Tag Archives: Hindi

பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா

புதுமையான சூழ்நிலை உதவுகிறது. சந்தேகமற்ற முறையில் மனவலுவால் நகர்த்தப்படுகிறது. தன்னைக் கட்டுப்படுத்திய சங்கிலிகளையும் உடல் பலவீனங்களையும் தள்ளிவைத்து துள்ளி எழுகிறாள் அம்மையார். அவளது “இல்லை” மறைந்து, அதன் இடத்தில் “புதியது” மற்றும் “இப்பொழுது” மலருகின்றன.

மார்ச், மா, மற்றும் சகுரா – கீதாஞ்சலி ஷ்ரீ எழுதிய இந்த கதையை அனுராதா கிருஷ்ணசாமி மொழிபெயர்த்துள்ளார். கதையின் மையமாக எழுபதுகளில் உள்ள முதியோள், ஜப்பானில் தனது மகனை சந்திக்க வருகிறார். ஆரம்பத்தில், அவள் தயக்கத்துடன் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்தாள்; தெரு முனைக்குக் கூட செல்ல மறுக்கிறாள். ஆனால் பிப்ரவரி, மார்ச் மாதங்கள் உருண்டோடிக்கொண்டிருக்கும் போது, அவளது மாற்றம் வெளிப்படுகிறது. மகனின் பார்வையில்—அதே நேரத்தில் கதையாசிரியையின் பார்வையிலும்—ஒரு முழு தேசமே அவளுடன் இணைந்து மலர்கிறது.

மகனின் பயணமும் கதைக்கு அவ்வளவு முக்கியமானது. தாய் மாறுவதோடு, ஒரு தாய், ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான மகனின் உள்ளார்ந்த எண்ணங்கள் வெளிப்படுகின்றன—அச்சத்துடனும் சந்தேகத்துடனும். பழையதை விட்டு வெளியேறுவது, மகனுக்கும் அவ்வளவு அவசியமான செயலாக மாறுகிறது.

சொல்வனம்.காம் மொழியாக்கங்கள் முக்கியமானவை. தி. இரா. மீனா, எம். ஏ. சுசீலா போன்றோர் தொடர்ந்து எழுதுவடு சிறப்பு,

அனுராதா கைவண்ணத்தில் தமிழுக்குக் கிடைத்த மறக்க முடியாத கதை.

Merry Christmas: Movie Review

‘மெரி கிறிஸ்துமஸ்’ ரசிக்க வேண்டிய படம்.

வசந்தபாலனின் ‘வெயில்’ மாதிரி மறந்துவிடக் கூடிய அபாயம் இருந்தாலும்…
ஆதவனின் சிறுகதைகள் மாதிரி இந்தக் கால இளைஞரைக் கவராமல் போனாலும்…
எம்.எஸ்.வி.யின் குரல் ஏ.ஆர்.ரெஹ்மானுக்கும் குரல் கொடுத்து ‘காதலா… காதலா’விலும் நடித்தது போல் விஜய் சேதுபதி தமிழிலும் ஹிந்தியிலும் பின்னி இருந்தாலும் திராவிட நிறம் என்பதாலும்…

எவளாவது மொத முத நாளன்று ஊரு பேரு தெரியாதவன வீட்டுக்குக் கூப்பிடுவாளா?
இந்தக் கால Badoo, Bumble, eHarmony, Grindr, HER, Hinge, Match, OkCupid, Plenty of Fish, Tinder, Zoosk காலகட்டத்தில் இது சகஜம்.
இது முதல் முடிச்சு.

’96’ மாதிரி பள்ளிலிக்கும் பள்ளி பிராய அபிலாஷை எல்லாம் தாடி நரைத்த காலகட்டத்தில் நடக்கிற காரியமா?
காதல் என்பது காமத்தில் துவங்கி சற்றே ஒற்றை மோற்று விஸ்கி கலந்து வருங்காலத்தை யோசித்து வருவது என்பது நிஜம்.
இது இரண்டாம் முடிச்சு

கிறிஸ்துமல் படங்களுக்கு என்று ஹாலிவுட்டில் ஒரு சூத்திரம் இருக்கிறது. அது மீறுகிற விஷயமா?
விடுமுறைக் காலம். எல்லோரும் ஜோடி ஜோடியாக உலாவுகிறார்கள். குடும்பத்திற்கு பாரம்பரியமும் LGBTQIA2S+ அல்லாததும் முக்கியம். இந்த நிர்ப்பந்தத்தை கேலி செய்வது ஸ்ரீராம் ராகவனுக்கு அவசியம்.
இது மூன்றாம் முடிச்சு,

நான்காம் முடிச்சு முக்கியமான முடிச்சு. அதை நெட்ஃப்ளிக்ஸ் திரையில் பாருங்கள்.

இந்தப் படம் கொண்டாட்ட மனநிலையில் உணர்ச்சிகரமாக ருசிக்க வேண்டியது. Domaine de la Romanee-Conti சரக்கு ஏன் அதிக விலை என்றெல்லாம் கேட்காமல் விரும்பப்படுவது போல் சுவைக்க வேண்டியது.
நீங்கள் மும்பை நகரத்தை பம்பாய் என்று அழைக்கப் பட்ட காலத்தில் இருந்து உழன்றவரா?
கத்தோலிக்கர்கள் மட்டும் நத்தார் தினத்தைக் கொண்டாடுவார்கள் என்று நம்பாமல் அஞ்சலையையும் மேரியையும் டாவு அடித்தவரா?
ஐயங்கார் பேக்கரியில் கேக்கும்; திருப்பலியில் ரொட்டிக்காவும் வைனுக்காகவும் பங்கெடுக்காமல் குட்டைக் கால் பாவாடைகளுக்காவும் ஜெஸ்ஸிக்காவும் யேசுவை ஸ்தோத்திரம் செய்தவரா?

அதெல்லாம் நினைவேக்கம். கழிவேற்ற சிந்தனை. பழைய நெனப்புடா பேராண்டி!
ஆனால், படம் என்பது பின்னணி இசை; துள்ளல் திரைக்கதை; நினைவில் நிற்கும் நற்செய்தி!!
வெள்ளித்திரையில் பார்க்கவில்லையே என வருத்தப்பட வைக்கும் ஆக்கிரமிப்பும் இப்படியெல்லாம் கத்ரினா கைஃபை இதுவரைக்கும் சாகடித்திருக்கிறீரகளே என்னும் கடுப்பும் கொண்டிருப்பவர்களுக்கு சாலச் சிறந்த ஆக்கம்!!

ஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு

ஞாயிற்றுக்கிழமைகளில் பாட்டி வீட்டிற்கு செல்வோம். அவள் விவித பாரதியின் சாயாகீத் ரசிகை. அங்கே கேட்க ஆரம்பித்த “தேரே பினா ஜிந்தகி ஸே கோயி… ஷிக்வா தோ நஹி”, பிறிதொரு அந்தாக்‌ஷரியில் கை கொடுத்தது.

அந்தப் பாடலை சற்றே பார்ப்போம். நாயகனும் நாயகியும் ரகசியமாக சந்திக்கிறார்கள். நாயகியைப் பொறுத்தவரை அவன் மட்டும் அவளுடைய வாழ்வில் குறுக்கிடா விட்டால், அவள் வாழ்வு தெளிந்த நதியாக, கொந்தளிப்புகள் இல்லாமல் அமைதியான ஓடத்தில் மிதந்து சென்றிருக்கும். ஆனால், அவன் இல்லாவிட்டால், வாழ்க்கை என்பது வாழ்வாக இருந்திருக்காது.

நான் நாவலும் சிறுகதையும் படிக்க ஆரம்பித்ததே, அதை ஏதாவதொரு பெண்ணிடம் கொடுத்து அவளின் மனதைத் தொட்டு விடலாம் என்ற எண்ணத்தில்தான். “நில்… கவனி… காதலி” என்று ராஜேஷ் குமார் கொடுத்து பார்த்தேன்; பலிக்கவில்லை. அடுத்த அஸ்திரம்… ‘பாட்டுக்கு பாட்டெடுத்து’ அந்தாக்சரி விளையாட்டு. இந்தப் பாடல் என் உணர்வை, குறிப்பால் உணர்த்த உதவியது.

அந்த மாதிரி இன்னொரு அற்புதமான ரேடியோ நிகழ்ச்சி Only A Game.

அலுவலில் அரசியல் பேச முடியாது. எல்லோரும் தீவிர கொள்கைவாதிகள். என் உடன் வேலை பார்க்கும் டீமில் ஐந்து பேருக்கு ஐந்து கொள்கை; ஒரே அணியில் துப்பாக்கி வைத்திருப்பதற்கு ஆதரவாக ஒருவர்; காவல்துறையின் பணிக்கு அதி தீவிர ஆதரவாளர் இன்னொருவர்; பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்பையும் வெறுப்பவர் பலர்; சட்டம் மற்றும் ஒழுங்கு முக்கியம் என்று உறவினர்களை போருக்கும் காக்கி சட்டைக்கும் பலி கொடுத்தவர் சிலர்.

எனவே, எல்லோருக்கும் பொழுதுபோக்கான பேச்சு என்பது – “விளையாட்டு”. நேற்று ரெட் சாக்ஸ் எப்படி பேஸ்பால் ஆடினார்கள்? இந்த வருடம் பாஸ்டன் செல்டிக்ஸ் கூடைப்பந்தில் சாதிப்பார்களா? பனிச்சறுக்கு ஹாக்கியில் ப்ருயின்ஸ் எவ்வாறு கெலிப்பார்கள்? எல்லாவற்றிற்கும் மேலாக நியு இங்கிலாந்து பேட்ரியாட்ஸ், டாம் ப்ரேடி, பெலிசிக் எல்லோரும் போங்காட்டம் ஆடுகிறார்களா அல்லது அழுகுணி ஆட்டத்தில் அமெரிக்க கால்பந்தின் மன்னர்களாக இருக்கிறார்களா?

இப்படி பேச ஒரு நிகழ்ச்சி… ஒலிப்பதிவு… பாட்காஸ்டிங்… தேவை. அதை டபிள்யூ.பி.யூ.ஆர். வானொலியின் “ஒன்லி எ கேம்” நிகழ்ச்சி அருமையாக பூர்த்தி செய்தது.

அலுவலுக்குப் போக ஒரு மணி நேரம். திரும்பி வருவதற்கு இன்னொரு மணி நேரம். அப்போது கேட்பதற்கென்று பிரத்தியேகமாக சில நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுத்து வைத்திருப்பேன்:

  • வெயிட் வெயிட்… டோண்ட் டெல் மீ
  • ரேடியோ லாப்
  • ஃப்ரீகனாமிக்ஸ்
  • டெட் டாக்ஸ்
  • ஷங்கர் வேதாந்தம் வழங்கும் ஹிட்டன் பிரெயின்

அந்த வரிசையில் இந்த ஒலிபரப்பிற்கு சிறப்பான இடம் இருந்தது. வெறுமனே ஸ்கோர்களை ஒப்பிக்காமல், அந்த ஆட்டக்காரர்களின் கதையையும் சொல்லியது. சட்டென்று பருந்துப் பார்வை பார்த்து, பழைய சரித்திரத்தை விவரித்து, விஷயத்தைப் புரிய வைத்தது. பெரிய பெரிய அணிகளின் ஆட்டங்களைப் பற்றி மட்டும் அலசாமல், பக்கத்து வீட்டுப் பையன் ஆடிய விதத்தை அவ்வப்போது கண்முன்னே காதின் வழியே உபாசித்தது.

எத்தனையெத்தனை கதைகள்! எவ்வளவு அணுக்கமான சம்பவங்கள்!! நெகிழவைக்கும் உண்மை நிகழ்வுகளின் குரல்கள்!!!

ஆண்கள் மட்டுமே ஆடிய விளையாட்டுகள் எல்லோரின் கவனத்தைக் கவர்ந்தபோது, மகளிர் கலந்து கொண்ட போட்டிகள், அவர்களின் சாதனைகள், அந்தப் பெண்களின் போராட்டங்கள் என்று என்.பி.ஆர். ரேடியோவிற்கே உரிய தனித்தன்மையை நிலைநாட்டியது. மியா ஹாம், க்றிஸ்டீன் லில்லி, ப்ரியானா ஸ்கரி எனப் பல பெண் நட்சத்திரங்களை முதன் முதலாக அறிமுகப்படுத்திக் கொண்டது இவர்கள் வழியாகத்தான். 1999ல் உலகக் கோப்பை வீரர்களாக அவர்கள் உலகம் அறியப்படுவதற்குமுன் அலைவரிசையில் அவர்களை உலாவவிட்டு கண்முன்னேக் கொணர்ந்திருந்தார்கள்.

உச்சத்தில் இருக்கும்போது விடைப்பெற்றுவிட வேண்டும். ஒரு நிகழ்ச்சியோ பத்திரிகையோ நடிகரோ – தன் தொழிலில் சாதித்துக் கொண்டிருக்கும்போதே ஓய்வு பெற்று, வெற்றிடத்தை உணர்த்த வேண்டும்.

உணர்த்தி இருக்கிறது – “இது வெறும் விளையாட்டு மட்டுமே”.

That Girl In Yellow Boots: திரைப்பட விமர்சனம்

That Girl In Yellow Boots_Kalki_Anurag_Kashyap_Movies_Films_Cinema
’கற்றது தமிழ் எம்.ஏ.’ இயக்குநர் ராமின் ’தங்க மீன்கள்’ இன்று வரவில்லை. எனவே, அதற்கு மாற்றாக That Girl In Yellow Boots படத்தைப் பார்த்தேன். இதுவும் தந்தைக்கும் மகளுக்குமான கதை.

ஸ்மிதா பட்டீலையும் ஷபனா ஆஸ்மியையும் எண்பதுகளில் கொண்டாடினால், கொன்கொனா சென்னையும் நந்திதா தாஸையும் இப்பொழுது இவர்கள் நடித்த படங்களை, ”இன்னார் இருக்கிறார்கள்… ஏமாற்ற மாட்டார்கள்” என்னும் நம்பிக்கையுடன் பார்க்க முடிகிறது. இருவரையும் அலேக்காக சாப்பிடுகிற மாதிரி வந்திருக்கிறார் கல்கி கோச்லின். அவரே கதை, வசனம் என்று சகல துறைகளிலும் நுழைந்திருக்கிறார்.

இயக்கத்தை மட்டும் Black Friday & தேவ் டி புகழ் புருஷன் அனுராக் கஷ்யபிற்கு விட்டுக் கொடுத்துவிட்டார். சப்பை மேட்டரை எடுத்துக் கொண்டு எப்படி படம் பண்ணுவது என்பதை அறிய வைக்கிறார். கல்கியின் ரூத் தசை பிடித்து விடுபவர். உடலுக்கு மட்டும் ஒத்தடம் கொடுக்காமல் சகலமும் கை வேலையாக செய்கிறார். ”உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி” பாடல் சொல்கிறது. ரூத் முகபாவத்திலேயே அருவறுப்பும் அசிரத்தையும் பதற்றமும் ஏக்கமும் திரைக்கதையை நகர்த்துகிறது.

முடிவை முன்பே யூகிக்க முடிகிறது. ஆனால், அதனூடாக சுவாரசியமான கதாபாத்திரங்களின் போக்கை ஊகிக்க முடியவில்லை. போதைக்கு அடிமையான காதலன் எப்படி எதில் இருந்து மீள்கிறான்? கண்டபடி மிரட்டி பணம் கறக்கும் கன்னட மாஃபியா தாதா-விடம் இருந்து எப்படி தப்பிப்பது?

மும்பையும் முக்கிய நடிகராக ஈடு கொடுத்திருக்கிறது. பணக்காரர்களின் வெர்ஸொவா, கப்பல் உடைக்கும் சேரி துறைமுகம், ஆட்டோவும் டாக்ஸியும் ஓடும் சந்துக்கள், ஆற அமர ஊழியம் செய்யும் அரசாங்கத்தின் முகம் எல்லாம் துணை நடிகர்கள். அன்னிய நகரத்தில் முகம் தெரியாத அப்பாவை தேடும் மகளின் துப்பறிதல் நடுவே ஓஷோ வருகிறார். மகளிரின் நிலை பேசப்படுகிறது. பதின்ம வயதின் குழப்பங்கள் உணர்த்தப்படுகின்றன.

நேர்க்கோட்டில் பிரசங்கம் கலந்த பிரச்சாரம் மட்டும் காணவில்லை.

John Abraham’s Madras Cafe – Movie Review

அசல் தலைப்பு: மெட்ராஸ் கஃபே
வைத்திருக்க வேண்டிய தலைப்பு: ராஜீவ் காந்தியைக் கொன்றதை ஏன் இந்தியாவால் தடுக்க முடியவில்லை என்பதற்கான சப்பைக்கட்டு

சான் ஓஸே பக்கம் போனீர்கள் என்றால் மெட்ராஸ் கஃபே நிச்சயம் எட்டிப் பாருங்கள் என்பார்கள் பே ஏரியாவசிகள். இந்தியா – இலங்கை – ஈழ முக்கோண பிரச்சினை அறிவதற்கு மெட்ராஸ் கஃபே உதவும்.

ராஜீவ் காந்தி இறந்ததற்காக நாடே வருத்தப்படுகிறது. ஆனால், எண்ணற்ற தனி மனிதர்களின் சொந்த இழப்புகளை பிரச்சார தொனியின்றி போகிற போக்கில் இந்தப் படம் இயல்பாக முன்வைப்பது பிடித்திருந்தது. அன்னிய நாட்டின் அமைதிக்காக செல்லும் தூதுவர் ஈ.பி.ஆர்.எல்.எஃப்.புக்கும் புலிகளுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு சாவது; துப்பறிபவர்களின் குடும்பம் சீரழிவது போன்றவை போகிற போக்கில் வந்து போகின்றன.

படம் என்றால் வில்லன் இருக்கவேண்டும். இதுவோ கிட்டத்தட்ட ஆவணப்படம். விறுவிறுப்பாக சம்பவங்களைக் கோர்த்து, நடுநடுவே லட்சணமான மனைவியை ஊறுகாய் போல் தொட்டுக் கொண்ட சாகசப்படம். சுட்டுவிரல் நீட்டி தப்பு செய்தவர்கள் இவர்கள்தான் என்று குற்றஞ்சாட்டாமல், என்ன நடந்தது, எப்படி நடந்தது, எப்பொழுது நடந்தது என்பதை மட்டும் விவரிக்கிறார்கள்.

இலங்கையா… அவர்கள் 1983 படுகொலைகளை நிறைவேற்றினார்கள்.
விடுதலைப் புலிகளா… அவர்கள் நிறைய முதுகில் குத்தல்களும் கண்மூடித்தனமான கொள்கைகளும் கொண்டிருந்தார்கள்.
இந்திய ராணுவமா… மேலிடத்து உத்தரவை சிரமேற்கொண்டு பணிந்தார்கள்.
உளவுத்துறையா… எவர் யாருக்கு விசுவாசமாக இருந்தார்கள் என்பது அவர்களே அறியாமல் இயங்கினார்கள்.
இந்தியாவா… எந்த இந்தியர் என்பதைப் பொறுத்து விதவிதமாக மனிதருக்கே உரிய மாபாதகங்களுடன் நடந்துகொண்டார்கள்.
ராஜீவ் காந்தியா… யேசுவிற்குப் பிறகு உலகத்தில் உதித்த மகான். புத்தர் வழியில் அகிம்சையை போதித்து சென்னைக்கு வந்தவர். மகாத்மாவிற்குப் பிறந்த இந்தியாவில் உதயமான உத்தமர்!

படத்தின் குறைகள்? சென்னைத் தமிழுக்கும் ஈழத்தமிழுக்கும் வித்தியாசம் காட்டவில்லை என்று பொங்கலாம். மட்டக்களப்பு பிரதேசங்களையும் யாழ்ப்பாணத்தையும் குழப்புகிறார்கள் எனலாம். ஜான் ஆபிரகாம் படகில் போகும்போது சவரம் செய்த வழவழ முகத்துடன் பயணிக்கிறார் என விசனிக்கலாம். எனினும், அந்த நிருபர் ஜெயா கதாபத்திரத்தை அனிதா பிரதாப் போல் கோர்த்து வைக்காத துரோகத்தை மன்னிக்கவே முடியாது. அந்த ஒரு சங்கதிக்காகவே மேதகு தலைவரின் கட்டை வேகாது!

படத்தில் எல்லா மொழியும் பேசுகிறார்கள். நடுவே தமிழக திராவிட கட்சித் தலைவரை விளித்து, ‘தலைவா… பணம் வந்துடுச்சு! காரியத்த முடிச்சுடலாம்!’ போன்ற பேச்சுகள் பின்னணியில் ஓடுகின்றன. பொருளியல் வரலாற்று அறிவும், திரைமொழியின் நுணுக்கமான பார்வையும், பல்வேறு அரசியல்களை கிரகிக்கும் சக்தியும் கிடைக்கப் பெற்றவர்கள் மட்டுமே இந்தப் புலனாய்வுப் புனைவை புரிந்து கொண்டு பார்க்க இயலும்.

நல்ல வேளை… படம் எல்.டி.டி.ஈ. பிரபாகரன் இறந்த பிறகு வந்திருக்கிறது. இல்லையென்றால், கொஞ்ச நாளில் ஜான் ஆபிரஹாம் போட்டுத் தள்ளப்பட்டிருப்பார்.

Designer Fashion houses: Indian Art vs US Capital Business

முதிய வயதினரின் குணாதிசயத்தை சொல்லும் இரண்டு படம் பார்த்தேன். அமெரிக்க புருஷ லட்சணத்தின் கோர முகத்தையும் ஏழை இந்திய கோதையின் சின்னச் சின்ன ஆசைகளையும் முன்னிறுத்தினார்கள்.

மேற்கத்திய உலகின் ஆண்மகனை பிரதிநிதித்துவப்படுத்தும் Arbitrage முதற் படம். சாதித்துக் காட்டிய தலைமகனின் கதை. எப்பொழுதும் வெற்றியே பார்த்தவன், தடுமாறாமல் எப்படி பார்த்துக் கொள்கிறான்? பெரிய பணக்காரர்களிடம் இன்றைய காலம் வரை, எவ்வாறு பொருட் பெண்டிரை வைத்துக் கொள்வது சாதாரணமாக இருக்கிறது? பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்பும், பெர்னீ மாடாஃப் தகிடிதத்தங்களுக்குப் பிறகும் கூட, இன்னும் பெரிய நிதி நிறுவனங்களில் கணக்கு வைப்பில் கண்துடைப்பு எங்ஙனம் நிறைவேறுகிறது?

மஹாராஷ்டிராவின் மலைகிராம சொகுசு பங்களாவில் வேலை பார்ப்பவர் ’கங்குபாய்’. இளவயதிலேயே கணவனை எழுந்தவர். ‘The Help’ கதையின் நாயகிகள் போல் அடிமை வாழ்வு. ஆண்டாண்டு காலமாக, தலைமுறை தலைமுறையாக குழந்தைகளைப் பேணி பராமரித்து வளர்த்து விட்டுக் கொண்டேயிருப்பவள். தினசரி இரண்டு வேளை கஞ்சி. எதிர்பார்ப்பு இல்லாத அன்றாடம்.

ஆரெம்கேவியின் ஐம்பதாயிரம் வண்ணம் கொண்ட பட்டுப் புடைவை போல் இல்லாமல், கலைநயம் நிறைந்த கதையோவியங்கள் கொண்ட சரிகையும் வேலைப்பாடும் மின்னும் பட்டுப் புடவையை பார்க்கிறார். ஆசைப் படுகிறார். டி.என்.எஸ்.சி. வங்கி விளம்பரத்தின் குருவிகள் போல் சிறுக சிறுக சேமித்து வாங்கியும் விடுகிறார்.

டிசைனர் கடைகள் எவ்வாறு இயங்குகின்றன? அசலான பேஷன் ஷோக்கள் எப்படி இருக்கும்? கொஞ்சம் உள்மாந்தரம் கிடைக்கிறது.

H&M, Forever 21, Zara என்று கோடிகளில் புழங்கும் அமெரிக்க ஆடை பாணிகள் சாதாரணருக்கும் எளிதாக கிடைக்கிறது. இந்திய வடிவமைப்பாளர்கள் இவ்வாறு அணுகக் கூடிய விலைகளில் தங்கள் உடை அலங்காரங்களை அமைப்பதில்லை. இந்தியாவில் அரசர்களுக்கு மட்டுமே நவநாகரிகம் சாத்தியம்.

ராஜசபையில் பகட்டாக புதுப்பாங்குகளை அணிவது அசோகர் கால பாரதத்தில் இருந்து வந்தாலும், தையற்காரி என்று சில்லறைக் காசு மட்டுமே சாத்தியம் என்கிறது ’கங்குபாய்’. அமெரிக்காவில் எல்லாமே வியாபாரம். இந்தியாவில் அது கலை வடிவம்.

Vicky Donor: Hindi Movie Intro: Life as a Sperm donor after Marriage

இந்தியாவின் #1 மூலதனமான மக்கள்தொகை பிரச்சினையை இந்திப்படம் ’விக்கி டோனர்’ விவாதிக்கிறது. தில்லி டாக்டர்கள் தமிழக காளிமுத்துகள் போல் ரொம்ப காலமாகவே பிரபலம்.

விவாகரத்து ஆனவர்களை மருமகளாக ஆக்குவதில் பெற்றோர் காட்டும் பக்குவம்; திருமணங்களில் ஈகோவும் இனக்கவர்ச்சியும்; மன அழுத்தம் காரணமாக பாலியல் சிக்கல்; முதிர்கன்னியை மணப்பதால் மகப்பேறு இல்லாமை; கவலை இல்லா வாழ்க்கைக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் இடையே உள்ள paradox; தத்து எடுப்பதில் உள்ள அசூயை; ஆற்றல் மிகுந்த நல்ல விந்து கிடைப்பதில் உள்ள சிக்கல்; மரபணு சார்ந்து கிடைக்கும் பாரம்பரிய திறமையா அல்லது வளர்ப்பதின் மூலமே வெற்றித் திருமகனை உருவாக்க முடியுமா என்னும் விவாதம்…

இவ்வளவு விவகாரமான விஷயங்களை அலசினாலும், ரொம்பவே அலட்டிக்காமல், அதிகம் அழுவாச்சி சிந்தாமல் நகைச்சுவையுடன் எதார்த்தமாக சொல்லிச் சென்றார்கள். படத்தின் வெற்றிக்கு சேலம் சிவராஜ் – அன்னு கபூர் அவசியமான காரணம்.

அழகான பெண்களுக்கான குழுஊக்குறி

நன்றி: Terms of Service in New York Restaurants – Graphic – NYTimes.com

CupCaking, Artichokes, Fire Table 100 at Junoon New York City

Chitrahar: Hindi Songs

தமிழில் ஒலியும் ஒளியும் மாதிரி ஹிந்தியில் சித்ரஹார். தொண்ணூறுகளில் மனதைக் கவர்ந்து தொடர்ந்து நினைவில் பதிந்திருக்கும் பாடல்கள் பட்டியல்.

1. I Love My IndiaPardes

சிஸ்டத்திற்குள் இருந்தே சிஸ்டத்தை முறியடிப்பது போல், இந்தியா பிடிக்கும் என்று சொல்லி அமெரிக்க தேசி மாமனாரை வீழ்த்தும் மஹிமாவா… குடியரசு தின ஸ்பெஷலா…

2. Man MohiniHum Dil De Chuke Sanam

ஹீரோயினுக்கு மழைப்பாடல் கொடுப்பார்கள்; சின்னச் சின்ன ஆசை கேட்பார்கள். ஆனால், துள்ளல் எண்ட்ரி கொடுப்பது ஐஸ்வர்யா ராய்.

3. Mehndi Lagake RakhnaDilwale Dulhania Le Jayenge

விடிஞ்சா கல்யாணம்; மாப்பிள்ளையின் முன்னிலையில் காதலியுடன் கொஞ்சம் டூயட்; துளி பயம்; நிறைய ஆட்டம். நடிப்புக்கு கஜோல்.

4. Rangeela ReRangeela

ராம் கோபால் வர்மாவின் முதல் இந்தி படிக்கட்டு; ஏ ஆர் ரெஹ்மானின் ஆஸ்கார் பாய்ச்சல்; ஊர்மிளாவின் அலட்டலில்லாத பாங்கு; எல்லாவற்றையும் மிஞ்சும் கனவும் நம்பிக்கையும் கொப்பளிக்கும் அர்த்தமுள்ள வரிகள்.

5. Ek Ladki Ko Dekha To1942 A Love Story

இரண்டு நிமிடம் முன்னால் விழுந்த பனி போல் மெத்து மெத்தான ஒளித்தொகுப்பு.

6. Aati Kya KhandalaGhulam

இறுக்கமான நேரத்தில் இயல்பாக்கி, விவகாரமான கேள்வியை விளையாட்டாக கொக்கி போடும் லாவகம்.

7. Jadoo teri nazar: Dar

தொலைக்காட்சியில் நடிக்க ஆரம்பித்து, துணை நடிகராக உயர்ந்து, வில்லனாகக் கலக்கி இன்று ரா #1, மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன!

8. Phir Bhi Dil Hai Hindustani – Title Song

விளம்பரம் எடுப்பவர், திரைப்பாடலுக்கு காட்சியமைப்பு கொடுத்தால், இப்படித்தான் சௌக்கியமாக அமையும்.

9. Ramta jogiTaal

ஐஷ்வர்யா ராய்க்கு நடிப்பு வராவிட்டாலும், ஆட்டம் அமர்க்களம்.

10. Pehla NashaJo Jeeta Wohi Sikander

பக்கத்து வீடு; சின்ன வயது துவங்கி தோழி; முதல் காதல்; பதின்ம வயதில் கல்லூரியில் சகாக்களுடன் பார்த்த காட்சியின் நினைவு மீட்டல்.

Dhobi Ghat (Mumbai Diaries): குறிப்புகள்

கோஸ்லா கா கோஸ்லா‘ பிடித்திருந்தால் ‘தோபி கட்’ உங்களுக்குப் பிடிக்கும், என்கிறது நெட்ஃப்ளிக்ஸ். கூடவே ‘எ வெட்னெஸ்டே‘வும் பரிந்துரைக்கிறது.

என்னைப் போன்றோர் அல்காரிதம் எழுதும் வரை ‘எந்திரன்‘ உலகை ஆள முடியாது என்று நிம்மதி வரவழைக்கும் More Like… ரெகமன்டேஷன்கள்.

காவேரி கரையை விட்டு கூவம் நதிக்கரைக்கு வரும் மகாநதி கிருஷ்ணசாமி; எல்லோரும் பறந்துபோய்விட்ட உலகத்தில் தனிமையிலே இனிமை காணும் WALL-E; பிழைப்பில் எந்த சமரசமும் செய்யாமல் அதே சமயம் பெண்ணாகவும் போலியாக நடிக்கும் டூட்ஸி; கேபிடலிசத்தைக் கிழிக்கும் படங்களை ஹாலிவுட் பட்ஜெட்டில் எடுக்கும் மைக்கேல் மூர்; எல்லாவற்றையும் கண்டு களித்து, கேளிக்கையும் விமர்சனமும் செய்து கொண்டிருக்கும் நாம்.

ஆசையாக வளர்க்கும் ஆட்டை, ஆன்டவனின் கட்டளையாக பக்ரீத் விருந்துக்கு வெட்டுவது போல் பெற்றோரின் அரேஞ்ச்ட் மேரேஜுக்கு உட்பட்டவள் – யாஸ்மின்; மஹாநதியின் ஹீரோ போல் ஆசைகள் கொண்டவள். நடுத்தர வர்க்க டீசன்ஸி கொண்டு பயப்படுபவள்.

கமல் போல் கலைக்காக தனிமையைத் தேடும் குழப்பவாதி; வால்-ஈ போல் தன் சித்தப்படி நடப்பவர்; நடுத்தர வயது அலைக்கழிப்பு கொண்டவர்.

White-guiltல் மாட்டிக் கொண்ட ஏபிசிடி; சிக்கோ, துப்பாக்கி கொலம்பைன் என்று படமாக எடுத்துத் தள்ளும் மைக்கேல் மூர் – ஷாய்.

இவர்களுடைய அழுக்குகளைத் துவைக்கும் வண்ணான் முன்னா.

திரைப்படத்தில் நிறைய முயன்றிருக்கிறார்கள். முஸ்லீம் கதாபாத்திரங்கள். பம்பாய் ட்ரெயிலர். ஸ்லம்டாக் மில்லியனர். தாதா மெட்ரோ கம்பெனி.

அழகான பெண் என நினைக்கும்போது ‘நான் லெஸ்பியன்’ என்று சொல்லிவிடுவது போல் இந்தப் படத்தை ரசிக்கமுடியாமல் போய்விடுகிறது.


Buzz by Siddharth Venkatesan

பாய்ந்தோடிக்கொண்டே இருக்கும் பெருநகரமான மும்பையை பற்றி இதுவரை சொல்லப்படாத எதை ஒரு புதிய படம் சொல்லிவிட முடியும்? மிக மிகப்பரிச்சயமான ஓர் இசையை – பீத்தோவானின் ஐந்தாவது சிம்ஃபனி என்று வைத்துக்கொள்வோம் – நிகழ்த்தப்போகும் ஓர் இசை நடத்துனரின் சங்கடத்திற்கு நிகரானது இது. தந்திக்கருவிகள் இசையின் முதல் ஸ்வரங்களை மீட்டத்துவங்கியதுமே ரசிகர்கள் அடுத்து வரும் பகுதியை – ஒவ்வோர் மாத்திரையாக – எதிர்பார்க்கத்துவங்கிவிடுவார்கள். வெளிப்பாட்டில், வேகத்தில், உத்தியில் சில வேறுபாடுகளை கொண்டுவரலாம். ஆனால் ஒட்டுமொத்த இசைக்கோவையின் பிரம்மாண்டம்… அது மாற்றமுடியாதது. ஆனால், தந்திவாத்தியக்காரர்களின் குழாமிலிருந்து ஒரே இரு செல்லோ வாசிப்பாளரை மட்டும் முன்னே வரச்செய்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். இது போலவே காற்றுவாத்தியக்காரர்களிலிருந்து ஒற்றை சாக்ஸஃபோன் வாசிப்பாளரையும் தோல்வாத்தியக்குழாமிலிருந்து ஒற்றை டிம்பன் வாசிப்பாளரையும், பிராஸ் குழாமிலிருந்து ஒற்றை ட்ரம்போன் வாத்தியக்காரரையும்… மற்ற அனைவரும் மௌனமாகின்றனர். இந்த நால்வரிலிருந்து எழும் ஒலி முழு சிம்ஃபனியின் ஒலியாய் ஒரு போதும் ஆகாது. ஆனால், இந்த சோக இழைகளினூடே, அதன் முழுமையை – கண்ணுக்கு முன் நிகழ்வதில் அல்ல, உங்கள் தலையினுள் – நீங்கள் உணர்ந்துகொண்டே இருப்பீர்கள்.

பரத்வாஜ் ரங்கன் எழுதிய “தோபி காட்” விமர்சனத்தின் ஒரு பத்தியின் மொழியாக்கம். மிக நல்ல விமர்சனம்: Review: Dhobi Ghat « Blogical Conclusion

தோபி காட்: நுட்பமான திரைமொழி! « கொதித்தெழு, புது உலக வாழ்வினை சமைத்திட…!

அமெரிக்காவில் முதலீட்டு வங்கி நிபுணராக பணிபுரியும், தற்காலிக விடுமுறைக்கு மும்பைக்கு வரும் ஷாய் எனும் பெண், வெளி மாநில கட்டுமானத் தொழிலாளர்களை ஓவியங்களாக வரையும் அருண் எனும் ஓவியன், சல்மான் கான் போல சினிமா நட்சத்திரமாக ஆசைப்படும் சலவைத் தொழிலாளியும், இரவில் எலி அடிக்கும் நகர சுத்தித் தொழிலாளியுமான முன்னா என்றழைக்கப்படும் ஜகீம், யாஸ்மின் என்ற திருமணமான இளம் பெண் ஆகிய நால்வரது வாழ்க்கை.

நால்வரது வாழ்க்கையும் சில புள்ளிகளில் ஒன்று கலப்பதையும், ஒருவர் மீது ஒருவர் ஏற்படுத்தும் பாதிப்புகளையும், அதன் மூலம் பெருநகர வாழ்வின் வர்க்க, சமூகப் பிரிவினைகளை ஒவ்வொருவரும் தத்தமக்கே உரிய முறையில் உணரத் தலைப்படுதலையும், திரைப்படம் சொல்கிறது.

முன்னாவிடம் ஷாய் தனது பீகார் கிராமத்தின் நினைவு வருவதில்லையா எனக் கேட்கிறாள். கிராமத்தை நினைத்தாலே தான் உணர்ந்த பசிதான் நினைவுக்கு வருவதாக முன்னா கூறுகிறான். நகருக்கு இடம் பெயர்ந்த தொழிலாளிகள், உரையாடலின் துவக்கத்திலேயே தமது கிராமத்தைக் குறித்து நினைவு கூறும் பொழுது, இப்படியொரு கருத்தை உதிர்ப்பார்கள் எனத் தோன்றவில்லை.

பக்கோடா பேப்பர்கள்: தோபி காட் – ஹிந்தி சினிமா

தன் சகோதரனைப் போல முறையற்ற வழிகளில் சம்பாதிக்காமல், நேர்மையாகச் சம்பாதிப்பதை விரும்பும் முன்னா, அப்பார்ட்மெண்ட்களில் எலிகளை அடித்துக் கொல்வது, ரயிலில் அடிபட்டு இறப்போரை நகர்த்திக் கிடத்துவது போன்றவைகளையும் கூடுதல் பணம் சம்பாதிக்கும் பொருட்டு செய்து வருகிறான் முன்னா. முன்னாவாக ப்ரதீக்பப்பார் (ஸ்மிதா பாட்டீல் / ராஜ்பப்பார் மகன்) அறிமுகம்

வீட்டை செட் செய்யும் போது அருணுக்கு ஏற்கனவே அங்கிருந்தவர்கள் விட்டுச் சென்ற மூன்று வீடியோ காஸட்டுகளும், ஒரு வெள்ளிச் செயினும், மோதிரமும் கிடைக்கிறது. “அவற்றை யாரும் பெற்றுக்கொள்ள வரமாட்டார்கள், வீசிவிடு” என்று சொல்கிறார் வீட்டு ஓனர்.

அந்த வீடியோக்களை பார்க்க ஆரம்பிக்கிறான் அருண். சாதாரணமாகத் துவங்கும் அந்த வீடியோ, உத்தரபிரதேசத்தின் மல்யாபாத் கிராமத்திலிருந்து திருமணமாகி வந்த ஒரு இளம் பெண், யாஸ்மின், தன் சகோதரனுக்காக, மும்பையை சுற்றிக் காட்டிக் கொண்டே பேசிய கடிதங்கள் அவை. அந்த வீடியோக்கள் பார்ப்பது அருணின் தினசரி வேலையாகவே ஆகிவிடுகிறது. ஒரு அடிக்ட் போல அவற்றை பார்த்துக் கொண்டே நேரங்களைக் கழிக்கிறான். அவனுடைய புதிய ப்ராஜக்ட் ஒன்றிற்காக அதைப் பார்த்து பல ஓவியங்களும் வரைகிறான்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan|: தோபி காட்[Dhobi Ghat][2011][இந்தியா][ஹிந்தி]

இயக்குனர் அலஜென்ரோ கொன்சலேசின் ஆஸ்தான இசையமைப்பாளரான குஸ்டவோ சண்டவோலல்லா இருமுறை ஒரிஜினல் ஸ்கோருக்காக ஆஸ்கர் விருது வாங்கியவர், அமெர்ரோஸ் பெர்ரோஸ், பாபெல், 21 க்ராம்ஸுக்கு இசையமைத்து உலகப்புகழ் பெற்றவர் அவர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

சாருவின் விமர்சனம்

இது மிகக் குறைந்த செலவில், கெரில்லா படப்பிடிப்பு என்ற உத்தியின் மூலம் எடுக்கப்பட்டது. அதாவது, எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், ஒரு குட்டி ராணுவ அணிவகுப்பு அளவுக்கு ஆள் படை அம்புகளும் விளக்குகளும் ஜெனரேட்டர்களும் இல்லாமல், இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே, நிஜமான சூழலில், படம் எடுக்கப்படுகிறது என்ற விஷயமே யாருக்கும் தெரியாமல் எடுப்பதுதான் கெரில்லா ஷூட்டிங். ஸ்டார்ட், ரோலிங், கட், இடையில் இயக்குனர் போடும் சுத்தத் தமிழ் வார்த்தைகள் என்ற எந்த சத்தமும் இருக்காது. ட்ராலிகள் இயங்காது. பூதாகாரமான விளக்குகள் இல்லை. சினிமா படப்பிடிப்பு என்று நாம் அறிந்திருக்கும் எந்த அடையாளமும், paraphernaliaவும் இல்லாமல் ரகசியமாக எடுக்கப்படுவதே கெரில்லா ஷூட்டிங். இப்படி எடுப்பதால் மட்டுமே ஒரு நகரத்தை அதன் உயிர்த்தன்மை கெடாமல் காண்பிக்க முடியும். அந்த வகையில் டோபி காட்டை எல்.எஸ்.டி.க்கு அடுத்தபடியாக இந்திய சினிமாவில் நடந்திருக்கும் புரட்சி என்று சொல்லலாம். உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளரான குஸ்தாவோ சந்த்தாவோலால்யாவை வைத்து எடுக்கப்பட்டும் டோபி காட்டின் பட்ஜெட் 11 கோடிதான். வசூல், படம் வெளிவந்த இரண்டே தினங்களில் 11 கோடியைத் தாண்டி விட்டது.