கொஞ்சம் கம்மி எதிர்பார்ப்புடன் இந்தக் கதையைப் படிக்கத் துவங்கினேன். ஹரன்பிரசன்னாவின் ’வியாழன் இரவு’ மற்றும் ’சீடன்’ இந்த ஏமாற்றம் கலந்த தயார் உணர்வைத் தந்திருந்தது.
ஆனால், இதுதான் இவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பிற்கான தலைப்பு ஆக்கம் – ‘புகைப்படங்களின் கதைகள்’. புனைவின் முகப்பிற்கு ஏற்ற பன்முகம் காட்டும் தலைப்பு என்பதால் இதை வைத்திருப்பார்கள். அது பொருந்தும்.
சிறுகதையை இங்கு சுருக்கித் தரப் போவதில்லை. பதினைந்து நிமிடங்களுக்குள் நீங்கள் வாசித்து விடலாம். வாசித்தால் நல்ல அனுபவம் கிடைக்கும். எனவே, வாசித்து விட்டு வாருங்கள். அதுவரை பொறுமையாகக் காத்திருக்கிறேன்.
ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு, அந்த விஷயத்தில் முழுமையாக மூழ்கி எழுவதற்கு நல்ல உதாரணக் கட்டுரையாக இதைச் சொல்லலாம்: Pyre | Amitava Kumar | Granta Magazine. இந்தக் கதை ஒருவரை எடுத்துக் கொண்டு, அவரின் வாழ்க்கையில் மூழ்கி எழுவதற்கு நல்ல உதாரணம்.
ஜான் பெர்கர் கதை வாசிப்பைப் பற்றி கூறும்போது ‘ஒரு கதையை வாசிக்கும்போது நாம் அதனுள் குடிகொள்கிறோம், அதனுள் ஜீவிக்கிறோம். அடுத்து நடப்பவை எல்லாம் அந்தக் கதையின் நான்கு சுவர்களுள் மாத்திரமே நடக்கும். ஒரு கதையின் குரல் அனைத்தையும் தன் சொந்தமாக மாற்றுவதால் மட்டுமே இது சாத்தியமாகிறது’ என்கிறார். இந்தக் கதையில் அது நடக்கிறது. எதோவொரு வரியில் என் வேட்டி விலகியிருப்பதையும், அதை ஒழுங்கு செய்வதையும் உணர்ந்தேன். இன்னுமொரு இரண்டு பத்தி கழித்து, என் குடும்பத்தின் அங்கத்தினர்களை மரமாக வரைந்து, ஒவ்வொருவரின் மலரும் நினைவுகளையும் ஆவணமாக்கிப் பதிந்தேன்.
இந்த ஆக்கம் நாவலுக்கான விதை. ராம் என்னும் பேரனிடம் தாத்தாவின் அனுபவங்கள் எவ்வாறு அவன் வாழ்வின் முடிவுகளை எடுக்க வைக்கிறது என்று சொல்வது, தாத்தாவிற்கும் அவரின் மகனுக்கும் நடுவில் இருக்கும் கடமையில் ஊறிய பாச நிர்ப்பந்தங்களும் கோடிட்டு மட்டுமே காட்டப் பட்டிருக்கிறது. இதன் அடுத்த அத்தியாயங்களை முழுமையாக்கி முழுநீள புனைவாக்க வேண்டும் என்பது நாராயண் ராவின் ஆசையாக இருந்திருக்கும்.
ழான் பால் சார்த்தர் எழுதிய வெளியேறாதே (“No Exit”) படித்திருப்பீர்கள். அதில் மூன்று தொலைந்து போன ஆத்மாக்கள் ஒருவரையொருவர் காலாகாலத்திற்கும் படுத்திக் கொண்டேயிருக்கும். அந்த மூவரின் முந்தைய வாழ்க்கையின் நுண்ணிய மறந்துவிட வேண்டிய தகவல்களையும் ஒவ்வொருவரும் நினைவில் வைத்திருந்து, சமயத்திற்கேற்ப நினைவு கூர்ந்து அசௌகரியமாக்கிக் கொள்ளும். மற்றவர்களை எவ்வாறு கோபத்தின் உச்சிக்குத் தள்ளுவது என்பதை பரிசோதித்துப் பார்த்துக் கொள்வார்கள்.
அதில் இருக்கும் புகழ்பெற்ற வரி: “நரகம் என்பது பிற மாந்தர்கள்” (“Hell is other people.”)
இது குழம்பிக் கொள்ளக் கூடிய கவித்துவமான வரி. எல்லாவிதமான உறவுகளும் நட்புகளும் தவிர்க்கவியலாமல் கசப்பில் போய் முடியும் என்னும் அனர்த்தம் – நேரடி கற்பிதம். ஆனால், மற்றவர் எப்படி நம்மை அவதானிக்கிறார்களோ, அப்படிதான் நாமே நம்மை மதிப்பிடுகிறோம்.. பிறர் எவ்வாறு நினைப்பார்கள் என்பது பொதுபுத்தி ஆக நம் மனதில் தங்கியிருக்கிறது; அதற்கேற்ப நம்மை இலக்காக்கிக் கொள்கிறோம்.
சொல்வனத்தில் வெளியான ’பழனி’ கதை – மற்றவர்கள் எவ்வாறு தங்களின் தீர்ப்பை பழனியின் மீது எழுதுகிறார்கள் என்பதைச் சொல்கிறது. வழக்கமான பாணி; சாதாரணமான நடை. ஆனால், அந்தக் கதைக்கு இப்படியொரு பருந்துப் பார்வை பார்க்க முடியும் என்பது — கபாலி பாஷையில் *மகிழ்ச்சி*
எனக்கு ஒரு இடத்தை எடுத்துக் கொண்டு, அந்த நகரத்தின் இண்டு இடுக்குகளையும், பிரதேசத்தின் எல்லைகளையும், நாட்டின் குணங்களையும் ஊடே கொடுத்துக் கொண்டு, கதை சொல்லும் பாணி பிடிக்கும். சொல்வனத்தில் வெளியான இந்தக் கதையை வாசித்தவுடன் ZYZZYVA இதழில் Héctor Tobar எழுதிய “Secret Stream” கதை நினைவிற்கு வந்தது.
அந்தக் கதையில் ஒரு இளைஞனும் இளைஞியும் அகஸ்மாத்தாக சந்திக்கிறார்கள். இளைஞனோ லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் சைக்கிளில் பயணித்து விநோத வரைபடங்கள் தயாராக்கி நண்பர்களுடன் நகரின் ஆழங்களைக் கண்டறிபவன். இளைஞியோ ’எல்லே’ (LA) நகரின் நீர்த்தளம் காண்பவர். தொலைந்து போன நதிகளை அறிந்து கொள்ள விழையும் தன்னார்வலர். இருவரும் தனியர்கள். கரணம் தப்பினால் காதல் வந்துவிடும். ஆனால், உருவாகவில்லை. அவர்கள் எல்.ஏ. நகரத்தின் ஹாலிவுட் மலைப்பகுதிகளில் உலா வருகிறார்கள். காடு, மேடு, தனியார் சொத்து, அத்துமீறி உள்நுழைதல் எல்லாம் சாகசமாகச் செய்கிறார்கள்.
என்னுடன் நட்பு கொண்ட, கூட வேலை பார்த்த எவரோ எப்போதாவது என்னுடைய நகரத்திற்கு வருவார்கள். என்னை சந்திக்க இயலுமா என வினவுவார்கள். அவர்களின் பிசி கடமைகளிலும் எனக்காக நேரம் ஒதுக்குவார்கள். கொஞ்ச நேரம் அவர்களுடன் பழங்கதை பேசுவேன்; கொஞ்சம் மது; நிறைய கொண்டாட்டம் நிறைந்த தருணங்கள். அவர்கள் என்னை உதாசீனப்படுத்தி, ஊருக்கு வந்த சுவடே தெரியாமல் போயிருக்கலாம். என்னுடைய அதிகப்பிரசங்கித்தனங்களும் போதாமைகளும் அவர்கள் உள்ளூற அறிந்தே இருக்கிறார்கள். இருந்தாலும் என்னை சந்திப்பதை முக்கியப்படுத்தி, எனக்கு மதிப்பு கொடுத்து, நேரம் ஒதுக்குவார்கள். அது கோடையைப் போல் சுகமானது (“That Summer Feeling”) என்பார் Jonathan Richman.
சொல்வனத்தில் வெளியான இந்தக் கதை அந்த அந்தர்வாகினி ஆற்றுக்கு எதிராக ஓடுகிறது. இந்தக் கதையில் வரும் மூன்று, நான்கு துண்டுச் சம்பவங்களை எது இணைக்கிறது என்று உடனடியாகப் புலப்படாது. இளைஞன், முதியவர், பின் குழந்தை என்று மூன்று பருவத்தில் Protagonist-ஐ தொடர்பவர்கள் உண்டு. என்ன பிராயங்களில் இந்த மூவரைக் கடக்கிறாள் என்பதும் தெளிவாக இராது. சம்பவங்களில் முதல் சம்பவம் சுட்டுகிற சிறு அச்சம் இரண்டாவதில் இல்லை, மூன்றாவதில் அந்த அச்சம் சொல்லப்பட்டாலும் ஏனென்பது தெளிவில்லை.
காலம் ஒரு myth , மாயை என்பதற்கான குறியீடு. இந்தக் கதை வாசகனின் கற்பனையில் பல அடுக்குகளோடு, பல விதமான சாத்தியக்கூறுகளோடு விரிவடையும் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்டிருக்கிறது. எனக்கு இந்த மாதிரி பூடகமான விஷயங்களைச் சொல்ல இன்னும் மெனக்கிட வேண்டும் என்பது சொந்தக் கருத்து. அதாவது முன்னூறு பக்கம் எழுதிவிட்டு, உள்ளடக்கமாக சில விஷயங்களை சொருகியிருக்கிறேன் என்றால் நம்புவேன்; அந்தப் புனைவை சிரத்தையாக வாசிப்பேன். முன்னூறு வார்த்தைகள் எழுதிவிட்டு ’பொருள் தொக்கி நிற்கிற மாதிரி எழுதுகிறேன்’ என்றால் பொறுமையின்மை என்றே சொல்லவேண்டும்.
கதை என்றால், எழுதப்பட்ட இடத்தில் வசிப்பதற்கு மனம் ஏங்க வேண்டும். அல்லது அந்த இடத்திற்கு செல்வதற்கே கூச்சமும் அச்சமும் எழ வேண்டும். கதையில் உலவும் கதாபாத்திரங்களுடன் உரையாட, அந்த உரையாடல் நீங்காமல் தொடர்ந்து கொண்டேயிருக்க பிரியப்பட வேண்டும். புனைவில் சொல்லப்பட்டவர்களிடம் கேட்பதற்கு கேள்விகள் எழ வேண்டும். இந்தக் கதையில் அந்த இலக்கு நிறைவேறுகிறது. எனவே, படிக்கக் கூடிய கதை.
கதையை நீங்களும் வாசித்து உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள்.
ஸ்விட்சர்லாந்தில் இஸ்லாமிய தீவிரவாதத் தாக்குதல் கிடையாது. அவர்கள் மத்திய கிழக்கு சிக்கலுக்குள் தலையை நுழைப்பதில்லை.
நவீன யுகத்தில் மத்திய கிழக்கு என்றுமே அமைதிப் பூங்காவாக இருந்ததில்லை. ஆனால், இன்றைய நிலைமை போல் படு மோசமான நிலை எப்போதுமே இல்லை.
ஈராக்கிலும், லிபியாவிலும் சிரியாவிலும், யேமனிலும் உள்நாட்டுப் போர், முழுவீச்சில் கொழுந்துவிட்டெரிகிறது. எகிப்திலும், தெற்கு சூடானிலும், துருக்கியிலும் ஆங்காங்கே கலவரங்களும் கிளர்ச்சிகளும் முளைத்து தழைத்தோங்கி வளர்கின்றன. சென்ற பல ஆண்டுகளில் வந்து போன, உள்நாட்டு கலகங்களின் எச்சங்கள் இன்றைய அள்விலும் அல்ஜீரியாவிலும், ஜோர்டானிலும், லெபனானிலும், சவூதி அரேபியாவிலும், டூனிஸியாவிலும் ஸ்திரமின்மையை நிரூபித்து அஸ்திவாரத்தை ஆட்டிக் கொண்டிருக்கின்றன. ஈரானிற்கும் சவுதி அரேபியாவிற்கும் நடுவான ஷியா / ஸன்னி பிரிவினை கோபங்களும் உச்சகட்டத்தை நெருங்கி முழு மதப்போராக மாறிக் கொண்டிருக்கின்றன. பழங்கால எல்லைத் தகராறான பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலிற்குமான போராட்டங்களும் மீண்டும் தலை தூக்கி வன்முறை வெடிக்க ஆரம்பித்திருக்கின்றன.
குவைத், மொராக்கோ, ஓமான், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்றவை இந்தப் பக்கத்து வீடு பிரச்சினைகளைத் தங்கள் நாட்டிற்குள் வராமல் இதுகாறும் பார்த்துக் கொண்டுவிட்டார்கள். ஆனால், சுற்றுப்பட்டு பதினெட்டு நாடுகளும் குண்டு போட்டு ஒருவரையொருவரோ, அல்லது ஒரு நாட்டிற்குள்ளேயோ அடித்துக் கொண்டு சாகும்போது, அந்த சிக்கல்களின் பிம்பம் அவர்களிடையேயும் வெளிக்காட்டும் என்னும் அச்சத்தில் பயந்து போயிருக்கின்றனர். பதின்மூன்றாம் நூற்றாண்டில் மொங்கோல் படையெடுப்பு தாக்குதலுக்குப் பிறகு இப்போதுதான் இவ்வளவு பெரிய அனர்த்தமான சூழலை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.
காங்கோவில் நடக்கும் சிவில் சண்டைகள் தன்னுடைய 22ஆம் ஆண்டில் காலெடுத்து வைத்திருக்கிறது. பெருவில் நடக்கும் உள்நாட்டுப் போருக்கு 36 வயதாகிறது. ஆப்கானிஸ்தானில் 37 ஆண்டுகளாக உள்ளகப் போர்கள் தொடர்கின்றன.
லிபியாவிலும் சிரியாவிலும், யேமனிலும் அரசு முழுமையாக செயலிழந்து உள்ளது. அதன் எச்சமாக பாதுகாப்பின்மையும் தடியெடுத்தவன் தண்டல்காரன் மனோப்பான்மையும் பெருகியிருக்கிறது. இங்கே சொல்லப்பட்ட ஒவ்வொரு நாட்டிலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மன்னரோ, கொடுங்கோலரோ, தான் மட்டுமே நிற்குமாறு பார்த்துக் கொண்டு, அவருக்கு எதிராகக் குரல் கொடுத்த, அனைத்து மக்களையும் ஒன்றுகோர்க்கக் கூடிய குரல்களை அகற்றிவிட்டார்கள்.
சிரியாவில் தாக்குதலுக்குள்ளாகி அகப்பட்டவர்கள் ஈராக்கில் உள்ள உள்நாட்டு சிக்கல்களை பெரிய அளவில் வளர்த்தார்கள். இந்த இரு நாடுகளிலும் இருந்து வெளியேறியவர்கள் துருக்கியிலும் உள்நாட்டுப் போர் மூளும் சூழலை உருவாக்கினார்கள். அடுத்ததாக அவர்களின் குறி ஜோர்டான்; அதன் பிறகு லெபனான். லிபியாவில் இருந்து கிளம்பிய மிச்சம் மீதி புரட்சியாளர்கள் எகிப்தையும் மாலியையும் டூனிஸியாவையும் குறிவைக்கிறார்கள். இங்கே மூன்று போர்க்களங்கள் இப்போது ரத்தபூமியாக மாறிக் காட்சியளிக்கின்றன. இராக்கிலும் சிரியாவிலும் யேமனிலும் வளைகுடா நாடுகளும் ஈரானும் போர்க்கோலம் தரித்து ரஷியாவுடன் இணைந்து எதிரெதிர் அணியில் கொன்று குவிக்கிறார்கள்.
ஸ்விட்சர்லாந்தைப் போல் அமெரிக்காவும் இந்த இடியாப்பச் சிக்கலுக்குள் தலை நுழைக்காமல் ஒதுங்கியிருக்கலாம். அப்படி தள்ளியிருந்தாலும், ‘அமெரிக்கா மட்டும் தலையிட்டு இருந்தால் நம் பிரச்சினையெல்லாம் நொடிப் பொழுதில் தூசாகப் பறந்து போயிருக்கும்!’ என புதிய பரிணாமம் கற்பித்து, அனர்த்தமாக்கி, அமெரிக்காவின் தோழமை நாடுகளான ஃபிரான்சையும் இங்கிலாந்தையும் கூட குற்றஞ்சாட்டாமல் தவிர்க்க மாட்டார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு கூட யேமன் போன்ற வளைகுடா நாடுகள் சொர்க்கபுரியாக இருந்ததில்லை. உலகில் உள்ள 187 நாடுகளில், 154வது ஏழ்மையான நாடாக, வறுமையான இடமாக யேமன் விளங்கியது. ஐந்தில் ஒரு யேமனியர் பசியால் பட்டினியாகவே இருப்பதாக ஐ.நா. அறிக்கை விட்டது. நல்ல உழைக்கும் வயதில் உள்ள மூன்றில் ஒருவருக்கு வேலை கிடைக்காமல் திண்டாடினார்கள். ஒவ்வொரு வருடமும் நாற்பதினாயிரம் குழந்தைகள், தங்களின் ஐந்தாவது பிறந்த நாளைக் கூட பார்க்க முடியாமல் செத்துக் கொண்டிருந்தார்கள். இதன் நடுவில் கூடிய சீக்கிரமே — யேமனில் இருக்கும் தண்ணீர் எல்லாம் வற்றிவிடும் என்று கண்டுபிடித்து அறிவித்தும் இருந்தார்கள்.
இந்த மாதிரி மோசமான நிலையில் இருக்கும் யேமன் நாட்டின் மீதுதான் இரானும் சவுதி அரேபியாவும் தாக்குதல் நடத்தி தங்களின் செல்வாக்கை நிலைநிறுத்தப் பார்க்கிறார்கள்.
யேமனில் இருக்கும் சொற்ப தொழிற்சாலைகளையும் தயாரிப்பு மையங்களையும் வைப்பு கிடங்குகளையும் மருத்துவமனைகளையும் எரிசக்தி ஸ்தாபனங்களையும் மின்சார உற்பத்தி இடங்களையும் பாலங்களையும் குண்டு போட்டு ஏன் தகர்க்க வேண்டும்? பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட யேமனியர்கள் இந்த சவுதி விமானத் தாக்குதல்களில் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். மூன்று மில்லியனுக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடிழந்து, ஊரை விட்டு நாடோடியாக எங்கெங்கோ சென்று ஓடி ஒளிந்துகொண்டிருக்கிறார்கள். மொத்த யேமனின் மக்கள்தொகை 28 மில்லியன்; அதில் பாதிக்கும் மேற்பட்டோர் — பதினான்கு மில்லியன் யேமனியர்கள் பசியால் வாடுகிறார்கள். அதில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்களும் அடக்கம் என்கிறது அல் – ஜசீரா.
அம்ரான் நகரத்தில் இருந்து அகற்றபட்டவர்களின் தாற்காலிக இருப்பிடம். இங்கே முப்பது குடும்பங்களுக்கு ஒரேயொரு தண்ணீர் தொட்டி உள்ளது புகைப்படம் – .ரவான் ஷெயிஃப் / குளோபல்போஸ்ட்
இந்த மாதிரி பஞ்சத்திலும் நீர்வளத்திலும் பரிதவிக்கும் நாட்டின் மீது சவுதி அரேபியா ஏன் தாக்குதல் நடத்துகிறது?
எல்லாம் அல் – குவெய்தாவை பலபடுத்தும் நோக்கிலேயே செயல்படுத்தப்படுகிறது. யேமனில் தங்களுக்கென்று தனி நாட்டை அல்க்வெய்தா அமைத்துக் கொண்டிருக்கிறது. அங்கே வருமான வரி முதல் இறக்குமதி தீர்வை வரை சகலமும் வசூலிக்கிறது அல்-க்வெய்தா. இதெல்லாம் போதாதென்றால், வங்கிகளைக் கொள்ளையடிப்பது, பெட்ரோல் ஏற்றுமதியில் ஈடுபடுவது போன்ற விஷயங்களிலும் முழுமூச்சுடன் அல் க்வெய்தா இயங்குகிறது. தங்களுடைய வைப்பு நிதியில் நூறு மில்லியன் அமெரிக்க டாலர் வரை சேமிப்பாக வைத்திருக்கிறது. அந்த 100 மில்லியன் கொள்ளை தவிர, கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் ஒரு நாளைக்கு மட்டும் ஒன்றரை மில்லியன் டாலர்கள் லாபம் ஈடுக்கிறது அல் – குவெய்தா. அதே போல் சரக்கு கப்பல் பொருள்களை நாட்டிற்குள் கொணர ஒரு நாளைக்கு ஐந்து மில்லியன் சுங்கவரி விதிக்கிறார்கள்.
இதெல்லாம் எப்படி உள்ளுர்வாசிகள் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள்?
இரண்டாண்டுகள் முன்பு வரை யேமன் அரசாங்கத்தில் இருந்தவர்கள் இந்தக் கோடிக்கணக்கான வருவாய் மூலம் சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இப்போது அல் குவெய்தா வாழ்கிறது. ’அல் க்வெய்தா’வோ ராபின்ஹூட் போல் தங்களுக்குக் கிடைக்கும் கோடிகளில் இருந்து ஆயிரங்களை அள்ளி ஏழை யேமனியர்களை நோக்கி வீசுகிறார்கள். கனடாவின் நெக்ஸன் எனர்ஜி (Nexen Energy)யும் ஃபிரான்சின் டோடல் (Total) நிறுவனமும் சம்பாதித்ததை அல்குவெய்தா சம்பாதிக்கிறது. அல் க்வெய்தாவிற்கும் ஐஸிஸ் அமைப்பிற்கும் உலகளாவிய ஆக்கிரமிப்பு எண்ணத்தில் இருந்தாலும் உள்ளூரில் அந்தந்த இடங்களுக்கு நெருக்கமான பெயர்களையும் இஸ்லாமிய ஷரியா சட்டங்களையும் சொல்லி தங்களின் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்கிறார்கள்.
பழம்பெருமையை வரைபடத்தில் பார்ப்போம்:
இந்த மாதிரி ஒரு பொற்காலம் மீண்டும் திரும்ப வேண்டாமா?
1990 வரை யேமன் இரு நாடுகளாக பிரிந்து இருந்தது. வடக்கு யேமனை ஹௌத்திகள் வைத்துக் கொண்டிருந்தார்கள். அங்கே ஷியா பிரிவு இஸ்லாம் கோலோச்சியது. இவர்கள் இரான் நாட்டின் நட்பாளர்கள். தெற்கே சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆண்டார்கள். தெற்கு சன்னி இஸ்லாமியர்களுக்கு சவூதி தோழமை நாடு.
ஜனவரி 2011 நடுவில் வந்தது. அரபு வசந்தம் உதித்தது. முப்பத்தி மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சர்வாதிகாரி அலி அப்துல்லாஹ் சலெ கவிழ்ந்தார். அவர் வீழ்ந்த சமயம் ஹௌத்திகளின் கை ஓங்கியது. அவருக்கு அடுத்தபடியாக வந்த அப்த் ரப்பு மன்சூர் ஹதி என்பவர் ‘நான் எல்லோரையும் அரவணைத்துச் செல்வேன்’ என வாக்குறுதி தந்தார்.
ஆனால், பதவிக்கு வந்தபின்பு இரானின் எதிரி சவுதி அரேபியாவிற்கு மட்டும் விசுவாசமாக நடந்துகொண்டார். ஆட்சியில் ஹௌத்திகளுக்கு எந்தவிதமான அதிகாரத்தையும் மன்னர் ஹதி (Abd Rabbu Mansour Hadi) நல்கவில்லை. செப் 2014ல் வடக்கு ஷியாவிற்கும் தெற்கு சன்னிக்கும் போர் மூண்டது.
சவுதி அரேபியாவிற்கு இது துளிக்கூட ரசிக்கவில்லை. ஏற்கனவே தங்கள் நாட்டிலும் இதே போன்ற உரிமைக்குரல்கள் ஒலிப்பதை சவுதி நசுக்கிக் கொண்டிருந்தது. இப்பொழுதோ அண்டை நாடான யேமனிலும் ஷியா தலைதூக்கிவிட்டால், அடுத்து சவுதியிலும் அடக்கியாளப்படும் ஷியா பிரிவினர் தங்களின் சுதந்திர வேட்கையைத் துவக்கி விடுவார்கள். விளையும் பயிரை யேமனிலேயே கிள்ளுவது சவுதிக்கு நல்லது.
இதெல்லாம் கேட்கத்தானே ஐக்கிய நாடுகள் சபை இருக்கிறது! பான் கி மூன் என்ன செய்கிறார்? சவுதி அரேபியாவை கண்டித்து அறிக்கையாவது விடலாமே? அப்பாவி சிறுவர்களையும் ஆயிரக்கணக்கான யேமனியர்களையும் கொல்லும் அவர்களின் அராஜகத்தைத் தடுத்து நிறுத்தலாமே…
அப்படியெல்லாம் ஏதாவது வாய் திறந்தால் ஐ.நா. திட்டங்களுக்கு தாங்கள் தரும் நல்கை எல்லாம் ரத்தாகிவிடும் என மிரட்டி, உடனடியாக ஐநா-வின் வாயைக் கட்டிவிட்டார்கள். அந்த மாதிரி ஒரு அறிக்கையை தயார் செய்த 72 மணி நேரத்திற்குள், அந்த கண்டனத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டது ஐ.நா.
உலகில் உபயோகிக்கப்படும் மொத்த எண்ணெய் கொள்ளளவில் பத்து சதவீதம் சவுதி அரேபியாவில் இருந்து உற்பத்தியாகிறது. சவுதியில்தான் எக்கச்சக்க உபரி கையிருப்பும் இருக்கிறது. எனவே சவுதியில் இருந்து வரும் எண்ணெய் இறக்குமதியின் மீது எப்போதுமே அமெரிக்காவிற்கு எப்போதுமே ஒரு கண் இருக்கும். ஒரு வேளை எதிரி ஈரான் சவூதி நாட்டின் மீது நேரடித் தாக்குதல் நடத்த நினைத்தால் அந்த விமானங்களையும் போர்க்கப்பல்களையும் நொடிப்பொழுதில் வீழ்த்த அமெரிக்கா எப்போதுமே தயார் நிலையில் இருக்கிறது.
ஆனால், சவூதியின் பிரச்சினையெல்லாம் உள்நாட்டில் இருந்து வருபவை. ஷியா பிரிவினருக்கும் ஆளும் சன்னி இனத்திற்கும் அணையாப் பகை இருக்கிறது. அரபு வசந்தம் மலர்ந்தபோது எல்லோருக்கும் பணத்தை வாரியிறைத்து, அந்த எழுச்சியை தவிடு பொடியாக்கினார் முன்னாள் மன்னர் அப்துல்லா. இப்போதைய அரசர் சல்மானும் அவருக்கு சற்றும் குறையாமல் மாதந்தோறும் பதினான்கு பில்லியன் டாலர்களை செலவழித்து காசை எரிக்கிறார். இதே மாதிரி அள்ளிவிட்டாலும் இன்னும் நான்காண்டுகள் வரை எந்தவிதக் கவலையும் இல்லாமல் சுகபோகமாக வாழ வைப்பு நிதி இருக்கிறது.
அதன் பிறகு?
அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்பது சவுதி சித்தாந்தம். நான்காண்டுக்குள் சிரியாவைக் கைப்பற்றி விடலாம். இராக்கில் சகோதர ராஜ்ஜியத்தை அமைக்கலாம். யேமனில் இருந்து ஈரானை விரட்டி விடலாம். அல்லது அமெரிக்காவை முழுமையாக சவுதியில் உட்காரவைக்கும் திட்டமாகக் கூட இது இருக்கலாம். இல்லாவிட்டால் அல் குவெய்தா நடத்தும் அராஜக ஆட்சி வருமானங்களை வைத்து புது வியூகங்கள் வகுக்கலாம்.
அடுத்து வரும் அமெரிக்க ஜனாதிபதி முடுவெடுக்க வேண்டிய விஷயம் இது.
முன்னாள் அதிபர் ஒபாமா இரான் ஆதரவு நிலைப்பாடு இல்லாவிட்டாலும் சவுதி அரேபியாவை ஆதரித்தார். அப்படியானால், முழுமனதுடன் இரான் எதிர்ப்புக் கொள்கை மற்றும் சவூதி ஆதரவு நிலைப்பாட்டுடன் வரப்போகும் ஹிலாரி க்ளிண்டன் இன்னும் உறுதியாக சவுதியின் செயல்களுக்கு நேசக்கரம் நீட்டுவார்:
க்யூபா குறித்தும் சே குவெராவின் எழுத்து குறித்தும் ஃபிடல் காஸ்ட்ரோவின் அரசியல் புரட்சிகள் குறித்தும் ஹுலியோ கோர்தஸார் என்ன நினைக்கிறார்? அதை எவ்வாறு தன் புனைவில் வெளிப்படுத்தியுள்ளார்? அதற்கு நீங்கள் அவருடைய ‘மறுசந்திப்பு’ கதையை வாசிக்க வேண்டும்.
இந்த சொல்வனம் இதழில் வெளியாகி இருக்கிறது.
சேகுவேரா சொந்தமாக எழுதிய ”Reminiscences of the Cuban Revolutionary War” என்னும் அனுபவ நூலின் அடிப்படையில் இந்தக் கதை இயங்குகிறது. சே எழுதிய புத்தகத்தில் வரும் பத்திகளின் மறுபக்கத்தை, கோர்தஸார் நமக்கு இங்கே உணர்த்துகிறார். சந்திப்பில் லூயிஸ் என்பவரும் மருத்துவர் சே என்பவரும் மீண்டும் ஒன்றிணைகிறார்கள். லூயிஸ் என்பது அவருடைய அசல் பெயர் அல்ல என்பது கதையின் துவக்கத்திலேயே சொல்லப்படுகிறது. லூயிஸ் என்பது பிடல் காஸ்ட்ரோ.
புரட்சி என்பதும் போராட்டம் என்பதும் காதலியுடன் ஆன முதல் உறவு போல் கனவுகளும் அபிலாஷைகளும் மிக்கவை. ஆனால், விஷயம் நடந்து முடிந்த பிறகு,,.?
தன்னுடைய முகத்தையே முகமூடியாக அனைவரும் அணியுமாறு ஃபிடல் காஸ்ட்ரோ சொல்வது, கதையின் மிக முக்கியமான தருணம். ஃபிடல் என்பருக்கு இருக்கும் சுய லாபம், மற்றவர்களுக்கும் எப்படி நலம் பயக்கும்?
இன்று கிறிஸ்துமஸ். மத்தேயு, மார்க், லூக்கா, ஜான் என்போர் யார்? ஒருவர் மருத்துவர் (சே குவேரா); ஒருவர் மீனவர்; ஒருவர் வரி வசூலிப்பவர்; மற்றொருவர் அறியா பதின்ம வயதுச் சிறுவர். அவர்கள்தான் வேதாகமங்களும் விவிலியமும் எழுதுகிறார்கள். யேசு கிறிஸ்துவை கண்மூடித்தனமாக வழிபட கைகோர்க்கிறார்கள். இந்தக் கதையிலும் பாப்லோ (பால்), லூகாஸ் (லூக்) வருகிறார்கள்.
கடைசியாக இசை. கொர்த்தஸார் எழுதும் கதைகள் எல்லாவற்றிலும் செவ்வியல் இசை முக்கிய பங்கு வகிக்கும். இந்தக் கதைக்கு Alejo Carpentier -ன் எழுத்தாளுமையை பின்பற்றுகிறார் கொர்த்தசார். அவருடைய நடை என்னவென்றால், வரலாற்று முக்கியமான தருணங்களை இசையை அடிநாதமாகக் கொண்டு நடத்திச் செல்வது. சரித்திரத்தால் சரிபர்க்கக் கூடிய விஷயத்தை லயமும் ராகமும் கீதவொளியும் கலந்து பின்னிப் பிணைந்து தருவது. இந்தக் கதையில் கோர்த்தஸார், மொசார்ட் உருவாக்கிய ‘ஹண்ட்’ (Hunt) நாற்கூட்டு சங்கீதத்தைப் பின்னணியில் ஒலிக்க விடுகிறார்..இசையென்றால் மெதுவாய்ச் செல்லும்; சில இடங்களில் பறக்கும். வேட்டையாடும் போது விரைந்து போகும் கதை, பலியான பிறகு அடங்கி ஒலிக்கும்.
கதையின் இறுதியில் வானத்தைப் பார்க்கிறார் சே குவெரா. அங்கே தெரியும் நட்சத்திரம் செவ்வாயா அல்லது புதனா என்று தெரியவில்லை. செவ்வாய் என்றால் சண்டை. புதன் என்றால் வியாபாரம். வானில் தெரியும் நம்பிக்கை நட்சத்திரம் தோழமையான புதனா அல்லது சதா சர்வகாலமும் போரில் மூழ்கும் செவ்வாய் கிரகமா? இல்லை… வர்த்தகம் என்றாலே சச்சரவு நிரந்தரமா? தோளில் கைபோடும் நட்பான பன்னாட்டுப் பரிமாற்றங்கள் என்றாலும் முரண்பாடுகளிலேயே விடிவெள்ளி மூழ்கிவிடுமா என யோசிக்கிறார்.
பிப்ரவரி மார்ச்சு மாதங்களில் எனக்கு நோய் பிடுங்கித் தின்கிறது. இதுவரை பத்துப் பன்னிரண்டு முறை ஆயிற்று. ஓர் ஆண்டு சுரத்துடன் காலும் நடக்க முடியாமற் போய் முடங்கிக் கிடந்தேன். ஒரு முறை மஞ்சள் காமாலை. எப்போதும் ஆஸ்துமா.
இப்படி நோய்கண்டு படுத்திருக்கும் நாட்களில் அதிகம் எழுத முடிவதில்லை. ஒரு முறை மட்டும் மூன்று சிறுகதைகள் எழுதினேன். அது 1962ஆம் ஆண்டில். டைபாயிடு சுரம். டைபாயிடு என்று கண்டறியக் காலதாமதம் ஏற்பட்டு விட்டது. அதனால் இரு மாதங்கள் படுக்கையோடும் மருந்தோடும் கிடக்க நேர்ந்துவிட்டது.
1961-1962ஆம் ஆண்டுகள் எனக்கு ஒரு திருப்புமுனைக் காலம். உலகமே ஏதோ முடிவுக்கு வந்துவிடுவது போன்ற எண்ணம். இருமுறை வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டேன். இலட்சக்கணக்கில் சில ஜபங்கள் செய்து முடித்திருந்தேன். ஏதோ நாளைக்கே யாரிடமோ கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்கிற பரபரப்பு. அப்போது சுரம் வந்தது. முதலில் நாள் கணக்கில் விடாத அசாத்தியமான தலைவலி. அப்புறம் இதர உபாதைகள். படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாது என்கிற நிலை. சுரம் இறங்கிய பிறகும் மூன்று வாரங்களுக்குப் படுக்கையை விட்டு எழுந்திருக்கக் கூடாது என்றார்கள். அப்போதுதான் அந்த மூன்று கதைகளை எழுதினேன். பரபரப்பு கணிசமாக அடங்கிப் போயிருந்தது. சுரம் வந்து படுத்த படுக்கையாகக் கிடந்திராவிட்டால் ஏதாவது ஏடாகுடமாக நடந்திருக்கக்கூடும்.
ஆனால் அந்த மூன்று கதைகளைச் சுரம் வந்துதான் எழுதியிருக்க வேண்டுமென்பதில்லை. நான் அவற்றைப் பற்றி முன்பே நிறைய யோசித்து வைத்திருந்தேன். ஆனால் கதைகளைப் பொறுத்த வரையில் நாம் எவ்வளவுதான் முன்கூட்டியே யோசித்து வைத்திருந்தாலும் அவை நம் மனதில் ஓர் உருவம் பெறவேண்டும். உருவமும் ஓரளவுக்கு மொழிநடையும் கதைக்குக் கதை மாறும். மாறவேண்டும். உண்மையில் படைப்பிலக்கியத்தில் இந்த உருவம் அமைவது மிகக் கடினமான பகுதி. அதற்காக நாட்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
‘நம்பிக்கை’, ’தப்ப வேண்டியதில்லை’, ‘பிரயாணம்’ ஆகிய இந்த மூன்று கதைகளையும் நான் 1950ஆம் ஆண்டு அளவிலேயே எழுதத் தீர்மானித்து விட்டேன். ஆனால் 1962ல் தான் மூன்றையும் எழுத முடிந்தது. ‘பிரயாணம்’ கதையை முடிக்க இன்னும் கூடச் சிறிது அவகாசம் தேவைப்பட்டது.
இப்போது இம்மூன்று கதைகளைப் பரிசீலனை செய்து பார்க்கும்போது எனக்குச் சிலப் பொதுச் சரடுகள் தென்படுகின்றன. மூன்றிலும் ‘நான்’ வருகிறேன். முதலிரண்டில் பார்வையாளனாகவும் கதை சொல்பவனாகவும்; மூன்றாவதில் கதையிலேயே பங்கு பெறுபவனாக. மூன்றிலும் சாதாரண மானிட நிலைக்கு அப்பாற்பட்டதொன்றைத் தேடும் முயற்சி. ‘நம்பிக்கை’ சம்பிரதாயச் சாமியார் ஒருவரை முன் வைத்து எழுதியது. ‘தப்ப முடியாதது’ ஒருவன் தன் செயலாற்றாமையை ஜே. கிருஷ்ணமூர்த்தி கூறும் Choiceless awareness நிலை எனத் தனக்குத் தானே ஏமாற்றிக் கொள்வது பற்றியது. மூன்றாவது கதையாகிய ‘பிரயாணம்’ ஹட யோக அப்பியாசங்களினால் சமாதி நிலையை எட்டிய போதிலும் அது சாத்தியமாகாமல் போகுமோ என்ற ஐயத்தை உட்கொண்டது. மூன்றிலும் நோயும் சாவும் வருகின்றன. ஆனால் இவைதான் முக்கிய அம்சங்கள் என்றில்லை.
நோய் என்னும் எண்ணத்தை எளிதில் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. நோய்க்கான அறிகுறிகள் தோன்றினால் கூட மனம் ஏற்றுக்கொள்ள எதிர்க்கிறது. ஆரோக்கியம் என்பதே நாம் ஆரோக்கியமற்றுப் போகும்போதுதான் உணருகிறோம் என்கிறார்கள். ஆனால் ஓர் அடிமன நிலையில் நாம் என்றும் ஆரோக்கியம் பற்றிய நினைப்பு உடையவர்களாக இருப்பதால் தான் நோயை ஏற்க நம்மையறியாமலேயே நம்முள் எதிர்ப்பு ஏற்படுகின்றது. ஆனால் விரைவிலேயே ஒரு சமரசமும் செய்துகொண்டு விடுகிறோம். நோய் பற்றி நாம் அளவு மீறி அலட்டிக் கொள்வதில்லை.
நோய் நிலையை ஏற்க மறுத்த ஒரு மேற்கத்தியர் நினைவு வருகிறது. எர்னஸ்ட் ஹெமிங்வே. 1940களின் இறுதியில் அவர் புகழேணியின் உச்சியில் இருந்தார் — பிரமுகராக, எழுத்தாளராக, போர் வீரராக. அப்போது பிலிப் யங் என்னும் ஓர் இளம் பட்டதாரி டாக்டர் பட்டத்துக்கென (Ernest Hemingway: A Reconsideration – Philip Young – Google Books) ஹெமிங்வே படைப்புகளை ஆராய்ந்தார். ஆரம்பத்தில் அவருக்கு ஹெமிங்வேயின் ஆதரவு இருந்திருக்கிறது.
ஆனால் நிலைமை மாறத் தொடங்கியிருந்தது. சுமார் இருபது வருட காலம் அதிகம் பிரபலமடையாமல் ஒதுங்கியிருந்த வில்லியம் ஃபாக்னர் திடீரென்று ஓர் உலக எழுத்தாளராகக் கண்டெடுக்கப்பட்டார். காரணம் மால்கம் கவ்லி என்னும் விமர்சகர் ஃபாக்னரின் பல்வேறு நூல்களிலிருந்து சிறப்பானவற்றைத் தொகுத்து, தொகுப்புக்கு விமர்சன அணிந்துரையும் எழுதி வெளியிட வழி செய்தார். இப்போது ஃபாக்னருக்குக் கிடைத்த கவனம் மற்றெல்லா அமெரிக்க எழுத்தாளர்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டது. அது மட்டுமல்ல. 1949-ஆம் ஆண்டு நோபல் பரிசு ஃபாக்னருக்கு அளிக்கப்பட்டது.
ஹெமிங்வேயுக்கு இன்னொரு அடி. பத்தாண்டுக் காலம் காத்திருந்த அவருடைய வாசகர்களுக்கு அவர் அடுத்து வெளியிட்ட நாவலான ‘அக்ராஸ் தி ரிவர் அண்ட் இண்டு தி ட்ரீஸ்’ கொஞ்சமும் பிடிக்கவில்லை. வாய்ப்பு கிடைத்தவர்களெல்லாம் அந்த நாவலை மட்டந்தட்டினார்கள். ‘நியூயார்க்கர்’ பத்திரிகை ஒரு கேலிக் கட்டுரை கூட (The Moods of Ernest Hemingway – The New Yorker) எழுதி வெளியிட்டது. நான் இந்த நாவலைப் படித்தேன். வழக்கமாகவே ஹெமிங்வேயின் கதாநாயகிகள் பலகீனமான வார்ப்புகள் — இதிலும் அப்படித்தான். ஆனால் நாவல் பல இடங்களில், கவிதை நயம் தொனிக்க இருந்தது. அது வரை அவர் அனுபவித்த முக்கியத்துவத்திற்காகவே ஹெமிங்வே பழி வாங்கப்படுவது போலத்தான் தோன்றியது. இந்த வேளையில் பிலிப் யங் ஆராய்ச்சி. பிலிப் யங் அநேகமாக ஹெமிங்வே படைப்புகளையே சார்ந்துதான் அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியிருந்தார். அதன் முக்கிய சாராம்சம் ஹெமிங்வே 1918ல் பலமாகக் குண்டடிபட்டு படுத்த படுக்கையாகக் கிடந்ததன் அதிர்ச்சி, அவர் படைப்புகள் அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளது என்று வாதிட்டிருந்தார். இதை Trauma theory என்று குறிப்பிட்டிருந்தார். இதையும் நான் படித்தேன். மிகவும் புத்திசாலித்தனமாக எழுதப்பட்டிருந்தது. திடீரென்று தன் செல்வாக்கு குறைந்திருக்கும் இந்த வேளையில் இந்த Trauma theory மேலும் குழப்பம் விளைந்திருக்கும் என்று ஹெமிங்வேகருதியிருக்க வேண்டும். யங் ஆராய்ச்சிக்குத் தன் ஆதரவைத் தராததோடு யங் டாக்டர் பட்டம் பெறுவதையும் ஹெமிங்வே எதிர்த்தார் என்று யங் குறை கூறியிருக்கிறார்.
இதற்கெல்லாம் மேலாக ஹெமிங்வே உண்மையிலேயே அப்போது நோயுற ஆரம்பித்தார். முதலில் ஏதோ சரும எரிச்சல், அலர்ஜி என்றிருந்தது. இறுதியில் புத்தி தடுமாற்றம் வரை கொண்டு விட்டிருந்தது. எப்படியோ பெரும்பாடுபட்டு அடுத்த நாவலை எழுதி வெளியிட்டார். ‘தி ஓல்ட் மான் அண்ட் தி ஸீ’. ‘அக்ராஸ் தி ரிவர் …’ நாவல் பகிஷ்கரிப்புக்குப் பரிகாரம் செய்வது போல் இப்புது நாவலை எல்லாரும் ஆர்ப்பாட்டமாக வரவேற்றார்கள். விமரிசகர்கள் பரிசு, புக் கிளப் தேர்வு, புலிட்ஸர் பரிசு, எல்லாவற்றிற்கும் மேலாக நோபல் பரிசு.
இதெல்லாம் ஏதோ தற்காலிகமாகத்தான் ஹெமிங்வேயுக்கு ஆறுதல் அளித்திருக்க வேண்டும். அவருடைய உடல், மனநிலை தொடர்ந்து பேதமுற்றது. மாதக் கணக்கில் வைத்திய விடுதியில் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று. அவர் அந்த ஆண்டுகளில் அவ்வப்போது எழுதிய படைப்பிலக்கிய எழுத்தை அவர் பிரசுரிக்கவில்லை. நோபல் பரிசு பெற்று ஏழாண்டுகளுக்குப் பிறகு, 1961-ஆம் ஆண்டில் மனச்சோர்வையும் நம்பிக்கை வரட்சியையும் தாங்க மாட்டாமல் தற்கொலை செய்துகொண்டு இறந்தார், அவருடைய வாழ்நாளெல்லாம் திடகாத்திரமும் தன்னம்பிக்கையும் சாகசமும் உற்சாகமும் ஒரு சேர இருப்பவர் என்ற தோற்றத்தை நேரடியாகத் தன் படைப்புகள் மூலமாகவும் மறைமுகமாக அவருடைய சாகசச் செயல்கள் பற்றிய செய்திகள் மூலமாகவும் உண்டு பண்ணியிருந்த ஹெமிங்வே இந்த முடிவு அடைந்தது உலகுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.
உண்மையில் ஹெமிங்வே அவ்வளவு பீதியடைந்திருக்க வேண்டியதில்லை. அவருக்குப் படைப்பிலக்கியத்தில் ஒரு சாசுவதமான இடம் உண்டு. அவருடைய நாவல்கள் அநேகமாக நிராகரிக்கப்பட்டு விட்டாலும் அவருடைய சிறுகதைகள் இன்றும் சிறப்பான இலக்கியமாகவே கருதப்படுகின்றன, பயிற்றுவிக்கப்படுகின்றன. அவர் படைப்பு பற்றிய பல கண்ணோட்டங்களில் யங் தந்த trauma theoryயும் ஒன்று; இதற்கு அதற்கு மேல் முக்கியத்துவம் இல்லை.
ஆனால் நோய்வாய்ப்பட்டவர்களின் மனம் எப்படியெல்லாம் செயல்படும் என்று யாரால் நிச்சயமாகக் கூற முடிகிறது? இதில் கலாச்சாரப் பின்னணியையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எனக்குத் தெரிந்து இந்திய எழுத்தாளர்கள் யாரும் நோயால் இப்படி நிலை தடுமாறிப் போய் விடவில்லை. நம் மொழியிலேயே கு.ப.ரா., புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி போன்றோர் நெடுங்காலம் நோயால் அவதியுற்றார்கள். சுந்தர ராமசாமியாவது ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார், தான் நோய்வாய்ப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு. ஆனால் இவர்களும் இன்னும் பல இந்திய எழுத்தாளர்களும் தாம் அனுபவிக்க நேர்ந்த நோயை விஸ்தரித்து எழுத வேண்டும் என்ற எண்ணம்கூட கொண்டிருக்கவில்லை. தற்கொலை செய்து கொள்ளவில்லை.
வெகு நுண்ணியமான வகையில் இந்தியக் கலாச்சாரத்தின் மதிப்பீடுகள், முக்கியமாக இந்த உடல், ஜன்மம் பற்றிய மதிப்பீடுதான், நம் இலக்கியத்தில், அதுவும் தற்கால எழுத்தில் கூடச் செயல்படுகிறது என்று கூறத் தோன்றுகிறது. காயமே இது பொய்யடா என்பது அவ்வளவு வேரூன்றியிருக்கிறது.
வெளியான விவரம்: தமிழில் சிறு பத்திரிகைகள் – வல்லிக்கண்ணன்
1973 ஏப்ரல் மாதம், மாத இதழாகத் திட்டமிடப்பட்டுத் தோன்றிய சுவடு-வின் ஐந்தாவது இதழ் டிசம்பர் மாதம்தான் வெளிவர முடிந்தது. அந்த இதழ் தனிச் சிறப்பு உடையது. படைப்பாளி லா.ச.ராமாமிருதத்தின் தத்துவத் தேடல்கள் என்ற பேட்டிக் கட்டுரை அதில் வந்தது. அத்துடன் மூன்று பல்கேரியப் படங்கள் பற்றி எஸ். ஏ. ராம் விரிவான கட்டுரை எழுதியிருந்தார்.
சுவடு அந்தக்கால ஆனந்தவிகடன் அளவில் வந்தது. ஆரம்பத்தில் 24 பக்கங்களும், பின்னர் 32 பக்கங்களும் கொண்டிருந்தது. அதன் ஏழாவது இதழ் இரண்டாம் ஆண்டுச் சிறப்பிதழ் என்று 56 பக்கங்களோடு வந்தது. அதில் ஈழத்து இலக்கியங்கள்- ஓர் அறிமுகம் (ஜவாது மரைக்கார் ), மெய்-பொய் (அசோகமித்திரன்), வார்த்தைகளும் வாழ்க்கையும் (மெளனி கதைகள் பற்றி-அகல்யா), ஞானபீடம் பரிசு பெற்ற சச்சிதானந்த ஹீரானந்த வாத்ஸ்யாயன்- ‘ஆக்ஞேய பற்றிய அறிமுகம் (என். ஸ்ரீதரன்), டில்லியில் ஏழாவது உலகத் திரைப்பட விழா ( கலாஸ்ரீ) ஆகிய கட்டுரைகள் உள்ளன. நா. விச்வநாதன் கவிதைகள் – நான்கு பக்கங்கள் மற்றும் புவியரசு, கலாப்ரியா, அபி, கிவி கவிதைகள். சுந்தர ராமசாமி, பா. செயப்பிரகாசம், வா. மூர்த்தி கதைகள் இவற்றுடன் இம்மலர் வெளி வந்திருந்தது.
5. Ernest Hemingway on William Faulkner
– “Poor Faulkner. Does he really think big emotions come from big words?”
– ‘Have you ever heard of anyone who drank while he worked? You’re thinking of Faulkner. He does sometimes — and I can tell right in the middle of a page when he’s had his first one.’
முப்பத்திரண்டு வயதில் ஃபிடல் காஸ்ட்ரோ, க்யூபாவின் பிரதம மந்திரியானார். ஒரு நல்ல அரசாங்கத்தை நிறுவும் வரை தாடியை மழிக்க மாட்டேன் என 1959-இல் சபதம் எடுத்தவர், தன்னுடைய சொத்துக் குவிப்பு போலவே தாடியையும் வளர்த்துக் கொண்டிருந்தார். அறுவை சிகிச்சைக்காக தாடியை மாக்-3 அமெரிக்க கத்தி பதம் பார்த்து விட, 76 வயது தாடியை விட்டுவிட்டு பணத்தைக் கொள்ளையடிக்க, தன் தம்பிக்கு வழி விட்டார். அந்த 44 ஆண்டு ஆட்சியில், மக்களுக்கு நல்லாட்சி தராவிட்டாலும், உலகின் தலைபத்து பணக்காரத் தலைவர்களில் இடம்பிடித்தார். அவரின் சொத்துக் கணக்கு: பிடல் காஸ்ட்ரொ – ஜனாதிபதி – க்யூபா – $900 மில்லியன் (6,300 கோடி ரூபாய்) செல்வம் சேர்த்திருக்கிறார்.
படத்தில் நடித்திருக்கும் மிஷ்கினின் கதாபாத்திரத்தின்மீதும் சரி, ஸ்ரீயின் கதாபாத்திரத்தின் மேலும் சரி, முதல் பாதி முடியும்வரை எந்த அட்டாச்மெண்ட்டும் வரவில்லை. படத்தின் துவக்கத்திலேயே மிஷ்கினின் பாத்திரத்தைப்பற்றி போலீஸ் மூலமாக நமக்குத் தெரிந்துவிடுகிறது. கதையில் ஒரு சிறிய துணுக்காக, ஒரு சமூக விரோதிக்கு சிகிச்சை செய்து போலீஸில் மாட்டிக்கொள்ளும் ஸ்ரீயின் கதை இருந்தாலும், அதனால்கூட அவர் பாத்திரத்தின் மேல் எந்தவித உணர்ச்சிகளும் வரவில்லை.
2. காட்சியாக சொல்லப்பட வேண்டிய கதை எல்லாம், கடைசி ஐந்து நிமிடத்தில் டெலி ப்ராம்ப்டரைப் பார்த்து படிக்கும் மிஷ்கினால் ஓவர் ஆக்ட் செய்யப்படுகிறது. கொடுமைடா சாமீ.
3. ‘முகமூடி’ எடுத்தவரின் அடுத்தகட்ட வீழ்ச்சியாக இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
4. ஒரு இயக்குனருக்கு தன் போதாமைகளும், அடுத்தவரின் திறமையை சிறப்பாக வெளிக்கொணரும் ஆளுமையும் இருக்கவேண்டும். இத்தனை திறமையான பட்டாளத்தை வைத்துக் கொண்டிருக்கும் மிஷ்கின் தான் மட்டுமே போதும் என்னும் அகங்காரத்தில் இந்தப் படத்தில் சறுக்கியிருக்கிறார்.
5. ரேப் சீன் வைத்தால் அதில் காமம் தலைதூக்கக் கூடாது. எண்பதுகள் வரை வந்த பெரும்பாலான தமிழ்ப்படங்களில் வல்லுறவு காட்சிகள் காதல் காட்சிகள் போல் படமாக்கப் பட்டிருக்கும். அந்த மாதிரி அந்த பிச்சைக்காரியின் லட்சணமான முகம் கூட இந்தப் படத்தில் பாவப்பட வைக்காமல், ‘குழந்தை விவாகம் செய்து கொண்டாளோ?’ என பிற எண்ணங்களில் பார்வையாளரை மூழ்கடிக்கிறது.
6. தயவுசெய்து இதை திரைப்பட விழாக்களிலோ, வெளிநாட்டினருக்கு தமிழ்ப்பட அறிமுகமாகவோ சொல்லிவிட வேண்டாம். டாகேஷி கிட்டானோ, டாரன்டினோ என்றெல்லாம் டகால்டி விட்டு என்ரான் போல் மோசடியாக சீட்டுக்கட்டு ராஜாக்களைக் கொண்ட கோலிவுட் என்று தப்பாகக் கருதி, மொத்த தமிழ் சினிமாவையும் எள்ளி நகையாடிவிடுவார்கள்
7. அரிதான விஷயங்களைப் பாராட்டினால் மட்டுமே நாம் நினைவில் நிற்போம். பலரும் தூற்றும் விஷயங்களை, நாமும் கிண்டலடித்து கீழே தள்ளினால், இலக்கிய விமர்சகராக மாட்டோம். ஜாய்ஸ் குறித்தும் எலியட் குறித்தும் ஹெமிங்வே குறித்தும் அறிய நாம் எட்மண்ட் வில்சனை நாடுகிறோம்; காஃப்காவைக் குறித்து ஆராயவேண்டுமானால் வில்சனைத் தொட மாட்டோம். என்றாலும், நாம் அனுபவித்த நரகத்தை இன்னொருவரும் அனுபவிக்கக்கூடாது என்பதால், இந்தப் படத்தைப் பாராட்டாதீர்கள் என்கிறேன்.
8. போரடிக்கும் படம் என்பதால் மட்டும் விமர்சிக்கவில்லை. வித்தியாசமான காட்சியமைப்புகள் என்பதால் மட்டும் நிலைக்கூடிய படமில்லை. மேஜிக் நிகழவேண்டும். ராஜா இருக்கிறார். பூடகமான சங்கதி இருக்கிறது. ஒளிப்பதிவாளர் அசத்துகிறார். ஆனால், அவியலில் அவியல் சுவைக்க வேண்டும். இது லட்டுவும் பாகற்காயும் பீட்சாவும் போட்ட அவியல். சகிக்கவில்லை.
9. பாடல்கள் இல்லை. ஐட்டம் சாங் இல்லை. பஞ்ச் வசனங்கள் இல்லை. கூடவே படமும் படமாகவில்லை.
10. திரைப்படங்களில் லாஜிக் பார்ப்பவன் நானில்லை. ஆனால், அந்தந்தப் படங்களில் நம்பவியலாத விஷயங்கள் நம்பக்கூடிய முறையில் உருவாக்கப்பட வேண்டும். ’ஜோக்கர்’ படம் தலைப்பில் ஜோக்கடித்தாலும் படு சீரியசாக செல்லும்; ஆனால், இந்தப் படம் முழுக்க காமெடியாக எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தின் ஆதார முடிச்சான — மிஷ்கின்-ஸ்ரீ சந்திப்பு ஏன் தேவை?
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
பதிப்பாளர்: பேசாமொழி பதிப்பகம்
எழுதியவர்: திரைப்படத்தின் இயக்குநர் மிஷ்கின்
விலை: ரூ.600.00
வாட்ஸாப் தகவலாக இந்த துணுக்கு வந்திருந்தது:
கீழ்க்கண்ட காரணங்களினால் சவூதி அரேபியாவில் சதுரங்க ஆட்டத்திற்கு தடை.
1. சதுரங்க ராணி பர்கா போட்டு முகத்தை மறைத்துக் கொள்வதில்லை என்பதால்
2. சதுரங்க ராணி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்பதால்
3. ராஜாவை விட ராணிக்கு அதிக முக்கியத்துவம் என்பதால்
4. ஆணின் துணையின்றி தன்னந்தனியாக சென்று எதிரியை வீழ்த்தமுடியும் என்பதால்
5. ராஜாவிற்கு ஒரே ஒரு ராணிதான் இருக்கிறார் என்பதால்!
இதே போல்தான் சவுதி அரேபியா குறித்த எந்தத் தகவல் வந்தாலும் எல்லோருமே நகைச்சுவையாக புறந்தள்ளி விட்டுப் போய்விடுகிறார்கள். ஆயிரம் செய்திகள் இருந்தாலும் எடுத்துக்காட்டாக ஒன்றே ஒன்றை மட்டும் பார்ப்போம்: இரு டஜன் முஸ்லீம் குடும்பத்திற்காக ஆயிரக்கணக்கான வங்களிகளின் துர்கா பூஜை முடக்கப்பட்டது. (இந்தியா டுடே) ஜார்கண்ட் மாநில எல்லைக்கு அருகில் வங்காளத்தின் பிர்பூம் (Birbhum) மாவட்டத்தில் கங்லாபஹரி (Kanglapahari) கிராமம் இருக்கிறது. இங்கே நான்கு ஆண்டுகளாக நவராத்திரியை முன்னிட்டு கொண்டாடப்படும் துர்கா பூஜா நடத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இங்கே நிரந்தரமாக கட்டப்பட்ட கோவில் கூட கிடையாது. சும்மா நாலு பந்தக்கால் நட்டு ஒரு திருவிழா நடத்த முடியாமல், தங்கள் பண்டிகையை சகஜமாக அனுசரிக்க முடியாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். சிலருக்காக பலரின் பழக்கவழக்கங்கள் ஒழிக்கப்படுகின்றன. அதே சமயம் சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் பலருக்காக, சிலரின் எல்லா வாழ்க்கைமுறையும் மாற்றி வைக்கப்படுகின்றன.
பாதி முடித்த நிலையில் முடங்கி நிற்கும் துர்கா பூஜை சிலைகள்
இதுவோ இந்தியாவில் நடக்கும் செய்தி. இதற்கும் சவுதி அரேபியாவிற்கும் என்ன சம்பந்தம்?
2050ல் உலகத்தில் மிக அதிகமாக முஸ்லீம்கள் வாழ்ம் நாடு எதுவென்று கேட்டால், அது ”இந்தியா” என்னும் விடையாக இருக்கும். இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 350 மில்லியன் இந்தியர்களாக அப்போது உயர்ந்து இருக்கும். எண்ணிக்கையில் அதிகம் இருப்போரை வஹாபியர்களாக மாற்ற சவூதி எல்லா ஏற்பாடுகளையும் இப்பொழுதில் இருந்தே நிறைவேற்றி வருகிறது. இஸ்லாமிய சட்டப்படி (ஷரியா) முஸ்லீம் அல்லாதவர்கள் திம்மிக்கள் (இரண்டாம் தர குடிமக்கள்). திம்மிகளுக்கென்று ஜிசியா வரி விதித்து அவர்களை அச்சுறுத்தி வைக்க வேண்டும். மாட்டையும் சூரியனையும் சந்திரனையும் பின்பற்றுவர்களைக் காஃபிர் எனக் கருதிக் கொல்ல வேண்டும் என்பது ஐஸிஸ் அறிக்கை. (ஃபர்ஸ்ட்போஸ்ட்)
13ஆம் நூற்றாண்டில் உலகத்தின் உச்சமாக இருந்த நாளந்தா பல்கலைக்கழகத்தில் புத்த பிட்சுக்களையும் அங்கிருந்த ஒவ்வொரு புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் மூன்று மாதமாக சிரமமெடுத்து எரித்தவர்களுக்கு இந்த மாதிரி காரியங்கள் எம்மாத்திரம்?
250 ஆண்டு கால மொகல் ஆட்சியில் தற்போது அமைதிப்ப்புறாக்கள் என சொல்லப்படும் அக்பரும் அவரின் பேரன் காதல் பேரரசர் ஷாஜஹானும் எண்பது மில்லியன் இந்தியர்களைக் கொன்றார்கள். மொகலாயர்கள் இடித்துக் குவித்த கலைப் பொக்கிஷங்களையும், அமைதி என்னும் பெயரில் அவுரங்கசீப் நடத்திய கொன்றொழிப்புகளையும் போல் இன்னொன்றை தடுப்பது எம்மாத்திரம்?
இன்றைய பாரதத்தில் 840 மில்லியன் இந்துக்கள் இருக்கிறார்கள். அகண்ட பாரதத்தில் (இந்தியா மற்றும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில்) 502 மில்லியன் முஸ்லீம்கள் இருக்கிறார்கள். எட்டாம் நூற்றாண்டு துவங்கும்வரை ஒருவர் கூட இஸ்லாமியராக இல்லாத இந்த தேசத்தில் எப்படி இவ்வளவு பேரை மாற்றினார்கள்? எவ்வளவு இந்துக்களைக் கொன்று குவித்தார்கள்? அதேபோல் மற்றுமொன்றை நடத்த ஐம்பதாண்டுகளாகமுஸ்தீபுகள் தொடங்கிவிட்டன
தங்களுடைய சொந்தங்களைக் கொல்வதில் முன்னணியில் நிற்பவர்கள் வெறியூட்டப்பட்ட இஸ்லாமியர்கள். உலகில் நடக்கும் 91% ஆணவக்கொலைகளுக்கு முஸ்லீம் சமூகமே மூலக்காரணியாக இருக்கிறது. மதமாற்றத்திற்காக இந்தச் செய்கை நீளாது என்பது எம்மாத்திரம்?
உங்களிடம் யாராவது சவுதி அரேபியா எதை ஏற்றுமதி செய்கிறது என்று கேட்டால் “எண்ணெய்” என்று விடை சொல்லிவிட்டு பெருமிதமாக காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வீர்கள். ஆனால், சவுதியின் மிகப் பெரிய ஏற்றுமதி என்பது இஸ்லாமில் வஹாபியிஸத்தை உலகெங்கும் நிலைநாட்டுவது மட்டும்தான். அதற்கு கச்சா எண்ணெய் என்பது சில்லறை வியாபாரம். ஐஸிஸ், அல் க்வெய்தா, தாலிபான் என்பதெல்லாம் கிளை நிறுவனங்கள்.
பாகிஸ்தானில் மட்டும் 24,000 மதராஸாக்களை துவக்கி நடத்த சவுதி அரேபியா முடுக்கி விட்டிருக்கிறது. (எகனாமிக் டைம்ஸ்) இந்தப் பள்ளிகளில் நடத்தப்படும் பாடங்களுக்கு இரண்டே இலக்கணம்:
அ) வஹாபி அல்லாதவர்கள் மீது வெறுப்பு வரவழைப்பது
ஆ) தீவிரவாதிகளை உருவாக்குவது
இந்த 24,000 மதராஸா பள்ளிகளில் ஆயிரக்கணக்கானோர் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். ஒரே ஒரு குழந்தையை மட்டும் பார்ப்போம்: பதினைந்து வயதே ஆன சிறுவன் தன் கையை தானே வெட்டிக் கொண்ட சம்பவத்தை பிபிசி பதிவு செய்திருக்கிறது. இறைத்தூதரின் பிறந்தநாளைக் கொண்டாட மசூதிக்கு சென்றிருக்கிறான்.
மதபோதகர் கேள்விகளால், பார்வையாளர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார். “உங்களில் யார் நபியின் வழி செல்கிறீர்கள்?”. எல்லோரும் கை தூக்குகிறார்கள்.
“உங்களில் யார் நபியின் போதனைகளை நம்பவில்லை” என்று கேட்டதற்கு தூக்கக்கலக்கத்தில் கையை உயர்த்திவிடுகிறான். நூற்றுக்கணக்கானோர் அவனைப் பார்வையால் அவமானப்படுத்துகின்றனர். எள்ளி நகையாடுகின்றனர். கூனிக்குறுகி தன்னுடைய கையை அறுத்துவிட்டான்.
1956-ல் வெறும் 244 மதராஸாக்கள் மட்டுமே பாகிஸ்தானில் இயங்கி வந்தன. இன்று இவை கிட்டத்தட்ட நூறு மடங்கு பல்கிப் பெருகியுள்ளன. ஒரு ஒப்புமைக்கு ஜனத்தொகைப் பெருக்கத்தை கணக்கெடுத்துப் பார்ப்போம். 1950களில் 244 மதராஸாக்கள் நாற்பது மில்லியன் மக்களை சென்றடைந்தது. இன்று இது நான்கு மடங்காக 160 மில்லியன் பாகிஸ்தானியர்களாக மக்கள்தொகை உள்ளது. மக்கள்தொகை நான்கு மடங்கேப் பெருகியிருந்தாலும், மதராஸா போதனை மற்றும் மூளைச்சலவை மையங்கள் மட்டும் நூறு மடங்காக உயர்ந்துள்ளது. இப்பொழுதெல்லாம் கணினியிலும் இந்தக் கொலை பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன.
இன்னொரு ஒப்புமையைப் பார்ப்போம். 1920 முதல் 1991 முடிய கம்யூனிஸக் கொள்கைகளைப் பரப்ப வெறும் ஏழு பில்லியன் டாலர்களை அன்றைய சோவியத் ரஷியா செலவழித்துள்ளது. ஆனால், 1960களில் மட்டும் நூறு பில்லியன் டாலர்களை வஹாபி மற்றும் சலாஃபியிஸ இஸ்லாமியக் கொள்கைகளை நடைமுறையாக்க சவுதி அரேபியா செலவழிக்கிறது. செலவு என்பதை விட அழிக்கிறது என்னும் வார்த்தை இங்கே பொருள்படுகிறது.
இது பாகிஸ்தானில்தானே? அங்கே இருந்து வரும் தீவிரவாதிகளைதான் தடுத்துவிடுகிறோமே? இந்தியாவில் என்ன பிரச்சினை?
சவுதியில் இருந்து சென்ற வருடங்களில் மட்டும் 55 கோடிகள் உத்தர பிரதேச மசூதிகளுக்கு வந்து சேருகின்றன.
1) ஷியா பிரிவினரை ஒடுக்குவது,
2) சலாஃபி பிரிவு இஸ்லாமை முன்னிறுத்துவது,
3) இந்திய முஸ்லீம்களின் சூஃபி பிரிவை நசுக்குவது
என்று பலவழியில் இதை பிரச்சாரகர்கள் பயன்படுத்துகிறார்கள்.
இங்கே நன்கொடை அள்ளிவழங்கும் அந்த அல் ஃபரூக் (Al Farooq) குழுமத்தின் மூலகர்த்தா உலக இயக்கங்களினால் தீவிரவாதி என தேடப்படுபவர். ஷேக் ஈத் பின் மொகம்மது அல் தானி அறநல நிறுவனம் (Sheikh Eid Bin Mohammad Al Thani Charitable Association) அல் க்வெய்தாவுடன் பயங்கரவாதத்தை வளர்த்தற்காக தடை செய்யப்பட்டிருக்கிறது.
அமீரகத்தில் (எமிரேட்ஸ் – ஷார்ஜா, அபுதாபி) இருந்தும், கத்தாரில் இருந்தும் குவைத்தில் இருந்தும் இதே போல் பணம் குவிகிறது. இவர்கள் இஸ்லாமிய மரபுவழி மீட்டுயிர்ப்பு சங்கத்தை (Revival of Islamic Heritage Society) சேர்ந்தவர்கள். நிறுவனங்களைத் துவக்கியவரின் முகவரியை ஆராய்ந்தால் அல் குவெய்தாவில் போய் முடிகிறது. அமெரிக்க நிதித்துறையினால் நிரூபணமாகி தலைமறைவாய் இயங்கும் அங்கத்தினர்களைக் கொண்டு தீவிரவாதத்தை எண்ணெய் ஊற்றி வளர்க்கும் இன்னொரு தொண்டு நிறுவனமாக இது இருக்கிறது.
இதே போல் இன்னொரு அமைப்பு உலக முஸ்லீம் லீக் (Muslim World League). இவர்களினால் ரபிதா நம்பிக்கை நிதியம் (Rabita Trust) இயக்கப்படுகிறது. இந்த நிதியம் கொண்டுதான் 9/11 உலக வர்த்தக மையத் தாக்குதல்கள் முடிக்கப்பட்டன. இந்த அமைப்பின் துவக்கத்தில் இருந்து உயிர்நாடியாக செயல்படும் ஜுலய்தான் (Wa’el Hamza Julaidan) என்பவரை 9/11 தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா தேடி வருகிறது. இவர்கள் ஷிமோகா மாவட்டத்திற்கு மட்டும் 38 கோடிகளைக் கொடுத்து மதராஸாக்களை சவுதி பீரங்கியாக செயல்பட வைக்கிறார்கள்.
இவர்கள்:
1. மதீனத் அல் – அலூம் கல்வி அறக்கட்டளை – Madeenath Ul-Uloom Education Trust
2. ரபியா பஸ்ரி ரஹமத் – உல்லா – ஹி – அல்லாயாஹ் நன்கொடை அறக்கட்டளை – Rabiya Basri Rahamat-Ulla-Hi-Allayha Charitable Trust
3. சதியா கல்வி மற்றும் நன்கொடை அறக்கட்டளை – Sadiya Educational and Charitable Trust
ஒரு நாட்டினரை இன அழித்தொழிப்பில் இரக்கமின்றி செலுத்த ஹிட்லருக்கு நாஜியிஸம் உதவியது. அவ்வாறே, ஒரு மதத்தை தீவிரவாத இயக்கமாக எப்படி மாற்றலாம் என்பதற்கு சலாஃபியஸம் உதவுகிறது.
உதாரணமாக டெல்லியில் இருந்து வெளியாகும் நயி துனியா (புதிய உலகம் – Nai Duniya) என்னும் வாரப்பத்திரிகையைப் பார்ப்போம். இதில் நஸீம் ஹிஜஸி என்பவரின் தொடர் வெளியாகிறது. தொடரின் பெயர் – அவுர் தல்வார் டூட் கயீ (அதன் பிறகு கத்தி உடைந்தது). இந்தத் தொடரைப் படித்தால் எவ்வாறு இந்திய முஸ்லீம்களை வெறியூட்டி, எழுத்தின் மூலம், படித்தவர்களையும் ஜிஹாத் மனப்பான்மைக்கு இட்டுச் செல்லலாம் என்பது புலனாகும். இது சலாஃபியிஸம். இதே பத்திரிகை தன்னுடைய பிரத்தியேக செய்தியாக, புலனாய்வு அறிவிப்பாக இந்தக் கற்பனையை அதிகாரபூர்வமாகச் சொல்கிறது: ‘நம் புனித நகரமான மெக்காவின் மீது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குண்டு வீசி அழிக்கத் திட்டமிட்டு இருக்கிறார்’. இது சலாஃபியஸப் பிரச்சாரம்.
இஸ்லாமில் நிறைய பிரிவுகள் இருக்கின்றன. அவற்றில் தலையாயவன என்று நான்கைச் சொல்லலாம். அரசியல் மற்றும் தத்துவ இஸ்லாம் ஒரு முக்கிய அங்கம். தனி நபர் முனைப்பெடுத்து முன்னெடுத்த தீவிர சமயப் பிரச்சாரம் இன்னும் இரண்டு உண்டு. நான்காம் பிரிவாக ஜிஹாதி இஸ்லாம். இவற்றையெல்லாம் கலந்தால் தற்கால சலாஃபியஸம் கிடைக்கும். அரசியலிலும் ஈடுபட முடியும். அதே சமயம் சக முஸ்லீம்களிடம் கூட சண்டை போட்டு கொலைகளும் செய்ய முடியும். புனிதப் போர் தொடுத்து அதில் தற்கொலை தீவிரவாதமும் அரங்கேற்ற முடியும். போருக்குப் பின் நடந்த அழிவில் நற்பணி அறக்கட்டளையும் நடத்த முடியும். இது இன்றைய சிரியா போன்ற நாடுகளில் இஸ்லாமை முன்னகர்த்தும் சலாஃபியஸ அணுகுமுறை.
சவூதி அரேபியாவிற்கு எவ்வாறு இப்படி நூறு மில்லியன் டாலர்களை அள்ளிவிட முடிகிறது? எப்படி அதை நிறுத்தலாம்?
’வலம்’ என்னும் பெயரில் விநாயக முருகன், நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அகராதியில், இந்த பொருள்கள் இருக்கின்றன:
வலம்
– சூழ்போதல்: To go round from left to right, as in temple; வலம் வருதல். தோகையோர் பங்கன்றாளி லுவகையின் வணங்கிச் சூழ்போந்து (கூர்மபு. தக்கன்வேள். 18). பிரதட்சிணஞ் செய்தல். திருமலையே வலம் வந்தனள் (தக்கயாகப். 321).
– பரிவேட்டி: Circumambulation from left to right; வலம் வருகை. தேவரெலாமேவி விளைத்த பரிவேட்டியான் (காளத். உலா, 93).
– வலம்படுதல்: 1. To be victorious; வெற்றியுண்டாதல். வலம்படு முரசின் (பதிற்றுப். 78, 1). 2. To pass across one’s path from left to right; இடப்பக்கத்தி லிருந்து
– வலவன்: Capable man; சமர்த்தன்.
– வலக்காரம்: Falsehood; பொய். (நாமதீப. 655.); வலனாக வினையென்று (கலித். 35).; மேழி வலனுயர்ந்த வெள்ளை நகரமும் (சிலப். 14, 9).
இவ்வளவு அர்த்தங்களும் சொல்லிவிட்டு அராபிய மொழி விளக்கத்தை விட்டுவிடலாமா?
By Allah (Arabic: Wallah, وَٱللّٰه) is an Arabic expression meaning “[I promise] by God” used to make a promise or express great credibility on an expression. It is considered a sin among Muslims to use this phrase and follow it up with a lie.
எவர் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ‘பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலாபிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்’ என்று ஓதுவாரோ, அல்லாஹ்வின் நாட்டப்படி எந்த ஒரு தீங்கும் அவருக்கு நேராது.
பொருள்: எவனுடைய பெயருடன் வானத்திலும் பூமியிலும் எவ்வித தீங்கும் ஏற்படாதோ அப்படிப்பட்ட அல்லாஹ்வின் பெயரால் துதிக்கிறேன். அவன் எல்லாவற்றையும் கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
வலம் அக்டோபர் 2016 (துர்முகி வருடம், புரட்டாசி – ஐப்பசி) இதழின் உள்ளடக்கம்:
இதழைக் குறித்த எண்ணங்களைப் பதிவு செய்து வைக்கலாம். உள்ளடகத்தில் படித்த மட்டும்:
கலைச் சின்னங்களைத் தகர்க்கும் வெளி – வெங்கட் சாமிநாதன்
இந்தக் கட்டுரை நிறைவைத் தருகிறது. கொஞ்சம் சிந்திக்கவும் கற்றுத் தருகிறது. சுருக்கப்பட்ட வடிவம் என்கிறார்கள் – அந்த மாதிரி கத்திரி போட்டதே தெரியாமல் செய்ததற்கு வலம் ஆசிரியர் குழுவைப் பாராட்டலாம். ஆனால், ஏற்கனவே வெளிவந்த கட்டுரைகளை, மீண்டும் அச்சில் ஏற்றாமல் அடுத்த இதழ்களில் இருந்து புதியதாக மட்டுமே தரப் பார்க்கலாம்.
நேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் – வெங்கட் சாமிநாதன்
போன கட்டுரை — எடிட்டிங் நல்ல முறையில் தொகுப்பதற்கான அத்தாட்சி என்றால், இந்தக் கட்டுரை மோசமான முறையில் வெட்டுவதற்கான அத்தாட்சி. குதறியிருக்கிறார்கள்.
சிறப்பான கட்டுரை. நான் முப்பது பைசா (அமெரிக்க டாலர் மதிப்பில்) போட்டு இந்த நூலை வாசித்தேன். கொடுத்த பணத்திற்கு நல்ல வரும்படி என்று இதைக் கொணர்ந்ததற்கே சொல்லி விடலாம். அவசியம் வாசிக்கப் பட வேண்டிய எண்ணங்கள்
மாதொரு பாகன் – என்னதான் நடந்தது? – ராஜா ஷங்கர்
சமகால வரலாற்றை சொல்லியிருக்கிறார். என்னைக் கவரவில்லை. ஏற்கனவே எனக்கு நன்கு அறிமுகமான விஷயம் என்பதால் போரடித்தது ஒரு பக்கம். இணையத்து நடை என்பதும் சிறு பத்திரிகையின் காத்திரத்தன்மைக்கு சற்றே பத்தரை மாற்றுத் தங்கம் குறைந்து, ‘குங்குமம்’ சுஜாதா கட்டுரை போல் இருந்ததும் இன்னொரு பக்கம் அலுக்க வைக்கிறது.
இந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா? – லக்ஷ்மணப் பெருமாள்
இன்னும் சிறப்பாகவும் ஆழமாகவும் குவிமையத்தை நோக்கி விரிவான வாதங்களை வைத்தும் எழுதியிருக்க வேண்டிய கட்டுரை. தகவல்களும் அலைபாய்வுகளும் கவனத்தை சிதறடிக்கின்றன
அருகி வரும் யானைகள் – பி.ஆர்.ஹரன்
திண்ணையில் இவரின் சில கட்டுரைகளை (யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் ) படித்திருந்தனால், இதைப் பார்த்தால் புதியது போலவேத் தோன்றவில்லை. தொடர் என்று வேறு சொல்லி இருக்கிறார்கள். வலையில் வெளியான விஷயத்தைத் தவிர்க்கலாம்.
மதர் தெரசா: இறுதித் தீர்ப்பு – ஜடாயு
ஒரு கட்டுரைக்கு ஒரேயொரு இலக்கு மட்டும்தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் என் போன்ற சாதாரணர்களின் சிந்தையில் தெளிவாகப் பதியும். எடுத்த காரியத்தை பொருத்தமான குறிப்புகளோடு கில்லியாகக் குறி பார்த்து சஞ்சலமின்றி எடுத்துரைக்கும் பாங்கும் சமகால எம்.ஜி.ஆர் போன்றோரோடு ஒப்பிடும் பார்வைகளும் – அபாரம். கடந்த இரண்டு/மூன்று கட்டுரைகள் படித்து கடுப்பான சமயத்தில், ‘பத்திரிகை பரவாயில்லை!’ என்று சொல்லவைக்கும் பதிப்பு.
பழைய பாடல் (சிறுகதை) – சுகா
ஆப்பிள் மாக்புக் என்னும் கணினியையும் விண்டோஸ் கணினியையும் ஒப்பிட்டால் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருக்கும். சொல்லப் போனால் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் கணிபுத்தகங்கள் கொடுக்கப்படும் விலைக்கும் அதன் தரத்திற்கும் சம்பந்தம் இல்லாமல், சல்லிசாக இருக்கும். அந்த மாதிரி வலம் இதழை சடாரென்று ஸ்டீவ் ஜாப்ஸ் வந்து அறிமுகம் செய்வது மாதிரி சுகா ஜ்வலிக்கிறார். கதாபாத்திரங்களின் கச்சிதமான அறிமுகம் முதல் உலா வரும் மாந்தர்களை கனவிலும் நிழலாட வைக்கும் சாதுர்யமான செதுக்கல் வரை – எல்லாமே அக்மார்க் எழுத்தாளரின் முத்திரை. இவரை படித்த பிறகு நூலை மூடிவைத்துவிட்டேன். பாக்கியை இன்னொரு நாள்தான் படிக்கணும்.
‘புதிய தேசியக் கல்விக் கொள்கை – 2016’ – ஒரு பார்வை – B.K. ராமசந்திரன்
பிடிஎஃப் இதழை வாங்கி அப்படியே வாசிக்க: (ஃப்ளாஷ் தேவை – எனவே ஸ்லேட், ஐபேட், டாப்லெட் போன்றவற்றில் வாசிப்பதில் சற்றே சிரமம் இருக்கும்): http://nammabooks.com/buy-valam-magazine
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde