ஒரு ஊருக்குப் போகாமலேயே அந்த ஊரைப் பற்றி கட்டுரை எழுதுவது அநியாயம் என்பது பாரிஸ் நகருக்கு சென்ற பிறகுதான் உதித்தது. லூயிக்கள் குறித்தும், மேரி ஆண்டொனெட் பட விமர்சனங்களும், புரட்சிப் போராட்டங்கள் விவரணையும், சார்கோசி அரசியலும் எழுதி இருக்கிறேன். அசலூர்க்காரன் அந்தப் பதிவுகளை படித்திருந்தால், ‘Autobiography of a Yogi’ படிப்பது போன்ற அசட்டுத்தனம் கலந்த ஆய்வுரையாக எடுத்துக் கொண்டிருப்பார்.
ஒரிரு வருடங்களாவது அந்தந்த நகரத்தில் தங்க வேண்டும். உள்ளூர் மக்களோடு மக்களாக அன்றாடம் புரளவேண்டும். அவர்களோடு நேர்ந்து ‘அமூர்’ போன்ற பிரென்சு படங்கள் பார்த்து திரைப்பட அறிமுகம் எழுதுவதற்கும், அமிஞ்சிகரையில் இருந்து கொண்டு சொந்த அனுபவத்தை வைத்தும் துணையெழுத்தின் தயவிலும் எழுதுவது சினிமாப் பார்வையாக இல்லாமல் தனிநபர் நனவோடையாக மட்டுமே மிஞ்சி விடுகிறது.
பாரிசின் மூத்திர வாசமும், நதிக்கரைகளில் இரவு பன்னிரெண்டு மணிக்கு அணி திரளும் மக்களுடன் மிதமாக தண்ணியடிக்கும் கொண்டாட்டமும், பூங்காக்களில் படைக்கலன் போல் மிகுதியானவர்கள் வாரநாள் மதியம் படுத்து சூரியக்குளியல் அனுபவிக்கும் மனப்பான்மையும், ராஜாக்களை சிரச்சேதம் செய்ததை வெற்றித் திருவிழாவாக்கும் எண்ணமும் ரிமோட் கண்ட்ரோலிலும் புத்தக வாசிப்பிலும் என்றும் உறிஞ்ச முடியாது.






![Storm clouds ahead [explored 2026/06/05] Storm clouds ahead [explored 2026/06/05]](https://live.staticflickr.com/65535/55314282645_2dd85d8953_s.jpg)



