண்டும் என்கிறாரோ?

சரி என்று சொல்லி வைப்போம். அதற்கும் ஆங்கிலத்தில் ஏறக்குறைய அதே எழுத்துகள்தானே!

கூழாங்கல்லை எடுத்து நதியில் வீசுங்கள்.

ஒரு மொழி அறிந்தவர் அதை தொப்பென்று ஒரே இடத்தில் வீசி முடிப்பவர்.

பல மொழி அறிந்தவர் என்றால் அந்தக் கல் பல்வேறு அலைகளை ஏற்படுத்தி தீர்க்கமானத் தொடர் தாக்கத்தை உருவாக்கும்.

பெற்றோர்களுக்கு

பல விதமான குழந்தைகளுடன் உங்களின் மகளும் மகனும் பழகுவதற்கு இந்தத் தமிழ்ப் பள்ளி உதவுகிறது.

திங்கள் முதல் வெள்ளி வரை அமெரிக்க நண்பர்கள்.

வாரயிறுதியில் நம் வரலாறும் பாரம்பரியமும் கைகோர்த்து ஒத்த மனங்கள் இணைவதற்கு இது ஒரு வாய்ப்பு.

அலுவல் நண்பர்களிடம் ஒரு விதமானப் பேச்சுகள் எடுபடும். அண்டை அயலார், பக்கத்து வீட்டுக்காரர்களோடு இன்னொரு விதமானப் பேச்சுகள் எடுபடும். நண்பர்கள் என்பது இங்கு இருப்பவர்கள். அவர்களிடம் மனம் விட்டு எதையும் கொண்டு வரலாம். அதற்கு இந்த முறைமை உதவுகிறது.

ஆய்வுகளும் தரவுகளும் இருக்கட்டும். ஒரு குட்டிக் கதை

வெந்நீர் சூடு போதுமா?

பண்ணையாருக்கு தினசரி வெந்நீர் தேவை. அந்தக் காலத்தில் தானியங்கியாக இயங்கும் தண்ணீர் சூடேற்றி – கீஸர் கிடையாது. காலையில் எழுந்து வெந்நீர் போடவென்று ஒருவரை வேலைக்கு வைத்து இருந்தார்.

சரியான பதத்தில் வெந்நீர் இருக்கிறதா என்று ஒவ்வொரு நாளும் அவனும் கேட்பான். பண்ணையார் எப்பொழுதுமே ஏதாவது குறை சொல்லி வந்தார்.

இன்னிக்கு சூடு போதலே என்பார்

இன்னிக்கு சூடு ஜாஸ்தி என்பார்.

ஒரு நல்ல நாளில் கொதிக்க கொதிக்க வென்னீரை வைத்துக் கொடுத்து, அவர் மேல் கொட்டி விட்டு ஓடியே போய் விட்டான் அந்த வெந்நீர் போடுபவன்.

அந்த வெந்நீர் போடுபவன் மாதிரிதான் ஒரு ஆசிரியரின் வேலை. பண்ணையாராக நம் பசங்களைப் பாருங்கள்.

அவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். ஒன்னும் புரியலே; கஷ்டமா இருக்கு என்பார்கள்.

இதெல்லாம் எதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று புலம்புவார்கள்.

ஏற்கனவே தெரிந்த விஷயம் என்று போன வருடம் படித்ததை நினைவூட்டும் போது அங்கலாய்ப்பார்கள்.

ஆசிரியர்களும் (பெற்றோர்களும்தான்) தட்ப வெட்பம் பார்த்து அதற்கேற்ப இதமாக ஒத்தடமாக வென்னீர் வைக்க வேண்டும்.

பக்குவமாக ஆடிக் கறக்கும் மாட்டை ஆடியும் பாடிக் கறக்கும் மாட்டை பாடியும் கறக்க வேண்டும்.

அமெரிக்க வாழ்க்கை என்பது வானவில் போன்றது.

அதில் ஆங்கிலம் ஒரு வண்ணம்.

வானவில்லில் வெறும் ஏழு வண்ணங்கள் மட்டுமல்ல. அதையும் தாண்டி பல்வேறு வண்ணங்கள் ஊடுருவி இருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

வீட்டை வெள்ளையடிக்க ஹோம் டிப்போ போனால் ஐயாயிரம் வண்ணங்களைக் காட்டுவார்களே…

அது மாதிரி வானவில். அது மாதிரிதான் வாழ்க்கையின் வண்ணங்களும்.

அது போல் வானவில் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அறிவதற்கான பாதை இந்தக் கல்வி.

தமிழ் மழை போல் எங்கும் பொழிகிறது. அதில் சூரியனாக ஆசிரியர்கள் ஒளி வெள்ளம் பாய்ச்சி பாதையைக் காட்டுகிறார்கள். அப்பொழுது வானவில்லையும் அதன் சாத்தியங்களையும் உணர உங்கள் குழந்தைகளைத் தொடர்ச்சியாக தமிழ் பயில வைக்கிறீர்கள்.

தமிழ் ஆசிரியர் என்பவர் நம் வரலாற்றை உணர்த்துபவர்

தமிழ் மொழி நமக்கு அறத்தையும் வாழ்க்கை முறையையும் உலகையும் கற்றுத் தருவதற்கான பாதை

ஐயாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக புழக்கத்தில் இருக்கும் பழக்கத்தைத் தொடர்ச்சியாக பயில்வோம்! வெல்வோம்!!

நனவூஞ்சல்

கல்லூரியை முடித்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.

அதற்காக எல்லோரையும் ஒன்று சேர்க்கும் வைபவம் நடக்கிறது. ஏற்கனவே 96 பார்த்து, அந்தக் கடுப்பில் இருந்தவனை இந்த விழா சுணங்க வைத்தது. 96 மாதிரி, கபீர் சிங் (நீங்கள் தெலுங்கர் என்றால் அர்ஜுன் ரெட்டி) மாதிரி எல்லாம் இனக் கவர்ச்சி என்றவன், இன்றும் பாலுணர்வு என்பவன் நான். நாளைக்கு என்ன நடக்கும் என்பது ரஜினிக்கேத் தெரியாது… எனக்கு என்ன நினைப்பு இருக்கும் என்பதை குணாவே உணர்வார்.

ரீயுனியன் சபலம் இருந்தாலும் விடவில்லை. இணைய எழுத்தாளன்; கௌரவமான உத்தியோகம்; யாருக்குத் தெரியும் சொல்வனம்.காம் பத்திரிகைக்கு எழுதுவதற்குக் கூட பிலானியில் ஆள் கிடைக்கலாம்! போக வேண்டும் என்னும் எண்ணம் எழுந்தது.

அப்பொழுது வாட்ஸப் குழுவில் இணைத்தார்கள். அந்தக் கால புகைப்படங்களைப் போட்டார்கள். எல்லோரும் சேர்ந்து எடுத்துக் கொண்டது; கொண்டாட்டங்களில் திளைத்த தருணங்களில் க்ளிக்கியது… அதையெல்லாம் பார்த்தால் அப்படியே நினைவோடையும் நனவூஞ்சலும் கொஞ்ச வேண்டுமே!?

இல்லை.

சற்றே வயிற்றைப் பிசைந்தது. எதை மதித்திருக்கிறோம்?

பணம்… செல்வாக்கு… ஸ்டைல்… பெண்களை அலட்சியப்படுத்தி மயக்கும் வித்தை… தற்பாலுணர்வு போன்ற சிறுபான்மையை கூனிக் குறுக வைக்கும் நடத்தை. தலித்தை பார்ப்பானும் பார்ப்பனனை மற்ற சாதியினரும் சாதிக் கண்ணோட்டம் மட்டுமே கொண்டு கணிக்கும் குறுகிய பார்வை.

எதைக் குறித்து பேசிக் கொண்டோம்? எப்படி மற்றவர்களை மதிப்பிட்டோம்? #மீடு இயக்கமோ, அறச்சீற்றமோ — எவ்வளவு அக்கறையையும் புரிதலையும் விவாதிக்கும் தன்மையும் இன்றாவது கொண்டிருக்கிறோம்?

