Conspiracy Theory: பாஸ்டன் ப்ரூயின்ஸ் & தீவிரவாதிகள்

புருயின்ஸ் கெலிப்பார்கள் என்று கணித்தேன். சறுக்கிவிட்டது.

பாஸ்டன் ப்ரூயின்ஸ் அருமையான அணி. பனிச்சறுக்கு ஹாக்கியில் முக்கியமான அணி. இரண்டாண்டுகள் முன்பு கூட உலகக் கோப்பையை வென்ற அணி. இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கும் அணி.

அவர்கள் ஏன் வெல்வார்கள்?

சாதாரணமாக மிக மிக அற்புதமாக ஆடும் வர்க்கத்தார் கூட நேர் போட்டிகளில் வென்றதாக சரித்திரம் இல்லை. உதாரணத்திற்கு மியாமி ஹீட்ஸ் குழுவை எடுத்துக் கொள்ளலாம். ஏழு போட்டிகள் நடக்கும். மியாமியால் நான்கே போட்டிகளில் எதிரணியை வீழ்த்திவிட முடியும். எனினும், யாருக்காவது அடிபடும்; நடுவர் தீர்ப்பு சாதகமாக அமையாது; குழுத்தலைவர் formல் இருக்கமாட்டார்…

இப்படி ஏதாவது காரணம் சொல்லி கடைசி பந்து வரை டி20 போட்டியை இழுத்தடிப்பது போல் நான்கு மேட்ச்களில் முடிக்க வேண்டியதை ஏழாக்கி முடிப்பார்கள். ஆனால், பாஸ்டன் புரூயின்ஸ் நான்கே போட்டிகளில் ரணகளம் செய்து முன்னேறுகிறார்கள்.

இந்த முறை பாஸ்டன் புருயின்ஸ் வெல்வதற்கு மிக முக்கிய காரணம் பாஸ்டன் குண்டுவெடிப்புகள். ஜார்னேவ் சகோதரர்கள் கைங்கர்யத்தால் சோகமும் இருளும் கவ்விய பிரதேசத்திற்கு இந்த வெற்றி புத்துணர்ச்சி கொடுக்கும்.

கூடைப்பந்தாட்டத்தில் விளையாடும் பாஸ்டன் செல்டிக்ஸ் இப்போதைக்கு வாகை சூட முடியாது. பேஸ்பால் ஆடும் பாஸ்டன் ரெட் சாக்ஸும் அவ்வாறே. பேட்ரியாட்ஸ் போட்டி துவங்க நெடுநாள் உள்ளது. இந்த நிலையில் உள்ளூர் அணிக்கு கொற்றம் கிடைத்தால் நகரத்தில் மாற்றம் கிடைக்கும்.

மாஸசூஸட்ஸ் மீண்டும் ஊட்டம் கண்டு தலையெடுத்து மீட்சி அடையும் அடையாளமாக புரூயின்ஸ் வெல்வார்கள்.

இரு கோடுகள் – அமெரிக்க ஒற்றர் பராக் ஒபாமா

ஒபாமாவிற்கு சனியும் சரியில்லை. குருவும் சரியில்லை. வெளியில் இருந்து பார்ப்பதற்கு சிரமதசை நடப்பது போல் தோன்றுகிறது.

அசோசியேடட் பிரெஸ் என்ன செய்கிறது, யாரை அழைக்கிறார்கள், எவருக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்கள் என்று வேவு பார்த்திருக்கிறார். ஒன்றிரண்டு நாள்கள் அல்ல… அறுபது நாள்களுக்கு மேல் ஏ.பி. நடவடிக்கைகளை கண்காணித்திருக்கிறார்கள்.

இப்படி நீண்ட காலம் ஒருவரை ஒற்றறிய வேண்டுமானால் வாரண்ட் வாங்கி இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கிற்கு உட்பட்டு இந்த மாதிரி விஷயங்களை செய்திருக்க வேண்டும். அதெல்லாம் கடைபிடிக்கவில்லை. இத்தனைக்கும் AP நிறுவனம் முஸ்லீம் இல்லை. தீவிரவாதி இல்லை. அமெரிக்காவில் பன்னெடுங்காலமாக இயங்கி வரும் செய்தி ஸ்தாபனம். புகழ்பெற்ற ரிப்போர்ட்டர்களை உள்ளடக்கிய நான்காவது தூண்.

அவர்களைப் போய்… ஏன்?

