வலைப்பதிவுகள் – 2005

இட்லி வடையின் சென்ற வருடத்து தேர்வுகளைப் போல இது என்னுடைய 2005-ஆம் ஆண்டிற்கான பரிந்துரை.

நான் சொன்னவர்களும் மற்றவர்களும், The Indibloggies சென்று, உங்கள் பெயரை பரிந்துரைத்து பரிசைத் தட்டி செல்ல வாழ்த்துக்கள்.



சிறந்த …. பதிவு

1. முயற்சி – தேன்கூடு
2. செய்தி அலசல் – தமிழ் சசி
3. வெட்டி வேலை – நமக்கு நாமே திட்டம்
4. புரட்சி – இணைய குசும்பன்
5. பின்னூட்டங்கள் – குழலி பக்கங்கள்

6. புதுமுகம் – வண்ணக்குழப்பம்
7. காணாமல் போக்கிக்கொண்ட – பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
8. காணாமல் போனவர் – நினைவுகள்
9. சர்ச்சை – முகமூடி
10. இசை – Domesticated Onion

11. சமூகம் – தடாகம்
12. ஆண் – உருப்படாதது
13. பெண் – Autograph
14. Sporadic – ஜேகேவின் சில குறிப்புகள்
15. பல்சுவை – மனம் ஒரு குரங்கு

16. வாழ்க்கை – அனுபல்லவி
17. ஈழம் – என் மனவெளியில்!.
18. நுட்பம் – எண்ணங்களின் குரல்வடிவம்
19. நகரம் – நெல்லை மைந்தன்
20. சுற்றுலா – எழிலுலா

21. சினிமா – போட்டுத் தாக்கு
22. புகைப்படம் – குவியம்
23. முகமூடி – சுட்டதும், சுடாததும்!
24. இலக்கியம் – பிச்சைப்பாத்திரம்
25. சேவை – தேன் துளி

நகைச்சுவை, அறிவியல், விளையாட்டு, புதிர், துணுக்கு, சுட்டி, மொழி, கல்வி, சிறுவர், மருத்துவம், மேலாண்மை, சமயம், சட்டம், பொருளாதாரம், தத்துவம், தொலைக்காட்சி, சூழலியல், வலைப்பதிவு ஆய்வு என்று இன்னும் நிறைய பேருக்கு கொடுக்கலாம்.

நியு யார்க் நிறுத்தம்

நியு யார்க்கில் சில காலம் வசித்திருக்கிறேன். பாம்பேவின் ரயில்களே என்னை குழப்பத்தில் ஆழ்த்தும். நியு யார்க்கின் வண்ணமயமான மின்ரதங்கள், சென்னையின் காட்டானை, நியு யார்க்கில் விட்டது போல் கண்ணைக் கட்டும். ஒன்றாம் வாய்ப்பாடு சொல்லிக் கொடுப்பார்கள்; ஏ டு ஜெட் வரும்; நிற்கும்; திறக்கும்; மூடும்; புறப்படும்.

கூட்டமாக மக்கள் சேர்ந்து வித்தை பார்ப்பார்கள். ரத்த அழுத்தத்தை சோதிப்பார்கள். இசைக்கு குத்தாட்டம் போடுவார்கள். பரபரப்பாக வால் ஸ்ட்ரீட் ஜர்னலுடன் நெட்டித் தள்ளி ஓடுவார்கள். ஊன்றுகோலுடன் பராக்கு பார்ப்பர்கள். வேலைக்கு விரையாவிட்டால் மனதுக்குள் மெல்லிய ஈர்ப்பும், ஓரவாயில் மென் நகையும் வழிந்தோடும்.

பட்டிக்காட்டான் லுக்குடன் இரும்புக் கம்பிகளுக்கு பின்னால் இருந்த இந்தியர் போன்ற தோற்றம் அளித்த தாத்தாவிடம் ‘ம்யூஸியம் ஆஃப் நாச்சுரல் ஹிஸ்டரி‘ செல்வது எப்படி என்று விசாரித்தவுடன், முரட்டுப் பார்வையுடன் ‘தமிழா’ என்று விசாரித்து, அட்சர சுத்தமான இலங்கைத் தமிழில், எப்படி ப்ளாட்ஃபாரத்திற்கு செல்ல வேண்டும், எந்த ட்ரெயினைப் பிடிக்கணும், எங்கு இறங்க வேண்டும், எவ்வாறு நடக்க வேண்டும் என்பது வரைந்து கொடுத்தார்.

நியுயார்க் டைம்ஸில் திங்கள்தோறும் வெளிவரும் இனிய மெட்ரோபாலிடன் டைரிக்கு பகுதி தவறவிட்ட சம்பவங்களை தவறவிடக் கூடாத வகையில் சொல்லி வருகிறது.

முதலாளித்துவ நாடுகளில் வசித்ததால் என்பதுதான் காரணமாக இருக்கவேண்டும். வேலை நிறுத்தம் என்றாலே அலர்ஜியாக இருந்தது. அந்த ஒவ்வாமை, மே 2005-இல் பயமாக மாறியது.

NStar ஸ்ட்ரைக்கின் போது சகாக்கள் எழுப்பிய கோஷங்கள், இந்தியாவில் கேட்டது போன்ற ‘ஜிந்தாபாத்’கள்தான். ஆனால், பார்கிங் செய்வதற்கு அலுவலக வளாகத்துக்குள் கார் நுழைவதற்கு முன், ஒவ்வொரு காரும் காவல்துறையினரால் நிறுத்தப்படும். உங்கள் காரை, ‘கேரோ’ போன்று சுற்றி நின்று குரல் எழுப்புவார்கள். கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்காமல் இருப்பது உசிதம்.

கார் கண்ணாடி மீது ஓங்கித் தட்டுகிறார்களே, என்று அகஸ்மாத்தாக் கவிழ்ந்த தலை கலவரத்துடன் தூக்கினால், மிக மோசமாக பிறப்பை குறித்துத் திட்டப்படுவீர்கள். ‘உன்னால் என்னை வசை பாடத்தானே முடியும்!‘ என்று அலட்சிய புன்னகை தவழ்ந்த மேலாளர் ஒருவரின் ஹ்யுண்டாய், ‘7-ஜி ரெயின்போ காலனி‘யில் கிழிப்பாரே… அந்த மாதிரி கூரிய கத்தியால் உரசப்பட்டது. யூனியனின் சக்தியை நம்பும் போலிஸ் காரர்களும், உள்ளே இருக்கும் நபரை கிழிக்காதவரை, ‘உனக்கு வேணும்டா‘ என்று பரபிரும்மமாக இருப்பார்.


கடந்த கால் நூற்றாண்டில் முதல்முறையாக, ஏழு மில்லியன் பயனர்களை தினசரி கரை சேர்க்கும் எம்.டி.ஏ (M.T.A.)-தான் தற்போதைய சூடான வேலை நிறுத்தம். நியு யார்க் நகர ஓட்டுனர்களின் தலையாய கருத்து வேறுபாடுகள்:

1. புதிய ஊழியர்கள்: இனிமேல் வேலைக்கு சேருபவர்களின் சம்பளம் 4% குறைவாக தொடங்கும்

2. சம்பள உயர்வு: வருடத்துக்கு 3.5% உயர்த்தினால் போதாது; வருடா வருடம் எட்டு சதவீதம் உயர்த்த வேண்டும்.

3. ஓய்வு பெற்ற பிறகும் உடல்நல காப்புறுதியை தொடர்ந்து வழங்குதல்

4. ஓய்வு பெறும் வயதை 55-க்கு பதில் 62-ஆக வைத்துக் கொள்ளுதல்

5. சேமநல வைப்புத் தொகைக்கான, ஊழியர் பங்களிப்பை இரண்டு சதவிகிதத்தில் இருந்து ஆறு சதவீதமாக உயர்த்துதல்

கடைசியாக சொன்ன 2-இல் இருந்து 6%-தான் ப்ரேகிங் பாயிண்ட். அதன் மூலம் எம்.டி.ஏ.வினால் அடுத்த மூன்றாண்டுகளில் கிட்டத்தட்ட இருபது மில்லியன் டாலர்கள் சேமிக்கமுடிகிறது.

எடுத்துக்காட்டாக, ஆண்டுக்கு முப்பதாயிரம் டாலர் சம்பாதிக்கும் ஓட்டுநர், மாதத்துக்கு ஐம்பது ரூபாயை பென்ஷனுக்குக் காணிக்கையாக்கினார். அவரின் மாத சேமிப்பு நூற்றைம்பது ரூபாயாக அதிகரித்திருக்கும். கடைநிலை ஊழியரின் சம்பளத்தில் கிட்டத்தட்ட நூறு ரூபாய் குறைவது பட்ஜெட்டை பெருமளவு இடிக்க வைக்கும்.

வேலை நிறுத்தத்தை ஆதரிப்பவர்கள் இவ்வாறு வாதிடுகிறார்கள்:

1. அமெரிக்க நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு நானூறு மில்லியனில் இருந்து 660 மில்லியன் டால்ர் வரை இழப்பு ஏற்படுகிறது. (தகவல்: WSJ.com – The Numbers Behind the Transit Strike)

2. எம்.டி.ஏ. வேலை நிறுத்தத்தால், காவல் துறைக்குக் கொடுக்கும் ஓவர்டைம் பணத்தோடு ஒப்பிட்டால், பென்சன் சுமை ஒன்றுமே இல்லை.

3. சேமிப்புக் கணக்கில் ஒரு பில்லியனை வைத்திருப்பவர்கள், கொஞ்சம் செல்வழித்தால்தான் குறைந்து போய் விடுவார்களா?

பென்ஷன் காணிக்கைகளை சீரமைக்காவிட்டால், புஷ் நடத்தும் அரசாங்கம் போல் — ஒரு பில்லியன் டாலர் அதிகம் வைத்திருக்கும் சேமநலநிதி சீர்குலைந்து, திவாலாகும் அபாயம் இருக்கிறது. போக்குவரத்துக் கழக உறுப்பினர்களின் 6% பங்களிப்பில்லாமல், 2009-இல் ஒரு பில்லியன் டாலர்களுக்கு ஓட்டை விழுந்து விடும், என்று கணக்கு சொல்கிறது.

பேச்சுவார்த்தைகளில் நேரம் செல்விடாமல் அடுத்த குடியரசு நாயகராகும் ஆசையில் அமெரிக்காவெங்கும் உலாப் போகும் நியு யார்க் கவர்னர் ஜார்ஜ் படாகி-யை (George Pataki), யூனியன் தலைவர்களை விடக் கடுமையாக விமர்சிக்கலாம். தொலைநோக்குப் பார்வை இல்லாமல், மக்களுக்கு தொல்லை வரலாம் என்று யோசிக்காமல், நியு யார்க் வாசிகளை ஹட்ஸன் நட்டாற்றில் நீந்த விட்டிருக்கிறார்.

ஆனால், அபராதத் தொகை எல்லாம் ஊழியர்களை நோக்கியே வீசப்படுகிறது. வேலை நிறுத்தம் செய்யும் நாளொன்றுக்கு மில்லியன் டாலர்கள் அபராதம் கட்டி விடுமாறு யூனியனுக்கு எதிராக தீர்ப்பாகியிருக்கிறது. அதைத் தவிர அமைப்பின் தலைவர்கள் தினமும் ஆயிரம் டாலர் தண்டம் கட்ட வேண்டும்.

வேலை நிறுத்தம் ஒவ்வொருவரையும் பாதித்திருக்கிறது. பள்ளிக் கூடங்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக ஆரம்பிக்கின்றது. தட்டித் தடுமாறும் அமெரிக்கப் பொருளாதாரம் எழுந்து நிற்பதே நத்தார் தினத்துக்காக நுகர்வாளர்கள் வாங்கும் பொருட்களில்தான். விற்பனையில் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது. ‘தூறல் நின்னு போச்சு‘ காலங்களில் ரேஷன் க்யூவில் நின்றது போல் டேக்ஸிக்கும், தொலைதூர ரயில் வண்டிகளுக்குமான காத்திருத்தல் எகிறியிருக்கிறது.

ஐம்பத்தைந்து வயதிலேயே முழு சேமநலத்துடன் ரிடையராகும் வசதி, பாக்கெட்டில் இருந்து பைசா எடுக்காமல் தொடரும் உடல்நல காப்புறுதி, ஆண்டுதோறும் பணவீக்கத்திற்கேற்ப உயரும் சம்பளம் என்று முதலாளிகள் பல முரண்களில் சரணடைந்தாலும், தொழிலாளிகள் எதையும் விட்டுக் கொடுக்காமல் இருந்தால் பேச்சுவார்த்தைகள் முறியும்.

மைனஸ் டிகிரி குளிர் கொளுத்தும் வேளைகளில், வேலைக்கு பொதுஜனம் நடராஜா சர்வீஸை கையிலெடுத்து, ஜனநாயகத்தை அனுபவிக்கிறார்.


| |

முள் கடிகாரம்

அமெரிக்காவில்…

32 நிமிடங்களுக்கு ஒரு முறை கொலை நிகழ்கிறது.

30 நிமிடங்களுக்கு ஒரு முறை போதையேறியவர் சாலை விபத்தை நிகழ்த்துகிறார்.

13 நிமிடங்களுக்கு ஒரு முறை மார்பக புற்றுநோயால் ஒருவர் இறக்கிறார்.

6 நிமிடங்களுக்கு ஒரு முறை வன்புணர்வு நிகழ்கிறது.

3 நிமிடங்களுக்கு ஒரு முறை identity திருடப்பட்டு பறி போகிறது.

ஒவ்வொரு நிமிடமும் ஒரு கொள்ளை நிகழ்கிறது.

18 விநாடிகளுக்கு ஒரு முறை பெண் வன்முறைக்குள்ளாகிறாள்.

2 விநாடிகளுக்கு ஒரு முறை வழிப்பறி நடக்கிறது.

பின்குறிப்பு: இந்தியாவில் இது மாதிரி புள்ளிவிவரங்களை சேமித்து, விளம்பரப்படுத்துவதில்லை


| | | |

CC:H

மூன்று படங்களை குறித்து எழுதலாம்.

மூன்றுக்கும் உள்ள ஒற்றுமை ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்.

இரண்டு படங்களுக்குள் உள்ள ஒற்றுமை கடவுள் நம்பிக்கை. பிறிதொரு இரண்டுக்குள்ள ஒற்றுமை குழந்தைகள் படம். கிறித்துவத்தைப் பின்னணியாகக் கொண்ட இரண்டு படங்களிலும், டில்டா ஸ்விண்டன் (Tilda Swinton) இருக்கிறார்.

கான்ஸ்டாண்டின்-ஐ (Constantine) சுருக்கமாக சொன்னால் ‘கிங் காங்’ இயக்குநரை ‘பொட்டு அம்மன்’ எடுக்க வைத்தால் எப்படி இருக்கும்!?

நார்னியா-விற்கு (The Chronicles of Narnia: The Lion, the Witch and the Wardrobe) ‘ஆறு’ ஹரியை குழந்தைகளுக்காக இயக்க வைத்தால் எப்படி இருக்கும்!

கடைசியாக, ஹாரி பாட்டர் (Harry Potter and the Goblet of Fire). திரையரங்குக்கு சென்று படம் பார்க்க வேண்டியதை ஹாரி பாட்டர் விடாமல் கோருகிறார். இந்தப் பதிவின் மற்ற இரண்டு படங்களைப் போலவே, ‘ஏன், எதற்கு, எப்படி?’ என்பதை யோசிக்காமல் பார்த்தாமல் ரசிக்கலாம். புத்தகத்தைப் படித்தால்தான் புரியாத மீதி ஹாரி விளங்குவார் போலத் தெரிகிறது.

விறுவிறுவென்று பறக்கும் ஹாரிக்கு நேர் எதிர்மாறாக ‘நார்னியா’ தாலாட்டுகிறது. குழந்தைகள் படம் என்பதால் ‘தவமாய் தவமிருந்து’ கலைப் படம் போல் அன்னநடை நடக்கிறதா என்றால், வெட்டு, குத்து, ஓநாய் என்று சத்தமாக படம் நெடுக பூச்சாண்டி காட்டுகிறார்கள். விமர்சனங்களில் படித்தால்தான் சிங்கம் என்பது யேசு கிறிஸ்துவையும், சூனியக்காரி சாத்தானையும் குறிப்பதாக புரிகிறது.

‘நார்னியா’ – சுவாரசியமாக, படிமங்களாக, அசத்தலாக, ரசிக்கக் கூடிய சாத்தியக்கூறுகளைக் கொண்ட கதை. உள்ளடக்கம் அருமையாக உள்ள வலைப்பதிவில் டெம்பிளேட் கண்ணை உறுத்துவது போல் மாயாஜாலக் காட்சிகள் வெறுப்பேற்றுகிறது. எட்டு வயசுக் குழந்தைக்கு கத்தி கபடா எல்லாம் கொடுத்து ‘லாஜிகல் ரியலிஸம்’ என்பதை ‘மேஜிகல் அன்ரியலிஸம்’ ஆக்கியிருக்கிறார்கள்.

நல்லவர்கள் வாழ்வார்கள்; தீயவர்கள் அழிவார்கள் என்று ‘நார்னியா’ குழந்தைகளுக்கு சொன்னதை, அமர்க்களமான நரகத்துடனும், சப்பு போட வைக்கும் பிசாசுகளுடனும், ‘மேட்ரிக்ஸ்’ ரக தத்துவங்களுடனும் ‘கான்ஸ்டாண்டின்’ போதிக்கிறார்.

சொர்க்கமும் நரகமும் பூமியில்தான் இருக்கிறது. நம் காதில் அவ்வப்போது சாத்தான் வேதம் ஓதும். நாம் அப்போது உள்ளிருக்கும் மிருகத்தை உசுப்புகிறோமா அல்லது அடக்கி ஆள்கிறோமா என்பதில்தான் தேவதைகள் வெற்றி பெறுகிறார்கள்.

செய்தித்தாள்களைத் தடவினாலே முழுவதும் படித்து விடும் ஹெனிஸி; தண்ணீரைக் கொண்டு பரலோகத்தை அடைந்து திரும்புவது; பூதங்களை கண்ணாடிக்குள் அடைப்பது; ஊழை நிர்ணயிக்கும் யேசுவைக் கொன்ற ஈட்டி (Spear of Destiny); ஹாரி பாட்டரின் விநோதங்கள் போன்ற சொறிவண்டு தீப்பெட்டி பொம்மைகள் நிறைந்த டக்கர் ஜிங் படம்.

படத்தில் இருந்து சில வசனங்கள்:

  • (‘நடுராத்திரி’ என்னும் நடுநிலைமையாளனிடம்) அந்தப் பக்கமும் சாயாமல் இந்தப் பக்கமும் சாயாமல் இருப்பது சுத்த பைத்தியக்காரத்தனம். மக்கள் அங்கே செத்துக் கொண்டிருக்கும்போது, பாரபட்சமில்லாமல் ஆட்டத்தை விதிப்படிதான் ஆடுவேன் என்று முரண்டுவது நீ ஒண்டிதான்.
  • உன்னால் சிறைக்கு அனுப்பபட்டவர்களுக்கு நடுவே, நீ கைதியாகப் போனால் எப்படி இருக்கும்!? (What would *you* do if you were sentenced to a prison where half the inmates were put there by you?)

    Constantine – ஜாலம்
    Narnia – கொட்டாவி
    Harry Potter – வால்டிமார்ட் பிரத்யட்சம்; ஹாரி கடாட்சம்


    | |

  • அசோகமித்திரன்

    டிசம்பர் 14, இந்தியா டுடே இதழில் ‘அசோகமித்திரன் கட்டுரைகள்‘ குறித்து பிஏ கிருஷ்ணன் எழுதியிருக்கிறார். அதில் இருந்து:

    விக்ரம் சேத்தின் எழுத்தைப் பற்றி அசோகமித்திரன் குறிப்பிடும்போது அவரது எழுத்து, வாசகரின் கண்ணைக் கூசச் செய்வதில்லை என்று சொல்கிறார். அ.மி.யின் எழுத்துக்கும் இந்தக் கூற்று நிச்சயம் பொருந்தும்.

    தமிழ்த் திரைப்படங்களைப் பற்றி அ.மி. சொல்கிறார்: தமிழ்த் திரைப்படங்களைக் கிண்டல் செய்ய அவ்வளவு ஆற்றல் தேவையில்லை. படத்தின் கதைச் சுருக்கத்தை எழுதினால் போதுமானதாக இருக்கும்.

    கலைஞரின் பராசக்தி குறித்து அ.மி.: புணர்ச்சிக்குப் பின் ஆணைக் கொன்று தின்றுவிட்டு, முட்டையிடலுக்குப் பின் தானும் மடிந்துவிடும் ஒரு கொடூர வகைப் பூச்சி போல பராசக்தி, சினிமாவையும் பின் தள்ளிவிட்டு தமிழ் மேடை நாடகத்தையும் குற்றுயிரும் கொலையுயிருமாகச் செய்துவிட்டது.

    என்னுடைய கொசுறு: (இ.பா.வின் குருதிப்புனல் குறித்த கட்டுரையில் – பக்கம் 457) பொதுவாகவே இலக்கியப் பத்திரிகைகளுக்கு ஓர் எழுத்தாளர் இரண்டாவது படைப்பை வெளிக்கொண்டு வரும்போதே அந்த எழுத்தாளர் மீது அசிரத்தை வந்துவிடுகிறது.


    | |

    தேவதேவன் – நகுலன்

    தேவதச்சனைக் குறித்து புத்தக அலமாரியில் மேயப் போனால் ‘குளத்துக்கரையேறாத கோபியர்கள்’ தேவதேவன் வந்து நின்றார். அவரைக் குறித்த நகுலனின் கட்டுரை:

    நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்‘ தேவதேவனின் ஐந்தாவது கவிதைத் தொகுதி. பொருத்தமாக ‘பிரமிளுக்கு’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மொத்தம் 15 கவிதைகள். மீண்டும் தேவதேவன் குறிப்பிட்டிருக்கிறபடி கவிதையைக் கவிதைதான் மதிப்பிட முடியும். இந்த வகையில் இத்தொகுதி ஒரு சாதனை.

    கவிதைகள் முழுவதும் ஓடும் சரடு பல்வேறு வகைகளில் இயந்திர நாகரீகம் இயற்கையை – சூழ்நிலையை எவ்வாறு எவ்வெவ்வகைகளில் சூறையாடுகிறது என்பதைத் திறமையாகக் காட்டுகிறது.

    சரளமான மென்மையான நடை, பகட்டு ஜ்வலிப்பு இல்லாத வார்த்தைத் தேர்வு. படிமங்கள் அவை செல்லும் பாதைகளுக்கேற்ப பொருள் வேறுபாடுகள் கொள்ளும் நேர்த்தி. தேவதேவன் சில வார்த்தைகளை மிகத் திறமையுடன் படைத்திருக்கிறார். அவற்றுள் ஒரு சில:

  • நரபோஜிகள்
  • காட்டுக் கவிஞன்

    இத்தொகுதியில் என்னை மிகக் கவர்ந்த அம்சம் அதனூடு மிளிரும் கிண்டல் த்வனி. இது சூழ்நிலையில் பலருக்கும் ஏற்படும் அனுபவச் சூழ்நிலைகள் ஒரு மையத்தினால் ஏற்படுபவை. மேலும் இங்கு சொல்லப்படாமலேயே எழுதப்படாமலேயே சில அனுபவங்கள் பெறப்படுகின்றன.

    சில எடுத்துக்காட்டுகள்:

    1. வெற்றியும் தோல்வியும்
    ‘வீரர்க்கழகானாலும்
    வெற்றிதானே குறி’
    (பக்கம் 16)

    2. ஒரு குழுவினுக்குள்ளேயும் உள்ள உறவு
    அது கூட்டுழைப்பு
    அன்பு இல்லை

    3. காகங்களுக்கு காடு எதற்கு?
    (பக்கம் 12)

    4. சரி, முதலில் குளித்துவிட்டுப் பேசுவோம் என்கிறேன்
    (பக்கம் 36)

    தலைப்பிலேயே ஒரு கிண்டல் த்வனி இருக்கிறது. இத்துடன் நிறுத்துக் கொள்கிறேன்.

    வெளியான இதழ்: விருட்சம், செப்டம்பர் 1993

    நன்றி: நகுலன் கட்டுரைகள் – காவ்யா :: ரூ. 150/-


    | | |

  • அவரவர்

    சுகுமாரன் எழுதிய ‘இந்தியா டுடே’ விமர்சனத்தில் இருந்து:

    தேவதச்சனின் ‘அவரவர் கைமணல்’ (கவிதை தொகுப்பின் தலைப்பு) பிரயோகம் மிக வசீகரமானது. பலரையும் தூண்டிய சொற்சேர்க்கை அது.

    ‘அவரவர் வானம்’ (மெய்ப்பொருள் – வண்ணநிலவன்)
    ‘அவரவர் வீடு’ (பயணியின் சங்கீதங்கள் – சுகுமாரன்)
    ‘அவரவர் உலகம்’ (கணையாழி ஏப்ரல் 1994 – பொன்னாண்டான்)
    ‘அவரவர் ஏமாற்றம்’ (கவனம் இதழ் 4 1981 – ஷங்கரராமன்)

    எனப் பலரும் தேவதச்சனை அடியொற்றி அவரவர் வரிகளை உருவாக்கிக் கொண்டிருப்பதை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

    கடைசி டினோசார்
    தேவதச்சன்
    உயிர்மை பதிப்பகம்
    பக்கங்கள்: 166
    விலை: ரூ. 85/-


    அணைந்த ஜோதி

    காலையில் பனிபொழிவைப் பார்த்தவுடன் இந்தப் பாடல் முணுமுணுக்கத் தோன்றியது. சென்னையில் எப்பொழுது பனி பெய்ந்திருக்கிறது என்னும் முரண்நகை தோன்றினாலும், சென்ற வாரம் சென்னைக்கு ரிலையன்ஸிய போது ‘சென்னை இப்போ ரொம்ப குளிரா இருக்குத் தெரியுமோ… காலையில் ஸ்வெட்டர் இல்லாமல் கால் வைக்க முடியல!’ என்பது மேலும் சிரிப்பை வரவழைத்தது. கொஞ்ச நாளாச்சே உல்டா செய்து என்று பாடலை மாற்றிப் போட்டாச்சு!

    Devikaa - Telugucinema.comபனி இல்லாத பாஸ்டனா
    படை எடுக்காத அமெரிக்காவா
    இனிப்பில்லாத ஸ்வீட்டனரா
    இசை இல்லாத ஓசையா

    அழகில்லாத மாடலா
    ஆசை இல்லாத வலைப்பதிவரா
    மழை இல்லாத ஷ்ரேயாவா
    மலர் இல்லாத பொக்கேவா

    தலைவன் இல்லாத ஆட்சியா
    தலைவி இல்லாத கட்சியா
    கலை இல்லாத கலைஞரா
    காதல் இல்லாத திரைப்படமா

    கொலை செய்யாது ஓடுவதும்
    கனிவில்லாமல் போடுவதும்
    பகைவர் போலே ஏடுவதும்
    பதிவர் செய்யும் அரசியல் அல்லவா

    அசல் பாடல்: பனி இல்லாத மார்கழியா :: ஆனந்த ஜோதி – டி.எம்.எஸ் & பி சுசிலா : கண்ணதாசன் – விஸ்வநாதன் & ராமமூர்த்தி (1963) – Music India OnLine


    | |

    சூறையாடல்

    Exxon - Greenpeaceசுற்றுப்புறத்துக்கு மதிப்பு கொடுப்பதில் அமெரிக்கா ஓரளவு விதிகளைப் பின்பற்றியே வருகிறது. தன்னார்வ நிறுவனங்களின் லாபிகளுக்கு பயந்தோ, சுதந்திர கட்சி உறுப்பினர்களின் கொள்கைகளுக்காகவோ, உலகத்திலேயே மிக அதிகமாக குப்பைகளையும் கழிவுகளையும் போடுகிறோம் என்பதாலோ, ‘எரின் ப்ராகொவிச்’ போன்ற ப்ரெட்டி வுமன் திரைப்படங்களாலோ…

    கத்ரீனா வந்து நியு ஆர்லியன்ஸை சின்னாபின்னம் ஆக்குவதற்கு முன்பு வரை சிரமம் பாராமல், பங்குச்சந்தை நலன் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், பணத்தை விரயமாக எண்ணாமல், சட்டத்துக்கு பயந்து, கழிவுகளை சுத்தம் செய்தே வெளியேற்றினார்கள்.

    லூஸியானா சுத்தம் செய்வதற்காகவும் புயல் கடந்த அவசரநிலை காலகட்டத்திலும் சுற்றுப்புற சூழல் விதிகளை தள்ளுபடி செய்துவிட்டார்கள். போன்சர்ட்ரன் ஏரியில் (Lake Pontchartrain) அதிகப்படியான அசுத்தமான வெள்ள நீரை கலந்து விடுவதற்காகவும், இறந்து போன கால்நடைகளையும் செல்லப்பிராணிகளை எரிக்கவும், மட்டுமே பெரும்பாலும் உபயோகப்படும் என்று காரணம் காட்டி துயரநிலை நிவாரணமாக விதி விலக்கு கொடுக்கப்பட்டது.

    கூடவே எரிவாயு நிறுவனங்களின் மாசுக்கட்டுப்பாட்டுக்கும் தாற்காலிக விலக்கு கிடைத்தது. (இதன் தொடர்ச்சியாக லூஸியானா செனேட்டர்கள் நிரந்தர விலக்குகளை முன்வைத்திருக்கிறார்கள்.)

    கேன் பர்தூ-வின் (Cain Burdeau) சமீபத்திய கட்டுரையில் எக்ஸானின் வரலாறு காணாத பத்து பில்லியன் டாலருக்கான லாபம், இந்த தளர்த்தல்களால்தான் கிடைத்திருக்கிறது என்கிறார்.

    அயல்நாட்டு நிறுவனங்களின் வருகையால் மென்பொருள் எழுத்தாளரின் சம்பளம் நாளொரு ஆயிரமும் பொழுதொரு லகரமுமாக கூடி வருவது போல், அமெரிக்காவில் பெட்ரோல் விலை எகிறிக் கொண்டிருந்த காலத்தில்தான் கத்ரீனா புயல் வீசியது. எரி பொருள் உற்பத்தியைக் கூட்ட வேண்டுமானால், நச்சுகளைக் கண்டு கொள்ளக்கூடாது என்று பல எண்ணெய் நிறுவனங்களும் U.S. Environmental Protection Agency-ஐ மிரட்டி தங்கள் லாபத்தை பெருக்கிக் கொண்டது.

    எக்ஸான், ஷெல், பிரிட்டிஷ் பெட்ரோலியம், செவ்ரான், கொனொகோ-பிலிப்ஸ், மாரதான் ஆகியோர் ஜூலை ஆரம்பித்து செப்டம்பர் முடிய மூன்று மாதத்தில் முப்பத்தி மூன்றரை பில்லியன் டாலர் லாபம் கண்டிருக்கிறார்கள்.

    நிறுவனம் – லாபம் – கடந்த மூன்று மாதகால லாபத்தில் அதிகரித்த சதவிகிதம்

    எக்ஸான் – 9.9 பில்லியன் டாலர் – 75 % அதிகரிப்பு
    ராயல் டட்ச் ஷெல் – 9 பில்லியன் டாலர் – 68 % அதிகரிப்பு
    பிரிட்டிஷ் பெட்ரோலியம் – 6.5 பில்லியன் டால்ர் – 34 % அதிகரிப்பு
    செவ்ரான் – 3.6 பில்லியன் டால்ர் – 12 % அதிகரிப்பு
    கொனொகோ-பிலிப்ஸ் – 3.8 பில்லியன் டால்ர் – 90 % அதிகரிப்பு
    மாரதான் – 770 மில்லியன் டால்ர் – 247 % அதிகரிப்பு

    ‘எண்ணெய் கிடங்குகளில் வெளியாகும் நச்சுப்புகைகள் குறித்த தகவல்களை தாமதமாக தருவதன் மூலம்தான் உற்பத்தியை பெருக்க முடியும்’ என்று மிரட்டியே எக்ஸான் போன்றவர்கள் காரியத்தை சாதித்துக் கொண்டு விட்டதாக, EPA-வின் ஹ்யூக் கௌஃப்மன்-னும்(Hugh Kaufman) ஒத்துக் கொண்டிருக்கிறார்.

    எல்லாம் சிரியானா மயம்.


    Lee Raymond & Exxon – Greenpeace 

    Lee Raymond & Exxon – Greenpeace Posted by Picasa