பாஸ்டன் நகரம் பக்கமாக இருக்கும் கிராமப்புறத்தில் வசிக்க வந்தேன். அது மெதுவாக நகர்ப்புறமாக மாறுவதைப் பார்க்கிறேன். அந்த மாற்றத்தை “Coming Soon” என்று ஸ்டீவன் மில்லவுஸர் (Steven Millhauser) சிறுகதையாக படம் பிடித்திருக்கிறார். நியு யார்க்கரில் வெளியான புனைவு. இங்கே, அந்தக் கதைக்கான புகைப்படம் உருவான கதை.
தீஸியஸின் கப்பலைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது போல் கதாநாயகனின் உலகமும் மீளுருவாக்கமாகவே நீள்கிறது. நேற்று வீடு இருந்த இடத்தில், இன்று அடுக்கு மாடி கட்டிடம். சில நாள் முன்பு காபி கடை. சில நாள் கழித்து தொடர் அங்காடி வளாகம். இன்னும் சில நாள் கழித்து நவநாகரிக விற்பனை மையம். மாறிக் கொண்டே இருக்கிறது. கடந்த இருபது வருடங்களாக அமெரிக்காவில் இதை சகஜமாகப் பார்க்கிறேன். தொண்ணூறுகளில் இருந்த கடைகள் இப்பொழுது இல்லை. அவற்றுக்கு பதிலாக அதே இடங்களில் வேறு விஷயங்கள் முளைத்திருக்கும்.
இது அமெரிக்காவிற்கு மட்டும் உரித்தானதும் அல்ல. சீனப் பாம்பும் இப்படி புதுப்புது தோல் உடுத்திக் கொண்டே இருக்கிறது. பெரிய தோட்டம் கொண்ட வீடு; வீட்டில் இருந்து இரண்டு தப்படி நடந்தால் முக்கு கடையில் செய்தித்தாள். அங்கிருந்து பொடிநடையாக சென்றால் நதிக்கரை. நகரத்திற்கு எதிர்ப்பதமாக அமைதியான வாழ்க்கை. நெரிசல் இல்லாத சாலை. மீன் வாசனை இருக்கும்; ஆனால், மூத்திர வாசனை கொண்ட பேருந்து பயணம் இருக்காது. இருபது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே இருப்பதை ரசிப்பதை விட படகில் சென்று பக்கவாட்டில் தூரமாகும் வாழ்க்கையின் அழகை நீரோடையாக பார்க்கச் சொல்லும் நிதானம் கொண்டது.
வெறுமனே விவரிப்புகள் மட்டும் கதை ஆகாது என்பதில் வெகு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதே போல் பழைய கதைகளை மறுபடி தூசி தட்டுவதிலும் ஆர்வம் கிடையாது. இந்த இரண்டையும் இந்தக் கதை கட்டுடைக்கிறது. “விரைவில் வரப்போகிறது” பெரும்பாலும் தன்னுடைய கவனிப்புகளை மட்டுமே முன்வைக்கிறது. அதே சமயம் நல்ல சிறுகதை விட்டுப் போகும் தாக்கங்களையும் மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கும் ஆர்வம் உள்ளடக்கிய நடையும் வைத்திருக்கிறது. பள்ளிக்காலத்தில் படித்த ரிப் வான் விங்கிள் நினைவுக்கு வந்தாலும், இவர் நவீன உலகின் கொசு அசுரன்.
பாலு மகேந்திரா குறித்து சுஜாதா எழுதியது ஆழமாகப் பதிந்திருப்பதற்கு காரணம், அதில் இருக்கும் ஹீரோயினும் என்னுடைய ஆதர்சம் என்பதால் கூட இருக்கலாம். அதை விட வம்பு என்பதால் இருக்கலாம் என்பதை ஒப்புக் கொள்ள என்னுடைய சுய பிம்பம் மறுக்கிறது.
உதவி இயக்குநர்கள், நண்பர் குழாம், வாத்தியார் சுஜாதா என ஜமாபந்தியான கூட்டம். பாலு மகேந்திரா நடு நாயகமாக வீற்றிருக்கிறார். சுவாரசியமான அரட்டை. திடீரென்று ஹோட்டல் அறை படாரென்று திறக்கப்படுகிறது. மெல்லிய தட்டல் இல்லை; ‘உள்ளே வரலாமா’ அனுமதி கோரல் இல்லை. உள்ளே நுழைந்தவர் எவரையும் கவனிக்கவில்லை. நேரடியாக பாலுமகேந்திராவின் மடியில் சென்று அமர்கிறார். எல்லோருக்கும் சங்கடம். பேச்சு அமைதியாகிறது.
பாலுவும் “நான் இதோ வந்திடறேன். நீ உன் அறைக்குப் போ…” எனக் கெஞ்சுகிறார். அமர்ந்தவரோ அதை பொருட்படுத்தாமல், பாலு மகேந்திராவின் தாடையைக் கொஞ்சுகிறார். காதைக் கிள்ளுகிறார். கன்னத்தில் உரசுகிறார். ஒவ்வொருவராக இருக்கையை விட்டு நெளிந்து கொண்டே விலகத் துவங்குகிறார்கள். இப்பொழுது அலட்டலாக பாலு, “இப்போ இங்கே உனக்கென்ன வேலை? எங்களோட பேசணும்னா அந்தச் சேரை இழுத்துப் போட்டு உட்கார். இங்கிய விட்டு எந்திரி!” என்கிறார். அவளோ கண்டு கொள்ளவேயில்லை.
தர்மசங்கடத்தில் சுஜாதா விடை பெறாமல் வந்ததற்கான காரணம் நடிகை ஷோபா. அஞ்சலி.
மௌனிகாவும் என் மனைவி தான். இந்த இடத்தில் மௌனியைப் பற்றியும், எனக்கும் அவளுக்குமான உறவு பற்றியும் நான் கொஞ்சம் விரிவாகப் பேசவேண்டியிருக்கிறது. மௌனிக்கும் எனக்குமான உறவு ஒரு நடிகைக்கும், டைரக்டருக்குமான படுக்கையறை சம்பந்தப்பட்ட உறவு என்றுதான் பலர் நினைப்பார்கள். ஆனால், உண்மை அதுவல்ல!
ஏறக் குறைய இருபது வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த உறவு அது. இனியும் எதையும் நான் மறைப்பதற்கில்லை. ரொம்பவும் உடைந்துபோன ஒரு தருணத்தில், நான் உங்ககூடவே இருந்திரட்டுமா? என்று கண்கலங்கி நின்ற, அந்த சின்னப் பெண்ணுக்குப் புரியும்படி புத்திமதி சொல்லி, அந்த உறவை நான் முளையிலேயே கிள்ளிப் போட்டிருக்க வேண்டும். ஏனோ, அதை நான் செய்யவில்லை.
எனது ஷோபா பற்றிய ஒரேயொரு பதிவை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொண்டு நிறுத்திக் கொள்கிறேன். ஒரு மழைக் காலைப் பொழுது. குளித்துப், பூஜை முடித்து, அவளுக்குப் பிடித்தமான காட்டன் புடவையும், காலணா சைஸ் பொட்டும், ஈரத் தலையுமாக வந்து உட்கார்ந்தவளைப் பத்திரிகை நிருபர் ஒருவர் பேட்டி கண்டுகொண்டிருந்தார்.
அவர்கள் பேசுவது காதில் விழாத தொலைவில் உட்கார்ந்து நான் எதோ படித்துக்கொண்டிருந்தேன். அன்றைய பேட்டி அடுத்த வாரமே பிரசுரமாகியிருந்தது.
அதில் ஒரு கேள்வி: மற்றவர்கள் ஒளிப்பதிவில் படு சுமாராகத் தெரியும் நீங்கள் பாலு சார் ஒளிப்பதிவில் பேரழகியாகத் தோன்றுகிறீர்களே… எப்படி இது…?
ஷோபா சொல்லியிருந்த பதில்: “மற்றவர்கள் என்னை காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் கொண்டு ஒளிப்பதிவு செய்கிறார்கள். எங்க அங்கிள் என்னைக் காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் இந்த மூன்றோடும் நிறையப் பாசத்தையும் குழைத்து ஒளிப்பதிவு செய்கிறார். அவர் ஒளிப்பதிவில் நான் பேரழகியாக ஜொலிப்பதற்கு இதுதான் காரணம்.”
எடக்குமுடக்கான கேள்வி ஒன்றிற்கு ஷோபா சொல்லியிருந்த ஸ்பொன்டேனியசான பதிலில் தென்பட்ட அவரது அறிவுக் கூர்மை என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.அதே போழ்தில், அவர்மீது நான் வைத்திருந்த அளவுகடந்த பாசத்தைப் பகிரங்கமாக மரியாதைப்படுத்துவதில் அவருக்கிருந்த ஆர்வம் என்னை நெக்கி நெகிழ வைத்தது.
என்ன செய்வதெனப் புரியாமல் தவித்தேன். ‘அம்மா இங்க வாங்க…’ என அழைத்தேன். அகிலாம்மாவும் டைரக்டரும் அவர்களுக்குள் பெரிதாகப் பேசிக்கொள்வது இல்லை அப்போது. ‘ந்தா போதும் போதும் உங்க சண்டை… புருஷனும் பொண்டாட்டியும் மொதல்ல நல்லா லவ் பண்ணுங்க…’ என்றதும் டைரக்டர் சிரித்துவிட்டார்.
நாலைந்து நாட்களுக்குப் பிறகு, டிஸ்சார்ஜ் செய்துவிட்டனர். சார் நார்மலாக இருந்தார். சரியாக 10-வது நாள் அதிகாலை 4 மணி… ஏனோ தூங்கப் பிடிக்காமல் அவஸ்தையான ஒரு மனநிலையில் அமர்ந்திருந்தபோது, அகிலாம்மாவிடம் இருந்து போன். பதறியபடி எடுத்தேன்… ‘உடனே ஆஸ்பத்திரிக்கு வாப்பா’ என்றார். வண்டி எதுவும் கிடைக்காமல், ஜெமினி மேம்பாலம் வரை ஓடி, கிடைத்த ஆட்டோ ஒன்றில் தொற்றிப் போய்ச் சேர்ந்தேன்.
அவள் பெயர் செல்வராணி என்று நினைக்கிறேன். ஒரு முப்பது முப்பத்தைந்து வயது இருக்கும். காதலன் வெளிநாட்டுக்கு அகதியாக போனவன். விசா கிடைக்கவில்லை. வருடக்கணக்காயிற்று. நாடு திரும்பமுடியாது. அவன் கடிதங்கள் வீட்டில் குவிந்துகிடக்கின்றன. தனிமையும் வயதும் பிரிவையும் தாண்டி தாபத்தை தூண்டுகிறது. காமத்துப்பாலில் பிரிவித்துயரால் வருகின்ற அத்தனை உடல் உபாதைகளும் செல்வராணிக்கு ஏற்படுகிறது. கட்டுப்படுத்த முடியவில்லை.
1970களில் வெளியான மலையாளப் படமான ” நெல்லு”வில் முதன் முதலில் ஒளிப்பதிவாளராக வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் படம் அவருக்குக் கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற விருதை பெற்றுத்தந்தது.
பின்னர் பல மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய பாலு மகேந்திராவுக்கு, கன்னடப் படமான “கோகிலா”வின் மூலம் தேசிய விருதும் கிடைத்தது.
தமிழ்த் திரையுலகுக்கும் ஜே.மகேந்திரனின் “முள்ளும் மலரும்” படம் மூலம் அறிமுகமாகிய பாலு மகேந்திரா, 1979ல், தனது இயக்கத்தில் ” அழியாத கோலங்கள்” படத்தைத் தந்தார்.
பின்னர் தெலுங்கு திரைப்படங்களிலும் பணியாற்றிய பாலு மகேந்திரா, தமிழ்த் திரையுலகில், ‘மூடுபனி’, ‘மூன்றாம் பிறை’ ‘ நீங்கள் கேட்டவை’, ‘ரெட்டைவால் குருவி’, ‘வீடு’ ‘ மறுபடியும்’ , ‘சதி லீலாவதி’ போன்ற படங்களைத் தந்தார்.
அவரது படமான ‘மூன்றாம் பிறை’ சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதையும் அவருக்குப் பெற்றுத்தந்தது. மேலும் அந்தப் படம் ஹிந்தியிலும் ‘சத்மா’ என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 1
Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 2
Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 3
Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 4
Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 5
Director Balu mahendra talking about Tamiliam Subas`s short film Vanni Mouse on Makkal TV “Ten Minute Stories”
Balu Mahendra – An Era: STAR Vijay
Balu Mahendra – The Legendary Era Of Indian Film: Puthu Yugam TV
Balu Mahendra about Vaali -Vaali Birthday Special
New Year Special : Thalaimuraigal with Director Balu Mahendra
Director Balu Mahendira Special In Rewind Ep-64 Dt 06-10-13
Thalaimuraigal Tamil Movie Press Meet | Balu Mahendra
இயக்குனர் பாலு மகேந்திரா – நினைவுக் கூட்டம் நாள்: 23-02-2013, ஞாயிறு
இடம்: கோல்டன் ஜூப்ளி ஆடிட்டோரியம், சென்னை பல்கலைக் கழக மெரினா வளாகம், வள்ளுவர் சிலை எதிரில், எழிலகம் அருகில்.
நேரம்: மாலை 5.30 மணிக்கு.
நினைவை பகிர்பவர்கள்:
கவிஞர் & ஆவணப்பட இயக்குனர் ரவி சுப்பிரமணியம்
ஆவணப்பட இயக்குனர் அம்ஷன் குமார்
எழுத்தாளர் சந்திரா
எழுத்தாளர் தமயந்தி
தயாரிப்பாளர் UTV தனஞ்செயன்
பத்திரிகையாளர் ஞாநி
எழுத்தாளர் பவா செல்லத்துரை
எழுத்தாளர் மாலன்
ஒவியார் ட்ராட்ஸ்கி மருது
எழுத்தாளர் சா. கந்தசாமி
இயக்குனர் தாமிரா
எழுத்தாளர் & நடிகர் வ.ஐ.ச. ஜெயபாலன்
நடிகை ரோகினி
எழுத்தாளர் பிரபஞ்சன்
நடிகர் நாசர்
எழுத்தாளர் கவுதம சித்தார்த்தன்
ஒளிப்பதிவாளர் (திரைப்படக் கல்லூரி) ஜி.பி. கிருஷ்ணா
பத்திரிகையாளர் அசோகன் அந்திமழை
ஒளிப்பதிவாளர் சி.ஜெ. ராஜ்குமார்
ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கில் ரவிசங்கர்
எழுத்தாளர் கே.வி.ஷைலஜா
இயக்குனர் வஸந்த்
கல்வியாளர் எஸ்.கே.பி கருணா
கலரிஸ்ட் சிவராமன் (பிரசாத் லேப்)
எடிட்டர் லெனின்
ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வர்
இயக்குனர் வெற்றிமாறன்
பாடலாசிரியர் ந. முத்துக்குமார்
ஒருங்கிணைப்பு: கன்னடத் துறை, சென்னைப் பல்கலைக் கழகம் & தமிழ் ஸ்டுடியோ & வம்சி புக்ஸ்
Never knew that “உறவுகள் தொடர்கதை” in “அவள் அப்படித்தான்” was written by ஜீனியஸ், மேதை என்னும் தோரணை இல்லாத கங்கை அமரன்.
முள்ளும் மலரும் படத்தின் ‘ராமன் ஆண்டாலும்’ பாடலை அசலாக எழுத இருந்தவர் கண்ணதாசன்.
அவரும் “வாழ்க்கையெனும் வட்டத்தில் விட்டதை வெல்லும் காலமும் மறக்கும் வேகமும் புத்தனாகினால் கிடைக்குமோ” என்பது போல் எழுதி வைத்திருக்கிறார். அதைப் படித்த மகேந்திரன், “தண்ணியைப் போட்டுட்டு மிகக் குறைந்த ஏட்டறிவே கொண்ட ‘காளி’ இப்படி தத்துவார்த்தமாகப் பாட மாட்டானே… வாய்க்கு வந்ததை கோபமாக சொல்லவேண்டும்.” என்கிறார்.
கண்ணதாசனைக் கூப்பிட்டு மாற்றச் சொல்ல அவகாசமில்லை. அப்போது எழுதிய எளிய வரிதான்
“ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான்தான்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன் கேக்குற வரத்தை கொடுப்பேன்
கேக்குற வரத்தை கேட்டுக்கடா”
பெண் பார்ப்பது இப்பொழுது ஆண் பார்ப்பது என அழைக்கப்படுகிறது. பத்தாண்டுகள் முன்பு வரை ”மாப்பிள்ளை முறுக்கு” பிரபலம். இப்பொழுது மணப்பெண் ப்ரெட்ஜல் (pretzel) புகழடைந்திருக்கிறது.
இதற்கான உதாரணங்களை முதலில் காண்போம்.
“பையன் பக்தி சிரத்தையாக இருக்க மாட்டானே? நாள்தோறும் கோவில் கோவிலாக ஏறி இறங்க மாட்டானே? காலங்கார்த்தாலே பூஜை, புனஸ்காரம் செய்ய மாட்டானே?” – இது இன்றைய கால்கட்டிற்கு மணல்கயிறு மாதவிகள் போடும் முதல் கட்டளை.
“அமெரிக்காவா… லாஸ் ஏஞ்சலீஸ்னா சரிப்படலாம். எங்களுக்கு குளிர் ஒத்துக்காது. அங்கே சமையற்காரி வைச்சுண்டா, தேவயானி கோப்ரகாடே மாதிரி அம்மணமாக்கி வேற சோதனை செய்யறா!” – வெளிநாட்டினருக்கு இடமில்லை என்னும் சுதேசிக் கொள்கையும் இப்பொழுது பரவலாகி வருகிறது.
“இருபது லட்சமாவது சம்பளம் வாங்குகிறானா? பொறியியல் மட்டும் இல்லாமல் மேலாண்மையும் பட்டப்படிப்பு பெற்றிருக்கிறானா? கூடவே பி.எம்.பி., சிக்ஸ் சிக்மா, ஜாவா, பி.எச்.பி. பரீட்சை எல்லாம் தேறி சான்றிதழ் இருக்கிறதா?” – அம்மி மிதிப்பதற்கு முன் காலாகாலமாக சம்பந்திகள் முன்வைக்கும் கட்டளையும் உண்டு.
எல்லாப் படமும் மறு ஆக்கம் செய்கிறார்களே… ’மணல் கயிறு’ மறுபடி மருமகள் நிபந்தனைகளைக் கொண்டு வந்தால், “எட்டு வித கட்டளைகள் இட்டு ஒரு லாபமில்லை” பாட எந்தப் பாடகி நீங்கள் தேர்வு செய்வீர்கள்?
கூலிக்கு மாரடிப்பதற்காக இருவரை அலுவலுக்கு எடுத்திருந்தோம். இருவரும் இந்தியர்கள். எச்1பி-யில் இருப்பதால் பச்சை அட்டைக்காக பன்னெடுங்காலமாக காத்திருப்பவர்கள். நிறைய அனுபவமும் சூட்சும அறிவும் பரந்த தொழில்நுட்ப பட்டயங்களும் பெற்றவர்கள்.
முதலாமவருக்கு திறமை இருந்தாலும் சிரத்தை கிடையாது. உடன் வேலை பார்ப்பவர்களை விட டாட்.நெட்டிலும் சீக்வலிலும் நுணுக்கமான விஷயங்கள் தெரியும். ஆனாலும், காரியத்தை இண்டு இடுக்கு விடாமல் செய்து முடிக்க, இன்னொரு ஆள் கூடவே மல்லுக் கட்ட வேண்டும்.
இரண்டாமவர் படு சமர்த்து. சொன்ன வேலையை புரிந்து கொண்டு செயலாற்றுவார். நிரலியுடன் கொசுறாக ஆவணமாக்குதல், சோதனைகளை தானியங்கியாக இயக்குதல், எழுதிய நிரலியை வேகமாக ஓடவைத்தல், நிரலி ஓடுவதற்கு அத்தாட்சியாக ஊடுபாவாக ஏட்டில் பதித்தல் போன்ற உப காரியங்களை உபகாரமாக கேட்காமலே போட்டு வைப்பவர்.
இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே சம்பளம். தனியாக சோம்பேறியை அழைத்து, “உங்களுடைய சுபாவத்தை மாற்றிக் கொள்ளுங்கள். எதையும் ஆராய்ந்து செய்வதை அணுகுமுறையில் வையுங்கள். ஏன் நிரலி ஓடவில்லை, பயனருக்கு எப்படிக் கொடுத்தால் நிஜமாகவே உருப்படும் போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டு செயலாற்றுங்கள்.” என்று கண்டிப்பு கலந்த ஆலோசனை கொடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.
மனம் பொருந்தி வேலை செய்யும் இரண்டாமவர் போல் இன்னொருவரைத் தேர்ந்தெடுக்க நேரம் வாய்க்கவில்லை. அவரை நீக்கினாலும், அந்த வேலைச்சுமையும் இருப்பவர்களாகிய எங்களின் தலை மீது விழும் என்பதால் நீக்கவும் இயலவில்லை. கடந்த வாரம் இந்த சமாச்சாரம் முடிவுக்கு வந்தது. காண்டிராகடர்கள் இனி வேண்டாம் என மேலிடம் அறிவித்தது.
இருவருக்குமே ஒப்பந்தம் முடிய, இருவருமே வேலையை விட்டுப் போய்விட்டார்கள். கடமையைச் செய். பலனை எதிர்பாராதே!
‘கல்லுக்குள் ஈரம்’ பார்த்த போது ஏழு வயசு. இந்தப் பக்கத்தில் அம்மாவும் அந்தப் பக்கத்தில் அண்ணாவும் அமர்ந்திருப்பார்கள். தேவி காம்ப்ளெக்ஸா, வெலிங்டனா, சித்ராவா என நினைவில் இல்லை. இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு 21ல் உட்கார்ந்திருக்கும் தூக்கக் கலக்கத்தில் இப்படி சேர்த்து வைக்காமல் சாகடிச்சுட்டாங்களே என்பது மட்டுமே தோன்றியது.
சினிமாகாரர்களை கொஞ்சம் சொல்வதால் மனம் இன்றும் ‘க.ஈ.’ படத்தை நினைவில் வைத்திருக்கவைக்கிறதோ? மற்ற பாரதிராஜா எடுத்த, தற்போதைய அமீர் / சசிகுமார் வகையறா எடுக்கும், மதுரைப் பக்கத்தில் உள்ள டவுன் பஸ் மட்டுமே நிற்கும் சந்து பொந்துகளை முதலில் காட்டியதால் நிழலாடுகிறதோ? மனோபாலா, ரங்கராஜன், மணிவண்ணன் போன்ற பிற்கால பிரபலங்களின் கன்னி தொடக்கம் இங்கே இருந்திருக்குமே?
தெரியவில்லை. எனவே, மீண்டும் பார்த்தேன்.
‘முதல் மரியாதை’யின் இளவட்டக் கல் இருக்கிறது. அந்தப் படத்தில் ஜெயிலில் இருந்து திரும்பும் சத்யராஜ் போலவே பாசமிகு மாமன் (சேனாதிபதி?) இருக்கிறார். கவுண்டமணிக்கு மிக விரிவான கதாபாத்திர உருவாக்கம். ’க.ஈ.’ வந்ததற்கு அடுத்த ஆண்டு வந்த பாலைவனச் சோலை கும்பலில் இருந்து இதில் உடல் ஊனமுற்றவராக சந்திரசேகரும், பள்ளி ஆசிரியராக ஜனகராஜும் இருக்கிறார்கள்.
மனதிற்கு நெருக்கமான கதை. திரைப்பட கதாநாயகனை கணவனாக அடைய விரும்பும் சினிமா மோக மனம் கொண்ட விஜயசாந்தியும் டீக்கா டிரெஸ் போட்டிருக்கும் ஆங்கிலம் பேசும் அடாவடி ஆதர்ச இயக்குநரை விரும்பும் அருணாவும் வசிக்கும் கிராமம். நாள் முழுக்க உழைத்து, அரை வயிற்றுக்கு சாப்பிட்டு, கோலமிக்க ஆறும், ஓய்வெடுக்க மலைமுகடுகளும், அடர்த்தியான காடுகளும் கொண்ட கனவு கிராமம். முனிக்கு படையல் போட்டதில் தெய்வ குற்றமும், அடுத்தவர் வாழ்க்கையை மெல்வதில் சுகமும் காணும் நெருக்கமான உறவு வேண்டாமலேயே உங்களைத் துரத்தும் கிராமம்.
படத்தில் உள்ள அத்துணை கதாபாத்திரங்களை ஆழமாக உலவவிடவில்லை. மாடன் வழிபாட்டை விரிவாகக் காட்டவில்லை. உள்ளூர் பெண்ணொடு ”டைரக்டர்” இப்படியெல்லாம் நடந்து கொள்வது சாத்தியமேயில்லை. இதற்கு முந்தைய ஆண்டு வந்த “புதிய வார்ப்புகள்” போல் அசல் தெருக்கூத்தைக் காணமுடியவில்லை, என்றெல்லாம் விமர்சிக்கலாம்.
ஆனால், இரண்டு மணி நேரத்தில் கட் அவுட் மாந்தர்களையும் தோட்டி குடும்பத்தையும் இன்று கூட யாரும் இவ்வளவு இயல்பாக கோர்க்கவில்லை என்பதால் சபாஷ் போட வைக்கிறது. அப்படி கோர்த்தால் என்ன ஆகும் என்பதை நிதர்சனமாக முடிப்பதால் முக்கியமாகவே நிற்கிறது. எல்லாவற்றையும் விட ஊரில் இருப்போர் வாழ்க்கையையும் வருகை தருவோர் இயல்பையும் உணர்த்துவதால் இன்றும் விருப்பத்துடன் ரசிக்க வைக்கிறது.
ஒவ்வொரு நாளும் காலையில் கன்னலுக்கு ஓரிருவர் வருகிறார்கள்.
கலைஞர் டிவியின் ‘விடியலே வா’வில் திராவிடர் கழக வரலாறு சொல்ல சுப. வீரபாண்டியனும் ”தீதும் நன்றும்” மனுஷ்யபுத்திரனும்; கூடவே குளிராடி மாட்டிக் கொண்ட டாக்டர் காளிமுத்து மாதிரி சித்த வைத்தியரும் வருகிறார். சிறப்பு விருந்தினர் நேர்காணலும் தினசரி உண்டு.
சன் தொலைக்காட்சியில் ஆன்மிகக் கதைகள் சொல்ல கி சிவகுமார்; அரட்டை அடிக்க பாரதி பாஸ்கரும் ராஜாவும்; சப்த நிமிடங்கள் சொல்ல குரல்வளமிக்க சண்முகம். வணக்கம் தமிழகத்தில் வரும் பிரபலங்கள், பெரும்பாலும் திரைத்துறை சார்ந்து இருக்கிறார்கள்.
பொதிகையில் இராமாயணத்தை வேளுக்குடியும் சிவனுக்கு இரா. செல்வக்கணபதியும்; நான்மணிக்கடிகைக்கு சாரதா நம்பி ஆரூரனும், தியான யோகம் சிந்திக்க ஜி கே பாரதியும்; ‘உயிர் யாரிடம்’ சொல்ல டாக்டர் ஜெயம் கண்ணன். தூர்தர்ஷனிலும் ஓவியரோ ஆசிரியரோ வந்து நேர்முகம் கொடுக்கிறார்கள்.
ஜெயாவில் உபன்யாசம் உண்டு. கூடவே (கமல் புகழ்) கு ஞானசம்பந்தனும் உண்டு. நான் பார்த்த நேற்று பொருளாதார வித்தகர் வந்து பங்குச்சந்தையில் முதலீட்ட அழைத்தார்.
பேரா. கு. ஞானசம்பந்தன் புத்தகங்களையும் தமிழிலக்கிய வரலாறையும் நயம்பட எடுத்துரைக்கிறார். மனுஷ்யபுத்திரனை அவரின் சட்டைத் தேர்வுகளுக்காக பார்க்க வேண்டும்; ’இவர் ஒரு காலத்தில் புதுக்கவிதை எல்லாம் எழுதினாராக்கும்’ என்று சொன்னால் நம்பமுடியாதபடி பேசுகிறார். சுப வீரபாண்டியனின் புளித்த மாவை இன்னும் ஒரு இழை கூட எவரும் திரிக்க இயலாது. சிவகுமாரை அவ்வப்போது நுழைக்கும் கம்ப ராமாயணத்திற்காக கேட்கலாம். பச் பச் பளிச்களுக்காக சண்முகத்தை தவறவிடக்கூடாது. ஆனால், டாக்டர் ஜெயம் கண்ணன் மட்டும்தான் ஃபேஸ்புக் குறித்து சொற்பொழிவாற்றுகிறார்.
இதையெல்லாம் காலங்கார்த்தாலே அலுவல் கிளம்பும் அவசரத்தில் யார் பார்க்கிறார்கள் என்பதெல்லாம் நீல்சன் சம்பந்தப்பட்ட விஷயம். ’டிக்… டிக்… டிக்’கில் வரும் கமல்ஹாசனின் விடியல் போல் பாலிமரில் வரும் திரை முன்னோட்டத்தில் துவங்கும் காலை எனக்கு பிடித்தமானது.
சன் தொலைக்காட்சி எதற்காக அதிகம் பார்க்கப்படுகிறது? கலைஞர் முன் நிகழ்த்தப்படும் கலை மற்றும் குத்தாட்ட நிகழ்ச்சிகளுக்காகவா? அல்லது வணக்கம் தமிழகம் போன்ற உரையாடல்களும் செய்திகளும் அறியவா? நிச்சயமாக, ராதிகா நடித்து, பாரா போன்றோர் எழுதும் நெடுந்தொடர்களுக்கத்தான்.
நான் எச்.பி.ஓ. பக்கம் ஒதுங்குவதும் HBOவின் சீரியல்களுக்காகத்தான்.
இந்த வருடம் மூன்று சுவாரசியமானதாகத் தெரிகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட True Detective ஏமாற்றவில்லை. அதைத் தனியாக கவனிப்போம்.
பிபிசி-யில் இருந்து அறிவுக்கடன் வாங்கி Getting On உருவாகி இருக்கிறது. ஆஸ்பத்திரியில் நடப்பதை வைத்து காமெடி செய்கிறார்கள். ER, Grey’s Anatomy போன்றவை மருத்துவமனையை இறுகிய முகத்துடன் அணுகி தமிழ்த் தொலைக்காட்சி போல் அழ வைத்து, நேஷனல் ஜியாகிரபி போல் உடலின் கூறுகளை அணு அணுவாக ஆராய்ந்து, பி.பி.எஸ். போல் ஆவணப்படத்தின் ஆழத்துடன் நோய்களையும் சிகிச்சைகளையும் சொல்வதைப் பார்த்த கண்களுக்கு ஆறுதலாக இருந்தது.
முன்னாபாய் எம்பிபிஎஸ் பார்த்ததால் மட்டும் அல்ல… மருத்துவர்களை விட நர்ஸ்கள் மேல் நிறையவே மரியாதை உண்டு. மனைவியின் பிரசவத்தின் போது கண்கூடாக பார்த்ததினால் இருக்கலாம். உறவினர்களை பார்க்க செல்லும்போது இராப்பகல் பாராமல் உழைக்கும் சிரத்தையை தரிசித்ததால் இருக்கலாம். எச்.பி.ஓ.வில் வரும் “கெட்டிங் ஆன்” அவர்களின் சிரமங்களை கீழிரக்காமல், நகைச்சுவையாக சித்தரிக்கிறது.
”அரட்டை அரங்கம்” ஆரம்பிக்கும் முன்பு விசுவும், “சம்சாரம் அது மின்சாரம்” ஆல்பர்ட்டு ஆவதற்கு முந்தைய கிஷ்மூவும் தோன்றிய தூர்தர்ஷன் நிகழ்ச்சியில், மேல்நாட்டு கிஷ்மூ ஆங்கிலத்தில் பேசப் பேச, அதைத் தமிழில் விசு மொழிபெயர்ப்பார். அவர் “Peace” என்பார். விசுவோ, “பட்டாணி” என்பார்.
கொஞ்சம் போல் ஆத்திரமான கிஷ்மூ “Peace… Peace…”. விசு “பட்டாணி… பட்டாணி…”. இப்படியே நாலைந்து நிமிடம் எல்லா உணர்ச்சிகளிலும் வடிவங்களிலும் பட்டாணியும் அமைதியும் அல்லல்படும். அதைப் போன்ற எளிமையான துணுக்குகளும், வாழ்க்கையின் அபத்தங்களும், ஆராய்ச்சிகளின் வெற்றுணர்தல்களும், இன்ஷூரன்சின் அராஜகங்களும் போகிற போக்கில் கிண்டல் அடிக்க எச்பிஓ சரியான கன்னல்.
