கமல் மீது என்ன கோபம்?

Movie-Location-Shooting-Spot-Films-Street-Disruptionமவுஸைக் க்ளிக் செய்வதில் கூட ஓரவஞ்சனை செய்வது பிடித்திருக்கிறது. இடது பக்கத்தை இரு முறை இரு முறையாக அடுக்குத் தொடர் தொடல்கள். ஆனால், எப்பொழுதாவது மட்டுமே வலப்பக்க விசை திருகப்படுகிறது. முக்கியமான மெனுக்கள் வலப்பக்கம் தொட்டால் மட்டுமே வந்து விழும். எனினும் இடப்பக்கம் தொட்டு தொட்டு தேய்ந்து போன உணர்வு.

எனக்கு ரஜினி இடப்பக்க மவுசு. கமல் வலப்பக்க எலி கிராக்கி.

ஏன் இப்படி ஆகிப் போனது? டாக்டர் ருத்ரனிடமோ ஆவி மாத்ரூபூதத்திடமோ மானசீகமாக வினவ வேண்டும். அதற்கு முன்னரே இன்று விடை கிடைத்தது.

நாம் சரியாக செல்லும் பொழுதெல்லாம் இரயில் தாமதமாக ஓடும். என்றாவது அரைக்கால் விநாடி பிசகினால், நேரந்தவறாமையாக ட்ரெயின் ஓடியே போய் விடும்.

இன்று முந்தைய மண்டகப்படி. நான் டிக்கெட் வாங்கி டாணென்று இருவுள் நிலையத்தில் காத்திருக்க, பணம் வாங்கியபின் கால்ஷீட் கொடுக்க மறுக்கும் நடிகராக ட்ரெயின் ஏதோ யோசனையில் லேட்.

திங்கள்கிழமை மங்கள்வார் எனப்படும். பாஸ்டன் கோடையை வரவேற்க ஜெயராஜ் ஓவியங்கள் சாலையில் உலா வரும் காலை ஒளிக்கதிர் நேரம். காலை ஒன்பதரை சந்திப்புக்கு ஓடும் அவசரம். ஒவ்வாமைத் தும்மல் ஒரு புறம். (வாசிக்க: My Allergy to Rising Sun & Two Leaves) கோடாங்கி முடிச்சுடன் முழங்கால் பாவாடை சரசரக்க கவனம் கலைப்பவர் இன்னொரு புறம்.

சிந்தனை வட்டத்தை நிறுத்தி தடுத்தாட்கொண்டார் குளிராடி குண்டர். கூடவே அல்லக்கை குண்டர்.

‘தயவு செய்து நில்லுங்கள். நீங்கள் எப்பொழுது செல்ல வேண்டும் என்று நாங்கள் சொல்வோம்!’

‘எதுக்கு? “நட ராசா” என்று பச்சை விளக்கு எரியுது… என்ன விட்டுடு! எனக்கு நேரமாச்சு!’

பதில் கொடுக்காத மரியாதை. பயில்வான் உடம்பு. பெரிய வெள்ளை பேனர். ட்ராலியில் கேமிரா. பாஸ்டன் தெருவில் ஒத்திகையாக ஓடிப் பிடித்து விளையாடுபவர்களை அது சக்கரம் மாட்டித் துரத்தியது.

‘ஏய்… பென் அஃப்லக் வந்திருக்கானாம்!’, ‘கெவின் காஸ்னர் தெரிகிறானா பாரேன்!’ ஷூட்டிங் பார்க்க வந்த கும்பலில் ஒருவனாய் நிறுத்தப் பட்டிருக்கிறேன்.

Kamalahassan

Kamalahassan

இப்பொழுது ஃப்ளாஷ்பேக்; கருப்பு வெள்ளைக்கு மாறிடலாம்.

‘தொம்’ என்று சத்தம். மீண்டும் மொட்டை மாடியில் பக்கத்து வீடு, எதிர்த்த வீட்டு, கோடியாத்துப் பசங்க ஓடிப்பிடித்து விளையாடுகிறார்கள் என்று சூலம் இல்லாத துர்கையாக மாறிய அக்கா விடுவிடுவென்று மாடி ஏறுகிறார். அங்கே தடிதடியென்று தடியன்கள் குதித்தோடுகிறார்கள்.

‘யாரும்மா அங்கே! ஷாட் எடுக்கப் போறோம்மா… ஒதுங்கி நில்லு’

‘எங்க வீட்டு மாடி. நான் நிற்பேன்; படுப்பேன்; சூரியக்குளியல் போடுவேன். நீ யாரு ஒதுங்க சொல்ல? வாட்டர் டேங்க் மேல குதிச்சா, உடஞ்சி போனா உங்கப்பனா வந்து காசு கொடுப்பான்? யாரு இங்கே ப்ரொட்யூசர்? கூப்பிடு அவன… ஏற்கனவே விரிசல் விட்டதுக்கு நஷ்ட ஈடு தந்தாத்தான் மேல ஒரு எட்டு வெக்க முடியும்’

சுத்துப்பட்டி மாட வீதி முச்சும் பாத்துண்டிருக்கு. ‘விக்ரம்’ கமலுக்கு தர்மசங்கடம். லிஸியுடனோ அம்பிகாவுடனோ கொஞ்சவே நேரம் போதவில்லை. நேரில் வரவில்லை.

தெருக்காரர்களுக்கு ‘எங்க தெருவும் “வனிதாவணி… வன மோகினி” பாடல் பெற்ற தலம்’ என்று சொல்ல முடியாமல் போயிடுமோ என்னும் வருத்தம் கலந்த கோபம். ‘கமல் மட்டும் வந்து மன்னிப்பு கேட்டுட்டாருன்னா அவரோட கெத்து என்னாறது?’ என்று வம்புக் கூட்டம். ‘அவங்க வீட்டுக்கு வந்தா எங்க வீட்டுக்கும் வரவெச்சிடுவேன்’னு முறைவாசல் கும்பல்.

கமலும் கடைசி வரை வரவில்லை. ஆபீஸ் மேனேஜரும் உடைந்த சிமென்ட் பலகைக்கு எட்டணா கூட சுண்டவில்லை. ஆனால், அம்மா, அப்பா, அடியேன் இறைஞ்சலுக்கும், கொஞ்சலுக்கும், மிரட்டலுக்கும் அடிபணியாமல் மேலும் tan ஆகிக் கொண்டே அன்று படப்பிடிப்பை ரத்து செய்யவைத்த புகழ் அக்காவை சென்றடைந்தது.

அந்த வீரம் என்னுள் பாஸ்டனில் எட்டிப் பார்த்தது.

குண்டன் அசந்த நேரம் நடு வீதியில் சாவதானமாக நடக்க ஆரம்பித்தேன். என்னைப் பார்த்து பின் தொடரும் நிழலின் குரலாக ஸ்கர்ட்டுகளும், சூட்டுகளும் கடுக்கா கொடுத்து மிடுக்காக வந்தன. பாதி வழியில் உக்கிர பார்வையுடன்… குளிர் கண்ணாடி வழி உக்கிர பார்வை எப்படி தெரியும் என்கிறீர்களா? அது சரி, கையை உயர்த்தி நாலு பேர் வந்தார்கள்.

நிலைமையை உணர்ந்த போலீஸ், ‘அவங்களப் போக விடுங்க’ என்றதும் ‘அய்யய்யே… கட்’ என்று கல்லுக்குள் நிழலாய் எங்கோ ஒலி.

செய்தி: Kevin Costner: actor, director, crooner – The Names Blog – Boston.com: “Boston shooting ‘The Company Men’ with Ben Affleck, Tommy Lee Jones, Chris Cooper and Maria Bello.”

முந்தைய கமல் புராணம்:

1. Daedalus & Kamalhasan

2. ஆளவந்தான்

3. Dasavatharam – Minute details, questions, trivia, goofs, movie connections

Dinamani Cartoons: DMK JK Ritheesh Special

ஆஸ்பத்திரி – சுதேசமித்திரன்: புத்தக விமர்சனம்

காக்டெயில் தந்த போதையில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு கலந்த ஆர்வத்துடன் வாங்கி, உடனடியாக வாசிக்கவும் எடுத்த புத்தகம்.

ஒரு தப்படி கூட தவறவிடாத நெத்தியடி. படித்து முடித்தவுடன் ட்விட்டியது:

சுதேசமித்திரனின் ‘ஆஸ்பத்திரி’ (உயிர்மை வெளியீடு) வாசிக்கிறேன். சாருவின் பாணி என்று சொல்லப்பட்டாலும் சாருவை விட 1001 தடவை நல்லாருக்கு. – February 9th, 2009


அம்ருதா – விஜய் மகேந்திரன்:

வெறும் கதை சொல்லல் மட்டும் நாவல் அல்ல. தமிழ் நாவல்களில் பல புதுவகையான உத்திகள் கையாளப்பட்டன. அதில் நான் லீனியரும் ஒன்று. கை போன போக்கில், எழுதிச் செல்வது, முன் மாதிரியான முடிவுகள் எதுவும் வைத்துக்கொள்ளாமலே, ஊடே ஆசிரியரின் மனமொழி இவற்றில் வெளிப்படும்.

பெரும்பாலும் நான் லீனியர் முறையில் எழுதப்படும் கதைகள் தமிழில் கவனத்தைப் பெறுவதில்லை. காரணம் இந்த எழுத்து முறையை கையாள்பவருக்கு அதீத மொழிநுட்பமும், சரளமான மொழிநடையும் அவசியம். அவ்வாறு இல்லாவிட்டால் ஆசிரியர் இதைத்தான் சொல்ல வருகிறார் என்பதே புரியாமல் போய் விட வாய்ப்புகள் அதிகம்.

சுதேசமித்திரனின் “ஆஸ்பத்திரி” நான்-லீனியர் முறைப்படி எழுதப்பட்டுள்ௗ நாவல் என்றாலும் அந்த முறைமைக்குள் மட்டும் முற்றிலும் அடக்கிவிட முடியாத நாவல். இரு மகன்கள் மற்றும் அவர்களது அப்பாவின் மரணம் நிகழும் ஆஸ்பத்திரியையும் மையமாக கொண்டு, முன், பின்னாக சம்பவங்களைக் கோர்த்து “ஆஸ்பத்திரி” என்ற ஸ்தாபனத்தின் மீதான தனது விமர்சனங்கௗயும், ஆற்றாமைகளையும் முன் வைக்கிறார்.

“கொலை செய்வதற்கு எனப் பிரேத்யேகமான சில இடங்கள் உண்டு” என்ற வாசகத்துடன் இந்நாவல் ஆரம்பமாகிறது.

அப்பா உயிருக்காக போராடிக் கொண்டிருந்த போது, நாங்கள் வீட்டில் இந்தியா-ஆஸ்திரேலியா இரவு மேட்ச் டிவியில் பார்த்துக் கொண்டிருந்தோம். ஸ்ரீகாந்த் பேட் செய்து கொண்டிருந்தார் எனவும் நாவலின் ஆரம்பத்தில் குறிப்பிடப்படுகிறது. இந்த ஒருவரி கதை நடைபெறுவது கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்பதைக் குறிப்பால் உணர்த்திவிடுகிறது.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ வசதிகள் இந்த அளவு எல்லா மருத்துவ மனைகளிலும் பரவலாக்கப்படவில்லை. முக்கியமாக, சென்னையில் இரு பெரும் மருத்துவமனைகள் அனைத்து வசதிகளையும் கொண்டிருந்தது என்பதையும் நாம் நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம். அந்த இரு மருத்துவமனைகளில் வசூலிக்கும் கட்டணங்கள் நடுத்தர வர்க்கத்தினரின் தரத்தை விட மிக அதிகமாக இருந்ததால் வேறு வழியில்லாமல், சொத்துக்களை விற்று, அங்கு மருத்துவம் பார்த்தவர்களையும் நானே கண்டிருக்கிறேன். அங்கு ஒரு நாளைக்கு ஐ.சி.யூ.வில் இருக்க வசூலிக்கப்படும் கட்டணம், இன்று சென்னையில் சாப்ட்வேர் இஞ்சினியராக இருப்பவரின் ஒரு மாதச் சம்பளம் ஆகும்.

நடுத்தர வர்க்கத்தினரின் தரவை மட்டுமே பெரும்பாலும் நம்பி நடைபெறும் இம்மருத்துவமனைகளில் அவர்கள் மருந்துக்குக் கூட மதிப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். அதை பல்வேறு இடங்களில் நாவலில் சுவாரசியமாக பதிவு செய்துள்ளார் சுதேசமித்தரன். பணக்காரராக இருப்பின் வெளிநாடுகளிலும், ஏழையாக இருப்பின் அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவம் பார்த்துக் கொள்வது சகஜம். ஆனால் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டியுள்ளது. இதற்கு இந்நாவலில் தகுந்த காரணத்தையும் விளக்கியுள்ளார்.

சுதேசமித்திரனின் முந்தைய நாவலான “காக்டெய்லை” விட பல படிகள் உயர்ந்து நிற்கக் கூடியது ஆஸ்பத்திரி. மெல்லிய அங்கதமும், சுவாரஸ்யமான எழுத்தின் வேகத்தோடும் சேர்த்து சிறந்த கதை ஒன்றையும் சொல்லி விடுகிறார். நான்-லீனியரில் கதை சொல்வது கடினம், ஆனால் அதையும் இஇதில் செய்து காட்டியிருக்கிறார்.

உண்மைகள் உறவாடும் எழுத்துக்களில், நான்-லீனியரின் தனிக்குரலாக சுதேசமித்திரனின் ‘ஆஸ்பத்திரி’ நாவலை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

வௌயீடு : உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள் : 144
விலை : ரூ.80/-


நாஞ்சில் நாடன் முன்னுரையிலிருந்து:

நாவல் வடிவம் சர்வ சுதந்திரங்களையும் வழங்கும் ஒன்று. அந்தச் சுதந்திரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எழுதப்பெற்ற நாவல் ஆஸ்பத்திரி. சுதேச மித்திரனின் சிறப்பு என அவரது மொழியையும், கழிவிரக்கமற்ற சுயஎள்ளலையும், அங்கதத்தையும், வெளிப்படைத்தன்மையையும் கருதுவதுண்டு. அச்சமற்று நினைத்ததை எழுத்தில் கொணரும் நேர்மையும் அவருக்கு உண்டு. அவை யாவும் இந்த நாவலில் தருணம் தெர்ந்து வெளிப்பட்டுள்ளன.

இத்தனை வெளிப்படையான எழுத்து தமிழில் அபூர்வமானது. வாசகனைக் கூசச்செய்யும் உண்மை கொண்டு அறைவது. நேரடித்தன்மையும் நியாயமும் கொண்டது. மொழியைக் கையாளும் திறனும் தீவிரமும் கொண்டது எனவே தனித்தன்மையானது.

அவரது பாதிப்பு முன்னோடியின் சிறகுக் கதகதப்பில் முடங்கிக் கொள்வதல்ல. சுறுசுறுப்பாய் கொத்தித் திரிவது, சிறகடித்துப் பறக்க முயல்வது, சொந்தமாய் இரைதேட வல்லது.

பன்முகப்பட்ட உடல் சிக்கல்களுக்காக மருத்துவமனையும் வீடுமாக அலைக்கழியும் தகப்பனாரையும் மருத்துவமனையையும் அவரது இரண்டு மகன்களையும் முக்கியக் கதாபாத்திரங்களாகக் கொண்டது. மருத்துவமனைகளின் செயல்பாடுகளை அங்கதத்துடன் காட்டமாய் விமர்சனம் செய்வது. அதைப் பயன்படுத்தி சமூக விமர்சனம் செய்வது.

மருத்துவமனையில் அப்பாவை அனுமதித்ததே அவரைக் கொலை செய்வதற்கான முகாந்திரம்தானோ எனும் ஐயத்துடன் தொடங்கும் நாவல், அவரை மின் மயானத்தில் எரியூட்டி முடிந்த பின்பும் அந்தக் கேள்வியுடன்தான் முடிகிறது –

இந்த நாவலில் கொலை நடந்ததா இல்லையா என்று?


சுதேசமித்திரன் வலையுரை:

கவிஞர் விக்ரமாதித்யனுக்கு எனது அன்பு கலந்த நன்றியை இப்போதே வெளியிட்டு விடுகிறேன். எனது முதல் புத்தகமான அப்பா (கவிதைகள்) வெளிவந்தபோது விக்ரமாதித்யன் என்னிடம் தன் இசைவின்மையை மிகவும் மென்மையாக வெளியிட்டார்.

அயல் மொழிகளில் ஒரே வி்ஷயத்தை வேறு வேறு வடிவங்களில் எழுதிப் பார்க்கும் வழக்கம் உண்டு என்பதைக் குறிப்பிட்டு, நீங்கள் ஏன் இதை வேறு வடிவத்தில் எழுதிப் பார்க்கக்கூடாது என்று அவர் கேட்டார்.

‘அப்பா’வைப் பொறுத்தவரை அது அந்த வடிவத்தில் எழுதப்பட்டதுதான் புதிது என்பதை நான் நன்கறிவேன் என்பதால் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் (அப்பா எழுதிய காலத்திலிருந்து கணக்கிட்டால் 11 வருடங்கள்) கழித்து ஆஸ்பத்திரியை ஒரு சிறுகதையாக முதலில் எழுதினேன். சிறுகதை என்கிற அளவில் அது சிறப்பானதாகவே இருந்தபோதும் எழுதியவனின் மனத்துள் கொட்டிக் கிடக்கும் மிச்ச சொச்ச சரக்கை உத்தேசித்து அதை முழுமையாக எழுதி விடுவதுதான் சரியானது என்பதாக தோன்றிக்கொண்டேயிருந்தது. கிட்டத்தட்ட இருபதே நாட்களில் அதைச் செய்து முடித்துவிட்டேன். முடித்துவிட்டு ஒரு முறை வாசித்துப் பார்த்தபோது, விக்ரமாதித்யன் சொன்னதைத்தான் ஓரளவு முயன்று பார்த்திருக்கிறேனோ என்கிற வியப்பு என்னுள் எழுந்தது. அது உண்மையானால் அவருக்கு இன்னுமொரு முறை நன்றி.


என்னுரை

கதை சொல்லும் கலை என்றால்:

  • இயல்பு, எதார்த்தம் என்று உதார் விடுவிடாமல் உண்மை நிலையை பிரதிபலிக்குமா?
  • உவமை, ஒப்புமை, எடுத்துக்காட்டு எல்லாம் எப்பொழுது வெற்றிபெறும்?
  • எங்ஙனம் கதாபாத்திரத்தை மனசுக்குள் உட்கார்த்தி நிரந்தர படுக்கையறை உருவாக்குவது?
  • விவரணை எப்படி தேவையில்லாமல் போகிறது? விவரிப்புக்கும் தகவல்களுக்கும் எங்கே முக்கியத்துவம் கிடைக்கிறது?
  • கதாசிரியர் கருத்து, வாசகரின் எண்ணவோட்டம், கதைசொல்லியின் இயக்கம், கதாமாந்தரின் நியாயம் எல்லாம் எப்படி ஒன்றுக்கொன்று உரசாமல் உலாவுகிறது?
  • அட… கற்பனை மனிதர் மேல் கழிவிரக்கம் தோன்றுவது ஏன்?

இதெல்லாம் சுதேசமித்திரனின் ஆசுபத்திரியில் சாத்தியமாவதால் நிறைந்த வாசக அனுபவம் கிடைக்கிறது.

சாரு நிவேதிதா – ராஸ லீலா: புத்தக விமர்சனம்

எங்கேயோ, எப்பொழுதோ, ஃப்ரீயாக கிடைப்பதால் பினாயில் குடிக்கும் தமிழன் ஆகாமல், இரப்பவருக்கு இடவேண்டிய தட்சிணையாக புத்தகத்தை வாங்கிவிட வேண்டும் என்று வாசித்த நினைவு. கருத்தை சொன்னவர் இவராக இருக்கலாம்.

சாருவின் எழுத்து இலவசமாகக் கிடைக்கிறது. அதற்காகவே சாருநிவேதிதாவின் ராஸலீலா வாங்கினேன்.

சாருவின் புதிய புத்தகங்கள் குறித்த அறிவிப்பு பார்த்தவுடன், படித்து முடித்த ராஸ லீலா பற்றி, சமீபத்தில் மிகவும் பிரயத்தனப்பட்டு கொணர்ந்த இரண்டு வரி:

பாத்ரூமில் வைத்திருந்த சாருவின் ‘ராஸ லீலா’, சுத்தம் செய்ய பேப்பர் கிழிக்கும் அவசரத்தில் தவறுதலாக குப்பைத் தொட்டியில் விழுந்துவிட்டது. – Mar 5

இவ்வளவு சிறிய விமர்சனம் ஆகாது என்றால், கொஞ்சம் பெரிய அலசல்: வார்த்தைகளின் விளிம்பில்: Rasa Leela review

நானூறு ரூபாயை சாருவிற்கு தர விருப்பமிருந்தால், நேரடியாக டிடி எடுத்து அனுப்பி விடவும். ராச லீலாவிற்கு செலவழிப்பதை புத்தகம் வாயிலாக ஆசிரியர் வார்த்தையில் சொல்வதானால்: (பக்கம் 286)

‘நான் இப்போது ஒரு நம்பிக்கை துரோகம் செய்து கொண்டிருக்கிறேன்.’

Stage Friends USA & New England Tamil Sangam: Crazy Mohan’s Tenant Commandments

சென்ற வருடம் சென்னையில் ‘சாக்லேட் கிருஷ்ணா‘ தரிசனம். அதிலே வந்தவர் கிரேசி மோகனும் மாது பாலாஜியும். அந்த முப்பதாண்டு கால மேடை அனுபவத்திற்கு நிகரான நாடகத்தை நிகழ்த்திக் காட்டினார்கள் நியூ ஜெர்ஸி ஸ்டேஜ் ஃப்ரென்ட்ஸ் குழு.

எஸ் வி சேகர் நடித்து சுந்தா இயக்கிய ‘ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது‘ நாடகம். அன்றைய மதராஸில் வாடகைக்கு வீடு கிடைப்பது கஷ்டம். கைக்குழந்தை இருந்தால் மொசைக் தரை பாழாகி விடும் என்று நிராகரிப்பார்கள். அதற்குப் பதிலாக வளர்ந்த குழந்தை இருந்தாலோ, வயசுப்பயன், பிரும்மச்சாரி சேஷ்டை என்று புதிய காரணம் கண்டுபிடிப்பார்கள். வீடு வாங்குவதற்கோ ரொக்கத் தொகை கொண்டு கிரயம் முடிக்கவேண்டும். திவாலாகும் சிட்டி பேங்கும், கூவிக் கூவி வீட்டுக்கடன் தரும் ஐசிஐசிஐயும் உதயமாகாத எண்பதுகளில் கிரேசி மோகனால் எழுதப் பட்டது.

இவ்வளவு சிரமதசையில் வாடகை வீடு கிடைத்தால், அதை எவராவது காலி செய்வார்களா?

இதுவே எண்பதுகளின் சூப்பர்ஹிட் நாடகத்தின் கரு. அதை அமெரிக்காவிற்கு ஏற்றபடி Enfamilம், மில்லேனியத்திற்கு ஏற்றபடி ஸ்வைன்ஃப்ளுவும் கொண்டு உற்சாகம் கொப்புளிக்க படைப்பு மெருகேற்றி இயக்கியுள்ளார் குரு.

வளைகுடாவில் வின்டோஸ் வெளியானால் கூட அராபிய மொழியில் வெளியாகும். அதே போல் அமெரிக்காவில் அசலில் இருந்த கபாலி கோவில் தெப்பக்குளமும், 200 ரூபாய் வாடகையும் அப்படியே வைத்திருப்பதற்கு பதில் பாஸ்டன் காம்ன்ஸையும் டாலர் சோகத்தையும் பாலயோகிக்கு பதில் மகாலஷ்மி கோவிலையும் கொணர்ந்திருக்கலாம். அன்றும் இன்றும் பாகிஸ்தான் ஊடுருவல் தொடர்வதுதான் நகைச்சுவை நாடகத்தின் சோக மெஸேஜ்.

தமிழக சபாக்களில் நாடகம் பார்த்தால் முசுடுக்களையும் சிரிக்க வைக்க சில உபாயம் கையாள்வார்கள். முக்கியமான வசனத்தை சொன்னவுடன் ‘டொய்ங்ங்ங்ங்…’ என்று சத்தம் ஒலிக்கும். இன்னொரு விலா நோகவைக்கும் உரையாடல் முடிந்தவுடன் ‘ட்ட்டுர்ர்ருக்க்க்…’னு பிறிதொரு சவுண்ட் கொடுப்பார்கள். அதெல்லாம் பாஸ்டனில் கொடுக்காததாலோ என்னவோ, சிரிப்பு மழை பொழியாமல் அமைதி காத்தார் பார்வையாளர். அடுத்த முறை ஒரு கை ஓசையாக cue தந்தால் நாங்களும் இரு கைத்தட்டலாக புன்னகைப்போம் என்று நம்புகிறேன்.

nj-drama-tenant-commandments-bosotn-performance

ஸ்டேஜ் ஃப்ரென்ட்சிடம் மிகவும் பிடித்த விஷயம் அவர்களின் அரங்கப் பொருளின் பொருத்தமும் நிறைவான மேடை அமைப்பும். அது ஏனோ, இந்த தடவை, ரொம்ப எளிமையாக, நாட்டு நடப்பை பிரதிபலித்தது. அமெரிக்காவில் recession என்றால் ஸ்டேஜ் ப்ரென்ஸும், ஸ்டேஜை குறைத்து விட்டார்கள்.

சாது சங்கரனின் நீண்ட தலைமுடியை வெட்டுவது கூட ஒரு டெனன்ட் கமான்ட்மென்ட் ஆக்கலாமே என்று நாடகத்தில் வருவதால் நிஜமாகவே கூந்தலை வளர்க்குமளவு கமிட்மென்ட் கொண்ட மோகன்; மீசையை முறுக்கி விட்டு அட்ஜஸ்ட் செய்துகொண்டே வீட்டு சொந்தக்காரராகவே ஆன ஆதிகேசவன் ஆகிய இருவரும் டாப் க்ளாஸ். குறையே சொல்ல இயலாத இயல்பான நடிப்பு.

எஸ் வி சேகர் ஏற்று நடித்த பத்து என்னும் பத்மநாபன் பாத்திரத்தில் வந்த குருவும் ஹீரோ அய்யாசாமியாக வாடகைக்கு வந்து வீட்டை ஆக்கிரமிக்கும் இரமணி – இருவரும் தேவையானதை செய்துச் சென்றார்கள்.

எஸ் வி சேகரின் ஏற்ற இறக்கங்களையும், நீட்டமான பத்திரிகை ஜோக்குகளையும் வெகு சாதாரணமாக சம்பாஷணையில் நுழைக்கும் சாமர்த்தியமும் பத்துவாகிய குருவிடம் கிடைக்கவில்லை. ஒரிஜினலில் அவர் சடாரென்று சென்னை மொழி பேசுவார்; அங்கிருந்து கிண்டல் மொழிக்கு தாவுவார். அவ்வளவு ஈடுகட்டாவிட்டாலும், குருவால் இன்னும் நிறைய முடிந்திருக்கும் என்பது ‘ரகசிய சினேகிதியே‘ போன்றவற்றால் தோன்றியது.

அந்த மாதிரி அய்யாசாமி இரமணியும் வந்திருக்கும் உள்ளூர் கூட்டத்திற்கு இந்த அளவு நடித்தால் போதும் என்பது மாதிரி went through the motions. பாஸ்டனில் ஜே கே ரித்திஸ் படம் போட்டால் கூட ஹவுஸ் ஃபுல்லாக்கும் தமிழர்கள், இந்த மாதிரி நேரடி மேடை நிகழ்வுகளைக் காண ஏனோ வருவதில்லை.

சில நண்பர்களிடம் நேற்று அழைப்பு விடுத்தபோது கூட ‘இலவசமா?’ என்றார்கள். ‘நீ நடிக்கிறாயா?’ என்றார்கள். பெரும்பாலான நியு இங்கிலாந்துக்காரர்களின் பழக்கதோஷம் இது. தெரிந்தவர்கள் பங்கேற்கிறார்கள் என்றால் மட்டுமே வருவார்கள். நுழைவுக் கட்டணம் நயாபைசா கிடையாது என்றால் நிச்சயம் நுறு மைல் தாண்டி நிகழ்ச்சி இருந்தாலும் தலைக்காட்டுவார்கள். குழந்தைகளின் திறமையை அரங்கில் செய்து காட்டலாம் என்றால் எப்பாடுபட்டேனும் அட்டென்டன்ஸ் இடுவார்கள். முன்னூறு மைல் தொலைவில் இருந்து பதின்மூன்று பேர் குழு இரத்தமும் சதையுமாக உயிரோட்டமான நாடகத்தை நடித்துக் காட்ட வருகிறார் என்றால் ஏனோ காணாமல் போனவர் ஆகிவிடுகிறார்கள்.

தமிழ்ப்படங்களே தமிழில் தலைப்பு வைத்து வரிவிலக்குப் பெறுவது போல், நாடகத்தின் டைட்டிலை தமிழிலேயே பொருத்தமாக அமைத்திருக்கலாம். வடிவேலுதான் ‘தூக்கிக் காட்டு’வை காமெடியாக்கி, விவேக்கையும் ‘உவ்வேக்’காக தமிழ் சினிமா பாரம்பரியமாக்கி இருந்தால், இங்கும் R rated ஜோக் தூவப்பட்டிருக்கிறது. சிரிப்பை வரவைக்க அடல்ட்ஸ் ஒன்லி தேவையில்லை.

நண்பர் கணேஷ் சந்திரா வில்லன் தோற்றத்துடன் குழந்தைசாமியாக வெகுளியானப் பாத்திரப்படைப்புக்கு வேண்டியதை அளவோடு வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த வருடம் புதியதாக அரங்கேறிய ஆரோக்கியசாமி & நவநீதம், புதுசு என்பதே சொல்ல இயலாதவாறு திருப்திகரமாக நடித்தார்கள். பெருமாள் & ப்ரோக்கர் பரமசிவம் ஆகிய இருவரும் மோசம் இல்லையென்றாலும் opportunities for improvement என்று உடல்மொழியை சொல்லலாம். ‘நஷ்ட ஈடுநாதமுனி & கேடி செல்வராஜ் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை, செப்பனிடச் சொல்ல எந்தக் கருத்தும் இல்லாமல் செவ்வனே செய்திருக்கிறார்கள்.

பெண்கள் இருவரும் இளைய தளபதி விஜய் திரையில் தோன்றும் கணந்தோறும் கையைக் காலை ஆட்டி உதறலை சமாளிப்பது போல் கொஞ்சமாய் அபிநய சரஸ்வதிகளாகி இருந்தார்கள்.

நாடகம் முடிந்து திரும்பும் சமயத்தில் வானத்தைப் பார்க்குமாறு மகள் சொன்னாள். பிடித்தமான பாதி நிலவாக பெரிய அளவில் மேகங்களுக்கு நடுவில் சிக்கிக் கொண்டிருந்தார் சந்திரன். அப்படியே அதன் அருகில் பார்த்தால் கண்கூச வைக்கும் மெர்க்குரி விளக்கு வரிசை. ஒவ்வொரு விளக்கைச் சுற்றியும் நூற்றுக்கணக்கான விட்டில் பூச்சி. அத்தனையும் அந்த மஞ்சள் ஒளியை மொய்த்துக் கொண்டிருந்தன.

மனிதகுலத்துக்கு மூத்த குலம் ஈக்களின் குலம். ஆதாம் ஏவாளும் மொகஞ்சதாரோவிற்கு வருவதற்கு முன்பே அங்கே எந்தையும் தாயும் கொஞ்சிக் குலாவிய பூச்சிக்கூட்டம். அந்தக் காலத்தில் நிலவொளி மட்டுமே ஆதாரம். நிலவைப் பின்பற்றிப் பறப்பவை நேர்க்கோட்டில் பறக்கும். இருட்டின் பயணத்திலும் இலக்கை அடையும்.

ஆனால், இந்தக் கால ஈக்களுக்கு இடைஞ்சல் எக்கச்சக்கம். மெர்க்குரி, சோடியம், வெண்குழல், வடிவேலு, விவேக் விளக்கு என்று ரகவாரியாக வெளிச்சம் தரும் இரவுப் பயணத்தில் திக்கற்ற பார்வதியாக, செயற்கை மொழியில் மோதி மறைகின்றன.

நியூ ஜெர்சி ஸ்டேஜ் ஃப்ரென்ட்ஸ்களும் அசலான நிலாவை குறிக்கோளாக கொண்டு, கிரேசி/எஸ் வி சேகர் சோடியம் வேபர் மயங்கி தடைப்படாமல் உச்சங்களைத் தொடர விழைகிறேன்.

தொடர்புள்ள பதிவு:

1. வெட்டிப்பயல்: Tenant Commandments – நான் பார்த்த நாடகம்: “ஸ்டேஜ் ஃபிரெண்ட்ஸ் (Stage Friends) நடத்திய டெனண்ட் கமெண்ட்மெண்ட்”

2. New England Tamil Sangam: Chithirai Vizha Drama Photos « 10 Hot

3. பாஸ்டனில் ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’

சாரு நிவேதிதா மடலில் தந்த கவிதை

படம்: நான் எழுத்தாளன்
பாடல் / பாடியவர்: சாரு நிவேதிதா

வலைப்பதிவு எழுத வந்தேன்
வலைப்பதிவு எழுத வந்தேன்
வாசகனே என் வாசகனே

யாம் ஒரு வலைப்பதிவு எழுத வந்தேன்
வாசகனே என் வாசகனே

கப்ஸா என்னும் நமீதாவின் சதை கிசுகிசு
செக்சும் அடங்கிய சினிமா சான்ஸ் எனும்
வலைப்பதிவு எழுத வந்தேன் வாசகனே என் வாசகனே

ஜெமோவும் எஸ்ராவும் எழுதாததா
இல்லை கமலினை இராமு சூழ்ந்ததா
புதுமைப்பித்தனை நான் அறியாததா
சின்னத்திரை சீரியலின் வாய்ப்பை தேடிட
வலைப்பதிவு எழுத வந்தேன்
வாசகனே என் வாசகனே

அத்தனை படமும் பர்மாபஜாரில்
நான் பதிவுக்கு பார்ப்பது எவ்விடத்தில்
வெறும் IMDB உள்ளது என்னிடத்தில்
அதன் Torrent அது உன்னிடத்தில்

ஒருமுறையா இருமுறையா
பலமுறை பல இட்டுக்கட்ட வைத்தாய்
இராப்பிச்சையா பகல்பிச்சையா
கணம்கணம் தினம் எனை கேட்க வைத்தாய்

திரைக்கு அலைந்திடும்
திரைபோட்ட வாழ்க்கையும் துரத்துதே
உன் பொருள் பொருள் பொருள் என்று
பொருமுகின்ற மனம் இன்று பிதற்றுதே

ஐசிஐசிஐ வங்கியால் நோக்குவாய்
தவணை அட்டையால் தாங்குவாய்
இயக்குநர் திரைக்கரம் எனை அரவணைத்து உன் பொருள் பெற

(வலைப்பதிவு எழுத வந்தேன்)

ஆறிலிருந்து அறுபது வரையில் பூக்கள்.. பூக்கள்! – வைகைச்செல்வி

ஆறு வயதிற்கு
பிச்சிக் கொடி உயரம்தான்

பதினாறு வயதில்
செம்பருத்தி மட்டுமே
பள்ளிக்குள் ஆடின

இருபத்தாறு வயதில்
உன் தோட்டம் எதிரில்தான்
ஆனால் –
வேலிப்படல் தாண்ட
யாருக்குத் துணிவுண்டு?

பந்தக்கால் போட்ட பின்பு
தினந்தோறும்
கதம்பமும் கனகாம்பரமும்
திரும்பிப் பார்ப்பதற்குள் –
முப்பதும்… நாற்பதும்
அறுபதுமாய் வருடங்கள்
வாசமின்றி உதிர்ந்தன

இன்று –
ஊரெங்கும் திருவிழா.
எங்கிருந்தோ வருகிறாய்
கையில் பூச்சரத்துடன்
கறுப்புத் தேருக்கே
வண்ணப் பூச்சூட்டல்கள்.
என்
வெள்ளிப் பூந்தலையில்
மல்லிகைக்கு ஏது நிறம்?

நன்றி: தினமணி தீபாவளி மலர் 2004

Separated at Birth: Kishore vs Nana Patekar

முந்தைய பதிவு: தமிழ் சினிமா | நடிகைகள் | வலைப்பதிவு | தொலைக்காட்சி | இலக்கியம்

What advice will U give to a new blogger?

I would say three things:

1. Focus:

Which things do U know really well?
What is ur knowledge domain?
Where can U give good tips, tricks, suggestions?

2. Quantity:

When #1 Focus is too demanding switch to give regular updates like
– comments on news
– experiences, life events
– Refer articles to read, invite friends to contribute, interview them

3. Online Presence

Submit to aggregators – Digg, Blogkut
Post it in Social Networking sites – Facebook, Twitter
Good Practices to the post – Machine readable (Google understandable) Title, lot of Tags, one or two categories

Any other useful info or sites?

Again 3 things:

a. Quality of content (Audience)

– The visitor might hv come via Search Engine: Sound research, useful tidbits shd be there in each post
– Regular reader: Don’t repeat; say the obvious
– Occasional onlooker: came via social networking sites like reddit.com, Digg, Del.icio.us, clipmarks

b. Short attention span

– Keep it in bulletpoints (summarize each post at top or bottom) ; Use blockquotes: Be aware of HTML
–  Add a relavant Photo – attracts the user to the content, writing; summarize the post in 140 chars in Twitter
– Read a lot; write in simple language

c. Interaction with Visitors

– comment regularly on ur visitor blogs
– write lengthy rebuttals to popular bloggers (like those listed in Desipundit.com)
– don’t cheat ur feed readers: write often; atleast once every day!

Finally Technical Notes:

1. Use wordpress.com (instead of blogger.com)
2. As much a spossible avoid writing lengthy discourses on Politics (at least when starting to write blogs)
3. Never ever post ur Kavithai, story, fiction etc in blogs – Not many will read there
4. Give lots of link to relevant posts from other blogs – Link Love

If at all going via Blogspot route:

http://mashable.com/2009/01/26/blogger-widgets
http://mashable.com/2009/01/16/blogger-toolbox/
http://mashable.com/2008/05/17/70-plus-new-and-beautiful-blogger-templates/
http://mashable.com/2008/12/22/blogger-template-resources/
http://mashable.com/2007/09/13/blogger-templates/
http://mashable.com/2007/09/10/bloggercom-toolbox/

நான் பதிவெழுதுவது இப்படித்தான்

நன்றி: PHD Comics: Single keystroke