Category Archives: Tamil Blog

நீலத்தில் இத்த்தனை நிறங்களா!

டா வின்சி ஓவியமான தி லாஸ்ட் சப்பர் மீது இசைக் குறிப்புகளை வைத்தால், அந்த ஏற்பாடு சிம்பொனி இசையை ஒத்திருக்கும். அந்த ஆபரா இசைக்கும்போது, யூடியுப் குறுஞ்சுருள் போன்ற 40 விநாடிகளில் இராகமாலிகை இன்னிசையை உருவாக்கும், இது கலை ஆர்வலர்களையும் இசைக் கலைஞர்களையும் ஈர்க்கிறது. இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இது டா வின்சியின் புகழ்பெற்ற படைப்பின் உற்சாகமான விளக்கமாகும்.

சொல்வனம் 330-ம் இதழ் இப்படிப்பட்ட இதழ்.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-330/

ஓவியம் போன்ற கவிதைக்காரருடன் நேர்காணல் – சந்திப்புகள் தரிசனம் ஆவது அபூர்வம் – அது இங்கே பூரணம். நன்றி நம்பி!
மூன்றே முன்று தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் – ஒவ்வொன்றும் சீலைச்சித்திரம். அகநானூறு அந்தக் காலம்; சொல்வனம் 400 இந்தக்காலம்.
ஆலமும் நீலம்; கங்கையும் நீலம்; காதுகள் மட்டும் நீல நிறமுடைய குதிரை சியாமகன்னம் – அது போன்று அருணாச்சலம் ரமணன் எங்கும் கண்ணஞ்சனம் இட்டு துலக்குகிறார்.
கமலதேவியில் ஔவையார் – பெருங்களிறு என்ற படிமத்தை விவரிக்கிறார்.
அரிதான விஷயங்களை தமிழுக்குக் கொணரும் மைத்ரேயன் – முக்கியமான இன்னொரு ஆக்கத்தை மொழியாக்குகிறார்.

நீலத்தில் இத்தனை நிறங்களா!

உங்களின் #1 இடுகை என்னவென்றால் – என்னுடைய ஜெய் மஹேந்திரன் அறிமுகமும் ஆய் கதைகளும் என்று சொல்வீர்கள் என நம்புகிறேன்.

டாலி “மனநோய்-விமர்சனம்” என்னும் ஓவிய முறையைஉருவாக்கினார், அவரின் மிகையதார்த்தவாத படங்களை ஊக்குவிப்பதற்காக தன்னை ஒரு சுய-தூண்டப்பட்ட, மாயத்தோற்ற நிலையில் வைப்பார். அப்படியெல்லாம் திரிபுணர்வாகாத சகுனங்களும் சம்பவங்களும் – 5 : வாசித்து விடுங்கள்.

இந்தியாவில் இருந்து வந்தோர் எவரை ஆதரிக்கிறார்கள்?

இந்தியாவில் வசிக்கும் இன்னொரு தமிழரின் பார்வை:

“கமலாவா டிரம்பா என்பதை விட வெல்லப்போவது இலான் மஸ்க், பாலாஜி ஸ்ரீனிவாசன் முதலியவர்களின் conviction-ஆ அல்லது அமெரிக்காவின் (டிவி) ஊடகங்களின் கணிப்பு (எ) பிரசாரமா என்பதில்தான் எனக்கு அதிகம் சுவாரசியம்! என்னுடைய மற்றுமொரு கணிப்பு என்னவென்றால் அமெரிக்கவாழ் இந்தியர்கள் டிரம்ப் வருவதை (அவர் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரானவர் என்பதனாலேயே) விரும்பவில்லை. கமலாம்மா இந்தியர் என்பதைக் காட்டிலும் டிரம்ப் வந்தால் என்ன பண்ணித் தொலைவாரோ (னோ) என்பதுதான் அவர்களின் கவலையாக உள்ளது.”
———-

இனி என் பார்வை:

அமெரிக்க இந்தியர் கொள்கைப் பற்றாளர் கிடையாது.
அமெரிக்க இந்தியருக்கு மூன்றே குறிக்கோள்:
1. பணம் – பங்குச் சந்தையில் காசு பார்த்தல்
2. குழந்தை – அவர்களை ஒரு வழியாக்குதல்
3. சோம்பேறி – ஓய்வு, டிவி, வம்பு பேசுதல்

அவர் செங்கொடி ஏந்தி சித்தாந்தத்தைத் தூக்கிப் பிடித்ததில்லை.
அவர் அரியணையில் அமர்ந்து மார்கஸ் அரேலியஸ் (Marcus Aurelius) மாதிரி ‘தியானங்களின் சுருக்கம்’ சிந்திப்பதில்லை.
அவர் அரசியல் பற்றி கவலைப்படாத நடுத்தர வர்க்கம்.

அவருக்கு தங்கம் வேண்டும். திருட்டு டிவி வேண்டும். கிசுகிசு வேண்டும். கிளுகிளுப்பு வேண்டும். முகப்புத்தகமும் இன்ஸ்டா ரீலும் வேண்டும். விஜய்யும் அஜீத்தும் வேண்டும்.
சொல்லப் போனால் தமிழ்நாட்டில் வசிப்பதாகவே நினைப்பு.
அவருக்கு தமிழக அரசியல் விவரமாகத் தெரியும். அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கையோ உக்ரெயினுக்கான உதவிக்கான பின்புலமோ அறிய வேண்டிய ஆர்வமோ தேவையோ இல்லாத ஜந்து.

புலம் பெயர்ந்தோருக்கு எதிரானவர் டிரம்ப் என்பதே ஆதிசங்கரரை ‘மாயாவாதி’ எனத் திட்டுவது போல் அர்த்தமற்றது.
சட்டபூர்வமாக உள்நுழைந்தோருக்கு குடியுரிமை தருவதற்கு தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும் கமலா ஹாரிசும் இழுத்தடிக்கிறார்கள்.
அந்த மாதிரி எச்1.பி., பி1 விசாக்களில் வந்தவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் சட்டு புட்டென்று குடியுரிமைத் தருவதாக விவேக் ராமசாமியும் டொனால்ட் டிரம்ப்பும் உறுதியளிக்கிறார்கள்.

எல்லோருக்கும் இருபது டாலர் குறைந்த பட்ச ஊதியம் தருவதாக கமலா ஹாரிஸ் வாக்குறுதி அளிக்கிறார்.
அது வாங்க முடியாமல் அல்லாடும் அப்பாவி அத்துமீறி ஊடுருவல்வாதிகளை, அவர்களின் சொந்த ஊருக்கே திருப்பி அனுப்புவதாக வாக்குறுதி அளிக்கிறார் டிரம்ப்.

கமலா வழிப்படி பார்த்தால் ஏழைகளை உறிஞ்சும் சக்தி டெமொகிரட்ஸ் தான்.
டிரம்ப் வழிப்படி பார்த்தால் சட்டபூர்வமாக வசிப்போருக்கு சரியான சம்பளம் வரும் பாதைக்கான கால்கோள் இடுபவர் ரிபப்ளிகன் தான்.

முழு ராஜ்ஜியமும் கையில் இருந்த போதும் துப்பாக்கிகளைத் தடை செய்யும் திட்டமோ, புவி வெப்பமயமாதலைக் குறைக்கும் சட்டமோ இயற்றாத ஒபாமா போன்ற ஹாரிஸை நம்பும் இந்திய வம்சாவழியினர் அதிகம்.
அவர்கள் மாற்றத்தை விரும்பாதவர்கள்.
ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால் பங்குச் சந்தை சரியாது. பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும். ஆள் குறைப்பு நடக்காது.
நேற்று போல், நாளையும் இருக்கும்.

டிரம்ப் வந்தால் களை பிடுங்கப்படும். அரசாங்க ஊழியர் முதல் கடைநிலை இட்லி கடை எல்லோரும் ஓராண்டிற்காவது சிரம தசைக்கு உள்ளாவார்கள்.
ட்ரம்ப் ஆதரவாளர்கள் இந்த அறுவை சிகிச்சையை விரும்புகிறவர்கள்.
குற்றங்கள் குறைய வேண்டும் என நினைப்போர் டிரம்ப் பக்கம். குழந்தைகளுக்கு அறியா வயதிலேயே பாலியல் கல்வி கூடாது என நினைக்கும் பழமைவாத கலாச்சார காவலர்கள் டிரம்பின் பக்கம்.
முந்தா நாள் போல் நாளையும் இருக்கும்!

Generalization is the mother of all screwups.

ஜனாதிபதி 2024 – யாருக்கு ஏன் ஓட்டு?

நேற்று சரவணன் கேட்டிருந்த கேள்வி #1 : நீங்க யாரை ஆதரிக்கிறீங்கன்னு புலப்படவே இல்லையே…

முதல் கேள்வி எளிமையான விடையைக் கொண்டது.

என் வாக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத மாநிலத்தில் வசிக்கிறேன். நான் ஹாரிஸுக்கோ டிரம்ப்பிற்கோ வாக்களித்தாலும் – எங்கள் ஊரில் 100% ஜெயிக்கப் போகிறவர் கமலா ஹாரிஸ்.

மாஸசூஸட்ஸ் – முழுக்க முழுக்க டெமொகிரட்ஸ் சார்பு மாகாணம். 60-65 விழுக்காடு ஜனாதிபதியாக கமலாவையே விரும்புகிறார்கள். திரளாக ஆதரவைச் சொல்லிவிடுவார்கள்.
பாஸ்டனில் இரவு எட்டு மணிக்கு வாக்களிப்பு முடியும். அடுத்த நிமிடமே பாஸ்டனில் துணை ஜனாதிபதி, தேர்தலில் வென்றதாக கணித்து முடிவை திட்டவட்டமாகத் தெரிவித்து விடலாம்.
அமெரிக்காவில் இருக்கும் 50 மாநிலங்களில் 42/43 – இந்த மாதிரி ரகம்.

அப்படியானால், நம் வாக்கை உருப்படியாக எப்படி மாற்றுவது?

எனவே, நான் மூன்றாம் கட்சிப் பிரியன். லிபரேடேரியன் (libertarian) – சேஸ் ஆலிவர் (Chase Oliver) நிற்கிறார்.

இவர் ஓரினச்சேர்க்கையாளர். அந்த மாதிரி சமூகக் கொள்கைகளில் டெமொகிராட் போல் தோன்றுவார்.
போர் வேண்டாம் என்கிறார். பொருளாதாரம் தழைக்க கம்மியான சட்டதிட்டங்கள் போதும் என்பார். இதில் ரிபப்ளிகன் போல் தோன்றுவார்.
முக்கிய இரு கட்சிகளுக்கு மாற்று தேவை. எங்களைப் போன்ற சிறு ஆதரவாளர்கள் மட்டுமே மாற்று சக்தியாக, புதிய மக்கள் குரலாக விளங்குவார்கள். அவர்களுக்கு ஐந்து சதவிகிதமாவது வாக்கு விழ வேண்டும்.

தாராளவாதம் எனலாம். முற்போக்கு கட்சி எனலாம். கன்சர்வேடிவ் எண்ணங்கள் கொண்ட பழமைவாத ரிபப்ளிகன் சித்தாந்தத்திற்கு மாற்று – லிபரல் வேட்பாளர்.

இரண்டாம் வினாவிற்கான பதிவு, இன்னும் ஆழமாகச் செல்ல வேண்டியது: ”இந்திய diaspora யாரை ஆதரிக்கிறது ?”

நீங்கள் அமெரிக்காவில் வாக்குரிமை பெற்றவரா? எவருக்கு உங்கள் வாக்கு?

கமலா ஹாரிஸ் என் ஜெயிக்க வேண்டும்?

நேற்றைக்கு டானால்ட் ட்ரம்ப் ஏன் வென்று விடுவார்.

இன்றைக்கு துணை ஜனாதிபதி வென்றால் என்ன நடக்கும்?

1. சட்டவிரோதமாக குடிபுகுந்தோருக்கு மன்னிப்பு; கள்ள்த்தோணியில் பின்வாசல் வழி நுழைந்தோருக்கு வேலைவாய்ப்பு; குறைந்த பட்ச ஊதியத்தில் உழைக்கும் வந்தேறிகளுக்கு குடியுரிமை + வாக்குரிமை சட்டங்கள். பென்சில்வெனியா, நெவாடா, விஸ்கான்சின், மிச்சிகன், வட கரோலினா, ஜியார்ஜியா, அரிசோனா – எல்லாவற்றிலும் டெமோகிராட் வாக்கு 2026ல் இரட்டிப்பாகும்.

2. பொர்த்தோ ரிக்கோ-வும் வாஷிங்டன் டி.சி. (கொலம்பியா மாவட்டமும்) மாகாணங்களாக அமெரிக்காவுக்குள் நுழையும், தற்போதைய ஐம்பது மாவட்டங்கள் 52 ஆக அதிகரிக்கும். டெமோகிரட்சுக்கு நாலு செனேட்டர்கள் ஜாஸ்தி கிடைப்பார்கள்.

3. இரான் நாட்டின் கைவிலங்கும் கால்தளையும் தளர்வுறும். இஸ்ரேல் நாடு கட்டுக்குள் கொணரப்படும். காசா பாலஸ்தீனமாக தனி நாடாக உருவாகும். உக்ரெயின் போர் இன்னும் அமர்க்களமாகத் தொடரும். கமலாவிற்கு அமைதிக்கான நோபல் தரப்படும்.

4. சீனாவின் ஷி ஜின்பிங் தன் பலத்தை பரிசோதிப்பார். வட கொரியாவை தகாத செயலுக்குத் தூண்டுவார். இந்த சோதனை பலபரீட்சையாக தாய்வான் நாட்டிலும் தெற்காசியாவிலும் ரத்தகளறி ஆகும். இந்தியாவையும் இந்த போரின் பாதிப்புகள் தொடும். அகண்ட வங்காளம் அல்லது சுதந்திர மேகாலயா அமையும்.

5. அணு சக்திக்கு ஜே! காற்றாலைகளுக்குப் பச்சைக் கொடி!! சூரிய ஆற்றல் அனைத்து வீடுகளுக்கும் ஆலைகளுக்கும் சென்றடையும் திட்டம். நிலக்கரிச் சுரங்கம் போன்ற புதைபடிம எரிபொருள்கள் முற்றிலும் மூடப்படும். சுத்தமான தூயசக்தி மட்டுமே அமெரிக்காவில் கிடைக்கும். புவி வெப்பமாதல் குறையும்.

6. LGBTQIA+ – தற்பாலினத்தவர், இருபாலீர்ப்பு, மாற்றுப் பாலினத்தவர், ஊடுபால், பால்புதுமையர், அல்பாலீர்ப்பு குறித்த பாடங்கள் மூன்றாம் வகுப்பிலேயே பள்ளிக்கூடத்தில் சொல்லித்தரப்படும். குழந்தைகளின் குழப்பங்களை பெற்றோர் அறியாமல் பார்த்துக் கொள்ளப்படும். மருவிய பால் என நினைப்போருக்கான அறுவை சிகிச்சை ரகசியமாக, இலவசமாக செய்யப்படும்.

7. லிஃப்ட், ஊபர், போல்ட், ஓலா, டோர்டாஷ் போன்ற அலுவல்சாரா பகுதிநேரத் தொழிலாளர்களுக்கு சங்கம் அமைக்கப்படும். டாக்ஸியை அழைப்பதற்கும் ஊபரைக் கூப்பிடுவதற்கும் எந்தப் பெரிய வித்தியாசமும் இல்லாமல் போகும். ஹோட்டல் அறைக்கும் ஏர்பிஎன்பி வீட்டிற்கும் எந்த வித பாகுபாடுகளும் இன்றி ஒரே மாதிரி அனுபவம் ஆகிவிடும்.

8. மருந்துகளின் விலை இன்னும் எகிறும். வீடற்றோருக்கும் நலிந்த சமூகத்திற்கும் சேமநலம் தாராளமாக்கப்படும். அனைவருக்கும் சிகிச்சை; எந்த நோய்க்கும் வைத்தியம் என்பது பணம்படைத்தோருக்கு மட்டுமல்லாமல், சாதாரணருக்கும் சாத்தியமாகும்.

9. ப்ராஜெக்ட் 2025 நிறைவேறாது. எங்கும், எதிலும் அரசாங்கத் தலையீடு; செவ்வாய் செல்லும் ஏவூர்தி, செயற்கை நுண்ணறிவு முதல் வேண்டப்பட்ட குணாதிசய மரபணுவால் அமைக்கப்பட்ட குழந்தைகள் வரை தொழில்நுட்பம் சுதந்திரமாக உலாவரும் சீனா முன்னேறிய நாடாகி விடும்.

10. இதெல்லாம் செய்ய வேண்டும் என ஆசைப்படுவார்; மசோதாக்களும் கொண்டு வருவார்; கொள்கை பரப்பும் செய்வார். ஆனால், காங்கிரசும், செனேட்டும், உச்சநீதிமன்றமும் எதையும் செய்ய விடாது. அரியணையில் பொம்மையாக வீற்றிருப்பார்.

ட்ரம்ப் ஏன் ஜெயித்து விடுவார்?

  1. ஏற்கனவே லோக்சபா (காங்கிரஸ் எனப்படும் ஹவுஸ் ஆஃப் ரெப்ரசேண்டேடிவ்ஸ்) அவரின் கட்சி கைவசம். செனேட் எனப்படும் மேல்சபையிலும் அவர்களே பெரும்பான்மை ஆகப் போகிறார்கள். ஜனாதிபதியும் ரிபப்ளிகன் ஆக இரண்டாண்டுகளாகவது இருக்கட்டும் என மாற்றம் வேண்டுவோரின் வாக்கு விழும்.
  2. வந்தாரை வாழவைக்கும் அமெரிக்கா – இப்பொழுது வந்தேறிகள் மேல் ஆத்திரம் கலந்த கலக்கத்தில் இருக்கிறது. கமலா இந்தியர் – புலம்பெயர்ந்தோர் தானே!? என எண்ணுவோரின் வாக்கு ட்ரம்பிற்குக் கிடைக்கும்.
  3. எங்கே பார்த்தாலும் வாய்க்கால் தகராறு; உலகெங்கும் குட்டி குட்டி சண்டைகள்; உக்ரெயின், இரான், இஸ்ரேல், சூடான், ஜோர்டான், லெபனான் – முடியலடா சாமீ. நிம்மதியா இருக்கணும்னா டொனால்டு வேணும்.
  4. வங்காளத்தில் போர் வேண்டாமா? மேகாலயா தனி நாடாக வேண்டாமா? தய்வான், கொரியா, மியான்மர், மாலி என உலகெங்கும் சின்னச் சின்ன சின்னாபின்னங்கள் உதயமாக வேண்டாம் என நினைக்கும் அமைதிப் பிரியர்களின் ஓட்டு டிரம்பிற்கு விழும்.
  5. பென்சில்வெனியா, நெவாடா, விஸ்கான்சின், மிச்சிகன், வட கரோலினா, ஜியார்ஜியா, அரிசோனா – எல்லாவற்றிலும் ஆண் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ‘என் இனமடா!’ வர்க்க வங்கி.
  6. காசு… பணம்… .துட்டு… மணி… மணி – நான்காண்டுகளுக்கு முன்பு பணவீக்கம் இப்படி கேவலமாக இல்லை. வேலையில்லா நிரந்தர அன்றாடங்காய்ச்சி திரிசங்கு தொங்கல் இல்லை. அப்பொழுது நல்லா இருந்தோம் என நினைக்கும் வெள்ளையினத்தோரின் ஆதரவு.
  7. குழந்தைகளை தகாத இடத்தில் தொடுபவர் பைடன்; எப்ஸ்டெயின் போன்ற மாமாக்களோடு லீலை நடத்தியவர்கள் டெமொகிரட்ஸ்; ஆட்சியில் இருந்தபோதே அராஜகம் செய்தவர் பில் க்ளிண்டன். ட்ரம்ப் அப்படியெல்லாம் அனுமதியில்லாமல் அத்து மீறாத அழகிய அமெரிக்கமகன் என நினைக்கும் பெண்டிர்.
  8. ஐம்பதாண்டுகள் முன்பு கருப்பர்கள் இருந்த நிலை என்ன… பெண்கள் ஒழுங்காக வேலைக்கு போகாமல் வீட்டில் சமைத்து போட்ட காலம் திரும்ப வருமா! நனவோடையில் மூழ்கிய ‘பழைய நெனப்புதான் பேராண்டி’ வாக்காளர்கள்.
  9. ட்ரம்ப் செய்யாத தவறு கிடையாது; மாட்டாத இடம் இல்லை; அவரின் அந்தரஙம் என்று தெரியாத எந்தப் புதிரும் இல்லை. அவர் பொல்லாதவன் + போக்கிரி + பில்லா II வேண்டும் என நினைப்போர்
  10. துணை ஜனாதிபதியாக கடந்த நான்காண்டுகளாக என்னக் கிழித்து விட்டார் கமலா ஹாரிஸ் என கடுப்பானோர்.

கொசுறு: இப்பொழுது இந்தக் கருப்பர் ஜெயித்தால் மிஷேல் ஒபாமா ஜெயிக்க வாய்ப்பு கிட்டாது என நினைக்கும் உள்வட்ட உயர்மட்ட குழு. கிடைக்கிற வரைக்கும் கொடுக்கிற காசை வாங்கி வைத்தால் ஈரண்டு கழித்து அடுத்த தேர்தலுக்கு அன்னை மிஷேலுக்கு உதவுமே!

சொல்வனம் #329 – அக். 2024 இதழ்

சொல்வனம் இதழின் தீபாவளி இதழ் வெளியாகி இருக்கிறது.

இந்த தீபாவளி சிறப்பிதழை அறிவியலுக்கான இதழ் எனச் சொல்லலாம்.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-329/

அறிவியல் பகுதிக்கான ஆலோசகர் அருணாச்சாலம் ரமணன் – புத்தம்புதிய பகுதியை ஆரம்பிக்கிறார்.

முக்கியமான ஆராய்ச்சிகள். நேற்றைய ஆய்வுத்தாள்கள்; சுருக், நறுக் அறிமுகம்.

சொல்வனத்தில் மகரந்தம் என்றும் நிரந்தரம்.

தீபா ராம்பிரசாத் தன்னுடைய சிறப்பான தேர்வை மீண்டும் நிரூபிக்கிறார். அவர் எடுத்த கதை சுவாரசியம் + புதுமை. அவசியம் தவற விடாதீர்கள்.

‘அதிரியன் நினைவுகள்’ மஹா காவ்யம். அதை முழுக்க முழுக்கத் தமிழுக்குக் கொணர்ந்து விட்டார் நாகரத்தினம் கிருஷ்ணா. தமிழில் என்றுமே அசல் இலக்கியவாதிகள் எக்கச்சக்கம் ஆக அமைதியாக செயல்பட்டு செழுமையாக்குகிறார்கள் என்பதற்கு இந்த மொழியாக்கமும் பிரெஞ்சுத் தமிழரும் உதாரணம் + இலட்சியம்.

வெங்கட் ரமணின் பத்திகள் தமிழுக்குக் கிடைத்த கொடை. அவரின் ‘காலம் எரித்ததும், கணினி மீட்டதும்’ நியு யார்க்கர் போன்ற இதழ்களில் வரும் அசல் கருத்து + பிரத்தியேக ஆராய்ச்சி கொண்ட ஆக்கங்களுக்கு சற்றும் சளைத்ததல்ல. அவரைப் பார்த்து எழுத வந்தவன் நான். டொரொண்டோ வெங்கட்டிற்கு நன்றி.

நானும் ‘சகுனங்களும் சம்பவங்களும்’ நான்காம் பகுதி தந்திருக்கிறேன். வாசித்து உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்.

மற்ற ஆக்கங்களை வாசித்து முடிப்பதற்குள் அடுத்த இதழைக் கொணர்ந்து விடுகிறார்கள்.

எதை எடுப்பது!? எதை வாசிப்பது!? எதைப் பகிர்வது!!!

நீங்களே பதில் போடுங்க… வாசகர் கடிதங்களும் உண்டு : )

  • 1. ஆராயும் தேடலில் – அறிவியல் சிந்தனை அருணாச்சலம் ரமணன்
  • 2. கிருஷ்ண லீலை – சார்பினோ டாலி
  • 3. காலம் எரித்ததும், கணினி மீட்டதும் – வெங்கட்
  • 4. 1941 ஆண்டின் குளிர்காலம் – அமர்நாத்
  • 5. நிற(ப்)பிரிகை – பானுமதி ந
  • 6. விதைகளின் பயணம் – பெத் கோடர் – தீபா ராம்பிரசாத்
  • 7. மழைக்காலம் – ஆமிரா
  • 8. அதிரியன் நினைவுகள்-46 யூர்செனார்
  • 9. நேர்கோணல் – மர்ஸல் துஷா (Marcel Duchamp) – ஆர் சீனிவாசன்
  • 10. வாழ்க தலைவரே! – ஜெகதீஷ் குமார்
  • 11. ஆக்கன் ஊற்றுப்பட்டை – விவேக் சுப்ரமணியன்
  • 12. மிளகு-81 – இரா. முருகன்
  • 13. பெருங் கூத்தின் நெடுந்துயர். – ரவி அல்லது.
  • 14. ஆரன்யக் நாவலை நாம் 21ம் நூற்றாண்டில் ஏன் வாசிக்க வேண்டும்? – நிர்மல்
  • 15. டால்ஸ்டாய் புக் ஷாப் – தமிழ் கணேசன்
  • 16. சகுனங்களும் சம்பவங்களும் – 4 பாஸ்டன் பாலா
  • 17. ராகவேனியம் 2024 – நூருத்தீன்
  • 18. தாமஸ் செக்கின் ‘தி கேடலிஸ்ட்’: ஆர்என்ஏ-வும் அதன் அதிதிறன்களும் – அருணாச்சலம் ரமணன்
  • 19. பட்டியலில் 12வது நபர் – தேஜு சிவன்
  • 20. ஜப்பானியப் பழங்குறுநூறு 95-96 – கமலக்கண்ணன்
  • 21. கருப்பு எஜமானி – இ. ஹரிகுமார் – தி.இரா.மீனா
  • 22. கவிதைகள் – அரா
  • 23. குமார சம்பவம்-13 – ஜானகி க்ருஷ்ணன்
  • 24. சகுனியாட்டம் – ஆர் வத்ஸலா கவிதைகள்
  • 25. யாதேவி – பானுமதி ந
  • 26. வாசகர் கடிதங்கள்

சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு மடைதீ உறுக்கும் வன்னி மன்றம்

நீங்கள் இலக்கிய கூட்டங்களுக்குச் சென்றதுண்டா?
அந்த எளிமையான அனுபவத்தை இந்தப் புனைவு பகிர்கிறது.

சமீபத்தில் பாஸ்டனில் ரமணன் சார் நடிப்பில் எஸ்.பி. க்ரியேஷன்ஸ் தயாரிப்பில் ‘பாரதி யார்’ நாடகம் அரங்கேறியது.
அது அற்புதமான காட்சி + உணர்வு + பாக்கியம்!

ஆனால், அதில் கூட இந்தக் கதையில் வரும் நிகழ்வுகள் போல் சில பல நடந்தன.
எனவே, கதை எனக்குக் கவர்கிறது; ரசிக்க வைக்கிறது.

அழகியசிங்கர் நடத்தும் ‘நவீன விருட்சம்’ சந்திப்பு.
’குவிகம்’ அமைப்பு கூடும் வாசகர் ரசனை கூட்டம்.
எதற்காக நீங்கள் அந்த அமைப்பின் சபைகளுக்குச் செல்கிறீர்கள்?
உங்களுக்கு அவை ஊற்றுக்களமாக அமைகிறதா?

ஜாலிலோ ஜிம்கானா!
டோலிலோ கும்கானா!!

பி.கு. #1: கதை எழுதியவரை எனக்குத் தெரியாது.
பிகு. #2: கதையை வாசித்து விட்டு கோட்பாடு ரீதியாக வாசிப்பவருக்கு @ஃபாலோயர், @ஹைலைட் எல்லாம் எரிதமாக அனுப்பப்படும்.

“அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும்
வெள்ளில் பாடையும் உள்ளீட்டு அறுவையும்
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்
நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும்
யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை”

Manimegalai | 6. சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை

நெருப்பு எடுத்து வந்த சட்டிகளும், நீர் தெளிக்கும் பானைகளும், சிதைந்த பாடைகளும், கிழிந்த துணிகளும் (அறுவைகள்), பிணத்திற்கு அணிந்து களையப்பட்ட மாலைகளும், அதற்கு இடப்பட்டு சிதறிக்கிடக்கும் வாய்க்கரிசி முதலியவையும், உடைக்கப்பட்ட கொள்ளிக் குடங்களும், இறைக்கப் பட்ட நெல்லும் பொரியும் எங்கும் சிதறிக் கிடக்கின்றனவாம்!!

இப்படியாக இந்த சுடுகாட்டின் காட்சிகளை மணிமேகலா தெய்வம், மணிமேகலையாம் காப்பிய நாயகிக்கு கூறிக் கொண்டே மனிதர்களின் விசித்திர மனப்பான்மையை இகழ்ந்தும் உரைக்கிறது.

ஒத்தக் குடிச அவுட்டரிலும் கொடுக்கலியே எங்களுக்கு

நேற்றோடு நவராத்திரி + தசரா முடிவு.

இன்றோடு நோபல் பரிசு அறிவிப்பு முடிவு.

முதலில் இதைக் கொண்டாட வேண்டும் என்று அருணாச்சலம் ரமணன் முன்மொழிந்தார்.

பானுமதி, காரைக்குடி சுபா, ஜெகதீஷ், நட்பாஸ் எல்லோரும் அதை முன்னெடுத்தனர்.

மருத்துவம், பௌதிகம், வேதியியல், இலக்கியம், சமாதானம், பொருளியல் – ஒவ்வொரு நாளும் சொல்வனத்தில் சுடச்சுட விரிவான, விவரமான கட்டுரை.

இன்று பணக்காரர்கள் ஏன் மேலும் பெருஞ்செல்வந்தர்களாக ஆகிறார்கள் என்பதை எளிமையாகச் சொன்னவர்களுக்கான விருது குறித்த விமர்சனம் வெளியாகி இருக்கிறது.

பரிசு பெற்றவர்களின் கருத்தோடு ஒப்புக் கொள்கிறீர்களா?

ஒரு நாடு உள்கட்டமைப்பைக் திட்டமிட்டு, கல்வியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, ​​வளங்கள் எவ்வாறு ஒதுக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க சந்தை விலையைப் பயன்படுத்தினால், அது வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. இது நோபல் பெற்றவர்கள் முன்மொழியப்பட்டதை விட தெள்ளத் தெளிவைக் கொண்டுள்ளது, காலப்போக்கில் என்ன நடந்தது என்பதற்கான உண்மைகளுடன் பொருத்தமாக இருக்கிறது. – பில் கேட்ஸ் பார்வை

ந. பானுமதி பார்வை:

வரலாற்று அதிர்ச்சிகளை எதிர்கொள்வதற்கும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை அம்பலப்படுத்தற்குமான தீவிரமான கவிதை உரைநடை

”பொற்குகை ரகசியம்” எழுதிய ஜெகதீஷ் குமார் நோபல் பரிசு பெற்ற ஹான் காங் என்னும் எழுத்தாளரை அறிமுகம் செய்கிறார்.

இரண்டே மணி நேரம்தான் கெடு. அதற்குள் அப்படி ஒரு அடர்த்தி; அதே சமயம் எளிமை; எந்தவித சமரசங்களும் அவசரமும் இல்லாத அற்புதமான விருதுக் குறிப்பு!

இப்படிப்பட்ட எழுத்தாளர்கள் இருப்பது தமிழுக்குக் கிடைத்த கொடை. புனைவிலும் பின்னுகிறார்கள். விமர்சனங்களிலும் மிளிர்கிறார்கள். மொழியாக்கங்களுக்கும் சளைத்தவர்கள் அல்ல.

இலக்கியம் இனி நிறைய வளரும். வியுற்பன்னர்கள் நிறைய உருவாகும் தமிழ்.

மகிழ்ச்சி!

வேட்டையன் வ.கே.கே.

1. இது ரஜினி படமா?
ஆமாங்க… அப்படித்தாங்க தலைப்பிலும் முன்னோட்டத்திலும் சொல்லிக் கொள்கிறார்கள்

2. அனிருத் இசை எப்படி?
ரஜினி படத்துக்கு யார் இசையமைச்சாலும் ஒரே மாதிரிதானே இருக்கும்! தர்பார் மாதிரி, ஜெயிலர் மாதிரி… ஒரே மாதிரி!

3. படம் எப்படி இருக்கு?
ரஜினி வெறியர்னா பல முறை பார்க்கலாம். இயக்குநர் ஞானவேல் பிரியர்னா இரண்டு முறை. சினிமா தாகம் கொண்டவர்னா நீலச்சட்டை மாறன் அலுக்கும் வரை.

4. உங்களுக்கு படம் பிடிச்சிருந்ததா?
நான் ப்ரியா முதல் லிங்கா வரை எல்லாமே நல்லா இருந்ததா நெனக்கிறவன். அவர் நடிச்சா அது ஆஸ்கார்.

5. அபிராமி?
முத்தமென்றால் கமலின் விருமாண்டி..
நடிப்பென்றால் ரஜினியின் வேட்டையன்.
நினைப்பென்றால் ஹம்மா… ஹம்மா (மிடில் கிளாஸ் மாதவன்)

6. வெள்ளித்திரையில் ஓடுமா?
தீபாவளிக்கு சன் டிவி.
கிறிஸ்துமசுக்கு அமேசான்.
அதன் பிறகு ஐபிடிவி.

7. இது யாருடைய படம்?
ஃபாஹத் ஃபாசில் மீண்டும் மீண்டும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னப்படும் என்பதை நிரூபிக்கும் படம்.

8. கதையும் வசனமும்?
அதெல்லாம் ரஜினி படத்தில் தேவையா என்ன? இருந்தாலும் ஓரிரண்டு ‘பேட்ட’ போன்ற அரிதாரங்களும் ’உன்னையக் கட்டிப் பிடிச்சுக்குவேன்; இல்லே வெட்டி சரிச்சுடுவேன்’ போன்ற அண்ணாத்த பன்ச்கள் கூட இல்லாதது ஞானவேலின் திமிர் கலந்த அலட்சியம்.

9.படம் உங்களுக்குப் பிடிக்கலையா?
இந்தியன் 2 போன்ற ஷங்கர் கொடுமைகளுக்கு இதெல்லாம் கோடி தரம் மேல். மெக்காலே என்பவர் இந்திய நவீனக் கல்வியின் பிதாமகன் என்பதெல்லாம் கோடி தரம் புளித்துப் போன பிரச்சாரம். படம் வேலை செய்வது இந்த இரண்டு துருவ உச்சநிலைகளுக்கு நடுவே எங்கேயோ கேட்ட குரல்.

10. லிங்கா போல்… பாபா போல் இருக்கிறதா?
அதெல்லாம் மசாலா. இது தீபாவளி லேகியம்.