எனக்கு நம்பி கிருஷ்ணன். எஸ். ராமகிருஷ்ணனால் பாடல் பெற்றவர். பி.ஏ. கிருஷ்ணன் மூலமாக அறிமுகம் ஆனவர். பாண்டியாட்டம், அவதரிக்கும் சொல், நரி முள்ளெலி டூயட் போன்ற நூல்களை எழுதியவர். சொல்வனம் என்றில்லாமல் பதாகை, தமிழினி, கனலி, வனம் என்று எல்லாவிடங்களிலும் விஷயதானம் வழங்குபவர்.
கோட் என்றால் ?
—> கோட்டம் – நம்பி தனக்கென நாடு வைத்திருக்கிறார். நாட்டம் பிடித்தவர்களை வாசிக்கிறார். விலாவாரியாக அனுபவிக்கிறார். நமக்கும் தருகிறார்.
—> கோட்டை – நம்பி அறிமுகப் படுத்திய டாவன்போர்ட் பற்றி இப்படிச் சொல்வார்கள். எட்கர் ஆலன் போ-வின் இறுதி ஊர்வலத்தில் கவிஞர் வால்ட் விட்மான் வருவார் குகையோவியங்களில் பிகாஸோ நடமாடுவார். எமர்சனும் தொரோவும் உரையாடுவார்கள்.
நம்பியின் அபுனைவுகளில் அந்தப் பாய்ச்சல் இருக்கும். ஒவ்வொரு பத்திக்கும் சில பல கூகுள் தேடல் தேவை. வார்த்தைகளுக்கு அகரமுதலியில் அர்த்தம் போதாது. பிரிட்டானிக்கா வேண்டும். முழு அனுபவமும் கிடைக்க மூல நூலையும் படித்து, அசல் இடங்களையும் சுற்றிப் பார்த்து, நம்பியுடனும் நான்கைந்து முறை பேசிவிட வேண்டும்.
அவருக்கு பிறந்த நாள். ’கோட்’ நம்பிக்கு வாழ்த்துகள்.
அவரின் புத்தம் புதிய கதையை சொல்வனத்தில் வாசித்து விட்டீர்களா?
இன்றைக்கு கே. என். செந்தில், தமிழினி கோகுல் பிரசாத், முகமூடி ராஜேஷ், வெ. சுரேஷ், போகன், தமிழ்நதி என்று எண்ணற்ற ஃபேஸ்புக் பதிவுகளின் தொடர்ச்சியும் உண்டு.
பிழைத்துக் கிடந்து, கடவுளின் நல்லாசியும் கொண்டு, அத்யந்தமான அனுபங்களும் கிடைத்து, தொடர்ச்சியாக எனக்குக் கிடைத்த விஷயங்களைப் பகிர வேண்டும்.
அதுதான் ”சகுனங்களும் சம்பவங்களும்”.
வெளியிட்ட சொல்வனம் இதழுக்கு நன்றி. படித்துப் பார்த்து உங்கள் எண்ணங்களைப் பகிருங்களேன்!
தலைப்புக் கட்டுரையாக அனுபவப் பகிர்வு – லோகமாதேவி: உண்மை என்பதாலும் அயல்நாடு விஷயத்தினாலும் உணர்ச்சிகரமாக, நெருக்கமாக எழுச்சியுற வைக்கிறது. விஷ்ணுபுரம் விருது நாயகரின் 77ஆம் அத்தியாயம் – மிளகு: இரா. முருகன் என் ஆசிரியர். அவர் ஊக்குவிக்கா விட்டால் எழுதவே வந்திருக்க மாட்டேன்.
இந்த இதழை ஓவியச் சிறப்பிதழ் எனலாம். எஸ் எச் ராஸா வந்த அரா கவிதைகள். மாதுரி தீட்சித் வந்த ‘வருணன் கவிதைகள்’ ஆர் ஸ்ரீனிவாசன் எழுதிய ஓவியர் ஃப்ரான்சிஸ் பேகன் (Francis Bacon) அனுபவம் + ஆராய்ச்சிக் கட்டுரை வெங்கட் ரமணன் வழக்கம் போல் உச்சங்களைத் தொடும் ரெனே மக்ரிட் (René Magritte) – அஞ்சனம் + ஆஞ்சநேயம்
இந்தக் கட்டுரை சொல்வனத்தில் வெளிவருமா! சரியான தளத்தில் தான் இருக்கிறோமா? என சற்றே தொடர்புயர்வுநவிற்சி கொள்ள வைத்த பாகிஸ்தானிய சமூகவியலாளரும், முற்போக்கு எழுத்தாளருமான ரஸா நயீம் எழுதிய சிந்து சமவெளியின் சோஷலிச சூஃபியின் தியாகம் – வாசிக்க வேண்டிய பட்டியலில் காத்திருக்கிறது!
ஆனால், வாசித்து ரசித்த கதை = ஸ்ரீருத் எழுதிய அமானுஷ்யம்: திவ்வியதிருஷ்டியும் மந்திரசித்தியும் உபசுருதி ஏற்றிய கனவு. நான் எழுதுவதை செயற்கை நுண்ணறிவு இன்னும் நன்றாக எழுதுமோ என யோசிக்க வைக்கும் ரவி நடராஜன் புகைப்பட க(வ)லை கட்டுரை – வாசிக்க லகு.
AI Generated
அப்படியெல்லாம் நான் யோசிக்காமல் எழுதிய சகுனங்களும் சம்பவங்களும் – இரண்டாம் பகுதி.
முதலில் பி.ஜி. பகிரப்பா குருபசப்பா ஹலகட்டி (PG Phakirappa Gurubasappa Halakatti) தென்பட்டார். அவரிடம் இருந்து வசன சாஹித்தியம் கிடைத்தது. அடுத்தது பிரபு தேவா நடனம். அவரிடம் இருந்து இடுப்பொடிக்கும் ஆட்டம். எவர் சிறப்பாக ஆடுகிறார் என்னும் போட்டி. கடைசியாக, அந்தாதி போன்று அகமாட்சி – ரேவதி என்னும் நடிகையை வைத்து ஒரு ஆட்டம்.
தான் எழுதுவது மற்றவர்களுக்குப் பிடிக்கிறதா? புரிகிறதா? புதியதாக இருக்கிறதா? என்பது ஒட்டக்கூத்தர் காலத்தில் இருந்து தோன்றும் மனக்கிலேசம்.
சிறுகதைக் களஞ்சியம் ஆக சொல்வனம் மாறிக் கொண்டிருக்கிறதோ என்னும் பயம் உங்களுக்கு வந்திருக்கும்.
வருகிற எல்லா புனைவுகளையும், பொறுமையாகப் படித்து, ஒவ்வொன்றுக்கும் கருத்தும், எதற்காக மறுதலிக்கிறோம், எப்படி தேர்ந்தெடுப்பில் வைக்கிறோம் என்று ஒவ்வொரு நாளும் (பதினைந்து நாளுக்கு ஒரு முறைதான் என்றாலும்… தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தால் மட்டுமே வீட்டுப்பாடத்தின் பளு) குறையும், நிறையும் சொல்லும் அனைத்து பதிப்பாசிரியர்களுக்கும் நன்றி.
இந்த 318ஆம் இதழைப் பார்த்தால் ஏழு கதைகள் ஏழு மொழியாக்கங்கள்
மொழிபெயர்ப்புகள் எல்லாவற்றையும் கடகடவென்று ஓட்டியதில்: 1. நம்பி – சுய முன்னேற்ற கட்டுரையைத் தந்திருக்கிறார். அமெரிக்காவில் உழைத்துத் தள்ளுவோருக்கான ஊக்க விட்டமின்
2. மயக்கமா… கலக்கமா… என்பது போல் டொடரொண்டோ வெங்கட் ஆக்கம் – இன்னும் ஆழமாக வாசிக்க வேண்டும். ஓவியம், மதம், புத்தம் என்று காக்டெயில் போட்டிருக்கிறார்.
3. ரேமண்ட் வில்லியம்ஸ் – நம்பிக்கைக்கான ஆதாரங்கள் : இப்பொழுது உங்களுக்கு இந்த இதழ் தினுசாக மன ஊக்கத்திற்க்காக, உள் உற்சாகத்திற்காக உருவானதோ என்னும் சந்தேகம் வர வேண்டும்.
4. நாம் அனைவரும் அர்ஸுலா லெ க்வினை அதிகம் படிக்க வேண்டும் – விபி வெங்கட் பிரசாத்தின் தமிழாக்கம். லெ குவின் எழுதிய ‘Sea Road’ போன்ற அதிகம கவனம் பெறாத ஆக்கங்களை அடுத்துக் கையில் எடுக்க வேண்டும். இது தெரிந்த விஷயங்களை அர்சுலா மூலமாகத் தொட்டுச் செல்கிறது.
5. எல்லா நேரத்திலும் அதிகபட்ச முயற்சியைக் கொடுங்கள் – பால் ஆஸ்டர் : நியு யார்க் நகரமும் நகரத்தின் எழுத்தாளர்களும் நியு யார்க்கை சுற்றி நடக்கும் எந்தக் கதையும் திரைப்படமும் எனக்கு ரசிக்கும். பால் ஆஸ்டர் இதெல்லாம் ஒருங்கேக் கொடுத்தவர். கூடவே ஃப்ரெஞ்சு வாசிப்பு + வளர்ப்பு வேறு உண்டு.
கூடவே… யூதர்களைப் பற்றி, மார்கெரித் யூர்செனார் என்ன சொல்லியிருக்கிறார்?
இவ்வளவு சொல்லிவிட்டு அந்த ஏழு கதைகளைப் பற்றி ஒன்றுமே சொல்லாவிட்டால்… நவீன உணவுமுறையில் பாரம்பரிய சோற்றை விரும்பும் தற்கால ஆண்களைச் சாடும் ’அறிவுப்புருசன் ‘ வாசித்தேன்.
சிறுகதை என்றால் அ) முடிவுக்கு அருகில் துவங்க வேண்டும் ஆ) சம்பவங்கள் நிறையவும் தாவல்கள் குறைவாகவும் இருக்க வேண்டும் இ) போதனை வேண்டாம்; புரிதல் கொடுக்க வேண்டும்.
இது எதுவுமே அந்தக் கதையில் இல்லை. தமிழில் ஒரு பக்கம் காமம் + சுயம் குறித்து எழுதி அலுக்க வைக்கிறார்கள். இன்னொரு பக்கம் எண்பதுகளில் இருந்தே மீளாமல் புரளுகிறார்கள்.
நன்றாக எழுதுபவர்கள் எல்லாம் சினிமாவில் வாசம் செய்கிறார்களோ!?
புதிய சொல்வனம் இதழில் பல முக்கிய ஆக்கங்கள் இருக்கின்றன. முகப்புக் கட்டுரையை விட்டுவிடலாம். எழுதியவரும் எழுதப்பட்டவரும் சொல்வனம் ஆசிரியர் குழுவில் தொடர்ந்து காத்திரமாகப் பங்களிப்பவர்கள். பத்து சிறுகதைகள். ஒவ்வொன்றையும் தனித்தனியாக பின்னொரு ரத சப்தமி அன்று அறிமுகம் செய்யலாம். ஐந்தாறு தொடர்கள்; இரண்டு வாசகர் கடிதங்கள் போன்றவற்றையும் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என எங்கேனும் ஏற்கனவே எழுதியிருப்பேன்.
312ஆம் சொ.வ. இதழில் என்னைக் கவர்ந்தவை: 1. செமிகோலன் எழுதிய கவிப்பித்தனின் சாவடி தொகுப்பிற்கான எண்ணங்கள் 2. வெங்கட்ரமணன் எழுதிய கிணற்றிலிருந்து வெளிவரும் உண்மை
முதல் பதிவு நேர்மையாக சக காலப் படைப்பாளியின் ஆக்கங்களை அணுகுகிறது. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் பத்து, பதினைந்து புதிய எழுத்தாளர்களின் புத்தம்புதிய நாவல்களையும் தொகுப்புகளையும் வாங்கினாலும், எவரைக் குறித்தும் பதிவு செய்வதில்லை. அந்தக் குறையை அரைப்புள்ளி நீக்குகிறார். அதற்காக “வாழ்க!” (“தொடர்க”வும் கூடவே சொல்லி வைக்கிறேன்).
கனடா வெங்கட் எழுதிய கட்டுரையை அலுவலில் திறந்து விடாதீர்கள். அக்கம்பக்கம் பார்த்துப் படியுங்கள். (சரோஜாதேவி புத்தகம் என்று ராம்பிரசாத் எழுதியதைப் பொதுவிடங்களில் பலர் பார்க்க புரட்டுவதில் எந்த ஆபத்தும் இல்லை). க.வெ. (இவர் டொரொண்டோ பக்கம் இருப்பதால் என்னைப் போன்றோரால் டொரொண்டொ வெங்கட் என்றும் அழைக்கப்படுகிறார்) தத்துவத்தில் துவங்கி, ஓவியத்திற்கு பாய்ந்து கர்ண பரம்பரைக் கதைகளைச் சொல்லி சிறுவாணியாகப் பாய்ந்தோடுகிறது.
உண்மையாக ஓவியத்தைப் பார்த்தால் இளமையாக இருக்கிறது. இன்றைய டிக்டாக் காலத்தில் போலி முகத்தைப் பொருத்தி உலா வருவது சகஜம். அந்தக் காலத்தில் செயற்கை நுண்ணறிவு இல்லாமலே சொந்தமாக வேஷம் போட்ட பொய்யை எல்லோரும் தீட்டிக் கொண்டிருக்க, உண்மையை படம் வரைந்தவரின் கதையைப் படியுங்கள்.
நல்ல மலையாளப் படம் போல் தத்ரூபமான கதை. வெண்முரசு எழுதியதின் மிகுதியில் உருவான சேடி. தத்துவமும் குட்டிக்கதையும் பின்னிப் பிணைந்திருக்கும் பாதை.
கலைமகள், அமுதசுரபி, மஞ்சரி, ஞானபூமி போன்ற இதழ்களில் படித்திருக்க வேண்டியது; பார்த்தனும் முராரியும் உரையாடுவது; சாந்தமாக நிச்சிந்தையாக நேரம் எடுத்துக் கொண்டு நீண்ட காலம் நெஞ்சில் நிலைத்திருப்பது.
இந்த 310ஆம் சொல்வனம் இதழில் ராமராஜன் மாணிக்கவேல் எழுதிய “கொடை” குறிப்பிடத்தக்க ஆக்கம். வாசியுங்கள்
சென்ற சில இதழ்களாக சொல்வனம் வழக்கமான பிரசுர நாட்களில் பிரசுரமாகவில்லை. இந்த இதழும் (307) தாமதமாக இன்று பிரசுரமாகியது.
அடுத்த இதழ் (308) டிசம்பர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று பிரசுரமாகும்.
இதழ் எண் 309 டிசம்பர் 31, 2023, மாதத்தின் ஐந்தாம் ஞாயிறன்று பிரசுரமாகும். 2024 இலிருந்து வழக்கமான இரண்டாம் ஞாயிறு மற்றும் நான்காம் ஞாயிறுகளில் இதழ்கள் பிரசுரமாகும்.
நவம்பர் 27ஆம் தேதியிட்ட ‘தி நியு யார்க்கர்’ – தனிப்பட்ட வரலாறு (Personal History) என்னும் தலைப்பில் பல ஆக்கங்களை வெளியிட்டுள்ளது.
சொல்வனம் தளத்திலும் அவ்வாறு ஒவ்வொரு இதழுக்கும் ஒரு குவிமையம் இருக்கவேண்டும்.
உங்களுக்கு மட்டுமே உரித்தான பிரத்தியேகமான அடிப்பாடுகளை எழுதி அனுப்புங்களேன்.
அப்படியே அடுத்தடுத்த இதழ்களுக்கான தலைப்புகளையும் பரிந்துரையுங்களேன்.
அருங்காட்சியகத்தில் பார்த்தேன். மஹாராஷ்டிராவின் தானே பகுதியில் பாறைகளுக்குள் தங்கமாக, மலையினுள் மறைந்து சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது.
இது போல் எத்தனை எத்தனை ஆளுமைகள்? இசை ஞானிகள்? எழுத்தாளர்கள்? பேராசிரியர்கள்? பேச்சாளர்கள்?
இவர்களின் சங்கீதத்திலும் புனைவிலும் படைப்பிலும் ஆய்விலும் சிந்தனையிலும் உரையாடலிலும் – அவற்றை மகோன்னதமான செயல்பாட்டில் செழுமையாக்கிய வித்தையையும் அறிந்து தெளிந்து கொள்ள அம்பையின் “துவாரம் மங்கத்தாயாரு” போன்ற சொல்வனம் கட்டுரை உதவுகிறது.
சொல்வனத்தின் இந்த முன்னூறாவது இதழிலும் நிறைய பேர் இவ்வாறான தெரிந்த, தெரியாத பெயர்களையும் சிறுகதையாசிரியர்களையும் நெடுங்கதைகளையும் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.
கமலராகம், பதுமராகம் போன்ற அருங்கல்லான ஜய்ரொலைட் கல்லின் பெயர் – ‘குரொஸ்’ என்னும் கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. ‘குரொஸ்’ என்றால் முழுமை; வட்டத்தின் பரப்பு – பலம்.
சொல்வனத்தின் பலமே இந்த மாதிரி இரத்தினங்களை அறிமுகம் செய்து, அவர்களின் வாழ்க்கைப் பாதையை உணர்த்தி, ஊன்றுகோல் வழிகாட்டிகளை பரிச்சயப்படுத்தி, தேர்ந்தெடுத்த துறையில் சாதனையை விவரித்து – அவர்களைப் போல் அரிய காரியங்களுக்கு உங்களையும் கிரியா ஊக்கியாக இலட்சியங்களை அடையாளங்காட்டுவது
நான் இப்போதுதான் மே மாதம் வெளியான கட்டுரையே வாசிக்கிறேன். நீங்களாவது 300வது இதழின் ஆக்கங்களை உடனடியாக வாசித்து விடுங்கள்.
புதிய இதழில் கவனப்படுத்திய எந்தப் படைப்பாளியை நீங்கள் வாசித்திருக்கிறீர்கள்? எவர்களைத் தவறவிட்டுவிட்டார்கள்? எந்த கட்டுரைகள் விமர்சனங்களாக இல்லாமல் வெறும் அறிமுகமாக நின்று விட்டது? அருமைகளையும் பாஷாணங்களையும் சொல்லவும்
கல்யாண்ஜியைத் தெரியும். வண்ணதாசன் சிறுகதைகளை விரும்பி வாசிப்பேன்.
அவர் ஒரு ஓவியரும் கூட – என்பதை வேலாயுத முத்துக்குமார் அவர்கள் மூலமாகத்தான் அறிகிறேன்.
செத்த காலேஜ் எனப்படும் ”இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்” (Museum of Natural History) போனால் நிறைய மிருகங்களையும் பறவைகளையும் விதம் விதமாக பாடம் செய்து வைத்திருப்பதைப் பார்க்கலாம். ஊர்வன, நடப்பன, பறப்பன, நீந்துவன, என்று கண்டம் கண்டமாகக் காணக்கிடைக்கும் விலங்குகளை தத்ரூபமாக அதன் ஒய்யாரத்துடனும் அலங்காரங்களுடனும் தீட்சண்யமான பார்வைகளுடனும் அருகருகே நிறுத்தி வைத்திருப்பார்கள். சிறுகதையையோ நாவலையோ வாசிப்பது அந்த வகை.
அதை எப்படி அனுபவிப்பது என்று #vannadasan -க்குள் சற்றே உள்ளிழுக்கிறார் வேலாயுத முத்துக்குமார்.
அதன் பிறகு ஆசிரியரை சந்திப்பது… வண்ணதாசனின் எழுதுபடங்களை உணர்வாக்கி நமக்குள் ”நெடுமண் இஞ்சி நீள் நகர் வரைப்பின் ஓவு உறழ் நெடுஞ் சுவர் நாள் பல எழுதி செவ்விரல் சிவந்த அவ் வரி அணங்கொழிலை”யும் பகிர்கிறார்.
எழுத்தை படிப்பது என்பது செத்த கல்லூரி அரும்பொருளகம். எழுத்தாளர்களை நேரில் பார்ப்பது என்பது விலங்குகளை சுதந்திரமாக உலவ விட்டு நாம் கூண்டுக்குள் இருக்கும் மிருகக்காட்சிசாலை விலங்காலயம். எழுத்தாளரை சந்தித்து உரையாடுவது என்பது அடர்காட்டின் உள்ளே பயணம் செய்து யாருமில்லா தனிமையில் அந்த உயிரினமும் நாமும் தூரத்தே நின்று ஒருவரையொருவர் நோட்டம் விடும் அபாயம் கொண்ட துணிகரச் செயல்.
புத்தம்புதிய சொல்வனம் இதழ் #297 வெளியாகி இருக்கிறது.
நான் இருக்கும் இடத்தில் மூன்று மாதம் வெயில் அடிக்கும். கோடைக் காலங்களில் கொண்டாட்டம், சுற்றங்களோடு ஊர் சுற்றல் என்றிருப்பதால் இதழை ஆற, அமர படிக்கவில்லை.
இரா முருகன் எழுதும் மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு வெளியாகி இருக்கிறது. (48 அம்மாடீ! 24 மாதங்கள்!! இரண்டு வருடங்களுக்கும் மேல்!!!)
நாகரத்தினம் கிருஷ்ணா மொழியாக்கத்தில் அதிரியன் நினைவுகள் – 16ஆம் பாகம் கிடைக்கிறது. அதே போல் பானுமதி. ந. தமிழாக்கத்தில் ராஜேஷ்குமாருக்கு முன்பே எட்கர் ஆலன் போ எழுதிய துப்பறியும் கதையான மார்க் தெரு கொலைகள்- இறுதிப் பகுதியுடன் முடிகிறது.
இதெல்லாம் இலக்கியம்.
தற்கால உலகத்தை அமெரிக்க மேற்குலகை அற்புதமாக அறிமுகம் செய்து சமீபத்திய வரலாற்றை செவ்வியல் ஆக்கும் அமர்நாத் அவர்களின் உபநதிகள் – ஒன்பது உள்ளது. அவர் ஜாஜா-வின் தெய்வநல்லூர் கதைகள் – ஐந்தாம் அத்தியாயத்திற்கு சரியான போட்டி.
எழுத்தாளர் அமர்நாத் கதைகளும் சரி… சிரித்தே சொக்க வைக்கும் ஜா. ராஜகோபாலன் புனைவும் சரி… எந்தப் பாணியிலும் இல்லாமல், ஏற்கனவே தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகமான எழுத்தாளர்களின் நடையையும் நினைவுறுத்தாமல், அது பாட்டிற்கு செவ்வனே சிறப்புற அமைக்கப் பெற்று “பேஷ்!” போட வைக்கிறது.
இந்த மாதிரி தொடர்கதைகளை வாசிக்கிறீர்களா? இன்றைய ஆறு நொடி டிக்-டாக் சமூக அவசரத்தில் பொறுமையாக ருசித்து ரசிக்கிறீர்களா? சமீபத்திய “தொடரும்” போடும் இணையக்கதைகளில் எதை விரும்பீனீர்கள்?
296ஆம் இதழை – சொல்வனம்.காம் புதிய பதிப்பை – கவிதை குவிமைய இதழ் எனலாம்.
முகப்புக் கட்டுரையாக நம்பி கிருஷ்ணன். நான் அறிந்ததெல்லாம் ஷெல்லி, ஷேக்ஸ்பியர். இவர் வழக்கம் போல் தெரிந்து கொள்ளத்தக்க, வாசிக்க வேண்டிய மற்றுமொரு முக்கியமான எழுத்தாளரை ரசித்து, விதந்தோதுகிறார்: ”*எலிசபெத் பிஷப்*: இரு மொழிபெயர்ப்புகளும் சில குறிப்புகளும்”
அடுத்ததாக, மீனாக்ஷி பாலகணேஷ். ஆங்கிலத்தில் அரவிந்தரை வாசிக்க இலகுவாக இல்லை என்று சொன்னவுடன், அவரின் உன்னத காவியமான ஊர்வசீயை அழகுத் தமிழில் கொணர்ந்திருக்கிறார். இந்திய இலக்கியம் பலவிதமான தொன்மங்கள் மற்றும் புனைவுகளில் நிறைந்துள்ளது. அதில் அப்ஸரசுகளுக்கு முக்கிய சிம்மாசனம் உண்டு. இங்கே ரிக் வேதத்தில் வந்த புராணக் கதையை கவிதையாக்கின ஸ்ரீ அரவிந்தரை தமிழாக்கம் செய்துள்ளார்.
காம்பின்றித் தானே மலர்ந்த மலரென ஊர்வசியை வர்ணிக்கிறார். அவள் இந்தியக் கவிகளை வரலாறு நெடுகிலும் கடுக்க முடியாத வலிமையுடன் ஈர்க்கும் தன் கவர்ச்சிக்கு உட்படுத்தியிருக்கிறாள். ஸ்ரீ அரவிந்தர் இவ்விஷயத்தை மிகமேம்பட்ட முறையில் தீட்டியுள்ளார். இக்காவியத்தின் மாண்பு அவலச்சுவை அடங்கியிருக்கும் நிலையிலோ காமத்தின் வெறியுணர்ச்சி துடிதுடிக்கும் நேரத்திலோ, ஓவ்வொரு நிலையிலும் வெளிப்படுகின்றது.
உட்பொருளானது இரு காதலரும் தாம் தகுதியுடன் பெற்ற இன்பத்தைக் கடந்து இருக்கின்றது. உண்மையாகவே, புரூரவஸ் மரணத்திற்குட்பட்ட இம்மண்ணுலக மானுட நிலையிலிருந்து மரணமிலாத் தேவர் வாழும் விண்மண்டலத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளான். காதலர் இப்புவியை அடியோடு துறந்து விட்டனர். ஆயினும், கீழே தொலைவிடத்தில் மோனம் நிறைந்ததும் வல்லமை வாய்ந்ததுமான அண்டவெளியின் ஊடே பசுமை நிறைந்ததும், விடாமுயற்சியும் சுறுசுறுப்பும் உடையதுமான இப்பூமி இடைவிடாமல் சுழன்று கொண்டேதான் வருகின்றது.
சுழல்வது என்றவுடன் 300ஆம் இதழ் நினைவிற்கு வருகிறது. நீங்கள் வாசித்த புதிய எழுத்தாளர்களை, தற்கால புனைவுகளை, சமீபத்திய புத்தகங்களைக் குறித்து எழுதி விட்டீர்களா?
உடனடியாக அவற்றை solvanam.editor@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde