Tag Archives: Reviews

நிலையியற் பொருளும் இயங்கியற் பொருளும்

சொல்வனம் கலைமகள் நடனம் காண… – சொல்வனம் பதிவைப் படித்த பின்…

Pigeons_Food_Humans_Ants_Pick_Eat_Throw_Snacks_LeftOvers_Animals_Birds

இதில் அஜிதன் என்பதற்கு பதில் மனதின் குரல் அல்லது alter-ego என்று வைத்துக் கொள்ளுங்கள். ஏரியை மனிதனின் புத்தி. அதில் மின்னும் நட்சத்திர பிரதிபலிப்புகள் அண்டம். அதன் அருகே உள்ள மின்விளக்கு நகரம் ரத்தக்கொதி நிலை. நீலம் என்பது இரவில் கருமையில் தெரியாத பகலின் நீலவெளி. ஜெயம் (வெற்றி) என்பது இருட்டிலும் நீலத்தைப் புணரும் அண்டம்.

மேற்கண்டவாறு பலவிதங்களில் இந்தக் கதையை ஆராயலாம்.

இந்தக் கதையில் பல உச்சநிலைகள் இருந்தாலும், இரண்டு பிரயோகங்களை மட்டும் பார்ப்போம்:

1. ”ஹீரோக்கு கறி வாங்கப் போவோம். பெரும்பாலும் இளம் கன்று. அது ஆண் என்பதால் கறிக்கு விற்கப்படும். அதன் கறியே கிடைக்கும்.”

இங்கே ரஜினி, விஜய், அஜீத் போன்ற ஹீரோக்களுக்கு ரசிகர்கள் எப்படி அடிமையாகிறார்கள் என்பது இங்கே சுட்டப்படுகிறது. ஹாலிவுட்டில் கறுப்பர்களுக்கு எந்த விருதும் தராமல், அவர்களின் பணத்தை மட்டும் குறிவைக்கும் ஆஸ்கார் விருதுகளை சுட்டுகிறார். அம்மாவும் கலைஞர் கருணாநிதியும் கேப்டன் விஜய்காந்த்தும் நடத்தும் அரசியலைச் சாடுகிறார்!

2. “கூகை. ஆந்தை இனத்தைச் சேர்ந்தது. ” என்றுவிட்டுத் தொடர்ந்தான்.” அதன் எடையைப் பாருங்கள் ஆனால் அது பறக்கும் போது, காற்று கூட அசையாது, சிறகுகள் எந்த ஒலியும் எழுப்பாது”

இதற்கு முந்தையப் பத்தியில்தான் குல தெய்வ வழிப்பாட்டில் இருக்கும் தத்துவப் பார்வை அற்ற வெற்றுச் சடங்கில் மெய்மை தேடும் பயணம் பற்றி சொல்லியிருந்தார். அதாவது நாம் ஆந்தை போல் இரவில் விழித்திருக்கிறோம். ஃபேஸ்புக் பார்க்கிறோம். செய்தியைக் கேட்கிறோம். எல்லாம் எடையில்லாதவை. அவற்றை அனுபவிக்கும்போது நிஜவுலகின் புரிதல் எட்டாது. விஷயம் தெரியாமல், விளைவுகள் ஏற்படுத்தாமல் பறக்கிறோம்!

ஜெயமோகனின் எழுத்துக்களுக்குத்தான் இப்படி வியாக்கியானம் எழுத முடியும். ஆனால், அவர் சம்பந்தமேயில்லாத பதிவொன்றுக்கு இவ்வாறு எழுதமுடிவது எழுத்தாளரின் சாதனை.

செம்புலம்

  1. துவக்கத்தில் அர்ப்பணிப்பு, அஞ்சலி எல்லாமே பிரும்மாண்டத்தை முழக்கமாக தெரிவிக்கின்றன. (அவை தமிழிலும் இருக்கலாமோ?)
  2. புத்தம் புதியதாக கட்டப்பட்ட நூறடுக்கு மாடி உலக வர்த்தக மையம் ஒரு ஷாட்; உடனடியாக இலையுதிர்ந்த காடு போன்ற பெருஞ்சோலையை பருந்து போல் ஆயிரம் அடியில் இருந்து பார்க்கும் தூரயியங்கி கோணம்; இருட்டில் முகம் மட்டுமே தெரியுமாறு ஒளிப்பதிவு என ஒவ்வொரு ஃப்ரேமும் செதுக்கி இருக்கிறார்கள்.
  3. பையை அப்படியே பின் தொடரும் பட அமைப்பு; கார் புறப்பட்டுச் செல்வதை வித்தியாசமாக மனதில் பதியுமாறு அமைத்திருக்கும் கோணம் – எல்லாமே உறுத்தாமல் உள்ளத்தில் பதியும் திரைச்சிந்தனை.
  4. பொண்டாட்டீஸ் ஆர் அஸ் போல் இதிலும் அனாதைப் பையில்தான் கதை ஆரம்பிக்கிறது. இரண்டும் சத்யராஜ்குமார் திரைக்கதை என்பதாலா? அல்லது ஒளிப்பதிவாளர் தினேஷ் ஜெயபாலனின் கைங்கர்யமா?
  5. ஐ.எஸ்.ஐ போலி அடையாள அட்டை எல்லாம் தயார் செய்திருக்கிறார்கள். (எனக்கு ஒண்ணு  பார்சல் பண்ணுங்க)
  6. சோபாவில் துப்பாக்கி ஒளித்து வைத்திருக்கும் இடம் தூள். (நிஜமாச் சொல்லுங்க… எந்த சினிமாவில் இதைப் பார்த்தீங்க?)
  7. நான்காண்டுகள் முன்பும் மோகன்ராம் அதேத் தோற்றத்தில் இல்லாமல் இருந்திருக்கலாம். தலைக்கு கறுப்பு மசி, தாடி இல்லாத முகம் என்று இல்லாவிட்டாலும், மழுவோ மச்சமோ, ஒட்டி விட்டிருக்கலாம்.
  8. ‘முஸ்தபா… முஸ்தபா’ போல் அந்த நட்புக் காட்சிகள் வலுவின்றி க்ளிஷேவாக, தற்பால் உறவின் விளிம்புக்கு அழைத்துச் செல்கின்றன.
  9. எங்கே நிஜம், எங்கே கிராஃபிக்ஸ், எங்கே ஸ்டாக், எங்கே வெட்டி ஒட்டல் என தெரியாதவாறு ஏர் இந்தியா பறக்கிறது; குண்டுகள் வெடிக்கிறது; துப்பாக்கிகளும் தோட்டக்களும் பின்னணியில் படச்சுருள்களும் சுவாரசியம் கூட்டுகின்றன.
  10. கண்ணாடியில் பிரதிபலிப்பு தெரிவது பழைய வாழ்க்கையை ஜீப்ராவை நினைத்துப் பார்க்க வைக்கிறதா… காதில் ஏதோ கர்ஜனை ஆணை வாங்கி கறுப்புக் கண்ணாடியுடன் அவருடனேயே நடக்க வைப்பதன் மூலம் வெளிச்சத்தில் வாழ்ந்தாலும் இருட்டில் இருப்பதைக் குறிக்கிறதா! யோசிக்க வைக்கிறார்கள்

Sembulam_Shorts_Films_Movies_Ila_Tractor_Satyaraj_Kumar

கமலின் தூங்காவனம்: விமர்சனம்

நந்தவனம் x பாலைவனம்

  • அஜீத் நடிப்பில் ‘வேதாளம்’ வெளியான தீபாவளி அன்றே கமலின் ‘தூங்காவன’மும் வெளியாகி இருப்பது, காக்டெயில் விற்கும் இடத்தில் மாக்டெயில் அருந்துவது போல் அமைந்திருக்கிறது. விசைப்பலகை இடுக்குகளில் ஒளிந்திருக்க வேண்டிய துகள்கள், விஸ்வரூபமெடுத்து தமிழ் சினிமாவை ’வேதாளம்’ மாதிரி நிரப்பினால், அந்த பாலவனத்தில், கொஞ்சம் போல் துளிர்க்கும் சோலைவனமாக தூங்காவனம் இருக்கிறது.
  • சந்தானபாரதி இயக்கிய ‘கடமை… கண்ணியம்… கட்டுப்பாடு’ படத்தில் பாடல்கள் கிடையாது. தூங்காவனத்திலும் பாடல்கள் இல்லை. எனினும், இரண்டுமே பாடல்கள் நிறைந்த படங்களை விட நந்தவனம்.

Posters_Thoongavanam_Kamal_Trisha_Tamil_Films_Movies_Cinema

தீவனம்

  • நிரலியை சி ஷார்ப்பில் எழுதிக் கொடுத்தால், அதே நிரலியை பைத்தான், ரூபி, ஜாவா போன்ற கணிமொழிகளில் எவ்வாறு எழுதுவது என்று செய்து பார்ப்பது கணி நிரலாளர்களுக்கு உவப்பான விஷயம். கொஞ்சம் சவாலான விஷயமும் கூட. கமல் இந்த மாதிரி உருமாற்றி, அதை தமிழ் மசாலா சேர்த்து நமக்கு தீவனம் ஆக்குகிறார்.
  • பார்வையாளர்களுக்கு விஷயம் வைக்க வேண்டும் என்று குவிமையம் இல்லாமல், சகல இடங்களுக்கும் பயணித்து குழப்பிக் கொள்ளாமல், எளிமையான பயணத்தில், சுருக்கமான நேரத்தில், பல இடங்களுக்கும் பாய்ந்து பறந்து திக்கின்றி திணறாமல், தீவனம் போடுகிற படம்

சஞ்சீவனம்

  • சோலையில் சஞ்சீவனம் என்பது உணவகம். இங்கே சாப்பாட்டுக் கடையில் பாதி படம் அரங்கேறுகிறது. சமையல் பொருள்களைக் கொண்டு சண்டைக்காட்சி நடக்கிறது.
  • சஞ்சீவியாக கமல் இந்தப் படத்திலும் உலாவுகிறார். அசல் படமான ஃபிரெஞ்சு படத்தில் இருந்து சற்றே விலகி, பெண்கள் கமலை மொய்க்கிறார்கள். வயிற்றில் குத்துப்பட்டாலும், சாவடி வாங்கினாலும் நிமிர்ந்து மீண்டெழுகிறார்.

சீவனம்

  • வேலையில் இருப்பது சம்பாத்தியத்திற்கா? பணியில் அமிழ்ந்து கிடப்பது மணவாழ்வை முறிக்குமா? குடும்பத்தை விட அலுவலில் பெயரெடுப்பது முக்கியமா? போன்ற ஜீவனம் சார்ந்த கேள்விகளை எழுப்பும் படம்.
  • இன்றைய இளைய தலைமுறை போதைக்கும் மதுவிற்கும் கொண்டாட்டத்திற்கும் அடிமையாகி இருப்பதை அமைதியாக சொல்லிச் செல்கிறது.

Thungavanam_Thoongavanam_Kamal_Trisha_Tamil_Films_Movies_Cinema

வனம்

  • கூகுள் கொண்டு சகல தகவல்களையும் அறியும் காலத்தில், முன்னாள் மனைவிக்கு தொலைபேசி போட்டு, மருந்துகளையும் ஊசிகளையும் கேட்டறியும் நாயகன் சி.கே.டி, என்ன சி.ஐ.டி.?
  • மகனின் திறன்பேசியில், எங்கே இருக்கிறான் என்று கண்டறியும் எளிய ஜி.பி.எஸ். கூட இல்லாமல், என்ன ஐஃபோன்?

பிருந்தாவனம்

  • பூஜாகுமாரும் ஆண்ட்ரியாவும் இல்லாமல் இருப்பதே பிருந்தாவனம். மது ஷாலினி அளவாக நடிக்கிறார். வெள்ளித்திரைக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறார். மிடுக்கான த்ரிஷா அதனினும் சிறப்பு.
  • ஃப்ரெஞ்சு அசலில் கொஞ்சம் போல் உங்கள் ஊகத்திற்கு விட்டுச் சென்றிருப்பார்கள். தமிழில் தெள்ளத் தெளிவாக போட்டுடைப்பது, திரையரங்கு வருகையாளரை மட்டம் தட்டும் புவனம்.

யெளவனம்

  • நேற்று ஓய்வுபெற்ற 61 வயது காவல்துறை அதிகாரி மாதிரி கமல் இல்லாத யெளவனம். முன்னாள் மனைவி ஆஷா ஷரத்தைப் பார்த்தாலும் நாற்பதுகள் போல் தெரியும் யெளவனம். இந்த மாதிரி உடம்பை வைத்துக் கொள்வது தனி உஜ்ஜீவனம்
  • பாரதியை இன்று படித்தாலும் புத்துயிர் பெறுகிறோம்; மலைக்கள்ளனையும் தூக்கு தூக்கியையும் இன்று பார்த்தாலும் ரசிக்கிறோம். அது போல் பிறமொழிக்காரர்களிடம் போட்டுக் காண்பித்தாலும் காலா காலத்திற்கும் சுவாரசியமாக்கும் சொரூபம் கொண்டிருக்கும் படம்.

தாருகாவனம்

தாருகாவனத்தில் பல முனிவர்கள் வேள்வி செய்து கொண்டும் தவமியற்றியபடியும் வாழ்ந்தார்கள். தங்களது தவத்தின் வலிமையால் முக்தியினை நாடினார்கள். முனிசிரேஷ்டர்களுடைய மோனத்தையும், குருபத்தினிகளது கற்பையும் குலைக்க நாராயணரின் துணையோடு சங்கரன் சதி செய்கிறான். மும்மூர்த்திகளில் இருவரையும் ஒழித்துக் கட்ட அபிசார வேள்வியை நிகழ்த்தினார்கள். திடீரென்று வேள்வியின் அக்னி குண்டத்திலிருந்து மகா பயங்கரமான உருவத்தோடு ஒரு புலி உருமியபடி வெளியே வந்தது. அக்னியிலிருந்து அடுத்தடுத்துத் யானை, மான், பூதங்கள், மழு, முயலகன், கொடிய நாகங்கள் என்று ஏவினார்கள். ஏவப்பட்ட பூதங்கள் சிவனின் பூதகணங்கள் ஆகின. மழு அவருக்கே படைக்கலனாகி விட்டது. முயலகன் சிவனின் காலடியில் சிக்கி நகரவே முடியாதவனானான். நாகங்களுக்கு காளி, காளாங்திரி, யமன், யமதூதன் என்று நான்கு விதமான நச்சுப்பற்கள். அவற்றிலிருந்து விஷத்தைப் பீய்ச்சி அடித்தபடி அவை ஆக்ரோஷமாக சிவன் மீது பாய்ந்தன. ஏற்கெனவே, கருடனுக்கு அஞ்சித் தன்னிடம் சரண் புகுந்த பாம்புகள் அவருக்கு ஆபரணமாக விளங்கி வந்தன. இப்போது வந்த கொடிய நாகங்களையும் தம் கையில் பற்றி ”உம் குலத்தவர் ஏற்கெனவே இங்கே என்னுடன் இருக்கிறார்கள். நீங்களும் அவர்களுடன் கூடி வாழுங்கள்!” என்று கூறி அந்த நாகங்களைத் தமது கரம், திருவடி, திருவரை, திருமார்பு முதலிய இடங்களில் கங்கணம், காலணி, அரைஞாண் போன்ற ஆபரணங்களாக அணிந்து கொண்டார்.

Insomnia என்னும் கேளிக்கை மையமே தாருகாவனம். அங்கே இளைஞர்களும் இளைஞிகளும் களிவெறிப் பொருள் கொண்டு கூத்தாடி போதையின் துணையோடு முக்தியினை நாடினார்கள். அங்கே நிலவும் மயக்கத்தைப் போக்க காவல்துறை உயரதிகாரியான திவாகர் களமிறங்குகிறார். அவரை எதிர்க்க போதைத்தடுப்பு அதிகாரியான த்ரிஷா தோன்றுகிறார். திரிஷாவின் மேலிடமான கிஷோர் வருகிறார். அவர்களை ஆபரணமாகக் கொண்டு எவ்வாறு வில்லன்களை எதிர்கொள்கிறார் என்பதே திரைக்கதை.

Thoongavanam_Kamal_Trisha_Tamil_Films_Movies_Cinema

உபசீவனம்

  • சௌந்தர்யலஹிரியையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையும் எம்.எஸ். சுப்புலஷ்மியின் குரலுக்காகவும் அதன் மந்திர உச்சாடனத்திற்காகவும் கேட்பவர்கள் உண்டு. அட்சரம் பிசகாமல் சொல்பவர்களும் உண்டு. ஆனால், அர்த்தம் உணர்ந்து, பொருள் புரிந்து, அனுபவித்து வாழ்க்கையில் கடைபிடிப்பவர்கள் எவ்வளவு பேருண்டு? அதே போல், சுவாரசியமான படங்களை பார்ப்போர் நிறைய உண்டு. அதனை தமிழ் நாயகர் கொண்டு, மொழிமாற்றுவோர் கூட நிறைய உணடு. ஆனால், பொருத்தமான சினிமாவாகத் தேர்ந்தெடுத்து, அதன் கடுமையான வழிமுறைகளை தமதாக்கி, தமிழுக்குக் கொணர்வோர் மிகச் சிலரே உண்டு. அதற்கு, கமலின் தூங்காவனம் ஒரு சான்று.
  • கிரேசி மோகனின் கத்தி வசனமும் கிடைக்கிறது. காவல்துறையின் தகிடுதத்தங்களும் சத்தமின்றி பூடகமாக வெளிப்படுகிறது. விவாகரத்தான வாழ்க்கையில் மகனின் மேல் செலுத்தும் நேசமும் காணக்கிடைக்கிறது.
  • தான் மட்டும் தனியே எல்லா சட்டகத்திலும் காணக் கிடைத்தால் செல்ஃபி காலத்தில் புளித்துப் போகும் என்றறிந்த கமல், உமா, ஜெகன், பிரகாஷ்ராஜ், கிஷோர் என எல்லோருக்கும் கதாபாத்திரமும் அவர்களுடைய குணச்சித்திரமும் தனித்துவமாகத் தெரியுமாறு அமைத்திருக்கிறார். தானும் வந்துபோகிறார்.

தூங்காவனம் – ஸ்லீப்லெஸ் நைட்

கமல் படத்திற்கு விமர்சனம் எழுதுவதற்கு நிறைய பிரயத்தனம் வேண்டும். 1980ல் ஸ்டான்லி க்யூப்ரிக் ‘தி ஷைனிங்’ என்ற படம் எடுத்தார். அந்தப் படத்தில் என்னவெல்லாம் குறியீடுகள் இருந்தன, அந்தக் காட்சியமைப்பின் உள்ளே பொதிந்திருக்கும் விஷயங்கள் என்னவென்று சொல்வதற்காகவே ரூம் 237 என்ற ஆவணப்படத்தை சிரத்தையாக வெளியிட்டு இருக்கிறார்கள்.
Thoonga_VanamTelugu_-Kamal-Cheekati-Rajyam

உத்தம வில்லனுக்குக் கூட இந்த மாதிரி நிறைய கதை கட்டி விட்டிருக்கிறார்கள். வருடத்திற்கு மூன்று படம் என்றானபின், ஜெயமோகன் எழுதும் மஹாபாரதம் போல் கமலின் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் விலாவாரியான அலசல் தேவையிருக்காது.

பாபநாசம் போல் உன்னைப் போல் ஒருவன் போல் ஃப்ரெஞ்சுப் படமான ‘Nuit blanche’ம் அவ்வாறே ஒரு மறு-பதிப்பு. இந்தப் படத்தில் கமலைப் பார்ப்பதற்கு பதில் ஃபிரெஞ்ச் அசலை பார்ப்பது மேல் என்பது போன்ற விமர்சனங்கள் நாளைய தினங்களில் ஃபேஸ்புக்கில் உலாவுவதற்கு முன், அசல் படம் குறித்து பார்த்து விடுவோம்.

வேட்டையாடு விளையாடு‘ போன்ற துள்ளல் போலீஸிற்கும், தூங்காவனம் படத்தின் காவல்துறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முன்னது நம்பவியலா சாகசங்கள் புரியும் கூரையேறி கோழி பிடிக்கும் இராமாயணம். ‘ஸ்லீப்லெஸ் நைட்’ உள்ளே அழுகிக்கிடப்பதை மெதுவாக அரங்கேற்றும் சண்டைப்படம்.

மிகையுந்துரத்தவெம்பிணியுந் துரத்த
வெகுளியான துந்துரத்த
மிடியுந்துரத்த நரை திரையும் துரத்தமிகு
வேதனைகளுந் துரத்த
பகையுந்துரத்த வஞ்சனையுந் துரத்த
பசியென் பதுந்துரத்த
பாவந்துரத்த பதிமோகந்துரத்த
பலகாரியமுந் துரத்த
நகையுந் துரத்த ஊழ் வினையுந் துரத்த
நாளும் துரத்த வெகுவாய்
நாவரண் டோடிகால் தளர்ந்திடும் என்னை
நமனுந் துரத்து வானோ ?
அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே !
ஆதிகடவூரின் வாழ்வே !
அமுதசீர் ஒருபாகம் அகலாத சுகபாணி !
அருள்வாமி அபிராமியே !

திருக்கடையூர் அபிராமி பட்டர் (இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்) நினைவிற்கு வருகிறார். அவருக்கு இன்னல் வரும்போது அந்தாதி இயற்றினார். இன்றைய காலத்துப் பசங்களை அடுத்த மாதத்திற்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று குளிரூட்டப்பட்ட அறையில் உட்கார்த்தினால் கூட அந்தாதியை ‘கிட்-ஹப்’பில் தேடி, திருடத் தெரியாத அசமஞ்சங்கள் ஆக இருக்கிறார்கள். அவரோ, கீழே குழி, சுட்டெரிக்கும் நெருப்பு ஜ்வாலைகளைக் கக்க, அம்பிகை வருவாளோ என்னும் பயமும் துரத்த, அவர் பாட்டுக்கு தன் வேலையை, பாடல் புனைவதை செய்து முடிக்கிறார்.

ஸ்லீபெலெஸ் நைட் நாயகன் வின்செண்ட்டும் அம்பிகை பட்டர் போல், கடும் பிரச்சினைகளுக்கு நடுவில் சாந்தமாக செயல்படுகிறான். ஆனால், அபிராமி பட்டரைப் போல் உத்தமன் அல்லன். கொஞ்சம் கெட்டவன்; போதை மருந்து தடுப்புப் பிரிவில் இருந்தாலும், அதற்கு மாறாக, சொந்த ஆதாயத்திற்காக செயல்படுபவன். கள்ளக்கடத்தல் நடப்பதாக கிடைத்த துப்பை வைத்து, அந்த பரிமாற்றத்தைத் தடுத்து, போதைப் பொருள் அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளப் பார்க்கிறான்.

போதைப் பொருளின் அசல் உரிமையாளர் வெகுண்டு எழுகிறார். கதாநாயகன் வின்சென்ட்டின் மகனைக் கடத்துகிறார். தனக்குச் சொந்தமான போதைப் பொருளை தன்னிடமே ஒப்படத்துவிட்டால், வின்சென்ட் – தன்னுடைய மகனை மீட்டெடுக்கலாம்.

வின்சென்ட் மீது நம்பிக்கையில்லாமல், அவனுடைய காவல்துறையின் உயரதிகாரிகள், வின்செண்ட்டை பின் தொடர்கிறார்கள். ஆனால், அந்த உயரதிகாரியும் அத்தனை உத்தமரில்லை. அவரும் இன்னொரு வில்லன். வின்செண்ட் விற்பதாக இருந்த போதைப் பொருளை, வின்சென்ட்டின் காவல்துறை உயரதிகாரியே, திருடி, தனதாக்கப் பார்க்கிறார். அதற்கு, அப்பாவி த்ரிஷா போல் ஒரு அழகியை நியமிக்கிறார்.

த்ரிஷாவும் காவல்துறை உயரதிகாரியும் கமலை… அல்ல… வின்செண்ட்டை துரத்துகிறார்கள்.

தன்னுடைய மகனைத் தேடி, மதுபான சாலையெங்கும் வின்சென்ட் தேடியலைகிறான்.

வின்சென்ட் பதுக்கி வைத்திருக்கும் போதை சரக்கை, கள்ளக்கடத்தல்காரர்கள் தேடியலைகிறார்கள்.

மூவரும் ஒருவரை ஒருவர், மூர்க்கமாகத் தாக்குவது, உண்மையை அறிவது, கொஞ்சம் பாசத்தைக் கூட அவ்வப்போது பொழிவது எல்லாம் நடக்கிறது. தந்தை என்னும் பாசத்தைச் சொல்வதும் செயலில் காட்டி நிரூபிப்பதும் வின்சென்ட்டிற்கு அவசியம். புதியவளாக, பெண்ணாக, இளையவளாக இருந்தாலும் நேர்மையான கொம்பராக இருப்பது த்ரிஷாவிற்கு அவசியம். போதைப் பொருளைக் கடத்தி பணம் குவிப்பது அதன் உரிமையாளருக்கு அவசியம். மதுசாலை நடத்துபவருக்கு தன் உணவகத்தின் கெத்து அவசியம். சகுனியாக எட்டப்பனாக இருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி அவசியம். தாய்க்கு தன் மகனின் உயிர் அவசியம்.

இவர்களுக்குள் நடக்கும் போராட்டத்தை அன்றாட வாழ்வின் உபகரணங்களைக் கொண்டு அவர்கள் வெட்டிக் கொண்டு சாவதை கத்திக் குத்துக்களோடும், சுவாரசியமான சண்டைக்காட்சிகளுடனும் ஸ்லீப்லெஸ் நைட் காண்பிக்கிறது.
Sleepless_Night_French_Movies_Films_Thoongavanam_nuit-blanche-2
குழப்பமான சினிமா என்பது கவர்ச்சிகரமான மிக்சர் போல் மாதுளை காக்டெயில் போல் மயக்குறச் செய்யும். கோயன் சகோதரர்களின் ‘பர்ன் ஆஃப்டர் ரீடிங்’ கூட இதே வகையிலான ‘குழப்ப சினிமா’க்கள்தான். ஆனால், கோயன் சகோதரர்கள் மெதுவாக ஆற அமரச் செல்வார்கள். அவர்களுக்கு அவசரம் கிடையாது.

ஆனால், ஸ்லீப்லெஸ் நைட் போன்ற படங்கள் வேறு வகையான குழப்பங்களில் திளைப்பவை. எது நிஜம்… எது பொய்… எது சாத்தியம்… எது நடக்கவியலாது… யார் எங்கே இருக்கிறார்கள்… எவர் எங்கே வருவார்கள்… என்ன நடக்கும்… எப்பொழுது ஒழுங்கு பிறக்கும்? எல்லோரும் எல்லாவிடங்களிலும் பார்த்தாலும் யாருக்கும் எவரும் தெரிவதில்லை. இந்த உலகம் என்பது சந்து பொந்துகள் நிறைந்த ஹோட்டல் போல் அறைகளும் பாதைகளும் நிறைந்த கேளிக்கை மண்டபம். அங்கே ஒரு வாயிலில் நுழைந்தால் பார்; மற்றொரு வாயிலில் வெளியேறினால் சமையலறை. அவையிரண்டிற்கும் நடுவே ஓராயிரக்கணக்கானோர் கூத்தாடுகிறோம். சத்தத்தில் சுற்றிவர என்ன நடக்கிறது என்றறியாமல் திளைக்கிறோம். புறத்தோற்றத்தில் ஆடையின் நிறத்தில் மயங்குகிறோம். கேட்பதற்கு ஜென் தத்துவம் போல் ஜேகே சொற்பொழிவு போல் குழப்பம் ஏற்படலாம். படம் பார்த்தால் தெளிவு பிறக்கும்.

Sleepless_Night_Thoonga_Vanam_Kamal_nuit_blanche

ரெட்டை வால் குருவி – திரைப்படம்

Titles_Arivumathy_Balu_Magendhira_director_Rettai-Vaal-Kuruvi_Movie_Films_Cinema

அந்தக் கால திரைப்படம், அக்கால வாழ்க்கை, எண்பதுகளின் உடைகளும் பாவனைகளும் என்று நொஸ்டால்ஜியாவில் மூழ்கினால், கைகொடுப்பதற்கு எப்பொழுதுமே பாலு மகேந்திரா இருக்கிறார்.

பள்ளிப்பருவத்தை திரும்பி பார்த்தால் ‘அழியாத கோலங்கள்’ கிடைக்கும். அந்தக் காலத்தில் ஸ்கூல் டீச்சரை நினைத்து ஏங்காத ஆண்கள், ரத்தம் உறிஞ்சாத கொசுக்கள் போல் காணக் கிடைக்க மாட்டார்கள்.

மூடுபனி’ இன்னொரு விதமான பழைமை நினைவுகளைக் கிளறும் கதை. அம்மா கோந்து; தாய்மையை மனைவியிடம் தேடும் குழந்தை மனதுடன் சிக்கல்களும் நிறைந்த பிரதாப் போத்தன் கிடைத்தார்.

இந்த trilogyஇன் மூன்றாம் வடிவமாக ‘மூன்றாம் பிறை’. வளர்ந்த, நாகரிகமான பெண், தன்னுடைய பால்ய கால, சிறுவயதிற்கு திரும்ப நேரிடுகிறது. அதை அப்படியே கொண்டாடி, குட்டிப்பாப்பாவாகவே வைத்திருக்கும், ரசிக்கும் கமல் கிடைத்தார்.

இதன் முழுமையான இறுதி வடிவமாக ‘ரெட்டை வால் குருவி’ திரைப்படத்தைப் பார்க்கிறேன்.

Rettai-Vaal-Kuruvi_Movie_Films_Cinema

இந்தப் படத்தின் துவக்கத்தில் வரும் ‘சுதந்திரத்தை வாங்கிப்புட்டோம்; அதை வாங்கி சுக்குநூறா உடைச்சுப்புட்டோம்’ பாடலில், பாலு மஹேந்திராவின் பிற்கால மனைவி மௌனிகா அறிமுகமாகிறார். இன்னொரு காட்சியில், ’மகராஜனோடு ராணி வந்து சேரும்’ என்று சதி லீலாவதியில் நாயகியான ஹீரா, ராதிகாவின் தோழியாக, ஹோட்டலில் உடன் சாப்பிடுபவராக எட்டிப் பார்க்கிறார். அந்தக் காலப் படங்களில், அந்தக் காலத்தில் பிரபலமாகாத பிரபலங்களின் அந்தக் கால தோற்றங்களை மேக்கப்பும் க்ளோசப்பும் இல்லாமல் பார்ப்பது, பாதி வெந்தும் வேகாத உருண்டோடும் மைசூர்பாகை சுடச்சுட வாயில் போட்டுக் கொள்வது போல் சுவையானது.

உதவி இயக்குநராக அறிவுமதி பணியாற்றி இருக்கிறார். பாஸ்டன் பக்கம் வந்தபோது விசாரித்து இருக்கலாம். தவறவிட்டுவிட்டேன்.

’தேவர் மகன்’ திரைப்படத்தில் “காத்துதாங்க வருது” என்று ரேவதி, திக்கித் திணறிப் பாடும் ‘இஞ்சி இடுப்பழகா’ பாடலுக்கு முன்னோடி போல் ‘திங்கார வேலனே… தேவா’ என்று காமெடி செய்கிறார்கள். எண்பதுகளில் வந்த படத்தில் கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் பற்றிய அசத்தலான டயலாக் வருகிறது. இனி யாராவது, “நீங்க எப்படி பிரொகிரமரா ஆனீங்க ப்ரோ?” எனக் கேட்டால், “ரெட்டை வால் குருவி படத்தில் ஓப்பனிங் சாங் முடிந்தவுடன் ஒரு விடலைப் பய சொல்வான். அதைக் கேட்டுத்தான்!” என்று தயங்காமல் பதில் சொல்லலாம்.

படம் முழுக்க எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள். பல் தெரிய, முகம் மலர்ந்து சிரிக்கிறார்கள். தானாகவே நடனமாடுகிறார்கள். பாடலைக் கேட்டால் உற்சாகம் அடைகிறார்கள். சாந்தமான துள்ளல் என்பதை குழந்தையின் கை கால் உதைத்து பொக்கைவாய் புன்னகையாகச் சொல்லத் தோன்றுகிறது.

படத்தில் இரு வீடுகள். பெரிய வீடு, அர்ச்சனாவின் வீடு. அந்த வீடு அந்தக் காலத்தில் மட்டுமல்ல, இந்தக் காலத்தில் கூட கனவு இல்லம். ’அஞ்சலி’ ரகுவரன் வருவதற்கு பன்னெடுங்காலம் முன்பே பந்தாவான, ஆனால் நடுத்தர வர்க்கத்தையும் பிரதிபலிக்கும் இல்லம். மினிமலிஸ்டிக் பொருள்கள். பார்த்து பார்த்து இருக்கும் அலங்காரம். ஐந்தாவது மாடியில் விசாலமான அறையும், திறந்த சமையல் வெளியும் கொண்ட அந்தப்புரம். வீட்டில் இருந்து பார்த்தால் தூய நதி (கூவம் தான்; அடையாறு அழுக்குதான்; ஆனால், தெளிவாக இருந்தது போல் கண்ணுக்குத் தெரியும் சென்னை). செக்ஸ் முடிந்தபிறகு பசிக்கு ஃப்ரிட்ஜைத் திறக்கும் தம்பதியினர். ’டூயட்’ பாட கதரி கோபால்நாத் சாக்ஸஃபோனில் ஜாஸ் இசைக்கிறார்.

அந்த வீட்டிற்கே பாந்தம் சேர்ப்பது ‘அர்ச்சனா’ கதாபத்திரம். “ஏன்யா…” என அவர் குழையும்போது பாதாம் அல்வாவை ஃபிரான்ஸில் கிண்டுவது போல் சுண்டியிழுக்கிறது. இந்த கதாபாத்திரம் ”மூன்றாம் பிறை”யின் சில்க் ஸ்மிதா போல் கவர்ச்சி கொண்டவள். ஆனால், ”மூடுபனி”யின் ஷோபா போல் இல்லத்தரசி பக்குவத்தில் இருப்பவள். பெஸ்ட் ஆஃப் எல்லா பாலு மகேந்திரா ஹீரோயின்ஸ்.

நான் பார்த்ததிலே இந்த துளசி கதாநாயகியைத்தான் ஏன் சிறந்தது என்று இப்படி சொல்கிறேன்?

Rettai_Vaal_Kuruvi_Archana_Mohan_Films_Balu_Mahendra_Songs_Cinema

இந்தக் கால மாந்தர் அணியும் பேண்டோரா போன்ற மரகதமும் மாணிக்கமும் பதித்த கல் வளையங்களை அன்றே அணிந்தவர் துளசி. அழகாக, நீட்டமாக, ‘இரண்டு குடங்களைக் கொண்ட தம்பூராவை மீட்டிச் செல்வதற்கான’ நாத தும்பிகளாக பின்னி, கருங்கூந்தல் கொண்டவர் துளசி. எப்பொழுதும் புடைவையிலே வலம் வருபவர். (அதற்காக, “அப்பொழுது கூடவா?” என்றால், அதற்கு பதில் இல்லைதான்) தலை நிறைய மல்லிகைப் பூ வைத்திருப்பவர் துளசி. தாயுமானவனாக கணவன் பின்னி விட தலை தருபவர் துளசி. பசியில் இருக்கும் கணவனுக்கு டைனிங் டேபிள் அமர்ந்து ஊட்டி விடுபவர் துளசி.

அதான்… சொல்லிவிட்டேனே… நொஸ்டால்ஜியாவிற்கு கை, கால், புருவம், இமை, பொட்டு, உதடு எல்லாம் வைத்தால் துளசி = அர்ச்சனா.

இரண்டாம் வீடு, சின்ன வீடு. அந்த வீட்டிற்கு, ராதிகா தலைவி. கள்ளக் காதலி. அம்மா இல்லாதவர். அப்பாவும் மைக்ரோ பருந்தாக கண்காணிக்கப் படாதவர். செக்ஸ் எஜுகேஷன் தேவையா என்னும் கேள்விக்கு பதில் சொல்லும் திராணி கொண்டவர் ’ராதா’ என்னும் ராதிகா கதாபாத்திரம். இன்றைய காலகட்டத்தில், பலான படம் பார்க்கத் தடை வரும் காலகட்டத்தில், இவ்வளவு தைரியமாக தொலைக்காட்சியில் முகம்காட்டி கருத்து சொல்லும் பெண்மணி என்பது மார்கழியில் மாம்பழம் கிடைப்பது போல் அரிய சீஸன்.

Rettai-Vaal-Kuruvi_Movie_Films_Cinema_Radhika_Mohan_Baalu_Mahendira

சில படங்களுக்கு பாடல்கள் பலம். சில படங்களுக்கு நாயகரோ, நாயகியோ பலம். சில படங்களுக்கு க்ளைமேக்ஸ் பலம். சில படங்களுக்கு சண்டைக்காட்சிகள் பலம். சில படங்களுக்கு மசாலா பலம். இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் – வசனம்.

’விஷயம் முடிஞ்சாப் போதுமே… அப்புறம் தொட வுடமாட்டியே…’ (துளசி)
’மூக்கும் முழியுமா… இல்ல! முழியும் முழியுமா!!’ (ராதா)
– ’ஒட்டிக்கறதுக்கு மட்டும் வர…’ (யாரா இருந்தால் என்ன… நிதர்சனம் : )
’நான் பார்க்காத வியாழக்கெழமையா கண்ணு!’ (பூக்காரி – பாட்டி)

இந்தப் படத்தில் விகே ராமசாமி பாடும் டைம்லியான பாடல்களை தனியாகப் பட்டியல் போட வேண்டும்:

குற்றம் புரிந்தவன்… வாழ்க்கையில் நிம்மதி கொள்வது என்பது ஏது!?
மன்மத லீலையை வென்றார் உண்டோ?
சட்டி சுட்டதடா…

இதில் கிடைத்த மற்றொரு விநோதமான பாடல் ‘பூனைக் கண்ணை மூடிக் கொண்டால் இருண்டு போகுமோ… மியாவ்… மியாவ்!’

பல மணிரத்னம் படங்களுக்கு இந்தப் படம் முன்னோடியாக இருந்திருக்கிறது. ”அக்னி நட்சத்திரம்” படத்தில் ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா’ ஜனகராஜ் + வி கே ராமசாமி நகைச்சுவைக்கு, இந்தப் படம் கால்கோள் இட்டிருக்கிறது. ”ஓகே கண்மணி” படத்தில் லிவிங் டுகெதர், என்று கல்யாணம் ஆவதற்கு முன் சேர்ந்து வாழ்வதற்கான அஸ்திவாரங்கள், 1987ல் போடப்பட்டிருக்கிறது. கமல்ஹாசனின் எண்ணற்ற படங்களில் வந்த கிரேசி மோகன் ஸ்டைல் ஆள் மாறாட்ட பிரச்சினை நகைச்சுவை இங்கே வெள்ளித்திரை கண்டிருக்கிறது. காத்தாடி ராமமூர்த்தி போட்ட ‘அய்யா… அம்மா… அம்மம்மா’ நடை ஜோக்குகள் சரளமாக உருவப்பட்டு உலாவுகின்றன. நேற்றைய ஷங்கர் படமான ரஜினியின் ‘சிவாஜி’ படத்தில் டாக்ஸிக்குள் வேட்டி மாற்றும் நகைச்சுவை, இந்தப் படத்தில் தோன்றி இருக்கிறது.

காதலன்’ திரைப்படத்தில் எஸ்பிபி பாடியே கரைக்கும் “ஞாயிறு என்பது கண்ணாக” கூட இங்கே விகே ராமசாமியின் வெண்கலக் குரலில் “ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தாள்” என்று ஒலிக்கிறது. அவரின் பாடல்கள் படம் நெடுக வருகின்றன.

மேலேயுள்ள பாட்டில் ‘சங்கர சங்கர சம்போ… இந்த சம்சாரி விஷயத்தில் ஏன் இந்த வம்போ?!’ என அவர் குத்தும்போது ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ சிந்து நிழலாடுகிறது.

அந்தக் காலத்தில் தமிழ் நன்றாகப் பேசினார்கள். சேரியில் தமிழ் நன்றாக புழங்கியது. குடிசை வாழ் மக்களுக்கு ‘செக்ஸ்’ என்னும் வார்த்தைக்கு அர்த்தமே தெரியவில்லை. பாலுறவு என்றாலும் புரியவில்லை. கலவி என்றாலும் தெரியவில்லை. அந்தக் காலத்தில் தமிழ் கொச்சைப்படுத்தவில்லை. எல்லோரும் டிரேட் ஃபேர் சென்றார்கள். வீட்டிற்கு ஒரு சாலிடேர் டிவி வைத்திருந்தார்கள்.

கிடைக்காததை எண்ணி ஏங்குவது என்பது நொஸ்டால்ஜியா எனப்படும். திருமணம் ஆனபின் இன்னொரு பெண்ணுக்கு ஆசைப்படுவது என்பது ‘கோபி’த்தனம் எனப்படும். சைக்கிளில் டபுள்ஸ் போகலாம். ரங்கராட்டினம் சுற்றலாம். பாடகியுடன் ஊர் சுற்றலாம். தட்டிக் கேட்பார் கிடையாது. அதிகாரபூர்வ மனைவியின் ஒப்புதலும் உண்டு. குழந்தை ஒன்றுக்கிருந்தால் டயாப்பர் மாற்றும் சிக்கலும் கிடையாது. வேலையில் அரட்டையும் உண்டு. இப்படி எல்லாம் கற்பனையில் வாழ்வதுதானே சினிமா? அந்தக் செல்லுலாயிட் கற்பனையை தமிழ் முலாம் பூசி கலைப்படைப்பாகத் தருவதற்காகத்தானே பாலு மகேந்திரா!

ஐ மிஸ் நொஸ்டால்ஜியா அண்ட் அன்கரப்டட் வுமன். ஐ மீன்… ஐ மிஸ் பாலு.

தழற்சொல் – சிறுகதை பரிந்துரை

Thomas_Pierce_This_is_an_alert_New_Yorker

இந்தக் கதையை நியு யார்க்கர் இதழில் வாசிக்கலாம்: This Is an Alert – The New Yorker

இந்தக் கதையைப் படித்தால் அறிபுனை கதையைப் படிப்பது போல் இருக்கிறது. வருங்காலத்தில் எங்கெங்கும் பீடித்திருக்கும் போர் மற்றும் போர்ச்சூழலினால் தோன்றும் அச்சத்தையும் பிரதிபலிக்கிறது. அறிவியலின் வளர்ச்சியான ஆளில்லாமல் பறக்கும் தூரயியங்கி விமானங்களின் ஆபத்துகள் நிறைந்த அவநம்பிக்கையான சமூகத்தைச் சுட்டுகிறது. அறிவியல் குறைவாகவும், புனைவு அதிகமாகவும் காணப்படுவதால் அறிபுனை என்னும் வகையில் இந்தக் கதையை வைக்கிறேன்.

பதினான்கு வயது மகளுடனும் மனைவியுடனும் மாமியார் வீட்டிற்கு விருந்துண்ணச் செல்பவனின் நிகழ்வுகளை தாமஸ் பியர்ஸ் எழுதி இருக்கிறார். கதையின் தலைப்பில் சொல்வது போல், ‘இது ஒரு எச்சரிக்கை’ என்னும் அறிவிப்பு, அவர்களை அன்றாடம் துரத்துகிறது. எப்போது அந்த அபாய அசரீரி ஒலிக்கும், எதற்காக அதற்கு அடிபணிகிறோம், எவ்வளவு நேரம் அந்த எச்சரிப்பு நீடிக்கும் என்று தெரியாது.

பதின்ம வயதில் மகளுக்கு நிகழும் மாற்றங்களும் குழப்பங்களும் இயல்பாக வந்து போகின்றன. மார்பகப் புற்றுநோஇல் இருந்து மீண்ட மாமியாரின் செய்கைகள், வயதானோரின் பாதுகாப்புணர்வை சொல்கின்றன. கணவன் உடன்பிறந்தான் பார்க்கும் காமப் பார்வைகள் வருங்காலக் கதைக்கு உயிரூட்டுகின்றன. சொட்டைத் தலையை நினைத்து வருந்தும் நடுத்தர வயதினன் கதையோடு ஒன்ற வைக்கின்றன.

ரொம்பவே போரடித்து விடக் கூடிய களம். அதை எப்படி கதாசிரியர் சுவாரசியமாக்குகிறார்? கொஞ்சம் போல் பாலுணர்வு உலவ விடுகிறார். துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை குறித்த விவாதத்தை எழுப்புகிறார். இதுதான் இறுதி முடிவு என்று சொல்லாமல் விட்டு வைக்கிறார். ஆறு கதாபாத்திரங்கள் இருந்தாலும் நாய்க்குக் கூட போதிய அளவு விவரிப்புகளும் குறியீடுகளும் கொடுக்கிறார்.

ஐஸிஸ் வளராமல் இருக்க எங்கோ இருக்கும் சிரியாவில் குண்டு போடுகிறார்கள். ஹௌத்திகள் வளராமல் இருக்க யேமனில் பறந்து பறந்து தாக்குகிறது சவுதி அரேபியா. தலைக்கு மேலே எங்கோ நடக்கும் சண்டைகள். அமெரிக்காவில் நிலத்தில் வாழ்வோருக்கும் இந்தப் போர்களுக்கும் சம்பந்தமே இல்லை. அந்தச் செய்திகளை, தொலைக்காட்சியிலும், தினசரிகளிலும், இணையத்திலும் மட்டுமே பார்க்கிறோம். அவர்கள் கெட்டவர்கள் என்பதால் தாக்குகிறோம். இந்தக் கதையில் வான்வெளியில் நடப்பதாகச் சொல்லப்படும் டிரோன் போர்கள் அதை நினைவுக்குக் கொணர்ந்தது. ”இந்த நாட்டிற்குச் செல்லாதே” என்னும் கபர்தார் அறிக்கைகள், அவ்வப்போது வரும் அசரீரிகள் உணர்த்தின.

தாமஸ் உடன் ஆன நேர்காணலை இங்குப் படிக்கலாம்: » INTERVIEW: Thomas Pierce, author of Hall of Small Mammals

சிறுகதைத் தொகுப்பு புத்தகத்திற்கான விமர்சனம்: ‘Hall of Small Mammals,’ Short Stories by Thomas Pierce – NYTimes.com

Uttama Villain – Movie Review: உத்தம் வில்லன் விமர்சனம்

Kamal_Movies_UthamaVillan_uttama-villain

சினிமாவில் வாழ்க்கையைத் தேடுபவர்கள் தமிழர். திரையில் நாயகர் நியாயத்தைத் தட்டிக் கேட்டால், நிஜத்திலும் அவ்வாறே இருப்பார் என நினைப்பர் தமிழர். சமீப காலத் தமிழ்ப்படங்களில் அந்த வகை கதாநாயகர்களை உரித்துக் கொடுக்கும் படங்கள் வர ஆரம்பித்தன. சித்தார்த் நடித்த ‘ஜிகர்தண்டா’ அவ்வகையில் வந்த படம். கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’, அதே ரகத்தில் இன்னொரு படம்.

கமலுக்கு எந்த மாதிரி திரைப்படங்கள் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுக்கும்? நடனத்தில் பரிமளித்த சலங்கை ஒலி, கடைசியில் இறந்து போகும் குணா, இரு வேடத்தில் தோன்றிய ஆளவந்தான் போன்றவை நினைவுக்கு வருகின்றன. ”உத்தமவில்லன்” திரைப்படத்தில் இவை அனைத்தும் காணக் கிடைக்கின்றன. பழங்கால வேடத்தில் உத்தமனாகவும் நிகழ்கால கதாநாயகன் மனோரஞ்சன் ஆகவும் இரு வேடத்தில் கமல் வருகிறார். வித்தியாசமான நடனத்தை அபிநயம் செய்பவராக நடிக்கிறார்.

கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும்போது கட்டுரை எழுதச் சொல்வார்கள். அந்தக் கட்டுரையில் சொந்த விஷயங்களும், தனிப்பட்ட அனுபவங்களும் நிறைந்து இருக்க வேண்டும். அந்த மாதிரி நேர்மையாகவும் உண்மையாகவும் எழுத்தில் இருந்தால் மட்டுமே, அந்தக் கட்டுரையோ அல்லது கதையோ வாசகரின் மனதில் தங்கி நிலைத்திருக்கும். வேறொருவருக்கு நிகழ்ந்ததை புனைவாக்கினாலும் கூட அதில் கொஞ்சமேனும் சொந்த ஆசாபாசங்களை உணர்வுகளாக வடிக்க வேண்டும். அதில் கொஞ்சம் கற்பனையும் கலந்தால், புனைவுக்குரிய சுவாரசியத்தையும் உருவாக்கி விடலாம்.

’உத்தம வில்லன்’ படத்தில் நாயகன் மனோரஞ்சனுக்கு நடிகன் கதாபாத்திரம். அறுபது வயது ஆகிவிட்டாலும், தொந்தியும் தொப்பையும் குலுங்கினாலும் கூட, இருபது வயது நாயகிகளோடு ஆட்டம் போடும் கதாபாத்திரம். நாலு சண்டை, ஐந்து பாட்டு, ஏ / பி / சி வர்த்தகத்திற்கான வியாபார வித்தகங்கள் கொண்ட திரைப்படத்தில் நடித்து தள்ளுகிறார். திடீரென்று ஒரு நாள், தன்னுடைய பெயர் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்னும் வினா எழுகிறது. தனக்கு துவக்க காலத்தில் நல்ல படங்களைக் கொடுத்து சிறப்பான நடிகன் என்று பலரும் பேச வைத்த 83 வயதான இயக்குநர் மார்க்கதரிசியிடம் செல்கிறார்.

மார்க்கதரிசியோடு இணைந்து ‘உத்தம வில்லன்’ படத்தைத் துவங்குகிறார். இதற்கு நடுவில் மூன்று காதல்கள். முதல் காதல் நிறைவேறவில்லை. இரண்டாவது மனைவி மட்டும் காதலிக்கும் இல்லத்தரசி காதல். மூன்றாவது மூத்த வயதில் இளவயதினரை பாசத்துடனும் காமத்துடனும் பற்றும் ஒவ்வாக் காதல்.

திரைப்படத்தில் வரும் மூன்று காதல் போல் மூன்று தந்தையர்களும் உண்டு. முதல் தந்தை மாமனார் பூர்ணசந்திர ராவ் ஆக வரும் கே விஷ்வநாத். இரண்டாவது தந்தை நாயகன் மனோரஞ்சன். மூன்றாவது தந்தை ஜேகப் ஜக்கரியா ஆக வரும் ஜெயராம்.

மாமனார் வருங்காலத்தைப் பற்றிக் கவலைப்படுபவர். தன் மகள் நலத்தை எண்ணி சிந்தித்து செயல்படுபவர். மகளுக்காக மாப்பிள்ளையை உருவாக்கியவர். ஒன்றுமில்லாத ஏழை ஆறுமுகத்தை காதல் இளவரசன் மனோரஞ்சன் ஆக்கியவர்.

மனோரஞ்சனுக்கு இரண்டு குழந்தைகள். முதல் குழந்தை மனோன்மணி. கல்லூரிப் படிப்பை முடிக்கும்வரை மனோன்மணி என்று தனக்கு ஒரு மகள் இருப்பதையே அறியாதவர். காதலில் பிறந்த குழந்தையை சூழ்நிலை நிர்ப்பந்தத்தால் கைவிட்டவர். இன்னொரு குழந்தை முறையாகப் பிறந்த குழந்தை. ஆனால், அந்த மகனுடனும் பெரியதாக அன்னியோன்யம் எதுவும் வளர்க்காதவர். தான் உண்டு, தன் நடிப்பு உண்டு, தன் முதிய காதலிகள் உண்டு என்று சுயலவாதியாக வாழ்க்கையைக் கொண்டாடுபவர்.

மூன்றாமவர் ஜேகப் சக்கரியா. ஜெயராம் இந்த கதாபாத்திரத்தில் அமரிக்கையாக வந்து போகிறார்.

திரைப்படத்தில் மூன்று பேரைக் குறிப்பிட்டு பாராட்ட வேண்டும்.

முதலாமவர் எம் கிப்ரான். படத்தின் பாடல்களில் பாரம்பரியமும் இருக்க வேண்டும். தற்காலத்திற்கு ஏற்ப கேட்கக் கூடிய துள்ளலாகவும் பாய வேண்டும். கதையோடும் இழைந்தோட வேண்டும். அவை எல்லாம் சாத்தியமாக்கி உள்ளார்.

தாலி கட்டிய மனைவியாக ஊர்வசி வருகிறார். ஆஸ்பத்திரி காட்சி மட்டுமே அவருடைய உயிர் ஊட்டத்திற்கு அத்தாட்சி. மைக்கேல் மதன காமரஜனில் பழக்கமான ஜோடி. கமலின் நிஜ வாழ்வில் சரிகா அவரை விட்டுப் பிரிந்ததை நினைவுறுத்தும் குணச்சித்திரம்.

மூன்றாவதாக சொக்கு செட்டியாராக வரும் மேனேஜர் எம் எஸ் பாஸ்கர். இவருக்குக் கொடுக்கப்பட்டதை ஒழுங்காகச் செய்யாவிட்டால்தான் செய்தி. கிரேசி மோகன் தனமான மொழிமாற்ற வசனங்களை சர்தார்ஜியுடன் சேர்ந்து கலகலக்கிறார். ‘அழுதா உங்களுக்கு நல்லாயில்ல!’ என்று மனோரஞ்சன் சொன்னாலும் அந்தக் காட்சியிலும் இயல்பான உடல்மொழியும் அவருக்கே பிரத்தியேகமான அன்றாட இயல்புகளின் பிரதிபலிப்பாலும் ”சொக்கு” நிலைத்திருப்பார்.

திரைப்படத்தின் மிகப் பெரிய பலவீனம் ‘உத்தமன்’ கதாபாத்திரம் வந்து போகும் நாடகீய தருணங்கள். அந்தப் பழங்காலக் கதையில் நிறைய சாத்தியங்கள் இருந்திருக்கின்றன. ராஜா – ராணிகளை கேம் ஆஃப் த்ரோன்ஸ் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் கூட தத்ரூபமாகக் காட்டுகிறார்கள். ஆனால், தமிழ்த் திரைப்படத்தில் கிரீடம் வைத்து, கவசம் தைத்து, உத்தரீயணம் தரித்து, பஞ்சகச்சம் கட்டி சினிமா எடுப்பதாகச் சொல்கிறார்கள். இந்த மாதிரி பாவ்லா அரசர்களைக் கிண்டல் செய்வதில் பாடலில் ‘புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சி!’ என்று கோடிட்டு கிண்டலும் செய்கிறார்கள்.

அந்த மாதிரி நுண்ணிய நகைச்சுவை புரிகிறது. ஆனால், ‘ஜிகர்தண்டா’ போல் தமிழ் சினிமாவிற்குள் இருந்து கொண்டு தமிழ் சினிமாவை நக்கல் அடித்த காட்சியமைப்போ, வசனங்களோ எதுவுமே இடம்பெறவில்லை. “நான் புத்திசாலி!” என்று கமல் சொல்லிக் கொண்டே, “எனக்கு நடனம் தெரியும் பார்!”, “நான் தெய்யம் ஆடுகிறேன் பார்!”, “என்னுடைய நகைச்சுவையைப் பார்!” என்று காதில் வந்து கத்துவது போல் படம் மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து அன்னநடை இடுகிறது.

குறுநில மன்னர்களைப் பற்றியும் சேர, சோழ, பாண்டிய பேரரசுகளின் இலட்சணங்களை தோலுரித்து, அதே சமயம் காமெடியும் கலந்து கொடுத்த ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ போல் வெளிப்படையாக அரசியலும் பேசவில்லை. அந்தப் படத்தில் உக்கிரபுத்தன் என்னும் வீரன் ஒருவனும் புலிகேசி என்னும் கோழை மன்னனும் இருந்தார்கள். உத்தம வில்லனில், அந்த இருவரும் ஒருவராகவே வருகிறார்கள். ஆனாலும், இந்த நாடகத்தை இவ்வளவு நீட்டி முழக்கியதற்கு, சன் தொலைக்காட்சி படத்தொகுப்பாளரிடம் கொடுத்தால், அரை மணி நேரமாக வடிவேலுவின் காட்சிகளை சுருக்கித் தந்திருப்பார். அது இந்தப் படத்தை விட சுவாரசியமாக இருந்திருக்கும்.

கமலுக்கு இந்தப் படம் இன்னொரு மணிமகுடம். நிரலி எழுதுபவர் எனக்கு ஜாவா தெரியும், ஆரக்கிள் தெரியும், ரூபி தெரியும் என்று அடுக்கி, தன்னுடைய பயோ டேட்டா சொல்லிக் கொள்வார். அது போல் நான் நடிகனாக நடித்து இருக்கிறேன். தந்தையாக வந்திருக்கிறேன். கதக்களி ஆடி இருக்கிறேன். ஆண்ட்ரியாவோடு கொஞ்சி இருக்கிறேன். பூஜாவை கண்ட இடங்களில் தொட்டு இருக்கிறேன். மூளைக்கட்டி வந்தவனின் வேதனையைக் காட்டி இருக்கிறேன். – இப்படி பட்டியல் போட்டு, தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார்.

திரையரங்கில் இருந்தவர்கள் சிரித்த இடங்களில் எல்லாம் எனக்கு தமிழ் வசனம் புரியவில்லையோ என்று சந்தேகப்பட்டு ஆங்கிலத் துணையெழுத்துக்களைப் படித்தால், அப்பொழுதும் சிரிப்பு உண்டாகவில்லை. ஆனால், ஆங்கிலத்தில் மொழிமாற்றாமல், சூழலுக்குத் தக்கவாறு மொழிபெயர்க்கிறோம் என்று சம்பந்தமே இல்லாமல் இஷடத்திற்கு தங்களுடைய காவியத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தமிழ் வசனங்கள் நிஜமாகவேத் தேவலாம். நன்றாக இருக்கிறது. நிறைய இருக்கிறது. அதுதான் பிரச்சினை. படத்தின் முக்கிய பிரச்சினையும் கூட.

நான் கூட எனக்குத் தெரிந்த கிரேக்கத் தொன்மம், சமீபத்தில் ஹார்ப்பர்ஸ் இதழில் படித்த சிறுகதை என எல்லாவற்றையும் இங்கே நுழைக்கலாம். ஆனால், அதற்கெல்லாம் இந்தப் பதிவில் இடமில்லை. மணி ரத்னம் எடுத்த ஓகே கண்மணி போல் சுருக்க சொல்ல வேண்டாம். ஆனால், நிறைய வெட்டி எறிந்திருக்கலாம். வளவளா வசனத்தைப் பாதியாகக் குறைத்து, கொட்டாவியை தடுத்திருக்கலாம்.

இவ்வளவு சொல்லி விட்டு, திரைப்படத்தில் தேவையில்லாமல் வரும் ”அல்லா” வசன விளிப்பையும், மனோன்மணியின் கழுத்தில் தொங்கும் சிலுவையும், ‘நாங்க கிறிஸ்டியன்ஸ்! எனவே பெருந்தன்மையோடு நடந்து கொள்வோம்!” என்னும் பொதுமைப்படுத்தல்களையும் சொல்லாமல் செல்வது இழுக்கு. தொந்தி பெருத்த பிராமணர்கள் சாப்பிடுவதைக் காட்டுவது ஃபோர்டு பவுண்டேஷன் பாட்டாளிகளுக்கு உழைக்கிறது என்று நிறுவுவது போல் துருத்திக் கொண்டெல்லாம் இல்லை. கமல் படமென்றால் காமம் இருக்கும். நாராயண தூஷணையும் பார்ப்பான் பாஷிங்கும் இருக்கும் என்பது “அவர்கள்” எழுதிய விதி.

படத்தின் முதல் பலவீனம் ‘அகோ வாரும் பிள்ளாய்’ என பியூ சின்னப்பா ரக வசனங்கள் என்றால், கே பாலச்சந்தர் இன்னொரு முட்டுக்கட்டை. அவரை இந்த வயதில் இப்படி படுத்தி இருக்க வேண்டாம். எனக்கு லீலா சம்சனைத் தெரியும் என்று மணி ரத்னம் அவரை உபயோகித்தால், கொஞ்சமாவது பொருந்துகிறது. கான்ஸ்டபிள் வேடத்தில் நடிக்க கான்ஸ்டபிள் ஆகத்தான் இருக்க வேண்டுமா?

குண்டு கமலையும் அவருடைய மடியில் உட்கார்ந்து கொள்ளும் ஆண்ட்ரியாவையும் பார்த்தால் லஷ்மி நரசிம்மரைப் பார்த்த மாதிரி இருக்கிறது. ஆனால், இந்தத் திரைப்படத்தில் நரசிம்மர் செத்து விடுகிறார். தூணைப் பிளந்துகொண்டு நரசிம்மர் வருவார்… வருவார்… என பிரகலாதன் போல் நானும் அஷ்டாவதானி என்னும் வித்தகாதி வித்தக கமலுக்காக படம் நெடுகக் காத்திருந்தேன்.

இப்பொழுது அடுத்த கமல் படத்தில் ஆவது மீள்வார் எனக் காத்திருப்பேன்.

Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage – Book Reviews

இன்னொருத்தருடன் உங்களுடைய இதயம் இணக்கமாக இருக்க ஒத்திசைவு மட்டும் காரணம் அல்ல. இரண்டு பேருக்கும் இடையே பொதுவாக நடந்த ரணங்களால்தான் இதயங்கள் இணைகின்றன. – சுகுரு டசாகி

ஜப்பானிய பழமொழியில் சொல்கிறார்கள்: ‘தலையைத் துருத்திக் கொண்டு தெரியும் ஆணியை, அடித்து உள்ளே தள்ளு!’

ஜப்பானில் சுற்றம் என்பது குடும்பத்தையும் தாண்டியது. வாழ்க்கையின் ஒவ்வொரு பாதையிலும் அந்த ஐக்கியமாகும் எண்ணம் பாய்கிறது. நீங்கள் தனித்துத் தெரிந்தால், பத்தோடு பதினொன்றாக ஆக்கப்படுவீர்கள். ஆமே (甘え) என்னும் சித்தாந்தம் இந்தக் குழுமப் பண்பாட்டை புரிந்து கொள்ள உதவும். ஆமே (甘え) என்பதன் அர்த்தம் ’அடுத்தவரிடம் அன்பைத் தேடு’. குழந்தைப்பருவத்திலேயே இது மூளையில் ஏற்றப்படுகிறது. இன்னொருவரிடம் பரிபூரண விசுவாசம் கொண்டிருப்பதற்கும் சமூகக் கூட்டமைப்பாக வாழ்வதற்கும் இந்த உணர்வு முக்கியம் என்று கற்றுத் தருகிறார்கள். சொல்லப் போனால், ஜப்பானிய மொழியில் சுய ஆளுமையைச் சொல்லும் கொஜின் ஷுகி (こじん-しゅぎ) என்றால் அது சுயநலம்/பேராசை போன்ற மோசமான அர்த்தத்திலேயே பயன்பாட்டில் இருக்கிறது.

ஆமே (甘え) என்பது குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே உள்ள உறவு போன்றது. அது எழுதப்படாத சமூக விதி. உங்களின் சக தொழிலாளரை, உங்களுடன் கூடப் படிக்கும் மாணவரை, உங்களுடன் கூட்டத்தில் வரும் பயணியை – ஒவ்வொருவருக்கும் நீங்கள் வாக்கு கொடுக்கிறீர்கள். நின்ஜோ (にんじょ) என்றால் உள்ளார்ந்து எழும் அனிச்சையான செயல்பாடு. அதாவது, ’நான் என்னுடைய கடமையாக, உங்களுக்கு பரிபூரண அன்பையும் எதிர்பார்ப்பற்ற அர்ப்பணிப்பையும் நல்குவேன்.’ அனைவரும் அனைவருடன் கைகோர்த்து வாழ்வோம் என்பதை பாலபாடமாக பதித்துக் கொள்கிறார்கள். இவ்வாறான சமூகக் குழுமங்களை கிரி (ぎり) என்கிறார்கள்.

இந்த மாதிரி உள்வட்டத்தில் இல்லாதவர்களை டனின் (たにん) என அழைக்கின்றனர். நின்ஜோ (にんじょ) உள்வட்டத்திலோ, கிரி (ぎり) குழுமத்திலோ இல்லாதவர்களை டனின் (たにん) எனக் கருதுகின்றனர். அதாவது, குடும்பமோ, பள்ளித் தோழமையோ, அலுவல் சகாக்களோ, அல்லாதவர்கள். டனின் (たにん)களுடன் எந்தப் பற்றுதலும் கிடையாது.

கடைசியாக வா (わ) என்னும் பதம். வா (わ) என்றால் ஒத்திசைவு; இணக்கம். இதுதான் ஜப்பானிய அறம். பழங்காலத்தில், நெல் விளைவிக்க தேவைப்படும் நதிநீரைப் பகிர வேண்டும். நெல்விளைச்சலைப் பாதுகாக்க வேண்டும். இந்த சமயத்தில்தான் குடியானவ சமூகத்தில் அமைதி நிலவ, வா (わ) சட்டத்தை அரசர் ஷொடொகு டைஷி முன்வைக்கிறார். விளையாட்டில், வர்த்தகத்தில் என்று எந்தத் துறையிலும் வா (わ) சித்தாந்தத்தைக் காணலாம். பரஸ்பர நம்பிக்கை, விட்டுக் கொடுத்து வாழ்தல், ஒத்துழைப்பு, மேலதிகாரியிடம் அசைக்கவியலா பற்றுறுதி, ஆகியவையே வா (わ)கருத்தியல். தனிமனித விளையாட்டான டென்னிஸ் போன்றவற்றில் ஜப்பானியர்கள் ஓரளவிற்கு மேல் எழும்ப முடியாததற்கும் இந்த அடிப்படைக்கும் பெரும் தொடர்பு உண்டு.

ஜப்பானில் தனித்துவம் தழைத்தோங்க, ஒரு சில துறைகளே இருக்கிறது: மலர் அலங்காரங்களைச் செய்யும் பணி, கவிதை புனைதல், கலை வெளிப்பாடு மற்றும் இசை.

உசாத்துணை: Phyllis Kepler, Brook S. Royse and John Kepler. Windows to the World: Themes for Cross-Cultural Understanding. Glenview, IL: GoodYearBooks, 1996

Haruki_Murakami_Colorless_Tsukuru_Tazaki_Novel_NYT

oOo

ஹருகி முரகமி எழுதிய ”நிறமற்ற சுகுரு டஸாகியும் அவன் யாத்திரை மேற்கொண்ட வருடங்களும் (Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage) படித்து முடித்தேன். ’மனிதரில் இத்தனை நிறங்களா’ என படம் வந்திருந்தது. இந்தக் கதையில் ஐந்து இளைஞர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம். ஒருத்திக்கு கருப்பு, இன்னொருத்திக்கு வெள்ளை; ஒருவனுக்கு சிவப்பு; இன்னொருவனுக்கு நீலம். கடைசியாக இருக்கும் ஐந்தாமவன் கதாநாயகன் – நிறமற்றவன்.

ஹருகி முரகமி எல்லா இடங்களிலும் ரசிகர்களை வைத்திருக்கிறார். அவருடைய புத்தகங்கள் பரபரவென்று விற்றுத் தள்ளுகின்றன. மகாரஷ்டிரா அளவில் இருக்கும் ஜப்பானில் மட்டுமே ஒரு மில்லியன் புத்தகங்கள் விற்கிறது! அதன் பிறகு, அதே புத்தகம் ஐம்பது மொழிகளில் மொழியாக்கம் காணப்பட்டு மேலும் ரசிகர்களைக் கவர்கிறது. இத்தனைக்கும் சிட்னி ஷெல்டன் போல், கென் ஃபாலெட் போல் பரபரப்பான துப்பறியும் மசாலா நாவல்களை முரகமி படைக்கவில்லை. நோபல் பரிசுக்கான ஓட்டத்தில் நெடுங்காலமாக இருக்கிறார். ஜேகே ரவுலிங் எழுதிய ஹாரி பாட்டார் போல் ஹருகி முரகமியின் நூல் நாயகர்களும் தங்களுக்கென்று உலகை சிருஷ்டித்துக் கொள்கிறார்கள். அவருடைய நூல்களின் கதாபாத்திரங்களின் அக மனது அபிலாஷைகள், யாரும் எதிர்பார்க்காத திசைகளில் பயணித்து, நமக்கு அறிமுகமான எண்ணங்களை பரிச்சயம் செய்வித்து, திக்கற்ற முக்குகளுக்கு இட்டுச் சென்று நம்முடைய சிந்தனையில் நீண்ட நாள் நிலைக்கும் பாதைகளை உருவாக்கவல்லது.

நாகர்கோவில் போன்ற குறுநகரத்தில் இருந்து டோக்கியோ நகரத்துக்கு வருகிறான் சுகுரு டஸாகி. அவனுக்கு கலைகளில் நாட்டம் கிடையாது. எந்தவிதமான பொழுதுபோக்கும் கிடையாது. எந்த கைவினைத் தொழிலும் தெரியாது. எளிதாக புன்னகைப்பான். சட்டென்று யாரோடும் பழக மாட்டான். புதியதாக எவராவது அறிமுகமானால், அவருடன் நட்பு பயில சிரமப்படுவான். வெளிப்படையாக பட்டெனப் பேசுவதில் சிரமம். தனியாகவே உலா வருகிறான். எவருடைய துணையும் இன்றி வாழ்க்கையை நடத்துகிறான். பேச்சுத் துணை கிடையாது. செல்பேசி அரட்டை கிடையாது. அலுவலில் நண்பர் கிடையாது. உண்ணும்போது சம்பவங்களைப் பகிர எவரும் கிடையாது. டிவி மாந்தர்களைக் கூட தொலைக்காட்சியில் பார்ப்பது கிடையாது.

சுகுரு என்பது அவனுடைய அப்பா, அவனுக்கு இட்ட பெயர். அந்தப் பெயருக்கு அர்த்தம் ‘பொருள்களைச் செய்பவன்’. இதனால், அவனுக்கு ஸ்திரமான விஷயங்கள் பிடித்துப் போகிறது. சின்ன வயதில் இருந்து தொடர்வண்டிகள் மேல் காதல். நாள் முழுக்க ரயில் நிலையத்தில் உட்கார்ந்திருக்கிறான். பயணிகளின் அவசரத்தைப் பார்க்கிறான். விற்கப்படும் பொருள்களை கவனிக்கிறான். தண்டவாளங்களில் தாண்டவமாடும் சுருதியை ரசிக்கிறான். இம்மி பிசகாமால், மாறி மாறிப் போகும் புகைவண்டிகளைப் பார்ப்பதோடு நில்லாமல், அந்தத் துறையிலேயே வேலை தேடவும் நாட்டம் கொள்கிறான்.

kuro_pottery

சுகுரு டஸாகியினுடைய குறுநகரத்தில் அவனுக்கு நான்கு நண்பர்கள் இருக்கிறார்கள். எப்பொழுதும் ஒன்றாகவே வளைய வருகிறார்கள். சுகுரு டஸாகி மட்டும் டோக்கியோவிற்கு கல்லூரியில் சேருகிறான். அதன் பிறகு நண்பர்களை இழக்கிறான். நண்பியைக் காமத்துடன் பார்க்கிறான். மூக்கு அரிப்பெடுத்தால் சொறிந்துகொள்வது போல், தன்னியல்பாக தினசரி பல மைல் தூரம் நீந்துகிறான். தற்பால் விருப்பமோ என கனவுறுகிறான்.

உங்களின் அத்யந்த சிநேகிதர்கள், சடாரென்று ஒரு நாள் – உங்களை ஒதுக்கி வைத்து விட்டால் என்ன செய்வீர்கள்? நிராகரிப்பை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? காதல் தோல்வி என்பது போல் தோழர்களின் தோல்வி என்று இந்த நிலையைச் சொல்லலாம். அவர்களிடம் சென்று ‘ஏன் என்னுடன் பேச மாட்டேன் என்கிறீர்கள்?’ என விசாரிப்போம். அவர்கள், நம்மை புறந்தள்ளும் காரணத்தை அறிய முயற்சிப்போம். நட்பை மீண்டும் உயிர்ப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று முயல்வோம். சுகுரு டஸாகி அவ்வாறெல்லாம் எதுவும் செய்வதில்லை. டஸாகிக்கு அந்த மாதிரி ஆராய இயலாத உள்ளுக்குள்ளேயே மருகும் மனம். தானாகவேப் புழுங்கி தனக்குள்ளேயே குற்றங்களை உருவாக்கி அதற்கான தண்டனைகளை ஏற்றுக் கொண்டு நிர்க்கதியாக அலையும் சிந்தையைக் கொண்டிருக்கிறான் டஸாகி.

துப்பறியும் கதை போல் வேகமாக விரைகிறது இந்த நாவல். ஏன் அவனை வெறுத்து ஒதுக்கினார்கள் என்பது முதல் முடிச்சு. அப்படி வெறுத்து ஒதுக்கிய, பதின்ம வயது தோழமை எல்லோரையும் எதிர் கொள்வானா என்பது இரண்டாம் முடிச்சு. ஒவ்வொருவரையும் சந்திக்கும் போது, அவர்கள் சொல்லும் மனப்பதிவுகளும் அதன் தொடர்ச்சியான தகவல்களும் ‘அடுத்து என்ன… அடுத்து என்ன?’ என்று ஆர்வமூட்டுகிறது.

ஒவ்வொரு நண்பரும், பிறரை அவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை வெளிக்கொணர்ந்தது நன்றாக இருந்தது. பியானோ இசைக் குறிப்புகளும் அதன் தொடர்ச்சியான ஆபரா, சிம்பொனி விமர்சனங்களும் வாழ்க்கையைச் சொல்கிறாரா, இசையைச் சொல்கிறாரா என எண்ண வைத்தது. ஃபிரான்ஸ் லிஸ்ட் என்பவரின் பியானோ இசைத்தட்டு ஆன Années de pèlerinage நாவல் நெடுக இடம்பெறுகிறது. கதையின் தலைப்பான ’யாத்திரை மேற்கொண்ட வருடங்களும்’ என்பதற்கும் பொருந்துகிறது.

tsukuru_overboard

கதைக்குள்ளேயே பல உபகதைகளும், கிளைக்கதைகளும், சிறுகதைகளும் உண்டு. நாவலின் நடுவே பியானோ வாசிப்பவர் குறித்த அத்தியாயம் வருகிறது. இது இந்த நாவலின் மிக சுவாரசியமான இடம். பியானோ கலைஞருக்கு சிறப்பு சக்தி வந்து இருக்கிறது. அவர் சாத்தானை சந்தித்து இருக்கிறார். அதனிடம் இருந்து, ஒருவரைப் பார்த்தவுடன் அவருடைய நிறம் என்ன என்பது அவருக்குத் தெரிந்து விடும் சக்தியைப் பெறுகிறார். தன்னுடைய நிறம் போலவே இருப்போருடன் அவருக்கு ஒத்துப் போகும், என்பதையும் அறிகிறார். இந்த ஞானமும், பிறரைப் பார்த்தவுடன் உணர்ந்து கொள்ளும் உள்ளுணர்வும் வந்ததால், அவரது நெடுநாள் ஆயுள், மாதங்களாகச் சுருங்கிவிட்டது. இந்த சிறப்புப் பார்வை கிடைக்கும் சூட்சுமத்தை அவர் யாருக்கு வேண்டுமானாலும் தாரை வார்க்கலாம். ஆனால், யாருக்குக் கொடுக்கிறாரோ, அவருடைய ஆயுள்காலமும் எண்ணப்படும் நாள்களாகிக் குறைந்து விடும். அவர் எப்பொழுது பியானோ வாசித்தாலும், தன்னுடைய ஜாடியை, பியானோ மேல் வைத்து விட்டு வாசித்தால்தான், பியானோ வாசிப்பு களை கட்டும். அவருக்கு ஆறாம் விரல் இருந்திருக்கிறது. ஆனால், ஆறாம் விரலோ, பியானோ வாசிப்பிற்கு இடையூறாக இருந்திருக்கும். அதை வெட்டி எடுக்கச் சொல்லி இருப்பார்கள். அந்த ஆறாம் விரல்தான் ஜாடியில் இருந்ததா? ரொம்ப நாளைக்கு, இந்த இடம் மனதிலே சிந்தையைக் கிளறிக் கொண்டே இருக்கும்.

நியு யார்க் டைம்ஸில் சொல்லி இருந்தார்கள். கனவை சிலர் நன்றாக எழுதுவார்கள். அற்புதமாக விவரிப்பார்கள். நிஜம் போலவே இருக்கிறமாதிரி கதையில் உருவாக்கி விடுவார்கள். ஆனால், முரகாமியோ, எது கனவு, எங்கே நிஜம் என சிந்தை திகைக்கும் அளவு கொண்டு செல்கிறார். இதை மீ எதார்த்தம் (surrealism) எனலாம். குழந்தைகளுக்கான கற்பனை உலகம் என்றும் எளிமையாக்கலாம்.

முரகாமியிடம் என்னவெல்லாம் எதிர்பார்த்தேனோ, அவை எல்லாமும் இந்தப் புத்தகத்திலும் கிடைத்தது: கொஞ்சம் போல் பாலுறவு வர்ணனை; இசையும் அதன் தாளங்களையும் வாழ்க்கையோடு சங்கமிக்கும் லயம்; அமானுஷ்யமான உணர்வுகளை காற்றோடு உலவவிடுதல்; அர்த்தமற்ற வாழ்க்கையை தேடல் நிறைந்ததாக ஆக்கிக் கொள்ளும் முட்டாள்தனம்; பிறரோடு ஒட்டாமல், குழுவாகத் திரிய விரும்பும் விசித்திரம்; ஓட்டப்பந்தயம் போல் முடிவைத் தொடும் பயணமாக இல்லாமல், 4×100 தொடர் பந்தயமாக மாரத்தான் ஓடும் உயிர் வித்தை – எல்லாம் போதிய அளவில் கலந்திருக்கிறது.

டிரெயின் ஸ்டேஷன் போல் வாழ்க்கை. போக நினைக்கும் ஊரை மனதில் வைத்து அவசரமும் ஆர்வமும் பதற்றமும் கொண்டு தொடர்வண்டியில் ஏறுகிறோம்; இறங்குகிறோம். பயணங்களில் நிறைய பேரை சந்திக்கிறோம். சிலருடன் அதே இடங்களில் வசிக்கிறோம். சில சமயம் வழியனுப்ப மட்டும் ரெயில்வே ஸ்டேஷனுக்குச் செல்கிறோம். மேலிருந்து ஒருத்தன், இந்த கால அட்டவணையை உருவாக்கி, மின்வண்டியைப் போல் எல்லோரையும் இயந்திர கதியில் செலுத்துகிறான்.

tsukuru_train

பிறரின் இறப்பிற்கு நாம் காரணமாக இருக்கும்போது எப்படி உணர்கிறோம்? எதை உருவாக்குகிறோம்? யாரை திருப்தி செய்ய வாழ்கிறோம்? காதல் என்றால் என்ன? வெற்றி பெறுவது எப்போது? நிறைய யோசிக்க வைக்கிறது.

“நினைவுகளை மறைத்து விடலாம். ஆனால், அந்த நினைவை உருவாக்கிய சம்பவங்களை அழித்துவிட இயலாது.” – சுகுரு டசாகியிடம் சாரா சொல்வது

Dataclysm: Who We Are (When We Think No One’s Looking) by Christian Rudder

Dataclysm Who We Are When We Think No Ones Looking Hardcover

புத்தகத்தை கிடுகிடுவென படித்துவிட முடிகிறது. ஏற்கனவே அரைத்த மசாலாவைப் போட்டு தமிழ் சினிமா எடுப்பது போல் சுவையாகவும் எளிமையாகவும் இருக்கிறது. மீண்டும் மீண்டும் வாசித்து, புதிய தரிசனங்களை, காலந்தோறும் சேமித்து வைக்கும் இரகசியங்களை எல்லாம் சொல்வதில்லை. மாலை நேரத்தில் சமீபத்தில் எம்.பி.ஏ முடித்த நண்பர் ஒருவருடன் நேர்ப்பேச்சு உரையாடல் போல் இலகுவான, ஆழ்ந்து பத்தி பத்தியாக வாசிக்க வேண்டாத நடை.

இந்தியாவின் பிக் பஜார் போல் அமெரிக்காவில் டார்கெட். தான் கருவுற்று இருக்கிறோமா என்பதை சோதிக்கும் சாதனத்தை பெற்றொருக்குத் தெரியாமல் பதின்ம வயது மகள் வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் போகிறாள். இரண்டே நாளில் அவருக்கு “தாய்மை”, “குழந்தை வளர்ப்பு” போன்ற பத்திரிகைகளுக்கு இலவச சந்தா கொடுக்கும் விளம்பரங்கள் முதல் ஆரோக்கியமான குழந்தை பிறக்க என்ன உட்கொள்ள வேண்டும் என்பதற்கான மாதிரி மருந்துகள் வரை, வந்து கொண்டேயிருக்கின்றன. பெற்றொருக்கும் பெண்ணின் இரகசிய கர்ப்பம் அம்பலமாகிறது.

அது போல் கூகுள் தேடலின் மூலம் ஜுரம் பரவுவதைக் கண்டுபிடிப்பது போன்ற பரவலாகப் பேசப்பட்ட தகவல்களையும் ஆராய்ச்சிகளையும்தான் புத்தகம் பேசுகிறது.

இளை தளபதி விஜய் பாஷையில் சொல்ல வேண்டுமானால், ‘இதயத்தை நம்பி முடிவெடுக்காமல், தகவலையும் அதன் மேற்சென்ற ஆய்வையும் வைத்து முடிவெடுப்பது என் விருப்பம்.’ இப்படிச் செய்தால் “நன்றாக அமையும்” என்று குருட்டாம் போக்கில் கடவுளை நம்பி காலை விடக் கூடாது. விரிவான தரவுகளை சேமிப்பது; அந்தத் தரவுகளின் நம்பகத்தன்மையை கூடிய மட்டும் அலசுவது; அந்தத் தரவுகளைக் கொண்டு தெளிவு அடைவது; தெளிந்த போக்குகளைக் கண்டு கொண்டு அறுவிதி அடைவது – இதுவே முறைமை.

1854ஆம் வருடம். லண்டனில் எங்கு பார்த்தாலும் காலரா நோய். இப்பொழுது எபோலா பரவி ஒபாமாவையும் அவருடைய டெமொகிராட் கட்சியையும் வீழ்த்த பயன்பட்டது மாதிரி, ஏதேனும் அரசியல் சதி இருக்குமோ என எல்லோரும் ஆராய்கிறார்கள். ஜான் மட்டும் வேறு மாதிரி ஆராய்கிறார். “நோய் எங்கே அதிகமாக காணப்படுகிறது?” கேம்ப்ரிட்ஜ் தெரு முக்கில் இருந்துதான் பெரும்பாலானோருக்கு நோய் வந்திருக்க வேண்டும் என அவருக்கு தரவுகள் தெரிவிக்கிறது.

ஆனால், அதே தெரு முக்கில் சிறைச்சாலை இருக்கிறது. அங்கிருக்கும் கைதிகளுக்கு காலெரா வரவில்லை. சாராயக்கடை உபாசகர்களுக்கும் காலரா வரவே இல்லை. ஏன்? மேலும் உள்ளே சென்று தீவிரமாக ஆராய்கிறார். சாராயக்கடையே கதியென இருப்பவர்கள், வேறு நீரை உட்கொள்ளவே இல்லை. அதே போல் ஜெயிலுக்கென்று பிரத்தியேகமாக கிணறு இருக்கிறது. அதனால்தான் அந்த இரு குழுக்களும் பாதுகாப்பாக காலரா நோயை தடுத்துவிட்டார்கள். அதே தெரு மக்களின் மூச்சுக் காற்றை சுவாசித்தாலும், நோய் தீண்டவே இல்லை.

இது போல் சுவாரசியமான விஷயங்களும் தற்கால ஆராய்ச்சிகளும் காதலில் விழுவதற்கான அட்டவணைகளும் இனக்கவர்ச்சிக்கான சூட்சுமங்களும் இதில் கிடைக்கிறது. உங்கள் மேலாளர் gut-feeling கொண்டு முடிவெடுப்பவராக இருந்தால், இந்தப் புத்தகத்தைப் பரிசளிக்கலாம்.

அனுபவம் இல்லாத ராஜா

ஒரு ஊருக்குப் போகாமலேயே அந்த ஊரைப் பற்றி கட்டுரை எழுதுவது அநியாயம் என்பது பாரிஸ் நகருக்கு சென்ற பிறகுதான் உதித்தது. லூயிக்கள் குறித்தும், மேரி ஆண்டொனெட் பட விமர்சனங்களும், புரட்சிப் போராட்டங்கள் விவரணையும், சார்கோசி அரசியலும் எழுதி இருக்கிறேன். அசலூர்க்காரன் அந்தப் பதிவுகளை படித்திருந்தால், ‘Autobiography of a Yogi’ படிப்பது போன்ற அசட்டுத்தனம் கலந்த ஆய்வுரையாக எடுத்துக் கொண்டிருப்பார்.

ஒரிரு வருடங்களாவது அந்தந்த நகரத்தில் தங்க வேண்டும். உள்ளூர் மக்களோடு மக்களாக அன்றாடம் புரளவேண்டும். அவர்களோடு நேர்ந்து ‘அமூர்’ போன்ற பிரென்சு படங்கள் பார்த்து திரைப்பட அறிமுகம் எழுதுவதற்கும், அமிஞ்சிகரையில் இருந்து கொண்டு சொந்த அனுபவத்தை வைத்தும் துணையெழுத்தின் தயவிலும் எழுதுவது சினிமாப் பார்வையாக இல்லாமல் தனிநபர் நனவோடையாக மட்டுமே மிஞ்சி விடுகிறது.

பாரிசின் மூத்திர வாசமும், நதிக்கரைகளில் இரவு பன்னிரெண்டு மணிக்கு அணி திரளும் மக்களுடன் மிதமாக தண்ணியடிக்கும் கொண்டாட்டமும், பூங்காக்களில் படைக்கலன் போல் மிகுதியானவர்கள் வாரநாள் மதியம் படுத்து சூரியக்குளியல் அனுபவிக்கும் மனப்பான்மையும், ராஜாக்களை சிரச்சேதம் செய்ததை வெற்றித் திருவிழாவாக்கும் எண்ணமும் ரிமோட் கண்ட்ரோலிலும் புத்தக வாசிப்பிலும் என்றும் உறிஞ்ச முடியாது.