பசுமையான நினைவுகள் என்று மனதில் ஏதோ மூளையின் மூலையில் எங்கோ தங்கி இருக்கிறது. அது அப்படியே பாசி பிடித்து இருக்கட்டும். இன்று போய் கருத்து சொன்னால், “உன் டெசிக்னெஷன் என்ன? என் பெஸ்ட் செல்லர் என்ன? உன் வால்யூவேஷன் என்ன?” என்று மட்டுமே சீர் தூக்கும் சமூகம் போதனையை விரும்பாது. உன்னால் என்ன காரியம் ஆகும், என்ன ஆதாயம் கிடைக்கும், எவ்வாறு வருமானம் பெருகும், எங்ஙனம் நெட்வொர்க் விரிவடையும் என்றே உன்னை கணிப்பிடும்.

உனக்கு அன்று அது முக்கியமானது என்பதை உணர்த்தினார்கள். இன்று எது உனக்கு முக்கியம் என்பதைப் புரிந்த பிறகும் நண்பர்களின் அருகாமைக்கும் தோழிகளின் தோற்றக் கவர்ச்சி எட்டிப் போன செல்ஃபீக்கும் என்ன வாத பரிபாலனம் கிட்டப்போகிறது?

போகாமல் இருப்பது – விட்டுப் போனதை எண்ணி நெஞ்சம் நிறைந்தது.

கல்வியின் தரமும் இளைஞர்களின் ஆற்றலும்

இந்தியாவில், 2017 ம் ஆண்டிற்கான சிறந்த செயல்திறம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் + கல்லூரிகளின்  பட்டியலை (2017 ranking of institutions based on performance) மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதையொட்டி சில எண்ணங்கள்:

  1. பொறியியல் கல்லூரிகள்:

    முதலில் இருக்கும் கல்லூரிகள் எல்லாம் ஏன் தொழில்நுட்பம் அல்லது பொறியியல் அல்லது அறிவியல் கல்லூரிகளாகவே இருக்கின்றன? கலை மற்றும் பொருளாதாரம் மற்றும் நிதி மற்றும் கல்லூரிகளுக்கு இந்தியாவில் மரியாதை கிடையாதா?

  2. ஆராய்ச்சி மையங்கள்: இந்தக் கல்லூரிகளில் இருந்து எவ்வளவு ஆராய்ச்சிக் கட்டுரைகள் மதிக்கத்தக்க இடங்களில் வெளியாகின்றன? ஒவ்வொரு ஆண்டிலும் உலக அளவில் உரிமைக்காப்புகள் எத்தனை வாங்கப்படுகின்றன? இங்கிருந்து படித்து கரையேறுபவர்கள் எத்தனை நிறுவனங்களைத் தோற்றுவிக்கிறார்கள்? இந்த தலை பத்து பல்கலைக்கழகங்களில் பட்டதாரி பட்டம் பெறுபவர்களில் எத்தனை பேர் கவனிக்கத்தக்க கண்டுபிடிப்புகளைக் கொடுத்திருக்கிறார்கள்?
  3. மேலாண்மை:

    தலை இருபது கல்லூரிகளில் நான்கே நான்கு மட்டுமே மற்றவர்களுக்கு கிட்டியிருக்கிறது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், அரசுத்துறையின் பட்டியல் என்பதால் அரசாங்கம் நடத்தும் கல்லூரிகளுக்கு முன்னுரிமை தரப்பட்டதா?
  4. களத்தில் பயிற்சி: இந்தியாவில் நிஜ வாழ்க்கைக்கும் கல்லூரிகளில் கற்றுத்தரும் விஷயங்களுக்கும் பெரிய இடைவெளி உண்டு. இன்னும் மதிப்பெண்களில் நம்பிக்கை கொண்ட நாடு இந்தியா. இன்றளவும் தொடர்ச்சியான பரீட்சைகள் வைக்காமல், பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு, செமஸ்டர் முடிவில் ஒரேயொரு தேர்வு என்று செயல்படும் நாடு. இதில் அசலான நிறுவனங்களில் சுயமான செயல்பாடு என்பதைக் கணக்கிலேயே எடுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று பழமொழி மட்டும் பேசுவார்கள்.
  5. தமிழகக் கல்லூரிகள்: அண்ணா பல்கலை, 13ம் இடம் பெற்றது. நஷ்டத்தில் இயங்கும் அண்ணாமலை பல்கலை, 92ம் இடம் பெற்றது. நுாற்றாண்டு பழமையான, சென்னைப் பல்கலை, 64ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கு, 45ம் இடம் கிடைத்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலை, சேலம் பெரியார் பல்கலை போன்றவை, 100க்கும், 150க்கும் இடையிலான, இரண்டாம் கட்ட பட்டியலில் மட்டுமே, இடம் பெற்றுள்ளன.

    பல்கலைகளுக்கான தரவரிசை பட்டியலில், பாரதியார் பல்கலை, 28; பாரதிதாசன் பல்கலை, 88ம் இடங்களை பிடித்துள்ளன. திருவள்ளுவர், மனோன்மணியம் சுந்தரனார், சட்ட பல்கலை, இசை பல்கலை, ஆசிரியர் கல்வியியல் பல்கலை போன்றவை, தரவரிசைக்கு விண்ணப்பித்தோர் பட்டியலில் இடம் பெறவில்லை.

    கல்லுாரிகளுக்கான தனி தரவரிசை பட்டியலில், முதல், 100 இடங்களிலும், 100 முதல், 150 வரையிலான, இரண்டாம் கட்ட பட்டியலிலும், தமிழக அரசின் கலை, அறிவியல் கல்லுாரிகள் எதுவும் இடம் பெறவில்லை

  6. சுய சிந்தனை வளர்க்கும் கல்விக்கூடங்கள்: எப்படிப்பட்ட ஆளுமைகளை இந்நிறுவனங்கள் தயார் செய்கின்றன? அவர்களுக்கு வரலாறு, இந்தியத்துவம், சூழலியல் போன்ற பல்துறைகளில் நாட்டம் வரவைக்குமாறு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறதா? குடியியல் கொள்கை இந்திய அரசாண்மை என்று சமூகம் சார்ந்தவற்றில் விருப்பம் தரவைக்கிறார்களா?
  7. வேலைவாய்ப்பு: இதை மட்டுமே அஸ்திவாரமாகக் கொண்டு பல்கலை தரவரிசையை தயார் செய்திருக்கிறார்களோ என நினைக்க வைக்கும் பட்டியல் இது.
  8. நிரலிக்கான விதிமுறையை எவ்வாறு திட்டமிட்டார்கள்:
    1. கல்விமுறை மற்றும் அடிப்படை வளவசதிகள் – 30%
    2. ஆராய்ச்சி மற்றும் சீரிய நடைமுறை – 30%
    3. பட்டம் பெற்ற பிறகு கிடைக்கும் பயன்கள் – 20%
    4. எல்லோரையும் சேர்த்துக் கொள்ளும் ஏற்றுக்கொள்ளும் தன்மை மற்றும் சமூகப் பிணைப்பு – 10%
    5. கல்லூரியைக் குறித்த பொது மனநிலை – 10%
  9. செய்தி: The Hindu | தி இந்து | கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியல் வெளியீடு
  10. தொடர்புள்ள பதிவுகள்: 37/100 மட்டும்தானாடா? வோத்தாடாய், எவ்ளோ வொளச்சிர்க்கோம் – மிச்சம் கீர 63ஐயும் எங்க்ளுக்கே கொடுங்கடா! | ஒத்திசைவு
  11. பிட்ஸ், பிலானி: எல்லாவற்றையும் சொல்லிவிட்டு நான் படித்த பிர்லா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி & சயின்சஸ் பற்றி சொல்லாவிட்டால் ‘மிஸ்டர் ரோபாட்’ தொலைக்காட்சி சீரியலில் பாதியில் “இதுவரை சொன்னதெல்லாம் கற்பனை!” என்று ஏமாற்றுவது போல் ஆகிவிடும். அசலில் கலக்கும் மாணவர்களை உருவாக்குவதற்கும் பேப்பரில் புலிகளை உரும விடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

Massachusetts 2016 elections – Ballot Questions: Yes or No?

