Tag Archives: IPL

குற்றுழிஞை

ஏன் காவ்யா மாறன் தனியே, தன்னந்தனியே அமர்ந்து சன்ரைசர்ஸ் ஆட்டங்களை ரசிக்கிறார்?

ஏதாவதொன்றை தேர்ந்தெடுக்கவும்:

1. அப்பா கலாநிதி படம் எடுத்துக் கொண்டிருப்பதால்
2. ஹைதராபாத் பிரியாணியில் மற்றவர்கள் எல்லாம் பங்கு கேட்பதால்
3. ஸ்டெல்லா மேரீஸ் பொண்ணுங்களே இப்படித்தான்… இதுவே இராணி மேரி ஆகவோ எத்திராஜாகவோ பெண்கள் கிறித்துவக் கல்லூரியாகவோ இல்லாமல் போனதால்
4. கண்ணா பன்றிங்க தான் கூட்டமா வரும்! சிங்கம் சிங்கிள் ஆ தான் வரும் என ஜெயிலர் சிவாஜி பன்ச் பேசியதால்
5. ஆந்திரப் பிரதேசம் வேண்டுமென்றால் தெலுங்கானா எனப் பிரிந்து போயிருக்கலாம். ஹைதராபாத் என்றைக்கும் கொல்ட்டிகளின் ஒரே தலைநகரமாக இருப்பதால்
6. கூட வர பிசினாறிகளுக்கு எல்லாம் விமானத்தில் பயணச்சீட்டு எடுத்து இந்தியா எங்கும் சுற்றிக் காண்பிக்க விரும்பாததால்
7. அணியில் வேண்டுமானால் பதினொன்று பேர் ஆடலாம். எல்லோர்க்கும் தலைவி ஒருத்தியாக புதிய அம்மாவாக உருவாவதால்
8. தேர்தல் நேரம் – உறவினர் முக ஸ்டாலின் அவர்களும் அமைச்சர் உதயநிதி அவர்களும் பிரச்சாரத்திலும் பதற்றத்திலும் இருப்பதால்
9. அதுதான் இராசி என்பதால்… அப்பொழுதுதான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஜெயிக்கும் என்பதால்

பத்தாவது காரணத்தை பின்னூட்டத்தில் சொல்லவும்

ஒரு தானாகி மலைதல் (குற்றுழிஞை)

https://www.tamilvu.org/courses/degree/d021/d0213/html/d0213665.htm#:~:text=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20(%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%88)

களவுபூசல் – லடாய் ப்ளே

ஜிம்பாப்வே இன்னும் கிரிக்கெட் ஆடுகிறது. தெரியுமா?

எப்படி தெரிய வைப்பது… இப்படித்தான்!

அயர்லாந்து நாட்டுடன் ஆன போட்டியில், சிக்கந்தர் ராஜா தன் மட்டையை ஓங்கிக் காண்பித்து ‘ஒண்டிக்கு ஒண்டி வரியா’ என ஜோஷ் லிட்டில் என்னும் பந்து வீச்சாளரை அழைத்திருக்கிறார். கர்ட்டிஸ் காம்ஃபர் என்னும் அயர்லாந்து வீரரும் சண்டைக்குத் தயாராக சிக்கந்தருடன் மல்லுக்கட்ட களமிறங்குகிறார். நடுவர் ஒருவழியாக கைகலப்பை விலக்கி விட்டிருக்கிறார்.

அதே போல் இந்தியாவில் கேப்பிடல்ஸ் அணியும் குஜராத் ஜியண்ட்ஸ் அணியும் போட்டியில் ஆடியிருக்கின்றனர்.

இந்த ஆட்டம் எல்லாம் எவர் பார்ப்பார்கள்? ஆனால், கவுதம் கம்பீரும் ஸ்ரீசாந்த்தும் இதைத் திரும்பிப் பார்க்க வைக்கின்றனர். இருவரும் அரசியல்வாதிகள். அதனால், வாய்ச் சவடாலுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டுமா… என்ன!?

ஆட்டத்தின் நடுவில் ஸ்ரீசாந்த்தை “எத்தன்” (ஃபிக்ஸர்) என அழைக்கிறார் கௌதம் கம்பீர். அசாரூதீன், ஜடேஜா, தோனி என்னும் நெடிய வரிசையில் ஸ்ரீசாந்த் சகதலப்புரட்டன். எந்த ஆட்டத்தில் எவர் ஆடுவார், எப்பொழுது தலைக்கு மேல் பந்து போடுவார், துடுப்பாட்டத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை முன்கூட்டியே ஆரூடம் சொல்வது மட்டும் அல்லாமல், சொன்னதை சொன்னபடி நிறைவேற்றிக் காட்டுபவர்.

