Tag Archives: NETS

‘பாரதி யார்’ @ பாஸ்டன்

பாரதி யார் நாடகம் முடிந்தவுடன் இதை எழுதியிருக்க வேண்டும்!
அமரன் படத்தில் ‘அச்சமில்லை! அச்சமில்லை!!’ பார்த்த பிறகாவது பகிர்ந்திருக்க வேண்டும்!!
டிச. 11 பிறந்த தினத்திற்காகவாது முடித்திருக்க வேண்டும்.

மனதிலேயே இருப்பதை எப்படி முகநூலிற்கான கவர்ச்சிகரமான பதிவாக்குவது?

அமெரிக்காவில் வசிக்கும் முக்கால்வாசி (நான்கில் மூன்று) பேர் தங்கள் மழலைச் செல்வங்கள் பங்கேற்காவிட்டால் பார்க்க வர மாட்டார்கள் என்னும் அங்கலாய்ப்பு எழக்கூடாது.
பாரதியார் பற்றித்தான் எல்லாம் தெரியுமே என்று பாக்கி 25% சதவிகிதத்தினர் ‘பாரதி சின்னப் பயல்’ ஆக தங்களை எண்ணுகிறார்கள் என்னும் விமர்சனம் சொல்லக்கூடாது.
ஞாயிறு பின் மதிய வேளையில் – சாப்பிட்டோமா… தூங்கினோமா! என்று ஓய்வு வேளையில் இந்த அரங்கப் புயலைக் கொணர்ந்தோம் என்னும் ஏற்பாட்டு புலம்பல்களைப் பகிரக் கூடாது.

இதை எழுதுவதால் பாஸ்டன் தமிழர் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு வரமாட்டார்கள் என்னும் முன் முடிவு.
நியு இங்கிலாந்து தமிழ்ச்சங்கமோ; தமிழ் மக்கள் மன்றமோ; மாஸசூஸட்ஸ் தமிழ் அமைப்புகளோ; தமிழ்ப் பள்ளிகளோ; சிஷு பாரதி ஆசிரியர்களோ – எல்லோருமே ‘நல்லா நடக்கட்டும்!’ என வாழ்த்தினார்களே தவிர, நுழைவ்வுச்சீட்டையோ, தங்கள் நண்பர்களையோ, குடும்பத்தினரையோ முடுக்கிவிட்டு அலைகடலென திரளாமல் ஐபிடிவி.யில் அரதப் பழசான ‘கயல்’, ‘இdli சட்னி காபி’ என்று நெடுந்தொடர் பிக் பாஸாக உதாசீனாம் செய்தது பின் விளைவு.

புலம்பல் போதும்.

இரமணன் வந்தார்; Isaikkavi Ramanan
நியூ ஜெர்சி தமிழர்கள் அரங்கேறி ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ் என துணை நின்றார்கள்.
தமிழ் மக்கள் மன்ற அறங்காவலர்களும் அமைப்பாளர்களும் நிகழ்ச்சிக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை கரம் பற்றி கூட நடந்தார்கள்.

நன்றி டி.எம்.எம். Tamil Makkal Mandram, USA
பாரதியை எங்களுடன் கர்ஜிக்கவிட்ட இசைக்கவிக்கு நன்றி.
பிராட்வே அரங்கை உருவாக்கிய எஸ்.பி. கிரியேஷன்சுக்கு நன்றி. SB Creations / Raman Sbs
அவரை பாஸ்டனுக்கு அழைத்து நாடக நடிகர்களை உபசரித்து என் தொல்லைகளைப் பொறுத்துக் கொண்ட ரமணனின் மகன் ஆனந்திற்கு அவர் குடும்பத்திற்கும் கோடானுகோடி நன்றி.

சரி…. நாடகம் எப்படி?

இரமணன் எழுதிவிட்டார்.
இணையத்திலும் கிடைக்கிறது.

அந்த நிகழ்வு முடிந்தவுடன், நம்மவர், என்னிடம் கேட்ட கேள்வி: “வீடியோ கிடைக்குமா?”

இந்த மாதிரி கொண்டாட்டம் எல்லாம் மனதிற்கு விரும்பியவர்களுடன் நேரில் பார்த்து ரசிக்க வேண்டிய நிகழ்ச்சி.
தமிழர்கள் எதையும் திருட்டி விசிவி-யில் பார்த்து ரசிப்பவர்கள்.
அவர்களுக்கு இந்த மனநிலை வாய்க்குமா!
அந்த அரங்கிற்குள் பாராதியார் காலத்திற்கு சென்றிருப்பார்களா!?
அப்படியே அவரின் எண்ணங்களுக்குள், பாடல்களுக்குள், வசன கவிதைகளுக்குள் தங்களை மீட்டெடுப்பார்களா!

இருநூறு டாலர் கொடுத்து (நியூ யார்க்கில்) லயன் கிங் பார்ப்பார்கள்.
வேட்டையனுக்கு (ஒருவருக்கு) 28$ கொடுப்பார்கள்.
இளையராஜாவின் திரைப் பாடல்களை ரஞ்சனி – காயத்ரி பாடினால் ($50) காசு கொடுத்து லயித்துக் கேட்பார்கள்.

அவர்களிடம் எட்டயபுரத்துக்கும் காசிக்கும் புதுச்சேரிக்கும் திருவல்லிக்கேணிக்கும் அழைத்துச் செல்கிறோம் என்றால் – ‘நாங்களே போயிக்கிறோம்!’ என்று ஒதுங்கி விடுகிறார்கள்.
’என் பையன்…’, ‘என் மகள்…’, என் குடும்பம் என்று ரத்தமும் சதையுமாக தங்களின் வழித்தோன்றலின் தத்தக்கா பித்தக்கா ஆட்டத்தை ரசிப்பர்வகள், – பாரதிதாசன், சுப்பிரமணியம் சிவா, வ.உ.சி. என்றால் எதற்கு அந்த ஆளையும் அவரின் விழுமியங்களையும் இலட்சியங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்… என ஜகா வாங்குகிறார்கள்.

’பாரதி யார்’ நாடகம் என்பதை விட அனுபவம்.
பாரதியாரின் வாழ்வு; பாரதியின் நியாயங்கள்; பாரதியின் பாடல்கள்; பாரதியின் சொற்றொடர்கள்; பாரதியின் எண்ணங்கள் – ஏற்கனவே நீங்கள் சீனி. விசுவநாதனாக இருந்தாலும் பாரதியைக் கண் முன்னேக் கொணரும் மகா காவ்யம்.
’பாரதி யார்’ அரங்க அனுபவம் என்பது சொல்லால் எழுதப்பட்டு புரிந்து கொள்வது அல்ல. அந்த அரங்கத்தில் பல்வேறு பார்வையாளர்களருடன் ஒருங்கிணைந்து இலட்சியப் பாதையில் பயணிக்க உறுதி மொழி கொள்வது.

அடுத்த முறை இது போன்ற வாய்ப்பைத் தவற விடாதீர்கள்.

அமெரிக்காவில் தமிழ்க் கல்வி – தமிழ்ப் பள்ளி கொண்டாட்டங்கள்

பிரபுதாஸ் பட்வாரி அன்றைய ஆளூநர். 1977-80 வரை தமிழக கவர்னராக இருந்ததாக விக்கிப்பிடியா சொல்கிறது.

அவரின் சிறப்பு என்னவென்றால், எந்த விழாவிற்கு அழைத்தாலும் ஆஜராகி விடுவார். எங்கே அழைத்தாலும் வந்துவிடுவார். எப்பொழுதும், எந்தத் தருணத்திற்கும் சொற்பொழிவைத் தயாராக வைத்திருப்பார். எந்த அரங்கத்திலும் பொருத்தமாகப் பேசுவார்.

கலாமிற்கு முன்னுதாரணம் எனலாம். எளிமையானவர். எனக்கு ரொம்பப் பிடித்த சிரிப்பைக் கொண்டவர். அவரைப் போல் ஆக வேண்டும் என்பது என் பால்ய காலம் லட்சியம்.

திராவிட கலாச்சாரம் அதை பாதுகாத்தது. எனினும், எவர், எதற்குக் கூப்பிட்டாலும் சென்று விடுவதைப் பழக்கமாக்கி இருக்கிறேன்.

அவ்வாறு ரோட் ஐலண்ட் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பகிர்ந்த பேச்சு

அனைவருக்கும் வணக்கம்.