நான்கு கேள்விகள் கேட்டிருக்கிறார்கள்.

சூதாட்டத்தை இன்னும் அதிகரிக்கலாமா?

Question 1 would allow the Gaming Commission to issue an additional slots license.

இன்னும் துவக்க வேண்டிய சூதாட்ட கேளிக்கை மையங்களையே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் மேலும் ஒன்றா?

முதலில் துவக்க வேண்டியதை துவக்கி நடத்த ஆரம்பிக்கட்டும். அவற்றில் எவ்வளவு காலப்போக்கில் பிழைத்து, பிழைப்பை நடத்துகின்றன எனப் பார்ப்போம். அவற்றினால் எந்த மாதிரி பின் விளைவுகள் வருகிறது என ஆராய்வோம். அதன் பின் அடுத்ததைத் துவக்குவோம்

penn-national-gamings-plainridge-park-casino-slots-parlor-mass

அரசாங்க செலவில் நடக்கும் தனியார் கல்விக்கூடங்களை அதிகரிக்கலாமா?

Question 2 would authorize the approval of up to 12 new charter schools or enrollment expansions in existing charter schools by the state Board of Elementary and Secondary Education per year.

ஒவ்வொரு வருடமும் பன்னிரெண்டு புது பள்ளிக்கூடங்கள் தனியார் கையில் தரப்படும். நாளடைவில் மொத்த மாஸசூஸட்ஸ் மாநிலப் பள்ளிகளுமே தனியாரிடம் கொடுக்கப்படும். பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயிப்பதில் ஆரம்பித்து, எந்த மாதிரி பரீட்சைகளை வைத்தால் மாணவர்கள் தேர்வு பெறுவார்கள் என்பதைப் பொருத்து கேள்விகளை எளிமையாக்குவது வரை எல்லாமே மாறும்.

charterschoolsalicensetosteal

சோற்றுக்கு வளர்க்கப்படும் மாமிச உணவாகும் மிருகங்களைக் கூண்டில் வைக்காமல் திறந்தவெளியில் வளர்க்க வேண்டுமா?

Question 3 would prohibit certain methods of farm animal containment.

நமது தட்டிற்கு வரப்போகும் இறைச்சிகளை எப்படி வளர்க்க வேண்டும்? அவை கால் நீட்டிப் படுத்துக் கொள்ள இடம் தர வேண்டுமா? அல்லது இரண்டே இரண்டு டாலருக்கு சுவைமிக்க மாமிசம் கிடைக்க வேண்டுமா? நிமிர்ந்த நடையும், திரும்பித் திரும்பி உலகத்தைச் சுற்றும் தனிமனித உரிமைகளை பன்றிக்கும் கன்றுக்குட்டிக்கும் தர வேண்டுமா? அவை அவ்வாறு சுதந்திரமாக வாழ்ந்தால்தான் செத்த பிறகு சுவைக்குமா?

இந்த கருத்துக் கணிப்பை ரோட்டில் சுதந்திரமாக அலைந்து திரியும் நாய்களையும் பூனைகளையும் பொறி வைத்து, தேடிப் பிடித்து கருணைக் கொலை செய்து தீர்த்து கட்டும் ஜீவகாருண்ய சங்கம் ஆதரிக்கிறது.

truth-about-factory-farms

சிறிய அளவில் போதைப் பொருளை உட்கொள்ள வயதுவந்தோரை அனுமதிக்கலாமா?

Question 4 would legalize recreational marijuana for individuals at least 21 years old.

எங்கே பார்த்தாலும் கஞ்சா கிடைக்கிறது. வீட்டிற்கே வந்து மாரிவானா (marijuana – மரிஹுவானா என்ற போதைப்பொருள்) கொடுக்கும் அமைப்புகளை நீங்கள் லியனார்டோ நடித்த ‘வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’ போன்ற படங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். இருந்தாலும் இது குற்றம் என்பதால் காவல்துறைக்குத்தான் ரோதனை. இதைவிட மோசமான போதையான சாராயம், தண்ணீர் ஆறாக ஓடி அமெரிக்காவிலும் மூலைக்கு மூலை டாஸ்மாக் இருக்கிறது. பியர் வாங்கினால், மது உட்கொண்டால் –  அரசாங்கத்திற்கு வரி மூலம் வருமானம் கிடைக்கிறது. அதே போல் கஞ்சா வாங்கினாலும் விற்பனை வரி மூலம் பள்ளிக்கூடங்களைப் பெருக்கலாம்; காவல்துறையை மக்களை பாதுகாக்க அதிகரிக்கலாம்.

10_reasons_kanja_marijuana_regulation_legalization

பொறியியல் – கல்விக்கு அப்பால்: வாசகர் மறுவினை

Jobs_lost_Employment_Gained_Sectors_Industries_Work_Compensation_Industry_Salary_WSJ_Graphics

பொறியியல் – கல்விக்கு அப்பால் கட்டுரை வாசித்தேன். தமிழ் பதிப்புலகில் அதிகம் பேசப்படும் சினிமாவும் அரசியலும் தவிர்த்த கட்டுரை என்ற அளவிலேயே கட்டுரை எடுத்துக் கொண்ட பேசுபொருளும், அதன் தொடர்பான எண்ணங்களும் முக்கியமானவை. மதிப்பெண்களைத் துரத்தும் கல்விமுறை குறித்தும் அசலான ஆய்வுகளை ஊக்குவிக்கும் வழிமுறைகள் குறித்த ஆசிரியரின் கருத்தோடு பெரும்பாலும் ஒத்துப் போகிறேன்.

எனினும், கட்டுரையில் ஆங்காங்கே தடாலடி பொதுமையாக்கங்கள் இருக்கின்றன. தான் அறிந்த சூழலை வைத்து, அதை இந்தியா முழுக்க நீட்டும் சூத்திரங்களும் இருக்கின்றன. இவை இரண்டும் கட்டுரை சொல்லும் கருவிற்கு பங்கம் உண்டாக்குகின்றன. பின்குறிப்பின் மூலம், இந்த வாதத்தை நிராகரித்து முற்றுப்புள்ளியும் வைக்கிறார்.

இப்பொழுது கேள்விகள்:

1. ஆராய்ச்சியைத் தூண்டும் கல்வியை ஊக்குவிக்க மூன்று காரணிகள் இருக்கின்றன: புதிய கண்டுபிடிப்புகளினால் ’செல்வம்’ சேர்க்கும் வாய்ப்பு; தேடலின் முடிவில் கிடைக்கும் சமூக ’அந்தஸ்து’; நாம் வாழும் உலகை மாற்றியமைக்கும் நாகரிகத்தை முன்னெடுத்தோம் என்னும் ஆத்ம ’திருப்தி’. இவற்றை இந்திய அமைப்புகள் தரும் சூழல் நிலவுகிறதா?

2. டிப்லோமா படிப்புகள் – இவை செயல்முறையை முன்னிறுத்தும் கல்வி. அவற்றை பொறியியல் படிப்போடு ஒப்பிட்டுப் பார்க்க இயலுமா?

3. மேற்குலகில் பொறியியல் படிக்காதவர்களும் பொறியியல் சார்ந்த வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இந்தியச் சூழலில் பொறியியல் பட்டயம் என்பது ”இவர் பொறுப்பானவர்; ஒழுங்காக வேலை செய்வார்; எதைக் கொடுத்தாலும் கற்றுக் கொள்வார்.” என்பதற்கான சான்றாதாரமாக விளங்குகிறதா?

4. கணிமொழியியல் – அமெரிக்காவில் கணித்துறை சார்ந்த வேலைக்கு பொறியியல் படிப்பு தேவையாக இருப்பதில்லை. பத்தாவது படித்தவரை வேலைக்கு அமர்த்துகிறார்கள். கணிவிளையாட்டுகளைக் கொண்டு பரிசோதித்து, அதில் திறம் வாய்ந்தவராக இருந்தால் கணினித்துறையில் நல்ல பதவியில் அமர்த்துகிறார்கள். இந்த நிலை இந்தியாவில் உருவாகுமா? (அதாவது பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்து, ஓரளவு பக்குவம் வந்தவுடனேயே, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள், மாணவர்களைப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றுவிடும். மூன்று வருடக் கால வேலை+பயிற்சிக்குப் பின் அசல் வேலையில் அமர்த்திக் கொள்வார்கள்.)

5. ஆராய்ச்சிக் கல்வி – இதற்கான சமூக அந்தஸ்து இந்தியாவில் எப்படி இருக்கிறது? நிறுவனத்தில் டைரக்டர், வைஸ் பிரசிடெண்ட் என்றால் அதிக மதிப்பு கிடைக்கிறதே! அதே சமயம் கண்டுபிடிப்புகளை காசாக்கும் சூழல் இந்தியாவில் எப்படி நிலவுகிறது?

6. மேற்குலகில் mentor எனப்படும் வழிகாட்டியை வாழ்நாள் முழுக்க துணையாக வைத்துக் கொள்கிறார்கள். இந்தியச் சூழலில், இதை மாமா, சித்தப்பா போன்ற குடும்ப உறவுகளும் கிராம சமூகங்களும் நிரப்பின. இன்றைய நகரமயமாக்கப்பட்ட நிலையில் உற்றாரின் ஆலோசனைகளும் கேட்பதில்லை. அண்டை வீட்டாரும் சொந்த விஷயங்களில் கருத்துச் சொல்வதை அந்தரங்கத்தின் குறுக்கீடாகவே எடுத்துக் கொள்கிறோம். இந்த வழித்துணைகளின்ம் உதவி கிடைத்தால் ஒவ்வொருவரின் தனித்தன்மையும் ஆர்வமும் தூண்டப் பெற்று ஆராய்ச்சிப் பாதைகளில் தெளிவு கிடைக்குமோ?

7. இதன் தொடர்ச்சியாக பத்ரி சேஷாத்ரி எழுதிய ”தமிழகத்தின் பல பொறியியல் கல்லூரிகளில் ஐ.டி என்ற பாடப்பிரிவை நீக்கியிருக்கிறார்கள்”, த.நி. ரிஷிகேஷ் ராகவேந்திரன் எழுதிய “தரகர், அலுவலர்,வேலை பெற்றுத் தருபவர் தேவை- ஆசிரியர்கள் தேவையில்லை” வாசிக்கப் பெற்றேன். தங்கள் கட்டுரையைப் போன்றே பெங்களூரூ சாணக்கியன் எழுதிய ‘வேலை’ கடிதம் வாசித்தீர்களா?

8. ஜெயமோகன் தளத்தில் கல்வியைக் குறித்தும் பாடத்திட்டத்தின் தேர்வுமுறைகள் குறித்தும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். அவற்றில் அவர் குழந்தைகளுக்குக் கொடுக்கும் சுதந்திரத்தையும் தான் பழகிய ஆசிரியர்களையும் கல்வி குறித்த செய்திகளையும் அலசுகிறார். அதில் குறிப்பாக பெற்றொரின் பங்கு குறித்து நிறைய எழுதியிருக்கிறார். நம்முடைய பெற்றோர் இட்ட கட்டளைக்குப் பணிந்து நடப்பது போல், பொறியியல் கல்விக்கு அப்புறமும் மேலாளரின் கட்டளைக்கு அடிபணிய விழைகிறோமா?

9. வேலைக்குப் புதியதாகச் சேரும் எவரையும் எந்த நிறுவனமும் உடனடியாக பொறுப்புகளை சுமத்துவதில்லை. அதிலும் கல்லூரியில் இருந்து புத்தம்புதிதாக வருபவரை இரண்டு வாரங்களுக்காவது தனிப் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். தங்கள் அலுவலில் பயன்படுத்தும் நுட்பங்களையும் வழிமுறைகளையும் விவரமாகக் கற்றுத் தருகிறார்கள். அதன் பிறகு இரண்டு மாதங்களுக்காவது, பரீட்சார்த்தமான வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்துகிறார்கள். மூன்று மாதம் ஆன் பிற்பாடு, நிஜ வேலைக்குள் நுழையும்போது துணை நிற்க அனுபவசாலி ஒருவரை கூடவே கண்காணிப்பாக வைக்கிறார்கள். இதை முதலீடாகக் கருதுகிறார்கள். இந்தியாவின் ஆய்வுத்துறையில் இவ்வாறு ஒவ்வொரு ஆராய்ச்சியாளருக்கும் தனிப்பட்ட கவனம் வழங்க பொருளும் மனிதவளமும் இருக்கின்றதா?

10. வாழ்க்கை ஆதாரமாக கல்வியும், அந்தக் கல்வியினால் கிடைக்கும் வேலையும் அமைந்திருக்கிறது. மேற்குலகில் இருபதில் இருந்து முப்பது வரை பரீட்சார்த்தமாக வாழ்வதை நடைமுறையாக வைத்திருக்கின்றனர். அதாவது, தனக்குப் பிடித்த விஷயத்தில் இளவயதில் தீவிரமாக இயங்குவது; அதில் வெற்றி பெற்றால் கோடிகளை அள்ளுவது; தோல்வி அடைந்தால் மீண்டும் கல்லூரிக்குச் சென்று வேறொரு பாதையைத் தேர்ந்தெடுப்பது. – ஒரு முறையோ, பல முறையோ கீழே விழுந்தால், அஞ்சாமல், கைதூக்கி ஊக்கமும் மீண்டும் நிதியும் கொடுக்கும் சமூக அமைப்பு இந்தியாவில் வர வேண்டுமா?

destroying.jobs_.chart_Decoupling_Productivity_Unemployment_Manufacturing_Economhy_Income_GDP_USA_America_Automation

Ideas for future Jeyamohan column in The Hindu

மூலப்பதிவு: தமிழ் எழுத்துருக்களை ஏன் ஆங்கிலத்திலேயே எழுதக்கூடாது – எழுத்தாளர் ஜெயமோகன்

இரண்டாம் உலகப் போரில் ஒரு போஸ்டரைப் பார்த்தேன். ஐம்பதாயிரம் மனிதர்களின் ஒரு வருட உழைப்பை ஜலதோஷம் விழுங்கி விடும் என்று சொன்னது அது. பரபரப்பாக புகைப்பதால் ஒரு வருடத்தில் இரண்டரை நாள்தான் வீணாகும். அதிலும் பாதி சிகரெட் பிடித்தால், ஒரு நாளாக்கிவிடலாம்.

நம் இளைய தலைமுறை ஏராளமாக நோய்வாய்ப்படுகிறது. ஆனால், சீக்கு சொல்லி விடுப்பு எடுப்பதில்லை. காரணம், இந்தியாவெங்கும் ஜலதோஷம் பரவலாகிவருகிறது. கொசு நிறைந்த சூழலில் தொற்று நோயே அசௌகரியத்திற்கு தோற்றுவாய் என நிறுவப்பட்டுவிட்டது. அது தெளிவான உண்மையும்கூட. ஆகவே, எதிர்காலத்திலும் கொசுவே இங்கே நோயின் ஊற்றாக இருக்கும். அதைத் தடுக்கவே முடியாது. வரலாற்றின் போக்கு அது. அதற்கு எதிராகப் பிடிவாதமாக நிலைகொள்வது அடிப்படைவாதம் மட்டுமே.

டெங்குவும் சிக்குன்கன்யாவும் பரவுவதால் சிகரெட் கைவிடப்படுவதைக் கண்டு, அன்புமணி இராமதாஸும் முகேஷ் ஆவணப்படத்தைக் கட்டாயமாக்கினார். விளைவாக, குழந்தைகள் வில்ஸ் ஃபில்டரை எடுத்து, பள்ளி இறுதிவரை அதைப் புகைக்கின்றனர். ஆனால், மாரடைப்பும் நடுவயதில் வருவதாலே சிகரெட்டில் அவர்களுக்குக் கவனம் நீடிப்பதில்லை.

டாஸ்மாக் சரக்கு அல்லது கஞ்சாவை எடுத்துப் பயிலும் குழந்தைகள், எப்படி அவற்றுக்கு அடிமையாகின்றனவோ அப்படித்தான் இன்று நம் குழந்தைகளும் சிகரெட்டைக் கற்கின்றன. அதாவது, போதை எளிதாக அடைவதற்கு மட்டுமே. தட்டுத்தடுமாறி புனைவு உருவாக்கவும் ஓரளவு கிறுக்கவும் கற்கின்றனர். இந்த உண்மையை நாம் மழுப்ப வேண்டியதில்லை.

Cigarette_Smoker_Puff_Hukkah_Mosquito_Repellant_Cigars_Lady_Kill_Cancerஅவர்கள் சந்திக்கும் சிக்கல் என்ன? இளமையில் கொசுவர்த்திச் சுருள் புகையையும் சிகரெட் புகையையும் எதிர் கொள்வதில் இருக்கும் சிரமம்தான் என்று சொல்லலாம். இன்று ஏதேனும் ஒரு நோயில் தகுதியுடையவராக ஆக வேண்டுமென்றால், மிக விரிவான பல்லாண்டு காலப் பழக்கம் தேவைப்படுகிறது. ஆகவே, எதிர்ப்பு சக்திக்கு உதவாமல் வெறுமே கிளுகிளுப்புக்காக மட்டுமே புகைக்கப்படும் ஆறாம்விரலாம் வெண்குழல் சுருட்டை விட்டுவிடுகிறார்கள்.

வாய்க்கும் சுருட்டிற்குமான உறவு என்பது ஒரு கைப்பயிற்சிதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வட்டமாகப் புகை விடுவது நமக்கு இயல்பான ஒன்றாகத் தெரிகிறது. ஆனால், பதின்ம வயதில் ரவுண்டு ரவுண்டாக சுருளவைக்கும் வெள்ளாவிக் கொணர்வது மிகக் கடினமான ஈராண்டுப் பயிற்சி வழியாகவே அந்தப் பயிற்சியை அடைகின்றன.

செயின் ஸ்மோக்கிங் என்பது இன்னும் சிக்கலானது. சரித்திரவியலாளரான வில்லியம் டியுராண்ட் (Will Durant) “மாற்றம் வீட்டிலே துவங்க வேண்டும் என எனக்கு உதித்த நேரத்தில் இருந்து, உலகத்தை மாற்ற எனக்கு நேரம் கிடைக்கவில்லை” என்கிறார். நீங்கள் “அண்ணாமலை” படம் பார்த்து இருப்பீர்கள். அதில் மகன் ரஜினிக்கு சுருட்டு ஆசை உண்டு. அவரின் அந்தப் பழக்கத்தை முறியடிக்க நாள் முழுக்க சுருட்டை மட்டுமே புகைக்க விடுவார் அப்பா ரஜினி. அந்த மாதிரி சித்திரவதையை சுயபோகத்திற்கு நினைத்துப் பாருங்கள்.

இந்நிலையில், இந்தியக் குழந்தை இளமையில் ஒரே சமயம் இரண்டு கொசுக்கள் முன்னால் நிறுத்தப்படுகிறது. டெங்கு கொசுவிற்கு விளைக் களம் தூய நீர். அது அழுக்கு நீரில் இருப்பதில்லை. தமிழ் நாட்டில் தண்ணீர் பற்றாக் குறையால் குடிநீர் வீடுகளில் பாத்திரங்களில் சேகரிக்கப் படுகிறது. இது சரியாக மூடப் படாதபோது மற்றும் தேங்கும் மழை நீரிலிருந்து இக்கொசுக்கள் பரவுகின்றன. கொசுவை அடிப்பதில் நம் உழைப்பு அதற்குக் கட்டாயமாக்கப்படுகிறது.

கையை அடித்தாலும் சரி… கைவிரல்களுக்கு நடுவில் வைத்தாலும் சரி… புகை என அது உணர்ந்து தெளிய நேரமாகிறது. மேலும், விரலில் இடுக்கக் கற்றுக்கொண்டால் மட்டும் போதாது. இது கல்வி அல்ல, பயிற்சி. தொடர்ந்து நிகழும் பயிற்சியே நம்மிடம் நீடிக்கும். நம் குழந்தைகள் கொசுவர்த்திச் சூழலிலேயே எழுதுகின்றன, வாசிக்கின்றன. ஆகவே, இரண்டாம் பழக்கமாகக்கொண்ட புகை அவர்கள் கைகளுக்கும் கருத்துக்கும் வழக்கமற்றதாக ஆகிவிடுகிறது.

இந்தச் சிக்கலைத் தாண்டுவதற்கான வழிமுறைகளைத்தான் நாம் யோசிக்க வேண்டும்.

Mosquito coil and burner.நான் பதின்மூன்றாண்டு காலமாக புகைக்கிறேன். புகைக்கும் வேகத்தில் பற்றவைக்க முடியும் என்னால். கண்ணெதிரே சிகரெட் தெரிகிறது, என் கைகளில் நேவி கட்-கள் ஓடுகின்றன. எந்தச் சிரமமும் இல்லை. கொசுவர்த்திப் போட்ட இடத்தில் நான் சரளமாக புகைக்கவும் செய்வேன். ஏன் சிகரெட்டை இவ்வாறு கொசுவர்த்தியாலேயே செய்யக் கூடாது?

பெட்டிக் கடைகளில் இதை விற்றால், வீட்டிற்கு ஒரே ஒரு டார்டாயிஸ் வாங்கினால் போதும். அவர்கள் சிகரெட்டை இன்னும் வேகமாக, இன்னும் சகஜமாக இழுக்க அது உதவும் அல்லவா? நாம் மார்ல்போரோ புகைக்கும்வரை கொசு தள்ளியே இருக்கும். காசும் மிஞ்சும். ஜலதோஷம் வந்தால் மூக்கால் பேசுவது என்போம். இது மூக்கால் சிக்கன்குன்யாவை தடுக்கும் தந்திரம்.

உடனடியாகக் கேள்விப் படும்போது சற்று அபத்தமான, அதீதமான எண்ணமாக இது தோன்றக்கூடும். ஆனால், எல்லா மாற்றங்களும் முதலில் அப்படித்தான் தோன்றும். அவற்றுக்கு மரபு அளிக்கும் கடுமையான எதிர்ப்பும் முக்கியமானது. அந்த எதிர்ப்பையும் கருத்தில்கொண்டு வெற்றி பெற்று நிகழக்கூடிய மாற்றமே ஆக்க பூர்வமாக இருக்கும். ஆகவே, நாம் இதை விவாதிக்க வேண்டுமென நினைக்கிறேன்.

நமது இலக்கியநுட்பம்

இரண்டு நிகழ்ச்சிகள். ஒரு நாவல் சம்பந்தமான சிக்கல். அதைச் சரிசெய்ய பல ஆண்டுகளாக முயன்றும் முடியவில்லை. ஏராளமான தற்காலிகத் தீர்வுகள். உடனடி மாற்றங்கள். ஆனால் பிரச்சினை அப்படியேதான் இருந்தது

பதிப்புத்துறையில் உயர நிர்வாகியாக இருக்கும் நண்பரிடம் சொன்னேன். அவர் கேட்டார் ‘உங்களுடைய ஐம்பதாண்டுக்கால வாழ்க்கையில் எந்த நூலாவது முழுமையாக மெய்ப்பு பார்க்கப்பட்டு இலக்கியமாக செய்யப்பட்ட அனுபவம் உண்டா?’

நான் ஒரு நிமிடம் அயர்ந்தே போனேன். இல்லை!

இன்றுவரை கதை, கவிதை, கட்டுரை, நாவல் எதுவாக இருந்தாலும் ஒரு குறை என வந்துவிட்டால் அதை கடைசிவரை சரிசெய்யவேமுடியாது என்பதுதான் என் அனுபவம். என்னுடைய நாவலை 1998ல் எழுதும்போதே புதுமையில் ஒரு புரியாமை கண்டுபிடிக்கப்பட்டது. இன்றுவரை பல விமர்சகர்கள் படித்தும் அது சரிசெய்யப்படவில்லை. மொத்தமாக இடித்து வேறு நாவல் எழுதுமென்று கடைசியாக பதிப்பாளர் சொல்லிவிட்டார்.

திரும்பத்திரும்ப ஒன்றைத்தான் செய்வார்கள். அத்தியாயங்களை மாற்றுவார்கள். கலைத்து திரும்பப் பூட்டுவார்கள். சிலசமயம் தற்காலிகமாகக் கோர்வையாகும். நாலைந்துமுறை அப்படிச் செய்தபின் சரியாகவில்லை என்றால் ‘போய்டிச்சு சார்…மொத்தமா மாத்தணும்’ என்பார்கள்.

நான் அதைச் சொன்னேன். நண்பர் சொன்னார் ‘தமிழகத்தில் சமையல் சார்ந்த எந்த விஷயங்களுக்கும் நிரந்தரமாக தீர்வு கிடையாது. அதைச் செய்யத் தெரிந்த எவரும் தமிழர் இல்லை. கொழுப்பு ஏறுவது முதல் உங்கள் மூதாதையர் கைமணம் வரை எதையும் நம்மால் முழுமையாகச் சரிசெய்ய முடியாது, செய்யபப்ட்டதும் இல்லை’

மறுவாரம் மடப்பள்ளியில் என் மனைவியுடன் சமைத்துக்கொண்டிருக்கையில் அதைச் சொன்னேன். அவர்தான் என் வீட்டில் தொண்ணூறுசதம் சமைப்பவர். சிரித்தபடி ‘இது இப்போதா தெரிகிறது உங்களுக்கு? நான் முப்பதாண்டுகளில் ஐம்பதாயிரம் இல்லத்தரசிகளையும் செஃப்களையும் கண்டிருப்பேன். என்னிடம் ஆயிரத்தைநூறு கடை மசாலா இருக்கும். ஒரு சாம்பார் எப்படி ஓடுகிறது என்று தெரிந்த ஒரு தமிழ் சமையற்காரரையோ சாப்பாட்டுக்காரரையோ நான் இதுவரை பார்த்ததில்லை’

மிகவும் அதிகப்படியான கூற்று என்றே நான் நினைத்தேன். அவர் சொன்னார் ‘உண்மை…கொஞ்சம்கூட மிகை கிடையாது. மொத்த சாம்பாரையும் கொட்டிவிட்டு திரும்ப அள்ளக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அனுபவம் மூலம் எந்த நளபாகம் பிழைசெய்கிறது என்று ஊகித்து அதைக் கழற்றி மாற்றக்கூடியவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சாம்பாரின் இதயத்தைப்பற்றி தெரிந்த தமிழர் என எவரும் இலலை’

அவரது தொழிலில் நூற்றுக்கணக்கானமுறை மலச்சிக்கல்கள் வந்துள்ளன. ஒவ்வொரு முறையும் ஆந்திர, கர்நாடக நிபுணர்களை வரவழைத்துத்தான் சரிசெய்திருக்கிறார். பற்பலமடங்கு செல்வில். அவர்களால் மட்டுமே பிரச்சினையைக் கண்டுபிடிக்கமுடியும். அவர்கள் கண்டுபிடித்த பிரச்சினையை அவர்கள் விளக்கும்போது கேட்டுப்புரிந்துகொள்பவர்கள்கூட நம் தொழில்நுட்பர்களில் ஆயிரத்தில் நாலைந்துபேர்தான்.

ஏன் என்று அவர் சொன்னார். ‘நமக்கு எங்கேயுமே ஆர்ட்ஸ் சொல்லித்தருவதில்லை. ஒரு சாம்பார் நூற்றுக்கணக்கான இடுபொருள்களின்படி உருவாகக்கூடியது. அந்த கலையை ஓவியம் போல் தீட்டத் தெரிந்துகொண்டு அவற்றை பலகோணங்களில் யோசித்தும் செய்தும் உள்வாங்கிக் கொண்டால்தான் மலச்சிக்கலின் சயன்ஸ் தெரியும். நம்மூரில் வாந்தி செய்து திருப்பி தப்பிலல்லாமல் எடுக்கத்தான் சொல்லிக்கொடுக்கிறார்கள். நம்மூர் செஃப்கள் கடைசி கடுகு தாளித்ததுமே அதுவரை போட்டது எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள். ஆய் போனபின் ஆய் போகாத மூத்த பணியாளரிடமிருமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எதையாவது கற்றுக்கொள்வார்கள். அவ்வளவுதான் அவர்களுக்குத் தெரிந்தது…’

என் பதிப்பாளரும் அதையே சொன்னார். ஒரு கவிதையை எவரேனும் வெளிநாட்டில் எழுதினால் அதை முழுமூச்சாக அமர்ந்து மொழிபெயர்க்கத்தான் நம்மவர்களால் முடியும். அது என்ன என தெரியாது. அதன் இடம், பொருள் தெரியாது. அதற்கு காப்புரிமையும் கொடுப்பதில்லை. ராயல்டிக்கான விகிதமும் அதற்குள் ஏப்பம் விட்டிருக்கும். ’ஆங்கில அறிவு, அகராதி பார்த்தல் இரண்டைக்கொண்டும் சமாளித்துப்போகிறவர்கள்தான் இங்கே வெற்றிபெற்றவர்களாக இருக்கிறார்கள்’ என்றார் அவர்

ஜெயமோகன் எழுதிய இந்தக்கட்டுரையை ருசிக்கையில் ஒருவகையான லப்டப்புதான் வந்தது.

ஒத்திசைவு எழுதிய இந்தக்கட்டுரையை படிக்கையில் நாலு பேருக்கு நல்ல விதமா சாம்பார் போடறத வுட்டுட்டு டீ ஆத்தறாரேனு ஆதங்கமாச்சு.

Harvard Education vs Pondycherry Congress: Politicians Cheat

பல ஜனாதிபதிகளையும் செனேட்டர்களையும் ஹார்வார்ட் பல்கலைக்கழகம் உருவாக்குகிறது. டெல்லி ஜே.என்.யூ.வில் படித்தால் இந்தி(ரா)யா கம்யூனிஸ்ட் காங்கிரசில் தஞ்சமடையலாம் என்பார்கள்; ஹார்வார்டில் படித்தால் அமெரிக்க காங்கிரஸில் நுழையலாம்.

அவ்வளவு புகழ்பெற்ற ஹார்வார்டு ‘காங்கிரஸ் 101’க்கு இறுதி பரீட்சை எழுதிய எழுபது மாணவர்களை இடைநீக்கம் செய்திருக்கிறது. அரசாங்கம் குறித்தும் சட்டசபை குறித்தும் அறிமுகம் செய்யும் வகுப்பில் காப்பியடித்த குற்றத்திற்காக அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது.

பாண்டிச்சேரி போல் புத்தகம் பார்க்காமல் எழுதும் தேர்வு அல்ல. வீட்டிற்கே கேள்வித்தாளைக் கொடுத்தனுப்பி விட்டார்கள். இணையத்தைப் பார்த்து எழுதலாம். புத்தகத்தைத் திறந்து வைத்து விடை அளிக்கலாம். நண்பர்களிடம் கலந்தாலோசித்து, சொந்த நடையில் பதில் போடலாம். ஆனால், ஒரே விடைத்தாளை அனைத்து மாணவர்களும் காப்பி பேஸ்ட் செய்ததால் மாட்டிக் கொண்டார்கள்.

