Geese – வாத்துகள்

முந்தைய இடுகை: Rabbit – முயல் :: சசவிசாடம்

ஹம்ஸகமனம்

அகராதி: ஹம்ஸகமனம் hamsa-kamaṉam, n. < haṃsagamana. Gait of a swan or goose; அன்னநடை.

Geese

பேரவை அரங்கு நிரம்பி இருந்தது. வருடா வருடம் ஒவ்வொரு நகரமாகத் தேர்ந்தெடுத்து, அந்த நகரத்தில் கூட்டம் போடுவது வழக்கம் ஆகும். 2014ல் வாஷிங்டன் டிசி தலைநகரில் கூடினோம். 2015ல் டல்லாஸ் மாநகரத்தில் கூட்டம் போட்டோம். இந்த வருடம் முதல் முறையாக எல்லோரையும் வைய விரிவு வலை மூலமாக இணையம் கொண்டு ஒன்று சேர்க்கிறோம்.

எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. விமானச் செலவு அதிகம் என்று ஏமாற்றம் கொள்ளத் தேவையில்லை. விடுமுறை கிடைக்கவில்லை என்று ஒத்திப் போட வேண்டியதில்லை.

இந்த தடவை வைஜெயந்திமாலா பாலி நடனம் ஆடுகிறார். நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. அதெப்படி எழுபத்தியெட்டு வயதில் அவரால் நாட்டியம் புரிய இயலும்? தள்ளாத வயதில் விமானம் ஏறி பேரவை மேடை ஏறினாலும், எப்படி அவரால் ஆட்டம் கட்ட முடியும்? அங்கேதான் நான் நுழைகிறேன்.

‘ஜீன்ஸ்’ படத்தில் பிரபு தேவாவின் தம்பி ராஜு சுந்தரம் செய்வாரே… அந்த மாதிரி விஷயத்தை நிஜமாகவே அரங்கில் செய்யப் போகிறேன். அந்தக் கால ‘யாரடி நீ மோகினி’ பாடலில் வரும் வைஜயந்தி மாலா முகத்தை வைத்து, இந்தக் கால ‘மெர்சலாயிட்டேன்’ பாடலுக்கு ஆட வைக்கப் போகிறேன். நேயர் விருப்பமாக, எந்தப் பாடலுக்கு வேண்டுமானாலும் ஆட வைக்கலாம். சொல்லப் போனால் கேட்டி பெர்ரியின் ‘baby, you’re a firework’ பாடலுக்குக் கூட வைஜெயந்தி ஆடுகிறார்.

நீங்கள் குழம்புவது புரிகிறது. கூடுவதோ, ‘தமிழ்ப் பேரவை’. ஆனால், அதில் எப்படி காத்தி பெர்ரி என்னும் ஆங்கிலச்சியின் பாடல் என்று சிந்தை தடுமாறுகிறீர்கள். ஜூலை நான்கிற்கு அமெரிக்காவில், தமிழர்கள் பலரும் ஒன்று கூடி வெடி வெடிப்போம். இந்த தடவை, அந்த வெடிகள் எல்லாம், சிவகாசியில் இருந்து இறக்குமதியானவை. சென்ற ஆண்டில் சீனத் தயாரிப்புகள் வாங்கிவிட்டோம் என்று சிலர் பிரச்சினை செய்தார்கள். அதனால் இந்த தடவை வாத்து மார்க் பட்டாசுகள் வாங்கி இருக்கிறோம்.

(வாத்து கருத்து: கதையின் தலைப்பு மேலே இருக்கும் வாசகத்தில் வெளிவந்துவிட்டது)

நடிகர் தனுஷ் எழுதும் பாடல்களை விட, கவிஞர் வாலி எழுதிய திரைகானங்களை விட கேத்தி பெர்ரியின் பாடலில் நிறைய தமிழ் வார்த்தைகள் இருக்கின்றன என்று தற்போதைய தமிழ்ச் சங்கத் தலைவர் தெரிவித்தார். ஃபீலு, பிளாஸ்டிக், ஸ்டார்ட்டு, பேப்பர், சிக்ஸு, லைட்டு, ஜூலை, நைட்டு, கலரு, அரிகேன், ஹேர்ட்டு (வாத்து கருத்து: இவர் பேர்க்லி தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அல்ல) என பல உன்னத தமிழ்ச் சொற்களை காத்தி பெர்ரி தன் பாடலில் பயன்படுத்தி இருப்பதாக தற்போதைய தமிழ்ச் சங்கத் தலைவர் யூடியுப் விழியத்தில் பேட்டியாக விளக்கி இருக்கிறார்.

”தற்போதைய தமிழ்ச் சங்கம்” எவ்வாறு உருவானது என்பதையும் அந்தப் பேட்டியில் அவர் சொல்கிறார். முதலில் தமிழ்ச் சங்கம் மட்டும் இருந்ததாம். அது இன்னொருவர் வந்தவுடன் ‘ஒரு தமிழ்ச் சங்கம்’ என ஆனதாம். மூவர் நுழைந்தவுடன் ‘புது தமிழ்ச் சங்கம்’ வந்ததாம். இது பலுக்கல் பிழை என்பதால் நான்காவதாக ‘புதுத்தமிழ்ச் சங்கம்’ உருவானதாம். அதற்குப் போட்டியாக ‘பழையத் தமிழ்ச் சங்கம்’ தோன்றி இருக்கிறது. இவை எல்லாம் போதை இல்லாததால் ”தற்போதைய தமிழ்ச் சங்கம்” உருவானது.

வைஜெயந்திமாலாவின் ஆடலை அமெரிக்காவிற்குக் கொணர ‘புதுத்தமிழ்ச் சங்கம்’ முன்னெடுத்திருக்கிறது. காத்தி பெர்ரியின் ஃபையர் வொர்க் பாடலை அதற்கு வைத்துக் கொள்ள எல்லோரும் ஒருமித்த கருத்தொற்றுமையில் இருக்கிறார்கள். ஹோலாகிராம் மூலம் வைஜெய்ந்தியை உங்களின் வீட்டில் தோன்ற வைப்பது என் வேலை.

ஏற்கனவே வாத்து கதாபத்திரத்தை நான் பல முறை இந்தப் புனைவில் உலவ விட்டிருக்கிறேன். என்றாலும், தமிழ்ப் பேரவைக்கும் வாத்துகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதை உங்களுக்குச் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

’பூப்பூக்கும் மாசம்… தை மாசம்’ என்று குஷ்பூ பாடினாலும், அமெரிக்காவில் வசந்த காலமாக, ஏப்ரலும் மே மாதமும் விளங்குகிறது. அந்த நேரத்தில், ஒவ்வொரு ஏரிக்கரையிலும் இரு வாத்துகள் குடிபுகும். இப்படித்தான் பன்னெடுங்காலமாக என் வீட்டின் வாயிலில் இருக்கும் ஏரியிலும் வாத்துகள் வந்து கொண்டிருந்தன.

என்னுடைய வீடு கட்டப்படும்வரை எனக்கொரு பிரச்சினையும் இல்லை. அந்தப் பிரதேசம் முழுக்கக் காடாகக் கிடந்தது. அங்கே நரியும், மான்களும், வான்கோழிகளும், வாத்துகளும், ஆமைகளும், பாம்புகளும் சகஜமாகக் கொஞ்சிக் குலாவித் திரிந்தன. அந்தக் காட்டை சீர்திருத்தி (வாத்து கருத்து: இங்கே சீர்திருத்தம் என்பது கம்யூனிஸம் போல் பொலிடிகலி கரெக்ட் ஆகத் தெரிகிறது. அதற்கு பதிலாக ‘அழித்து’ என்னும் வார்த்தையை உபயோகிக்கவும்.), என் வீட்டைக் கட்டிக் கொண்டேன். வீடு வந்தவுடன் ஓநாய்களும், நரிகளும் ஓடி விட்டன.

ஆனால், வருடந்தோறும் இரு வாத்துகள் ஏப்ரல் மாதத்தில் வரும். மே மாதத்தில் முட்டை இடும். ஜூன் மாதத்தில் குஞ்சு பொறிக்கும். ஜூலை மாதத்தில் குட்டிகள் எல்லாம் அப்பா, அம்மாவை விடப் பெரியதாகி இருக்கும். ஆகஸ்ட் மாதத்தில் என் தோட்டத்தையும் என்னுடைய புல்வெளியையும் கபளீகரம் செய்யும். சாப்பிட்டதை, என் வீட்டு முற்றத்தில் பீ பொழியும். வீடு, கிட்டத்தட்ட காடாகி விடும்.

இந்த வாத்துக்களை பயமுறுத்துவதற்காகவே, ஹாலோகிராம் நுட்பத்தை சுய ஆர்வலராகக் கற்றுக் கொண்டேன். எழுத்தாளர் சுஜாதாவைப் படித்து விட்டு, இந்த வார்த்தையைத் தெரிந்து வைத்திருந்தாலும், நிஜத்தில் முப்பரிமாணமாக்கி ஒரு நரியை உலவ விடுவதுதான் என் நோக்கம். பழங்காலத்தில் காக்கா வந்து வயல்வெளியை மேயாமல் இருக்க சோளக் கொல்லை பொம்மை வைத்திருப்பார்கள். அது போல், நரியின் உருவம், என்னுடைய புல்வெளியில் உலவ வேண்டும். வாத்துகள் தெரிந்தால், அவற்றில் இருந்து ஊளையிடும் சத்தம் வர வேண்டும். அவர்கள் நெருங்குவதற்கு முன், நரியின் திண்மத் தோற்றங்காட்டி, அவர்களைத் துரத்த வேண்டும். நரியைப் பார்த்தால், வாத்துகள், தங்களுடைய இல்லத்தை என்னுடைய கொல்லைப்புறத்தில் அமைத்துக் கொள்ளாது. இதற்கு ’நிம்பி’ என்று பெயர் சூட்டினேன்.

நிம்பி என்பது நம்பி என்பதன் மரூஊ. “Not In My Back Yard” என்பதன் சுருக்கம்.

வாத்துக்களைத் துரத்துவது தமிழ்ப் பேரவையின் கவனத்தை ஈர்த்தது. அப்படித்தான் வைஜெயந்தி ப்ராஜெக்ட் எனக்குக் கிடைத்தது. நரியின் பருநோக்கியை உலவவிட்டது போல் வைஜெயந்தியை உலவவிடச் சொல்லி இருக்கிறார்கள்.