தமிழ்ப் பள்ளியை நடத்தும் ரமா சுப்ரமணியன், கார்த்திக் பால்சுப்ரமணியன், விஜயகுமார் சபாபதி, சாருலதா ரவிஷங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்

ஆக்டன் தமிழ்ப் பள்ளி மணி அவர்களுக்கும் நெட்ஸ் ராஜ் அவர்களுக்கு பணிவு கலந்த வணக்கங்கள்

அமெரிக்காவில் பத்தில் ஒருவர் மட்டுமே பன்மொழி வித்தகர். பாக்கி தொண்ணூறு சதவிகிதம் ஒரு மொழி மட்டுமே அறிந்தவர்கள்.

இரு மொழியைக் கற்றுக் கொள்பவர்களுக்கு இயல்பாகவே மூளையில் சிக்கலான புதிர்களை விடுவிக்கும் அடுக்குகளும் இணைப்புகளும் உருவாகின்றன. ஒரே சமயத்தில் எதிரும் புதிருமான வாதங்களை அவர்களால் மனதிலும் சிந்தையிலும் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. லத்தீன் மொழி வழிவந்த ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்த்துகீசிய, இத்தாலிய பாஷை போன்றவற்றை மட்டும் கற்றவர்கள் மூளை ஒரு மாதிரியாகவும். தமிழ் போன்ற திராவிட மொழிகளைக் கற்று அறிந்தவர்கள் மூளை மேலும் தீவிர இயக்கத்துடனும் ஆற்றலுடனும் செயல்படுவதாக ஆராய்ச்சியின் முடிவுகள் தெள்ளத் தெளிவாக தெரிவிக்கின்றன.

தேவையில்லாதவற்றை நினைவில் இருந்து நீக்குதல்,

கூடுதல் கவனம்,

சிக்கலைத் எவ்வாறு தீர்ப்பது மற்றும்

முடிவெடுத்தலில் தீர்க்கம் – எல்லாவற்றுக்கும் இரட்டைமொழி அவசியம்.

உதாரணமாக – S-O-R-R-Y

இதைப் பார்த்தால் ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர்க்கு ஒரே அர்த்தம்தான் விளங்கும். “தெரியாமப் பண்ணிட்டேன்… மன்னிச்சுடுங்க!”

தமிழ் அறிந்தவர்க்கு பல அர்த்தங்கள் ஓடும்.

சாரி – புடைவை எடுக்கலாம் என்று மனைவி சுட்டுகிறாரோ?

சாரி – ரங்காச்சாரி, வெங்கடாச்சாரி என்று எவரையாவது அழைக்கிறாரோ?

சா… ரிகமபதநி என்று தொடங்குவதற்கு முஸ்தீபு போட்டு ராகம் – தானம் – பல்லவி போட்டு தாளத்தை இழுக்கிறாரோ?

சாரி சாரியாக தமிழ் கற்க தன் மகவுகளை பெற்றோர் அனுப்ப வேண்டும் என்கிறாரோ?

சரி என்று சொல்லி வைப்போம். அதற்கும் ஆங்கிலத்தில் ஏறக்குறைய அதே எழுத்துகள்தானே!

கூழாங்கல்லை எடுத்து நதியில் வீசுங்கள்.

ஒரு மொழி அறிந்தவர் அதை தொப்பென்று ஒரே இடத்தில் வீசி முடிப்பவர்.

பல மொழி அறிந்தவர் என்றால் அந்தக் கல் பல்வேறு அலைகளை ஏற்படுத்தி தீர்க்கமானத் தொடர் தாக்கத்தை உருவாக்கும்.

பெற்றோர்களுக்கு

பல விதமான குழந்தைகளுடன் உங்களின் மகளும் மகனும் பழகுவதற்கு இந்தத் தமிழ்ப் பள்ளி உதவுகிறது.

திங்கள் முதல் வெள்ளி வரை அமெரிக்க நண்பர்கள்.

வாரயிறுதியில் நம் வரலாறும் பாரம்பரியமும் கைகோர்த்து ஒத்த மனங்கள் இணைவதற்கு இது ஒரு வாய்ப்பு.

அலுவல் நண்பர்களிடம் ஒரு விதமானப் பேச்சுகள் எடுபடும். அண்டை அயலார், பக்கத்து வீட்டுக்காரர்களோடு இன்னொரு விதமானப் பேச்சுகள் எடுபடும். நண்பர்கள் என்பது இங்கு இருப்பவர்கள். அவர்களிடம் மனம் விட்டு எதையும் கொண்டு வரலாம். அதற்கு இந்த முறைமை உதவுகிறது.

ஆய்வுகளும் தரவுகளும் இருக்கட்டும். ஒரு குட்டிக் கதை

வெந்நீர் சூடு போதுமா?

பண்ணையாருக்கு தினசரி வெந்நீர் தேவை. அந்தக் காலத்தில் தானியங்கியாக இயங்கும் தண்ணீர் சூடேற்றி – கீஸர் கிடையாது. காலையில் எழுந்து வெந்நீர் போடவென்று ஒருவரை வேலைக்கு வைத்து இருந்தார்.

சரியான பதத்தில் வெந்நீர் இருக்கிறதா என்று ஒவ்வொரு நாளும் அவனும் கேட்பான். பண்ணையார் எப்பொழுதுமே ஏதாவது குறை சொல்லி வந்தார்.

இன்னிக்கு சூடு போதலே என்பார்

இன்னிக்கு சூடு ஜாஸ்தி என்பார்.

ஒரு நல்ல நாளில் கொதிக்க கொதிக்க வென்னீரை வைத்துக் கொடுத்து, அவர் மேல் கொட்டி விட்டு ஓடியே போய் விட்டான் அந்த வெந்நீர் போடுபவன்.

அந்த வெந்நீர் போடுபவன் மாதிரிதான் ஒரு ஆசிரியரின் வேலை. பண்ணையாராக நம் பசங்களைப் பாருங்கள்.

அவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். ஒன்னும் புரியலே; கஷ்டமா இருக்கு என்பார்கள்.

இதெல்லாம் எதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று புலம்புவார்கள்.

ஏற்கனவே தெரிந்த விஷயம் என்று போன வருடம் படித்ததை நினைவூட்டும் போது அங்கலாய்ப்பார்கள்.

ஆசிரியர்களும் (பெற்றோர்களும்தான்) தட்ப வெட்பம் பார்த்து அதற்கேற்ப இதமாக ஒத்தடமாக வென்னீர் வைக்க வேண்டும்.

பக்குவமாக ஆடிக் கறக்கும் மாட்டை ஆடியும் பாடிக் கறக்கும் மாட்டை பாடியும் கறக்க வேண்டும்.

அமெரிக்க வாழ்க்கை என்பது வானவில் போன்றது.

அதில் ஆங்கிலம் ஒரு வண்ணம்.

வானவில்லில் வெறும் ஏழு வண்ணங்கள் மட்டுமல்ல. அதையும் தாண்டி பல்வேறு வண்ணங்கள் ஊடுருவி இருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

வீட்டை வெள்ளையடிக்க ஹோம் டிப்போ போனால் ஐயாயிரம் வண்ணங்களைக் காட்டுவார்களே…

அது மாதிரி வானவில். அது மாதிரிதான் வாழ்க்கையின் வண்ணங்களும்.

அது போல் வானவில் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அறிவதற்கான பாதை இந்தக் கல்வி.

தமிழ் மழை போல் எங்கும் பொழிகிறது. அதில் சூரியனாக ஆசிரியர்கள் ஒளி வெள்ளம் பாய்ச்சி பாதையைக் காட்டுகிறார்கள். அப்பொழுது வானவில்லையும் அதன் சாத்தியங்களையும் உணர உங்கள் குழந்தைகளைத் தொடர்ச்சியாக தமிழ் பயில வைக்கிறீர்கள்.

தமிழ் ஆசிரியர் என்பவர் நம் வரலாற்றை உணர்த்துபவர்

தமிழ் மொழி நமக்கு அறத்தையும் வாழ்க்கை முறையையும் உலகையும் கற்றுத் தருவதற்கான பாதை

ஐயாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக புழக்கத்தில் இருக்கும் பழக்கத்தைத் தொடர்ச்சியாக பயில்வோம்! வெல்வோம்!!

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை – முதலாமாண்டு விழா

வெர்னர் ஹெர்சாக் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் 11வது பிராயத்தில் தான் தன் முதன் முதல் சினிமாவைப் பார்க்கிறார். அதன் பிறகு பின் வரும் காலத்தில் உலகம் மெச்சும் இயக்குநர் ஆகிறார். குட்டிப் பயலாக இருக்கும்போதே மண்டைக்குள் விதைகளை ஊன்றிவிட வேண்டும்.

அந்த மாதிரி சொர்ணம் சங்கரபாண்டி Sornam Valavan Sankar சின்னஞ்சிறிய வயதிலேயே பள்ளிகளில் திருக்குறளின் முழுப் பதிப்பையும் குறள்நெறிக் கதைகளையும் அந்தந்த வகுப்பிற்கேற்ப அறிமுகம் செய்யும் நூல்களை இல்லந்தோறும், கிராமமெங்கும் ஊராட்சி ஊராட்சியாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் விலையில்லாமல் கொடுக்கிறார். தருவதுடன் நிற்காமல், முற்றோதல் போட்டிகளை முன்னெடுக்கிறார். குழந்தைகளின் வாழ்வில் மந்திரமாக, நினைவில் ஊறி நிற்கும் அறநெறிச்சாரமாக வள்ளுவரின் குறள்களை ஊன்றுகிறார்.

இந்த சந்திப்பு அதற்கானதல்ல. இது ஹார்வார்டு தமிழ் இருக்கையை உருவாக்கியதற்கான விழா. அதன் பின் பல்வேறு அமெரிக்க, கனடா பல்கலைக்கழகங்களில் வெறுமனே தமிழ்மொழியை மட்டும் பயிற்றுவிக்கும் தமிழ்த்துறையாக மட்டும் இயங்காமல், நாற்காலி போட்டு தீவிரமாக தமிழாக்கங்களை புதினங்களை உலகெங்கும் உள்ள அயநாடுகளில் பல்வேறு பாஷைகளுக்கும் ”தமிழ் இருக்கை” முயற்சிகளைத் தொடரும் விழா.

அமெரிக்க பல்கலை எங்கும், பேராசிரியர்கள் மூலம் பல ஆராய்ச்சி மாணவர்களை கொண்டு ஆய்வுகளும், கருத்தரங்குகளும், மொழிசார்ந்த நிகழ்வுகளும் நடத்தப்படும் தமிழ் இருக்கைகள் உருவாகிக் கொண்டே வருகின்றன (“துறைத்தலைவரையும், அவர்களின் கீழ் பணியாற்றும் பேராசிரியர்கள், துணைப்பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை கொண்டு தமிழில் இளநிலை, முதுகலை பட்டப்படிப்புகளும், ஆராய்ச்சி படிப்பும் வழங்கப்பட்டால் அதுவே தமிழ்த் துறையாகும்” – எழுத்தாளர் அ. முத்துலிங்கம்.)

ஹார்வார்டில் வெற்றிகரமாக தமிழுக்கு சிம்மாசனத்தை உருவாக்கி ஓராண்டு நிறைவடைந்ததைக் கொண்டாடும் எளிய விழா. மார்த்தா செல்பி (Martha Ann Selby) சிறப்புரை ஆற்றினார். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் இன்ன பிற மொழிகளுக்கும் தற்காலப் படைப்புகளையும் செவ்வியல் இலக்கியங்களையும் மொழிமாற்றம் செய்யும் முன்னெடுப்புகளைக் குறிப்பிட்டார். இரு மொழியிலும் ஆற்றல் பெற்றவர்களை மூன்று நான்கு மாதம் தங்கவைத்து மொழியாக்கம் செய்வது, ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு தமிழ் எழுத்தாளர்களை விருந்தினராக அழைத்து அவரின் நாவல்களைக் குவிமையமாக பார்வைக்கு உள்ளாக்கி விமர்சன விழாக்களை நடத்துவது, இலக்கியப் பயிற்சி முகாம் வழியாக மொழியாக்கங்களைப் பரவலாக பல எழுத்தாளர்களிடம் கொண்டு செல்வது, படைப்பாளிகள் பட்டறைகள் – என பல எண்ணங்களையும் திட்டங்களையும் அதற்கான வழிமுறைகளையும் தொலைநோக்கு பார்வையையும் பகிர்ந்தார்.

இந்த விழாவில் பழைய நண்பர்களான ஃபெட்னா சிவா, சொர்ணம். சங்கர் போன்றவர்களை மீண்டும் பார்க்க முடிந்தது. இது வரை வாசித்து மட்டுமே அறிந்திருந்த சிவகாமி ஐ.ஏ.எஸ். போன்றவர்களை சந்தித்து மனம் விட்டு பேச முடிந்தது. அடிக்கடி பார்க்கும் ப்ராவிடென்ஸ், ரோட் ஐலண்ட், கனெக்டிகட், மாஸாசூஸெட்ஸ் தமிழ் மக்கள் மன்றம், நியு இங்கிலாந்து தமிழ் சங்கம் போன்ற பாஸ்டன் வட்டார உறவுகளை புதுப்பிக்க முடிந்தது.

ஹார்வர்டு இருக்கைக்கு அஸ்திவாரம் போட்டு நடத்தி முடித்து அதன் பின்னும் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மருத்துவர் ஜானகிராமன் அவர்களையும், மருத்துவர் சம்பந்தம் அவர்களையும், நேரில் வாழ்த்த முடிந்தது.

இனிய மாலைப் பொழுதில் விருந்தில் பங்கெடுக்க அழைப்பு விடுத்த பமீலாவிற்கு Saroj Bamiela Sankaran நன்றி!

Stage Friends USA & New England Tamil Sangam: Crazy Mohan’s Tenant Commandments

சென்ற வருடம் சென்னையில் ‘சாக்லேட் கிருஷ்ணா‘ தரிசனம். அதிலே வந்தவர் கிரேசி மோகனும் மாது பாலாஜியும். அந்த முப்பதாண்டு கால மேடை அனுபவத்திற்கு நிகரான நாடகத்தை நிகழ்த்திக் காட்டினார்கள் நியூ ஜெர்ஸி ஸ்டேஜ் ஃப்ரென்ட்ஸ் குழு.

எஸ் வி சேகர் நடித்து சுந்தா இயக்கிய ‘ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது‘ நாடகம். அன்றைய மதராஸில் வாடகைக்கு வீடு கிடைப்பது கஷ்டம். கைக்குழந்தை இருந்தால் மொசைக் தரை பாழாகி விடும் என்று நிராகரிப்பார்கள். அதற்குப் பதிலாக வளர்ந்த குழந்தை இருந்தாலோ, வயசுப்பயன், பிரும்மச்சாரி சேஷ்டை என்று புதிய காரணம் கண்டுபிடிப்பார்கள். வீடு வாங்குவதற்கோ ரொக்கத் தொகை கொண்டு கிரயம் முடிக்கவேண்டும். திவாலாகும் சிட்டி பேங்கும், கூவிக் கூவி வீட்டுக்கடன் தரும் ஐசிஐசிஐயும் உதயமாகாத எண்பதுகளில் கிரேசி மோகனால் எழுதப் பட்டது.

இவ்வளவு சிரமதசையில் வாடகை வீடு கிடைத்தால், அதை எவராவது காலி செய்வார்களா?

இதுவே எண்பதுகளின் சூப்பர்ஹிட் நாடகத்தின் கரு. அதை அமெரிக்காவிற்கு ஏற்றபடி Enfamilம், மில்லேனியத்திற்கு ஏற்றபடி ஸ்வைன்ஃப்ளுவும் கொண்டு உற்சாகம் கொப்புளிக்க படைப்பு மெருகேற்றி இயக்கியுள்ளார் குரு.

வளைகுடாவில் வின்டோஸ் வெளியானால் கூட அராபிய மொழியில் வெளியாகும். அதே போல் அமெரிக்காவில் அசலில் இருந்த கபாலி கோவில் தெப்பக்குளமும், 200 ரூபாய் வாடகையும் அப்படியே வைத்திருப்பதற்கு பதில் பாஸ்டன் காம்ன்ஸையும் டாலர் சோகத்தையும் பாலயோகிக்கு பதில் மகாலஷ்மி கோவிலையும் கொணர்ந்திருக்கலாம். அன்றும் இன்றும் பாகிஸ்தான் ஊடுருவல் தொடர்வதுதான் நகைச்சுவை நாடகத்தின் சோக மெஸேஜ்.

தமிழக சபாக்களில் நாடகம் பார்த்தால் முசுடுக்களையும் சிரிக்க வைக்க சில உபாயம் கையாள்வார்கள். முக்கியமான வசனத்தை சொன்னவுடன் ‘டொய்ங்ங்ங்ங்…’ என்று சத்தம் ஒலிக்கும். இன்னொரு விலா நோகவைக்கும் உரையாடல் முடிந்தவுடன் ‘ட்ட்டுர்ர்ருக்க்க்…’னு பிறிதொரு சவுண்ட் கொடுப்பார்கள். அதெல்லாம் பாஸ்டனில் கொடுக்காததாலோ என்னவோ, சிரிப்பு மழை பொழியாமல் அமைதி காத்தார் பார்வையாளர். அடுத்த முறை ஒரு கை ஓசையாக cue தந்தால் நாங்களும் இரு கைத்தட்டலாக புன்னகைப்போம் என்று நம்புகிறேன்.

nj-drama-tenant-commandments-bosotn-performance

ஸ்டேஜ் ஃப்ரென்ட்சிடம் மிகவும் பிடித்த விஷயம் அவர்களின் அரங்கப் பொருளின் பொருத்தமும் நிறைவான மேடை அமைப்பும். அது ஏனோ, இந்த தடவை, ரொம்ப எளிமையாக, நாட்டு நடப்பை பிரதிபலித்தது. அமெரிக்காவில் recession என்றால் ஸ்டேஜ் ப்ரென்ஸும், ஸ்டேஜை குறைத்து விட்டார்கள்.

சாது சங்கரனின் நீண்ட தலைமுடியை வெட்டுவது கூட ஒரு டெனன்ட் கமான்ட்மென்ட் ஆக்கலாமே என்று நாடகத்தில் வருவதால் நிஜமாகவே கூந்தலை வளர்க்குமளவு கமிட்மென்ட் கொண்ட மோகன்; மீசையை முறுக்கி விட்டு அட்ஜஸ்ட் செய்துகொண்டே வீட்டு சொந்தக்காரராகவே ஆன ஆதிகேசவன் ஆகிய இருவரும் டாப் க்ளாஸ். குறையே சொல்ல இயலாத இயல்பான நடிப்பு.

எஸ் வி சேகர் ஏற்று நடித்த பத்து என்னும் பத்மநாபன் பாத்திரத்தில் வந்த குருவும் ஹீரோ அய்யாசாமியாக வாடகைக்கு வந்து வீட்டை ஆக்கிரமிக்கும் இரமணி – இருவரும் தேவையானதை செய்துச் சென்றார்கள்.

எஸ் வி சேகரின் ஏற்ற இறக்கங்களையும், நீட்டமான பத்திரிகை ஜோக்குகளையும் வெகு சாதாரணமாக சம்பாஷணையில் நுழைக்கும் சாமர்த்தியமும் பத்துவாகிய குருவிடம் கிடைக்கவில்லை. ஒரிஜினலில் அவர் சடாரென்று சென்னை மொழி பேசுவார்; அங்கிருந்து கிண்டல் மொழிக்கு தாவுவார். அவ்வளவு ஈடுகட்டாவிட்டாலும், குருவால் இன்னும் நிறைய முடிந்திருக்கும் என்பது ‘ரகசிய சினேகிதியே‘ போன்றவற்றால் தோன்றியது.

அந்த மாதிரி அய்யாசாமி இரமணியும் வந்திருக்கும் உள்ளூர் கூட்டத்திற்கு இந்த அளவு நடித்தால் போதும் என்பது மாதிரி went through the motions. பாஸ்டனில் ஜே கே ரித்திஸ் படம் போட்டால் கூட ஹவுஸ் ஃபுல்லாக்கும் தமிழர்கள், இந்த மாதிரி நேரடி மேடை நிகழ்வுகளைக் காண ஏனோ வருவதில்லை.

சில நண்பர்களிடம் நேற்று அழைப்பு விடுத்தபோது கூட ‘இலவசமா?’ என்றார்கள். ‘நீ நடிக்கிறாயா?’ என்றார்கள். பெரும்பாலான நியு இங்கிலாந்துக்காரர்களின் பழக்கதோஷம் இது. தெரிந்தவர்கள் பங்கேற்கிறார்கள் என்றால் மட்டுமே வருவார்கள். நுழைவுக் கட்டணம் நயாபைசா கிடையாது என்றால் நிச்சயம் நுறு மைல் தாண்டி நிகழ்ச்சி இருந்தாலும் தலைக்காட்டுவார்கள். குழந்தைகளின் திறமையை அரங்கில் செய்து காட்டலாம் என்றால் எப்பாடுபட்டேனும் அட்டென்டன்ஸ் இடுவார்கள். முன்னூறு மைல் தொலைவில் இருந்து பதின்மூன்று பேர் குழு இரத்தமும் சதையுமாக உயிரோட்டமான நாடகத்தை நடித்துக் காட்ட வருகிறார் என்றால் ஏனோ காணாமல் போனவர் ஆகிவிடுகிறார்கள்.

தமிழ்ப்படங்களே தமிழில் தலைப்பு வைத்து வரிவிலக்குப் பெறுவது போல், நாடகத்தின் டைட்டிலை தமிழிலேயே பொருத்தமாக அமைத்திருக்கலாம். வடிவேலுதான் ‘தூக்கிக் காட்டு’வை காமெடியாக்கி, விவேக்கையும் ‘உவ்வேக்’காக தமிழ் சினிமா பாரம்பரியமாக்கி இருந்தால், இங்கும் R rated ஜோக் தூவப்பட்டிருக்கிறது. சிரிப்பை வரவைக்க அடல்ட்ஸ் ஒன்லி தேவையில்லை.

நண்பர் கணேஷ் சந்திரா வில்லன் தோற்றத்துடன் குழந்தைசாமியாக வெகுளியானப் பாத்திரப்படைப்புக்கு வேண்டியதை அளவோடு வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த வருடம் புதியதாக அரங்கேறிய ஆரோக்கியசாமி & நவநீதம், புதுசு என்பதே சொல்ல இயலாதவாறு திருப்திகரமாக நடித்தார்கள். பெருமாள் & ப்ரோக்கர் பரமசிவம் ஆகிய இருவரும் மோசம் இல்லையென்றாலும் opportunities for improvement என்று உடல்மொழியை சொல்லலாம். ‘நஷ்ட ஈடுநாதமுனி & கேடி செல்வராஜ் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை, செப்பனிடச் சொல்ல எந்தக் கருத்தும் இல்லாமல் செவ்வனே செய்திருக்கிறார்கள்.

பெண்கள் இருவரும் இளைய தளபதி விஜய் திரையில் தோன்றும் கணந்தோறும் கையைக் காலை ஆட்டி உதறலை சமாளிப்பது போல் கொஞ்சமாய் அபிநய சரஸ்வதிகளாகி இருந்தார்கள்.

நாடகம் முடிந்து திரும்பும் சமயத்தில் வானத்தைப் பார்க்குமாறு மகள் சொன்னாள். பிடித்தமான பாதி நிலவாக பெரிய அளவில் மேகங்களுக்கு நடுவில் சிக்கிக் கொண்டிருந்தார் சந்திரன். அப்படியே அதன் அருகில் பார்த்தால் கண்கூச வைக்கும் மெர்க்குரி விளக்கு வரிசை. ஒவ்வொரு விளக்கைச் சுற்றியும் நூற்றுக்கணக்கான விட்டில் பூச்சி. அத்தனையும் அந்த மஞ்சள் ஒளியை மொய்த்துக் கொண்டிருந்தன.

மனிதகுலத்துக்கு மூத்த குலம் ஈக்களின் குலம். ஆதாம் ஏவாளும் மொகஞ்சதாரோவிற்கு வருவதற்கு முன்பே அங்கே எந்தையும் தாயும் கொஞ்சிக் குலாவிய பூச்சிக்கூட்டம். அந்தக் காலத்தில் நிலவொளி மட்டுமே ஆதாரம். நிலவைப் பின்பற்றிப் பறப்பவை நேர்க்கோட்டில் பறக்கும். இருட்டின் பயணத்திலும் இலக்கை அடையும்.

ஆனால், இந்தக் கால ஈக்களுக்கு இடைஞ்சல் எக்கச்சக்கம். மெர்க்குரி, சோடியம், வெண்குழல், வடிவேலு, விவேக் விளக்கு என்று ரகவாரியாக வெளிச்சம் தரும் இரவுப் பயணத்தில் திக்கற்ற பார்வதியாக, செயற்கை மொழியில் மோதி மறைகின்றன.

நியூ ஜெர்சி ஸ்டேஜ் ஃப்ரென்ட்ஸ்களும் அசலான நிலாவை குறிக்கோளாக கொண்டு, கிரேசி/எஸ் வி சேகர் சோடியம் வேபர் மயங்கி தடைப்படாமல் உச்சங்களைத் தொடர விழைகிறேன்.

தொடர்புள்ள பதிவு:

1. வெட்டிப்பயல்: Tenant Commandments – நான் பார்த்த நாடகம்: “ஸ்டேஜ் ஃபிரெண்ட்ஸ் (Stage Friends) நடத்திய டெனண்ட் கமெண்ட்மெண்ட்”

2. New England Tamil Sangam: Chithirai Vizha Drama Photos « 10 Hot

3. பாஸ்டனில் ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’