Tag Archives: சினிமா

தக் லைஃப் – வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள்

  1. படம் பிடித்திருந்ததா? – ஓம்; ஆம்! ஆமாங்க…
  2. ஏன்? – காக்கி சட்டை, மகாநதி, புன்னகை மன்னன் என பல முக்கிய கமல் படங்கள் அவ்வப்போது தெரிந்தாலும், இது புத்தம்புதிய ‘நாயகன்’
  3. முதல் பாதி எப்படி? – உச்சஸ்தாயி. அழுத்தம். பாசாங்கற்ற பளிச்.
  4. இரண்டாம் பாதி? – தக் லைஃப் இரண்டிற்காக பாக்கி வைக்காமல் எடுத்ததற்கு ஷொட்டு
  5. ஏமாற்றிய தருணங்கள் – நாசர் நடிப்பு/கதாபாத்திரம்; நாலு பேரால் நினைவில் வைக்க முடியாத வசனம்; அண்ணன் – தங்கை பாசமலர்
  6. உற்சாக தருணங்கள் – பாலைவனம், பனிவனம், டெல்லிவனம், அலைவனம் என கேமிரா; ரீங்கரிக்கும் பொருத்தமான இசை; நான் எப்பொழுதாவது சொல்வேன் என்று நினைத்திரவே இராத: ‘சிம்பு அவர்களின் நடிப்பு!’
  7. த்ரிஷா – 96 போன்ற குப்பை படங்களில் பொம்மையாக வந்தவர் சும்மா ராணியாக ஜொலிக்கிறார்.
  8. பாடல்கள் – பாதிப் பாடல் மட்டுமே வெள்ளித் திரையில். மீதி அடுத்த அராஜக வாழ்க்கையில்
  9. பிடிக்கவில்லை என்பவர்கள் – நன்றாயிருக்கிறது என்றால் கண்ணியவான் வேசம் போய்விடுமோ என்னும் பயம் கொண்டவர்கள்
  10. மொத்தத்தில் – கமல் ரசிகன் என்றால் கண்ணிலேயே நிற்கும். மணி ரத்னம் விரும்பி என்றால் மனதில் லயிக்கும். பூமர் என்றால் ரசிக்கும்.

தக் லைஃப் – குறியீடுகள்

1. டெல்லி ராஜ்ஜிய போட்டிகள்:
– இந்திரா காந்தி x சஞ்சய் காந்தி (கமல் x சிம்பு)
– ஐஷ்வர்யா லஷ்மி – ராஜீவ் காந்தி
– சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி – ராகுல் காந்தி
– அசோக் செல்வன் – ஜெயப்ரகாஷ் நாராயண்
– நாசர் – லால் பகதூர் சாஸ்திரி
– ஜோஜு ஜார்ஜ் – மொரார்ஜி தேசாய்
– மகேஷ் மஞ்சரேகர் – ஜனாதிபதி நிக்சன்
– த்ரிஷா – மாருதி சுஸூகி
—-

2. ஈடிபஸ் என்கிறார் சுதிர் ஸ்ரீனிவாசன்

3. ஏகலைவன் – சிம்பு
உயிர் போன்ற கட்டைவிரலைக் கேட்பார் துரோணர்.
வளர்ச்சியையும் திறமையையும் கண்டு அச்சம் கலந்த பொறாமை கொள்வார் அர்ச்சுனர் கமல்.
மாறாப்பற்றைப் போன்ற அடிமைத்தனத்தை எதிர்பார்ப்பார் கமல் என்னும் ஆசான்.
—-

4. ஒரே பெண்ணை ராமனும் விரும்புகிறார்.
பத்து தல அசுரனும் நாடுகிறார்.
அவர் –> த்ரிஷா.
ராவணன் என்னும் சிம்பு, சீதையை சிறையெடுக்கிறான்.

5. புராணத்து சீதையை நிஜ வாழ்வில் த்ரிஷா என்னும் நட்சத்திரத்தின் குறியீடு.
இது உங்களைக் குழப்பலாம்.
கமல்தனமாக யோசியுங்கள்.
விண்ணைத் தாண்டி வந்த மன்மதன் அம்பு எவ்வாறு இரு முரடர்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கியது?
—-

6. சீஸர் என்கிறார் சுதிர் ஸ்ரீனிவாசன்

7. அபிமன்யு – கமல்
துரியோதனன் (சிம்பு)
துரோணாச்சாரியார் (நாசர்)
கர்ணன் (ஜோஜு ஜார்ஜ்)
கிருபர் (பகவதி பெருமாள் (அ) பக்ஸ்)
துச்சாதனன் (அர்ஜுன் சிதம்பரம்)
பீஷ்மர் (இளங்கோ குமாரவேல்)
—-

8. மகாபாரதம் என்றாலே வெண்முரசு.
ஜெயமோகன் போன்ற இலக்கிய பிதாமகர் பாத்திரத்தில் ரங்கராய சக்திவேல் நாயக்கர்!
அவரின் அண்ணன் போன்ற சுந்தர ராமசாமி ஆக நாஸர்.
அவரின் மகன் போன்ற வழித்தோன்றல்களை நாயக்கரே உருவாக்குகிறார்.
சதானந்த் போன்ற சாநி… மன்னிக்க… எதிரணிக்காரர்களுக்கும் விஷ்ணுபுரம் விருது கொடுத்து நேசக்கரம் கொடுக்கிறார்.
நாயக்கரைத் தவிர அவரின் அடிப்பொடியை நாடி, அமரன் பக்கம் வெகுஜனம் சாயும் போது விமர்சன மழையைப் பொழிகிறார்.
அப்படி என்றால், ‘இந்திராணி’ யார்? – சாகித்ய அகடெமியா? ஞானபீடமா??

9. ரொம்ப யோசிக்காதீங்க – இது நவீன ‘வீரபாண்டிய கட்டபொம்மன்

10. அதுவும் இல்லை – சிலப்பதிகாரம் + மணிமேகலை
– கோவலன் – த்ரிஷா
– கண்ணகி x மாதவி (கமல் x சிம்பு)
– ஐஷ்வர்யா லஷ்மி – கவுந்தி அடிகள்
– கருணாநிதி – மணிமேகலை
– அட்சய பாத்திரம் – தமிழ் நாடு
– நெடுஞ்செழியன் – பார்வையாளர் ஆகிய நீங்கள்
– கோப்பெருந்தேவி – வாசிக்கும் தாங்கள் தான்!

வேட்டையன் வ.கே.கே.

1. இது ரஜினி படமா?
ஆமாங்க… அப்படித்தாங்க தலைப்பிலும் முன்னோட்டத்திலும் சொல்லிக் கொள்கிறார்கள்

2. அனிருத் இசை எப்படி?
ரஜினி படத்துக்கு யார் இசையமைச்சாலும் ஒரே மாதிரிதானே இருக்கும்! தர்பார் மாதிரி, ஜெயிலர் மாதிரி… ஒரே மாதிரி!

3. படம் எப்படி இருக்கு?
ரஜினி வெறியர்னா பல முறை பார்க்கலாம். இயக்குநர் ஞானவேல் பிரியர்னா இரண்டு முறை. சினிமா தாகம் கொண்டவர்னா நீலச்சட்டை மாறன் அலுக்கும் வரை.

4. உங்களுக்கு படம் பிடிச்சிருந்ததா?
நான் ப்ரியா முதல் லிங்கா வரை எல்லாமே நல்லா இருந்ததா நெனக்கிறவன். அவர் நடிச்சா அது ஆஸ்கார்.

5. அபிராமி?
முத்தமென்றால் கமலின் விருமாண்டி..
நடிப்பென்றால் ரஜினியின் வேட்டையன்.
நினைப்பென்றால் ஹம்மா… ஹம்மா (மிடில் கிளாஸ் மாதவன்)

6. வெள்ளித்திரையில் ஓடுமா?
தீபாவளிக்கு சன் டிவி.
கிறிஸ்துமசுக்கு அமேசான்.
அதன் பிறகு ஐபிடிவி.

7. இது யாருடைய படம்?
ஃபாஹத் ஃபாசில் மீண்டும் மீண்டும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னப்படும் என்பதை நிரூபிக்கும் படம்.

8. கதையும் வசனமும்?
அதெல்லாம் ரஜினி படத்தில் தேவையா என்ன? இருந்தாலும் ஓரிரண்டு ‘பேட்ட’ போன்ற அரிதாரங்களும் ’உன்னையக் கட்டிப் பிடிச்சுக்குவேன்; இல்லே வெட்டி சரிச்சுடுவேன்’ போன்ற அண்ணாத்த பன்ச்கள் கூட இல்லாதது ஞானவேலின் திமிர் கலந்த அலட்சியம்.

9.படம் உங்களுக்குப் பிடிக்கலையா?
இந்தியன் 2 போன்ற ஷங்கர் கொடுமைகளுக்கு இதெல்லாம் கோடி தரம் மேல். மெக்காலே என்பவர் இந்திய நவீனக் கல்வியின் பிதாமகன் என்பதெல்லாம் கோடி தரம் புளித்துப் போன பிரச்சாரம். படம் வேலை செய்வது இந்த இரண்டு துருவ உச்சநிலைகளுக்கு நடுவே எங்கேயோ கேட்ட குரல்.

10. லிங்கா போல்… பாபா போல் இருக்கிறதா?
அதெல்லாம் மசாலா. இது தீபாவளி லேகியம்.

அவதூறு வழக்கும் அவதூதர்களும்

மஹராஜ் – அசப்பில் மோடியைச் சொல்கிறார்களோ என்னும் சம்சயம்.

எல்லோருக்கும் குழந்தையைத் தருகிறேன் என்கிறார்.
தான் மனிதனே அல்ல என நம்புகிறார். தெய்வாம்சம் ஆகவே நடந்து கொள்கிறார்.
அவரின் சீடர்கள் மகராஜை தெய்வமாகவேப் பார்க்கிறார்கள்.

நல்ல வேளை. கவனமாக எந்த நேரடி ஒப்பிடலோ, மறைமுக வசனமோ, குறிப்பால் உணர்த்தும் காட்சியோ பா.ஜ.க.வையோ பிரதம மந்திரி நரேந்திர மோடியையோச் சொல்லவில்லை.

இரு நூறாண்டுகள் முன்பு நடந்த அசல் சம்பவங்கள். நிஜ நாயகரின் பெயர் கர்சன் தாஸ் முல்ஜி – தயானந்த சரஸ்வதி போல்… ராஜா ராம் கோகன் ராய் போல்…

சமூக சீர்திருத்தவாதிகளைக் குறித்து பள்ளி புத்தகங்களில் படித்தவுடன், இவர்களை ஏன் படமாக எடுக்காமல், தூர்தர்ஷனில் நாடகமாக மட்டுமே போடுகிறார்கள் என்னும் சந்தேகம் கலந்த சோகம் எழுந்ததுண்டு. அப்பொழுது ஆமிர் கான் நடிக்க வந்த காலம்.

இப்பொழுது, ஆமிர் கான் மகனின் முதல் படம்.
முந்தையத் தலைமுறை நாயகர்கள் எல்லாம் மசாலாப் படங்களில் அறிமுகம் ஆனவர்கள்.

ஃபூல் அவுர் காண்டே – அஜய் தேவ்கன்
மைனே பியார் கியா – சல்மான் கான்
சான்வரியா – ரன்பீர் கபூர்
கஹோ நா பியார் ஹை – ஹ்ரிதிக் ரோஷன்
பான்ட் பாஜா பாராத் – ரன்வீர் சிங்
பாபி – ரிஷி கபூர்
ஹீரோ – ஜாக்கி ஷ்ராஃப்
பர்சாத் – பாபி தியோல்
கயாமத் ஸே கயாமத் தக் – ஆமிர் கான்
தீவானா – ஷாரூக் கான்

எல்லோரும் ஆடலும், பாடலும், காதலும், அடிதடியும் கொண்டு வெள்ளித்திரைக்குக் கொணரப்பட்டவர்கள். ஆனால், ஜுனைத் கான் வேறு மாதிரி களத்தில் இறங்கி இருக்கிறார்.

ஆஸ்காருக்கு பாடுபட்ட ‘டைட்டானிக்’ நாயகர் லியொனார்டோ டிகப்ரியோ வரலாற்று நாயகர்களாக பல படங்களில் நடித்தவர். அவர்களின் சரித்திரங்களையும் சாகசங்களையும் தகிடுதத்தங்களையும் நடித்து அகாதெமி விருது பெற்றவர்.

ஆமிர் பையனுக்கும் அதே ஆசை. ஹாலிவு படங்களில் கொஞ்சம் நியாயம் இருக்கும். வில்லனுடைய பார்வையைச் சொல்வார்கள். சமய, சந்தர்ப்பங்களை விளக்குவார்கள். சூழ்நிலைக் கைதியாவதை உணர்த்துவார்கள்.

மஹாராஜ் – இங்கெல்லாம் சறுக்குகிறது. ஹவேலி ஏன் உருவானது? எவ்வாறு அதன் உறுப்பினர்களைக் கட்டுக்குள் வைத்திருந்தது? பெரிய சமாஜ், சங்கர மடம் போன்றவற்றிற்கு ஏன் அவ்வளவு செல்வாக்கு கிடைத்தது? எப்படி வியாபாரத்தை உள்குழுவிற்குள் வைத்து, செல்வத்தைப் பெருக்கினார்கள்? – இது போன்ற சம்பவங்களைக் கொணர்ந்திருக்க வேண்டும். மகராஜின் இன்னொரு முகத்தைக் காண்பித்திருக்க வேண்டும்.

ஒரு வில்லன்; ஒரு கெட்ட விஷயம்; ஒரு நல்லவன் – எவ்வாறு தன் நாவன்மையாலும் எழுத்துத் திறமையாலும் அதிகாரத்தை வீழ்த்துகிறான் என்பதற்கு ஊறுகாயாக இரண்டு காதலிகளை வைத்து கச்சிதமாகக் கதையை முடித்து இருக்கிறார்கள். சுவாரசியமான, பார்க்க வேண்டிய படம்.

ஜெய்தீப் அலாவத் – வாழ்ந்திருக்கிறார். அடுத்த படத்தில் நவாசுதின் சித்திக்கி மாதிரி ரஜினி கையால் அடி வாங்குமளவு அசத்தியிருக்கிறார்.

ஆமிரும் புத்திரரும் அடுத்து எந்த மதகுருவை கையில் எடுப்பார் என நினைக்கிறீர்கள்?

தி.மு.க.வும் லவ்வர் திரைப்படமும்

”லவ்வர்” திரைப்படத்தைக் குறித்து பக்கம் பக்கமாக நண்பர்கள் எழுதி இருக்கிறார்கள்.

பட்டியல் கொஞ்சம் பெரிய பட்டியல்: சுரேஷ் கண்ணன் மட்டும் ஐந்தாறு தடவை; அபிலாஷ் இரண்டு, மூன்று முறை; அரவிந்த் வடசேரி; ச.ந. கண்ணன்; ஹரன் பிரசன்னா கொஞ்சம் காண்டாகி இருக்கிறார்; சுகுணா திவாகர்; தாமிரா ஆதி; அய்யனார் விஸ்வநாத்; விஷ்வக்சேனன்; பிரபு தர்மராஜ்; தமிழினி கோகுல் ப்ரசாத்; பக்கம் பக்கமாக எழுதித் தள்ளும் யமுனா இராஜேந்திரன் (நாலந்து வரிகள்தான்); சௌம்யா ராகவன்; தனுஜா ஜெயராமன்; ப்ரீதம் பீதாம்பரம்; தமிழ்ப்பிரபா; சிவகுமார் வெங்கடாசலம்

இவர்களின் விரிவான பார்வையைத் தாண்டி என்ன புதியதாய் எழுதி விட இயலும்?

முன்னெல்லாம் விகடன் மதிப்பெண் போட்டால் சரியாக இருக்கும் என்பார்கள்.
இப்பொழுது வெ. சுரேஷோ ஹரன் பிரசன்னாவோ சுரேஷ் கண்னனோ சொன்னால் சரியாக இருக்கும் எனலாம்.

லவ்வர் நல்ல படம். தமிழில் இந்த மாதிரி தரமான சம்பவங்கள் எப்பொழுதாவது மட்டுமே நிகழும். வசனம், கதாபார்த்திரம், இடம், சூழல், என எல்லாம் களை கட்டும் படம்.

எல்லா பிம்பங்களையும் இரு வேறு பார்வையால் உடைக்கும் ஆக்கம்:
1. பெண்கள் பின்னாடி போகும் ஆண் என்றால் அந்தக் காரணம் மட்டுமே.
2. கல்லானாலும் காதலன்; புல்லானாலும் புருஷன் என்பது ஆணுக்கும் பொருந்தும்.
3. கல்லூரி காலத்தில் ‘மின்னலே’ என ‘அலைபாயுதே’ மணம் புரிந்து ஐந்தாண்டுகள் ஆனால் என்ன நடக்கும்?
4. தம் அடித்தால் கெத்தாக இருக்கும்; ஆனால், ஜம்மென்று மலையேறுவது எல்லாம் நாக்கு தள்ளும்.
5. 96 மாதிரி கல்லூரி மீள் சந்திப்பிற்கு வருவோருக்கு எல்லாம் ஒரே குறிக்கோள்: ‘நீ நல்ல, பெரிய ஆளாயிட்டியா? உன்ன விட எனக்கு சம்பளம் ஜாஸ்தியா?’
6. அர்ஜுன் ரெட்டி, அனிமல், வரிசையில் படம் எடுத்தால் பெண்களும் ரசிப்பார்கள்

7. படமே ஒரு பெரிய குறியீடு:

  • அ) மணிகண்டன் – திராவிடக் கட்சிகள்
  • ஆ) கௌரி ப்ரியா – தமிழக மக்கள் / வாக்காளர்கள்
  • இ) சாஃப்ட்வேர் நிறுவனத்தில் அவளுடைய மேலாளராக (அல்லது டீம் லீடர்) – அண்ணாமலை
  • ஈ) அலுவலகக் குழு – பா.ஜ.க.
  • உ) ‘அம்மா’ கீதா கைலாசம் – சசிகலா (புருஷனும் சரியில்லை; பையனும் ஆதரவில்லை)
  • ஊ) ’அப்பா’ சரவணன் – இராகுல் காந்தி (எல்லோருக்கும் சம பங்கில் லட்சங்களைப் பிரித்துக் கொடுக்கிறார்)

இந்த பின் நவீனத்துவ புரிதலுடன் அச்சுறுத்தல், பயம், ஆசை, சொத்து, உல்லாசம் எல்லாவற்றையும் இன்னொரு தடவை பாருங்கள்!

Merry Christmas: Movie Review

‘மெரி கிறிஸ்துமஸ்’ ரசிக்க வேண்டிய படம்.

வசந்தபாலனின் ‘வெயில்’ மாதிரி மறந்துவிடக் கூடிய அபாயம் இருந்தாலும்…
ஆதவனின் சிறுகதைகள் மாதிரி இந்தக் கால இளைஞரைக் கவராமல் போனாலும்…
எம்.எஸ்.வி.யின் குரல் ஏ.ஆர்.ரெஹ்மானுக்கும் குரல் கொடுத்து ‘காதலா… காதலா’விலும் நடித்தது போல் விஜய் சேதுபதி தமிழிலும் ஹிந்தியிலும் பின்னி இருந்தாலும் திராவிட நிறம் என்பதாலும்…

எவளாவது மொத முத நாளன்று ஊரு பேரு தெரியாதவன வீட்டுக்குக் கூப்பிடுவாளா?
இந்தக் கால Badoo, Bumble, eHarmony, Grindr, HER, Hinge, Match, OkCupid, Plenty of Fish, Tinder, Zoosk காலகட்டத்தில் இது சகஜம்.
இது முதல் முடிச்சு.

’96’ மாதிரி பள்ளிலிக்கும் பள்ளி பிராய அபிலாஷை எல்லாம் தாடி நரைத்த காலகட்டத்தில் நடக்கிற காரியமா?
காதல் என்பது காமத்தில் துவங்கி சற்றே ஒற்றை மோற்று விஸ்கி கலந்து வருங்காலத்தை யோசித்து வருவது என்பது நிஜம்.
இது இரண்டாம் முடிச்சு

கிறிஸ்துமல் படங்களுக்கு என்று ஹாலிவுட்டில் ஒரு சூத்திரம் இருக்கிறது. அது மீறுகிற விஷயமா?
விடுமுறைக் காலம். எல்லோரும் ஜோடி ஜோடியாக உலாவுகிறார்கள். குடும்பத்திற்கு பாரம்பரியமும் LGBTQIA2S+ அல்லாததும் முக்கியம். இந்த நிர்ப்பந்தத்தை கேலி செய்வது ஸ்ரீராம் ராகவனுக்கு அவசியம்.
இது மூன்றாம் முடிச்சு,

நான்காம் முடிச்சு முக்கியமான முடிச்சு. அதை நெட்ஃப்ளிக்ஸ் திரையில் பாருங்கள்.

இந்தப் படம் கொண்டாட்ட மனநிலையில் உணர்ச்சிகரமாக ருசிக்க வேண்டியது. Domaine de la Romanee-Conti சரக்கு ஏன் அதிக விலை என்றெல்லாம் கேட்காமல் விரும்பப்படுவது போல் சுவைக்க வேண்டியது.
நீங்கள் மும்பை நகரத்தை பம்பாய் என்று அழைக்கப் பட்ட காலத்தில் இருந்து உழன்றவரா?
கத்தோலிக்கர்கள் மட்டும் நத்தார் தினத்தைக் கொண்டாடுவார்கள் என்று நம்பாமல் அஞ்சலையையும் மேரியையும் டாவு அடித்தவரா?
ஐயங்கார் பேக்கரியில் கேக்கும்; திருப்பலியில் ரொட்டிக்காவும் வைனுக்காகவும் பங்கெடுக்காமல் குட்டைக் கால் பாவாடைகளுக்காவும் ஜெஸ்ஸிக்காவும் யேசுவை ஸ்தோத்திரம் செய்தவரா?

அதெல்லாம் நினைவேக்கம். கழிவேற்ற சிந்தனை. பழைய நெனப்புடா பேராண்டி!
ஆனால், படம் என்பது பின்னணி இசை; துள்ளல் திரைக்கதை; நினைவில் நிற்கும் நற்செய்தி!!
வெள்ளித்திரையில் பார்க்கவில்லையே என வருத்தப்பட வைக்கும் ஆக்கிரமிப்பும் இப்படியெல்லாம் கத்ரினா கைஃபை இதுவரைக்கும் சாகடித்திருக்கிறீரகளே என்னும் கடுப்பும் கொண்டிருப்பவர்களுக்கு சாலச் சிறந்த ஆக்கம்!!

அஞ்சனக்காரன்

விஜய்காந்த்தை முதன் முதலில் பார்த்தது விவித் பாரதியில். இளையராஜா என்று நினைத்த ‘உள்ளம் எல்லாம் தள்ளாடுதே’ பாடலில். இப்பொழுது பார்த்தால் சலீல் சௌத்ரி!

அசல் ரஜினி இருக்கும்போது இன்னொரு புரட்சியாளரும் ஏழைப் பங்காளரும் எனக்கெதற்கு என்று அவரின் ‘நூறாவது நாள்’ கூட தள்ளிப் போட்டு வந்த எனக்கு, தீபாவளி வந்தது. கூடவே, ‘வைதேகி காத்திருந்தாள்’ படமும் வந்தது.

ராத்திரி ஆனால் பாட்டு பாடுவதை நிறுத்திவிட்டு ரேவதியை கல்யாணம் செய்வானா!? அதை விட்டுவிட்டு வெறுமனே ‘ராசாத்தி… ஒன்ன காணாத நெஞ்சு’னு எவராவது புலம்புவானா? கதாபாத்திரம் நம்பமுடியவில்லை. எனினும், தமிழ் சினிமா. திகிலடையவோ அதிர்ச்சியடையவோ ஏதாவது செய்வார்கள். பத்து வருடத்திற்கு மேல் குடித்தனம் நடத்தி குழந்தைகள் பெற்ற மனைவியை எரியூட்டி விட்டு வரும்போதே, ‘எந்த வீட்டில் எவ வயசுக்கு வந்திருக்கா?’ என்பதை நேரடியாகக் கேட்டும் பார்த்தும் வளர்ந்த எனக்கு இயக்குநர் ஆர். சுந்தர்ராஜனும் மோசமான படைப்பாளி பட்டியலில் இணைந்து கொண்டார்.

அதன் பின்பும் ‘ஒலியும் ஒளியும்’ பாடல்கள் மூலமே விஜய்காந்த் ஈர்த்தார்.

ராதா படங்களைத் தேடித் தேடி பார்த்தபோது, ‘அம்மன் கோவில் கிழக்காலே’ அகப்பட்டது.
’முத்துமணி மாலை… என்னத் தொட்டுத் தொட்டு தாலாட்ட..’விற்காக ”சின்ன கவுண்டர்” கண்ணில் விழுந்தது.
அன்றைய (இன்றைக்கும் தான்) தேவதையான பானுப்ரியாவிற்காக ‘சத்ரியன்’ + ‘பரதன்’. இதில், ‘புன்னகையில் மின்சாரம்’ பாடலில் சுவர்களே தெரியாதவாறும் வெறும் வண்ணம் மட்டும் பின்னணியில் வருமாறு உழைத்ததாக சாந்தோம் மாணவர், அந்த நாள் நடன இயக்குநர் பிரபு தேவா சொல்ல, பாட்டின் சிறப்பு சற்றே புலப்பட்டது.
’சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு’ அர்த்தம் புரிந்ததா என்று பொறிப்புரை கொடுத்த விடலை பள்ளித் தோழர்களுக்காக ”பூந்தோட்ட காவல்காரன்”.
’மயங்கினேன்… சொல்லத் தயங்கினேன்!’ குறித்து தமிழ்த்திரை சுப்புடு சுரேஷ் கண்ணன் முதல் மரவண்டு வரை பலரும் மரத்தடி முதல் முகநூல் வரை எழுதி விட்டார்கள்.

விஜய்காந்த் நடித்த முதல் படம் – ‘ஊமை விழிகள்’.
விஜய்காந்த் கொடுத்த முதல் ஏ+பி+சி செண்டர் ஹிட் படம் – ‘அம்மன் கோயில் கிழக்காலே’; அவரின் பிற படங்களில் இதே கதாபாத்திரத்தை ஷோபனா, ரேகா என வாந்தியெடுத்தார்,

பிற்காலத்தில், ‘வல்லரசு’, ‘சிம்மாசனம்’, ‘பேரரசு’, ‘தர்மபுரி’ போன்ற படங்கள் இவரை தெலுங்கு மண்ணில் கொடி கட்டி — தம்பி பாலகிருஷ்ணாவுக்கு டஃப் கொடுக்க வேண்டியவர் தமிழ் மண்ணில் பிறந்த நம்மை இன்னும் கொடுமை செய்கிறாரே என மிரள வைத்தது.

எனினும், இன்றும் என் மனதில் நிற்பது, “தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை! மன்னிப்பு!!”.

விஜயகாந்த் உருவாக்கிய நம்பிக்கைகள் எனக்கு நிஜம்.
’இளைய தளபதி” ஆக விஜய் போன்றோர் உருவாக துணை நின்றது நிஜம்.
சினிமா கல்லூரியில் படித்து விட்டு, வெளியே வந்த புதியவர்களுக்கு துணை நின்றது நிஜம்.
யேசுவோ, மாரியம்மனோ, ஓரங்க நாடகத்தை ஒளியோவியராக்கிய விசுவோ எவருக்கும் கரிசனம் பார்க்காமல் நடித்து குவித்தது நிஜம்.
நடிகர் சங்கமோ, கேப்டன் தொலைக்காட்சியோ, சொந்த கட்சியோ நடத்தி, ஜெயித்தது நிஜம். (இது டி ஆர். ராஜேந்தர், பாக்யராஜ் போன்ற ஆளுமைகள் வழுக்கிய இடம்).
அவருக்கு என் நெஞ்சில் ஒரு பெக் அடிக்க நினைக்கும் போது, ‘ஒரு மூணு முடிச்சால முட்டாளா போனேன்… கேளு! கேளு!! தம்பீ!!!’ நினைவிற்கு வருவதோ, ’சாமிகளே… சாமிகளே… சொந்தக் கதக் கேளுங்க!!’ என தன் பாட்டுக்கு பாடும்போது என்னுள் ஒளிந்திருக்கும் அந்தக் கருப்புத் தங்கம் வெளிவருவதும் நிஜம்.

அஞ்சலிகள்!

தடுப்பும் தண்டவாளப் பயணமும்

ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:
அ) இந்தியாவில் உயிர்களுக்கு மதிப்பு கிடையாது.
ஆ) பதவியோ, பணமோ இருந்தால் மட்டுமே இந்தியாவில் மதிப்பு.
இ) நூற்றைம்பது கோடி பேரில் 15,000 பேர் இறப்பதெல்லாம் ஒரு சங்கதியே கிடையாது.
ஈ) மறுபிறவி, ஜனனமும் மரணமும் சுழற்சி என்றிருப்பதை இந்தியர்கள் அறிவதால் பிற உயிர்கள் இறப்பதை அலட்சியம் செய்கிறார்கள்.

1984-இல் ‘தி ஹிந்து’ நாளிதழின் கடைசி பக்கங்களைத் தவிர முகப்புப் பக்கத்தையும் படிக்கத் துவங்கிய காலம். நவம்பர் 84 முழுக்க இந்திரா காந்தியும் அவரைத் தொடர்ந்து வாரிசு ராஜீவ் அரசராக ஆன கதையும் அலங்கரித்தது. டிசம்பரில் போபால் விபத்து குறித்து அந்தத் தலைப்புச் செய்தியை பார்த்தபோது, கையாலாகாத்தனமும் கோபமும் ஆத்திரமும் அழுகையும் எல்லாமுமாக குழப்பமாக, இந்த அரசு மீதும், அதன் அதிகாரிகள் மீதும், நாடு மீதும், நாட்டின் விதிகள் மீதும், அசூயை கலந்த வெறுப்பு எழுந்தது.

எனக்குத் தெரிந்த யூனியன் கார்பைட் நிறுவனம் ‘எவரெடி’ (Eveready) பாட்டரி தயாரித்தது. என்னவர்களின் கண்களையும் எண்ணற்றவர்களின் உயிர்களையும் பறிக்கக் காரணமுமாய் இருந்தது. ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ என்று படங்கள் வந்த காலம். வெள்ளித்திரையில் கண்கவர் நாயகிகள் எளிதில் காதலில் விழுவது போல், திரைப்படங்களில் மட்டுமே புரட்சி வெடிக்கும் என விளங்கத் துவங்கியது. நிஜத்தில் வில்லன்கள் சௌகரியமாக படகுக் கார்களில் பவனி செல்வார்கள். ஐந்தரை இலட்சம் பேரை முடமாக்கினாலும் எந்தவித பின் விளைவுகளும் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல் சொகுசாக அடுத்த கைங்கர்யத்தில் இறங்கி விடுவார்கள்.

எத்தனை சாலை விபத்துகள்?
ஒவ்வொரு மாதமும் எவ்வளவு இரயில் தடம்புரண்டு, எதிருக்கெதிர் ட்ரெயின் மோதிக் கொண்ட இறப்புகள்?
சூரத்தில் கொடுந்தொற்று, சென்னையில் புயல், கடலில் சூறாவளியில் மீனவர்கள், நிலநடுக்கம், பூகம்பம், மழை வெள்ளம்…
அதெல்லாவற்றையும் விட திறமைக்கு வேலைகொடுக்காத சூழல். கொடும் பசி நிலவிய சமூகம்.

இந்திய தினசரிகளுக்கு எதிர்மறையாய் செய்திகளைத் தருவதில் இருந்த அசுரத்தனமா?
அல்லது நம் நாட்டில் நிஜமாகவே அலட்சியமும் அசட்டைத்தனமும் அசமஞ்சமும் சேர்ந்த நிர்வாகத் திறமையின்மையா?
ஒவ்வொரு அதிகாரியும் லஞ்சம் வாங்கக் கூசாதவர்களாக, அராஜகம் செய்தால் எந்தவித எதிர்விளைவும் கிடைக்காத சாக்கடைத்தனமா?

நெட்ஃப்ளிக்ஸில் ’ரெயில்வே மென்’ (The Railway Men) பார்த்தவுடன் தோன்றியது —> இன்று இதெல்லாம் மாறியிருக்கிறதா?
அல்லது செயல்துடிப்புடன் புத்திசாலித்தனமாக செயல்பட்டவர்கள், ‘கடமையைச் செய! பலனை எதிர்பாராதே!!’ ரகமா?

குறைந்த பட்சம் நல்லவர்களும் நேர்மையாக இயங்கியவர்களும் தன்னலம் பாராது இயங்கியவர்களும் இருந்திருக்கிறார்கள். என் ‘துரியோதனப்’ பார்வைக்கு அவர்கள் தென்படவில்லை.
பாலும் தேனும் இன்னும் இந்தியாவில் ஓடவில்லை. அவற்றை ஒடவைப்பதற்காக உண்மையாக உழைப்பவர்களை நாமும் கண்டுகொள்ளவில்லை.

நன்றி: https://aqli.epic.uchicago.edu/country-spotlight/india/

போர் தொழில் – திரைப்பட விமர்சனம்

அது ஒரு கிராமம். என் அம்மா அந்த வீட்டின் சாவியை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் யூடியுப் கிடையாது. கிடைத்த புத்தகத்தை எல்லாம் வாசித்து முடித்த பின், சுவாரசியமாக தன் பொழுதைப் போக்க சாவிக்கொத்து அகப்பட்டது.

சட்டென்று திரும்பிப் பார்த்தால், சுற்றிலும் குரங்குக் கூட்டம். அவளின் கையில் இருந்த மினுமினுப்பான தகதகப்பைப் பார்த்து இளித்துக் கொண்டிருந்த கூட்டம். அவருக்கு பயமாகி விட்டது. இவ்வளவு பேர் சுற்றி, புடைசூழ ரசிக்கிறார்களே!? இன்னும் விளையாட வேண்டுமா? இதைக் கொடுத்துவிட்டால் பூட்டை எப்படி திறப்போம்… வீட்டிற்குள் எவ்வாறு நுழைவது? இப்படி அகப்பட்டுக் கொண்டோமே… என்று பக்பக்.

இந்தக் கதையை என்னிடம் சொன்னவுடன் ‘போர்த் தொழில்’ படம் நினைவிற்கு வந்தது. குரங்குக் கூட்டம் போல் அந்தப் படத்தைக் கொண்டாடுகிறார்கள். அது தங்கம் அல்ல. ஏதோ, ஒரு சாவி வளையம். இந்தக் குரங்குகளுக்கு நடுவில், “இந்தப் படம் வெறும் இரும்பு.” என்று விளக்கினால் மேலே விழுந்து பிறாண்டி விடுமோ என்னும் படபடப்பு.

எனவே…

‘போர் தொழில்’ அருமையான காலகட்டத்தை இந்தக் கால தலைமுறைக்குச் சொல்லும் படம். ஆங்கிலத்தில், ‘ட்ரூ டிடெக்டிவ்’ (அசல் துப்பறிவாளர் – True Detective) மாதிரி லட்சக்கணக்கில் நல்ல தொடர்களும் படங்களும் இருக்கும்போது, அதை அபாரமான பலகுரல் கலைஞர்களின் தமிழாக்கத்தில் கேட்பதற்கு இது ஒரு மாற்று.

நாலே நாலு பேர் வைத்துக் கொண்டு சிக்கனமான படப்பிடிப்பை எவ்வாறு நடத்துவது? திரைக்கதை ஓட்டைகளை காலகட்டத்தை வைத்து ஒப்பேற்றுவது எப்படி? – சிறப்பாக சொன்னதற்கு வாழ்த்துகள்

குருதிப்புனல் படத்திற்கு பிறகு, ‘பயம்னா என்னன்னு தெரியுமா?’ வசனத்திற்கு அடுத்த பதிப்பு கொடுப்பது:
’பயந்தவன் எல்லாம் கோழை கிடையாது; பயந்து ஓடுறவன் தான் கோழை!’

குணா படத்தில், ’ரோஸி நல்லவதான்… ஆனா தப்பு; அம்மா தப்பு!’, வசனத்தை ஒத்த
‘உங்க வேலைய நீங்க சரியா பார்த்தீங்கன்னா; எங்க வேல கம்மியாகும்.’
அல்லது
‘நம்ம பண்ற வேலை நமக்கு மரியாதைய தேடித்தரும்!’

இதே போல், எல்லா வேலையுமே சிரத்தையாகவும் சிறப்பாகவும் முழுமையான ஈடுபாட்டுடனும் செய்வது சாலச் சிறந்தது. வள்ளுவர் பாதையில்:
‘கொலைகரானுக்கு கொலை ஒரு அடிக்‌ஷன்’

அப்படியானால் – போர்த்தொழில் ஒரு மைல்கல் அல்லவா!?!

நிறைய ஃபேஸ்புக் நண்பர்கள். சமூக ஊடக செல்வாக்காளர் வழி சந்தைப்படுத்தம்; ‘ஜெயிலர்’ போல் அரைத்த மாவை புளிக்காத மாவாகச் சொல்லும் திரள்கூட்டம். வெறும் சாவியை வைடூரியமாக்கும் குரங்குக் கூட்டம்.

சின்ன கல்லு!
பெத்த லாபம்!!

Classical Carnatic Ragas in Tamil Film Music

யூ டியுப் தளத்தின் சிறப்பம்சமே, “உனக்கு இது பிடிக்கலாம்!” என்று தெரியாத எவரோ ஒருவர் – எனக்குத் தெரிந்த தலைப்பில் உரையாடுவதை –> உங்களின் ஓடையில் காண்பிப்பது.

அப்படி தென்பட்டவர் தமிழ்ச்செல்வன் பாரதி.

குரங்கிற்கு எப்படி வாழைப்பழம் விருப்பமோ இளையராஜாவின் பாடல்கள் அப்படி எனக்குப் பிடிக்கும். தமிழ்செல்வன் பாரதி.மாதிரி கர்னாடக சங்கீதம் அறிந்தவர்கள் அதை வேறொரு விதத்தில் ரசிக்கக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

அதாவது ஓவியங்களை எண்ணெய் ஓவியம், வண்ணக்கோல், செயற்கை வண்ணக் கூழ்மங்கள், நீர்வர்ணம், மை ஓவியம், பூச்சு ஓவியம் என்றெல்லாம் வகைப்படுத்துவது போல், இசையையும் ஒழுங்காகக் கற்றுக் கொண்டிருந்தால் இதை இந்த முறையில் தொகுத்திருக்கிறார்கள் என்று அறியலாம். ஏன் அந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்? எப்படி அந்தப் பூச்சு இந்தத் தருணத்திற்கு பொருந்துகிறது? இதுவரை எவரும் செய்யாத புதுமையை எவ்வாறு புகுத்தியிருக்கிறார்? ஏன் வெறுமனே சாஸ்திரீய முறைப்படி பாடுவது அலுப்பையும் ; அதையே ராஜாவின் எண்ணத்தில் உருவாகும் பாடல் — பிரவாகத்தையும் கொடுக்கிறது?

ஃபாரம் ஹப் (The Forum Hub) என்னும் தளத்தில் பேசியது… தமிழ் ஃபிலிம் மியூசிக், டி.எஃப்.எம் பேஜ் (இப்பொழுது newtfmpage) என்றெல்லாம் கதைத்தது… அங்கே நாற்பது பக்கங்கள் இருக்கும். ஒவ்வொரு பக்கத்திலும் நூறு பதில்களும், பதிவுகளும் இருக்கும். இடையிடையே சில வைரங்கள் ஜ்வலிக்கும். தேடுவது கடினம். சட்டென்று புரியாத சதுஸ்ருதி தைவதம், அந்தர காந்தாரம், பிரமாண ஏகஸ்ருதி என்றெல்லாம் மிரட்டும். சல்லடை போட்டு சலித்து, அந்தப் பகிர்வுகளைக் கோர்வையாகத் தொகுத்து, ஒரேயொரு சினிமாப் பாடலையோ, ஒரு ராகத்தையோ, ஒரு விஷயத்தையோ பற்றி முழுமையாகக் கதை போல் சொல்ல எவராவது கிடைப்பாரா என்று ஏங்க வைத்தாலும் சோளப்பொரி கிடைத்தது.

திரள் சந்தைக்கான புகழ் பெற்ற முயற்சியாக சிக்கில் குருச்சரண் அதை பரவலாகப் பதிவாக்கி எல்லோருக்கும் கொண்டு சென்றார். அவரைப் போல் பலரும் ஏற்கனவே இது மாதிரி நிறைய முயற்சிகளும் எழுத்துகளும் பகிர்வுகளும் தந்திருந்தாலும், எல்லோரும் அறிந்த நபர் – எல்லோருக்குமான பதிவாக ஆக்கியதில் சிக்கில் குருச்சரணுக்கு முக்கிய இடம் உண்டு. ஜனரஞ்சகமாக இருக்கும். சுவாரசியமாக இருக்கும். நன்றாக எடிட் செய்து தொகுக்கப்பட்டிருக்கும். ரொம்ப தொழில்நுட்ப சங்கதிகள் சொல்லி அலுப்பு தட்டாமல், அதே சமயம் டெக்னிகலாக வேண்டும் என்பவர்களுக்கு நிறைய இடம் இருக்கும்.

அவர் வழியில் தமிழ்ச்செல்வன் பாரதி முக்கியமானவர். சிக்கிலார் போல் மேளகர்த்தா ராகம் என்று வகைப்பாடுகளைச் சொன்னாலும், மெட்டுக்கு ஏற்ற வார்த்தைகள், அந்தப் பாடலின் கூட்டிசையில் வீணையும் வயலினும் எவ்வாறு முக்கியமாகிறது என்பதில் மேற்கத்திய சங்கீத நுட்பங்கள், என்று உணர்த்துகிறார். நிரோஷா தாங்க எனக்குத் தெரியும் என்பவருக்கு சரிகமபதநி என்பதில் கடைசியில் வரும் நி என்னும் நிஷாதம் எவ்வாறு இசைஞானியின் பாடல்களில் கையாளப்பட்டிருக்கிறது என்கிறார். எல்லாவற்றையும் காலை நடை, பக்கத்தில் உறங்கும் செல்லப்பிராணிகள் என வித்தியாசமான, நேரடியான, பாசங்கற்ற விதத்தில் தயார் செய்து பரிமாறுகிறார்.

இந்த மாதிரி விஷயமெல்லாம் கேட்க குருகுலத்தில் காலந்தோறும் பணிவிடை செய்யவேண்டும். குருவிற்கு எப்போது உத்வேகம் வருகிறது என்று காத்திருக்க வேண்டும். ஒட்டுக் கேட்க வேண்டும். கேட்டதை இன்னொருவரிடம் சொன்னால், அந்த சீடன் நம்மை விட பிராபல்யம் ஆகி விடுவான் என்று விரித்துரைத்து, சந்தேக நிவர்த்தி செய்து, தெளிவாக்கிக் கொள்ளக் கூட முடியாத சூழலில் இருந்து சுதந்திரமாக எல்லோருக்கும் எல்லாவற்றையும் அள்ளித் தரும் அளவில்லா தகவல் கிடைக்கும் காலத்தில் வாழும் நாம் – கொடுத்து வைத்தவர்கள்.

அதற்கு முன்பே இவற்றையெல்லாம் தமிழிசையில் பாமரனுக்கும் கொண்டு சென்ற பாவலர் ராஜா ஆளுமையைப் புரிந்தவர்கள் பாக்கியசாலிகள்.

இராசாளி – ஜெயிலர்

அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு. அந்தக் கழுகைப் போலவே நாலைந்து போலிப் பறவைகள் உண்டு,

கழுகைப் போலவே உலா வரும். Prairie Falcon (Falco mexicanus), Red-Tailed Hawk (Buteo jamaicensis), Turkey Vultures (Cathartes aura), Black Kite (Milvus migrans) என நால்வரை உடனடியாக நினைவு கூறலாம். பருந்து, ராசாளி, கூளி, சுவணம் எனத் தமிழில் சொல்கிறார்கள்.

தூரத்தில் இருந்து பார்த்தால் எல்லாம் பெரிதாக இருக்கிறது. இறக்கையைப் பெரிதாக விரித்து பிரும்மாண்டமாகப் பறக்கிறது. கூகை குழறும் என்பார்கள்; கழுகு வீருடுகிறது என்பார்கள்; இரண்டும் முன்னே பின்னே கேட்காதவருக்கு அனைத்தும் கத்தல் சப்தம்.

உயரப் பறக்கும் கழுகிற்கும் இராஜாளிக்கும் என்ன வித்தியாசம் என்று இப்பொழுது ஏன் ஆராய வேண்டும்?

ஏன் என்றால், தலைவர் ஏதோ கழுகு, காகம் உவமேயம் சொல்லியிருக்கிறார் அல்லவா!?

கங்க பத்திரம் ஓர் கோடி கை விசைத்து அரக்கன் எய்தான்;
கங்க பத்திரம் ஓர் கோடி கணை தொடுத்து இளவல் காத்தான்;
திங்களின் பாதி கோடி, இலக்குவன் தெரிந்து விட்டான்
திங்களின் பாதி கோடி தொடுத்து, அவை அரக்கன் தீர்த்தான்.
6.18.109 (௧௦௯)

–கம்பராமாயணம், நாகபாசப் படலம்–இந்திரஜித், இலக்குவன் போர்.

பொருள்:– இநத்திரஜித், கழுகின்‌ சிறகுகளையுடைய அம்புகள்‌ ஒரு கோடியைக்‌ கைகளால்‌ தொடுத்து விரைந்து எய்தான்‌ ; இளவலாகிய இலக்ஷ்மணனும்‌ கழுகின்‌ சிறகுகளையுடைய ஒரு கோடி அம்புகளைத்‌ தொடுத்து அவ்வம்புகளைத்‌ தடுத்தான்‌ ; அரைச்சந்திரன்‌ போன்ற முகப்பினையுடைய கோடி அம்புகளை இலக்குவன்‌ ஆராய்ந்து இந்திரசித்தின்மேல்‌ விட்டான்‌ ; இந்திரசித்தும்‌ அரைச்சந்திர அம்புகளை கோடி தொடுத்து அவ்வம்புகளை அறுத்தான்‌.

குறிப்பு: – கங்கம்‌ – கழுகு. பத்திரம்‌ – சிறகு. கழுகின்‌ சிறகுகள்‌ பொருந்திய அம்புகள்‌ கங்கபத்திரம்‌ எனப்பட்டன. பாதிமதி போன்‌.ற முகப்பினை உடைய அம்புகள்‌ என்பார்‌, ’திங்களில்‌ பாதி’ என்றார்‌. இதுகாறும்‌ இந்திரசித்து விடுத்த அம்புகளை மட்டுமே அறுத்துக்‌ கொண்டிருந்த இலக்குவன்‌ இப்போது திங்களிற்‌ பாதியை ஒத்த அம்புகளை இந்திரசித்தின்மேல்‌ விடுத்தான்‌ என்றவாறு. தீர்த்தல்‌ – அழித்தல்‌.

விக்ரம் படத்தில் கமல் விதவிதமானத் துப்பாக்கிகளை வைத்து சுட்டுத் தள்ளுவார். அவருக்கு சளைக்காமல் ஜெயிலரில் ரஜினியும் ‘மனிதன்’ போல் ரகரகமாக குண்டு போடுகிறார்.

நடுவில் எதற்கு கம்பராமாயணம் என்று கேட்கிறீர்களா?

1993ல் ’கலைஞன்’ படத்தில் இந்திரஜித் என்னும் கதாபாத்திரத்தில் கலைஞானி நடிக்கிறார். அந்தக் கலைஞன் விக்ரமில் விட்ட அம்புகளை சமாளிக்க இளவல் ஜெயிலரில் எய்கிறார். இதைத்தான் அன்றே கம்பர் பாடியிருக்கிறார். அந்த கங்கபத்ரம் = பின் நுனியில் கழுகின் சிறகுகள் பொருத்தப்பட்ட அம்புகளை (பத்ரம் என்றால் சிறகு) இசை வெளியீட்டு விழாவில் குறிப்பால் உணர்த்துகிறார் இரஜினி.

அதெல்லாம் இருக்கட்டும்? படத்தை ரசித்தேனா? மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறதா? தமிழ் சினிமாவின் மைல் கல்லா? ரஜினியின் நடிப்பிற்கு சிகரமா? அடுத்த ஆர்.ஆர்.ஆர். மாதிரி ஆஸ்காருக்கு அனுப்பலாமா?

அகாடெமி விருதுகளில் புதியத் தலைப்பாக ‘செயற்கையாக தானியங்கியாக உருவாக்கிய உயிர் போன்ற இயக்கம் காட்டும் படங்களுக்கான விருது’ ஒன்றை வழங்கினால், அது நிச்சயம் ஜெயிலருக்குக் கிடைக்கும்!