இன்று அண்ணாவின் நினைவு நாள். அவருக்கு அமெரிக்காவில் கூட அணுக்கத் தொண்டர்கள் இருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவர் கெண்ட்ரிக் லமார். அவரின் சமீபத்திய நினைவாஞ்சலியை கீழேக் காணலாம்.
இருவரின் ஊரும் ”கா”வில் அரம்பிக்கிறது. காம்ப்டனில் பிறந்து வளர்ந்தவர் கெண்ட்ரிக். காஞ்சீவரத்தில் பிறந்தவர் அண்ணா. “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்றார் அண்ணா. லமாரின் பாடலைக் கேட்டு எல்லோரும் அந்த வேத வாக்கியத்திற்கு ஒப்புக் கொண்டு சாமியாடுவதை விழியத்தில் பார்த்திருப்பீர்கள்.
”It’s a revolution, I suppose
We’ll paint it red to fit right in”
– என்கிறார் கென்ட்ரிக். புரட்சித் தலைவருக்கு குரு என்னுடைய குருதானே என்பதை இந்த வரிகள் உணர்த்துகின்றன.
அதற்கு முன் கோவில் சுவர்களில் சிவப்பும் வெளுப்பும் இருக்கும். அதை மாற்ற தி.மு.க., அதிமுக, தே.மு.தி.க., என எல்லோர் கொடிகளிலும் சிகப்பை அறிமுகம் செய்து, பட்டி தொட்டியெல்லாம் கொள்ளையடித்தவர் அண்ணா.
”Bury me alive, bury me with pride”
– என்கிறார் லமர். அண்ணா இருக்கும்போதே பதவியாசை கொண்டு போட்டி நடந்ததை இங்கேக் குறிப்பிடுகிறார். அறிஞர் ஆவதற்கு முன்பே அண்ணாவை புதைத்துவிட்டதை குறிப்பால் உணர்த்துகிறார் கெண்ட்ரிக்.
இந்தப் பாடலின் போது டெய்லர் ஸ்விஃப்ட் தலையாட்டுவது துணையிருந்தாலும் அதை மேடையில் ஏற்றாத அண்ணாவின் நற்குணத்தையும் மக்கள்செல்வம் இல்லாத நிலையையும் நமக்கு அறிய வைக்கிறது.
கடல் கடந்து அண்ணா புகழ் பாடும் கெண்ட்ரிக் வாழ்க! அவரின் இசைக்கு ஆடும் ஸ்விஃப்ட் புகழ் ஓங்குக!!
கல்ப காலம் கழித்து நேற்று அன்னா ஹசாரேவாக இருந்தேன்.
இதுதான் காரணம் என்றில்லை. கடையில் வாங்கும் பொறை போன்ற தானியக் கலவைகளின் மேல் கோபம் ஒரு காரணம். அதே அதே காலை உணவா என்னும் அலுப்பா என்பது இன்னொரு காரணம். காலை உணவைத் தவறவிடுவது மாபாதகம் இன்னொன்றில்லை என்று அறிந்தது மற்றொரு காரணம். அரசன் போல் பிரேக்ஃபாஸ்ட் உண்ணாவிட்டால், மதிய உணவு புசித்து உடல்நலத்தை கெடுக்க வேண்டாம் என்பது அடுத்த காரணம். உடம்பில் இருக்கும் கொழுப்பு கவனித்துக் கொள்ளும் என்பது முக்கிய காரணம்.
நேற்றைய தினம் அமாவாஸ்யை. பெற்றோரில் எவரையேனும் இழந்தவர்கள் இரவு சாப்பிடக் கூடாது. இரமலான் கூட வரப் போகிறது. ரம்ஜானுக்கு ஐந்து மாதம் இருக்கிறது என்றாலும், தேர்தல் வரும்போதா வேட்பாளர் களத்தில் இறங்குவார்? திங்களன்றுதான் ஏகாதசி கழிந்திருக்கிறது. உண்ணாவிரதத்திற்கு பெயர் பெற்ற அண்ணல் அரிச்சுவட்டில் உபவாசம் இருக்க உகந்த நாள்.
அம்பரீஷன் போல் துர்வாசர் யாரும் இங்கு வீட்டிற்கு அதிதியாக வரப் போவதில்லை. அவரவர்களின் இரயில் நிலையங்களிலும் பொதுச்சோலைகளிலும் வீடற்றோர் இன்னொரு பட்டினியை முடித்து எழுந்திருப்பர். அவர்கள் நிலைத்தகவல் இடும் காலம் வரும் முன் சோம வார விரதமும் இருந்துவிட வேண்டும்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde