Tag Archives: Polls

ஜனாதிபதி 2024 – யாருக்கு ஏன் ஓட்டு?

நேற்று சரவணன் கேட்டிருந்த கேள்வி #1 : நீங்க யாரை ஆதரிக்கிறீங்கன்னு புலப்படவே இல்லையே…

முதல் கேள்வி எளிமையான விடையைக் கொண்டது.

என் வாக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத மாநிலத்தில் வசிக்கிறேன். நான் ஹாரிஸுக்கோ டிரம்ப்பிற்கோ வாக்களித்தாலும் – எங்கள் ஊரில் 100% ஜெயிக்கப் போகிறவர் கமலா ஹாரிஸ்.

மாஸசூஸட்ஸ் – முழுக்க முழுக்க டெமொகிரட்ஸ் சார்பு மாகாணம். 60-65 விழுக்காடு ஜனாதிபதியாக கமலாவையே விரும்புகிறார்கள். திரளாக ஆதரவைச் சொல்லிவிடுவார்கள்.
பாஸ்டனில் இரவு எட்டு மணிக்கு வாக்களிப்பு முடியும். அடுத்த நிமிடமே பாஸ்டனில் துணை ஜனாதிபதி, தேர்தலில் வென்றதாக கணித்து முடிவை திட்டவட்டமாகத் தெரிவித்து விடலாம்.
அமெரிக்காவில் இருக்கும் 50 மாநிலங்களில் 42/43 – இந்த மாதிரி ரகம்.

அப்படியானால், நம் வாக்கை உருப்படியாக எப்படி மாற்றுவது?

எனவே, நான் மூன்றாம் கட்சிப் பிரியன். லிபரேடேரியன் (libertarian) – சேஸ் ஆலிவர் (Chase Oliver) நிற்கிறார்.

இவர் ஓரினச்சேர்க்கையாளர். அந்த மாதிரி சமூகக் கொள்கைகளில் டெமொகிராட் போல் தோன்றுவார்.
போர் வேண்டாம் என்கிறார். பொருளாதாரம் தழைக்க கம்மியான சட்டதிட்டங்கள் போதும் என்பார். இதில் ரிபப்ளிகன் போல் தோன்றுவார்.
முக்கிய இரு கட்சிகளுக்கு மாற்று தேவை. எங்களைப் போன்ற சிறு ஆதரவாளர்கள் மட்டுமே மாற்று சக்தியாக, புதிய மக்கள் குரலாக விளங்குவார்கள். அவர்களுக்கு ஐந்து சதவிகிதமாவது வாக்கு விழ வேண்டும்.

தாராளவாதம் எனலாம். முற்போக்கு கட்சி எனலாம். கன்சர்வேடிவ் எண்ணங்கள் கொண்ட பழமைவாத ரிபப்ளிகன் சித்தாந்தத்திற்கு மாற்று – லிபரல் வேட்பாளர்.

இரண்டாம் வினாவிற்கான பதிவு, இன்னும் ஆழமாகச் செல்ல வேண்டியது: ”இந்திய diaspora யாரை ஆதரிக்கிறது ?”

நீங்கள் அமெரிக்காவில் வாக்குரிமை பெற்றவரா? எவருக்கு உங்கள் வாக்கு?

கமலா ஹாரிஸ் என் ஜெயிக்க வேண்டும்?

நேற்றைக்கு டானால்ட் ட்ரம்ப் ஏன் வென்று விடுவார்.

இன்றைக்கு துணை ஜனாதிபதி வென்றால் என்ன நடக்கும்?

1. சட்டவிரோதமாக குடிபுகுந்தோருக்கு மன்னிப்பு; கள்ள்த்தோணியில் பின்வாசல் வழி நுழைந்தோருக்கு வேலைவாய்ப்பு; குறைந்த பட்ச ஊதியத்தில் உழைக்கும் வந்தேறிகளுக்கு குடியுரிமை + வாக்குரிமை சட்டங்கள். பென்சில்வெனியா, நெவாடா, விஸ்கான்சின், மிச்சிகன், வட கரோலினா, ஜியார்ஜியா, அரிசோனா – எல்லாவற்றிலும் டெமோகிராட் வாக்கு 2026ல் இரட்டிப்பாகும்.

2. பொர்த்தோ ரிக்கோ-வும் வாஷிங்டன் டி.சி. (கொலம்பியா மாவட்டமும்) மாகாணங்களாக அமெரிக்காவுக்குள் நுழையும், தற்போதைய ஐம்பது மாவட்டங்கள் 52 ஆக அதிகரிக்கும். டெமோகிரட்சுக்கு நாலு செனேட்டர்கள் ஜாஸ்தி கிடைப்பார்கள்.

3. இரான் நாட்டின் கைவிலங்கும் கால்தளையும் தளர்வுறும். இஸ்ரேல் நாடு கட்டுக்குள் கொணரப்படும். காசா பாலஸ்தீனமாக தனி நாடாக உருவாகும். உக்ரெயின் போர் இன்னும் அமர்க்களமாகத் தொடரும். கமலாவிற்கு அமைதிக்கான நோபல் தரப்படும்.

4. சீனாவின் ஷி ஜின்பிங் தன் பலத்தை பரிசோதிப்பார். வட கொரியாவை தகாத செயலுக்குத் தூண்டுவார். இந்த சோதனை பலபரீட்சையாக தாய்வான் நாட்டிலும் தெற்காசியாவிலும் ரத்தகளறி ஆகும். இந்தியாவையும் இந்த போரின் பாதிப்புகள் தொடும். அகண்ட வங்காளம் அல்லது சுதந்திர மேகாலயா அமையும்.

5. அணு சக்திக்கு ஜே! காற்றாலைகளுக்குப் பச்சைக் கொடி!! சூரிய ஆற்றல் அனைத்து வீடுகளுக்கும் ஆலைகளுக்கும் சென்றடையும் திட்டம். நிலக்கரிச் சுரங்கம் போன்ற புதைபடிம எரிபொருள்கள் முற்றிலும் மூடப்படும். சுத்தமான தூயசக்தி மட்டுமே அமெரிக்காவில் கிடைக்கும். புவி வெப்பமாதல் குறையும்.

6. LGBTQIA+ – தற்பாலினத்தவர், இருபாலீர்ப்பு, மாற்றுப் பாலினத்தவர், ஊடுபால், பால்புதுமையர், அல்பாலீர்ப்பு குறித்த பாடங்கள் மூன்றாம் வகுப்பிலேயே பள்ளிக்கூடத்தில் சொல்லித்தரப்படும். குழந்தைகளின் குழப்பங்களை பெற்றோர் அறியாமல் பார்த்துக் கொள்ளப்படும். மருவிய பால் என நினைப்போருக்கான அறுவை சிகிச்சை ரகசியமாக, இலவசமாக செய்யப்படும்.

7. லிஃப்ட், ஊபர், போல்ட், ஓலா, டோர்டாஷ் போன்ற அலுவல்சாரா பகுதிநேரத் தொழிலாளர்களுக்கு சங்கம் அமைக்கப்படும். டாக்ஸியை அழைப்பதற்கும் ஊபரைக் கூப்பிடுவதற்கும் எந்தப் பெரிய வித்தியாசமும் இல்லாமல் போகும். ஹோட்டல் அறைக்கும் ஏர்பிஎன்பி வீட்டிற்கும் எந்த வித பாகுபாடுகளும் இன்றி ஒரே மாதிரி அனுபவம் ஆகிவிடும்.

8. மருந்துகளின் விலை இன்னும் எகிறும். வீடற்றோருக்கும் நலிந்த சமூகத்திற்கும் சேமநலம் தாராளமாக்கப்படும். அனைவருக்கும் சிகிச்சை; எந்த நோய்க்கும் வைத்தியம் என்பது பணம்படைத்தோருக்கு மட்டுமல்லாமல், சாதாரணருக்கும் சாத்தியமாகும்.

9. ப்ராஜெக்ட் 2025 நிறைவேறாது. எங்கும், எதிலும் அரசாங்கத் தலையீடு; செவ்வாய் செல்லும் ஏவூர்தி, செயற்கை நுண்ணறிவு முதல் வேண்டப்பட்ட குணாதிசய மரபணுவால் அமைக்கப்பட்ட குழந்தைகள் வரை தொழில்நுட்பம் சுதந்திரமாக உலாவரும் சீனா முன்னேறிய நாடாகி விடும்.

10. இதெல்லாம் செய்ய வேண்டும் என ஆசைப்படுவார்; மசோதாக்களும் கொண்டு வருவார்; கொள்கை பரப்பும் செய்வார். ஆனால், காங்கிரசும், செனேட்டும், உச்சநீதிமன்றமும் எதையும் செய்ய விடாது. அரியணையில் பொம்மையாக வீற்றிருப்பார்.

ட்ரம்ப் ஏன் ஜெயித்து விடுவார்?

  1. ஏற்கனவே லோக்சபா (காங்கிரஸ் எனப்படும் ஹவுஸ் ஆஃப் ரெப்ரசேண்டேடிவ்ஸ்) அவரின் கட்சி கைவசம். செனேட் எனப்படும் மேல்சபையிலும் அவர்களே பெரும்பான்மை ஆகப் போகிறார்கள். ஜனாதிபதியும் ரிபப்ளிகன் ஆக இரண்டாண்டுகளாகவது இருக்கட்டும் என மாற்றம் வேண்டுவோரின் வாக்கு விழும்.
  2. வந்தாரை வாழவைக்கும் அமெரிக்கா – இப்பொழுது வந்தேறிகள் மேல் ஆத்திரம் கலந்த கலக்கத்தில் இருக்கிறது. கமலா இந்தியர் – புலம்பெயர்ந்தோர் தானே!? என எண்ணுவோரின் வாக்கு ட்ரம்பிற்குக் கிடைக்கும்.
  3. எங்கே பார்த்தாலும் வாய்க்கால் தகராறு; உலகெங்கும் குட்டி குட்டி சண்டைகள்; உக்ரெயின், இரான், இஸ்ரேல், சூடான், ஜோர்டான், லெபனான் – முடியலடா சாமீ. நிம்மதியா இருக்கணும்னா டொனால்டு வேணும்.
  4. வங்காளத்தில் போர் வேண்டாமா? மேகாலயா தனி நாடாக வேண்டாமா? தய்வான், கொரியா, மியான்மர், மாலி என உலகெங்கும் சின்னச் சின்ன சின்னாபின்னங்கள் உதயமாக வேண்டாம் என நினைக்கும் அமைதிப் பிரியர்களின் ஓட்டு டிரம்பிற்கு விழும்.
  5. பென்சில்வெனியா, நெவாடா, விஸ்கான்சின், மிச்சிகன், வட கரோலினா, ஜியார்ஜியா, அரிசோனா – எல்லாவற்றிலும் ஆண் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ‘என் இனமடா!’ வர்க்க வங்கி.
  6. காசு… பணம்… .துட்டு… மணி… மணி – நான்காண்டுகளுக்கு முன்பு பணவீக்கம் இப்படி கேவலமாக இல்லை. வேலையில்லா நிரந்தர அன்றாடங்காய்ச்சி திரிசங்கு தொங்கல் இல்லை. அப்பொழுது நல்லா இருந்தோம் என நினைக்கும் வெள்ளையினத்தோரின் ஆதரவு.
  7. குழந்தைகளை தகாத இடத்தில் தொடுபவர் பைடன்; எப்ஸ்டெயின் போன்ற மாமாக்களோடு லீலை நடத்தியவர்கள் டெமொகிரட்ஸ்; ஆட்சியில் இருந்தபோதே அராஜகம் செய்தவர் பில் க்ளிண்டன். ட்ரம்ப் அப்படியெல்லாம் அனுமதியில்லாமல் அத்து மீறாத அழகிய அமெரிக்கமகன் என நினைக்கும் பெண்டிர்.
  8. ஐம்பதாண்டுகள் முன்பு கருப்பர்கள் இருந்த நிலை என்ன… பெண்கள் ஒழுங்காக வேலைக்கு போகாமல் வீட்டில் சமைத்து போட்ட காலம் திரும்ப வருமா! நனவோடையில் மூழ்கிய ‘பழைய நெனப்புதான் பேராண்டி’ வாக்காளர்கள்.
  9. ட்ரம்ப் செய்யாத தவறு கிடையாது; மாட்டாத இடம் இல்லை; அவரின் அந்தரஙம் என்று தெரியாத எந்தப் புதிரும் இல்லை. அவர் பொல்லாதவன் + போக்கிரி + பில்லா II வேண்டும் என நினைப்போர்
  10. துணை ஜனாதிபதியாக கடந்த நான்காண்டுகளாக என்னக் கிழித்து விட்டார் கமலா ஹாரிஸ் என கடுப்பானோர்.

