Tag Archives: கதை

புனித பிம்பங்களை புனைவாக்குவது எப்படி?

Before I built a wall I’d ask to know
What I was walling in or walling out,
And to whom I was like to give offence.
Something there is that doesn’t love a wall,
That wants it down.
– “Mending Wall” – Robert Frost

பக்கத்துவீட்டுக்காரரையும் பாசமுடன் பார்க்க அழைக்கும் கவிதைகளை எழுதியவரின் சொந்த வாழ்க்கை எப்படி இருக்கும்? “ஹார்ப்பர்” பத்திரிகையில் ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ் கதை எழுதியிருக்கிறார். கொஞ்சம் காட்டமாக; நிறைய உள்மாந்திரமாக; ஆங்காங்கே வம்பு தூவி.

முழுக்க முழுக்க புனைவு என்றால் விட்டுவிடலாம். புகழ்பெற்ற எழுத்தாளனைப் பற்றிய கற்பனை என்று சொல்லிவிடலாம். கற்பனை என்பதால் நிஜ சமாச்சாரங்கள் ஒன்றும் உள்ளே கிடையாது என்றும் விட்டுவிடலாம். ஆனால், ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ் எழுதிய சிறுகதைக்கு Fall of Frost (by) Brian Hall புத்தகம் அடிப்படையாக இருந்தது என அடிக்குறிப்பிடிருக்கிறார். அப்படி என்னதான் குற்றம் செய்துவிட்டார் ராபர்ட் ஃப்ராஸ்ட்?

1. சக எழுத்தாளர்களை மரியாதைக் குறைவாக விமர்சிப்பது: மற்ற கவிஞர்களை எல்லாம் மட்டம்தட்டி தன் புகழைப் பரப்பி இருக்கிறார். தன்னை ஆராதிக்காத எவராக இருந்தாலும், அவர்களுடைய முக்கியமான ஆக்கங்களை தன்னுடைய இலக்கிய தாதாயிஸம் மூலமாக அமுக்கி இருக்கிறார்.

2. குடும்பத்தை சிதைத்தது; ஆறு வயது மகளை துப்பாக்கி முனையில், “அப்பாவா? அம்மாவா? இப்பவே ஒண்ணு தேர்ந்தெடு!” என்று நள்ளிரவு எழுப்பி மிரட்டுகிறார். ‘மானே…தேனே’ என்று கவிதைப் பழகத் துவங்கிய மகனை முளையிலேயே அறுக்கிறார். பதினாறு வயது சிறுமி எவரை பார்த்தாலும், அவர்கள் பின்னே தன் கவிதையைப் பாடி துரத்தியிருக்கிறார்.

3. ஓரிரு படைப்புகளை முன்னிறுத்துயே காலந்தள்ளியது: ரஜினியின் எல்லாப் படத்திலும் பன்ச் வசனம் வருவது போல், தன்னுடைய சிறந்த கவிதையை மட்டும் எல்லா சபைகளிலும் சொல்கிறார்.

இவை எல்லாவற்றையும் விட தன்னுடைய ஆதர்சம், தன்னுடைய கண் முன்னே சரிவதை இந்தக் கதை புனைவாக்குகிறது. இலக்கியவாதியின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்யலாமா என்னும் கேள்வியை வீசுகிறது. சரித்திரக்கதையை எப்படி புனைகதை ஆக்குவது என காட்டுகிறது. அறிஞர் அண்ணா, கலைஞர் மு கருணாநிதி போன்ற புனித போப் பிம்பங்களின் ஒன் ஹிட் வொண்டர் ஆக்கங்களை எப்படி கலைப்பது என காட்டுகிறது.

இங்கே இணையத்தில் முழுக்கதையும் கிடைக்கிறது

நன்றாக எழுத என்ன தேவை?

ஏழாம் வகுப்பு இறுதித் தேர்விற்கு மகள் தயாராகிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு உதவும் நோக்கில் சில கட்டுரைகள் படிக்க ஆரம்பித்தேன். அவள்தான் எடுத்துக்காட்டுகளை பரிந்துரைத்து படிக்க வைத்தாள்.

சென்ற வருடம் பரீட்சை எழுதியவர்களின் பதில்கள்தான் இந்தக் கட்டுரைப் பரீட்சையில் என்ன கேள்விகள் கேட்கிறார்கள்?

1) உங்கள் வாழ்வை இன்னொருத்தராக வாழ நினைத்தால், எவராக மாறுவீர்கள்?
2) மற்றொரு நாட்டில் பத்தாண்டுகளாவது வசிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டால், எந்த இடத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?
3) ஒருவரிடம் எந்த குணாதிசயம் அவசியம் அமைந்திருக்க வேண்டும்? ஏன்?
4) பள்ளி அல்லாமல், பிற இடங்களில் நீங்கள் கற்றுக் கொள்ளும் ஏதாவது ஒரு செயலையோ, கலையையோ, நுட்பத்தையோ, சொல்லுங்கள். அது எப்படி உபயோகமாகும் என்பதையும் எதனால் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கிறீர்கள் என்பதையும் சொல்லுங்கள்.

இப்படி, எல்லாமே சுயம் சார்ந்த கட்டுரைகள்.

பள்ளியில் இரண்டு மணி நேரம் தந்திருக்கிறார்கள். முதலில் ஒரு அரை மணி நேரம் குறிப்பெடுக்கிறார்கள். யோசிக்கிறார்கள். அதன் பிறகு கடகடவென எழுதி விடுகிறார்கள். நான் படித்தவை பெரும்பாலும் நல்ல கட்டுமானத்துடன் நீளமான கட்டுரைகள். 1500 வார்த்தைகளாவது இருக்கும்.

ஒருவர் Zeus ஆகப் போவதாக எழுதியிருந்தார். ஏ4ல் நான்கைந்து பக்கங்கள் நீளம். செம சுவாரசியம். நடை மட்டும் இனிப்பாக இல்லாமல், ஜீயஸ் பற்றிய தகவல்களும் எக்கச்சக்கம். சாதகங்களைப் பட்டியலிட்டார்; பாதகங்களையும் தற்குறிப்பேற்று விளக்குகிறார். இயல்பான நகைச்சுவை. முதல் இரண்டு பத்தியில் ‘யாராகப் போகிறாரோ!’ என்னும் ஆர்வத்தைத் தூண்டினார்.

இதே போல் பத்து, பனிரெண்டு கட்டுரைகளை வாசித்தேன். மேற்கத்திய உலகில் ‘எப்படி எழுதுவது?’ என்பதை சின்ன வயதில் இருந்தே கற்றுக் கொடுக்கிறார்கள். தொடர்ச்சியாக, ஒவ்வொரு வகுப்பிலுமே, எழுதுவதை ஊக்குவிக்கிறார்கள்.

நான் படித்த காலத்தில் திருக்குறளுக்கு உரையாகட்டும்; உரைநடைக்கு பதிலாகட்டும். இம்மி அகன்றால் கூட மதிப்பெண் கிடைக்காது. இப்பொழுதைய நிலை எப்படியோ!?

ஆங்கிலப் பாடத்திலும் கற்பனைக்கும் சொந்தத் திறமைக்கும் பதில் இலக்கணம் பிசகாத எழுத்தில் மட்டுமே கவனம் கொண்டிருப்போம். மேற்கிலும் இலக்கணத்திற்கு மரியாதை கொடுக்கிறார்கள். ஆனால், தன்னிலை சார்ந்த நீள் கட்டுரைகளையும், படித்துப் பார்த்து புரிந்து கொண்டதற்கான வாசக அனுபவங்களையும் விரிவாக எழுத வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இணையத்தில் தமிழ் எழுத்துகள் நிறைய கிடைக்கிறது. எனக்குத் தமிழில் எழுதத் தெரிவதால் தமிழ்ப்பதிவுகளை உருவாக்குகிறேன். சிந்திக்கத் தெரிந்ததாலோ, சிரிக்க வைக்கத் தெரிவதாலோ, தமிழ்ப்பதிவுகளை உருவாக்கவில்லை.

இது உருவாக்கும் சாராரின் நிலை. இதை உட்கொள்பவரின் மனநிலையில் இருந்து இன்னொரு தன்னிலை விளக்கம் கொடுப்பேன். ஆனால், இரண்டையுமே நான் சரியாக செய்வதில்லை என்றே எண்ணுகிறேன்.

ஜெமோ எஃபெக்ட்: படிப்பதில் எல்லாம் வெண்முரசு

Benji_Chinelo_Short_Story_Fiction_Red_New_Yorkerநியு யார்க்கரில் சினேலோ (Chinelo Okparanta) எழுதிய ”பென்ஜி” கதை வாசித்தேன். நாற்பதுகளைத் தாண்டிய பின்னும் மனைவியைத் தேடிக் கொண்டிருக்கும் குள்ளமாய், பணக்காரனாய், அம்மா கோந்தாக இருக்கும் ஆப்பிரிக்கனை பற்றிய கதை. மூன்று முக்கிய கதாபாத்திரங்கள். அம்மா, குள்ளப் பையன், அம்மாவின் புதுத் தோழி. நடுநடுவே வீட்டில் வேலைப் பார்க்கும் தோட்டக்காரரும், சிப்பந்திகளும் வந்து போகிறார்கள்.

பத்து… பன்னிரெண்டு வருடக் கதையை சிறுகதையில் கொடுக்கிறார். அம்மாவிற்கும் தோழிக்கும் நடுவே நடக்கும் உரையாடல், தோழிக்கும் பையனுக்கும் உரையாடல், கூடவே நிறைய சம்பவங்கள் என அமைதியாக நகர்கிறது. நைஜீரியா அறிமுகமாகிறது. முடிவெல்லாம் ஊகிக்க முடிந்தாலும் மனிதர்களின் குணாதிசயமும் சாமர்த்தியமும் சமரசமும் சுவாரசியமாக்குகிறது.

வெண்முரசு வாசித்து வரும் சமயத்தில் இந்தக் கதையும் வாசித்ததால், அந்தத் தோழி கதாபாத்திரத்தை சத்தியவதிக்கு ஒப்பிட்டுப் பார்த்தேன். பணக்கார நாற்பதுவயசுக்காரனை பீஷ்மராக வைத்துக் கொள்கிறேன். மகாபாரதத்திற்கு இப்படி ஒரு முலாம் பூசிப் பார்த்தால் மகாபாரதத்தின் சூட்சுமங்களை இன்னும் வெளிப்படையாக எழுத்தாளரும் விவரிக்கலாம். அந்த கதாபாத்திரங்களின் நிர்ப்பந்தங்களையும் நிராசைகளையும் வாசகரும் எளிதில் அணுகலாம்.

கதையில் இருந்து..

”பணம் போதலை போதவில்லையென் சிலர் எப்பொழுதும் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். அப்படி அலட்டுபவர்களிடம்தான் பணம் கொட்டிக் கிடக்கும். அல்லது பணம் குறைவாக இருப்போர்தான் செல்வச்செழிப்பில் இருப்பது போல் பாவ்லா காட்டுகிறார்கள் எனலாம். இந்த இரண்டு வர்க்கத்தில் அவள் எந்த ரகம்?”

State of Tamil Cinema Reviewers: Movies vs Books

கடந்த பதினைந்து வருடங்களாக பட அறிமுகங்களை எழுதுபவன் + இணையத்திலும் பத்திரிகைகளிலும் விமர்சனங்களை அவ்வப்போது வாசித்தும் வருபவன் என்ற முறையில் எனக்குப் பட்டது….

* பெரும்பலான சமயம் படம் வெளியானவுடன் டாரெண்ட் தரவிறக்கத்தில் படம் பார்ப்பதால், திரையரங்கின் மன ஒருமை கிடைப்பதில்லை. அதை விடக் கொடுமை, ஆங்கிலப் படத்திற்கு ப்ளூ ரே ப்ரிண்ட்டும் தமிழ்ப்படங்களுக்கு திருட்டு விசிடியும் பார்க்க வேண்டும் என்னும் மனப்பான்மை.

* விகடன் விமர்சனம் போல் மார்க் போட்டு வாடிக்கை. எல்லாப் படத்திற்கும் மதிப்பெண் மட்டுமே வழங்கத் தெரியும்.

* திக்குவாய், குருடி போன்ற குறைபாடுகளை நல்ல நடிப்பு என்றும் ரஜினி, விஜய் படங்களை மசாலா என்றும் வகைப்படுத்துவோம்.

* கேமிராவில் ஒளிப்படம் எடுப்பதாலும், நாலைந்து முறை குழந்தைகள் நிகழ்ச்சியை வீடியோ எடுத்ததாலும் சினிமா எடுக்கும் அனைத்து வித்தையும் தெரிந்ததாக நினைக்கிறோம்.

* தொலைக்காட்சி சீரியல் (என்னைப் போல் ஆசாமிகள் தூர்தர்ஷன் நாடகம்) பார்த்தே பழக்கம். திரைப்படங்களிலும் அதே வாசனை எதிர்பார்க்கிறோம்.

* புத்தகத்திற்கு அறிமுகம் எழுதுவதை விட சினிமாவிற்கு அறிமுகம் கொடுப்பது எளிதானது. உதாரணமாக இயக்குநர் பாலா போன்ற புகழ்பெற்ற எழுத்துலக ஜாம்பவானை விமர்சிக்க நிறைய திராணி வேண்டும். ஆனால், ‘பாலா’ போன்றவரை விமர்சிப்பதால் சாதாரண மனுஷனாக அடையாளம் காட்டிக் கொள்ளலாம். இன்னும் விரிவாகச் சொன்னால் ஆயிரம் பக்க புத்தகத்தை தாக்கி எழுதினால் இலக்கியவாதியாக ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. ‘கடல்’ படத்தையும் பரதேசியையும் விமர்சித்தால் humble ஆளாகி விடலாம்.

* மோசமான படத்தைப் பாராட்டியும், சுவாரசியமான படைப்பை மட்டம் தட்டியும் எழுதினால் மட்டுமே கவனம் கிடைக்கிறது.

* சென்ற கால சினிமாவில் இருந்து வித்தியாசமாய் நின்று தமிழ்த் திரைப்படங்களை எது முன்னகர்த்துகிறது என்று கவனித்து பகிர்வதை விட, அந்தத் திரைப்படங்களின் கதையை வைத்து மன்றாடுவது எளிது.

என்னுடைய ஆண்டிராய்ட் போனிற்கு புதிதாக ஏதாவது நிரலியை நிறுவிக் கொண்டே இருப்பேன். சில சமயம் அதைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவேன். சில சமயம் உடனடியாக நீக்கிவிடுவேன். அது எனக்கு எப்படி உபயோகமாகிறது, ஏற்கனவே இருக்கும் மற்ற அப்ளிகேஷன்களில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது என்பதைப் பொறுத்து என் முடிவு அமைகிறது. வைரஸ் போன்ற தாக்குதல் கொடுத்தால் மட்டுமே, கூகுள் கடை சென்று மட்டகரமான தரமதிப்பீடு தருகிறேன்.

சினிமாவிற்கும் அதே அளவீடு பயன்படுத்தலாம். நோய்க்கிருமி போல் கலையை கீழே இழுக்கிறதா? அல்லது தனிப்பட்ட முறையில் உபயோகமான விதத்தில் முன்னேற்றுகிறதா?

போரும் அரசியலும்: ரத்தசரித்திரம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருக்கிறார். உலக வர்த்தக மையத்தை இடித்த தாலிபான் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்துகிறது. அப்படியே, சும்மா கொஞ்சம் மகாபாரத புராணக் கதை.

துரோணருக்கு முன்பு பாண்டவர்களுக்கு ஆசிரியராக, குருவாக இருந்தவர் கிருபர். கிருபருடைய சகோதரி கிருபியை, துரோணருக்கு மணம் செய்வித்தார்.

கிருபர், கௌரவர்களின் நன்மதிப்பைப் பெற்றார். துரியோதனனிடம் நன்றியுடன் வாழ்ந்து வந்த அவர், மகாபாரதப் போரில் கௌரவப் படையின் 11 படைத்தலைவர்களுள் ஒருவராகவும் இருந்தார். அர்ஜுனன் மகன் அபிமன்யுவை தீர்த்துக் கட்டியவர்களில் முக்கியாமானவர்.

கிருஷ்ணரின் சதியால் அசுவத்தாமாவை படைத் தளபதியாக நியமிக்கவே இல்லை. மகாபாரதப் போரின் இறுதியில் எஞ்சிய கௌரவர்களுள் கிருபர், கிருதவர்மன், அஸ்வத்தாமா ஆகிய மூவரே. மூவரும் பாண்டவர்கள் அடைந்த வெற்றிக்குப் பிறகு, துரியோதனனின் வீழ்ச்சியால் மனம் கொதித்திருந்தார்கள். அஸ்வத்தாமா, பாண்டவர்களை வேரோடு அழிக்க நினைத்தான்.

கிருபர், அவனுக்குப் பல அறிவுரைகளைக் கூறினார். கிருஷ்ணரின் சகாவான கிருதவர்மா என்ற யாதவ குல மன்னரும் அவ்வாறே கூறினார். ஆனால் கிருபரின் யோசனையை அஸ்வத்தாமா ஏற்கவில்லை. அஸ்வத்தாமா கிருபரின் உடன் பிறந்த கிருபியின் மகன். துரோணருக்கு முன்பே அஸ்வத்தாமன் கருத்தரிப்பு நடந்துவிட்டது.

அஸ்வத்தாமா இரவோடு இரவாக பாண்டவர்களின் பாசறை நோக்கிச் சென்ற போது, கிருபரும், கிருதவர்மனும் உடன் சென்றார்கள். அஸ்வத்தாமா பாசறைக்கு உள்ளே சென்றபோது, கிருபர், கிருதவர்மன் இருவரும் பாசறையின் முன்வாசலில் ஒருவரும், பின்வாசலில் ஒருவருமாக காவலுக்கு நின்றார்கள். பாஞ்சாலியின் புதல்வர்களையும் திருஷ்டத்யும்னனையும் கொன்ற பிறகு, மூவரும் துரியோதனனின் இருப்பிடத்துக்குச் சென்று இந்தச் செய்தியைக் கூறிய பின்பே துரியோதனனின் உயிர் பிரிந்தது.

கிருபர் ஹஸ்தினாபுரத்தில் அனைவராலும் போற்றத்தக்கவராக வாழ்ந்தார். அபிமன்யுவின் புத்திரன் பரிக்ஷித்து இளவரசனுக்கு கிருபரே, ஆசாரியராக இருந்து அஸ்திர வித்தைகளைக் கற்றுத்தந்தார்.

Alice Munro: Too much happiness: Short Story Collection Intro

ஆலிஸ் மன்ரோ குறித்து பல முறை கேட்டு இருந்தாலும் முதன்முறையாக அவரின் சிறுகதைத் தொகுப்பில் சில கதைகளை வாசித்தேன். வழக்கம் போல் ‘டூ மச் ஹேப்பினெஸ்’ புத்தகத்தில் ஆங்காங்கே கிடைத்த சிலதை மட்டுமே படித்தேன்.

உரையாடல் இருக்கிறது. கரடு முரடான பல்லுடைக்கும் சிறுபத்திரிகை நடை கிடையாது. சமூகப் பிரச்சினைகள கூட த்ரில்லர் போல் எப்படி முடிக்கப் போகிறார் என்று எதிர்பார்க்க வைக்கிறது. விநோத மனிதர்களின் வித்தியாசங்களை நியாயப்படுத்தாமல், அவர்கள் தரப்பின் எண்ணங்களை விதைக்கிறது.

அறம் பாடாமல் அறம் எழுதுவது எப்படி என்றும் நேர்மையாக எழுதினால் அலுப்பு தட்டும் என்பதை உடைப்பது எப்படி என்றும் கிரிமினல்களின் வாழ்க்கையை விவரித்தால் ஒரு பக்கம் மட்டும் சொல்லாமல் மறுபக்கங்களையும் செண்டிமெண்ட் கலக்காமல் உணர்ச்சிகரமாக சொல்வதெப்படி என்றும் அறியலாம்.

விஷயம் தெரியாமல் காலை விட்டால் விஸ்வரூபம்

தீபம் இதழில் வெளியான பொன்னம்மாள் பக்கங்களில் இருந்து:

Deepam_PonnammalPakkam

Vaishnavist Thiruppathy Tour Guide: 108 Divya Desam Book by Ponnammal

Thanks: Kalki Book Reviews

படம்

Dheepam Column on Ashtavakkirar by Ponnammal: Hinduism Stories

நியு இங்கிலாந்து தமிழ் இலக்கிய சங்கம்: எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் வாசகர் சந்திப்பு

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் தன்னுடைய வாசகர்களை நியு இங்கிலாந்து பகுதியில் சந்திக்கிறார்.
அவரைக் குறித்த பின்புலம் + அறிமுகம்: http://www.sramakrishnan.com/?page_id=63

இடம்: Madras Grille, செம்ஸ்ஃபோர்டு

நாள்: வியாழன், ஜூலை 12, 2012
நேரம்: ஆறு மணி மாலை
முகவரி7 Summer Street  Chelmsford, MA 01824
தொடர்புக்கு: bsubra at gmail dot com

பாஸ்டன் பக்கம் இருக்கும் நண்பர்களுக்கும் தமிழ் நூல்வாசிகளுக்கும் தெரியப்படுத்தவும்.