Daily Archives: ஓகஸ்ட் 24, 2014

நோய்பலன்: மரபணு மூலம் முன்னுரைத்தல்

செட் தோசையும் கெட்டிச் சட்னியும் சாப்பிடப் போகிறேன். சூடாக ரவா கேசரி செய்திருப்பதாக சொல்கிறார்கள். அப்படியே, அதையும் வரவைத்து சாப்பிடுகிறேன்.

அதே மாதிரி புற்றுநோய் வந்து இருக்கிறது. அதற்காக மருத்துவரிடம் செல்கிறேன் மரபணு அலகிடுதலுக்கு (Genome Scan) அனுப்புகிறார்கள். அலகிட்டதில் அல்ஜெய்மர்ஸ் வருவதற்கான அறிகுறி இருப்பது தெரியவருகிறது. இதை நோயாளியிடம் சொல்லலாமா? மறைத்து விட வேண்டுமா?

ஸ்டக்ஸ்னெட் வைரஸ் தாக்குதலுக்கு கணினி உள்ளாகி இருக்கிறது. நீக்குவதற்கு நார்ட்டன் கிருமிநாசினியை உபயோகிக்கிறோம். ஸ்டக்ஸ்னெட் நச்சுநிரலை மட்டுமா நீக்குவோம்? கூடவே வேறு என்ன எல்லாம் நச்சுப்பொருள் நம் கணினியில் அமைதியாக உட்கார்ந்திருக்கிறதோ… பார்த்து களைந்து விடுகிறோம்.

இருமலுக்காக டாக்டரிடம் சென்றால் கூட நிம்மோனியா இருக்கிறதா என்று பரிசோதிப்பார். அதே மாதிரி Genome Scan செய்யும்போது லூ ஜெரிக் நோயோ, மறதி வியாதியோ வரும் அபாயம் உண்டு என்று அறிந்து வைத்துக் கொள்வதில் என்ன பிரச்சினை?

ஒரு சாரார் எல்லாவிதமான சாத்தியக்கூறுகளையும் அலசி ஆராய்ந்து நோயாளிக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்கிறார்கள். நாளைக்கு வரக்கூடிய உபாதையை இன்றே அறிவதால், வருமுன் காப்போனாக அரண் அமைக்கலாம். மருந்துகள் தரலாம். கவனமாக பக்கவிளைவுகளை கையாண்டு கொடிய நோயில் இருந்து காப்பாற்றலாம்.

இன்னொரு சாரார் நிம்மதி போய் விடும் என்கிறார்கள். மேலும் மூன்று இடத்தில் ஒரே ஒருத்தரின் மரபணுவை அலகிட்டதில், மூன்று விதமான முடிவுகள் வந்திருக்கிறது. ஒரு கணினி நிரலி இவருக்கு ‘புற்றுநோய் அபாயம் அதிகம்; ஆனால், ALS வாய்ப்பு குறைவு’ என்கிறது. இன்னொன்று நேர் எதிராக ‘புற்றுநோய்க்கு சான்ஸே இல்ல; ஆனா, நிச்சயமாக ALS வந்துவிடும்’. இப்படி மரபணு வினைச்சர முரண்பாடுகளைக் களையும் வரையில் மக்களை பயமுறுத்தக் கூடாது. நமக்கு என்ன தேவைக்காக அலகிடுகிறோமோ அதை மற்றும் தெரிவித்தால் போதும்.

யாராவது பதில் போட்டிருக்கிறார்களா என்று அறிய ஃபேஸ்புக் பக்கம் வந்தேன். அதை மட்டுமா செய்கிறேன்? விளையும் புற்றுநோயை முளையிலேயே அறிந்து கொண்டால் என்ன போச்சு?

அட்ரெனலின் ஆந்திரா! தெகிடி தெலுங்கானா

இந்தியாவின் எந்த மொழியினரையும் விட தெலுங்கு சம்பாஷணாவாதிகள் கொஞ்சம் தீவிரமானவர்கள். சத்யம் ராமலிங்க ராஜுவின் வாழ்க்கையை பார்த்து இந்த எண்ணம் தோன்றியது.

புகழ் பெற்றவர்களும் பதவியில் இருப்பவர்களும் தந்திரமிக்கவர்களாக இருப்பதில் எதுவும் ஆச்சரியமில்லை. ஆனால், அன்றாட வாழ்வில் பார்க்கும் அனேக தெலுங்கர்களும் தங்கள் சொந்த சகோதரர்களுக்காகவும் சுய முன்னேற்றத்திற்காகவும் பிரும்மாண்டமான இலட்சியங்களை லாலிபாப் சப்புவது போல் முன்னெடுக்கிறார்கள்.

ஹாரி பாட்டர் படித்த ஹாக்வோர்ட்ஸ் பள்ளியில் நாலு குழுக்கள் இருக்கும். இயற்கையாக திறமை வாய்ந்தவர்களும் தன்னொழுக்க எழுச்சியும் மிக்கவர்கள் கிரிஃபிண்டார் (gryffindor) பிரிவில் இணைவார்கள். புத்திசாலியாக இருந்தால் ”ரேவன்கிளா” (ravenclaw). நட்புணர்வும் கடும் உழைப்பும் குணாதிசயமாகக் கொண்டவர்களை ”ஹஃபில்பஃப்” (hufflepuff) குடும்பமாக பிரிக்கிறார்கள்.

கடைசி பிரிவான ஸ்லிதெரின் (slytherin) ஆந்திராவிற்காகவே உருவானது போல் படுகிறது. டைனோசார் அளவு மாபெரும் குறிக்கோள்களை அடைவதற்கு ஆசையும் தீவிரவாதியின் மன உறுதியும் மரபணுவிலேயே ஒருங்கே வாய்க்கும் ஆசைக்காரர்களை ஸ்லிதெரிண் என்கிறது ஹாரி பாட்டர் புத்தகம்.

பிவி நரசிம்ம ராவ் போல் நாற்காலி பிடிப்பதில் ஆகட்டும், தினசரி நடவடிக்கையாக பங்குச்சந்தை வாங்குவது ஆகட்டும், சத்யம் ராஜு போல் அமெரிக்க என்ரான் வகை ஊழல் ஆகட்டும்… தில்லியிலும் பெங்களூருவிலும் பாஸ்டனிலும் உடன் வேலை பார்த்த இந்திய பிரதேசக்காரர்களுள் ‘கொல்ட்டு’ என்று கோபமாக விளிக்கப்படுபவர்கள் எப்பொழுதுமே பேரமைதி கலந்த சாதுரியத்துடம் மௌனமாக முன்னேறி இருப்பதை பார்க்கிறேன்.

இதை ஹார்வார்டு பல்கலை case study செய்ய வேண்டும் என்று சாந்தமாக பதிலளித்தால் நீங்கள் Andhraite.

கணினி வேலைக்கான நேர்காணல் கேள்விகளும் அனுபவங்களும்

இந்தியாவில் இருந்து வருபவர்கள் சொல்லும் கதைகள் சினிமாப் படங்கள் போல் நம்ப முடியாத காட்சிகள் கொண்டிருக்கின்றன.

இவர் டெல்லி பட்னியில் வேலை பார்த்தவர். வழக்கம்போல் நேர்காணல் எடுக்க சென்றிருக்கிறார். எட்டு விரல்களில் மோதிரம். கழுத்தில் காசு மாலை போல் தங்கச் சங்கிலி. கேட்ட கேள்விகளுக்கு போட்டிருக்கும் இரத்தினாபரங்கள் மாதிரி இல்லாமல் ஒற்றை வார்த்தை பதில்.

“மூன்று எண்களைக் கொடுத்து, அதற்குள் பெரிய எண்ணை கண்டுபிடிக்கச் சொல்லும் நிரலி எழுது.”

“எதற்குங்க எழுதணும்? பார்த்தாலே எது பெருசுனு தெரிஞ்சுடாதா…”

“உங்களுக்கு பிடித்தமான கணினி மொழி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சி++, ஜாவாஸ்க்ரிப்ட்… நீங்கள் எப்படி எழுதுவீர்கள்?”

“அதான் சொன்னேன் இல்ல… சின்னக் கணக்கு கூட தெரியாமலா, கோடிங் செய்வாங்க?”

வார்த்தைகள் ஆக்ரோஷமாக வந்து, இண்டர்வ்யூவிற்கு வந்த ஆபரணதாரி கையை ஓங்கி விட்டார். அலறிக் கொண்டு ’ஆதிமூலமே என்னைக் காப்பாற்று’ என்று மனிதவளத்திடம் சரணாகதி அடைகிறார் கதைசொல்லி. அவர்களும் தங்களின் வாயிற்காப்போனை அழைத்து, வில்லனை விரட்டி விடுகிறார்கள்.

சில மணி நேரம் கழிகிறது. ஜிப்ஸியில் பதினான்கு பேரை அடைக்க முடியுமா? அடியாட்களுடன் வந்த ஆபரணதாரி, இப்பொழுது சோடா பாட்டில் வீசுகிறார். பட்னி சிப்பந்திகள் எல்லோரும் கொல்லைப்புறம் வழியாக பத்திரமாக அனுப்பிவைக்கப் படுகிறார்கள். அதிகாரபூர்வமாக மூன்று நாள் ஓய்வு விடுமுறை எடுத்துக் கொள்ளுமாறு பட்னி பணிக்கிறது.

வாரயிறுதி முடிந்து வந்து பார்த்தால், புதிதாக ஐந்து பேர் வேலையில் இணைந்திருக்கிறார்கள். கஃபேடேரியா பக்கத்தில் உள்ள முக்கு கலந்தாய்வு அறையை அவர்களின் அலுவலகமாக மாற்றி இருக்கிறார்கள். ஆபரணதாரியும் அவனுடன் சோடா பாட்டில் வீசிய பதினால்வரில் நால்வர் மட்டும் அவன் உடன் வேலைவாய்ப்பு பெற்றிருக்கின்றனர்.

விக்கித்துப் போனவனைத் தட்டிக் கொடுத்து மனிதவளம் சொல்கிறது: “இனிமேல் நீ எசகு பிசகாக கேள்வி கேட்டாலும் பிரச்சினையில்லை. நம்ம கிட்டயும் ஆள் இருக்காங்க. கவலைப்படாம இண்டர்வ்யூ செய்!”

சூது கவ்வும் x எதிர் நீச்சல்

மூன்று படங்கள் பார்க்கக் கிடைத்தது. எக்கச்சக்கமாக எல்லோராலும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய ‘சூது கவ்வும்’ ஏமாற்றியது. ‘நாளைய இயக்குநரில்’ குறும்படம் நிறைய எடுத்திருந்ததால், முதல் பகுதி இயல்பாக அமைந்திருந்தது. இண்டர்வலோடு படத்தை முடித்து அனுப்பி இருக்கலாம். அதன் பிறகு குழப்பமும் சொதப்பலும் திணிப்புகளும் “படத்தை ஏண்டா ஃப்ரீயா போட்டோம்” என்று மனைவியைக் கேட்கவைத்தது.

காரை வேகமாக ஓட்டுவது என்பது குறித்த இலக்கை சுருக்கமான நேரத்தில் கடப்பது. ஆரம்பமும், முடிவும் ஒன்றே என்பதற்காக, அங்கேயே நின்று கொண்டிருந்துவிட்டு, வெற்றியடைந்து விட முடியாது. நம்ப இயலாத கதாபாத்திரங்கள் பிரச்சினையில்லை. நடக்க இயலாத சம்பவங்கள் பிரச்சினையில்லை. லோ பட்ஜெட் பிரச்சினையில்லை. விறிவிறுப்பு என்னும் பேரில் யு டர்ன் மட்டுமே அடித்துக் கொண்டு ஜெர்க் மட்டுமே தருகிறது இரண்டாம் பகுதி.

இதற்கு வசனத்தாலேயே கொன்ற ‘மூன்று பேர்; மூன்று காதல்’ கொஞ்சம் தேவலாம். எதிர்பார்த்த பாதையில் பயணித்து, பாடலுடன் ஊடலும் கொடுத்த ‘எதிர் நீச்சல்’ எவ்வளவோ தேவலாம். வசந்த்திற்கு விஷுவல் மொழி கைகூடாமல் போயிருக்கலாம். தனுஷ் தயாரிப்பு மசாலாவாக இருந்திருக்கலாம். சிவ கார்த்திகேயனுக்கு ஆட்டம் வராமல் இருந்திருக்கலாம். அர்ஜூனுக்கு ஜோதிகாவின் டூப் தேவையாக இருந்திருக்கலாம். ஆனாலும், இரண்டரை மணி நேரத்திற்கு அலுக்காமல் பார்வையாளனை உட்கார வைக்கும் கர்ம்சுத்தத்தைப் பாராட்டலாம்.

நலனின் அடுத்த பிராஜெக்டாவது டெமொ பிராடக்ட் போல் புறத்தே மட்டும் மினுக்காமல், prototype போல் டிரெய்லர் மட்டும் ருசிக்காமல், முழுக்க வேகணும்.

வித்தியாசமாக முயன்றிருக்கிறார். ஒரு மணி நேரத்திற்கு சரக்கு வைத்திருக்கிறார். தமிழ் சினிமா நகைச்சுவையில் இருந்து விலகிச் சென்றிருக்கிறார். எனக்கும் இதெல்லாம் பிடித்திருக்கிறது.

எனக்கு கவுதம் மேனன் படங்கள் மிகவும் பிடிக்கும். ஆனால், ”நடுநிசி நாய்”களை மீண்டும் முழுவதுமாகப் பார் என்றால் வதை கலந்த சலிப்பு எழும். பலாப் பழத்தை வெட்டி உண்பது போல் சூது கவ்வும் சில பகுதிகள் மிக நன்று; சில பகுதிகள் பலாப்பழச்சுளை புதுசு. சிம்பு தேவனின் இம்சை அரசனை நினைவுறுத்தும் பாடல் எல்லாம் கூட போனால் போகிறது, பலாக் கொட்டை என்று சாம்பாராக்கி விட்டு விடலாம். ஆனால், இரண்டாம் பாதியில் ஒட்டிக் கொண்டிருக்கும் சகுனிகளும் குப்பைகளும் களைய மட்டுமே கோருகின்றன.

”மதுபானக் கடை” போல் நேர்மையும் இல்லை. பேசுபொருளை மட்டும் சொல்லிய படம். பாடல் வேண்டும், துரத்தல் காட்சி வேண்டும், இரண்டரை மணி நேரம் வேண்டும், நாயகியின் அரையாடை வேண்டும் என்று எதையும் திணிக்கவில்லை. சூது கவ்வும் புத்திசாலித்தனமான உப்புமா.

பொறியியல் – கல்விக்கு அப்பால்: வாசகர் மறுவினை

Jobs_lost_Employment_Gained_Sectors_Industries_Work_Compensation_Industry_Salary_WSJ_Graphics

பொறியியல் – கல்விக்கு அப்பால் கட்டுரை வாசித்தேன். தமிழ் பதிப்புலகில் அதிகம் பேசப்படும் சினிமாவும் அரசியலும் தவிர்த்த கட்டுரை என்ற அளவிலேயே கட்டுரை எடுத்துக் கொண்ட பேசுபொருளும், அதன் தொடர்பான எண்ணங்களும் முக்கியமானவை. மதிப்பெண்களைத் துரத்தும் கல்விமுறை குறித்தும் அசலான ஆய்வுகளை ஊக்குவிக்கும் வழிமுறைகள் குறித்த ஆசிரியரின் கருத்தோடு பெரும்பாலும் ஒத்துப் போகிறேன்.

எனினும், கட்டுரையில் ஆங்காங்கே தடாலடி பொதுமையாக்கங்கள் இருக்கின்றன. தான் அறிந்த சூழலை வைத்து, அதை இந்தியா முழுக்க நீட்டும் சூத்திரங்களும் இருக்கின்றன. இவை இரண்டும் கட்டுரை சொல்லும் கருவிற்கு பங்கம் உண்டாக்குகின்றன. பின்குறிப்பின் மூலம், இந்த வாதத்தை நிராகரித்து முற்றுப்புள்ளியும் வைக்கிறார்.

இப்பொழுது கேள்விகள்:

1. ஆராய்ச்சியைத் தூண்டும் கல்வியை ஊக்குவிக்க மூன்று காரணிகள் இருக்கின்றன: புதிய கண்டுபிடிப்புகளினால் ’செல்வம்’ சேர்க்கும் வாய்ப்பு; தேடலின் முடிவில் கிடைக்கும் சமூக ’அந்தஸ்து’; நாம் வாழும் உலகை மாற்றியமைக்கும் நாகரிகத்தை முன்னெடுத்தோம் என்னும் ஆத்ம ’திருப்தி’. இவற்றை இந்திய அமைப்புகள் தரும் சூழல் நிலவுகிறதா?

2. டிப்லோமா படிப்புகள் – இவை செயல்முறையை முன்னிறுத்தும் கல்வி. அவற்றை பொறியியல் படிப்போடு ஒப்பிட்டுப் பார்க்க இயலுமா?

3. மேற்குலகில் பொறியியல் படிக்காதவர்களும் பொறியியல் சார்ந்த வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இந்தியச் சூழலில் பொறியியல் பட்டயம் என்பது ”இவர் பொறுப்பானவர்; ஒழுங்காக வேலை செய்வார்; எதைக் கொடுத்தாலும் கற்றுக் கொள்வார்.” என்பதற்கான சான்றாதாரமாக விளங்குகிறதா?

4. கணிமொழியியல் – அமெரிக்காவில் கணித்துறை சார்ந்த வேலைக்கு பொறியியல் படிப்பு தேவையாக இருப்பதில்லை. பத்தாவது படித்தவரை வேலைக்கு அமர்த்துகிறார்கள். கணிவிளையாட்டுகளைக் கொண்டு பரிசோதித்து, அதில் திறம் வாய்ந்தவராக இருந்தால் கணினித்துறையில் நல்ல பதவியில் அமர்த்துகிறார்கள். இந்த நிலை இந்தியாவில் உருவாகுமா? (அதாவது பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்து, ஓரளவு பக்குவம் வந்தவுடனேயே, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள், மாணவர்களைப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றுவிடும். மூன்று வருடக் கால வேலை+பயிற்சிக்குப் பின் அசல் வேலையில் அமர்த்திக் கொள்வார்கள்.)

5. ஆராய்ச்சிக் கல்வி – இதற்கான சமூக அந்தஸ்து இந்தியாவில் எப்படி இருக்கிறது? நிறுவனத்தில் டைரக்டர், வைஸ் பிரசிடெண்ட் என்றால் அதிக மதிப்பு கிடைக்கிறதே! அதே சமயம் கண்டுபிடிப்புகளை காசாக்கும் சூழல் இந்தியாவில் எப்படி நிலவுகிறது?

6. மேற்குலகில் mentor எனப்படும் வழிகாட்டியை வாழ்நாள் முழுக்க துணையாக வைத்துக் கொள்கிறார்கள். இந்தியச் சூழலில், இதை மாமா, சித்தப்பா போன்ற குடும்ப உறவுகளும் கிராம சமூகங்களும் நிரப்பின. இன்றைய நகரமயமாக்கப்பட்ட நிலையில் உற்றாரின் ஆலோசனைகளும் கேட்பதில்லை. அண்டை வீட்டாரும் சொந்த விஷயங்களில் கருத்துச் சொல்வதை அந்தரங்கத்தின் குறுக்கீடாகவே எடுத்துக் கொள்கிறோம். இந்த வழித்துணைகளின்ம் உதவி கிடைத்தால் ஒவ்வொருவரின் தனித்தன்மையும் ஆர்வமும் தூண்டப் பெற்று ஆராய்ச்சிப் பாதைகளில் தெளிவு கிடைக்குமோ?

7. இதன் தொடர்ச்சியாக பத்ரி சேஷாத்ரி எழுதிய ”தமிழகத்தின் பல பொறியியல் கல்லூரிகளில் ஐ.டி என்ற பாடப்பிரிவை நீக்கியிருக்கிறார்கள்”, த.நி. ரிஷிகேஷ் ராகவேந்திரன் எழுதிய “தரகர், அலுவலர்,வேலை பெற்றுத் தருபவர் தேவை- ஆசிரியர்கள் தேவையில்லை” வாசிக்கப் பெற்றேன். தங்கள் கட்டுரையைப் போன்றே பெங்களூரூ சாணக்கியன் எழுதிய ‘வேலை’ கடிதம் வாசித்தீர்களா?

8. ஜெயமோகன் தளத்தில் கல்வியைக் குறித்தும் பாடத்திட்டத்தின் தேர்வுமுறைகள் குறித்தும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். அவற்றில் அவர் குழந்தைகளுக்குக் கொடுக்கும் சுதந்திரத்தையும் தான் பழகிய ஆசிரியர்களையும் கல்வி குறித்த செய்திகளையும் அலசுகிறார். அதில் குறிப்பாக பெற்றொரின் பங்கு குறித்து நிறைய எழுதியிருக்கிறார். நம்முடைய பெற்றோர் இட்ட கட்டளைக்குப் பணிந்து நடப்பது போல், பொறியியல் கல்விக்கு அப்புறமும் மேலாளரின் கட்டளைக்கு அடிபணிய விழைகிறோமா?

9. வேலைக்குப் புதியதாகச் சேரும் எவரையும் எந்த நிறுவனமும் உடனடியாக பொறுப்புகளை சுமத்துவதில்லை. அதிலும் கல்லூரியில் இருந்து புத்தம்புதிதாக வருபவரை இரண்டு வாரங்களுக்காவது தனிப் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். தங்கள் அலுவலில் பயன்படுத்தும் நுட்பங்களையும் வழிமுறைகளையும் விவரமாகக் கற்றுத் தருகிறார்கள். அதன் பிறகு இரண்டு மாதங்களுக்காவது, பரீட்சார்த்தமான வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்துகிறார்கள். மூன்று மாதம் ஆன் பிற்பாடு, நிஜ வேலைக்குள் நுழையும்போது துணை நிற்க அனுபவசாலி ஒருவரை கூடவே கண்காணிப்பாக வைக்கிறார்கள். இதை முதலீடாகக் கருதுகிறார்கள். இந்தியாவின் ஆய்வுத்துறையில் இவ்வாறு ஒவ்வொரு ஆராய்ச்சியாளருக்கும் தனிப்பட்ட கவனம் வழங்க பொருளும் மனிதவளமும் இருக்கின்றதா?

10. வாழ்க்கை ஆதாரமாக கல்வியும், அந்தக் கல்வியினால் கிடைக்கும் வேலையும் அமைந்திருக்கிறது. மேற்குலகில் இருபதில் இருந்து முப்பது வரை பரீட்சார்த்தமாக வாழ்வதை நடைமுறையாக வைத்திருக்கின்றனர். அதாவது, தனக்குப் பிடித்த விஷயத்தில் இளவயதில் தீவிரமாக இயங்குவது; அதில் வெற்றி பெற்றால் கோடிகளை அள்ளுவது; தோல்வி அடைந்தால் மீண்டும் கல்லூரிக்குச் சென்று வேறொரு பாதையைத் தேர்ந்தெடுப்பது. – ஒரு முறையோ, பல முறையோ கீழே விழுந்தால், அஞ்சாமல், கைதூக்கி ஊக்கமும் மீண்டும் நிதியும் கொடுக்கும் சமூக அமைப்பு இந்தியாவில் வர வேண்டுமா?

destroying.jobs_.chart_Decoupling_Productivity_Unemployment_Manufacturing_Economhy_Income_GDP_USA_America_Automation