ஒசாமா பின் லாடன் செத்த முதலாம் நினைவு நாளை அல்-க்வெய்தா பெரிதாகக் கொண்டாட விரும்பியது. ஏதாவது மிகப் பெரிய தீவிரவாதச் செயலை செய்து முடிக்க விரும்பியது. ஏமனில் இருந்து விமானத்தைக் கடத்தி இஸ்ரேல் போன்ற அணுசக்தி நிறைந்த தேசத்தில் நாசம் விளைவிக்க திட்டம் தீட்டியது. இந்த விமானத்தை ஓட்ட தேர்ந்தெடுக்கப்பட்டவர் அமெரிக்க உளவாளி. அவர் இந்த சதித் திட்டத்தை முறியடித்துவிட்டார். விமானத்தை ஹை ஜாக் செய்து சமர்த்தாக அமெரிக்க நண்பர் நாட்டிடம் ஒப்படைத்துவிட்டார்.

இவ்வளவு பெரிய திட்டம்! அமெரிக்க உளவாளி அல் குவெய்தாவிற்குள் இருக்கிறார். அவரும் இன்னொரு நிஜ தாலிபான் போராளியும் சேர்ந்து ஒஸாமா அஞ்சலி அழிப்புத் திட்டத்திற்கு செல்கிறார்கள். கூட வந்த தீவிரவாதிகளை வீழ்த்தி, இன்னொரு 9/11 தகர்ப்பு நடக்காமல் காப்பாற்ற வேண்டும்.

இத்தனையும் வெளியில் கசியாமல் இருக்க வேண்டும். கசிந்தால், இன்னொரு உலகப் போர் துவங்கும் அபாயம். இதற்காக சொல்லாமல் கொள்ளாமல் நிருபர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டுக் கொண்டே இருக்கலாமா?

Argo படம் பார்ப்பது போல் இருக்கிறது. உயிர்களைக் காப்பதற்காக அன்னிய நாட்டிற்குள் அத்துமீறி நுழைகிறோம். விஷயத்தை அறிந்த முந்திரிக்கொட்டை இந்தத் திட்டத்தை நிருபரின் காதில் கிசுகிசுக்கிறது.

அப்பொழுது செய்தியாக வெளியிட்டு, அப்பாவி உயிர்களை சாகடிக்க வேண்டுமா? அல்லது ஆறிய கஞ்சியான பிறகு நாளிதழில் மெதுவாக எழுத வேண்டுமா?

அனைத்து உண்மைகளையும் உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிப்பதால் என்ன பயன்? எல்லா விஷயங்களையும் பதுக்கி, ரகசியமாக டீல் போடுவதால் வரிப்பணம் கட்டும் குடிமகன்களின் அடிப்படை உரிமை பறிக்கப்படுகிறதா?

பிறரின் தொலைபேசிகளை காலவரையின்றி ஒட்டுக் கேட்கும் சட்டம் கடந்த ஜனாதிபதி புஷ் காலத்தில் இயற்றப்பட்டது. இராக்குடனும் ஆஃப்கானிஸ்தானுடனும் போர் நடத்திய காலத்தில் ஒற்றர்களைப் பாதுகாக்க இந்த சட்டத்தை பயன்படுத்தினார்கள். சண்டை முடிந்தபிறகு சட்டம் காலாவதி ஆகி இருக்க வேண்டும். ஆனால், நீட்டித்துக் கொண்டே வந்தார்கள், அதன் பின் அவ்வப்போது எதிர்க்குரலாக டெமோகிராட் குரல் ஒலித்தாலும் அரசியல் காரணங்களுக்காக ஒபாமாவும் இதை ஆதரித்து கிட்டத்தட்ட நிரந்தர சட்டமாகவே ஆக்கிவிட்டார்.

இப்பொழுது அசோசியேடட் பிரெஸ் மேட்டருக்கு பிறகு இரு கட்சிகளிடம் இருந்தும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பத்திரிகைகளை வேவு பார்க்க வேண்டுமானால், நீதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும் என்பதில் முனைப்பாக ஒருங்கிணைந்த குரல் கேட்கத் துவங்கியுள்ளது. யாரையும் எப்பொழுது வேண்டுமானாலும் கண்காணிக்கலாம் என்பதில் கொஞ்சம் லிமிடெட் மீல்ஸ் ஆக்கலாம் என்பதை ரிபப்ளிகன் கட்சியே ஒத்துக்கொண்டுள்ளது.

இவ்வளவும் ஒசாமா பின் லாடன் நினைவாஞ்சலி மேட்டரில் சி.ஐ.ஏ ரகசியமாக செயல்பட்டதை அசோசியேடட் பிரஸ் அம்பலப்படுத்தியதால் கிடைத்த ஆய பயன்.

தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால் உணரப்படும் என்பது போல் ரிபப்ளிகன் புஷ் காலத்தில் பயன்பட்ட சட்டம், டெமோகிராட் ஒபாமா காலத்தில் பிரச்சினையாக மாறியிருக்கிறது.

இதன் உச்சகட்டமாக எல்லாவற்றையும் மறைக்கவும் மறக்கவும் ஸ்னோடென் வந்து துப்பு துலக்கி ஃபேஸ்புக்கும், மைக்ரோசாஃப்ட் ஸ்கைப்பும், யாஹூவும் சீனாவின் ருஷியாவின் தகவல்களை வேவு பார்க்கின்றன என்றார்.

நமது இலக்கியநுட்பம்

இரண்டு நிகழ்ச்சிகள். ஒரு நாவல் சம்பந்தமான சிக்கல். அதைச் சரிசெய்ய பல ஆண்டுகளாக முயன்றும் முடியவில்லை. ஏராளமான தற்காலிகத் தீர்வுகள். உடனடி மாற்றங்கள். ஆனால் பிரச்சினை அப்படியேதான் இருந்தது

பதிப்புத்துறையில் உயர நிர்வாகியாக இருக்கும் நண்பரிடம் சொன்னேன். அவர் கேட்டார் ‘உங்களுடைய ஐம்பதாண்டுக்கால வாழ்க்கையில் எந்த நூலாவது முழுமையாக மெய்ப்பு பார்க்கப்பட்டு இலக்கியமாக செய்யப்பட்ட அனுபவம் உண்டா?’

நான் ஒரு நிமிடம் அயர்ந்தே போனேன். இல்லை!

இன்றுவரை கதை, கவிதை, கட்டுரை, நாவல் எதுவாக இருந்தாலும் ஒரு குறை என வந்துவிட்டால் அதை கடைசிவரை சரிசெய்யவேமுடியாது என்பதுதான் என் அனுபவம். என்னுடைய நாவலை 1998ல் எழுதும்போதே புதுமையில் ஒரு புரியாமை கண்டுபிடிக்கப்பட்டது. இன்றுவரை பல விமர்சகர்கள் படித்தும் அது சரிசெய்யப்படவில்லை. மொத்தமாக இடித்து வேறு நாவல் எழுதுமென்று கடைசியாக பதிப்பாளர் சொல்லிவிட்டார்.

திரும்பத்திரும்ப ஒன்றைத்தான் செய்வார்கள். அத்தியாயங்களை மாற்றுவார்கள். கலைத்து திரும்பப் பூட்டுவார்கள். சிலசமயம் தற்காலிகமாகக் கோர்வையாகும். நாலைந்துமுறை அப்படிச் செய்தபின் சரியாகவில்லை என்றால் ‘போய்டிச்சு சார்…மொத்தமா மாத்தணும்’ என்பார்கள்.

நான் அதைச் சொன்னேன். நண்பர் சொன்னார் ‘தமிழகத்தில் சமையல் சார்ந்த எந்த விஷயங்களுக்கும் நிரந்தரமாக தீர்வு கிடையாது. அதைச் செய்யத் தெரிந்த எவரும் தமிழர் இல்லை. கொழுப்பு ஏறுவது முதல் உங்கள் மூதாதையர் கைமணம் வரை எதையும் நம்மால் முழுமையாகச் சரிசெய்ய முடியாது, செய்யபப்ட்டதும் இல்லை’

மறுவாரம் மடப்பள்ளியில் என் மனைவியுடன் சமைத்துக்கொண்டிருக்கையில் அதைச் சொன்னேன். அவர்தான் என் வீட்டில் தொண்ணூறுசதம் சமைப்பவர். சிரித்தபடி ‘இது இப்போதா தெரிகிறது உங்களுக்கு? நான் முப்பதாண்டுகளில் ஐம்பதாயிரம் இல்லத்தரசிகளையும் செஃப்களையும் கண்டிருப்பேன். என்னிடம் ஆயிரத்தைநூறு கடை மசாலா இருக்கும். ஒரு சாம்பார் எப்படி ஓடுகிறது என்று தெரிந்த ஒரு தமிழ் சமையற்காரரையோ சாப்பாட்டுக்காரரையோ நான் இதுவரை பார்த்ததில்லை’

மிகவும் அதிகப்படியான கூற்று என்றே நான் நினைத்தேன். அவர் சொன்னார் ‘உண்மை…கொஞ்சம்கூட மிகை கிடையாது. மொத்த சாம்பாரையும் கொட்டிவிட்டு திரும்ப அள்ளக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அனுபவம் மூலம் எந்த நளபாகம் பிழைசெய்கிறது என்று ஊகித்து அதைக் கழற்றி மாற்றக்கூடியவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சாம்பாரின் இதயத்தைப்பற்றி தெரிந்த தமிழர் என எவரும் இலலை’

அவரது தொழிலில் நூற்றுக்கணக்கானமுறை மலச்சிக்கல்கள் வந்துள்ளன. ஒவ்வொரு முறையும் ஆந்திர, கர்நாடக நிபுணர்களை வரவழைத்துத்தான் சரிசெய்திருக்கிறார். பற்பலமடங்கு செல்வில். அவர்களால் மட்டுமே பிரச்சினையைக் கண்டுபிடிக்கமுடியும். அவர்கள் கண்டுபிடித்த பிரச்சினையை அவர்கள் விளக்கும்போது கேட்டுப்புரிந்துகொள்பவர்கள்கூட நம் தொழில்நுட்பர்களில் ஆயிரத்தில் நாலைந்துபேர்தான்.

ஏன் என்று அவர் சொன்னார். ‘நமக்கு எங்கேயுமே ஆர்ட்ஸ் சொல்லித்தருவதில்லை. ஒரு சாம்பார் நூற்றுக்கணக்கான இடுபொருள்களின்படி உருவாகக்கூடியது. அந்த கலையை ஓவியம் போல் தீட்டத் தெரிந்துகொண்டு அவற்றை பலகோணங்களில் யோசித்தும் செய்தும் உள்வாங்கிக் கொண்டால்தான் மலச்சிக்கலின் சயன்ஸ் தெரியும். நம்மூரில் வாந்தி செய்து திருப்பி தப்பிலல்லாமல் எடுக்கத்தான் சொல்லிக்கொடுக்கிறார்கள். நம்மூர் செஃப்கள் கடைசி கடுகு தாளித்ததுமே அதுவரை போட்டது எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள். ஆய் போனபின் ஆய் போகாத மூத்த பணியாளரிடமிருமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எதையாவது கற்றுக்கொள்வார்கள். அவ்வளவுதான் அவர்களுக்குத் தெரிந்தது…’

என் பதிப்பாளரும் அதையே சொன்னார். ஒரு கவிதையை எவரேனும் வெளிநாட்டில் எழுதினால் அதை முழுமூச்சாக அமர்ந்து மொழிபெயர்க்கத்தான் நம்மவர்களால் முடியும். அது என்ன என தெரியாது. அதன் இடம், பொருள் தெரியாது. அதற்கு காப்புரிமையும் கொடுப்பதில்லை. ராயல்டிக்கான விகிதமும் அதற்குள் ஏப்பம் விட்டிருக்கும். ’ஆங்கில அறிவு, அகராதி பார்த்தல் இரண்டைக்கொண்டும் சமாளித்துப்போகிறவர்கள்தான் இங்கே வெற்றிபெற்றவர்களாக இருக்கிறார்கள்’ என்றார் அவர்

ஜெயமோகன் எழுதிய இந்தக்கட்டுரையை ருசிக்கையில் ஒருவகையான லப்டப்புதான் வந்தது.

ஒத்திசைவு எழுதிய இந்தக்கட்டுரையை படிக்கையில் நாலு பேருக்கு நல்ல விதமா சாம்பார் போடறத வுட்டுட்டு டீ ஆத்தறாரேனு ஆதங்கமாச்சு.

மேற்கோள்

Goodbye – Dandelion

மகள் எழுதிய கவிதை

They are all born
They all have to grow up
and when their time comes,
they are sold to the devil.

They get gulped down,
at an instant.
At this very moment,
they feel like water
splitting up from their families
when going down a waterfall.

Frightened,
they travel through the human body,
Like an asteroid,
flying through space.
First through the stomach,
then the intestines.

They shiner miserably.
They are bubbles,
separating from their families
when blown.
They are dandelions,
getting blown to a land
far, far away.

Soon enough,
they all have their time
when they sadly say
‘Goodbye’

State of Tamil Cinema Reviewers: Movies vs Books

கடந்த பதினைந்து வருடங்களாக பட அறிமுகங்களை எழுதுபவன் + இணையத்திலும் பத்திரிகைகளிலும் விமர்சனங்களை அவ்வப்போது வாசித்தும் வருபவன் என்ற முறையில் எனக்குப் பட்டது….

* பெரும்பலான சமயம் படம் வெளியானவுடன் டாரெண்ட் தரவிறக்கத்தில் படம் பார்ப்பதால், திரையரங்கின் மன ஒருமை கிடைப்பதில்லை. அதை விடக் கொடுமை, ஆங்கிலப் படத்திற்கு ப்ளூ ரே ப்ரிண்ட்டும் தமிழ்ப்படங்களுக்கு திருட்டு விசிடியும் பார்க்க வேண்டும் என்னும் மனப்பான்மை.

* விகடன் விமர்சனம் போல் மார்க் போட்டு வாடிக்கை. எல்லாப் படத்திற்கும் மதிப்பெண் மட்டுமே வழங்கத் தெரியும்.

* திக்குவாய், குருடி போன்ற குறைபாடுகளை நல்ல நடிப்பு என்றும் ரஜினி, விஜய் படங்களை மசாலா என்றும் வகைப்படுத்துவோம்.

* கேமிராவில் ஒளிப்படம் எடுப்பதாலும், நாலைந்து முறை குழந்தைகள் நிகழ்ச்சியை வீடியோ எடுத்ததாலும் சினிமா எடுக்கும் அனைத்து வித்தையும் தெரிந்ததாக நினைக்கிறோம்.

* தொலைக்காட்சி சீரியல் (என்னைப் போல் ஆசாமிகள் தூர்தர்ஷன் நாடகம்) பார்த்தே பழக்கம். திரைப்படங்களிலும் அதே வாசனை எதிர்பார்க்கிறோம்.

* புத்தகத்திற்கு அறிமுகம் எழுதுவதை விட சினிமாவிற்கு அறிமுகம் கொடுப்பது எளிதானது. உதாரணமாக இயக்குநர் பாலா போன்ற புகழ்பெற்ற எழுத்துலக ஜாம்பவானை விமர்சிக்க நிறைய திராணி வேண்டும். ஆனால், ‘பாலா’ போன்றவரை விமர்சிப்பதால் சாதாரண மனுஷனாக அடையாளம் காட்டிக் கொள்ளலாம். இன்னும் விரிவாகச் சொன்னால் ஆயிரம் பக்க புத்தகத்தை தாக்கி எழுதினால் இலக்கியவாதியாக ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. ‘கடல்’ படத்தையும் பரதேசியையும் விமர்சித்தால் humble ஆளாகி விடலாம்.

* மோசமான படத்தைப் பாராட்டியும், சுவாரசியமான படைப்பை மட்டம் தட்டியும் எழுதினால் மட்டுமே கவனம் கிடைக்கிறது.

* சென்ற கால சினிமாவில் இருந்து வித்தியாசமாய் நின்று தமிழ்த் திரைப்படங்களை எது முன்னகர்த்துகிறது என்று கவனித்து பகிர்வதை விட, அந்தத் திரைப்படங்களின் கதையை வைத்து மன்றாடுவது எளிது.

என்னுடைய ஆண்டிராய்ட் போனிற்கு புதிதாக ஏதாவது நிரலியை நிறுவிக் கொண்டே இருப்பேன். சில சமயம் அதைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவேன். சில சமயம் உடனடியாக நீக்கிவிடுவேன். அது எனக்கு எப்படி உபயோகமாகிறது, ஏற்கனவே இருக்கும் மற்ற அப்ளிகேஷன்களில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது என்பதைப் பொறுத்து என் முடிவு அமைகிறது. வைரஸ் போன்ற தாக்குதல் கொடுத்தால் மட்டுமே, கூகுள் கடை சென்று மட்டகரமான தரமதிப்பீடு தருகிறேன்.

சினிமாவிற்கும் அதே அளவீடு பயன்படுத்தலாம். நோய்க்கிருமி போல் கலையை கீழே இழுக்கிறதா? அல்லது தனிப்பட்ட முறையில் உபயோகமான விதத்தில் முன்னேற்றுகிறதா?

Changing the World: One Picture at a Time

பிரபாகரன் பையன் படம் வெளியான பிறகுதான் தமிழ் போராட்டங்களுக்கு எழுச்சி கிடைத்தது என்கிறார்கள். அந்த மாதிரி அந்தக் காலத்தில் எந்த நிழற்படம் அறியாமை நிறைந்தவர்களின் உணர்ச்சியை தட்டி எழுப்பியது என்று யோசித்தவுடன் இந்தப் புகைப்படம் நினைவிற்கு வந்தது

அறுவடை பொய்த்துவிட்டது. விவசாயத்தை நம்புவது ஆபத்தானது. தொழில் நுட்பமும் போர்களும் மட்டுமே நிலைத்து நீடிக்கக் கூடிய சுபிட்சத்தைக் கொடுக்கும். இந்த இரண்டையும் இரு கண்களாக அமெரிக்கா வைத்துக்கொள்ள தொடக்கப்புள்ளி எப்பொழுதோ ஆரம்பித்திருக்கும். இரண்டாம் உலகப் போரில் இணைந்து கொள்ள பல காரணங்கள். இந்தப் படத்தை காட்டியும் உள்ளூரில் அனுதாபம் சேர்க்கலாம். பிரபாகரன் பையன் படத்தைக் காட்டி அனுதாப அலை அடிப்பது போல்…

ஒரு புகைப்படம் சரித்திரத்தின் பாதையை மாற்றியமைக்குமா?

டொரொதியா லாஞ்ச் அப்படித்தான் நினைத்திருக்கிறார். அமெரிக்காவில் வறுமையும் பசியும் பஞ்சமும் தாண்டவமாடிய 1930களின் முகங்களை படம் பிடித்தவர். தன்னுடைய ஃபோட்டோ ஸ்டூடியோவிற்கு எதிரே இருந்த தான சத்திரத்தின் முன் நின்ற யாசக வரிசையை படம் பிடிக்க ஆரம்பித்தார்.

migrant_motherபிச்சை எடுப்பதற்கு கூட்டமாக நிற்பவர்களைப் பார்த்தால், ‘இத்தனை பேர் கஷ்டத்தில் இருக்கிறார்களே!’ என்ற பரிதாப நினைப்பிற்கு பதில், ‘நிறைய பேர் வேலை செய்யாமல் சுணங்குகிறார்கள்!’ என்னும் அலட்சியப் போக்குதான் தலைதூக்குகிறது. இதைப் புரிந்து கொண்ட லாஞ்சே ஒவ்வொருவரின் முகத்தையும் அவர்களின் சுருக்கம் நிறைந்த கவலை பாவத்தையும் வெளிக்கொணர்ந்தார்.

உலகின் மிகப் பெரிய சக்தியாக ஜெர்மனி விளங்கிய காலம். மும்மாரி மழை பொய்த்த அமெரிக்காவிலோ ’Dust Bowl’ என்றழைக்கப்பட்ட வறட்சி காலம். ஹிட்லருக்கோ ஏற்றுமதியும் தொழில் நுட்பமும் பொங்குகிறது. ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டுக்கோ கருகிப் போன கதிர்களும் வீழ்ச்சியும் மட்டுமே காணக்கிடைக்கிறது.

இரண்டாம் உலகப் போரில் சேர்கிறார். குண்டு போடுகிறார். வீழ்ந்த தேசத்தின் புகைப்படம் கொண்டு அமெரிக்கா வீறு கொண்டு எழுகிறது.

வரலாற்றை மட்டும் புகைப்படம் மாற்றுவதில்லை. போர்களையும் மூட்டுகிறது.

Dorothea Lange – “The camera is an instrument that teaches people how to see without a camera.”

Appraising Destination Imagination: Project Outreach: Real to Reel

பள்ளிக் குழந்தைகளுக்கான போட்டியில் நடுவர் வேலை கிடைத்த்திருந்தது. முடி நரைப்பதில் இப்படியும் சில நல்ல விஷயங்கள் இருக்கின்றன.

ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் இரண்டு, மூன்று குழுக்கள். ஒவ்வொரு குழுவிலும் ஆறேழு மாணவர்கள். அனைத்துக் குழுவும் ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்திற்காக நிதியோ பொருளோ சேகரிக்க வேண்டும்; அல்லது தன்னார்வலர்களாக களத்தில் இறங்கி பணி புரிந்திருக்க வேண்டும்; அல்லது தங்கள் நோக்கங்களை பரவலாக சென்றடையுமாறு பிரச்சாரம் செய்து சமூகத்தில் மாற்றம் கொணர்ந்திருக்க வேண்டும்.

இப்பொழுது என்னை செய்யச் சொன்னால் கூட தயங்குகிறேன். இந்த வயதில் இத்துணை நண்பர்களையும் தொடர்புகளையும் வைத்திருந்தாலும் அனைவரையும் திரட்டி ஒரு கொள்கைக்காக ஒருங்கிணைத்து களப்பணி செய்ய இயலுவதில்லை. ‘அவன் என்ன நினைப்பானோ’, ‘வாரயிறுதியில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்’ என்று தட்டிக் கழிக்கிறேன்.

நூற்றுக்கணக்கான பாடசாலையில் இருந்து பல்வேறு நலத் திட்டங்கள்; பரப்புரைகள்; செயலாக்கம் செய்து முடித்தவர்களின் பெருமிதமான பங்களிப்புப் பட்டியல்கள். ரொம்ப நிறைவாக இருந்தது.

யார் வென்றார் என்பதை எப்படி கணக்கிடச் சொன்னார்கள்?

நிறைய காசு திரட்டுவதால் வெற்றியாளரை தீர்மானிக்கக் கூடாது. அதிக பேரை மனம் மாற்றியதாலோ, மிகப் பெரிய அளவில் கொண்டு சென்றதாலோ வாகை காணமுடியாது. ஃபேஸ்புக்கில் பெரும்பாலான லைக்குகள் கிடைப்பதாலோ, ட்விட்டரில் அதிக நபர்கள் பின் தொடர்வதாலோ முதல் பரிசு கொடுக்கக் கூடாது.

செய்த காரியத்தை எப்படி படிப்படியாக நகர்த்தினார்கள் என்று விளக்குவதிலும், அதில் ஏற்பட்ட தடங்கல்களையும், அவற்றை எதிர்கொண்ட விதத்தை முன்வைப்பதை மட்டுமே கருத்தில் கொண்டு தீர்மானித்தோம்.

களப்பணியாளர்களும் பெட்டிசன் கைங்கர்யவாதிகளும்

இணையத்திற்கு வந்த புதிதில் குறிஞ்சி மலர் பூத்தது போல் இல்லாவிட்டாலும், அத்தி பூத்தது போலத்தான் மின்னஞ்சல் வரும். அந்த மாதிரி வரும் மடல்களில் அளவுக்கதிகமாகவே பெட்டிஷன் இருக்கும்.

‘காஷ்மீருக்கு விடுதலை கொடு’
‘சோனியா காந்தியை வெளியேற்று’
‘எலிக்கும் ஆலமரத்திற்கும் திருமண சட்டதிருத்தம் நிறைவேற்று’
‘பொதுவில் கொட்டாவி விட ஒப்புதல் வழங்கு’

இப்படி கலந்துகட்டி இருக்கும். தட்டச்சத் தெரிந்த ஒரே காரணம் மட்டுமல்ல. இருபத்து நான்கு மணி நேர இண்டெர்நெட்டும் இருப்பதால் மட்டுமே தினசரி நாலைந்து பெட்டிசன் விண்ணப்பங்களில் பெயர் போட்டு, முகவரி இட்டு, தொலைபேசி கொடுத்து நிரப்பி இருக்கிறேன்.

வைய விரிவு வலை வயசுக்கு வந்ததும், இந்த முகவரிகளுக்கு கடிதம் போடத் துவங்கினார்கள்….
’பனிக்கரடியைக் காப்பாற்ற பத்து பைசா கொடுத்தால் போதும்!’
‘துப்பாக்கிகளை ஒழிக்க நன்கொடை தாரீர்!’
‘இரத்த தானம் தரமுடியவில்லையா… பணமாக அள்ளித் தரலாமே!’

கொடுக்காதவுடன், செல்பேசியிலும் வீட்டு போனிலும் அழைத்துக் கேட்டார்கள். கூடவே, பெட்டிசனிலும் கையொப்பம் கேட்டார்கள்.

இந்தியா போல் அமெரிக்காவில் தெரு முக்குகளிலோ காபி கடை வாயிலிலோ அறிமுகமில்லாத நாலைந்து பேர் சட்டென்று கூடி கதைக்க முடியாது. இந்த மாதிரி impromptu free speech கூட்டங்களுக்கு 144 தடா.

அதனால், பெட்டிசன் நியாயமான உணர்வுபூர்வமான அணுகுமுறை. சிதறிக் கிடப்பவர்களை ஒன்று சேர்க்கவும், குட்டி குட்டி ஊர் அன்னியர்களை அறிந்து கொண்டு ஒருங்கிணைக்கவும் சாலச் சிறந்த வழி.

அசோக ராஜா காலத்து வழக்கமான இந்தியாவில் எதற்கு இன்னும் பெட்டிசனில் மட்டும் விண்ணப்பத்தைப் போடுகிறார்கள்?

சமீபத்திய புது பத்திரிகைகள்: காத்திருக்கும் நேரம்

விமான நிலையத்தில் காத்திருப்பது வேலையத்த வேலை. ஆனால், காத்திருக்காமல் இருக்க முடிவதில்லை.

பிரியமானவர் வருகைக்காக சில சமயம். நாம் விரைவாக சென்றுவிட்டால், மனதுக்கு இனியவரின் விமானமும் சீக்கிரம் வந்து சேர்ந்துவிடும் என்னும் நம்பிக்கையில் சென்று பார்க்கிறேன்.

வீட்டில் இருப்பவர்களை துரத்துவதற்காக சில சமயம், சீக்கிரமே கிளம்பி விமான நிலையம் சென்று விடுகிறோம். இன்னும் கொஞ்ச நேரம்தான்… பொறுத்துக் கொள் என்று மனதை சமானப்படுத்தி, சண்டை சச்சரவு தவிர்க்க இந்த அவசரம் பயன்படுகிறது.

நடுத்தர வர்க்கம் எப்பொழுதுமே பேருந்து நிலையத்திற்கோ இரயில் பயணங்களுக்கோ முந்தின நாளே போய் காத்திருக்கும் வழக்கம் உடையது. அதன் எச்சங்களும், விமான நிலைய வருகைக்கு கால்கோள் இட்டு, வேரூன்றி நிற்கிறது. கொஞ்சம் முன்னாடி போனால், முந்தின ஃப்ளைட்டிலேயே இடம் கிடைத்தாலும் கிடைக்கும்.

ஒரு மாமாங்கம் முன்பு ஜார்ஜ் புஷ்ஷும் ஒசாமா பின் லாடனும் செய்த கைங்கர்யத்தால் பதினைந்து நிமிடம் முன்னாடி போய் வானூர்தியில் உட்கார்வது எல்லாம் மலையேறிப் போயாச்சு.

இந்த மாதிரி ஊருக்கு முன்னாடியே கிளம்பி காத்திருக்கும் நேரத்தில் புத்தகக் கடையை மேய்வது ரொம்பவே பிடித்த விஷயம். மேக்சிம், எஃப்,எச்.எம், ஸ்டஃப் எல்லாம் வா…வா… என்று கிளுகிளுப்பூட்டினாலும், புதிதாக என்ன பிடித்திருக்கிறது என்று மேய்ந்ததில் http://www.complex.com/ & http://www.wallpaper.com/ ஈர்த்தது.

வடிவமைப்பு, செய்நேர்த்தி, உள்ளடக்கம், சொந்த சரக்கு, வித்தியாசம் காட்டி அடையாளப்படுத்துதல் என்று பல விதங்களில் கவர்ந்தது.

புத்தகத்திற்கு நன்றி நவிலலா? நன்றியுரைப்பதற்காக புத்தகம் எழுதலா?

ஃபேஸ்புக் தலைவி ஷெரில் சாண்ட்பெர்கு (Sheryl Sandberg) புத்தகம் எழுதியிருக்கிறார். அடுத்த மாதம் நான்காம் தேதி ப்ரூக்ளின் புக்ஸ்மித்தில் வாசகர்களை சந்திக்கிறார். புத்தகத்தின் பெயர் சாய்ந்து கொள் – (‘Lean In: Women, Work, and the Will to Lead’)

அமெரிக்காவில் எல்லோரும் புத்தகம் எழுதுகிறார்கள். நிறுவனத்தின் தலைவர், வக்கீலாக இருந்து நீதிபதியாக விரும்புபவர், நீதிபதியாக இருந்து அரசியல்வாதியாகப் போகிறவர், வழிப்போக்கர், ஆசிரியர், கணினி நிரலி எழுதுபவர், நிரலி எழுதத் தெரியாதவர்… சொந்த வாழ்க்கையை கொஞ்சம் வெளிப்படையாக எழுதத் தெரிந்தால் போதுமானது.

அதைப் புத்தகமாக எடிட் செய்து, கோர்வையாகத் தொகுத்து, உன்னத கோட்பாடுகளை வெளிக் கொணர்ந்து, வாசிப்பவருக்கு சுவாரசியமும் லட்சியப் பாதை வகுப்பதில் புத்துணர்ச்சியும் சாதனைகளுக்கான வழியும் கிடைக்குமாறு அமைத்து நியு யார்க் டைம்ஸ் பெஸ்ட்செல்லர் ஆக்கிவிடுகின்றனர்.

பேஸ்புக் அம்மணி எழுதியது அந்த வகை புத்தகம்.

‘பெண்களே… வீறு கொண்டு எழுக!’
‘நிற்காதே… ஓடிக் கொண்டே இரு’
‘தேங்கி விடாதே… தளும்பினாலும் கொட்டினாலும் பொங்குவது முக்கியம்!’
’சிறப்பாக செய்வதை விட, செய்து முடிப்பதே வீரருக்கு அழகு!’
’நீங்கள் எதற்கும் கவலைப்படாமல் இருந்தால், என்ன செய்து கொண்டிருப்பீர்கள்?’

இந்த மாதிரி ஆலோசனை + ஊக்க பூஸ்ட் எல்லாம் பில்லியன் டாலர் ஐ.பி.ஓ. கண்டு செட்டில் ஆனவர்கள் சௌகரியமாக சொல்லலாம்.

காந்திஜி சேஃப்டி பின் எடுத்து வைத்துக் கொண்ட நிகழ்வு போல் இந்தப் புத்தகத்திலும் எனக்கு ஒரு மேட்டர் கிடைத்தது. ஒன்பது பக்கத்திற்கு நன்றிகள் போட்டு இருக்கிறார். அது தவிர முன்னுரை, முகவுரை, பின்னுரை என்று தமிழ்ப் புத்தகங்களை மிஞ்சும் அளவு தெரிந்தவர்களையும் விமர்சகர்களையும் நெஞ்சு நக்கியிருக்கிறார்.

என்னுடைய நூலில் நிச்சயம் பத்து பக்கத்திற்காவது வந்தனம், வணக்கம், தோத்திரம், துதி பாடல் இருக்கும்.