வைஜெயந்தி மாலா என்னும் பெயருக்குத்தான் என்ன ஒரு சக்தி? அந்தப் பெயரைக் கேட்டவுடனேயே நுழைவுச்சீட்டுகள் எல்லாம் விற்றுவிட்டன. ஆனால், எவராலும் நேரில் வர இயலாது. அவர்களுக்காகத்தான் ’வாஸ்து’ என்று பெயரிட்ட இந்த app நிரலி தயாரித்து இருக்கிறேன். (வாத்து கருத்து: என் பெயருக்கு பங்கம் விளைவிக்குமாறு, வாத்து என்பதில் ஒரேழுத்தை மாற்றி, வாஸ்து என்று விற்பதற்காக காப்புரிமை வழக்குப் போடப் போகிறேன்.)

’வாஸ்து’ ஆப்பு மட்டுமே இந்த வருடப் பேரவை. அதாவது உங்களின் இல்லத்தின் புழைக்கடையிலேயே வைஜெயந்திமாலாவைத் தோற்றுவிக்கலாம். நான் நரிகளைக் கொண்டு வாத்துகளைத் துரத்தினேன். வைஜெயந்திமாலாவை வைத்து பேரவை வாத்துகளைத் துரத்துகிறது.

Jeyaganthan – ஜெயகாந்தன்

https://sway.com/s/uS8ywb6wbCH8hTSK/embed

Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage – Book Reviews

இன்னொருத்தருடன் உங்களுடைய இதயம் இணக்கமாக இருக்க ஒத்திசைவு மட்டும் காரணம் அல்ல. இரண்டு பேருக்கும் இடையே பொதுவாக நடந்த ரணங்களால்தான் இதயங்கள் இணைகின்றன. – சுகுரு டசாகி

ஜப்பானிய பழமொழியில் சொல்கிறார்கள்: ‘தலையைத் துருத்திக் கொண்டு தெரியும் ஆணியை, அடித்து உள்ளே தள்ளு!’

ஜப்பானில் சுற்றம் என்பது குடும்பத்தையும் தாண்டியது. வாழ்க்கையின் ஒவ்வொரு பாதையிலும் அந்த ஐக்கியமாகும் எண்ணம் பாய்கிறது. நீங்கள் தனித்துத் தெரிந்தால், பத்தோடு பதினொன்றாக ஆக்கப்படுவீர்கள். ஆமே (甘え) என்னும் சித்தாந்தம் இந்தக் குழுமப் பண்பாட்டை புரிந்து கொள்ள உதவும். ஆமே (甘え) என்பதன் அர்த்தம் ’அடுத்தவரிடம் அன்பைத் தேடு’. குழந்தைப்பருவத்திலேயே இது மூளையில் ஏற்றப்படுகிறது. இன்னொருவரிடம் பரிபூரண விசுவாசம் கொண்டிருப்பதற்கும் சமூகக் கூட்டமைப்பாக வாழ்வதற்கும் இந்த உணர்வு முக்கியம் என்று கற்றுத் தருகிறார்கள். சொல்லப் போனால், ஜப்பானிய மொழியில் சுய ஆளுமையைச் சொல்லும் கொஜின் ஷுகி (こじん-しゅぎ) என்றால் அது சுயநலம்/பேராசை போன்ற மோசமான அர்த்தத்திலேயே பயன்பாட்டில் இருக்கிறது.

ஆமே (甘え) என்பது குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே உள்ள உறவு போன்றது. அது எழுதப்படாத சமூக விதி. உங்களின் சக தொழிலாளரை, உங்களுடன் கூடப் படிக்கும் மாணவரை, உங்களுடன் கூட்டத்தில் வரும் பயணியை – ஒவ்வொருவருக்கும் நீங்கள் வாக்கு கொடுக்கிறீர்கள். நின்ஜோ (にんじょ) என்றால் உள்ளார்ந்து எழும் அனிச்சையான செயல்பாடு. அதாவது, ’நான் என்னுடைய கடமையாக, உங்களுக்கு பரிபூரண அன்பையும் எதிர்பார்ப்பற்ற அர்ப்பணிப்பையும் நல்குவேன்.’ அனைவரும் அனைவருடன் கைகோர்த்து வாழ்வோம் என்பதை பாலபாடமாக பதித்துக் கொள்கிறார்கள். இவ்வாறான சமூகக் குழுமங்களை கிரி (ぎり) என்கிறார்கள்.

இந்த மாதிரி உள்வட்டத்தில் இல்லாதவர்களை டனின் (たにん) என அழைக்கின்றனர். நின்ஜோ (にんじょ) உள்வட்டத்திலோ, கிரி (ぎり) குழுமத்திலோ இல்லாதவர்களை டனின் (たにん) எனக் கருதுகின்றனர். அதாவது, குடும்பமோ, பள்ளித் தோழமையோ, அலுவல் சகாக்களோ, அல்லாதவர்கள். டனின் (たにん)களுடன் எந்தப் பற்றுதலும் கிடையாது.

கடைசியாக வா (わ) என்னும் பதம். வா (わ) என்றால் ஒத்திசைவு; இணக்கம். இதுதான் ஜப்பானிய அறம். பழங்காலத்தில், நெல் விளைவிக்க தேவைப்படும் நதிநீரைப் பகிர வேண்டும். நெல்விளைச்சலைப் பாதுகாக்க வேண்டும். இந்த சமயத்தில்தான் குடியானவ சமூகத்தில் அமைதி நிலவ, வா (わ) சட்டத்தை அரசர் ஷொடொகு டைஷி முன்வைக்கிறார். விளையாட்டில், வர்த்தகத்தில் என்று எந்தத் துறையிலும் வா (わ) சித்தாந்தத்தைக் காணலாம். பரஸ்பர நம்பிக்கை, விட்டுக் கொடுத்து வாழ்தல், ஒத்துழைப்பு, மேலதிகாரியிடம் அசைக்கவியலா பற்றுறுதி, ஆகியவையே வா (わ)கருத்தியல். தனிமனித விளையாட்டான டென்னிஸ் போன்றவற்றில் ஜப்பானியர்கள் ஓரளவிற்கு மேல் எழும்ப முடியாததற்கும் இந்த அடிப்படைக்கும் பெரும் தொடர்பு உண்டு.

ஜப்பானில் தனித்துவம் தழைத்தோங்க, ஒரு சில துறைகளே இருக்கிறது: மலர் அலங்காரங்களைச் செய்யும் பணி, கவிதை புனைதல், கலை வெளிப்பாடு மற்றும் இசை.

உசாத்துணை: Phyllis Kepler, Brook S. Royse and John Kepler. Windows to the World: Themes for Cross-Cultural Understanding. Glenview, IL: GoodYearBooks, 1996

Haruki_Murakami_Colorless_Tsukuru_Tazaki_Novel_NYT

oOo

ஹருகி முரகமி எழுதிய ”நிறமற்ற சுகுரு டஸாகியும் அவன் யாத்திரை மேற்கொண்ட வருடங்களும் (Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage) படித்து முடித்தேன். ’மனிதரில் இத்தனை நிறங்களா’ என படம் வந்திருந்தது. இந்தக் கதையில் ஐந்து இளைஞர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம். ஒருத்திக்கு கருப்பு, இன்னொருத்திக்கு வெள்ளை; ஒருவனுக்கு சிவப்பு; இன்னொருவனுக்கு நீலம். கடைசியாக இருக்கும் ஐந்தாமவன் கதாநாயகன் – நிறமற்றவன்.

ஹருகி முரகமி எல்லா இடங்களிலும் ரசிகர்களை வைத்திருக்கிறார். அவருடைய புத்தகங்கள் பரபரவென்று விற்றுத் தள்ளுகின்றன. மகாரஷ்டிரா அளவில் இருக்கும் ஜப்பானில் மட்டுமே ஒரு மில்லியன் புத்தகங்கள் விற்கிறது! அதன் பிறகு, அதே புத்தகம் ஐம்பது மொழிகளில் மொழியாக்கம் காணப்பட்டு மேலும் ரசிகர்களைக் கவர்கிறது. இத்தனைக்கும் சிட்னி ஷெல்டன் போல், கென் ஃபாலெட் போல் பரபரப்பான துப்பறியும் மசாலா நாவல்களை முரகமி படைக்கவில்லை. நோபல் பரிசுக்கான ஓட்டத்தில் நெடுங்காலமாக இருக்கிறார். ஜேகே ரவுலிங் எழுதிய ஹாரி பாட்டார் போல் ஹருகி முரகமியின் நூல் நாயகர்களும் தங்களுக்கென்று உலகை சிருஷ்டித்துக் கொள்கிறார்கள். அவருடைய நூல்களின் கதாபாத்திரங்களின் அக மனது அபிலாஷைகள், யாரும் எதிர்பார்க்காத திசைகளில் பயணித்து, நமக்கு அறிமுகமான எண்ணங்களை பரிச்சயம் செய்வித்து, திக்கற்ற முக்குகளுக்கு இட்டுச் சென்று நம்முடைய சிந்தனையில் நீண்ட நாள் நிலைக்கும் பாதைகளை உருவாக்கவல்லது.

நாகர்கோவில் போன்ற குறுநகரத்தில் இருந்து டோக்கியோ நகரத்துக்கு வருகிறான் சுகுரு டஸாகி. அவனுக்கு கலைகளில் நாட்டம் கிடையாது. எந்தவிதமான பொழுதுபோக்கும் கிடையாது. எந்த கைவினைத் தொழிலும் தெரியாது. எளிதாக புன்னகைப்பான். சட்டென்று யாரோடும் பழக மாட்டான். புதியதாக எவராவது அறிமுகமானால், அவருடன் நட்பு பயில சிரமப்படுவான். வெளிப்படையாக பட்டெனப் பேசுவதில் சிரமம். தனியாகவே உலா வருகிறான். எவருடைய துணையும் இன்றி வாழ்க்கையை நடத்துகிறான். பேச்சுத் துணை கிடையாது. செல்பேசி அரட்டை கிடையாது. அலுவலில் நண்பர் கிடையாது. உண்ணும்போது சம்பவங்களைப் பகிர எவரும் கிடையாது. டிவி மாந்தர்களைக் கூட தொலைக்காட்சியில் பார்ப்பது கிடையாது.

சுகுரு என்பது அவனுடைய அப்பா, அவனுக்கு இட்ட பெயர். அந்தப் பெயருக்கு அர்த்தம் ‘பொருள்களைச் செய்பவன்’. இதனால், அவனுக்கு ஸ்திரமான விஷயங்கள் பிடித்துப் போகிறது. சின்ன வயதில் இருந்து தொடர்வண்டிகள் மேல் காதல். நாள் முழுக்க ரயில் நிலையத்தில் உட்கார்ந்திருக்கிறான். பயணிகளின் அவசரத்தைப் பார்க்கிறான். விற்கப்படும் பொருள்களை கவனிக்கிறான். தண்டவாளங்களில் தாண்டவமாடும் சுருதியை ரசிக்கிறான். இம்மி பிசகாமால், மாறி மாறிப் போகும் புகைவண்டிகளைப் பார்ப்பதோடு நில்லாமல், அந்தத் துறையிலேயே வேலை தேடவும் நாட்டம் கொள்கிறான்.

kuro_pottery

சுகுரு டஸாகியினுடைய குறுநகரத்தில் அவனுக்கு நான்கு நண்பர்கள் இருக்கிறார்கள். எப்பொழுதும் ஒன்றாகவே வளைய வருகிறார்கள். சுகுரு டஸாகி மட்டும் டோக்கியோவிற்கு கல்லூரியில் சேருகிறான். அதன் பிறகு நண்பர்களை இழக்கிறான். நண்பியைக் காமத்துடன் பார்க்கிறான். மூக்கு அரிப்பெடுத்தால் சொறிந்துகொள்வது போல், தன்னியல்பாக தினசரி பல மைல் தூரம் நீந்துகிறான். தற்பால் விருப்பமோ என கனவுறுகிறான்.

உங்களின் அத்யந்த சிநேகிதர்கள், சடாரென்று ஒரு நாள் – உங்களை ஒதுக்கி வைத்து விட்டால் என்ன செய்வீர்கள்? நிராகரிப்பை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? காதல் தோல்வி என்பது போல் தோழர்களின் தோல்வி என்று இந்த நிலையைச் சொல்லலாம். அவர்களிடம் சென்று ‘ஏன் என்னுடன் பேச மாட்டேன் என்கிறீர்கள்?’ என விசாரிப்போம். அவர்கள், நம்மை புறந்தள்ளும் காரணத்தை அறிய முயற்சிப்போம். நட்பை மீண்டும் உயிர்ப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று முயல்வோம். சுகுரு டஸாகி அவ்வாறெல்லாம் எதுவும் செய்வதில்லை. டஸாகிக்கு அந்த மாதிரி ஆராய இயலாத உள்ளுக்குள்ளேயே மருகும் மனம். தானாகவேப் புழுங்கி தனக்குள்ளேயே குற்றங்களை உருவாக்கி அதற்கான தண்டனைகளை ஏற்றுக் கொண்டு நிர்க்கதியாக அலையும் சிந்தையைக் கொண்டிருக்கிறான் டஸாகி.

துப்பறியும் கதை போல் வேகமாக விரைகிறது இந்த நாவல். ஏன் அவனை வெறுத்து ஒதுக்கினார்கள் என்பது முதல் முடிச்சு. அப்படி வெறுத்து ஒதுக்கிய, பதின்ம வயது தோழமை எல்லோரையும் எதிர் கொள்வானா என்பது இரண்டாம் முடிச்சு. ஒவ்வொருவரையும் சந்திக்கும் போது, அவர்கள் சொல்லும் மனப்பதிவுகளும் அதன் தொடர்ச்சியான தகவல்களும் ‘அடுத்து என்ன… அடுத்து என்ன?’ என்று ஆர்வமூட்டுகிறது.

ஒவ்வொரு நண்பரும், பிறரை அவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை வெளிக்கொணர்ந்தது நன்றாக இருந்தது. பியானோ இசைக் குறிப்புகளும் அதன் தொடர்ச்சியான ஆபரா, சிம்பொனி விமர்சனங்களும் வாழ்க்கையைச் சொல்கிறாரா, இசையைச் சொல்கிறாரா என எண்ண வைத்தது. ஃபிரான்ஸ் லிஸ்ட் என்பவரின் பியானோ இசைத்தட்டு ஆன Années de pèlerinage நாவல் நெடுக இடம்பெறுகிறது. கதையின் தலைப்பான ’யாத்திரை மேற்கொண்ட வருடங்களும்’ என்பதற்கும் பொருந்துகிறது.

tsukuru_overboard

கதைக்குள்ளேயே பல உபகதைகளும், கிளைக்கதைகளும், சிறுகதைகளும் உண்டு. நாவலின் நடுவே பியானோ வாசிப்பவர் குறித்த அத்தியாயம் வருகிறது. இது இந்த நாவலின் மிக சுவாரசியமான இடம். பியானோ கலைஞருக்கு சிறப்பு சக்தி வந்து இருக்கிறது. அவர் சாத்தானை சந்தித்து இருக்கிறார். அதனிடம் இருந்து, ஒருவரைப் பார்த்தவுடன் அவருடைய நிறம் என்ன என்பது அவருக்குத் தெரிந்து விடும் சக்தியைப் பெறுகிறார். தன்னுடைய நிறம் போலவே இருப்போருடன் அவருக்கு ஒத்துப் போகும், என்பதையும் அறிகிறார். இந்த ஞானமும், பிறரைப் பார்த்தவுடன் உணர்ந்து கொள்ளும் உள்ளுணர்வும் வந்ததால், அவரது நெடுநாள் ஆயுள், மாதங்களாகச் சுருங்கிவிட்டது. இந்த சிறப்புப் பார்வை கிடைக்கும் சூட்சுமத்தை அவர் யாருக்கு வேண்டுமானாலும் தாரை வார்க்கலாம். ஆனால், யாருக்குக் கொடுக்கிறாரோ, அவருடைய ஆயுள்காலமும் எண்ணப்படும் நாள்களாகிக் குறைந்து விடும். அவர் எப்பொழுது பியானோ வாசித்தாலும், தன்னுடைய ஜாடியை, பியானோ மேல் வைத்து விட்டு வாசித்தால்தான், பியானோ வாசிப்பு களை கட்டும். அவருக்கு ஆறாம் விரல் இருந்திருக்கிறது. ஆனால், ஆறாம் விரலோ, பியானோ வாசிப்பிற்கு இடையூறாக இருந்திருக்கும். அதை வெட்டி எடுக்கச் சொல்லி இருப்பார்கள். அந்த ஆறாம் விரல்தான் ஜாடியில் இருந்ததா? ரொம்ப நாளைக்கு, இந்த இடம் மனதிலே சிந்தையைக் கிளறிக் கொண்டே இருக்கும்.

நியு யார்க் டைம்ஸில் சொல்லி இருந்தார்கள். கனவை சிலர் நன்றாக எழுதுவார்கள். அற்புதமாக விவரிப்பார்கள். நிஜம் போலவே இருக்கிறமாதிரி கதையில் உருவாக்கி விடுவார்கள். ஆனால், முரகாமியோ, எது கனவு, எங்கே நிஜம் என சிந்தை திகைக்கும் அளவு கொண்டு செல்கிறார். இதை மீ எதார்த்தம் (surrealism) எனலாம். குழந்தைகளுக்கான கற்பனை உலகம் என்றும் எளிமையாக்கலாம்.

முரகாமியிடம் என்னவெல்லாம் எதிர்பார்த்தேனோ, அவை எல்லாமும் இந்தப் புத்தகத்திலும் கிடைத்தது: கொஞ்சம் போல் பாலுறவு வர்ணனை; இசையும் அதன் தாளங்களையும் வாழ்க்கையோடு சங்கமிக்கும் லயம்; அமானுஷ்யமான உணர்வுகளை காற்றோடு உலவவிடுதல்; அர்த்தமற்ற வாழ்க்கையை தேடல் நிறைந்ததாக ஆக்கிக் கொள்ளும் முட்டாள்தனம்; பிறரோடு ஒட்டாமல், குழுவாகத் திரிய விரும்பும் விசித்திரம்; ஓட்டப்பந்தயம் போல் முடிவைத் தொடும் பயணமாக இல்லாமல், 4×100 தொடர் பந்தயமாக மாரத்தான் ஓடும் உயிர் வித்தை – எல்லாம் போதிய அளவில் கலந்திருக்கிறது.

டிரெயின் ஸ்டேஷன் போல் வாழ்க்கை. போக நினைக்கும் ஊரை மனதில் வைத்து அவசரமும் ஆர்வமும் பதற்றமும் கொண்டு தொடர்வண்டியில் ஏறுகிறோம்; இறங்குகிறோம். பயணங்களில் நிறைய பேரை சந்திக்கிறோம். சிலருடன் அதே இடங்களில் வசிக்கிறோம். சில சமயம் வழியனுப்ப மட்டும் ரெயில்வே ஸ்டேஷனுக்குச் செல்கிறோம். மேலிருந்து ஒருத்தன், இந்த கால அட்டவணையை உருவாக்கி, மின்வண்டியைப் போல் எல்லோரையும் இயந்திர கதியில் செலுத்துகிறான்.

tsukuru_train

பிறரின் இறப்பிற்கு நாம் காரணமாக இருக்கும்போது எப்படி உணர்கிறோம்? எதை உருவாக்குகிறோம்? யாரை திருப்தி செய்ய வாழ்கிறோம்? காதல் என்றால் என்ன? வெற்றி பெறுவது எப்போது? நிறைய யோசிக்க வைக்கிறது.

“நினைவுகளை மறைத்து விடலாம். ஆனால், அந்த நினைவை உருவாக்கிய சம்பவங்களை அழித்துவிட இயலாது.” – சுகுரு டசாகியிடம் சாரா சொல்வது

உன்னப் பெத்ததுக்கு உங்கப்பா அம்மா நைட் ஷோ போயிருக்கலாம்டா!

Cat_Critic

மகள் எட்டாம் வகுப்பு படிக்கிறாள். மகளைப் பள்ளிக்கூடத்தில் இருந்து பெற்று வருவதற்காக பள்ளிக்கு சென்றிருந்தேன். அவளுக்கு ஏதோ வேலை இருந்தது. பத்து நிமிடம் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

காத்திருக்கும் அறையில், மகளின் வகுப்பில் படிக்கும், சக மாணவனைப் பார்த்தேன். அவனுக்கு வகுப்பு முடிந்துவிட்டது. பெற்றோருக்காகக் காத்திருக்கிறான். காத்திருக்கும் சமயத்தில் பல சமயம் அவனைப் பார்த்திருக்கிறேன். வீட்டுப்பாடம் செய்து கொண்டிருப்பான். கடகடவென்று எழுதுவான். அன்று ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ என்று எழுதிக் கொண்டே இருந்தான். ஒரு முறை… இரு முறை… ஐந்தாம் முறை எழுதும்போது பொறுக்கவில்லை.

கேட்டுவிட்டேன். “ஏன் இப்படி ஏபிசிடி… எழுதிக் கொண்டிருக்கிறாய்? செல்பேசி வைத்திருக்கிறாய். அதில் ஏதாவது விளையாடலாம்; அரட்டை அடிக்கலாம். உன்னுடைய புத்தகப் பையில் கதைப் புத்தகம் இருக்கிறது. அதையாவது வாசிக்கலாம். நாளைக்கு அறிவியல் பரீட்சை இருக்கிறது. அதற்காவது படிக்கலாம். அதையெல்லாம் விட்டுட்டு… எதற்கு ஏபிசிடி…?”

“எனக்கு இடது கைப் பழக்கமாச்சே! இத்தனை நாளாப் பார்க்கறீங்களே? இதைக் கூட கவனிச்சது இல்லியா? வலது கையிலும் எழுதிப் பழக்கிக் கொள்ளலாம்னு இந்தக் கையில் எழுதிப் பார்க்கிறேன். Ambidextrous கேள்விப்பட்டதில்லையா? லியனார்டோ டாவின்சி, ஐன்ஸ்டீன், லெப்ரான் ஜேம்ஸ், பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்… எல்லாருமே இரண்டு கையிலும் சமமாக உபயோகிக்கக் கூடியவர்கள். நானும் அப்படி ஆகப் பார்க்கிறேன்.” என்றான்.

அது மாதிரி நீங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் என்று நிலைத்தகவல் எழுதினால், ”நீயெல்லாம் எழுதறதுக்கு, உங்க அப்பா அம்மா நைட் ஷோ போயிருக்கலாம்டா!” என்று எவர் எப்படி பாராட்டினாலும், தொடர்ந்து எழுதிப் பழகுங்கள். நீங்கள் எழுதுவதைப் பார்த்து, “அட… நான் இதை விட நன்றாக எழுதுவேனே!” என்று பலரை எழுத்துத்துறைக்கு கொண்டுவரும் உற்சாக டானிக் ஆக நீங்கள் இருக்கிறீர்கள்.

சிங்கப்பூர்: முதலிய நாடா? கம்யூனிசத் தோட்டமா?

எகனாமிஸ்ட் பத்திரிகையையும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தினசரியையும் மட்டுமே வாசித்துக் கொண்டிருந்தால், சிங்கப்பூர் தடையிலா வணிகக் கொள்கை கொண்டிருக்கிறது என நினைப்போம். அயல்நாட்டினரிடம் இருந்து மூலதனத்தை, இரு கரம் கொண்டு சிரம் தாழ்த்தி வரவேற்பதாகக் கேட்டிருப்போம். இதனால் வரிக் கட்டுப் பாடற்ற வாணிபமும் வியாபாரத் தடையின்மையும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு வித்திட்டன என உறுதியான தீர்மானத்திற்கு வந்திருப்போம்.

சிந்தனைக்கு சில தகவல்களும் எண்ணங்களும்:

  1. சிங்கப்பூரின் நிலம் அனைத்தும் அரசாங்கத்திற்கே, முழுக்க முழுக்க சொந்தம்.
  2. உங்களுக்கு வீடு வாடகைக்கு வேண்டுமானால், அரசுத்துறை சார்ந்த ’குடியமைப்பு அபிவிருத்தி குழு’விடம் இருந்து பெறலாம். – கிட்டத்தட்ட 85% குடியிருப்புகளை நிர்வாகமே தருகிறது.
  3. உலக அளவில் வெறும் பத்து சதவிகிதமே அரசு சார்ந்த நிறுவனங்களால் நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது. சிங்கப்பூரில் இது உலக அளவை விட இரண்டு மடங்கு அதிகம்! நடுவண் அரசின் நான்கில் ஒரு பங்கு எடுமுதல் பயன்பாட்டை அரசாங்க அமைப்புகளே உருவாக்குகிறது.
  4. சென்னை, மும்பை போன்ற நகரங்களின் அளவோடும், மக்கள் தொகையோடும் சிங்கப்பூர் நகரத்தையும் ஒப்பிடலாம்:

 

நகரம்

சிங்கப்பூர்

மும்பை

சென்னை

1. நிலப்பரப்பு 277 ச.மை. 233 ச.மை. 164.8 ச.மை.
2. மக்கள்தொகை 5,469,700 12,478,447 4,681,087
3. மக்கள் தொகை அடர்த்தி 19,725/ச.மை. 54,000/ச.மை. 28,000/ச.மை.
4. தண்ணீர் போத்தலின் விலை (0.33 லிட்டர் புட்டி) 53.80 14.50 14.50
5. பியர் விலை (0.5 லிட்டர் மது) 362.53 60.00 60.00
6. மின்சார கட்டணம்(சராசரி) 9,629.71 1,483.33 1,483.33

இதை சோஷலிஸம் என்பதா? மார்க்சிஸம் என்பதா? கீனிசிய கோட்பாடு என்பதா?புதுச்செவ்வியல்வாதம் (neoclassicism) என்பதா?

யாராவது, சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ கொண்டிருந்த சித்தாந்தம் ‘இதுதான்!’ என்று அறுதியிட்டு வாதிட்டால், அந்த நபருக்கு நிதிநிலைக் கொள்கை, பொருளாதாரக் கருத்தியல் ஆகியவற்றில் எதுவும் தெரியாது என்பதை மட்டும் உறுதியாக அறியலாம்.

சாது மிரண்டால்: சிக்கல் பின்னல்

வாசிக்க: “Labyrinth” – The New Yorker

Amelia Gray is the author of the novel “Threats” and the short-story collection “Gutshot,” which will be published by FSG Originals in April. Amelia Gray’s “Labyrinth” was originally published in the February 16, 2015 issue of The New Yorker.

Amelia+Gray_Labyrinth_New_Yorker_Fiction_Story

அமீலியா கிரே எழுதியதில் இது சற்றே சாதாரணமான கதை. பழங்காலத் தொன்மத்தை, நவீன யுகத்திற்கு ஏற்ப சொல்வது அமீலியாவின் வழக்கம். இந்தக் கதையும் அவ்வாறே முன்னுமொரு யுகத்தில் நம்பப்பட்ட கதையை, தற்காலச் சூழலில் விவரிக்கிறது.

சிக்கல்வழி என்னும் இந்தக் கதைக்கு கிரேக்கப் புராணத்தில் வரும் தீஸியஸ் கதை தெரிந்திருப்பது அவசியம். ஹிந்து மதத்தில் வரும் நந்தி போல் கிரேக்க ஹெல்லனிய தொன்மத்தில் மினடோர் இருக்கிறான். கீழே அவனைப் பார்க்கலாம். பாதி மனிதன்; பாதி எருது.

minotaur-Nandhi_Theseus_Greek_Hellenic_Mythology_Apis_Egypt

பேரரசன் மினோஸ் என்பவருக்கும் அவரின் அரசியார் ஆன பாஸிஃபே என்பவருக்கும் மகனாகப் பிறக்கிறார் மினொடார். சூஸ் (Zeus) அனுப்பிய காளையோடு அரசி பாஸிஃபே உறவு கொண்டு, அந்தக் கள்ள உறவினால் ரிஷபத்தின் தலையும் மானுட உடலுமாகப் பிறக்கிறான் மினொடார். இதைக் கண்டு அரசன் மினோஸ் வெட்கம் கொண்டு, வினோத மினொடார் குழந்தையை ’இடர்ப்பின்னல்’ (labyrinth)ல் அடைத்து வைக்கிறான்.

நாட்டில் குற்றம் புரிபவர்களையும், போரில் சிறைப் பிடித்தவர்களையும் இந்த இடர்ப் பின்னலுக்குள் அனுப்பி வைப்பான் அரசன் மினோஸ். அவர்களால், அந்த சிக்கலில் இருந்து வெளியே வர இயலாது. மாட்டிக் கொள்வார்கள்; முழிப்பார்கள். இந்த முரட்டுக் குழந்தைக்கு தீனியாவார்கள்.

காலம் ஓடுகிறது. அரசன் மினோஸின் இன்னொரு மகன் ஆன இளவரசன் ஆண்ட்ரோஜியஸ் (Androgeus) ஒலிம்பிக்ஸில் கலந்துகொள்ளச் செல்கிறான். ஏஜியஸ் (Aegeus) அரசனின் சொந்த ஊரில் ஏத்தனிய (Panathenaic) போட்டிகள் நடக்கின்றன. போட்டிக்குச் சென்ற இடத்தில் தன்னுடைய அம்மாவை முறைதவறி உறவு கொண்ட காளையோடு மராத்தான் ஓட்டம் ஓடுகிறான். அந்தக் காளை, மினொடாரின் தந்தை. மினொடாரின் தந்தை, இளவரசன் ஆன்டிரோஜியஸைக் கொன்று விடுகிறது.

ஏஜியஸ் அரசனின் ஆளுகைக்கு உட்பட்ட இடத்தில் நடந்த இந்தப் பலிக்கு பிராயச்சித்தமாக ஒவ்வொரு வருடமும் ஏழு ஆண்களையும், ஏழு பெண்களையும் பலியாகத் தருமாறு அரசன் மினோஸ் ஒப்பந்தம் போடுகிறான். ஏஜியஸ் அரசனும், இந்த பலிக்கடாக்களை மினோடார் இருக்கும் சிக்கல் வளைக்குள் அனுப்பி இரையாக்குகிறான்.

மகாபாரதத்தில் பீமனின் பகாசுர வதம் நினைவுக்கு வரலாம். ஏகசக்ர நகரத்தில் பாண்டவர்கள் தங்கியிருந்தபோது பீமனால் பகாசுர வதம் நடைபெற்றது. பகன் என்னும் அசுரன் இந்த நகரத்தை ஒட்டிய மலையடிவாரத்தில் இருந்துகொண்டு ஊரில் உள்ள அவ்வளவு பேரையும் அடித்துக் கொன்று ஊரையே ரணகளமாக்கியிருந்தான். இதனால் அவர்கள் ஒன்று திரண்டு பகாசுரனை சந்தித்து ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி பகாசுரன் பசிக்கு உணவாக “எள்ளு அன்னம், மூன்று வகையான பருப்பு உருண்டைகள், பொரி, அப்பம், கள், சாராயக் குடங்கள், கரடி, பன்றி மாமிசம், கறுப்பு நிறம் கொண்ட இரண்டு காளைமாடுகள், ஒரு நரனாகிய மனிதன்” என்று ஒரு பட்டியலை தயார்செய்து தினமும் வேளை தவறாமல் அனுப்பி வைப்பதாக ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தனர்.

பீமன் வண்டி நிறைய உணவு இருக்க அந்த வண்டியை ஓட்டிக்கொண்டு மலையடிவாரத்துக்கு சென்று, பகாசுரனையும் யுத்தம் செய்ய அழைத்து அவனோடு மோதி, அவன் குடலை உருவி மாலையாகவே போட்டுக்கொள்கிறான். குடல் மாலையோடு பகாசுரனை தலைக்கு மேல் தூக்கி வந்து ஊர் எல்லையில் கொண்டுவந்து போட, ஊரே ஊர்வலம் போல வந்து இறந்துகிடந்த பகாசுரனைப் பார்த்து மகிழ்கிறது.

ஆனால், கிரேக்கக் கதை கொஞ்சம் மாறுபடுகிறது.

இரண்டாண்டுகளாக ஏஜியஸ் அரசன் தன்னுடைய குடிமக்களை அனுப்பி வைக்கிறான். மூன்றாம் ஆண்டு ஏஜியஸ் அரசனின் மகன் தீஸியஸ் (Theseus) “என்னை அனுப்பு! அந்த அதிகாரநந்தியைக் கொல்கிறேன்!” எனச் சூளூரைக்கிறான்.

கடலில் செல்வதற்கு முன் கடைசியாகச் சொல்கிறான். “நான் வெற்றியோடு திரும்பினால், இந்தப் பாய்மரப் படகில் வெள்ளை நிறப் பாய் பறக்கும். மினாடொரிடம் பலியாகி விட்டால், கறுப்பு நிறப் பாய் இருக்கும்! அதை வைத்து உன்னைக் காப்பாற்றிக் கொள்!” என முன் ஜாக்கிரதையாக இருக்குமாறு சொல்லியும் செல்கிறான்.

மினொடாருக்கு ஏரியாட்னி (Ariadne) என்னும் மகள் இருக்கிறாள். எல்லா இளவரசிகளையும் போலவே, இவளும் பேரழகி. ஆண்வாடையே பார்க்காமல் வளர்ந்தவள். வந்த ஒன்றிரண்டு ஆண்களும் அப்பா மினொடாருக்கு இறையாகிப் போனவர்கள். தீஸியஸைக் கண்டதும் காதல் வருகிறது. தீஸியஸிற்கு மினொடார் இருக்கும் சிக்கல் வளையின் நுட்பங்களைச் சொல்கிறாள்.

ஒரு நூற்கண்டைக் கொடுக்கிறாள். உள்ளே நுழைவது எளிது. நடுவை அடைந்து விடுவதும் எளிது. மினோடாரை கொன்று விடுவது கூட எளிது. ஆனால், கொன்ற பிறகு எவ்வாறு வெளியேறுவது? அபிமன்யு போல் சக்கர வியூகத்தை பிளந்து கொண்டு நட்ட நடு வலைப்பின்னலில் வந்து விடலாம். அந்த இடர்ப்பின்னலில் இருந்து சுருக்கே வெளிப்பாதை கண்டுகொள்வது எவ்வாறு? அந்த நூற்கண்டை வைத்து, உள்ளே வந்த வழியை அடையாளம் காணலாம். நூற்கண்டின் வாலைப் பிடித்தால், வெளிச்சம் கிட்டும் என்கிறாள்.

அவனும் இளாவரசி ஏரியாட்னி சொற்படியே நடக்கிறான். நூலைப் பிரித்துப் போட்டுக் கொண்டே இடர்ப்பின்னல் உள் செல்கிறான். Mazerunner படம் போல் இருக்கிறது. மினொடார் நந்திதேவரை வீழ்த்துகிறான். நூல் போட்ட பாதையிலேயே வெளி வந்து இளவரசி ஏரியாட்னியின் கைப்பிடிக்கிறான்.

இங்கே சுபம் போட்டிருக்கலாம். ஆனால், கதை நீள்கிறது.

வெற்றிக் கொடி கட்டிய தீஸியஸ் படகை நடுவில் இளைப்பாறலுக்காக நக்ஸோஸ் (Naxos) தீவில் நிறுத்துகிறான். உல்லாசமாகப் பொழுது போகிறது. விடியற்காலையில் எழுந்து படகை செலுத்துகிறான். இளவரசி ஏரியாட்னியை தீவிலேயே மறந்து (?!?) விட்டுவிடுகிறான். அவளைப் பிரிந்த துக்கம் தாளாது, தன்னுடையக் கப்பலில் கறுப்புக் கொடியைப் பறக்கவிட்டுத் திரும்புகிறான்.

கறுப்புப் பாய்மரத்தை பார்த்த அப்பா ஏஜியஸ், மினோடார் வருகிறான் என பயந்து, கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்கிறான்.

இப்பொழுது, மீண்டும் நியு யார்க்கர் கதைக்கே வந்துவிடலாம். அதற்கு முன் எனக்கு ஏன் அமீலியா கிரே பிடிக்கும் என்பதைச் சொல்லிவிடுகிறேன்.

நியு யார்க்கர் பேட்டியில் அமீலியா இவ்வாறு சொல்கிறார்: “நான் புராணத்திலும் பைபிளிலும் தொன்மக் கதைகளிலும் வளர்ந்தவள். எந்தப் புத்தகத்தை எடுத்தாலும், அதில் உள்ள மிக மிகச் சிறியக் கதையில்தான் படிக்கத் துவங்குவேன். குறைந்த வார்த்தைகளில் என்ன சொல்ல முடியும்? அதை எப்படி இந்தக் கதாசிரியர் சொல்கிறார்? பெரிய நாவல் எழுதும்போது கூட குட்டி விஷயங்களில் தனித்து நிற்கும் காட்சிப்பரப்பைக் கண்டுகொள்வதில் தனி சுகம் கிடைக்கிறது!”

என்னதான் ஜெயமோகனைக் கும்பிட்டாலும், இந்த மாதிரி சுறுக் புனைவுகள் தரும் சுகம் அலாதியானது.

Amelia Gray on October 28, 2010

உள்ளுர் திருவிழாவில் நியு யார்க்கர் கதை துவங்குகிறது. ரங்க ராட்டினம் ஒரு புறம். விதவிதமான தின்பண்டங்கள் இன்னொரு புறம். வருடா வருடம் நடக்கும் அறுவடைக் கொண்டாட்டம். அதன் ஒரு அங்கமாக மனிதனை விட உயரமாக வளர்ந்து இருக்கும் கதிர்களின் நடுவே கண்ணாமூச்சி விளையாட்டு இருக்கிறது. இந்த வருடம் அது கிடையாது.

ஒரு இடத்தில் துவங்கி, இன்னொரு இடத்தில் முடியும் புதிர்பாதை (corn maze) கிடையாது. வாழ்க்கை போல், இதுதான் ஆரம்பம், இது நடுப்பகுதி, இது இறுதி இடம் என்று சென்று முடிக்க முடியாது. இந்த வருடம் கதையின் தலைப்பில் வரும் ‘சுருள் வளைவு சிக்கல் அமைப்பு’ (labyrinth). இதன் மையத்தை அடைந்தால் “உங்களுக்கு வாழ்க்கையில் என்ன வேண்டுமோ, அதை உணர்வீர்கள்!” என்கிறார், இந்த அமைப்பைக் கட்டியவர்.

எவருமே அந்தச் சுழலுக்குள் செல்ல விரும்பவில்லை. தலையை எதற்கு தேவையில்லாமல் நுழைக்க வேண்டும்? வழக்கம் போல், எல்லா வருடங்களும் போல், கூட்டம் கூட்டமாக, மந்தை மந்தையாக, சாரி சாரியாக, ஒன்று சேர்ந்து, ஒரு பாதையில் செல்வோம். நடுவே வழி தெரியாமல் தொலைந்து போவோம். எல்லோருடனும், ஒன்றாக வெளியேறுவோம். அதைத்தான் ஆசைப்படுகிறோம் என்கிறார்கள்.

சுழல்பாதையைக் கட்டியவனுக்கோ கோபம்; அப்படியே நிறைய வருத்தம்; கூடவே கழிவிறக்கம். என்னடா இது! ஒருவருக்குக் கூடவா, இந்தப் பாதைக்குள் நுழைந்து பார்க்க திராணி இல்லை! எதற்காக ஆசைப்படுகிறோம் என்பதைக் கண்டு அடைவதுதானே, இந்தச் சுழலின் நோக்கம்? அதைச் செய்து பார்க்காமல், ஒதுங்கி, கரையிலேயே தேங்கி இருக்கிறார்களே!

கரையிலேயேத் தேங்கி இருக்கிறோம் என்று பிறர் சொல்வதை நாம் ஏன் குற்றமாகப் பார்க்கிறோம்? எதற்காக, யாருக்கு நிரூபிப்பதற்காக எந்தவொரு விஷயத்தையும் கையில் எடுக்கிறோம்? மற்றவர்களின் சான்றிதழுக்காகத்தான் போட்டிகளில் குதிக்கிறோமா?

கோட்டையில் ஏறி கொடியை நாட்டியபின், கீழிறங்கும் வித்தை உங்களுக்குத் தெரியுமா? சுழலை வெற்றிகரமாக முடித்துவிட்டபின், அந்த சுழலை முழுமையாகப் புரிந்துகொண்டபின், அதைவிட்டு, வெளியேற முடியுமா?

இந்தக் கதையைப் படித்தபின் உங்களுக்கு என்ன கேள்விகள் தோன்றின…?

சரி… இந்த சாதாரணக் கதையை நியு யார்க்கர் ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? இரு பதிப்பாசிரியர்களின் உரையாடலை இங்கேக் காணலாம்:

ஜெயமோகனின் ‘மகாபாரதம்’: ஏன் மற்ற பாரதங்களை விட மிகச் சிறந்தது?

Bulomai_Bruhu_Puloman_Indrani_Sasi_Indiran_Lords_Mahabharatha_Agni_Fire_God_Varuna_Shanmuga_Vel
ஓவியம்: ஷண்முகவேல்

இது சின்ன வயதில் படித்த மகாபாரதக் கதை. முக்கோணக் காதல் கதை. பிருகு முனிவர் புலோமையை விரும்புகிறார். புலோமையோ புலோமனை விரும்புகிறாள். ஆனால், யாராவது தன்னுடைய நேசத்தை அங்கீகரித்தால் மட்டுமே, கட்டிவைக்கப்பட்ட கணவன் பிருகுவை விட்டு விட்டு, இராட்சஸன் புலோமன் பின் செல்லலாம். அக்னியை அழைக்கிறாள். அக்னிதேவனும், ‘மனசுக்குப் பிடிச்சா, போயிட்டு வா!’ என ஆக்ஞை தர, அரக்கன் புலோமனுடன் சந்தோஷமாக இருந்து விட்டு, மகள் இந்திராணி பிறந்தவுடன் முன்னாள் கணவன் ஆன, பிருகு முனிவரிடமே திரும்பி விடுகிறாள்.

இவ்வளவுதான் கதை. சின்னக் கதை. தினத்தந்தியில் கூட வந்து இருக்கிறது. சிவமகா புராணம் தர்ம ஸம்ஹிதையில் இடம் பெற்ற கதை. நைமிசாரணிய முனிவர்கள், தக்ஷப்பிரஜாபதி, காஸ்யப முனிவர், வைவஸ்வத மன்வந்தரம், பூதகிருதாயி என கோடிக்கணக்கான கதாபாத்திரங்களும் இடங்களும் மிருகங்களும் இயற்கை அதிபதிகளும் வந்து போகும் மஹாபாரதத்தில் இடம் பெற்ற கதை. அரச வம்சாவழி, அவர்கள் திருமணம் செய்து கொண்டவர்கள், முறைப்படி மணம் புரியாமல் காதல் புரிந்தவர்கள், அவர்களின் சந்ததி என பட்டியலிட்ட காவியத்தில் ஒரு துளி.

அரிசி வெந்துவிட்டதா என சரிபார்க்க ஒரேயொரு பருக்கையை எடுத்து வாயில் போட்டு பார்ப்பது மாதிரி இந்தப் பகுதியை வாசித்தேன்: ‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 2

இத்தனை விஷயங்களையும் கதையில் வைக்கிறார். அதைவிட இலக்கிய நயம் என்றால் எப்படி இருக்கும் என்பதை சொல்லுமாறு எழுதுகிறார். குழப்பமான குடும்ப அமைப்புகளையும், யாருக்கு யார் தகப்பன், எப்பொழுது எங்கே மகவு பிறந்தது, எவ்வாறு வளர்ந்தது, என்னும் சிக்கல் மிகுந்த கிளைகளை லாவகமாகச் சொல்கிறார். எல்லா விஷயங்களையும் சொல்வது ஒரு கலை; அந்த விஷயங்களை மனதில் பதியுமாறு ‘திருஷ்யமா’க ஆக்கி வார்த்தைகளில் விளக்கினாலும் நினைவின் அடி ஆழத்தில் இருத்துவது இன்னொரு கலை. அகரமுதலியையும் அபிதான கோசத்தையும் வைத்துக் கொண்டு படிக்க வேண்டிய காப்பியத்தை சுளுவாக உரித்து ஊட்டி விடுகிறார்.

ஜெயமோகனை எவ்வளவோ பாராட்டி இருப்போம். இருந்தாலும் அசகாய சூரரை இன்னொரு தடவை வாழ்த்துகிறேன்.

இரு கவிதைகள்: நிஜமும் கற்பனையும்

Activism is the rent I pay for living on the planet. -Alice Walker

disney_pixar_cars_Movies_Trains

மகளின் பாடப் புத்தகத்தைப் படித்தால் பல திறப்புகள் கிடைக்கின்றன. குறிப்பாக சொன்னால், என்னுடைய பள்ளிக்காலத்தில், ஆங்கில இலக்கியத்திற்கு இன்னும் நல்ல ஆசிரியர்கள் கிடைத்திருக்கலாம்.

இரண்டு கவிதைகள் வாசிக்கச் சொன்னார்கள்:

1. The Song of Wandering Aengus by William Butler Yeats : The Poetry Foundation
2. The Railway Train, by Emily Dickinson

படித்து விட்டீர்களா? இப்பொழுது கேள்வி நேரம்:

இந்த இரண்டுக் கவிதைகளிலும் உண்மையும் மாயையும் எங்கு கலக்கிறது? இந்த இரு ஆக்கங்களில் இருந்து நேரடியாக விளங்கிக் கொள்ள முடிவதையும் பூடகமாகப் புரிவதையும் விவரி.

எமிலி டிக்கன்ஸனின் கவிதைக்கு ‘புகைவண்டி’ என்று தலைப்புக் கொடுக்காவிட்டால், அந்தக் கவிதை எதைக் குறித்து எழுதப்பட்டது என்பதே புதிராக இருந்திருக்கும். அந்தக் கவிதை எழுதியபோது, எமிலி, எந்தத் தலைப்பும் வைக்காமல், கவிதையை வெளியிட்டிருக்கிறார். ”அது பல மைல்கள் ஓடுவதை பார்க்க விரும்புகிறேன்” என்று துவங்கும் முதல் வரியே, அந்தக் கவிதைக்கு தலைப்பாக வைத்திருக்கிறார். எமிலி எழுதியவாறே, இந்தப் புத்தகத்தில், எமிலியின் கவிதையை தலைப்பு இன்றி கொடுத்திருந்தால், அந்தப் புதிரை விடுவிப்பதில் சுவாரசியம் இருந்திருக்கும்.

எனக்கோ, தலைப்பு தெரிந்துவிட்டது. இப்பொழுது எமிலி எதைக் குறிப்பிடுகிறார் என்பது துவக்கத்திலேயே போட்டுடைக்கப்படுகிறது. கடைசி வரியில் தொழுவம் (stable) என்கிறார். எனவே குதிரையையும் இரயிலையும் ஒப்பிடுகிறார் எனப் புரிந்து கொண்டேன். இதன் பிறகு இந்தக் கவிதையில் எங்கே அசல் முடிகிறது… எங்கே அரூபம் துவங்குகிறது என்பதில் பெரிய குழப்பம் இல்லை.

Boanerges என்னும் புரியாத குறியீடு வருகிறது. அது தெரியாவிட்டாலும் கவிதை புரியும். ( இணையத்தில் தேடியதில் கிடைத்த விடை: Boanerges என்றால் இடியின் மகன்கள். குதிரை போன்ற துள்ளலான கனைப்பைக் குறிக்க, கிறித்துவ விவிலியத்தில் யேசு கிறிஸ்து பயன்படுத்தும் சொல்லாக்கம். )

எமிலி கவிதையின் தலைப்பை சொல்லியிராவிட்டால் சுவாரசியம் இருந்திருக்கும். ‘புகையிரதம்’ என்று போட்டு உடைத்தபின் நேரடியாக ஒரே ஒரு அர்த்தம் விளங்குகிறது. உயிரற்ற புகைவண்டிக்கு, உயிரூட்டமுள்ள குதிரையை ஒப்பிட்டு கவிதை வளரும்போது நிஜம்; பிக்ஸாரும் (Pixar films) டிஸ்னியும் எடுத்த படம் போல் கார்களுக்கும் பொறிகளுக்கும் பிரத்தியேகமான உலகம் இருக்கும் என்பது கற்பனை.

Swan_Celtic_Irish_Goddess_aengus_Mythology_Strory_Paintings_Art

அடுத்ததாக வில்லியம் பட்லர் யீட்ஸ் எழுதிய ’அலைபாயும் ஏங்கஸ்’ கவிதை. எமிலியின் எளிமையான சந்தக்கவியை விட இந்தக் கவிதை எனக்கு பிடித்து இருந்தது. நல்ல புனைவைப் படித்தால், ‘ஏதோ புரிகிற மாதிரி இருக்கு… ஆனால், சொல்ல முடியல’ என்னும் தொண்டையில் மிடறும் நிலைப்பு புரிகின்ற புன்முறுவலை தோன்ற வைக்கிறது.

வனாந்திரத்திற்குள் சென்றவன், ஏதோவொரு காட்டுக் கனியை ஓடையில் விட்டெறிய, அதற்கு கெண்டை மீன் சிக்குகிறது. அதை வறுப்பதற்கு அடுப்பு மூட்டினால், மீனோ, பருவப்பெண்ணாக மாறி, அவனின் பெயர் சொல்லி விளித்து அழைத்துவிட்டு, மரங்களின் நடுவில் ஓடி மறைந்துவிட்டது. அவளைக் கண்டுபிடிப்போம் என்னும் நம்பிக்கையில் கிழவராகிய பின்னும் தாருகாவனத்தில் தவம் போல் தேடுகிறேன் என கவிதை முடிகிறது.

இந்தக் கவிதையில் Aengus என்பது புரியாத பெயர். ( இணையத்தில் தேடியதில் கிடைத்த கதை: அயர்லாந்து நாட்டின் கெல்ட்டிய இனத்தவருக்குரிய தொன்மத்தில் ஆங்கஸ் கடவுள் ஆக இருக்கிறார். இளமைக்கும் அழகுக்கும் உரிய சம்ஸ்கிருத மன்மதன் போல் காதற் கடவுள். ஆங்கஸின் கனவில் தினசரி அந்தப் பெண்மணி வருகிறாள். அவனை பசலை நோய் பீடிக்கிறது. அவனால் தன்னுடைய காதலியை நேரில் காண இயலவில்லை. உறக்கத்தில் வரும் தேவதையைத் தேடித் தேடி அலைகிறான். அவளோ ஒரு வருடம் அன்னமாகவும் அடுத்த வருடம் மானுடப் பெண்ணாகவும் வலம் வருபவள். அவளை நூற்றுக்கணக்கான அன்னங்கள் நீந்தும் வெள்ளி நீரோடையில் மிகச்சரியாக கண்டுபிடிக்கிறான். அவளை அடையாளம் கண்டுகொண்ட அடுத்த நொடியே அவனும் அன்னமாக மாறி அவளுடன் பிருந்தாவனம் செல்கிறான். )

தன்னுடைய கவிதையின் துவக்கத்தில், யீட்ஸ், இவ்வாறு சொல்கிறார்: ‘ஏனென்றால், என்னுடைய தலைக்குள் தீப்பிடிக்கும் ஜ்வாலை கழன்று கொண்டிருந்தது’. ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயத்தில் தணிக்கவியலா ஆர்வம் இருக்கும். அந்த நெருப்பு எரிந்து கொண்டேயிருக்கும். அந்த ஆர்வம் என்பது நிஜம். அது கொழுந்து விட்டெறியும் அக்னியாக தோன்ற வைப்பது கவியின் பொய்.

ஆயிரத்தோரு இரவுகள் போன்ற கதைகளில் மீன்கள் பெண்ணாக மாறுவதைக் கேட்டிருக்கிறேன். கவிஞர் யீட்ஸ், அந்தக் கதைகளைப் படித்து, அவற்றையும் தன்னுடைய ஐரிஷ் தொன்மத்தையும் இங்கே கலந்திருக்கலாம்.

பற்றுக்கோல் என்பது குச்சியாக முதல் வரியில் வருகிறது. அந்தக் குச்சியில் கல்வி என்பதைக் கவ்வி கனியாக சொருகிக் கொள்கிறார். அதைக் கொண்டு அகப்படவியலா கண்டுபிடிப்பான, மீனைப் பிடிக்கிறார். அந்த விருந்தை உண்பதற்காக தயாரிக்கும்போது, உரு மாறி தப்பித்து ஓடி விடுகிறது. அந்த உரு மாற்றத்தைத் தேடித் தேடி காலம் ஓடி விடுகிறது. முதிய வயதிலும் அந்த கிடைக்கவியலாப் பெண்ணைத் தேடி மோகம் தலைக்கேறி அலைக்கழிக்கிறது. காட்டில் கனிகள் உண்டு. வேறு மீன்கள் உண்டு. அதில் நாட்டம் இல்லை

மனதிற்குப் பிடித்த வேலையை மூப்படையும் வரை செய்ய நினைப்பது அசல் விருப்பம். அந்த எண்ணம் மாயமானாக கண்ணாமூச்சி ஆடுவது கூட அசலில் நிகழ்வதே. இந்த நிஜத்தை, இளவயது காதலைத் தேடி பரிதவிப்பதற்கு ஒப்பிடுவதாக நினைப்பது கனவு லோகம்.

Rabbit – முயல்

சசவிசாடம்

Rabbit_Snow_House_Carrots_Bush

அகராதி: சசவிசாடம், hare’s horn. -a term illustrative of an impossibility, முயற்கொம்பு.

மூங்கிலுக்குத் தண்ணீர் ஊற்றும்போது, ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். வீட்டின் வெளியே இருக்கும் புதரின் அருகில் அந்த முயல் உட்கார்ந்து இருந்தது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பனி. அந்த வெள்ளிப்பனியின் மீது உலாவிக் கொண்டிருந்தது முயல். உலாவுவது என்பதை விட சாவதானமாக உட்கார்ந்து இருந்தது. அதற்கு எந்த அவசரமும் இல்லை. பணிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பச்சை இலைகள் இல்லாத பழுப்புப் புதரை தூரத்தில் இருந்தே பார்க்கலாம். அதே புதரின் அடியில், அதே பழுப்பு நிறத்தில் முயல், பேசாமல் அமர்ந்து இருப்பதை அருகில் வந்தால் பார்க்க முடியும்.

ஒரே இடத்தில் காலை முழுக்க உட்கார்ந்து இருந்தது. இதனால்தான் ஆமையுடன் நடந்த ஓட்டப் பந்தயத்தில், அந்த முயல் தோற்றிருக்க வேண்டும்.

சூரியக் குளியலை முயல் ரசித்துக் கொண்டிருந்தது. பனியில் அதன் கால்கள் உறைந்து போய் ஐக்கியமாகி இருக்கும். ஆனால், சடாரென்று பின்னங்காலைத் தூக்கி மனிதன் போல் இரண்டு காலில் நின்று கைக் கூப்பியது.

‘வணக்கம்’ என்று நானும் மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

பணியில் சிக்கல் எழுந்தபோதெல்லாம் சமையலறைக்குச் சென்றேன். சமையலறை ஜன்னல் வழியாக, இன்னும் அந்த முயல் வீற்றிருக்கிறதா என நோக்கினேன். நோக்கிய போதெல்லாம், சும்மா இருந்த முயலைப் பார்த்துக் கொண்டிருந்ததில்

‘அல்லும் பகலும் இல்லா,
சூதானது அற்ற வெளிக்கே, ஒளித்து சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே
, தெரியாது ஒரு பூதர்க்குமே’

என்று கந்தரலங்காரம் எழுதிய அருணகிரிநாதர் தெரிந்தார். தவம் செய்யும்போது நிறைய இடைஞ்சல்கள் இருக்கும். சாலைக்கு அருகில் உள்ள பொந்து என்பதால் கார்கள் நிறைய சென்று வரும். சொந்த வீட்டிற்கு அருகிலேயே தவம் செய்ய வேண்டும் என்பதால் கார்கள் புழங்கும் சாலையின் அருகில்தான் காற்று வாங்கக் கிடக்க வேண்டும். கார் வரும்போது முயலுக்கு பயமாக இருந்தது. அதனுடைய புகலிடம் தேடித் தாவித் தாவி மறைந்து விட்டது.

மறைந்து போனவுடன் காணாமல் போக்கிக் கொண்ட எழுத்தாளர் ஆன பெருமாள் முருகன் நினைவிற்கு வந்தது. முதலில் ‘மாதொருபாகன்’ சர்ச்சை குறித்து பேச்சுக் கொடுத்தேன்.

”காளிக்கும் பொன்னாயிக்கும் இருக்கிற மாதிரி சிக்கல் எதுவுமே எனக்குக் கிடையாது. இங்கே எல்லாமே நான் தான். குட்டி போடுவதும் நான் தான். கருத்தருப்பரிதும் தான் தான். அந்தக் குட்டியாக இருப்பதும் நான் தான். இன்னொரு ஜீவனின் கதைக்கே இடமில்லை. விக்கிப்பீடியாவில் போய்ப் பார்.”

‘எதுவும் இல்லையே முயலாரே!’

“தமிழ் விக்கியில் எந்த மயிரும் இருக்காது. இருந்தாலும் உனக்குப் புரியாது. ஆங்கில விக்கியில் நான் செய்யச் செய்ய, அவர்களாகவே எழுதியிருக்கிறார்கள். Superfetationனு பேரு. மிகைச் சூலுறவு என்று சொல்லலாம். ஒரு மாத விலக்கின் போது உருவாகும் இளம் சினைக்கரு இன்னொரு மாதவிடாயின் போது கருப்பையில் குட்டியாகி விடும். தானாகவே குழந்தைப் பெத்துப்பேன்! இன்னொரு ஆண் துணையே வேண்டாம்.”

‘நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ…’ பாடலை ஹ்ம்மிங் செய்தேன்.

“சீனாவில் நான் நிலா. பௌர்ணமிதோறும் முழுநிலாவில் தோன்றுவேன். ஈஸ்டர் என்றாலே முயல் நினைவுக்கு வரவேண்டுமே? இயேசு சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து உயிர்த்ததை குறிக்கும் முகமாகக் கொண்டாடப்படும் திருவிழாவின் முகமாக என்னை வைத்திருக்கிறார்கள்”

முயல் இப்போது தன் பீயை தானே உண்ண ஆரம்பித்தது.

‘என்ன இது கடவுளைக் குறித்துச் சொன்னவுடன் உன் மலத்தை நீயே உட்கொள்கிறாய்?’

“இதற்கு மருத்துவம் தெரியணும். அல்லது உயிரியலாவது உனக்குத் தெரிஞ்சிருக்கணும். உன்னைப் பார்த்தால் ரஜினியும் ரெஹ்மானும் தவிர வேற எதுவும் பரிபாலிப்பவனா தெரியல! இதுக்குப் பேரு ’பெருங்குடல் உயிர்நொதிப்பு’. மாடு அசை போடுவதை பார்த்திருக்கியா? அவசரமா சாப்பிட்ட உணவை மறுபடியும் ஒழுங்கா செரிக்க அசை போடும் எருமை மாட்டை பார்த்திருப்பே!”

‘ஞாயிறுதோறும் திருச்சபையில் புதிய ஏற்பாட்டை அசை போடறாங்களே… அது மாதிரி!? அவர் இரண்டாயிரம் ஆண்டுகளாக ”வரேன்… வரேன்னு” சொல்லி பூச்சாண்டியல்லவா காட்டிண்டுருக்கார்!’

“என்னுடைய எச்சிலைத் திரும்ப வாய்க்கு கொணர்ந்து மீண்டும் உட்கொள்ளுவது உவ்வே! நான் வேற மாதிரி… ஐஸிஸ், சவூதி அரேபியா வகையறா! கடகடவென்று மேஞ்சுருவேன்… அங்கே இருக்கும் விஷயத்தையெல்லாம் சாப்பிட்டுடுவேன். அதன் பிறகு என்னுடைய கோட்டைக்கு வந்து எல்லாத்தையும் வெளிக்கு பேண்டு விடுவேன். அதை எப்போ பசி எடுக்குதோ, அப்போ சாப்பிட்டுக்கலாம்.”

முயல் தூங்குகிறதா, அல்லது என்னுடைன் பேசுவதெல்லாம் முழுக்க முழுக்க கற்பனையா என்று இப்போது தெரியவில்லை.

முயலும் என்னைப் போல் கண்ணைத் திறந்துகொண்டே தூங்கும் ஜாதி. அலுவலில் மந்தமான சூழலில் — வேலை வேண்டும் என்று கேட்டு தொணப்பவும் முடியாது. கண்மூடி நிம்மதியாக உறங்கவும் முடியாது. விழி திறந்திருந்தாலும், கண்டும் காணாத மாதிரி அமர்ந்திருக்கும் சந்திப்புகள் இருக்கும். அங்கே கேள்வி கேட்கும்வரை கண்பேசா மௌனம் அவசியம். கீழே வேலை பார்ப்பவர்கள் ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் அரட்டை அடிக்கும்போது கண்பாராமல் கண்டு கொள்ளாமல் உறங்குவது அவசியம்.

இதில் என்னைப் போல் ஜன்னலைத் திறந்து கேரட் கொடுப்போரின் அன்புத் தொல்லையும் உண்டு. அவர்கள் காரட் போடுகிறார்களா, முயலை மாட்டுவதற்கு வலை வீசுகிறார்களா என்பதும் தெரியவில்லை.

இதெல்லாம் சொல்லும்போது அந்த முயலுடைய அரைக்கண் மட்டுமே திறந்து இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக பனி மேல் ஆடாமல், அசையாமல், தவம் செய்யும் விசுவாமித்திரர் போல் மோன நிஷ்டையில் இருந்தது. மேனகை போல் என் அடுத்த கேள்வியைக் கேட்டேன்.

‘உன்னை சினிமாவில் நடிக்க எவரும் அழைக்கவில்லையா?’

“திருமூலர் கதையை படமாக எடுக்க ஏ பி நாகராஜன் ஐடியா வச்சிருந்தார். அப்பொழுது

ஆகாச மாம்உடல் அங்கார் முயலகன்
ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகண்
மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக
மாகாய மன்றுள் நடஞ்செய்கின் றானே.

பாடலைப் பார்த்துவிட்டு என்னை அழைத்தார். நான் முயல் + அகன்றவன் அல்ல என்று சொல்லி மறுத்து விட்டேன்”

‘இப்பொ ஹீரோவை விட வில்லனுக்குத்தான் கிராக்கி. வௌவால் மனிதனே அ-நாயகனாக உலா வருகிறார். ஒரே இடத்தில் பொணம் போல் கிடக்கும் முயல் நீ… உனக்கு என்ன கேடு?’

”முயலகன் வடிவம் அறியாமையைக் குறிக்கும். ஆனால், நானோ முயல் + அகன். அகன் என்றால் அகலம். அறிவுப் பிழம்பாகிய தட்சிணாமூர்த்தி என் தலை மேல் நின்று நடனம் ஆடுவதாக பக்திப்பட இயக்குநர் ஏபியென் சொன்னதைக் கேட்டு முதல் பயம். நம்மகிட்டத்தான் சொல்லொண்ணா முயற்சியும் இருக்கே என்னும் அகந்தை இரண்டாம் நம்பிக்கை. மூன்றாவதாக என் மேல் டான்ஸ் ஆடியது தஷிணாமூர்த்தியா, நடராஜனா என்று சென்ஸாரில் சண்டைக்கு வந்தாங்க என்பது நாரத கலகம்.”

‘அதற்குப் பிறகு வேறு வாய்ப்பு வரவில்லையா?’

“நாஞ்சில் நாடன் சார் என்னைப் பற்றி எழுத நிறைய விவரம் சேகரித்தார். அவருக்கு அந்தக் கால பரணி, தரணி எல்லாம் ரொம்பப் பிரியம். சிவகுமார் சார் கூட முப்பத்தி மூன்று வகை முயல் இருக்கு தெரியுமா என்று ஸ்டார் விஜய் டிவியில் ஒப்பித்தார். அப்புறம், இந்த சுகா அப்பா நெல்லைக் கண்ணன் அய்யா கூட நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்கத்தில் ’அயம், ஈனம், உக்குளான், திருவாலி, குருளை, செவியன், பறழ், வனாகி’ என்று பட்டியலிட்டு ஃபெட்னாவிற்கு முயல்கிறார்.”

‘சும்மா கெடக்கிற அவங்கள் ஏன் தேவையில்லாம வம்புக்கு இழுக்கிற!’ என்று சொல்லி 😦 சிரிப்பான் இட்டேன்.

சும்மா கிடக்கும் மிருகங்களை எனக்குப் பிடிக்கும். முயலைப் போல் பூனையும் ரொம்ப நேரம் அமைதியாக ஒரே இடத்தில் இருக்கும். அதைச் சீண்டினால் கூட, தள்ளிப் போய் படுத்து விடும். உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு, மணிக்கணக்கில் நன்றாக உறங்கும். முயலின் உருவம் போலவே போஷாக்கான குண்டுப் பூனைகள் ஓரிரண்டு வளர்த்திருக்கிறேன்.

அனைத்து நேரமும் சோம்பேறியாக இருக்கும் மிருகத்தை விட, துடிப்பாக இருக்கும் ஜந்துவை சோம்பேறியாக்குவதே சாலச் சிறந்தது எனத் தோன்றியது. அந்த எண்ணத்தை நிறைவேற்ற பச்சைக்கிளி அகப்பட்டது. அதை வளர்க்க ஆரம்பித்தேன்.

‘பறந்து திரிய வேண்டிய கிளியை, இப்படி கூண்டில் அடைத்து வைத்திருக்கிறாயே!’ என என் வீட்டிற்கு வருவோர் வருத்தப்படுவார்கள். அவர்கள் என் பெண்டாட்டியைக் குறிப்பிடவில்லை. வேளாவேளைக்கு சோறு, தாகம் எடுத்தால் தண்ணீர், போர் அடிக்காமல் இருக்க கண்ணாடி என அந்தக் கிளியை வளர்க்கிறேன். முகக்கண்ணாடியில் இன்னொரு கிளி இருப்பதாக நம்பி, என்னுடைய கிளி அதனுடன் சண்டை போடும். அதன் பிறகு கொஞ்சிக் குலாவி சமாதானம் செய்யும். கண்ணாடியை விட்டு தூர விலகி, தனிமையைக் கொண்டாடும். அதன் பின், மீண்டும் கண்ணாடிக்கே சென்று தலைக் கோதி விளையாடும். விசில் அடித்து அழைக்கும். எதுவாக இருந்தாலும் நான்கு சாளரத்திற்குள் செய்து கொள்ளும்.

இப்போது முயல் வளர்க்கத் துவங்கி இருக்கிறேன். மேஜையின் மீது நாம் மோதிக் கொண்டால், ‘மேஜை இடித்து விட்டது’ என்கிறோம். அது போல் வெட்டவெளியில் சுதந்திரமாகத் திரியும் முயலை வளர்க்கத் துவங்கி இருக்கிறேன். தினமும் நாலு கேரட். குடிப்பதற்கு சுத்தமான சுகாதாரமான நீர். பனியில் சறுக்கி விளையாட சதுப்பு நிலம். புதரோடு புதராக மறைந்திருக்கலாம். கார் நிறுத்துவதற்கு நான் வந்தவுடன் ஓடி ஒளியலாம்.

கூடு விட்டு கூடு பாயும் சக்தியைப் பெற்றிருந்தவர்கள், மானாக, கழுகாக, நரியாக உருமாறி விலங்காக வலம் வந்திருக்கிறார்கள். ஆவணப் படம் எடுப்பவர்கள் யானையையும் நாயையும் காகத்தையும் மனித குணங்கள் கொண்ட நாகரிக அறிவாளிகளாக சித்தரித்திருக்கிறார்கள். பஞ்சதந்திரம் போன்ற புனைவுகள் எழுதியவர்கள், ஆந்தையும் பருந்தும் புலியும் பேசிப் பழகி புத்திசாலித்தனமான நீதிகளைச் சொல்வதாக பயன்படுத்தி இருக்கிறார்கள். தேவர், இராம நாராயணன் போன்றோர் ஆட்டையும் பாம்பையும் நூறு விதமாக கதாநாயகர் ஆக்கி இருக்கிறார்கள்.

இவற்றை அந்த முயல் கவனித்திருக்க வேண்டும். என்னுடைய சோம்பேறி மனப்பான்மையை உத்தேசித்து என்னை முயலாக மாற்றி அதன் வளைக்குள் அனுப்பிவிட்டது.

பியானோ வகுப்பு முடிந்து என் மகள் வீட்டிற்குள் நுழைகிறாள். முயல் பாட்டுக்கு தன் அறைக்குள் சென்று கணினியில் ’சசவிசாடம்’ என்றுத் தலைப்பிட்டு கதை எழுதிக் கொண்டிருக்கிறது.
—–

அஞ்சலி – ஆபிச்சுவரி

நண்பனின் தாத்தா மறைந்து போனார். அவருடைய அஞ்சலிக் குறிப்பை அனுப்பி இருந்தாள்.

– எப்படி இறந்து போனார் என்பது முதல் வரி.
– அவருடைய மகன், மகள், மருமகன், பேரக் குழந்தைகள், கொள்ளூப் பேத்திகள் எல்லாம் இரண்டாம் பத்தியை நிறைத்து இருந்தார்கள்.
– எங்கே பிறந்தார், யாருக்கு எத்தனையாவது மகனாகப் பிறந்தார், எப்போது மணம் புரிந்தார் என்பதெல்லாம் இன்னொரு பத்தி.
– எவருக்கு பணி புரிந்தார், எப்பொழுது ஓய்வு பெற்றார், எத்தனை போரில் சண்டை போட்டார், எந்த ஊரில் வசித்தார் என்பது அடுத்த பத்தி.
– அவருக்கு என்ன பிடிக்கும் என்பது ஒரே ஒரு வரி.
– எங்கே சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தலாம், என்றைக்கு பத்து, கிரேக்கியம் என்பதெல்லாம் இறுதி வாக்கியங்கள்.

218 வார்த்தைகள் இருந்தது.
15 வாக்கியங்கள்.
6 பத்திகள் பிரிக்கப்பட்டு இருந்தது.
to, as, during, before, and, of, in என நிறைய விகுதிகள் அடைத்து இருந்தது.
விருந்தினர் பதிவேட்டில் இரண்டு பேர் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்திருந்தனர்.