Tag Archives: Shorts

விமர்சன ஆய்வு: ஜெயமோகனின் “இன்வெர்னெஸ்”

கதை என்ன என்பதை வாசித்து விட்டு வரவும்.

இந்தக் கதையின் மையக் கருத்து உண்மையிலேயே சுவாரஸ்யமானது: ஒரு சொல் — ஜெபமாக பேயுரு கூத்தாக வெறியுருக் கொள்வது; ஊரின் பெயர் உள்ளுணர்வின் நிலையாக மாறுவது; மொழி அகத்திணையின் சிறையாகவோ, விடுதலையாகவோ மாறுவது. ஆனால் சக்தி வாய்ந்த கருத்தும் சக்தி வாய்ந்த கதையும் ஒன்றல்ல.

1. உணர்வு ஆழமின்மை — கதையின் மிகப் பெரிய தோல்வி

இது கதையின் மிகத் தீவிரமான பிரச்சினை.

அந்தப் பெண்தான் கதையின் நெறிமுறை மையம், உணர்வு மையம். ஆனால் ஜெயமோகன் அவளுடைய உள்ளுணர்வை நமக்குக் காட்டவே மறுக்கிறார். அவளது அறிகுறிகளை மட்டும் காட்டுகிறார் — திரும்பத் திரும்ப வரும் வார்த்தை, வீட்டுக்குள் மட்டுமே வாழ்தல், உலகைப் பற்றிய குழந்தைத்தனமான புரிதல் — ஆனால் அவளுடைய அனுபவத்தை ஒருபோதும் தருவதில்லை. அவள் என்ன உணர்கிறாள்? “இன்வெர்னெஸ்” என்ற வார்த்தை அவளுக்கு என்ன? ஆறுதலா? ஏக்கமா? தியான நிலையா? கதை அவள் உள்ளுணர்வுக்குள் நுழைவதை மறுக்கிறது. அவள் எப்போதும் வெளியிலிருந்தே பார்க்கப்படுகிறாள் — ராகவனால், சாதனாவால், வழிகாட்டியால், கதைசொல்லியால் — இந்த தூரம் ஆழமான மர்மம் போல் காட்டப்படுகிறது; ஆனால் உண்மையில் அது தவிர்ப்பு மட்டுமே.

இருபத்தெட்டு ஆண்டு கூத்தாட்டு வெறித்தனம் கதையின் மையமான உண்மை. அது முழுமையாக விளக்கப்படவில்லை. அவள் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் வந்தாள் என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த வெறித்தனம் இருபத்தெட்டு ஆண்டுகள் — அவள் பிரிட்டன் வருவதற்கு ஒரு தசாப்தத்திற்கும் மேல் முன்பே தொடங்கியிருக்கிறது. அது எங்கு தொடங்கியது? என்ன தூண்டியது? இந்தியாவில் இருந்தபோதா? திருமணத்திற்குப் பிறகா? கர்ப்பகாலத்தில்? இவற்றை கதை நேரடியாக விளக்க வேண்டியதில்லை — ஆனால் அவற்றை கோடிட்டுக் காட்ட வேண்டும், அவற்றின் எடையை நம்மை உணரச் செய்ய வேண்டும். ஜெயமோகன் எதுவும் தருவதில்லை. இந்த சாமியாடித்தனம் எந்த வாழ்க்கை சூழலிலும் வேரூன்றாமல் மிதக்கிறது.

இதை அம்பையின் எழுத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்போம் — அதே தமிழ் இலக்கிய மரபில் வேலை செய்யும் எழுத்தாளர். “காட்டில் ஒரு மான்” போன்ற கதைகளில் அம்பை இதே போலொரு பெண்ணின் அகத்தேடலையும், அவளது சுதந்திர வேட்கையையும் மையமாகக் கொண்டு உள்ளுணர்வையும் மனவோட்டங்களையும் அழுத்தத்துடனும் உணர்த்துகிறார். ஜெயமோகன் தன் கதாபாத்திரத்தை விசித்திரமான ஷோகேஸ் அழகு பொருளாக, மென்மையான மர்மமாக ஆக்கிவிடுகிறார். இந்த இரண்டுக்கும் இடையே முக்கியமான பெரிய வித்தியாசம் இருக்கிறது.

உணர்வு உச்சகட்டமான தருணம் — அவள் பனியின் மேல் நடந்து போவது — அதிர்ச்சியூட்டும் அலட்சியத்துடன் கையாளப்படுகிறது. ராகவன் அவள் போவதைப் பார்க்கிறார், பிறகு தூங்கிவிடுகிறார். குறட்டை விடுகிறார். விழிக்கிறார். சாதனா அருகில் இருக்கிறாள். இந்த பற்றற்றத் துண்டிப்பு நுட்பமான கலைத்திறனா அல்லது தைரியமின்மையா? இதற்கு முன்பு எந்த உணர்வு திரட்சியும் இல்லாததால், இது அலட்சியம் கலந்த சௌகரியமாகவே வாசிப்பில் முடிகிறது. உணர்வுகளை அடக்கும் நுட்பமான நடை சம்பாதிக்கப்பட வேண்டும்; அது வெறுமையிலிருந்து (மறுமொழி கடிதங்களிலிருந்து) உருவாக்கப்பட்டால், அது நடையல்ல — அது இல்லாமை மட்டுமே.


2. தமிழ் குடும்பம்: வெளித்தோற்றத்தில் மட்டுமே, ஆழத்தில் இல்லை

கதை தமிழ் குடும்ப வாழ்க்கையை கையாட்டுகிறது, ஆனால் அதனுள் வாழவில்லை.

நமக்குக் கிடைப்பவை: கர்ப்பகாலத்தில் வெண்ணை சாப்பிடு என்று அம்மா சொன்னாள் என்ற குறிப்பு. மகள் தாயை அன்போடு கிண்டல் செய்வது. வாழ்க்கையில் சலிப்படையாமல் இருக்கும் கணவர். இவை அறிமுகமான தமிழ்க் குடும்ப வகைகள் — நடைமுறை வாழ்க்கையறிந்த மூதாட்டி, நவீன சுதந்திரமான மகள், தளர்வற்ற கணவர். ஆனால் இவர்கள் கோடுகளால் ஆனவர்கள், மனிதர்களால் அல்ல.

புனைவில் இல்லாதது என்னவென்றால் தமிழ் குடும்ப வாழ்வின் குறிப்பிட்ட சமூகத் திரை — இந்த தலைமுறையினர் இடையேயான கணவன்-மனைவி உரையாடலின் குறிப்பிட்ட சட்டகங்கள், புலம்பெயர் தமிழர் அடையாளத்தின் எடை, இல்லத்தில் பழகும் நேரத்தை கட்டமைக்கும் சடங்குகள், உணவு பண்பாட்டின் குறிப்பிட்ட நுணுக்கங்கள், லண்டன் தமிழர் வீட்டின் இயல்பான உரசல்கள். ராகவனும் மனைவியும் பேசும்த் தமிழ் கதையின் உண்மையான இன்பங்களில் ஒன்று — தாளம் உண்மையானது, பேச்சு இதமானது. ஆனால் எளிமைத் தமிழ் மட்டுமே கலாச்சாரச் சிறப்பாகாது. இதையே ராமேஸ்வரத்தில் கடலில் கூட சொல்லிச் செல்லலாம். தார் பாலவனக் குடும்பத்தில் பாலைவனமாக்கலாம். தஞ்சயில் மருதமாக்கி அறுவடையாக்கலாம். காஷ்மீரத்தில் கைலாயம் கட்டலாம்.

கதையென்றால் தனித்துவம் தேவை.

பூமணியோ, இமையமோ வழக்குத் தமிழை எழுதும்போது, அது சித்தரிக்கப்படும் குறிப்பிட்ட சமூக உலகிலிருந்து பிரிக்கவே முடியாதவகையில் பின்னிப் பிணைந்திருக்கும் — சாதி, தொழில், புவியியல், பிராந்திய / நிலப்பரப்பு, பிரத்தியேக சமூகம் — சூழல் மூலம் வார்த்தைகளின் குறிப்பிட்ட எடை துலங்கும். இங்கோ, எளிமைத் தமிழ் உணர்வுப்பூர்வமாக இனிமையாக இருக்கிறது, ஆனால் சமூக ரீதியில் மண் வாசனையற்றும் இங்கிலாந்து பிரதேசத் தொடர்பற்றும் மிதக்கிறது.

திருமணத்திற்கு முன்பு அந்தப் பெண் யாராக இருந்தாள் என்பதையும் நாம் அறியோம். கதையின் மறைமுக வாதம் — அவள் முற்றிலும் உள்ளுணர்விற்கு திரும்பிவிட்டாள், வெளி உலகம் தன்னை கடந்து போகட்டும் என்று விட்டுவிட்டாள் என்பது — அவள் திரும்புவதற்கு முன்பு யாராக இருந்தாள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்ற தேவையை உருவாக்குகிறது. ஜெயமோகன் இதை தருவதில்லை. அவளுக்கு கடந்த காலமே இல்லை, சொந்தக் குடும்பமில்லை, மனைவி-அம்மா என்பதற்கு முன்பான அடையாளமில்லை. இது வேண்டுமென்றே செய்த கலை முடிவல்ல; இது வெறும் பள்ளம்.

வாசக இடைவெளி தேவை.
குழிகள் தேவையில்லை.

ஆடு தாண்டும் காவிரியாக இருந்தால் சிறுகதை.
பாம்பன் பாலம் தேவைப்பட்டால் கீதை.

Tamil: A Biography by David Dean Shulman

3. வீட்டுக்குள் அடைக்கப்பட்ட பெண்: அழகுபடுத்தப்பட்டது, ஆய்வு செய்யப்படவில்லை

இங்குதான் கதையின் நெறிமுறையும் அழகியலும் மிகத் தீவிரமாக பிரிகின்றன.

அந்தப் பெண் லண்டனில் பதினேழு ஆண்டுகளாக வாழ்கிறாள், கிட்டத்தட்ட வீட்டிலிருந்தே வெளியே வந்ததில்லை. இன்வெர்னெஸ் எங்கிருக்கிறது என்று தெரியாது. பிரிட்டனின் வரைபடத்தையே பார்த்ததில்லை. வெளியே குளிர் இருக்கிறது, அது கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை பாதிக்குமா என்று கேட்கிறாள் — இயற்பியல் உலகைப் பற்றிய அவளது புரிதல் உண்மையிலேயே கவலைக்குரியது. பிக்பென் கடிகாரத்தை முதல்முறை பார்த்தபோது, “எதுக்கு அவ்வளவு உயரத்திலே வைக்கணும்? தரையிலே வைச்சா எல்லாரும் நேரம் பாப்பாங்கல்லவா?” என்று கேட்டவள்.

ஜெயமோகன் இவை அனைத்தையும் அன்பான பார்வையில் காட்டுகிறார். சாதனா அவளை “ராணித்தேனீ” என்று அழைக்கிறாள் — கூட்டுக்குள்ளே இருக்கும் ராணி, எங்கும் போகாது, எல்லாமே தேடி வரும் என்று. ராகவன் கண்கள் சிரிக்கின்றன. கதைசொல்லி அவளை இதமாக்கத்தக்கவளாகப் பார்க்கிறார். வழிகாட்டிகூட அவளது நிலை பற்றி எதுவும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

ஆனால் கதை என்ன சொல்கிறதோ — அதை அன்பான தொனியுடன் வழங்கினாலும் — அது அந்தப் பெண் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறாள் என்பதும், அவளுக்கு இருபத்தெட்டு ஆண்டு காலமாக (மன) நலம் குன்றிய அறிகுறி இருக்கிறது, எந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை என்பதும், வெளி உலகின் மீது அவளுக்கு இருக்கும் பிடிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது என்பதும்தான்.

ராகவன் வழிகாட்டியிடம் சொல்கிறார்: “மற்றபடி அவளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.” அவளுடைய நிலையில் இருக்கும் ஒருவரைப் பற்றி இப்படி சொல்வது அதிர்ச்சியூட்டும் கூற்று — ஆனால் கதை இதை விசாரிக்கவே மறுக்கிறது.

அந்தப் பெண் பதினேழு ஆண்டுகள் வீட்டுக்குள் மட்டுமே இருப்பது ஆன்மீக உள்நோக்கினால் அல்ல. குறிப்பிட்ட சமூக, உளவியல், உறவியல் நிலைமைகளால் அவள் அப்படி ஆகியிருக்கிறாள் — அந்த நிலைமைகளுக்கு பெயர் இருக்கிறது, வரலாறு இருக்கிறது, விளைவுகள் இருக்கிறது. ஜெயமோகன் இதை ஆன்மீக மர்மம் போல் காட்டுகிறார். உண்மையில் இது கடுமையான agoraphobia ஆகவோ, dissociative நிலையாகவோ, அல்லது — கதை மிகவும் தவிர்க்கும் வாசிப்பு இது — சமூக ரீதியில் இயல்பானதாக ஆக்கிவிட்ட, யாரும் கவனிக்காமல் போன தனிமைப்படுத்தலாகவோ இருக்கலாம்.

கதை அறிமுகப்படுத்தும் “ராணித்தேனீ” உருவகம் ஜெயமோகன் நினைப்பதை விட அதிகம் வெளிப்படுத்துகிறது. ராணித்தேனீ தேர்ந்தெடுத்து கூட்டுக்குள் இருப்பதில்லை. அவள் உயிரியலினாலும் சமூக கட்டமைப்பாலும் உள்ளேயே இருக்கும்படி ஆக்கப்படுகிறாள், ஒரேயொரு பணிக்காக வளர்க்கப்படுகிறாள், அவளது வாழ்க்கை முழுக்க இனப்பெருக்கமும் குடும்பப் பணிகளாலும் வரையறுக்கப்படுகிறது. கதை இதை இனிமையான நகைச்சுவையாகப் பயன்படுத்துகிறது. ஆனால் இது கதையின் மையப் பிரச்சினையாக இருக்கவேண்டும்.

அவளது தொழுவிலடித்தலை அழகுபடுத்துவதன் மூலம் — அதை அழகானதாக, புராணக்கதையின் உருவமாக, உலகம் தாங்க இயலாதவொரு வித உள்ளுணர்வாக மாற்றுவதன் மூலம் — கதை ஆய்வு செய்யப்படவேண்டியதை அறியாமல் காதல்கொள்கிறது. இது கற்பனை சக்தியின் கடுமையான தோல்வி.

Tamil: A Biography by David Dean Shulman

4. மொழிபெயர்ப்பிற்கான எழுத்து: மேற்கத்திய ஆலோகச் சிக்கல்

இந்தக் கதை முழுக்க இந்தியாவிற்கு வெளியே நடக்கிறது. ஒவ்வொரு காட்சியும் லண்டனிலோ இன்வெர்னெஸிலோ நடக்கிறது. மையமான நிலப்பரப்பு — உறைந்த ஸ்காட்டிஷ் ஆறு, குளிர்கால வெளிச்சம், கல் சுவர்கள், விறகு எரியும் கபே — இவை ஐரோப்பியமானவை. மையமான சின்னம் இருப்பது ஸ்காட்டிஷ் ஊரின் பெயர். நம் தமிழ்ப் பெண்ணின் உளவியல் நிலை ஐரோப்பிய புவியியல் வழியாக காட்டப்படுகிறது.

இது தவறல்ல. புலம்பெயர் இலக்கியம் இயல்பாகவே ஏற்றுக்கொண்ட நாட்டின் நிலப்பரப்பில் ஈடுபடுகிறது. ஆனால் சிறந்த புலம்பெயர் எழுத்து — வி.எஸ். நைபால், ரோமேஷ் குணேசேகர, ”துவக்க/ஆதிகால” ஜெயமோகன் — கலாச்சாரங்களின் சந்திப்பு உராய்வை, பரஸ்பர ஒளியூட்டலை, பிரத்தியேக நுண்ணறிவை உருவாக்கும். தாய்நாடு அழிக்கப்படுவதில்லை; அது புதிய இடத்துடன் உரையாடல் நடத்தும்.

“இன்வெர்னெஸ்” கதையில் இந்தியா இல்லை. தமிழ்நாடு இல்லை. கதையின் நிலப்பரப்பு, உணர்வு, சின்னக் கட்டமைப்பு — இவை அனைத்தும் எந்த கலாச்சார மொழிபெயர்ப்பும் இல்லாமல் மேற்கத்திய வாசகருக்கு முழுமையாக கிடைத்துவிடும். எளிய தமிழ் உரையாடல், கர்ப்பகாலக் கவலைகள், அம்மா சொல்லிய ஆலோசனை — இவை கட்டமைப்புக்கு அச்சாணியாக இல்லாமல், பூச்சாக செயல்படுகின்றன.

Granta அல்லது The White Review போன்ற ஆங்கில இதழின் இலக்கிய வாசகர் இந்தக் கதையை இப்படி படிப்பார்: ”நவீன ஐரோப்பாவில் தத்தளிக்கும், ஆன்மீக இழப்பில் இருக்கும் மர்மமான இந்தியப் பெண், பொருள் உலகத்துடன் ஈடுபட இயலாமல், இறுதியில் உறைந்த நிலப்பரப்பில் கரைந்துவிடுகிறாள். ”அவளது அடைப்பு சமூக நிலையாக வாசிக்கப்படுவதில்லை — ஆன்மீக உயர்வாக, பாசக்கயிறு மோட்சமாகவே மெய்க்காட்டப்படுகிறது. இந்த வாசிப்பை சாத்தியமாக்கி இருக்கலாம் — எனினும், கதை அதை வீறுகொண்டெழுந்து உணரச் செய்யும் உழைப்பை விதைக்கவில்லை.

ஜெயமோகனின் மிகச் சிறந்த எழுத்து மேற்குத் தொடர்ச்சி மலையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரை சமவெளிகளில், அவர் தசாப்தங்களாக வாழ்ந்த சமூகங்களின் குறிப்பிட்ட சமூகச் சூழலியலில் வேரூன்றியது. விஷ்ணுபுரம் ஐரோப்பிய சட்டகங்களால் தாங்க இயலாதது. ஏனென்றால் அது தன் குறிப்பிட்ட இடம், வரலாறு, உணர்வு ஆகியவற்றில் ஆழமாக வேரூன்றியது. “இன்வெர்னெஸ்” மேற்குலகிற்கு தூக்கிச் செல்லக்கூடியது. அது நன்கு பயணிக்கிறது. எதைத் தியாகம் செய்து பெயர்வுத்திறன் செதுக்கப்பட்டது என்பது கேள்விகளைத் தூண்ட வேண்டும்.


5. ஆராய்ந்த இடத்தின் அடிப்படையின்மை

இன்வெர்னெஸின் விளக்கங்கள் — அதன் வரலாறு, புவியியல், ஹீப்ரூ நெஸ், வெப்பநிலை அளவீடுகள் — கிட்டத்தட்ட முழுக்க வழிகாட்டியின் விளக்க உரை வழியாக வழங்கப்படுகின்றன. இது முக்கியமான நுட்ப சிக்கல்.

கதாசிரியர் தன் கதைக்கான களத்தை வாழ்வதன் மூலம் அல்ல, ஆராய்ச்சி மூலம் அறிந்தால், அந்த அறிவு புனைவில் உணர்வாக அல்ல, தகவலாக வந்து சேரும். வழிகாட்டியின் இன்வெர்னெஸ் பற்றிய விளக்கங்கள் களஞ்சியத் தன்மை கொண்டவை — 2000 ஆண்டில் நகரமான தகவல், Inverness-shire என்ற மாவட்டப் பெயர், Scottish Highlands Authority தலைமையிடம் — இவை வாழ்ந்த அறிவாக அல்ல, படித்த அறிவாக தெரிகின்றன. உறைந்த ஆறும் குளிர்கால வெளிச்சமும் திறம்படவே விளக்கமாக இருந்தாலும், தொகுக்கப்பட்ட காட்சி குறிப்புகளிலிருந்து வந்தது போல் தெரிகின்றன — அனுபவிக்கப்பட்டவை அல்ல.

இதை காடு நாவலில் ஜெயமோகன் வனத்தை காட்டும் விதத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அங்கு, தாவரங்களும் ஒலிகளும் வெளிச்சமும் நீரின் குறிப்பிட்ட தன்மையும் சுற்றுச்சூழல் உடலில் பதிவாகும் விதம் — இவை உள்ளிருந்து அறியப்பட்டவை. நிலப்பரப்பு விவரிக்கப்படவில்லை; அது வாழப்படுகிறது. “இன்வெர்னெஸ்” கதையில், ஸ்காட்டிஷ் நிலப்பரப்பு சின்னமாக பயன்படுத்தப்படுகிறது (உறைந்த ஆறு = உறைந்த உள்ளுணர்வு) ஆனால் வாழப்படவில்லை. ஏ.ஐ. தயாரித்த படம் போல். பனி என்னும் கருத்தாக்கம் மிஞ்சி விடுகிறது. அதன் குளிர் உடலில் தட்டுவதில்லை.

கதையின் மையமான நாடகீய தருணம் — இருபத்தெட்டு ஆண்டுகளாக தன்னுள்ளே வாழ்ந்த வார்த்தையின் இடத்தில் ஸ்தூல உடலில் உண்மையை அந்தப் பெண் தரிசிப்பது — அந்த வார்த்தையின் இடம் சக்தியாக நம்முள் உறையும் அவசியம் தேவைப்படுகிறது. இன்வெர்னெஸ் என்ற நகரம் வெறும் தொகுப்பாக இருந்தால், அந்தப் பெண்ணின் உள் இன்வெர்னெஸுக்கும் வெளி இன்வெர்னெஸுக்கும் இடையிலான மோதலுக்கு எந்த வலுவும் இல்லை.


6. கட்டமைப்பு சிக்கல்கள்

இரண்டு கூடுதல் கவலைகளும் கவனிக்கப்படவேண்டியவை.

காலக்கணக்கின் முரண்பாடு: வழிகாட்டி அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு காலமாக இந்த நிலை என்று கேட்கிறான். ராகவன் “இருபத்தெட்டு ஆண்டுகள்” என்கிறார். மகளுக்கு பதினாறு வயது. அவள் லண்டன் வந்து பதினேழு ஆண்டுகள். அப்படியென்றால் இந்த பித்தநிலை அவள் பிரிட்டன் வருவதற்கு பதினோரு ஆண்டுகள் முன்பே தொடங்கியிருக்கிறது, மகள் பிறப்பதற்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் முன்பே. இது உண்மையிலேயே சுவாரஸ்யமானது — “இன்வெர்னெஸ்” என்ற வார்த்தை தனக்கு தெரியும் என்று உணர்வதற்கு முன்பே அவளை ஆட்கொண்டிருக்கிறது, கூடுதலாக இந்தியாவில் நடந்த ஏதோவொரு சம்பவத்திலிருந்து. ஆனால் கதை இதை சிறிதுகூட வளர்க்கவில்லை. இது முக்கியமான கதை மர்மம் — ஜெயமோகன் மறந்துவிட்டாரா அல்லது வேண்டுமென்றே ஒதுக்கினாரா என்று தெரியாது. எப்படியிருந்தாலும் இது வாசகனுக்கு சிக்கல்.

முடிவின் இயந்திரத்தனமான வட்டம்: சாதனா வருகிறாள், “இன்வெர்னெஸ்” என்கிறாள். ராகவன் திரும்பத் திரும்ப சொல்கிறார். அந்த வார்த்தை தொற்றுநோய் போல் அல்லது ஆன்மீக பகிர்வாக அடுத்த தலைமுறைக்கும் கணவருக்கும் பரவுகிறது. இது கட்டமைப்பு ரீதியாக புத்திசாலித்தனமானது ஆனால் உணர்வு ரீதியாக வெறுமையானது. ஏனென்றால் அந்த வார்த்தை என்ன என்பது ஆழமாக நிறுவப்படவில்லை, எனவே அதன் பரவல் வெறும் வடிவமாகவே நிற்கிறது. உள்ளது — உண்மையான இன்வெர்னெஸ் — தப்பிக்க முடியாதது என்ற கருத்தை இறுதி கோடிட்டுக் காட்டுகிறது, ஆனால் அந்த உள்ளம் ஒருபோதும் காட்டப்படவில்லை என்பதால், சைகை வெறும் வடிவ சைகையாக மட்டுமே நிற்கிறது.


கனவுருப்புனைவு

துவக்கநிலை எழுத்தாளரின் படைப்பெனில் “இன்வெர்னெஸ்” உண்மையிலேயே சுவாரஸ்யமான மையக் கருத்துடைய கதை — ஒரு ஊரின் பெயர் உள்ளுணர்வின் நிலையாக மாறுவது, வார்த்தைக்கும் உலகிற்கும் இடையிலான இடைவெளி — ஆனால் அது தனது சாத்தியத்தை அடையவில்லை. ஏனென்றால் அது உள்ளுணர்வின் கடினமான வேலையை, அக-கலாச்சார தனித்தன்மையை, தார்மீக சுயபரிசோதனை செய்து நெறிமுறை ஆய்வாக்க மறுக்கிறது.

கதையின் தமிழ் கதாபாத்திரம் அடைக்கப்படுகிறாள், இறுதியில் உட்கொள்ளப்படுகிறாள் — கதை இதை அழகாகக் கண்டறிகிறது. இன்னும் தைரியமான இந்தக் கதையின் வடிவம் இதை *அதிர்ச்சியூட்டுவதாக* கண்டறியும். அவள் இந்த நிலைக்கு எப்படி வந்தாள், அதற்கு அவள் என்ன விலை கொடுத்தாள், அவளுடைய அடைப்பை உருவாக்கிய குறிப்பிட்ட சமூக உலகை பொய்மையற்ற நேர்மையுடன் காட்டுவதற்கான தேவை — இதையெல்லாம் தமிழ் இலக்கியம் தன் சிறப்பான தருணங்களில் எப்போதும் கையாண்டிருக்கிறது: புதுமைப்பித்தனிலிருந்து அம்பை வரை.

இப்படியிருக்க, “இன்வெர்னெஸ்” மேற்கத்திய இதழ்களுக்கும் மொழிபெயர்ப்பு சந்தைக்கும் பயணிக்கக்கூடியது — ஏனென்றால் அது பயணிக்கும்படி தன்னை போதுமான அளவு இலகுவாக்கிக் கொண்டது. பயணிப்பதில் அது என்ன கைவிட்டது என்றால் வலுவாக செதுக்கிய கதாபாத்திர பலத்தை, வேரூன்றிய நிலையை, சமூக ரீதியில் ஆய்வு செய்யப்பட்டதை. அந்த எடைதான் இலக்கிய எழுத்து என்பதை வெறும் மனநிலை சித்திரத்திலிருந்து வேறுபடுத்தி நிலைநிறுத்துகிறது.


ஜெ.மோ. தளத்தில் வெளியான கடிதங்கள்:

ஏ. ஐ. உதவியுடன் எழுதியது

மேலும்:

ஒருநாள் வீட்டை ஆராய்ந்தபோது வேதப்புத்தகத்தின் ஆங்கிலப் பிரதியொன்று கிடைத்தது. புத்தகத்தின் இறுதிப் பக்கங்களில் கூத்ரீக்கள் – அதுதான் அவர்களுடய ஆரம்பப் பெயர்- அவர்களுடைய வரலாற்றை எழுதியிருந்தனர். அதன்படி இன்வெர்னெஸ் (Inverness) என்ற இடத்திலிருந்து வந்தவர்கள் ஆகிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கக்காலத்தில் அவர்கள் கூலிகளாக (peons) வந்தவர்கள் என்பதில் ஐய்யங்களில்லை. அதன்பிறகு உள்ளூர் சிவப்பிந்திந்தியர்களுடன் அவர்கள் இனம் கலந்துவிட்டது. 1870க்குப் பிறகு அவர்களைப் பற்றிய வேறுதகவல்களில்லை. ஆங்கிலத்தை மறந்துபோனார்கள். 

https://www.vallinam.com.my/issue21/story1.html

StoryJudge – ஸ்டோரி ஜட்ஜ்: தற்கால தமிழ் இலக்கியம்

சர்ச்சைகளுக்கு இங்கு பஞ்சமே இல்லை.
சிறுகதைகளுக்கும் இங்கு கொட்டிக் கிடக்கிறது.

வாசிப்பவர்கள்? அரிது.
வாசித்ததை நயம்பட விமர்சிப்பவர்கள்? அரிதினும் அரிது!

சென்ற ஜனவரி மாதத்தில்:
வாசகசாலை – 18 கதைகள்
சொல்வனம் – 5
மயிர் – 8
வல்லினம் – 10
பதிவுகள் – 3
நடுகல் – 10

இவை தவிர கனலி இதழில் – “Fate of a Man” (Судьба человека; சுட்பா செலோவெகா) சோவியத் ரஷ்ய எழுத்தாளர் மிகைல் ஷோலோகோவ் எழுதிய சிறுகதை மொழியாக்கம் வந்திருக்கிறது.

காலச்சுவடு ஜனவரி 2026 – 313 இதழில்
1. மழை நிற்கப் போவதில்லை: பெருந்தேவி
2. குறளி : யுவன் சந்திரசேகர்
3. தொலைகின்ற இடம் : கோகுலக்கண்ணன்

– ஜனவரியில் வெளியாகாத இதழ்கள்: யாவரும், அழிசி
– சிறுகதைகள் வெளியிடாத இதழ்கள்: அகழ்
– வெளியாகி இருக்குமோ என்று தேடிய தளங்கள்: நடு வெப், அம்ருதா, உயிர்மை
– இன்னும் பார்க்க வேண்டிய இதழ்கள்: குவிகம், பண்புடன், நீலி, திண்ணை, அந்திமழை, கணையாழி, கீற்று
– அச்சில் மட்டுமே இருந்திருக்கக் கூடிய இதழ்கள்: தமிழ்வெளி, நீலம், உயிர் எழுத்து, கல்குதிரை

இது தவிர வேறு இருக்கலாம். இருக்கும்.
அவற்றைச் சொல்லுங்கள்

இவ்வளவும் எதற்கு?

ஸ்டோரிஜட்ஜ் என்றொரு முயற்சி.
வரும் கதைகளை எல்லாம் வாசிப்பது.
வாசித்ததில் பிடித்ததை விவாதிப்பது.
கூடவே, ஊறுகாயாக சமூக ஊடக விவகாரங்களைத் தொட்டுக் கொள்வது.

சில கேள்விகளுக்கு பதிலளிக்கப் பார்ப்பது:
அ) புகழ் பெற்ற அல்லது நிறைய கவனிக்கப் பெற்றவர்கள் யார்? அஜிதன், ஜெயமொகன், ஜி.எஸ்.எஸ். வி நவின், சுப்ரபாரதிமணியன்
ஆ) ஒரே எழுத்தாளரே பல பல இடங்களில் இடம் பெற்றிருக்கிறாரா? டீன் கபூர்
இ) குழந்தைகளுக்கான இலக்கியம் – சிறுவர்களுக்கான கதைகள் எப்படி இருக்கின்றன?
ஈ) மொழியாக்கங்கள், மொழிபெயர்ப்புகள் – எந்த மொழி, எவர் தமிழாக்கம் செய்தார், யாரின் படைப்பு?
உ) பெண் எழுத்தாளர்கள் உண்டா? எத்தனை பேர்? – ஸ்ரீரஞ்சனி, கமலதேவி, லாவண்யா சுந்தர்ராஜன், றின்னோஸா, மனுஷி, அருணா சிற்றரசு, ஷைலஜா, தன்யா, லதா , மலர்விழி மணியம்

இதெல்லாம் உங்களாலும் செய்ய இயலும்.
வரும் வாரங்களில் நீங்களும் ஸ்டோரி ஜட்ஜ் விமர்சன அரங்கில் பங்கெடுக்க வாருங்கள்.
கை கொடுங்கள்.

புனைவுப் புதைவும் அகவெழுச்சி ஆக்கங்களும்

சிறுகதைக் களஞ்சியம் ஆக சொல்வனம் மாறிக் கொண்டிருக்கிறதோ என்னும் பயம் உங்களுக்கு வந்திருக்கும்.

வருகிற எல்லா புனைவுகளையும், பொறுமையாகப் படித்து, ஒவ்வொன்றுக்கும் கருத்தும், எதற்காக மறுதலிக்கிறோம், எப்படி தேர்ந்தெடுப்பில் வைக்கிறோம் என்று ஒவ்வொரு நாளும் (பதினைந்து நாளுக்கு ஒரு முறைதான் என்றாலும்… தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தால் மட்டுமே வீட்டுப்பாடத்தின் பளு) குறையும், நிறையும் சொல்லும் அனைத்து பதிப்பாசிரியர்களுக்கும் நன்றி.

முக்கியமாக லண்டன் சிவா.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-318/

சரி… சுய புராணம் போதும்.

இந்த 318ஆம் இதழைப் பார்த்தால்
ஏழு கதைகள்
ஏழு மொழியாக்கங்கள்

மொழிபெயர்ப்புகள் எல்லாவற்றையும் கடகடவென்று ஓட்டியதில்:
1. நம்பி – சுய முன்னேற்ற கட்டுரையைத் தந்திருக்கிறார். அமெரிக்காவில் உழைத்துத் தள்ளுவோருக்கான ஊக்க விட்டமின்

2. மயக்கமா… கலக்கமா… என்பது போல் டொடரொண்டோ வெங்கட் ஆக்கம் – இன்னும் ஆழமாக வாசிக்க வேண்டும். ஓவியம், மதம், புத்தம் என்று காக்டெயில் போட்டிருக்கிறார்.

3. ரேமண்ட் வில்லியம்ஸ் – நம்பிக்கைக்கான ஆதாரங்கள் : இப்பொழுது உங்களுக்கு இந்த இதழ் தினுசாக மன ஊக்கத்திற்க்காக, உள் உற்சாகத்திற்காக உருவானதோ என்னும் சந்தேகம் வர வேண்டும்.

4. நாம் அனைவரும் அர்ஸுலா லெ க்வினை அதிகம் படிக்க வேண்டும் – விபி வெங்கட் பிரசாத்தின் தமிழாக்கம். லெ குவின் எழுதிய ‘Sea Road’ போன்ற அதிகம கவனம் பெறாத ஆக்கங்களை அடுத்துக் கையில் எடுக்க வேண்டும். இது தெரிந்த விஷயங்களை அர்சுலா மூலமாகத் தொட்டுச் செல்கிறது.

5. எல்லா நேரத்திலும் அதிகபட்ச முயற்சியைக் கொடுங்கள் – பால் ஆஸ்டர் : நியு யார்க் நகரமும் நகரத்தின் எழுத்தாளர்களும் நியு யார்க்கை சுற்றி நடக்கும் எந்தக் கதையும் திரைப்படமும் எனக்கு ரசிக்கும். பால் ஆஸ்டர் இதெல்லாம் ஒருங்கேக் கொடுத்தவர். கூடவே ஃப்ரெஞ்சு வாசிப்பு + வளர்ப்பு வேறு உண்டு.

கூடவே…
யூதர்களைப் பற்றி, மார்கெரித் யூர்செனார் என்ன சொல்லியிருக்கிறார்?

இவ்வளவு சொல்லிவிட்டு அந்த ஏழு கதைகளைப் பற்றி ஒன்றுமே சொல்லாவிட்டால்…
நவீன உணவுமுறையில் பாரம்பரிய சோற்றை விரும்பும் தற்கால ஆண்களைச் சாடும் ’அறிவுப்புருசன் ‘ வாசித்தேன்.

சிறுகதை என்றால்
அ) முடிவுக்கு அருகில் துவங்க வேண்டும்
ஆ) சம்பவங்கள் நிறையவும் தாவல்கள் குறைவாகவும் இருக்க வேண்டும்
இ) போதனை வேண்டாம்; புரிதல் கொடுக்க வேண்டும்.

இது எதுவுமே அந்தக் கதையில் இல்லை. தமிழில் ஒரு பக்கம் காமம் + சுயம் குறித்து எழுதி அலுக்க வைக்கிறார்கள். இன்னொரு பக்கம் எண்பதுகளில் இருந்தே மீளாமல் புரளுகிறார்கள்.

நன்றாக எழுதுபவர்கள் எல்லாம் சினிமாவில் வாசம் செய்கிறார்களோ!?

அஞ்சனி

நல்ல சிறுகதை என்பது நல்ல நாவலைப் போல. முழு வாழ்க்கையையும் உணர்த்தும்.

நியு யார்க்கரில் லாரா (Lara Vapnyar) எழுதிய Siberian Wood அந்த ரகம்.

கதை எதைப் பற்றியது?

அ) திருமணம்; விவாகரத்து; மறுமணம் என்னும் சுழற்சியில் எவ்வாறு சிக்குகிறார்கள்?

I was too focussed on the struggles of motherhood at that age to see the magnitude of suffering that childlessness could cause. I’d spend hours discussing with other young mothers how tied down we felt. It was so much easier to list the hardships of having a child than to pinpoint the things that made it worthwhile. What was it that made it worthwhile, anyway? It was not about being fulfilled, no, though it was about being full—full of care, full of worry, full of affection, full of a love so great and pressing that it was almost indistinguishable from pain, full of something heavy and real that made you feel grounded, rather than weightless. You felt more there. That was precisely what Daria desperately wanted—to feel rooted, securely tied down.

ஆ) அமெரிக்காவில் குடிபுகுவதற்காக காதல் பாவ்லா கல்யாணம் செய்யும் வந்தேறி நிலைமை என்ன?

He was in awe of New York City—the streets, the buildings, the traffic, the people, the energy, the art! The Met was just stunning, especially the wooden sculptures made by the Asmat people. They were breathtakingly complex—it was as if tree roots were growing out of a person’s body, connecting her to her ancestors, who had roots growing out of their bodies, too, connecting them to the deeper past, and it went on and on. It was a brilliant way to show continuity of life, to hint at immortality.

இ) எல்லோருக்கும் பிடித்தமாக இருக்கும் டாரியா (Daria), குழந்தையைப் போன்ற பேரெல்லை இலட்சியக் கனவாக, எவ்வாறு எல்லாவற்றிலும் முழுமையை எதிர்பார்த்து நிராசையை எதிர்கொள்கிறாள்?

Mark thought that there was something silly and artificial about Daria’s fantasies. As if she had no idea what a family was or how it operated but took her clues from children’s picture books.

ஈ) நெகிழ்ந்து வளையும் நாணலையும் நெடிந்து தனித்து நிற்கும் பனை மரத்தையும் கடற்கரையில் பார்ப்போம். வாழ்வில் இணைத்தால்?

She was vegetarian and knew her way around vegetables, often using ingredients that Mark hadn’t even heard of, like kohlrabi or Japanese turnips or chicory.

உ) நிச்சயமின்மையை எண்ணிப் பார்த்து விளையும் பயங்களைக் கண்டு அஞ்சி நடுங்கி எலிவளையத்துக்குள் சிக்குறுகிறோமா? அடுத்த வேளை எங்கு இருப்போம், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், இன்னொருவருடன் ஓப்பிடாமல் — இலக்கை அடைய உயரப் பறக்கும் பட்டாம்பூச்சியாக பறந்து திரியலாமா?

There was a photo of Daria in the middle of a sea of volcanic ash, kneeling over a puny tree. She had her head cocked to one side, and her self-conscious smile suggested that she knew some people might find her endeavor ridiculous, like that of a child “planting” a stick in the sand. And yet she was doing it anyway. There was something inspiring in her insistence on continuing to try when most people would have given up, in her ability to preserve hope, no matter how absurd it was.

வாரயிறுதி விருந்தில் கதை ஆரம்பிக்கிறது. அந்த சந்திப்பில் நமக்கு கதாமாந்தர்கள் அறிமுகம் ஆகிறார்கள்.

துள்ளலான துவக்கம். தொடர்ந்து வாசிக்க வைக்கும் ஆர்வம். நடுநடுவே அருங்காட்சியக விமர்சனம்; கலையரங்க நையாண்டி; பலான விஷயம்; சுவையான தகவல் சரடு. எல்லாவற்றையும் விட சம்பவங்களினால் கோர்க்கும் லாவகம். இருபதாண்டு கால விஷயங்களை பத்து பக்கங்களில் பசுமையாகத் தரும் சாமர்த்தியம்.

தமிழ்ச் சிறுகதைகளோடு ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.

நீதி போதனை இல்லை. “இது மட்டுமே சரி!” என்னும் தீர்ப்புகள் இல்லை. வட்டார வழக்கு ஜாலங்கள் இல்லை. கேள்விகளை எழுப்பி, பக்கத்து வீட்டு மனிதர்களை உணர்த்தி, உக்ரெயின் – ரஷியா போரையும் நினைவிற்குக் கொணர்ந்து, நீண்ட நாள் நினைவில் தங்கும் குணச்சித்திரங்களை சிந்தையில் தேக்கும் ஆக்கம்.

கச்சிதம்.

புதிய தமிழ்க் கதைகள் – 293

புத்தம்புதிய சொல்வனம் இதழில் வந்துள்ள கதைகளுக்கான அறிமுகம் + விமர்சனம்:

1. ஜா. ராஜகோபாலன் எழுதிய தெய்வநல்லூர் கதைகள்:
நன்றாக எழுதக் கூடியவர்; கட்டுரைகளில் கவர்ந்தவர் புனைவில் மிளிர்வது கடினம். கட்டுரையாசியராக மிளிர்ந்த ஜாஜா கதாசிரியராகவும் நடத்திக் காட்டுகிறார்.

கதைகளில் அரசியல் சரிநிலை பயங்கள் கூடாது. இன்றைய கதைகளில் உள்ளதை உள்ளபடியே காண்பது அரியதாக உள்ளது. இந்தப் புனைவு சிறப்பான துவக்கம். அந்தக் காலத்திற்கு நம்மை அழைக்கிறது. நீங்கள் பார்த்த, சந்தித்த மனிதர்களைச் சொல்லுகிறது.

எல்லாவற்றையும் விட சுவாரசியமாக இருக்கிறது!


——

2. சாந்தி மாரியப்பன் எழுதிய கொடுக்கு:

முடிவை நோக்கி ஓடும் கதை. “ஆறும் அது ஆழமில்ல…” என, பெண்களுக்குள் இத்தனை விஷயம் இருக்குமா?

நாலு மாதம் கழித்து இந்தப் புனைவின் சமபவங்கள், மனதோரத்தில் கீறலாக நிலைத்திருக்குமா – இல்லை.
படிக்கும்போது திருப்தி கிடைக்கிறதா – ஆம்.

சற்றே சமீபத்திய ‘தப்பட்’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘அம்மு’, ‘ஜெய ஜெய ஜெய ஹே’ – போல் இன்னொரு முடிவு.

கதையின் நடுவே சம்பவங்கள் பலஹீனம். கதையின் உச்சகட்டம் நிறைவு.


——

3. அர்ஸுலா லெ க்வின் எழுதிய உள்ளும் வெளியும்

இதைக் குறித்து தனியாக எழுத வேண்டும். எழுதலாம்


——

4. பத்மகுமாரி எழுதிய அறுவடை

நெகிழ்வான கதை.

இந்த மாதிரி ஆக்கங்களின் ஆகப் பெரிய சிக்கல் என்னவென்றால், ஐம்பதாண்டுகள் முன்பே இதைப் படித்திருக்கிறோமோ என்னும் சந்தேகம் வரவழைக்கும் விஷயங்களைச் சொல்லும்.

இன்றைய காலகட்டத்தில், இக்கால இளைஞர்களுக்கு இந்த மாதிரி செண்டிமெண்ட் பிழிசல்கள் ஒத்து வருமா?


——

5. ந.சிவநேசன் எழுதிய சைக்கிள்

“வானத்தைப் போல”, விக்கிரமன் படம் போல் இன்னும் ஒரு எளிமையான சம்பவம்.

நடக்கக் கூடியதுதான். நல்லா இருக்கிறதுதான்.

இன்னும் நம் தமிழ் சமூகம் தொலைக்காட்சி நெடுந்தொடர் பிடியில் இருந்து வெளிவரவில்லை என்பதை நினைவூட்டிக் கொண்டால், எவ்வாறு இவ்வாறான புனைவுகள் ஹிட் ஆகின்றன என்பது புரியும்.


——

6. ஜாபாலன் எழுதிய இன்வெர்ட்டி-வைரஸ்

Reactance theory கேள்விப் பட்டிருப்பீர்கள். அதனுடன் கொஞ்சம் கோவிட், நிறைய காத்தாடி ராமமூர்த்தி, எஸ்.வி. சேகர், கிரேசி மோகன் நடை.

தத்துவார்த்தமாக “எதனால் ஊக்கம் கொள்கிறோம்?”, ‘எப்படி சொன்ன காரியத்தை, நம் மனம் செய்ய மறுக்கிறது?’ என்று சென்றிருக்கலாம். ஆராய்ச்சி, சிந்தை வளர மனம் மாறும் நிலை போன்றவற்றை உணர்த்தியிருக்கலாம்.

இப்போதைய அளவில் – ஏதோ நகைக்க வைக்க முயல்கிறார்.


——

நன்றி #solvanam

மேற்கத்திய உலகுடன் ஒப்பிட்டால் இந்தக் கதைகள் இன்னும் மூன்று அல்லது நான்கு தலைமுறை பின் தங்கியே இருக்கிறது. தமிழுலகின் தீவிர சிந்தனையாளர்கள் பணத்தைத் துரத்துவதாலோ அல்லது சீரிய முறையில் புனைவுலகை நெறியாண்டு கற்றுத் தரும் ஆசிரியர்களின் போதாமையினாலா?

Cultural identity, family relationships & the complexities of Intergenerational Communication

கதைசொல்லி சீனத்து பாட்டி. அவளுக்கு பிழையற்ற ஆங்கிலம் வாராது. எனவே, அவளின் கொச்சை மொழியிலேயே சம்பவங்களைச் சொல்கிறாள். அவளின் அமெரிக்க மகளின் பார்வையில், அந்தப் பாட்டி மோசமான குழந்தை காப்பகர். பாட்டிக்கு மாப்பிள்ளை புருஷ லட்சணமாக வேலைக்குப் போகவில்லையே என்னும் அங்கலாய்ப்பு. பொண்ணாக பொட்டி பாம்பாக பேத்தியை வளர்க்க எண்ணும் இறுமாப்பு.

முழுக்கதையும் சொல்லப் போவதில்லை. #சொல்வனம் இதழில் வாசியுங்கள்.

அன்னிய தேசத்திற்கு ஆயா வேலை பார்க்க போகும் எந்த இந்திய தாத்தா, பாட்டிக்கும் நடக்கக் கூடிய விஷயம் இது.

இதைப் போல் பல கதைகள் ஏற்கனவே வந்திருக்கின்றன:

  1. “Everyday Use” by Alice Walker: ஆப்பிரிக்க அமெரிக்க சூழல்
  2. “The Third and Final Continent” by Jhumpa Lahiri: இந்தியச் சூழல்
  3. “The Joy Luck Club” by Amy Tan: சீன குடியேறிகளும், இரண்டாம் தலைமுறை அமெரிக்க மகள்களும்

எனினும் Gish Jen எழுதிய Who’s Irish? அதன் தமிழ் மொழிபெயர்ப்பால் மிளிர்கிறது. திறமையான மொழியாக்கம். எளிமையான, அணுகலான, சிக்கலற்ற நடை.

#Solvanam தளத்தில் படிக்கலாம்

Culture is the values, beliefs, thinking patterns and behavior that are learned and shared and that is characteristic of a group of people.Identities are constructed by an integral connection of language, social structures, gender orientation and cultural patterns.

போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே !?

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்-பாகம் 3 : மூன்றாம் பாகம் : கொலை வாள்

21. “நீயும் ஒரு தாயா?”

https://amarkkalam.forumta.net/t20358-3

சிவபக்தியே உருவெடுத்தாற்போல் விளங்கிய மாதரசி செம்பியன் தேவி கூறினார்:-

“மகனே! உன் தந்தை கண்டராதித்த தேவர் சிம்மாசனம் ஏறியபொழுது, சோழ ராஜ்யத்தில் ஒரு சங்கடமான நிலைமை ஏற்பட்டிருந்தது. உன் பாட்டனார் பராந்தகச் சக்கரவர்த்தியின் பெருமையை நீ அறிந்திருக்கிறாய். அவருடைய ஆட்சிக்காலத்தில் சோழ ராஜ்யம் தெற்கே ஈழ நாடு வரையிலும், வடக்கே கிருஷ்ணை நதி வரையிலும் பரவியது. ஆனால், அவருடைய அந்திம காலத்தில் இராஜ்யத்துக்கும், இராஜ குலத்துக்கும் பல விபத்துக்கள் ஏற்பட்டன. இராவணேசுவரனுடைய மூல பல சைன்யத்தைப் போல் இரட்டை மண்டலத்துப் படைகள் படை எடுத்து வந்தன. பராந்தகச் சக்கரவர்த்தியின் மூத்த புதல்வரும், ஒப்புவமையில்லாத வீராதி வீரரும், உன் பெரிய தகப்பனாருமான இராஜாதித்த தேவர் இரட்டை மண்டலத்து மாபெரும் சைன்யத்தை எதிர்க்கப் புறப்பட்டார். வடக்கே தக்கோலம் என்னுமிடத்தில் குருஷேத்திர யுத்தத்தைப் போன்ற மாபெரும் போர் நடந்தது, லட்சக்கணக்கான வீரர்கள் மாண்டனர். இரத்த வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. இரட்டை மண்டலத்தாரின் சைன்யம் சிதறி ஓடியது ஆனால் அந்தப் போரில் இராஜாதித்த தேவர் பலியாகிவிட்டார். உன்னுடைய சித்தப்பா அரிஞ்சயத் தேவரும் அந்தப் போரில் ஈடுபட்டுப் படுகாயம் அடைந்தார். ஆனால் அவரைப் பற்றி யாதொரு விவரமும் அப்போது தெரியவில்லை. அரிஞ்சய தேவரின் மூத்த புதல்வர் சுந்தர சோழர், – சின்னஞ்சிறு பிராயத்துப் பிள்ளை – ஈழத்துப் போருக்குச் சென்றிருந்தார்.

*

https://www.chennailibrary.com/kalki/kalki.html

சரி… அதிருக்கட்டும். பெயரிலேயே முக்குலத்தோர் வைத்திருக்கும் வந்தியத்தேவரை உங்களுக்குத் தெரியும். அவரின் காதல் கதைக்கு எது மூலம்?

மன்னரின் மகள் குந்தவையை எப்படி கவர்ந்தார். அதற்கு நீங்கள் 1948ல் அவர் எழுதிய விதைக்கு வரணும்:

https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D

*

“காதறாக் கள்ளன்” சிறுகதை

இந்தச் சமயத்தில் கோழிகூவாப் புத்தூர் கருடாசலத்தேவரைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். கருடாசலத்தேவர் ஒரு காலத்தில் தில்லைமுத்துத்தேவரைப் போலவே செல்வாக்கு வாய்ந்தவராயிருந்தார். ஆனால் வயது காரணமாக அவர் உடம்பு தளர்ந்து போயிருந்தது. அதைக் காட்டிலும் அவருடைய வாழ்க்கையில் சில துயர சம்பவங்கள் ஏற்பட்டு அவர் மனம் இடிந்து போயிருந்தது. முக்கியமாக ஐந்து வருஷத்துக்கு முன்னால் அவருக்கும் அவருடைய ஏக புதல்வனுக்கும் சண்டை உண்டாகி பையன் வீட்டை விட்டு வெளியேற நேர்ந்தது. அற்ப விஷயத்தில் மன வேற்றுமை உண்டாயிற்று. தந்தை, மகன் இருவரும் பிடிவாதக்காரர்களாதலால் அந்த வேற்றுமை முற்றி விபரீதமாகி விட்டது. குடி மயக்கத்திலிருந்த கருடாசலத்தேவர் சொன்னபடி மகன் ஏதோ செய்யவில்லை என்பதற்காக நாலு பேர் இருக்கும்போது அவன் மீது செருப்பை விட்டெறிந்தார். ரோஸக்காரனாகிய மகன் “இனி உங்கள் முகத்தில் விழிப்பதில்லை” என்று சொல்லிவிட்டு அரண்மனையிலிருந்து கிளம்பிப் போனவன் தான்; திரும்பி வரவே இல்லை.

அங்கே புளியந்தோப்பில் பாளையக்காரன் தில்லைமுத்துத்தேவனும் ஜமீன்தார் கருடாசலத்தேவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். தில்லைமுத்துத்தேவன் கருடாசலத்தேவர் மீது பல புகார்களைச் சொன்னான். தன்னை அவமதித்துப் பேசியதாகவும் தன்னுடைய கிராமங்களில் மாடுகளை விட்டு மேய்த்ததாகவும் குற்றம் கூறினான். அதற்கெல்லாம் கருடாசலத்தேவர் சமாதானம் கூறினார். இப்படிக் கொஞ்ச நேரம் போக்கிய பிறகு பாளையக்காரன் கடைசியாக முக்கியமான விஷயத்துக்கு வந்தான். “உம்முடைய மருமகள் மரகதவல்லியை எனக்குக் கல்யாணம் செய்து கொடுங்கள். மற்றக் குற்றங்களையெல்லாம் மறந்து விடுகிறேன்!” என்றான்.

“என்னுடைய ஜமீனில் பாதி கேட்டாலும் கேள்; கொடுத்து விடுகிறேன்; என் மருமகளை மட்டும் கேட்காதே” என்றார் கருடாசலத்தேவர், “அது என்ன பிடிவாதம்? யாருக்காவது கட்டிக் கொடுக்க வேண்டியதுதானே? என்னைக் காட்டிலும் நல்ல மாப்பிள்ளை உமக்கு எங்கே கிடைக்கும்?” என்று தில்லைமுத்துத்தேவன் பச்சையாகக் கேட்டான்.

*

அநுமானத்திலடங்கும் பிரமாணங்கள்

சொகுசான இடங்களில் வாழ்பவருக்கு வறுமையும் தெரியாது. அங்கிருப்போரின் கதைக்களனும் ரம்மியமாக உளச்சிக்கல்களைக் கொண்டிருக்கும்.

இது பெரும்பாலானோருக்கு உவப்பானது. பெரும்பாலானோர் கதை எழுதுவதில்லை. அவர் நிம்மதியை நாடுபவர்.

அமெரிக்காவாக இருக்கட்டும். பணத்தில் புரளும் மேற்குலகம் ஆகட்டும். ஒவ்வொரு நியு யார்க் லண்டனிலும் நுழையக்கூடாத பிரதேசங்கள் உண்டு. அது வரைபடத்தில் இருந்தாலும் கூகிள் மேப்ஸ் அனுப்பாத சாலையைக் கொண்ட அரணாக இருக்கும். அங்கு போதை வஸ்துவும் கிடைக்கும். ராப்பிசாசாக அலைபவருக்கு வேண்டியவையும் விற்கப்படும்.

இது பெரும்பாலானோர் விரும்புவது. நல்லவர் எல்லாம் சொர்க்கத்தில் மிதப்பது வசதி. அல்லவர் எல்லாம் நரகத்தில் கண் காணாமல் இருப்பது தெரியாது.

நல்ல உணவு; கொண்டாட்டமான கேளிக்கை; நடந்தால் வரும் சுகந்தம் – இது சொர்க்கவாசி.

சாலை நடுவில் திக்கற்ற பார்வதி; பச்சை குத்திய தடிமாடு; சாயம் போன கார்; பேட்டையில் நுழைந்தாலே வரும் பயம் – இது சுவர்க்கவிரும்பி ஹாலிவுட் படத்தில் மட்டும் பார்க்கும் அக்ரஹாரம்.

இவ்வளவு முன்னுரையும் எதற்கு?

அமெரிக்காவில் கருப்பினத்தவரை பிச்சை எடுத்து பார்த்திருக்கிறேன். வயதானவரை சாலையோரமாக தட்டி வைத்துக் கொண்டு உண்டியல் குலுக்குவதைக் கண்டு அவசரமாக நகர்ந்திருக்கிறேன்.

சிலர், “இந்த தானம் எனக்காக இல்லை! எங்கள் அமைப்புக்காக!!” என்று சொல்வார். சிலர், “நானும் என் குடும்பமும் சாப்பிட்டு ஆறு வேளை, மூன்று நாள் ஆகி விட்டது. இந்தக் கடுங்குளிரில் ஒரு வாய் கவளத்துக்காவது காணிக்கை கொடுக்கவும்.” என்பார். சிலர், “உனக்காக நான் இராக் சண்டைக்குப் போனேன்! அப்படிப்பட்டவனை இப்படியா நடு ரோடில் விடுவது?” எனக் கேட்பார்.

அவருக்கு உருக்குலைந்த தோற்றம் இருக்கும். வெறித்த பார்வை இருக்கும். போருக்குச் சென்று திரும்பியவர் என்றோ சமீபத்திய பொருளாதராச் சரிவில் வேலை இழந்தேன் என்றோ எழுதியிருக்கும். புகைக்கு அடிமையானவர் என்பது முக அடையாளம்.

கருப்பர்; நோஞ்சான்; எலும்புருக்கி; கிழவி; வெடவெடக்கும் கை; பதற்றமான நடை; இறைஞ்சும் பார்வை – இதைக் கடந்து போக மனதை சிந்தையின் நியாயம் கொண்டு அடக்குவேன்.

ஆனால்… இன்று…

சாலையின் இந்தப் பக்கம் இந்தியப் பெண்மணி. அசப்பில் மணிரத்னம் கதாநாயகி போல் இருந்தார். சாலையின் இன்னொரு பக்கம் போஷாக்கான பூசியத் தோற்றம் கொண்ட பழுப்பு நிற தெற்காசியன். தமிழனோ? தெலுங்காக இருக்குமோ? வட இந்தியராகவும் இருக்கலாம். பக்கத்தில் மூன்றோ, நான்கு வயதோ மதிக்கத்தக்க குழந்தை. அதற்கான தள்ளுவண்டி.

பிற இரப்பாளர் இடத்தில் பார்த்தது போன்றே அழுக்கான கம்பளி. உடைமையைக் கொண்ட தரைவிரிப்பு. நம்மவர் ஏன் இப்படி வருவோர், போவோரிடம் கையேந்த வேண்டும்?

எல்லா தேஸி மக்களும் சுந்தர் பிச்சை மாதிரி அந்தஸ்துடன் சௌக்கியமாக இருப்பவர்கள் அல்லவா? நல்ல சம்பளம். சொகுசான கார். வீட்டு வேலை உதவிக்கு பெற்றோர். ஞாயிறு ஆனால் ஊர்சுற்றல். இப்படிப்பட்ட குடிபுகுந்தவரை மட்டுமே பார்த்தவனுக்கு அறிவு இயங்க மறுத்தது.

யாசகத்துக்கு என்ன காரணமாக இருக்கும்?

மனைவியை விற்கும் அன்னக்காவடியோ?

குழந்தையை வைத்து மிரட்டுகிறானோ?

இந்த ஆண்களே இப்படித்தான். எருதாண்டிமாடு ஆண்வர்க்கம்.

தன் வீடு, வாசல் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு ஓட்டாண்டியானவரோ?

சாஃப்ட்வேர் இல்லாத உணவக வேலை போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவரோ?

ஆடலுடன் பாடல் கச்சேரி நிகழ்ச்சிக்கு வருவோர் ஓரிருவரை தொலைத்துவிட்டுச் சென்றுவிடுவார். அந்த மாதிரி அனாதையாக்கப்பட்டோரோ?

ஆள்குறைப்பு, வேலையிழந்து நெடுங்காலம் காத்திருத்தல் போன்ற திடீர் தரித்திரத்தால் இந்த மாதிரி இறங்கினாரா?

கலிஃபோர்னியா போன்ற வேறு ஊரில் இருந்து வந்து கொள்ளையடிக்கப்பட்டு அனைத்து விஷயங்களையும் இழந்தவரோ?

பேருந்து நிலையத்தில் பயணத்திற்கு சொந்த ஊருக்குத் திரும்பிப் போக காசு வேண்டும் என்று இறைஞ்சுவாரே… அவரோ?

செய்வதறியாது திகைத்து கையறு நிலையில் இந்த இறுதி மார்க்கத்தில் இழங்கியவரோ?

சீவகராக பிஷை எடுத்து உண்ணவேண்டும் என்பது ஜாதகப் பரிகாரமாக சொல்லப்பட்டதால் அதற்காக இந்த மாதிரி பொன்னம்பலத்தார் ஆனாரோ?

பிட்காயின், டாஜ்காய்ன், எதிரீயம் என்று பணத்தை சூதாடி அழித்தவரோ?

அந்தப் பெண்ணின் அறிவிப்புத் தட்டியைப் படிக்க எத்தனித்தேன். அந்த அட்டை என்ன சொல்கிறது என்று பார்ப்பதற்குள் பச்சை விழ சாலையை விரைந்து விட்டேன்.

கூட வந்த நண்பர் செந்தில் சொன்னார்: “ரொம்ப யோசிக்காதீங்க பாலா… குறும்பட ஷுட்டிங் ஆக இருக்கும்!”

பின்புறம் காவலர் வருவது தெரிந்தது. அந்தத் தம்பதியரையும் சிறுவனையும் போலிஸ் ஜீப்பில் ஏற்றியனுப்புவது தூரப்புள்ளியாக மறைந்தது.

”கறுப்பர்களைச் சொல்லாமல் கதை சொல்லுங்களேன்”

மேற்குலகின் இலக்கிய வட்டத்தில் சிறுகதைகள் ஆழமான வாசிப்புக்கு போதுமானவை அல்ல என்பது பெரும்பான்மை வாதம். அந்தக் கருத்திற்கு சவால் விட்டு நிராகரிக்கும் ஆக்கங்கள் பரிசு பெறுகின்றன.

அந்த மாதிரியான படைப்பு – டீஷா ஃபில்யா எழுதிய “ஒரு இயற்பியலாளரைக் காதலித்துக் கலப்பதெப்படி? ”

இது எச்.பி.ஓ. தொலைக்காட்சியில் டிவி தொடராக வரப்போகிறது. பென் + ஃபாக்னர் விருது வாங்கியிருக்கிறது. லாஸ் ஏஞ்சலீஸ் ரிவ்யூ ஆஃப் புக்ஸ் புகழைப் பெற்றிருக்கிறது.

இந்த மாதிரி பரிசுகள் பெறுவதற்கு முன், முதலில் ஒரு வெளியீட்டாளரைக் கண்டுபிடிப்பதில் சிரமங்களை எதிர் கொள்கின்றன. நிராகரிப்புக்குப் பிறகு நிராகரிப்பை எதிர்கொண்ட டீஷா, “ஒவ்வொரு புத்தக வெளியீட்டாளரும் அது “நல்ல பொருத்தம்” அல்ல என்று வலியுறுத்துகின்றனர். ஏன் இவ்வளவு பிரசுரகர்த்தாக்கள் என் தொகுப்பை திரும்ப அனுப்பினார்கள் என்று யோசிக்காமல் இருப்பது கடினம் என நினைத்தேன். அவர்கள் எல்லோரும் கறுப்பு (குணம்) என்னும் அடையாளத்தை அழித்து கருப்பினத்தவர்களின் கதைகளை எழுதச் சொன்னார்கள். அந்த மாதிரி கட்டுப்பாடுகள் இல்லாத பதிப்பகத்தார் கடைசியில்தான் கிடைத்தார்.” என்கிறார்.

கதைசொல்லி நாற்பதுகளில் இருக்கும் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்மணி. பள்ளியில் ஓவியம் கற்றுக் கொடுப்பவர். அவளை ஒரு பொதுக்கூட்டத்தில் சந்திக்கிறோம். கலையையும் அறிவியலையும் ஒருங்கிணைத்து எவ்வாறு மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம் என்பதற்காக அந்தக் கல்வி மாநாடு நடக்கிறது. அவளுக்கு கருப்பின ஆண்கள் எவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள் என்பதன் மீது ஒரு கண். அந்த ஆடவனை அவளின் அம்மா ஒப்புக் கொள்ள வேண்டும்.

அவள் திறமையான இயற்பியலாளரை சந்திக்கிறாள். அவளுக்கு அவனைப் பிடித்திருக்கிறது. ஆனால் அவசரப்படாமல் எச்சரிக்கையாக இருக்கிறார். முதல் சந்திப்பில் மணிக்கூறாக பேசுகிறார்கள். அவளின் வேலையைப் பற்றிப் பகிர்கிறாள். அவனும் தன் வேலையைப் பற்றிச் சொல்கிறான். இருவரும் குறுந்தகவல்கள் அனுப்பிக் கொள்கிறார்கள். இருப்பினும் முதலில் அவனுக்கு காதல் ஆர்வம் இல்லை என்பது போல் தோன்றுகிறது.

உறவின் வளர்ச்சியைப் பார்ப்பதுதான் கதையின் உற்சாகம்.

இந்த அற்புதமான கதையை நீங்கள் படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

கதையை திற்ம்பட மொழியாக்கம் செய்த ஷ்யாமா அவர்களுக்கு என் வாழ்த்துகள்!

Climbers by Helen DeWitt

”உங்களுக்கு பொருட்டில்லாததை விற்கிறீர்கள். தேவடியாத்தனம் செய்யும்போது அது உடம்பு. பதிப்பிக்கும்போது, அது மூளை. மூளையை வைத்துதானே புத்தகம் எழுதுகிறோம்…”

ஆஃபீஸ் ஸ்பேஸ் (Office Space) படம் பார்த்திருப்பீர்கள். அந்தப் படத்தை இன்னும் கொஞ்சம் இலக்கியத்தரமாக எழுதினால், வாசகனை கொஞ்சம் யோசிக்க வைக்குமாறு புத்தகமாக உருவாக்கினால் எப்படி இருக்கும்? ஹெலன் டூயிவிட் எழுதிய மின்னல் தடிகள் (Lightning Rods) போல் இருக்கும். அந்தப் புத்தகம் குறித்த அறிமுக விமர்சனங்கள்தான் எனக்கு ஹெலன் என்னும் எழுத்தாளரை அறிமுகம் செய்தது.

அந்தப் புத்தகத்தின் கதை என்ன?

சந்தையிலே செல்லுபடியாகாத விற்பனையாளர் அறிமுகம் ஆகிறான். எதையும் சாமர்த்தியமாகப் பேசி ஒழுங்காக விற்கத் தெரியாதவன். வெட்டிப் பேச்சும் அழையா ஆலோசனைகளுமாக காலத்தைப் போக்குபவன். அனைத்து நிறுவனங்களிலும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக மனிதவள மேலாளர்கள் கெடுபிடியான நடைமுறைகளை வைத்திருக்கிறார்கள். அதற்கு மாற்றாக புத்தம்புதிய சாதனத்தை அறிமுகம் செய்கிறான். அலுவலில், பாலியல் தொல்லைகளை அதிகரிக்கும் சாதனம் – அனைத்து கழிப்பறைகளிலும் பொருத்தி விட வேண்டும். இந்தப் பொருளை நிறுவி விட்டால் உடன் பணிபுரியும் பெண்களைப் புணரலாம். யார் புணர்கிறார்கள் என்று தெரியாது. அலுவல் அழுத்தங்களும் அடக்கி வைத்த ஆசைகளும் இந்த மாதிரி சாதனத்தை நிறுவுவதால் நீங்கும் என்று அந்த விற்பனையாளன் அமோகமாக சந்தையில் சொல்லி, ஜாம்ஜாமென்று பணம் புரட்டுகிறான்.

இந்தக் கதையின் நாயகன் குறித்த பேட்டியில் ஹெலன் இவ்வாறு சொல்கிறார்:

“நான் பெண்ணாக இருந்தாலும், ஆண் பார்வையில் இந்தக் கதையை எழுதினேன். சொல்லப் போனால் பெண்களை முக்கிய பாத்திரமாக வைத்து எழுதுவதை விட ஆண்களை கதாநாயகனாகப் போடுவது எளிதாகவே இருக்கிறது.

என்னுடைய சின்ன வயதில் கை பாட்டுக்கு தானாக எதையாவது வரையும். ஆனால், பெண்களைத்தான் வரைய முடியும். என்னால் பசங்களை வரையவே முடியவில்லை. அந்த உருமாற்றம் எப்பொழுது நடந்தது என்று தெரியவில்லை. ஆண்களுடன் பழகும்போது கவனித்தேன்; அவர்களால் தங்களைப் பற்றியே பேச முடிந்தது. ஒரு ஆண் கதாபத்திரத்திற்குள் சென்று, அந்த பாத்திரம் மாதிரி யோசிக்க வேண்டுமானால், ரொம்ப சிரமப் பட வேண்டாம். அந்த ’ஆணுக்கு’ ஒருவிதமான மனப்பிடிப்பைக் கொடுக்க வேண்டும். அந்தப் பிடிப்பின் மேற்சென்று மிகைவிருப்பமாக்க வேண்டும். அது எப்படி அவனை ஆட்டிப்படைக்கிறது என்று எழுதினால் போதுமானது.

பெண்களை கதாபாத்திரங்களாக்குவது அவ்வளவு நேர்ப்படையானதல்ல. அவர்கள், அவ்வளவு சீக்கிரம் உணர்வு வசம் சிக்கி மாற்ற இயலா எண்ணத்திற்குள் சுழல்வதில்லை.

மின்னல் தடிகள் (Lightning Rods) நாவல் செக்ஸைப் பற்றியது. சாப்பிடும்போது கூட செக்ஸை குறித்து சகஜமாகப் பேச ஆடவர்களால் முடிகிறது. எந்த ஆணுடன் பேசினாலும் சரி… அவர்கள் இந்த மாதிரி ஏதாவது ஒன்றை உதிர்க்கிறார்கள்: ‘பருத்த மார்புகள் எல்லாருக்கும் பிடிக்கும்!’ உடனே எனக்கு நூறு கேள்விகள் தோன்றும். உனக்கு எப்படி இது தெரியும்? உனக்கு உன்னைப் பற்றித் தெரியும்… எல்லா ஆண்களும் இப்படித்தான் என்று எப்படி உன்னால் சொல்ல முடிகிறது? கருத்துக்கணிப்பு எடுத்தாயா? இதே ரீதியில்தான் என்னுடைய நாயகனும் இருக்கிறான். நம்பிக்கையாகப் பேசுவான். அவனுடைய இச்சையை வைத்து அனைவரைக் குறித்தும் அடித்துப் பேசுகிறான்.

இதே மாதிரி மக்களை பதிப்புத்துறையிலும் தொடர்ச்சியாக சந்தித்தேன். புத்தக வெளியீட்டிற்காக அவர்களுடன் உரையாடும்போது… மன்னிக்கவும்… பின்னாலிருந்து முகந்தெரியாத எவனோ ஒருத்தன் புணருவது போல் உணர்ந்தேன். தேவையில்லாத அறிவுரைகளைக் கேட்டு காது புளித்துப் போனபோது, இந்த நாவல் உருவானது.”

சரி… இப்பொழுது நவம்பர் ஹார்ப்பர்ஸ் இதழில் வெளியான ஏறுபவர்கள் (Climbers) கதைக்கே வந்து விடுவோம்.

ஹார்பர்ஸ் பத்திரிகையில் ஹெலன் (Helen DeWitt) எழுதிய ஏறுபவர்கள் (Climbers) கதை இங்கே கிடைக்கிறது: http://harpers.org/archive/2014/11/climbers/ (சந்தாதாரர்களுக்கு மட்டும் படிக்க இயலும்)

கதையில் நான்கு கதாபாத்திரங்கள். முதலாவதாக நமக்கு கில் அறிமுகமாகிறான். துடிப்பானவன். சுவாரசியமாகப் பேசுகிறான். நியு யார்க்கில் வசிக்கிறான். நிறைய படம் பார்த்து, புத்தகம் படித்து, இசை கேட்டு, கணினி மேய்ந்து, விளையாட்டுகள் களித்து வாழ்பவன். அவனுடைய உபசரிப்பு விழாவில் நமக்கு சக எழுத்தாளினியான ரேச்சல் அறிமுகமாகிறாள். பரபரப்பான கல்யாண ரிசப்ஷனில் தனியே போய் பஃபே சாப்பாடு எடுத்துக் கொள்வது போல், கில் வசிக்கும் வீட்டில் நடக்கும் இலக்கிய கூட்டத்தின் நடுவே விடப்பட்டிருக்கிறாள்.

இரண்டாவதாக சிஸ்ஸி தோன்றுகிறாள். (நீங்கள் என்னை முறைப்பது தெரிகிறது. ரேச்சல் என்பவள் இரண்டாம் எண்ணுக்குரியவள் அல்லவா என்று மறுமொழியில் கேட்காதீர்கள். பெயரில் என்ன இருக்கிறது? சிஸ்ஸியாக இருந்தால் என்ன… ரேச்சல் ஆக இருந்தால் என்ன போச்சு… அல்லது இருவருமே ஒருவர்தான் என்றாலும் உங்களுக்கு என்ன? நீங்கள் தொடருங்கள்) அவள் ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரத்தில் பீட்டர் டிஜிக்ஸ்டிரா என்னும் எழுத்தாளரை அகஸ்மாத்தாக சந்திக்கிறார். இந்த எழுத்தாளர்தான் கதையின் மையக் கரு. இவரைச் சுற்றித்தான் எல்லாம் நகர்கிறது.

எழுத்தாளர் என்று ஒருவர் இருந்தால் நாவல் என்று ஒன்று உருவாகும். நாவல் என்று ஒன்று உருவானால், அதைப் பதிப்பிக்க பதிப்பாளர் என்று ஒருவர் வேண்டும். பதிப்பாளரிடம் பத்திரமாக எழுத்தாளரையும், அவ்வளவு பத்திரமில்லாமல் அவருடைய நாவலையும் கொண்டு சேர்க்க ஏஜெண்ட் என்று ஒருவர் வேண்டும். அவர் ரால்ஃப்.

கால்ஃப் ஆடுவது போல் நல்ல பெயர் ரால்ஃப். பெயருக்கேற்ப நல்ல ஆடைகளையும், கவின்மிகு பழரசங்களையும், திடகாத்திரமான கண்கவர் வழக்கங்களையும், கொண்டவன். கொஞ்சம் போல் படாடோபம். நேர்த்தியான விற்பனையாளனைப் போல் எழுத்துக்களை அற்புதமாக பிரபலமாக்குபவன். சன்னமான எழுத்துக்களையும் கோட்டையில் கோலோச்ச வைப்பவன். அவனுடைய கைபட்டு நூல் வெளியானால், ஆப்பிரிக்காவில் இருந்து எபோலா பரவுவது போல் உலகெங்கும் அந்தப் புத்தகம் நோபல் பரிசுக்காக பேசப்படும்.

இந்த நாலு பேருக்கு நடுவில் ராபர்ட்டோ பொலானோ (Roberto Bolaño) எழுதிய 2666 உருளுகிறது. எழுத்தாளர் பீட்டர் டிஜிக்ஸ்டிராவைப் அசப்பில் பார்த்தால் ராபர்ட்டோ பொலானோ கூட நினைவிற்கு வரலாம். எழுத்தாளர் பீட்டருக்கு சீக்கிரம் பணம் புரட்ட வேண்டும். சிகரெட் பிடிக்க பணம் வேண்டும். நாலு சுவற்றுக்குள் அடைந்து கிடக்க வாடகைப் பணம் கட்ட வேண்டும். காலாற நடக்க பணம் வேண்டும். அதற்காகவாது எழுத வேண்டும். பணத்திற்காக எழுத வேண்டும்.

ராபர்ட்டோ பொலானோவின் 2666 குறித்து இரண்டு விதமான விமர்சனங்களை ரேச்சலும் சிஸ்ஸியும் சொல்கிறார்கள். ஒருவரால் இரண்டு பக்கத்திற்கு மேல் படிக்க முடியவில்லை. ’இந்த வாழ்க்கையில் ஒரே ஒரு புத்தகம் மட்டும் படித்தால் போதும் என்றால் அது ரொபார்ட்டோ போலானோ எழுதிய 2666 மட்டும்தான்’ என்னும் வகையில், இன்னொருவரால் 2666ன் சில பகுதிகளைப் படித்தாலே ஜென்ம சாபல்யம் கிட்டுகிறது.

பொலானோ எழுதிய பிரும்மராட்சஸ துப்பாறிவாளர்கள் (The Savage Detectives) நாவலை நீங்கள் படித்ததுண்டா? அதில் நாற்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் பார்வையில் கதை விரியும். புலவர்களுடன் உரையாடல், புலமைக் காய்ச்சல்கள், கவிஞர்களின் வாழ்விலே ஒரு நாள் என்று கலவையாகச் சொல்லப்பட்டிருக்கும். இந்த ஏறுபவர்கள் (Climbers) கதையும் இவ்வாறே நாலு எழுத்தாளர்களின் வாழ்வியல் சித்திரங்களுடன், பேச்சுக்களுடனும், விமர்சனங்களுடனும், எழுதவியலா தருணங்களின் தவிப்புகளுமாக விரிகிறது.

ஏறுபவர்கள் (Climbers) கதையில் – நிஜ எழுத்தாளர் ராபர்ட்டோ பொலானோ போல் உடனடியாக பணம் தேவைப்படும் கதாநாயகனாக பீட்டர் டிஜிக்ஸ்டிரா; ஆனால் ஏறுபவர்கள் (Climbers) கதையோ பொலானோவின் தி சாவேஜ் டிடெக்டிவ்ஸ் நாவலைப் போல் கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது.

எழுத்தாளர்களைப் பற்றி எழுதுவது சிக்கலானது. இவரைப் போல் இருக்கிறது, அவரைத்தான் குறிப்பிடுகிறார் என்று குற்றச்சாட்டுகள் எழாமல் பொதுப்படையாக, அதே சமயம் சம்பவங்களும் + விஷயங்களும் கலந்து எழுத வேண்டும். குறியீடுகள் சொல்லப் போய், கதையே புரியாமலும் போக விடாமல், நேரடியாகவும் பூடகமாகவும் புரிய வைக்க வேண்டும். எழுத்தாளர் என்றாலே இப்படித்தான் இருப்பார் என்னும் அரைத்த + புளித்த மாவான வார்ப்புருவிற்குள் சிக்காமல் கதை வளர வேண்டும். அவற்றை இந்த ஏறுபவர்கள் (Climbers) கதையில் ஹெலன் இயல்பாகக் கொண்டு வருகிறார்.

அந்த நாலு ஏறுபவர்களையும் கொஞ்சம் பார்ப்போம்.

பீட்டர் டிஜிக்ஸ்டிரா மனநல மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டவர். சிறிது சரிந்தாலும், மீண்டும் மனநல காப்பகத்திற்கே அனுப்பி வைக்கப்படுவார். அவருக்கு ஆங்கிலம் இரண்டாம் மொழி. தாய்மொழியில் எழுதி பணம் சம்பாதிக்க முடியவில்லை. ஷிவாஸ் ரீகல் வேண்டாம். நல்ல பியர் கூட வாய்க்கப் பெறுவதில்லை. எனவே, ஆங்கிலத்தில் எழுத முயல்கிறார். முதலில் வார்த்தைகள்; தேர்ந்தெடுத்த வார்த்தைகளாகப் பொறுக்க வேண்டும். வார்த்தைகள் கிடைத்த பின் வாக்கியங்கள். வாக்கியங்களை எப்பொழுது நேரம் கிடைக்குமோ, அப்பொழுது மனிதர்களிடம் ஏற்றிவிடப் பார்க்கும் எழுத்தாளர்.

கில் ஒரளவு புகழடைந்துவிட்ட எழுத்தாளன். விளக்கு வைப்பதற்குள் வோட்கா ஏற்றிக் கொள்பவன். இலக்கியவாதி பீட்டர் டிஜிக்ஸ்டிராவிற்கு மாடியறையைக் கொடுப்பதால் சமூக அந்தஸ்திலும் ஏற நினைப்பவன். உண்மையை எழுத்தில் ஏற்ற எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தேடியலைபவன்.

ரேச்சல் புத்தகம் எழுதி அச்சில் கண்டவள். பீட்டர் டிஜிக்ஸ்டிராவை ஏற்றிவிடத் துடிப்பவள். வான் கோ வரைந்த ஓவியம் பிடிக்கும் என்பதால் வான் கோ வரைந்த ஊருக்கே சென்று, அவருடைய வீட்டினுள்ளே வசித்துப் பார்க்க விழையும் ஜாதி. எழுத்தாளருடன் அளவளாவினால், என்ன சங்கதி கிடைக்கும் என்று அளந்து பார்க்காமல், எழுத்தாளனின் எழுத்தை அடித்தல் திருத்தலோடு, முதல் பிரதியை வாசிக்க விழையும் ஜாதி. எழுத்தாளரின் ஒரு கதை பிடித்துப் போனதால், மொழி புரியாத அயல்நாட்டுப் புத்தகங்களை அள்ளிக் கொண்டு வீட்டின் புத்தக அலமாரியில் கொலு வைத்து அழகு பார்க்கும் ஜாதி. ஒரேயொரு புரிதல் கலந்த ஆற்றுப்படுத்தும் சிணுங்கலில் எவரையும் ஆசுவாசப்படுத்தி தரைக்கு இறக்கும் ஜாதி.

இறுதியாக முகவர் ரால்ஃப். பாரிஸ் என்றால் சாக்லேட் காதல்; லத்தீன் அமெரிக்கா என்றால் மாந்திரீகம் தூவிய எதார்த்தம்; ஜப்பான் என்றால் தனிமைத் துயரின் விரக்தி; என்ற பாசறையில் டட்ச்சு மொழிக்கான இலக்கணமாக எழுத்தாளர் பீட்டர் டிஜிக்ஸ்டிராவை கணிப்பவர். அமெரிக்காவின் அமெரிக்கர்களின் எடுத்துக்காட்டாக கதையில் வருகிறார். கண் துஞ்சாமல், கருமமே கண்ணென இலக்கியத்தை செய்து முடிப்பவர். இவர் போன்றோர் ஏவுவதனாலேயே, எழுத்தாளர்கள் தங்கள் காவியங்களுக்கு இறுதி வடிவைத் தருகிறார்கள்; விமர்சகர்கள் பயபக்தியோடு அந்த இலக்கியபீடத்தை அணுகுகிறார்கள்; நூல் வெளியீட்டாளர்களும் லாபம் சம்பாதித்து பங்குச்சந்தையில் ஏறுகிறார்கள்.

கதையின் அமைப்பு மிகவும் சிக்கலான அமைப்பு. சிறுகதையில் இத்தனை கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு நாட்டில் உலாவுகிறது. முடிவிற்கு வெகு அருகில் கதை துவங்குகிறது. அந்த முடிவிற்கு சற்றே முன்பாக கதை முடிகிறது. முன்னும் பின்னுமாக கதை உலாவினாலும் குலுக்கிக் குலுக்கிக் கதையை விட்டு தூரப் போடாமல், சுவாரசியமாக முன்னேறுகிறது. அந்த அமைப்பிற்காகவே இன்னொரு முறை படித்தேன். மீண்டும் படிக்கும்போதுதான், வார்த்தைகளின் தேர்வும், கதாபத்திரங்களின் குணாதிசய அறிமுகங்களும், சொல்லாட்சியும் பிடிபட்டது. அந்தச் சுவைக்காக மீண்டும் மூன்றாம் முறை படித்தேன். அப்பொழுதுதான் மற்ற புத்தகங்களின் விமர்சனமும், வேற்று மொழி கற்றுக் கொள்வதை சொல்லும் நேர்த்தியும், சுற்றுலா தலங்களை விவரிக்கும் வர்ணனையும் ஈர்த்தது. அதற்காக இன்னொரு முறை படிக்க வேண்டும்.

http://en.wikipedia.org/wiki/Theodor_W._Adorno