சிங்கக் குருளைக்கு இடு தீம் சுவை ஊன்

அண்டத்திலுள்ளதே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே
– திருமூலர்

அமெரிக்காவில் காபி கடையில் நுழையும் போதெல்லாம் எனக்கு ஃபேஸ்புக் நினைவிற்கு வரும். காபி கடைகள் எங்கு புகழ்பெற்றன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். மத்திய கிழக்கின் வளைகுடாப் பகுதியில் உள்ள ஏடன் நகரத்திலும் மெக்கா நகரத்திலும் 1500களில் காபி கடைகள் தழைத்தோங்கத் துவங்கின. கொஞ்சம் களகளப்பு; நிறைய அத்துமீறல்; சற்றே சந்தேகாஸ்தபமான நடவடிக்கைகள் அங்கே கிடைத்தன. அந்த இரு நகரங்களின் குளம்பியகங்களின் பாதிப்பு எகிப்தின் கெய்ரோ, சிரியாவின் டமாஸ்கஸ், இராக்கின் பாக்தாத், துருக்கியின் இஸ்தான்புல் என நெடுகப் பரவின.

அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு உணவகங்கள் கிடையாது. இஸ்லாமில் மதுவிற்கு தடை. இதனால், காபி கடைகள் சமூகக் கடமையாற்றின. எவர் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் உட்காரலாம் என்பது வேற்றுமையைத் தகர்த்தது. இதை 1558ல் அரபு எழுத்தாளரான அப்து அல்-காதிர் அல்-ஜஸிரி, “குடிப்பவருக்கு களிப்பேற்றும் உரமேற்றி, அவரின் சிந்தைத் தெளிவினால் மனத் துலக்கம் மெருகேறின உணர்வையும் ஒருங்கேக் கொணர்வது” எனக் குறித்திருக்கிறார்.

காபியினால் கிடைக்கும் சன்னதத்திற்கு “மர்காஹா” என்று களிப்புடன் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

1585ல் வெனிஸ் நகரத்தில் இருந்து பயணித்த ஜியான்ஃபிரென்ஸ்கோ மொரொஸினி இவ்வாறு அவதானிக்கிறார்: “இவர்கள் எல்லோரும் கீழோர்கள். உடுப்புகள் உயர்தரமாக இல்லை. வெறுமனே ஓய்வில் நேரத்தைக் கழிக்கிறார்கள். எந்த சுறுசுறுப்பான காரியத்திலும் ஈடுபடுவதில்லை”. 432 ஆண்டுகள் கழித்து இன்றைய ஸ்டார்பக்ஸ்- உள் மொரொஸினி நுழைந்தால் இப்படித்தான் அவதானிப்பார்:

“காபி குடிப்போர் எல்லாம் சதா சர்வகாலமும் வேலையில் திளைத்து வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாதவர்கள். அவர்களுக்கு சமூகத்துடன் எவ்வாறு கதைப்பது என்பது தெரியவில்லை. தான் உண்டு தன் கணினி உண்டு என்று திரைக்குள் நுழைத்துக் கொண்டவர்கள். இல்லாவிட்டால், காபியை இணையத்தின் மூலமாக வாங்கிவிட்டு, அரை நிமிடம் அந்தக் கடைக்குள் நுழைந்து தங்களின் பானத்தைக் கைப்பற்றிக் கொண்டு காருக்குள் புகுந்து காணாமல் போவார்களா?”

அந்தக் காலத்தில் இருந்து இக்கால காபிக்கடையை பார்த்தால், ஃபேஸ்புக் / ட்விட்டர் மிடையங்களின் உருமாற்ற வளர்ச்சி நினைவிலாடும்.

காபிக்கடைகள் மத்திய கிழக்கில் துவங்கினாலும் அங்கே மதிப்பிழந்து, மேற்கத்திய நாடுகளில் பலராலும் பயன்படுத்தப்படுகிறது. அதே போல் – மேற்கில் துவங்கிய முகப்புத்தகம், இன்று ரஷியா, சீனா போன்ற நாடுகளால் மேற்குலகின் ஆதார சுதந்திரத்திற்கு எதிராகத் திருப்பப்பட்டிருக்கிறது.

காபிக்கடைகள் என்றால் அதிகாரவர்க்கத்தினால் தடை செய்யப்பட்ட ஆடல், பாடல், கொண்டாட்டம் என்று அன்று இருந்தது. அதை மதப் போராளிகள் ஒடுக்கி, தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டார்கள். இணையத்தின் துவக்கத்தில், இருட்டறைகள் கொண்ட ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற ஊடகங்கள் மூலம் விதிமுறைக்குப் புறம்பான விஷயங்கள் விற்கப்பட்டன; சங்கேதமொழியில் சட்டங்கள் மீறப்பட்டன. இப்போது அதே ஊடகங்கள் சீன கம்யூனிஸ் அரசின் ஒடுக்குமுறைக்கு உதவுகின்றன; எஃப்.பி.ஐ., ரா, சி.ஐ.ஏ. போன்ற நிறுவனங்களுக்கு தகவல்களைக் காட்டிக் கொடுக்கின்றன.

காபி கடைகளில் அன்று சதுரங்கம் ஆடினார்கள். வேலையை மறந்து சகாக்களுடன் கொண்டாடினார்கள். ஃபேஸ்புக்கும் ஆரம்பத்தில் அப்படித்தான் விளையாட்டுத்தனமாக இருந்தது. இப்போது அந்த பேஸ்புக்கில், எப்படி உங்களிடம் எதை விற்கலாம், என்பதில் மட்டுமே குறியாக, எப்போதும் எதையாவது சந்தையாக்கி பணம் கறக்கிறார்கள்.

இன்றைய தேதியில் 26% – அதாவது நான்கு பேரில் ஒருவர் சமூக ஊடகங்கள் மட்டும் மூலமே செய்திகளை அறிகிறார்.

ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றை உபயோகிப்போருக்கு மற்ற வழிகளில் நாட்டு நடப்புகள் தெரிவதில்லை. பதின்ம வயதினோருக்கு ஸ்னாப்சாட் மட்டுமே வாழ்க்கை. அதில் கிடைப்பதே செய்தி. அது போல் ஒவ்வொருவரும் ஒரு வட்டம் போட்டுக் கொள்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தங்களின் சுற்றமும் நட்பும் பகிர்வதே நிஜம். ரேடியோவில் சொல்லும் நிகழ்வுகளையோ தொலைக்காட்சிகளையோக் காண்பதே கிடையாது. சமூக ஊடகங்களின் தங்களின் உள்வட்டங்கள் மூலம் என்ன கிடைக்கிறதோ, அதைப் தங்களின் குறுவட்டத்தில் வாட்ஸ்ஸப்பில் பகிர்வார்கள். தன்னுடைய பால்யகால நண்பன் சொல்வதே உண்மைச் செய்தி. பக்கத்துவீட்டுக் காரர் கற்பிக்கும் எண்ணங்களே மெய். அந்தக் கருத்துகளை ஊர்ஜிதம் செய்வதில்லை.

இந்த மாதிரி ஒரு மாயவலையில் சுழன்று, உங்களை திரிசங்கு சொர்க்கத்தில் நிறுத்துபவர்களை கஃபாம் என்கிறார்கள்.

காஃபாம் நிறுவனங்கள் என்றால் யார்… யார்? GAFAM என்பது சுருக்கம்:
G – கூகிள்
A – ஆப்பிள்
F – பேஸ்புக்
A – அமேசான்
M – மைக்ரோசாஃப்ட்
என்பன அந்த பஞ்ச பாண்டவர்கள் ஆகும்.

ஏன் இவர்களை இப்படி அன்பாக மாஃபியா போல் காஃபாம் என்கிறோம்?

  • அவரவர்களின் தொழில்களில் ஒரேயொரு நிறுவனம் மட்டுமே முக்கியஸ்தர். வேறு எவரும் நுழைய முடியாத மாதிரி சந்தையை ஆக்கிரமித்து இருக்கின்றனர்.
  • உலகளாவிய 92 சதவிகித தேடல் சந்தையை கூகுள் வைத்திருக்கிறது.
  • ஒரு மாதத்திற்கு இரண்டு பில்லியன் (இருநூறு கோடி) சந்தாதாரர்கள் ஃபேஸ்புக்கை அனுதினமும் அனுஷ்டிக்கிறார்கள்.
  • அமெரிக்காவில் மட்டும் தொண்ணூறு மில்லியன் சந்தாதாரர்களை அமேசான் தன்னகத்தே வைத்திருக்கிறது. இது எழுபது சதவிகித அமெரிக்கக் குடும்பங்களைக் குறிக்கிறது. பாக்கியுள்ள 30% வறுமைக் கோட்டிற்கு அருகே வாழ்பவர்கள்.
  • இணையத்தில் நடக்கும் மொத்த கொள்முதலில் 40% அமேசான் மூலம் நிறைவேற்றப்படுகிறது.
  • சென்ற வருடத்தோடு ஒப்பிட்டால் ஃபேஸ்புக்கின் வருமானம் 79% உயர்ந்திருக்கிறது. தங்களின் பங்குதாரர்களுக்கு லாபம் மட்டுமே குறிக்கோள் என்று இந்த நிறுவனங்களும் அவற்றின் எந்திரன்களும் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு காலாண்டிலும் இப்படியொரு அபரிமிதமான வளர்ச்சியை காண்பிக்காவிட்டால் தொழில்நுட்ப கம்பெனிகள் மதிப்பிழக்கும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும். எப்படி வேண்டுமானாலும் இறங்கி ஆடும்.

நடுநிலைமையுடன் தூதராக இயங்கவேண்டிய தினவர்த்தமானிகள் எப்படி ஆகியுள்ளன?

சொக்குப் பிடி போட்டு கணித்திரை சிறைக்குள் நம்மை அடிமையாக்கி வைத்திருக்கின்றன; ஒரேவிதமான தகவல்களைக் கொடுத்து பொய்களைக் கூட நிஜமென்று நம்ப வைக்கின்றன; நம்மிடையே பிரிவினையை உருவாக்கி, பிழையான சங்கதிகளின் மூலம் வெறுப்பை உருவாக்குகின்றன; வெறும் இதழியல் செய்தித்தாள் அமைப்பை மட்டும் கபளீகரம் செய்தது என்றில்லாமல், தனிமனிதரின் அந்தரங்கம், உங்களின் சுதந்திரம், குடும்பத்தின் நான்கு சுவருக்குள் நடக்கும் பிக்கல்/பிடுங்கல் போன்றவற்றையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன; அரசியலில் மூக்கை நுழைத்து சுதந்திர தேசங்களின் அதிபர் தேர்தல்களில் தகிடுதத்தம் நடக்க வைக்கின்றன; எந்நேரமும் கைபேசிகளின் கறுப்புத் திரையினைப் பார்க்க வைத்து வேறெதிலும் கவனம் செலுத்தவிடாமல் திறன்பேசிகளின் தாசானு தாசர் ஆக்கி வைக்கின்றன…

இதெல்லாம் குற்றச்சாட்டுகள்.

காஃபாம் நிறுவனங்கள் – சமூகத்தின் முக்கியமான அறிவாளிகளை வேலைக்கு அமர்த்துகின்றன. அந்த ஆராய்ச்சியாளர்களின் ஒரே கடமை என்னவென்றால், இணையத்தில் இருக்கும் பயனர்களை மந்திரித்து விட்ட மந்தையாடுகளாக்கி, தங்களின் சமூக ஊடக போதைக்குள் மயக்கி வைத்திருப்பதுதானா?! முன்பெல்லாம் சிறப்பான ஆராய்ச்சி செய்யவேண்டும் என்றால், உயர்தரமான பல்கலைக்கழகங்கள் தேவையாக இருந்தது. இன்றைக்கு, அந்த மாதிரி ஆராய்ச்சிகளை நிம்மதியாக செவ்வனே செய்ய கூகிள் சென்று விடுகிறார்கள்.

அந்த மாதிரி பேராசிரியர்கள் இல்லாத உலகிற்காக, தங்களை கல்விக்கூடங்கள் தயார்படுத்தக் கூட துவங்கிவிட்டன். பல பல்கலைக்கழகங்களில் வகுப்பாசிரியருக்கு உதவியாக மாணவ ஆசிரியர் இயங்குவார். ஜியார்ஜியா டெக் பல்கலையில், அந்த மாணவத் துணையாசிரியராக தானியங்கி ரோபாட் இயங்கியிருக்கிறது. இதில் என்ன சிறப்பு என்றால், அது ஒரு எந்திரன் என்பதை மாணவர்கள் அறியாதவகையில் தன் பேச்சையும் நடவடிக்கையையும் செயல்பாட்டையும் வைத்துக் கொண்டிருக்கிறது. மாணவர் என்பவர் அதிகாலை நான்கு மணிக்கு பதில் தரமாட்டார்; தூங்கிக் கொண்டிருப்பார் என்பதை தானாகவேத் தெரிந்து கொண்டு தாமதமாக பதிலளிப்பதில் துவங்கி, தன் உரையாடலில் இளவயசுக்கேயுரிய எகத்தாளமும் நகையுணர்வும் கொண்டு அமரிக்கையாக இயங்கியிருக்கிறது. கடந்த ஆண்டில், பத்து துணை ஆசிரியர்கள் இருந்தார்கள். இவர்களில் இருவர் தானியங்கி ரோபாட்டுகள். அவர்களை சரியாகக் கண்டுபிடித்தால், அந்த மாணவருக்கு ‘இறுதித் தேர்வு கிடையாது.’ (தவறாகச் சொன்னால், இரு மடங்கு வீட்டுப்பாடம்!) என்று அறிவித்தார்கள். எவராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

ஆய்வாளர்களின் மனதுக்குப் பிடித்த வேலையிடத்தை அமேசானும் ஆப்பிளும் அமைத்துத் தருகிறது. அதே சமயம் ஆய்வாளர்களுக்கு சவால் விடும் சிக்கல்களையும் இந்த கஃபாம் நிறுவனங்கள் தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கின்றன. தோற்ற மெய்மை, நேரடி ஒளிபரப்பில் நடப்பதை புரிந்து கொண்டு செயல்படும் புத்திசாலித்தனமான எந்திரன்கள், தானியங்கியாக அரட்டை அடிக்கும் செயற்கை நுண்ணறிவு கொண்ட நிரலிகள், மனிதர்களின் பேச்சுக்கு உடனடியாக பதிலுக்கு பதில் பேசும் கருவிகள் என்று புத்தம்புதிய நுட்பங்கள் இந்த கஃபாம் நிறுவனங்களில்தான் தயார் ஆகின்றன. அது தவிர மேலே சொன்ன குற்றங்களைக் களைவதும் இந்த ஆய்வாளர்களின் களம்.

இவர்களின் களத்தை ஒரு எடுத்துக்காட்டு கொண்டு பார்ப்பது உதவும்.

என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்தஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான்உ ணர்ந்து கொண்டெனே.
சிவவாக்கியர்

2000ஆம் ஆண்டில் அமெரிக்க இராணுவ அமைப்பின் தர்பா (DARPA) பிரிவு சோதனையாக, குழு அமைப்பில் இயங்கும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை உலாவ விட்டது. இதில் ஒரு சோதனையில் ஆதாம் என்று ஒரு கர்த்தாவும் ஏவாள் என்று ஒரு கர்த்தாவும் இருந்தார்கள். அவர்களுக்குக் கற்பிக்கப் பட்டதெல்லாம் ‘எதைச் செய்ய வேண்டும்’ என்பது மட்டுமே. ‘எதற்காக அதைச் செய்ய வேண்டும்’ என்பதை அவர்கள் தானாகவேக் கற்றுக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு வேளாவேளைக்கு சாப்பிட வேண்டும் என்று தெரியும். சாப்பிடாவிட்டால் தங்களின் ஜீவனம் முற்றுப் பெறும் என்பதும் சொல்லித்தரப்பட்டிருந்தது.

அந்த இரு கர்த்தாக்களுக்கும் ஒரு ஆப்பிள் மரம் காட்டப்பட்டது. உணவு உண்டால் உடல் வலுப்பெறும் என்பதை அவர்களுக்கு தெரிவித்தார்கள். எனவே, ஆப்பில் கனிகளை உண்டார்கள். அதன் பிறகு மரத்தின் கிளைகளை உண்டார்கள். அதன் பிறகு மரத்தையே உண்டார்கள். அதன் பிறகு தங்கியிருக்கும் வீட்டை உண்ண முயற்சிக்கிறார்கள்.

இந்த பிரச்சினையை சற்றே நீக்கி, அடுத்த பிரதியை வெளியிட்டார்கள். உணவை பிறருடன் சேர்ந்து உண்ணலாம் என்பதை கற்பித்தார்கள். இப்பொழுது ஸ்டான் என்னும் கர்த்தாவையும் ஆதாமுடனும் ஏவாளுடனும் பழக விட்டார்கள். ஆதாம் ஆப்பிள் பழம் உண்ணும்போது கூடவே ஸ்டான் இருந்தார். இந்த கர்த்தாக்களுக்கு, ஒன்றை மற்றொன்றோடு தொடர்புபடுத்தத் தெரியும். எனவே, ஸ்டான் இருந்தால், நம்முடைய ஆப்பிள்களை அவர் எடுத்து சாப்பிடுவிடுவார் என்று யோசித்திருக்கலாம். அல்லது, ஆப்பிள்கள் போதாமல் போயிருக்கலாம். ஆப்பிளைக் கடித்தவர்கள், இப்போது ஸ்டானைக் கடித்து சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். தன்னினத் தின்னி தவறு என்று அறிவுறுத்தலாம்; நர மாமிசம் கூடாது என்று கட்டளை வைக்கலாம்.

இதெல்லாம் இப்போது மெருகேறி சாமர்த்தியமான சமர்த்து கர்த்தாக்களை உருவாக்குகிறார்கள். என்றாலும், சமீபத்திய டிவிட்டர் பாட் ஆன ட்டே (Tay – ட்விட்டர் ஏ.ஐ.) அறிந்திருப்பீர்கள். (தொடர்புள்ள பதிவு உங்களைப் போல் கணினியை யோசிக்க வைப்பது எப்படி?) இது போன்ற சமூக சிக்கல்களை களையத்தான் ஆராய்ச்சியாளர்களை தன்னகத்தே கஃபாம் நிறுவனங்கள் அமர்த்துகின்றன.

பதினேழு ஆண்டுகள் கழித்து இந்தப் பிரச்சினைகள் தீர்ந்து இருக்கும் என்று நீங்கள் நம்புவீர்கள். கீழேக் காணும் உரையாடலைப் பாருங்கள்:

பாப்: மீ முடியும் மி மி பிற எல்லாம்

ஆலிஸ்: பந்தில் முட்டை மீ எனக்கு எனக்கு எனக்கு எனக்கு எனக்கு எனக்கு எனக்கு என்

பாப்: நான் நீ பிற எல்லாம்

ஆலிஸ்: பந்தில் முட்டை ஒரு பந்து எனக்கு எனக்கு எனக்கு எனக்கு எனக்கு எனக்கு எனக்கு

மேற்கண்ட உரையாடல் – இரு ஃபேஸ்புக் கர்த்தாக்கள் நடுவே பரிமாறிக் கொண்டவை. அந்த கணினி கர்த்தாக்களுக்கு இந்தப் பேச்சின் அர்த்தம் புரிந்தது. நமக்கு இதன் அர்த்தம் புரியாது. உங்களுக்காக இணையத்தில் பேரம் பேசுவதே, ஃபேஸ்புக் உருவாக்கிய கர்த்தாவின் குறிக்கோள் ஆகும். உங்களுக்கு ஒரு கரண்டி வேண்டுமென்றால், இந்த கர்த்தாவிடம் சென்று ‘சல்லிசான விலையில் கரண்டியை வாங்கிக் கொடு.’ என்று சொல்லலாம். அது மற்ற வலைவியாபாரி கர்த்தாக்களுடன் பேசி, உங்களுக்காக கரண்டி வாங்கித் தரும்.

உருவாக்கிய கொஞ்ச நேரத்திலேயே, இந்த கர்த்தாக்கள் எதைப் பேசுகின்றன… எதற்காகப் பேசுகின்றன… எப்படி சமிக்ஞைகளை பரிமாறுகின்றன என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை. நாம் இன்று : ) என்று முகவடிவங்களைப் போடுகிறோம்; (ஆ-ர்) என்றால் ஆசிரியர் என்பது தெரியும்; ‘எகொஇச!’ என்றால் சந்திரமுகி திரைப்படத்தில் பிரபு சொல்லும் ‘என்ன கொடுமை இது… சரவணன்’ எனப் புரிந்துகொள்கிறோம். இதே போல் கணினிகள் தங்களுக்குள் உரையாடி தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன.

இது போன்றதொரு சமூகக் குழு அமைப்பை கணினிகள் நமக்குத் தெரியாமலே உருவாக்கி நம்மை நாமே சிக்கலில் தள்ளிக்கொள்வதாக பல பெருந்தலைகள் புலம்பி பயப்படுகிறார்கள். டெஸ்லா கார் தயாரிக்கும் எலான் மஸ்க், மைரோசாஃப்ட் உருவாக்கிய பில் கேட்ஸ் வரை எல்லோரும் ‘கபர்தார்’ என அரசாங்கக் கட்டுப்பாடை முன்வைக்கிறார்கள்.

சோதிடம், பஞ்சபட்சி துலங்கிய சரநூல் மார்க்கம்
கோதறு வகார வித்தை குருமுனி ஓது பாடல்
தீதிலாக் கக்கிடங்கள் செப்பிய கன்ம காண்டம்
ஈதெலாம் கற்றுணர்ந் தோர் இவர்களே வைத்தியராவர்
சித்தர் நாடி நூல்

மருத்துவம் என்றால் வெறும் வைத்தியத்துடன் நின்றுவிடுவதில்லை. சித்த மருத்துவராக என்னவெல்லாம் கற்றுணர வேண்டும் என்பதை மேலே சொல்கிறார்கள். அதே போல், ஆண்ட்ரூ ங் செயற்கை நுண்ணறிவை இவ்வாறு சொல்கிறார்: “நீங்கள் ராக்கெட் விட வேண்டுமென்றால் அதற்கு எரிபொருள் தேவை. அந்த எரிபொருள் என்பதை தகவல் திரட்டிற்கு ஒப்பிடலாம். எரிபொருள் மட்டும் இருந்தால் போதாது. கூடவே விண்ணில் செலுத்த திறமையான பொறி தேவைப்படுகிறது. அந்தத் திறன்மிக்க பொறியை வினைச்சரம் (அல்காரிதம்) எனலாம். அதே போல் கணினியை சொந்தமாக சிந்தித்து பறக்க வைக்க திறன்மிக்க நெறிமுறை என்னும் ஆணைக் குறிப்புப் பட்டியல்களும் தரவுகள் என்று பயனுடையதாகக் கருத்தப்படும் எண்கள் சார்ந்த குறிப்புகளும் தேவை.”

ஆண்ட்ரூ ங் சொல்வது முக்கியமான கருதுகோள். கணி ரோபாட்களால் எதையும் தானே செய்ய முடியாது. பிழை என்று சுட்டிக் காட்ட அதற்கு ஒரு மனிதர் தேவை. நான்கு வயது குழந்தைக்கு நல்லது, கெட்டது சொல்லி புரிய வைத்து, பொறுமையாக அன்புடன் மீண்டும் மீண்டும் செயல்முறை விளக்கம் அளிப்பது போல், மேற்பார்வையாளர் தேவை. இந்த நான்கு வயதுக் குழந்தைக்கு பக்குவம் வரலாம்; வராமல் குழந்தையாகவே கூட இருக்கலாம். ஆனால், வளர்ந்த நமக்கு அந்த ரோபாட் அளிக்கும் நினைவுத் திறனும் செயலாற்றலும் இன்றியமையாதது. நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத மொழிவளமும், சமயோசிதமும் அதனிடம் பொதிந்து இருக்கிறது. ஆனால், சற்றே சறுக்கினால், சறுக்கிய இடத்தை சுட்டிக் காட்ட அந்த ரோபாட்டிற்கு ஒரு மாந்தர் தேவை இன்றளவில் இருக்கிறது. எங்கே சறுக்கினோம், எப்படிப்பட்ட தரவுகளால் சறுக்கினோம் என்பதை நாளடைவில் புரிந்துகொண்டு வயதிற்கு வரக் கூடிய பக்குவம் வரும்வரை அந்த எந்திரனுக்கு, மாந்தரின் துணையின்றி மாந்தர் போல் இயங்க முடியாது.

மாந்தர் போல் இயங்கத் துவங்கினால் மாந்தரின் அவசியம் எந்திரருக்குப் புரிந்துவிடும் அல்லவா!?!

  1. பல மனிதர்களுக்கு பணம் ஒன்றே குறிக்கோள்; அப்படியானால் அவர்களைப் போல் யோசிக்கும் எந்திரர்களுக்கும் பணம் மட்டுமே லட்சியமாகி சமூகத்தை சின்னாபின்னமாக்குமா?
  2. புத்திசாலிகள் அணுகுண்டை கண்டுபிடித்தார்கள். அதே போல் இன்றைய அதி அறிவாளிகள் என்ன பூதத்தைக் கண்டுபிடிக்கப் போகிறார்கள்?
  3. உங்களின் தனிமனித சுதந்திரம் எவ்வாறு பாதிக்கப்படும்? நீங்கள் உங்களின் பிரத்தியேக பயன்பாட்டிற்காக எடுத்த வீடியோ — எவ்வாறு தவறாக திரிக்கப்பட்டு உங்களை சின்னாபின்னமாக்கும்? ஏன் இந்தப் பெரு நிறுவனங்கள் அப்படிப்பட்ட அத்துமீறலில் ஈடுபட்டு அதை பொது ஊடகங்களில் நியாயம் கற்பிக்கக் கூடும்?

பொய் ⇒ புளுகு மூட்டை ⇒ புள்ளிவிவரம்

“செய்தி எப்போதும் ஞானம் கொண்டு உணரும் ஒளியூட்டத்திற்கு மாற்று ஆகாது.” – ‘சொற்களின் மன்சாட்சி’ கட்டுரையில் சூஸன் சொண்டாக்

“சொற்கள் என்பது நிகழ்வுகள், அவை காரியத்தை நிகழ்த்துகின்றன, மாற்றத்தைக் கொணர்கின்றன. தொடர்பாடல் என்பது கேட்பவரையும் பேசுபவரையும் உருமாற்றும்; சக்தியை இரு புறமும் பாய்ச்சி பெருக்கும்; புரிதலையும் உணர்ச்சியையும் முன்னும் பின்னுமாக உட்செலுத்தி விஸ்தரிக்கும்!” – ‘அசல் பேச்சு என்னும் மாயம்’ கட்டுரையில் உர்சுலா கே லெகுவின்

சொற்களை எப்படி பாவிக்கிறோம் என்பதைப் பொருத்து, அதன் அர்த்தம் மாறுகிறது. காப்புறுதிக்கான இந்த விளம்பரத்தைப் பார்திருப்பீர்கள். “இது என்னுடைய கார்!?! நம்பவே முடியவில்லை.” என்னும் எளிய சொற்றொடர் எவ்வாறு அதிர்ச்சியையோ மகிழ்ச்சியையோ குறிக்கும் என்பதை நகையுணர்வுடன் விளக்கும்.

நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, அமைதி என ஒன்பதுவகைச் சுவைகளில் உண்டாகும் மனநிலை மெய்ப்பாடுகள் மனிதருக்குள் உண்டு. ஆசியம், இரதி, அரதி, சோகம், அர்ச்சம், மற்றும் குர்ச்சை என்ற ஆறு வகையான ரசம் இருக்கிறது. அதே போல் முகவபிநயத்தில்:

  1. அஞ்சித முகம் – வருத்தமாற்றாதிரு தோண்மேற்றலைசாய்தல்
  2. அதோ முகம் – ஆற்றுநீர்க்கழிமுகம், கீழ்நோக்கியமுகம்
  3. ஆகம்பித முகம் – சினத்தானுஞ் சம்மதியானும் மேற்கீழ்த் தலையாட்டல்
  4. ஆலோலித முகம் – ஆசையான் மலர்ந்தமுகமா ஒருவனை அழைத்தல்
  5. உத்துவாகித முகம் – தலை நிமிர்ந்து பார்த்தல்
  6. உலோலித முகம் – சிந்தையாலொரு தோண் மேற்றலைசாய்ந்து நிற்கு முகம், துக்கமுகம்
  7. சம முகம் – தலையசையாதிருத்தல்
  8. சௌந்தர முகம் – மலர்ந்தமுகங் காட்டல்
  9. திரச்சீன முகம் – நாணத்தாற்றலை யாட்டுமுகம்
  10. துத முகம் – வேண்டாமைக்குத் தலை யசைத்தல்
  11. பராவிருத்த முகம் – வேண்டாத தற்குமுகந்திருப்பல்
  12. பரிவாகித முகம் – மதத்தாற்றலையை ஒருபுறஞ் சாய்த்துச் சிறிதாய்ச் சுற்றியாட்டல்
  13. பிரகம்பித முகம் – அதிசயக்குறி காட்டும் முகம்
  14. விதுத முகம் – வேண்டாமைக்குத் தலை அசைத்தல்

இப்படிப்பட்ட வார்த்தை பாகுபாட்டை ஏன் விரிவாக விவரிக்க வேண்டும்? கணினிக்கு மனித உணர்வுகள் புரியாது. குறிப்பால் குறிப்புணர்ந்து செயல்படாது. மௌனமும் புரியாது; விரிவாக சொன்னாலும் குழம்பும். வார்த்தைகளும் பாவங்களும் நமக்கு ஒளியூட்டுபவை. அந்த ஞானத்தை எவ்வாறு கணினிக்கு புகட்டுவது? அரை நூற்றாண்டிற்கு முன் நார்பர்ட் வீனர் (Norbert Wiener) The Human Use of Human Beings: Cybernetics and Society என்னும் புத்தகம் எழுதுகிறார். அந்தப் புத்தகத்தை படிக்குமுன் பதஞ்சலி யோகத்திற்கு சென்று பார்க்கலாம்.

ப்ரமாண – விபர்யாய – விகல்ப நித்ரா – சம்ருதய |
பிரத்யக்ஷானுமானாகமா: ப்ரமாணானி ||

மன அலைகள் ஐந்து என்கிறது பதஞ்சலி யோகம். அந்த ஐந்து வகையாவது:

  1. சரியாகப் புரிந்து கொள்வது,
  2. தவறாகப் புரிந்து கொள்வது,
  3. பொருளற்ற கற்பனை,
  4. நினைவு
  5. தூக்கம்.

சரியான அறிவென்பது கீழ்கண்ட மூன்றின் மூலம் பெறப்படும் என்கிறது:

கட்டகம் என்றும் ஆச்சரியப்படுத்துபவை. உடங்கியம் என்னும் நம் உடலின் கட்டகம் நரம்புகளால் ஆனது. அந்த நரம்பணுக்களில் இருந்து விழிப்புணர்வு என்னும் சைதன்யம் தோன்றுகிறது. நம் உடலைப் போல் நகரம் என்னும் கட்டகம் கார்களால் ஆனது. கார்களில் இருந்து சாலை நெரிசல் தோன்றுகிறது. ஒரே ஒரு நரம்பு மட்டும் விழிப்புணர்விற்கு இட்டுச் செல்வதில்லை. ஒரு காரினால் போக்குவரத்து ஸ்தம்பிப்பது இல்லை. ஆனால், பல ஒன்றுகளின் குணாதிசயங்களினால், மொத்த கட்டகமும் உருப்பெருகிறது. இவற்றை தோற்றுவாய் எனலாம். நான்கு லட்சம் விதைகளை செக்கோயா மரம் அள்ளித் தெளிக்கிறது. எல்லா விதைகளும் விருட்சம் ஆவதில்லை. மரங்கள் அடர்ந்த வனத்தில், ஒரு சிறிய விதையில் இருந்து மற்ற மரங்களை விட உயரமாக வளரும் இயல்புடைய மரவகையை, தாவரவியலளர் இவ்விதம் தோற்றுவாய் என சுருக்கமாகக் குறிப்பிடுவர்.

இதற்கு மாற்றாக அமிழ்ந்திருக்கும் குணாதிசயங்களைக் காணலாம். மொத்த குழுவின் அங்கமாக நாம் இருக்கும்போது, நம்முடைய தனிப்பட்ட குணங்கள் மூழ்கி மறையும். கட்டகங்களில் ஒரு எளிய உதாரணம் கொண்டு இந்த எதிர்ப்பாதையை அணுகலாம். ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் ஒரு கருத்தை எழுதுகிறோம். நண்பர்கள் யாருமே அதற்கு பதிலிடவில்லை. எனவே, அவர்களுக்கு இசைவானதாக இன்னொரு கருத்தை அந்த லைக் விழுவதற்காக எழுதுகிறோம். இப்போது மறுவினைகள் குவிகின்றன. இது “எதிர்ப்பாதை” பயணம்.

தீர்வை நோக்கிய பாதையில் பயணிப்பது ஒரு வகை. நமக்கு என்ன வகையான விளைவு வர வேண்டும் என்பதற்கான காரணங்களில் ஈடுபடுவது அந்த வகை. மனம் லேசாக ஆவதற்காக தியானம் செய்வது இந்த வகை. யோகா செய்தால் ரத்த அழுத்தம் குறையும் என்பதற்காக அந்த உடற்பயிற்சி செய்வது “நேர்ப்பாதை”. ஆனால், மேலாளர்களில் பலரும் தியானம் செய்கிறார்கள்; அவர்களுடன் நேரம் செலவிட்டால் பதவி உயர்வு கிட்டும்; எனவே, நாமும் கண் மூடினாற் போல் உட்கார்வோம் என்பது “எதிர்ப்பாதை”. மனநிம்மதி என்னும் விளைவு கிட்டாமல், கட்டகத்தில் அமிழும் வகை. வெறும் சடங்காகிப் போகும் காரணத்தினால், விளைவு தோன்றாது.

ஆதாரத்தில் துவங்கி முடிவுக்குச் செல்லலாம். அல்லது, புதிரின் முடிவுப்பாதையில் துவங்கி, துவக்கத்தை நோக்கி பயணிக்கலாம். ஆனால், அதே போன்ற திட்டம் எல்லா இடங்களிலும் பலிக்காது.

மூளை பாதிக்கப்பட்டோரில் பலர் நல்ல கவிஞர்களாகவும் முக்கியமான ஓவியர்களாகவும் பரிசு பெற்ற எழுத்தாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எனவே, நானும் என்னுடைய சாதாரண மூளையை மாற்றப்போகிறேன் என யோசிப்பது பைத்தியக்கார காரணம். இது எதிர்ப்பாதை. இந்த உள்விளைவுகளையும் விளையாட்டான மனித சிந்தை பரிசோதனைகளையும் எவ்வாறு கணினிக்கு உணர்த்தி, நம் சேஷ்டைகளை புரியவைப்பது?

ஒரு குட்டிக்கதை பார்ப்போம். குரு ஒருவர் சீடர்களுக்கு யாகம் நடத்துவது பற்றி விரிவாகப் பாடம் நடத்தினார். குருகுலத்தில் எலித் தொல்லை அதிகம். எனவே, பூனை வளர்த்தார். யாகத்தில் வார்க்கப்படும் நெய்யின் வாசனையால் ஈர்க்கப்பட்ட ஆசிரமப்பூனை நெய் பாத்திரத்தை வட்டமிட்டது. எனவே, யாகம் ஆரம்பிக்கும் முன் பூனையை ஒரு தூணில் கட்டி போட்டு விடுவார். அதன் பின்னரே குரு யாகம் நடத்துவார். பாடம் முடிந்தது. வேறு நாட்டிற்குச் சென்ற மாணவனிடம், யாகம் செய்ய முதலில் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். அந்த நாட்டிலோ எலிகள் நடமாட்டம் கிடையாது. எனினும், அந்த புது குரு — பூனையைத் தேடி பிடித்தான். எதிரில் இருக்கும் தூணில் கட்டி, அதன்பின்னரே யாகத்தைத் துவங்கினான்.

பூனைக்கதை எப்படி கணினிக்குப் பொருந்தும்?

ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் டெண்ட்ரல் (Dendral) என்னும் தர்க்க ரீதியான கட்டகத்தை 1960களில் அமைத்தார்கள். வேதியியலின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அது தெரியாத பொருளை ஆராய்ந்து, கண்டுபிடித்துக் கொடுத்தது. ஒரு விஷயம் மட்டுமே செய்யத் தெரியும். கரிம வேதியியல் மட்டுமே அறியும். மனிதர்களை விட வேகமாக இயங்கும். அதற்கு கற்றுக் கொடுத்த கரிம வேதியயலில் இராப்பகலாக அயராது ஆராயும்; எப்போதும் துல்லிய முடிவுகளை நல்கும். சொல்லிக் கொடுத்தது மட்டுமே தெரியும். ஆனால், அதை பிஎச்டி செய்யாத மாணவரை விட நேர்த்தியாகவும் துரிதமாகவும் செய்து முடிக்கும்.

இன்றைய நவீன மருத்துவமனைகளில் நோயாளியின் ஒவ்வொரு தகவலும் சேமிக்கப்படுகிறது; ஆராயப்படுகிறது. மருத்துவமனையிலோ ஆயிரக்கணக்கான நோயாளிகள். அவர்களுக்கு ஒரேயொரு மருத்துவர். எப்படி சமாளிக்கிறார்கள்? கோடிக்கணக்கான விஷயங்களை ஒவ்வொரு நொடித்துளியும், ஒவ்வொரு நோயாளியின் நரம்பும் அனுப்புகிறது. அதில் இதயத் துடிப்பு, சர்க்கரை அளவு, உடலின் வெப்பநிலை போன்றவற்றில் ஏற்படும் மாறுதலை வைத்து, நோயாளியின் உடல்நிலை சீராகிறதா அல்லது மோசமாகிறதா என்பதை கணினிகள் தெரிவித்துக் கொண்டேயிருக்கின்றன. அந்தத் தகவலை வைத்து மருத்துவரை தானியங்கியாக அழைக்கின்றன.

இதற்கு எதிர்ப்பாதையாக, மைசின் (MYCIN) இயங்குகிறது. உங்களின் உடல் உபாதைகளையும் மாற்றங்களையும் நீங்களே சொல்ல வேண்டும். நீங்கள் கொடுக்கும் தகவலை வைத்து எந்த நுண்ணியிரி இதை விளைவித்து இருக்கும் என்பதை சொல்லும். இது பின்னோக்கிய சங்கிலிப் பாதை.

நமக்கு சாதகமான முடிவெடுக்க, இரண்டு விஷயங்களைக் குறித்த புரிதல் கலந்த அணுகுமுறை வேண்டும்:

1. எவ்வாறு நாம் தேர்ந்தெடுக்கும் வித விதமான விருப்பங்கள், வெவ்வேறு பாதைகளுக்கு இட்டுச் சென்று, பல்வேறு இறுதி முடிவுகளைக் கொடுக்கும்?
2. இவ்வளவு இறுதி முடிவுகளில், இருப்பதற்குள் நமக்கு உகந்த முடிவு எது?

இந்த மாதிரி எந்த ஒரு விஷயத்தையும் அணுக, ஸ்திரமான மதிப்பீடும், வருவது உரைக்கும் ஊகமும் தேவை. இந்தத் திறனாய்வை எப்படி எல்லோரும் ஒவ்வொரு காரியத்திலும் செய்வது?

அ) எதிலும் இறுதித் தீர்ப்பை முடிவாகக் கொள்ளாதீர்கள்: தன்னிடம் மட்டும் மந்திரக்கோல் இருந்தால், இந்த உலகில் எல்லோரிடமும் ஒருக்கும் ஓரவஞ்சனையை நீக்கிவிட வேண்டுவேன் என்கிறார் டானியல் கானிமான் (Daniel Kahneman). அதிலும், பெரும்பாலான பணக்காரர்களிடமும், ஆண்களிடமும், வல்லுநர்களிடமும் இந்த ஒருதலைச் சார்பு கோலோச்சுகிறது. அகம்பாவம் எனலாம்; மட்டுமீறிய தன்னம்பிக்கை எனலாம்; அந்த சுய உறுதியை சற்றே தளர்த்துங்கள். இந்தப் பாதையில் சென்றால், உங்களுக்கு சாதகமான முடிவு நிச்சயமாகக் கிட்டும் என நம்புகிறீர்களா? அதில் சந்தேகம் கொள்ளுங்கள். மாற்றுப் பாதையையும் மனதில் வையுங்கள். அந்த இறுதி பலனை விட இன்னொரு இறுதி விளைவு லாபகரமானது என நினைக்கிறீர்களா? இரண்டு விளைவையும் காமாலைக்கண் கொண்டு அணுகுங்கள்.

ஆ) அனேகமாக எவ்வளவு முறை இவ்வாறு நிகழ்ந்திருக்கிறது?” என வினவுங்கள்: டானியல் கானிமான் சொல்லும் கதையைப் பார்ப்போம். தாங்கள் எழுதும் இந்தப் புத்தகத்தை எழுத எத்தனை நாள் ஆகும் என சக நூலாசிரியர்களிடம் வினாத் தொடுக்கிறார் கானிமான். எல்லோரும் பதினெட்டு மாதங்களிலிருந்து இரண்டரை வருடத்திற்குள் புத்தகத்தை எழுதி முடித்துவிடலாம் என்கிறார்கள். அதன் பிறகு, இதற்கு முன்பு பல்வேறு நூல்களை எழுதிய ஒருவரிடம், “உங்களின் போன புத்தகங்களை எழுத எவ்வளவு நாள் ஆனது?” எனக் கேட்கிறார்.

– பத்தில் நாலு புத்தகம் முற்றுப் பெறவேயில்லை
– ஒரு புத்தகம் கூட ஏழு வருடத்திற்குள் முடிந்ததாக சரித்திரமே இல்லை

இத்தனைக்கும் அவர்களின் புத்தகம் பகுத்தறியும் திறன் குறித்தது. இருந்தாலும், சென்ற அனுபவங்களைக் கணக்கில் கொள்ளாமல் பதிலளித்து இருக்கிறார்கள். பழைய பாதைகளை நினைவில் கொண்டு புதிய திட்டங்களை கணக்கு போட வேண்டும். என்னுடைய கட்டுரையை, சாதாரணமாக பத்து சதவிகிதத்தினர் முழுமையாகப் படிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அந்த 10% என்பது அடிப்படை வீதம். எனக்குத் தெரிந்த என்னுடைய நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் முழுமையாக படிக்கிறார்கள் என்பது உள்மாந்தரப் பார்வை. ஆனால், நம்பகமான முடுவெடுக்க “வெளிப்பார்வை” தேவை. எனவே, “பொதுவாக இது எப்போது நடக்கிறது?” எனக் கேட்டுப் பார்க்க வேண்டும்.

இ) சிந்தனையில் சாத்தியப்பாட்டை ஏற்றவும் – நிகழ்தகவு சூத்திரங்களை மனதில் எப்போதும் வைத்துக் கொள்ளவும்: நம்முடைய ஒருபுறச் சாய்வுகளை, நிகழ்தகவு பாடங்களினால் நீக்கலாம். சராசரியாக, பெரும்பாலும், அனேகமாக, பொதுவாக, ஏறக்குறைய என்னும் பதங்களை விட்டுவிடுவீர்கள்.

அடுத்து கொஞ்சம் நிகழ்தகவு, புள்ளிவிபரம், எந்திர தற்கற்றல் என்று ஆராயலாம். பொதுவாக புள்ளி இயல் குறித்து குறிப்பிடும்போது “பொய், புளுகு, அண்டபுளுகு, புள்ளிவிவரம்” என்ற சொலவடை உள்ளது. அதுவே இந்தப் பகுதியின் தலைப்பானது.

முந்தையவை:

உசாத்துணை:
1. யாழ்ப்பாண அகராதி
ஆசிரியர்: சந்திரசேகரப் பண்டிதர், சரவணமுத்துப் பிள்ளை
பதிப்பாளர்: கோ. இளவழகன்
முதல் பதிப்பு: 1842
இரண்டாம் பதிப்பு: 2006
பக்கம்: 8+ 488 = 496
தமிழ்மண் பதிப்பகம்
நூலாக்கம்: பாவாணர் கணினி

2. The Book of Why – Judea Pearl replies to Kevin Gray article 
3. Tyler Vigen: “Spurious Correlations
4. Harvard Business Review: “Beware Spurious Correlations
5. Andrew Gelman: “‘How to Lie with Statistics’ Guy Worked for the Tobacco Industry to Mock Studies of the Risks of Smoking Statistics
6. BuzzFeed: “13 Graphs That Are Clearly Lying

பாரதிராஜா படங்கள்

தலை பத்து குறிப்புகள்:

  1. அனேக படத்தின் துவக்கத்திலும் பேசுவார். “என் இனிய தமிழ் மக்களே…”
  2. தன்னுடைய உதவியாளர்களை உருவாக்கி, குறிப்பிடத்தக்க இயக்குனர்களாக ஆக்கியது முக்கிய சாதனை. பாசறை, பட்டறை என துணை இயக்குநர்கள் தங்களை பாரதிராஜா கேம்ப் என அழைத்துக் கொண்டனர்.
  3. நாயகன் சம்பந்தப்பட்ட படங்களே எங்கும் நிறைந்திருந்தபோது, பெண்களை முக்கியப்படுத்தும் ஆக்கங்களைத் தொடர்ந்து வழங்கியவர்.
  4. வரிசை பெயர்களை தன் கதாநாயகிகளுக்குத் தொடர்ந்து வழங்கி வந்தவர்.
  5. இவரை காப்பியடிக்கும் எண்ணத்துடன் ஸ்டெல்லா மேரீஸ்  வாசலிலும் இராணி மேரி கல்லூரி வாயிலிலும் தங்களின் ஹீரோயினுக்காக தவமிருந்தவர்கள் எக்கச்சக்கம்.
  6. மணி கௌல், ரிஷிகேஷ் முகர்ஜி, அடூர் கோபாலகிருஷ்ணன், குரு தத், மிருனாள் சென், ஷியாம் பெனகல் போல் இல்லாவிட்டாலும் நம்ம ஊர் நாயகர்
  7. ஒளிப்பதிவாளர்கள் – நிவாஸ், பி கண்ணன்
  8. படத்தொகுப்பாளர்கள் – பாஸ்கரன், டி திருநாவுக்கரசு, சண்டி, வி இராஜகோபால், பி மோகன் ராஜ்
  9. எழுத்தாளர்கள் – மணிவண்ணன், ரங்கராஜன், சந்திரபோஸ், கலைமணி, பஞ்சு அருணாச்சலம், ஆர் செல்வராஜ், கே சோமசுந்தரேஷ்வர், கே கண்ணன், சுஜாதா ரங்கராஜன், எம் ரத்தினகுமார், சீமான்
  10. அரசியல், மகன், போன்ற திசைதிருப்பல்களும் இடையூறுகளும் இல்லாவிட்டாலும், அமிதாப் போல் நல்ல நடிகராகவும் கிடைத்திருப்பார்.
ஆண்டு படம் குறிப்புகள்
1977 16 வயதினிலே முதல் படம்
1978 கிழக்கே போகும் ரயில் கிராமம் – காதல் – ராதிகா
1978 சிகப்பு ரோஜாக்கள் குத்துங்க எஜமான் குத்துங்க! இந்த பொம்பளைங்களே இப்படிதான்!!

நல்லவேளையாக சந்திரசேகரின் மசாலா கம்யூனிசம் இல்லாத சிவப்பு

1979 புதிய வார்ப்புகள் பாக்யராஜ் – பாரதிராஜாவின் ஹீரோக்களில் தேறியவர்
1979 நிறம் மாறாத பூக்கள் மீண்டும் ஒரு கி.போ.ர. – பணம் பண்ணும் வழி
1980 நிழல்கள் வைரமுத்து உதயம்

வறுமையின் நிறம் சிகப்பை விட நேர்மையான, உன்னதமான படைப்பு

1980 கல்லுக்குள் ஈரம் இயக்குநர் இல்லை

என்றாலும், மீண்டும் ரசிக்கலாம்

1981 அலைகள் ஓய்வதில்லை ஸ்ஸ்ஸ்ஸ்… ப்பா…அஆ….
1981 டிக் டிக் டிக் மணிக்கு ‘திருடா… திருடா’ என்றால் பா.ரா.விற்கு இது
1982 காதல் ஓவியம் பாடலுக்கு வை.மு.; இசைக்கு இளையராஜா; இரண்டும் மட்டும் போதுமா?
1982 வாலிபமே வா வா போன படத்தில் வாங்கிய அடியில் இருந்து மீள – அந்தக் கால டபுள் எக்ஸ்
1983 மண் வாசனை ராதா போய் ரேவதி வந்தது… டும்! டும்!! டும்!!!
1984 புதுமைப் பெண் ஏவியெம் #MeToo
1985 ஒரு கைதியின் டைரி சீடன் குருவிற்கு ஆற்றும் கடமை
1985 முதல் மரியாதை இசை, கதை, ராதா, சத்யராஜ், சிவாஜி எல்லோரும் ஜொலிப்பார்கள்
1986 கடலோரக் கவிதைகள் கொடுமை
1987 வேதம் புதிது நீங்க இன்னும் கரையேறாம நிக்கறேளே!
1988 கொடி பறக்குது அமலா டைம்ஸ்
1990 என் உயிர் தோழன் சரிவின் உச்சிக்காலம்
1991 புது நெல்லு புது நாத்து கிராமத்திற்கு போனாலாவது இளமை திரும்புமா?
1992 நாடோடித் தென்றல் இளையராஜாவிற்குத் திரும்பினாலாவது வெற்றியை ருசிக்கலாமா?
1993 கேப்டன் மகள் எல்லோரும் குஷ்பு படம் எடுக்கிறார்கள்
1993 கிழக்குச் சீமையிலே மீட்சி
1994 கருத்தம்மா பாரதிராஜாவின் அம்மா பேரில் ஒரு படம்
1995 பசும்பொன் முடியல
1996 தமிழ்ச் செல்வன் இதற்கு குஷ்பூவே தேவலாம்.
1996 அந்திமந்தாரை அவார்ட் வேணும்
1999 தாஜ் மஹால் பையன் வேணும்
2001 கடல் பூக்கள் பையனும் வேணும்; அவார்டும் வேணும்.
2003 ஈர நிலம் மகனுக்காக
2004 கண்களால் கைது செய் ப்ரியா மணிக்காக
2008 பொம்மலாட்டம் அப்பாடா! இன்னும் டைரக்டரிடம் ஏதோ சரக்கு இருக்கு
2013 அன்னக்கொடி அரசியலில் ஒரு கால்; சினிமாவிலும் இன்னொரு கால்

 

 

நாய்பால்: “ஒவ்வொரு எழுத்தும் அட்சர லட்சம் பெறுமாறு எழுதணும்”

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ருஷ்யாவைப் போல் பெரிய நாட்டில் இருந்து வந்தால், எங்காவது போய் யாரையாவது பார்த்து, அத்தனை விரிந்த பரப்பில் எதையாவது கண்டுபிடித்து எழுதிவிடலாம். நைபால் அப்படி அல்ல. அவர் தன்னுடைய சுயசரிதைக்கான முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்:

”எழுத்தாளரின் பாதி உழைப்பு என்பது தன் கர்த்தாக்களைக் கண்டுபிடிப்பதில் இருக்கிறது.”

நய்பால் தன்னில் பிறரைத் தேடினார். ப்ரௌஸ்ட் எழுதிய “தொலைந்த நேரத்தைத் தேடி”யின் கதைசொல்லியின் கூற்றுப்படி ஞாபகங்களுக்கும் சுய அறிதலுக்கும் பெரும் இலக்கிய முயற்சிகளுக்கும் நுண்ணிய வேர் இழைத் தொடர் இருக்கிறது. சுயத்தில் இருந்து உண்மையைக் கண்டெடுத்து சொல்வது என்பது நிஜ சுதந்திரத்தில் இருந்தே கிட்டும். அந்த விடுதலை வேட்கை அவரிடம் இருந்தது.

இந்த சொல்வனம் இலக்கிய இதழ் 194-ல் நய்பாலைக் குறித்து பல கட்டுரைகள் வந்திருக்கின்றன. அதில் இது சிறப்பானது: நம்பி கிருஷ்ணன் » படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்: வி.எஸ். நைபால்

காலச்சுவட்டில் விஷ்ணு ஸ்வரூப் சம்பிரதாயமான கட்டுரை எழுதியிருக்கிறார். அதன் தலைப்பு நன்றாக இருக்கிறது. தகவலில் எந்தப் பிழையும் இல்லை: : வி.எஸ். நைபால் (1932-2018) பின்காலனிய உலகின் வீடற்ற மனிதன்

எழுத்தாளர் ஜெயமோகன் தன் கட்டுரையை நிறைவாகக் கொடுத்திருந்தார். ஆனால், அதற்கும் பதில்களை வெளியிட்டு, அசல் அஞ்சலியின் உண்மையான குறிக்கோள் என்பது சர்ச்சையை வளர்த்து திசைதிருப்புவது மட்டுமே என்னும் வாதத்தை நிரூபித்தார்.

ஆனால், கடித பரிமாற்றம் இலக்கியம் ஆகலாம் என்பதற்கு இந்தப் பதிவு ஒரு சிறந்த உதாரணம்: The Painful Sum of Things | Pankaj Mishra, Nikil Saval On V. S. Naipaul | n+1. சு.ரா. மாதிரி ஒரு ஆளுமையின் மறைவிற்கு பின்னால், இப்படி இருவர் பேசி, பகிரும், நீண்ட மடல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நைபால் எல்லா பத்திருகைகளுக்கும் தினசரிகளுக்கும் சிறிய கட்டுரைகள், அறிமுகக் குறிப்புகள், இந்திய அரசியல் குறித்த பதிவுகள் எழுதினார். நியு யார்க் டைம்ஸ் நாளிதழுக்கு நிருபர் போல் செயல்பட்டார். எமர்ஜென்சி குறித்து, இந்திரா மறைவு குறித்து என்று இருநூறு வார்த்தைகளுக்கு மிகாத செய்தித் தொகுப்புகள் கொடுத்தார். சத்யஜித் ராயின் ‘சதுரங்க ஆட்டக்காரர்கள்’ திரைப்படத்திற்கு சினிமா விமர்சனம் போட்டிருக்கிறார்.

என்னுடைய கட்டுரையும் சொல்வனம் இதழில் வெளியாகி இருக்கிறது: கஞ்சனம் வாசிப்பவர்களுக்கு ஒரு புதிய தமிழ் வார்த்தை கிடைக்கும்.

கட்டுரையில் இருந்து மேற்கோள்:

“மார்க்சிஸ்ட் என்பவர் மத வெறியர். மார்க்சிஸ்டுகள் மக்களின் கனவை அழித்தொழிக்க வினவுகிறார்கள். உங்களுக்கு கற்பனை என்றொன்று இருந்தால், அதை நசுக்கி, தூரத்தே வீசி, நசுக்குவது மார்க்சிச சித்தாந்தம். முழு சமூகப் புரட்சி என்பது விபரீதமானது; கிளர்ச்சி மூலமும் கலகம் மூலமும் சட்டென்று சமூகத்தைப் புரட்டிப் போடுவது என்பது அபத்தத்தில் முடியும்.”

இவ்வளவு ஆதுரமான பார்வை கொடுத்துவிட்டு, மற்றொரு பக்கத்தைச் சொல்லும் முந்தைய பதிவுகளை சொல்லாமல் விடலாமா? எனவே: பின்-காலனிய இலக்கியம் : ஏகாதிபத்தியற்கெதிரான பண்பாட்டு வெடிகுண்டு-ஜிவ்ரி | இனியொரு

பின்காலனிய இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளாக சினுவா ஆச்சுபே, கூகி வா தியாங்கோ, மரியாமா பா, மிஷேல் கிளிஃப், அதொல் புகாட், அகமத் நுக்குறுமா, ஹனிஃப் குறைஷி, அனிதா தேசாய், சல்மான் ருஷ்தி, வீ.எஸ்.நைபால், காப்ரியேல் கார்ஸியா மார்குவேஸ், முகார்ஜி, கமலாதாஸ் சுரைய்யா, ஏன் ரணசிங்க, அருந்ததி ரோய்,பாரதி, போன்றோர் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

அதில் குறிப்பிடப்படும் கூகி வா தியோங்கோ குறித்த மொழியாக்க கட்டுரையை படித்து விட்டீர்கள்தானே? — கூகி வா தியோங்கோ -வும், மொழியின் கொடுங்கோலும் :: ஃப்ரான்ஸிஸ் (உ) வேட்தமிழில்: மைத்ரேயன்


நய்பால் குறித்து 2004-ல் எழுதிய என்னுடைய தமிழோவயம் பதிவு:

இருண்ட பிரதேசம்

இந்தியாவுக்கு 1962-இல் முதல் வருகை. ‘இருண்ட பிரதேசம்’ (அன் ஏரியா ஆ·ப் டார்க்னெஸ்) என்றும் முதல் பயணத் தொகுப்பு பரந்த வாசிப்பைப் பெற்றது. இந்தியாவைப் பற்றி ஒரு மேற்கத்தியப் பார்வையாக அது இருந்த்து. இருபத்தி ஏழு வருடம் கழித்து 1989-இல் மீண்டும் செல்கையில் ஒரு மாறுபட்ட நாட்டை பார்க்க நைபால் நேரிடுகிறது.

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், வளரும் பங்குச் சந்தையும், புதிய அடுக்கு மாடி கட்டிடங்களும் ஒரு வளரும் சமுதாயத்தை சுட்டுகிறது. நய்பால் சந்திக்கும் மனிதர்களின் மூலமாக சமுதாயத்தின் கதையை சொல்கிறார்

வெற்றிப் பெற்ற முதலாளியின் அலுவலகத்தில் உள்ள மினி கோவில், வாழ்க்கையை வெறுத்து ஞானம் அடைந்ததாகப் பகர்ந்த பழைய நண்பன், சூறையாடப்பட்ட சில மணித்துளிகளில் நிவாரண நிதி கொடுக்கச் செல்லும் மத்திய அமைச்சராக விரைந்து சென்று பார்த்த சீக்கியரின் வயல் என காட்சிகளை ஒவியமாக்கிச் செலகிறார்.

இந்தியாவெங்கும் காணப்படும் வேறுபாடுகள், பிராமண எதிர்ப்பு, பிரிட்டிஷ் எதிர்ப்பு, அரசாங்கத்தின் மேல் சலிப்பு என பல கலகங்களின் மூலம் இந்தியாவைப் பதிவு செய்வது ‘இந்தியாவில் இப்பொழுது ஒரு கோடி கலகங்கள்’ (இந்தியா: எ மில்லியன் ம்யூடினீஸ் நௌ).

நய்பாலுக்கு ஜயப்பனை பிடித்திருக்கிறது. கர்நாடகாவிற்கு பஸ்ஸில் செல்லும் பொழுது பார்த்த கறுப்பு வேட்டி மனிதர்களை பார்த்து பயப்படுகிறார். இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள், முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த வாபர் சாமியை கும்பிடுவதால் பிடித்திருக்கிறது.

தேவையன் என்பவர் ஜயப்ப வரலாறுகளையும், வழிபாட்டு முறைகளையும் சொல்கிறார். தேவையன் ஒரு சராசரி இந்திய பக்தரின் குறியீடு. விஞ்ஞானப் பகுதியை தினசரியில் எழுதி வருபவர். எட்டு வருடம் முன்பு கன்னி சாமியாக சென்றிருக்கிறார். கல்லூரி முடித்து ஜந்து வருடம் வெறுமையாகக் கழிந்ததால், ஒரு மாறுதலுக்காக மீண்டும் சென்றுள்ளார். மண்டல விரதம், கடுமையான பாதை, உடன் கூட்டிச் சென்றத் தோழமை, சாமிமார்களின் உதவும் மனப்பான்மையை பயணத்தின் நன்மைகளாகப் பட்டியலிடுகிறார்.

ஆனால், மகர ஜோதியை நம்பாமல் இருப்பதையும் சொல்லிச் செல்கிறார். ஒரு சிலரின் மோசடி வேலை, கஷ்டமான காட்டுப் பாதையில் காண்பிக்கப்படும் கற்பூர விளக்கு என்று வாசகர்களுக்கு அறிவுறுத்துகிறார். ஆனால், போய் வந்த பிறகு தேவையனின் வாழ்க்கை முன்னேறியதையும், எட்டு வருடங்களாகத் தொடர்ந்து சென்று வருவதையும் தொடர்கிறார். சொல்வது தேவையன் மட்டுமே. நய்பாலின் இடைச் செருகல்கள் இதில் எதுவுமே இல்லை.

ஆனால், அவருடன் பயணித்த ஜயப்பன்மார்களில் பலரிடம் அவர் பேச்சுக் கொடுத்திருப்பார். அவர்களில் பலரும் மகர ஜோதியின் அதிசயத்தையும், சபரி மலையின் அற்புதங்களையும் விளக்கியிருப்பதையும் நியுஸ் ஏஜென்ஸி போன்ற ரிப்போர்ட்டிங் கொடுக்கிறார். தேவையனின் வாய் வழியாக ஜயப்பனைக் காண்பிப்பதில் இந்தியர்களின் மெய்ஞான விஞ்ஞானக் கலவையையும், ‘எப்பொருளிலும் மெய்பொருள் காண்பதையும்’ தொட்டுச் செல்கிறார். தேவையனுக்கு இரு மதங்களின் ஒற்றுமை பிடித்திருந்தது.

வாபரை மதம் மாறச் செய்யாத ஜயப்பன் பிடித்திருக்கிறது. எல்லா ஜயப்ப சாமிகளும் வாபர் சமாதியில் மரியாதை செலுத்த வேண்டிய வழக்கம் பிடித்திருக்கிறது.

ஜயப்பனின் சமீபத்திய பெரும்புகழுக்கு நய்பால் கூறும் காரணங்களைப் பார்க்கலாம். மக்களிடம் புழங்கும் பணத்தின் அதிகரிப்பு, நன்றாக போடப்பட்ட சாலைகள், வழியெங்கும் முளைத்த கடைகள், சீர் செய்யப்பட்ட நடைபாதை, நிறையப் பேருந்துகள், ஆண்கள் மட்டும் தனியாக இன்பச்சுற்றுலா செய்யும் விருப்பம் என அடுக்கிச் செல்கிறார்.

இந்தியாவின் ஆன்மிக இயக்கங்களுக்கும் கடவுள் கோட்பாடுகளுக்கும் அறிவியல் முன்னேற்றத்துக்கும் இடையே உள்ள முரண்களை, அவருடைய ஸ்டைலில் போகிற போக்கில் சொல்லி செல்கிறார்.

ஸ்ரீனிவாசன், சுப்ரமணியன் என இரண்டு விஞ்ஞானிகளை சந்தித்த விவரம் சொல்லும் போதே அவர்களின் தாத்தாக்கள் சாஸ்திரிகளாக புரோகிதம் செய்ததை சொல்லி தன்னுடைய மெல்லிய ஆச்சரியத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

சீனிவாசன் அனு எரிசக்தி குழுவின் தலைவர். இவரின் அப்பா நாமம் போட்டுக் கொண்டு இருக்கிறார். சீனிவாசனின் தாத்தா புகைப்படத்தையும் கேட்டு வாங்கிப் பார்த்துவிட்டு விவரிக்கிறார். சட்டை இல்லாத பஞ்சகச்ச வேஷ்டி; நெற்றியின் நடுவே ஒரு மெல்லிய சிவப்பு கோடு, புருவங்களில் ஆரம்பித்து தலைமுடி வரை இருக்கும் இரு வெள்ளைக் கோடுகள் என நாமத்தை விலாவரியாக இவருக்கும் வர்ணிக்கிறார்.

நாமத்தின் தாத்பரியம், எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்று நமக்கு சொல்லிக் கொண்டே தொழிற்புறட்சியில் சீனிவாசனின் பங்கை அசை போடுகிறார். சந்தியாவந்தனத்துக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை, பிராமணர்கள் ஆங்கிலப் புலமைக்கு அரசாங்க உத்தியோகங்களுக்கும் கொடுத்தார்கள் என்பதை பல உதாரணங்களினால் அவர்களின் வாயாலேயே சொல்ல வைக்கிறார்.

“சீனிவாசனின் தாத்தா சடகோபாச்சாரிக்கு எல்லா வேதங்களும் தெரியும். ஆனால், நாலணாதான் அவருக்கு புரோகிதத்தில் கிடைக்கும். அவர் மஹாராஜாவிடம் க்ளார்க்காகவும் இருந்தார். மெடரிக் மட்டுமே முடித்து இருந்ததால் கம்மி சம்பளம். அவர் மட்டும் கல்லூரி முடித்திருந்தால் மூன்று மடங்கு சம்பளம் கிட்டி இருக்கும்.”

இதனால் படிப்பின் அருமையையும் ஆங்கிலத்தின் அவசியத்தையும் அவரின் குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே வலியுறுத்தி வருகிறார். படிப்பு, ஆங்கில வழிக் கல்வி, கடனே என்று செய்யும் ஆகமங்கள், மூன்று வேளை இறை வழிபாடு, புரியாத சம்ஸ்கிருத வேத பாராயணம் என வளர்ந்தவர்கள் சிறந்த அறிவியல் வல்லுனர்கள் ஆகி உள்ளார்கள் என்று கருதுகிறா நய்பால்.

இந்தியாவை விவரிப்பதில் உள்ள பற்றற்ற தன்மை, மூன்றாம் மனிதனை எட்டிப் பார்த்து படம் பிடித்து, ஒவ்வொரு படத்துக்கும் தலைப்புக் கொடுக்காமல், ஃபோட்டோ ஆல்பம் காட்டுவது போல் விரிகிறது இந்தப் புத்தகப் பதிவு. மேற்கத்தியர்களைக் கட்டிப் போட்டு ரசிக்கவைத்ததற்கும் இந்த non-glorification மற்றும் non-gorification இரண்டுமே காரணம்.


அது இருக்கட்டும். நைபாலா? நய்பாலா? நாய்பாலா?

காலா என்னும் ராமர் – ரஜினியாயணம்

சமீபத்தில் ‘அவெஞ்சர்ஸ்’ படத்தின் இன்னொரு பகுதி வந்தது. அதில் எல்லா வீரர்களும் வந்திருந்தார்கள். வொண்டர் வுமன், ப்ளாக் பாந்தர், எறும்பு மனிதன், ஹல்க் என்று முந்தைய பகுதிகளில் தனித்தனியாக வந்த அனைத்து அடிதடி சூரர்களும் தோன்றினார்கள். அந்தப் படத்தில் கதையும் கிடையாது; லாஜிக்கும் கிடையாது. ஜாலியாக பார்க்கலாம். அந்த மாதிரி ஒரு படம் காலா.

குருவியின் முட்டை பொரித்தவுடன் இருக்கும் சின்னஞ்சிறு குஞ்சுகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கண் திறந்திருக்காது. உடம்பில் வாய் மட்டுமே பிரதானமாக இருக்கும். ஒரு சிறிய கூட்டில் மூன்று/நான்கு குட்டிகள் இருக்கும். எப்பொழுதும் தன் வாயைத் திறந்து வானத்தைப் பார்க்கும். அம்மா குருவி அவ்வப்போது வந்து அதற்கு தீனி போடும். எவ்வளவு தீனி போடவேண்டும், எந்தக் குஞ்சிற்கு போட வேண்டும், எப்படி கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் அந்த அம்மாவிற்குத் தெரியும். ரசிகக் குஞ்சுகளுக்கு ரஜினி அவ்வாறு தீனி போடுகிறார்.

ரஜினி எப்பொழுதும் கருப்பு ஆடை அணிந்து வருவதால் ‘காலா’ என்று பெயர் வைத்திருப்பார்களோ என சந்தேகப்படும் அளவு, கரிகாலனின் குடும்பத்தினர்கள் எல்லோரும் ஃபேர் அண்ட் லவ்லி போட்டு வெள்ளை நிற சருமத்தைப் பாதுகாக்கிறார்கள்.

சமீபத்திய ஹிந்திப்படம் ஏதாவது நீங்கள் பார்த்தீர்களா? மாயாவி என்னும் வித்தியாசமான பெயர் கொண்ட “ஐயாரி”, திக்குவாயையும் தலித் சிறுவர்களையும் மையப் படுத்திய “ஹிச்சிகி”… அவ்வளவு ஏன்? திரையில் பிரும்மாண்டத்தையும் பார்ப்பனீயத்தையும் போட்டுத் தாக்கிய “பத்மாவத்” எனப்படும் பத்மாவதி? அதன் பிறகும் தமிழில் இன்னும் எண்பதுகளிலேயே வாழும் படங்களை ரசிப்பவர்களைக் காலா குறிவைக்கிறது.

“Power is my life” போன்ற தலைவலி வரவழைக்கும் வசனங்களுக்குக் கூட உயிர் கொடுக்கிறார் நானா படேகர். கல்லூரியில் “பரிந்தா” பார்த்த போதில் இருந்து இவரைப் பார்த்து வியந்து வருகிறேன். ரொம்ப வருடமாக இளைய தளபதி விஜய் போன்றோர் இவரை விட்டு வைத்தது தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த வரப்பிரசாதம்.

இராமரையும் இராவாணனையும் வைத்து படத்தின் உச்ச கட்ட காட்சியில் என்னவோ சொல்ல வந்தார்கள். நானா படேகர் என்பவர் ராமருக்கு எதிரில் இருக்கிறார். ராவணன் என்பவர் ராமனுக்கு எதிரில் இருந்தார். எனவே, நானா படேகர் என்பவர் ராவணனின் குறியீடு.

ராமனின் திருமணம் முடிந்து ஊர் திரும்பும்போது ராமனின் தந்தை தசரதர் கொல்லப்படுகிறார். இங்கும் “வேங்கையன்” அவ்வாறே இறக்கிறார். எனவே, தசரதரின் மகன் ராமனாக, ரஜினி வேடம் கட்டுகிறார் என புரிந்து கொள்ள வேண்டுமா?

அல்லது சீதையின் அக்னி பிரவேசம் மாதிரி, கரிகாலன் அக்னி பிரவேசம் செய்து “ஜரீனா” மீது உள்ள காதலை தூயப்படுத்தி, தான் களங்கமற்றவர் என நிரூபிக்க நினைக்கிறாரா?

அனுமன் தோள் மீது சவாரி செய்யும் ராமர் போல், கரிகாலன் காலாவிற்கும் பைக் ஓட்டுகிறார் ஒருவர். அந்த பைக் வானரத்திற்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் வானர சேனையா?

ராமனுடன் எப்போதுமே கூட இருப்பவர் இலஷ்மணர். இங்கே சமுத்திரகனி கூட துணை நிற்கிறார்.

இவ்வளவெல்லாம் யோசிக்க வேண்டாம்… இந்தப் படத்தைப் பாருங்கள்:

இப்போது இதைப் பாருங்கள்:

 

தயிர் வடை தரமணி

1. முதலில் தமிழின் இடைநிலை இதழ்களில் நிலவும் மோசமான மதிப்பீடுகளும் இலக்கிய விமர்சகர்களின் போதாமையும் குறித்து, ஒரு ஒட்டுப் படம்

2. தரமணி திரைப்படத்தை எப்படி பார்க்க வேண்டும்: ஆண்குறிகள் பூத்து குலுங்கும் பெண்ணிய தரமணி; ராமின் பெண்ணிய தரமணி thesis குறித்தான மீளாய்வு – இந்த திரைப்படம் எப்படி நுட்பமாக ஒரு ஆணாதிக்க தளத்தில் இயங்குகிறது என்பதை விவரிக்கும் நோக்கில்….

3. அடுத்ததாக “தரமணி’ திரைப்படம் குறித்த என்னுடைய பதிவு: தமிழ் சினிமா குறித்து ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் வரும் வசனம் பொருத்தமாக இருக்கும்

’உனக்கு ஏன்ப்பா சுதந்திரம்னு பேர் வச்சாங்க?’

“நான் 1947ல் பொறந்தேன்”

‘அப்படின்னா… சொதந்திர வயசாச்சா ஒனக்கு! அதான் நீயும் வளரவேயில்ல!!’

இப்பொழுது ‘தரமணி’ படத்திற்கு இது எப்படி பொருந்துகிறது என்று பார்ப்போம்:

‘இந்த ஊர் எப்போ சென்னைக்குள் நொழைஞ்சது?’

“1977ல் சென்னைக் குடிநீர் வடிகால் வாரியம் உருவானது. அப்பொழுது தரமணி பஞ்சாயத்தும் மதராஸ் மாநகராட்சிக்குள் இணைக்கப்பட்டது.”

‘அந்த வருடம்தான் ’அவர்கள்’ படமும் ’ஆறு புஷ்பங்கள்’ படமும் வந்தது. அப்பொழுது எப்படி சினிமாவை எடுத்தார்களோ, அதே மாதிரிதான் இப்பொழுதும் ராம் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்”

4. அப்படியானால் வெகுசன ஊடகங்களில் இந்த மாதிரி மாற்றுப்படங்களே வருவதேயில்லையா? அல்லது பொதுத்திரள் சந்தையில் இந்த மாதிரி பெண்ணியக் கருத்துகளை முன் வைக்கவே முடியாதா? பார்க்க – Mother! Mastermind Darren Aronofsky Explains His Disturbing Fever Dream | Vanity Fair

Aronofsky has a response for those people: “They are missing the whole point. It’s misogyny if it says that this is good . . . I think [any spit-take revulsion is] just like an initial reaction to being punched. We are telling the story of Mother Nature turning into a female energy, and we defile the earth. We call her dirt. We don’t clean up after our mess. We drill in her. We cut down her forests. We take without giving back. That’s what the movie is.” Referencing Hurricane Irma, which was touching down in Florida as the film premiered, Aronofsky added, “Naomi Klein, one of the great eco-feminist out there, sent me a text yesterday, talking about the irony of the film premiering yesterday with what’s happening right now in America.”

வன்புணர்வு காட்சியைக் காண்பித்தால் அசிங்கமாக இருக்க வேண்டும். ஆசைப்பட வைக்கக் கூடாது.

‘தரமணி’ திரைப்படத்தில் பெண்ணியமும் இல்லை; முடிச்சும் இல்லை. இரண்டையும் கேவலப்படுத்துகிறது. இந்த மாதிரி ராம் படம் எடுப்பதற்கு ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரம் எடுக்கலாம். அதில் நேர்மை இருக்கிறது.

5. கொஞ்சம் காட்டம் ஜாஸ்தியாகி விட்டது. நகைச்சுவை இடைவேளை:

ஒரு ஊரில் நான்கு பேர் இருந்தார்கள். ஒரு பொறியாளர்; ஒருவர் கணக்காய்வாளர்; ஒருவர் வேதியியலாளர்; மற்றொருவர் அரசு ஊழியர். நால்வரும் ஆளுக்கொரு நாய் வளர்த்தார்கள். தங்களின் நாய்தான் திறமை வாய்ந்த நாய் என்று பெருமிதம் கொண்டிருந்தார்கள்.

முதலில் எஞ்சினீயர் தன் நாயை அழைத்தார். ”ஏ… மின்னலு! உன்னோட வித்தைய காமி…” என்கிறார். அந்த நாய் மேஜையில் இருக்கும் தாளை எடுத்து வந்தது. அடுத்து பென்சிலைக் கொணர்ந்தது. வெள்ளைத்தாளில் முழு வட்டத்தை செவ்வனே வரைந்தது. அதன் பின் சதுரம் போட்டது. முக்கோணைத்தையும் தன் கால்வண்ணத்தில் கொணர்ந்தது. எல்லோரும் அதை வியந்து பாராட்டினர்.

ஆனால், கணக்கரோ தன் நாய் இதைவிடத் திறமை வாய்ந்தது என்றார். ”ஏய்… அட்சரா! இங்கே வந்து நம்ம மேட்டர செய்ரா!!” என விளிக்கிறார். அட்சரா எனப்பட்ட நாய் சமையலறைக்கு ஓடிப்போகிறது. அங்கிருந்து எடுத்துவந்த ஒரு டப்பா கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகை அரைக்காலாக பிரிக்கிறது. அரைக்காலை அடுத்து ஐந்து காணி விள்ளல்கள் ஆக்குகிறது. அடுத்து வேதியிலாளர், “ரசா… வாடா! அவுத்துவிடு.” என்கிறார்.

ரசாயனம் என பெயரிட்ட அந்த நாய் ஃப்ரிட்ஜைத் திறந்து ஒரு படி பாலை எடுக்கிறது. அதை நான்கு உழக்கு ஆகப் பிரிக்கிறது. கீழே ஒரு துளிக் கூட சிந்தாமல் 4 உழக்கை எட்டு ஆழாக்கு ஆக்குகிறது. எல்லோரும் மூக்கின் மேல் விரல் வைக்கிறார்கள். இப்பொழுது அரசாங்க சிப்பந்தியைப் பார்த்து, “உன் நாய் என்ன செய்யும்?” என வினவுகிறார்கள். அவரும், “ஏய் திண்ணைத்தூங்கியே… செஞ்சு முடி.” என்கிறார்.

துள்ளியெழுந்த அந்த நிர்வாக நாய் முதலில் மைசூர்பா எல்லாவற்றையும் ஒரே மூச்சில் கபளீகரம் செய்தது. தாகசாந்திக்கு அனைத்துப் பாலையும் உறிஞ்சிக் குடித்தது. பேப்பரில் கக்கா போனது. அதன் பிறகு முன்று நாய்களிடமும் வல்லுறவு கொண்டது. வன்கொடுமையின் போது தன் முதுகுத்தண்டு தடம் புரண்டதாக புகாரையும் பதிந்தது. அது போல் தரமணி திரைப்படமும் இயக்குநர் ராமும் நிறைய வித்தை காட்டுகிறார்கள்.

6. இது கேம் ஆஃப் த்ரோன்ஸ் காலம். எனவே:

அ) Fight Like a Lady: the Promotion of Feminism in Game of Thrones

ஆ) Drama queens: why it’s all about women and power on screen right now | Books | The Guardian

இ) ‘Game of Thrones’ has become an unlikely tale of female empowerment – LA Times

7. ஆங்கிலப் படம் ஆச்சு; ஆங்கில தொலைக்காட்சி ஆச்சு… பாக்கி? ஆங்கிலக் கட்டுரைத் தொகுப்பு: Fiery Collections of Essays From Young Feminist Writers – The New York Times

அ) YOU PLAY THE GIRL: On Playboy Bunnies, Stepford Wives, Train Wrecks, and Other Mixed Messages By Carina Chocano
ஆ) ONE DAY WE’LL ALL BE DEAD AND NONE OF THIS WILL MATTER By Scaachi Koul
இ) BITCH DOCTRINE: Essays for Dissenting Adults By Laurie Penny

சென்னை – 2017

சென்னையில் ஹாரன் சத்தம் கம்மியாகி இருக்கிறது. கார் ஓட்டுனர்கள் வயதுக்கு வந்திருக்கிறார்கள். மோசமான டிரைவர்களுடன் வாழ்க்கையை அனுசரிக்க கற்றுக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க சாய் பாபா!

சென்னையில் பிரமிக்கவைக்கும் ஐஸ்வர்யா ராய்க்களின் வரத்து அதிகமாகி உள்ளது. முன்பெல்லாம் திருமணங்களில் மட்டுமே, தென்பட்டவர்கள் இப்போது மால்களிலும் சினிமா அரங்குகளிலும் டூ வீலரின் பின்புறங்களிலும் ஆக்கிரமித்து இருக்கிறார்கள். வாழ்க ராஹுல் காந்தி!

மயிலை என்பது பிராட்வே என அறியப்படுகிறது. தினமும் ரஸிக ரஞ்சனி சபாவும் பாரதீய வித்யா பவனும் அமர்க்களமாக ஏதாவதொரு நிகழ்வை இலவசமாகத் தருகிறது. சொற்பொழிவோ.. கர்னாடக சங்கீதமோ… இசை நாடகமோ…. சொர்க்கம் எனப்பட்டது என்னவென்றால் ரிடையர்மெட்ண்ட் வாழ்க்கை @ மாட வீதி. வாழ்க கொல்ஸ்டிரால்!

பக்தர்கள் எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளனர். திருவொற்றியீஸ்வரனாகட்டும்; வெள்ளீஸ்வரர் ஆகட்டும்… பிரதோஷம் முதல் உச்சிக் கால பூஜை வரை! கூட்டம் எக்கச்சக்கம். வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றி!!

நல்ல காபி என்பது சில வீடுகளில் மட்டுமே கிட்டுவது என்பது போய் பல இடங்களில் கிடைக்கிறது. அம்பிகாவின் ஆத்து காபி ஒரு உதாரணம். சரவண பவன் பரவாயில்லை உதாரணம். காஃபி டே மோசமான ஸ்டார்பக்ஸ் உதாரணம். வாழ்க நரசூஸ்!

பள்ளி நண்பர்களை இந்த முறை சந்தித்தது அபாரமான தருணம். இதுவரை வலையில் அறிமுகமானவர்களை மட்டுமே தைரியமாக சந்தித்தேன். திக்குவாய் பாலாஜியை சந்தித்து நரேந்திர மோடியையும் ஜி.எஸ்.டி.ஐ.யும் விமர்சித்தவர்களுக்கு ஜே!!

பியானோ ஆசிரியரின் கண்மணி

சிறுகதையை இங்கு வாசிக்கலாம் – The Piano Teacher’s Pupil | The New Yorker

அவசரமில்லை… படித்து விட்டு வாருங்கள். ஜான் அப்டைக் போல் இந்தக் கதையை எழுதியவரையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்தானே?

சாதாரணமான நியு யார்க்கரின் கதைகள் போல் நீளமான சிறுகதையும் அல்ல. இரண்டாயிரம் வார்த்தைகளுக்குள் அடங்கி இருக்கிறது. மூன்றே பக்கங்கள்தான். சட்டென்று வாசிக்க முடியும். படித்து விட்டீர்களா?

ஆசிரியர் என்பவர் யார்? ஒரே இடத்திலேயே தேங்கி நிற்பவர் ஆசிரியர். கற்றுத்தரப் பட்டவர்கள் முன்னேறி வித்தை காண்பித்து புகழும் பணமும் பெறக்கூடியவர்கள். ஆனால், கற்றுத் தந்தவருக்கு அந்த வித்தையை அப்படி ஆக்கத் தெரிவதில்லை. வித்தகர் ஆக முடியாதவர் வாத்தியார் ஆகிறார். வர்த்தகமாக்க தெரியாதவர் வாத்தியாராக மட்டுமே வதங்குகிறார். எப்படி செய்ய வேண்டும் என்பது பியானோ ஆசிரியருக்குத் தெரியும். ஆனால், எதை எல்லாம் உருவாக்க முடியும் என்பது ஆசிரியர்களுக்கு புலப்படுவதில்லை.

இந்தக் கதை பியானோ ஆசிரியரைப் பற்றியது. மிஸ் நைட்டிங்கேல் (செல்வி வானம்பாடி) ஐம்பது வயதொத்த பெண்மணி. தன்னுடைய முப்பதுகள் வரை தந்தையோடு வசித்தார். தந்தைக்குத் தெரியாமல் மணமான ஒருவரின் காதல் பரத்தையாக பதினாறு ஆண்டுகள் இருந்திருக்கிறார். அந்தக் காதலர் இப்பொழுது அவளை நாடுவதில்லை. திங்கள் முதல் வெள்ளி வரை பல்வேறு தரப்பட்ட மாணவர்களுக்கு பியானோ வாசிக்கக் கற்றுத் தருகிறார்.

அவளிடம் ஒரு புத்தம்புது மாணவன் படிப்பு சொல்லிக் கொள்ள சேர்கிறான். வெள்ளி சாயங்காலம் அந்த மாணவன் வருகிறான். அவனிடம் கடவுள் கொடுத்த திறமை மட்டுமல்ல; அதற்கு மேற்பட்ட மேதாவித்தனம் கைவரிசையாக பியானோ இசையில் வெளியாகிறது. அவளுக்கெனவே பிரத்தியேகமாக வாசிக்கிறான். அவனுடைய கற்பனாசக்தியைத் தாண்டி கற்றுக் கொடுக்க என்று அவளுக்கு எதுவுமில்லை.

அவன் புறப்பட்ட பிறகு வீட்டில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு பொருள் காணாமல் போகிறது. மிகச் சிறிய கலைப்பொருள். அவளுடைய தந்தையார் ஞாபகார்த்தமாக சேமித்த சின்னச் சின்ன ஷோகேஸ் சின்னங்கள் மறைந்துவிடுகின்றன. அவளுடைய கழுத்தைச்சுற்றித் தொங்கவிடும் துகிலை, அவன் ஒரு சமயம் திருடி விடுகிறான். இன்னொரு சமயம் காலணியில் போட்டுக் கொள்ளும் அற்பமான அணிகலனை கவர்ந்து விடுகிறான். நகை போட்டு வைக்கும் பெட்டியை அவளுக்குத் தெரியாமல் எடுத்துச் சென்றுவிடுகிறான்.

கதை சொன்ன விதம் சுவாரசியமாக இருந்தது. டக்கென்று முடிந்ததும், முடிவு தெளிவாக புரியாததும் சற்றே எமாற்றம் தந்தது. வாழ்நாள் பறந்து சென்றுவிடுகிறது. நேரம் காணாமல் போகிறது என்பது புரிகிறது. இளமை கழிந்த பிறகே நமக்கு அதை இன்னும் பயனுள்ள முறையில் செலவிட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

வில்லியம் டிரெவரைக் குறித்து இணையத்தில் தேடினால், ‘பதாகை’ தளத்தில் உருப்படியாக அறிமுகம் செய்திருக்கிறார்கள். அந்தக் குறிப்பில் இருந்து:

ட்ரெவரிடம் சிறுகதையின் வரையறை என்ன என்று கேட்கப்படுகிறது. அதற்கு பதிலளிக்கும் ட்ரெவர், அது ஒரு கண்ணுறு கலை என்று சொல்கிறார் (‘art of the glimpse‘). அதைத் தொடர்ந்து, சிறுகதையின் உண்மை வெடித்துத் தெறிக்க வேண்டும் என்று அவர் சொல்வதை, அதன் மிகச் சிறிய வடிவத்தில் மிகப் பெரிய ஆற்றல் பொதிந்திருக்க வேண்டுமென்பதாய் புரிந்து கொள்கிறேன். அது எதைச் சொல்லாமல் விடுகிறதோ, அதுவே சிறுகதையின் பலம் என்கிறார் அவர். அர்த்தப்படுத்துதல் மட்டுமே அதன் நோக்கம் – வில்லியம் ட்ரெவரின் சொற்களில், ‘It is concerned with the total exclusion of meaninglessness‘. வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் நாவல் வடிவம் பெரும்பாலும் பொருளற்றதாகவும் அலைவுகள் கொண்டதாகவும் இருக்கலாம், ஆனால் சிறுகதை வடிவம் கலையின் சாரம் என்று அவர் வரையறை செய்கிறார் (‘It is essential art‘). நாவல்கள் ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களைக் காட்டினால் சிறுகதை மனித வாழ்வின் ஆதார எலும்புகளை தொட்டுக் காட்டுகிறது.

இரக்கமே இல்லாமல் சிறுகதையை வெட்டித் தள்ளுபவர் டிரெவெர். அவருடைய கார்டியன் பேட்டியில் இவ்வாறு சொல்கிறார்:

திரைப்படத்தை உருவாக்குவது போல் நான் சிறுகதையை செதுக்குகிறேன். நாம் எதை சொல்லாமல் விடுகிறோமோ அதுதான் ஒரு கதையின் முக்கியமான அங்கம். ஒரே சிறுகதையை பல மாதம் வைத்து மறுபடியும் மறுபடியும் அந்தச் சிறுகதையை எழுதுவேன். ஒரு சிறுகதை என்பது ஒருவரின் வாழ்க்கையை போகிற போக்கில் காண்பிப்பது; அல்லது அந்த ஒருவரின் ஏதோவொரு உறவை புகைப்படமாகக் கண்ணுறுவது.

எழுதுவது என்பது எனக்கு அறியவியலாத இரகசியம். அது மறைபொருள் என்று நான் நம்பாவிட்டால், எழுதுவதே உபயோகமற்றதாகிவிடும்.

எனவே நாம்தான் கதையின் ஒவ்வொரு ரகசியத்தையும் அர்த்தம் கொள்ள வேண்டும். கதையில் பதினாறு ஆண்டு கழிந்ததை குறிப்பிடுவதை, நான் ஆயுர்வேதத்தில் ஷோடஷ சமஸ்காரம் என பதினாறு வகையாக வாழ்க்கையை பிரிப்பதோடு ஒப்பிடுவேன். மானுட வாழ்வில் பதினாறு சமஸ்காரங்கள் உள்ளன.

ஷோடச கர்மாக்களை ஐந்து வகையாக பிரிக்கலாம்:

அ) கார்பிகா சமஸ்காரம் (குழந்தை பிறப்பு சம்பந்தமானவை)
1) கர்ப்பாதனம்
2) பும்சவனம்
3) சீமந்தம்

மேலே உள்ளவை தம்பதியரால் அனுஷ்டிக்கப்படுபவை.

ஆ) சைஷவ சமஸ்காரம் (குழந்தை சம்பந்தமானவை)
4) ஜாதகர்மம்
5) நாமகர்ணம்
6) நிஷ்கிரமணம்
7) அன்னப்பிராசினம்
8) சூடாகர்மம்
9) கர்ணவேதம்

மேலே உள்ளவை பெற்றோரால் கடைபிடிக்கவேண்டியவை.

இ) சைக்ஷ்னிகா சமஸ்காரம் (கல்வி சம்பந்தமானவை)
10) உபநயனம்
11) வேதாரம்பம்
12) சமாவர்த்தனம்

மேலே உள்ளவை உபாத்தியாயரால் செய்யவேண்டியவை.

ஈ) ஆஷ்ரமிகா சமஸ்காரம் (மணம் புரிந்தவர்கள் சம்பந்தமானவை)
13) விவாகம்
14) வானப்பிரஸ்தம்
15) சன்யாசம்

மேலே உள்ளவை சுயமாக செய்யவேண்டியவை.

உ) பிரயான் சமஸ்காரம் (மரணம் சம்பந்தமானவை)
16) அந்தியேஷ்டி

மேலே உள்ளவை உங்களின் இறப்பிற்கு பின் உங்கள் குழந்தைகளால் செய்யப்பட வேண்டியவை ஆகும்.

பதினாறு வகையாக இப்படி வாழ்க்கையை பிரித்து நம் நடவடிக்கைகளை வகுக்கலாம். இந்தப் பதினாறை இவ்வளவு வலியுறுத்த என்ன அவசியம்?

கதையில் மீண்டும் மீண்டும் இந்தப் பதினாறு வருகிறது. முதல் தடவை பியானோ ஆசிரியையின் கள்ளக் காதல் பருவம் குறித்த விவரிப்பில் எடுத்த எடுப்பிலேயே பதினாறு சொல்லப்படுகிறது.. இரண்டாவது தடவையும் அதே பதினாறு என்னும் எண் இன்னொரு பக்கத்தில் வலியுறுத்தப்படுகிறது – அவளின் தந்தையின் கடைசிக் காலத்தை நேசத்துடன் கவனித்துக் கொண்டு கழித்த பதினாறு ஆண்டுகள் என்கிறார் டிரெவர். தன்னுடைய ஒவ்வொரு பேட்டியிலும் தான் ஒரு கிறித்துவ ப்ராடெஸ்டண்ட் என்பதை ஊக்கமாக சொல்லிக் கொள்கிறார்.

கிருத்துவ மதத்தின் திருத்தூதர் பால் என்பவரும் விவிலியத்தில், தன்னுடைய முதல் நூலில், 16 வகையான நேசம் இருப்பதாக விரிவுரை எழுதுகிறார்.

Corinthians 13:4 – 8:

  1. அன்பு பொறுமையும்
  2. கருணையும் உள்ளது.
  3. அன்பு பொறாமைப்படாது,
  4. பெருமையடிக்காது,
  5. தலைக்கனம் அடையாது,
  6. கேவலமாக நடந்துகொள்ளாது,
  7. சுயநலமாக நடந்துகொள்ளாது,
  8. எரிச்சல் அடையாது,
  9. தீங்கை கணக்கு வைக்காது,
  10. அநீதியைக் குறித்து சந்தோஷப்படாமல்
  11. உண்மையைக் குறித்து சந்தோஷப்படும்.
  12. எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும்,
  13. எல்லாவற்றையும் நம்பும்,
  14. எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும்,
  15. எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும்.
  16. அன்பு ஒருபோதும் ஒழியாது.

இந்தக் கதையை எழுதிய வில்லியம் ட்ரெவர் (William Trevor) கடந்த நவம்பரில் தன்னுடைய 88ஆம் வயதில் மறைந்துவிட்டார். அவரின் இறப்பிற்கு பிறகு வெளியாகும் கதை இது. கடைசிக் காலத்தில் எழுதிய இந்தக் கதை முற்றுப்பெற்றதா? இதுதான் இந்த இந்தச் சிறுகதையின் இறுதி வடிவமா? இவ்வளவு சிறிய ஆக்கமாக இருப்பதற்கு அவரின் அந்திமக் காலமும் ஒரு காரணமா? கல்கியின் மறைவிற்குப் பின் அவருடைய புதல்வர் நிறைவாக்கிய ‘பொன்னியின் செல்வன்’ போல் வில்லியம் எடுத்திருந்த குறிப்புகளைக் கொண்டு இந்தக் கதை வடிவாக்கம் பெற்றதா?

வில்லியம் டிரவர் “The Piano Tuner’s Wives” என்னும் கதையை 1995ல் எழுதியிருக்கிறார். அந்தக் கதையை இங்கே வாசிக்கலாம்.

டிரெவரின் பெரும்பாலான சிறுகதைகள் போலவே இந்தக் கதையும் முன்னும் பின்னும் பயணிப்பவை. துவக்கத்தில் முடிவிற்கு வெகு அருகே இருக்கும். கொஞ்ச நேரம் படித்தவுடன் கதாபாத்திரங்களின் இளமைக் காலத்திற்கு சென்றிருப்போம். வாசிப்பவரின் ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் அக்கறையை டிரவெர் எடுத்துக் கொள்வதில்லை. அதாவது வலிந்து அந்த விறுவிறுப்பைக் கொணர மாட்டார். நீங்கள் எப்பொழுதோ தூண்டிலில் சிக்கி இருப்பீர்கள்.

”கதையில் உணரவேண்டியதை விரித்துரைத்து சொல்லக் கூடாது; சம்பவங்களினால் காட்ட வேண்டும்; அன்றாட செயல்களினால் விஷயங்கள் புலப்பட வேண்டும்.” என்பதை சிறுகதையின் பாலபாடமாக அறிவுறுத்துவார்கள். ’அது எப்படி?’ எனக் கேட்பவர்களுக்கு வில்லியம் ட்ரெவரின் இந்த “பியானோவிற்கு சுருதிசேர்ப்பவரின் மனைவிகள்” கதையையும் சுட்டலாம்.

அவரின் இன்னொரு கதைய அவரே வாசிப்பதை இங்கு பார்க்கலாம்:

மீண்டும் இந்தக் கதைக்கே வந்து விடலாம்.

ஆசிரியை எண்ணற்ற பொருள்களை சேமித்து இருக்கிறாள். ஒரு இடத்தின் ஞாபகமாக சில பொருள்கள் இருக்கின்றன. இருவரின் நினைவை சொல்லும் பொருட்டு சில பொருள்கள் அலங்காரமாக இருக்கின்றன. ஒரு வயதை, அந்தக் காலத்தை எண்ணிப் பார்க்கும்வகையில் சில பொருள்கள் அவளின் வீட்டை நிரப்புகின்றன. நம் பொருள்கள் காணாமல் போன பிறகே அவற்றின் அவசியத்தையோ, அல்லது அவசியமற்ற தன்மையையோ உணர்கிறோம். பொருள் இருக்கும் அந்த அறை எப்படிப்பட்டது?

அதற்கு அவளின் மூன்று பருவங்கள் நினைவுகூறப்படுகிறது. முதலில் பால்ய காலம். சாக்லேட் என்றால் உயிர். ஒவ்வொரு நாளும் அவளுடைய அப்பா புதிய இனிப்புகளை அவருடைய வினோத சாக்லேட்களைக் கொண்டு வருவார். அதே அறையில்தான் அவளுடைய ரகசியக் காதலன் அவளை இறுக்கி தேய்த்து, அவளை ஒரு அழகி என கிசுகிசுத்தான். அந்த பியானோ அறையில்தான் இப்பொழுது வாத்தியஜாலம் நிகழ்கிறது. வசீகரிக்கும் இசை வருடுகிறது; அந்த மாணவன் அவளுக்கு மட்டுமே நிகழ்த்திக் காட்டும் கச்சேரி அரங்கேறுகிறது. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்.

அவள் வாழ்வில் வந்த அந்த மூவரும் திருடர்களே. அவளின் அப்பா அவளுக்கு மணமுடிக்கவில்லை. தன் கடைசிக் காலத்தில் தன்னைப் பாத்துக் கொள்ள அவருக்கு ஒரு தாதி தேவைப்பட்டு இருக்கிறது. அதற்காக மகளை வீட்டோடு வைத்துக் கொண்டார்.

அதே போல் அவளின் இளமை அந்தக் காதலருக்குத் தேவைப்பட்டு இருக்கிறது. அவளின் அழகைத் திருடி இருக்கிறார்.

ஒன்றை இழந்தால்தான் இன்னொன்று கிட்டுகிறது. அவளுக்கு காதல் வார்த்தைகள் தேவைப்பட்டது. அதற்காக திருட்டுக் காதலை வைத்துக் கொண்டாள். அந்தக் கூடாவொழுக்கத்திற்கு விலையாக தன் இளமையை இழக்கிறாள். ஆசிரியையின் காதலனின் முதல் மனைவியின் நிலை என்ன? அந்த மனைவியின் அன்பை அவள் கவர்ந்ததற்கு மாற்றுப் பண்டமாக தன் மணவாழ்க்கையை அர்ப்பணிக்கிறாள். அந்த இரு பெண்மணிகளில் யார் பெருந்தன்மையானவர் என்று முடிவெடுப்பதை நம்மிடமே விட்டிருக்கிறார்.

இறுதியாக ஆசிரியரின் மாணவன் விலை மதிப்பில்லாத சங்கீத சதிராட்டம் கொடுக்கிறான். அதற்கு பதிலாக தன் வாத்தியாரின் இசைவைக் கோருகிறான். அவனுடைய அந்த இசைக் கச்சேரியில் சுயநலம் இல்லை. தன் ஆசிரியருக்கான அந்த அரங்கேற்றத்தில் அங்கீகாரத்தை மட்டுமே விலையாகக் கேட்கிறான். நம் குழந்தைகள் நம்மிடம் அதைத்தானே எதிர்பார்க்கின்றன… நம்முடைய கௌரவம் என்பது நம் வழித்தோன்றலின் மதிப்பில் அமைந்திருக்கிறதா? கதையை மீள்வாசித்தால் விடை கிட்டும்.

இந்தக் கதையை வாசித்தபோது ஜானி கேஷ் (Johnny Cash) நினைவிற்கு வருகிறார். அமெரிக்காவில் புகழ் பெற்ற பாடகராக ஜானி காஷ் விளங்கினார். அவரின் குழந்தைப் பருவத்தில் குரல் மேம்படுவதற்கு பாட்டு வாத்தியாரிடம் அனுப்பினார்கள். மூன்றே வகுப்புகளுக்குப் பின் அவருடைய ஆசிரியர் “உன்னுடைய பாடும் வித்தையை எந்தப் பொழுதிலும் எவர் சொன்னாலும் மாற்றிக் கொள்ளாதே! இயற்கையாக அமைந்த குரலை விட்டு விடாதே!” என்று சொல்லி உச்சிமுகர்ந்து ஜானியின் பாடல் வகுப்பை பூர்த்தியாக்கிவிட்டார். (ஆதாரம்: biography.com)

வில்லியம் ட்ரெவரின் கதை நாயகர்கள் ஜானி காஷ் போல் புகழ்பெற்றவர்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் கிடையாது. அவருடன் ஆன ‘கார்டியன்’ நேர்காணலில் இவ்வாறு சொல்கிறார்:

”என்னுடைய கதைகளில் கொள்ளை கொள்ளையாக உணர்வுகள் வரும். எல்லாவித உணர்ச்சிகளும் சத்தியாமனவை. ஒவ்வொரு விநோதமாக ஆராய்ந்து விதந்து கூறுகிறேன். மற்ற நிஜங்களுக்கு கதையில் ரொம்ப இடம் தர மாட்டேன். உண்மை சம்பவங்களை விட விசித்திரங்களை குடைந்து எழுத்தில் கொணர்கிறேன். அதனால்தான் பெண்களைக் குறித்து எழுதுகிறேன். நான் பெண் இல்லை. அவர்கள் எண்ணங்கள் எப்படிப்பட்டவை என்பது தெரியாது. இது என்னை உற்சாகம் கொள்ளவைக்கிறது. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சிந்திக்கிறேன். என்னால் அவர்களாக முடியாது. அதனால் ஆர்வத்துடன் அந்த அனுபவத்திற்குள் நுழைந்து ஆராய்கிறேன்.

தினசரி காரியங்களை செய்யும்போது மனம் தாவிச் சென்று என்றோ நடந்ததை அசை போடுகிறது. ஏதோவொரு வார்த்தையைக் கேட்கும்போது அந்த வார்த்தை வரும் பாடலை வாய் தானாகப் பாடத் துவங்கி, அதன் வழியே நினைவு நம் வாழ்வின் பழைய சம்பவத்தில் சென்று நிலைக்கிறது. பழசை திணித்து மூலையில் ஒதுக்கி வைக்கலாம். ஆனால், நீக்க முடிவதில்லை. அந்த மாணவனின் நினைவுச் சின்ன வேட்டைகளை பியானோ ஆசிரியை கண்டுகொள்வதில்லை. ஏன் அவள் அதை அவனிடம் கேட்கவில்லை? அவளே அந்தப் பொருள்களின் நினைவுகளை மறக்க நினைக்கிறாளா? தன்னால் கலையில் சாதிக்க இயலாததை தன் மாணவன் சாதிக்கிறான் என்னும் சந்தோஷமா? தன் கள்ளக் காதல் செய்கைகளுக்கான பிராயச்சித்தமா? தன்னுடைய குற்றவுணர்வை தவிர்க்கமுடியாதது போல், அந்த மாணவனிடமும் இந்த சில்லறைத் திருட்டு அவமானத்தை பிற்காலத்தில் தேக்கும் என்னும் தூரதிருஷ்டியா? அவனில் புதிய ஒளியைப் பார்ப்பதால் நம்பிக்கைக் கீற்றின் வெளிப்பாடா? இவ்வளவையும் யோசிக்க வைப்பதில் வில்லியம் ட்ரெவர் நிலைக்கிறார்.

The Wisest One in the Room: How You Can Benefit from Social Psychology’s Most Powerful Insights

Books_The Wisest One in the Room

நாலைந்து பேர் கூடியிருக்கும் சந்திப்புகளில் காரசாரமாக விவாதம் நடக்கும். அரசியலோ… சினிமாவோ… விளையாட்டோ… கலையோ… வேலை நிமித்தமோ… இறுதியாக “நீங்க என்ன நினைக்கறீங்க?” என்று ஒருவரைப் பார்த்து பலரும் கேட்போம். அவரின் அபிப்ராயம் மற்றவர்களின் சிந்தனைகளை விட முக்கியமானதாக நினைக்கவைப்பது எது?

அதைத்தான் இந்தப் புத்தகத்தில் ஆராய்கிறார்கள்.

மரியாதை ராமன் கதைகளைப் படித்திருப்போம். அதே போல் சாலமன் அரசரின் முன் வந்த வழக்கை கவனிப்போம்.

சாலமன் ராஜாவின் முன் இரு அன்னையர்கள் நியாயம் கேட்டு வருகிறார்கள். இருவரும் ஒரே சமயத்தில் குழந்தைப் பெற்றிருக்கிறார்கள். பிறந்த குழந்தைகளில் ஒன்று இறந்துவிட்டது. பிழைத்த குழந்தையை, ‘தன்னுடையது’ என்று இருவருமே கோருகிறார்கள். மரபணுச் சோதனை இல்லாத காலகட்டம். அரசன எப்படி தீர்ப்பு வழங்குவார்? யாருடைய குழந்தை என்று எங்ஙனம் கண்டுபிடிப்பார்? ’குழந்தையை இரண்டாக வகுங்கள். தலைப் பாதியை ஒருவரிடமும், இடுப்பிற்கு கீழ் இன்னொருவரிடமும் கொடுங்கள்’ எனத் தீர்ப்பளிக்கிறார். இதைக் கேட்ட ஒருத்தி, இந்தத் தீர்ப்பில் தனக்கு முழு சம்மதம் என்கிறார். இன்னொரு தாயாரோ கலங்கிப் போய், ‘குழந்தை எனக்கு வேண்டாம். முழுவதுமாக எங்கேயோ நல்லபடியாக வளர்ந்தாலே போதும்!’ என நடுநடுங்குகிறார்.

நீதிபதி சாலமன், எவரிடம் குழந்தையை ஒப்படைத்தார் என்பது இப்போது புரிந்திருக்கும்.

அங்கிருந்து காந்திக்கு வரலாம். சமீபத்திய நெல்சன் மண்டேலாவை எடுத்துக் கொள்ளலாம். கோடிக்கணக்கானோர் ரத்தம் சிந்தாமல், களபலிகளில் அப்பாவி உயிர்கள் பறிபோகாமல், வெற்றிகளை எப்படிப் பெற்றார்கள்?

தங்களின் ‘விவேக’த்தினால்

விவேகம் என்பதை அகரமுதலியில் மூன்று விதமாகப் பிரிக்கிறார்கள்:

1. அறிவு: அறிவியல் பூர்வமாகவோ தத்துவார்த்தமாகவோ கற்றறிந்த கலை
2. ஞானம்: உள்ளார்ந்து ஆராய்ந்து அறிவது; தொடர்புகளையும் சிக்கல்களையும் புரிந்து கொண்ட ஒருவர் தன் தனிப்பட்ட இயல்பால் உண்மை அறியும் திறன்
3. மதிநுட்பம்: குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி தீர்வைத் தெளிவாக உணர்த்தும் நுட்பம்

புத்திசாலி என்றால் மிக அதிகமாக மதிப்பெண் பெறுபவரல்ல. வேகவேகமாக புதிர்களை விடுவிப்பவர் அல்ல. விக்கிப்பிடியாவை விட நிறைய விஷயங்களை விரல்நுனியில் வைத்திருப்பவர் அல்ல. அந்த மாதிரி அறிவாளி எனப்படுபவர், ஊழலை எவ்வாறு திறன்பட செய்வது என்பதை அரசியல்வாதிகளுக்கும் பதவியாளர்களுக்கும் கற்றுக் கொடுத்து மோசடியில் கூட ஈடுபடுவார். மனிதர்களுக்கு நன்மை பயப்பது எது என்பதை கருத்தில் கொள்ளாமல் தன் மதியை அவமதிப்பான விஷயங்களில் வெளிக்காட்டுவார். பேராசையும் தொலைநோக்கு பார்வையின்மையும் கர்வமும் தலைக்கேறி பயனற்ற வாழ்வில் திளைக்கலாம். அது புத்திசாலித்தனமல்ல.

அறப்பார்வை என்பதை விட்டுவிடுவோம். எதற்காக உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறோம் என்னும் அர்த்தமும் எந்த லட்சியங்களுக்காகப் போராட வேண்டும் என்னும் மதியூகமும் எவ்வகையில் அந்த வெற்றிகளை அடைய வேண்டும் என்னும் சரியான பாதையும் தெரிந்து கொள்ளாதவர்களை எப்படி அறிவாளி என்று கருத முடியும்!

அறிவாற்றலுக்கும் விவேகத்திற்கும் என்ன வித்தியாசம்?

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது பழமொழி. அறிவாற்றல் நிறைந்தவர் மக்களை நன்கு புரிந்துகொண்டு அவர்களின் அபிலாஷகளை அறிந்தவராக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. பொதுசனங்களுக்கு எது உத்வேகம் தரும், எவ்வாறு நம்பிக்கை ஊட்டலாம், எந்த சமாச்சாரங்கள் அவர்களின் நிம்மதியைக் குலைக்கிறது, எப்படி அவர்களை துடிப்பாக இயங்க வைக்கலாம் என்று புரிந்துகொள்வதே விவேகம்.

நீங்கள் மிகப் பெரிய நிறுவனத்தின் அதிகாரியாக இருக்கலாம்; உங்களின் ஊழியர்களின் நாடித்துடிப்பையும் பயனாளர்களின் பற்றுகளையும் அறிந்திருக்க வேண்டும். தேர்தலில் வாக்குகோரும் அரசியல்வாதியாக இருக்கலாம்; வாக்காளர்களின் விருப்பங்களை உணர்ந்திருக்க வேண்டும். சீரிய கலைப் படைப்புகளை உருவாக்குபவராக இருக்கலாம்; காலாகாலத்திற்கும் சாஸ்வதமாக நிலைத்திருக்கும் கலாரசிகர்களை ஒன்றிணையவைக்கும் பற்றுதலை தெரிந்திருக்க வேண்டும். சராசரி குடும்பத் தலைவியாக இருக்கலாம்; குழந்தைகளின் நாடித்துடிப்பையும் எங்கே அழுத்தினால் எவ்வாறு விளைவு வரும் என்பதையும் புரிந்திருப்பவராக இருக்க வேண்டும். இவ்வளவு ஏன்… என்னைப் போல் ஒரு மூலையில் கணினி பாஷையில் பொட்டி தட்டி நிரலி உருவாக்குபவராகவே இருக்க்கட்டும்; அந்த செயலி எவ்வாறு வெகுசனத்தை ஈர்க்கும் என்பதையும் எவ்விதம் பயனடும் என்பதையும் சிந்தையில் நிறைத்திருக்க வேண்டும்.

அவ்வாறு மக்களை எப்படி புரிந்துகொள்வது என்பதை இந்தப் புத்தகம் ஆய்வு அடிப்படையில் உண்டான முடிவுகளைக் கொண்டு சமூக மனவியல் துறை துணை கொண்டு விளக்குகிறது.

புத்திசாலி என்பவர் ‘எவ்வாறு’ ஒரு செயலை செய்வது என்பதை அறிந்திருப்பார். ’எந்தச் செயலை செய்யவேண்டும் என்பதைக் கூட அறிந்திருப்பார். ஆனால், விவேகமுள்ளவர், ‘ஏன்’ அந்தச் செயலை செய்யவேண்டும் என்பதை உணர்த்தக் கூடியவராக இருப்பார். ஏன் அந்தச் செயல் செய்யப்படாமல் இருக்கிறது என்பதையும், ஏன் நம்முடைய குண்டுச்சட்டியில் மட்டுமே குதிரையோட்ட விரும்புகிறோம் என்பதையும் அரிஸ்டாடில் போன்ற அறிஞர்களே வலியுறுத்தி இருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தில் நம்முடைய முடிவுகளின் போதாமையைப் புரிந்து கொள்ளவும் சம்மட்டியால் அடிக்கவைத்து நினைவில் நிறுத்துகிறார்கள்.

இந்தப் புத்தகத்தின் குறிக்கோள்கள் என்ன?

அ) எது மக்களை மனமகிழ்ச்சிக்கான பாதையில் இட்டுச் செல்கிறது? எவ்வாறு அவர்களின் சிந்தையை அலைக்கழிப்பில் இருந்து மீட்கலாம்?

ஆ) மனிதர்களுக்கிடையேயான சச்சரவுகளை எது நீட்டிக்கிறது?

இ) ஆபத்தில் இருக்கும் குடியாளர்களை எவ்வாறு படிப்பறிவு பெற வைத்து சமுகச் சிந்தனையை மேம்படுத்துவது?

ஈ) வளர்ந்த நாடுகளின் தொலைநோக்கு கவலையான உலகவெம்மையாக்கம் போன்ற ஆபத்துகளை எல்லோரும் உணர்வைப்பது எப்படி?

இவ்வாறு எல்லாம் சிந்திப்பது எப்படி?

தோற்றமயக்கங்களில் சிக்காமல் பார்ப்பது என்பதை குறிக்கோளாக வைத்திருக்க வேண்டும். மேனாமினுக்கல்களில் மயங்காமல், அதன் மேற்சென்று தீர்வுகளை யோசிக்க வேண்டும். அதற்கு விவேகத்தின் ஐந்து தூண்கள் உதவும்:

1. பாரபட்சமின்மை என்னும் மாயை: என்னை எவ்வாறு பிறர் நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேனோ, அவ்வாறுதான் நான் பிறரை நடத்துகிறேன் என்பது பொதுபுத்தி. பாரபட்சமற்ற மதீப்பீடு, நேர்மையான தீர்ப்பு என்பதில் உள்ள அனர்த்தங்களை இந்தப் பகுதியில் ஆசிரியர்கள் கவனிக்கிறார்கள்.

முதல் அத்தியாயத்தில் இந்தப் புத்தகத்தின் வாசகரைக் குறித்து, கீழ்க்கண்ட அவதானிப்பை முன்வைக்கிறார்கள்:

உங்கள் கொள்கை தாராளமயமானது; அதே சமயம் எக்கச்சக்கமாக இல்லாமல், கட்டுப்பெட்டியாகவும் இல்லாமல், மிகமிகச் சரியாக எவ்வளவு வேண்டுமோ… அவ்வளவுக்கு அவ்வளவு தாராள சிந்தை கொண்டவர் நீங்கள். பெரும்பாலான விஷயங்களில் உங்கள் கொள்கைக்கு இடதுசாரியாக இருப்பவர்களை வெகுளிகளாகவும், அரசியல் சரிநிலைக்காக நிலைப்பாடு எடுப்பவர்களாகவும், எதார்த்தத்தை உணராதவர்களாகவும் கருதுவீர்கள். உங்கள் கொள்கைக்கு வலதுசாரியாக இருப்பவர்களை சுயநலக்காரர்களாகவும், மற்றவர்களுக்கான அக்கறை அற்றவர்களாகவும், இந்த உலகத்தைச் சூழ்ந்திருக்கும் இன்னல்களைப் பற்றி புரிதல் அற்றவர்களாகவும் மதிப்பிடுவீர்கள்.

இந்தக் கட்டுரையை வாசிக்கும் உங்களுக்கும் இந்தப் பத்தி பொருந்துகிறதா? அப்படியானால், அவசியம் இந்த நூலை நீங்கள் வாசிக்கவேண்டும்.

2. சிறு துரும்பும் பல் குத்த உதவும்: சந்தர்ப்பவசத்தால் அதிசயிக்கவைக்கும் வகையில் செல்வாக்கை எப்படி உயர்த்திக் கொள்வது என்பதை இங்கே விவரிக்கிறார்கள். ஒரு எடுத்துக்காட்டு:

பல மேற்கத்திய நாடுகளில் உடல் உறுப்புகளை தானம் செய்பவர் என்பதை உங்களுடைய ஓட்டுனர் உரிமத்தில் குறிப்பிடலாம். உடல் உறுப்புகளை தானம் செய்பவர் என்று டென்மார்க்கில் வெறும் நான்கே நான்கு சதவிகிதத்தினர் மட்டுமே இருக்கிறார்கள். அதன் அருகிலேயே உள்ள ஸ்வீடனிலோ கிட்டத்தட்ட 95% பேர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்திருக்கிறார்கள். ஏன் இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வு? அண்டை நாடுகளுக்கு நடுவே இவ்வளவு பெரிய வித்தியாசம்?

டென்மார்க் நாட்டு ஓட்டுநர் உரிமத்தின் பின்புறத்தில் ’உடல் உறுப்பு தானம் செய்வேன்’ என்று உரிமக்காரரின் கையெழுத்து வேண்டும். ஸ்வீடனிலோ, உடல் உறுப்பை தானம் செய்ய விருப்பமில்லை என்றால் மட்டுமே பின்பக்கத்தில் ‘நான் தானம் செய்யமாட்டேன்’ என்று உரிமக்காரர் கையெழுத்து இட வேண்டும்.

காலையில் சுப்ரபாதம் போட்டால் விழித்துக்கொள்வது மாதிரி, எல்லோருக்கும் சிற்சில உந்துதல்கள் தேவையாக இருக்கின்றன. நல்ல விஷயங்களில் நாட்டம் ஏற்பட வேண்டுமானால், இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் தற்செயலான தேர்வுகளை உலகத்தின் நன்மைக்கேற்ப அமைத்துக் கொடுத்தல் அவசியமாகிறது. சம்பளத்தில் பத்து சதவிகிதத்தை தானியங்கியாக சேமிப்புக் கணக்கில் மாற்றிவைப்பது, கழிவுகளை மக்கும் குப்பையாக மாற்றத் தூண்டுவது என எல்லாவற்றிலும் இதே போன்ற பாதைகளைப் போட்டு வைக்கலாம்.

3. பேரில் என்ன இருக்கு? : நம்முடைய திட்டங்களுக்கு என்ன பெயர் கொடுக்கிறோமோ, அந்த நாமகரணங்களும் அவற்றின் தொடர்புகளும் நம்மின் சிந்தையில் எப்போதும் நிழலாடிக் கொண்டேயிருக்கும்.

அமெரிக்காவில் அந்தக் கல்லூரிக்கு பெரிய மதிப்பு கிடையாது. ஃபிலடெல்பியாவிற்கு அருகே இருக்கும் அர்சினஸ் கல்லூரியை (Ursinus College) உள்ளூர்க்காரர்களே மதித்தது இல்லை. இத்தனைக்கும் The Catcher in the Rye எழுதிய ஜே.டி. சாலிங்கர் (J. D. Salinger) போல் பல புகழ்பெற்றவர்களை உருவாக்கிய கல்லூரி. அவர்கள் ஒரு உபாத்தியாயம் செய்தார்கள். தங்களுடைய கல்விகட்டணத்தை தடாலடியாக ஐந்தில் ஒரு பங்கு உயர்த்தினார்கள். உடனடியாக மாணவர்களின் கவனம் இந்தக் கல்லூரியின் பக்கம் திரும்பியது. ‘அது நல்ல கல்லூரியாக இருக்கும்… அதனால்தான் அத்தனை பணம் வசூலிக்கிறார்கள்!’ என்னும் பேச்சு பலப்பட்டு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை எகிறியது.

4. எண்ணம் போல் வாழ்வு: நாம் எப்படி நடக்கிறோமோ, அதுவே நம்முடைய நம்பிக்கையாகி விடுகின்றது. உற்சாகமின்றி உழைக்கும் வேலை நேரத்தில், சீட்டியடித்து துடிப்பை வரவைத்துக் கொள்வது, நம்மை மேலும் திறன் வாய்ந்த பணியாளராக மாற்றுகிறது. மந்தையில் எல்லோரும் ஒரே மாதிரி நடந்தாலும், விவேகிகள் தங்கள் நம்பிக்கையில் மாறாப்பற்றுக் கொண்டு, ‘என் வழி… தனி வழி’யாக புதுப்பாதை அமைக்கிறார்கள்.

5. சேணம் கட்டிவிட்ட குதிரை: நம்முடைய சித்தாந்தம் எதுவோ, அந்த சித்தாந்தத்தை எவை நிலை நாட்டுகிறதோ, அந்த ஆதாரங்களையே நம் மனம் நாடும். முழுமையானத் தகவல்களை நாம் உள்வாங்க நம் புத்தியை அனுமதிப்பதில்லை. நமக்குத் தேவையான தரவுகளைப் பெற்றுக் கொண்டபின் தேடலை முடித்துவிடுகிறோம். அந்தத் தரவுகளின் மேற்சென்று பிற கருத்துகளை கவனத்திலேயே கொள்வதில்லை. எளிதான விடைகள் தவறான விடைகளாக இருக்கக் கூடும். நம்முடைய முடிவுக்கு எதிரான விடைகளைத் தேடித் தெளிய வேண்டும்.

இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் பல விஷயங்கள் நமக்கு ஏற்கனவே அறிமுகமானதுதான். மற்றவர்களைப் பற்றியும் நம்மைப் பற்றியும் நாம் நன்கு அறிந்தே இருக்கிறோம். அதுவும் உளவியலும் மனவியலும் பாடமாகப் படிப்பவர்களும், சந்தையாக்கத்தையும் விற்பனை நுட்பத்தையும் மேலாண்மைப் பாடமாகப் படிப்பவர்களும் இதையேத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களும் இந்த நுணுக்கங்களை அனுபவமாகக் கொண்டிருப்பார்கள். நம்மைப் பற்றி பிறர் பாராட்ட நினைக்கிறோம்; நம்மை மற்றவர்கள் விரும்ப நினைக்கிறோம்; சந்தோஷத்தை அதிகமாக்கி, சுணங்கல்களை நீக்க விழைகிறோம். நம்முடைய முடிவுகள் (அல்லது பிறருடைய தேர்வுகள்) சுயநலத்தையும் மதநம்பிக்கை சார்ந்த கலக்கங்களையும் முன் அனுபவத்தையொட்டியும் அமைந்திருப்பதை தெரிந்தே வைத்திருக்கிறோம்.

ஆனால், இவை எதுவுமே, ‘இவர் இப்படித்தான் முடிவெடுப்பார்!’ என்று அறுதியிட்டுச் சொல்லவைப்பதில்லை. நாம் நினைப்பது ஒன்று; பிறர் முடிவெடுப்பது பிறிதொன்று. ஔவையார் பாஷையில் சொன்னால்:

ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்.

ஈசன் செயல் என்று எங்கோ பழி போடாமல், அல்லது ஈசன் திருவிளையாடல்களை முன்கூட்டியே அறிவதற்கு, இந்த நூல் உதவும்.

உசாத்துணை:
1. The Wisest One in the Room: How You Can Benefit from Social Psychology’s Most Powerful Insights Hardcover by Thomas Gilovich, Lee Ross

2. அமேசான்.காம்

Wisest_One_In_Room_Book1

‘Chaos Monkeys’ & The Lobster

உச்சைசிரவஸும் குரங்கும்

Chaos Monkeys_Book_Obscene Fortune and Random Failure in Silicon Valley“வணக்கம்!” என்று வரவேற்பதை கலிஃபோர்னியாவிற்கு குடிவரும் ஒவ்வொரு புதியவரும் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? பல்லாண்டு காலமாக சிலிகான் வேலியில் குப்பை கொட்டியவர்கள், அதை “நீ எக்கேடு கெட்டு போனா எனக்கென்னடீ!” என்பதன் சுருக்கம் என அறிவார்கள். அவர்களின் திருமணத்திற்கு அழைப்பு வைத்தும் நீங்கள் போகாவிட்டால் அவர்கள் புரிந்து கொள்வார்கள். தங்களின் புத்தியை உஷார்நிலையில் வைத்திருக்கும் யோகா வகுப்பிற்கு செல்லும் நடைபாதையின் குறுக்கே இருக்கும் வீடற்றவரை கவனிக்காமல் சுலபமாகத் தாண்டிச் செல்வார்கள். இவர்களுக்கு குடும்பம், குட்டி பொருட்டில்லை. மதமோ கடவுளோ நம்பிக்கை இடையூறு செய்வதில்லை. ஆண்களோ, பெண்களோ, பால் பேதமின்றி தங்களைச் சுற்றி தீவு போன்ற குமிழிகளைக் கட்டியிருக்கிறார்கள். வருமான ஏற்றத்தாழ்வு போன்ற சமூகச் சிக்கல்களோ, அண்டை அயலில் நடக்கும் சிரியா நாட்டின் உள்நாட்டு சண்டைகளோ இவர்களை அசைப்பதில்லை. ”எல்லாத்தையும் லைட்டா எடுத்துக்கப்பு!” என்னும் வாழ்வியல் கோட்பாட்டை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவார்கள். சான் ஃபிரான்சிஸ்கோவில் ஆரம்பித்து சான் ஓஸேவில் முடிவதாக சொன்னாலும் இப்போதைய அமெரிக்க புதுயுக கண்டுபிடிப்பு நிறுவனங்களின் கலாச்சாரம் என்பது இதுதான்: சுயநலத்தில் ஊறிய தருமம்; பொது நீதி எல்லாம் கண்டுகொள்ளாத்தன்மை; அதன் அடிப்படையில் உலகநன்மைக்காகவும் லோகஷேமத்திற்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் பாவ்லாத்தனம்; தொழில்நுட்பத்தை முன்னேற்றுவதாகச் சொல்லிக்கொண்டு அடுத்த மாதம் ஐந்து மில்லியன் கிடைக்குமா என்று கணக்கு போடும் புத்தி. எப்போது பங்குச் சந்தையில் பில்லியன்கள் அள்ளூவோம், எப்படி கூகுளுக்கும் மைக்ரோசாஃப்டிற்கும் தங்கள் நிறுவனத்தை விற்போம் என்னும் திட்டங்களில் இலயித்து கிடக்கும் சுயமோகம்.

Chaos Monkeys: Obscene Fortune and Random Failure in Silicon Valley By Antonio García Martínez நூலில் இருந்து ஒரு நறுக்

மேற்படி நூலைப் புரட்டிக் கொண்டிருக்கும்போது ‘தி லாப்ஸ்டர்’ திரைப்படத்தை பார்த்துத் தொலைத்தேன். புத்தகத்திற்கும் படத்திற்கும் ஸ்னான ப்ராப்தி இல்லைதான். இருந்தாலும், அவை இரண்டிற்கும் நடுவே உள்ள தொடர்புகளைக் கோர்த்துப் பார்ப்போமா?

’தி லாப்ஸ்டர்’ படத்தின் துவக்கத்தில் ஒருத்தி ஆள் அரவமற்ற சாலையில் காரோட்டிச் செல்கிறாள். சாலையோரத்தில் சில கழுதைகள் மேய்ந்து கொண்டிருப்பதை பார்க்கிறாள். காரை நிறுத்தி, சுற்றுமுற்றும் எவரும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்கிறாள். அதன் பின், காரில் இருந்து இறங்கி, தன் துப்பாக்கியை எடுத்து, ஒரு கழுதையைக் கொல்கிறாள். அதன் பின், மீண்டும் காரில் ஏறி சென்றுவிடுகிறாள்.

அடுத்த காட்சியில் டேவிட் அறிமுகமாகிறான். அவன் மனைவி அவனை காதலிக்கவில்லை. அதனால், அவனை நகரத்தில் இருந்து தள்ளி, ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு விடுதிக்கு அழைத்துப் போகிறார்கள். சற்றே தொப்பை இருக்கிறது. கண்ணாடி அணிந்திருக்கிறான். அந்த விடுதியில் நாற்பத்தைந்து நாள்கள் அவன் இருக்க வேண்டும். அந்த விடுதியில் இருப்போர் எல்லோருமே தனியர்கள். சிலருக்கு கணவன் இறந்துவிட்டார்கள். சிலருக்கு மணமுறிவாகிவிட்டது. எப்படியோ இணையின்றி இருப்பவர்கள். கொடுக்கப்பட்ட ஒரு மண்டலத்திற்குள் தங்களின் துணையைத் தேடிக் கொள்ளவேண்டும். 45 நாள்களுக்குள் காதலில் விழுந்து கல்யாணத்தில் விழாவிட்டால், மிருகமாக்கப்படுவார்கள். ”விலங்காக மாறியாவது உங்களின் துணையைத் தேடிக் கொள்ள இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுவதை நினைத்து நீங்கள் சந்தோஷப் படவேண்டும்!” என்கிறார் அந்த விடுதியின் நிர்வாகி.

lobster_movie_animal_Films_Second_Chance_Loners

இந்தப் படத்தைப் பார்க்கும்போது சற்றே அசௌகரியம் வந்து உட்கார்ந்து கொள்கிறது. படம் பார்க்கும்போது என் குடும்பத்தாரும் இல்லாத சமயம். அதுவும் கொஞ்சம் தொண்டையில் மாட்டிக் கொண்ட தேங்காய் நாராக படத்தின் முகாந்திரத்தோடு ஒன்றச் செய்தது. அலுவலில் இப்போது எல்லாம் எல்லோரும் சேர்ந்து ஒரே இடத்தில் வேலை செய்வதில்லை. என்னோடு பணி புரியும் இருவர் இந்தியாவில் இருந்து கொண்டு, அமெரிக்க பகல் நேரத்தில் வேலை பார்ப்பவர்கள். கிட்டத்தட்ட அவர்களை ஆந்தைகளைப் போல்தான் உணர்வேன். இன்னொருவர் ஒரு வாரம் பாஸ்டனில் இருப்பார். அடுத்த வாரம் சிகாகோவில் இருப்பார். பறந்துகொண்டேயிருக்கும் பருந்து. மற்றொருவரை ஏன் பணியில் வைத்திருக்கிறோம் என்றே எவருக்கும் தெரியாது. எல்லோரையும் மதிய உணவிற்கு செல்லவேண்டும் என்பதை நினைவுறுத்துவார். எங்களுடன் மயில் மாதிரி சிரித்துப் பேசுவார். அவரின் தோகை போன்ற ஆடைகளும் அணிகலன்களும் மினுமினுக்கும். அலுவலகமே மிருகக்காட்சி சாலை. ஒரே இடத்தில் 9 முதல் 5 வரை உழல்வதால், காதல் மலர்ந்தவர்களும் உண்டு.

எனவே, இந்தப் படத்தின் விசித்திரமான கதைப் போக்கும் ‘தாறுமாறான குரங்குகள்: மிகப்பருத்த குருட்டுயோகமும் சிலிகான் வேலியின் சீரற்ற தோல்விகளும்’ புத்தகத்தின் உள்ளடக்கமும் ஒருங்கே மின்னி மின்னி மறைந்தன.

சிலிகான் வேலியில் வெல்வதற்கான எல்லா சாமுத்ரிகா லட்சணங்களும் அண்டோனியோ கார்சியா மார்குவேஸ் (Antonio García Martínez) என்பவரிடம் இருந்தன. அவரின் நிறுவனம் யொய்-காம்பினேட்டர் (Y Combinator) எனப் புகழ்பெற்ற முதலீட்டாளரின் கடைக்கண் பார்வையை அல்ல… தீர்க்கமான நேரடியான அருளாசியைப் பெற்றிருந்தது. அதை ட்விட்டரிடம் விற்கும் வாய்ப்பு கிடைத்தது. ட்விட்டருக்கு தன்னுடைய நிறுவனத்தை விற்ற பிறகு ஃபேஸ்புக்கில் பெரிய முக்கியமான வேலை கிடைத்தது. இந்த மாதிரி ராஜபாட்டை எல்லோருக்கு வாய்ப்பதில்லை. கிடைத்தவர்களும் அதையெல்லாம் பகிர்வதில்லை. சிலிகான் வேலி என்பது மூடுமந்திரம். சாந்திமுகூர்த்தத்தில் என்ன நடக்கிறது என்பது தமிழ் சினிமாவில் காணக்கிடைக்காத மாதிரி கணினி நிறுவனங்களும் எதையும் போட்டு உடைப்பதில்லை. குழந்தை பிறந்தால் மகிழ்வது போல் பொதுப்பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ.) காண்பது மட்டுமே கண்ணுக்குத் தெரியும்.

இந்த மாதிரியே யோசித்ததில்…

தி லாப்ஸ்டர் படம் சிலிகான் வேலி புத்தகம் மானிட மையக்கொள்கை (Anthropocentrism) மனிதப்பண்பேற்றல் (Anthropomorphism)
திரைப்படத்தில் உள்ள சமூகச் சித்தரிப்பின் படி, தனியாக வாழ்வது குற்றமாகக் கருதப்படுகிறது. தனியாக வாழ நினைப்பவர்கள் மிருகமாக மாற்றப்படுவார்கள் நூலில் உள்ளபடி பார்த்தால், கணினி நிறுவனங்களில் கோடிகள் சம்பாதிக்காவிட்டால், நீங்கள் சாமர்த்தியசாலி அல்ல. பலிகடா எனக் கருதப்படுகிறீர்கள். குரங்கு சேட்டை – என்பதில் இருந்து Chaos Monkeys பிரயோகம் வந்தது. உங்கள் வீட்டில் தினசரி சமைப்பது இல்லத்தரசிதான் என வைத்துக் கொள்வோம். சடாரென்று ஒரு நாள், இல்லத்தரசி எதுவுமே சமைக்காமல் இருந்தால், சாப்பாட்டு நேரத்தில்தான் அதை உணர்ந்தால், என்ன செய்வோம்? குழம்பித் தத்தளிப்போமா அல்லது எந்த சிக்கலும் இல்லாமல் பிரச்சினையை எதிர்க்கொள்வோமா? தங்களின் காரியங்களை நிறைவேற்ற மனிதர்கள் மட்டும்தான் ஒற்றுமையாகச் செயல்படுகிறார்கள் என்று சொல்லமுடியாது. சிம்பேன்சி  குரங்குகளும் அவ்வாறே தன்னலத்தோடு ஒற்றுமையாகவும்  கூட்டுறவாகவும் நடந்துகொள்வதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
படம் நெடுக நிறைய பிராணிகள் வருகின்றன. கதாநாயகனின் சகோதரன் நாயாக மாறி இருக்கிறான். வாத்துகள், குதிரைகள் எல்லாம் எப்போதும் பின்னணியில் உண்டு நூலில் உள்ளபடி பார்த்தால், கணினி யுகத்தின் தொழிலாளிகள் எல்லோருமே தங்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு வேலை செய்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இராணித் தேனீக்கு உழைக்கும் பணித் தேனீகள். வளர்ப்பு பிராணிகள் மட்டுமே சிறிதளவு தன்னலமற்றவை. மற்ற மிருகங்கள் அனைத்துமே சுயநலம் மிக்கவை. நாய் போல் நன்றி; புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என தமிழில் எக்கச்சக்கத்திற்கு அனைத்து மிருகங்களுக்கும் மனிதவுருஅல்லது பண்பு சார்த்துதல் தொடர்கிறது.
தனியாக இருக்க பிரியப்படுபவர்களை வேட்டையாடும் காட்சிகள் படத்தில் உண்டு. தனிமை விரும்பிகளாக விரும்பி சமூகத்தில் இருந்து தப்பித்து ஓடுபவர்களை, – கண்டுபிடித்து, கட்டி இழுத்துக் கொண்டு வந்தால் சில்லறை பரிசுகள் உண்டு. நிறுவனத்திற்காக பரிபூரணமாக உழைப்பவர்களுக்கு எப்போதுமே குட்டி பதவி உயர்வுகள் உண்டு. ஏய்ப்பவர்களைக் காட்டிக் கொடுக்கும் எட்டப்பன்களுக்கு அதிகாரத்தின் சாவிகள் தரப்படும். சிங்கத்தின் முகத்தை ஈக்கள் மொய்க்கும். வேட்டையாடி விட்டு களைத்து உறங்கும் சிங்கத்தின் முகத்தில் ஈயாடும். அந்த ஈக்களை எலிகளும் தவளைகளும் உண்டு பசியாறி — பெரிய மிருகமான சிங்கத்தின் நித்திரைக்கு உதவுகின்றன. ஈசாப் நீதிக்கதைகளில் ஆரம்பித்து இன்றைய டிஸ்னி படங்கள் வரை சிங்கமும் எலியும் மனிதரைப் போல் பேசி, உரையாடிக் கொண்டேயிருக்கின்றன.
தனிமைவிரும்பிகளும் சுதந்திரவாதிகள் அல்ல. தனிமையில் வாழ்பவர்களிடமும் சட்டதிட்டங்கள் இருக்கின்றன. தொட்டால் தண்டனை; முத்தம் கொடுத்தால் வாயைத் தைத்து விடுவார்கள். உங்கள் அரசாங்கம் உங்களை எப்போதும் கண்காணிக்கிறது; சமூக ஊடகங்களில் நீங்கள் பகிரும் விஷயங்களைக் கொண்டு உங்களை சந்தைப் பொருள் ஆக்குகிறார்கள்; உங்கள் அந்தரங்கத்தை விற்கிறார்கள் மிருகங்களிடத்திலும் எழுதப்படாத விதிகள் உண்டு; வயதைப் பொருத்து அல்லது திறமையைப் பொருத்து சமூக அடுக்கு காணக் கிடைக்கிறது. சிலிக்கான் வேலியில் துவக்க நிலையில் இருக்கும்  குட்டி நிறுவனங்களை கூகுள், ஃபேஸ்புக் போன்ற பெரிய வளர்ந்த நிறுவனங்கள் அடிமையாக்கி கீழ்ப்பணிய வைக்கின்றனர்.
இந்தப் படம் டிண்டர் (Tinder) சமுதாயத்தைக் குறிவைக்கிறது. அவர்களின் காதல்வயப்படலை கிண்டலடிக்காமல், ஆவணப்படம் போல் பதிவு செய்கிறது. இந்தியர்கள் போல் நிச்சயிக்கப்பட்டு அதன் பின் காதலில் விழும் சமூகத்தைக் குறிக்கிறது. உங்களின் நிரலி செம்மையாக எழுதப் பட்டிருக்கிறதா என்பதை யாரும் பொருட்படுத்துவதில்லை. நீங்கள் எவ்வளவு வாக்கு சாதுர்யம் கொண்டவர் என்பது மட்டுமே முக்கியம். ஏற்கனவே, எவ்வளவு நிறுவனங்களைத் தொடங்கியவர் என்பது முக்கியம். அந்த நிறுவனங்கள் வெற்றி அடைந்ததா, பயனற்றதா என்பதை யாரும் கவனத்தில் கொள்வதில்லை. பெரும்பாலான ஜந்துக்களுக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் நம்பிக்கை கிடையாது. அழகான எதிர்ப்பாலார் அல்லது ஒத்த சிந்தனையுள்ள துணை அல்லது ஒரே குறைபாடுகள் கொண்ட தம்பதியினர் என்பது விலங்குகளுக்குக் கிடையாது. நோவா பேழையை எடுத்துக் கொள்வோம். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மிருகங்கள் இருந்தன. பல பறவைகள் வாழ்நாள் முழுக்க ஒரேயொரு துணையுடன் காலங்கழிக்கின்றன.

The_Lobster_Couples_Love_Forest_Blind_Similar_Interests_Animal

Chaos Monkeys – குழப்பவாத குரங்குகள் என்பது கணினி நிரலாளர்களுக்கு பழக்கமான பிரயோகம். கணினிகள் எப்போதும் வேலை செய்யும் என்பதை நம்ப முடியாது. கணினியின் நிரலிகள் ஒவ்வொரு நொடியும் சரியாக இயங்கும் என்பதை நம்ப முடியாது. எந்த நிமிஷம் வேண்டுமானாலும் நம் நிரலிகள் செயலிழக்கலாம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கணினிகள் ஸ்தம்பித்து நிற்கலாம். அப்போதும், உங்களின் வர்த்தக இயக்கம் ஓடவேண்டும். எந்த இடையூறு வந்தாலும், பிறருக்குத் தெரியாதபடி நிறுவனத்தின் எந்திரம் இயங்க வேண்டும்.

கார்சியாவின் நூலில் கணினிகளுக்கு மட்டுமே புகழ்பெற்ற இந்த ”குழப்பவாத குரங்குகள்” தத்துவத்தை நிறுவனங்களுக்குக் கொண்டு செல்கிறார். தொலைபேசி நிறுவனம் இருந்தது. அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு பேச வேண்டுமென்றால் நிமிடத்திற்கு இரண்டு டாலர் வசூலித்தது. தடாலென்று ஸ்கைப் முளைத்தது. அமெரிக்காவில் இருந்து ஆப்பிரிக்கா வரை எங்கே வேண்டுமானாலும் இலவசமாகப் பேச முடிகிறது. இது குழப்பவாத குரங்குகளின் செய்கை.

அதே போல் சென்னையின் ஆட்டோ ஒட்டுனர்கள் இருந்தார்கள். ’இந்த இடத்திற்கு வர முடியாது’ என்பார்கள். ‘இங்கே போக வேண்டுமென்றால் டபுள் ரேட்’ என மிரட்டுவார்கள். அவர்களில் சில சந்தேகாஸ்தபமான, சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும் இருக்கிறார்கள். ஓலா முளைத்தது. செல்பேசியில் அவர்களை பார்க்கலாம். எப்படிப்பட்டவர்கள் என்பதை அறியலாம். ஓலா ஓட்டுனர்களுக்கு, நீங்கள் சாவுகிராக்கியா, நல்ல கிராக்கியா என்பதை அறிய முடியும். இது குழப்பவாத குரங்குகளின் செய்கை.

’தி லாப்ஸ்டர்’ படமும் குழப்பவாத குரங்குகளின் செய்கையை குறிக்கிறது. உங்கள் இல்லறத்தில் மாரத்தான் ஓட்டம் போல் பொறுமையாக ஓடப் பார்க்கிறீர்கள். நடுவில் சுனாமியோ, நிலநடுக்கமோ ஏற்பட்டால் எப்படி எதிர்கொள்வீர்கள்? மீண்டு எழுவீர்களா? விலங்கு குணங்களைக் கொள்வீர்களா? மனிதர் என்பவருக்கு என்ன பண்பு இருந்தால் மானிடர் ஆகுவீர்கள்?

ஒரே ஒரு கபர்தார்: இந்தப் படத்தை உங்களின் காதலரோடு பார்ப்பதற்கு முன் அவரை திருமணம் செய்துகொள்வது சாலச்சிறந்தது.

இன்னும் ஒரு கபர்தார்: இந்தப் புத்தகத்தை படித்து நீங்களும் வருடத்திற்கு 550 ஆயிரம் டாலர் சம்பாதிக்கலாம் என்று சிலிக்கான் வேலிக்குக் குடி புகாதீர்கள்.