Tag Archives: Fiction

ஆதவன்

நன்றி: சந்தோஷ் குரு :: கசாகூளம்

எழுத்து விமர்சகர்:

  • என்னைத் தள்ளுபடி செய்துதான் சிலருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதென்றால் அதை நான் கொடுப்பானேனென்று. பல சமயங்களில் இவர்களுடன் சேர்ந்து நானும் சிரிக்கிறேன்.
  • என் சிருஷ்டி அவருடைய பார்வைக்கு வந்ததும், அவரால் படிக்கப்பட்டதும் விமரிசிக்கப்பட்டதுமே என் அதிர்ஷ்டந்தானே? பாக்கியந்தானே?
  • முத்திரைக்காக ஏதோ ஃபார்முலா இருப்பது போலவும், அந்த ஃபார்முலாவை நான் சாமர்த்தியமாகக் கையாண்டிருப்பது போலவும் ஒரு அர்த்தம் அவர் பேச்சில் தொனித்தது.
  • ஒரு கதையின் சதையும் உயிரும் போன்ற தொனிகளையும் நிறங்களையும் பாவங்களையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தெடுத்து, உள்ளேயிருக்கும் எலும்புக் கூட்டின் ஜாயிண்ட்டுகளை எண்ணுமளவுக்கு – சங்கேதங்களும் குறியீடுகளும் இல்லாத இடங்களிலெல்லாம் இவை இருப்பதாக நினைத்து மிரளும் அளவுக்கு – இலக்கிய ஞானம் அபரிமிதமாகச் செழித்து வளர்ந்திருப்பது பாராட்டுக்குரிய விஷயந்தான். ஆனால், இத்தகைய ஞானஸ்தானம் பெறாத சராசரி மக்களுக்காகத்தான் நான் கதைகள் எழுதுகிறேன்.

வாசகர்: அபிமானி

  • பல நாட்களாக என் எழுத்துக்களைப் படித்து வந்து, பிறகு திடீரென்று ஒருநாள் என்னை நேரில் கண்டதும் உணர்ச்சிவசப்பட்டவர்களாய் என் கையைப் பிடித்துக் குலுக்கி, சந்தோஷ மிகுதியால் என்ன சொல்வதென்று தெரியாமல் திணறி, விலையுயர்ந்த முத்துக்கள் என் வாயிலிருந்து உதிரப் போகின்றனவென்ற எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் என் முகத்தைப் பக்தி பரவசத்துடன் பார்த்து, என்னைத் தவிப்பிலும் சங்கடத்திலும் ஆழ்த்தியவர்கள் இருக்கிறார்கள்.
  • எந்தச் சம்பாஷணையையும்போல இந்தச் சம்பாஷணைக்கும் ஒரு மறுபக்கம் உண்டு. நீங்கள்தான் அந்த மறுபக்கம்; உங்கள் எதிரொலிகளே இச்சம்பாஷணைக்கு முழுமை தரவேண்டும். எத்தனைக்கெத்தனை இந்த எதிரொலிகள் முதிர்ச்சியும் நுட்பமும் மிக்கனவாயிருக்கின்றனவோ, அத்தனைக்கத்தனை நம்மிருவருக்குமே மகிழ்ச்சியும் பயனும் தரக்கூடியதாக இந்த முழுமையின் தேடல் அமையும்.

சகா: அறிந்தவர்களும் தெரிந்தவர்களும்

  • ‘ஓ! சிலர் எவ்வளவு வயதானாலும் முதிர்ச்சி பெறுவதில்லை!’ என்று அவன் என்னைப் பற்றி நினைத்திருக்க வேண்டும். நானும் அவனைப் பற்றி அதையேதான் நினைத்தேன் என்பது அவனுக்குத் தெரியுமோ என்னவோ?

அங்கீகாரம்: வெகுசன ரசனை: பிரபல ஊடகமும் சிறுபத்திரிகையும்

  • பெரிய பத்திரிகைகளுக்கு எழுதுவதால் ஒரு டிஸிப்லின் வருகிறது. ஒரு பொறுப்புணர்ச்சி வருகிறது. ஒரு கட்டத்தில் இந்த டிஸிப்ளின் எழுத்தாளனுக்கு அவசியமென்று நான் நினைக்கிறேன். வரையரையற்ற சுதந்திரம், அளவுக்கு மீறிய செல்லத்தைப் போலத்தான் ஒரு எழுத்தாளனைக் கெடுத்து விடுகிறது.

புனைவு எழுத்தாளர்: கதைசொல்லி

  • என்னிடம் கதையெழுத எளிய ஃபார்முலாக்கள் எதுவும் இல்லை. ஒவ்வொரு கதையையும் மிகவும் யோசித்து, மிகவும் கஷ்டப்பட்டுத்தான் எழுதுகிறேன்.
  • ஒருவிதத்தில் என் எழுத்துக்கள் யாவுமே நுட்பமான, நேர்மையான சம்பாஷணை முயற்சிகளென்றுதான் சொல்லவேண்டும். சாதாரண face to face சம்பாஷணையின் கெடுபிடி, பெளதிக நிர்ப்பந்தங்கள், பரஸ்பர தாட்சண்யங்கள், வேஷங்கள், நமக்கே புரியாத சில குரோத அலைகள் ஆகியவற்றினூடே என் எண்ணங்களைக் கோர்வைப் படுத்த முடியாத ஒரு தாபம் தான் என்னை மீண்டும் மீண்டும் எழுத்துக்கு விரட்டுகிறது.
  • இலக்கியப் பரிணாமம், புதிய மோஸ்தர் என்ற பிரக்ஞை மட்டுமே ஓர் எழுத்தாளனிடம் தூக்கலாக அமைவது எழுத்தாளனுடைய ‘தான்’ அல்லது அகங்காரத்தின் பிரதிபலிப்பே அல்லவா?
  • எனக்கு லேபிள்கள் முக்கியமில்லை. மனிதர்கள்தான் முக்கியம். அவர்களுக்குள்ளே ஆதாரமாக, அடிப்படையாக இருக்கும் சில உணர்வுகளையும் ஞாபகங்களையும் வருடுவதிலும் மீட்டுவதிலும்தான் எனக்கு அக்கறை.

சமூக சித்திரம்: நடுத்தர வர்க்கம்

  • பிறர் மீதும், அவர்கள் சார்பாகத் தன்மீதும், பெரிதுபடுத்தப்பட்ட பிம்பங்களை ஏற்றி, இந்தப் பிம்பங்களே சிறைகளாக மாறுகிற அவஸ்தைக்கு, என் பாத்திரங்கள் போலவே நானும் விதி விலக்கல்ல என்று இதன் மூலம் உணர்ந்து நான் சிரித்துக் கொள்கிறேன்.
  • ஒருவிதத்தில் கீறல்களும், அவற்றின் விளைவுகளுமே வாழ்க்கை என்றுகூடச் சொல்லலாம்.
  • ‘நடக்கிறபடி நடக்கட்டும், நமக்கேன் வம்பு?’ என்கிற play safe மனப்பாங்கின் கைதிகள். அறிவுஜீவிகள், அந்தந்த நேரத்தில் நாகரிகமாக, அதிகச் செலாவணி உள்ளதாக உள்ள சில சார்புகளை அபிநயித்துக் கொண்டு, சில ‘தியரி’ களை உச்சாடனம் செய்துகொண்டு, ‘உஞ்ச விருத்தி’ செய்கிற ஒரு பிராமண பிம்பத்தின் கைதிகள்

ஏன் எழுதுகிறேன்? எப்பொழுது வரை ஆக்கங்கள் தோன்றும்?

  • ஏதோ ஒரு கட்டத்தில் நான் திசை திரும்பும்போது, இரண்டு பேர் முகத்தைச் சுளிக்கிறார்கள் என்பதற்காக நான் திசையை மாற்றிக் கொள்ளத் தயாராயில்லை. குறிப்பிட்ட ஒரு குழுவினருக்கும் மட்டத்தினருக்கும் இணக்கமான ஒரு வேஷத்தை அணிந்துகொண்டு, அவர்களுடைய தர்பாரில் ஆஸ்தான எழுத்தாளனாகக் கொலுவிருப்பதில் எனக்குச் சிரத்தையில்லை. எழுத்து எனக்கு ஒரு அழகிய மீட்சி. அதை ஒரு பந்தமாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை.

எழுத்தினால் ஆய பயன்? கதை என்ன கிழிக்கப் போகிறது? ஏன் படிக்கிறீர்கள்?

  • நாமிருவருமே பங்குதாரர்களாக உள்ள இந்த அமைப்பைப் பற்றி நான் உங்கள்முன் சமர்ப்பிக்கும் ஒரு நுண்ணிய கருத்துச் சித்திரமாகவே இந்த நாவலை நீங்கள் – அதிக பட்சமாக – கொள்ளவேண்டும்.

காகித மலர்கள்

  • இந்தச் சித்திரத்தில் வாழ்வின் இயல்பு பற்றிய ஒரு தவிப்பும் சோகமும் இருக்கிறது; கூடவே வாழ்வின் சாத்தியக்கூறுகள் பற்றிய ஓர் ஆர்வமும் பரபரப்பும் இருக்கிறது. ஒப்பாரி அல்லது வெறும் அங்கதச் சிரிப்பைக் கடந்த நிலையில் – வாழ்வின் பிரும்மாண்டத்தையும் ‘வெல்ல முடியாத தன்மை’ யையும் உணர்ந்த ஒரு பணிவுடனும் தன்னடக்கத்துடனும் – இது எழுதப்பட்டிருக்கிறது.

ஆதவனாகிய நான்

  • இலக்கியக் கூட்டங்கள், குழுக்கள், சர்ச்சைகள் இவையெல்லாம் எனக்குச் சலிப்பைத்தான் ஏற்படுத்துகின்றன. ஒரு சிறையிலிருந்து மீளும் முயற்சியில் இன்னொரு சிறையில் போய்ச் சிக்கிக் கொண்ட உணர்வு ஏற்படுகிறது. இலக்கியச் சிறையில் சமர்த்தாக ஒடுங்கிக் கொண்டு, சூப்பிரண்டுகளிடமும் வார்டர்களிடமும் நல்ல பெயர் வாங்கிக் கொள்ளும் பொறுமையும் சாதுரியமும் சிலருக்கு இருக்கிறது.
  • எழுத்து எனக்கு ஒரு அலங்காரச் சேர்க்கையல்ல. யாரையும் பிரமிக்கச் செய்வதற்காகவோ, யாராலும் ஒப்புக் கொள்ளப் படுவதற்காகவோ நான் எழுதவில்லை. இது பொழுதுபோகாத பணக்காரன் வளர்க்கும் நாயைப் போல் அல்ல.

திசைகள் இதழ், தீபம் கட்டுரைகள், படைப்பாளிகள் உலகம்

ஜெயந்தி சங்கர்: புது புத்தகங்கள்

mana-pirigai-novel-fiction-tamil-literature-jayanthi-shankar1. மனப்பிரிகை (நாவல்)

அவனுக்கும் அவளுக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போகிறது. ஆனால், இருவருமே ‘திருமணம்’ எனும் வாழ்நாள் கமிட்மெண்டுக்குத் தயாராகவில்லை என்று கருதுகிறார்கள்.

அவ்வாறான வாழ்நாள் பந்தத்துக்கு ஒருவருக்கொருவர் சரியானவர் தானா என்று எப்படித்தான் தெரிந்து கொள்வது என்று யோசிக்கிறார்கள். ஒரு உடன்படிக்கைக்கும் வருகிறார்கள். என்ன உடன்படிக்கை? சந்தியாவும் கோபியும் சேர்ந்தார்களா? திருமணத்திலா? என்னதான் நடந்தது?

நிறைய கிளைக்கதைகளுடன் சிங்கப்பூரில் நடக்கும் இந்தக்கதை புதிய மொழியிலும் வடிவிலும் சொல்லப்பட்டுள்ளது.

பக்கம்- 275 :: சந்தியா பதிப்பகம்


thirai-kadalodi-jeyanthy-sankar-books2. திரைகடலோடி (சிறுகதைகள்)

ஆசிரியரின் ஐந்தாவது சிறுகதைத் தொகுதியான ‘திரைகடலோடி’யில் பத்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

ரவி சுப்ரமணியம் எழுதியிருக்கும் முன்னுரையில் இருந்து: ‘இந்தக்கதைகளில் வரும் மனிதர்கள் நம் மனிதர்கள். இரண்டாயிரம் வருஷமாய் பொருள் தேடப் பிரிந்து செல்லும் மரபுடைய நம்மினத்தின் வாரிசுகள்.

கதைகளைத் திறம்படச் சொல்வதில் தேர்ச்சி பெற்றிருக்கும் உள்ளடக்கத் தேர்வில் செலுத்தும் கவனம் அசாத்தியமானதாக இருக்கிறது. மொழியையும் உணர்வுகளையும் சம்பவங்களையும் சம்பாஷணைகளையும் ஊடுபாவாய் இவர் இணைக்கும் விதம், கதைக்குள் தென்படும் தற்காலத் தன்மை போன்றவை இவரைத் தனித்துக் காட்டுகிறது.’

பக்கம் – 130 :: மதி நிலையம் வெளியீடு


meen-kulam-chinese-shorts-children-jayanthy-sankar3. மீன் குளம்

(சிறார் சீனக் கதைகள் – ஆங்கிலம் வழி)

அரிசி வீதி, இந்த மருத்துவமனையில் பேய் இருக்கிறது, நீர்ச் சக்கரம், டிராகனின் முத்து, மீன் குளம், தவளையின் கால்கள் உள்ளிட்ட 33 சிறார்கதைகள் அடங்கிய இந்த நூல் சிறார்கள் படிக்கக்கூடிய எளிய மொழியில் ஆங்காங்கே கோட்டோவியங்களுடன் அழகிய வண்ண அட்டையில் அமைந்துள்ளது. சீனக்கலாசாரத்தில் சிறார்களுக்கு ருசியும் ஈடுபாடும் ஏற்படக்கூடிய சுவாரஸியம் நிறைந்த கதைகள்.

பக்கம் – 160 :: மதி நிலையம் வெளியீடு

2008 – Tamil Books

சென்ற முறை இந்தியா போனபோது எனி இந்தியனில் வாங்கிய புத்தகப் பட்டியல். பரிந்துரைத்த எனி இந்தியன் தேவராஜனுக்கும் நிழல்கள் பிரசன்னாவுக்கும் நன்றி. கிழக்குப் பதிப்பகத்தில் வாங்கியது தனிப் பட்டியல்.

படித்ததும் பிடித்தவை நீலவண்ணத்திலும், கவராதவை சிவப்பு வண்ணத்திலும், படிக்க எடுக்காதவை கறுப்பு நிறத்திலும் உள்ளது.

வெங்கட்டின் இவ்வருடத் தொகுப்பு :: சென்னை புத்தகக் கண்காட்சி 2009

‘நுனிப்புல்’ உஷா: 2009ன் புத்தக சந்தையும் நான் வாங்கியவைகளும்

தொடர்புள்ள சில:

1. இரண்டாம் ஜாமங்களின் கதை: சல்மா – காலச்சுவடு
2. நாஞ்சில் நாடன் கதைகள் – தமிழினி
3. கானல் நதி: யுவன் சந்திரசேகர் – உயிர்மை
4. கணையாழி கடைசிப் பக்கங்கள் – சுஜாதா
5. சிலுவைராஜ் சரித்திரம்ராஜ் கௌதமன் – தமிழினி
6. ஆழிசூழ் உலகு: ஜோ டி குருஸ் – தமிழினி
7. கன்னி: ஜெ.பிரான்சிஸ் கிருபா – தமிழினி
8. யாமம்: எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை
9. மணல் கடிகை: சூத்ரதாரி – தமிழினி
10. சாருநிவேதிதா ராஸ லீலா – உயிர்மை
11. சிலிர்ப்பு: தி. ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதை தொகுப்பு
12. வெள்ளாவி: விமல் குழந்தைவேல் – உயிர்மை
13. கமண்டல நதி – நாஞ்சில் நாடனின் புனைவுலகு: ஜெயமோகன் – தமிழினி
14. குள்ளச்சித்தன் சரித்திரம்: யுவன் சந்திரசேகர் – தமிழினி
15. நான் சரவணன் வித்யா: லிவிங் ஸ்மைல் வித்யா – கிழக்கு
16. நளினி ஜமீலா – ஒரு பாலியல் தொழிலாளியின் சுய சரிதை: தமிழில்: குளச்சல் மு. யூசுப் – காலச்சுவடு
17. கண்ணீரைப் பின் தொடர்தல்: ஜெயமோகன் – உயிர்மை
18. நிழல் முற்றம்: பெருமாள் முருகன்
19. மகாராஜாவின் ரயில்வண்டி: அ. முத்துலிங்கம்
20. வாஸவேச்வரம்: கிருத்திகா
21. சூடிய பூ சூடற்க: நாஞ்சில் நாடன்
22. கோவில் – நிலம் – சாதி: பொ. வேல்சாமி – காலச்சுவடு
23. பூமியின் பாதி வயது: அ. முத்துலிங்கம்
24. பெர்லின் இரவுகள்: பொ கருணாகரமூர்த்தி – உயிர்மை
25. ஆழ்நதியைத் தேடி: ஜெயமோகன் – உயிர்மை
26. ஆஸ்பத்திரி: சுதேசமித்திரன் – உயிர்மை
27. நிழல்வெளிக்கதைகள்: ஜெயமோகன்
28. நித்தியக்கன்னி: எம். வி. வெங்கட்ராம்
29. நவீனன் டைரி: நகுலன்
30. நினைவுப் பாதை: நகுலன்
31. இவர்கள்: நகுலன்
32. வாக்குமூலம்: நகுலன்
33. கூகை: சோ தர்மன்
34. தூர்வை: சோ தர்மன்
35. விசும்பு: ஜெயமோகன் – எனிஇந்தியன்
36. உயிர்த்தலம்: ஆபிதீன் – எனிஇந்தியன்
37. நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்: ஜெயமோகன் – உயிர்மை
38. நதியின் கரையில்: பாவண்ணன் – எனிஇந்தியன்
39. துங்கபத்திரை: பாவண்ணன் – எனிஇந்தியன்
40. ஸீரோ டிகிரி: சாரு நிவேதிதா – உயிர்மை
41. என் இலக்கிய நண்பர்கள்: ந.முருகேச பாண்டியன் – உயிர்மை
42. ஒற்றன்: அசோகமித்திரன்

Writer Dilip Kumar Meet

திலீப்குமார் பாஸ்டன் பக்கம் எட்டிப்பார்த்து பல மாதம் ஆகிவிட்டது. நினைவில் இருப்பதை சேமித்து வைக்கும் முயற்சி.

  • தமிழ் எழுத்தாளன் வெளிநாட்டுக்கு சென்ற சம்பவம்: நடுவராகப் பணியாற்ற அயல்நாடு அழைத்திருக்கிறார்கள். நள்ளிரவில் கிளம்பும் விமானத்தில் பயணம். இரவு பத்து மணிக்கு வரும் தண்ணீர் லாரியில் இரு குடம் நிரப்பி மூன்று மாடிப்படி ஏறி வீட்டில் வைத்துவிட்டுக் கிளம்புவதாக திட்டம். வழக்கம் போல் அரை மணி நேரம் தாமதமாக வராமல் கால் மணிநேரம் மட்டுமே தாமதமாக தண்ணீர் கொடுக்கப்பட்டதால் விமானத்தைப் பிடிக்க முடிந்தது.
  • ஆசான் மௌனி? : நன்றி – (மெளனியின் படைப்புக்களின் இலக்கிய இடம்: ஜெயமோகன்) மெளனி மீதான முதல் முக்கிய விமரிசனம் இலக்கிய சிந்தனை அமைப்புக்காக திலீப் குமாரால் எழுதப்பட்டு அன்னம் விடுதூது இதழில் அச்சான கட்டுரைதான். அது பிறகு ‘மெளனியுடன் கொஞ்ச தூரம்’ என்றபேரில் நூலாக வானதி வெளியீடாக வந்தது. மெளனியை மிதமிஞ்சி பாராட்டுபவர்களையும் அவரை முற்றாக நிராகரிப்பவர்களையும் நிராகரிக்கும் திலீப்குமார்:

‘என்னைப்பொறுத்தவரை ஒரு தேர்ந்த வாசகன் இலக்கியத்தை அணுகும்போது பரபரப்புக்கோ புல்லரிப்புக்கோ ஆளாகமாட்டன் என்றே நம்புகிறேன். மாறாக இலக்கியத்தின் வரையறைகளையும் வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான இடைவெளியையும் உணர்ந்தவனாகவே அவன் இருப்பான்’.

  • நண்பன் அசோகமித்திரன்: தான் பார்த்த அன்றாட விஷயத்தை அ.மி. எப்படி மாற்றுப்பார்வை என்னும் நுண்ணிய கவனிப்பு கொண்டு தன் கருத்தை, தன்னுடைய ஆதங்கத்தை, சமூக கோபத்தை கனல் கக்காமல்; அதே சமயம் வீரியம் குறையாமல்; சத்தமாக மட்டும் பேசி அனல் அடிக்காத பேச்சுநடையில் பகிர்ந்த நிகழ்வுகளை சொன்னார். கசப்பு இருக்கும்; ஆனால் கசண்டு போகாத பார்வை.
  • பால்யகாலம்: கரடுமுரடான இளமை அமையாதவர்கள் நல்ல படைப்பாளியாக முடியாது என்னும் என் நம்பிக்கையை திலீப் உறுதி செய்கிறார். பெரும்பணத்தையும் ஏழ்மையையும் சடாரென்று சட்சட்டென்று உடனடியாக அனுபவித்தது; அணா அணாவாக சேர்த்து ஜெயகாந்தனின் ‘ஞானரதம்’ படிக்கும் இலக்கிய தாகம்.
  • திலீப் குமாரின் கோயமுத்தூர்: ஏதோ பேசிய ஞாபகம் இருக்கிறது. சொந்த விஷயமாக இருக்கும்.
  • கணையாழி: கணையாழியில் முதல் கதை வெளியான குதூகலம்; கைக்கு கிட்டிய சன்மானம், வாய்க்கு கிடைக்காத அவஸ்தைகள்; தொகுப்பது, இதழ்களை சேமிப்பது, பிடித்ததை பாதுகாப்பது என்று தொடரும் தமிழ் சேவை என நிறைய பகிர்ந்தார்.
  • ‘க்ரியா’ பதிப்பகமும் ஜி நாகராஜனும்: பேராசிரியர் நாகராஜனின் மதுரைக் காலம், கதை எழுதும் விதம், நாவன்மை, பேச்சு சாமர்த்தியம், சென்னை விஜயங்கள்.
  • நாடகத்தில் அசோக மித்திரன்: அந்த நாடகத்தில் அவரும் துக்கினியூண்டு கதாபாத்திரமாக இருந்திருக்கிறார். ‘பரீக்சா’ குழு நாடகம் முடிந்த அடுத்த நாள் ‘போஸ்ட் மார்ட்டம்’ என்னும் தலைப்பில் அலசல் நடத்தும். பேருந்து நிலையத்தில் அமி.யைப் பார்த்த சகநடிகர், ‘நாளைக்கு போஸ்ட் மார்ட்டம் இருக்கு. வந்துடுங்க!” என்கிறார். ‘நாடகம் இறந்தால், செஞ்சுத்தானே ஆகணும்’, என்று துளிக்கூட சிரிப்பு வராத நகைச்சுவை.
  • ‘மறுப்பதற்கு தைரியம் வேண்டும்’: ‘எதையும் ஒப்புக் கொள்வது சுலபமானது. “பேச வருகிறாயா?” என்றழைத்தவுடன் பிகு செய்து பின் வந்துவிடுவது; “எழுத இயலுமா?” என்றவுடன் கேட்டதை ஆக்கித் தந்துவிடுவது என்பது இயல்பு. கடினமான காரியமல்ல! ஆனால், “செய்ய மாட்டேன்!” என்று புறக்கணித்து ஒதுங்கிவிடுவது அனைவராலும் இயலாது’ என்றார்.
  • கவிதைக்கும் கதைக்கும் உள்ள வித்தியாசம்: தன்னுடைய அனுபவத்தை அப்படியே கொடுப்பது கவிதை என்று சொன்னதாக நினைவு. (சந்திப்பு முடிந்தவுடனேயே எழுதியிருக்க வேண்டும் 😦
  • மொழிபெயர்ப்பு பற்றாக்குறை: ‘தமிழில் வெளியாகியுள்ளதை ஆங்கிலத்தில் மொழியாக்குவது மிக மிகக் குறைவு. இல்லவே இல்லை என்று கூட சொல்லலாம். நோபல் போன்ற பரிசு இருக்கட்டும். குறைந்தபட்ச கவனிப்பு கிடைக்கவாவது நல்ல மொழிபெயர்ப்புகள் ஆயிரக்கணக்கில் செய்யவேண்டும். எத்தனையோ பொக்கிஷங்களும் எழுத்தாளர்களும் தமிழிலக்கியமும் வெளியே தெரியாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்’.
  • தேடல், அடுத்த புத்தகம், தொடரும் பயணம்: பாரதியாருக்கு முன் எவ்வகையான சிறுகதைகள் தமிழில் வெளியாகியுள்ளன என்னும் தேடலில் பல புனைவுகளை நூலகம் நூலகமாகத் தேடி கண்டுபிடித்து மொழிபெயர்த்து வருகிறார். 1800களில் துவங்கி இன்று வரையில் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க நூறு சிறுகதைகளைத் தேர்ந்தெடுப்பதற்காக பல்வேறு எழுத்தாளர்களின் ஆக்கங்களை மீண்டும் வாசித்து தொகுத்துவருகிறார். அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தற்காலத் தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சியை ஆங்கில வாசகர்களுக்குக் கொண்டு செல்லும் பணியில் தற்பொழுது மும்முரமாக இயங்கி வருகிறார்.

தொடர்புள்ள பதிவுகள்:

1. எழுத்தாளர் திலீப்குமார் ஓர் இலக்கியச் சந்திப்பு: பாகிரதி சேஷப்பன்

2. திலீப் குமார்மதுசூதனன் தெ.

3. புத்தக விமர்சனம்: கடவு – திலீப் குமார்: மனுபாரதி

4. அ) சிறுகதை: கடிதம் – திலீப் குமார்

ஆ) கண்ணாடி Thinnai: திலீப் குமார்

5. செய்தி: Thinnai: “திலீப் குமாருக்கு விருது: எஸ். அருண்மொழிநங்கை

6. SAWNET: Book Review: A Place to Live – Contemporary Tamil Short Fiction: “Edited by Dilip Kumar; Penguin India — Review by Vaijayanti Gupta”

7. Book Reviews: The Hindu : Contemporary concerns: “These stories take you on an exciting journey, and you traverse a whole gamut of human experience and emotions that reflect the changing Tamil milieu.'”

8. Buy Dilip’s book: Bagchee.com: A Place to Live: Contemporary Tamil Short Fiction: Books: Dilip Kumar (ed.)Vasantha Surya (tr.): Innumerable strands of ethnic, regional and universal experiences are woven together in this collection of fine short fiction spanning four decades – 1960-1990-in which the short story emerged as the definitive genre of modern Tamil literature. Twenty-nine famous names are represented here-from Rajanarayanan to Paavannan and many others who have encapsulated the joys, sorrows, and peculiar challenges of life in Tamil Nadu.

9. Interview with Dilipkumar:

திலிப் குமார் (47) தீவிர வாசிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். எழுத்து முயற்சிகளில் அசுர வேகம் கொண்டவரல்லர். ஆனால், துவரை ‘மூங்கில் குருத்து’ (1985), ‘மெளனியுடன் கொஞ்ச தூரம்’ (1992), ‘தற்காலத் தமிழ்ச் சிறுகதை’ (ஆங்கிலம்), ‘மொழி பெயர்ப்பு சிறுகதைகள்’ (பதிப்பாசிரியர்) போன்ற தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

என் குடும்ப சூழ்நிலை காரணமாகக் கல்வி வாய்ப்பை 14 வயதிலேயே இழந்தவன். எனக்கு தமிழ், குஜராத்தி, ஆங்கிலம் ஆகிய எந்த ஒரு மொழியிலும் சரியான தேர்ச்சி இருக்கவில்லை. வறுமை காரணமாக அடித்தட்டு தமிழ் மக்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு, தமிழ்மொழி, தமிழ் கலாசாரம் இவற்றின் மீது என்னை ஈடுபாடு கொள்ள வைத்திருக்கிறது. மூன்றாம் வகுப்பு வரை தமிழ் படிக்க நேர்ந்தது. எனது சுய முயற்சியால் தமிழ் மொழியைக் கற்க முற்பட்டேன். ஆனால், எனக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை.

பின்னர் நவீன தமிழ் இலக்கியத்தில் படிப்படியாகப் பரிச்சயம் கொள்ள நேர்ந்தது என்பது ஒரு புதிர் மிகுந்த தற்செயல் நிகழ்வுதான். மொழி அறிவு சார்ந்த என் குறைபாடுகளையும் மீறி நான் எழுதுவதற்கு உந்தப்பட்டேன். எனது மிகக் கடினமான வாழ்க்கைச் சூழலில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரது கதைகளை அன்று முதன்முதலாக படித்த பொழுது மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளானேன். என் அனுபவ உலகத்திற்கும் இவர்கள் தங்கள் கதைகளில் பிரதிபலித்த உலகத்துக்கும் மிகப் பெரிய ஒற்றுமை இருப்பதாக நான் உணர்ந்தேன்.

நான் எழுதத் துணிந்தமைக்கு இன்னொரு காரணமும் உண்டு. பொருளாதார காரணங்களினால் எங்கள் சமூகத்தினரிடையே எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்டிருந்த ஒதுக்கம், கல்வி இழப்பு, என் தனிப்பட்ட குறைபாடுகள் இவற்றால் எனக்குள் தோன்றியிருந்த தாழ்வு மனப்பான்மை இந்தப் பின்புலத்திற்கு எதிர்வினையாக என் தனித்துவத்தை அடையாளப்படுத்தக் கூடிய சாதிக்கக் கூடிய ஒரு நடவடிக்கையாகவும் எழுத்தை நான் மேற்கொண்டேன்.

ஒரு எழுத்தாளனுக்குத் தேவையான தகுதிகள் பல என்னிடம் இல்லை என்பதை நான் உணர்ந்திருந்தேன் என்றாலும் சக மனிதர்கள் மீது உண்மையான பரிவு, தமிழ் வாழ்க்கையின் அன்றைய யதார்த்தங்கள் பற்றிய புரிதல், மனித இயல்பின் வினோதங்கள் குறித்த ஏற்புடைமை, நகைச்சுவை உணர்வு இவற்றின் கலவையான ஒரு பண்பு என்னிடம் இருந்தது. இதைக் கொண்டே நான் என் இலக்கிய முயற்சிகளை மேற்கொண்டேன். மற்றபடி எந்த இலக்கியக் கொள்கையோடும் என்னை நான் இணைத்துக் கொண்டு செயல்பட்டதில்லை.

10. ஜெயமோகன் என்ன சொல்கிறார்:

பல்வேறு வடிவங்களில் எழுதிய, பல்வேறு சூழல்களை சித்தரித்த, பல்வேறு தத்துவ நோக்கை வெளிப்படுத்திய படைப்பாளிகளை ஒரேசமயம் நம்மால் பொதுவாக ஏற்கவும் ரசிக்கவும் முடிவது ஏன் என்று வினவும் திலீப் குமார் ‘இவர்களுடைய இலக்கியசெயல்பாடுகளுக்கு பின்னிருந்து இயக்கிய் ஓர் அற இயல்புதான் அது ‘ என்று அதை அடையாளம் காண்கிறார். அதேசமயம் அந்த அற இயல்பு ‘தன்னளவில் தன்மையற்றது ‘ என்று சொல்லி அது அவ்வெழுத்தாளன் செயல்பட்டகாலம் அவனது நோக்கு அவனது படைப்பியல்பு ஆகியவற்றுக்கு ஏற்ப அவனுள் முளைப்பது என்றும் சொல்கிறார்.

இப்பார்வையினால்தான் ஒரு மார்க்ஸிய எழுத்தாளனும் மார்க்ஸிய எதிர்ப்பு எழுத்தாளனும் தன்னை ஒரேசமயம் வசீகரிப்பதை புரிந்துகொள்ளமுடியும் என்கிறார்.

11. ஞாநி:

எழுத்தாளர் திலீப்குமாருடன் சில மாதங்கள் முன்பு மதிப்பீிடுகள் பற்றிய மிக அந்தரங்கமான நெகிழ்ச்சியான உரையாடலில் ஈடுபட்டிருந்தபோது சுமார் பதினைந்தாண்டுகள் முன்னர் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை அவர் நினைவு கூர்ந்தார்.

அவருக்குத் தெரிந்த ஒரு பதிப்பாளர் மிகுந்த பொருட் செலவுடன் வெளியிட்டிருந்த ஒரு வ்ிசேடமான நூலுக்கு தமிழக அரசின் ஒரு துறையிலிருந்து ஆயிரக்கணக்கான பிரதிகளுக்கு ஆர்டர் கிடைக்கிற தருணத்தில், துறை அதிகாரி பதிப்பாளரின் பிரதிநிதியிடம் ஆர்டர் மதிப்பில் பத்து சதவ்ிகிதம் லஞ்சமாக வேண்டும் என்றும், அந்தத்தொகையைக் கொடுத்து விட்டால், மறு கையில் அரசின் காசோலையைப் பெற்றுச் செல்லலாம் என்றும் கூறுக்ிறார்.