புதுச்சேரி அமைச்சர் கல்யாணசுந்தரம் போல் நமது ஊர் காங்கிரஸ்காரர்கள் நிலைமை இன்னும் மோசம். பொதுத் தேர்வு மோசடிக்கு எவ்வளவு முஸ்தீபுகள் தேவையாக இருக்கிறது? பிட் வேண்டும்; ஆள் மாற்றாட்டத்திற்கு சூட்டிகையானவர் வேண்டும்; பள்ளி ஆசிரியர் முதல் பியூன் வரை கவனிக்க வேண்டும்.

என்னவாக இருந்தாலும் அமெரிக்க ஐவி லீக் பல்கலை படிப்பு போல் ஆகாது!

புதிய தலைமுறை: தாய் மண்ணே வணக்கம்

புதிய தலைமுறையின் சுதந்திர தின ஸ்பெஷல் (1)

புதிய தலைமுறை: தாய் மண்ணே வணக்கம்: விடுதலை நாள் வெளியீடு (2)

”இந்தியா காலேஜில் போட்டா, இவ்ளோ ஆகாது இல்ல? சீட்டும் ஈஸியா கெடச்சிடும்!”

குளிர்கால கிறிஸ்துமஸ் பார்ட்டி ஆகட்டும்; கோடைகால பிக்னிக் ஆகட்டும். அமெரிக்காவில் வாழும் எங்களிடையே இதுதான் இன்றைய பேச்சு.

’தாய் மண்ணே வணக்கம்’ என்று வணங்க மட்டும் செய்யாமல், தாங்கள் கற்ற மண்ணிலேயே தங்கள் மகவுகளும் கல்வி கற்க அனுப்புவதுதான் தற்போதைய தேசி ட்ரெண்ட்.

பள்ளிக்காலம் வரை குடும்பச்சூழலில் ஹிட்லர்தனமான கெடுபிடிகளுடன் வளர்ந்த பையன், பதின்ம வயதில் கல்லூரியில் நுழையும் சமயத்தில்தான் கட்டுப்பாடுகளற்ற முழு சுதந்திரத்தையும் அதற்கு ஈடு கொடுக்கும் பணப்ப்புழக்கத்தையும் காண்கிறான். பெண்களுக்கு நேரும் நிர்ப்பந்த குழப்பங்களும் இருபாலார் இணைந்து தங்கும் விடுதிகளில் சேர்த்துவிட வேண்டிய விருப்பத்தேர்வின்மையும் பெற்றோரை அலைக்கழிக்கிறது.

இதற்கான குறுகிய கால தீர்வாக இந்தியாவிற்கு மூட்டை கட்டி அனுப்பி விடுகிறோம்.

‘லேட்டாக வரீங்க… குழந்தைகள கவனிக்கிறதேயில்ல!’ குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை கிடைக்கிறது. நம்மை நன்றாக வளர்த்து முதலீட்டுக்குரிய விருப்ப வஸ்துவாக்கிய தாத்தா, பாட்டியின் கைகளில் பேத்தி, பேரன்கள் ஒழுங்காக வளர்வார்கள் என்னும் நம்பிக்கையும் உண்டு.

மொத்தத்தில் பணங்காச்சி இயந்திரங்களை உருவாக்கும் புனிதத்தலம். காந்தியும் விவேகாந்தரும் பின்பற்றும் நிலையான ஆன்மிக மணம் கவழும் அமுதமனம். பக்கத்து வீட்டு மாமாவும் ஒன்றுவிட்ட ஊர்க்கார சொந்தமும் எப்பொழுதும் கண்காணித்திருக்கும் கோள்மூட்டும் விழிப்புணர்வு கேந்திரம்.

‘உன் வாழ்க்கை உன் கையில்’ என்று முடிவெடுக்கும் உரிமையை இந்திய நடுத்தரவர்க்கம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. ஆனால், தாங்கள் புலம்பெயர்ந்தபோது எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருந்தோமோ, அப்படியான விழுமியங்களையே தொடர்ந்து தேங்கிப் போய்விட்டிருக்கிறோம்.

‘தினமும் கோவிலுக்குப் போய் வருவாள். சிவ சேனா மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள். குட்டைப் பாவாடை எல்லாம் போட்டுக் கொள்ள மாட்டாள்.’ – இது பெண்ணைப் பெற்றவர்.

‘இங்கே படிப்பதையே பசங்க ரொம்ப கேவலமா நெனக்கிறாங்க. சிரத்தையா பரீட்சை எழுதறவன கீக்னு சொல்லி அந்நியமாக்கி ஒதுக்கிடறாங்க. அவன் கே ஆயிடுவானோன்னு பயமா இருக்கு. அவனுக்கு ஃப்ரெண்ட்ஸே இல்லியே!’

இந்தியாவில் ஆண் குழந்தையைப் பெற்றவர் இப்படியெல்லாம் கவலை கொள்வதில்லை. தற்பால்விரும்பியாக இருப்பது அவரவர் விருப்பமென்று இந்தியப் பெருநகரங்கள் ஒப்புக் கொண்டுவிடலாம். ஆனால், அமெரிக்க வாழ் இந்தியருக்கு ஒவ்வாமை கலந்த அதிர்ச்சி தருவதாகவே ஒரினச்சேர்க்கை அமைந்துள்ளது.

இந்தியர்கள் காலப்போக்கிற்கு ஏற்ப மாற்றிக் கொள்வதில் வல்லுநர்கள். டார்வின் சொன்ன பரிணாம வளர்ச்சியில் முழு நம்பிக்கை கொண்ட அறிவியலாளர்கள். சிவன் தலையில் கங்கை இருப்பதை கும்பிட்டுக் கொண்டே அணை கட்டுவார்கள். அப்படியே மூன்றாம் பிறையை அரோகரா போட்டுக் கொண்டே சந்திரனில் நீர் இருப்பதை உலகெலாம் ஓதுவார்கள்.

இந்த விஞ்ஞானமும் மெய்ஞானமும் கலந்துருகும் கலயம் எனக்கு ரொம்பவேப் பிடித்திருக்கிறது. அந்த மாய யதார்த்தத்தைத் தேடித்தான் மக்கட்செல்வங்களை இந்தியாவைத் திரும்ப அனுப்புகிறோமோ?!

தமிழ் ஆர்வலரும் நானும் – பாஸ்டனில் மு இளங்கோவன்

 A glance leaves an imprint on anything it’s dwelt on.
Joseph Brodsky 

[Russian poet(1940-1966) – “A Part of Speech” in Collected Poems in English]

துவக்கப் பாடமாக வீடியோ பார்த்துவிடலாம்

அமெரிக்க வந்த காரணம் என்ன? தமிழ் இணைய மாநாடு என்ன செய்தது?

சந்தித்த கதை

மீன் தொட்டிக்குள் நீந்துவது போல் வலை வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. எல்லா மீன்களும் இடமிருந்து வலமாக சுற்றியது. குழாம் அமைத்தது. தொகுதிப் பங்கீடு செய்தது. நானும் நடுவில் இருந்தேன். ஆங்காங்கே சுறா தென்படும். சிலரை கபளீகரம் செய்து கொண்டிருக்கும். நானும் குட்டி மீன்களைக் கவ்வி பசியாறினேன்.

அப்போதுதான் கூர்மாவதாரமாக முனைவர் மு இளங்கோவன் எதிர்கொண்டார்.

அனுபவத்தில் ஆமை என்றால், வயதில் பட்டாம்பூச்சியாக இருக்கிறார். நெடுநெடு உயரம். கருகரு முடி. துடிதுடி கண். பதட்டமில்லாத நடை. தெளிவான உச்சரிப்பு. பாவனையற்ற கனிவு. ஜாக்கிரதையானப் பேச்சு. வம்புகளற்ற உரையாடல்.

சலபதியை சந்தித்தபொழுதும் சரி; ஜெயமோகனோடு இருந்த சில நிமிடங்களிளும் சரி… ஞாநியும் ஆகட்டும்.

சளைக்காமல் கதைக்கக் கூடியவர்கள்.

அ. முத்துலிங்கம் போன்றோர் வேறு இனம்.

கேள்விக்கு சீரியமாக எதிர்வினையாற்றுவார்கள். விவாதங்களை இறுதிவரை கவனித்து முத்தாய்ப்பாக முழுமையாக்குவார்கள். சீரியமாக கவனிப்புடன், ட்விட்டரில் 140 எழுத்துக்குள் சிந்தனையை அடக்குவதற்கொப்ப, எண்ணி, எண்ணியதை சரியான வார்த்தையைக் கொண்டு கோர்த்து, முத்து சிந்தக் கூடியவர்கள்.

மு. இளங்கோவனாரும் அதே ரகம்.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்

தமிழ் இணைய மாநாட்டுக்காக பிலடெல்பியா வந்தவர் பாஸ்டன் பக்கமும் எட்டிப் பார்த்தார். எட்டிப் பார்த்தது, ஹார்வர்ட், எம்.ஐ.டி போன்ற தலை பத்து கல்லூரிகளைப் பார்வையிட.

நான் பலமுறை இந்த இடங்களுக்கு சென்றிருந்தாலும், சென்றபோதெல்லாம் சுற்றுலாவாசியாகவே பராக்கு பார்த்திருக்கிறேன். வளாகத்தின் முக்கிய கட்டிடங்கள், வகுப்பறைகளின் அமைப்பு, மாணவர்களின் வாழ்க்கைமுறை, ஆசிரியர்களின் அலுவலகம், இருப்பிடங்களுக்கும் கல்விக்கூடத்திற்குமான தூரம் போன்றவற்றை கவனித்ததில்லை.

எனவே, ஒவ்வொரு இடத்திலும் மாணவர்களே நெறிப்படுத்திய சுற்றுலாக்களை தேர்ந்தெடுக்கு, அவர்களைப் பின் தொடரும் விதமாக, பார்க்கச் சென்றோம்.

அலுவலில் இருந்து வீட்டுக்கு சேணம் கட்டிவிட்ட குதிரையாக ஒரே பாதை. அதே திருப்பம். பழக்கமான பயணமாக இருப்பதை, கூகிள் வரைபடம் (மேப்) வந்தவுடன், சோதித்து பார்த்ததில் புத்தம்புது குறுக்குவழி கிடைப்பது போல், இந்த வழிகாட்டி சுற்றுலாக்கள் பல புதிய விஷயங்களை அடையாளம் காட்டி வழி திறந்தது.

எம்.ஐ.டி.யின் சுயம் சார்ந்த மதிப்பீடுகளும், மாணவ வயதின் பரிசோதனை கலந்த முயற்சிகளும் விளங்கின என்றால், யேல் பல்களையின் பணமும், பிரும்மாண்டமும், உள்ளே நுழைந்த புகழ் பெற்றவர்களின் பேரும் மிரட்டின.

நடுவாந்தரமாக ஹார்வார்டு. கொஞ்சம் அலட்சியம்; கொஞ்சம் திமிர்; கொஞ்சம் பந்தா எல்லாம் யேல் பல்கலையை நினைவூட்டினாலும், பாஸ்டன் நகரத்தின் அண்மை மாணவர்களைத் தரையையும் சுட்டிக் காண்பிப்பதாகத் தெரிகிறது.

  • முதல் வருடம் கழித்தபிறகு முதுநிலையோ, இளநிலையோ… பட்டம் வாங்க விரும்பும் படிப்பை தேர்வு செய்வது;
  • ஐந்தாவது வகுப்பிலேயே கல்லூரிக்கு முதற்படி எடுக்கும் பால்ய காலப் படிக்கட்டுகள்;
  • படிப்பைத் தவிர மக்கட்பண்பு, குணநலன், சகாக்களோடு பழகும்விதம், வெற்றி பெறுவதற்கான சாமுத்ரிகா லட்சணங்கள் போன்றவற்றைக் கற்றுக் கொடுப்பது;
  • யேல், ஹார்வார்ட் போன்ற புகழ்பெற்ற கல்வி நிலையங்கள் இன்றளவிலும் மதம் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் செலுத்தி, இறை சார்ந்து இட்டுச் செல்வது;
போன்ற தகவல்களை அறிந்து கொண்டோம்.

தமிழும் தமிழ் சார்ந்த கணினியும்

இளங்கோவனுக்கு பல்வழி அடையாளம். தமிழ்ப் பேராசிரியர்; கணினியில் தமிழ்ப் பயன்பாடுகளை அடையாளம் கண்டு, புதியவர்களுக்கு எளிதாக்கி, கிராமப்புறங்களுக்கும் பரவலாக்குபவர்; நாட்டுப்புற பாடல் தொகுப்பவர்; சிலம்பு சொற்பொழிவாளர்.

ஆனால், நேர்ப்பேச்சில் நம்மிடம் இருந்து விஷயம் கற்பதில் ஆர்வம் காட்டுகிறார். தன் பெருமைகளை, தன் அறிவை, தன் சாதனைகளை மூச்சு விடாமல் பேசியே திணறடிப்பவர் மத்தியில் பிறரின் திறனை தூண்டிலிட்டு, திரியேற்றி, சம்பாஷணைகளை சுவாரசியமாக்குகிறார்.

ஒருங்குறி ஆகட்டும்; வாழ்க்கையின் அடுத்த அடிகள் ஆகட்டும்; தமிழைக் கணினி கொண்டு, பரவலாக்கி அன்றாட பயன்பாட்டுக்கு அனைவருக்கும் கொண்டு செல்வதில் ஆகட்டும் – தீர்மானமான கொள்கைகள் வைத்திருக்கிறார்.

நம் மீது அதை திணிப்பதில்லை; ஆனால், அதன் நலன்களை சுருக்கமாக விளக்குகிறார். அடுத்தகட்ட செயல்பாடுகளை சொல்கிறார். பயனுள்ள முடிவை நோக்கிய திட்டங்களை வைத்திருக்கிறார்.

இனி அவர்…

தமிழ்க் கல்வி முறை

தமிழை இணையம் மூலமாக கற்பிக்க அடுத்த நடவடிக்கை என்ன?

வலை வழியாக தமிழ்ப் பாடங்களை எப்படி கற்றுக் கொடுக்கலாம்?

பென்சில்வேனியா தமிழ் இணைய மாநாட்டுக் குழு
பென்சில்வேனியா தமிழ் இணைய மாநாட்டுக் குழு
குமுதம் இதழில் முனைவர் மு இளங்கோவன்
குமுதம் இதழில் முனைவர் மு இளங்கோவன்
தமிழிணைய மாநாடு – பார்வையாளரில் ஒரு பகுதி
யேல் பல்கலை – பார்னி பேட், சுதீர்
ஃபெட்னா – சார்ல்ஸ்டன் – 2011 துவக்க விழா
கோடை மழை வித்யா, நாசர், சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், பாடலாசிரியர் நா முத்துக் குமார் – பெட்னா 2011
விழா மலர் வெளியீடு – பெட்னா 2011
பாஸ்டன் (நியு இங்கிலாந்து) வலைப்பதிவர், தமிழ் ட்விட்டர் சந்திப்பு
மேரிலாந்து, பால்டிமோர், வர்ஜீனியா, வாஷிங்டன் டிசி – மும்மாநில தமிழ்ச்சங்கம்
பிலடெல்பியா தமிழ் இணைய மாநாடு – தமிழ் யூனிகோட், ஒருங்குறி, எழுத்து சீர Continue reading