296ஆம் இதழை – சொல்வனம்.காம் புதிய பதிப்பை – கவிதை குவிமைய இதழ் எனலாம்.
முகப்புக் கட்டுரையாக நம்பி கிருஷ்ணன். நான் அறிந்ததெல்லாம் ஷெல்லி, ஷேக்ஸ்பியர். இவர் வழக்கம் போல் தெரிந்து கொள்ளத்தக்க, வாசிக்க வேண்டிய மற்றுமொரு முக்கியமான எழுத்தாளரை ரசித்து, விதந்தோதுகிறார்: ”*எலிசபெத் பிஷப்*: இரு மொழிபெயர்ப்புகளும் சில குறிப்புகளும்”
அடுத்ததாக, மீனாக்ஷி பாலகணேஷ். ஆங்கிலத்தில் அரவிந்தரை வாசிக்க இலகுவாக இல்லை என்று சொன்னவுடன், அவரின் உன்னத காவியமான ஊர்வசீயை அழகுத் தமிழில் கொணர்ந்திருக்கிறார். இந்திய இலக்கியம் பலவிதமான தொன்மங்கள் மற்றும் புனைவுகளில் நிறைந்துள்ளது. அதில் அப்ஸரசுகளுக்கு முக்கிய சிம்மாசனம் உண்டு. இங்கே ரிக் வேதத்தில் வந்த புராணக் கதையை கவிதையாக்கின ஸ்ரீ அரவிந்தரை தமிழாக்கம் செய்துள்ளார்.
காம்பின்றித் தானே மலர்ந்த மலரென ஊர்வசியை வர்ணிக்கிறார். அவள் இந்தியக் கவிகளை வரலாறு நெடுகிலும் கடுக்க முடியாத வலிமையுடன் ஈர்க்கும் தன் கவர்ச்சிக்கு உட்படுத்தியிருக்கிறாள். ஸ்ரீ அரவிந்தர் இவ்விஷயத்தை மிகமேம்பட்ட முறையில் தீட்டியுள்ளார். இக்காவியத்தின் மாண்பு அவலச்சுவை அடங்கியிருக்கும் நிலையிலோ காமத்தின் வெறியுணர்ச்சி துடிதுடிக்கும் நேரத்திலோ, ஓவ்வொரு நிலையிலும் வெளிப்படுகின்றது.
உட்பொருளானது இரு காதலரும் தாம் தகுதியுடன் பெற்ற இன்பத்தைக் கடந்து இருக்கின்றது. உண்மையாகவே, புரூரவஸ் மரணத்திற்குட்பட்ட இம்மண்ணுலக மானுட நிலையிலிருந்து மரணமிலாத் தேவர் வாழும் விண்மண்டலத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளான். காதலர் இப்புவியை அடியோடு துறந்து விட்டனர். ஆயினும், கீழே தொலைவிடத்தில் மோனம் நிறைந்ததும் வல்லமை வாய்ந்ததுமான அண்டவெளியின் ஊடே பசுமை நிறைந்ததும், விடாமுயற்சியும் சுறுசுறுப்பும் உடையதுமான இப்பூமி இடைவிடாமல் சுழன்று கொண்டேதான் வருகின்றது.
சுழல்வது என்றவுடன் 300ஆம் இதழ் நினைவிற்கு வருகிறது. நீங்கள் வாசித்த புதிய எழுத்தாளர்களை, தற்கால புனைவுகளை, சமீபத்திய புத்தகங்களைக் குறித்து எழுதி விட்டீர்களா?
உடனடியாக அவற்றை solvanam.editor@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.