I suppose it is submerged memories that give to our dreams their curious air of hyper-reality. But perhaps there is something else as well, something nebulous, gauze-like, through which everything one sees in a dream seems, paradoxically, much clearer. A pond becomes a lake, a breeze becomes a storm, a handful of dust is a desert, a grain of sulfur in the blood is a volcanic inferno. —W. G. Sebald, The Rings of Saturn
செபால்ட் எழுத்துக்களின் அடிநாதம் நினைவுகள். பழைய விஷயங்களை நினைவில் வைத்திருப்பதால் சித்திரவதைக்குள்ளாவோம். அதனால், பழையதை மறக்க எத்தனிக்கிறோம். ஆனால், நடந்ததை மறப்பதால் எவ்வளவு பெரிய கொடூரத்தை அரங்கேற்றுகிறோம்?
அவரின் ஆஸ்டர்லிட்ஸ் நாவல் முழுக்க ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைகிறது. இடங்களும் மனிதர்களும் மனிதர்களின் வாழ்க்கைக் கதைகளும் அவர்களின் அனுபவங்களும் இடறி, அகஸ்மாத்தாகவோ அல்லது வலிந்தோ தட்டுப்பட்டு உரசிக் கொண்டேயிருக்கின்றன. அதுவும் எனக்கு இது நடந்ததாக நான் சொல்லும்போது, அந்த சம்பவத்தின் மாந்தர்கள் கிடைக்கிறார்கள். நான் சொல்லும் வார்த்தை என்னும்போது அந்த நிகழ்வின் உண்மைத்தன்மை உணரப்பட்டு ஆவணப்படம் போல் உரைக்கிறது.
செபால்ட் எழுத்துக்களைக் குறித்த அறிமுகத்தையும் சீபால்ட் குறித்த விமர்சனங்களின் மொழிபெயர்ப்புகளையும் தாங்கி இந்த சொல்வனம் இதழ் வெளியாகி இருக்கிறது.
“It seems to me then as if all the moments of our life occupy the same space, as if future events already existed and were only waiting for us to find our way to them at last, just as when we have accepted an invitation we duly arrive in a certain house at a given time.”
கதைசொல்லி என்பவர் சில சமயம் செபால்ட்; பல சமயங்களில் செபால்டுக்கே கதை சொல்லுபவர்
அந்தக் கதைசொல்லி அலைபாயும் தன்மை கொண்டவர்; மற்றவரின் அந்தரங்கங்களை அனுசரணை கலந்த பரிவுடன் அணுகுபவர்.
நாவலில் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவிக் கொண்டேயிருக்கும் போக்கு
ஸெபால்டின் கதைக்களன் அனைத்தும் ஐரோப்பாவையும் அதன் வரலாற்றையும் மட்டுமே சுற்றி வருபவை.
அவரின் எழுத்தில் பத்திப் பிரிவினைகள் எதிர்பார்க்கக் கூடாது.
ஒப்புமைகள், உருவகங்கள், உவமானங்கள் கிடையாது. வெறும் நேரடி.
புகைப்படங்கள் நிறைந்திருக்கும்; கருப்பு-வெள்ளை நிழற்படங்கள் அவை; அந்தப் படங்களுக்கு எந்த அடிக்குறிப்பும் இராது; அவை தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தும்.
யோர்ஹே லூயி ஃபோர்ஹே (Jorge Luis Borges) அவரின் ஆதர்சம்
செபால்ட் படிக்கும்போது கோணங்கியின் கல்குதிரை படிப்பது போல் இருக்கலாம். அவரின் வாசகங்கள் சுழல்பவை; ஆரம்பித்த இடத்திற்கு திரும்ப வருபவை; பிரதிபலிக்கும் கண்ணாடி போல் நிகழ்வை சொல்பவை. கதை கொஞ்சம் முன்னே நகர்வது போல் தோன்றினாலும் நடந்த அந்தக் கால விஷயத்திற்கே கவனத்தைக் கோரி திரும்பத் திரும்ப பழைய காலத்திற்கு கொண்டு நிறுத்துபவை.
“We learn from history as much as a rabbit learns from an experiment that’s performed upon it.”
When you turn the corner
And you run into yourself
Then you know that you have turned
All the corners that are left.
–Langston Hughes, poet and novelist (1 Feb 1902-1967)
he Miriam and Ira D. Wallach Division of Art, Prints and Photographs: Art & Architecture Collection, The New York Public Library. (1858). Barber shaving a man’s head bald, one onlooker, white building in the background Retrieved from http://digitalcollections.nypl.org/items/1e520e70-8a8e-0131-2755-58d385a7bbd0
சந்துமுக்கில் திரும்பும்போது
என் மீதே மோதிக்கொண்டேன்
இப்பொழுது புரிகிறது, திரும்பிவிட்டேன்
இனி எந்த மூலையும் பாக்கி வைக்கவில்லை.
அறிதிற மங்கல் (cognitive dissonance) என்றால் என்ன? நினைப்பது ஒன்று; ஆனால், வெளிப்படையாக சொல்வதோ இன்னொன்று என்று செயல்படும்போது வாய்க்கும் தொண்டைக்கும் நடுவே இடறும் அசௌகரியம் – இதுவே உள்ளொன்று நம்பிக்கை வைத்து புறமொன்று அரசியல் சரிநிலையாகப் பேசும் அவலத்தை நினைத்து கூனிக் குறுகுதல் எனலாம்.
ஒரு உதாரணம் பார்ப்போம். உங்களுக்கு அவசரமாக ஒரு போராட்டத்திற்குச் செல்ல வேண்டும். அது லஞ்சத்தையும் ஊழலையும் தட்டிக் கேட்கும் அறவழிப் போராட்டம். செல்லும் வழியில் ஆட்டோ பிடிக்கிறீர்கள். அவரோ மீட்டருக்கு மேல் பத்தோ இருபதோ கேட்கிறார். சரியான நேரத்தில் நீங்கள் செல்லாவிட்டால், போராட்டம் ஒழுங்காக நடக்காது. ஆட்டோக்காரர் செய்வதும் அக்கிரமமே. அவரைத் தட்டிக் கேட்டு, புகைப்படம் பிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்து, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், அப்போதைக்கு ‘ஆட்டோ டிரைவரும் பொதுஜனம்தானே!’ என்று சமரசம் செய்து, அவரின் அடாவடியை அமைதியாக ஒப்புக்கொண்டு, கையூட்டு தருவது அறிதிற மங்கல்.
அறிவாற்றல் என்றால் கற்றுக் கொள்ளும் திறனும், அவ்வாறு கற்பதினால் நம் பார்வைகளைக் காலப்போக்கில் மாற்றிக்கொள்ளும் திறனும் எனலாம்.
அமெரிக்க ஜனாதிபதிகளில் வெகு சிறப்பாக செயலாற்றியவர்களைப் பார்த்தால், பெரும்பாலானோர் திறந்த சிந்தனை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். இடதுசாரி, வலதுசாரி வித்தியாசம் இல்லாமல் திறந்த மனதிற்கும் செயலூக்கத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது.
ஆபிரஹாம் லிங்கனை எடுத்துக் கொள்ளுங்கள்: கறுப்பர்களைக் கொத்தடிமையாக வைத்திருப்பதற்கு ஆதரவாக தன் அரசியல் பயணத்தைத் துவங்கியவர், பிற்காலத்தில் அவர்களின் விடுதலைக்கும் குடியுரிமைக்கும் மிகப் பெரிய போராளியாக மாறினார்.
அடுத்தது எஃப்.டி.ஆர். எனப்படும் ஃப்ராங்க்ளின் டெலானோ ரூஸ்வெல்ட்: பட்ஜெட்டை சமன் செய்வேன் என்றும், பற்றாக்குறையைப் போக்குவேன் என்றும் வாக்குறுதி கொடுத்து ஜெயித்தவர். தலைவரான பிற்பாடு, அவருடைய புது ஒப்பந்தம் மூலமாக பற்றுக்கணக்கை பன்மடங்கு ஊதிப் பெருக்கினார்.
“I have forced myself to contradict myself, in order to avoid conforming to my own taste.”
– Marcel Duchamp
“நானே எனக்கு நண்பனில்லையே…
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே!”
– வைரமுத்து
கார்ஸன் கழிமுகம் கவிதையை பார்க்கும்போதே கடற்கரையைப் பார்ப்பது போல் இருக்கும். சில சமயம் ஜோராகத் தெரிகிறது. சில சமயம் காணாமல் போய் விடுகிறது. கண்ணில் பார்க்கும் எல்லாவற்றையும் விவரிக்கிறார்.
பார்ப்பதை புரிந்துகொள்வதுதானே மூளையின் வேலை? மனிதரின் மனதில் உதிக்கும் எண்ணங்களும் இயற்கையோடு உறவாடும் சிந்தனைகளும் எங்கு ஒருங்கிணைகின்றன? இந்தப் படைப்பே இயற்கையின் படைப்பா அல்லது அறிவால் உதித்த கற்பனையா?
இயற்கை என்றால் இயற்கை எய்துவதும் இயற்கையின் பங்குதானே… எப்போது மரணம் வரும் என்று சொல்ல முடியாதபடி சடாரென்று மரணம் நிகழும். அதுபோல் சுற்றுப்புறச் சூழலும் பாதிப்படைந்து மரணம் அடையுமா? அல்லது மெல்ல மெல்ல நச்சுப்பொருள் போட்டு உடலில் பாதகம் வருவது போல் இயற்கையும் மெதுவாகத்தான் இறக்கிறதா?
பார்ப்பதையெல்லாம் எவ்வளவு தூரம் உணர்ந்து அறிந்து வைத்திருக்கிறோம்?
இந்த ஆக்கத்தை தேர்ந்தெடுத்தவருக்கும், மொழியாக்கம் செய்தவரும் நன்றிகள்.
நான் யோசிக்க விரும்புகிறேன் (எவ்வளவு
சீக்கிரமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது!)
தன்னியக்க கட்டுப்பாட்டில் இயங்கும் பசும் புற்றரை
அங்கே பாலூட்டிகளும் கணினிகளும்
ஓருவருக்கொருவர் ஒத்தாசையாக ஒன்றாக
நிரல்நெறி இணக்கத்துடன்
நன்னீர் போல்
நிர்மலமான வான்வெளியைத் தொடும்.
நான் யோசிக்க விரும்புகிறேன்
(தயவு செய்து… இப்போதே!)
தன்னியக்க கட்டுப்பாட்டில் இயங்கும் வனாந்திரம்
கற்பகதரு மரங்களும் கணிப்பொருள்களும் நிரம்பியிருக்க
மனக்கவலையின்றி மான்கள் சஞ்சரிக்க
கணிப்பொறிகளைக் கடந்தால்
அங்கே கான்முகம் போல்
சுழலும் மொட்டுகள் அரும்பும்.
நான் யோசிக்க விரும்புகிறேன்
(அப்படித்தான் இருக்கவேண்டும்!)
தன்னியக்க கட்டுப்பாட்டில் இயங்கும் சுற்றுப்புறச் சூழியல்
நம் பயனில் வேலையில் இருந்து விடுதலை கிட்ட
இயற்கையுடன் மீண்டும் இணைய
நாம் பாலூட்டியாக திரும்ப மாற
சகோதரன்களும் சகோதரிகளுமாய் இருக்க
அன்பான கிருபை கொண்ட கருவிகள்
அனைவரையும் கண்காணிக்கும்.
என் குறிப்புகள்
இந்த ஆக்கம் 1967ல் எழுதப்பட்டது. அப்போது உடோப்பியக் கனவுகள் இருந்தால் சரி. கம்ப்யூட்டரும் காட்டு விலங்குகளும் கைகோர்த்துக் கொண்டு சந்தோஷமாய் வாழுகின்றன என்று எண்ணியிருக்கலாம்.
ஐம்பதாண்டுகள் கழித்துப் பார்த்தால், மனிதன் + முதலியம் ==> முடிந்தவரை குப்பை போடுகிறது. தொழில்நுட்பம் என்பது வேவு பார்ப்பதற்கும், ஒற்றறிவதற்கும், ரகசியமாய் கண்காணிப்பதற்கும், அடுத்தவரின் பொருள்களைத் திருடுவதற்கும், உலகளாவிய உளவுக்கும் நேர்மையாய் இருக்கிறது.
மீண்டும் 1967ல் இருந்த நிலையைப் பார்க்கலாம். இணையம் கிடையாது, உலகளாவிய செல்பேசி பயன்பாடு கிடையாது. ருஷியாவுடன் பிரச்சினைகள் இருந்தாலும், இன்னுமொரு உலகப்போர் மூளும் அபாயம் கிடையாது. ஐஸிஸ் கிடையாது. எல்லோர் கையிலும் ஐபோன் கிடையாது. கணினிக் கழிவுகள் கிடையாது.
அந்தக் காலகட்டத்தில் பறக்கும் கார்கள், சூரியசக்தியில் ஓடும் வீடுகள், பசுமைப் புரட்சி, கூட்டுறவு என நினைத்து எழுதியிருப்பார். இன்று?
ஒரு ஊருக்குப் போகாமலேயே அந்த ஊரைப் பற்றி கட்டுரை எழுதுவது அநியாயம் என்பது பாரிஸ் நகருக்கு சென்ற பிறகுதான் உதித்தது. லூயிக்கள் குறித்தும், மேரி ஆண்டொனெட் பட விமர்சனங்களும், புரட்சிப் போராட்டங்கள் விவரணையும், சார்கோசி அரசியலும் எழுதி இருக்கிறேன். அசலூர்க்காரன் அந்தப் பதிவுகளை படித்திருந்தால், ‘Autobiography of a Yogi’ படிப்பது போன்ற அசட்டுத்தனம் கலந்த ஆய்வுரையாக எடுத்துக் கொண்டிருப்பார்.
ஒரிரு வருடங்களாவது அந்தந்த நகரத்தில் தங்க வேண்டும். உள்ளூர் மக்களோடு மக்களாக அன்றாடம் புரளவேண்டும். அவர்களோடு நேர்ந்து ‘அமூர்’ போன்ற பிரென்சு படங்கள் பார்த்து திரைப்பட அறிமுகம் எழுதுவதற்கும், அமிஞ்சிகரையில் இருந்து கொண்டு சொந்த அனுபவத்தை வைத்தும் துணையெழுத்தின் தயவிலும் எழுதுவது சினிமாப் பார்வையாக இல்லாமல் தனிநபர் நனவோடையாக மட்டுமே மிஞ்சி விடுகிறது.
பாரிசின் மூத்திர வாசமும், நதிக்கரைகளில் இரவு பன்னிரெண்டு மணிக்கு அணி திரளும் மக்களுடன் மிதமாக தண்ணியடிக்கும் கொண்டாட்டமும், பூங்காக்களில் படைக்கலன் போல் மிகுதியானவர்கள் வாரநாள் மதியம் படுத்து சூரியக்குளியல் அனுபவிக்கும் மனப்பான்மையும், ராஜாக்களை சிரச்சேதம் செய்ததை வெற்றித் திருவிழாவாக்கும் எண்ணமும் ரிமோட் கண்ட்ரோலிலும் புத்தக வாசிப்பிலும் என்றும் உறிஞ்ச முடியாது.
கட்டுரை அசலாக வெளிவந்த சொல்வனம்.காம் தளத்திற்கு நன்றிகளுடன்
ஐஐடியிலும் ஐஐஎம்மிலும் நான்கு வருடம் படித்து தேறி வருபவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்வது ஒரு ரகம். பிளஸ் டூ முடித்தவர்களை அப்படியே அள்ளிக் கொண்டு போய், தனக்கு வேண்டியதை மட்டும் சொல்லிக் கொடுத்து, வியாபர நுணுக்கத்தின் தேவைக்கு ஏற்றவாறு பாடங்களை வடிவமைத்து, அனுபவமும் இரண்டு சொட்டு சேர்த்து, தன் நிறுவனத்தின் நெளிவு சுளிவுக்கேற்ப வளைய வைத்து வார்ப்பெடுப்பது இன்னொரு கலை.
ஐபிஎம் (IBM), எச்.பி. (HP), டெல் எல்லாம் முதல் ரகம். அமேசானும் ஃபேஸ்புக்கும் முன்னேறும் இரண்டாவது ரகம்.
முதல் ரகத்தில் நம்பகத்தன்மை இருக்கும். கடுமையான பரீட்சைகளுக்குப் பிறகு தேர்வாகி வெளியில் வந்தவற்றையே நாம் வாங்குகிறோம். ஃபேஸ்புக்கிலோ ஒரு தடவை ஸ்டேட்டஸ் அப்டேட் போட்டுப் பார்ப்போம். இரண்டு நிமிடம் கழித்தும் அது தோன்றாவிட்டால், அதையே மீண்டும் போடுவோம். இரண்டு தடவை வந்தால் கூட பரவாயில்லை.
ஆனால், எச்.பி.க்களை பெருவிலை கொடுத்து வாங்கிப் போடும் வங்கிகளில் இந்த மாதிரி இரண்டு தடவை வரவு கழித்தலோ பற்று கூட்டலோ கூடவே கூடாது. தரம் இங்கே அதிமுக்கியம்.
முதலாம் ரக ஐபிஎம்-களில் முஸ்தீபுகள் அதிகம். முதலீட்டு செலவு நிறைய ஆகும். பரிசோதனை எல்லாம் செய்யாமல், முன் வைத்த காலை பின் வைக்காமல் நுழைய வேண்டும். நேற்று ஆர்குட்; இன்றைக்கு கூகிள் பிளஸ்; நாளைக்கு கிரோம் என்று மாறும் தட்பவெப்பத்திற்கேற்ப ஆய்வகமாக, இரண்டாவது ரகம் இயங்குகிறது.
அயலாக்கம் x கிளைத் துவக்கம்
1990களின் இறுதியில் அமெரிக்க நிறுவனங்கள் அவுட்சோர்சிங்கைக் கண்டு பயப்படாமல் களத்தில் குதித்த காலம். அதுவரை “இந்தா பிடிச்சுக்கோ! இருநூறு டாலரோ… முன்னூறு டாலரோ!” என்று கணக்கு பார்க்காமல் இன்ஃபோசிஸ்களுக்கும் விப்ரோகளுக்கும் டி.சி.எஸ்.களுக்கும் அள்ளி விட்டுக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச காலம் சென்றபின் “இதே வேலையை உங்க நாட்டில் போய் செய்தால், இரண்டு சதவீதம் தள்ளுபடி கிடைக்குமா?” என்று பேரம் பேசினார்கள்.
புது நூற்றாண்டு பிறப்பதற்கு முன் பழைய உத்தி, தூசி தட்டப்பட்டு மறு வாழ்வு கண்டது. அன்று பருத்தி ஆலை ஏற்றுமதி; காலணித் தொழிற்சாலைகளை சீனாவிலும் தெற்காசியாவிலும் துவங்குதல்.
இப்பொழுது கணினி நிபுணர்களுக்காக இந்தியாவிலேயே கிளை தொடங்குதல். பெரு நிறுவனங்கள், தொழில் நுட்ப முதலாளிகள் என்று எந்த வட்டத்திற்குள்ளும் அடங்காமல், அனைத்து மேற்கத்திய பிரகிருதிகளும், இந்தியாவில் கணினி நிபுணர்களைக் கொண்டிருக்கிறார்கள்.
இடைத்தரகர் வேண்டாம்; காண்ட்ராக்டர்களை, மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்த வேண்டாம்; பொட்டி தட்டுபவர்களும் விட்டேத்தியாக இல்லாமல், பொறுப்பாக இருப்பார்கள்.
நிரலி எழுதுபவர்களிடமே இந்தப் பரிவு என்றால்…
இப்பொழுது அந்த நிரலிகளை இயக்கும் சர்வர் என்றழைக்கப்படும் அளிப்பான்கள்களுக்கும் – முழு வடிவமைப்பும் உள்கட்டுமானமும் கொண்டு இயங்க நினைக்கிறார்கள்.
முதலீடு முடக்கம் x சில்லறை வணிகம்
ஆயிரம் ஹெக்டேருக்கு அரிசியும் பணப்பயிரும் விதைப்பார்கள். இப்பொழுது ஆப்பிள் போடுகிறார்கள். ஐபோன், ஐபேட் பயனர்களுக்கு ஐக்ளௌட் (மேலும் வாசிக்க: http://solvanam.com/?p=14812) தருகிறது ஆப்பிள். நமது புகைப்படங்கள், விழியங்கள், டாரெண்ட்டில் தரவிறக்கிய திரைப்படங்கள் எல்லாவற்றையும் இணையத்தில் சேமித்து வைக்கலாம்.
ஆப்பிள் மட்டுமல்ல… மைக்ரோசாப்ட், அமேசான், கூகிள் போன்றோர், என்னைப் போன்ற நுகர்வோருக்கு இந்த வசதியை செய்து தருகிறது. என்னை வேலைக்கு வைத்திருக்கும் பெரு நிறுவனங்களுக்கு இதே வசதியை அதே நிறுவனங்களும் ராக்ஸ்பேஸ், சேல்ஸ்ஃபோர்ஸ் போன்றோரும் சினிமாஸ்கோப் முப்பரிமாண பிரும்மாண்டமாக இயக்குகிறார்கள்.
இதில் என்ன வசதி?
அ) ‘வை திஸ் கொலவெறி டீ’ வெளியாகும் சமயத்தில் திடீரென்று அளிப்பான்களின் தேவை அதிகமாகிறது. உடனடியாக, விநாடிகளில் அளிப்பான்களைக் கூட்டலாம்; குறைக்கலாம்.
ஆ) புதிதாக வெளியிடும் நிரலிகளை, சோதித்துப் பார்க்கலாம்.
இ) பத்தாயிரக் கணக்கில் செலவு செய்யும் முதலீடு கிடையாது. பத்து டாலர் தள்ளினால் போதுமானது. அதிவிரைவு அளிப்பான்கள், ஆயிரம் கொடுப்பார்கள். சிறுவணிகர்களுக்கு கந்து வட்டியில் கணினிகள் வாங்கும் நிலையை விட்டு விடுதலை.
மேகம் – கிளவுட்
2000-ம் ஆண்டு வருகிறது… y2k என்று ஓடினார்கள்; அவுட்சோர்சிங் செய்தால் மட்டுமே சேமிக்க முடியும் என்று ஓடினார்கள்; எல்லோரும் செல்பேசி கொண்டே இயங்குகிறார்கள் என்று ஐபோன் அப்ளிகேஷனுக்கு ஓடினார்கள்.
இன்றைய தாரக மந்திரம் – கிளவுட்.
விண்டோஸ் கொண்ட கணினி வேண்டுமா? எத்தனை வேண்டும்? எவ்வளவு நாளுக்கு வேண்டும் – மேகத்திற்கு செல்லுக.
என்னது… விண்டோஸ் எல்லாம் வேண்டாம். நூறு இண்டெல் சில்லு கொண்ட சக்தி மட்டுமே வேண்டுமா? – மேகத்திற்கு வருக.
எனக்கு தேவதர்ஷினி நாயகியாகக் கொண்ட சீரியல் பிடிக்கும். கே பாலச்சந்தர் இயக்கினால் நல்லது. ஜெயமோகனின் காடு நாவலை கதையாகக் கொண்டிருக்க வேண்டும்; ஆனால், அவரின் வசனம் இயல்பாக இருக்காது; பா ராகவனை வசனம் எழுத வையுங்கள். என்னால் இந்த வாரம் மட்டும்தான் பார்க்க முடியும். என்னிடம் கேபிள் கிடையாது. எனவே, ஐந்து நாளைக்கு மட்டும் தூர்தர்ஷனில் ஒளிபரப்புங்கள் என்று கேட்பது போல் எதை வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும், எப்பொழுது தேவையோ அப்பொழுது வாங்கிக் கொள்ள விழைகிறீர்களா – கிளவுடுக்கு வாங்க.
நீங்கள் மாதத்திற்கொருமுறை மதுரையில் இருந்து சென்னை சென்று வருகிறீர்கள். அதற்காக பேருந்தை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனால், தினசரி திண்டுக்கல் வரை போய் வந்தால், டூ வீலராவது சொந்தமாக வைத்துக் கொள்வோம்.
அன்றாடம் ஏதாவது பயன் இருக்குமா? – வாங்கிப் போடு.
என்றாவது எதற்காவது மட்டுமே உபயோகமா? – வாடகைக்கு எடு.
எச்.பி.யிடத்திலும் ஐ.பி.எம்.மிடத்திலும் எங்களுக்கு இந்த மாதிரி தேவை. இதற்கு ஏற்ற மாதிரி வண்டி செய்து கொடு என்று கேட்டு கேட்டு, அலுத்துப் போன ஃபேஸ்புக், அமேசான்கள், தாங்களே டாட்டா நானோக்களை வடிவமைத்ததுடன், அவற்றை வாடகைக்கும் விடுகிறார்கள்.
கலிபோர்னியா பக்கம் அளிப்பான்களின் பலு அதிகரிக்கிறதா? பலு அதிகரித்தால் அளிப்பான்களின் உஷ்ணம் உச்சத்தை அடையும். உஷ்ணம் அதிகரித்தால், குளிரூட்டிகளின் வேலையும் அதிகரிக்கும். குளிரூட்டிகளினால், மின்கட்டணமும் எகிறும்.
அளிப்பான் அறையில் கிட்டத்தட்ட ஒரு டிகிரி பாரன்ஹீட் ஏறினால், மின்கட்டணத்தில் நான்கு சதவிகிதம் ஜாஸ்தி கட்டவேண்டிய நிலை. அதற்கு பதிலாக, அளிப்பான்களின் வேலையை இன்னொரு ஊருக்கு திசை திருப்பி அனுப்பி வைக்கும் நுட்பத்தை கூகிள் கையாள்கிறது.
சாதாரணமாக பக்கத்து ஊருக்குப் போ; அங்கே இருக்கும் அளிப்பான்கள் மூலமாக தகவல் அனுப்பு. ஆனால், பக்கத்து ஊர் அளிப்பான் அறையில் வெப்பம் ஏறி விட்டதா? கொஞ்சம் தள்ளிப் போய், அடுத்த கட்ட அளிப்பானிடமிருந்து தகவல் பெற்றுக் கொள்.
இரண்டு லட்சம் வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை கூகிள் மட்டுமே பயன்படுத்துகிறது. இந்த நுட்பத்தினால் மட்டும் பில்லியன் கணக்கில் மின்கட்டணம் குறைகிறது.
அதற்குள்ளே இண்டெல் அல்லது ஏ.எம்.டி. (AMD) சில்லுகள்; அவற்றிற்கு ஊட்டம் கொடுக்க கிராஃபிக்ஸ் கார்டுகள்; அதை இயக்க, சக்தி கொடுக்கும் மின்விசை அளிப்பு; இவற்றை எல்லாம் காற்றோட்டமான பெட்டியில் அடைக்கும் அடிச்சட்டம்; அதை அடுக்கு அடுக்காக கட்டு கட்டாக வரிசைப்படுத்தும் வடிவமைப்பு; இதற்கான மின்சார திட்டம்; குளிர்காலத்தில் வெப்பமும், கோடை காலத்தில் குளிரூட்டமும் தரும் சூழல்; மின்கட்டணம் எகிறாத கட்டிடக் கலை ஆக்கம்.
இவையனைத்தும் தொலைதூரத்தில் இருந்து நிர்வகிக்கும் வல்லமை; தொல்லை தராமல் கூட்டவும் குறைக்கவும் மாற்றவும் முடியும் திறமை.
இவ்வளவு நுட்பங்களையும் பொதுவில் வைத்திருக்கிறது ஃபேஸ்புக். (மேலும்: http://opencompute.org/)
சரவண பவனுக்கு சென்றால் சகலமும் கிடைக்கும். கொஞ்சமாய் பசிக்கிறதா? மதியம் இரண்டு மணிக்குக் கூட இட்லி சாப்பிடலாம். இன்னும் கொஞ்சம் பசியா? மினி மீல்ஸ் கிடைக்கும். அகோறப் பசியா? அன்லிமிட்டட் சாப்பாடு உண்ணலாம்.
ஆனால், பக்கத்து சந்தில் மாமி மெஸ் இருக்கிறது. திங்கள் கிழமை என்றால் தோசையும் சட்னியும் சாம்பாரும் மட்டுமே கிடைக்கும்; செவ்வாய் போனால் சப்பாத்தி + தால். வெரைட்டி இல்லாவிட்டாலும், மாமி மெஸ் ருசியே தனி.
முதல் பாணியில், சரவண பவன் போல் சகல வசதிகளுடனும் எச்.பி., டெல் போன்ற வணிகர்கள் சர்வர் கொடுக்கிறார்கள். இட்லிக்கும் அதே சாம்பார்; சாதத்திற்கும் அதே சாம்பார் என்பது மாதிரி விண்டோஸ் ஆஃபீஸ் இயக்குவதற்கும் அதே சர்வர்; ஆரக்கிள் டேட்டாபேஸ் இயக்குவதற்கும் அதே சர்வர்; ஆங்ரி பேர்ட்ஸ் விளையாடுவதற்கும் அதே சர்வர்.
வீட்டு சாப்பாடு மாதிரி தினம் தினம் மாறும் வேண்டுதலுக்கேற்ப, ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஸ்பெஷலாக செய்து தரும் சர்வர் நுட்பத்தை ஃபேஸ்புக் விரும்புகிறது.
என்னுடைய நண்பர்களின் ஸ்டேட்டஸ் எனக்குத் தெரிய வேண்டும். கடைசியாகப் பார்த்த இடத்தில் இருந்து பார்க்கக் கிடைத்தால் போதுமானது. பத்து மாதங்களுக்கு முன்பு ஜூலையில் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதை பெரும்பாலும் தினசரி தேடிக் கொண்டிருக்க மாட்டேன். நேற்று என்ன நடந்தது என்பது க்விக்காக திரையில் தோன்ற வேண்டும். பழையதைத் தேடி வினவினால், பொறுமையாகக் காத்திருக்கும் தயார் நிலையில் இருப்பேன்.
எச்.பி., டெல் ஆகியோர் நேற்றைய விஷயத்தைத் தேடினாலும் அதே நேரம்; பத்து வருஷம் ஆகிப் போனதை விசாரித்தாலும் ஒரே நேரம் என்று கட் அண்ட் ரைட்டாக பேசுகிறார்கள். ஃபேஸ்புக்கிற்கும் கூகிளுக்கும் இது தோதுப்படவில்லை. தாங்களே சமைத்து, அதற்கான ரெசிப்பியையும் உலகுக்கு ஓதுகிறார்கள்.
பங்குச்சந்தையில் ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்கிற்கு இது ஐ.பி.ஓ. எனப்படும் (மேலும்: http://online.wsj.com/article/SB10001424052970203935604577066773790883672.html) பங்குச்சந்தையை நாடும் காலம். அதற்காக பல அஸ்திரங்கள். ஒரு புறம் வாடிக்கையாளர் எண்ணிக்கை பலத்தைக் காட்டுகிறது. இன்னொரு புறம் அந்த வாடிக்கையாளர், எத்தனை மணி நேரம் ஃபேஸ்புக்கிலேயே கட்டுண்டு கிடக்கிறார் என்று புள்ளிவிவரம் திரட்டுகிறது. அதே சமயம், இது தவிர எங்களிடம் நில புலம் போன்ற அளிப்பான் – கடல் போல் அசையா சொத்தாக குவிந்து கிடக்கிறது என்பதையும் முன்வைத்து, முதலீடு கோருகிறது.
அது சரி… இத்தனை அளிப்பான்கள் எதற்கு தேவை?
இன்றைக்கு எல்லோரும் பேஸ்புக்கை நாடுகிறோம். பாமாயில் கொடுக்கும் ரேஷன் கடை க்யூவாக, பேஸ்புக்கில் புதிதாக என்ன கருத்து வந்திருக்கிறது, எங்கே குழு அமைகிறது என்று பழியாய் கிடக்கிறோம். ஆனால், நாளைக்கே கூகிள் பிளஸ் என்று வேறு எங்காவது சென்று விட்டால்?
அந்தக் காலத்தில், உங்களில் பழைய தகவல், அப்பொழுது வலையேற்றிய நிழற்படங்கள், உளறிய கருத்துகள், விரும்பிய லைக் தொகுப்புகள் எல்லாவற்றையும் பத்திரமாக சேமித்து வைத்து, விளம்பரதாரர்களிடம் விற்க நினைக்கிறது ஃபேஸ்புக்.
750 மில்லியன் வாடிக்கையாளர்களின் நுணுக்கமான விவரங்கள், காலங்காலமாக ஒருங்கிணைக்கத்தான் இத்தனை அளிப்பான்கள்.
ரகசிய அளிப்பான் x திறமூல கணினி
ஃபேஸ்புக்கிற்கு தேவையான மென்பொருளை ஃபேஸ்புக் எழுதிக்கொள்கிறது. அப்படியானால், பேஸ்புக்கிற்கு தேவையான வன்பொருளை மட்டும், ஏன் ஐ.பி.எம்.மும், ஆரக்கிளும், எச்.பி.யும், டெல்லும் செய்துதர வேண்டும்?
தாங்கள் எழுதும் மென்பொருளுக்கு ஏற்ற வன்பொருள் வழங்கியை வடிவமைக்க விரும்புகிறார்கள். வன்பொருள் நிறுவனங்களான டெல், எச்.பி. போன்றோர், பொதுவான வழங்கிகளையே தயார் செய்கிறார்கள்.
ஒரே அளவில் அனைத்து உள்ளாடைகளையும் தயார் செய்து, சீனாக்காரரிடமும் கொடுக்கிறார்கள்; அமெரிக்காவின் போஷாக்கானவர்களிடமும் கொடுக்கிறார்கள். எப்படி பொருந்தும்?
2004களிலேயே இந்தப் பிரச்சினைகளை கூகிள் எதிர்கொண்டது. வண்ணமயமாக, விருப்பத்திற்கேற்ப, பயன்பாட்டுகேற்ப, வன்பொருள் வளைந்து கொடுக்க வடிவமைக்க ஆள் போட்டார்கள். தாய்வானுக்கும் தாய்லாந்துக்கும் ஆளனுப்பி சி.பி.யூ முதல் மதர்போர்டு வரை கொள்முதல் விலையில் சல்லிசாக வாங்கினார்கள்.
அமெரிக்காவில் ஆயிரமாயிரம் ஏக்கர் நிலம் வாங்கி, வழங்கிப்பண்ணைகளுக்கு கூகிள் கால்கோள் இட்டது.
அண்ணன் எவ்வழி; பேஸ்புக் அவ்வழி என்று அளிப்பான்-பண்ணைகளை, இப்பொழுது ஃபேஸ்புக்கும் துவங்கி இருக்கிறது.
தங்களின் சிட்டிவில், ஃபார்ம்வில், ஜாம்பிலாண்ட் போன்ற விளையாட்டுகளுக்கான நுட்பத்திற்கேற்ற கணினி வடிவமைப்பு; ஐபோனில் முகப்புத்தகம் தெரிவதற்கான சிற்ப்பு வழங்கி வடிவமைப்பு; செய்தியோடை மற்றும் மாற்றுத் தளங்களில் பகிர்வதற்கான அளிப்பான் வடிவமைப்பு என்று செயல்பாட்டுகேற்ப மாற்றியமைத்து தெரிவு செய்கிறார்கள்.
இவற்றையெல்லாம் கூகிள் போல் கமுக்கமாக வைக்காமல், பகிரங்கமாக படம் போட்டு விளக்குகிறார்கள். எழும் பிரச்சினைகளை பிரசங்கம் செய்கிறார்கள். நாலு பேர் எட்டு விதமாக தீர்வு கொடுக்கிறார்கள். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, அடுத்த தலைமுறைக்கான வழங்கிநுட்பத்தை மேம்படுத்துகிறார்கள்.
அப்படியானால், எச்.பி., டெல் போன்ற கணினி வன்பொருள் நிறுவனங்களின் கதி? அவர்களும் இதே போன்ற வழங்கி நுட்பத்திற்கு மாறலாம்; மேகதூதராக கிளவுட் கம்ப்யூட்டிங்கில் இறங்கலாம்.
ஃபேஸ்புக் அடிபற்றி, ஈ-பே, நெட்ஃப்ளிக்ஸ், சீனாவின் பைடூ, மொசில்லா எல்லாரும் இந்தப் பாதையில் காலடி வைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.
இன்னும் கூட உங்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லையா?
அமெரிக்க வீட்டுச்சந்தை வீழும் என்றும் மனை விற்பகத்திற்கான கடன் ஏமாற்றப்படும் என்றும் ஆருடம் சொல்லி, அந்த ஆருடத்தின் மீது ஊகச் சந்தையில் பந்தயம் கட்டிச் சூதாடி பெரும்பணமும் ஈட்டிய கோல்ட்மன் சாக்ஸ் இந்த ஓபன் கம்ப்யூட் – திறமூல வழங்கி நுட்பத்தில் பிரதான இயக்குநராக சேர்ந்துள்ளது போதாதா?
இணையத்தில் திருடுவதும் அதைத் தடுப்பதற்குமான சட்டம் குறித்து சமீபத்தில் வாசித்த சுவாரசியமான கட்டுரை: சங்கைப் பிடிக்கும் சோபா (SOPA)
நல்ல படத்தை துணையெழுத்து மட்டும் படித்துவிட்டு காட்சியமைப்பையும் நடிகர்களின் உடல்மொழியையும் பின்னணி இசைக்கோப்பையும் தவறவிடுவோம். அந்தளவிற்கு துணையெழுத்துகளில் இலக்கியம் உண்டு. தமிழ்ப்படங்களின் தரமான வசனத்திற்கும், அதை எட்ட வைக்கும் தூரத்தில் வைத்திருக்கும் சப் டைட்டில்காரர்களுக்கும் நன்றி.
என்னுரை
Caption for the hearing impaired என்பதற்கும் Sub-titles என்னும் பிரிவிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. முன்னதில் வீட்டுக் கதவு திறந்தாலும், மங்கல் இசை ஒலித்தாலும், கார்கள் மோதிக் கொண்டாலும் கூட ஒலிக்குறிப்பு போடுவார்கள். பின்னது, எங்கெல்லாம் மொழி இடிக்கிறதோ, அங்கு மட்டும் மாற்றி, துணையெழுத்தாக இடுகிறார்கள்.
ஆக்சன் படத்திற்கு வசனம் எழுதுவது தனிக்கலை. அப்படி நறுக்குத் தெறித்தது போல் எழுதப்பட்ட வரிகளுக்கு மொழிபெயர்ப்பது இன்னொரு கஷ்டமான கலை. அதில் குழுஊக்குறி, உள்ளூர் பாஷை எல்லாவற்றையும் அயல்மொழிக்கு ஏற்ற பதமாக மாற்றுவது கிட்டத்தட்ட இயலாத காரியம்.
உரிமை துறப்பு:
இதை நான் பார்த்ததே திருட்டி டிவிடி. எனவே, இப்படி எல்லாம் குற்றங்கண்டுபிடிக்க அருகதை இல்லை என்பது உண்மை. எனினும், உலக அரங்கில், ஆஸ்கார் விருதுக்குழுவிற்கும் அர்த்தம் போய்ச்சேர வேண்டும் என்பதைத் தவிர எந்த விதமான கெட்ட எண்ணமும் இல்லை.
அப்படியாக கோ படத்தில் கிடைத்த சில
1. பேனர்கள், அறிவிப்பு பலகை, பதாகை, தோரண எழுத்து எல்லாவற்றையும் மொழிபெயர்ப்பது அவசியம். அப்படி பார்த்தால், கோட்டா ஸ்ரீனிவாச ராவ் அறிமுகத்தில் வரும்
‘அதிகார ஆட்சிக்கு முடிவுரை எழுத வரும் தலைவனே!’,
‘அறிவுக் குற்றாலமே’ போன்ற சுவரொட்டிகள் ஆங்கிலமாக்கம் பெறவில்லை.
2. அதே போல் ‘தினக்குரல்’ நாளிதழில் வரும் ‘புகைப்பட புதையல்’ போன்ற தலைப்புச் செய்திகளும் பிறமொழிக் காரருக்கு புரியாது. ‘சிறகுகள்’ துண்டுச்சீட்டு போன்றவையும் அடக்கம்.
3. பிரகாஷ்ராஜ்: கார்-ல போய்கிட்டே பேசலாம்
ஆங்கிலம்: ‘Follow me in the car’
4. டூயட் பாடல்களுக்கு வேண்டாம். ஆனால், அந்த சிறகுகள் தீம் சாங் மட்டுமாவது ஆங்கிலமாக்கம் செய்திருக்க வேண்டும்.
5. Naxels, IAT போன்ற பலுக்கப் பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்.
கோ போன்ற நல்ல படங்களுக்கு, அடர்த்தியான வசனங்களும் கொள்கைக் கோட்பாடுகளை விளக்கும் காட்சிகளும் அமைந்த வசனங்களுக்கு மொழிமாற்றுவது சாதாரணம் காரியம் அல்ல. செய்தவருக்கு வாழ்த்துகள்.
நான் ஒரு கவிஞனில்லை. கவிதையை மொழிபெயர்ப்பது எனக்குச் சிறிது துணிச்சலான காரியமாகவே படுகிறது. இருந்தும் ஃப்ராஸ்டின் கவிதைகளைப் படிக்காதவர்களை ஃப்ராஸ்ட்டுக்கு அழைக்க இந்த மொழிபெயர்ப்பு உதவும் என நம்புகிறேன்.
புல்வெளியை சுத்தம் செய்யச் செல்கிறேன்
இலைகளை மட்டும் பெருக்கிவிட்டு வந்து விடுவேன்
சில வேளை ஜலம் வடிவதைப் பார்த்துவிட்டு வருவேன்
அதிக நேரமாகாது — நீயும் வாயேன்
oOo
கன்றுக்குட்டியைக் கொண்டுவரப் போகிறேன்
அதன் அம்மாவின் பக்கத்தில்
நின்றுகொண்டிருக்கிறது – ரொம்பச் சின்னது
அம்மா அதை நக்கிக் கொடுக்கும்போது
தடுக்கி விசுகிறது
அதிக நேரம் ஆகாது — நீயும் வாயேன்
– ஆகஸ்ட் 1975
அசல்:
The Pasture by Robert Frost
I’m going out to clean the pasture spring;
I’ll only stop to rake the leaves away
(And wait to watch the water clear, I may):
I sha’n’t be gone long.—You come too.
I’m going out to fetch the little calf
That’s standing by the mother. It’s so young,
It totters when she licks it with her tongue.
I sha’n’t be gone long.—You come too.
திலீப்குமார் பாஸ்டன் பக்கம் எட்டிப்பார்த்து பல மாதம் ஆகிவிட்டது. நினைவில் இருப்பதை சேமித்து வைக்கும் முயற்சி.
தமிழ் எழுத்தாளன் வெளிநாட்டுக்கு சென்ற சம்பவம்: நடுவராகப் பணியாற்ற அயல்நாடு அழைத்திருக்கிறார்கள். நள்ளிரவில் கிளம்பும் விமானத்தில் பயணம். இரவு பத்து மணிக்கு வரும் தண்ணீர் லாரியில் இரு குடம் நிரப்பி மூன்று மாடிப்படி ஏறி வீட்டில் வைத்துவிட்டுக் கிளம்புவதாக திட்டம். வழக்கம் போல் அரை மணி நேரம் தாமதமாக வராமல் கால் மணிநேரம் மட்டுமே தாமதமாக தண்ணீர் கொடுக்கப்பட்டதால் விமானத்தைப் பிடிக்க முடிந்தது.
ஆசான் மௌனி? : நன்றி – (மெளனியின் படைப்புக்களின் இலக்கிய இடம்: ஜெயமோகன்) மெளனி மீதான முதல் முக்கிய விமரிசனம் இலக்கிய சிந்தனை அமைப்புக்காக திலீப் குமாரால் எழுதப்பட்டு அன்னம் விடுதூது இதழில் அச்சான கட்டுரைதான். அது பிறகு ‘மெளனியுடன் கொஞ்ச தூரம்’ என்றபேரில் நூலாக வானதி வெளியீடாக வந்தது. மெளனியை மிதமிஞ்சி பாராட்டுபவர்களையும் அவரை முற்றாக நிராகரிப்பவர்களையும் நிராகரிக்கும் திலீப்குமார்:
‘என்னைப்பொறுத்தவரை ஒரு தேர்ந்த வாசகன் இலக்கியத்தை அணுகும்போது பரபரப்புக்கோ புல்லரிப்புக்கோ ஆளாகமாட்டன் என்றே நம்புகிறேன். மாறாக இலக்கியத்தின் வரையறைகளையும் வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான இடைவெளியையும் உணர்ந்தவனாகவே அவன் இருப்பான்’.
நண்பன் அசோகமித்திரன்: தான் பார்த்த அன்றாட விஷயத்தை அ.மி. எப்படி மாற்றுப்பார்வை என்னும் நுண்ணிய கவனிப்பு கொண்டு தன் கருத்தை, தன்னுடைய ஆதங்கத்தை, சமூக கோபத்தை கனல் கக்காமல்; அதே சமயம் வீரியம் குறையாமல்; சத்தமாக மட்டும் பேசி அனல் அடிக்காத பேச்சுநடையில் பகிர்ந்த நிகழ்வுகளை சொன்னார். கசப்பு இருக்கும்; ஆனால் கசண்டு போகாத பார்வை.
பால்யகாலம்: கரடுமுரடான இளமை அமையாதவர்கள் நல்ல படைப்பாளியாக முடியாது என்னும் என் நம்பிக்கையை திலீப் உறுதி செய்கிறார். பெரும்பணத்தையும் ஏழ்மையையும் சடாரென்று சட்சட்டென்று உடனடியாக அனுபவித்தது; அணா அணாவாக சேர்த்து ஜெயகாந்தனின் ‘ஞானரதம்’ படிக்கும் இலக்கிய தாகம்.
திலீப் குமாரின் கோயமுத்தூர்: ஏதோ பேசிய ஞாபகம் இருக்கிறது. சொந்த விஷயமாக இருக்கும்.
கணையாழி: கணையாழியில் முதல் கதை வெளியான குதூகலம்; கைக்கு கிட்டிய சன்மானம், வாய்க்கு கிடைக்காத அவஸ்தைகள்; தொகுப்பது, இதழ்களை சேமிப்பது, பிடித்ததை பாதுகாப்பது என்று தொடரும் தமிழ் சேவை என நிறைய பகிர்ந்தார்.
‘க்ரியா’ பதிப்பகமும் ஜி நாகராஜனும்: பேராசிரியர் நாகராஜனின் மதுரைக் காலம், கதை எழுதும் விதம், நாவன்மை, பேச்சு சாமர்த்தியம், சென்னை விஜயங்கள்.
நாடகத்தில் அசோக மித்திரன்: அந்த நாடகத்தில் அவரும் துக்கினியூண்டு கதாபாத்திரமாக இருந்திருக்கிறார். ‘பரீக்சா’ குழு நாடகம் முடிந்த அடுத்த நாள் ‘போஸ்ட் மார்ட்டம்’ என்னும் தலைப்பில் அலசல் நடத்தும். பேருந்து நிலையத்தில் அமி.யைப் பார்த்த சகநடிகர், ‘நாளைக்கு போஸ்ட் மார்ட்டம் இருக்கு. வந்துடுங்க!” என்கிறார். ‘நாடகம் இறந்தால், செஞ்சுத்தானே ஆகணும்’, என்று துளிக்கூட சிரிப்பு வராத நகைச்சுவை.
‘மறுப்பதற்கு தைரியம் வேண்டும்’: ‘எதையும் ஒப்புக் கொள்வது சுலபமானது. “பேச வருகிறாயா?” என்றழைத்தவுடன் பிகு செய்து பின் வந்துவிடுவது; “எழுத இயலுமா?” என்றவுடன் கேட்டதை ஆக்கித் தந்துவிடுவது என்பது இயல்பு. கடினமான காரியமல்ல! ஆனால், “செய்ய மாட்டேன்!” என்று புறக்கணித்து ஒதுங்கிவிடுவது அனைவராலும் இயலாது’ என்றார்.
கவிதைக்கும் கதைக்கும் உள்ள வித்தியாசம்: தன்னுடைய அனுபவத்தை அப்படியே கொடுப்பது கவிதை என்று சொன்னதாக நினைவு. (சந்திப்பு முடிந்தவுடனேயே எழுதியிருக்க வேண்டும் 😦
மொழிபெயர்ப்பு பற்றாக்குறை: ‘தமிழில் வெளியாகியுள்ளதை ஆங்கிலத்தில் மொழியாக்குவது மிக மிகக் குறைவு. இல்லவே இல்லை என்று கூட சொல்லலாம். நோபல் போன்ற பரிசு இருக்கட்டும். குறைந்தபட்ச கவனிப்பு கிடைக்கவாவது நல்ல மொழிபெயர்ப்புகள் ஆயிரக்கணக்கில் செய்யவேண்டும். எத்தனையோ பொக்கிஷங்களும் எழுத்தாளர்களும் தமிழிலக்கியமும் வெளியே தெரியாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்’.
தேடல், அடுத்த புத்தகம், தொடரும் பயணம்: பாரதியாருக்கு முன் எவ்வகையான சிறுகதைகள் தமிழில் வெளியாகியுள்ளன என்னும் தேடலில் பல புனைவுகளை நூலகம் நூலகமாகத் தேடி கண்டுபிடித்து மொழிபெயர்த்து வருகிறார். 1800களில் துவங்கி இன்று வரையில் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க நூறு சிறுகதைகளைத் தேர்ந்தெடுப்பதற்காக பல்வேறு எழுத்தாளர்களின் ஆக்கங்களை மீண்டும் வாசித்து தொகுத்துவருகிறார். அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தற்காலத் தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சியை ஆங்கில வாசகர்களுக்குக் கொண்டு செல்லும் பணியில் தற்பொழுது மும்முரமாக இயங்கி வருகிறார்.
7. Book Reviews: The Hindu : Contemporary concerns: “These stories take you on an exciting journey, and you traverse a whole gamut of human experience and emotions that reflect the changing Tamil milieu.'”
8. Buy Dilip’s book: Bagchee.com: A Place to Live: Contemporary Tamil Short Fiction: Books: Dilip Kumar (ed.)Vasantha Surya (tr.): Innumerable strands of ethnic, regional and universal experiences are woven together in this collection of fine short fiction spanning four decades – 1960-1990-in which the short story emerged as the definitive genre of modern Tamil literature. Twenty-nine famous names are represented here-from Rajanarayanan to Paavannan and many others who have encapsulated the joys, sorrows, and peculiar challenges of life in Tamil Nadu.
திலிப் குமார் (47) தீவிர வாசிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். எழுத்து முயற்சிகளில் அசுர வேகம் கொண்டவரல்லர். ஆனால், துவரை ‘மூங்கில் குருத்து’ (1985), ‘மெளனியுடன் கொஞ்ச தூரம்’ (1992), ‘தற்காலத் தமிழ்ச் சிறுகதை’ (ஆங்கிலம்), ‘மொழி பெயர்ப்பு சிறுகதைகள்’ (பதிப்பாசிரியர்) போன்ற தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
என் குடும்ப சூழ்நிலை காரணமாகக் கல்வி வாய்ப்பை 14 வயதிலேயே இழந்தவன். எனக்கு தமிழ், குஜராத்தி, ஆங்கிலம் ஆகிய எந்த ஒரு மொழியிலும் சரியான தேர்ச்சி இருக்கவில்லை. வறுமை காரணமாக அடித்தட்டு தமிழ் மக்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு, தமிழ்மொழி, தமிழ் கலாசாரம் இவற்றின் மீது என்னை ஈடுபாடு கொள்ள வைத்திருக்கிறது. மூன்றாம் வகுப்பு வரை தமிழ் படிக்க நேர்ந்தது. எனது சுய முயற்சியால் தமிழ் மொழியைக் கற்க முற்பட்டேன். ஆனால், எனக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை.
பின்னர் நவீன தமிழ் இலக்கியத்தில் படிப்படியாகப் பரிச்சயம் கொள்ள நேர்ந்தது என்பது ஒரு புதிர் மிகுந்த தற்செயல் நிகழ்வுதான். மொழி அறிவு சார்ந்த என் குறைபாடுகளையும் மீறி நான் எழுதுவதற்கு உந்தப்பட்டேன். எனது மிகக் கடினமான வாழ்க்கைச் சூழலில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரது கதைகளை அன்று முதன்முதலாக படித்த பொழுது மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளானேன். என் அனுபவ உலகத்திற்கும் இவர்கள் தங்கள் கதைகளில் பிரதிபலித்த உலகத்துக்கும் மிகப் பெரிய ஒற்றுமை இருப்பதாக நான் உணர்ந்தேன்.
நான் எழுதத் துணிந்தமைக்கு இன்னொரு காரணமும் உண்டு. பொருளாதார காரணங்களினால் எங்கள் சமூகத்தினரிடையே எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்டிருந்த ஒதுக்கம், கல்வி இழப்பு, என் தனிப்பட்ட குறைபாடுகள் இவற்றால் எனக்குள் தோன்றியிருந்த தாழ்வு மனப்பான்மை இந்தப் பின்புலத்திற்கு எதிர்வினையாக என் தனித்துவத்தை அடையாளப்படுத்தக் கூடிய சாதிக்கக் கூடிய ஒரு நடவடிக்கையாகவும் எழுத்தை நான் மேற்கொண்டேன்.
ஒரு எழுத்தாளனுக்குத் தேவையான தகுதிகள் பல என்னிடம் இல்லை என்பதை நான் உணர்ந்திருந்தேன் என்றாலும் சக மனிதர்கள் மீது உண்மையான பரிவு, தமிழ் வாழ்க்கையின் அன்றைய யதார்த்தங்கள் பற்றிய புரிதல், மனித இயல்பின் வினோதங்கள் குறித்த ஏற்புடைமை, நகைச்சுவை உணர்வு இவற்றின் கலவையான ஒரு பண்பு என்னிடம் இருந்தது. இதைக் கொண்டே நான் என் இலக்கிய முயற்சிகளை மேற்கொண்டேன். மற்றபடி எந்த இலக்கியக் கொள்கையோடும் என்னை நான் இணைத்துக் கொண்டு செயல்பட்டதில்லை.
பல்வேறு வடிவங்களில் எழுதிய, பல்வேறு சூழல்களை சித்தரித்த, பல்வேறு தத்துவ நோக்கை வெளிப்படுத்திய படைப்பாளிகளை ஒரேசமயம் நம்மால் பொதுவாக ஏற்கவும் ரசிக்கவும் முடிவது ஏன் என்று வினவும் திலீப் குமார் ‘இவர்களுடைய இலக்கியசெயல்பாடுகளுக்கு பின்னிருந்து இயக்கிய் ஓர் அற இயல்புதான் அது ‘ என்று அதை அடையாளம் காண்கிறார். அதேசமயம் அந்த அற இயல்பு ‘தன்னளவில் தன்மையற்றது ‘ என்று சொல்லி அது அவ்வெழுத்தாளன் செயல்பட்டகாலம் அவனது நோக்கு அவனது படைப்பியல்பு ஆகியவற்றுக்கு ஏற்ப அவனுள் முளைப்பது என்றும் சொல்கிறார்.
இப்பார்வையினால்தான் ஒரு மார்க்ஸிய எழுத்தாளனும் மார்க்ஸிய எதிர்ப்பு எழுத்தாளனும் தன்னை ஒரேசமயம் வசீகரிப்பதை புரிந்துகொள்ளமுடியும் என்கிறார்.
எழுத்தாளர் திலீப்குமாருடன் சில மாதங்கள் முன்பு மதிப்பீிடுகள் பற்றிய மிக அந்தரங்கமான நெகிழ்ச்சியான உரையாடலில் ஈடுபட்டிருந்தபோது சுமார் பதினைந்தாண்டுகள் முன்னர் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை அவர் நினைவு கூர்ந்தார்.
அவருக்குத் தெரிந்த ஒரு பதிப்பாளர் மிகுந்த பொருட் செலவுடன் வெளியிட்டிருந்த ஒரு வ்ிசேடமான நூலுக்கு தமிழக அரசின் ஒரு துறையிலிருந்து ஆயிரக்கணக்கான பிரதிகளுக்கு ஆர்டர் கிடைக்கிற தருணத்தில், துறை அதிகாரி பதிப்பாளரின் பிரதிநிதியிடம் ஆர்டர் மதிப்பில் பத்து சதவ்ிகிதம் லஞ்சமாக வேண்டும் என்றும், அந்தத்தொகையைக் கொடுத்து விட்டால், மறு கையில் அரசின் காசோலையைப் பெற்றுச் செல்லலாம் என்றும் கூறுக்ிறார்.
பிரதிநிதி தயங்குகிறார். அதிகாரி வியப்படைகிறார். சென்று முதலாளியிடம் சொல்லிக் கேட்டுக் கொண்டு வரச் சொல்கிறார். பிரதிநிதி தன் முதலாளியான பதிப்பாளரிடம் தெரிவிக்கிறார். கடுமையான நிதி நெருக்கடியிலும், அன்புக்குரிய நண்பரின் உடல் நிலைப் பிரச்சினையாலும் துயரப்பட்டுக் கொண்டிருந்த அந்த பதிப்பாளர் அரசுஅதிகாரியின் பேரத்தை மறுத்து விட்டார். பேரத்தை ஏற்றிருந்தால் அத்தனை ஆண்டுகளாக அந்தப் பதிப்பகத்துக்கு ஏற்பட்டிருந்த மொத்தக் கடனும் தீர்ந்துபோய் கணிசமான லாபம் கிட்டியிருக்கும். லட்சக்கணக்கான ரூபாய்கள் இழப்பு.
அந்த இழப்பை அந்தப் பதிப்பாளர் பொருட்படுத்தவில்லை. காரணம் தன் பதிப்புத் தொழிலில் தான் வெளியிடும் படைப்புகளின் மதிப்பீடுகளுக்கு விரோதமான வாழ்க்கையை அவர் வாழ விரும்பவில்லை என்பதுதான். இந்த நிகழ்ச்சியை திலீப் குமார் சொல்லும்போதே எங்கள் இருவர் கண்களும் கசிந்தன.
இருவருக்கும் பொதுவான களன்: லோ மிடில் க்ளாஸ் வாழ்க்கையின் முரண்கள், நெருக்கடிகள், ஏமாற்றங்கள், கேள்விகள்.
தீம்தரிகிடவில் வெளிவந்த திலீப்பின் கதை மிகவும் முக்கியமானது.
குறிப்பாக இந்து முஸ்லிம் பிரச்சினைகள் பிரம்மாண்டமான பரிமாணம் பெற்றிருக்கையில் இந்தக் கதை வாசகனுக்குள் ஏற்படுத்தும் அதிர்ச்சி சிறிது அல்ல. காரணங்களும், தருக்கங்களும் சிதறி வாழ்க்கை படும் அல்லகோலம், மனிதவாழ்வு எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிகள், வெறுமையும் அபத்தமும் கண்முன் தரிசனமாகி கலங்கச்செய்யும் தருணங்கள் – படைப்பாளி இவற்றை கோடிட்டுக் காட்டிவிட்டு போகிறான்.
அவனுடைய எழுத்தின் இறுதிப்புள்ளி வாசகன் மனதில் நிதரிசனமும் புனைவும் சந்தித்து மயங்கி கொந்தளிப்பும் கேள்விகளும் உருவாகும் ஆரம்ப புள்ளியாக உருமாறுகிறது.
ஒரு குமாஸ்தாவின் கதையில் வாழ்வின் அடிப்படைத் தேவைகளையே தீர்க்கமுடியாத நெருக்கடிகளாய் கொண்ட நடுத்தரவயது முஸ்லிம் குமாஸ்தா (வயதான தாய், கால்கள் சூம்பிப்போன தங்கையின் மகன்) அரை டிராயர் அணிந்த ஆரோக்கியமான மதவெறியர்களால் அடித்துக்கொல்லப்படுகிறான்.
சிறு பத்திரிகை உலகத்தில் எல்லோருக்கும் தெரிந்த பெயர் திலீப்குமார். குறைந்தது 20 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிற சிறுகதைகள் அவ்வளவு எளிதில் யாருக்கும் வாய்க்காதவை. தமிழ் வாழ்வு, அது சார்ந்த சிக்கல்கள், தமிழக கிராமங்கள் என்று வாசித்துக் கொண்டிருக்கிற ஒரு வாசகனுக்கு திலீப்குமார், குஜராத்தில் இருந்து சென்னையில் வந்து வாழும் குஜராத்திகள், மார்வாடிகள், செளகார்பேட்டை இதெல்லாம் படிக்க ரொம்பப் புதுசாக இருக்கிறது.
படைப்புகளில் வரும் பெயர்கள்கூட சாரதா பெஹ்ன், ப்ரான் ஜீவன்லால், த்ரம்பக், நட்டு, ஹன்ஸ்ராஜ் என்று நாம் அதிகம் படித்திராத பெயர்கள். ஆனால் சிறுகதைகளில் திலீப்குமார் வேறு வேறு விதமான மன உலகங்களை, மனித துக்கங்களை யாரும் போக அஞ்சும் ஆழங்களுக்குச் சென்று கிண்டலும், கேலியுமாய் நம் கைக்குக் கொண்டு வந்து தருகிறார். பார்க்கிற எவரும் உணரலாம். இது கடலின் ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்ட முத்துக்கள் என்று.
அவ்வப்போது சிறு பத்திரிகைகளில் படித்த கதைகளை மொத்தமாகப் படிக்க வாய்க்கிறபோது இன்னொரு புது அனுபவம் கூடுகிறது. இத் தொகுப்பிலேயே எனக்கு மிகப் பிடித்த கதையாக நிகழ மறுத்த அற்புதம் என்ற கதையைச் சொல்வேன்.
‘மீண்டும் மீண்டும் மனப்பிரதேசங்களில் இருந்து அகல மறுத்து அலறுகிறார்கள் திருமதி ஜேம்ஸ்சும், திரு. ஜேம்ஸ்சும்’ கதை இப்படி ஆரம்பிக்கிறது.
‘திருமதி. ஜேம்ஸ் தன் சிறிய பெட்டியுடன் கிளம்பினாள். நான் போகிறேன் என்றாள்.’
‘சிறிது நேரமாக அவளையே கவனித்துக் கொண்டிருந்த ஜேம்ஸ், என்ன அவ்வளவுதானா? நிஜமாகவா? என்னை விட்டுப் பிரியும்போது உனக்கு சொல்ல வேறு ஒன்றும் இல்லையா என்று கேட்டார்’.
நமக்குப் புரிகிறது. ஒரு கணவனும், மனைவியும் பிரிகிறார்கள். பிரிவு என்கிற ஒரு வார்த்தைக்குள் எத்தனை எத்தனை, துக்கமும், கண்ணீரும், தழும்புகளும், காயங்களும்…
இக்கதை வாசிப்பு எனக்கு உடலெங்கும் தந்த மின்சார அதிர்வுகள், இன்னும் நடுங்குகிறது. வாழ்வு குறித்து பெரும் பயமும், உறவுகள், நண்பர்கள் அற்ற மனித வாழ்வு எத்தனை வெறுமையானது என்றும்… யோசிக்க யோசிக்க… அந் நினைவுக் கயிறுகளை அறுத்துக் கொண்டு பாதுகாப்பான வெளிநோக்கி ஓடிக் கொண்டிருக்கிறேன்.
கதை முழுக்க ஜேம்ஸ் மட்டுமே பேசுகிறார். கதை முடிகிற வரை திருமதி ஜேம்ஸ் ஒன்றும் பேசாமல் மௌனமாக மட்டுமே இருக்கிறாள்.
’25 ஆண்டுகளாக நீடித்த நம் வாழ்க்கையையும், பிணைப்பையும் பொருளற்றதாக்கி விடாதே.
உனக்கு நினைவிருக்கிறதா? திருமணமான மூன்று மாதத்தில் நீ படுத்த படுக்கையாகி விட்டாய். உன் வயிற்றில் அந்தக் கொடூரமான கட்டி வளர்ந்திருந்தது. கோழையும், குருதியும் திரண்டு ஒரு அருவருப்பான பெரிய அழுகிய முட்டையைப்போல்…
உனக்கு தெரியுமோ என்னவோ… அறுவை சிகிச்சைக்கு முன்பாக எத்தனை இரவுகளை நான் உறக்கமின்றிக் கழித்திருக்கிறேன் என்பது… அப்போது நீ என் அருகில் ஒரு குழந்தையைப் போல் கவலையற்று அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பாய். அறுவை சிகிச்சைக்குப் பின் மூன்று வருடங்கள் நாம் உடலுறவு கொள்ள இயலவில்லை. உன் அருகே நான் விரகத்திலும் அதிருப்தியிலும் உறைந்து ஒரு எ·குத் துண்டைப் போல் கிடப்பேன்.’
இப்படிப் போகும் உரையாடல்களை எளிதாகக் கடக்க முடியவில்லை. 25 வருட வாழ்வில் நடந்தவைகள் ஒவ்வொன்றும் கவித்துவமும், தத்துவமுமாய் எழுதப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் கணவன், மனைவியானாலும், அவர்களின் உலகம் வெவ்வேறானது. அவள் உலகம் முதிர்ந்த மலர்களாலும், ஈரக் காக்கைகளாலும், சுண்டெலிகளின் திருட்டுப்பார்வைகளாலும், கர்ப்பிணிப் பல்லிகளாலும் ஆனது.
ஆனால், ஜேம்ஸின் உலகம் இவற்றிற்கெல்லாம் வெகு அப்பால் வேதனையும், தள்ளாட்டமும், ஏமாற்றமும் நிறைந்தது. கதையின் மையம் காலத்திரைக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் வெறுமையில் விழுந்து விடாதே, வயோதிகம் எல்லா அன்பையும் உலர்த்தி விடக்கூடியது என்பதுதான்.
வாழ்வின் ருசியில் ஊறிப் போயிருப்பவர்களுக்குக் கூட இக்கதை வாழ்வின் இன்னொரு கோரப்பற்கள் முளைத்த குரூர முகத்தை ஞாபகப்படுத்துகிறது. அவனை விட்டுப் பிரிய மனமின்றி திருமதி. ஜேம்ஸ் பெட்டியைக் கீழே போடும்போதுதான் நான் ஆசுவாசம் அடைந்தேன்.
‘கடவு’ என்றொரு நீண்ட சிறுகதை. கங்கு பாட்டிதான் இக்கதையின் மைய அச்சு. ஒவ்வொரு முறையும் மரணத்தின் நுழைவாயில் வரை சென்று சாமர்த்தியமாகத் திரும்பி விடுவாள். அந்தக் குடியிருப்பில் அவள் பேசும் கெட்ட வார்த்தை வண்டை வண்டையாக, அழுக்குப் படிந்துதான் வெளிவரும். அதன் பின்னணி நம் மனதை அலற விடுகிறது. குடியிருப்பில் உள்ள ஒரு இளம்பெண் ஒரு நாள் கங்குப் பாட்டியிடம் சொல்கிறாள்.
‘நீ துக்கிரி முண்டையாம், உன் உடம்பும் அழுக்கு, மனசும் அழுக்கு என்கிறாள் என் மாமியார்.’
கங்குப் பாட்டி சொல்கிறாள், ‘என் உடம்பு அழுக்குப் படிந்த உடம்புதான். இந்தியாவில் உள்ள எல்லா ஜாதி நாய்களும் என்னைத் துவம்சம் செய்திருக்கிறார்கள். ஏன் வெள்ளைக்காரன் கூட என் மேல் படுத்திருக்கிறான். மற்றபடி என் மனசைப் பற்றி அவளுக்கு என்ன தெரியும்? மடி, ஆசாரம் பார்த்த இந்த வைஷ்ணவ முண்டையின் வாயில் கதறக் கதற ரம்மும், பிரியாணியும் திணித்துத் திணித்து நாள் கணக்கில் அம்மணக் குண்டியாகவே படுக்க வைத்து…
அக்ரகாரத்தில் பாதுகாப்பாக உடம்பெல்லாம் புடவை சுற்றிக் கொண்டு புருஷனுக்குக் கூட அளவாய்த் திறந்து காட்டிய உன் மாமியாருக்கு எங்கேடி தெரியும், என் மனசைப் பற்றி.’
வெளிப்படுத்துகிற வக்கிரத்தை விட தேக்கி வைக்கிற வக்கிரம்தான் அபாயமானது. கங்குப் பாட்டி தன் இறந்த கால ஒவ்வொரு நிமிட துயரத்தையும் வக்கிரங்களாக வெளிப்படுத்திக்கொண்டே செத்துப் போகிறாள்.
‘மனம் எனும் தோணி பற்றி’ என்றொரு காதல் கதை. இப்படி ஒரு வார்த்தையில் அடக்குவதை சகல விதத்திலும் மீறும் கதை. கதையின் துவக்கமே உன்னதக் கவிஞன் ஒருவன் தற்கொலை செய்து கொள்ளக் கடற்கரையில் உட்கார்ந்திருக்கிறான். ”கடல் எத்தனை பிரம்மாண்டமும், அழகும், கொந்தளிப்பும் உள்ளடக்கியதாக இருப்பினும் அவனுக்கு இறுதியில் மரணத்தையே நினைவூட்டுகிறது” என்று ஆரம்பிக்கும் கதையில் துளிர்க்கும் ஒவ்வொரு வரியிலும் கிண்டலும், துயரமும் மாறி மாறி வருகிறது. இப்படியான எழுத்து அவ்வளவு எளிதில் யாருக்கும் வாய்ப்பதில்லை.
அந்தக் கவிஞனின் பெயர் ராகுல் கே.நாயக். அவன் ஒரு குஜராத்திக் கவிஞன். வறுமையின் தோழமையை 13 வயதில் இருந்தே அனுபவித்து வருபவன். காலியான வயிற்றில் சுண்டெலி ஓடி அட்டகாசம் செய்வதைப் போல் துவங்கும் பசியின் உக்கிரமான சீண்டலால் சென்னைக்குப் பஸ் ஏறியவன். வழக்கம் போல் நம் சமூகம் உன்னதக் கலைஞர்களுக்குத் தரும் 300 ரூபாய் சம்பளத்துக்கு ஒரு ரெடிமேட் ஜவுளிக்கடையில் விற்பனை குமாஸ்தா வேலையில் சுருங்க மறுக்கிறது அவன் விரிந்த கவிதை உலகம். அக்கடையில் இன்னொரு சேல்ஸ் கேர்ள் ராஜகுமாரி, திடீரென்று அவனைக் காதலிப்பதாகச் சொல்கிறாள். இவன் 300 ரூபாய் சம்பளத்தில் அல்லாடினாலும், இவன் உலகம் உன்னதமில்லையா? இவன் பேசுகிறான்
”இதோ பார் ராஜகுமாரி, என் உலகம் வேறு, உன் உலகம் வேறு. நீ ஒரு சாதாரண பெண். நானோ கவிஞன். எனக்குக் காதலில் அப்படி ஒன்றும் நாட்டமில்லை. ஏதோ விதி வசத்தால் நான் இப்படி ஜவுளிக்கடையில் சீரழிகிறேனே தவிர, வாழ்வு பற்றி நான் கொண்டிருக்கும் லட்சியங்கள் மிக உயர்ந்தவை. சிகரங்களை நோக்கிய என் பாய்ச்சலின்போது காதல் என்பது எனக்கு ஒரு சுமையாக மட்டுமே இருக்க முடியும்.”
தவிர உன்னைக் காதலிப்பதில் இன்னொரு சங்கடமும் இருக்கிறது. உனக்கு பயங்கரமாக வியர்க்கிறது. உன் மேல் இருந்து வீசும் வியர்வையில் பூண்டு நாற்றமடிக்கிறது. யாரையாவது காதலிக்கும் முன் வியர்வை நாற்றம் போக்க நீ ஏதாவது ஒரு மருந்து சாப்பிட்டுக் கொள்.’
நீங்கள் இவனுக்காக சிரிப்பீர்களா? அனுதாபப்படுவீர்களா? பெரிய லட்சியங்களை, உன்னதங்களைத் தேக்கி வைத்துக் கொண்டு சினிமா தயாரிப்பாளர்களின் கார் கழுவிக் கொண்டு, பெரிய நடிகனுக்குத் தலைசீவி விட்டுக் கொண்டு, நடிகைக்கு மேக்கப் போட்டு விட்டுக் கொண்டிருக்கும் எண்ணற்ற உன்னதக் கலைஞர்களின் உலகம் வேறு நண்பர்களே… அதைத் திறந்து பார்க்கிற சாவிகள் வலிமையானவை, கிடைப்பதற்கரியவை.
ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, மந்திரவாதியின் கழுத்தில் தொங்கக்கூடியவை. திலீப்குமாரின் பயணம் ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி போய் சாவி எடுத்து வந்து அவ்வுலகக் கதவை திறந்து விட்டுத் தன் சக மனிதனுக்குக் காட்டுகிறது. அவ்வுலகம் நமக்கு உன்னதமாகவோ, உருப்படியற்றோ, கசப்பானதாகவோ, வாழ்வின் மொத்த சாரத்தையும் உறிஞ்சி விடக்கூடியதாகவோ இருக்கலாம். அது அவரவருக்கு இந்த வாழ்வு தந்திருக்கும் பிச்சைகளைப் பொறுத்தது.
உதயன் வாஜ்பாயின் 16 ஹிந்தி கவிதைகளை திலீப்குமார் தமிழில் தந்துள்ளார் (மீட்சி, 32, 1990). காதல் கவிதைகள். நம்முடைய காதல் கவிஞர்கள் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. தூய ரொமான்டிசிஸம் என்பதிலிருந்து எப்படி விடுபடுவது என்று இவை கற்றுக்கொடுக்கின்றன.
சிலிர்க்கும் அவளது தேகத்தில்
அனேக ஸ்பரிசங்களை விதைத்துச் செல்கிறான் அவன்
…
அந்த இருட்டின் அறைக்குள்
அவள் மெல்ல எழுந்து தேடுகிறாள்
தவறவிட்ட ஒரு காதணியை
ஹிந்தியில் என்ன வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தது என்று அறிந்துகொள்ளும் ஆவலை ஏற்படுத்தும் எளிமையான அதேசமயம் வலிமையான தமிழாக்கம். திலீப்குமாரினதைத் தவிர வேறு மொழிபெயர்ப்புகள் கிடைக்கவில்லை.
பத்து நிமிடங்களும் பேசிக்கொண்டே இருக்கும் கணவனாக நீல்சன். ஒரு வார்த்தையும் பேசாத மனைவி பாத்திரத்தில் ரோஹிணி. இந்த மூவரைத் தவிர மற்ற எல்லாருக்கும் – கதாசிரியர் திலீப் குமார், எடிட்டர் சிவமதி, இசையமைப்பாளர் அனில், இயக்குநராகிய நான் என எல்லாருக்கும் இது முதல் படம்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde