Tag Archives: பயணம்

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

பூன் 2023

ஜெயமோகன் பதிவு: பூன் முகாம் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. (௲௱௭ – 1107)

தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் உழைப்பில் வந்தவற்றைத் தனக்குரியவர்களுடன் பகிர்ந்து உண்ண வரும் மாபெரும் மகிழ்ச்சி, ஆசான் இடத்தில் முரண்டு தெளிவாகும்போதும் கிடைக்கும்.

இந்தக் குறளை வைத்து ஜெயமோகன் சந்திப்பான பூன் முகாம் கட்டுரையைத் துவங்கினேன்.

மூன்று நாளும் எப்படி இப்படி பம்பரமாக சிந்திக்கிறார்! எல்லாவற்றையும் எப்படி நினைவகங்களில் இருந்து பொருத்தமாகத் தேர்ந்தெடுத்து சந்தர்ப்பத்திற்கேற்ப கனகச்சிதமாகக் கொடுக்கிறார்!! அணுகுவதற்கு ஆர்ப்பாட்டமில்லாமல், வயது வித்தியாசம் பாராமல் கேள்விகளின் அறியாமையை நக்கலிடாமல், எவ்வாறு உண்மையாக, காத்திரமாக, அறத்துடன் உங்களுக்கேற்ப விளக்க முடிகிறது!!!

ஒவ்வொரு முறை அவரை சந்திக்கும் போதும் வரும் ஆச்சரியங்கள்தான். இந்த முறையும் தொடர்ந்தது. ஆஸ்டின் சௌந்தர், இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம், தேயிலை மணக்க காபி போட்ட மகேஸ்வரி, உபசரிப்பு முத்து காளிமுத்து, பவா செல்லத்துரையின் செல்லக்குட்டி பிரகாசம், தத்துவவியலாளர் விவேக், மேய்ப்பர் சிஜோ – விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் ஒவ்வொருவராலும் விழா அமர்க்களமாகியது

எனவே, முடிவில் கம்பரின் இந்தப் பாடல் பொருத்தமாக பட்டது:

”எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே.
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ”

அந்நகரில் வாழ்பவர்கள் எல்லோரும் கல்வி. பொருள் ஆகிய எல்லாச் செல்வமும் அடைந்திருப்பதாலே, அந்த நகரத்திலே இல்லாதவரும் இல்லை. உடையவர்களும் இல்லை. இப்பாடல் அந்நகரத்தவரின் அறிவுப் பெருக்கத்தையும். செல்வச் சிறப்பினையும் தெரிவிக்கிறது. அங்குக் கற்றவர்-கல்லாதவர் என்ற வேறுபாட்டையோ.; செல்வர்,
வறியவர் என்ற வேறுபாட்டையோ காண இயலாது என்பது கருத்து.

“பையணைப்‌ பஃறலைப்‌. பாந்தள்‌ ஏந்திய
மொய்ந்நிலத்‌ தகளியில்‌: முழங்கு: நீர்நெயின்‌
வெய்யவன்‌ விளக்கமா மேருப்‌ பொன்திரி
மைஅடுத்‌ தொத்தது மழைத்த வானமே”

(உரை): ஆதிசேடன்‌ தாங்கும்‌, இந்த நிலமே-அகலாகவும்‌; கடலே நெய்யாகவும்‌, மேருமலை திரியாகவும்‌, ஞாயிறு.விளக்காகவும்‌. அமைந்திருக்க, : அந்த விளக்குப்‌ புகையினால்‌, வானம்‌ இருண்டது. போன்று வானத்தில்‌ முகில்‌ மூட்டம்‌ காணப்‌ பட்டது.

மேகமூட்டம் என்பதை விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் என நினைக்கிறேன். அமெரிக்கத் தமிழர் கடல்நீர்; அதில் அகல் விளக்கின் குழிவில், இலக்கியத்தை விரும்புவோர் என்னும் நெய்யினை சிக்கெனப் பற்றிக் கொண்டு பூன் மலை என்கின்ற பொன்திரி கொழுந்து விட்டெரியவே அதிலிருந்து கிளம்பிய சிந்தனை மூட்டமே மேகமூட்டம் எனலாமா?

அதன் தொடர்ச்சியாக திசையைக் காண்பிக்கும் கொல்லன், அந்த மேகக்கூட்ட மழைக் காலத்துக் கரிய மேகமாகிய கரிக் குவியலில் வாடைக் காற்றாகிய பெரிய ஊதுலைத் துருத்தியின் வலிமையைக் கொண்டு ஊதி, மின்னல் நெருப்பெழச் செய்து வெளிப்படுத்துகினற கொல்லன்பட்டரையாகப் பார்க்கிறார் கம்பர்:

“மாதிரக் கருமகன் மாரிக் கார்மழை
யாதினும் இருண்ட விண் இருந்தைக் குப்பையின்
கூதிர் வெங்கால் நெடுந் துருத்திக் கோள் அமைத்து
ஊது வெங்கனல் உமிழ் உலையும் ஒத்தவே.”

இந்த மாதிரி எல்லாம் வெம்மையான நெருப்புச் சுடர்கள் பொறி பறக்கும் என எண்ணி என்னுடைய கம்பளிச்சட்டையை கழற்றி விட்டு ஒயிலாகக் குளிரில் நின்றிருந்தேன். உஷ்ணம் மூளைக்குள் அனலாக தகித்தாலும் நெஞ்சில் கபம் தங்கி ஜலதோஷம் பிடித்துக் கொண்டது. அடுத்த முறை மறக்காமல் தலைக்கு குல்லா, காதுக்கு மஃப்ளர், கழுத்துக்குப் போர்வையுடன் பவ்வியமாகச் செல்ல வேண்டும்.

அறிவுப்பூர்வமான தருக்கத்திற்கும், எதார்த்தத்திற்கும் — இடையே உள்ள உறவை ஜெயமோகனின் மொழியில் அவரின் நூல்களின் வாயிலாகவும் சொற்பொழிவுகளின் மூலமாகவும் அன்றாடப் பதிவுகளின் வழியாகவும் நுழையலாம். எனினும், மொழி என்பது பேசப்படுவது. அந்த மொழியை அவரின் நேரடி பிரவாகமாக, ஊற்றாகக் கிடைப்பதற்கு இந்த பூன் முகாம் அரிய வாய்ப்பு.

வாழ்க்கையின் மிகப்பெரிய கேள்விகளுக்கு தத்துவம் நுண்ணறிவை வழங்க முடியுமா? அதை வெளிப்படுத்த மொழியின் எல்லை என்ன? மீமெய்யியலும் நெறிமுறைகளும் வெறும் முட்டாள்தனமான பேச்சுதானா? இவற்றை நேரே எதிர்கொண்டு அதற்கான பதில்களை உணர்த்தும் பேச்சு, இந்தச் சந்திப்பின் உச்சகட்டம். அவர் அர்த்தமுள்ள மொழியின் எல்லைகளை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டு, உணர்வை முட்டாள்தனத்திலிருந்து பிரிக்க மெய்யியலை வாயிற்கதவாக்கும் விரிவுரையைத் தந்தது — விடையில்லா வினாக்களுக்கு விவாதங்களை உள்ளுக்குள் புலப்பட வைத்த தருணம் ஆகி நிறைந்து நிற்கிறது.

சென்ற முறை வந்தவர்களைப் பற்றிய விரிவான பதிவை, ஒவ்வொருவரைப் பற்றிய சிறு குறிப்பையும் எழுத முடிந்தது. இந்த முறை (கிட்டத்தட்ட) அத்தனை பேரும் மீண்டும் வந்தது ஜாக்பாட். நீண்ட கால உறவுகளை, பால்ய காலத் தோழமைகளை மீண்டும் காணும் சந்தோஷம். சென்ற வருடம் ஐம்பது என எல்லை வைத்திருந்தார்கள். இந்த வருடம் எழுபது. அந்த எண்ணிக்கையும் சட்டென்று நிரம்பி காத்திருப்பு பட்டியல் நிரம்பி வழிந்தது. அந்த எழுபதில் ஒருவராக இடம் கிடைத்தது மகிழ்ச்சியைத் தந்தது.

சென்ற ஆண்டு பதிந்தது:

ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்திருந்தார்கள். விமானம் வரும் நேரம் பார்த்து, ஒத்த காலத்தில் வந்து சேர்பவர்களை வாசஸ்தலத்திற்கு அழைத்துச் செல்லும் கார்கள்; வேளா வேளைக்கு உணவு, காபி, டீ, சிற்றுண்டி; அனைவருக்கும் சௌகரியமான ஓய்வெடுக்கும் வசதி; பக்கத்து பக்கத்தில் குடில்கள்; ஆசானுடன் அதிகாலை முதல் பின்னிரவு நள்ளிரவு வரை நேரம் கழிக்கும் வாய்ப்புகள்; விடிய விடிய நட்புகளுடன் அளவளாவும் தனிமை – சென்ற ஆண்டைப் போலவே இவ்வளவு சிறப்பாக செய்து முடித்திருக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் ஒத்த மனதுடன் போட்டி போட்டுக் கொண்டு நிகழ்ச்சியை ஜமாய்த்தார்கள்.

இந்த மாதிரி மாநாடு என்றால் அதற்கான பேச்சாளர்கள் அதிமுக்கியம். ஒவ்வொருவரும் காத்திரமாக தயாரித்து வந்திருந்தார்கள். கச்சிதமாகப் பேசினார்கள். இத்தனை பரந்துபட்டத் தலைப்புகள் ஆயிற்றே! எவ்வாறு பேரவையில் எல்லாவற்றையும் அகல உழப் போகிறார்கள்? மீண்டும் கருத்தரங்கை களை கட்ட வைப்பார்களா? என்னும் அச்சம் இல்லாவிட்டாலும், சென்ற ஆண்டு மாதிரியே சுவாரசியமாகவும் ஆழமாகவும் நயமாகவும் கலந்தாய்வார்களா என்னும் முன்னுதாரணம் சற்றே நிழலாடிக் கொண்டிருந்தது. இந்த முறையும் புடமிட்ட பொன் ஆக ஜொலிக்க வைத்தார்கள்.

எல்லோருக்கும் நன்றி. ஒருவருக்காகக் கூடுகிறோம். அவரின் நிழலில் தழைக்கிறோம். அடுத்த சந்திப்பை எதிர்நோக்குகிறோம்.

“எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே.
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ.”

மேலும்:

வனபோசனம்

சென்ற மாதம் லண்டன் சென்ற வர நேரம் வாய்த்தது.
போன சமயத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக #சொல்வனம் பதிப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் பிரபுவையும் கிரியையும் சந்திக்க வாய்ப்பும் அமைந்தது.
அலுவல் நெருக்கடியினாலும் கடைசி நிமிட திட்டமிடலினாலும் சிவாவினால் தலை காட்ட இயலவில்லை.
அவருக்காக இன்னொரு தடவை இங்கிலாந்து போக வேண்டும்.

வழக்கம் போல் சுவாரசியப் பேச்சு.
நிறைய இலக்கிய அரட்டை.
கொஞ்சம் போல் சொந்தக் கதை.

ஒரு தசாப்தம் முன்று சென்றிருந்தபோது ரதசாரதியாக கையில் குழலுக்கு பதில் ஸ்டியரிங் வளையத்தைப் பிடித்து விமானதளத்தில் இருந்து அழைத்துச் சென்ற கிரியின் வீட்டிற்கு சென்று சுவையான தமிழக சிற்றுண்டிகளை வெட்ட முடிந்தது.
இந்த தடவை பிரபுவின் வீட்டிற்கு செல்ல முடிந்தது. இரு வால் பெண்கள். படு சுட்டி. இங்கிலீஷ் டீ. வாயில் கரையும் இனிப்புகள்.

Jeyamohan’s Stories of the True : Translated from the Tamil கொண்டு வந்திருந்தார் கிரி.

Solvanam முன்னூறாவது இதழ் குறித்து ஆக்கபூர்வமான ஆலோசனையை முன்வைத்தார்.

நாள் முழுதும் உழைத்து, பேசிக் களைத்த சோர்வு தெரியாமல் உற்சாகமாக விவாதித்து, ஆரோக்கியமான விஷயங்களை முன்னெடுத்து, நான்கு மணி நேரத்திற்கும் மேல் என் தர்க்கங்களுக்கு செவி மடுத்த பிரபுவிற்கும் கிரிக்கும் நன்றி!

பூன் கேம்பிற்கு உள்ளாவது ஆங்கிலக் கதைகளை வாசித்து விட வேண்டும்.

Ante Sundaraniki: அன்டே சுந்தரினிகி (அடடே சுந்தரா)

கலைத்துப் போட்ட மாதிரி போகும் திரைக்கதை;

பிராமண குடும்ப சாஸ்த்ரோப்தங்களைக் கிண்டல் செய்தும் ‘நம்பினால் நடந்துவிடுமோ?’ என சந்தேகிக்கும் கரு;

மலையாளத் திருமணமும், படகு வீட்டில் அந்தி சாயும் வேளையில் பொன்னிற வானத்தை மல்லாந்து பார்த்தபடி நதியோடு மிதக்கும் ஏகாந்தமான காட்சியமைப்பு;

முப்பதாண்டுகள் கழித்து அசப்பில் ‘மௌன ராகம்’ ரேவதியும் கார்த்திக்கும் எட்டிப்பார்க்கும் வசனம்;

கிறித்துவத்தில் கருக்கலைப்பை எவ்வாறு பார்ப்பார்கள் என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் உணர்த்தல்;

’அலைகள் ஓய்வதில்லை’ ஆர்ப்பாட்டத்திற்கு எல்லாம் அப்புறம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என கடந்து போகும் மதம் பார்க்காத காதல்;

வெறுமனே காதல் கதையாக இல்லாமல், அமெரிக்கா அனுப்பும் கணினி நிறுவனம்; அந்தக் குழுமத்தின் தலைவர்; கூட வேலை பார்க்கும் மேலாளர் ஆக அனுபமா பரமேஸ்வரன் (என்ன லட்சணம்!)

தெலுங்குப் பெயர்களின் நீளம்; விளம்பரத்திற்கு நிதி ஒதுக்காமல் தன் சிப்பந்திகளையே நடிக்க விடும் அலுவல் நுட்பம்; ஹோமங்கள், யக்ஞங்கள், யாகங்கள், பரிகாரங்கள்; தர்ப்பையை நாக்கில் பொசுக்கும் கண்டுபிடிப்புகள்

படத்தில் ஏதோ இருக்கிறது. அந்த இயக்குநர் விவேக் ஆத்ரேயாவின் போன படமும் இப்படித்தான். குழப்படியாக குப்பாச்சுவாக இடியாப்ப லிங்க்வீனி பாஸ்டா சிக்கலாக, புதுமையாக சுவாரசியமாக இருக்கும்.

ஆன்டி  சுந்தரினிகி – வெள்ளித்திரையில் ஏன் ஹிட் ஆகவில்லை?

நிலையியற் பொருளும் இயங்கியற் பொருளும்

சொல்வனம் கலைமகள் நடனம் காண… – சொல்வனம் பதிவைப் படித்த பின்…

Pigeons_Food_Humans_Ants_Pick_Eat_Throw_Snacks_LeftOvers_Animals_Birds

இதில் அஜிதன் என்பதற்கு பதில் மனதின் குரல் அல்லது alter-ego என்று வைத்துக் கொள்ளுங்கள். ஏரியை மனிதனின் புத்தி. அதில் மின்னும் நட்சத்திர பிரதிபலிப்புகள் அண்டம். அதன் அருகே உள்ள மின்விளக்கு நகரம் ரத்தக்கொதி நிலை. நீலம் என்பது இரவில் கருமையில் தெரியாத பகலின் நீலவெளி. ஜெயம் (வெற்றி) என்பது இருட்டிலும் நீலத்தைப் புணரும் அண்டம்.

மேற்கண்டவாறு பலவிதங்களில் இந்தக் கதையை ஆராயலாம்.

இந்தக் கதையில் பல உச்சநிலைகள் இருந்தாலும், இரண்டு பிரயோகங்களை மட்டும் பார்ப்போம்:

1. ”ஹீரோக்கு கறி வாங்கப் போவோம். பெரும்பாலும் இளம் கன்று. அது ஆண் என்பதால் கறிக்கு விற்கப்படும். அதன் கறியே கிடைக்கும்.”

இங்கே ரஜினி, விஜய், அஜீத் போன்ற ஹீரோக்களுக்கு ரசிகர்கள் எப்படி அடிமையாகிறார்கள் என்பது இங்கே சுட்டப்படுகிறது. ஹாலிவுட்டில் கறுப்பர்களுக்கு எந்த விருதும் தராமல், அவர்களின் பணத்தை மட்டும் குறிவைக்கும் ஆஸ்கார் விருதுகளை சுட்டுகிறார். அம்மாவும் கலைஞர் கருணாநிதியும் கேப்டன் விஜய்காந்த்தும் நடத்தும் அரசியலைச் சாடுகிறார்!

2. “கூகை. ஆந்தை இனத்தைச் சேர்ந்தது. ” என்றுவிட்டுத் தொடர்ந்தான்.” அதன் எடையைப் பாருங்கள் ஆனால் அது பறக்கும் போது, காற்று கூட அசையாது, சிறகுகள் எந்த ஒலியும் எழுப்பாது”

இதற்கு முந்தையப் பத்தியில்தான் குல தெய்வ வழிப்பாட்டில் இருக்கும் தத்துவப் பார்வை அற்ற வெற்றுச் சடங்கில் மெய்மை தேடும் பயணம் பற்றி சொல்லியிருந்தார். அதாவது நாம் ஆந்தை போல் இரவில் விழித்திருக்கிறோம். ஃபேஸ்புக் பார்க்கிறோம். செய்தியைக் கேட்கிறோம். எல்லாம் எடையில்லாதவை. அவற்றை அனுபவிக்கும்போது நிஜவுலகின் புரிதல் எட்டாது. விஷயம் தெரியாமல், விளைவுகள் ஏற்படுத்தாமல் பறக்கிறோம்!

ஜெயமோகனின் எழுத்துக்களுக்குத்தான் இப்படி வியாக்கியானம் எழுத முடியும். ஆனால், அவர் சம்பந்தமேயில்லாத பதிவொன்றுக்கு இவ்வாறு எழுதமுடிவது எழுத்தாளரின் சாதனை.

நகரேஷு நியு யார்க்

பிரையன் ஈனோ இங்கே கதை சொல்கிறார். அந்தக் கதையை நான் இவ்வாறு என் மொழியில் சொல்லிப் பார்க்கிறேன்:

1978ஆம் வருடம். நியு யார்க் நகரத்தில் இருந்தேன். அரசல் புரசலாக எனக்கு அறிமுகமாகியிருந்த அந்தப் பணக்காரரின் புதுமனைப் புகுவிழாவிற்கு அழைப்பு வந்திருந்தது. குண்டும் குழியுமான சாலைப் பயணம். வாடகைக் கார் ஓட்டுனர் என்னை சந்தேகாஸ்தபமாகப் பார்த்துக் கொண்டேதான் வண்டியோட்டினார்.  போகும் வழியி்ல் வீட்டின் வெளிச்சுவர்களில் விவகாரமான மொழியில் கரியினால் மிரட்டப்பட்ட கிறுக்கல்களும் காணக்கிடைத்தது.

இறுதியாக அந்தப் பாழடைந்த பழைய பின்னி மில்ஸ் கட்டிடம் போல் சிதிலமடைந்த கோடவுனில் வண்டியை நிறுத்தினார். அதன் வாயிற்படிகளில் இருவர் மயங்கி உலகமறியாத போதையில் கிடந்தனர். தெருவில் வேறு அரவமே இல்லை.

”நாம தப்பா வந்துட்டோம்னு நெனக்கிறேன்”, என்று ஈனஸ்வரத்தில் சொல்லிப் பார்த்தேன்.

அவர் சரியான விலாசத்திற்குத்தான் கொண்டு வந்து சேர்ந்த்திருந்தார். என்னுடைய நண்பன் உற்சாகமாகக் கூவினான், “மேல் மாடி!!”. எனக்கு இன்னும் கொஞ்சம் நம்பிக்கை பாக்கி இருந்தது. அவன் விளையாட்டுப் பையன். அழைப்பு மணியை அடித்துவிட்டு, திறக்கும்போது, “எல்லாம் நிஜம்னு நம்பிட்டியா…” என்று வேடிக்கை மாயம் செய்யப்போகிறான் என கற்பனை செய்துகொண்டேன்.

மின்தூக்கி க்ரீச்சிடும் அபாய ஓசையுடன் அசைந்தாடி அதல பாதாளத்தில் தள்ளும் பிரக்ஞையுடன்  வந்து சேர்ந்தது. லிஃப்டில் இருந்து வெளியே வந்தால், தகதகவென இழைக்கப்பட்ட கோடானுகோடி மினுக்கும் மாளிகை அரண்மனைக்குள் கால் வைத்தேன்.

எனக்கு விளங்கவில்லை. இவ்வளவு படோடாபமாய், இத்துணை பணம் வாரியிறைத்து, இந்த மோசமான பகுதியில் எதற்காகக் குடியேற வேண்டும்? விருந்துபசரிக்கும்  அவனின் குடும்பத்தலைவியிடம் கேட்டே விட்டேன்: “உங்களுக்கு இந்த டஞ்சன் பிரதேசம் பிடித்திருக்கிறதா?”

“நான் குடியிருந்த வீடுகளிலேயே, இந்த இடம்தான் பெஸ்ட்!

“ஆனால், வெளியில் பார்த்தால் பயமாக இருக்கிறதே?”

“ஓ… பேட்டையைச் சொல்கிறீர்களா! அது வெளியில் அல்லவா இருக்கிறது!?!”

நியு யார்க் என்றால் இந்த மனநிலைதான். இந்த மனோபாவம்தான் என்னை மீண்டும் மீண்டும் நியு யார்க் நகரத்திற்கு இழுக்கிறது. எல்லாமே கொண்டாட்டம்; எதிலும் வேகம்; இப்பொழுதைய தருணத்தைக் கொண்டாடுவோம்; நாளை நம் நாளோ… நமன் நாளோ!

New_York_Pigeon_Sky_Towers

இந்த தடவை நான்கு நாள் நகரத்தில் கழிக்க முடிந்தது.

  1. முதல் நாள்: விட்னி அருங்காட்சியகம்
  2. இரண்டாவது நாள்: செண்ட்ரால் பார்க்
  3. உலக வர்த்தக மையம் + 9/11 நினைவுச் சின்னம்
  4. டைம்ஸ் சதுக்கம் & அலாவுதீனும் அற்புத விளக்கும்

நான்கையும் பற்றி தனித்தனியே எழுத வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் இயக்குநர் இளமுருகுவையும் எழுத்தாளர் அரவிந்தன் கன்னையனையும் சந்தித்ததையும் நண்பர் டைனோ மற்றும் அவரின் மனைவியின் அறுசுவை விருந்தோம்பலையும் அவர்களின் உபசரிப்பையும் டைனோ வீட்டில் உண்ட நளபாக விருந்தையும் விவரிக்க வேண்டும்.

இன்ஷா நியு யார்க்.

The Unlikely Pilgrimage of Harold Fry by Rachel Joyce

The Unlikely Pilgrimage of Harold Fry_harolds-walk

The Unlikely Pilgrimage of Harold Fry சமீபத்தில் வெளியான நாவல். புக்கர் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த புத்தகம்.

ரொம்ப வருட காலம் சந்திக்காத இளமைக்காலத் தோழிக்கான கடிதத்தை தபாலில் போடாமல் நேரில் கொடுப்பதுதான் கதை. நேரில் சென்று கடிதத்தைக் கொடுக்கும்வரை நோய்வாய்ப்பட்ட நாயகி பிழைத்திருக்க வேண்டும். அதற்கு நிறைய நம்பிக்கை தேவை. அன்றாட அல்லாட்ட வாழ்வில் இருந்து விடுதலை அடையும் மனநிலை தேவை. போகும் வழியில் தொலைந்து போகாமல் பயணிக்கும் லட்சியம் தேவை.

திடீரென்று ”அமூர்” திரைப்படம் நினைவிற்கு வந்தது. வயதான தம்பதிகளின் கதையை பிரென்சு படம் சொன்னால், இந்த நாவல் கைக்கூடாத காதலை வயதானவர்கள் நினைத்துப் பார்ப்பதை சொல்கிறது.

ஓடிக் கொண்டே இருக்கும் ஃபாரஸ்ட் கம்ப் கூட நினைவிற்கு வருகிறார். அதே மாதிரி The Unlikely Pilgrimage of Harold Fry கதையிலும் வழிப்போக்கர்கள் வருகிறார்கள்.

க்வீனியைக் காப்பாற்ற ஹாரோல்ட் நடப்பது உலகளாவிய கவனம் பெறுகிறது. ஃபேஸ்புக் பக்கம் எல்லாம் துவங்கி பலர் சேர்கிறார்கள். ஹாரொல்ட் போகிற வழியில் நாயகனையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். கொஞ்ச நேரம் கழித்து, நாயகன் ஹாரோல்டையே கழற்றியும் விடுகிறார்கள்.

கணவனைக் காணாத மனைவியும் காரை எடுத்துக் கொண்டு பயணத்தில் இணைகிறார். தான் ஆரம்பித்த குறிக்கோளில் இருந்து, தன்னையே விலக்குவது, ஹாரொல்டுக்கு பெரிய மகிழ்ச்சி தருகிறது.

திமிங்கிலமும் எழுத்தாளரும்: பயணச் சிக்கல்

New_England_Aquarium_Whale_Watch

கோடை காலத்தில் பாஸ்டனின் அட்லாண்டிக் கடலில் நிறைய திமிங்கிலங்களைக் காணலாம். ஒரு மணி நேர அளவில் கப்பலில் கடலுக்குள் பயணித்தால், குட்டியுடன் விளையாடும் தாய், கூட்டமாக இரை பிடிக்கும் இளைஞர் கூட்டம் என விதவிதமாகப் பார்க்கலாம். அடைத்து வைக்கப்பட்ட மீன்காட்சியகத்தில் தரிசிக்காமல், பரந்த வெளியில் சுதந்திரமாக நீந்தும் திமிங்கிலங்களை இயற்கையான பரப்பில் காணலாம்.

பி.ஏ.கே. பசிஃபிக் சமுத்திரத்தில் விதவிதமான திமிங்கிலங்களைப் பார்த்த காட்சிகளை ஒளிப்படமாக இட்டிருந்தார். பாஸ்டனுக்கு வரும் பிரபலங்களுடன் இந்தப் பயணம் செல்வது குதூகலமான நிகழ்வு. ஆசுவாசமாக மூன்று மணி நேரம் உரையாடலாம். வெளியே விரிந்திருக்கும் எல்லையற்ற நீர்ப்பரப்பின் அமைதியோடும், வெயில் கொளுத்தினாலும் கடலின் குளுமையாலும், செல்பேசி இடைவேளிகளும் இடையூறுகள் தவிர்க்கப்பட்டதாலும் ரம்மியமான உல்லாசமான நேரம். சூரியவொளி புகாத ஆழ்க்கடலில், தன்னுடைய இரையின் இருப்பிடத்தைத் துல்லியமாக அறிந்து அவற்றைப் பிடிக்க எதிரொலி உத்தியை திமிங்கலங்கள் பயன்படுத்தும். அதே போல், வந்திருக்கும் எழுத்தாளர்களும் தங்களுடைய எழுத்துக்கான ’குரலை’ எவ்வாரு அறிந்து கொண்டார்கள் என்று அறிந்துகொள்ள ஏற்ற தருணமாக இந்தப் பயணங்கள் அமையும்.

திமிங்கிலம் காணச்செல்லும் இந்தக் கடல் பயணத்தின் முதல் சிக்கல் – எல்லோரும் வாந்தி எடுப்பது. அலைகளைக் கிழித்துக் கொண்டு எதிர்க்காற்றில் கப்பல் செல்லும். அது எதுக்களிக்கும். கோபம் எழும்போது தேவையில்லாத கதைகளை எப்பொழுதோ வாசித்திருந்த இலக்கியப் புத்தகங்களில் இருந்து நினைவுகூர்வேன். அதற்கொப்ப, எப்பொழுதோ உட்கொண்ட உணவை வெளிக்கொணரும். கப்பல் எங்கும் ஓக்காள உமிழ்வுகள்.

இன்னொரு சிக்கல் திமிங்கிலத்தின் அபான வாயு. கருவாட்டு வாயால் மூச்சுவிட்டால் கூட பொறுத்துக் கொள்ள முடியாத மீன்வாடை. திமிங்கிலத்தின் நாக்கில் ஐம்பது பேர் அமர்ந்து செல்லலாம். ஐம்பது பேரும் ஒரே சமயத்தில் குசு விட்டால் எப்படி இருக்கும்?

இப்பொழுது நேற்று நடந்த புதிய பிரச்சினை. வழக்கம் போல் அந்தப் பயணமும் கடலுக்குக் கிளம்பி இருக்கிறது. ஆனால், கார்னிவல் நிறுவனத்தின் கப்பல் பயணங்கள் போல் நடுக்கடலில் சிக்கிக் கொண்டுவிட்டது. சேராத இடம் சேர்ந்து கப்பலின் வடம் பாஸ்டனுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களுடன் மாட்டிக் கொண்டது. ”அரை மணி நேரத்தில் சரியாகிவிடும்; ஒரு மணி நேரத்தில் கரை திரும்பிடுவோம்” என்று சால்ஜாப்பு சொல்லியவர்கள், கடைசியாக இரவு முழுக்க முழுக்க கடலிலேயே தத்தளித்து இருக்கிறார்கள்.

இந்தப் பதிவில் எந்தக் குறியீடும் எல்லை.

சமீபத்திய புது பத்திரிகைகள்: காத்திருக்கும் நேரம்

விமான நிலையத்தில் காத்திருப்பது வேலையத்த வேலை. ஆனால், காத்திருக்காமல் இருக்க முடிவதில்லை.

பிரியமானவர் வருகைக்காக சில சமயம். நாம் விரைவாக சென்றுவிட்டால், மனதுக்கு இனியவரின் விமானமும் சீக்கிரம் வந்து சேர்ந்துவிடும் என்னும் நம்பிக்கையில் சென்று பார்க்கிறேன்.

வீட்டில் இருப்பவர்களை துரத்துவதற்காக சில சமயம், சீக்கிரமே கிளம்பி விமான நிலையம் சென்று விடுகிறோம். இன்னும் கொஞ்ச நேரம்தான்… பொறுத்துக் கொள் என்று மனதை சமானப்படுத்தி, சண்டை சச்சரவு தவிர்க்க இந்த அவசரம் பயன்படுகிறது.

நடுத்தர வர்க்கம் எப்பொழுதுமே பேருந்து நிலையத்திற்கோ இரயில் பயணங்களுக்கோ முந்தின நாளே போய் காத்திருக்கும் வழக்கம் உடையது. அதன் எச்சங்களும், விமான நிலைய வருகைக்கு கால்கோள் இட்டு, வேரூன்றி நிற்கிறது. கொஞ்சம் முன்னாடி போனால், முந்தின ஃப்ளைட்டிலேயே இடம் கிடைத்தாலும் கிடைக்கும்.

ஒரு மாமாங்கம் முன்பு ஜார்ஜ் புஷ்ஷும் ஒசாமா பின் லாடனும் செய்த கைங்கர்யத்தால் பதினைந்து நிமிடம் முன்னாடி போய் வானூர்தியில் உட்கார்வது எல்லாம் மலையேறிப் போயாச்சு.

இந்த மாதிரி ஊருக்கு முன்னாடியே கிளம்பி காத்திருக்கும் நேரத்தில் புத்தகக் கடையை மேய்வது ரொம்பவே பிடித்த விஷயம். மேக்சிம், எஃப்,எச்.எம், ஸ்டஃப் எல்லாம் வா…வா… என்று கிளுகிளுப்பூட்டினாலும், புதிதாக என்ன பிடித்திருக்கிறது என்று மேய்ந்ததில் http://www.complex.com/ & http://www.wallpaper.com/ ஈர்த்தது.

வடிவமைப்பு, செய்நேர்த்தி, உள்ளடக்கம், சொந்த சரக்கு, வித்தியாசம் காட்டி அடையாளப்படுத்துதல் என்று பல விதங்களில் கவர்ந்தது.

வானிலே மிதக்கும் வலை

Mi-Fi என்னும் Personal Network படித்தீர்களா? இல்லாட்டி சத்யராஜ்குமாரின் ஒளி வட்டம் « இன்று – Today வரைக்கும் ஒரு எட்டு போயிட்டு வாங்க.

வந்தாச்சா?

இப்பொழுது இணையம் விமானத்திலும் கிடைக்கிறது. இதுகாறும் GoGo எனப்பட்டால், பலான பார்களில் சப் குச் துறக்கும் பெண்டிரைக் குறித்தது. அவ்வாறு இல்லாமல் அமெரிக்காவுக்குள் பறக்கும் டெல்டா போன்ற வானூர்திகளுக்குள் கோகோ கொண்டு வலை மேயலாம்.

என்ன தேவை?

உங்களின் மடிக்கணினி வைத்துக் கொள்ளலாம். அல்லது ஐ-ஃபோன், ப்ளாக்பெரி போன்ற Wi-Fi திறன் கொண்ட செல்பேசியாக இருக்கலாம். விமான நிலையம் மட்டுமல்ல; விமானத்தினுள்ளும் இனி Wi-Fi hotspot கொண்டாட்டம் தொடரும்.

செய்தி: Aircell (Delta’s partner), Panasonic, and Row44: “Several years after withdrawing from now-defunct Connexion by Boeing’s satellite-based Internet project, American Airlines, Delta Air Lines and United Airlines have all now turned to Aircell for air-to-ground (ATG) connectivity.”

மூன்று மணித்துளிகளுக்கு மேல் நேரமெடுக்கும் விமானப் பயணம் என்றால் $12.95. இல்லை சொல்ப தூரம்தான் என்றால் பத்து டாலர். (அதாங்க 9.95 வெள்ளிகள்)

செல்பேசி கொண்டு மேய்பவருக்கு தடாலடி விலைக்குறைப்பு – $7.95.

தமிழ்த் தளங்களுக்கு செல்லத் தடையேதுமில்லை. ஆனாக்க, ஸ்கைப் (VoIP services like Skype) கொண்டு பேச இயலாது. செக்ஸ் வலையகம் செல்வதற்கு தடா. பக்கத்து சீட்டுக்காரர் உங்களைப் பார்த்ததால் கிடைத்த மன உளைச்சலுக்கு வழக்கு தொடுத்தால், ஏற்கனவே திவாலாகும் நிலையில் உள்ள யுனைடெட் ஏர்லைன்ஸ், மொத்தமாக மூழ்கிவிடாதா?

விமானத்தில் மூணு டாலர் கொடுத்து உருளை வறுவல் கொறிப்பதற்கு பதிலாக, இணைய வறுவல் நொறுக்க தயாரா?

காதலர் தினக் கதைகள்

Happy Valentines Day!

அன்பர் தினத்திற்காக என்ன வாங்கிக் கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டே விலுக் விலுக்கென்று நடந்தபோதுதான் அது நடந்தது. நடந்தால்தான் பரவாயில்லையே! கால் வழுக்கி கீழே உடல் விழ, வலது கை அதிரடியாகத் தாங்கி தோள் கொடுத்தது.

சமாளித்து பயணத்தைத் தொடர்ந்தேன்.

நண்பரிடமும் இந்த வீர சாகச விழுந்தெழுந்த கதையை சொன்னேன். எங்களுக்கு அறிமுகமான இன்னொரு நண்பருக்கு நிகழ்ந்ததை விவரிக்க ஆரம்பித்தார்.

மனைவி ஊருக்கு புதுசில்லை. என்றாலும் ஆனைக்கும் அடி சறுக்கும் அல்லவா? பனியில் தவறி விழுந்திருக்கிறார். சுற்றும் முற்றும் எவரும் பார்க்கவில்லையே என்று உறுதி செய்துவிட்டு அசால்ட்டாக அப்படியே விட்டும் விட்டார்.

இரண்டு வாரம் கழித்து தலைவலி, மண்டையிடி. மருத்துவரிடம் போனால் எம்.ஆர்.ஐ, ஸ்கேன் செய்து தலையில் கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. பனியில் விழுந்ததனால்தான் என்று டாக்டர்கள் சந்தேகிக்கிறார்கள்.

பனியில் பார்த்து நடந்து கொள்ளவும்.

~oOo~

முன்னே பின்னே புஷ் அப் செய்து மூன்று வருடமாவது ஆகிப் போயிருக்கும். ‘காக்கி சட்டை’ கமலாக ஒற்றைக் கை புஷ் அப் எடுத்த தோள் பட்டை வலித்துக் கொண்டிருந்தது.

காந்தாரி பரம்பரையில் வந்த மனைவி சும்மா விடுவாரா?

பார்வையற்ற திருதராட்டிரனுக்காக கண்ணைக் கட்டிக் கொண்டாள் காந்தாரி. கை வலியால் பாதிக்கப்பட்ட கணவனுக்காகவோ, என்னவோ!?

கார் கதவை சாத்தும்போது கையை வைத்து சாத்திக் கொண்டு விட்டாள். விரல் நகம் பெயர்ந்து உதிர, உதிரமும் கொட்டுகிறது. எனக்கு கால்கட்டு போட்டார்கள். அவளுக்கு இப்போது விரல்கட்டு.

பட்ட காலே படும்; லே ஆஃப் ஆன குடியே டவுன்சைஸ் ஆகும் என்று பெரியோர்கள் அன்றே பழமொழிந்து இருக்கிறார்கள்.

~oOo~

இந்த சம்பவத்தையும் மதிய உணவில் சம்பாஷித்தோம். இன்னொரு நண்பர் தன் அம்மாவிற்கு செருமனி நிகழ்த்திய கொடூரத்தை நினைவு கூர்ந்தார்.

லுஃப்தான்ஸா சென்னையில் இருந்து ஃப்ரான்க்ஃபர்ட் கொண்டுவிட்டிருக்கிறது. ஏழு எஸ்கலேட்டர், ஆறு செக்யூரிடி செக் முடித்துவிட்டாள் அவரின் அன்னை.

கடைசியாக லிஃப்ட்.

எலிவேட்டரில் பாய்வதற்காக தன் மெல்லிய கையை நடுவில் வீசிப் பார்க்க, லிஃப்ட் கதவு மூடிக் கொண்டு, விரல்களை பதம் பார்த்து விட்டது.

குருதி கொட்ட கொட்ட, முதலுதவி கேட்டிருக்கிறார். ‘விமான நிலைய ஊழியருக்கு அடிபட்டால்தான் ஃபர்ஸ்ட் – எயிட்; உங்களுக்கு நோ எயிட்’ என்று ஜெர்மானிய ஊழியர்கள் நிராகரித்துவிட்டார்கள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக ‘Defibrillator இருக்கிறது! வேண்டுமா?’ என்றும் கரிசனையோடு விசாரிக்கிறார்கள்.

கூடவே, இரண்டு பெரிய ஃபாரம்களை நீட்டி, கையெழுத்தும் கோரி இருக்கிறார்கள். கையொப்பம் இட்டால்தான், பாஸ்டனுக்குப் பறக்கும் விமானத்தில் ஏற முடியும். அதாகப்பட்டது, ‘உங்களுக்கு விமானத்தில் அடிபடவில்லை; அதற்கு முன்பே பாதிக்கப்பட்டு விட்டீர்கள்! எங்களுக்கும் உங்கள் உடல் சேதத்துக்கும் எந்தப் பொறுப்பும் கிடையாது!’

கைகுட்டை எடுத்து ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுத்து வலது கை இழந்த ஏழு மணி நேரப் பயணத்திற்கு பின் பாஸ்டன் வந்தவுடன் நேரே எமர்ஜென்சி சென்றிருக்கிறார்கள்.

‘உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்றுதானே வள்ளுவப் பெருந்தகை சொல்லி விட்டுப் போயிருக்கிறார். சேவை நிறுவனங்களுக்கும், விமான நிலையத்திற்கும், தொலைதூர பயணிகளுக்கும் விரல் நெகிழ்ந்தாலும் பொருந்தும் என்று சொல்லவில்லையே!

எனவே, லிஃப்ட்டுக்குள் நுழையும் அவசரத்தில் கையை நீட்டாதீர்கள். அதுவும் லுப்தான்சாவில் பயணித்து ப்ரான்க்பர்ட்டில் நீட்டவே நீட்ட வேண்டாம்.

~oOo~

மீண்டும் சொந்தக் கதைக்கே வந்து விடுவோம்.

வருத்தந் தரும்மெய்யுங் கையில்
    தழையும்வன் மாவினவும்
கருத்தந் தரிக்கும் நடக்கவின்
    றைய கழல்நினையத்
திருத்தந் தருளும் திகழ்கச்சி
    ஏகம்பர் சீர்க்கயிலைத்
துருத்தந் திருப்பதன் றிப்புனம்
    காக்கும் தொழிலெமக்கே.

எமக்குத் தொழில் ட்விட்டர் அடிப்பது, ப்ளாகில் பின்னூட்டம் இடுவது, விவாதத்தில் வம்பு தேடுவது என்று தேமேன்னு இருந்தவனை பாத்திரம் தேய்ப்பது, சமைப்பது என்று பொறுப்பு கூட்டினார்கள்.

ஆடலுடன் பாடல் போல் படத்துடன் பப்படம் பொரிப்பது எப்படி என்று எழுதியவரை கிண்டல் செய்ததன் கர்மபலனோ? டிஷ்வாஷர் போட்டால் உலகம் வெம்மையாகிறது என்று ஒப்பாரி கட்டுரை எழுதியதற்கான பழிக்குப் பழியோ? Frozen vegetables வாங்குபவரை ஃப்ரெஷ்ஷாக வாங்கி, கட் செய்தால்தான் சத்து என்று மிரட்டியதற்கான கை மேல் பலனோ? மினிமம் – ஒக்க கூட்டு, தோ கறி, மூன்று கோர்ஸ் இருந்தால் மட்டுமே பசியாறுவேன் என்று முனிசிரேஷ்ட வாழ்க்கையின் சாபமோ?

இரண்டு நாள் சமைத்தால் போதும். ஐந்தாண்டு வலைப்பதிந்த அனுபவமும் பத்தாண்டு இலக்கியம் வாசித்ததின் ஆய பயனும் ஒருங்கே சித்திக்கும்.

~oOo~

கல்யாணத்திற்கு முன் என்னுடைய சமையல் சம்பிரதாயமானவை. ஃப்ரென்ச் ஃப்ரைஸ் கொண்டு கறி செய்வோம். ஆனியன் ரிங்ஸ் சாம்பாரும் கிடைக்கும்.

கைக்குக் கிடைத்த பதார்த்தத்தைக் கொண்டு வழக்கமான சிஷ்ருஷைகளை அரங்கேற்றி சமையல் நடக்கும். எல்லாவற்றுக்கும் தாளித்துக் கொட்ட வேண்டும். சாம்பாரோ, ரசமோ, கூட்டோ — எதுவாகினும் கவலை வேண்டாம். எல்லாவற்றிலும் பெருங்காயம் முதல் சிக்கன் மசாலா வரை சகலமும் மிதக்கும்.

எது செய்தாலும் ஒரே ஸ்டான்டர்ட்; அதே டேஸ்ட். யார் நளபாகப் பொறுப்பெடுத்துக் கொண்டாலும் மாறி விடாத சுவை; சிம்பிள் சூத்திரம். எல்லாவற்றையும் போடு; நாலு கலக்கு கலக்கு. நிறைய காரம் போடு. இதுதான் ட்ரேட் சீக்ரெட்.

வந்த புதிதில் மனைவிக்கு இதை செய்து போட்டு மிரளவைத்ததுதான். இன்றளவிலும் ‘அவன் வெண்பொங்கல் எக்ஸ்பர்ட் ஆக்கும்!’ என்று செல்லமாய் வஞ்சப் புகழ்ந்து ஒதுக்கி வைத்திருக்க செய்தது.

‘இப்படித்தான் இருக்க வேணும் சமையலு’ என்று மைக்ரோ மேனேஜ் செய்து, அடுப்பங்கரையிலே மேற்பார்வையிட்டு, ஒவ்வொன்றையும் எப்படி பொறுமையாக பாதி சூட்டில் வைத்து வேக வைக்கவேண்டும் என்று பாலபாடம் எடுத்ததில் மனைவிக்கு சமையலே மறந்திருக்க வேண்டும்.

இப்பொழுதெல்லாம் மைரோவேவ் டின்னர் மாதிரி வருமா? இன்று பீட்சா சாப்பிடலாமா என்று மார்க்கெடிங் செய்து பார்க்கிறேன். சமையலை விட சந்தைப்படுத்தல் சுளுவானது.

~oOo~

சமைத்தேன் என்பதற்கான சாட்சியாக கீழே கொண்டைக்கடலை சாம்பார் கிடைக்கிறது. கூடிய விரைவில் ரெஸிபியுடன் சந்திக்கிறேன்.

kondai-kadalai-sambar-chick-peas-gravy-garbanzo-beans-recipes