கொசுறு: இப்பொழுது இந்தக் கருப்பர் ஜெயித்தால் மிஷேல் ஒபாமா ஜெயிக்க வாய்ப்பு கிட்டாது என நினைக்கும் உள்வட்ட உயர்மட்ட குழு. கிடைக்கிற வரைக்கும் கொடுக்கிற காசை வாங்கி வைத்தால் ஈரண்டு கழித்து அடுத்த தேர்தலுக்கு அன்னை மிஷேலுக்கு உதவுமே!

பார்லர் மூடுவிழா – ஏன்? எதற்கு? எப்படி?

பேச்சுரிமை

அது சடாரென்றுதான் எனக்கு நிகழ்ந்தது. ஒரு வார காலம் அவகாசம் கொடுத்திருப்பார்கள். சொல்வனம் இயங்கும் வோர்ட்பிரெஸ் தளத்தில் என் வலைப்பதிவை வைத்திருந்தேன். அந்த வலைப்பதிவில், ஆங்கிலத்தில் பல இடங்களில் வரும் விஷயங்களை சுட்டு, மறுபதிப்பாக என் தனி வலையாக சேமிப்பது வழக்கம். ஹார்வார்டு பிஸினெஸ் ரிவ்யூ போன்ற புகழ் பெற்ற பத்திரிகைகள், மெக்கின்ஸி போன்ற செல்வாக்கான மேலாண்மை நிறுவன ஆராய்ச்சிகள், நியூ யார்க்கர் போன்ற வெகுஜன பத்திரிகைகளில் வந்த முக்கிய கட்டுரைகள், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற தினசரிகளின் தலையங்கங்கள் – இது போன்று காசு கொடுத்து படிக்க வேண்டிய விஷயங்களை, இலவசமாக விநியோகித்தேன். சும்மா கொடுப்பது போதும்; இனிமேல் எல்லாமே காசு கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் என்று காப்புரிமை குறித்து அப்போது கெடிபிடி அதிகமான காலம். ஆலன் ஷ்வார்ஸ் தற்கொலைக்கு ஓரிரு வருடங்கள் முன்பான நேரம். ஒரே வாரம் கெடு தந்தார்கள். அதன் முடிவில் என் வலையகத்தை முடக்கி, நொடியில் வலையில் இருந்து காணாமல் போக்கிவிட்டார்கள். சிலிக்கான் வேலி நிறுவனங்கள் எல்லாம் எதுவும் செய்யத் துணிந்தவை என்பதை நேரடியாக பாதிப்பின் அடிப்படையில் உணர்ந்தேன். என்னுடன் வாருங்கள் என்று 8சான் (8chan) மாதிரி க்யூஅனான் (QAnon) மாதிரி தனது பைநாகப்பையை சுருட்டிக் கொண்டு கிளம்பும் திருமழிசைப் பெருமாள் போன்ற டொனால்டு டிரம்ப்பும் கிடையாது. நானும் ஆழ்வார் கிடையாது.

கணிகண்ணன் போகின்றான் காமருபூ கச்சி மணிவண்ணா
நீ கிடக்க வேண்டாம் துணிவுடைய செந்நாப்புலவனும்
போகின்றேன் நீயும் உன் பைநாகப் பாயை சுருட்டிக்கொள்

கணிகண்ணன் போக்கொழிந்தான்
காமருபூகச்சி மணிவண்ணா நீ
நிற்க வேண்டாம் துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தான்
நீயும் உன் பைநாகப் பாயில் படுத்துக்கொள்

பார்லர் நிறுவனத்தை முடக்கிய கதை

ஜன.6. – பெரும்பாலோரின் முதல் எதிர்வினை நிம்மதி பெருமூச்சாக இருந்தது. ஜனவரி மாதத்தின் ஆறாம் நாள் அந்த அதிரடிகள் துவங்கின. தன்னுடைய பதவிக்காலத்தில் பதினான்கே பதினான்கு நாள்கள் மட்டுமே டொனால்ட் டிரம்ப் பாக்கி வைத்திருந்தார், ஜனவரி 6 – ஜனாதிபதியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. எண்ணற்ற துஷ்பிரயோகங்கள், பொய்கள் மற்றும் முட்டாள்தனங்களை இனிமேல் அவரால் டிவிட்ட முடியாது. அதன் தொடர்ச்சியாக அவருடைய அடிவருடிகள் கணக்கும் நிறுத்தி நீக்கப்பட்டது. ட்ரம்ப்பின் பல நண்பர்களும் ஆதரவாளர் கணக்குகளும் மூடப்பட்டது. அவர்களின் அவச்சத்தத்தின் முடிவு ஆனந்தமாக இருந்தது. சமாதானத்திற்கான விலை என்பது சுதந்திரப் பேச்சைக் கட்டுப்படுத்துவது என்பது – ஜனநாயக நாடுகளுக்கு தலைகுனிவு.

பேச்சுரிமையின் காவலராக தொழில்நுட்ப நிறுவனங்கள்

ஜனவரி ஏழாம் தேதி ஃபேஸ்புக் நிறுவனம் டொனால்ட் டிரம்ப்பின் கணக்கை காலவரையற்ற நிலுவையில் வைப்பதாக அறிவிக்கிறது. அதற்கு மறுநாள் டிவிட்டர் அவரின் கணக்கை நிரந்தரமாக மூடுகிறது. ஸ்னாப்சாட் சமூக ஊடகமும் வீடியோக்கள் போடும் கூகுள் நிறுவனத்தின் யூடியுப் தளமும் இதே போன்ற தடைகளை ஜனாதிபதி டிரம்ப் மேல் போடுகிறது. டிரம்ப்பை போன்றே செல்வாக்குடன் திகழ்ந்த பல தீவிர வலதுசாரி சார்பாளர்களுக்கும் இதே கதி. அவர்களின் கணக்குகளும் முடக்கப்படுகின்றன.

கூகுள் நிறுவனத்தின் ப்ளே ஸ்டோர் கடையும் ஆப்பிள் நிறுவனத்தில் ஐஃபோன் கடையிலும் இருந்து “பார்லர்” (Parler) நீக்கப்படுகிறது. பார்லர் – வலதுசாரிகளிடம் புகழ்பெற்றது. டிவிட்டர் மாதிரி பார்லரும் ஒரு சமூக ஊடகம். ஆனால், ட்விட்டரை விட அளவில் மிகச் சிறியது. டிவிட்டர் பயனர்கள் மொத்தம் 32 கோடி; பார்லர் மூடியபோது, அதன் பயனர்கள் எண்ணிக்கை மொத்தம் 23 லட்சம். ட்விட்டரை விட்டு நீக்கப்பட்டவர்கள் பார்லருக்கு சென்று கடையைத் துவங்கினர். வலதுசாரிகளுக்கு தங்களின் கருத்துகளையும் சித்தாந்தங்களையும் ஆக்ரோஷமாக முன்வைக்க பார்லர் உதவியது. கூகிள் கடையும் ஆப்பிள் செல்பேசி கடையும் நீக்குவதனால் – இனிமேல் எந்தப் புதிய நபராலும் பார்லர் நிரலியை தரவிறக்க முடியாது. எனினும், இதற்கு சந்து பொந்து ஓட்டைகள் இருந்தன.

A screenshot included in Amazon’s letter to Parler

இந்த நிலையில் அமேசான் நிறுவனம் பார்லருக்கு மரண அடி கொடுத்தது. பார்லர் செயலி இயங்குவதற்கு ஆதாரமாக இருப்பது அமேசான் வெப் செர்வீசஸ் எனப்படும் ஏ.டபிள்யு.எஸ் (AWS). அந்த வசதிகள் நிறுத்தப்படும் என்று அமெசான் ஒரு நாள் கெடு கொடுத்து, அடுத்த நாளே பார்லரை செயலிழக்க வைக்கிறது.

வெறியாட்டத்தைத் தூண்டிய மந்தை கும்பல் இவர்கள், என்று பார்த்தால் நிச்சயமாக இது ஏற்றுக்கொள்ளத்தக்கது. அமேசானும் கூகுளும் ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் தனியார் நிறுவனங்கள்; எனவே, தங்களின் வசதிக்கேற்ப, தங்களின் சுயவிருப்பத்திற்கேற்ப – என்ன வேண்டுமோ அதைச் செய்யும். நாம் எல்லோரும், ஒரு நிரலியையோ செயலியையோ தரவிறக்கும்போதும், உபயோகிக்கும் போதும், “உரிமைதுறப்பு” என்பதை ஒப்புகொண்டு, அந்தந்த பெருநிறுவனங்களின் விருப்பத்திற்கேற்ப கட்டுப்படுவோம் என்பதை ஒப்புக் கொள்கிறோம். அதிபர் டிரம்ப் கொஞ்சம் எசகுபிசகாக டிவிட்டுகிறார். அவரின் நிலைத்தகவலைக் கேட்டோர் கொதித்தெழுகின்றனர். கிளர்ச்சியில் ஈடுபடுகின்றனர். எனவே, பார்லர் நிரலியை நாங்கள் வழங்கமாட்டோம் என முடிவெடுத்ததாக அமேசான் கடிதம் போடுகிறது.

ஆனால், இன்றைய அளவிலும் அயொத்தொல்லா அலி கொமேனி டிவிட்டரில் இயங்குகிறார். டொனால்டு டிரம்ப்பை போல் அறச்சீற்றம் எல்லாம் கொள்ள தன் ஆதரவாளர்களை அவர் தூண்டவில்லை. 8,815,000த்துக்கும் மேற்பட்ட தன் சீடர்களுக்கு, ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி நேரடியாக “இன்னாரை தீர்த்துக் கட்டு” என்று ஃபாத்வா கொலை உத்தரவை இன்றளவும் விடுத்துக் கொண்டே இருக்கிறார். அவர் ட்விட்டரில் தான் இன்னும் இருக்கிறார். அந்த மாதிரி வெளிப்படையான வெறித்தாக்குதல் அழைப்புக்கும் மறைமுகமாகத் தூண்டி விடுவதற்கும் உள்ள வேறுபாடு கூட சமூக மிடையக் காவலர்களுக்குத் தெரியவில்லையா?

Supporters listen as President Trump speaks during a Save America Rally near the White House on January 6—not long before a pro-Trump mob stormed the Capitol Building

இணையம் எவ்வாறு இயங்குகிறது?

இதற்கு வலை எவ்வாறு, எவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.

உங்களின் வலை செயல்பாட்டிற்கும், வலையகம் இயக்குவதற்கும் “ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்பாட்டுக் கொள்கை” (acceptable use policy) என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். சேவை விதிமுறைகள் (terms of service) என்பது கட்டுப்பாடுகளும் சட்ட திட்டங்களும் கொண்டவை. அவை தேசங்களுக்கேற்ப மாறும். ஆனால், “ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்பாட்டுக் கொள்கை” என்பது நிறுவனங்களுக்கு நடுவே நிலவும் பரஸ்பர புரிதல்.

இது எப்பொழுது, எப்படி நடைமுறைக்கு வந்தது?

தொண்ணூறுகளில் எரிதம் (spam) அஞ்சல்கள் தலைவிரித்தாடியது. சாதரண மக்களால் அனுப்பப்படும் மின்னஞ்சல்கள், மொத்த வலையையும் ஸ்தம்பிக்க வைத்தது. வணிக நிறுவனங்களால் தங்களின் குறைந்த பட்ச சேவையைக் கூட வழங்க இயலாதவாறு எரிதங்கள் ஆக்கிரமித்தன. அப்பொழுது இந்த அடாவடியை அடக்க அடாவடியான அணுகுமுறை, பல்வேறு சேவை வழங்குநர்களால் (ISPs) ஒப்புக்கொள்ளப்பட்டன.

இதற்கெல்லாம் கண்ணாமூச்சி காட்டி மாற்றுப் பாதையில் பயணிக்க பிறிதொரு மார்க்கம் இல்லையா?

இருக்கிறது. அது ருஷிய வழி. டி-டாஸ் காவலர் (DDoS-Guard) என்னும் பேரில் தீவிரவாத ஹமாஸ் முதற்கொண்டு எல்லா பாதகர்களுக்கும் வலைச்சேவை வழங்குகிறார்கள். மற்ற நாடுகளின் சட்டங்களையும் சாதாரண தயவு தாட்சண்யங்களும் பாராமல் வெறுப்பையும் வன்மத்தையும் பஞ்சமா பாதகத்தையும் பரப்புவதற்கு பாதை அமைத்துக் கொடுக்கிறார்கள்.

அதிருக்கட்டும். இந்தியாவில் ஒரு இணையம். சீனாவில் இன்னொரு இணையம். இதெல்லாம் எப்படி சாத்தியம்?

இணையம் என்பது கூட்டாட்சி. இந்தியாவில் அது ஜியோ, பி.எஸ்.என்.எல்., ஏர்டெல். அமெரிக்காவில் அது ஏடி அண்ட் டி, வெரைசான், ஸ்ப்ரிண்ட், டி – மொபைல். ஜெர்மனியில் டாயிச் டெலிகாம்.

People associated with far-right online movements such as QAnon breached the Capitol on Wednesday

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதலாளிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டு இயங்குகிறார்களா?

கிளவுட்-கம்ப்யூட்டிங் சேவைகள் உட்பட இணையத்தின் உள்கட்டமைப்பு நடுநிலையாக இருக்க வேண்டும். பிளவுபடுத்தும் பாகுபாடான போர்களில் இழுக்கப்பட்டாலும் நாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரே மாதிரியான முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த முடிவுகளை எவர் எடுக்கிறார்கள்? தொழில்நுட்ப நிறுவனங்களின் கையில் இந்த சாவி இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்படாத மற்றும் கணக்கிட முடியாத சில நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் இவை இருக்கின்றன.

தங்களை மேய்க்கப்போகும் எல்லா செயற்குழுக்களையும் டெமோகிராட் கட்சி கையில் எடுத்து விட்டது என்பதை FAAMG எனப்படும் ஃபேஸ்புக், ஆப்பிள், அமேசான், மைக்ரோசாஃப்ட், கூகிள் உணர்கிறது. ஜியார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகளும் வந்துவிட்டன. இனிமேல் தங்களின் குடுமி ரிபப்ளிகன் கட்சியிடம் இல்லை. டொனால்ட் டிரம்ப்பும் அவரின் ரிபப்ளிகன் கட்சியும் எந்த முடிவும் எடுக்கப் போவதில்லை என்பதைப் புரிந்து கொள்கிறார்கள்.

டெமோகிரட் பெரும்பான்மை. ஜனாதிபதி ஜோ பைடன்; செனேட் பெரும்பான்மைக்கு துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்; ஹவுஸ் ஆஃப் ரெப்ரசெண்டேடிவ்ஸ் எனப்படும் காங்கிரசிலும் ஜனநாயகக் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை செய்து நிறைவேற்றி விட்டார்கள். இந்த சிலிகான் வாலி பெருநிறுவனங்களில் வேலை பார்ப்போரின் 95% தேர்தல் காணிக்கைகள் ஜோ பைடனுக்கு சென்றுள்ளது. (பார்க்க: Silicon Valley Opens Its Wallet for Joe Biden | WIRED). பார்லர் பெரு முதலையாக இருந்தால், இந்த மாதிரி, “எடுத்தோமா… கவிழ்த்தோமா” என்னும் மூடுவேலை சாத்தியமேயில்லை.

கீழேக் காணும் ட்விட்டை போட்டவர் ஜெனிஃபர் பால்மியெரி (Jennifer Palmieri). இவர் க்ளிண்டன் ஆதரவாளர்.

இதனால் கூகிள் நிறுவனம், சில பல சில்லறையாக சிதற வேண்டாம். ஆப்பிள் எத்தனை காசுக்கு வேண்டுமானாலும் ஐஃபோனை விற்றுக் கொள்ளலாம். அமேசான் வருமான வரியை அதிக அளவில் கட்ட வேண்டாம்.

இன்று ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் சிலிகான் வேலி நிறுவனங்கள், நாளைக்கே குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்றால், அவர்களின் துதி பாடி, இன்னொரு ஆட்சி சொல்வதை சிரமேற்கொண்டு இரும்புக்கரத்தினால் இன்னொருவரை அடக்கும் என்பதில் எவருக்கும் துளிக் கூட ஐயமிருக்கக் கூடாது. ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், “தனியார் நிறுவனங்கள் பேச்சு விதிகளை தீர்மானிக்கக்கூடாது.” என்றார். ருஷியாவைல் வெளியேறிய அதிருப்தியாளரான அலெக்ஸீ நவல்னி (Alexei Navalny), “இந்தத் தணிக்கை ஏற்றுக்கொள்ள முடியாத செயல்” என்று தன் கண்டனத்தைப் பதிவு செய்தார். இவ்வளவு ஏன்!? ட்விட்டர் நிறுவனத் தலைவரான, ஜாக் டார்சி கூட “ஆபத்தான முன்மாதிரி” என வருந்தியிருக்கிறார்.

List of most-downloaded apps on Apple Store, Jan. 8, 2021

வருங்காலத்திற்கான சில தீர்வுகள்

  1. ஒரு சில நிறுவனங்களே இப்போது எவர் பேசலாம், எதைப் பேசலாம், எவ்வளவு பேசலாம், எப்படி பேசலாம் என்பதை முடிவு செய்கின்றன. இந்த நிலை மாற விதவிதமான விளம்பரம் சார்ந்த, விளம்பரங்கள் சாராத வணிக அமைப்புகள் வரவேண்டும்.
  2. வைரல் ஆவது என்பது இன்றைய நிலையில் எல்லோருக்கும் முக்கியமாக அமைந்திருக்கிறது. விற்கிறதோ இல்லையோ – எல்லாவிதமான நூல்களும் அச்சிடப்பட்டது ஒரு காலம். அது போல், பரவலாக பல்லாயிரம் பேரைச் சென்றடையாவிட்டாலும் முக்கியமான விஷயங்களை முன்னிறுத்துவது எப்படி என்று யோசிக்க வேண்டும்.
  3. எதை தணிக்கை செய்வது என்பது குறித்து பல்வேறு சிந்தனையாளர்களிடமிருந்து கருத்துக்களைப் பெறவேண்டும்.
  4. சில ஸ்டேட்டஸ் தகவலுக்கு அடியில் “இது உண்மை அல்ல.” என்பது போன்ற எச்சரிகைகள், கொட்டை எழுத்தில் போட வேண்டும்.
  5. எந்த விதமான நடவடிக்கை எடுக்கப் படுகிறதோ, அது வெளிப்படையாகவும் கணிக்கக்கூடியதாகவும் அமையவேண்டும்.
  6. கடினமான தீர்ப்புகளை பாதிக்கப்பட்ட மக்கள், மறு முறையீடு செய்வதற்கான உரிமையை வழங்கும் சுயாதீனமான சட்டரீதியான வாரியங்கள் அமைய வேண்டும்.
  7. உகாண்டாவில் தன் நிரலி கிடைக்காது என்பதற்காக, நாட்டிற்கேற்ப வளைந்து கொடுக்காத சுதந்திர செயலிகள் இயங்க வேண்டும்.
  8. இன்றைக்கு சரியெனப் படுவது நாளைக்கு தவறாக இருக்கும். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் பனிரெண்டு வயதில் மணமுடித்து, 13ல் குழந்தை பெறுவது சகஜமாக இருந்தது. அது போல், காலத்திற்கேற்பவும் வளர்ச்சிக்கேற்பவும் மாறும் சட்டதிட்டங்களை சமூகங்களும் பிரஜைகளும் உருவாக்க வேண்டும். விற்பனையைக் குறிக்கோள் வைக்கும் நிறுவனங்கள் கையில் இந்த முடிவுகள் இருக்கக் கூடாது.
  9. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு சட்டதிட்டங்கள் இருக்கின்றன. இழிமொழியை கதையில் வரும் கதாபாத்திரம், அந்தச் சூழலுக்கேற்ப பயன்படுத்தலாம். அது ஒப்புக்கொள்ளக் கூடியதே. அதே வெறுப்பு மொழியை டிவிட்டரில் பயன்படுத்த முடியாது. இது சுதந்திர நாட்டிற்கும் கொடுங்கோல் ஆட்சி நடக்கும் பிரதேசத்திற்கும் இடையே வேறுபடும். சீனர்களுக்கு ஒரு சட்டம், அமெரிக்கர்களுக்கு ஒரு சட்டம் என்று பிரிவுபடுத்தாத உலகளாவிய ஒரு நோக்கு வரவேண்டும்.

அமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்

எதிர்பார்க்காமல் அது நிகழ்ந்தது. மாலன் சார் பாரிந்துரைத்ததாக சிங்கை மீடியாகார்ப் அணுகினார்கள்.

ஒரு சவுண்ட் பைட் வேண்டும் என்றார்கள். முன்பின்னே கொடுத்ததில்லை. அனுபவம் கிடையாது என்றேன்.

சரி… அழைத்துப் பேசுகிறோம். அதன் பின் வெட்டி எடுத்துக் கொள்கிறோம் என்று சம்மதித்தார்கள்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினோம்.

–  சமூக ஊடகங்களில் எவ்வாறு இளைஞர்கள் வீழ்ந்து, அமிழ்ந்து, கலந்திருக்கிறார்கள் என்றும்

–  அமெரிக்கத் தேர்தலில் ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் இன்ஸ்டாகிராமும் யூடியூபும் ஆக்கிரமித்திருக்கிறது என்றும்

–  தேர்தலுக்கு முன் நடந்த ஆர்ப்பாட்ட ஒத்திகைகள் எவ்வாறு அரங்கேறின என்றும்

அது கொஞ்சம் தன்னம்பிக்கையை அதிகரித்து, பாட்காஸ்டிங் துவங்கலாமா, நாமும் பொக்கிஷம் டிவி விக்கி ஆகிவிடலாமா என்று ஆசை கொடுத்தது.

அதன்பின் வழக்கம் போல் காலை எழுந்ததும் கட்டஞ்சாயா, அதன் பின் நாள் முழுதும் அலுவல் சந்திப்பில் கேமிராவைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே பேசுவது என்று பழைய வழக்கமான வாழ்க்கைத் தொடர்ந்தது.

தேர்தல் நாளில் திடீரென்று வாட்ஸப் அழைப்புகள் பறக்க ஆரம்பித்தன. எல்லாமே சடாரென்று நடந்தது. நியூஸ் 18 நேரலையில் டொனால்டு டிரம்ப் குறித்தும், வாக்களிப்பு குறித்தும், ஜோ பைடன் குறித்தும், கமலா ஹாரிஸ் குறித்தும், அமெரிக்காவின் இந்தியக் கொள்கை குறித்தும் நிறையப் பேசினேன். ஆசைதீருமளவு வாய் வலிக்குமளவு கருத்துகளை அள்ளிக் கொட்டினேன்.

பின் இரவு ஒரு மணி அளவில் உத்தரவு வாங்கிக் கொண்டேன். தீபாவளிக்கு முந்தின இரவு வெடி வெடிப்போம். எல்லாரும் தூங்கிய பிறகு… அனைத்து வெடிச்சத்தமும் அடங்கிய பிறகு… கடைசி வெடியைப் போடுவோம். சொல்லப் போனால் தூங்காமலேயே, முன்றரை மணிக்கு மீண்டும் வெடியைத் துவங்கி விடுவோம்.

அன்றும் அப்படித்தான். news18 முடிந்ததும் சன் தொலைக்காட்சியில் துவங்கினார்கள். சிவராத்திரியே தான்!

அரைத்த மாவையே அரைத்தேன். காட்டமான எண்ணங்களைச் சொல்வது; அதன் பின் எதிர்த் தரப்பிற்கும் சற்றே வக்காலத்து வாங்குவது. வழவழா கொழகொழா ஆக முத்தாய்ப்பு வைத்து முடிப்பது – இப்படியே த் தொடர்ந்தேன்.

அந்த உலகம் அவசரமும் சுவாரசியமும் பரபரப்பும் நிறைந்த உலகம். எவரோ நுழைகிறார்கள். ஸ்கைப் அழைப்பில் நேரடி ஒலிபரப்பைப் பார்க்கும் போதே, “சற்றுமுன்” என்று மாறிவிடுகிறார்கள். அந்தத் தொலைக்காட்சியில் ஆளுங்கட்சிக்கு ப்ரேக்கிங் நியுஸ்; இந்தத் தொலைக்காட்சியில் கொரோனா நோய் பீடிப்பில் இறந்தவர்களின் கணக்கு – நடுவில் நானும் ஃபாக்ஸ் டிவி (ரிபப்ளிகன் சார்பு), எம் எஸ் என்பிசி (டெமொகிராட்ஸ் ஆதரவு), பி.பி.எஸ். (தூர்தர்ஷன் மாதிரி) எல்லாம் மாற்றி மாற்றி பார்க்கிறேன்.

காபி துளிக் கூட அருந்தாமலே மூளை சுறுசுறுப்பாக இருந்தது. சாந்தோம் பள்ளி மாணவர்கள் எனக்கு செய்திச் சுருக்கங்களை நறுக் நறுக்கெனக் கொடுத்துக் கொண்டிருந்தது வெகு உதவியாக இருந்தது.

நியூஸ் பதினெட்டு கன்னலில் எட்வர்ட் சார் கூடவும் ஜூனியர் விகடன் காலத்தில் இருந்து வாசித்தும் எஸ். ராமகிருஷ்ணன் வந்திருந்தபோது நியூ ஜெர்சியில் வைத்து சந்திக்கவும் செய்த பிரகாஷ் எம் ஸ்வாமி கூடவும் நேரலையில் பேசியது அளவொண்ணா மகிழ்ச்சியைத் தந்தது.

அமெரிக்காவில் அடிக்கடி தேர்தலும் வாக்குப் பதிவும் நடந்தால் எனக்கு வாழ்க்கை விறுவிறுப்பாக இருக்கும். மிட்ச் மெக்கானல் உடனோ ஜான் ராபர்ட்ஸ் கூடவோ பேசி நடத்தி விட வேண்டும்.

போதையில் இருந்து மீண்டு கொண்டிருக்கும்,

பாபா

யாருக்கு வாக்களிப்பது? பத்திரிகைகளின் பரிந்துரை

இந்தியன் எக்ஸ்பிரெஸ், தினமணி, ஹிந்து போன்ற பத்திரிகைகள், தலையங்கங்கள் வெளியிடும். தேர்தல் நாளன்று வாக்கு சாவடிக்கு சென்று வரிசையில் காத்திருந்து அவசியம் வாக்களிக்க சொல்லும். ஆனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சொல்லமாட்டார்கள்.

இங்கே ‘இவருக்கு வாக்களியுங்கள்’ என்று வெளிப்படையாக சொல்லிவிடுகிறார்கள். உள்ளூர் கவுன்சில் தேர்தலில் துவங்கி, அமெரிக்க ஜனாதிபதி வரை எல்லோருக்குமே பரிந்துரை வழங்குகிறார்கள். நாளிதழ்கள் ஆதரவு தருபவர்கள்தான் ஜெயிப்பார்கள் என்பது நிச்சயமில்லை. ஆனால், மதில் மேல் பூனைகளை ஒரு பக்கமாக சாய்க்க, இந்த பத்திரிகை பரிந்துரை உதவுகிறது.

பெரிய அதிபர் தேர்தல்களில் இன்ன பத்திரிகை இன்ன கட்சி ஆளை தேர்ந்தெடுக்கும் என்பதை கணித்து விட முடிகிறது. ஆனால், உள்கட்சி தேர்தல்களிலும், எம்.எல்.சி. போட்டிகளிலும் யாரை சொல்வார்கள் என்பதை வாசகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்குகிறார்கள்.

இதிலும் மேலிடத்து ஊடுருவல் இருக்கிறது. பதிப்பாளருக்கு ஒருவரைப் பிடித்திருக்கிறது. ஆசிரியருக்கு இன்னொருவரைப் பிடிக்கிறது. நிருபர்கள் மூன்றாமவரை விரும்புகிறார்கள். எடிட்டரை விடுமுறையில் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, சந்தடி வெளியே தெரியாமல், சந்தில் தன்னுடைய விருப்பமான வேட்பாளரை ஆதரித்து தலையங்கம் வெளியிடுகிறார்கள் பத்திரிகை முதலாளிகள்.

நியு யார்க் மேயருக்கு டைம்ஸ் யாரை தேர்ந்தெடுக்கும் என்பது குறித்த கட்டுரை.

தமிழ்நாடு 2014 தேர்தலும் சினிமா நடிகர்களும்

சினிமாவிற்குப் போனால் ஹீரோ துதி பாட வேண்டும். அரசியலுக்குப் போனால் மேடைதோறும் பிரச்சாரம் செய்ய வேண்டும். படைப்பாளியாக இருப்பவர் இவற்றையெல்லாம் பின்பற்றாத விடிவெள்ளி. சிந்தனையாளராக இருப்பவர் கட்சி சார்பற்று, கொள்கை வெறியற்று, கட்டுப்பாடுகளற்று மாற்றுக் கருத்துகளை முன்வைக்கக் கூடியவர். அற்ப பணத்திற்காகவும் பின்னால் கிடைக்கப் போகும் பதவிக்காகவும் வாய் மூடி, கை பொத்தி, அடங்கிப் போகாதவர்.

விடுதலை சிறுத்தைக்கு ரவிக்குமார் இருக்கிறார். திமுக-விற்கு மனுஷ்யபுத்திரன். ஆம் ஆத்மி-க்கு ஞாநி. முக அழகிரிக்கு ரஜினி இருக்கிறார்.

இந்தியத் தேர்தல்: தேவையான மாற்றங்கள்

இந்தியத் தேர்தல் முறை காலத்திற்கேற்ப மாறலாம். தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவராக இருப்பது தவறு; பிரதம மந்திரி வேட்பாளரை அறிவிப்பது இழுக்கு என்று சாடுவது எல்லாம் தனி காமெடி. அதை விட்டுவிடலாம்.

வாக்களிப்பு முடிய 48 மணி நேரம் இருக்கிறபோது பிரச்சாரத்தை முடிப்பது விநோதமான அந்தக் கால வழக்கம். தொலைக்காட்சி, இணையம், தொலைபேசி போன்ற தொடர்பு சாதனங்கள் இல்லாத தரைவழி அஞ்சல் மட்டுமே உள்ள காலத்திற்கு ஏற்ற வழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். ஃபேஸ்புக்கில் பிரச்சாரம், குறுஞ்செய்தியில் தகவல், கட்சி டிவியில் விளம்பரம் என்றான பிறகு கடைசி நிமிட பொதுக்கூட்டத்திற்கு மட்டும் தடை போடுவதை விட்டு விடலாம்.

தேர்தல் நாளன்று விடுமுறை அளிப்பது அடுத்த ஹைதர் அலி கால பழக்கம். எந்த ஊரில் இருக்கிறோமோ, அந்த ஊரில் வாக்களிக்க வசதி செய்ய வேண்டும். பெங்களூரில் படிக்கிறோமா… அங்கேயே வாக்களியுங்கள். பம்பாயில் பணிபுரிகிறீர்களா… அங்கேயே வோட்டுப் போடுங்கள். சொந்த ஊருக்கு பஸ் பிடித்து, அந்தத் தொகுதியில் யார் நிற்கிறார் என்று சாதி பார்த்து, கட்சி பார்த்து வாக்களிப்பதை விட, வசிக்கும் இடத்திற்குப் பொருத்தமான வாக்காளரைத் தேர்ந்தெடுப்பது காலத்திற்கேற்ற நடைமுறை.

வாக்களிப்பது என்பது சலுகை அல்ல. கடமை. வாக்குப் போடுவதை உரிமையாக நினைப்பவர்கள் வேலை நாளன்றும் வாக்களிப்பார்கள். வாக்களிப்பதை சிறப்பு தள்ளுபடியாக நினைப்பவர்களுக்குத்தான் லீவு கொடுக்க வேண்டும். மாலையில் எட்டு மணி வரை வாக்குப் போடும் நேரத்தை நீட்டிக்கலாம். மதிய உணவிற்கு செல்வது போல், ஊழிய நாளின் நடுவே வாக்குச்சாவடிக்கு சென்று வரலாம். தேர்தல் நாளுக்காக அரசு விடுமுறை விடுவது சோம்பேறித்தனத்தின் உச்ச எடுத்துக்காட்டு.

கடைசியாக வாக்குப் போடும் போது பிறர் பார்க்க, தன் வாக்கை செலுத்துவது. இதுவும் ஒன்றும் கொலைக் குற்றமல்ல. குழந்தைகளை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று, எவ்வாறு வாக்களிப்பது, எந்த பொத்தானை அழுத்துவது என செயல்முறை விளக்கம் செய்ய உதவலாம். என்னைப் போன்ற சந்தேகப் பிராணிகளுக்கு இறுதி கட்ட சோதனையாக, இந்த இன்னொருவரின் துணை உதவலாம். ரகசிய காப்பு விதிமுறை மீறல் எல்லாம் பத்தாம்பசலித்தனத்தின் வெளிப்பாடு.

இவ்வளவும் மாறினால் கூட என்ன… ஒரு மண்டலம் கூட பொறுப்பு வகிக்க திறனில்லாதவர்கள் கூட பிரதம மனிதிரியாகப் போட்டியிடும் சுதந்திர நாடாக இருப்பது மகிழ்ச்சியான கொண்டாட்டம்

Pain vs. Hope: Fears vs. Dreams: Public Elections x Personal Decisions

பயத்திற்கும் நம்பிக்கைக்கும் நடுவே தேர்தல் நடக்கிறது.

அச்சமூட்டுவது எப்படி?

‘அன்னியர் இத்தாலியர் இந்தியப் பிரதமர் ஆகலாமா?’ – சோனியா காந்தியை பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கிறது. ‘மோடி மட்டும் பி.எம். ஆனால், மொத்த பாரதமும் பாகிஸ்தான் மாதிரி ஆகிவிடும்!’ – சந்தேகப் புகையை கிளப்பி துன்பப் பாதையை காட்டுகிறார் ஷிண்டே.

நம்பிக்கையை விற்பது எப்படி?

நான்காண்டுகளுக்கு முந்தைய அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஒபாமா எல்லோருக்கும் தெரிந்த உதாரணம். வாஜ்பேயி ‘இந்தியா ஓளிர்கிறது’ என்றார்; தோற்றார். ‘நிலையான அரசாங்கம்’ என்பதை இந்திரா காங்கிரஸ் முன்வைத்து வி.பி. சிங் + தேவி லால் – சந்திரசேகர் ஜனதாவை வென்றது.

உலகின் எல்லா தேர்தல்களிலும் பீதிக்கு எதிராக ஆசை வார்த்தை போட்டியிடுகிறது.

என்னிடம் சிக்ஸர் அடிக்க விருப்பமா அல்லது விக்கெட் விழாமல் இருக்க விருப்பமா என்று கேட்டால், எளிதாக விடை சொல்லி விடுவேன். ஒவ்வொரு பந்தையும் தூக்கி அடிப்பேன். ஆனால், விக்கெட்டிற்கு பதில் விரை என்று மாற்றினால், சிக்சர் பக்கமே செல்ல மாட்டேன்.

Obama 2nd Term start: State of the Union 2013

நேற்று ஒபாமா பேசினார்.

பிடித்த தலைவர்களின் பிடித்தமான கொள்கைகளை கேட்பது சுகம். அவை நிறைவேறாவிட்டாலும் கூட கேட்பது சுகம். நாளைக்கு எழுந்தால் இவற்றுக்கு எல்லாம் பலமான முட்டுக்கட்டை விழும் என்று அறிந்திருந்தாலும், தலைவரின் உணர்ச்சிகரமான உரையின் சாத்தியக்கூறுகளையும் வருங்காலம் குறித்த கனவுகளுக்காகவும் நேரலையில் பார்ப்பது சுகம்.

கூடை கவிழ்த்த மாதிரி சிகை அலங்காரத்துடன் மிஷேல் ஒபாமா. அவருக்கு ஒரு புறம் இறந்த காலம். இன்னொரு புறம் நம்பிக்கை காலம். பதினைந்து வயது மகளை தெருச்சண்டை துப்பாக்கிச் சூட்டிற்கு பலி கொடுத்தவர் ஒரு பக்கம் அமர்ந்திருந்தார். மின்ரத்து ஆன புயல் இரவில் பதினைந்து சிசுக்களை காப்பாற்றி கரை சேர்த்த செவிலி இன்னொரு புறம் அமர்ந்திருந்தார்.

ஒபாமா பேசியதில் பிடித்த மேற்கோள்கள்:

* கென்னடி சொன்னதாக, “சட்டசபைக்கு வருவது போட்டி போட்டு ஆட்சியைப் பிடிப்பதற்காக அல்ல; முன்னேற்றத்திற்காக கை கோர்ப்பதற்காகத்தான் அரியணை போட்டி.”

* ’நிறைவேற்ற இயலாத புதிய புதிய வாக்குறுதிகளை அரசாங்கம் கொடுக்க வேண்டாம்; ஆனால், ஏற்கனவே உறுதியளித்த சத்தியங்களைக் காப்பாற்ற வேண்டும்’

* ‘கட்டற்ற குண்டுகளை கட்டுப்படுத்தும் சட்டத்திற்கான உங்கள் வாக்குகளை நியூ டவுன் சிறார்கள், உங்கள் கடமையாக ஆக்கியிருக்கிறார்கள். ஏகே47 துப்பாக்கிகளால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோர் வாக்குரிமை கேட்கிறார்கள்.’

இவ்வளவு பேசினாலும், செயலாற்றாத காங்கிரசில்தான் சூட்சுமம் இருக்கிறது. அனைவருக்கும் குறைந்த பட்ச சம்பளத்தை உயர்த்தினால் பொருளாதார தடுமாற்றம் நிறைந்த சூழலில் பணவீக்கமும் பெருகும் என்பதை குடியரசு கட்சி அல்ல… ஒபாமாவின் டெமோகிரட்ஸே அறிவார்கள்.

நினைப்பது நல்லதுதான்; ஆனால், நடக்கவேண்டியது என்ன?