இப்பொழுது அவரிடம் புதிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கிரிக்கெட் மழையில் மூழ்கித் தவிக்கும் பார்வையாளரை எப்படி உப்பு சப்பில்லாத உள்ளூர் போட்டிகளையும் பார்க்க வைப்பது?

எனவே, கீழ்க்கண்ட புதிய பவர்ப்ளே – லடாய் ப்ளே முறையை அறிமுகம் செய்யுமாறு பரிந்துரைக்கிறேன்:

  1. ஓரு போட்டியில் மூன்று சண்டைகள் வரை போடலாம். (டி10 ஆட்டம் என்றால் அதிகபட்சமாய் இரண்டு சண்டைகள்)
  2. ஒரு அணிக்கு ஒரு சண்டை. நடுவர்களும் ஒரு சண்டையைத் துவக்கலாம். சண்டைகள் ட்விட்டரில் வைரல் ஆனால், துவக்கிய அணிக்கு ஒரு புள்ளி கிடைக்கும். நடுவர் துவங்கினால், மூன்றாவது அம்பையரின் முடிவே இறுதி முடிவாகக் கொண்டு புள்ளிகள் கொடுக்கப்படலாம்/
  3. மட்டையை வைத்துக் கொண்டு அடித்துக் கொள்ளக் கூடாது. குறிபார்த்து பந்தை எறிவது என்றால் நாற்பது மீட்டராவது தள்ளி நின்று வீச வேண்டும்.
  4. ஒரு பந்தயத்தில் ஒருவர் அதிகபட்சமாய் ஒரு முறை மட்டும் களத்தில் குதித்து கட்டிப் புரண்டு சேற்றை வாரி இரைக்கலாம்

சண்டைகளை சமூக ஊடகத்திலும் தொடரலாம். விரைவிற் பரவுகின்ற வரையில் கொண்டு செல்லும் அணிக்கு ஒரு புள்ளி தரப்படும்.

பார்வையாளர்கள் பகுதியில் நடக்கும் கைகலப்புகளுக்கு மதிப்பெண் கிடையாது.

அப்படியாவது இந்த ஆட்டங்களை தொலைக்காட்சியில் பார்ப்பீர்களா? என்ன விதிகளை சேர்க்கலாம்? யார், யார் சிறப்பாக வாய்ச் சவடால் விடுபவர்கள்?

Mayanti Langer – Indian Cricket Commentators

இந்த உலகக் கோப்பையில் நான் ரசித்த முதல் அம்சம் மயந்தி லங்கர்.

வெறுமனே கவர்ச்சிக்கும், ஊறுகாயாகத் தொட்டுக் கொள்ள பெண் தொகுப்பாளினியும் இருந்த காலகட்டம் காணாமல் போயிருக்கிறது. இவர், “நீயா… நானா?” கோபிநாத் ரகம். தரமான கேள்விகள்; சுனில் கவாஸ்கார் போல் ஒயிலான மிடுக்கு; காதில் வருவதையும் எதிராளி பேசுவதையும் நேரமும் இடமும் அறிந்து முன்னெடுக்கிறார்.

நான் மந்திரா பேடி காலத்தவன். அவர் டி.டி.எல்.ஜே (தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே) படத்தில் நடித்த ஒரே குற்றத்திற்காக, கிரிக்கெட் போட்டிகளிலும் நடுவே வந்து போனார்.

அதற்கும் முந்தைய ஹிந்தி மட்டுமே அரசாண்ட பிஷன் சிங் பேடி, லாலா அமர்நாத், கிஷோர் பேமானி, சுஷில் ஜோஷி போன்றவர்கள் பேச்சைக் கேட்டால், குளக்கரையில் கரையும் காகங்களின் இனிமை புரியவரும். ஹிந்தி தெரிந்திருந்தால் அந்த மொழியை இப்படியாக உபயோகிக்கக் கூடாது என்பதும் தெரியவரும். டிவியின் ஒலியை மொத்தமாகக் குறைத்துவிட்டு, வெறுமனே காட்சியை மட்டும் பார்க்கலாம். அதாவது, இளையராஜா பாடலை ரேடியோவில் ஒலிக்க விடுங்கள். தொலைக்காட்சியில் ஒரு நாள் போட்டி ஓடும்.

ஆங்கில காமெண்டரி எப்பொழுதுமே தேவலாம். நரோத்தம் பூரி போன்றவர்கள் ஜமாய்ப்பார்கள். எனினும், பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வர்ணனையாளர்களை எந்த இங்கிலீஷ்காரராலும் தொட இயலவில்லை. ரிச்சி பெனாட், டோனி கிரெக் – இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் சரிந்தால் கூட மென்மையாகச் சொல்வார்கள். ஸ்டீவ் வாக் வெளுத்து வாங்கினால் கூட குறைகளைச் சுட்டுவார்கள்.

அதன் பிறகு நிறைய பேர் வந்ததாகக் கேள்விப்பட்டேன். ஹர்ஷா போக்ளே, சித்து – இவர்கள் மைக்கை பிடித்த போது எனக்கு கிரிக்கெட் எட்டாத கனியாகி விட்டிருந்தது.

மீண்டும் ஐ.பி.எல். மூலமாக வந்த போது அறிமுகமான பெண் வர்ணனையாளர் மாயாந்தி. லட்சணமாக இருந்தார். இன்னொரு மந்திராவோ என மிரட்சியுடன் அலட்சியமாகக் கேட்டேன். சுனில் கவாஸ்கரின் ஒய்யாரமும் ரவி சாஸ்திரியின் ஆங்கிலப் புலமையும் கவனிக்க வைத்தது. ஆனால், அவரை பின் தொடர வைத்தது — அந்த ஆஸ்திரேலியாக்காரர்களின் வாக்கு வன்மை.

கொஞ்சம் தேடினால், என்னென்னவோ சாதித்து இருக்கிறார் மாயந்தி. எப்பொழுது இருந்தோ அளவளாவுகிறார் லங்கார். எதெதற்கோ நேரடி ஒலிபரப்பாளர் ஆக இருந்திருக்கிறார் லங்கர். கணவன் கூட புகழ் பெற்றவராம். நம்ம 83 ரோஜர் பின்னியின் மகனை மணமுடித்திருக்கிறார்.

சந்தோஷமாக இருந்தது. கிளப் ஆட்டம் போல் இறக்கிவிடப்பட்ட மசாலா பதார்த்தங்கள் இன்று லியோ சிங்கமாக முழுமுதல் திரையையும் காத்திரமாக ஆக்கிரமித்து விவரணையை விவரமாகத் தருவது – புதிய தலைமுறையின் சாதனை.

IPL, LPL, LTTE, IPKF – T20 and Team Names

பத்து வயதிருக்கும். வீட்டில் எதையும் படிக்கும் சுதந்திரம். அந்த அட்டை கிழிக்கப்பட்ட நூல் வாசிக்கக் கிடைத்தது. ரஜினியின் படமான ‘தர்ம் யுத்தம்’ போல் அந்த 1983 கொலைகாரர்கள், கறுப்பு ஜூலை அராஜகவாதிகள் எல்லோரையும் தீர்த்துக் கட்ட எவராவது பிறக்க மாட்டார்களாக என மனம் துடிதுடிக்க வைத்த புத்தகம். கற்பனையில் பல்வேறு சண்டைகளை எண்ணிப் பார்த்து சமாதானம் அடைவேன்.

இன்றைய காலகட்டத்தில் இலங்கை பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் நடத்துகிறது. அதற்கான அணிகளின் பெயர்களில் இயக்கங்களின் பெயரைப் போட்டால் எப்படி இருக்கும்!?

இலங்கையில் இருக்கும் தமிழருக்கான சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பல நிலைகளில் பல்வேறு காலகட்டங்களில் இயக்கங்கள் செயல்பட்டன. ஈழ இயக்கங்களில் புகழ்பெற்றவற்றின் பெயர்கள் (அகரவரிசைப்படி):

1. ஈழ தேசிய விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எஃப். – Eelam National Democratic Liberation Front (ENDLF))
2. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) (Eelam People Democratic Party (EPDP))
3. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈ.பிஆர்.எல்.எஃப். – Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF))
4. ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ் – Eelam Revolutionary Organization of Students (EROS) – ஈ.ஆர்.ஓ.எஸ்.)
5. தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ – Liberation Tigers of Tamil Eelam (LTTE) – எல்.ரி.ரி.ஈ.)
6. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (ப்ளாட் (அ) புளொட் – People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE) – பி.எல்.ஒ.டி.ஈ.)
7. தமிழீழ விடுதலை இயக்கம் (டெலொ (அ) ரெலா – Tamil Eelam Liberation Organization (TELO) – டெலோ)
8. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (டி.எம்.வி.பி. – Tamileela Makkal Viduthalai Pulikal (TMVP))
9. தமிழர் விடுதலைக் கூட்டணி (அரசியல் கட்சி) (டுல்ஃப் (அ) ரி.யு.எல்.எப் – Tamil United Liberation Front (TULF) – டி.யு. எல்.எஃப்)

இலங்கை ப்ரீமியர் லீக் எல்.பி.எல் டி20 அணிகளின் பெயர்கள்:

1. Colombo Strikers – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் என்பதற்கு பதில்: கொழும்பு கொமாண்டோக்க‌ள்
2. Dambulla Aura – டம்புல்லா ஆரா என்பதற்கு பதில்: தம்புள்ளை துள்ளர்கள்
3. Galle Titans – கேலே டைட்டன்ஸ் என்பதற்கு பதில்: கல்லே கெரில்லாக்கள்
4. Jaffna Kings – ஜாஃப்னா கிங்ஸ் என்பதற்கு பதில்: யாழ்ப்பாண புலிகள்
5. B-Love Kandy – கண்டி பி-லவ் என்பதற்கு பதில்: கண்டி கழுகுகள்

இன்னும் ஆர்வமாக இலங்கை டிவெண்டி 20 பார்ப்போமோ?

சென்னை வீரர்களும் சி.எஸ்.கே.வும்

சென்னை சூப்பர் கிங்ஸ் என்று பெயர்.
ஆனால், தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு வீரர் கூட இல்லை.

சோனு யாதவ் – ஆர்.சி.பி – பெங்களூர்
சாய் சுதர்சன் – குஜராத் டைட்டன்ஸ்
முருகன் அச்வின் – ராஜஸ்தான் ராயல்ஸ்
என் ஜெகதீசன் – கல்கத்தா க்நைட் ரைடர்ஸ்
விஜய் ஷங்கர் – குஜராத் டைட்டன்ஸ்
ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் – குஜராத் டைட்டன்ஸ்
டி நட்ராஜன் – சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
ரவிச்சந்திரன் அச்வின் – ராஜஸ்தான் ராயல்ஸ்
தினேஷ் கார்த்திக் – ஆர்.சி.பி – பெங்களூர்
வருண் சக்கரவர்த்தி – கல்கத்தா க்நைட் ரைடர்ஸ்
வாஷிங்டன் சுந்தர் – சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
ஷாருக் கான் – பஞ்சாப் கிங்ஸ்

பிசாத்து இருபது லட்சம் கொடுத்து, ஒருவரைக் கூடவா ஏலத்தில் எடுக்கவில்லை?

புரிகிறது…

இதே போல்தானே கால்பந்து கிளப்புகள் நடக்கின்றன!?
அமெரிக்க ஃபுட்பால், கூடைப்பந்து எல்லாம் கூட இப்படித்தானே…
பாஸ்டன் நகரத்தில் பிறந்த வீரர் –> சிகாகோ அணிக்காக ஆடுவாரே!?

இருந்தாலும்…

துலீப் கோப்பையிலும், ரஞ்சி டிராபியிலும் நம்ம உள்ளூரு பசங்க ஜெயிக்க வேண்டும் என்னும் நினைப்பு வரும்.
இப்பொழுது ராஜஸ்தான் ராயல் ஜெயிக்கணும்னு நெனப்பு வருது.

எது எப்படியோ…

இருபது ஓவர் பந்தயத்தில் கடைசி பந்து வரை இருக்கை நுனியில் இருபத்தைந்து பேர் உட்கார்த்தி வைக்கிறார்கள்.
அதற்கு தனி மேலாண்மை நிர்வாகமும் நடுங்காத அமரிக்கையும் சூது தகிடுதத்தங்களும் வேண்டும்.
அத்தனையும் ஒருங்கிணைக்கிறார்கள். அரங்கேற்றுகிறார்கள்.

லலித் மோடி இல்லாவிட்டால் என்ன? எத்தனையோ எத்தர்கள்!

சென்னை இராஜாங்கம்: V

அவ்வப்போது அமெரிக்காவில் விழும் ஒரு இன்ச் snow, ஒன்றரை மில்லிமீட்டர் பனியை, வீட்டு வாயிலில் இருந்து தெருவுக்குத் தள்ளிவிடுவதற்கே கண்களாலும் மூக்காலும் அழுபவன் நான். மிக மிக எளிமையாக வாசலைத் தெளித்துக் கோலம் போடுவது போன்ற கைங்கர்யம் அது.

குட்டி எவரெஸ்ட் மாதிரி இருக்கும் மணற்குவியலை, தலைக்கு மேல் இருக்கும் குப்பை வண்டியில் shovel செய்தவரைப் பார்த்தவுடன் மனம் நாணிக் கோணியது. சர்வ சாதாரணமாக, பகல் 41 டிகிரி வெயிலில் தூக்கிப் போட்டார். நீல்மெட்டல் சென்னையை சுத்தமாக மாற்றியுள்ளது.

முப்பது வருடம் முன்பு ரூபவாஹினிக்காக இலங்கை ஆண்டெனாக்கள் மொட்டை மாடிகளை நிறைத்திருக்கும். காக்கைகளும் அவற்றை ஆசையாகத் திருப்பி வைக்கும். ராஜபக்ஸே தமிழ்த் தொலைக்காட்சியை நிறுத்தி விட்டாரா என்று நாராயணனை விட்டு விசாரிக்க சொல்லவேண்டும். இன்றைய மாடிகள் முழுக்க சாடிலைட் டிஷ் ஆக்கிரமிப்பு. காக்கைகளும் காணாமல் போய்விட்டது. வேடந்தாங்கலிலாவது இருக்கிறதா என்று ப்ளாஸ்டிக் பைகளில் சோறு கட்டி சென்று பார்த்துவர வேண்டும்.

ஆட்டோக்காரர்கள் மெமரி கார்ட் கொண்டு பாட்டு போடுகிறார்கள். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கிளம்பிய இடத்தில் இருந்து சேரும் இடத்திற்கே கேட்கும் அலறலுடன் கூடிய எம்பி3 ஒலி. வேண்டிய பாடல்களை ஐபாட் shuffle ஆக மாற்றும் வசதி. பண்பலை என்னாச்சு என்னும் கேள்விக்கு ‘போயே போச்சு‘ங்கிறார்.

‘ஏன்’?

கேள்விக்கு பத்ரி மொட்டை மாடியில் பதில் சொன்னார்.

‘எஃப்.எம். ரேடியோக்கள் செய்திகளை ஒலிபரப்ப முடியவில்லை. ஆல் இந்தியா ரேடியா தவிர எவரும் நேரடி நிகழ்வுகளை உடனுக்குடன் சொல்லமுடியாது! ஐ.பி.எல் மாதிரி எத்தனையோ லைவ் விஷயங்கள் வானொலிக்கு வரவேண்டும்’.

மோகம் முப்பது தபா; ஆசை அறுபது ராவு என்பது போல் சிட்டி சென்டரும், எக்ஸ்டென்ஷன்களில் உலவும் ஸ்பென்சரும் பல்கிப் பெருத்தபின் சென்னை யுவன்களுக்கும் காரிகைகளுக்கும் மால் அலுத்துப் போய்விட்டது. அல்லது ஜாகையை மாற்றிக் கொண்டுவிட்டார்கள்.

இன்றளவிலும் ‘சூடிதாரில் நான் வருவேன். சல்வார் கமீஸை நான் மறவேன்’ என்று மதுரை சோமுவாகிறார்கள். லுங்கியைப் போன்ற வண்ணமயமான காற்றோட்டமான ஸ்கர்ட், அதிர்ச்சி மதிப்பீடாக தாவணி, நாகரிகமும் குறையாமல் கற்பும் காக்கும் முக்கால் பேன்ட் எதுவும் காணோம். அதெல்லாம் வந்தால் ‘ராம சேனா’வும் பாரதிய ஜனதாவும் வந்துவிடும் என்னும் பயமோ!

‘கடந்த 48 மணி நேரமாக பெண்களுடன் கலந்துரையாடி, பின்தொடர்ந்து “What women wantனு புரிந்து கொள்வதிலேயே நேரம் போவதாக’ சலித்துக்கொண்டவரிடம்தான் விசாரிக்கவேண்டும்.