ஏழாம் வகுப்பு இறுதித் தேர்விற்கு மகள் தயாராகிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு உதவும் நோக்கில் சில கட்டுரைகள் படிக்க ஆரம்பித்தேன். அவள்தான் எடுத்துக்காட்டுகளை பரிந்துரைத்து படிக்க வைத்தாள்.
சென்ற வருடம் பரீட்சை எழுதியவர்களின் பதில்கள்தான் இந்தக் கட்டுரைப் பரீட்சையில் என்ன கேள்விகள் கேட்கிறார்கள்?
1) உங்கள் வாழ்வை இன்னொருத்தராக வாழ நினைத்தால், எவராக மாறுவீர்கள்?
2) மற்றொரு நாட்டில் பத்தாண்டுகளாவது வசிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டால், எந்த இடத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?
3) ஒருவரிடம் எந்த குணாதிசயம் அவசியம் அமைந்திருக்க வேண்டும்? ஏன்?
4) பள்ளி அல்லாமல், பிற இடங்களில் நீங்கள் கற்றுக் கொள்ளும் ஏதாவது ஒரு செயலையோ, கலையையோ, நுட்பத்தையோ, சொல்லுங்கள். அது எப்படி உபயோகமாகும் என்பதையும் எதனால் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கிறீர்கள் என்பதையும் சொல்லுங்கள்.
இப்படி, எல்லாமே சுயம் சார்ந்த கட்டுரைகள்.
பள்ளியில் இரண்டு மணி நேரம் தந்திருக்கிறார்கள். முதலில் ஒரு அரை மணி நேரம் குறிப்பெடுக்கிறார்கள். யோசிக்கிறார்கள். அதன் பிறகு கடகடவென எழுதி விடுகிறார்கள். நான் படித்தவை பெரும்பாலும் நல்ல கட்டுமானத்துடன் நீளமான கட்டுரைகள். 1500 வார்த்தைகளாவது இருக்கும்.
ஒருவர் Zeus ஆகப் போவதாக எழுதியிருந்தார். ஏ4ல் நான்கைந்து பக்கங்கள் நீளம். செம சுவாரசியம். நடை மட்டும் இனிப்பாக இல்லாமல், ஜீயஸ் பற்றிய தகவல்களும் எக்கச்சக்கம். சாதகங்களைப் பட்டியலிட்டார்; பாதகங்களையும் தற்குறிப்பேற்று விளக்குகிறார். இயல்பான நகைச்சுவை. முதல் இரண்டு பத்தியில் ‘யாராகப் போகிறாரோ!’ என்னும் ஆர்வத்தைத் தூண்டினார்.
இதே போல் பத்து, பனிரெண்டு கட்டுரைகளை வாசித்தேன். மேற்கத்திய உலகில் ‘எப்படி எழுதுவது?’ என்பதை சின்ன வயதில் இருந்தே கற்றுக் கொடுக்கிறார்கள். தொடர்ச்சியாக, ஒவ்வொரு வகுப்பிலுமே, எழுதுவதை ஊக்குவிக்கிறார்கள்.
நான் படித்த காலத்தில் திருக்குறளுக்கு உரையாகட்டும்; உரைநடைக்கு பதிலாகட்டும். இம்மி அகன்றால் கூட மதிப்பெண் கிடைக்காது. இப்பொழுதைய நிலை எப்படியோ!?
ஆங்கிலப் பாடத்திலும் கற்பனைக்கும் சொந்தத் திறமைக்கும் பதில் இலக்கணம் பிசகாத எழுத்தில் மட்டுமே கவனம் கொண்டிருப்போம். மேற்கிலும் இலக்கணத்திற்கு மரியாதை கொடுக்கிறார்கள். ஆனால், தன்னிலை சார்ந்த நீள் கட்டுரைகளையும், படித்துப் பார்த்து புரிந்து கொண்டதற்கான வாசக அனுபவங்களையும் விரிவாக எழுத வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இணையத்தில் தமிழ் எழுத்துகள் நிறைய கிடைக்கிறது. எனக்குத் தமிழில் எழுதத் தெரிவதால் தமிழ்ப்பதிவுகளை உருவாக்குகிறேன். சிந்திக்கத் தெரிந்ததாலோ, சிரிக்க வைக்கத் தெரிவதாலோ, தமிழ்ப்பதிவுகளை உருவாக்கவில்லை.
இது உருவாக்கும் சாராரின் நிலை. இதை உட்கொள்பவரின் மனநிலையில் இருந்து இன்னொரு தன்னிலை விளக்கம் கொடுப்பேன். ஆனால், இரண்டையுமே நான் சரியாக செய்வதில்லை என்றே எண்ணுகிறேன்.
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது ஆக்கம், எழுத்தாளர், எழுத்து, கட்டுரை, கதை, கற்பனை, கேள்வி, சுவாரசியம், சொல், தேர்வு, பதில், பயிற்சி, பரீட்சை, பள்ளி, புனைவு, மாணவர், வகுப்பு, வாசகர், வாசிப்பு, வார்த்தை, வினா
State of Tamil Cinema Reviewers: Movies vs Books
கடந்த பதினைந்து வருடங்களாக பட அறிமுகங்களை எழுதுபவன் + இணையத்திலும் பத்திரிகைகளிலும் விமர்சனங்களை அவ்வப்போது வாசித்தும் வருபவன் என்ற முறையில் எனக்குப் பட்டது….
* பெரும்பலான சமயம் படம் வெளியானவுடன் டாரெண்ட் தரவிறக்கத்தில் படம் பார்ப்பதால், திரையரங்கின் மன ஒருமை கிடைப்பதில்லை. அதை விடக் கொடுமை, ஆங்கிலப் படத்திற்கு ப்ளூ ரே ப்ரிண்ட்டும் தமிழ்ப்படங்களுக்கு திருட்டு விசிடியும் பார்க்க வேண்டும் என்னும் மனப்பான்மை.
* விகடன் விமர்சனம் போல் மார்க் போட்டு வாடிக்கை. எல்லாப் படத்திற்கும் மதிப்பெண் மட்டுமே வழங்கத் தெரியும்.
* திக்குவாய், குருடி போன்ற குறைபாடுகளை நல்ல நடிப்பு என்றும் ரஜினி, விஜய் படங்களை மசாலா என்றும் வகைப்படுத்துவோம்.
* கேமிராவில் ஒளிப்படம் எடுப்பதாலும், நாலைந்து முறை குழந்தைகள் நிகழ்ச்சியை வீடியோ எடுத்ததாலும் சினிமா எடுக்கும் அனைத்து வித்தையும் தெரிந்ததாக நினைக்கிறோம்.
* தொலைக்காட்சி சீரியல் (என்னைப் போல் ஆசாமிகள் தூர்தர்ஷன் நாடகம்) பார்த்தே பழக்கம். திரைப்படங்களிலும் அதே வாசனை எதிர்பார்க்கிறோம்.
* புத்தகத்திற்கு அறிமுகம் எழுதுவதை விட சினிமாவிற்கு அறிமுகம் கொடுப்பது எளிதானது. உதாரணமாக இயக்குநர் பாலா போன்ற புகழ்பெற்ற எழுத்துலக ஜாம்பவானை விமர்சிக்க நிறைய திராணி வேண்டும். ஆனால், ‘பாலா’ போன்றவரை விமர்சிப்பதால் சாதாரண மனுஷனாக அடையாளம் காட்டிக் கொள்ளலாம். இன்னும் விரிவாகச் சொன்னால் ஆயிரம் பக்க புத்தகத்தை தாக்கி எழுதினால் இலக்கியவாதியாக ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. ‘கடல்’ படத்தையும் பரதேசியையும் விமர்சித்தால் humble ஆளாகி விடலாம்.
* மோசமான படத்தைப் பாராட்டியும், சுவாரசியமான படைப்பை மட்டம் தட்டியும் எழுதினால் மட்டுமே கவனம் கிடைக்கிறது.
* சென்ற கால சினிமாவில் இருந்து வித்தியாசமாய் நின்று தமிழ்த் திரைப்படங்களை எது முன்னகர்த்துகிறது என்று கவனித்து பகிர்வதை விட, அந்தத் திரைப்படங்களின் கதையை வைத்து மன்றாடுவது எளிது.
என்னுடைய ஆண்டிராய்ட் போனிற்கு புதிதாக ஏதாவது நிரலியை நிறுவிக் கொண்டே இருப்பேன். சில சமயம் அதைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவேன். சில சமயம் உடனடியாக நீக்கிவிடுவேன். அது எனக்கு எப்படி உபயோகமாகிறது, ஏற்கனவே இருக்கும் மற்ற அப்ளிகேஷன்களில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது என்பதைப் பொறுத்து என் முடிவு அமைகிறது. வைரஸ் போன்ற தாக்குதல் கொடுத்தால் மட்டுமே, கூகுள் கடை சென்று மட்டகரமான தரமதிப்பீடு தருகிறேன்.
சினிமாவிற்கும் அதே அளவீடு பயன்படுத்தலாம். நோய்க்கிருமி போல் கலையை கீழே இழுக்கிறதா? அல்லது தனிப்பட்ட முறையில் உபயோகமான விதத்தில் முன்னேற்றுகிறதா?
1 பின்னூட்டம்
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது அறிமுகம், இணையம், எழுத்தாலர், கதை, கேமிரா, கோடம்பாக்கம், சினிமா, தமிழ்ப்படம், நூல், படம், பதிவு, புத்தகம், வலை, விமர்சனம், Books, Cinema, Comments, Critics, Films, Hollywood, Kadal, Kodambakkam, Movies, Opinions, Paradesi, Reviewers, Reviews, Tamil