மணி ரத்தினம் ஏன் பொன்னியின் செல்வன் சரித்திர புதினத்தைப் படமாக்கினார்? மூன்றாவது காரணம்: பாசிசம் அதன் வேர்களை அறிவொளியில் காண்கிறது.
யோஹான் வொல்ஃப்காங் வொன் கோயத் (Johann Wolfgang von Goethe) அமர்ந்த மரத்தடி ஜெர்மனியில் புகழ்பெற்றது. ஜெர்மானிய இலக்கியத்தில் இந்த கோயத் புலவருக்கு பெரிய இடம் கொடுத்திருக்கிறார்கள்.
யூதர்களைக் கொன்று குவிக்க பல வதை முகாம்களை நாஜிக்கள் கட்டினார்கள். அந்தக் கட்டிடங்களுக்கு அங்குள்ள பகுதிகளில் உள்ள எல்லா மரங்களையும் வெட்டி சாய்த்தார்கள். ஒரேயொரு மரத்தை மட்டும் விட்டு வைத்தார்கள். அந்த மரத்தின் நிழலில் அமர்ந்துதான் கோயத் தன்னுடைய கவிதைகளையும் காவியங்களையும் இயற்றினார். கோயத் என்ன எழுதினார் என்பதை நாஜிக்கள் மறந்து விட்டார்கள். கோயத் எழுத்தின் அர்த்தத்தை உணராமல் வெறும் நினைவுச்சின்னத்தை – கொலைகூடத்திற்கு நடுவாந்தரமாக குலப்பெருமையாக வைத்துக் கொண்டார்கள்.
இது போல் பொன்னியின் செல்வன் நாவல் என்ன சொல்கிறது என்பதைத் திரையில் கொணராமல், “சோழர்கள் நம் பெருமிதம்!” என்று நினைக்க வைக்க மணிரத்னம் கல்கியின் வரலாற்றுப் புனைவை சினிமாவாக மாற்றுகிறார். – இது மூன்றாவது காரணம்.
புஷென்வல்ட் (Buchenwald) கிராமத்தின் எல்லா மரங்களையும் வெட்டிச் சாய்த்திருந்தால் கோயத் அமர்ந்த மரமும் பத்தோடு பதினொன்றாகப் போயிருக்கும். சுஜாதாவின் “கரையெல்லாம் செண்பகப்பூ” மாதிரி… எந்த இயக்குநருக்கும் இலக்கிய கதையை வெள்ளித்திரைக்குக் கொணரத் தெரியாது என்று போயிருக்கும். ஆனால், லட்சக்கணக்கில் மக்களை அடைத்து வைக்க பயன்பட்ட முகாமின் முக்கிய இடத்தில் — கோயத் என்னும் பெரும்புள்ளியைக் கொண்டாட அந்தப் புலவரின் கருவாலி மரத்தை கூட்டாக இணைக்கிறார்கள். நாஜிக்களைப் பொறுத்தமட்டில், மரம் அழிக்க முடியாத அளவுக்கு மதிப்புமிக்கதாக இருந்தது.
இரண்டாம் உலகப் போரில் நடந்த குண்டு வெடிப்பில் அந்த மரம் இறக்கிறது. பட்டுப் போகிறது. தங்களின் பாரம்பரியத்தில் தாங்களே மண் வாரிப் போட்டுக் கொண்டதை இது உணர்த்துகிறது.
இந்த மரத்தைக் குறித்து கர்ண பரம்பரைக் கதை ஒன்றைச் சொல்லுகிறார்கள். இது இலையுதிர்க்கும் மரம். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் தன் இலைகள் அனைத்தையும் உதிர்த்து மொட்டை மரம் ஆகி விடும். அதன் பிறகு ஏப்ரல் மாதத்தில் துளிர்விட்டு பூப்பூக்கும். இந்த மரத்தை பார்க்கும் யூதக் கைதிகள், “இந்த மரத்தில் எந்த இளவேனிற்காலத்திலாவது மீண்டும் மொட்டுக்கள் மலராமல் இருக்கிறதோ, அப்பொழுதுதான் நமக்கு விடுதலை!” என விளையாட்டாகச் சொல்லிக் கொள்வார்கள். அதாவது, எப்போதும் நமக்கு சுதந்திரம் கிடைக்காது. வருடா வருடம் அது மீண்டும் மீண்டும் இலை உதிர்க்கும்; மீண்டும் மீண்டும் இலை மலரும்.
கை கூடா கனவு ஒரு நாள் நிறைவேறியது. விமானத்தில் போட்ட குண்டுத் தாக்குதலில் அந்த மரம் தீப்பிடித்து எரிந்தது. அதனால், அந்த வசந்த காலத்தில் மரத்தில் இலைகள் மீண்டும் மலரவேயில்லை. அது போல், பொன்னியின் செல்வன் கதையும் சிறைக்குள் பூட்டுண்டு இருந்தது. இன்று வெளியே வந்து சோழ வரலாறு பலரைச் சென்றடைந்துள்ளது.
“பொன்னியின் செல்வன்” கதை வாசித்து #PS1 பார்த்தவர்களை அந்த வதை முகாமில் சித்திரவதைக்குள்ளானவர்களாகப் பார்க்கலாம். பொ.செ.1 படம் எடுத்தவர்களை – நினைவுகூறப் பட வேண்டிய சரித்திரக் கதையைப் படமாக்குகிறோம் என்று சொல்லி புலவரின் பெருமையாக கருவாலி மரத்தை நடுக்கூடத்தில் கும்பிட்டவர்களாகப் பார்க்கலாம்.
அந்த மரம் போரின் இறுதியில் வெட்டப்பட்டது. இந்தக் கதை படத்தின் இறுதியில் சமாதி ஆகிறது.
இந்த மாதிரி நம் பாரம்பரியத்தை தமிழரின் பெருமையை இனத்தின் கலாச்சாரத்தை பல்லிளிக்க வைப்பது – – 3ர்ட் ரீசன்.
பத்து நாளுக்கு தினம் ஒரு காரணம் போட திட்டம். உங்கள் உதவியைக் கோருகிறேன்.
முதல் காரணம் எளிது:
கல்கி கதையின் போதாமைகளைச் சொல்லத்தான் இந்தப் படம் வெளிவந்திருக்கிறது. இதுவரை யானைக்காலாக யாரும் படிக்க முடியாத அளவு பக்கங்களாக பாகங்களாக இருந்ததை திரைப்படமாக்கியதால் இப்போது எல்லோரும், “இந்தக் கதை மொக்கையா இருக்கே!” என ஊர் எல்லாம் அறியும்படி தன் ஆனைக்கால் கொண்டு உதைத்து விட்டார் மணி ரத்னம்.
ஜெயமோகனுக்கு எப்போதுமே தனக்கு மட்டுமே அரியாசனம் வேண்டும். அது சுஜாதா, ஜெயகாந்தன், கல்கி போன்றோரால் சரியாசனமாக இருந்தது. கூடவே மும்மூர்த்திகள் என்று எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா போன்ற சமகாலத்தவரும் போட்டியில் இருந்தார்கள். விஷ்ணுபுரம் எழுதி ஒருவரை சாய்த்தார் என்றால், விஷ்ணுபுரம் விருது கொடுத்து இன்னொருவரை சாய்க்கிறார்.
இப்பொழுது கல்கியின் போதாமைகளை உணர்த்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறார் ஆசான். அதற்கான பிரும்மாஸ்திரம் — பொ.செ.1, 2, 3…
ஆதித்த கரிகாலனுக்கு தோல்வியைக் கண்டு பயம் என்பதை கல்கி உணர்த்துவார். படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தை பார்த்தால் வடிவேலு மாதிரி சிரிப்பு வருகிறது.
யானை ராணியை மாந்திரீகமாக, மாயாவாதமாக, பூடகமாக கல்கி உலவ விடுவார். இங்கே மேக்கப் இல்லாத ஐஷ்வர்யா என்று கெக்கலிப்பு வருகிறது.
ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரம் தூணிலும் இருப்பான், தூணாகவும் இருப்பானாக மிளிரும். இங்கே நிஜமாக நகைச்சுவைக்காக உலவுகிறது.
கல்கியைக் கொண்டாட வேண்டுமானால் சமரசங்கள் இல்லாமல் திரைக்குக் கொணர முயன்றிருக்க வேண்டும்.
மஹாபாரதம் எழுதிய போது எவ்வாறு தன் திரைவடிவத்தை ஏற்க மறுத்த சன் டிவியை உதாசீனம் செய்தாரோ… அது மாதிரி!
ஆனால், ”கடல்” போல் உருப்படியாக எடுத்தால் எவ பார்ப்பாள்? எனவே, திருடா… திருடா… பகுதி இரண்டை #PS1 ஆக எடுத்து விட்டார்கள்.
சிவாஜி என்றால் ரஜினியின் படம் என நிறுவியது ஷங்கர்.
பொன்னியின் செல்வன் என்றால் ஜொள்ளுச்சோழர் படம் என நிறுவுவது – 1ஸ்ட் ரீஸன்
பிராமண குடும்ப சாஸ்த்ரோப்தங்களைக் கிண்டல் செய்தும் ‘நம்பினால் நடந்துவிடுமோ?’ என சந்தேகிக்கும் கரு;
மலையாளத் திருமணமும், படகு வீட்டில் அந்தி சாயும் வேளையில் பொன்னிற வானத்தை மல்லாந்து பார்த்தபடி நதியோடு மிதக்கும் ஏகாந்தமான காட்சியமைப்பு;
முப்பதாண்டுகள் கழித்து அசப்பில் ‘மௌன ராகம்’ ரேவதியும் கார்த்திக்கும் எட்டிப்பார்க்கும் வசனம்;
கிறித்துவத்தில் கருக்கலைப்பை எவ்வாறு பார்ப்பார்கள் என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் உணர்த்தல்;
’அலைகள் ஓய்வதில்லை’ ஆர்ப்பாட்டத்திற்கு எல்லாம் அப்புறம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என கடந்து போகும் மதம் பார்க்காத காதல்;
வெறுமனே காதல் கதையாக இல்லாமல், அமெரிக்கா அனுப்பும் கணினி நிறுவனம்; அந்தக் குழுமத்தின் தலைவர்; கூட வேலை பார்க்கும் மேலாளர் ஆக அனுபமா பரமேஸ்வரன் (என்ன லட்சணம்!)
தெலுங்குப் பெயர்களின் நீளம்; விளம்பரத்திற்கு நிதி ஒதுக்காமல் தன் சிப்பந்திகளையே நடிக்க விடும் அலுவல் நுட்பம்; ஹோமங்கள், யக்ஞங்கள், யாகங்கள், பரிகாரங்கள்; தர்ப்பையை நாக்கில் பொசுக்கும் கண்டுபிடிப்புகள்
படத்தில் ஏதோ இருக்கிறது. அந்த இயக்குநர் விவேக் ஆத்ரேயாவின் போன படமும் இப்படித்தான். குழப்படியாக குப்பாச்சுவாக இடியாப்ப லிங்க்வீனி பாஸ்டா சிக்கலாக, புதுமையாக சுவாரசியமாக இருக்கும்.
ஆன்டி சுந்தரினிகி – வெள்ளித்திரையில் ஏன் ஹிட் ஆகவில்லை?
அரசு பதில்களுக்காக குமுதம் வாங்கியவர்கள்; கல்கி கிடைத்தவுடன் பொன்னியின் செல்வனைத் தேடியவர்கள்; மெர்க்குரிப் பூக்கள் வந்த பிறகே சாவி என்னும் பத்திரிகை இருப்பதை அறிந்தவர்கள்; தங்கள் நாயகனின் போஸ்டருக்காக ஸ்போர்ட்ஸ்டார் பெற்றவர்கள்
லலிதாராம் அந்த வகையைச் சார்ந்தவர்.
சொல்வனம் தளத்தில் சுகா கட்டுரை இடம்பெற்றால் முதல் நாளே பத்தாயிரம் வாசகர்கள் வருவார்கள். அவரை வாசிப்பார்கள். பகிர்வார்கள். மீண்டும் இன்னொரு தடவை வாசிக்கவும் திளைக்கவும் அனுபவிக்கவும் வருவார்கள். அப்படியே அடுத்த நாள்.
இந்த மாதிரி இன்னொரு நம்பகமான ஆள் லலிதா ராம். சுகா சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால் தீபாவளி ரிலீஸாகப் போட்டி போடும் கமல்ஹாசனாக இவர்.
1978 தீபாவளிக்கு பதினொன்று தமிழ்ப்படங்கள் வெள்ளித்திரையில் வந்தது. அவள் அப்படித்தான் தப்புத் தாளங்கள் சிகப்பு ரோஜாக்கள் பைலட் பிரேம்நாத் தாய் மீது சத்தியம் மனிதரில் இத்தனை நிறங்களா வண்டிக்காரன் மகன் ஸ்ரீ காஞ்சி காமாட்சி தங்கரங்கன் கண்ணாமூச்சி அதிர்ஷ்டக்காரன்
இருந்தாலும் ப்ளாக்கில் எல்லோரும் பார்க்க நினைத்தது ஒன்றிரண்டுதான் இருக்கும். அந்த மாதிரி கட்டுரை முதல் பின்னூட்டமாகக் கீழே கிடைக்கும்
உசேனி இருபத்தோராவது மேளகர்த்தா இராகமும், “வேத” என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.
வாழ விருப்பமில்லாத ஆன்மாவும் சாக விருப்பமில்லாத உயிரும் சந்தித்துக் கொண்டால்?
இறுவாய் குறித்த செவ்விந்தியர்களின் கர்ண பரம்பரைக் கதைகள் எல்லாமே இருவரின் உரையாடலாக அமைந்திருக்கும். அவர்கள் இருவருக்கும் நடுவே வாக்குவாதம் நடக்கும். அதன் வழியே இறுவாயின் எழுபவத்தைச் சொல்வார்கள். கீழே வரும் சம்பவம் ஷொஷோனி (Shoshoni) பிரிவினரிடம் புழங்குகிறது:
ஒரு ஊரில் ஓநாயும் நரியும் வசித்து வருகின்றன. ஓநாயின் பேச்சை எப்போதுமே குள்ளநரி கேட்காமல் நடந்து கொண்டிருந்தது. ஓநாய் என்ன சொன்னாலும் அதற்கு எதிராகவே குள்ளநரி செயல்படும். குள்ளநரியிடம், “இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் வித்தை உனக்குத் தெரிய வேண்டுமா? அவர் வீழ்ந்த இடத்திற்கு அடியில் பூமியைத் துளைத்துச் செல்லும் அம்பை விட்டால், மாண்டவர் மீள்வார்!”, என ஓநாய் சொல்கிறது.
ஓநாய் என்ன சொன்னாலும் சிவப்புக் கொடி தூக்கும் குள்ளநரி, “அதெல்லாம் வேண்டவே வேண்டாம். செத்தவர் செத்தவராகவே இருக்கட்டும். இறந்தவரையெல்லாம் இப்படி உயிர்ப்பித்தால், பூமி பாரம் தாங்காது.” என்றது. அப்போதைக்கு அதற்கு “சரி” என்று தலையாட்டி வைக்கிறது ஓநாய். எனினும், தனிமையில் சூழ்ச்சித் திட்டத்தைத் தீட்டுகிறது ஓநாய். குள்ளநரியின் மகனை முதல் பலியாகக் கொல்ல முடிவு செய்கிறது. இரவோடிரவாக கொன்றும் விடுகிறது.
காலையில் மகனின் மரணத்தைப் பார்த்த குள்ளநரி அரற்றி பிழற்றிக் கொண்டு ஓநாயிடம் கதறிக் கொண்டே வந்தது. “என் மகன் அகால மரணம் அடைந்துவிட்டான். அவனை உயிர்ப்பித்துத் தர முடியுமா? அவன் வீழ்ந்த நிலத்திற்கடியில் பாணத்தை விட்டு அவனை மீண்டும் நடமாட வைப்பாயா?” என்று இறைஞ்சுகிறது நரி. ஓநாய், “அதெப்படி? எல்லோரும் ஒரு நாள் இறக்க வேண்டும் என்று நீதானே நேற்று சொன்னாய்! உனக்கு மட்டும் எப்படி தனி நியாயம்?” எனக் கேட்க, சாவுத்துயரில் தோய்ந்த நரி, அன்றைய நாளில் இருந்து அந்த வித்தையை பலிக்காமல் போக சபிக்கிறார்.
டிஸ்னி நிறுவனத்தின் பிக்ஸார் கிளையின் அடுத்த படம் இது போன்ற இரு மாந்தரை மையமாக வைத்து “சோல்” (Soul – ஆன்மா) படத்தை வெளியிட்டு இருக்கிறது. வெள்ளித்திரைகளில் படம் வெளியாகவில்லை. சின்னத்திரையான டிஸ்னி+ மூலமே இதைப் பார்க்க முடியும். பியானோ வாசிப்பாளர் பெயர் ஜோ. சிறுவர்களுக்கு வாத்தியங்களைக் கற்றுத் தருகிறார். ஒரு பக்கம் பள்ளிக்கூடத்தில் நிரந்தர வேலை உறுதியாகும் வாய்ப்பு. இன்னொரு பக்கம், ஷ்ரேயா கோஸல் போன்ற ஆதர்ச + புகழ்பெற்ற பாடகியின் பக்கவாத்தியமாக விரும்பியதை வாசித்து ரசிகர்களின் கரகோஷங்களை அள்ளும் வாய்ப்பு. சாலை விபத்தில் கிட்டத்தட்ட இறக்கிறார். மரணத்தின் வாயிலில் அவ்வுலகம் செல்கிறார். அங்கே பல்வேறு உயிர்களையும் இன்ன பிற ஆன்மாக்களையும் சந்திக்கிறார்.
அவருக்கோ மீண்டும் பூமிக்குள் வந்துவிட ஆசை. இப்பொழுதுதான் வாழ்நாள் லட்சியம் சாத்தியம் ஆகப் போகிறது. காலையில் நிரந்தர வருமானம். மாலையில் கனவு உத்தியோகம். ஒவ்வொரு நாளும் விதவிதமாக இசையில் மூழ்கலாம். பியானோ வாசிப்பில் லயிக்கலாம். கேட்போரையெல்லாம் சொக்க வைக்கலாம். அந்த நேரம் பார்த்து மரணம். ஆசையில் மண்.
இன்னொரு பக்கம் அவ்வுலகத்தில் “22” என்னும் ஆன்மாவிற்கு மீண்டும் பூமிக்கு வரப் பிடிக்கவே பிடிக்கவில்லை. மனிதராகப் பிறந்து உண்டுண்டு உறங்குவதை வெறுக்கும் ஜீவன். மாயாப் பிறவி மயக்கம் அறுத்த அகவுயிர். ஓயாமல் இரவு பகலாய் உழைத்துக் கொட்டி, அதில் அர்த்தம் தேடுவதை ஒதுக்கும் ஆவி – “22”.
பிக்சர் படம் என்றால் குழந்தைகள் படம். என்றாலும், அதில் சினிமாவில் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடும் என் போன்றோருக்கு நிறையவே சரக்கு இருக்கும். சடாரென்று தூக்கத்தில் எழுப்பினால் கூட “அப்”, “இன்சைட் அவுட்”, “மான்ஸ்டர்ஸ் இன்க்” என்று அடுக்கி, அதன் தத்துவங்களை விலாவாரியாக ஆர்வமாக விளக்குவேன். ஒரு தடவைக்கு பல தடவை பார்த்தாலும் அலுக்காதவை.
அலுக்காத தன்மைக்கு அந்த அனிமேஷன் லாவகத்தைச் சொல்லியே ஆக வேண்டும். இந்த “சோல்” படமும் நாக்கில் கரையும் மைசூர்பா என கண்ணில் கரையும் புத்திசாலித்தனமான காட்சிகள் கொண்டது. தொழில்நுட்பம் ஆகட்டும்; கலாபூர்வம் ஆகட்டும். இரண்டும் பார்ப்போரை ஏகாந்த நிலைக்குக் கொண்டுபோகிறது. அதுவும், இறப்பு, வாழ்க்கையின் பூரணத்துவம் போன்ற எசகு பிசகான கேள்விகளை எழுப்பும்போது கூட அந்த இருட்டு தெரியாமல் ரம்மியமாக செல்கிறது. காட்சிக்கேற்ற பரவச இசை; தத்ரூபமான இசை சபா மேடை; ஜோதியில் ஐக்கியமாவது; எல்லாமே சரியான பதத்தில் வந்திருக்கிறது. பியானோவும் ட்ரம்பெட்டும் எக்காளமிட்டு ஒன்றோடன்று போட்டி போடும் இசையமைப்பிற்கு என்னால், ‘பேஷ்’ மட்டுமே வைக்க இயலும். அதில் தோய்ந்த ஆப்பிரிக்க-அமெரிக்கரார்களாலேயே அதன் ஆலாபனைகளை உணர இயலும்.
எனவே, படத்தில் நான் உணர்ந்த தொன்மவியலுக்குள் சென்று விடுகிறேன்.
ஒரு கிளையில் உள்ள இரு பறவைகளாக ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் சில உபநிஷத்துகள் காண்கின்றன. இங்கேயும் அந்த மாதிரி ‘22’ம் ஜோ என்னும் வாத்தியக்காரரும் வருகிறார்கள். ஜீவாத்மா என்னும் பறவை, மரத்தின் கனிகளை உண்கிறது. அதில் சில பழங்கள் இனிக்கும்; சிலது கசக்கும் – மாணாக்கர்களின் சேஷ்டை ‘ஜோ’ என்னும் இசை வாத்தியருக்கு வெறுக்கிறது; அதே சமயம் இசையை ரசித்து வாசிக்கும் மாணவரின் ஆர்வம் இனிக்கிறது. கச்சேரி வாய்ப்பிற்காக, ஒவ்வொரு சபா ஆக சென்று, வாய்ப்பு கேட்டு, மறுக்கப்படுவது வெறுக்கிறது; அதே சமயம் கிடைத்த வாய்ப்பில் பரிமளிக்கும் போது, கிடைக்கும் பார்வையாளர்களின் கைதட்டல், சந்தோஷம் – இனிக்கிறது. பரமாத்மாவிற்கோ இதில் எல்லாம் அபிலாஷை இல்லை. அது சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும். இந்தப் பழங்களை, “சீச்சீ… இந்தப் பழம் புளிக்கும்”, என்று ஒதுக்கும். இது ‘22’
ஜீவாத்மாவிற்கு எப்பொழுது பரமாத்மாவின் மகத்துவம் புரிகிறதோ, அப்போது இவ்வுலகின் துக்கங்களில் இருந்தும் துன்பங்களில் இருந்தும் விடுதலை அடைந்து முக்தி பேறடைகிறது. படத்திலும் ‘ஜோ’ அடைகிறார். இறுதியில் எல்லா பிக்ஸர் படங்களிலும் முக்கிய கதாபாத்திரம் மோன நிலையை அடைந்துவிடும். அது பெரிய விஷயமேயில்லை. எப்படி, எவ்வாறு, எந்தப் பாதையில் சென்று உய்யலாம்? அந்தப் பாதையை, பரிணாம மாற்றத்தை, இந்தப் படம் சுவாரசியப்படுத்திச் சொல்லியிருக்கிறது.
இந்தப் பாதை அடையும் வழி என்ன என்று உபநிஷத்துகள் என்ன சொல்கிறது? கடனே என்று காரியத்தை, கருமங்களை செய்யாதே என்கிறது. எளிதானவற்றையும் பிரயாசையின்றி செய்வதையும் விட்டுவிடு; சரியானதையும் ஷ்ரேயஸானவற்றையும் செய் என்கிறது. ஆன்மாவை நோக்கி உள்முகமாக பயணி என்கிறது. அனைவரிடத்தும் அன்பு செலுத்து; அவர்களிடம் அக்கறை கொள்; பொருத்தமான ஆன்மிக குருவைத் தேர்ந்தெடு; அவரிடம் கேள்விகளை முன் வை; அவரிடம் சந்தேக நிவர்த்தி பெறு என்கிறது.
அனுபூதி அடைவது எளிதல்ல. குருவின் சோதனைகளை செவ்வனே முடிக்க வேண்டும். கடைசியில் அவரவர்க்கு அவரவர் ஆத்மாவே குருவாகிறது. மனிதப் பிறவியில் ஞானமும் (சிரவண மனனம்) யோகமும் (நித்தியாசனமும்) அடையப்பெற்ற விவேகர்கள், தன்னை சர்வ சக்தியுள்ளவர் என்று அறிந்து கொள்கின்றார். (மேலும் வாசிக்க – பின் – இணைப்பு: யது மகாராஜன், அவதூதர் சம்பாஷணை)
மீண்டும் “சோல்” திரைப்பட பார்வைக்கு திரும்புவோம்.
இறந்தோர் செலும் வரிசையில் ஜோதியில் ஐக்கியமாவதற்காக ஜோ என்னும் கதாபாத்திரம் காத்திருக்கிறது. அப்பொழுது, அந்த வரிசையில் இருந்து எகிறி குதித்து, இன்னொரு இடமான திரிசங்கு நிலையத்திற்கு வந்து சேர்கிறது. இந்த இடம் Defending Your Life என்னும் படத்தை நினைவூட்டியது. அதில் மரணித்த ஒவ்வொருவரும் தங்களின் வாழ்க்கையை மீண்டும் பார்ப்பார்கள். அதில் சிற்சில மாறுதல்களை செய்ய விரும்புகிறார்களா அல்லது தற்காப்பாக அவர்களின் முடிவுகளை ஆதரித்துப் பேசுவார்களா என்பதைப் பொறுத்து அடுத்தகட்ட பயணம் அமையும்.
அந்த இடைப்பட்ட இடத்தில்தான் ஜோ கதாபாத்திரம் “22”ஐ சந்திக்கிறது. பல்வேறு பெரிய கைகளை பார்த்து பழம் தின்று கொட்டை போட்ட கதாபாத்திரம் “22”. மகாத்மா காந்தி, ஆபிரஹாம் லிங்கன், அன்னை தெரசா, கொபர்னிகஸ், மேரி ஆன்டொனெட், கார்ல் யொங் என்று பலர் “22”ஓடு கலந்துரையாடி, பூலோகத்திற்கு தயார் செய்ய முயன்று, பலரும் தோற்றோடியிருக்கிறார்கள். அந்த 22ன் வாயினாலாயே சொல்வதானால், “தெரஸாவையே அழ அழ ஓட்டியவளாக்கும் நான்!” அந்த ஆசிரியர்களால் முடியாததை ஜோ செய்கிறார். தன் உருவத்தில் 22ஐ சில மணித்துளிகள் நடமாட விடுகிறார். அதன் மூலமாக வாழ்வின் அற்புதத்தை உணர்த்துகிறார்.
ஆன்மாக்களின் ஆளுமைகளை உருவாக்கும் பண்புகளையும், ஆர்வங்களையும் திறமைகளையும் கண்டறியும் இடம் தான் இந்த “கால்கோள் சந்தி” எனப்படும் The Great Before. ஆன்மாக்கள் இன்னும் முழுமையடையவில்லை. இரண்டும்கெட்டான்களாக அலைகிறது. அங்கிருக்கும் குருவானவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆன்மாக்களை, பக்குவப்படுத்திய பிறகு, பூமிக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதன் பின் அந்த ஆசிரியர்கள் “மகா உம்மை” எனப்படும் Great Beyondக்கு சென்று பிரும்மாண்ட பிரகாச ஒளியில் ஐக்கியமாகி விடுவார்கள்.
“கால்கோள் சந்தி”யில் குணாதிசயங்களைப் பொருத்தலாம்; விருப்பங்களை உருவாக்கிக் கொள்ளலாம்; ஆனால், ஒவ்வொரு உயிருக்கும் ஒரு உந்து சக்தி வேண்டாமா? உங்களை இயக்க, உங்களின் ஒவ்வொரு நாளையும் உத்வேகமிக்கதாக ஆக்க, ஆற்றலின் முழு வீச்சையும் உணரவைக்கும் ஜீவாதாரம் எது? அதை அடையாளம் காண்பிக்க வேண்டியது குருவின் பொறுப்பு.
மனிதன் மீண்டும் ஜனனம் ஆவதை பஞ்சாக்னி வித்தை எப்படி சொல்கிறது என்று பார்க்கலாம். மனிதன் ஐந்து அக்னிகள் மூலமாகப் பிறக்கிறான். ஒன்றிலிருந்து ஒன்றாக அர்ப்பணிக்கப்பட்டு மனிதன் பிறக்கிறான். அது வரும் பாதை:
தன் கர்ம வினைகளுக்கு ஏற்ப, சரீரத்தையும் வாழ்க்கையையும் அனுபவிக்க, பிறப்பெடுக்கத் ஜீவன் தயாராகிறது.
ஜீவாத்மா மேகத்திற்குள் நுழைகிறது. நெருப்பை அணைக்கும் சக்தி மழை நீருக்கு இருப்பதால், அந்த நெருப்பை உள்வாங்கி அதை அணைப்பதால் நீரும் அக்னி எனப்படுகிறது. பிறக்கத் தயாராகும் ஜீவன் மழையோடு கலந்து பூமியில் விழுகிறது.
பூமி. உஷ்ணத்தை உள்வாங்கிக் கொள்வதால் பூமியும் ஒரு அக்னி. மழை மூலமாக வந்த ஜீவன் பூமிக்குள் செல்கிறது.
பூமிக்குள் சென்ற ஜீவன் செடிக்குள் நுழைகிறது. அதனுள் இடைவிடாது செயலாக்கம் நடந்து கொண்டிருப்பதால் அது உஷ்ணத்துடன் இருக்கிறது. எனவே அதுவும் அக்னி எனப்படுகிறது. செடியின் வேர் வாயிலாக நுழையும் ஜீவன் அந்தச் செடியின் காய் அல்லது கனியில் நிலை கொள்கிறது.
ஜீவன் நிலை பெற்ற காய் அல்லது கனியை உண்ணும் மனிதரும் அக்னி. அவரது உணவுக் குழாய் மூலமாகச் சென்று அவர்களது விந்தில் அந்த ஜீவன் நிலைபெறுகிறது.
திரைப்படத்திலும் இந்த மாதிரி ஒவ்வொரு ஜீவனுக்கும் ஐந்து பண்புகளையும், ஆர்வங்களையும் திறமைகளையும் பொருத்துகிறார்கள். ஆனால், விந்து என்பது எது என்பதை அந்த ஜீவனே கண்டறிய வேண்டும். அதைக் கண்டறிவதற்கு, குருவின் துணை தேவை என்பதை வலியுறுத்துகிறது.
பிரபஞ்சம் என்பது 24 தத்துவங்களில் அடங்கியிருக்கிறது என்று ஸாங்கியம் சொல்கிறது.
பிரகிருதி, மஹத், அஹங்காரம், மனம், ஐந்து ஞானேந்திரியம், ஐந்து கர்மேந்திரியம், பஞ்ச தன்மாத்திரைகள், பஞ்ச மஹாபூதங்கள் என்று மொத்தம் 24 இருக்கின்றன.
ஞானேந்திரியங்கள் என்பவை
சப்தம் (காது)
ஸ்பரிசம் (சர்மம்) / தோல்
ரூபம் (கண்)
ரஸம் அல்லது சுவை (வாய்)
கந்தம் என்ற வாஸனை (மூக்கு)
ஜீவனே நேராகக் காரியம் செய்ய உதவுபவை கர்மேந்திரியங்கள்.
வாய் பேசுவது
பல காரியங்களைச் செய்ய உதவும் கை
நடக்கிற கால்,
மலஜல விஸர்ஜனம் செய்கிற அவயவம் / உடற்கழிவுகளை வெளியே தள்ளும் உறுப்புகள் (குதம் மற்றும் சிறுநீர் குழாய்)
ஜனனேந்திரியம் / பிறப்புறுப்புக்கள்
அருவத்தின் உருவ மாற்றமே தன்மாற்றம். நிலை மாற்றம் அலை. தன்னிலை மாற்றம் தன்மாற்றம். தன் தன்மையின் மாற்றம் தன்மாத்திரை. பஞ்ச தன்மாத்திரைகள்;
சப்தம் / ஓசை
ஸ்பர்சம் / தொடுதல்
ரூபம்
ரசம்
கந்தம் / ஒளி
எல்லாவற்றுக்கும் ஆதாரமான – ஆத்மாவைப் ‘புருஷன்’ என்றும், எல்லாவற்றையும் நடத்தி வைக்கிற சக்தியான மாயையை ‘ப்ரக்ருதி’ என்றும் சொல்வது ஸாங்கியம். அதுபோல், இந்தப் படம் ‘புருஷன்’. அதில் இருந்து கிடைப்பது ப்ரக்ருதி. திரைப்படம் என்ன சொல்கிறது என்பதை முழுமையாக வெளிப்படுத்த முடியாது. வாழ்வதைப் போலவே, இந்த அனுபவத்தை தவறவிட வேண்டாம்.
யது மகாராஜன், அவதூதர் சம்பாஷணை
முன்பொரு சமயம் யது மகாராஜன் எங்கும் அச்சமின்றித் திரியும் ஓர் அவதூதரிடம், “உலக சுகபோகங்களில் ஈடுபாடு இல்லாத உமக்கு உள்ளத்தில் பரிபூர்ண மகிழ்ச்சி நிரம்பி இருக்கிறதே எதனால்?” என்று கேட்டார். அதற்கு அவதூதன் கூறலானான், நான் பலரை எனது குருவாகக் கொண்டு அவர்களிடமிருந்து பல செய்திகளை அறிந்து கொண்டேன். தான் இருபத்து நான்கு ஆச்சாரியர்களை ஆச்ரயித்து தெரிந்து கொண்டவை பல.
1. ப்ருத்வி – பொறுமையும் மன்னித்தருளும் குணமும் விடாமுயற்சியும் சகிப்புத்தன்மையும் கற்போம். பூமியை எங்கு வேண்டுமானாலும் தோண்டலாம். மூத்திரம் அடிக்கலாம். மலஜலம் கழிக்கலாம். அல்லது வீடுகள் கட்டலாம். மண்ணில் இருந்து புதையல் எடுக்கலாம். பூமியிலுள்ள அனைத்தும் எப்படிப் பிறருக்குப் பயன்படுகிறதோ அவ்வாறு சாதுக்கள் தான் பிறருக்கு உரியவன் என்று உணர வேண்டும். 2. வெற்பு – பிறரின் நன்மைக்காக வேலை செய்வது எப்படி என்பதை மலைகளிடம் இருந்து கற்கலாம். மலைகளில் இருந்து மரங்களும் மூலிகைகளும் நதிகளும் கிடைக்கின்றன. இவை அனைத்தும் மற்ற விலங்குகளுக்குப் பயன்படுகின்றன. உன் வாழ்க்கை பிறருக்காக இருக்கட்டும். மேலும், மலைகள் என்பவை தனிமையை அடையாளப்படுத்துபவை. அமைதியாக இறை சிந்தனையில் ஈடுபட மலைகள் உதவுகின்றன.
3. காற்று போல யோகியானவன் குண தோஷங்களால் கறைபடாதவனாக அதாவது பற்றற்றவனாக இருக்க வேண்டும். 4. ஆகாயம் போல் ஆத்மா பிரபஞ்சமெல்லாம் பரவி இருந்தாலும் எதிலும் ஒட்டாமல், தாமரை இலை நீர் போல இருக்க வேண்டும். 5. நீரைப் போல் யோகி தூயவனாய், குணமுற்றவனாய், மிருதுவான இதயம், மக்களிடம் இனிமையாகப் பழகுதல் வேண்டும். பார்ப்பது, பேசுவது, தொடுப்பது ஆகியவற்றால் அண்டினவர்களைத் தூய்மைப்படுத்த வேண்டும். 6. அக்கினியைப் போல் அழுக்கற்றவனாய் ஒளியுடன் விளங்க வேண்டும். 7. சந்திரனில் தேய்தல், வளர்ச்சி இருப்பினும் சந்திர மண்டலத்திற்கு மாறுதல் இல்லாததுபோல் ஆத்மாவிற்கு ஜனனம், மரணம் கிடையாது. 8. சூரியன், கடல் நீரைக் கிரகித்து மழையாகப் பொழிவதைப் போல் யோகி இந்திரியங்களால் விஷயங்களைக் கிரகித்து அதைத் தகுதி உள்ளவன் கிடைக்கும் போது அவனிடம் கொடுத்து, கொடுத்ததை மறந்துவிட வேண்டும். 9. மாடப்புறா பாசத்தின் காரணமாக குடும்பத்துடன் மாண்டது போல் குடும்பப் பற்றுள்ளவன் ஆபத்தில் அகப்பட்டுக் கொள்ளுவான். 10. மலைப்பாம்பு போல் தன் முயற்சி இன்றி கிடைத்ததைப் புசித்து உதாசீனனாய் இருக்க வேண்டும்.
11. பாம்பு – நாகம் தனியே வாழும்; தனியே பயணிக்கும். சில சமயம் எலிப் பொந்துகளில் வசிக்கும்; எங்கோ, எப்படியே, யார் வீட்டிலோ வாழும். நாகம் மிகவும் பாதுகாப்பாக தன் அடிகளை எவரும் அறியாவண்ணம் எடுத்துவைக்கும். உங்களின் இமைத்துடிப்பே, பாம்பிற்கு, உங்களை அடையாளம் காட்டிவிடும். அது போல், நீயும் மாயை குறித்து எச்சரிக்கை கலந்த விழிப்புணர்வுடன் இரு.
12. குளவி – கூட்டில் இருக்கும் பூச்சியானது, சதாசர்வ காலமும் குளவியையே நினைத்துக் கொண்டிருக்கிறது. குளவியைக் கண்டு பய உணர்ச்சியையும் விரோதத்தையும் வளர்த்துக் கொள்கிறது அந்தப் பூச்சி. அதன் பின், முழுதாக வளர்ந்த பின், அது குளவியாகவே மாறி விடுகிறது. அதே போல் நித்தியத்துவத்தையும் சத் அறிவையும் பேரின்பத்தையும் (சச்-சித்-ஆனந்த-விக்ரஹ) சொரூபமாகக் கொண்டவரை உள்ளத்தில் நிலை நிறுத்தியவர், பாவங்களில் இருந்து விடுதலை அடைகிறார்கள். 13. கடலைப் போல், பகவானிடம் மனதைச் செலுத்தி ஆசைகள் நிறைவேறும்போது மகிழ்ச்சியும், இல்லாத போது துயரமில்லாமலும் இருத்தல் நல்லது. 14. விட்டில் போல் அழியாமல் இந்திரியங்களை வென்றிருக்க வேண்டும். 15. தேனீயைப் போல் முனிவன் கிரகஸ்தர்களைச் சிரமப்படுத்தாமல் தேவையான அளவே பெற்று உண்ண வேண்டும். அடுத்த வேளைக்கு என்று சேர்த்து வைத்தால் கூட்டில் தேன் போல் அழிவு ஏற்படும். மேலும் சாஸ்திரங்களுடன் சாரத்தை மட்டும் அறிந்து வாழ வேண்டும். 16. பிடியின் (பெண் யானை) காரணமாக ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் ஆண் யானை போல் ஸ்திரீ பந்தத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது. 17. இனிய கானம் கேட்டு மயங்கிய மான் வேடனால் பிடிபட்டு அவதியுறுவதுபோல் பகவத் குணங்களை மட்டுமே கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவதியுற்று அழிய நேரக்கூடும். 18. தூண்டில் மீன் உணவை விரும்பி முள்ளில் சிக்கிக் கொள்வதுபோல் நாவடக்கம் (சுவையின் மீது ஆசை) இல்லாதவன் புலனடக்கம் இல்லாதவனே.
19. திருமணமாகாத பெண் வீட்டில் தனியே இருந்தபோது, அவளின் வருங்கால மாமனார் வீட்டிற்கு வருகிறார். வீட்டில் சில காய்கறிகள் மட்டுமே இருக்கின்றன. சோறு பொங்க அரிசி இல்லை. பெற்றோரும் இல்லத்தருகில் இல்லை. சாதம் வடிப்பதற்காக பிச்சை கேட்டு வீடு வீடாகச் செல்கிறாள். அவள் கை நிறைய வளையல்கள் அணிந்திருந்தாள். அந்த சத்தத்தை உணரும் அவள், “இந்த வளையல் ஒலி கேட்டால் எங்களின் ஏழ்மை நிலை புகுந்த வீட்டாருக்குத் தெரிந்துவிடும். சோற்றுக்காக பிச்சை எடுப்பது அறிந்துவிட்டால், தன் மகனுக்கு இந்த வீட்டில் பெண் எடுக்க மாட்டார்.” என நினைத்து, எல்லா வளையல்களையும் அகற்றிவிடுகிறாள். ஜன-சங்க-த்யாக அத்வைத-தியாக: கடவுளை ஒப்புக் கொள்ளாதவரிடமிருந்து தூர இருப்பாயாக. அபவாதம் பேசுவோருக்கு நீ குழந்தையாகத் தென்படுவாய். அவர்களிடம் விரிவாக விவாதித்தோ விளக்கியோ யாதொரு பயனுமில்லை. மாமனாருக்குத் தெரியக் கூடாது என்று வளையலை நீக்கியது போல் பக்தியில் நாட்டம் இல்லாதோரிடம் இருந்து உன் பக்தி ஆபரணத்தை அபவாதிகளிடமிருந்து விலக்கி கொள். ஒரே ஒரு வளையலைக் கையில் கொண்ட பெண்ணைப் போல், துறவி ஆனவன் தனிமையாகவே இருக்க வேண்டும்.
20. தன் எச்சிலில் இருந்தே சிலந்தி வலை பின்னும். வலையில் மாட்டிய பூச்சிகளை உண்ணும். வலையின் தேவை முடிந்தபின், அந்த வலையை விடுவித்து தன்னுள்ளேயே சேர்த்துக் கொண்டு விடும். அதே போல் கடவுள் தன் மாயவலையினால் உன்னை உலாவ விடுகிறார். பின் அவருள்ளே எல்லாமே ஐக்கியமாகிறது. அவரின் விருப்பத்திற்கேற்ப அவரின் நோக்கத்திற்கேற்ப பயன்படுத்துவார் என்பதை அறி. அதன் பின் அவருள்ளேயே உன்னை முழுவதுமாக திரும்பப் பெற்றுக் கொள்கிறார். 21. மாமிசத்தைக் கொத்திச் சென்ற மீன்குத்தி மற்ற பறவைகளால் துன்புறுத்தப்படும். அது மாமிசத்தைக் கீழே போட்டவுடன் அப்பறவை நலம் பெற்று விடும். ஞானம் பெற்றவளாய் பகவானையே சரணமாக அடைந்து மேன்மை அடைந்தாள். எனவே ஆசையே துன்பம்; நிராசையே பரமசுகம் என்று அறிதல் வேண்டும். 22. தனக்குத் தானே விளையாடிக் கொண்டு மகிழ்ச்சி அடையும் குழந்தை போல் தன்னில் தானாகவே ஆத்மாவில் ரமித்து ஆனந்தமாக சஞ்சரிக்கின்றேன். 23. பிங்களை என்ற வேசி தன் தொழிலில் வெறுப்புற்று அன்புடன் ஆராதிப்பவருக்குத் தனது ஆத்மாவையே அளிக்கும் அச்சுதனை நாடி அடையாமல், அந்திய புருஷனைத் தேடி ஓடுகிறேனே? என்று ஞானம் பெற்றவளாய் பகவானையே சரணமாக அடைந்து மேன்மை அடைந்தாள். எனவே ஆசையே துன்பம்; நிராசையே பரமசுகம் என்று அறிதல் வேண்டும். 24. அம்பு தொடுக்கும் வில்லாளி இலக்கின் மீது கவனமாக இருப்பது போல், ஆத்ம சொரூபத்திலே ஒன்றி விட்டவன், வெளியிலே தன்னைச் சுற்றிலும் நடப்பவற்றையும், உள்ளே நடப்பவற்றையும் கூட அறிய மாட்டான். ஆகவே யோகியானவன் சுகாசனத்தில் அமர்ந்து சுவாசத்தை அடக்கி, வைராக்கியத்தாலும் பகவத் தியானத்தாலும் வெற்றி பெறுவான்.
Vikramadithyan Documentary | Vishnupuram Awards 2021: ‘வீடும் வீதிகளும்’, 2021ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களைப் பற்றிய ஆவணப்படம் பார்த்தேன்.
சில எண்ணங்கள்:
1. துணையெழுத்து இல்லாமை: தமிழ்க் கவிஞரைப் பற்றிய அறிமுகப் படத்தில் வரும் உரையாடலை, உரையாடற் மொழியிலோ பிற வேற்று மொழியிலோ எழுத்து வடிவில் காட்டப்படும் உரை; ஆங்கிலத்தில் துணையுரை இல்லாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
2. அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டும் என்று அவசர கதியில் மிச்சம் மீதியைப் போட்டு செய்யும் வடகறி கொத்து பரோட்டா போல் வந்திருக்கிறது. வடகறி சுவையாக இருக்கும். ஆனால், இங்கே சாஸ்திரோப்தமான சூப், சிற்றுண்டி பலகாரம், தலைவாழை இலை சாப்பாடு, பீடா எல்லாம் எதிர்பார்க்கிறேன்.
3. இந்தப் படங்கள் எவரைக் குறிவைத்து எடுக்கப்படுகின்றன?
அ) தமிழ்க் கவிஞர்களை அதிகம் அறியாத தமிழ் தெரிந்தோர்
ஆ) விக்கிரமாதித்தனை நன்கு அறிந்தோர்
இ) தமிழ் இலக்கியத்தில் நிறைய பரிச்சயம் இருந்தாலும் விக்கிரமாதித்தனை அறியாதோர்
ஈ) தமிழ் புரிந்தாலும் எழுத/வாசிக்கத் தெரியாத தலைமுறை
உ) விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்
என்னை (இ) பிரிவில் வைத்திருக்கிறேன். என் மனைவியை (அ) பிரிவில் வைக்கிறேன். எங்கள் குழந்தைகளை (ஈ) பிரிவில் வைக்கலாம். இந்த மூவருக்குமே இந்தப் படம் எதையும் கொண்டு சேர்க்கவில்லை.
4. நான் எதை எதிர்பார்த்தேன் – இந்தப் படத்தில்?
i) தமிழ்க் கவிஞர்கள் – சுருக்கமான பாரம்பரியம்; எந்த இடத்தில் விக்கிரமாதித்தன் வருகிறார்?
ii) விக்கிரமாதித்தன் தோற்றமும் வளர்ச்சியும் – எவ்வாறு அந்தக் கவியாளுமை உருவானது?
iii) சமகால கவிஞர்களை எவ்வாறு அவர் ஊடுருவுகிறார்? அவரின் நெடிய இலக்கிய பயணத்தில் என்னென்ன மாற்றங்கள் தோன்றின?
iv) கவிஞரை வாசித்ததால் அவரவருக்கு என்ன கிடைத்தது? போகன் சங்கர், லஷ்மி மணிவண்ணன், வண்ணதாசன் – சுய அனுபவம் / நேர்மையான தன்மை நிலைப் பார்வை / அகப் பகிர்வு – இது இல்லாமல் பீடத்தில் இருந்து கொண்டு சொற்பொழிவாற்றுவது ‘ராஜாதி ராஜ ராஜ கவிராய ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர விக்கிரமாதித்தாய நமஹ!’ என அலறுகிறது.
5. அறிமுகமாக அந்த வீணை இசை மெல்லிய அபாரம். படம் முழுக்கவே சத்தமாக, “நான் இருக்கிறேன்!” என்று கத்தாமல், படத்தோடு இயைபான இசை.
6. ஏன் பேசுபவர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் போடுகிறார்கள்? பேசுபவர் யார், எங்கிருக்கிறார், என்ன எழுதியிருக்கிறார், ஏன் பேசத் தகுதியானவர் என்றெல்லாம் போட வேண்டும்.
7. கவிஞரைக் குறித்த ஜெயமோகனின் அறிமுகம் முகஞ்சுளிக்க வைத்தது. இன்னாரைப் பாராட்டி சீராட்டும் தருணத்தில் “சட்டையில்லாமல் வந்தார்! சண்டைக்காரராக முன்வந்தார்!!” என்று சொல்லிவிட்டு, “நான் எழுதியதுதான் அவரைப் பற்றிய முதல் கட்டுரை!” என்று ஜம்பமும் தட்டிக் கொள்வது உவ்வேக். கொஞ்சம் தன்னடக்கத்தோடு உரையாடியிருக்கலாம்.
8. இறுதியில் போடப்படும் பெயர் பட்டியல் – அகர வரிசைப்படி இருக்க வேண்டும். இது ஏதோ இலக்கிய அந்தஸ்து பீடம் போல் வயதை வைத்து போடப்பட்டிருக்கிறது.
9. ஒரே ஒரு பெண்ணாக சுபஸ்ரீ வந்து போகிறார். நன்றாகப் பேசினார்.
10. விக்கிரமாதித்தன் உரையாடலை இன்னும் தீவிரமாக ஆழமாக நடத்தியிருக்க வேண்டும். குடியோடு என்றால் குடியோடு. ஏழெட்டு நாள்கள் என்றால் அத்தனை பொறுமையோடு. அதன் பின் கத்திரி போட்டு ஆங்காங்கே கிடைத்த நறுக்குகளைக் கொண்டு அவரின் பேச்சு வந்திருக்க வேண்டும். இப்பொழுது ஏதோ தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த்தை வைத்து பொம்மை கோச்சடையான் எடுத்த மாதிரி தீட்டியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் திரைக்கதையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. தர்க்கப் பிழைகள் இருக்கின்றன. இதன் க்ளைமாக்ஸ் ஓர் உதாரணம். அதன் காரணமாக படம் நன்றாக இல்லை.
இப்படம் இஸ்லாமியர்களை ‘மட்டும்’ மோசமாகச் சித்தரித்திருப்பதாகவும் அவர்களது தீவினைகளுக்கு எதிர்வினையாகவே இந்துத்வர்கள் செயல்படுவது போலக் கட்டமைக்கப் பிரயத்தனப்படுகிறது என்றும் பலரும் அபிப்ராயப்படுவதை நான் ஏற்கவில்லை.
முதல் விஷயம், பிருத்விராஜ் சொல்கிற ஃப்ளாஷ்பேக். ஃபிரான்சின் நவீன மனநிலையுடன் ஒப்பிடும்போது, அவர்களது முற்போக்குத்தனத்துடன் ஒப்பிடும்போது, இஸ்லாமியர்கள் அங்கே நிகழ்த்திய வன்முறை – நேரடியாகவும் கருத்தியல் ரீதியிலும் – சகித்துக்கொள்ள முடியாதது. சார்லி ஹெப்டோ பத்திரிகையில் முகமது நபியின் கேலிச் சித்திரத்தை வரைந்ததற்காக குண்டு வைத்த இஸ்லாமியர்களைக் கண்டு ஐரோப்பியர்கள் அஞ்சுவது நியாயமானதே. புரிந்துகொள்ளக்கூடியதே. அவர்கள் முந்நூறு ஆண்டுகளாக இரத்தம் சிந்தி அந்தக் கருத்துச் சுதந்திரத்தை அடைந்தவர்கள். அவர்களுக்கு அதன் மதிப்பு தெரியும்.
இந்தப் படம் இஸ்லாமியக் குடியேறிகள் ஃப்ரான்ஸில் செய்த அட்டூழியங்களையும் அவர்கள் ஈடுபட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் தன்னுடைய கதாபாத்திரத்தின் மனநிலையை வகுப்பதற்கான reference-ஆக எடுத்துக்கொள்கிறது. இதில் எந்தத் தவறுமில்லை.
நான் இப்படிப் புரிந்துகொள்கிறேன்.
இரண்டு விதமான இஸ்லாமியர்களை இப்படம் சித்தரிக்க முயல்கிறது.
1. தங்களது மதவெறி காரணமாக கொலைவெறிச் செயல்களில் ஈடுபடுபவர்கள்.
2. இஸ்லாமிய மதநெறியின் பொருட்டு தங்களது நன்னம்பிக்கை வழுவாது வாழ்பவர்கள். யாருடைய பார்வை சரி, எந்தத் தரப்பு தவறு என்பதற்குள் விரிவாகச் செல்லாமல் சுருக்கமாக இப்படி வரையறுக்கலாம். இந்த இரண்டு தரப்பு இஸ்லாமியர்களுமே தங்களது நம்பிக்கை மீது மிகுந்த பிடிப்புடனும் பற்றுடனும் வாழ்கிறார்கள். அதில் பாவனை இல்லை, நாடகம் இல்லை, போலித்தனம் இல்லை. சரியோ தவறோ தாங்கள் தீர்க்கமாக நம்புவதைக் கடைபிடிப்பதில் தயக்கங்கள் இல்லை. இதில் அவரவர்க்கு அவரவர் நியாயம் இருக்கிறது.
ஆனால், பலரும் கருதுவதைப் போல அந்த இந்துத்வ சிறுவனை இப்படம் அப்பாவியாகக் காட்டவில்லை. அவனை ஒரு புழுவைப் போல காட்டுகிறார்கள். அவன் தனது கொள்கைக்கு விரோதமாக மாட்டுக்கறி உண்கிறான். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறான். இதன் மூலம் அவன் எவ்வளவு அற்பமானவன் என்பதை நிறுவிவிடுகிறார்கள்.
‘அவங்க கோவிலை எரிச்சாங்க. இவன் கத்தியை எடுத்துட்டான்’ என இந்துப் பெண் சுமா சொல்லும் காரணம்கூட வெறும் சால்ஜாப்புதான். இஸ்லாமியர்களைப் போல தன்னுடைய செயலுக்கான விளைவுகளை (conviction) ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இல்லை. தன்னுடைய வயதைக் காரணம் காட்டி அடுத்தவர்கள் மீதோ பழிசுமத்தி தன்னைத் தூய்மையில் நிறுத்திக்கொள்ள அவன் நடிக்கிறான். அதற்கு சுமா துணைபோகிறாள். கடைசியில், தான் உயிர் பிழைப்பதற்காக, தன்னைக் காப்பாற்றிய சுமாவையும் அவளது அண்ணனையும் நடுக்காட்டில் தள்ளிவிட்டு இருவரையும் உயிருக்குப் போராட விட்டுவிடுகிறான். எவ்வளவு சுயநலம்! குள்ளநரித்தனம்! (ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே மதவெறி/சாதிவெறி அதிகம் எனக் கோடிட்டுக் காட்டுகிறார்கள்.)
பிரச்சினை என வந்துவிட்டால், இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் உதவுகிறார்கள். தங்களது கூட்டாளிகளைப் பாதுகாக்கிறார்கள். ஆனால், இந்துத்வனோ, தான் மட்டும் தப்பிப் பிழைத்தால் போதுமென நினைக்கிறான். ஓர் இந்துத்வனை நம்பி சக இந்துக்கள் அவனுக்கு உதவிசெய்ய நினைப்பதுகூட பேராபத்தில்தான் முடியும் என்பதல்லவா இதன் பொருள்? அவன் கடைசிவரை தன் தவறை ஒப்புக்கொள்வதில்லை, மனம் திருந்துவதில்லை, தனக்காகச் சொந்த மதத்தினரைப் பகைத்துக்கொண்ட ஓர் இஸ்லாமியக் குடும்பத்தின் வேதனை எந்த விதத்திலும் அவனைப் பாதிக்கவில்லை. அவர்களது குருதியை உறிஞ்சிவிட்டு இன்னமும் வெறி அடங்காது வெறுப்புடன் திரிகிறான். இவனை விடவா இப்படத்தின் இஸ்லாமியத் தீவிரவாதிகள் மோசமானவர்கள்?
அதனால், அந்த இந்துத்வனை அப்பாவியாகச் சித்தரித்திருக்கிறார்கள் என்பதைத் தர்க்கரீதியில் ஒப்புக்கொள்ள முடியாது. அவனைத் தீமையின் உருவகமாகக் காட்டியிருக்கிறார்கள் என்கிற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.
‘குருதி’ மலையாள திரைப்படம் பார்த்தேன். மேற்கண்ட வாக்கியம்தான் இந்தப் படத்தின் ஆதார மையம் என்று தோன்றுகிறது.
‘இந்த வாக்கியத்தை உங்களால் தாண்டி வர முடியுமா?” என்கிற சவாலான கேள்வியை, மூசா என்கிற ஓர் இஸ்லாமியப் பெரியவரின் வழியாக ஒவ்வொரு பார்வையாளனையும் நோக்கி கேட்கிறது இந்தப் படம்.
ஆயிரம்தான் இருந்தாலும் மதம் என்பது ஒரு கற்பிதம்தான். அது நம்முள் விதைக்கும் நல்ல விஷயங்களைத் தாண்டி வன்மமாகவும் வெறுப்பரசியலாகவும் பரவும் அபத்தத்தை ரத்தக் கறையோடு விறுவிறுப்பாக சொல்லிச் செல்கிறது இந்தத் திரைப்படம்.
அனைத்து மதத்திலும் சில அடிப்படைவாதிகள் இருப்பார்கள். மத அரசியலின் புகையை ஊதிக் கொண்டே இருப்பார்கள். இந்தச் சாத்தான்களின் குரலை புறக்கணித்து விட்டாலே போதும்.
அப்படியொரு ‘சாத்தானாக’ ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார் பிருத்விராஜ். அவருடைய தயாரிப்பாக இருந்தாலும் இப்படியொரு எதிர்மறைப் பாத்திரத்தை எடுத்ததற்கு பாராட்டு. (ஹேராமில் கமல் ‘அப்யங்கர்’ பாத்திரத்தை எடுத்திருப்பாரா என்கிற கேள்வி இங்கு எழுகிறது).
படம் இழுவையான காட்சிகளுடன் துவங்கினாலும் ஒரு கட்டத்தில் நெருப்பு மாதிரி பற்றிக் கொள்கிறது. பிறகு வேகம். வேகம்தான்..
மதக்காழ்ப்பு என்பது சிலரிடம் அப்பட்டமாகவும் பலரிடம் மறைமுகமாகவும் ஒளிந்திருக்கும் ஆபத்து, ‘நாம்’ ‘அவர்கள்’ போன்ற பிரிவினைவாத சிந்தனைகள் எவ்வாறு உருவாகின்றன என்பது உள்ளிட்ட பல விஷயங்களை சொல்லிச் செல்கிறது, இந்தப்படம்.
திரைக்கதை, ஒளிப்பதிவு, பின்னணி இசை என்று பல தொழில்நுட்ப சமாச்சாரங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. நிச்சயம் தவற விடக்கூடாத திரைப்படம்.
சிறப்பான படத்தை பார்த்த ஒரு திருப்தி. வாழ்வில் நாம் காணும் மனிதர்களின் மேல் அரசியல் , சுயநலம் ,பொறாமை என்ற பெயரில் நாம் செலுத்தும் வெறுப்பை நம் கண் முன்னே ஓர் இரவின் நிகழ்வுகள் பின்னணியில் சொல்லிவிடுவதே இந்த படம்.
மதத்தின் மேல் பலருக்கும் பல கருத்துக்கள் இருக்கும். அந்த கருத்துக்கள் ஒரு பக்கம் இருக்கட்டும் , அதன் இரு வேறு நன்மை தீமைகளை எடுத்துக்கூறும் ஒரு திரைக்காவியம் என்பதாக இந்த படத்தை நாம் காணலாம்.
ஒரு காட்சி என்னை மிகவும் கவர்ந்தது, கொல்வதற்காக வரும் எதிரிகள் வீட்டு மெயின் ஸ்விட்சை அணைக்கிறார்கள் அப்பொழுது அங்கு உள்ளிருக்கும் இருவர் தன்னைத்தான் கொல்ல வருகிறான் என்று நினைத்து இரு மத இளைஞர்கள் எதிர் எதிர் ஒரு ஆயுதத்தை ஏந்தி எதிர்த்து நிற்பார்கள் . அப்பொழுது அங்கிருக்கும் பெரியவர் ” இதுதான் நம் நாட்டின் பிரச்சனையும் ” என்பார். எவ்வளவு நாசூக்காக நம் நாட்டின் மத பிரச்சினையை விளக்கி விட்டார்.
லண்டன் ரயில் நிலையத்தில் அந்தக் குட்டிக் கரடி வந்து இறங்கும். அதனுடைய கழுத்தில் “இந்தக் கரடியை கவனித்துக் கொள்ளுங்களேன்!” என்று எழுதியிருக்கும். இந்தக் காட்சியை சரியாகப் புரிந்து கொள்வதற்கு செப்டம்பர் மாதம் 1939க்கு பின் செல்ல வேண்டி இருந்தது. லண்டன் மாநகரத்தை குண்டு போட்டுத் தாக்குவார்களோ என அஞ்சிக் கொண்டிருந்த காலகட்டம் அது. ஜெர்மனியுடன் போரிடுவதற்காக தந்தையர் எல்லாம் போர்முனைக்குச் சென்றுவிட, அன்னையர் எல்லாம் செவிலியர் ஆகிவிட, அனாதைகளாக ஆனக் குழந்தைகளை சித்திகளும் மாமிகளும் ரயில் ஏற்றி கிரமாப்புறமாக அனுப்பி விடுகின்றனர்.
போர் முடிந்து சொந்த வீடு இருக்கும் லண்டன் நகரம் திரும்ப பல்லாண்டு காலம் ஆகலாம். ’பேடிங்டன்’ படத்தில் வரும் அழகுக் கரடியும் பெரு நாட்டில் இருந்து கள்ளத்தோணி ஏறி விசா இல்லாமல் இங்கிலாந்து நாட்டிற்குள் குடிபுகுகிறது. அங்கே நட்ட நடுவில் அது அமர்ந்திருந்தாலும், எந்தப் பயணியரும் அதை கவனிப்பதில்லை. அவரவருக்கு அவரவரின் அவசரம் + வேலை. ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பிரவுனின் குடும்பம் வந்து சேர்கிறது. எப்போதும் உற்சாகமாக இருக்கும் கரடியும், “எப்படி இருக்கிறீர்கள்? நலமா? நான் வசிப்பதற்கு இல்லம் தருவீர்களா!?” எனக் கேட்கிறது.
அதே மாதிரி அனாதரவான நிலையில் இருந்தாலும், ‘தி கிரேட் மேன்’ (பெரிய மனிதன் – The Great Man – ஃபிரென்ச் “Le grand homme”) படத்தின் பத்து வயது பாலகன் கட்ஜி (Khadji) பாரிஸ் ரயில் நிலையத்தில் பரிதாபமாக முகம் காட்டி, எவரிடமும் இறைஞ்சவில்லை. இது போரைக் குறித்த படம் எனலாம். அப்படியே, நாடு விட்டு நாடு தாவும் வந்தேறிகளின் குடிபுகலை சுட்டும் படம் எனலாம். நட்பின் நேசத்தின் கண்ணியத்தை உணர்த்தும் படம் எனலாம். அன்னியக் கலாச்சாரத்தைக் கண்டு அஞ்சும் மரபுவாத நாட்டின், புதிய தலைமுறை அனாதைக்கு — மகனின் பாசத்தை உணர்த்தி, வாழ்வை அர்த்தப்படுத்தும் சிறுவனின் கதை எனலாம்.
படத்தை பல்வேறு அத்தியாயங்களாக, அதன் இயக்குநர் சாரா லியானோர் (Sarah Leonor) பிரித்திருக்கிறார். முதல் அத்தியாயம் ஆஃப்கானிஸ்தானில் துவங்குகிறது. மார்கோவ் (நடிகர் சுர்ஹோ சுகாய்போவ்) என்பவரும் ஹாமில்டன் (நடிகர் ஜெரமி ரேனியர்) என்பரும் அங்கே காவல் காக்கிறார்கள். இருவரும் அத்யந்த நண்பர்கள். ஒருவருக்கு தாகம் எடுத்தால், இன்னொருத்தர் தண்ணீர் குடித்தால் அந்த தாகம் அடங்கும் என்று பின்னணியில் சிறுவனினின் குரல் ஒலிக்கிறது. அவர்களுடைய கனவில் சிறுத்தைப்புலி வருகிறது. அந்தக் கானல் புலியைத் தேடி அலைகிறார்கள். அப்போது ஹாமில்டன் சுடப்படுகிறான். அவனை பிரம்மப்பிரயத்தனப்பட்டு, அவனின் தோழன் மார்க்கோவ் காப்பாற்றுகிறான். ஆனால், அவனைத் தூக்கி வரும் வழியில் தன் கைத்துப்பாக்கியை இழக்கிறான. அதற்கான தண்டனையாக, அவனுக்கு இராணுவத்தில் பணியாற்றிய காலகட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என அறிகிறான்.
இராணுவத்தில் மார்கோவ் சேர்ந்ததற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்கிறது. செசன்யாவில் இருந்து பஞ்சம் பிழைக்க பிரான்ஸிற்கு அடைக்கலம் புகுகிறான் மார்க்கோவ். அவனுடைய மனைவி ருஷியாவின் தாக்குதல் போரில் இறந்துவிட்டாள். அவனுக்கு இருப்பதோ ஒரேயொரு மகன். மகனுக்கோ, தந்தையற்ற வாழ்க்கையை நினைத்து கழிவிறக்கம் கலந்த அச்சம் உடன் சேர்ந்த பதின்ம வயது ஆற்றாமை கோபம். இப்பொழுது மகனுடன் நேரம் கழிக்காவிடில், மீண்டும் மகனை, நல்லதொரு குடிமகனாக்க இயலாது என்பதை உணர்ந்த மார்க்கோவ், அதிகாரபூர்வ குடியுரிமையைக் கானல் நீராகக் கண்ணில் தண்ணி காட்டும் பிரெஞ்சு இராணுவ வாழ்க்கையைத் துறந்து, அதிகாரபூர்வமற்ற வந்தேறியாக மாறுகிறான்.
குடிமகர்களுக்கே வேலை கிடைப்பது பிரான்ஸில் யூனிகார்ன் குதிரைக்கொம்பாக, பெரும்பாடாக இருக்கிறது. இந்த நிலையில், அத்துமீறி உள்நுழைந்து, படைப்பிரிவில் இருந்தும் விலக்கப்பட்ட மார்க்கோவ் என்பவனுக்கு எப்படி ஊதியம் கிடைக்கும்? பல்லாண்டு காலமாக பிரிந்திருந்த மகனுடன் எவ்வாறு பாந்தமாக, பாசமான தந்தையாக உறவாட முடியும்?
அமெரிக்காவை விட பிரான்சு போன்ற நாடுகளில் குடியுரிமை பெறாதவர்கள், எவ்வாறு வேட்டையாடப்பட்டு, நாடு கடத்தப்படுகிறார்கள் என்பது இந்தப் படத்தில் காட்சிகளால், வசனங்களால், குறிப்பால் உணர்த்தப்படுகிறது. படத்தில் பல காட்சிகளில் நெடிய வசனங்கள் கிடையாது. குறிப்பாகச் சொன்னால். மகனும் தந்தையும் ஒன்றுசேரும் இடத்தைச் சொல்லலாம். மகனின் நல்வாழ்க்கைகாகத்தான் போருக்குச் சென்றேன் என்பதை பெரிய உரையாடல் மூலம் சொல்வதற்கு தந்தை மார்க்கோவ் முயல்கிறான். அந்த நெடிய சொற்பொழிவைக் கேட்க விரும்பாத மகன் கட்ஜி, எதிர்ப்புறமாகச் சென்று ஈஃபில் டவரின் ஒய்யாரத்தையும் பூட்டுகளால காதலைச் சொல்லும் பாலங்களையும் பார்ப்பது போல் ஓடி விடுகிறான். அந்த புதிய பூமியின் ஈர்ப்பும், மாபெரும் பாரிஸ் பிரும்மாண்டங்களும், இரவின் குளுமையும் அவனைத் தந்தையை நோக்கி இட்டுச் செல்கிறது. பாலம் மறைக்கும்போது வெளிச்சம் தடுக்கப்படுகிறது. பாலத்தின் அடியில் இருந்து வெட்டவெளியில் படகில் பயணிக்கும்போது நிலவின் வெளிச்சம் அப்பாவை அரவணைக்க வைக்கிறது. இருவரும் நெருங்குகிறார்கள்.
இந்த மாதிரி காட்சிகளைக் காதலில் பார்த்து இருப்போம். இரவின் நீல நிறத்தில் நண்பர்களின் கொண்டாட்டத்தைப் பார்த்து இருப்போம். ஆனால், தாய்மண்ணற்ற பிரதேசத்தில், வீடற்ற நாட்டில், தந்தையைக் கண்ணால் நாள்பட பார்த்தே இராத பாலகனின் பாசத்தை, நெருக்கத்தை அடையப் பாடுபடும் தந்தையையும், தூரதேசத்தில் நெருங்கிக் கொள்ளும் அன்னிய நாட்டவரின் ஈடுபாடும் மனித நேசத்தை வெளிச்சம் போடுகின்றன.
ஃபிரெஞ்சு புரட்சியின்போது அரசியல் கொள்கைகளைப் பரவலாக்க கலைப்படைப்புக்களின் உதவியது. பிரஞ்சுப் பேரரசை நெப்போலியன் உருவாக்கியபோது செய்தி என்பது தேசிய உணர்வைப் பொங்கச் செய்வதாக இருக்க வேண்டும் என்று நெப்போலியன் நினைத்தார். மற்ற நாடுகளும் நெப்போலியனை பின்பற்றி, அவனைக் கொடுங்கோலனாகச் சித்தரிக்க ஆரம்பித்தன. கீழே ஜெர்மனிய அரசின் பிரச்சார போஸ்டரைப் பார்க்கலாம். இதில் ‘தி கிரேட் மேன்’ என்று பிரான்ஸில் சொல்பவரை, ‘வெறும் எலி’ என்று சித்தரிக்கிறார்கள்.
பிரெஞ்சு நாட்டின் அடிநாதமாக Liberté, égalité, fraternité (விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம்) என்பதைச் சொல்கிறார்கள். அதைத்தான் இந்தப் படம் தேடுகிறது. ஒரு தேசத்தில் அன்னிய மக்கள், அதிகமாக உள் நுழைய நுழைய, அந்த தேசத்தின் கொள்கைகள் எவ்வாறு மாறுகின்றன? புதிதாக குடிபுகுந்தவர்கள், அந்த தேசத்தின் மையச்சரடோடு ஒத்துப் போவார்களா? அன்னியநாட்டில் இருந்து நுழைபவர்களுக்கு அந்த மண்ணின் மைந்தர்கள் எவ்வாறு, தங்கள் விழுமியங்களை விதைப்பார்கள்?
சிரியா வேண்டாம். தற்போதைய சிரியாவில் இருந்து தப்பிக்க முயலும் ஆசிய நாட்டினரைக் கூட ஐரோப்பியருடன் ஒப்பிட வேண்டாம். சில மாதம் முந்தைய கிரேக்கப் பிரச்சினையை எடுத்துக் கொள்ளலாம். எத்தனை ஜெர்மானியர், தங்களின் சொந்தச் சகோதரர்களுக்காக, தங்கள் கைக்காசைக் கொடுக்க முன்வந்தார்கள்?
கில்கமேஷ் காதை உங்களுக்கு நினைவிருக்கலாம். அது இரு நண்பர்களின் கதை. கில்கமேஷும் அவனுடைய தோழர் என்கிடு என்பவரும் தோழர்களாகவே தங்கள் பயணத்தைத் துவங்கவில்லை. இந்தப் படத்திலும் அவ்வாறே, மார்க்கோவும் ஹாமில்டனும் சிறுசிறு பிணக்குகளுக்குப் பின் தங்கள் திறமைகளை அறிந்து, உற்ற பந்தங்கள் ஆகின்றனர். ஹம்பாபா என்னும் கோர விலங்கைத் தேடி, அந்த மாபெரும் இராட்சத மிருகத்தை வேட்டையாடுவதற்காக, பெரியோரின் சொல்லைக் கேளாமல், கில்கமேஷ் மற்றும் என்கிடு, தங்களின் பயணத்தை மேற்கோள்கின்றனர். இந்தப் படத்தில் சிறுத்தைப்புலியை துரத்த வேண்டாம் என்னும் தங்களின் மேல் அதிகாரியில் சொல்லைக் கேளாமல், இரு நண்பர்களும் அந்த வீரப் பயணத்தை எடுக்கின்றனர். கிலகமேஷுக்கு பயமுறுத்தும் கனாக்கள் வருகின்றன. என்கிடு அவனின் கனவுகளை நல்லெண்ணங்களாக உணர்த்தி, சாகசத்தைத் தொடர்கிறான். நண்பன் என்கிடுவின் மரணத்திற்குப் பிறகு, மரணமற்றப் பெருவாழ்வை நோக்கிய தேடலை கிலகமேஷ் மேற்கொள்கிறான். இதுதான் இந்தப் படத்தின் அடிநாதம்.
தீவிரவாதம் என்னும் சிறுத்தைப்புலியைத் தேடி அடக்க நினைத்த மார்க்கோவ் என்னும் என்கிடு இறந்துவிடுகிறான். அவனின் உற்ற தோழனாலும் அதை சட்டென்று அடக்க முடியாது. ஒரு தந்தையாக, அனாதையானக் குழந்தையை இரட்சிப்பதில், தன்னுடைய இறவாத்தன்மையை உணர்வதாக ஹாமில்டன் என்னும் கில்கமேஷைப் பார்க்கிறோம். அப்படியானால், தாய்மைக்கு, இங்கே என்ன இடம் என்பதை பெண் இயக்குநர் சாரா சொல்லாமல் விட்டுவிடுகிறார். ஆனால், பெண்ணாக இருப்பதினாலேயே, ஒரு ஆணிற்குள் அடக்குண்டு இருக்கும் பொறுப்பையும், குழந்தைமையைப் பேணும் தாய்மை குணத்தையும் அவரால் பூடகமாக உணர்த்தமுடிகிறது. ஆண் இயக்குநர்கள் எடுக்கும் படங்களின் ஆண் கதாபாத்திரங்கள் ஆவேசமாக இயங்குவார்கள். துப்பாக்கியும் கையுமாக, இரத்தம் படிந்த கறைகளுடன் போர்களில் உலா வருவார்கள். அது ஆடவர்களின் ஆண்மையை நிலைநிறுத்துவதற்காக ஆடவர் எடுக்கும் படம். இது மனிதரின் குணத்தை உணர்த்துவதற்காக, பெண்கள் அதிகம் உலாவராதத் திரைக்கதையில், ஆண்களின் பராக்கிரமத்தை உணர்த்தும் பெண் எடுத்த படம். திரைப்படத்தின் தலைப்பையேப் பாருங்களேன். தி கிரேட் மான் – மாபெரும் ஆண்மகன்: ஆண்மகனுக்கு என்ன இலட்சணம்?
இந்தப் படத்தில் பெரிய கதாபத்திரங்களில் பெண்கள் கிடையாது. ஆண் என்பவன் வாள் ஏந்துவான்; சுட்டுத் தள்ளுவான்; சாப்பட்டைக் கொண்டு வருவான்; அதெலாம் இங்கே காண்பிக்கப்படுகிறது. ஆனால், நல்ல மனிதர் என்பவர், சக மனிதருக்கு மரியாதை தருவார். அவரின் நிலை, நாடு, அரசியல், இனம், மொழி, மதம், போன்ற சின்னங்களை ஒதுக்கி, சக நேசனாக நடத்துவார். இந்த உலகமோ, சொந்த நாடோ, அதைச் செய்யாவிட்டாலும் கூட… தன்னுடைய அண்டை அயலாரை அவ்வாறு நடத்துபவரே ‘தி கிரேட் மேன்’.
இந்த சமூகத்தில் நல்ல மனிதனாக வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? போரில் அடிமைகளாக ஆனவர்களை வெற்றி கொண்டவர்கள் எவ்வாறு நடத்த வேண்டும்? வேண்டாத சண்டையின் நடுவே அகப்பட்டு கொண்டவர்களை எவ்வாறு மீட்க வேண்டும்? இதற்கெல்லாம் சரியான பதில் எவரிடமும் கிடையாது. ஆனால், ‘தி கிரேட் மேன்’ அதற்கான விடைகளை நோக்கி நம்மை செலுத்துகிறது.
ருக்மிணி, (சத்ய)பாமா, ராதா – மூன்று நாயகிகள். பாமா ஆக ஷ்ரதா ஸ்ரீநாத் (நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்தவரேதான்).
பாடல்கள் நன்றாக பொருந்துகின்றன. “அலைபாயுதே கண்ணா” கூட உண்டு.
3. தஞ்சாவூர் ஷங்கர் அய்யரின் தில்லானா; ஆனந்த பைரவி ராகம்; இசை: மகேஷ் இராகவன்; பாடுவோர்: வினோத் கிருஷ்ணன், சுஷ்மிதா ரவிக்குமார்; மிருதங்கம்: விவேக் ரமணன்: EDM-ised version of Thanjavur Shankar Iyer’s thillana in Ananda Bhairavi ragam, performed by Vinod Krishnan, Sushmitha Ravikumar with Vivek Ramanan on mridangam. Music arranged by Mahesh Raghvan
முத்தமிட்டாள் யசோதா… முற்றத்தில் நல்முத்தை எடுத்து, எத்தனையுன் மகிமைகள்?! தேவகியின் மகனே!! சரணம் எத்தனையோ ஆய்ச்சியர்கள், கையிலேந்திய மாணிக்கமே!துஷ்டனான கம்சனை, கொன்றதுன் கை வைரமோ? (2) ஒளிபொழியும் மூன்று லோகத்தில், மரகதமாய் படர்ந்தாய்! (2) எங்கள் உள்ளே வாசம் செய்யும் சின்ன கிருஷ்ணனே! (2) (முத்தம்…) ரதிதேவி ருக்மிணியின் அதரத்தில் நீ பவழமோ? கோவர்த்தனம் சுமந்த கோமேதகம் நீயோ? (2) என்றும் சங்கு சக்கரத்தின் நடுவில் நிற்கும் வைடூர்யமே! (2) கதியென்றோம் எமைக் காப்பாய்! கமலக் கண்ணா !! (2) (முத்தம்…) காலிங்கனின் தலைமேலே நர்த்தனமாய் புஷ்பராகமே!என்றென்றும் ஸ்ரீவெங்கடாத்திரியில் நின்று ஆளும் நீலமே!! (2) பாற்கடலில் அற்புதங்களில், ரத்தினமாம் அற்புதமே! (2) பாலகனாய் திரிந்தாய் பத்மநாபனே !! (2) (முத்தம்…)
5. கிருஷ்ணருக்கு முன்பே காதல் இருந்தது என்பதற்கு ஆர்ச்சி சாட்சி. ஆர்ச்சி கதாபாத்திரத்திற்கு பெட்டி + வெரோனிகா என்று இரட்டை நாயகிகள். எண்பதுகளில் சுனௌதி என்றொரு ஹிந்தி தொடர் வந்தது. அதில் வரும் ரெட்டை வால் குருவி போன்ற பாத்திரப் படைப்பு இன்றும் கிளரவைக்கிறது.
6. ஆனால், வெறும் ஆண் பார்வை என்று சொல்ல முடியாத பாத்திரப் படைப்புகள் & வசனங்கள். “சத்யா” கதாபாத்திரம் துவக்கக் காட்சியில் நாயகனை விட்டு விலகும் காட்சியைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். “நான் ஒன்றும் உன் உடைமை அல்ல! நீ எவருடன் பழகச் சொல்கிறாயோ, அவர்களுடன் மட்டும் நட்பு பாராட்ட…” என்று “கிருஷ்ணா”வை விட்டு விலகும் ஆளுமை கலந்த நாடியறியும் பயணத்தைத் துவக்குவதில் மகளிர் எண்ணத்தை உரைக்கிறார்.
7. அந்த மாதிரி ஓரிண்டு காட்சிகள் தவிர இது பாலு மகேந்திரா, மஹேஷ் பட், காக்டெயில் போன்ற கொண்டாட்ட படம் இது. “உனக்கு பீரியட்ஸ் டைம் போல – that time of the month” என்று காதலியின் கோபத்தை உதாசீனம் செய்வது முதல் “எல்லோர் மீதும் பிரியம் வருகிறது, இச்சை தோன்றுகிறது” என்பதை நியாயப்படுத்துவது வரை – அக்மார்க் ஆண் படம்.
8. யாராவது, எந்த மடையனாவது பழைய காதலியின் உடன் எடுத்த புகைப்படங்களை ஃபோனில் வைத்து இருப்பானா? அதெல்லாம் பலான படம் போல் பத்திரமாக எங்கேனும் கிளவுட் டிராப் பாக்ஸ் கணக்கில், ரகசியமாக எவருக்கும் தெரியாமல் சேமித்து வைக்க வேண்டாமா? இந்த மாதிரி டெக் தெரியாத கிராக்கி எல்லாம் எப்படி எட்டு பொண்டாட்டி வைத்து சமாளிப்பான்?
9. இதன் அடுத்த பாகத்தை சத்தியமாக எதிர்பார்க்கலாம். பகவத் புராணப்படியும் ஜெயமோகன் எழுதிய வெண்முரசு இந்திரநீலம் படியும் கண்ணன் ஜாம்பவதி, கலிந்தி, மித்ரவிந்தா, நக்நஜித்தி, பத்ரா, லஷ்மணா மற்றும் ருக்மிணி, சத்யாபாமா, என்னும் எட்டு நாயகியரை கொண்டவர்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde