Tag Archives: ஆசிரியர்

ஆரவிந்தன்

காலச்சுவடு

அரவிந்தன்
பிறப்பு: 1964

அரவிந்தன் (பி.1964) இதழாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இதழியல் துறையில் முப்பதாண்டுக் கால அனுபவம்கொண்டவர். இந்தியா டுடே, காலச்சுவடு, சென்னை நம்ம சென்னை, நம் தோழி ஆகிய இதழ்களில் பணியாற்றியுள்ளார். தி இந்து தமிழ் நாளிதழின் இணைப்பிதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார். இலக்கியம், தத்துவம், பெண்ணுரிமை, அரசியல், மொழி, திரைப்படம், கிரிக்கெட் ஆகியவற்றைக் குறித்த கட்டுரைகளை எழுதிவருகிறார். சிறுகதைகள், நாவல், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், அரசியல் விமர்சனம், மொழிபெயர்ப்பு, மகாபாரதச் சுருக்கம், திரைப்படம், கிரிக்கெட் குறித்தவையென இதுவரை பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் ‘சமயம் தமிழ்’ என்னும் இணையதளத்தின் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இதழியல் பயிற்சி வகுப்பு நடத்திய அனுபவமும் இவருக்குண்டு. தற்போது லயோலா கல்லூரியில் வருகைதரு விரிவுரையாளராக இதழியல் மாணவர்களுக்குப் பாடம் எடுத்துவருகிறார். விருதுகள் · தமிழ்ப் புத்தக நண்பர்கள் நடத்தும் மாதாந்தர விமர்சனக் கூட்டத்தில் இமையத்தின் படைப்புகள் குறித்து ஆற்றிய உரைக்கு 2016-17ஆம் ஆண்டுக்கான ‘ஆண்டின் சிறந்த உரை’ விருது. · பால சரஸ்வதி மொழியாக்க நூலுக்கு ‘கனடா இலக்கியத் தோட்டம்’ வழங்கும் ‘சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருது (2017).’

இணைப்புகள்

1. அரவிந்தன் | அருஞ்சொல்

https://www.arunchol.com/author/aravindan

2. அரவிந்தன் – Tamil Wiki

https://tamil.wiki/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D

காலச்சுவடு நிறுவனத்தில் பதிப்பாசிரியராகப் பணியாற்றி வந்த டி.இ.அரவிந்தன் இன்று (03-04-2026) முற்பகல் நாகர்கோவிலில் இயற்கை எய்தினார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகவியலாளராகப் பணிபுரிந்து வந்தவர். 1990களில் இந்தியா டுடே இதழில் பணியாற்றிய அவர் பிறகு காலச்சுவடு பொறுப்பாசிரியராக இருந்தார். இந்து தமிழ் திசை, மின்னம்பலம், சமயம்.காம், நம் தோழி, நம்ம சென்னை முதலிய இதழ்களிலும் பணியாற்றினர். கடந்த சில ஆண்டுகளாகக் காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் பொறுப்பில் இருந்து வந்தார். இந்து தமிழ் திசை நாளிதழ் இணைப்பிதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றிய போது இலக்கியம் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டவர்.  நாவல், சிறுகதை ஆகிய படைப்பிலக்கியத் துறைகளிலும் தொடர்ந்து இயங்கி வந்தார். சென்னையைக் களமாகக் கொண்டு அவர் எழுதிய ‘பொன்னகரம்’ நாவல் மிகுந்த கவனம் பெற்றது. ’பயணம்’ நாவலும் வேறுபட்ட களத்தைக் கொண்டது. சிறுகதை எழுதுவதில் தனித்த ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் வெளியான ‘வெல்கம் டூ மில்லெனியம்’ தொகுப்பு அதன் நவீனக் கருப்பொருள்களுக்காக போற்றப்பட்டது.  நவீன இலக்கிய விமர்சனத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஜெயகாந்தன் படைப்புகள் பற்றி அவர் எழுதிய நீண்ட கட்டுரை பல்வேறு விவாதங்களை எழுப்பியது. கிட்டத்தட்ட பத்துக் கட்டுரை நூல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் விளையாட்டில் தீவிர ஆர்வம் உடையவர். அது தொடர்பாக அவர் எழுதிய கட்டுரைகள் தனிநூலாகவும் வந்துள்ளன. பாலசரஸ்வதி தேவி வாழ்க்கை வரலாறு, டி.எம்.கிருஷ்ணாவின் நூல்கள் உள்ளிடப் பத்துக்கும் மேற்பட்டவற்றை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார். செம்மையாக்கத்தில் நல்ல அனுபவம் உள்ளவர். அவரது அகால  மரணம் பெரும் அதிர்ச்சி தருகிறது. காலச்சுவடு நிறுவனம் இப் பெருந்துயரை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறது.

Kannan Sundaram

#kalachuvadubooks #Aravindan #RIP

சோ தர்மன்

2005ம் ஆண்டு என்னுடைய “கூகை”நாவல் காலச்சுவடு வெளியீ டாக வந்து அந்த ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் விருதைப் பெற்றிருந்தது.விருதளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.அப்போது அரவிந்தன் காலச்சுவடு பதிப்பகத்தில்தான் பணியாற்றி வந்தார்.


            விருது வாங்க நான் போயிருந்தேன்.விருது பெறும் புத்தகத்தை பதிப்பித்த பதிப்பாளருக்கும்  விருது உண்டு.காலச்சுவடு நிறுவனத்தின் சார்பாக விருது வாங்க அரவிந்தன்  வந்திருந்தார்.மேடையில் முக்கிய மந்திரிகள் அரசு அலுவலர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.


       திடீரென்று ஒரு ஐ.ஏ.எஸ்.அதிகாரி மைக்கில் அறிவிக்கிறார்.
“அரசின் விருது பெற வந்திருக்கும் எழுத்தாளர்கள் அனைவரும் மேடைக்கு வலது புறம் சென்று வரிசையாக நிற்கவும்”
     இந்த அறிவிப்பை கேட்டதும் அரவிந்தன் கோபமாகிவிட்டார்.என்னையும் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு அந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரியிடம் போனார்.
“இங்க என்ன இலவச வேஷ்டி சேலையா கொடுக்கப் போறீங்க.எழுத்தாளர்கள் அனைவரையும் வரிசையில் நிற்கச் சொல்கிறீர்கள் “


அந்த கலெக்டர் அரண்டு போய்விட்டார்.
“,சார் மேடையில் யாரெல்லாம் இருக்கிறார்கள் பாருங்கள்”
“இருக்கட்டுமே நான் இப்போது தமிழ்நாடு அரசின் அழைப்பின் பேரில் கெஸ்ட்டாக வந்திருக்கிறேன்.எங்களை நீங்கள் அவமானப்படுத்துகிறீர்கள்.
“இப்படியெல்லாம் பேசினால் நீங்கள் மேடைக்கு வரமுடியாது”


“மேடையோ ஊடக வெளிச்சமோ எங்களுக்கு தேவையில்லை.இப்போதே எங்கள் செக்கை கொடுத்து விடுங்கள்.இப்படியே வெளியே போய் விடுகிறோம்.அந்தப் பணம் எங்கள் பணம் அதை வாங்காமல் வெளியே போக மாட்டோம். அரங்கத்திற்குள்ளேதானே படைப்பாளிகள் அனைவரும் இருக்கிறோம்.பெயர் சொல்லி அழையுங்கள்.நாங்கள் மேடையில் வந்து வாங்கிக் கொள்கிறோம். “


    நாங்கள் சொன்னது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அந்த கலெக்டர் மேடைக்குப் போய் விட்டார்.முதலில் கவிதை,அடுத்து சிறுகதை,மூன்றாவதாக நாவல்.எங்களை கடைசிவரை மேடைக்கு அழைக்கவில்லை.வரிசையாக நின்ற முப்பத்தியொரு பேருக்கும் கொடுத்த பின்னர் விழா முடிந்த பின்னர் எங்களை அழைத்து செக் கொடுத்தார்கள்.சந்தோஷமாக வாங்கிக் கொண்டு இருவரும் வெளியே வந்தோம்.


     ஒரு சுயமரியாதை உள்ள படைப்பாளியாக அரவிந்தன் அன்று என்னில் ஐக்கியமானார்.அப்புறம் பல தடவை சென்னையில் சந்தித்து பேசியிருக்கிறேன்.


   அவருடைய இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு.
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

.

அம்பை

அரவிந்தன், இப்படிச் செய்வது நியாயமா? என் ஒவ்வொரு நூலுக்கும் சலியாது உழைத்து, எந்த வேளையில் நான் தொந்தரவு செய்தாலும் இதமாகப் பேசும் இனிய நண்பர் நீங்கள். இப்போதுதானே என் முழுத் தொகுப்புக்கும் நீங்கள் செய்த வேலைக்கு என் அன்பளிப்பாக டி-ஷர்ட் வாங்கித் தந்தேன்? ‘நாகர்கோவில் வாங்க,  நான் சமைத்துப் போடுகிறேன். சேர்ந்து யோகா செய்யலாம்’ என்று இப்போதுதான் சொன்னீர்கள். இப்படித் திடீரென்று போகலாமா, அரவிந்தன்? பேரிழப்பு எனக்கு. நீங்கள் இல்லாத காலச்சுவடு அலுவலகத்தை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

இமையம்

https://youtu.be/soUMIIVoodE?si=VQShAXpM72rABqDk

https://youtu.be/soUMIIVoodE?si=VQShAXpM72rABqDk

மணா

காலச்சுவடு அரவிந்தன் மறைவு: எளிய அஞ்சலி!

யாரும் எதிர்பாராத வகையில் உயிரிழந்திருக்கிற காலச்சுவடு ஆசிரியப் பொறுப்பில் பங்கேற்று வந்த அரவிந்தனின் மறைவு, அவரை நன்கு உணர்ந்த நண்பர்களுக்கும் அவருடைய எழுத்தை வாசித்து வந்த வாசகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கும்.

திடீரென்று உயிரிழந்த அரவிந்தனுக்கு எளிய அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.

பத்திரிகையாளராக தமது எழுத்து வாழ்வை ஆரம்பிப்பதற்கு முன்பே, தீவிர இலக்கிய பரிட்சயம் கொண்டவராக இருந்த அரவிந்தன், ‘இந்தியா டுடே’ பத்திரிகையில் முக்கிய பொறுப்பில் இருந்தபோது பல முக்கியமான பங்களிப்பைச் செய்தவர்.

‘இந்தியா டுடே’ நிறுவனம் இலக்கிய இதழ்கள் தயாரிப்பை நடைமுறைப்படுத்தியபோது அதை முன்னின்று செய்து பெரும் கவனிப்பைப் பெற்றவர்.

இதைத் தொடர்ந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதலும் மிக முக்கிய பொறுப்பை ஏற்று, தனது பங்களிப்பைச் சிறப்புற செய்தவர். அவர் எழுதிய பல்வேறு கட்டுரைகள் பரவலான வாசகர்களின் கவனத்தைப் பெற்றவைகளாக அமைந்திருந்தன.

அரசியல், இலக்கியம் என்று மட்டுமல்லாமல், ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்ற பல்வேறு விதமான தத்துவார்த்தப் பின்புலம் கொண்ட பலரைப் பற்றி மிக எளிமையான விதத்தில், சாதாரண வாசகர்களிடம் கொண்டு சென்றவர்.

சிறுகதைகளிலும் கவனம் செலுத்தி இருக்கிற அரவிந்தன் கொண்டு வந்த புதைமணல் உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள் பெரும் வாசகர் கவனத்தைக் கொண்டிருந்தன.

இந்து தமிழ் திசை, மின்னம்பலம், சமயம்.காம், நம் தோழி, நம்ம சென்னை முதலிய இதழ்களிலும் பணியாற்றினர்.

நாவல், சிறுகதை ஆகிய படைப்பிலக்கியத் துறைகளிலும் தொடர்ந்து இயங்கி வந்தார். சென்னையைக் களமாகக் கொண்டு அவர் எழுதிய ‘பொன்னகரம்’ நாவல் மிகுந்த கவனம் பெற்றது.

’பயணம்’ நாவலும் வேறுபட்ட களத்தைக் கொண்டது.

சிறுகதை எழுதுவதில் தனித்த ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் வெளியான ‘வெல்கம் டூ மில்லெனியம்’ தொகுப்பு அதன் நவீனக் கருப்பொருள்களுக்காக போற்றப்பட்டது.

நவீன இலக்கிய விமர்சனத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஜெயகாந்தன் படைப்புகள் பற்றி அவர் எழுதிய நீண்ட கட்டுரை பல்வேறு விவாதங்களை எழுப்பியது. கிட்டத்தட்ட பத்துக் கட்டுரை நூல்கள் வெளியாகியுள்ளன.

கிரிக்கெட் விளையாட்டில் தீவிர ஆர்வம் உடையவர். அது தொடர்பாக அவர் எழுதிய கட்டுரைகள் தனிநூலாகவும் வந்துள்ளன.

பாலசரஸ்வதி தேவி வாழ்க்கை வரலாறு, டி.எம்.கிருஷ்ணாவின் நூல்கள் உள்ளிடப் பத்துக்கும் மேற்பட்டவற்றை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார். செம்மையாக்கத்தில் நல்ல அனுபவம் உள்ளவர்.

இலக்கியத் தளத்திலும் தொடர்ந்து இயங்கி கொண்டிருந்த அரவிந்தன், கடைசியாக காலச்சுவடு இதழின் ஆசிரியக் குழுவில் பங்கேற்று காலச்சுவடு தயாரித்து வந்த புத்தகங்களின் உருவாக்கத்திலும் சிறப்பான பங்களிப்பை செய்து வந்தார்.

எழுத்துலகில் இயங்கி வந்தபோதும், சுந்தர ராமசாமி உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளுமைகளுடன் நெருங்கிய நட்பில் தொடர்ந்து அரவிந்தன் இருந்து வந்தார் என்பது முக்கியமானது.

மிக சமீபத்தில் புதிய தலைமுறையின் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியிலும் பங்கேற்று அரசியல் குறித்த தன்னுடைய பார்வையை மிக சமீபத்தில் முன்வைத்து வந்தவர்.

அரசியல், சமூகம், இலக்கியம், மொழிபெயர்ப்பு என்று பல்வேறு தளத்தில் தொடர்ந்து இயங்கி வந்தவரான அரவிந்தனின் இழப்புக்கு அவருடன் நீண்ட காலமாகப் பழகியவன் என்கிற முறையில், ஆத்மார்த்தமான எளிய அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று அதிகாலை தூக்கத்திலேயே மாரடைப்பினால் உயிரிழந்த அரவிந்தனின் உடல் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, பள்ளிக்கரணையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, நாளை பிற்பகலுக்குப் பிறகு நல்லடக்கம் நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

#அரவிந்தன் #அரவிந்தன்மறைவு #அரவிந்தன்அஞ்சலி #பத்திரிகையாளர்அரவிந்தன் #எழுத்தாளர்அரவிந்தன் #காலச்சுவடுஅரவிந்தன் #இந்தியாடுடே #அரசியல் #சமூகம் #சிந்தனை #விமர்சனம் #தமிழ்சிந்தனை #தமிழ்எழுத்தாளர் #நினைவஞ்சலி #அஞ்சலி #Sundararamasamy #Writing #Literature #Translation #Politics #Society #JournalistAravindan #AravindanTribute #AravindansDeath #IndiaToday #Kalachuvadu #TamilWriter  #WriterAravindan #LiteraryTribute #சுந்தரராமசாமி #SundaraRamaswamy#kalachuvaduaravindanpassedaway #எழுத்து #எழுத்தாளுமை #இலக்கியம் #தமிழ்இலக்கியம் #நவீனஇலக்கியம் #மொழிபெயர்ப்பு

ஷோபா சக்தி

எழுத்தாளர் அரவிந்தனை அவர் ‘உலகத் தமிழ்’ இணைய இதழில் பணியாற்றிய காலம் தொட்டு அறிவேன்.  பின்பு அவர் பணியாற்றிய ‘காலச்சுவடு’ பதிப்பகம் குறித்து நான் கடுமையான விமர்சனங்களை எழுத்துகளில் முன்வைத்திருந்த போதும், என்னைக் காணும்போதெல்லாம் கசப்பின் நிழலே இல்லாமல் அன்புடன் உரையாடுவார்.  அரவிந்தனின் மரணச் செய்தி மனதைக் கலங்கடிக்கிறது. இன்னும் ஓர் நண்பரை இழந்தேன். நண்பர் அரவிந்தனுக்கு என் இறுதி வணக்கங்கள்.

போகன் சங்கர்

அஞ்சலி

அரவிந்தனின் பயணம்.

மரணம் எப்போதும் உயிரோடு இருப்பவர்களின் மனதில் குற்ற உணர்வை விட்டுச் செல்கிறது. தெரிவிக்காத அன்பு. தெரிவிக்காத மரியாதை. எடுக்காத அழைப்புகள். பதில் அளிக்காத செய்திகள் எல்லாம் சேர்ந்து ஒரு பரிதவிப்பை நம்மில் விட்டுச் செல்கின்றன.

குற்ற உணர்வு ஒரு சிறிய மரணம்.

எழுத்தாளர்களைச் சந்தித்தல் பற்றி முன்பொரு பதிவு எழுதி இருந்தேன். மிகச் சில எழுத்தாளர்களையே நான் என் வீட்டுக்கு அழைத்திருக்கிறேன். என் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். என் வீடு அதில் நீண்ட நாட்களாக வசிக்கும் ஒரு எழுத்தாளனுக்கே இன்னமும் தயாராகிக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மையான காரணம். அரவிந்தன் என் வீட்டுக்கு வந்த  மிகச்சில எழுத்தாளர்களில் ஒருவர். நாகர்கோவிலில் எனது வலது தோள் உறைந்து  கடும் வலியினால் நான் அவதிப்பட்டபோது  என் வீட்டுக்கே வந்து மருத்துவமனைக்கு தொடர்ந்து பத்து நாட்கள் அழைத்துச் சென்றவர். அவருடைய கடுமையான வேலை நெருக்கடியிலும் அதை அவர் செய்தார்.

அவருடைய ‘பயணம்’ எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஒன்று. அதற்கு ஒரு குறிப்பு எழுதி இருக்கிறேன். அவருடைய கடைசி சிறுகதை தொகுப்புக்கு( மில்லேனியம் கதைகள் ) நான்தான் முன்னுரை எழுதினேன். ( இந்த பதிவில் ‘நான்’ நிறைய வருகிறது. மன்னித்துக் கொள்ளுங்கள். இப்போது இங்கே ‘நான்’ மட்டுமே இருப்பதால் இப்படி எழுத வேண்டி இருக்கிறது )

இறுதியாக அவரை சென்னை புத்தகக் கண்காட்சியில் சந்தித்தேன். ( இந்த பதிவில் கடைசியாக, இறுதியாக போன்ற வார்த்தைகளும்  அடிக்கடி வருகிறது. அதையும் தவிர்க்க முடியவில்லை ). அவர் சமீபத்தில் மொழி பெயர்த்த  ‘உன் கதை என் கதை’ நூலை கையெழுத்திட்டு என்னிடம் தந்தார்.

அந்தப் புத்தகம் நான் சமீபத்தில் படித்த மிகச் சிறந்த புத்தகங்களில் ஒன்று. பத்து நாட்களுக்குள் படித்துவிட்டு அவருக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளாக அனுப்பிக் கொண்டிருந்தேன். அழைத்துப் பேசவும் முயன்றேன். பொதுவாக நான் இப்படி அதிகம் செய்வதில்லை. அவர் பெங்களூரில் ஏதோ ஒரு கூட்டத்தில் இருந்தார். உடனே பதில் அளிக்க முடியவில்லை வந்து பேசுகிறேன் என்று சொன்னார்.

எனக்கு அது ஏனோ ஒரு கோபத்தை அளித்தது. செய்திகளை அழித்து விட்டேன். ஒருவரின் புத்தகத்தைப் படித்துவிட்டு நாம் அபிப்பிராயம் அதுவும் நல்ல அபிப்பிராயம் சொல்கிறோம், அதற்கு உடனே பதில் அளிக்க வேண்டாமா? என்று நினைத்துக் கொண்டேன்.பிறகு ஒரு வாரம் கழித்து எனக்கு ‘ அதை ஏன் அழித்து விட்டீர்கள்?’என்று செய்தி அனுப்பினார். நான் பதில் அனுப்பவில்லை. நான் இன்னமும் கோபமாய் இருந்தேன்.

அவர் மேல் நான் கொள்ளப் போகும் கடைசிக் கோபம்  அது என்று எனக்கு எப்படி தெரியும்?

அவர் எனக்கு அனுப்ப போகும் கடைசி செய்தி அது என்று அவருக்கும் தெரிந்திருக்காது என்று தான் நினைக்கிறேன்.

எழுத்தாளர்களுக்கு அவரவர் குடும்பங்களைத் தாண்டி உறவுகளைத் தாண்டி  எழுத்தாளர்கள் மட்டுமே இருக்கக்கூடிய  அரூபக் குடும்பங்கள் உண்டு. குடும்பமாய் உணரக்கூடிய நட்புகள் உண்டு. அரவிந்தனை நான் அப்படி உணர்ந்ததுண்டு. அரவிந்தனும் அப்படித்தான் என்னை உணர்ந்தார் என்றே நினைக்கிறேன்.

பக்கத்தில் நீண்ட காலமாக நல்ல பசுமையுடன்   நின்று  கொண்டிருந்த மரம் ஒரே இரவில் சட்டென்று பட்டுப்போனால் அருகில் நின்று கொண்டிருக்கும்  மரம் அடையக்கூடிய அதே பதற்றத்தை  உணர்கிறேன்.

இருவர் கதை.

நூலாசிரியர்: கோனி பால்மன் |
மொழிபெயர்ப்பாளர்: அரவிந்தன் |
வகைமைகள்: புதிய வெளியீடுகள் மொழிபெயர்ப்பு நாவல் டச்சு நாவல்

கவிஞர்கள் சில்வியா பிளாத்-டெட் ஹியூஸ் இணையரின் திருமண வாழ்வு நவீன இலக்கியத்தின் மிகவும் பேசப்பட்ட, சோகமயமான நிகழ்வுகளில் ஒன்று.

இளம் வயதில் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன சில்வியா பிளாத்தின் மீதான அனுதாபம் சில்வியா-டெட் ஹியூஸ் இணையரின் திருமண வாழ்வைப் பற்றிய பல புனைவுகளுக்கும் ஊகங்களுக்கும் இடமளித்தது. டச்சு எழுத்தாளரான கோனி பால்மன் புனைவுகள், ஊகங்கள், அவதூறுகள் ஆகியவற்றை விலக்கிவிட்டு, பல்வேறு ஆதாரங்களை ஆழமாக ஆராய்ந்து அவர்களது வாழ்வைப் புனைகதையாகப் படைத்துள்ளார்.

ஹியூஸின் பார்வையில் விரியும் இந்தக் கதை சில்வியாவைப் பற்றியும் இவர்களுக்கிடையே இருந்த உறவின் பல்வேறு பரிமாணங்களையும் சிடுக்குகளையும் புரிந்துகொள்ள உதவுகிறது. படைப்பூக்கத்தின் பரவசத்தையும் வேதனையையும் உணரச் செய்கிறது. எந்தக் குற்றச்சாட்டுக்கும் பதில் சொல்லாமல் இருந்த டெட் ஹியூஸின் குரலில் வெளிப்படும் இந்த நாவல் மிக நெருக்க மான ஒரு காதலின் வெளியில் தெரியாத சில பக்கங்களைக் காட்டுகிறது.

(அரவிந்தன் மொழிபெயர்த்த ‘உன் கதை என் கதை ‘ நூலை படித்துவிட்டு நான் அவருக்கு வாட்ஸ் அப்பில் எழுதிய குறுஞ்செய்திகள். அவர் உடனடியாக பதிலளிக்காததால் ஒரு கோபத்தில் அதை வேறொரு இடத்தில் சேமித்து விட்டு நீக்கிவிட்டேன்.

இப்போது இதை யாருக்கு அனுப்புவது என்று தெரியாததால் இங்கே பதிவிடுகிறேன்.)

[25/02, 8:08 am] boganath: புத்தகத்தை படித்து முடித்து விட்டேன். மிகவும் தொந்தரவு அளித்த சொல்லப்போனால் அச்சத்தைக் கொடுத்த புத்தகம். நான் பிளாத்தின் மரணம் குறித்த அல்வாரிஸ் எழுதிய the savage god புத்தகம் படித்தது பற்றி ஒரு சிறு குறிப்பும் எங்கோ எழுதி இருக்கிறேன். ஆனால் அது தற்கொலை பற்றி மிகவும் தத்துவார்த்தமாக எழுதப்பட்ட ஒரு புத்தகம்
[25/02, 8:08 am] boganath: இந்த நாவல் கொண்டு சேர்க்கும் அச்சமூட்டும் அருகாமைக்கு மிக தள்ளி நின்று பேசுவது
[25/02, 8:09 am] boganath: நான் பொதுவாக ஒரு புத்தகம் ஆங்கிலத்தில் கிடைத்தால் மொழிபெயர்ப்பில் வாசிப்பதில்லை


[25/02, 8:10 am] boganath: ஆனால் இந்த புத்தகத்தின் மொழிபெயர்ப்பு ஒரு சாதனை என்றே சொல்வேன். மிகக் கவனமாக எந்த ஒரு நுண்ணிய உணர்வையும் விட்டுவிடாமல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
[25/02, 8:11 am] boganath: கலைஞர்களுக்குள் நிகழும் உறவுகள் குறித்த புத்தகங்கள் குறைவு( அல்லது அதிகமா? )


[25/02, 8:13 am] boganath: அவர்களைச் செலுத்தும் விசைகள் அது அவர்களைக் கொண்டு சேர்க்கும் திசைகள் இவை பற்றி எல்லாம் தமிழில் இன்னமும் பேசப்பட வேண்டும் என்றே நினைக்கிறேன்
[25/02, 8:14 am] boganath: விட்டல் ராவின் சில புத்தகங்கள் சமீபத்தில் விமலாதித்த மன்னனின் ஆபீஸ் வந்திருக்கிறது. அதைப் படிக்க வேண்டும். ஆனால் படித்த வரை அது புறவயமாகவே கலைஞர்களை அணுகுவது போல் தோன்றுகிறது


[25/02, 8:16 am] boganath: கலைஞர்கள் அல்லது எழுத்தாளர்கள் ஏதோ ஒரு வகையில் குடிநோய் போன்ற ஒரு தீவிரத்திற்கு ஆட்பட்டவர்கள் தானா என்பது போன்ற கேள்விகளை இது எழுப்புகிறது
[25/02, 8:16 am] boganath: ஆண் பெண் உறவுகள் ஏற்கனவே அடைந்திருக்கும் சிக்கல்கள் சிடுக்குகள் அவர்கள் கலைஞர்களாகவும் இருக்கும்போது பன்மடங்கு பெருகி விடுகிறது என்று தோன்றுகிறது
[25/02, 8:17 am] boganath: அவர்கள் பல நேரங்களில் ஒரே தெய்வத்தால் பல்வேறு திசைகளை நோக்கி அழைக்கப்படுகிறவர்கள் போல் ஆகி விடுகிறார்கள்
[25/02, 8:20 am] boganath: பெண்ணியம் பெண்களுக்கு கொண்டு வந்திருக்கிற விடுதலையோடு சேர்த்து வந்திருக்கிற புதிய விலங்குகளையும் பற்றி இந்த நாவல் பேசுகிறது
[25/02, 8:24 am] boganath: இன்னொரு புறம் அதிகரித்து வருகிற மன நோய்களையும் அதற்கான மருத்துவத்தையும் அதன் போதாமைகளையும் அது உறவுகளில் செலுத்தக்கூடிய பாதிப்புகளையும் பற்றி நாம் பேச வேண்டி இருக்கிறது என்பதை இந்த நாவல் உணர்த்துகிறது. பெண்களின் உடல் அமைப்பினாலும் புறத்திலிருந்து அவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற சமூக அழுத்தங்களினாலும் அவர்கள் மிக எளிதாக ஆண்களை விட ஒப்பிட அதிக மன நோய்களுக்கு ஆளாகி விடுகின்றார்கள்


[25/02, 8:27 am] boganath: அவர்களோடு வாழ நேரும் ஆண்கள் அடையக்கூடிய அடையாளச் சிக்கல்கள் பொதுவாகவே உணர்வுகளைக் கையாள்வதில் ஆண்களுக்கு இருக்கும் போதாமை அலட்சியம் , காதல் என்ற விஷயத்தின் மீது ஏற்றி வைத்திருக்கின்ற லட்சிய சுமை அது கொடுக்கக்கூடிய ஏமாற்றம் மன உடைவு எல்லாம் பற்றி இந்த நாவல் பேசுகிறது.


[25/02, 8:31 am] boganath: சமகால பெண்களின் மீது அவர்களது தாயார்கள் தாயார்கள் போன்றவர்கள் செலுத்தும் பாதிப்பு பெண் எழுத்தாளர்கள் மீது கடந்த கால பெண் எழுத்தாளர்கள் பெண்ணியர்கள் அவர்களது கருத்துக்கள் செலுத்தும் பாதிப்பு அந்த வரைபடத்தின் படி ஒரு பெண் வாழ முயலும் போது அவள் அடைகிற மன உடைவு பொருட்காட்சியில் நன்றாக வேலை செய்த ஒரு பொருள் வீட்டில் வந்ததும் வேலை செய்ய மறுக்கிறது போன்ற தனிப்பட்ட வாழ்வில் செயல்பட மறுக்கிற அறிவுரைகள் காலாவதியான தத்துவங்கள் போன்றவற்றையெல்லாம் இந்த நாவல் ஏறக்குறைய அதிர்ச்சியும் மனத்தளர்ச்சியும் ஏற்படும் அளவுக்கு மிகவும் நுட்பமாக விவரிக்கிறது.


[25/02, 8:32 am] boganath: நீங்கள் இந்த புத்தகத்தை எப்படி அடைந்தீர்கள் என்று தெரியவில்லை
[25/02, 8:32 am] boganath: ஆனால் நிச்சயமாக இது ஒரு மிகச் சிறந்த புத்தகம். மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு

அ ராமசாமி

அரவிந்தன்: நினைவுகள்

‘காலச்சுவடு கட்டுரைகள்’ என்ற முகநூல் பதிவை எழுதியபோது நள்ளிரவு ஆகியிருக்கவில்லை. அந்தப் பதிவில் அவரது பெயரையும் தொடுப்பாக (tag)ச் சேர்த்துவிட்டுப்படுத்தபோது மழை தூறிக்கொண்டிருந்தது. ஒருவேளை காலையில் குறுஞ்செய்தி அனுப்புவார் அல்லது அழைத்துப் பேசுவார் என்று நினைத்துக்கொண்டு படுத்துவிட்டேன். கனடாவின் ஒட்டாவா நகரில் கடந்த சில நாட்களாகவே இப்படித்தான் இரவுத் தட்பவெப்பம் இருக்கின்றது. அதற்கு முன்பு பனிப்பொழிவாக இருந்தது. சாரலும் தூறலுமாக இருந்த மழை பேரிரைச்சலுடன் சாளரங்களைத் தட்டியபோது விழிப்பு வந்துவிட்டது.
திரும்பவும் தூங்காமல் முகநூலைத் திறந்தால் அவரது குறுஞ்செய்திக்குப் பதிலாக அவருக்கான அஞ்சலிக்குறிப்புகளும் அதிர்ச்சியும் ஓலமும் நிரம்பிய பதிவுகளால் நிரம்பியிருக்கின்றது ‘நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்து இவ்வுலகு’ என்னும் வள்ளுவனின் குறளுக்கு எடுத்துக்காட்டாய் மாறியிருக்கின்றார் நண்பர் அரவிந்தன். நினைத்திரங்குவதைத் தவறி வேறொன்றும் செய்வதற்கில்லை.


அரவிந்தன் என்ற பெயரை இந்தியாடுடே தமிழில் வரத்தொடங்கியபோது அறிமுகம். அதில் அச்சாகும் சிறப்பான கதைகளைக் கேட்டுப் பெற்று அச்சிடும் பொறுப்பில் அவரது பங்கு இருந்தது என்று கேள்விப்பட்டுள்ளேன். அப்போது நான் புதுச்சேரியில் இருந்தேன். கி.ரா.வின் ‘காய்ச்ச மரம்’ கதை அச்சான இதழை வைத்துக்கொண்டு அவரோடு பேசியபோது அவர் தான் அந்தப் பெயரைச் சொன்னார். அவரைத் தொடர்புகொண்டவர் அரவிந்தன். அப்போது இதழின் ஆசிரியர் வாசந்தி. அவரது முன்னெடுப்பில் சிறப்பிதழ்கள் கொண்டுவரப்பட்டபோது அரவிந்தனின் பங்கும் பெரும்பங்காக இருந்தது. ரஜினிகாந்த் சிறப்பிதழில் எனது ரஜினியின் மூன்று முகங்கள் கட்டுரை அச்சாகி வந்தபின் ஒருமுறை சென்னை புத்தகக் கண்காட்சியில் சந்தித்துப் பேசியதுதான் முதல் சந்திப்பு.
இந்தியா டுடேயிலிருந்து காலச்சுவடுவின் ஆசிரியராக மாறியபின் அரவிந்தன் அடிக்கடி தொலைபேசியில் பேசுவார். அவரது ஆசிரியப் பொறுப்பில் இருந்த காலச்சுவடுவில் தான் நான் அதிகம் எழுதினேன். பத்தித்தொடர் எழுதச்சொன்னவர் அவர் தான். ஊடகவெளியும் நாடகவெளியும்(2007) என்று தொடங்கி, ஊடகவெளியில் நடப்பனவற்றைக் குறித்து 7 மாதங்களோடு நிறுத்திக் கொண்டேன்.அவருடைய விருப்பமான கிரிக்கெட் விளையாட்டு எனக்கும் பிடித்தமான ஒன்று. சந்திக்கும்போது அவரோடு கிரிக்கெட் பற்றியும் பேசிக்கொள்வோம். அவரது பொறுப்பில் வந்த காலச்சுவடு கிரிக்கெட் சிறப்பிதழில் ‘தேசந்தழுவிய கொண்டாட்டங்கள்’ என்றொரு கட்டுரையை எழுத வைத்தார். சினிமா தொடர்பில் எழுதிய கட்டுரைகள் பலவும் அவர் காலத்திலும் தேவிபாரதி ஆசிரியராக இருந்தபோதும் தான் காலச்சுவடில் அச்சிடப்பட்டன. பின்னர் ஒளிநிழல் உலகம், தமிழ்ச் சினிமா அகவெளியும் புறவெளியும் என்ற தொகுப்புகளாகக் காலச்சுவடு பதிப்பகம் வழியாக நூல்களாகவும் வந்தன.
காலச்சுவடு சார்பில் சு.ரா. 75 கருத்தரங்கம் கன்யாகுமரி விவேகானந்தா இல்லத்தில் நடந்தபோது பசுவய்யாவின் கவிதைகள் குறித்த கட்டுரை வாசிக்கப்போனதின் தொடர்ச்சியில் காலச்சுவடு ஆசிரியர் குழுவோடு விலகல் ஏற்பட்டு விட்டது. அதன் பிறகு காலச்சுவடுவில் எழுதுவதை நிறுத்திவிட்டேன். கடைசியாக எழுதியது பெங்களூரில் நடந்த பிரசன்னா ராமசாமியின் நாடகம் பற்றிய கட்டுரைதான். அதைக்கூட நான் அனுப்பவில்லை. பிரசன்னா ராமசாமி தான் வாங்கிக் காலச்சுவடுவுக்கு அனுப்பி வைத்தார்.
இந்தக் கருத்து வேறுபாட்டிற்குப் பின்னும் அரவிந்தனின் நட்பில் மாற்றம் இல்லை. காலச்சுவடுவிலிருந்து அரவிந்தன் இந்து தமிழ் நாளிதழுக்கு மாறிய பின்னும் எனது எழுத்துகளுக்கு இடமளித்துக் கொண்டே இருந்தார். நூல் மதிப்புரை, கட்டுரைகள், அஞ்சலிக் குறிப்புகள் என அதில் எழுதியதெல்லாம் அவரது ஆசிரியப்பொறுப்பின் போதுதான். சென்னைக்குப் போகும்போது காலச்சுவடு அலுவலகத்திலும், இந்து தமிழ் அலுவலகத்திலும் சந்திக்கப்போவதுண்டு. அவரது அரசியல் பார்வை இதுதான் என்பதை எங்கும் எழுதியதில்லை. ஆனால் அவரது நாவல்களில் -பொன்னகரம், பயணம் போன்றவற்றில் வாசித்துப் புரிந்துகொள்ளலாம். மொழிபெயர்ப்பு, மொழிச்செப்பம், எழுத்துப்படிகளைச் சீரமைத்தல் போன்றவற்றில் புலமை மிக்கவர். ஒரு கல்லூரியில் மொழி சார்ந்த வகுப்பில் எடுக்கும் திறன் உள்ளவர் என்று அவரிடம் சொல்லியிருக்கின்றேன்.
என்னைப் போலவே இமையத்தின் நாவல்களை உடனுக்குடன் வாசித்துவிடும் நண்பராக இருந்தார். இமையம் நாவல்கள் குறித்தும் விவாதித்துக் கொள்வோம். இருவரும் இமையம் நாவல்கள் குறித்த ஒரு தன்மையான கருத்துகளும் வேறுபட்ட பார்வைகளும் இருந்தன.. பல்கலைக்கழகத்தில் இமையத்திற்கு இயல் விருது வழங்கியதை ஒட்டி நடத்தப்பட்ட கருத்தரங்கில் விரிவான கட்டுரையை அரவிந்தன் எழுதி வாசிக்கத் திருநெல்வேலிக்கு அழைத்தேன்; வந்தார்.
அண்மைக்காலங்களில் நிறைய சிறுகதைகள் எழுதினார். அவர் எழுதிய சிறுகதைகள் இதழ்களில் வரும்போது குறுஞ்செய்தியாகத் தகவல் தெரிவிப்பார். வாசித்துக் கருத்தைத் தொலைபேசியில் சொல்வேன். நவீன காலத்து மனிதர்களின் அகங்களை அந்தக் கதைகளில் நுட்பமாக எழுதியிருக்கின்றார். சில நேரங்களில் எனது வலைப்பக்கத்தில் விரிவாக எழுதவும் செய்துள்ளேன். அப்படி எழுதியவற்றின் தொகுப்பைப் பின்னூட்ட இணைப்பில் வாசிக்கலாம்.

லதா அருணாச்சலம்

டி ஐ அரவிந்தன் சார் மறைந்து விட்டதை நம்பவே மறுக்கிறது மனம். கடந்த மாதம் , (இன்னும் ஒரு மாதம் கூட நிறையவில்லை) புரவி இலக்கியக் கூடுகையின் போதுதான் அவருடன் நீண்ட நேரம் பேசவும் விவாதிக்கவும் வாய்ப்புக் கிடைத்தது. நிகழ்வில் மிகக் காத்திரமான இலக்கிய விவாதமும் செறிவான உரையும் நிகழ்த்தினார். எதன் பொருட்டும் இலக்கியத்தையும் அதன் தீவிரமான கோட்பாடுகளையும் விட்டுத்தரக்கூடாது என்பதோடு அதற்கான நியாயங்களையும் வற்புறுத்தி அவர் பேசியது மிகச் சிறப்பாக இருந்தது. அதோடு , நாளின் முடிவில் மிக இலகுத்தன்மையோடு உற்சாகமாக அவர் பாடிய பாடல்கள் அரவிந்தனின் மறுபக்கம் என்றே கூறலாம். உதித் நாரயண் குரலில் அவர் பாடியது இன்றும் நீங்காமல் நினைவில் உள்ளது. மொழிபெயர்ப்பு சார்ந்து அவர் தொகுத்த புத்தகம் ஒரு மொழிபெயர்ப்பாளராக எனக்குக் கையேடு போன்று உதவியது என்பேன்.

இன்னுமின்னும் எத்தனை படைப்புகளை அளித்திருக்க வேண்டியவரை காலம் இரக்கமின்றி எடுத்துச் சென்று விட்டது. ஒரு எழுத்தாளர் மரணிக்கும்போது அவருடன் எத்தனை கதைகளும் கலைகளும் மறைந்து போகின்றன 😞😞

அஞ்சலிகள். ஆழ்ந்த இரங்கல்கள் 🙏🙏

வெ சுரேஷ்

காலச்சுவடு பப்ளிகேஷன்ஸின் ஆசிரியர், திரு.D.I.அரவிந்தன் அவர்கள் காலமாகிவிட்டதாக செய்தி.61 வயதுதான் இருக்கும் அவருக்கு.அவரது பயணம்,பொன்னகரம் ஆகிய நாவல்களையும் சிறுகதைகளையும் படித்திருக்கிறேன்.அவை பெற்றிருக்க வேண்டிய கவனத்தைப் பெறவில்லை என்பது என் எண்ணம்.

படைப்பாளி என்பதை விட ,பதிப்பாசிரியர் எனும் பிம்பம் அவர் மீது அழுத்தமாக விழுந்துவிட்டது என நினைக்கிறேன். இன்னும் அதிகமாகக் கவனம் பெற்றிருக்க வேண்டிய படைப்பாளி அவர்.

காலச்சுவடின் ஸ்டால்களில் சில முறை அவருடன் பேசியுமிருக்கிறேன்.மிக மென்மையாகப் பேசுவார்.அந்த மென்மைக்குரல் மாறாமல் தொலைக்காட்சி விவாதங்களிலும் அண்மைக்கலமாகக் கலந்து கொண்டிருந்தார்.இப்போது திடீரென இந்தத் துயரச் செய்தி.

அரவிந்தனுக்கு அஞ்சலிகள்.

Zero degree publishing – ஆர். காயத்ரி – எழுத்து பிரசுரம்

நாம் பலமுறை வாட்ஸப்பில் professional-ஆக பேசியிருந்தாலும், புரவி நிகழ்ச்சியில்தான் முதன்முதலாக நேரில் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டோம். இன்னும் ஒரு மாதம்கூட முடியவில்லை.

உதித் நாராயண் போல நீங்கள் பாடிய அந்தச் சிரிப்பு கலந்த தருணம்… என் முழங்கால் வலிக்கு நீங்கள் சொன்ன எக்சர்சைஸ்கள்… இருவரும் அருகருகே உட்கார்ந்து சாப்பிட்டபோது, பரிமாறுபவர் என் தட்டில் ஏதோ வைக்க வர, நான் பதறி கையை நீட்டியதும், “பாயசத்துல பூண்டு இல்ல… சாப்பிடலாம்” என்று நீங்கள் சாதாரணமாகச் சொன்னது, இவை எல்லாம் இன்னும் கண்முன்னே தெளிவாக நிற்கின்றன.

உங்களுடன் நடந்த உரையாடல்கள் வெறும் பேச்சுகள் அல்ல. சிந்திக்க வைக்கும் தருணங்கள். பதிப்புலகைப் பற்றியும், எழுதுவதின் பொறுப்பைப் பற்றியும் சொல்லிக் கொடுத்தீர்கள்.

உங்களுடைய இரண்டு கதைகளை அனுப்பி, “எப்போது படிக்கப் போகிறாய்?” என்று கேட்டீர்கள். “இதோ படிக்கிறேன்” என்று சொன்ன நான்… இன்னும் படிக்காமல் இருக்கிறேன். அந்தச் சிறிய பாக்கி இப்போது ஒரு பெரிய குறையாகத் தோன்றுகிறது.

Life is so fragile, இல்லையா? ஒவ்வொரு இழப்பும் யாரையும் எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று ஒரு கணம் நம்மை விழித்தெழச் செய்கிறது. ஆனால் பிரசவ வைராக்கியம்போல் அந்த உணர்வும் சில நாட்களில் வேலைச் சூழலால் மங்கி விடுகிறது.

போய் வாருங்கள், அரவிந்தன்!
உங்களுடன் செலவிட்ட அந்த இரண்டு நாட்கள், பெரிய நினைவுகளாக தங்கி விட்டன.

Cheers!

கனவு சுப்ரபாரதி மணியன்

காலச்சுவடுஅரவிந்தன் அவர்கள் மறைவு..
இந்தியா டுடே பத்திரிகையில் அவர் இருந்த போதுபடைப்புகள் சார்ந்து பல சமயங்களில் பேசியிருக்கிறார் .திருப்பத்தூரில் ஜெயமோகன் அவர்கள் வசித்தபோது அவரைப் பார்க்க சிலமுறை வந்திருக்கிறார் .பக்கத்து வீட்டிலிருந்த என்னையும் வீட்டில் இருந்து சந்தித்திருக்கிறார்.

கனவு இதழ் ஒன்றை அசோக மித்திரன் சிறப்பு இதழாக ஜெயமோகன் தொகுத்துவெளியிட்டபோது அவருடைய நீண்ட கட்டுரையும் இடம்பெற்றது அப்போது உரையாடினோம்
பின்னால் அது திலகவதி ஐபிஎஸ் அவர்கள் அசோக மித்திரன் 77 என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தொகுப்பாக வெளியிட்டார் அமிர்தா பதிப்பகம் மூலம்.அப்போதும் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தேன்
நிறைய சந்திப்புகளில் நலம் குறித்து சரியாக விசாரிப்பார்
சின்னசாமி ஐ பி எஸ் அவர்கள் கோவையில் நடத்திய இரண்டு நாள் இலக்கிய மாநாட்டில் நானும் அவரும் ஒரே அமர்வில் உரையாற்றினோம் அவர்களுடைய உரையை நான் பாராட்ட என்னுடைய உரையில் எழுத்தாளனுடைய பொறுப்புணர்வு பற்றி நான் குறிப்பிட்ட விஷயங்களை சிலாகித்துகச்சொன்னார்

பார்க்கும்போதெல்லாம் அன்பாக விசாரிப்பார் கடைசியாக அவருக்கு நான் அனுப்பிய மின்னஞ்சலில் அவருடைய கதைகளை.. சிறுகதைகளை சமீபமாய் தொடர்ந்து வாசித்து வருவதாகவும் அவையெல்லாம் வெகு நீளமாக இருப்பதாகவும் சொன்னேன். அவற்றுக்கு எதிர்மறையாக அவர் மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தார்

ஏ.டி. பாலா

D.i. Aravindan மறைவு பேரதிர்ச்சி. அவரது நண்பர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல்.

நான் டெல்லியில் பிபிசி வேலையைவிட்டுவிட்டு, முழு நேரம் மொழிபெயர்ப்பையே தொழிலாகத் தேர்ந்தெடுத்து, திருவண்ணாமலையில் மீண்டும் குடிபெயர்ந்திருந்த நேரம். நண்பர் Gopalakrishnan Sankaranarayanan அறிமுகம் செய்துவைத்ததின் அடிப்படையில், காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் ஒரு நூலை மொழிபெயர்க்கும் வாய்ப்பை எனக்கு அளித்தார் அரவிந்தன்.

நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் வாழ்க்கை வரலாற்று நூல் அது.

இதுவரை நேரில் பார்த்திராத, பிரபலமில்லாத ஒருவரை நம்பி, தொலைபேசி வழியில் மட்டுமே பேசியதன் அடிப்படையில் அந்த வேலையைத் தந்தார். முதல் அத்தியாயத்தை முடித்து அனுப்பும்படியும், அதைப் பார்த்துவிட்டு நூலைத் தொடர்வதைப் பற்றிக் கூறுவதாகவும் தெரிவித்தார்.

முதல் அத்தியாயத்தைப் படித்துவிட்டு மிகவும் பாராட்டினார். மிக நுட்பமாக வந்திருப்பதாக சான்றளித்தார். நூலைத் தொடர்ந்து விரைந்து முடிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

என் தன்னம்பிக்கைக்கு கிடைத்த மிகச்சிறந்த ஊக்கம் அது.

செய்தி என்று வரும்போது ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் சொற்கள் வரைகூட மொழிபெயர்ப்பது என் வேகம். ஆனால், ஆழமான அகத்தாய்வுகளையும், பிரதிபலிப்புகளையும், பண்பாட்டு சுழிப்புகளையும் உள்ளடக்கிய, மிகப்பெரிய ஆளுமையின் வாழ்க்கை வரலாற்று நூல் என்று வந்தபோது, சில நேரங்களில் ஒரு பக்கத்தை முடிக்கவே எனக்கு ஒரு நாள் தேவைப்பட்டது.

பொருளாதாரத் தேவையின் வேகத்துக்கு இந்த மொழிபெயர்ப்பின் வேகம் ஈடுகொடுக்குமா என்ற தடுமாற்றம் ஒரு பக்கம், வாழ்க்கையின் அலைக்கழிப்புகள் ஒருபக்கம். வேறு நிரந்தர வேலையில் சேர்ந்த நிலையில், பதிப்பகத்தின் எதிர்பார்ப்புக்கு உரிய வேகத்தில் என்னால், அதில் வேலை செய்ய முடியவில்லை. கடைசியாக மூன்று அத்தியாயங்கள் முடித்தபிறகு. அந்த திட்டத்தில் இருந்து பின்வாங்கிக் கொண்டேன்.

அவர் முகம் சுளிக்கவில்லை. நிலைமையைப் புரிந்துகொண்டார்.

செய்தவரை அந்த நூல் மொழிபெயர்ப்புப் பணியாக மட்டுமல்ல. அற்பமான எனது வரலாற்றுப் புரிதலை செப்பமிடுகிற ஒரு நூலாகவும் இருந்தது.

அதற்காகவும், என் மீது வைத்த நம்பிக்கைக்காகவும், பின்வாங்கியதால் ஏற்பட்ட இடர்ப்பாடுகளை மன்னிக்கக்கூடியவராக இருந்ததாலும் அவர் மீது எனக்கு மதிப்பு ஏற்பட்டது.

இதுவரை அவரை பார்த்ததே இல்லை. சென்னை வந்தபிறகு அவரை நேரில் சென்று பார்க்கவேண்டும் என்று அவ்வப்போது தோன்றும். ஆனால், நான் பார்த்த வேலையால் சங்கோஜப்பட்டு, அவரை அழைக்கத் துணியவில்லை. இறுதியாக, அவரைப் பார்க்க முடியாமலே போகும் என்று நினைக்கவில்லை.

காலப்பேராற்றில் துயில் கொள்ளுங்கள் அரவிந்தன். ஆழ்ந்த இரங்கல்கள்.

கணேஷ் வெங்கட்ராமன்

காலச்சுவடு ஆசிரியர் அரவிந்தன் மறைவு பற்றிய செய்தி ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. அவரை சந்தித்ததில்லை. அவரைப் பற்றிய விவரங்களை குறைந்தது அவருடைய பத்து நண்பர்களிடமிருந்தாவது நான் கேட்டிருப்பேன்.  சமீபத்தில் இலங்கை சென்ற போது கூட சந்தித்த ஒருவர் அரவிந்தன் குறித்து பேசிக் கொண்டிருந்தார். பிப்ரவரி மாதம் ஓர் அயல் நாட்டுப் பயணத்தில் இருந்தேன். அறியாத எண்ணிலிருந்து ஓர் அழைப்பு. எடுத்தேன். “நான் அரவிந்தன் பேசுகிறேன்.” என்ற குரல். “பயணத்தில் இருக்கிறேன். நாடு திரும்பியவுடன் அழைக்கட்டுமா?” என்று கேட்டேன். “நல்லது” என்றார். இன்று கேட்ட மரணச்செய்தி என்னை உலுக்கியதன் முக்கிய காரணம் – நான் சொன்ன படி இந்தியா திரும்பியதும் அரவிந்தன் அவர்களைத் திரும்ப அழைக்கவில்லை என்பதுதான்.

விகடன்

“மொழிபெயர்ப்பில் உணர்வை கடத்த வேண்டும்.!” – மொழிபெயர்பாளர் அரவிந்தன்

ஜெ.பிரீத்தி & பிரேம் குமார் எஸ்.கே.

“ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு, வார்த்தைகளை மட்டும் மொழிபெயர்ப்பது போதாது. அவன் சொல்லின் உண்மையான அர்த்தத்தையும், அதன் தொனியையும், வாசகருக்கு புரியக் கூடிய வகையிலும் எடுத்துச் செல்ல வேண்டும்.”

சென்னை 49-வது புத்தக திருவிழாவில் பல எழுத்தாளர்களும் வாசகர்களும் குவிந்து வருகின்றனர். அவ்வகையில் பிரபல மொழிப்பெயர்பாளர் அரவிந்தன் அவர்களை சந்தித்து மொழிபெயர்ப்பின் நுணுக்கங்கள் குறித்து பேசினோம்.

அப்போது அவர், “மொழிபெயர்ப்பு என்றால், வெறும் வார்த்தைகளை மாற்றி எழுதுவது அல்ல. ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு தகவலை கொண்டு வர, நமக்கு போதுமானது ஒரு டிக்ஷ்னரி மட்டுமே என்று நினைக்கலாம். ஆனால் உண்மையில், வார்த்தைகள் மட்டும் பொருள் சொல்லாது. ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு இடத்தில், தனித்தனியான அர்த்தத்துடன் வருகிறது.

உதாரணமாக, “Thanks” என்றால் உடனே “நன்றி” என்று மொழிபெயர்க்க முடியாது. அது ஒரு எக்ஸ்பிரஷன், உணர்வு. அதை லிட்டரல் வழியில் மொழிபெயர்த்தால், அர்த்தம் பூரணமாக தவறிவிடும்.

அதேபோல், “I go to shop” என்றால் “நான் கடைக்கு போகிறேன்” என்று நம்மால் சொல்ல முடியும். ஆனால் “I go to shopping” என்றால் அதில் வேறொரு நுணுக்கம் வரும். ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு இடத்தில், தனது நோக்கத்தோடு பொருள் மாறுகிறது. இதே காரணத்தால்தான் மொழிபெயர்ப்பில் மனிதர்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்கள்

ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு, வார்த்தைகளை மட்டும் மொழிபெயர்ப்பது போதாது. அவன் சொல்லின் உண்மையான அர்த்தத்தையும், அதன் தொனியையும், வாசகருக்கு புரியக் கூடிய வகையிலும் எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு இரு மொழிகளிலும் ஆழமான புரிதல் தேவை. வார்த்தைகளின் பின்னணி, கதை, கலாச்சாரம் எல்லாம் கவனிக்க வேண்டும்” என்றார்.

அவரின் முக்கியமான  மொழிபெயர்ப்புகளாக அவர் பரிந்துரைத்தவை,

1. பாலசரஸ்வதி: அவர் கலையும் வாழ்வும்

டக்ளஸ் எம்.நைட் எழுதியது, இது வாழ்க்கை வரலாறு தான் ஆனால் வாசிக்கும்போது அது ஒரு புனைவு கதையைப் போல உணர்ச்சிகரமா இருக்கும்.

2. ஆத்துதோஷ் பாரதவர் எழுதிய மரணத்தின் கதை

சத்தீஸ்கரிலுள்ள வனப்பகுதிகள், நக்ஸலைட்ஸ், ராணுவ படைகள் நடுவில் இருந்த மோதல்கள் குறித்த புத்தகம் மொழிபெயர்ப்பு செய்யும் போது, ஒவ்வொரு ஷேட் (shade) டைமென்ஷன் கவனிக்கப்பட வேண்டியது இருந்தது

https://youtu.be/4ypWnqs5C2c?si=HkuFebLSBZGM7dJK

விவேகானந்தரின் குரல்

-டி.ஐ.அரவிந்தன்

பத்திரிகையாளர்  திரு. டி.ஐ.அரவிந்தன்,  ‘தி இந்து தமிழ்’ நாளிதழில் 2014-இல் எழுதிய பதிவு, இங்கு மீள்பதிவாகிறது.

ஓர் ஆளுமை என்னும் அளவில் எப்போதும் வியப்புக்குரியவர் விவேகானந்தர். 39 வயதிற்குள் அவர் வாசித்த நூல்கள், ஆற்றிய உரைகள், எழுதிய பக்கங்கள், கையாண்ட விஷயங்கள், மேற்கொண்ட பயணங்கள், நிறுவிய அமைப்புகள் என ஒவ்வொன்றும் பிரமிப்பூட்டுபவை. இதில் ஏதாவது ஒன்றை ஒருவர் 40 வயதிற்குள் செய்திருந்தாலே அவரைச் சாதனையாளர் என்று சொல்லிவிடலாம். எல்லாவற்றையும் செய்திருக்கும் விவேகானந்தரை என்னவென்று சொல்வது?

இந்தியாவின் மரபின் மீது பெருமிதமும் கறாரான விமர்சன நோக்கும் அவரிடம் இருந்தன. நவீன வாழ்வின் அனைத்து விதமான சலனங்களுக்கும் இந்தியாவைத் தயார்ப்படுத்தியவர் அவர். மரபின் சட்டகத்துக்குள் நின்று சீர்திருத்தம் பேசியவர்களின் முன்னோடி. பலதரப்பட்ட கோணங்களிலிருந்தும் உலகைப் பார்க்க முற்பட்டவர்.

ஆழ்ந்த அக்கறையின் விளைவாக உண்மையாகவும் இயல்பாகவும் வெளிப்பட்ட அவரது கருத்துகள் அனைத்தும் ஒருவருக்கு உவப்பானவையாக இராது. அவரது எழுத்துகளை முழுமையாக வாசிக்கும் ஒருவர் பரவசம் கொள்ளும் இடங்களும் கூர்மையான வலியை உணரும் இடங்களும் கணிசமாக இருக்கும். இந்தியாவை ஆன்மிக நாடு என்றும் சமயம்தான் அதன் ஆதாரம் என்றும் அவர் அறிவிக்கும்போது சிலருக்கு உவப்பாக இருக்கும். இந்நாட்டின் ஆதிக்கச் சாதியினரை இறந்த காலத்தின் எலும்புக்கூடுகள் என அவர் வர்ணிக்கும்போது வலிக்கும். இந்தியா உலகுக்கு வழிகாட்டும் என்று சொல்லும்போது உவகை கொள்ளும் ஒருவரது மனம் சேரிகளின் குடிசைகளிலிருந்து மீனவக் குப்பங்களிலிருந்தும் புதிய பாரதம் எழுச்சி பெறும் என்று சொல்லும்போது சுணக்கம் கொள்ளலாம்.

ஒரே தரப்பில் நின்று ஒன்றையே திரும்பத் திரும்பப் பேசும் ஒற்றைக் குரல் அல்ல விவேகானந்தரின் குரல். அது பன்முகத்தன்மை கொண்டது. அதனாலேயே அது இந்தியாவின் ஆன்மாவைப் பிரதிபலிக்கிறது.

சமூக மாற்றம் குறித்தும் சமயம் குறித்தும் அவரது குரலை இங்கே கேட்கலாம்

தேசியப் பெரும்பாவம்!

சாதாரண மக்களைப் புறக்கணித்ததே நமது தேசியப் பெரும்பாவம் என்று கருதுகிறேன். நமது வீழ்ச்சிக்கு அதுவும் ஒரு காரணம்.

ஏழைக்கோ, தாழ்ந்தவனுக்கோ, பாவிக்கோ நண்பர்கள் இல்லை, உதவுபவர்கள் இல்லை. என்ன தான் முயன்றாலும் அவர்களால் முன்னேற முடிய வில்லை. நாளுக்கு நாள் அவர்கள் அதோகதியில் ஆழ்ந்துவருகின்றனர். கொடிய சமுதாயம் தங்கள் மீது பொழிகின்ற அடிகளை அவர்கள் உணர்கிறார்கள். ஆனாலும், அந்த அடிகள் எங்கிருந்து வருகின்றன என்பது அவர்களுக்குத் தெரியாது.

இந்தியாவில் உள்ள தீமைகள் அனைத்துக்கும் வேராக இருக்கின்ற ஒரே விஷயம், ஏழைகளின் நிலைமை. புரோகித ஆதிக்கமும், அந்நியரின் ஆக்கி ரமிப்பும் நூற்றாண்டுகளாக அவர்களைக் கீழே தள்ளி மிதித்துவந்துள்ளன. இறுதியில், தாங்கள் மனிதப் பிறவிகள் என்பதையே இந்தியாவின் ஏழைகள் மறந்துவிட்டனர்.

மக்கள் ஏமாற்றப்பட்டனர்

நாடு மூழ்கிக்கொண்டே இருக்கிறது. கோடிக் கணக் கான தாழ்த்தப்பட்ட மக்களின் சாபம் நம் தலை மீது இருக்கிறது… அவர்களிடம் நாம் அத்வைதத்தை வாயளவில் பேசி, அதே வேளையில் முடிந்த அளவு அவர்களை வெறுக்கிறோம். உலக வழக்கு என்ற கொடுமையை அவர்களுக்காக ஏற்படுத்தியிருக்கிறோம்.  நாம் எல்லோரும் சமம், பரம்பொருளுடன் ஒன்றுபட்டிருக் கிறோம் என்றெல்லாம் வாய் கிழியப் பேசுகிறோம், அதில் அணுவளவுகூடச் செயல்முறையில் இல்லை.

மதத்தின் பெயரில் மக்கள்மீது அடக்குமுறை

மனிதனின் மகிமையை இந்து மதத்தைப் போல் உலகின் வேறு எந்த மதமும் இவ்வளவு உயர்வாகக் கூறவில்லை; அதே வேளையில், உலகிலுள்ள எந்த மதமும் இந்து மதம் செய்வதுபோல், ஏழைகள் மற்றும் தாழ்ந்தவர்களின் கழுத்தை நெரிப்பதும் இல்லை.

மதத்தால் மட்டும் இயலாது

சோஷலிசம், அது இது என்று எந்தப் பெயரிலாவது அழையுங்கள். மக்களால் ஆளப்படுகின்ற ஏதோ ஒன்று நடைமுறையில் இருப்பதை ஒவ்வொன்றும் காட்டுகிறது. பொருட் தேவைகளைப் பெறுதல், குறைந்த நேர வேலை, எதிர்ப்பின்மை, போரின்மை, அதிக உணவு முதலியவற்றை மக்கள் அதிகம் விரும்புவார்கள். மதத்தின் மீது, மனிதனின் நல்லியல்பின் மீது நிறுவப்படாத இந்த நாகரிகமோ, எந்த நாகரிகமோ நிலைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?

கல்வி – முதல் தேவை

கல்வி, கல்வி, கல்வி ஒன்றே காரணம். ஐரோப்பாவில் பல நகரங்களின் வழியே யாத்திரை செய்தபோது, அங்கு வாழ்கின்ற ஏழைகளுக்கு உள்ள வசதிகளையும் கல்வியையும் கண்டேன். அப்போதெல்லாம் நம் ஏழைகளை நினைத்துப் பார்த்து நான் கண்ணீர்விட்டு அழுதிருக்கிறேன். இந்த வேறுபாட்டுக்குக் காரணம் என்ன? கல்வி என்ற விடையே நான் கண்டது. கல்வியால் தன்னம்பிக்கை வருகிறது, தன்னம்பிக்கையின் வலிமையால் உள்ளிருக்கும் ஆன்மா விழித்தெழுகிறது. நம்முள் இருக்கும் ஆன்மாவோ மெல்ல மெல்ல செயலிழந்துகொண்டிருக்கிறது.

குறிப்பிட்ட சிலருக்குக் கல்வி

ஆணவம், அரச ஆணை இவற்றின் துணையுடன், விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரிடம் எல்லா கல்வியும் புத்தி நுட்பமும் உடமையாக்கப்பட்டது தான் இந்தியாவின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம். உழைக்கும் வர்க்கத்தினர்கள் எழுவார்கள்.

ஒரு காலம் வரும். அப்போது சூத்திரர்கள் தங்கள் சூத்திரத்தன்மையுடனேயே முக்கியத்துவம் பெறுவார்கள். அதாவது, அவர்கள் வைசிய, சத்திரிய இயல்புகளைப் பெற்று வலிமையை வெளிப்படுத்துகிறார்களே,  அதுபோல் அல்ல;  சூத்திர இயல்பு மற்றும் வழக்கங்களுடனேயே எல்லா நாடுகளிலும் சமுதாயத்தில் ஆதிக்கத்தை அடைவார்கள். அந்த உதயத்தின் முதல் கிரணம் மேற்கு உலகில் இப்போதே மெல்லமெல்லத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. அதன் விளைவு என்ன ஆகுமோ என்று எல்லோரும் திகைத்து நிற்கிறார்கள்.
  • நன்றி: தி இந்து தமிழ் (14.01.2014)

முகங்கள் | அரவிந்தன்

 முகங்கள் | அரவிந்தன்

ஓவியம்சைமன் ஹோல்டன்

ஹாய் மாலினி!”

“ஹாய் ஷங்கர்! வி.பி. உங்கள கூப்டார்.”

“ஓ.கே.”

ஷங்கர் நாற்காலியில் உட்கார்ந்து மடிக்கணினியைத் திறக்க ஆரம்பித்தான்.

“ஸிஸ்டம்லாம் அப்றமா ஆன் பண்ணிக்கலாம். மொதல்ல வி.பி.ய பாத்துட்டு வந்துடுங்க ஷங்கர். ஏதோ அர்ஜன்ட் போலருக்கு. மூணு வாட்டி இன்டர்காம்ல கூப்டுட்டாரு!”

“அவ்ளோ என்ன அவசரம்?”

“யாருக்குத் தெரியும்?” என்று தோள்களைக் குலுக்கிவிட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தாள் மாலினி. ஷங்கர் பத்து நிமிடங்கள்தான் தாமதமாக வந்திருந்தான். உட்காரவும் கூடாத அளவுக்கு என்ன அவசரம் என்று குழம்பியவனாக எழுந்து சென்றான்.

கதவை மெதுவாகத் தட்டிவிட்டு நழைவதற்குள் உள்ளேயிருந்து “கம், கம்…” என்று சத்தமாகக் குரல் கேட்டது. உள்ளே போனால் வி.பி. ராமச்சந்திரனுக்கு எதிரில் ஜே.எம்.டி. கருணாகரன் நாயர் உட்கார்ந்திருந்தார். இருவருக்கும் தனித்தனியாக “குட்மார்னிங் சார்” என்றான். “லேப்டாப் எங்க?” என்றார் ராமச்சந்திரன்.

“சார் நீங்க அவசரமா வரச் சொன்னதா மாலினி சொன்னாங்க…”

“யெஸ் ஷங்கர். அசவரம்தான். அதுக்காக வெறுங்கையோட வந்தா என்ன பேசறது? எல்லா ஃபிகர்ஸ் அண்ட் பேக்ட்ஸ் ஃபிங்கர் டிப்ஸ்ல வெச்சிருக்கீங்களா?”

“ஜஸ்ட் எ மினிட் சார். இதோ கொண்டுவந்துர்றேன் சார்.”

“ஹரியப் ஷங்கர். டயமாச்சு. டென் தர்ட்டிக்கு நாங்க ரஹேஜா டவர்ஸ்ல இருக்கணும். இந்த ட்ராஃபிக்ல எப்படி போறதுன்னு கொஞ்சம் யோசிச்சி பாருங்க.”

“தோ சார்…” என்று வெளியே ஒடினான். ‘சென்னைல டிராஃபிக் அதிகமா இருந்தா அதுக்கு நா என்னடா பண்றது வெண்ண’ என்று மனதுக்குள் புலம்பியபடி ஓடினான்.

அவசரமாக ஓடி வந்தவனைப் பார்த்து மாலினி, “ஹே… என்ன இந்த ஒட்டம்?” என்றாள்.

“ஸ்போர்ட்ஸ் டே ஈவன்டுக்காக ப்ராக்டீஸ் பண்றன்” என்று சொல்லிவிட்டு லேப்டாப்பை எடுத்துக்கொண்டு விரைந்தான். ‘குட் ஜோக்’ என்று அவள் பதில் சொன்னது அவனுக்குப் பின்னால் மங்கலாகக் கேட்டது. லேப்டாப்பில் எவ்வளவு சார்ஜ் இருக்கிறது என்று தெரியவில்லை. பத்தரை மணிக்கு ரஹேஜா டவரில் இருக்க வேண்டுமென்றால் இங்கே 15 நிமிடங்களுக்கு மேல் பேச வாய்ப்பில்லை. 15 நிமிடங்கள் லேப்டாப் தாக்குப் பிடிக்கும்.

“கமான், ஸிட், ஸிட்…” என்றார் வி.பி. ராமச்சந்திரன். ஜே.எம்.டி. அமைதியாக உட்கார்ந்திருந்தார். மேஜை மீது லேப்டாப்பை வைத்து அதைத் திறக்கப் போனான்.

“இங்க பாருங்க ஷங்கர்” என்று ராமச்சந்திரன் தன்னுடைய லேப்டாப்பை அவர்களை நோக்கித் திருப்பினார். தானும் பார்க்க வசதியாகச் சற்றே தன் நாற்காலியை நகர்த்திக்கொண்டார். விசைப் பலகையைத் தன் மடி மீது வைத்துக்கொண்டு மவுசை வைத்து இயக்கினார். இரண்டும் தொலையுணர் கருவிகள் என்பதால் தூரத்திலிருந்தே இயக்கினார்.

திரையில் ஒரு பிபிடி பிரசன்டேஷன் ஓடியது. ஷங்கர் செய்ததுதான் அது. 100 கோடி மதிப்புள்ள புதிய திட்டத்திற்கான வரைவு அது. போன மாதமே அதைச் சமர்ப்பித்துவிட்டான். வாடிக்கையாளரிடமிருந்து பதில் எதுவும் வந்ததாகத் தெரியவில்லை. பதினைந்தாவது ஸ்லைடில் நிறுத்தினார். “படிங்க” என்றார். படித்தான்.

“இந்த எடத்துல கிளாரிட்டி இல்லன்னு கிளையன்ட் ஃபீல் பண்றாங்க” என்றார்.

“உங்க கிட்ட கேட்டுதானே சார் போட்டேன்…”

“நா சொன்னத நீங்க ஃபுல்லா அப்சர்வ் பண்ணிக்கல ஷங்கர். நானும் அவசரத்துல டச் பண்ணாம அனுப்பிட்டேன். இப்படி ஒரு ஸில்லி மிஸ்டேக் பண்ணியிருப்பீங்கன்னு நான் எப்படி எதிர்பார்க்க முடியும்? நீங்க என்ன ஃபிரஷ்ஷரா?” என்றார் குரலைச் சற்றே உயர்த்தியபடி.

“சார்…” என்றான் தயக்கத்துடன்…

“நோ எக்ஸ்ப்ளனேஷன் ஷங்கர். ஐ ஆம் நாட் இன்ட்ரெஸ்டட் இன் எக்ஸ்க்யூஸஸ் அன்ட் எக்ஸ்ப்லனேஷன்ஸ். ஐ வான்ட் டெலிவரி. ஐ வான்ட் எஃப்லாலஸ் ட்ராஃப்ட். காட் மை பாயின்ட்?” என வெடித்தார்.

“சார்….”

“எதுவும் பேசாதீங்க. எம் மண்டையே வெடிச்சிடும்போல இருக்கு” என்று இரண்டு கைகளையும் காதுகளுக்கு மேல் வைத்து அழுத்திக்கொண்டார்.

அப்போது அவர் மடியிலிருந்து விசைப்பலகை கீழே விழுந்தது. எடுத்துக்கொண்டு நிமிரும்போது அவர் முகம் இன்னும் சிவந்திருந்தது. நல்லவேளை குனியும்போது கண்ணாடி கீழே விழவில்லை என்று ஷங்கர் நினைத்துக்கொண்டான்.

அந்த இடத்தில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று விளக்கினார். முற்றிலும் புதிய அம்சங்களைச் சொன்னார். போன முறை இதைப் பற்றியெல்லாம் பேசவே இல்லை. ஆனால், “இந்த முறையாவது கரெக்டா பண்ணி ஈவினிங் எவ்வளோ நேரமானாலும் அனுப்பிட்டு போங்க” என்ற சொல்லும்போது ஷங்கரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. வி.பி. இன்று வழக்கத்துக்கு அதிகமாக விறைப்பும் முறைப்பும் காட்டுவதைப் பார்த்தால் நாயரிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டிருப்பான் என்று தோன்றியது.

“நோட் த பாயின்ட்ஸ்” என்று ஒரு பேப்பரை எடுத்துக் கொடுத்தார். ஷங்கர் குறித்துக்கொண்டான்.

“சீக்கிரமா போய் வேலய ஆரம்பிங்க” என்றார். ஷங்கர் எழுந்துகொண்டான். அப்போது கருணாகரன் நாயர் அவனை நிமிர்ந்து பார்த்தார்.

“இது எவ்ளோ இம்போர்டெண்டுன்னு நிங்ஙள்க்கு மனசிலாகுதா?” என்று கேட்டார்.

“யெஸ் ஸார். ஷ்யூர் ஸார்” என்றான் படபடப்புடன்.

“பீ கேர்ஃபுள்” என்று சொல்லிவிட்டு எழுந்தார்.

“ராம், இத ஷங்கர் பண்றாரா அவங்க தாத்தா பண்றாரான்றதெல்லாம் எனக்குத் தெரியாது. ஈவ்னிங் ஐ நீட் திஸ். இட் ஈஸ் யுவர் ரென்பான்ஸிபிலிட்டி” என்று வி.பி.யைப் பார்த்துச் சொல்லிவிட்டு ஜே.எம்.டி. வேகமாக வெளியேறினார்.

ஷங்கர் பம்பியபடி இருக்கைக்கு வரும்போது மணி 10.45. ரஹேஜா டவர்ஸ் என்ன ஆயிற்று. என்ன எழவுக்காக லேப்டாப்பைக் கொண்டு வரச் சொல்லி மிரட்டினான். போனமுறை இதையெல்லாம் சொல்லாதது அவன் தப்பு. ஆனால், இப்போது என்னிடம் எகிறுகிறான். மாலைக்குள் எல்லாக் கணக்குகளையும் போட்டு அறிக்கையை முடிப்பது சாத்தியமே இல்லை. ஆனால், முடிக்காவிட்டால் கொட்டையை நசுக்கிவிடுவான். ஷங்கர் மனதுக்குள் புலம்பிக்கொண்டே வேலையைத் தொடங்கினான்.

“என்ன ஷங்கர், ஏதாவது ப்ராப்ளமா?” என்றாள் மாலினி.

“ப்ராப்ளம் இல்லாம நமக்கு என்னிக்கு விடிஞ்சிருக்கு?”

ந்தப் பையனும் பெண்ணும் ஒடுங்கியபடி நின்றிருந்தார்கள். சாலையோரத்தில் ஒரு காரும் அதன் பின்னால் ஒரு பைக்கும் நின்றிருந்தன. காரை பைக் இடித்திருப்பதற்கான அடையாளம் தெரிந்தது. வாட்டசாட்டமாக ஒரு ஆள் அந்தப் பையனைப் பார்த்து முறைத்துக்கொண்டும் திட்டிக்கொண்டும் இருந்தான். அனேகமாக அவன் அந்தக் காரை ஓட்டி வந்தவனாக இருக்கலாம். அவன் அந்தப் பையனை அடித்திருப்பான் என்பது தெளிவாகத் தெரிந்தது. சிவாவுக்குக் கோபம் வந்தது. அவர்களைச் சுற்றிலும் சிறு கூட்டம் நின்றிருந்தது. காரை ஓட்டி வந்தவனின் பேச்சு ஆணித்தரமாக இருந்தது. யாரும் அவன் பேச்சில் குறுக்கிடவில்லை.

சிவா தன்னுடைய பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு நான்கைந்து பேருக்கு போன் செய்தான். போனை பத்திரமாகப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு அந்தக் கூட்டத்தை நெருங்கினான். அந்தப் பையன் அருகே சென்று, “என்னப்பா பிரச்சினை” என்றான். போக்குவரத்து நெரிசலில் முன்னால் போன கார் திடீரென்று நின்றதில் தன்னால் கட்டுப்படுத்த முடியாமல் லேசாக இடித்துவிட்டதாகச் சொன்னான். அவர் முகவரி கொடுத்தால் நாளைக்கு வந்து பழுது பார்ப்பதற்கான பணத்தைத் தந்துவிடுவதாகச் சொன்னான். அதுவரை தன்னுடைய மொபைலை அவரிடம் தந்துவைப்பதாகவும் போலீஸ், பெற்றோர் என்ற விஷயத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் சொன்னான்.

“அடிச்சாரா?” என்று கேட்டான் சிவா. அந்தப் பையன் பரிதாபமாகத் தலையசைத்தான். அந்தப் பெண்ணும் கண்ணீர் கசியும் கண்களுடன் அதை உறுதிப்படுத்தினாள்.

சிவா கார் ஒட்டி வந்தவனைப் பார்த்துத் திரும்பினான். அவன் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்துவான் என்று அவன் எதிர்பார்த்திருந்தான். சிவா அவன் கண்களை நேராகப் பார்த்து, “பையனை எதுக்காக அடிச்சீங்க?” என்று கேட்டான். தெளிவான உறுதியான குரலில் கேட்டான். அந்தக் கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை. “உன் வண்டிய இடிச்சிருந்தா சும்மா வுட்ருப்பியா?” என்றான். “எதுக்காக அடிச்சீங்க?” என்று மறுபடியும் கேட்டான். “வண்டிய ரிப்பேர் பண்ணாம இங்கேருந்து ஒரு இஞ்ச் நகர மாட்டேன்” என்றான் அவன். இளைஞனின் பைக் சாவி அந்த ஆளிடம் இருந்தது. “ஏன் அடிச்சீங்க?” என்றான் சிவா.

“நீ என்ன கேட்டதையே கேட்டுக்கிட்டு இருக்க? வண்டிய இடிச்சா அடிக்கத்தான் செய்வாங்க” என்றான் அந்த ஆள்.

“இடிச்சதுக்கும் அடிச்சதுக்கும் சரியா போச்சு. அந்த வண்டிய எப்படி ஸ்டார்ட் பண்றதுன்னு எனக்குத் தெரியும். உங்களுக்கு நயா பைசா கிடைக்காது” என்றான் சிவா.

“நீ என்ன பெரிய ரவுடியா இல்ல போலீஸா பஞ்சாயத்து பண்ண வந்துட்ட? இங்கேர்ந்து ஒரு அடி அந்தப் பையன் நகர முடியாது. நான் யார் தெரியுமா?” என்றான்.

“கொஞ்ச நேரத்துல அஸிட்டென்ட் கமிஷனர் பேசுவாரு. அவர் கிட்ட நீ யாருன்னு சொல்லு” என்றான் சிவா. பிறகு நிதானமாக ஒரு சிகரெட் பற்றவைத்தான். “உனக்காச்சு, எனக்காச்சு. பாத்துரலாம்” என்றான். அதற்குள் அவன் அழைத்திருந்த நண்பர்கள் வந்தார்கள். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. காவலர்கள் வந்தார்கள். பஞ்சாயத்து நடந்தது. பையனுடைய முகவரி, தொலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டார்கள். வண்டியைப் பழுதுபார்க்க நியாயமாக என்ன செலவு உண்டோ அதற்கு நான் உத்தரவாதம் என்றான் சிவா. அவனுடைய நண்பரும் காவல்துறை அதிகாரியுமான துரைசாமி காவலர் மூலம் அந்த ஆளிடம் தொலைபேசியில் பேசினார். இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றார். அரை மணிநேரத்தில் விவகாரம் முடிந்து கூட்டம் கலைந்தது.

ன்னிக்கு என்ன டிஃபன்?”

“இட்லி”

“நேத்துதான இட்லி பண்ணின? தினமும் எப்டி இட்லி சாப்புட்றது?”

“மாவு இருக்கு. இன்னிக்கு பண்ணலன்னா புளிச்சிபோயிடும்.”

“மாவு புளிச்சா தோச ஊத்திருவியே, அப்புறம் என்ன?”

“இன்னிக்கு ஒரு நாள்தான?”

“என்னால முடியாது. நீங்கல்லாம் சாப்டுங்க. எனக்கு ரெண்டு சப்பாத்தி போட்டுக் குடு.”

“உங்களுக்கு மட்டும் சப்பாத்தின்னா பசங்க கேக்க மாட்டாங்களா?”

“கேட்டா சுட்டு குடு.”

“அப்ப இட்லி மாவ என்ன பண்றது?”

“கூடக்கூட பேசாத. எனக்கு இட்லி வேணாம். பசங்கள சமாளிக்கறது உன் தலவலி. நா ஏற்கனவே ஏகப்பட்ட டென்ஷன்ல இருக்கேன். கடுப்பேத்தாத.”

“…. ….. …..”

“என்னா முணுமுணுப்பு?”

“ஒண்ணுமில்ல”

டேட்டிங் சர்வீஸ் வேண்டுமா? தொடர்புகொள்ளுங்கள்’ என்ற செய்தி வந்திருந்தது. கூடவே ஒரு எண். நீண்ட யோசனைக்கும் தயக்கத்துக்கும் பிறகு பிரசாத் அந்த எண்ணை அழைத்தான். சிறிது நேரம் மணியடித்தது. பிறகு அழைப்பு துண்டிக்கப்பட்டது. ஐந்து நிமிடங்களில் அதே எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. “சொல்லுங்க சார், உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று ஒரு பெண் குரல் இந்தியில் கேட்டது. ஆங்கிலத்தில் பேச முடியுமா என்று இவன் ஆங்கிலத்தில் கேட்டான். சற்றே தடுமாற்றம் நிறைந்த ஆங்கிலத்தில் அந்தப் பெண் தொடர்ந்தாள்.

“உங்களுக்கு என்ன வேண்டும்?”

“இந்த எண்ணிலிருந்து ஒரு செய்தி வந்திருந்தது. டேட்டிங் சேவை தருவதாகச் சொன்னது.”

“ஆமாம் சார். நாங்கள் டேட்டிங் சேவை நிறுவனம் நடத்துகிறோம்.”

“என்ன சேவை வழங்குகிறீர்கள்?”

“எங்கள் நிறுவனத்தில் பதிவு செய்தால் நாங்கள் உங்கள் விருப்பத்திற்கேற்ற பெண்களின் தொடர்புகளைக் கொடுப்போம். நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்களோ அந்த ஊரில் இந்தச் சேவையைப் பெறலாம்.”

“சேவை என்றால்”

“உங்கள் விருப்பத்திற்கேற்ற பெண்ணைச் சந்திக்கலம். பேசலாம். வெளியில் போகலாம்.”

“அவ்வளவுதானா?”

“உடல் உறவும் வைத்துக்கொள்ளலாம்.”

பிரசாத்துக்கு மனம் பொங்கியது.

“எவ்வளவு செலவாகும்?”

“நாங்கள் உங்களுக்கு மேடம்களின் தொடர்பைக் கொடுப்போம். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். பணம் தர வேண்டாம்.”

“இலவசமாகவா?”

“பதிவுக் கட்டணம் உண்டு சார். மேடமுக்குப் பணம் தர வேண்டாம். அவர்கள் யாரும் பாலியல் தொழிலாளி கிடையாது. உங்களைப் போலத்தான்.”

“ஓ… அப்படியானால் எங்களுக்குத் தொடர்பு ஏற்படுத்தித் தருவதுதான் உங்கள் சேவையா?”

“ஆமாம் சார். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?”

“சென்னை.”

“சென்னையில் எங்களுக்கு நிறைய மேடம்ஸ் இருக்கிறார்கள். கல்லூரி மாணவிகள், திருமணமானவர்கள், விவாகரத்து ஆனவர்கள், விதவைகள் என்று பலர் இருக்கிறார்கள்.”

“நான் அடுத்த வாரம் ஹைதராபாத் போவேன். அங்கே இந்தச் சேவை கிடைக்குமா?”

“இந்தியா முழுவதும் கிடைக்கும் சார்.”

“பெண்களை நான் எப்படித் தேர்ந்தெடுப்பது?”

“இரண்டு மாதங்களுக்கு 2100 ரூபாய். வாரத்திற்கு இரண்டு மீட்டிங். பணம் கட்டினீர்கள் என்றால் உங்களுக்கு வாட்ஸப்பில் மேடம்ஸ் புகைப்படங்கள், விவரங்களை அனுப்புவோம். உங்கள் வாட்ஸப் எண் இதுதானே?”

“ஆமாம்.”

“அதில் வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்புகிறோம்.”

“மற்ற தகவல்களையும் சேர்த்து அனுப்புங்கள்.”

தொலைபேசியில் சொன்ன விவரங்களுடன் கூடுதலாகச் சில விவரங்களும் வந்தன. கணக்கு விவரமும் வந்தது. வாட்ஸப் செய்தியில் பணம் சம்பாதிக்கவும் வாய்ப்பு உண்டு என்று ஒரு வரி இருந்தது. அந்த எண்ணை மீண்டும் அழைத்தான்.

“சொல்லுங்க சார்?”

பிரசாத் தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டான்.

“எங்கள் தொடர்பில் சில மேடம்கள் இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் திருப்திப்படுத்தினால் பணம் தருவார்கள்.”

“எவ்வளவு?”

“5000, 10000….”

“ஓஹோ…..”

“சார், எப்போது பதிவு செய்கிறீர்கள்?”

“யோசித்துச் சொல்கிறேன்.”

“இவ்வளவு தூரம் விசாரித்துவிட்டு இப்போது இப்படிச் சொன்னால் எப்படி?”

“விவரம் தெரியாமல் முடிவெடுக்க முடியாது. விவரம் தெரிந்தாலும் உடனடியாக முடிவெடுக்க முடியாது. யோசிக்க வேண்டும்.”

“எவ்வளவு நாள் ஆகும் சார்?”

“இரண்டு வாரங்கள்.”

“இரண்டு வாரங்களா?”

“ஆமாம்.”

“சரி சார்.”

பிரசாரத்தின் மனம் பரபரக்க ஆரம்பித்தது. கல்லூரி மாணவிகள், இல்லதரசிகள், விதவைகள், விவாகரத்து ஆனவர்கள். அவனால் தான் கேட்டதையும் படித்ததையும் நம்ப முடியவில்லை. பெரிய இடத்துப் பெண்கள் சிலர் இதற்குப் பணமும் தருவார்கள். யார் கண்டது. இதுபோன்ற தொடர்புகள் ஆழமாகவும் உருவாகலாம். முயற்சி செய்து பார்த்தால் என்ன என்று அவனுக்குத் தோன்றியது.

ஆனால், கைப்பேசி, இணையம் ஆகியவை வழியாகப் பாலுறவு ஆசைகாட்டிப் பணம் பிடுங்கும் கும்பலைப் பற்றி அவன் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறான். பணம் கட்டுவதன் மூலம் தன்னுடைய வங்கிக் கணக்கு விவரம் அவர்களிடம் போய்விடும். வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் வித்தையும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். சந்திக்க வரும் பெண்கள் நம்மைப் போல இல்லாமல் இந்த நிறுவனத்தின் ஆட்களாக இருக்கலாம். அவர்கள் ஏதாவது படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டலாம். உறவு வைத்துக்கொள்ளலாம் என்று கூட்டிப்போய் அந்த இடத்தில் நான்கைந்து பேர் சூழ்ந்துகொண்டு மிரட்டிப் பணம் பிடுங்கலாம். யூடியூப், இணையம் என்று மானத்தை வாங்கிவிடுவேன் என்று கூறி மிரட்டலாம். எப்படி நம்புவது?

இத்தனை சந்தேகங்களையும் தாண்டிப் பிரசாத்துக்குச் சபலம் எழுந்தது. என்னதான் ஆகிறது என்று பார்த்துவிடலாம் என்று நினைத்தான். ஆனாலும் பயம் நீங்கவில்லை. மாட்டிக்கொண்டால் பணம் போகும் என்பதோடு மானம் போகும். வீட்டிலும் மற்ற இடங்களிலும் அசிங்கப்பட வேண்டியிருக்கும்.

சபலமும் அச்சமும் அலைக்கழித்ததில் பிரசாத் குழம்பினான். தேவநாதனிடம் பேசலாம் என்று முடிவு செய்தான். தேவநாதன் முன்னணி ஊடகம் ஒன்றில் குற்றவியல் செய்திகளைக் கையாள்பவன். அவனிடம் யோசனை கேட்கலாம். ஆனால், தனக்கு என்று சொல்லி எப்படிக் கேட்பது?

நெடுநேரம் யோசித்த பிறகு ஒரு முடிவோடு தேவநாதனை அழைத்தான். “அர்ஜென்டா பேசணுமா?” என்றான் அவன். “இல்ல. எப்ப கூப்படலாம்?” “நானே எட்டு மணிக்கு மேல கூப்பட்றேன்.”

தேவநாதன் ஒன்பது மணிக்குக் கூப்பிட்டான். கைப்பேசித் திரையில் அவன் எண்ணைப் பார்த்ததும் பிரசாத் எழுந்து வெளியில் வந்தான்.

“சொல்லு ப்ரோ” என்றான் தேவநாதன்.

“என்னோட டிஸ்டன்ட் ரிலேட்டிவ் ஒருத்தர். மிடில் ஏஜ். அவருக்கு ஒரு ப்ராப்ளம்” என்றான் பிரசாத்.

பிரசாத்தின் உறவினர் செந்தில்நாதனுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. மனைவி வேறொருவருடன் தொடர்பு வைத்திருந்தார். விவாகரத்துக்குப் பின் அவரையே கல்யாணம் செய்துகொண்டுவிட்டார். செந்தில்நாதனுக்கு வசதி இருக்கிறது. குழந்தைகள் இல்லை. மனதில் ஆசை இருக்கிறது. ஆனால், இன்னொரு திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை. அப்போதுதான் தற்செயலாக டேட்டிங் சேவை நிறுவனம் பற்றித் தெரியவந்தது. ஆனால், நேரடியாகப் பணம் கட்டிச் சேர்ந்துகொள்ள பயமாக இருக்கிறது. ஏதாவது வம்பில் மாட்டிக்கொள்ளக் கூடாதே என்று பயப்படுகிறார். என்ன செய்யலாம்?

“அவருக்குதான் வசதி இருக்குல்ல? செக்ஸ் ஒர்க்கர்கிட்ட போக வேண்டியதுதானே?” என்றான் தேவநாதன்.

பாலியல் தொழிலாளியிடம் போவதென்றால் செலவு அதிகம் ஆகும். இவர்களோ இரண்டு மாதத்திற்கு 2100. அதில் 12 சேவைகள் என்கிறார்கள். அதில் சில பெண்கள் நமக்கே பணம் தருவார்களாம். இதைவிட்டுவிட்டுப் பாலியல் தொழிலாளியிடம் ஏன் பணம் செலவு செய்ய வேண்டும்?

“அதில்ல தேவா. அவருக்கு வேண்டியது செக்ஸ் மட்டுமல்ல. துணை. கம்பேனியன்ஷிப்.”

“அப்படீன்னா கல்யாணம் பண்ணிக்க சொல்லு.”

“அதுதான் வேண்டாம்னு முடிவோட இருக்காரே. இதோ பார் தேவா. அவர் கிட்ட நான் எல்லா ஆங்கிள்லயும் பேசிப் பாத்துட்டேன். அவரு இந்த ஆப்ஷன் பெட்டர்னு ஃபீல் பண்றாரு. நீ க்ரைம் ரிப்போர்ட்டரா இருக்கறதால உங்கிட்ட கேட்டு செய்யலாம்னு பாக்கறேன்.”

“க்ரைம் ரிப்போர்ட்டரா இருக்கறதாலதான் இவ்ளோ கேள்வி கேக்கறேன். இன்னிக்கு செக்ஸ் இண்டஸ்ட்ரி மாதிரி பணம் பிடுங்கற இண்ட்ஸ்ட்ரி வேற எதுவும் இல்ல. டீன் ஏஜ் பசங்கள்லேந்து பல்லுபோன கெழவன்வரைக்கும் இதுல சிக்கி சின்னாபின்னமாயிருக்காங்க. லேடீஸும் இந்த மாதிரி முயற்சில இறங்கி மாட்டிட்டு முழிக்காறங்க. போன மாசம்கூட என் பழைய ஃப்ரெண்டு ஒருத்தி இதுமாதிரி சிக்கல்ல மாட்டிக்கிட்டா. சொசைட்டில நல்ல பொசிஷன்ல இருக்கா. எப்படியாவது இதுலேந்து காப்பாத்து தேவ்னு கெஞ்சினா. எப்படியோ பிரச்சினைய முடிச்சி குடுத்தேன்.”

“அதுனாலதான் உங்கிட்ட வந்துருக்கேன்.”

“உட மாட்டியே…. நீ நம்பர், மெசேஜ் எல்லாத்தையும் ஃபார்வேர்ட் பண்ணு.”

எல்லாவற்றையும் அனுப்பிய பிரசாத் இந்த நிறுவனத்தின் மூலம் சந்திக்கக்கூடிய பெண்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். கல்லூரி மாணவிகள் வேண்டாம் என்று முடிவு செய்தான். 35 வயதான பெண்களில் இல்லத்தரசிகள், விதவைகள், விவாகரத்தானவர்கள் ஆகிய வகைமைகளிலிருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தான்.

தேவா ஒரு வாரம் கழித்து அழைத்தான்.

“சொல்லு தேவா.”

“இந்த பர்டிகுலர் கம்பெனிய பத்தி பெரிசா யாருக்கும் தெரியல. நம்பர போட்டா தகவல் எல்லாம் கரெக்டா வருது. ட்ரூ காலர் ஐடிய பாத்துட்டு அந்த நம்பரை செக் பண்ணிட்டுதான் கால் பண்றாங்கபோல. இதுவரைக்கும் இவங்கள பத்தி ரிப்போர்ட் எதுவும் வந்தா மாதிரி தெரியல. ஆனா அவங்க இவ்ளோ சீப்பா ஆஃபர் பண்றத பாத்தா சந்தேகம் வருது. அடுத்தடுத்த கட்டத்துல வேற வேற காரணம் சொல்லி கூடுதலா பணம் டிமாண்ட் பண்ணுவாங்கன்னும் சிலர் சொல்றாங்க. பண விஷயத்துல ரிஸ்க் எடுக்கத் தயாரா இருந்தா உங்க ரிலேட்டிவ எக்ஸ்பெரிமென்ட் பண்ண சொல்லு. அவர் நம்பர், ஆல்டர்னேட்டிவ் நம்பர் எல்லாம் எங்கிட்ட குடு. எதுனா பிரச்சின வந்தா பாத்துக்கலாம். டேட்டிங்ன்றது இல்லீகல் இல்லன்றதுனால போலீஸ்கிட்ட போறதுக்கு பிரச்சன எதுவும் இருக்காதுன்னு நெனைக்கறேன்.”

“தேங்ஸ் தேவா. நான் அவர் கிட்ட சொல்லிடறேன்.”

இன்னமும் பிரசாத்துக்கு முழு தைரியம் வரவில்லை. எல்லாம் சரியாக அமைந்தால் அதிருஷ்டம்தான். தவறாகிப் போனால் என்ன செய்வது? பிரச்சினை வந்தால் தேவாவிடம் என்ன சொல்வது? பதிவுசெய்த பிறகு வேறொரு காரணம் சொல்லிப் பணம் கேட்டால் என்ன செய்வது?

பிரசாத் நெடுநேரம் யோசித்தான். ராத்திரிக்கு என்ன டிபன் வேண்டும் என்ற கேட்ட மனைவியிடம் எரிந்து விழுந்தான். தொலைக்காட்சியை சத்தமாக வைத்து மேட்ச் பார்த்துக்கொண்டிருந்த மகனைத் திட்டினான். பிறகு ஒரு திட்டம் தீட்டினான்.

செந்தில் பயப்படுகிறார். அவருக்காக நானே அந்த நிறுவனத்தைத் தொடர்புகொண்டு பதிவுசெய்துகொள்ளப்போகிறேன். முழுமையாக விவரம் அறிந்துகொண்டு அவருக்குச் சொல்லப்போகிறேன். இதில் எனக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தேவாவுக்கு இது பிடிக்கவில்லை. “தேவையில்லாத வேலைல எறங்கற. வார்ன் பண்ணிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்.”

“செந்தில்நாதன் எனக்கு ரொம்ப வேண்டியவர் தேவா. அவருக்காக இந்த உதவிய நான் செஞ்சிதான் ஆகணும்.”

ன்ன ஆச்சு மாலினி, இன்னிக்கு ரொம்ப நேரமா உக்காந்துருக்கீங்க?”

“அத ஏன் கேக்கறீங்க ஷங்கர்…. ஒரு அசைன்மென்ட் முடிக்கணும். அது முடியாம ஜவ்வு மாதிரி இழுக்குது. என்ன பண்றதுன்னு தெரியல.”

“கட்டைய எடுத்து சட்டுனு மாட்டி ஸ்க்ரூ பண்றா மாதிரிதானே உங்க அசைன்மென்ட் எல்லாம் இருக்கும். கட்ட எப்படி ஜவ்வா மாறிச்சி?”

“அட போங்கப்பா. ஜோக்கெல்லாம் கேக்கற மூட்ல இல்ல. அடுத்த மாசம் எம் பையனுக்கு டென்த் எக்ஸாம் ஆரம்பிக்குது. அவனோட ஒக்காரணும். இந்த அசைன்மென்ட் முடிச்சிட்டா ரெண்டு வாரம் லீவு போடலாம்னு இருக்கேன்.”

“அதுல என்ன பிரச்சனன்னுதான் கேக்கறேன்.”

“ட்ரெய்னீ ரெக்டூட்மென்ட் ஸ்கீம் ஒண்ணு போயிட்டு இருக்குல்ல? அதுக்கான ஸ்ட்ராட்டஜி பிளானிங் பண்ணணும்னு வி.பி. குடுத்தாரு. போன வருஷம் பண்ணினா மாதிரி பண்ணி குடுத்தேன். இந்த வருஷம் பார்ட்னர்ஸ் அதிகமா சேந்துருக்காங்க, ட்ரெய்னிங் மாட்யூலும் மாறுது, ட்ரெய்னீஸ அப்சார்ப் பண்ற பாலிசிலயும் சேஞ்ச் இருக்குன்னு சொல்லி ரீவொர்க் பண்ண சொல்லிட்டான். இந்த எழவையெல்லாம் முன்னாலயே சொல்லியிருக்கக் கூடாதா சனியன் புடிச்சவன். டீடெய்ல்ஸ் கேட்டேன். பார்ட்னர்ஸ் கிட்டேந்து வந்த மெய்ல்ஸ், ஹெச்.ஆர். கம்யூனிகேஷன்ஸ் எல்லாத்தையும் அனுப்பிட்டான். இப்ப அதையெல்லாம் பாத்து டீட்டெய்ல்ஸ் எடுக்கணும். அதுதான் பேசிக் டேட்டா. அப்புறம் அதை ப்ராசஸ் பண்ணணும். அதுக்கப்புறம் ஸ்ட்ராட்டஜி அவுட்லைன் குடுக்கணும்.”

“சிக்கல்தான். நீங்கள் ஒண்ணு பண்ணுங்க. டீட்டெய்ல்ஸ் எடுத்து பென்ட்ரைவ்ல எங்ககிட்ட குடத்துருங்க. மெயில்ல அனுப்பினா ரெக்கார்ட் ஆயிடும். பென்ட்ரைவ்ல குடுங்க. நான் வீட்டுக்கு எடுத்துட்டு போய் ப்ராசஸ் பண்றேன். எடுக்க எடுக்க குடுத்துடுங்க. நான் டக்குனு முடிச்சிடுவேன். நீங்க அப்புறமா ஒரு வாரத்துல ஸ்ட்ராட்டஜி அவுட்லைன் போட்டுரலாம்.”

“நெஜமாவா சொல்றீங்க ஷங்கர்? உங்களுக்கு டயம் இருக்குமா?”

“நைட்லதான் பண்ணபோறேன். ஒருவாரம் ஓடிடி பக்கம் போகாம இருந்தா போச்சு. அப்புறம் சேத்துவெச்சு பாத்துக்கலாம்.”

“தேங்ஸ் ஷங்கர்.”

“இட்ஸ் ஓகே. டீட்டெய்ல்ஸ் எடுங்க மொதல்ல.”

ஷங்கர் கிளம்பினான். “டயமாயிடிச்சே மாலினி, உங்களை டி.நகர்ல ட்ராப் பண்ணட்டுமா?”

“அஞ்சு நிமிஷம் வெயிட் பண்றீங்களா?”

“நான் வண்டிய எடுத்துட்டு மெயின் கேட் பக்கத்துல நிக்கறேன். வந்துடுங்க.”

மாலினி தனசேகரை அழைத்தாள். “நீ நேரா வீட்டுக்கு வந்துரு. என்னை என் கலீக் ட்ராப் பண்ணிடுவாரு.”

“யாரு? மாதவனா?”

“இல்ல. அவர் எப்பவோ ரிசைன் பண்ணிட்டாரு. இது ஷங்கர். நைஸ் கய்.”

“ஓ… ஃபைன்… சரி, பை….”

“வெயிட், வெயிட். லீவு போட முடியாதுன்னு சென்னேன்ல, இப்ப போட முடியும்னு தோணுது. தேங்ஸ் டு ஷங்கர். ட்ரெய்னீ ஸ்கீம்ல அவர்தான் ஹெல்ப் பண்றாரு. சீக்கிரம் முடிச்சிடலாம்னு நெனைக்கறேன்.”

“ஓ… பரவால்லியே…”

“யா. நைஸ் கய். லேடீஸ்க்கு ஹெல்ப் பண்ணிட்டு ஏதாவது ஒரு விதத்துல அட்வான்டேஜ் எடுக்கற டைப் இல்ல. ஸோ, நோ வொரீஸ்…”

“சூப்பர் சூப்பர்… சரி வா, வீட்ல பேசிக்கலாம்… பை…”

“பை…”

மூர்த்தி, ஃப்ரீயா இருக்கியா?”

“ஒர்க் போயிட்ருக்கு சார். பரவாயில்ல சொல்லுங்க.”

“காஃபி சாப்படலாமா?”

“ஷ்யூர் சார். கான்டீனுக்கு வந்துரவா?”

“கான்டீன் வாணாம். அங்க நம்ல கம்பெனி ஆளுங்க எதிர்ல எதுவும் பேச முடியாது. நீ எதிர்க்க இருக்கற டீக்கடைக்கு வந்துரு.”

“சரி சார்.”

ஷங்கர் கிளம்பினான். அந்த டீக்கடையில் மாலை அருமையான சட்னியுடன் சுடச்சுட போண்டா பஜ்ஜி வகையறாக்கள் கிடைக்கும். ஆளுக்கு ஒரு தட்டு போண்டா வாங்கிக்கொண்டு ஓரமாக வந்தார்கள். அக்கம்பக்கத்து அலுவலகங்களில் பணிபுரியும் பலரும் தத்தமது அலுவலகங்களில் டீ, காபி, நொறுக்குத் தீனி வகையறாக்கள் கிடைத்தாலும் இந்த டீக்கடைக்கு வந்து போண்டா, பஜ்ஜி, வடை என்று எதையாவது சாப்பிட்டு டீ குடிப்பது வழக்கம். ஷங்கர் ஐந்து ஆண்டுகளாக இந்தக் கடையின் வாடிக்கையாளர். நாளுக்கு நாள் கடையின் வியாபாரம் வளர்வதைப் பார்த்துவருகிறான். ‘டீயும் பஜ்ஜியும் வித்தே கோடீஸ்வரனாயிருப்பான். எதையெதையோ படிச்சி கிழிச்சி நாம என்ன சம்பாரிச்சிட்டோம்’ என்று நினைத்துக்கொள்வான்.

“சொல்லுங்க சார்…” என்றான் கிருஷ்ணமூர்த்தி.

“போன வாரம் கம்பெனி விஷயமா பேங்ளூர் போயிருந்தல்ல?”

“ஆமா சார். ட்ராவல் ரிப்போர்ட், அக்கவுண்ட்ஸ் எல்லாம் சப்மிட் பண்ணிட்டேன்.”

“பாத்தேன். ரிப்போர்ட்டை மேல அனுப்பிட்டேன். அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட்ல இன்னும் சைன் பண்ணல.”

மூர்த்தியின் முகம் மாறியது. “ஏன் சார், ஏதாவது ப்ராப்ளமா? கணக்கெல்லாம் கரெக்டாதானே குடுத்துருந்தேன்…”

“அதுதான் ப்ராப்ளம்.”

மூர்த்தி குழம்பினான். ஷங்கர் தொடர்ந்தான்.

“டூர் போயிட்டு வந்த பிறகு உன் கைல எவ்ளோ நின்னுது?”

“புரியல சார். எங் கையலயா… ஒண்ணுமில்ல சார்.”

“மூர்த்தி, நீ இந்த கம்பெனில சேந்து எவ்ளோ நாள் ஆகுது?”

“ரெண்டு வருஷம் ஆகப்போகுது சார்.”

“நான் வந்து ஆறு வருஷம் ஆகுது. இந்த கம்பெனிய பத்தி உன்னவிட எனக்கு நல்லா தெரியும்.”

“ஆமா சார். நீங்க சீனியர்…”

“என்ன மயிறு சீனியர்…. எப்பவும் சீட்டுல ரெண்டு ஊசிய சொருகி வெச்சிருக்கான் அந்த வி.பி. பாத்து பாத்து ஒக்கார வேண்டியிருக்கு. கொஞ்சம் அஜாக்ரதயா இருந்தாலும் குண்டி பழுத்துரும்.”

மூர்த்தி ஒன்றும் பேசவில்லை.

“இவனுங்க கோடிக்கணக்கா சம்பாரிக்க எத்தனையோ டகால்டி வேல பண்றாங்க. பல டுபாகூர் வேலைகளுக்கு நானும் என்னப்போல நெறய சீனியர்ஸும் உடந்தை. எங்களுக்கு என்ன குடுக்கறான்? எல்லாத்தையும் அவனே உட்டுக்குறான். நமக்கு சீட்டுல ஊசிய சொருவி எப்பவும் டென்ஷன்ல வெக்கறான். இவனா எதுவும் குடுக்க மாட்டான். நாமாதான் எடுக்கணும்.”

“புரியல சார்…”

காலியான தட்டை எடுத்துக்கொண்டு ஷங்கர் நடந்தான். அதைத் தொட்டியில் போட்டுவிட்டுக் கை கழுவிக்கொண்டு டீ போடும் இடத்துக்குப் போனான். மூர்த்தியும் பின்தொடர்ந்தான்.

டீ வாங்கிக்கொண்டு மறுபடியும் ஓரமாக வந்து நின்றார்கள். மூர்த்தி அடிக்கடி கண்ணாடியைச் சரிசெய்துகொண்டே ஷங்கரின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“கணக்கெல்லாம் கரெக்டா குடுக்க கூடாது. கம்பெனிக்காக ரெண்டு நாள் டூர் போனா நம்ம கைல ரெண்டாயிரம், மூவாயிரம் நிக்கணும். எப்டி கணக்க எழுதறதுன்னு நான் சொல்லித்தரேன். வேற ஸ்டேட்மென்ட் குடு.”

“சார்… இது தப்பில்லயா சார்…”

“ஒரு மயிறும் தப்பில்ல. அவன் நம்பள தினமும் சூத்தடிக்கறான். நாம என்னிக்கோ ஒருநாள் திருப்பி அடிக்கறோம். இவுனுக்கெல்லாம் இதுதான் சரி. இன்னும் கொஞ்ச நாள் போனா நீயே தெரிஞ்சிப்ப. போனவாட்டி அப்ரைசல்ல உனக்கு எவ்ளோ குடுத்தான்?”

“ஒண்ணுமேயில்ல சார். ரொம்ப கம்மி.”

“பாத்தியா. நீ மாடு மாடு மாரி உழைக்கற. அவன் உன்ன குப்புற படுக்கவெச்சி சூத்தடிக்கறான். நீயும் காட்டிகினே இருப்ப. ஒருநாள் சூத்து புண்ணாயிடுச்சின்னு அழுவ. மருந்து போடறதுக்காவது பணம் வேணாமா?”

மூர்த்தி பரிதாபமாகப் பார்த்தான்.

“ரொம்ப யோசிக்காத. இந்த ஆபீஸ்ல எம்.டி. வெரிக்கும் இததான் பண்றானுங்க. எல்லாத்தையும் பாத்துட்டுதான் நான் இந்த முடிவுக்கு வந்தேன். மூவாயிரம் ரூபா உனக்கும் எனக்கும் பெருசு. கம்பெனிக்கு அது பிச்சக்காசு. நமக்கு தர வேண்டியத அவன் நியாயமா தர்ரதில்ல. நம்ம இப்டி எட்த்துக்க வேண்டித்தான். நீ ஏழு மணிக்கு மேல சீட்டுக்கு வா. எப்டி கணக்கு எழுதறதுன்னு சொல்லித்தரேன்.

மூர்த்தி தயக்கத்துடன் தலையாட்டினான். ஷங்கர் பணம் கொடுப்பதற்காகக் கல்லாவுக்குச் சென்றான்.

சிவா எலியட்ஸ் கடற்கரை அருகே உள்ள சிறிய பழரசக் கடைக்குப் போய்ச் சேர்ந்தபோது இரவு மணி பத்து இருக்கும். கடை மூடியிருந்தாலும் கடையின் பெயர்ப் பலகை பளிச்சென்று தெரியுமளவுக்குப் பலகைமீது ஒரு விளக்கு ஒளிர்ந்துகொண்டிருந்தது. பைக்கை நிறுத்திவிட்டுக் கைப்பேசியின் கூகிள் வரைபடத்தை மூடிவிட்டு சிவா அந்தக் கடைவாசலை நெருங்கினான். மகேஷும் அவன் காதலி ஆஷாவும் கையைக் கட்டியபடி ஓரமாக நின்றிருந்தார்க்ள. மகேஷ் ‘ஏண்டா லேட்டு” என்பதுபோல ஒரு பார்வை பார்த்தான். காவல் அதிகாரியைப் பார்த்து சிவா, “ஸாரி சார், இவங்க வீட்டுக்குப் போய் டாகுமெண்ட்ஸ் கலெக்ட் பண்ணிட்டு வர லேட்டாயிடிச்சு” என்று மகேஷுக்கும் சேர்த்து பதில் சொன்னான். ஆஷா கையில்லாத டி- ஷர்ட்டும் கணுக்காலுக்கு மேல் ஏறிய இறுக்கமான ஜீன்ஸும் போட்டிருந்தாள். மருட்சியோடு சிவாவின் கண்களை ஒருமுறை பார்த்துவிட்டுக் கண்களைத் தாழ்த்திக்கொண்டாள்.

சிவா காவல்துறை அதிகாரியிடம் அமைதியாகவும் நிதானமாகவும் பேசினான். அதிகாரி மகேஷின் வண்டிக்கான ஆவணங்கள், அவனுடைய அடையாள அட்டை ஆகியவற்றைப் பார்வையிட்டார். சிவா அங்கே வருவதற்கு முன்பே சிவாவின் நண்பரான காவல்துறை அதிகாரி இந்த அதிகாரியை அழைத்துப் பேசிவிட்டதால் பிரச்சினை எதுவும் ஆகவில்லை.

“உங்க ஃப்ரெண்ட கூப்டுங்க” என்றார் அதிகாரி.

சிவா, மகேஷை அழைத்தான். ஆஷாவும் உடன் வந்தாள்.

“இவ்வளோ நேரத்துக்கு மேல இந்த மாதிரி எடத்துக்கு ரெண்டு பேர் மட்டும் தனியா வர்ரது சேஃப் கிடயாது. பெரிய ஆபீஸ்ல வேல பாக்கறீங்க. படிச்சிருக்கீங்க. இந்த சிம்பிள் மேட்டர் உங்களக்குத் தெரியாதா? இங்க ஒரு மாசத்துக்கு எவ்ளோ சம்பவம் நடக்குது தெரிமா? லவர்ஸ் தனியா இருக்கணும்னு இங்க வராங்க. அவங்க தனியா வருவாங்கன்னு தெரிஞ்சே ரவுடீஸ் அவங்கள டார்கெட் பண்றாங்க. ஏதாவது ஆகியிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க? ஏம்மா, உனக்காவது தெரிய வாணாம்? அதுல வேற இவரு எந்த டாகுமென்ட்டும் இல்லாம ட்ராவல் பண்றாரு. லைசன்ஸ் இல்லாம வண்டியே எடுக்கக் கூடாது. உங்க பேக்ரவுண்ட பாத்துதான் உடறேன். இனி இந்த மாதிரி பண்ணாதீங்க” என்றார்.

மகேஷும் ஆஷாவும் நன்றியோடு தலையசைத்தார்கள். மகேஷ் அதிகாரியிடம் “தேங்க் யூ சார்” என்று கை கொடுத்தான். அவர் மிடுக்கோடு கை குலுக்கிவிட்டு, “பத்ரமா போங்க” என்றார். சிவா, “தேங்க்யூ சார்” என்று கை குலுக்க முன்வந்தபோது, “நீங்க லைசன்ஸ் வெச்சிருக்கீங்களா?” என்று அதிகாரி கேட்டார். அவர் பக்கத்தில் நின்றிருந்த காவலர் மெலிதாக முறுவலிப்பதை சிவாவால் பார்க்க முடிந்தது. சிரித்துக்கொண்டே தன் பர்ஸை எடுத்து ஓட்டுநர் உரிமம், நிறுவன அடையாள அட்டை ஆகியவற்றைக் காட்டினான்.

உரிமத்தைப் பார்வையிட்டவாறே, “துரைசாமி சாரை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றார்.

“சின்ன வயசிலிருந்தே பழக்கம். நானும் அவரும் காலேஜ் ஃபுட்பால் டீம்ல ஒண்ணா விளையாடியிருக்கோம்.”

“ஓ… இப்பவும் வௌயாடுவீங்களா?”

“ப்ச…. இல்ல சார். ஐ.டி. இண்டஸ்ட்ரி என்னைப் போல ஸ்போர்ட்ஸ் பர்சன்ஸையெல்லாம் காயடிச்சிடிச்சி.”

அதிகாரி புன்னகை புரிந்தார். “உங்க பேர் என்ன?” என்றார்.

“சிவா.”

“இதுல வேறமாரி போட்ருக்கு?”

“சிவஷங்கர்.”

“இல்லியே…”

சிவா சிரித்தபடி, “சிவ ஷங்கர் பிரசாத்னு போட்டிருக்கும் சார்” என்றான்.

“போலீஸ்ல, கவர்ன்மென்ட் டிபார்ட்மென்ட்ல எல்லாம் பேர கேட்டா முழுசா அஃபிஷியல் பேர சொல்லுங்க. அதுதான் முறை” என்றார் அதிகாரி.

“சரி சார்.”

“கௌம்புங்க. உங்க ஃப்ரெண்டை சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க.”

“தேங்க்யூ சார்.”

பக்கம் திரும்பு, தீப்பொறி உணர்

“பீல் தி ஸ்பார்க்” (Feel the Spark) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் பாடல், ‘லிவிங் தமிழ்’ (Living Tamil) இலக்கியத் திருவிழாவிற்காக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (USA) தயாரிப்பில் உருவான பிரம்மாண்டமான கலைப்படைப்பு.

குறிப்பாக, ஜெயமோகனின் காவியப் படைப்பான ‘விஷ்ணுபுரம்’ நாவல் இதில் முன்னிலைப்படுத்தப்படுவது இலக்கிய ரசிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். பழைய இலக்கியங்கள் வெறும் புத்தகங்கள் மட்டுமல்ல, அவை இன்றும் “சுடர்விடும் நெருப்பு” என்பதை இந்தப் பாடல் அழகாகச் சித்தரிக்கிறது.

ராஜன் சோமசுந்தரத்தின் இசையமைப்பில் உருவான இந்தப் பாடல், நவீன தாளங்களால் இதயத்தை ஈர்க்கிறது:

வசீகரம்: “Modern exotic, modern thoughts are hypnotic” என்ற வரிகள் கேட்ட உடனே மனதில் ஒட்டிக்கொள்ளும் ரகம்.

இளமைத் துடிப்பு: நியான் விளக்குகளின் ஒளி மற்றும் வேகமான படத்தொகுப்புடன், இளைய தலைமுறையைத் தமிழ் இலக்கியத்தோடு இணைக்கும் ஒரு நவீன மனப்போக்கை (Modern mindset) இந்தப் பாடல் பிரதிபலிக்கிறது.

தாள லயம்: தாளக்கட்டுகள் (Rhythmic beats) பாடலை மிக வேகமாகவும் துடிப்பாகவும் நகர்த்திச் செல்கின்றன. “நடனமாடும் தீப்பிழம்புகள்” (flaming frames) போன்ற வரிகளுக்கு ஏற்ப, இசையும் நம்மை ஆட வைக்கிறது.

21-ஆம் நூற்றாண்டின் புதிய மையோடும் இனிய தாளங்களோடும் தமிழ் இலக்கியம் இன்றும் உயிர்ப்புடன் இருப்பதை இது உலகிற்குப் பறைசாற்றுகிறது. ஜெயமோகனின் வாசகர்களுக்கும், நவீன இசையை விரும்புபவர்களுக்கும் இப்பாடல் மாபெரும் விருந்தாகும்!

(ஏ.ஐ. உதவியுடன் எழுதியது)

பாடலின் மொழியாக்கம்

பக்கம் திரும்பு, தீப்பொறி உணர்
மேதையின் நெஞ்சத் தீயைத் தொடு
தென்றலிலிருந்து கதைகள் கர்ஜிக்கின்றன
கவிதையின் கைகளால் விதிகள் உடைகின்றன

தமிழில் கனவுகள், துணிவுடன் சுதந்திரமாய்
நம் நூற்றாண்டை வடிக்கும் குரல்கள்
புதிய மை, புதிய தாளம், நியான் வெளிச்சம்
இன்றிரவு ஒவ்வொரு வார்த்தையும் நெருப்பு

கிராமங்களிலிருந்து நகர இரவு வரை
நம் உலகை எழுதுகிறோம், உரிமை கோருகிறோம்
ஒவ்வொரு எண்ணமும் ஒரு புரட்சியின் அலை —
ஆம், நாம் நவீன இலக்கியத்தின் சிருஷ்டி!


அபூர்வம், கனவாளம்
நவீன சிந்தனை, நவீன இலக்கியம்!
தாளமயம், மயக்கமயம்
ஒவ்வொரு பக்கமும் ஒரு கவிதை!
அபூர்வம், கனவாளம்
ஒருபோதும் நிற்காத நவீன மனங்கள்!
மின்னல்போல், கலவரமாய் —
நவீன சிந்தனை, நவீன இலக்கியம்!


வரிகள் தீப்பிழம்புகளாய் ஆடுகின்றன
மௌனத்தை உடைக்கின்றன, பெயர்களை அழைக்கின்றன
காதல் முதல் இழப்பு, அரசியல் வரை
மொழியியலில் சுருட்டிய உண்மைகள்

கனவாளர்கள் ஒவ்வொரு எழுத்தாணியிலும் எழுகிறார்கள்
கதைகள் மீண்டும் மீண்டும் மறுபிறப்பெடுக்கின்றன
காலமற்ற தோலில் டிஜிட்டல் மை
எதிர்காலம் நாம் தொடங்கும் இடம்

கதைகளை சுழற்று, தாளத்தை மறுகலைக்கு
பழமை புதுமையுடன் காலம் கடந்து சந்திக்கிறது
மரபு பிரபஞ்ச நகைச்சுவையாய் மாறுகிறது —
ஆமாம், அதுதான் நம் நவீன இலக்கியம்!


அபூர்வம், கனவாளம்
நவீன சிந்தனை, நவீன இலக்கியம்!
தாளமயம், மயக்கமயம்
ஒவ்வொரு வார்த்தையும் சரியான தாக்கம்!
அபூர்வம், கனவாளம்
ஒருபோதும் தலைவணங்காத நவீன ஆன்மாக்கள்!
மின்னல்போல், கவிதையாய் —
நவீன சிந்தனை, நவீன இலக்கியம்!


தமிழ் வார்த்தைகள், உலகின் ஒலி
ஒவ்வொரு பெயர்ச்சொல்லிலும் புதிய உலகங்கள்
நாம் வாழ்க்கையை எழுதுகிறோம், துண்டு துண்டாய்
அபூர்வம், கனவாளம், நவீன இலக்கியம்.


A few translation notes:

  • Exotic, Quixotic → அபூர்வம், கனவாளம் — “அபூர்வம்” captures the sense of the rare and wondrous; “கனவாளம்” renders the Quixotic spirit of bold, impractical dreaming — without needing to borrow the English word.
  • Modern Lit → நவீன இலக்கியம் — kept formal and resonant, as the phrase carries weight throughout.
  • “Cosmic wit” → பிரபஞ்ச நகைச்சுவை — a slightly grand rendering, but fits the lyrical register.
  • “Digital ink on timeless skin” → காலமற்ற தோலில் டிஜிட்டல் மை — kept close to the original image; “தோல்” here works both as skin and as the surface of a page.

தெளிவு + துல்லியம் + கொஞ்சம் உல்லாசம் = நியு யார்க்கர்

நூலின் பெயர்: Cast of Characters: Wolcott Gibbs, E. B. White, James Thurber, and the Golden Age of the New Yorker
எழுதியவர்: Thomas Vinciguerra

வெளியான தேதி: நவம்பர் 9, 2015
ISBN: 978-0393240030
பக்கங்கள்: 464
பதிப்பாளர்: நார்டன்

Cast-of-Characters

பத்திரிகையில் என்ன எழுதினார்கள் என்பதை விட, பத்திரிகையை யார் நடத்துகிறார்கள் என்பதில் எப்போதுமே எனக்கு ஆர்வம் அதிகம். ஆனந்த விகடனில் நடந்த பிணக்குகள் காரணமாக கல்கி தனியாக வாராந்தரி துவங்கியது எல்லாம் ரொம்பவே பிற்பாடுதான் தெரிய வந்தது. அதற்கு முன்பாகவே சாவி பத்திரிகையும் இதயம் பேசுகிறது மணியனும் விகடனில் இருந்துதான் கிளை பரப்பினார்கள் என்பதில் இந்த என்னுடைய வம்பார்வம் துவங்கியிருக்க வேண்டும். நிஜத்தில் முதன் முதலில் ஆர்வத்தைத் தூண்டியது ‘அரசு பதில்கள்’ எனப்படும் குமுதத்தின் மும்மூர்த்திகள் – எஸ்.எ.பி. அண்ணாமலை, ரா.கி. ரங்கராஜன், துமிலன், புனிதன், ஜ.ரா.சுந்தரேசன் – சமயத்திற்கேற்றபடி மாறிக்கொண்டிருந்தார்கள்.

அவர்களைக் குறித்து உயிர்மைக் கட்டுரையில் பிரபஞ்சன் எழுதியது:

Prabanchan_brabhanjan-1அண்ணாமலை அரசர், வள்ளல் அழகப்பர் ஆகியோரின் குடும்பப் பின்னணியிலிருந்து வந்த ஒரு செட்டியார் குடும்பத்து இளைஞர், ஒரு ஐயங்கார் நண்பரைத் துணைக்கு வைத்துக்கொண்டு தொடங்கிய பத்திரிகையாக, நிலம் தோயாமல் அந்தரத்தில் நின்றது குமுதம்.

பள்ளி, கல்லூரிக் காலங்களில் வாசிப்பில் ஈடுபாடு கொண்ட அண்ணாமலை என்கிற இளைஞர், படிக்கும் பழக்கம் தந்த உற்சாகத்தில் கதைகள் எழுதத் தொடங்கி இருக்கிறார். அவர் கதையை அக்காலத்திய புகழ்பெற்ற எழுத்தாளரும் பத்திரிகையாளருமான நாரண துரைக்கண்ணன் (ஜீவா), தன் பத்திரிகையில் பிரசுரம் செய்திருக்கிறார். எம்.எ.பி.எல். படித்த, பணக்காரக் குடும்ப இளைஞர், இன்னொரு முதலாளியிடம் சென்று பணியாற்றிச் சம்பளம் பெற விருப்பம் இன்றி, வள்ளல் அழகப்ப செட்டியார் துணையோடு தானே பத்திரிகை தொடங்கிச் சொந்த வியாபாரியாகவும், முதலாளியும் ஆனார், எஸ்.ஏ.பி. அண்ணாமலை என்கிற இளைஞர். கல்லூரி நண்பராக இருந்த கூரிய மூளையும் உழைப்பும் மிகுந்த பார்த்தசாரதியைப் பிரசுரிப்பாளராகக் கொண்டு குமுதத்தைத் தொடங்கினார் எஸ்.ஏ.பி.

Kumudam_Arasu_Parthasarathy_Jawahar_Palaniappan_Sundaresan_Pundihan_PRABANJAN

இன்னொரு கட்டுரை – பகவத் கீதை பாடமும் பலான படங்களும்

SAP_Annamalai_Kumudham_Kumudam_Kumuthamஆசிரியர் அறைக்கு அடுத்த அறை துணை ஆசிரியர்களுடையது. வலது பக்கத்தில் நுழைவாயிலையொட்டி முதல் இருக்கை சண்முக சுந்தரத்துடையது. அடுத்த இருக்கை ஜ.ரா. சுந்தரேசனுடையது. இந்த இருக்கைகளுக்குப் பின் பலகைத் தடுப்புக்கு உள்ளே ரா.கி.ரங்கராஜன். சுந்தரேசனுக்குப் பக்கத்தில் என் இருக்கை.

சரியாகப் பத்து ஐந்துக்கு ஆசிரியர் வருகை புரிந்தார். கதவைத் திறந்துகொண்டு எட்டிப் பார்த்தார். நாங்கள் உள்ளே வரலாம் என்பதன் சமிக்ஞை அது. அறையின் உள்ளே நுழைவதையும் ஒரு ஒழுங்கோடு செய்ய நேர்ந்தது. முதலில் சீனியரான ரா.கி.ரங்கராஜன். அதன்பிறகு சின்ன சீனியரான சுந்தரேசன். அதன்பிறகு சின்னச் சின்ன சீனியரான சண்முக சுந்தரம். அதன்பிறகே படு சின்னப் புதுமுகமான நான். ஆசிரியர் இருக்கைக்குமுன் எங்கள் நாற்காலிகள். அதிலும் ஒரு ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டும். முதல் நாற்காலி சீனியருடையது. அடுத்து அடுத்து உள் நுழைந்த வரிசைப்படி அமரவேண்டும். என் நாற்காலியில் நான் மட்டும் அமரலாம். ஒழுங்கு. ஒழுங்கு. ஒழுங்கு உயிரினும் மேலானது.

குமுதம் குறித்து இவ்வளவு பெரிய ஆலாபனை எதற்கு?

அமெரிக்கா வந்தபிற்கு அதே போல் உளம்கவர் கள்வனாக ‘நியு யார்க்கர்’ இதழ் அமைந்து இருந்திருந்தது. சின்ன வயதில் வெள்ளிக்கிழமைக்காகக் காத்திருந்தது போல், இங்கேயும் நியு யார்க்கர் இதழுக்காக காத்திருத்தலும், நூலகத்தில் கிடைத்தவுடன் எடுத்து வாசிப்பதும் சுகம் தந்தது. இசையைப் பற்றி வார்த்தையால் விளக்க முடியாது என்பார்கள். அது போல் நியு யார்க்கர் வாசிப்பனுபவர்த்தைச் சொல்லி புரியவைப்பதும் சற்றே சிரமமே.

தொடர்புள்ள பதிவு: Love The Music Of Coen Brothers Films? You Can Thank Carter Burwell : NPR — Unlike the Coens, Burwell says, Haynes loves to dig into the subtext and meaning of the music. “Not everyone, including musicians, is good at discussing music in verbal terms — but Todd is.” Burwell says. “He’s actually very good at listening to a piece of music and saying in words what that music is doing to the scene, or to the characters, or to the film.” For Carol, Burwell and Haynes agreed that even though the music was critical in communicating those unexpressed feelings and desires, less was more.

நியு யார்க்கர் நல்ல பத்திரிகைதான்… அது தெரிந்த விஷயம்தானே. அதற்கும் இந்தப் பதிவிற்கும், மேலே சொல்லப்பட்டிருக்கும் புத்தகத்திற்கும் என்ன தொடர்பு?

1925ல் நியு யார்க்கர் பிறக்கிறது. அன்று தொடங்கிய பாரம்பரியம் இன்றும் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. கொஞ்சம் கேலி, நிறைய விமர்சனம், ஆதாரம் சார்ந்த செய்திக் கட்டுரைகள், ஒவ்வொரு இதழுக்கும் முத்து முத்தாக ஒரேயொரு கதை, சற்றே சிலேடையாக இருந்தாலும் பஸ் டிக்கெட் பின்னாடி எழுதப்படும் காதல் பாக்கள் போல் இல்லாமல் நெஞ்சைத் துளைக்கும் கவிதைகள், நியு யார்க் நகர சங்கதிகள், அரசல் புரசலாகப் பேசப்படும் மாநகர வம்பு விஷயங்கள் என்று சுவாரசியமாகவும், ஆழமாகவும், கவன ஈர்ப்பைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. நியூ யார்க்கரில் இடம்பெற வேண்டும் என்பதற்காக தங்கள் படைப்புகளை அனுப்பிவிட்டு பல்கலைக்கழக பேராசிரியர்களும் புலிட்சர் பரிசு வென்றவர்களும் காத்திருக்கின்றனர்.

இப்பொழுது எச்.பி.ஓ.வில் வெளியாகும் ’வினைல்’ தொடரின் முதல் எபிசோடை ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்சிஸீ இயக்குகிறார். முதலில் துவங்கியவர்கள் எப்படி செய்கிறார்களோ, அதை அப்படியே பின் தொடரும் கலையை டிவி முதல் நியு யார்க்கர் வரை பின்பற்றுகிறார்கள். கால்கோள் இட்டவர்கள் செலுத்திய பாதையில் அடியெடுத்துச் செல்கிறார்கள். சொல்வனத்தில் ’மேற்கில் சின்னத்திரை’ கட்டுரையில் சத்தியமூர்த்தி இவ்வாறு சொல்கிறார்:

இந்தத் திரைக்கதையை இயக்குவதற்கான இயக்குனர்கள் தேர்வும் வித்தியாசமானது. முதல் எபிசோட் மட்டும், திரையுலகத்தின் பிரபலமான இயக்குனரை வைத்து இயக்குவார்கள். பிறகு அவர் பயன்படுத்திய அதே வழிமுறையை வைத்துகொண்டு, அதாவது காட்சி அமைப்பு, ஒளிப்பதிவுக் கோணங்கள், நடிக்கும் முறை ஆகியவற்றை பின்பற்றி வெவ்வேறு இயக்குனர்களை வைத்து இயக்குவார்கள். இந்த தொடர்களைப் பார்க்கும் போது எனக்கு ஏற்படும் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இவற்றில் முதல் ஸீசனின் முதல் பகுதியில் இருந்து கடைசி ஸீசன், கடைசிக் காட்சி வரை ஒரே முறை, பாணி (Pattern) பயன்படுத்தப் படும். ஒரு சிறு மாற்றம் கூட இருக்காது.

அது போல் அன்று ஆரம்பித்து வைத்தவர்களின் வழிமுறையை நியு யார்க்கர் இன்றளவும் பயன்படுத்தி வருகிறது. துவக்கியவர்களின் பங்கு எவ்வாறு முக்கியம் என்பதை உணரவைக்கிறது. இந்தப் புத்தகம் நியு யார்க்கர் பத்திரிகையைத் துவக்கியவர்களின் வரலாறு. யார் ஆரம்பித்தார்கள், என்ன வழிமுறையைப் பின்பற்றினார்கள், எவ்வாறு எடிட்டிங் செய்தார்கள், எங்ஙனம் தரத்தை நிலைநாட்டினார்கள், எப்படியெல்லாம் பதில் போட்டு கட்டுரையாளர்களையும் படைப்பாளிகளையும் தட்டிக்கொடுத்து வேலை வாங்கினார்கள், எங்கே ஓய்வெடுத்தார்கள், எப்படி பணியில் மூழ்கினார்கள், எப்பொழுது வேறு புத்தகங்களை எழுதினார்கள், வேலையை விட்டு எப்போது விலகினார்கள் என்று சரித்திரத்தை சுவாரசியமாகச் சொல்கிறது.

நாலைந்து பேரைப் பற்றி, அதுவும் ஒரேயொரு வார இதழில் பணியாற்றிய ஆசிரியர் குழுவைப் பற்றி, எழுதிய புத்தகத்தை நான் ஏன் விரும்பி வாசித்தேன்?

சொல்வனம் ஆசிரியருக்கு என்னுடைய கட்டுரைகளைக் கொடுக்கும்போது அவர்களிடமிருந்து கறாரான பதில் வரும். பதாகை எடிட்டருக்கு என்னுடைய படைப்புகளைக் கொடுத்தால் கட் அண்ட் ரைட்டான ஆக்கபூர்வமான ஆலோசனைகளைத் தாங்கிய மறுமொழி மடல் வந்து சேரும். இது போன்ற பதிப்பாசிரியர் + பத்திரிகையாசிரியர் தொடர்புகள்தான் எனக்கு இந்தப் புத்தகத்தின் மீதான சுவாரசியத்தைக் கூட்டியது.

புத்தகத்திற்குள் செல்வதற்கு முன் நியு யார்க்கரின் 90 வருட பாரம்பரியத்தைப் பற்றி மட்டும் அறிந்து கொள்ள விரும்பினால், அவர்களின் இந்த சமீபத்தியப் பதிவுகள் உங்களுக்கு உதவும்:

  1. Ninety Years of The New Yorker – The New Yorker
  2. Out Loud: Ninety Years of The New Yorker – The New Yorker

இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றோர் யார்?

1. வால்காட் கிப்ஸ் (Wolcott Gibbs)

தியேட்டர் விமர்சகர்; நியு யார்க்கில் பிராட்வேயில் நடக்கும் இசை நாடகங்களை அறிமுகம் செய்து ஆராய்பவர். கடுமையான உழைப்பாளி. புனைகதை எழுத்தாளர். இரக்கமின்றி வெட்டித் தள்ளி, — வரும் விஷயங்களை நேர்த்தி ஆக்குபவர். குசும்பு பிடித்தவர். ஹெமிங்வே எழுதும் ஆர்ப்பாட்டங்களை ஜெயமோகன் தொப்பி, திலகம் என்று நக்கலடித்தது போல் இயல்பாக சுட்டுகிறார்.

’இந்தியா டுடே’ போல் இரண்டுங்கெட்டானாக அமெரிக்காவில் டைம் (Time) பத்திரிகை பல்லாண்டுகாலமாக வெளியாகிறது. செக்ஸ் கருத்துக் கணிப்பு, ரஜினி-50 சிறப்பிதழ் என்று வெகு தீவிரமாக இயங்கும் வாராந்தரி. அந்த இதழை நக்கலடித்து 1936ல் ‘நியு யார்க்கர்’ இதழொன்றைக் கொணர்கிறார். அதன் மூலம் காலாகலத்திற்கும் சாஸ்வதமான சிம்மாசனத்தில் ஏறுகிறார்.

New_Yorker_Time_Wolcott_Gibbs_Luce_Profile_Nov_28_1936_Backward_Run_Sentences

இவருடைய எடிட்டிங் கருத்துகள் பயமுறுத்துபவை. “இவ்வளவு தப்பும் தவறுமா எழுதித் தருவதற்கு பதில் உங்க வீட்டு குப்பைத் தொட்டியை சுத்தம் செய்யலாமே” என்னும் ரீதியில் கறாராக செயல்பட்டிருக்கிறார். அச்சுப்பிழைகள், தகவல்பிழைகள், ப்ரூஃப் பார்த்தல் என்று கர்மசிரத்தையாக செயல்பட்டவர். பள்ளியில் படிக்கும் மகன் எழுதும் தபால்களைக் கூட வெகு சீரியஸாக சரி பார்த்து, பிழை திருத்தி, எவ்வாறு தூய ஆங்கிலத்தில் இலக்கணச்சுத்தமாய் எழுதுவது என்று பதில் போட்டவர். (நிஜமாகவே… அதீதமாகச் சொல்லவில்லை)

ஒரு கட்டுரை ரொம்பவே வேலை வாங்குகிறது என்றால், பக்கத்தில் உள்ள ஹோட்டலில் ரூம் போடுகிறார் கிப்ஸ். அந்தக் கட்டுரையின் ஒவ்வொரு பக்கத்தையும் தரையில் பரப்புகிறார். ஒவ்வொரு பத்தியையும் கத்திரிக்கோலால் வெட்டுகிறார். இப்போது நூற்றுக்கணக்கான பத்திகளை கலைத்துப் போட்டு ஒவ்வொன்றாக ஒருங்கிணைக்கிறார். நடு நடுவே விடுபட்ட பத்திகளைக் குறித்து புதிய பக்கங்களில் தட்டச்சுகிறார். அதை ஆங்காங்கேக் கோர்க்கிறார். இப்போது அசல் ஆசிரியர் எழுதிய பத்திகளின் போதாமையும் தொடர்பின்மையும் தேவையான விளக்கங்களும் புலப்படுகிறது.

ஒரு உதாரணத்திற்கு டுல்ஸா பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியாகும் நிம்ராட் சஞ்சிகையை எவ்வாறு கோர்க்கிறார்கள் என்பதை நேற்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார்கள்:
Nimrod_Journal_Magazine_Print_Media_Publisher_Books_Magz_Layout_Papers

ஒரு வார்த்தை எங்காவது தவறான பொருளில் வந்தால் குடிமுழுகிப் போனதாகவேக் கருதுகிறார். “கொஞ்சம் தாமதமாக தவணையை செலுத்தினார் என்பது நேர்மையின்மையைக் குறிக்காதே?” என ஒரு கட்டுரையாளருக்கு வினா எழுப்புகிறார். “அதற்கு வறுமை என்று பெயர் என்றே நினைக்கிறேன்” எனக் குறிப்பிடுகிறார்.

2. ஹாரொல்டு ராஸ் (Harold Ross)

நியு யார்க்கரைத் துவக்கியவர்; மற்றவர்களிடமிருந்து வேலையைக் கறப்பதில் கெட்டி. கொண்ட பதிப்புக் கொள்கையில் இம்மியும் விட்டுக் கொடுக்காதவர். இவருடைய புகழ்பெற்ற மேற்கோள்: “நீ மேதையாக இல்லாமல் இருப்பதால்தான், நான் உன்னை வேலையை விட்டுத் தூக்குகிறேன்!”

What was at stake in the spat between Henry Luce and Harold Ross?

What was at stake in the spat between Henry Luce and Harold Ross?

எஸ்.ஏ.பி. (குமுதம் இதழின் முதலாளி அண்ணாமலை) போல் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாக ராஸ் தெரிந்திருக்கிறார்.

’அறிமுகமான சில நிமிஷங்களிலேயே உங்களை இயல்பிற்குக் கொணர்ந்து நெருங்குபவர்’: ஹார்ப்போ மார்க்ஸ்
– ‘முகஞ்சுளிக்கவைக்கும் முட்டாள்தனம் கலந்து கொடுரமான வில்லத்தனமான செய்கைகளையும் நிகழ்த்துபவர்’: எட்மண்ட் வில்ஸன்
– ‘அன்பானவர்’: ஹாரியத் வால்டன்
– ’மற்றவர்களிடம் முழுமையாக அன்பு செலுத்த கஷ்டப்பட்டவர்’: ஏ. ஜே. லைபிளிங்
– ’விவேகம் ததும்பும் புத்திசாலி மனிதர்’: ஜானெட் ஃப்ளானெர்
– ‘அவரை மாதிரி சமரசம் செய்து கொள்ளாத காட்டுவாசி மண்ணாந்தை அராஜகவாதியை நான் பார்த்ததே கிடையாது’: டேவிட் கொர்ட்

அலுவலில் நடைபாதையில் எவராவது பேச்சுக் கொடுத்தால் அலறியடித்துக் கொண்டு கண்டும் காணாத மாதிரி அவர்களை புழு போல் ஒதுக்கிவிட்டு ஓடுகிறார். நிறைய கெட்ட வார்த்தை பேசுகிறார். ”வெளிப்படையாக நேர்பட எழுது” என்பதில் உறுதியாக இருந்தவர். வழவழா கொழகொழா என்றில்லாமல் கூறியதையேத் திரும்பக் கூறாமல் எழுது என்று சித்தாந்தம் வைத்தவர். செய்தியாசிரியராக வாழ்வைத் துவக்குகிறார். ’ஒரு இடத்தில் இரண்டு வாரத்திற்கு மேல் இருந்தால் அது நரகம்’ என்று நினைத்தவர்.

ஆனால், ராஸ் தனக்கென்று சில பதிப்பாசிரிய தர்மம் வைத்திருந்தார். அவரைப் பார்த்துதான் மற்ற நால்வரும் கண்கொத்திப் பாம்பாகப் பிழைகளைக் கண்டுபிடித்து, எழுதியவருக்கு விளக்கம் கேட்டு, அதற்கு பதில் விளக்கம் கேட்டு, பிரதியை செம்மையாக்கினார்கள். ‘இதற்கு என்ன ஆதாரம்?’, ‘இவர் எப்போது பிறந்தார்?’, ‘ஏன் இந்தப் பிரயோகம்?’, ‘இது தேய்வழக்கு’, ‘இது சரியான சொலவடை அல்ல’, ‘இதை கொஞ்சம் வாசகர் படிக்கும்படி மாற்றலாமா?’, ‘இது அருவருக்கத்தக்க முறையில் சொல்லப்படுகிறதே’ என வினா மேல் வினா போட்டு, மறுபடி திருத்தி எழுத வைக்கும் முறையை நடைமுறையாக்கினவர்.

பிரதியை அனுப்பியவர்களுக்கு மின்னஞ்சல் இல்லாத அந்தக் காலத்தில் இவர் எழுதிய அஞ்சல்கள் பிரசித்தி பெற்றவை: “தேறாது”, “இது வேண்டாம்”, “இது எங்களுக்கானது இல்லை”, “ரொம்ப லேசாக இருக்கிறது”, “இந்த முறை பிரகாசிக்கவில்லை”, “இப்படி எழுதினால் போதாது”.

இந்த ஐவரைத் தாண்டி தேர்ந்தெடுக்கப்படும் நிலைக்கு ஏதாவதொரு கட்டுரை அடுத்த கட்டத்திற்குச் சென்றால், — புகழ்பெற்ற, நிலையான, சாஸ்வதமான எழுத்தாளருக்கு இருபது முதல் முப்பது பதில் கேள்விகளும் சந்தேக விளக்கங்களும் அனுப்பப்படும். 20/30 மட்டுமே அனுப்பிவைக்கப்பட்டால், அந்தக் கட்டுரை மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்று அர்த்தம்.

ஒரு சமயம் ஹாரிமன் என்பவர் பன்னிரெண்டு பக்க கட்டுரையை நியு யார்க்கருக்கு சமர்ப்பிக்கிறார். அவருக்கு ஆறு பக்கத்திற்கு விளக்கம் கேட்டு பதில் அனுப்பப்பட்டிருக்கிறது; நொந்துபோய்விட்டார். ஜாஃப்ரி டி ஹெல்மன் என்பவர் மெட்ரோபாலிடன் அரும்பொருளகம் குறித்து அபுனைவு அனுப்பியிருக்கிறார். அவருக்கு 147 கேள்விகள் விளக்கமாக கேட்டு அனுப்பப்பட்டதாம். ”அதெல்லாம் ரெகார்டே இல்லீங்க”, என்கிறார் ஹெல்மன்.

இது வெறும் முதல் கட்டம். அதன் அடுத்த கட்டமாக தகவல் சோதனை; அதன் பின் விஷயங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் சரிபார்த்தல். அதன் பின் சம்பவங்களின் உண்மைத்தனம் குறித்த ஆராய்ச்சி. அதன் பின் ப்ரூஃப் பிழை பார்த்தல்; அச்சுக்கோர்த்தல் இன்ன பிற விஷயங்கள் நடக்கும்.

இவ்வளவிற்குப் பிறகும் சில பிழைகள் நுழைந்து விடும். இப்படித்தான் ஒருமுறை குத்துச்சண்டை வீரரான Joe Louis (ஜோ லூயிஸ்) என்னும் பெயர் Joe Lewis (ஜோ லூவிஸ்) என்று தான் எழுத்துக் கோர்க்கும் நியூ யார்க்கரில் அச்சாகிவிட்டதைப் பார்த்து, பலருடன் பயணிக்கும் பேருந்தில், அதிர்ச்சியில் பேப்பரைக் கீழே தவறவிட்டு, கதறிக் கதறி அழுதவர்களை வேலைக்கு வைத்திருந்தவர்.

Helen_Hayes_What_Every_Woman_Knows_1934

ஹெலன் ஹெய்ஸ் என்னும் நடிகையைக் குறித்து ஹாரிமன் இவ்வாறு எழுதுகிறார்: “சாஸ்திரோப்தமாகப் பார்த்தால் அழகில்லைதான்”. ராஸ் பொங்கியெழுந்துவிடுகிறார். “அவள் எப்பேர்ப்பட்ட அழகு! நளினமும் ஒயிலும் சிருங்காரமும் கலந்த அவளின் அழகை ஒழுங்காகச் சொல்லத் தெரியாதவன் எல்லாம் நிருபன் என்று சொல்லிக்கொள்ளவே லாயக்கில்லாதவர்கள்”, என பதில் போடுகிறார். ஏழு நாட்கள், மூன்று கலந்துரையாடல்கள் கழித்து ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து சேர்கிறார்கள். அச்சில் இவ்வாறு செல்கிறது: “அவள் திரும்பிப் பார்க்கவைக்கும் அழகு அல்ல”.

3. ஜேம்ஸ் தர்பர் (James Thurber)

கடைசிக் காலத்தில் கண் தெரியாமல் போனாலும் மூளை மழுங்காமல் கார்ட்டூன் வரைந்தவர். பதிப்பாளர் ராஸ் சொல்வது போல் ‘ஒரே குரல்; ஒரே நடை; ஒரே விதமான கட்டுரைப் பாங்கு!’ என்னும் ஒழுங்கு தாங்கவியலாமல் அலுத்துப் போகிறார். நியு யார்க்கரில் எழுதுவது, எடிட்டுவது எல்லாம் போரடித்துப் போய்விட, பிராட்வே நாடகம் போடச் சென்றிருக்கிறார். எங்கே இருக்கிறார் எனும் அடிச்சுவடே தெரியாமல் போகுமாறு பெர்முடாவில் போய் இரண்டு மாதம் காணாமல் போக்கிக் கொண்டிருக்கிறார்.

james thurber_Secret_Life_Of_Walter_Mitty_new_Yorker_Mind

‘இவர்கள் என்ன ஆனார்கள்?’ என்று தர்பர் எழுதிய பகுதி பெரும் புகழ்பெற்றது. சின்னவயதிலேயே சாதித்தவர்கள், வயதான பிறகு என்னவாக இருக்கிறார்கள் என்பதையும், பத்தாண்டுகள் முன்பு புகழின் உச்சியில் இருந்தவர்கள், இப்பொழுது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று துப்புதுலக்கி ஆராய்ந்து அவர்களின் வாழ்க்கையை விவரிப்பதும் வாசகர்களைக் கவர்ந்தது. அதனால், சில பல சட்டப் பிரச்சினைகளும் அவதூறு வழக்குகளும் தனி மனிதர்களின் அந்தரங்கத்தில் அத்துமீறி எட்டிப்பார்ப்பதாகக் குற்றச்சாட்டும் வந்துசேர்ந்தது.

அந்தக் காலத்தில் நியு யார்க்கரின் சில பகுதிகளை எவர் எழுதினார் என்று தெரியாமல், பெயர் போடாமல் வெளியானது இவருக்கு உவக்கவில்லை. தன்னுடைய முத்திரை பதிக்கும் துணுக்குகளிலும் நகரம் குறித்த நடப்புக் கட்டுரைகளிலும் தன் பெயர் வரவேண்டும் என தர்பர் எதிர்பார்த்தார். ஆனால், முதலாளி ராஸ் அதற்கு ஒப்பவில்லை.

ராஸ் என்பவருக்கு பயணத்தின் முடிவில் எங்கே செல்ல வேண்டும் என்னும் இறுதி குறித்த தூரப்பார்வை இருந்தது. தர்பர் என்பவருக்கு அதற்கான செயல்முறை திட்டமும், வழியில் அமைக்கவேண்டிய கூடாரங்களும், ஒவ்வொன்றையும் எவர் செய்வார் என்பது குறித்த பணிப் பகிர்தல்களும் முக்கியமாக இருந்தது. யாருடன் எப்பொழுது தொலைபேசுவது, எவரைத் தொடர்பு கொண்டால் எது கிட்டும், யார் எதைத் திருத்துவார்கள், எப்பொழுதுக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாகச் சொல்லிச் சென்றார்.

4. ஈ.பி. வொயிட் (E.B. White)

இவரை இவரின் குழந்தைகளுக்கான புத்தகங்களால் அறிந்திருப்பீர்கள். நால்வரில் அமைதியானவர்; ஆனால், பதிப்பாசிரியர் ஹாரொல்டின் செல்லப்பிள்ளை. மனைவியையும் (கேத்தரின்) நியு யார்க்கரில் கண்டுபிடித்து, ஆசிரியர் குழுவை ஆற்றுப்படுத்தியவர். இன்றளவும் நியு யார்க்கரில் அலங்கார வார்த்தைகளோ, ஆடம்பரமான சொல்ஜாலங்களோ பெரிய சிலம்பாட்ட உருவகத்தோரணங்களோக் கிடைக்காது. இதற்கு தோற்றுவாயாக ஈபி ஒயிட் இருக்கிறார். நேரடித்தன்மை; அதன் பிரதிபலிப்பு – அம்புட்டுதானே விஷயம் என்பதை விவரிக்கும் நடையைத் தந்திருக்கிறார்.

E_B_White_Books_Stuart_Little_Charlottes_Web_Trumpet_Swan_New_Yorker_Kids_Children

5. காத்தரின் வொயிட் (Katharine White)

ஒன்றரை பக்க நாளேடாக வந்து கொண்டிருந்த துண்டுப் பத்திரிகையை ”நியூ யார்க்கர்டா!” எனச் சொல்ல வைத்தவர். நியு யார்க்கருக்கு வாழ்க்கையை அர்ப்பணித்த ஈபி. ஓயிட்டை மணந்தவர்.

American_Humor_Classics_New_Yorker_Katharine_White_EB_Books

ஹிரோஷிமா

Hiroshima_New_Yorker_1946_Issue

இந்த நூலின் 12ஆம் அத்தியாயம் நியு யார்க்கரின் சில அதிரடி இதழ்களையும் கருத்துக்களையும் குறித்துப் பேசுகிறது.

நியூ யார்க்கர் இதழோ கிண்டல் கொண்ட கருத்துப் படங்களும் கேலிச்சித்திரங்களும் கொண்டது. ஊரில் நடக்கும் டிராமா, சினிமா, இசைக் கச்சேரி, ஓவியக் கண்காட்சி, அருங்காட்சியகத்தின் நிகழ்வுகள், நல்ல உணவு, புதிய கலைகள் என்று வாழ்க்கையைக் கொண்டாடித் தீர்ப்பதைக் கொள்கையாகக் கொண்டது. அது போன்ற இதழில் இரண்டாம் உலகப் போரின் தீவிரத்தை எப்படிக் கொணர்வது?

ஒரு நாட்டின் அரசன் கொலையுண்டால் அதைக் குறித்து செய்திக் கட்டுரை வெளியிடலாம். அமெரிக்காவின் பொம்மலாட்ட ராஜாங்கமான இராக் அரசரின் ஆட்சி கவிழ்ந்தால் அதை ஆராயலாம். லெபனானுக்கு அமெரிக்க இராணுவத்தை அனுப்புவதையும் கியூபாவில் காஸ்ட்ரோ அரியணையை நெருங்குவதையும் அலசலாம். ஹங்கேரியின் தலைவரான இம்ரே நகி வெட்டவெளியில் வெட்டப்படுவதை விவரிக்கலாம். ஸ்புட்னிக் விண்வெளிக்கோளும் எக்ஸ்ப்ளோரர் விண்கலங்களும் ஏவப்படுவதை அறிவியல் தகவல் கட்டுரைகளாக்கலாம். தலைக்கு மேலே சுற்றும் செயற்கைகோள்கள் எல்லாம் அணுஆயுதங்களாகச் சுழலும் அபாயத்தை சங்கு கொண்டு முழங்கலாம்.

அதே ரீதியில் எண்பது மில்லியன் அமெரிக்கர்கள் இறந்த கொடுமையை எப்படி உரைப்பது? ஒரு நாட்டின் மீது குண்டு போட்டு மேலும் பல கோடி மக்களைக் கொன்று குவித்ததை எவ்வாறு எடுத்துரைப்பது. ஆகஸ்ட் 31, 1946ஆம் ஹிரோஷிமா இதழாக வெளியானது: 1946-08-31 – The New Yorker

இதழ் முழுக்க ஒரேயொரு கட்டுரைதான். 31,347 வார்த்தைகள் கொண்டு நேரடியாக ஜப்பான் சென்று வந்தவரின் அனுனவப் பகிர்வு. அது மட்டுமே ஒரு இதழ் முழுக்க ஓடுகிறது.

சமீபத்தில் நியு யார்க் வந்திருந்தபோது 911 நினைவுச்சின்னம் சென்று வந்தேன். அங்கே எல்லா சம்பவங்களையும் காலவாரியாக நிகழ்வுவாரியாக தெளிவாக புகைப்படங்களுடன் போட்டிருந்தார்கள். அதில் ஒரு இடத்தில் ரொனால்டு ரேகனும் அப்பா புஷ்ஷும் தாலிபான் தலைவர்களுடன் சமபந்தி பேச்சுவார்த்தை நடத்துவதைச் சொல்லும். அதை ஒட்டி அப்போதே ஈ.பி. ஒயிட் எழுதுகிறார்:

Build the museum, O builders! Have it ready for me when I come.
Then, when the radioactivity has been dissipated and the rays no longer threaten my white corpuscles,
Letter the proper sign and let me in. And don’t forget
To give the date. I like dates.
July 16, 1945.
Give the hour, the minute, the very second of the blast.
Exactly five-thirty A.M. “Beginning of the atomic age.”
Alamogordo, Alamogordo — my last pilgrimage. Earliest bomb crater in the atomic world. Most famous deathsite [sic].
Note, ladies and gentlemen, how the effect radiates in all directions,
With color and shading gradually growing darker like the petals of a flower.
Those who are hungry will find an appetizing, moderately priced
Meal in the Nuclear Snack Bar, just outside the gate, and
Clean rest rooms.
Take home a souvenir of atomiste [sic] for the children.

oOo

முதலாளி ராஸ் காலமான பிறகு நியு யார்க்கருக்கு என்னவாகும் என்று எல்லோரும் பயந்த போது, நியூ யார்க்கரின் அடுத்த எடிட்டர் சொல்கிறார்: ”சிக்மண்ட் பிராயிட் இறந்த பிறகும் மனோவியல் ஆராய்ச்சித் தொடர்கிறது அல்லவா…”. இன்றும் நியு யார்க்கர் அன்றைய தரமும் விழுமியங்களும் வழுவாமல் வெளியாகிறது.

அப்படி என்ன சித்தாந்தம்?

அவருடன் பழகியவரைக் கேட்டால், “ராஸுக்கு இரண்டு தெய்வங்கள் இருந்தார்கள்: பெரிய எழுத்து மற்றும் சிற்றெழுத்து (uppercase and lower case)”.

கொஞ்சம் வெளியில் இருந்து நோக்கினால், ‘பொய்மையை அம்பலப்படுத்துவோம். போலித்தனத்தை வெளிக்கொணர்வோம்!’

வில்லியம் சரோயன் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர். ‘தி புயூடிஃபுல் பீப்பிள்’ வெளியிடுகிறார். நியு யார்க்கர் விமர்சனத்தில் ‘சுத்த நான்சென்ஸ்’ என்று போட்டுடைக்கிறார்கள்.

சாமர்செட் மாம் குறித்து: “நம்முடைய தரம் எவ்வளவு தாழ்ந்து போயிருக்கிறது என்பதற்கு இவர் ஒரு குறிப்பிடத்தக்க வெளிப்படையான அடையாளம்.”

இப்படி எல்லாம் நேர்மையாக எழுதினாலும் எல்லாவற்றையும் விளையாட்டாக, அனைத்திலும் குழந்தைத்தன்மையோடு அணுகுவது நியு யார்க்கரின் சித்தாந்தம் எனலாம். மெரிட் நெல்சன் என்னும் பள்ளி மாணவன் நியு யார்க்கருக்கு கடிதம் எழுதிக் கேட்கிறான்: “உங்களின் நோக்கமும் குறிக்கோளும் என்னவென்று சொல்ல முடியுமா?”. அவனுக்கு பதில் தபால் வந்தது: “எங்களுக்கு எந்த இலட்சியமும் கிடையாது.”

நூலை எழுதிய தாமஸ் வின்சிகுவேரா (Thomas Vinciguerra) நாற்பத்தியேழு பக்கங்களுக்கு அனுபந்தமாக அடிக்குறிப்புகளையும் தொடர்பான கட்டுரைகளையும் சுட்டுகிறார். மேலும் பத்து பக்கங்களுக்கு இந்த ஆராய்ச்சித் தொடர்பான புத்தகங்களையும் இந்த நால்வர் (ஐவர்?) எழுதிய ஆக்கங்களையும் குறிப்பிடுகிறார். தொண்ணூறு வருட நியு யார்க்கர்களைப் படிப்பது மட்டுமில்லாமல் கிப்ஸ் குடும்பம், அவரின் பல மனைவிகள், மகன்கள், மகள்கள் என்று ஊர் ஊராக வாழ்ந்த இடங்களையும் மனிதர்களையும் தேடித் தேடி பேட்டியெடுத்து நூலை எழுதியிருக்கிறார். இதே மாதிரி மணியனுக்கும் ‘ஜெமினி’ வாசனின் மகனான விகடன் எஸ். பாலசுப்ரமணியத்திற்கும் இடையே உள்ள பிணக்குகளையும் சாவிக்கும் அசோகமித்திரனுக்கும் இடையே உள்ள நட்பையும் காலச்சுவடு கண்ணனுக்கும் உயிர்மை எஸ். அப்துல் ஹமீது (மனுஷ்யபுத்திரனுக்கும்) நடுவே உள்ள பரஸ்பர புரிதல்களையும் தொகுக்க வேண்டும்.

பொறியியல் – கல்விக்கு அப்பால்: வாசகர் மறுவினை

Jobs_lost_Employment_Gained_Sectors_Industries_Work_Compensation_Industry_Salary_WSJ_Graphics

பொறியியல் – கல்விக்கு அப்பால் கட்டுரை வாசித்தேன். தமிழ் பதிப்புலகில் அதிகம் பேசப்படும் சினிமாவும் அரசியலும் தவிர்த்த கட்டுரை என்ற அளவிலேயே கட்டுரை எடுத்துக் கொண்ட பேசுபொருளும், அதன் தொடர்பான எண்ணங்களும் முக்கியமானவை. மதிப்பெண்களைத் துரத்தும் கல்விமுறை குறித்தும் அசலான ஆய்வுகளை ஊக்குவிக்கும் வழிமுறைகள் குறித்த ஆசிரியரின் கருத்தோடு பெரும்பாலும் ஒத்துப் போகிறேன்.

எனினும், கட்டுரையில் ஆங்காங்கே தடாலடி பொதுமையாக்கங்கள் இருக்கின்றன. தான் அறிந்த சூழலை வைத்து, அதை இந்தியா முழுக்க நீட்டும் சூத்திரங்களும் இருக்கின்றன. இவை இரண்டும் கட்டுரை சொல்லும் கருவிற்கு பங்கம் உண்டாக்குகின்றன. பின்குறிப்பின் மூலம், இந்த வாதத்தை நிராகரித்து முற்றுப்புள்ளியும் வைக்கிறார்.

இப்பொழுது கேள்விகள்:

1. ஆராய்ச்சியைத் தூண்டும் கல்வியை ஊக்குவிக்க மூன்று காரணிகள் இருக்கின்றன: புதிய கண்டுபிடிப்புகளினால் ’செல்வம்’ சேர்க்கும் வாய்ப்பு; தேடலின் முடிவில் கிடைக்கும் சமூக ’அந்தஸ்து’; நாம் வாழும் உலகை மாற்றியமைக்கும் நாகரிகத்தை முன்னெடுத்தோம் என்னும் ஆத்ம ’திருப்தி’. இவற்றை இந்திய அமைப்புகள் தரும் சூழல் நிலவுகிறதா?

2. டிப்லோமா படிப்புகள் – இவை செயல்முறையை முன்னிறுத்தும் கல்வி. அவற்றை பொறியியல் படிப்போடு ஒப்பிட்டுப் பார்க்க இயலுமா?

3. மேற்குலகில் பொறியியல் படிக்காதவர்களும் பொறியியல் சார்ந்த வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இந்தியச் சூழலில் பொறியியல் பட்டயம் என்பது ”இவர் பொறுப்பானவர்; ஒழுங்காக வேலை செய்வார்; எதைக் கொடுத்தாலும் கற்றுக் கொள்வார்.” என்பதற்கான சான்றாதாரமாக விளங்குகிறதா?

4. கணிமொழியியல் – அமெரிக்காவில் கணித்துறை சார்ந்த வேலைக்கு பொறியியல் படிப்பு தேவையாக இருப்பதில்லை. பத்தாவது படித்தவரை வேலைக்கு அமர்த்துகிறார்கள். கணிவிளையாட்டுகளைக் கொண்டு பரிசோதித்து, அதில் திறம் வாய்ந்தவராக இருந்தால் கணினித்துறையில் நல்ல பதவியில் அமர்த்துகிறார்கள். இந்த நிலை இந்தியாவில் உருவாகுமா? (அதாவது பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்து, ஓரளவு பக்குவம் வந்தவுடனேயே, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள், மாணவர்களைப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றுவிடும். மூன்று வருடக் கால வேலை+பயிற்சிக்குப் பின் அசல் வேலையில் அமர்த்திக் கொள்வார்கள்.)

5. ஆராய்ச்சிக் கல்வி – இதற்கான சமூக அந்தஸ்து இந்தியாவில் எப்படி இருக்கிறது? நிறுவனத்தில் டைரக்டர், வைஸ் பிரசிடெண்ட் என்றால் அதிக மதிப்பு கிடைக்கிறதே! அதே சமயம் கண்டுபிடிப்புகளை காசாக்கும் சூழல் இந்தியாவில் எப்படி நிலவுகிறது?

6. மேற்குலகில் mentor எனப்படும் வழிகாட்டியை வாழ்நாள் முழுக்க துணையாக வைத்துக் கொள்கிறார்கள். இந்தியச் சூழலில், இதை மாமா, சித்தப்பா போன்ற குடும்ப உறவுகளும் கிராம சமூகங்களும் நிரப்பின. இன்றைய நகரமயமாக்கப்பட்ட நிலையில் உற்றாரின் ஆலோசனைகளும் கேட்பதில்லை. அண்டை வீட்டாரும் சொந்த விஷயங்களில் கருத்துச் சொல்வதை அந்தரங்கத்தின் குறுக்கீடாகவே எடுத்துக் கொள்கிறோம். இந்த வழித்துணைகளின்ம் உதவி கிடைத்தால் ஒவ்வொருவரின் தனித்தன்மையும் ஆர்வமும் தூண்டப் பெற்று ஆராய்ச்சிப் பாதைகளில் தெளிவு கிடைக்குமோ?

7. இதன் தொடர்ச்சியாக பத்ரி சேஷாத்ரி எழுதிய ”தமிழகத்தின் பல பொறியியல் கல்லூரிகளில் ஐ.டி என்ற பாடப்பிரிவை நீக்கியிருக்கிறார்கள்”, த.நி. ரிஷிகேஷ் ராகவேந்திரன் எழுதிய “தரகர், அலுவலர்,வேலை பெற்றுத் தருபவர் தேவை- ஆசிரியர்கள் தேவையில்லை” வாசிக்கப் பெற்றேன். தங்கள் கட்டுரையைப் போன்றே பெங்களூரூ சாணக்கியன் எழுதிய ‘வேலை’ கடிதம் வாசித்தீர்களா?

8. ஜெயமோகன் தளத்தில் கல்வியைக் குறித்தும் பாடத்திட்டத்தின் தேர்வுமுறைகள் குறித்தும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். அவற்றில் அவர் குழந்தைகளுக்குக் கொடுக்கும் சுதந்திரத்தையும் தான் பழகிய ஆசிரியர்களையும் கல்வி குறித்த செய்திகளையும் அலசுகிறார். அதில் குறிப்பாக பெற்றொரின் பங்கு குறித்து நிறைய எழுதியிருக்கிறார். நம்முடைய பெற்றோர் இட்ட கட்டளைக்குப் பணிந்து நடப்பது போல், பொறியியல் கல்விக்கு அப்புறமும் மேலாளரின் கட்டளைக்கு அடிபணிய விழைகிறோமா?

9. வேலைக்குப் புதியதாகச் சேரும் எவரையும் எந்த நிறுவனமும் உடனடியாக பொறுப்புகளை சுமத்துவதில்லை. அதிலும் கல்லூரியில் இருந்து புத்தம்புதிதாக வருபவரை இரண்டு வாரங்களுக்காவது தனிப் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். தங்கள் அலுவலில் பயன்படுத்தும் நுட்பங்களையும் வழிமுறைகளையும் விவரமாகக் கற்றுத் தருகிறார்கள். அதன் பிறகு இரண்டு மாதங்களுக்காவது, பரீட்சார்த்தமான வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்துகிறார்கள். மூன்று மாதம் ஆன் பிற்பாடு, நிஜ வேலைக்குள் நுழையும்போது துணை நிற்க அனுபவசாலி ஒருவரை கூடவே கண்காணிப்பாக வைக்கிறார்கள். இதை முதலீடாகக் கருதுகிறார்கள். இந்தியாவின் ஆய்வுத்துறையில் இவ்வாறு ஒவ்வொரு ஆராய்ச்சியாளருக்கும் தனிப்பட்ட கவனம் வழங்க பொருளும் மனிதவளமும் இருக்கின்றதா?

10. வாழ்க்கை ஆதாரமாக கல்வியும், அந்தக் கல்வியினால் கிடைக்கும் வேலையும் அமைந்திருக்கிறது. மேற்குலகில் இருபதில் இருந்து முப்பது வரை பரீட்சார்த்தமாக வாழ்வதை நடைமுறையாக வைத்திருக்கின்றனர். அதாவது, தனக்குப் பிடித்த விஷயத்தில் இளவயதில் தீவிரமாக இயங்குவது; அதில் வெற்றி பெற்றால் கோடிகளை அள்ளுவது; தோல்வி அடைந்தால் மீண்டும் கல்லூரிக்குச் சென்று வேறொரு பாதையைத் தேர்ந்தெடுப்பது. – ஒரு முறையோ, பல முறையோ கீழே விழுந்தால், அஞ்சாமல், கைதூக்கி ஊக்கமும் மீண்டும் நிதியும் கொடுக்கும் சமூக அமைப்பு இந்தியாவில் வர வேண்டுமா?

destroying.jobs_.chart_Decoupling_Productivity_Unemployment_Manufacturing_Economhy_Income_GDP_USA_America_Automation

Letters to the Author: Importance of sending mails to Writers and Editors

புத்தகம் படிப்பதோடு நிற்காமல் எழுதியவருக்கு மடல் போடவும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். பத்து வயதில் கோகுலம் ஆசிரியரான அழ. வள்ளியப்பா பதில் போட்டது என்னை ஊக்குவித்தது. அப்புறம் பதில் போடாத சுஜாத இன்னும் நிறைய.

வாழ்க்கையினால் ஏதாவது உபயோகம் இருக்க வேண்டும். என்னுடைய உயிரினால் ஏதாவது பலன் இருக்க வேண்டும்.

எழுத்தாளரை வாசிப்பதால், பிறருக்கும் தம் எண்ணங்களைப் பகிரவேண்டும். வெறுமனே கருத்துகளை உறிஞ்சிக் கொண்டு இருக்கக் கூடாது. கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டு சாலிட்டேர் மட்டும் விளையாடுவது போல் தனிமையைக் கொண்டாட, எதற்காக குழுமத்தில் இருக்க வேண்டும்?

கன்ஃபூசியசு சொன்னது: ‘reading without thinking gives one a disorderly mind; thinking without reading makes one flighty’

ஜெயமோகன்.காம் மட்டும் படித்துவிட்டு, அவருடைய குழுமத்தில் பதில் போடாவிட்டால் அலட்சியம் கலந்த சோம்பேறித்தனம் பெருகிவிடும். புத்தகம் வாசித்து முடித்தவுடன் எழும் எண்ணங்களைத் தொகுத்து அஞ்சல் செய்யாவிட்டால் எதிர்வினையாற்றவே பயம் நிறைந்த அசிரத்தை தோன்றிவிடும்.

உங்கள் பதிவுகளுக்கு சாதாரணமாக யார் பதில் போடுகிறார்கள்? இரண்டு மூன்று வரிகளுக்குள்ளேயே பதில் எழுதிப் போடுவதால், மறுமொழி எழுத அயர்ச்சி ஏற்படுகிறதா? எழுதுபவரை விமர்சித்து காயப்படுத்துவதற்கு பதிலாக, மௌனம் காப்பது சிறந்ததா?

அம்பேத்கார் கார்ட்டூன் – வரைபடங்களும் பாடப்புத்தகங்களும்

ஒரு கார்ட்டூன். மாணவர்களுக்கு அந்தக் கால சூழலை எளிதில் உணர்த்துவதற்காக பாடப்புத்தகத்தில் இருக்கிறது. அதற்கு எதிர்ப்பு.

புத்தகத்தை புரட்டியிருப்பார்களா என்பது சந்தேகம். அந்தப் பக்கத்தையாவது பார்த்திருப்பார்களா என்பது அதனினும் சந்தேகம். இவர்களுக்கு இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் கற்றுக் கொடுக்கும் பொறுப்பு யாரைச் சேரும்?

இந்த மாதிரி கவன ஈர்ப்பு கட்சி எம்.எல்.ஏ., எம்பி.க்களுக்கு ஆழமாக ஆராய, முழுவதுமாக வாசித்து கருத்து சொல்ல எப்பொழுது நேரமும் பொறுமையும் தன்னடக்கமும் கிட்டும்?

சரித்திரத்தை சுவாரசியமாக்குவது பிடிக்கவில்லையா? சமகால சினிமா மூலமாக சிந்திக்க வைப்பதை விரும்பவில்லையா? வரலாற்று நூலை வாசித்து யோசிக்குமாறு அமைத்திருப்பது ரசிக்கவில்லையா?

செய்தி

The school textbook cartoon of BR Ambedkar which created a furore in parliament on Friday was sketched by cartoonist Keshav Shankar Pillai in the 1950s while the Constitution was being framed, said a human resource development ministry official.

The cartoon depicts Nehru as asking Ambedkar to speed up the work on the Constitution.

The issue was raised by Dalit activist Thol Thirumavalavan, the Lok Sabha MP who heads the Viduthalai Chiruthaigal Katchi of Tamil Nadu, where protests were staged over the row.

Shankar, as he was popularly called, later founded the publishing house, Children’s Book Trust, in 1957. He made cartoons for newspapers and his magazine, Shankar’s Weekly, started in 1948. The government of India honoured him with Padma Shri in 1956, Padma Bhushan in 1966 and Padma Vibhushan in 1976.

The controversial cartoon was probably first published in 1948 and has been a part of NCERT’s (National Council Of Educational Research And Training) Class XI textbook in Tamil Nadu since 2006. The cartoon is credited to Children’s Book Trust.

It shows Ambedkar, a Dalit leader and creator of the Indian Constitution, seated on a snail with ‘Constitution’ written on it and India’s first prime minister, Jawaharlal Nehru, whipping the snail. In the background is a crowd.

காந்தியும் பாரத மாதவும் – ஓம் – இந்துத்வா கோஷம்

இந்தக் கார்ட்டூன் அடுத்து கண்டனத்திற்கு உள்ளாகலாம்

Pictures like this reveal how Mahatma Gandhi was perceived by people and represented in popular prints Within the tree of nationalism, Mahatma Gandhi appears as the looming central figure surrounded by small images of other leaders and sages.

அரசியல் பாடம்

பாடத்தை எப்படி விளக்குகிறார்கள்?

எவ்வாறு எளிமையாக்குகிறார்கள்?

செய்தித்தாள் வாசிக்காதே

ஆர் கே லஷ்மண் கார்ட்டூன்கள் இடம் பிடித்திருக்கின்றன:

கருத்துப்படம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை நக்கல் அடிக்கிறார்கள் எனலாம்.

படேல்

நேருவின் பேரன்களும் பேத்திகளும் அரியணையில் அம்ர்ந்திருப்பதால், சர்தார் வல்லபாய் படேல் நக்கலடிக்கப் படுவதை கண்டு கொள்ளவில்லை என்று பாரதீய ஜனதா கட்சி சொல்ல வேண்டும்.

இந்திரா காந்தி

போராட்டமும் வளர்ச்சியும் – முரண்

’அமெரிக்கா’ உதயகுமார் கூடங்குளத்தில் நடத்தும் வியாபாரப் போராட்டத்தை குறிப்பால் உணர்த்தி இருப்பதால், அந்த கேலி சித்திரத்தையும் நீக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம்:

இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி – இராஜாஜி

கவிதை

Namdeo Dhasal

Turning their backs to the sun, they journeyed through centuries.
Now, now we must refuse to be pilgrims of darkness.
That one, our father, carrying, carrying the darkness is now bent;
Now, now we must lift the burden from his back.
Our blood was spilled for this glorious city
And what we got was the right to eat stones
Now, now we must explode the building that kisses the sky!
After a thousand years we were blessed with sunflower giving fakir;
Now, now, we must like sunflowers turn our faces to the sun.

English translation by Jayant Karve and Eleanor Zelliot of Namdeo Dhasal’s Marathi poem in Golpitha.

கவுண்டமணி – செந்தில்

நகைச்சுவை காமெடி ஜோக்குகள் இடம் பெற்றிருக்கின்றன

A Communist Party bureaucrat drives down from Moscow to a collective farm to register a potato harvest.
“Comrade farmer, how has the harvest been this year?” the official asks.

“Oh, by the grace of God, we had mountains of potatoes,” answers the farmer.

“But there is no God,” counters the official.

“Huh”, says the farmer, “And there are no mountains of potatoes either.”

ஈழம் & இலங்கைப் பிரச்சினை

அடுத்ததாக தொல் திருமா போன்ற தமிழின உணர்வுத்தூண்டிகள் விடுதலைப் புலிகள் குறித்து தி ஹிந்து கார்ட்டூன் எடுத்துக் கொள்வார்கள் என நம்பலாம்

காங்கிரசு அல்லாத பிரதம மந்திரிகள்

ஜனதா கட்சியை தாழ்த்துகிறார்கள் என முழங்க வேண்டும். ‘நிலையான ஆட்சி’ தாரக மந்திரத்தை ஓதும் சாத்தான் படம்!

பத்திரிகை முகப்பு

ஏன் இல்லுஸ்டிரேடட் வீக்லி, சண்டே, சண்டே இந்தியன், தி வீக், போன்றவை இடம் பிடிக்க வில்லை?

அமுல்

விளம்பரம் போடுகிறார்கள். மற்ற பாலாடை கம்பெனிகளும் பட்டர் நிறுவனங்களும் போர்க்கொடி தூக்கலாம்.

ஏன் கார்ட்டூன் தேவை?

சில பகீர் கார்ட்டூன்கள் முடிந்த பின் சிந்தனையைத் தூண்டும் கேள்விகளும் கீழ்க்காணும் வினாக்களும் இருக்கின்றன

1. Suppose you are the Secretary of State in the US (their equivalent of our Minister of External Affairs). How would you react in a press conference to these cartoons?

2. Drawn by well known Indian cartoonist Kutty, these two cartoons depict an Indian view of the Cold War.

3. If you were to draw this, who would you show as waiting in the wings?

4. Why does the cartoonist use the image of the ship Titanic to represent EU?

5. The two cartoons, one from India and the other from Pakistan, interpret the role of two key players who are also interested in the region. Do you notice any commonality between their perspectives?

6. How should the world address issues shown here?

7. Do you agree with this perspective?

இட ஒதுக்கீடு

சமூக நீதியை எப்படி சுருக்கமாக சொல்வது?

சமமாக மக்களை நடத்த வேண்டியதை எவ்வாறு மனதில் நிலைநிறுத்துவது?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்காக பாபாசாஹேப் அம்பேத்கார் மேற்கோள்:

வாழ்க்கையில் வெல்லவே ‘டேக் இட் ஈஸி பாலிசி’

லோகத்தில் இரு விஷயங்கள் சிரமமானவை.

1. இன்னொருவரின் மண்டைக்குள் உங்கள் எண்ணத்தை விதைப்பது

2. இன்னொருவரின் பணத்தை உங்கள் கைக்கு வரவைப்பது

.
.
.
.
.

முதலாமவதில் வெற்றி பெறுபவர் –ஆசிரியர்

இரண்டாமவதில் வெற்றி காண்பவர் –முதலாளி

இரண்டிலும் கலக்குபவர் –மனைவி

அடுத்தவரின் விருப்பத்தை தன் கைக்காசு போட்டு நிறைவேற்றுபவர் – ‘இல்லத்தரசர்’

(இணையத்தில் வாசித்தன் மொழியாக்கம்)

தண்ணியடிக்காத புலம்பல்: கொடுமை சீரீஸ் – 1

மதுரை நியூ காலேஜ் ஹவுசில் கூட மிஞ்சியதை வைத்துதான் கொத்து பரோட்டா போடுவார்கள் என்பதை ஒப்ப சில பதிவுகளைப் பார்க்கும்போது நொந்து நூடுல்ஸ் ஆவதை பதிவு செய்யும் திட்டத்தில் முதல் என்ட்ரி: எழுத்தாளர் தாமரைமணாளன்

இந்தப் பரிந்துரைக்கு உங்கள் பதிவு உரித்தாக ஆறு காரணங்கள்:

  1. ஜெயமோகன், சாரு போன்றோருடன் எடுத்துக் கொண்ட ஒளிப்படம் உங்கள் பக்கமுகப்பில் நேம்ட்ராப் செய்யவேண்டும்
  2. விக்கிப்பீடியா தொகுப்பிற்குக் கூட லாயக்கில்லாத தகவல்கள் கொடுக்க வேண்டும்.
  3. முன்னுமொரு காலத்திலே என்று துவங்க வேண்டும்.
  4. ஜெனரலைஸேஷன் நிறைந்திருக்க வேண்டும்.
  5. தற்கால முக்கிய எழுத்தாளர்களின் மோசமான படைப்புகளை அடையாளம் காட்டாமல், எப்பொழுதோ இறந்து, எழுந்து அடிக்க வராத சந்ததியைச் சார்ந்தவரை சாடும் படைப்பாக இருக்க வேண்டும்.
  6. அழகாபுரி அழகப்பன், ஜெகசிற்பியன் என்று டங்குவார் கழன்றவர்களையும் கவனிக்கும் ஆழ்வாசகரின் அடர்த்தியான ஆக்கமாக வேண்டும்.

இந்த மாதிரி பதிவு படித்து அழுது தொலைப்பதற்கு பதிலாக,

  • கேபிள் சங்கரின் சினிமா விமர்சனத்தையோ, எட்ஜ் கருத்துப் பத்தியையோ படிக்கவும் …
  • ஆர்வி ஆலிவ் கிட்டரிட்ஜ் போன்ற ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கவும் …

மைல்கல் மைனர்களைப் பிரார்த்திக்கின்றேன்.

புதுமைப்பித்தனை புத்தகம் போட்டது யார்? காலச்சுவடு & ஆ.இரா வெங்கடாசலபதி x தமிழினி & வேதசகாயகுமார்

பதிவுகள்:

அ) துவக்கம் இங்கே: புதுமைப் பித்தன் படைப்புகள் செம்பதிப்பு : சில கேள்விகள் – கோபால் ராஜாராம்

1.  புதுமைப்பித்தன் படைப்புகள் -என் ஆய்வின் கதைஎம் வேதசகாய குமார்

2. புதுமைப்பித்தன் – கோபால் ராஜாராமின் கேள்விகளுக்கான பதிலும் இன்னும் பிற குறிப்புகளும் :: கண்ணன் (காலச்சுவடு ஆசிரியர்)

3. ‘அன்னை இட்ட தீ ‘ புத்தகத்தின் முன்னுரை :: ஆ. இரா. வேங்கடாசலபதி

4.  ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1 | ஜெயமோகன்.in

ஜெயகாந்தன் மீதான இன்றைய நவீனத்துவ நோக்கை சுந்தர ராமசாமியை முன் ஏராகக் கண்டு வேதசகாய குமார் உருவாக்கினார் என்றால் அது மிகை அல்ல. பலகாலமாக வேதசகாய குமார் எழுதிய கட்டுரைகளுக்கு ஆதாரமாக அமைந்த அவரது [முனைவர்பட்ட ]ஆய்வுநூல் ‘புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ‘ [தமிழினி பதிப்பகம் சென்னை] இக்கருத்துக்களை விரிவாக தொகுத்துக் காட்டுகிறது. அது முழுக்க சுந்தர ராமசாமியின் வரிகள் மேற்கோள்களாக நிரபியிருக்கின்றன.

தமிழின் தேர்ந்த விமரிசகர்களில் ஒருவரான எம்.வேதசகாய குமாரின் ஆய்வு நூல் இவ்வகையில் மிக பிழையான பார்வையை வெளிப்படுத்துகிறது. எந்தவித வரலாற்று போதமும் இல்லாமல் அன்று பிரபலமாக இருந்த வடிவ ஆய்வையே அடிப்படையாகக் கொண்டு துரதிருஷ்டவசமான இறுதி முடிவுகளுக்கு வந்து சேர்கிறது.

5. முதுநிலை ஆய்வுப்பேராசிரியர் கட்டுரையும், சில கேள்விகளும் :: K.ரவி ஸ்ரீநிவாஸ்

வேதசகாய குமாரின் முனைவர் பட்ட ஒட்டு மொத்த ஆய்வில் அவரது சுயமான பங்களிப்பு, அவரது சிந்தனைகளின் பங்கு என்ன என்ற கேள்வி எழுகிறது.அது எத்தனை சதவீதம் என்ற கேள்விக்கு யார் பதில் தரப்போவது யார் – ஜெயமோகனா இல்லை குமாரா ?

6. புதுமைப்பித்தன் இன்று… | jeyamohan.in

7. வேதசகாயகுமாரின் கலைக்களஞ்சியம் | செயமோகன்.in :: Encyclopedia Tamil Criticism

8. விரியும் கருத்துப் புள்ளிகள் :வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள். | [27- 9- 2009 அன்று நாகர்கோயில்வேதசகாயகுமார் 60 கூட்டத்தில் எழுத்தாளர் ஜெய மோகன் ஆற்றிய உரை

9. வேதசகாயகுமார் விழா | ஜெயமோஹன்.in

10. சொல்புதிது பற்றி… | எம்.வேதசகாயகுமார் எழுதிய [எம்.வேதா] நாய்களைப்பற்றிய ஒரு உருவகக் கதை சுந்தர ராமசாமியைப் பற்றியது என்று சொல்லப்பட்டு பெரும் பிரச்சாரம் கிளப்பப்பட்டது. [நாச்சார் மடத்து விவகாரங்கள்]

11. ஒரு முழுப் பூசணிக்காயும், சில சோற்றுப் பருக்கைகளும் :: K. ரவி ஸ்ரீநிவாஸ்

12. எம் வேதசகாயகுமார், ஆர்.எம் .சதக்கத்துல்லா / மற்றும் சொல்புதிது ஆசிரியர் குழு

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு ,

எஸ்.வேதா என்பது எஸ்.வேதசகாயகுமார் என்பதன் சுருக்கம். இப்பெயரில் நான் கதைகள் முன்பு எழுதியதுண்டு. இனியும் எழுதலாம் தனிப்பட்ட முறையில் இன்றைய அரசியல் சூழலைப்பற்றிய என் மனச்சோர்வையும் உயரிய மதிப்பீடுகள் என நான் பலகாலமாக நம்பியவற்றின் வீழ்ச்சியையும் சொல்கின்ற கதை ‘நாச்சார் மடவிவகாரங்கள் ‘ . அந்த வீழ்ச்சியை குறிக்க என் முன் தூலமாக உள்ள சொந்த அனுபவம் சார்ந்த உதாரணம் சுந்தர ராமசாமி .

சுந்தர ராமசாமி மீது நான் கொண்ட குருசீட உறவுக்கு நீண்ட முப்பதுகால வரலாறு உண்டு. அவர் கல்வித்துறை மீது வைத்த கடுமையான விமரிசனங்களை உண்மையென நம்பி கல்வித்துறையுடன் கடுமையாக மோதி பலர்வெறுப்பையும் கோபத்தையும் சம்பாதித்தவன் நான். அதற்காக நான் அடைந்த இழப்புகள் சாதாரணமல்ல . வசந்திதேவியை மாபெரும் கல்வித்துறை சக்தி என்று சித்தரித்து அவர் எழுதிய நூல எனக்கு அதிர்ச்சி அளித்தது . வசந்தி தேவியையும் , சுந்தர ராமசாமி அப்படி எழுதியதற்கான காரணங்களையும் அறிந்த எனக்கு ஏற்பட்டது ஆழமான மனச்சோர்வு .

வசந்தி தேவியே பெரிய கல்வியாளர் என்றால்

  • நெ .து .சுந்தரவடிவேலு
  • வ .செ குழந்தை சாமி
  • வ .சுப மாணிக்கம்

போன்றவர்கள் என்ன குறைந்து விட்டார்கள் ? யாருக்காக இந்த ஆட்டத்தை ஆடினோம் ?

இது ஓர் உதாரணம்தான். வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் வெற்றுப்பேச்சுகளால் ஏமாற்றப்பட்டவனாக உணர்கிறேன். அதேபோல நான் நம்பிய அரசியலிலும் என் ஏமாற்றம் பெரிது.

‘நாச்சார் மட விவகாரங்கள் ‘ கதை தொடங்கும் புள்ளி இதுதான். அது ஓர் அங்கதம். அக்கதை கதைகளுக்குரிய வழக்கப்படி வளர்ந்து மேலும் பல இடங்களை தொட்டுசெல்கிறது. இக்கதையை காலச்சுவடு அவர்கள் மீதானவிமரிசனமாக காட்டும் முன்புவரை எவருக்குமே அப்படி படவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் . திண்ணையில் கூட விமரிசனம் வந்ததை படித்தேன்.

நவீனத்துவ மரபைச்சேர்ந்த கதைகளின் அழகியல் கடுமையும் தீவிரமும் கொண்டதுதான். உதாரணமாக சுந்தர ராமசாமியின் நடுநிசி நாய்கள் என்ற தொகுப்பில் உள்ள கவிதைகளையே எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கதையேகூட ‘வானம் வந்திறங்கியதும் இளைப்பாற ஒரு கட்டில் செய்தேன் ‘ என்ற பசுவய்யா கவிதையின் மறுவடிவம்தான். வந்திறங்கிய வானம் ‘கழிப்பறை எங்கே ? ‘ என்று கேட்பதுதான் அக்கவிதை. என் கதையை வேண்டுமென்றே திரித்து சிக்கல்களை உருவாக்க சிலர் முயல்வது இலக்கியத்துக்கு ஆபத்தானது . அப்படிப் பார்த்தால் சுந்தர ராமசாமி எழுதிய ‘ நடு நிசி நாய்கள் ‘ , ‘நாய்கள் ‘ , ‘ ஆந்தையை பார்த்து நாளாச்சு ‘ போன்ற கவிதைகள் எல்லாம் யாரைப்பற்றியவை என்று நாம் கேட்க வேண்டி வரும். அவை கசடதபற என்ற இலக்கியக் குழுவினரையும் க. நா. சுப்ரமணியத்தையும் குறித்தவை என்று இலக்கிய உலகில் அன்று பேசப்பட்டதுண்டு. ‘ஒரிஜினல் ஆந்தை ‘ என க நா சு பலகாலம் உள்வட்டத்தால் வசைபாடப்பட்டதும் , அவர் மிக மனம் வருந்தி பதினேழு வருடம் சுந்தரராமசாமியின் தொடர்பை துண்டித்திருந்ததும் நடந்தது. இது எனக்கு நன்கு தெரிந்ததே. அப்படி பொருள் கொண்டால் எந்த இலக்கியமும் ஆபத்தானதாக மாறிவிடும்.

படைப்பாளிகள் மீதான வன்முறை பற்றி காலச்சுவடு பேசுகிறது. காலச்சுவடுதான் அவதூறுகளுக்கென்றே ஒரு பகுதியை ஆரம்பித்த முதல் சிற்றிதழ் . அவதூறுகளை தமிழிலேயே அதிகமாக வெளியிட்ட இதழ். நீதிமன்றம் செல்ல வசதியாகவா அதில் அவதூறுகளை வெளியிட்டனர் ? உதாரணமாக ஆர் பி ராஜநாயகம் எழுதிய கட்டுரையையே சொல்லலாம். அதை தொடர்ந்து கண்ணன் எழுதிய குறிப்பில் ‘மற்ற நண்பர் ‘ என்று சொல்லி என் சாதியைப்பற்றி தேரோட்டி என உள்ளர்த்தம் வைத்து நக்கல் செய்து எழுதிய இதழ் அது. தெரியாமல் கேட்கிறேன், சுந்தர ராமசாமியை விமர்சிக்கும்போதுமட்டும்தான் படைப்பு வன்முறையாகிறதா ? கையெழுத்திட்ட மகாஜனங்களில் எத்தனைபேர் இவ்விஷயங்களை கண்டித்தார்கள் ? விஷத்தை நாசூக்காக உமிழ்ந்தால் அது வன்முறை இல்லையா ?

இலக்கியப் படைப்பு நன்றாக வரலாம், சரியாக வராமலும் போகலாம். அது எழுதுபவனின் திறனைப்பொறுத்த விஷயம். அதை இம்மாதிரி கொச்சைப்படுத்துவது நோய்க்கூறான மனநிலை .

தொடர்ச்சி

நான் எழுதிய ‘ நாச்சார்மடம் ‘ உண்மையில் மிக எளிமையான ஒரு கதை. அதில்பெரிதாக வசை ஏதும் இல்லை. அதன் தொடக்கம் என்னவாக இருந்தாலும் கடைசியில் நான் உத்தேசித்தது ராமர்கோவில் விஷயமும் வாஜ்பாயும்தான்.

சுந்தரராமசாமி எழுதிய வசைக்கவிதைகள் கதைகள் ஆகியவை தோண்டி எடுக்கப்பட்டு பேசப்படுகின்றன. புதிய காற்று பத்திரிகையில் சுந்தர ராமசாமி எழுதிய தனிநபர் வசைகளின் ஒரு பட்டியல்தரப்பட்டுள்ளது .

காலச்சுவடு அளித்த கோரிக்கைமனுவுக்கு பதிலாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் சுந்தர ராமசாமி நிகழ்த்திய கீழ்த்தரமான தனிநபர் தாக்குதல்களை பட்டியலிட்டு எழுதி காலச்சுவடுக்கு அனுப்பி அது பிரசுரிக்க மறுத்த கடிதத்தின் நகலும் எங்கும் கிடைக்கிறது.

புளியமரத்தின் கதையில் வரும் இசக்கி உண்மையில் நாகர்கோவிலில் உள்ள பி எஸ் மணி என்ற சிறு பத்திரிகையாளர்தான் என்ற செய்தியும், இது அக்காலத்தில்பெரிய பிரச்சினையாகி அடிதடி விளிம்புவரை போய் சக்கைபுளிக்கறி பயத்தால் கைவிடப்பட்டது என்பதும் எனக்கே இப்போதுதான் தெரிந்தது.

அதைவிட முக்கியமான விஷயம் எல்லாருமே ‘நாச்சார்மடம் ‘ என்று சாதாரணமாக சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் என்பது தான். உண்மையில் எனக்கே வருத்தமாக இருக்கிறது. நான் இதை கண்டிப்பாக உத்தேசிக்கவில்லை. காலச்சுவடு பிரசுரித்த அறிக்கையில் கையெழுத்திட்ட ஒரு எழுத்தாளரே ஒரு கூட்டத்தில் ‘நாச்சார் மட விமரிசனமுறை ‘ என்று சொன்னதாக கேள்விப்பட்டேன். நாகர்கோவிலில் நடந்த ஓர் இலக்கியக் கூட்டத்தில்பல பேச்சாளர்கள் சாதாரணமாக ‘நாச்சார்மடங்களின் பார்வை ‘ என்றெல்லாம் பேசுவதைக் கேட்டேன்.

13. படைப்பின் வன்முறை – எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களின் கூட்டறிக்கை

சொல்புதிது (ஏப்ரல்-ஜூன், 2003) இதழில் எம். வேதா என்பவர் எழுதியதாகப் பிரசுரிக்கப்பட்டுள்ள ‘நாச்சார் மட விவகாரங்கள்’ என்ற ‘சிறுகதை’ மிக மோசமான தனிமனித அவதூறாக உள்ளது. கீழே கையொப்பமிட்டுள்ள எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களாகிய நாங்கள் அதைக் கண்டிக்கிறோம்.

14. இயல் விருது சில விவாதங்கள்

ரோஜா முத்தையாச் செட்டியார் எம்.வேதசகாயகுமாருக்கு நெருக்கமானவர். அவருக்கு பல நூல்களை கொடுத்தவர். தன் முனைவர் ஆய்வுநாட்களில் வேதசகாயகுமார் பெரும்பாலும் செட்டியார் வீட்டில்தங்கி ஆய்வுசெய்திருக்கிறார். கையில் காசு இல்லாத குமாருக்கு செட்டியார் சாப்பாடுபோட்டு உதவியிருக்கிறார். தன்னைத்தேடிவந்தவர்களை எல்லாம் உபசரிப்பவர் அவர்.

ரோஜா முத்தையாச் செட்டியார் வாழ்நாளெல்லாம் சேர்த்த நூல்கள் அவர் மரணத்துக்குப் பின்னர் சிகாகோ பல்கலை உதவியுடன் சென்னையில் ஒரு நூலகமாக அமைக்கப்பட்டது. ஒரு கதைக்காக எனக்கு சில பழைய கிறித்தவ வெளியீடுகள் தேவைப்பட்டன. அவற்றை வேதசகாயகுமார் சேர்த்து செட்டியாருக்குக் கொடுத்ததாகச் சொன்னார். ஆகவே நான் ரோஜா முத்தையா செட்டியார் நூலகத்துக்குச் சென்றேன்.’பொதுமக்களுக்கு’ அனுமதி இல்லை என்றார்கள். அங்கே இருந்த நூலகர் சங்கரலிங்கம் என்பவரைச் சந்தித்தேன். அவர் என் முகம் பார்த்தே பேசவில்லை. ஒரு ·பைலை புரட்டியபடி ஏதாவது கல்வி நிறுவன அடையாள அட்டை தேவை என்றார் அவர். நான் ஓர் எழுத்தாளன் என்றேன் – அப்போது விஷ்ணுபுரம் வந்துவிட்டது. ”ஆமா, அப்டி சொல்லிட்டு தினம் ஒருத்தன் வாறான்…”என்று சொல்லி வெளியேபோகும்படி கைகாட்டினார். இந்த ஆசாமி ஒரு புகழ்பெற்ற நூலகர் என்று பிற்பாடு கேள்விப்பட்டேன்.

15. பிரமைகளும், பிரகடனங்களும்-2 :: K.ரவி ஸ்ரீநிவாஸ்

16. அரவிந்தன்

அவதூறு என்ற வார்த்தையைச் சிறுமைப்படுத்தும் அநாகரிகத்தின் உச்சமான இந்தக் கதை சுந்தர ராமசாமி, கண்ணன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரைப் பெயரிட்டுத் திட்டவில்லை. மற்றபடி வெட்கம், கூச்சம் ஆகியவற்றை முற்றாகத் துறந்த அப்பழுக்கற்ற கேவலமான மொழியில் இவர்கள் மூவரையும் திட்டித் தீர்க்கிறது இந்தக் கதை. சுந்தர ராமசாமியின் வீடு, வீட்டில் வேலை செய்யும் பெண்கள் உள்பட அவர் சம்பந்தப்பட்ட பல அம்சங்களை, செய்திகளை, நபர்களைக் கேவலப்படுத்தியிருக்கும் இந்த ‘எழுத்தாளரை ‘ தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது சொல் புதிது.

இந்தக் கதை எழுதப்பட்டதன் பின்னணியை இங்கு நினைவுபடுத்திக்கொள்வது நல்லது. மு. தளையசிங்கம் குறித்து ‘சொல் புதிது ‘ நடத்திய கருத்தரங்கு பற்றி ராஜநாயஹம் என்பவர் எழுதிய கட்டுரையைக் ‘காலச்சுவடு ‘ சென்ற ஆண்டு பிரசுரித்தது. பலர் அந்தக் கட்டுரையைக் கண்டித்தார்கள். நாஞ்சில் நாடன் போன்ற சிலர் தங்களது கண்டனத்தை எழுத்துபூர்வமாக (காலச்சுவடிலேயே) பதிவு செய்தார்கள். அதையடுத்து அந்தக் கட்டுரை வெளியிடப்பட்டதன் பின்னணியை விளக்கி காலச்சுவடு ஆசிரியர் கண்ணன் ஒரு குறிப்பை எழுதினார். ‘சொல் புதிது ‘ இதழில் ராஜ நாயஹத்தின் கட்டுரையை ஒட்டி ஒரு குறிப்பு வந்திருந்தது. அதில் மனுஷ்ய புத்திரனின் மதத்தைக் குறித்த ஒரு சொற்றொடர் இருந்தது. ‘காலச்சுவடி ‘ன் அடுத்த இதழில் இதற்கான எதிர்வினையை மனுஷ்ய புத்திரன் பதிவுசெய்தார்.

இதுவரையிலும் வெளிப்படையாக நடைபெற்றுவந்த இந்த மோதலை நிழல் யுத்தமாக மாற்ற முயன்றிருக்கிறது ‘சொல் புதிது ‘. எம். வேதா என்ற ‘புத்தம்புதிய ‘ எழுத்தாளர் ஒருவர் ‘காலச்சுவடு ‘, சுந்தர ராமசாமி, மனுஷ்ய புத்திரன், கண்ணன் ஆகிய பெயர்ச்சொற்களை நேரடியாகக் குறிப்பிடாமல் ஆனால் படிப்பவர்களுக்கு இந்தச் சொற்களைத் தவிர வேறு எதுவும் நினைவுக்கு வந்துவிடாத அளவுக்கு வெளிப்படையான குறிப்புகளுடன் ஒரு கதை எழுதுகிறார்.

ஓர் எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய ஈரமும் தார்மீக உணர்வும் சிறிதேனும் அவரிடம் எஞ்சியிருக்குமெனில் ‘கால்கள் சூம்பிப்போன நொண்டி நாய் ‘ என்ற தொடரை எழுதியதற்காக அல்லது எழுத அனுமதித்ததற்காக அவர் பல நாள் தூக்கத்தை இழப்பார் என்பதில் சந்தேகமில்லை.

‘நாச்சார் மட விவகாரங்கள்’ சிறுகதையை நான்தான் எழுதினேன் என்கிறார் வே.ச.கு. தனது கூற்றுக்கு வலுசேர்க்க, இதற்கு முன்பும் கதைகள் எழுதியிருக்கிறேன் என்று அறிவிக்கிறார். இனிமேலும் எழுதுவேன் என்று மிரட்டுகிறார். அவர் கூறவது பொய் என்று கூற நான் விரும்பவில்லை. ஆனால் இந்தக் கதையில் – அதன் சகல கீழ்மைகளையும் தாண்டி – வெளிப்பட்டிருக்கும் புனைவு அம்சத்தை அவரால் சாதித்திருக்க முடியும் என்பதற்கான எந்த அடையாளமும் இதுவரை வெளிப்பட்டதில்லை. இதற்கு முன்பும் கதைகளை எழுதியிருக்கிறேன் என்று அடக்கமாகச் கூறிக்கொள்ளும் வே.ச.கு. அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்று கோருகிறேன்.

  • ஜெயமோகன் காலச்சுவடின் ஆரம்ப இதழ் ஒன்றில் எருமை மாட்டை வைத்து ஒரு கவிதை எழுதியிருந்தார். தமிழக அரசியல்வாதி ஒருவரைப் பற்றிய சித்திரமாக அதைப் பார்க்க முடியும் என்று அவர் என்னிடம் அப்போது கூறினார்.
  • மனுஷ்ய புத்திரனின் ‘அரசி’ கவிதை,
  • எஸ். ராமகிருஷ்ணனின் ‘ராமசாமிகளின் வம்ச சரித்திரம்’ என்ற சிறுகதை,
  • சுராவின் ‘ஜே. ஜே. சில குறிப்புகள்’,
  • நீல. பத்மநாபனின் ‘தேரோடும் வீதியிலே’,
  • சாரு நிவேதிதாவின் ‘ஜீரே டிகிரி’ என்று பல உதாரணங்களை இந்த வகையில் அடுக்கிப் பார்க்கலாம்.
  • புற உலகை அழுத்தமாக நினைவுபடுத்தும் இத்தனை பிரதிகளுக்கு மத்தில் ‘தேரோடும் வீதியிலே’ நாவல் மட்டும் சில எழுத்தாளர்களின் கண்டனத்திற்கு உள்ளானது ஏன் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும்.

1. சுராவின் கருத்துக்களை நம்பி மோசம்போனேன் என்று சிறு குழந்தை போல அழும் வே.ச.கு., கல்வித்துறையில் அவர் என்ன செய்தார், அதன் விளைவாக என்னதான் நடந்தது என்பதை பகிரங்கப்படுத்த முன்வருவாரா?

2. ‘ஒரிஜினல் ஆந்தை’ பற்றி இப்போது எழுதும் வே.ச.கு., சுராவைத் தனது குருவாக வரித்திருந்த 30 ஆண்டுகளில் இந்த ஆந்தை பற்றி வாய் திறக்காமல் இருந்தது ஏன்? குருநாதரின் ‘குற்றம்’ அப்போது கண்ணில்படவில்லையா? அல்லது பக்தி விசுவாசம் கையைக் கட்டிப்போட்டு விட்டதா?

3. பு.பி. செம்பதிப்பு தொடர்பாகத் திண்ணை ஆசிரியர் குழு எழுப்பிய கேள்விகளுக்கான பதில்களைக் கண்ணன் முன்வைத்திருந்தார். அதில் அவர் வே.ச.குவுக்கும் சொல்புதிதுக்கும் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு இன்றுவரை யாரும் பதில் சொல்லவில்லை. பதில் சொல்ல முடியாத கையறு நிலைதான் வன்மமாக வெளிப்படுகிறது என்று நான் எடுத்துக்கொள்வதில் மதிப்பீடுகளின் பிதாமகர் வே.ச.குவுக்கு ஏதேனும் ஆட்சேபணை உண்டா?

17. காலச்சுவடு கண்ணன்

சொல்புதிதின் முன்னாள் ஆசிரியர் குழு உறுப்பினர் திருமதி எஸ். அருண்மொழி நங்கை (ஜெயமோகனின் மனைவி) சொல்புதிதில் ‘என்ன ஆனது இந்த எழுத்தாளர்களுக்கு ? ‘ என்ற கட்டுரையை எழுதியுள்ளார். இதைப் படித்துப் பார்த்து சொல்புதிதுக்கு எழுத்தாளர்கள் மேல் இருக்கும் மரியாதையை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து ஒரு வாக்கியம்: ‘வீட்டுக்கு வரும் பெரும்பாலான எழுத்தாளர்கள் அலுப்பூட்டக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ‘ (சொல்புதிது 11, பக். 7).

18. சூர்யா

அன்று விஷ்ணுபுரம் மிக பரபரப்பாக பேசப்பட்ட ஓர் வருகை. எம் வேதசகாயகுமாரும் எஸ் ராமகிருஷ்ணனும் நாவலை கடுமையாகத் தாக்கிப் பேசினர்.

வேதசகாயகுமார் அன்று காலச்சுவடு அருகில். இருவரும் சொல்லிவைத்தது போல விஷ்ணுபுரத்தை வசைபாடினார்கள். ஜெயமோகனுக்கு இலக்கிய நுண்ணுணர்வே இல்லை என்றார் வேதசகாயகுமார் . எஸ் ராமகிருஷ்ணன் அதை ஓர் ஆர். எஸ் எஸ் பிரச்சாரம், அது ஒரு ஸ்தலபுராணத்தின் உல்டா என்றெல்லாம் சொன்னார்.

அங்கே தேவதேவன் மட்டுமே விஷ்ணுபுரத்தின் காவியத்தன்மையை சுட்டிக்காட்டி பாராட்டிபேசினார்.

19. பதிப்பியல் நோக்கில் புதுமைப்பித்தன் கதைகள் :: ஆ. இரா. வேங்கடாசலபதி

எம். வேதசகாயகுமார், புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும், தமிழினி, நூலின் பின்னிணைப் பில் வெளியிட்டுள்ள புதுமைப்பித்தன் கதைகள் அட்டவணைக்கும் நான் பின்னிணைப்பு 3இல் கொடுத்துள்ள தகவல்களுக்குமிடையே உள்ள வேறுபாடுகளை வாசகர்களே ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். நான் சேகரித்த மூல ஆவணங்கள் கலைகளுக்கான இந்திய மையத்தின் நல்கையோடு நுண்படச் சுருளிலும் குறுந்தகட்டிலும் பதிவு செய்யப்படு கின்றன. இப்பதிவுகள் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திலும், காலச்சுவடு அறக்கட்டளை அலுவலகத்திலும் ஆர்வ முள்ளவர்கள் பார்ப்பதற்கு 1 ஜுலை 2001 முதல் வைக்கப்படும். யாரு டைய தகவல்கள் ஆதாரபூர்வமானவை என்பதை வாசகர்களே நேரில் கண்டு தெரிந்துகொள்ளலாம்.

20. புதுமைப்பித்தன் செம்பதிப்பு பற்றிய கேள்விகளுக்கு என் பதில்கள் :: இரா. வேங்கடாசலபதி

இறுதியாக

வேதசகாயகுமார் அல்லது ‘எனக்கு பொறத்தாலே போ பிசாசே!’

(ஆர்வி – புதுமைப்பித்தன் படைப்புகள் – வேதசகாயகுமாரின் ஆய்வின் கதை :: RV)

Software Development & Writers, Bloggers, Authors: Technology & Tamil Net

பத்தாண்டு வலை வாழ்க்கை


அசல்

நகல் – தமிழ் புத்தக ஆசிரியரும் வாசகர் குழாமும்