பிரதிநிதி தயங்குகிறார். அதிகாரி வியப்படைகிறார். சென்று முதலாளியிடம் சொல்லிக் கேட்டுக் கொண்டு வரச் சொல்கிறார். பிரதிநிதி தன் முதலாளியான பதிப்பாளரிடம் தெரிவிக்கிறார். கடுமையான நிதி நெருக்கடியிலும், அன்புக்குரிய நண்பரின் உடல் நிலைப் பிரச்சினையாலும் துயரப்பட்டுக் கொண்டிருந்த அந்த பதிப்பாளர் அரசுஅதிகாரியின் பேரத்தை மறுத்து விட்டார். பேரத்தை ஏற்றிருந்தால் அத்தனை ஆண்டுகளாக அந்தப் பதிப்பகத்துக்கு ஏற்பட்டிருந்த மொத்தக் கடனும் தீர்ந்துபோய் கணிசமான லாபம் கிட்டியிருக்கும். லட்சக்கணக்கான ரூபாய்கள் இழப்பு.

அந்த இழப்பை அந்தப் பதிப்பாளர் பொருட்படுத்தவில்லை. காரணம் தன் பதிப்புத் தொழிலில் தான் வெளியிடும் படைப்புகளின் மதிப்பீடுகளுக்கு விரோதமான வாழ்க்கையை அவர் வாழ விரும்பவில்லை என்பதுதான். இந்த நிகழ்ச்சியை திலீப் குமார் சொல்லும்போதே எங்கள் இருவர் கண்களும் கசிந்தன.

எனவே எது இலக்கியம் ? யார் இலக்கியவாதி ?

12. Tamil Archives: திலீப்குமார்: “கதாவிலாசம்: எஸ்.ராமகிருஷ்ணன் – மாநகர கோடை”

13. கோகுலகண்ணன் (கலிபோர்னியா):

RayarKaapiKlub : Message: Dilip Kumar and Gopi Krishnan திலீப்குமாரின் ‘ஒரு குமாஸ்தாவின் கதை’ (தீம்தரிகிட)

இருவருக்கும் பொதுவான களன்: லோ மிடில் க்ளாஸ் வாழ்க்கையின் முரண்கள், நெருக்கடிகள், ஏமாற்றங்கள், கேள்விகள்.

தீம்தரிகிடவில் வெளிவந்த திலீப்பின் கதை மிகவும் முக்கியமானது.

குறிப்பாக இந்து முஸ்லிம் பிரச்சினைகள் பிரம்மாண்டமான பரிமாணம் பெற்றிருக்கையில் இந்தக் கதை வாசகனுக்குள் ஏற்படுத்தும் அதிர்ச்சி சிறிது அல்ல. காரணங்களும், தருக்கங்களும் சிதறி வாழ்க்கை படும் அல்லகோலம், மனிதவாழ்வு எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிகள், வெறுமையும் அபத்தமும் கண்முன் தரிசனமாகி கலங்கச்செய்யும் தருணங்கள் – படைப்பாளி இவற்றை கோடிட்டுக் காட்டிவிட்டு போகிறான்.

அவனுடைய எழுத்தின் இறுதிப்புள்ளி வாசகன் மனதில் நிதரிசனமும் புனைவும் சந்தித்து மயங்கி கொந்தளிப்பும் கேள்விகளும் உருவாகும் ஆரம்ப புள்ளியாக உருமாறுகிறது.

ஒரு குமாஸ்தாவின் கதையில் வாழ்வின் அடிப்படைத் தேவைகளையே தீர்க்கமுடியாத நெருக்கடிகளாய் கொண்ட நடுத்தரவயது முஸ்லிம் குமாஸ்தா (வயதான தாய், கால்கள் சூம்பிப்போன தங்கையின் மகன்) அரை டிராயர் அணிந்த ஆரோக்கியமான மதவெறியர்களால் அடித்துக்கொல்லப்படுகிறான்.

14. கடவு (சிறுகதைத் தொகுப்பு):

பவா. செல்லதுரை

சிறு பத்திரிகை உலகத்தில் எல்லோருக்கும் தெரிந்த பெயர் திலீப்குமார். குறைந்தது 20 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிற சிறுகதைகள் அவ்வளவு எளிதில் யாருக்கும் வாய்க்காதவை. தமிழ் வாழ்வு, அது சார்ந்த சிக்கல்கள், தமிழக கிராமங்கள் என்று வாசித்துக் கொண்டிருக்கிற ஒரு வாசகனுக்கு திலீப்குமார், குஜராத்தில் இருந்து சென்னையில் வந்து வாழும் குஜராத்திகள், மார்வாடிகள், செளகார்பேட்டை இதெல்லாம் படிக்க ரொம்பப் புதுசாக இருக்கிறது.

படைப்புகளில் வரும் பெயர்கள்கூட சாரதா பெஹ்ன், ப்ரான் ஜீவன்லால், த்ரம்பக், நட்டு, ஹன்ஸ்ராஜ் என்று நாம் அதிகம் படித்திராத பெயர்கள். ஆனால் சிறுகதைகளில் திலீப்குமார் வேறு வேறு விதமான மன உலகங்களை, மனித துக்கங்களை யாரும் போக அஞ்சும் ஆழங்களுக்குச் சென்று கிண்டலும், கேலியுமாய் நம் கைக்குக் கொண்டு வந்து தருகிறார். பார்க்கிற எவரும் உணரலாம். இது கடலின் ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்ட முத்துக்கள் என்று.

அவ்வப்போது சிறு பத்திரிகைகளில் படித்த கதைகளை மொத்தமாகப் படிக்க வாய்க்கிறபோது இன்னொரு புது அனுபவம் கூடுகிறது. இத் தொகுப்பிலேயே எனக்கு மிகப் பிடித்த கதையாக நிகழ மறுத்த அற்புதம் என்ற கதையைச் சொல்வேன்.

‘மீண்டும் மீண்டும் மனப்பிரதேசங்களில் இருந்து அகல மறுத்து அலறுகிறார்கள் திருமதி ஜேம்ஸ்சும், திரு. ஜேம்ஸ்சும்’ கதை இப்படி ஆரம்பிக்கிறது.

‘திருமதி. ஜேம்ஸ் தன் சிறிய பெட்டியுடன் கிளம்பினாள். நான் போகிறேன் என்றாள்.’

‘சிறிது நேரமாக அவளையே கவனித்துக் கொண்டிருந்த ஜேம்ஸ், என்ன அவ்வளவுதானா? நிஜமாகவா? என்னை விட்டுப் பிரியும்போது உனக்கு சொல்ல வேறு ஒன்றும் இல்லையா என்று கேட்டார்’.

நமக்குப் புரிகிறது. ஒரு கணவனும், மனைவியும் பிரிகிறார்கள். பிரிவு என்கிற ஒரு வார்த்தைக்குள் எத்தனை எத்தனை, துக்கமும், கண்ணீரும், தழும்புகளும், காயங்களும்…

இக்கதை வாசிப்பு எனக்கு உடலெங்கும் தந்த மின்சார அதிர்வுகள், இன்னும் நடுங்குகிறது. வாழ்வு குறித்து பெரும் பயமும், உறவுகள், நண்பர்கள் அற்ற மனித வாழ்வு எத்தனை வெறுமையானது என்றும்… யோசிக்க யோசிக்க… அந் நினைவுக் கயிறுகளை அறுத்துக் கொண்டு பாதுகாப்பான வெளிநோக்கி ஓடிக் கொண்டிருக்கிறேன்.

கதை முழுக்க ஜேம்ஸ் மட்டுமே பேசுகிறார். கதை முடிகிற வரை திருமதி ஜேம்ஸ் ஒன்றும் பேசாமல் மௌனமாக மட்டுமே இருக்கிறாள்.

’25 ஆண்டுகளாக நீடித்த நம் வாழ்க்கையையும், பிணைப்பையும் பொருளற்றதாக்கி விடாதே.

உனக்கு நினைவிருக்கிறதா? திருமணமான மூன்று மாதத்தில் நீ படுத்த படுக்கையாகி விட்டாய். உன் வயிற்றில் அந்தக் கொடூரமான கட்டி வளர்ந்திருந்தது. கோழையும், குருதியும் திரண்டு ஒரு அருவருப்பான பெரிய அழுகிய முட்டையைப்போல்…

உனக்கு தெரியுமோ என்னவோ… அறுவை சிகிச்சைக்கு முன்பாக எத்தனை இரவுகளை நான் உறக்கமின்றிக் கழித்திருக்கிறேன் என்பது… அப்போது நீ என் அருகில் ஒரு குழந்தையைப் போல் கவலையற்று அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பாய். அறுவை சிகிச்சைக்குப் பின் மூன்று வருடங்கள் நாம் உடலுறவு கொள்ள இயலவில்லை. உன் அருகே நான் விரகத்திலும் அதிருப்தியிலும் உறைந்து ஒரு எ·குத் துண்டைப் போல் கிடப்பேன்.’

இப்படிப் போகும் உரையாடல்களை எளிதாகக் கடக்க முடியவில்லை. 25 வருட வாழ்வில் நடந்தவைகள் ஒவ்வொன்றும் கவித்துவமும், தத்துவமுமாய் எழுதப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் கணவன், மனைவியானாலும், அவர்களின் உலகம் வெவ்வேறானது. அவள் உலகம் முதிர்ந்த மலர்களாலும், ஈரக் காக்கைகளாலும், சுண்டெலிகளின் திருட்டுப்பார்வைகளாலும், கர்ப்பிணிப் பல்லிகளாலும் ஆனது.

ஆனால், ஜேம்ஸின் உலகம் இவற்றிற்கெல்லாம் வெகு அப்பால் வேதனையும், தள்ளாட்டமும், ஏமாற்றமும் நிறைந்தது. கதையின் மையம் காலத்திரைக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் வெறுமையில் விழுந்து விடாதே, வயோதிகம் எல்லா அன்பையும் உலர்த்தி விடக்கூடியது என்பதுதான்.

வாழ்வின் ருசியில் ஊறிப் போயிருப்பவர்களுக்குக் கூட இக்கதை வாழ்வின் இன்னொரு கோரப்பற்கள் முளைத்த குரூர முகத்தை ஞாபகப்படுத்துகிறது. அவனை விட்டுப் பிரிய மனமின்றி திருமதி. ஜேம்ஸ் பெட்டியைக் கீழே போடும்போதுதான் நான் ஆசுவாசம் அடைந்தேன்.

‘கடவு’ என்றொரு நீண்ட சிறுகதை. கங்கு பாட்டிதான் இக்கதையின் மைய அச்சு. ஒவ்வொரு முறையும் மரணத்தின் நுழைவாயில் வரை சென்று சாமர்த்தியமாகத் திரும்பி விடுவாள். அந்தக் குடியிருப்பில் அவள் பேசும் கெட்ட வார்த்தை வண்டை வண்டையாக, அழுக்குப் படிந்துதான் வெளிவரும். அதன் பின்னணி நம் மனதை அலற விடுகிறது. குடியிருப்பில் உள்ள ஒரு இளம்பெண் ஒரு நாள் கங்குப் பாட்டியிடம் சொல்கிறாள்.

‘நீ துக்கிரி முண்டையாம், உன் உடம்பும் அழுக்கு, மனசும் அழுக்கு என்கிறாள் என் மாமியார்.’

கங்குப் பாட்டி சொல்கிறாள், ‘என் உடம்பு அழுக்குப் படிந்த உடம்புதான். இந்தியாவில் உள்ள எல்லா ஜாதி நாய்களும் என்னைத் துவம்சம் செய்திருக்கிறார்கள். ஏன் வெள்ளைக்காரன் கூட என் மேல் படுத்திருக்கிறான். மற்றபடி என் மனசைப் பற்றி அவளுக்கு என்ன தெரியும்? மடி, ஆசாரம் பார்த்த இந்த வைஷ்ணவ முண்டையின் வாயில் கதறக் கதற ரம்மும், பிரியாணியும் திணித்துத் திணித்து நாள் கணக்கில் அம்மணக் குண்டியாகவே படுக்க வைத்து…

அக்ரகாரத்தில் பாதுகாப்பாக உடம்பெல்லாம் புடவை சுற்றிக் கொண்டு புருஷனுக்குக் கூட அளவாய்த் திறந்து காட்டிய உன் மாமியாருக்கு எங்கேடி தெரியும், என் மனசைப் பற்றி.’

வெளிப்படுத்துகிற வக்கிரத்தை விட தேக்கி வைக்கிற வக்கிரம்தான் அபாயமானது. கங்குப் பாட்டி தன் இறந்த கால ஒவ்வொரு நிமிட துயரத்தையும் வக்கிரங்களாக வெளிப்படுத்திக்கொண்டே செத்துப் போகிறாள்.

‘மனம் எனும் தோணி பற்றி’ என்றொரு காதல் கதை. இப்படி ஒரு வார்த்தையில் அடக்குவதை சகல விதத்திலும் மீறும் கதை. கதையின் துவக்கமே உன்னதக் கவிஞன் ஒருவன் தற்கொலை செய்து கொள்ளக் கடற்கரையில் உட்கார்ந்திருக்கிறான். ”கடல் எத்தனை பிரம்மாண்டமும், அழகும், கொந்தளிப்பும் உள்ளடக்கியதாக இருப்பினும் அவனுக்கு இறுதியில் மரணத்தையே நினைவூட்டுகிறது” என்று ஆரம்பிக்கும் கதையில் துளிர்க்கும் ஒவ்வொரு வரியிலும் கிண்டலும், துயரமும் மாறி மாறி வருகிறது. இப்படியான எழுத்து அவ்வளவு எளிதில் யாருக்கும் வாய்ப்பதில்லை.

அந்தக் கவிஞனின் பெயர் ராகுல் கே.நாயக். அவன் ஒரு குஜராத்திக் கவிஞன். வறுமையின் தோழமையை 13 வயதில் இருந்தே அனுபவித்து வருபவன். காலியான வயிற்றில் சுண்டெலி ஓடி அட்டகாசம் செய்வதைப் போல் துவங்கும் பசியின் உக்கிரமான சீண்டலால் சென்னைக்குப் பஸ் ஏறியவன். வழக்கம் போல் நம் சமூகம் உன்னதக் கலைஞர்களுக்குத் தரும் 300 ரூபாய் சம்பளத்துக்கு ஒரு ரெடிமேட் ஜவுளிக்கடையில் விற்பனை குமாஸ்தா வேலையில் சுருங்க மறுக்கிறது அவன் விரிந்த கவிதை உலகம். அக்கடையில் இன்னொரு சேல்ஸ் கேர்ள் ராஜகுமாரி, திடீரென்று அவனைக் காதலிப்பதாகச் சொல்கிறாள். இவன் 300 ரூபாய் சம்பளத்தில் அல்லாடினாலும், இவன் உலகம் உன்னதமில்லையா? இவன் பேசுகிறான்

”இதோ பார் ராஜகுமாரி, என் உலகம் வேறு, உன் உலகம் வேறு. நீ ஒரு சாதாரண பெண். நானோ கவிஞன். எனக்குக் காதலில் அப்படி ஒன்றும் நாட்டமில்லை. ஏதோ விதி வசத்தால் நான் இப்படி ஜவுளிக்கடையில் சீரழிகிறேனே தவிர, வாழ்வு பற்றி நான் கொண்டிருக்கும் லட்சியங்கள் மிக உயர்ந்தவை. சிகரங்களை நோக்கிய என் பாய்ச்சலின்போது காதல் என்பது எனக்கு ஒரு சுமையாக மட்டுமே இருக்க முடியும்.”

தவிர உன்னைக் காதலிப்பதில் இன்னொரு சங்கடமும் இருக்கிறது. உனக்கு பயங்கரமாக வியர்க்கிறது. உன் மேல் இருந்து வீசும் வியர்வையில் பூண்டு நாற்றமடிக்கிறது. யாரையாவது காதலிக்கும் முன் வியர்வை நாற்றம் போக்க நீ ஏதாவது ஒரு மருந்து சாப்பிட்டுக் கொள்.’

நீங்கள் இவனுக்காக சிரிப்பீர்களா? அனுதாபப்படுவீர்களா? பெரிய லட்சியங்களை, உன்னதங்களைத் தேக்கி வைத்துக் கொண்டு சினிமா தயாரிப்பாளர்களின் கார் கழுவிக் கொண்டு, பெரிய நடிகனுக்குத் தலைசீவி விட்டுக் கொண்டு, நடிகைக்கு மேக்கப் போட்டு விட்டுக் கொண்டிருக்கும் எண்ணற்ற உன்னதக் கலைஞர்களின் உலகம் வேறு நண்பர்களே… அதைத் திறந்து பார்க்கிற சாவிகள் வலிமையானவை, கிடைப்பதற்கரியவை.

ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, மந்திரவாதியின் கழுத்தில் தொங்கக்கூடியவை. திலீப்குமாரின் பயணம் ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி போய் சாவி எடுத்து வந்து அவ்வுலகக் கதவை திறந்து விட்டுத் தன் சக மனிதனுக்குக் காட்டுகிறது. அவ்வுலகம் நமக்கு உன்னதமாகவோ, உருப்படியற்றோ, கசப்பானதாகவோ, வாழ்வின் மொத்த சாரத்தையும் உறிஞ்சி விடக்கூடியதாகவோ இருக்கலாம். அது அவரவருக்கு இந்த வாழ்வு தந்திருக்கும் பிச்சைகளைப் பொறுத்தது.

15. Rumi article – அன்புடன் | Grupos de Google:

தமிழில் மொழிபெயர்ப்புக் கவிதைகள் – நாகூர் ரூமி

உதயன் வாஜ்பாயின் 16 ஹிந்தி கவிதைகளை திலீப்குமார் தமிழில் தந்துள்ளார் (மீட்சி, 32, 1990). காதல் கவிதைகள். நம்முடைய காதல் கவிஞர்கள் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. தூய ரொமான்டிசிஸம் என்பதிலிருந்து எப்படி விடுபடுவது என்று இவை கற்றுக்கொடுக்கின்றன.

சிலிர்க்கும் அவளது தேகத்தில்
அனேக ஸ்பரிசங்களை விதைத்துச் செல்கிறான் அவன்

அந்த இருட்டின் அறைக்குள்
அவள் மெல்ல எழுந்து தேடுகிறாள்
தவறவிட்ட ஒரு காதணியை

ஹிந்தியில் என்ன வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தது என்று அறிந்துகொள்ளும் ஆவலை ஏற்படுத்தும் எளிமையான அதேசமயம் வலிமையான தமிழாக்கம். திலீப்குமாரினதைத் தவிர வேறு மொழிபெயர்ப்புகள் கிடைக்கவில்லை.

16. பிரமிட் சாய்மீரா தியேட்டர்:

“என் சினிமா கனவுகள்!” – எழுத்தாளர் ஞாநி

பத்து நிமிடங்களும் பேசிக்கொண்டே இருக்கும் கணவனாக நீல்சன். ஒரு வார்த்தையும் பேசாத மனைவி பாத்திரத்தில் ரோஹிணி. இந்த மூவரைத் தவிர மற்ற எல்லாருக்கும் – கதாசிரியர் திலீப் குமார், எடிட்டர் சிவமதி, இசையமைப்பாளர் அனில், இயக்குநராகிய நான் என எல்லாருக்கும் இது முதல் படம்.

– ஆனந்த விகடன் டிசம்பர் 26, 2007

Amitav Ghosh – Maitreyan

எழுத்து: மைத்ரேயன்

அமிதவ கோஷ் பற்றி இதற்குள் நீங்களெல்லாம் தெரிந்து வைத்திருப்பீர்கள்.

வங்க தேசத்தில் பிறந்து பிறகு இந்தியாவிலும் அயல் நாடுகளிலும் படித்து ஆய்வுப் பட்டம் வாங்கி அமெரிக்கப் பல்கலைகளில் போதித்து நிறைய கவனிக்கப்பட்டவர். இடது. ஆனால் முதலிலிருந்து படிக்கும்படியான நாவல்கள் எழுதியதுடன் சில வரலாற்று நவீனங்களை எழுதி இருக்கிறார்.

ஓரிரண்டு சுய சோதனை அல்லது தனிநபர் அவசங்களை மையம் கொண்ட நாவல்கள், ஒரு அறிவியல் நவீனம் எல்லாம் எழுதி இருக்கிறார். மிகவும் கவனிக்கப்பட்ட நவீனங்கள் வரலாற்று நவீனங்கள். அவற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ஒவ்வொன்றும் சில முக்கியமான, கடந்த கால, நன்கு பதிவான சம்பவங்களில் வேர் கொண்டு, நிறைய ஆய்வுத் தகவல்களால் சூழப்பட களனையும் பாத்திரங்களையும் கொண்டு உருவாக்கப்பட்டவை.

சம்பவங்கள், மன உளைச்சல்கள், பாத்திரங்களிடையே நடக்கும் உணர்வுப் பரிமாற்றங்கள், சுழல், உடைகள், தட்ப வெப்ப நிலை ஆகியன எல்லாம் எதார்த்த பாணி என்றாலும் கற்பனைதான்.

ஆனால் துவக்கத்தில் இவருடைய நாவல்களில் இருந்த ஒரு முழுமை சமீபத்திய தலைகாணி சைஸ் நாவல்களில் இல்லை. ஒரு புது உலகுக்குப் போய் வந்த உணர்வை நிச்சயம் எழுப்புகிறார்.

Sea of Poppies | Amitav Ghosh | Review by The Spectator – A passage from India :: இந்த விமர்சனக் கட்டுரை அவருடைய சமீபத்திய நாவல் ஒன்றைப் பற்றியது.

The Sea of Poppies என்ற இந்த நாவல் பிரிட்டிஷார் இந்தியாவில் இருந்த கஞ்சா உற்பத்தித் திறனைப் பயன்படுத்தி வருடத்துக்கு 1200 டன் போலச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்து தம் பொக்கிஷத்தை நிரப்பிக் கொண்டிருந்த காலத்தைப்பற்றியது. இந்த ஏற்றுமதி 1920 வரை கூட நீடித்திருந்தது. இன்றும் சீனருக்கு இந்தியா மீது ஆத்திரமும், எப்படியாவது இந்தியாவைப் பணிய வைக்க வேண்டும் என்றவன்மமும் இருப்பதாக அவ்வப்போது தோன்றினால் அதற்கு இந்த வரலாறு ஒரு காரணமாக இருக்கலாம்.

பிரிட்டிஷாரின் கைப்பாவையாகப் பயன்பட்ட எவருக்கும் இந்த நிலைதான். இந்த விதமான எதிர்வினை பிரிட்டிஷாரைத் தவிர வேறு அனைவரையும் தாக்குவதுதான் வரலாற்றின் விசித்திரங்களில் ஒன்று.

இந்த மதிப்புரையைப் படித்து விட்டும் அமிதவ கோஷின் பையை நிரப்புவதா வேண்டாமா என்று முடிவு செய்யுங்கள். உள்ளூர் பொது நூலகத்தில் ஒலிப்பதிவு வடிவில் இந்த புத்தகம் கிட்டினால் அதைப் பயன்படுத்துங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

அறிவியல் மாறலாம்; வாழ்க்கை மாறுமா?

சிறில் அலெக்ஸ் நடத்தும் போட்டிக்கு 45+ கதை கட்டியிருக்கிறார்கள். நூற்றாண்டுகளாக மாறும் அறிவியலில் இருந்து மாறாத வாழ்க்கை தருணங்கள்:

  1. அன்று ஓலைச்சுவடியைக் கிழித்தெறிந்தார் ஒட்டக்கூத்தர்; இன்று இணையப் பதிவுகளை நீக்குகிறார் பெயரிலி/மரவண்டு; நாளையும் இன்னொருத்தர் டெலீட்டுவார்.
  2. அன்று அண்ணா, பெரியார் பேச்சை வாய்பிளந்து வாக்களித்தார்கள்; இன்று சாரு நிவேதிதா, சோ எழுத்துக்களை காசு கொடுத்து படிக்கிறார்கள்; நாளையும் வித்தியாசமான சிந்தனையை முன்வைக்கும் எவரின் அனைத்து அட்சரத்தையும் கண்மூடித்தனமாக…
  3. அன்று குறுநில மன்னர்களுக்கும் இராஜாதி ராஜாவுக்கும் இடையேயான மல்யுத்தப் போர்களை மைதானத்தில் மேட்ச் ஃபிக்ஸ்; இன்று இந்தியா x பங்களாதேஷ் கிரிக்கெட்; நாளையும் கணினி வலையில் நடக்கும் அடையாள யுத்தத்தில் சூது முடிவு.
  4. அன்று இறந்தபின் அசோகனும் பாபரும் உத்தமர்; இன்று எமெர்ஜென்சி இந்திராவும் அத்வானியின் செல்லப்பிள்ளை ஜின்னாவும் மகாத்மா; நாளையும் ஜார்ஜ் புஷ், ஃபிடல் காஸ்ட்ரோ சரித்திர உலக நாயகர்கள்.
  5. அன்று வந்ததும் அதே நிலா; இன்று உள்ளதும் இதே சாந்த் ; நாளை ‘ஜஸ்ட் மூன்’
  6. அன்று குடவோலையில் கடமுடா; இன்று குடியரசு களேபரம்; நாளையும் குல்லா, ஹல்லா.
  7. அன்று இஸ்ரேல் பிரச்சினை; இன்று அமெரிக்க நாட்டாமை; நாளையும் பாலஸ்தீனம் தொடரும்
  8. அன்று ஆன்மிகம்; இன்று அறிவியல்; நாளையும் சான்றோர்.
  9. அன்று சங்கப்பலகை நக்கீரன் + பாண்டியன் போட்டி; இன்று வலைப்பதிவு சிறில் + ஜெமோ மீம்; நாளையும்?
  10. அன்று ஃபிலிப் கே டிக் பயந்தார்; இன்று மைக்கேல் க்ரிக்டன் பயமுறுத்துகிறார்; நாளையும் எவராவது சாவார்.

எழுதாத கதைக்கு யார் ஆசிரியர்?

குறுங்கதை மொழிபெயர்ப்பு « அங்கிங்கெனாதபடி

கிட்டத்தட்ட சித்தார்த்தின் மொழியாக்கம் செய்யப்பட்ட கதையை ஒத்த சமீபத்திய வாசிப்பு ஒன்றின் சுருக்கம்…

அந்த எழுத்தாளனை யாருமே சீந்தவில்லை. எவருமே அவன் படைப்பை அச்சேற்றாமல் நிராகரிக்கிறார்கள். விலைமாதுவின் துணையை நாடுகிறான்.

அவளோ அவனின் கதையை புகழ்கிறாள். ‘இன்னும் எழுது’ என்பதுடன் நில்லாமல், அவனுடைய கோழிக் கிறுக்கல்களை தட்டச்சுகிறாள். கோர்வையாகக் கொண்டு வருகிறாள். இவனோ எப்போதும் போதையில் இருப்பதால், எழுதித் தள்ளுவதற்கே நேரம் போதாமல், டைப்ரைட்டிய பக்கங்களை வாசிக்காமல் மேலும் மேலும் எழுதுகிறான்.

புத்தகம் கிட்டத்தட்ட தயாரான நிலையில், பதிப்பாளர்களை சந்திக்க, தன் அண்ணன் வசிக்கும் நகரத்துக்கு செல்கிறான். கதையைப் படிக்கும் அண்ணன், தன் பெயரில் வெளிவருவதை விரும்புகிறான்.

தம்பிக்கு போதையேற்றி, மோசமான விபத்தை உருவாக்குகிறான். தம்பியை எசகுபிசகான நிலையில் புகைப்படமெடுத்து, மிரட்டி தன் பெயரை முதன்மை படைப்பாளியாக சேர்த்துவிட செய்கிறான்.

புத்தகம் வெளியாகிறது. புரட்டி பார்க்கும் தம்பிக்கு அதிர்ச்சி. தலைப்பு மட்டும்தான் தான் வைத்தது. உள்ளே இருப்பதெல்லாம், விலைமாதின் அனுபவங்கள். அவளுடைய பணக்கார வாடிக்கையாளர்கள், அவர்களின் விநோத நடவடிக்கைகள், என்று விரிகிறது.

விலைமாதுவே சொந்தப் பெயரில் வெளியிட முடியாத கதையை, தம்பியிடம் இருந்து அபகரித்து பெயர் போட்டுக் கொண்ட அண்ணனின் நிலையை ஒப்பிடும் கதை.

நிஜமாக எழுதியவருக்கு உண்மைப் பெயரை எடுத்துரைக்க முடியாது. நிஜமாக எழுதியதாக நினைத்தவருக்கும் படைப்புக்கும் தலைப்பு தவிர ஸ்னான ப்ராப்தி கூட கிடையாது. எழுதியாக சொல்லிக் கொள்பவரும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் கிடைத்த வாய்ப்பை பறித்துக் கொண்டவர்.

இந்தப் புத்தகத்தின் பெயர் தெரியாமல் கதை மட்டுமே என்னுடைய வாசக அனுபவத்தில் தங்கியது மீட்சி.

தமிழர்களுக்கு பிடிக்காத வார்த்தை? – மன்னிப்பு; பிடித்த வார்த்தை?

பாஸ்டன் பக்கம் பெனின் நாட்டு ராஜா வந்திருந்தார். வழக்கமான அரசுமுறை சந்திப்பு, கொடை ஒதுக்கீடு, இன்பச் சுற்றுலா எல்லாம் முடிந்தவுடன் இன்னொரு காரியம் செய்தார்.

அடிமைத் தொழிலில் ஈடுபட்ட தங்கள் முன்னோர்களுக்காக இந்தத் தலைமுறையினரிடம் ‘மன்னிப்பு’ கோரினார்.

சொகுசாக வந்தோமா…
கேடிலாக் பவனி கொண்டோமா…
என்று விமானம் ஏறி ஊர் போகாமல், ஊடகத்திற்காக காட்சி பொம்மையாக்காமல், உளமார்ந்த வருத்தங்களை நேரில் தெரிவித்திருக்கிறார்.

இந்த மாதிரி தமிழ்நாடு/இந்தியாவில் தாங்கள் செய்த தவறுகளுக்காக மேட்டுக்குடியினரின் பிரதிநிதிகளான சங்கராச்சாரியார்கள், ஜீயர்கள் (இன்ன பிறர்?) தார்மீகப் பொறுப்பேற்று கிஞ்சித்தாவது சஞ்சலப்பட்டிருக்கிறார்களா?

செய்தி:

1. King of Benin to Visit UMass Boston – Arts: “His Majesty is also expected to make a historic public apology for the role played by the dynastic kings of Dahomey in the trans-Atlantic slave trade.”

2. Call from a king – The Boston Globe: “While King Kpoto-Zounme Hakpon III said homelessness and poverty are problems among the people in his West African country of 8 million, the main reason for his visit was to apologize for his ancestor’s role in the trans-Atlantic slave trade.”


அதிகாரபூர்வமாக, சுதந்திரமான இஸ்ரேல் பிறந்து அறுபது ஆண்டுகள் நிறைந்திருக்கிறது. அதற்கான கொண்டாட்டங்களுக்கு யூதர்களைக் கொன்று குவித்த முன்னாள் கொடுங்கோலனான ஜெர்மனி நாட்டு அதிபர் அழைக்கப்பட்டார்.

தன்னுடைய பெற்றோர் காலத்தில் செய்த குற்றத்திற்காக இன்னாள் தலைவர் மெர்க்கெல் மன்னிப்பு கோருகிறார்.

செய்தி:

1. Merkel: Germany will always stand with Israel: “The visit by the German chancellor and at least half of her cabinet to Israel was meant to mark the 60th anniversary of the Jewish state, which was born out of the ashes of World War II and the murder of 6 million Jews by the Nazis.

In a first-ever address by a German chancellor to the Israeli parliament, Ms. Merkel, “The Shoah fills us Germans with shame,” she continued, using the Hebrew word for the Holocaust. “I bow to the victims. I bow to all those who helped the survivors.””

2. Merkel: Germans ‘filled with shame’ over Holocaust – USATODAY.com


இன்றைய செய்தி: Muslim Killed For Marrying Hindu

இஸ்லாம் மதத்திற்கு இன்னொரு எண்ணிக்கை கூட்டும் விதமாகத்தான் அவர் செயல்பட்டிருக்கிறார். பிறக்கும் மக்களும் முஸ்லீமாகவே இருப்பார்கள். மனைவியும் மதம் மாறி விட்டார்.

சாதாரணமாக, இன்னொரு மதத்தை சேர்ந்த பெண் மதம் மாறி மணம் புரிந்தால்தான் வெகுண்டு எழுவார்கள். அதாவது, ஹிந்துப் பெண், கிறித்துப் பையனை கரம் பிடித்தால், இந்துக்களுக்கு ரத்தவெறி பிடிக்கும்.

இங்கு இரு சாராரிடம் இருந்து ‘மன்னிப்பு’ லேது.

1. PUCL : Message: “Mohammad Hanif Shah, 28, who had incurred the wrath of several people two years ago for marrying Hema Bhatnagar, a Hindu who took on the name Heena after marriage and converted to Islam, was shot dead near his residence at Mansore in Madhya Pradesh.”

2. » Muslim man killed for marrying a Hindu girl


தொடர்பில்லாத தசாவதாரம்: Kamal & Dasavatharam Issues – Shaivism, Vaishnavism, Hinduism, Religion, Tamil Cinema, History, Kings


கேள்வி நேரம்:

1. இராக்கிடம் அமெரிக்கா எப்பொழுது மன்னிப்பு கோரும்?

2. மனுநீதி பின்பற்றியவர்கள், தாழ்த்தப்பட்டவருக்கு இன்ன வேலை என்று அனுஷ்டிப்பவர்களிடம் இருந்து அபிஷியலாக உரிமை துறப்பு கோரினால், பாரதிய ஜனதாவிற்கு லாபமா?

3. முன்னாளில் (அதாவது ஏழாம் நூற்றாண்டு வரை) சுபிட்சமாக இருந்த சமணர்களிடமும் பௌத்தர்களிடமும் சைவ/வைணவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமா, அல்லது தமிழீழத்தில் செய்வதோடு பேலனஸ் ஆகி கூட்டிக் கழித்து விட வேண்டுமா?

4. அன்று நாஜிகள் வதைத்ததற்காக வருந்தும் மெர்கல், இன்று இரான் மீது பொருளாதார நெருக்கடி கொண்டர்ந்து, வருத்தி, பிராயசித்தம் தேடி — நாளைய தலைமுறை ஜெர்மனி ராஜாக்கள் மன்னிப்பு கேட்க வழிகோலுகிறாரா?