Category Archives: Uncategorized

புள்ளி

ஜெயபாஸ்கரன் :: Aaraamthinai – ilakkiyam/kavithai

எதற்கெடுத்தாலும்
”புள்ளி’வைத்துப்
பழகி விட்டார்கள்
மனிதர்கள்.

பிடிக்காத பெயர்கள் மீது
‘புள்ளி’ வைத்து ஒதுக்குவதே
வேலையாகிவிட்டது
பல பெரும் ‘புள்ளி’களுக்கு.

பிரச்சனைகளுக்குத்
தீர்வு காண்பதை விடவும்
அதற்கொரு முற்றுப் ‘புள்ளி’
வைப்பதில்தான்
ஆர்வமாக இருக்கிறார்கள்
எல்லோரும்.

தற்காலிகமான
முற்றுப் ‘புள்ளி’ யைத்
தகர்த்துத் தாண்டுவது
ஒரு பிரச்சனையாகவே இருப்பதில்லை
பிரச்சனைகளுக்கு.

கரும்புள்ளி
செம்புள்ளி’யை தவிர்த்துவிட்டு
‘கரும்புள்ளி’யை மட்டும்
குத்துகிறார்கள்
தேர்தல் தோறும்
வாக்காளர்களுக்கு.

தமிழில் Data center

மொழிபெயர்ப்பு உபயம் நன்றி: TDIL Data Centre

எனக்குத் தெரிந்த டேடா சென்டர் மொழிபெயர்ப்புகள்:
–> தகவல் மையம்
–> தகவல் நிலையம்
–> விவர மையம்
–> தகவல் தளம்

மொழிபெயர்ப்பு நிரலி கூட கொடுப்பவர்கள் தரும் ஆக்கம்: டேட்டா செண்ட்டர்.

சென்னையின் ஆங்கில பிரேமையின் தாக்கமோ?

டயலாக் டென்

ரொம்ப மண்டையைக் குடையாமால் கூகிளைக் குழப்பாமல் யோசித்ததில் மனதில் தங்கிப் போன பத்து சினிமா வசனங்கள்:

1. …’என் குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா?’…

2. நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை

3. அவன் ஹேர்ஸ்டைலை பார்த்தியா? ஏ. ஆர். ரெஹ்மானையும் ஆதித்யனையும் மிக்ஸ் பண்ணி வளர்த்திருக்கான். இன்னொரு ஆங்கிளில் இருந்து பார்த்தா ‘அவதாரம்’ நாஸர் மாதிரியே இருக்கான்.

4. சபாஷ்! சரியான போட்டி.

5. உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே சாந்தா!

6. தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை – மன்னிப்பு.

7. தீவிரவாதியெல்லாம் என்ன மாதிரி அசிங்கமா இருக்க மாட்டான் சார். அழகா… உங்கள மாதிரி இருப்பான்.

8. எனக்கு இன்னொரு பெயர் இருக்கு!

9. ஓடினாள்… ஓடினாள்… வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்…

10. நீ மலையா? இருக்கலாம்… ஆனா, மலை உடைஞ்சா மண்ணுதான்.

நிறையப் படம் மனதில் ஓடினாலும், வசனம் வரமாட்டேங்குது. உங்களுக்கு நினைவுக்கு வந்த உரையாடல் என்ன 😉

Translation experts 

Translation experts Posted by Hello

Data Center – Translated Works 

Data Center – Translated Works Posted by Hello

Yaamirukka Bayamen – Chandramukhi Rajni (thx: trin…

Yaamirukka Bayamen – Chandramukhi Rajni (thx: tringtring.blogspot.com Prabhu) Posted by Hello

சந்திரமுகி க(வ)லையா?

அறியா விஷயம் ஆயிரம் புரியும்

(இந்த அனுபவப் பகிர்வில் படம் குறித்த முக்கிய திருப்பங்களும் தகவல்களும் இருக்கிறது. சம்பவங்களை முன்பே அறியாமல், சந்திரமுகியை பார்க்க விரும்புவோர் இந்தப் பதிவை தவிர்க்கலாம்.)

சுமார் இருநூறு இருக்கைகள் மட்டுமே இருக்கக்கூடிய ஸோமர்வில் (Somerville) திரையரங்கம். மூன்று மணி ஆட்டத்திற்குப் போடப்பட்டிருக்கும் உதிரி சேர்களும் இரண்டரைக்கே ‘ஆள் வராங்க’ ஆகிறது. திரைப்படத்திற்கு செல்வதை கொண்டாட்டமாக செய்யும் தமிழ் மக்கள். சன்டான்ஸ் (Sundance) போன்ற மாற்றுத் திரைப்படங்களை 35 எம்எம் இடும் வெள்ளித்திரையில் டால்பி அதிர்வுகளுடன் ரஜினியின் சந்திரமுகி. வடிவேலு பயப்படுகிற மாதிரி பெண் ரசிகைகள் நிரம்பி வழிகிறார்கள். புத்தம் புதிய தலைமுறை ‘ரஜினி அங்கிள்’ என்று ஷூ காலை பார்த்தவுடன் கண்டுபிடிக்கிறது. கூடவே கொண்டு வந்த விசிலையும் அடிக்கிறது.

முன்னேற்பாடு, மணிசித்திர தாழ்ப்பாள் திறந்த பார்வை, போஸ்ட் மார்ட்டம் புலனாய்வு எல்லாம் இல்லாமல் ரஜினியின் ரசிகனாக பார்க்கிறவர்கள் மெய்மறந்து ரசிக்கிறார்கள். கமல்ஹாஸனுக்கு நன்றியுடன் ஆரம்பிக்கிறது டைட்டில். சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு ஆடை வடிவமைப்பில் ‘சரிகாவாக’ உதவி புரிந்திருக்கலாம்?!

‘படையப்பா’ போன்ற துதிவசனங்கள் ஓரிரண்டு இடங்களில் (மட்டுமே!) கண்ணொளியாக வந்து கண்ணெரிச்சலைக் கொடுக்கிறது. கமல் எல்லாம் என்ன காமெடி செய்கிறார் ? ரஜினியைப் பார்த்து (இனிமேலாவது) கமல் நகைச்சுவைக்க கற்றுக் கொள்ளவேண்டும்.

படம் முடிந்து வெளியே நிருபர் யாராவது மைக் பிடித்து ‘படம் எப்படி’ என்று கேட்டால், நான் சொல்ல நினைத்தது

‘திருப்தியாக இருக்குங்க! அருணாசலம் ஸ்டைல்; தம்பிக்கு எந்த ஊரு காமெடி; பாட்சாவின் அமர்க்களம்; படையப்பா போல சூப்பர் ஹிட்டாகுங்க!’

சிறுபத்திரிகை மாதிரி சீரியஸ் படங்களைத் திரையிடும் தியேட்டரில் உட்கார்ந்ததாலோ என்னவோ… உள்ளே இருக்கும் மைக்ரோ விமர்சகர் எட்டிப் பார்த்து, தொடரும் வாரங்களில் சீரிய பத்திரிகை எழுத்தாளர்கள் கண்ணில் பட்டு, உருட்டப் போகும் சங்கதிகளை உழலவிட்டார்:

  • பட்டி தொட்டியெங்கும் செல்பேசி சிக்னல் கிடைக்காமல் கிராமவாசிகள் திண்டாடுகிறார்கள். எங்கோ ஒரு கிராமத்தில், பாழடைந்த பங்களாவின் முகப்பு, பின்புறம் என்று பொறியியல் வகுப்பில் படிக்கும் வரைகலை போல் விளம்பரங்கள். பட்டம் விடச் செல்லும் மண்சாலையில் கூட டாடா இண்டிகாம் தட்டிகள். இதன் மூலம் தமிழக கிராமங்களில் வளர்ச்சிக்கான தன்னுடைய அலட்சியத்தை, சூப்பர் ஸ்டார் வெளிப்படுத்தியுள்ளார். செல்பேசி வாங்கினால் அவருக்குப் போதும். கிராமங்களின் சீரிய வளமையில் அக்கறையில்லை. (அப்படியே காந்தீயம், கதர் கிராமம் என்று நாலு பக்கங்கள் செலுத்தலாம்.)
  • ஆரம்பத்தில் த்ரிஷா வருவது என்ன குறியீடு? ரஜினிகாந்த்தின் முதல் காதலியா இவர்? எதற்காக த்ரிஷா டாடா இண்டிகாமை அறிமுகம் செய்துவிட்டு, பின் நயன் தாராவின் பிண்ணணியில் டாடா இண்டிகாம்மின் விளம்பரப் பலகைகள் தெரிய வைப்பது — செல்பேசி போல காதலிகளையும் மாற்றலாம் என்னும் உள்ளத்துக் கிடக்கையின் நீட்சியே. (தொடர்ந்து உழைப்பாளி, எங்கேயோ கேட்ட குரல் என்று சரித்திரத் தகவல்களைக் கொண்டு ரஜினியின் இரண்டு மனைவி விருப்பத்தை நீட்டிக்கலாம்.)
  • சௌரவ் கங்குலி நூற்றியெட்டு வினாடிகளுக்கொரு முறை சந்திரமுகியில் காணக் கிடைப்பதை நாம் இங்கு உற்று நோக்கவேண்டும். அவர் கடந்த சில ஆட்டங்களில் சரியாக விளையாடததைப் போலவே ரஜினியின் சென்ற படமும், கடந்த சில வருட செயல்களும் தோல்விக்குள்ளானது. அவருக்குத் தடை விதிக்கப் பட்டதைப் போலவே ரஜினிக்கும் சில வருட கட்டாய ஓய்வு தேவை என்பதை ரஜினி எதிர்ப்பாளர்கள் நேரடியாக சொல்ல முடியாமல், குறிப்பால் உணர்த்தியிருக்கிறார். (கிரிக்கெட்டில் நடக்கும் சூது வாதுகளுடன் ரஜினியின் தொடர்பு, சர்வதேச சந்தையில் ரஜினியின் மேட்ச் பிக்ஸிங் என்று விளக்கலாம்.)
  • துர்கா என்னும் தெளிய பெயரை வேண்டுமென்றே ‘தர்கா‘ என்று மாற்றி உச்சரிக்கிறார். படம் நெடுக இந்த வெறுப்பேற்றல் தொடர்கிறது. பத்து தடவைக்கு மேல், கால் விரல்களையும் சேர்த்துக் கொண்டு எண்ணுமளவு தர்கா… ஸாரி… துர்கா-வால் திருத்தப்பட்டபிறகும், இந்தப் பழக்கம் மாறவில்லை. துர்கை கோவில்கள் தர்காக்கள் ஆகிவிட்டன என்கிறாரா? எல்லா தர்காக்களையும் துர்கா ஆலயங்களாக மாற்ற அறைகூவல் விடுப்பது போல் இந்த பெயர் திரிப்பு இருக்கிறது. துளிக் கூட சிரிப்பும் வரவில்லை; வேறு எழவும் வரவில்லை. மற்றபடி கடினமானத் தமிழைக் கூடத் தெளிவாகப் பேசும் அமெரிக்கவாசி சரவணன், வேண்டுமென்றே இவ்வாறு உச்சரிப்பது ஏன்? (சத்தியமாக கண்டிக்கவேண்டிய காட்சியமைப்பு இது. தேவையில்லாத பெயர்க் குழப்பம் எதற்கோ?)
  • உருது எழுத்துக்கள் கலைந்து திரிந்து ‘சந்திரமுகி’யின் டைட்டிலாகின்றது. உருதுவை அழித்து நிலாவை தலைப்பில் தரிக்க வைக்கிறார்கள். சந்திரனை தலையில் சூடியவர் சிவன். சந்திராஷ்டம் நாள், இருபத்தியேழு மனைவிகளைக் கொண்ட சந்திரன், ராகு/கேது போன்ற அரக்கர்களை விரும்பாத சந்திரன் என்று இதைக் கொள்ளலாம். சந்திரமுகியின் அறை வாயிலில் சூலம். இந்துத்வா பிரச்சாரத்தின் மற்றொரு வீச்சாகவே இந்த தலைப்புத் தோற்றத்தைக் கண்ணுறுகிறேன். (ஆங்காங்கே வரும் ‘ஹ்ரீம்; க்லிம்’, முந்தைய புள்ளி எல்லாவற்றையும் சேர்த்து ரஜினியின் பாஜக ஆதரவு நிலையாக நிலை நிறுத்தலாம்.)
  • ரஜினி இனிமேல் விஜய்யைத்தான் தன் முதல் எதிரியாக நினைக்கிறார் என்பது படத்தில் இருந்து தெளிவாக உணர முடிகிறது. சச்சின் படத்துடன் ரிலீஸ் செய்து போர்க்களத்தைத் தயார் செய்து கொண்டார். எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் கமலுக்கு நன்றி போட்டு கைகோர்த்துக் கொண்டார். நடுவே விஜய்யின் ‘புதிய கீதை’ திரைப்படத்தை மறைமுகமாக நக்கலடிப்பதற்காக ‘கீதையின் உண்மை அர்த்தங்கள்’ புத்தகத்தைப் படித்து ரசிக்க, கண்மணிகளை மாப்பிள்ளை தனுஷுக்கே ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறார். (விஜய்யின் சமீபத்திய ஹிட்களில் நடித்த த்ரிஷா ஆரம்பத்தில் தோன்றுவது, குஷி போன்ற படங்களில் கூட நடித்த ஜோதிகாவை குணப்படுத்துவது என்று விரிவாக இளம் ரசிகர்களை தனுஷ் பக்கம் கொணரும் ஆதிக்க மனோபாவத்தை எடுத்து வைக்கலாம். தொடர்ச்சியாக விஜய் என்பது விஜய்காந்த் என்னும் பெயரின் எச்சமே என்றும் வாதிட்டு அசத்தலாம்.)
  • சபரி மலை பக்தர்களை ரஜினி புண்படுத்துகிறார். மண்டல விரதம் இல்லாமல் மலைக்கு செல்வது என்பது சரியே என்னும் குணத்தை விதைக்க நினைக்கிறார். காலணி அணிவது, வீட்டில் இருக்கும்போது கூட காவி அல்லது கருப்பு வேட்டி அணியாதது, சவரம் செய்வது, பிறன்மனை நோக்குவது, காதலியுடன் மாஞ்சா போடுவது, ஆகியவற்றை அரங்கேற்றிய சூட்டோடு சபரி அய்யன் அய்யப்பனின் தரிசனம் செய்து திரும்புவதாக சொல்வது உண்மையான ஐயப்ப சாமிமார்களை வேதனைக்கும் நகைப்புக்கும் உள்ளாக்குகிறது. (கோவில் குருக்களின் பேச்சை அலட்சியப் படுத்துவது, ஹோமம் நிகழ்த்துபவர்களை மாயாவியாக சித்தரிப்பது, இறைவன் அடியார்களை திரை மறைவில் விலை கொடுத்து வாங்குவது என்று பிட்டு பிட்டாக்கிடலாம்.)
  • புலனாய்வுத் துறையினை நகைப்புள்ளாக்கும் காட்சிகளை வெட்டக் கோரி போராட்டம் :: விஷம் தங்கிய காபி என்பதை பரிசோதிக்காமல் முன்வைப்பதும், பழிபோடுவதும் அபத்தம். கிரிமினல் கொலைக் குற்றம் நிகழ்ந்த இடத்தை அவசர அவசரமாக சுத்தம் செய்யப் பணிப்பதும் கண்டிக்கத் தக்கது. கைரேகை, தடயங்கள், இன்னபிற துப்பு துலக்காமல், காவல்துறையை அழைக்காமல் மூடி மறைப்பது சட்டப்படி குற்றம். (மிச்ச ரஜினி பட கட்டப் பஞ்சாயத்துகள், அமெரிக்கவாசியின் விசா, அரசு சார்ந்த இடங்களின் பொருட்சேதம், டாடா இண்டிகாம் விளம்பரப் பலகைகளின் அத்துமீறல் என்று புத்தகங்களேப் போட்டுவிடலாம்.)
  • பிளவாளுமை என்னும் தெளிவான தமிழ் பிரயோகம் இருக்கும் போது ஸ்ப்ளிட் பெர்சனாலிடி என்று அழைப்பது ஏன்? பாதிப்பு, நோய், பிணி, தாக்கம், கற்பனை, நிகழ்வு என்று நோய் சார்ந்த வார்த்தைகளைப் பொறுத்தமாக உபயோகிக்க மறுப்பது ஆங்கில அடிமைத்தனத்தின் எச்சமே. தெலுங்குப் பாடலுக்கு நடனமாடுவதும் ஆதிக்க மனோப்பான்மையே. இன்னும் சங்கீத மேடைகளில் தெலுங்கு கீர்த்தனங்களே கோலோச்சுகிறது. நாயகியின் தெலுங்குப் பிரேமையையும் இந்த விழுமியத்தில் சேர்க்கலாம். (படத்தில் வரும் ஆங்கில வார்த்தைக் கலப்பை அளந்து சந்திரமுகியைக் காய்ச்சியெடுக்கலாம்.)
  • பெண் என்றால் நகைப் பிரியை, புது புடைவை ஆசை கொண்டவள் என்ற தட்டையான பிம்பத்துக்குள் வடிவமைத்து நிறுத்தப்படும் ஆக்கமே சந்திரமுகி. தினம் முழுதும் கணவன் அலுவலில் உழல, பிரிவுத் துயருக்கு உள்ளாகும் மனைவியின் தாபங்கள் இங்கு அசிங்க முலாம் பூசப்பட்டிருக்கிறது. விரகம் போன்ற இயல்பான மாற்றங்களை, கட்டுப்பெட்டித்தனம் என்னும் கயமைக்குள் அடக்க நினைக்கிறார்கள். பரதம் பயின்ற பழங்காலத்தவர் – தேவதாசிகள் என்னும் முலாம் பூச்சல் பார்வையாளர்கள் மேல் இன்னும் எத்தனை காலம் நிகழ்த்தப்படுமோ ? கீழ் சாதியை சேர்ந்தவர்களைக் காதலித்து கரையேற்றுவதுதான் தமிழ் கதாநாயகனின் கல்யாண குணமாக்கப் படுவது இங்கும் தொடர்கிறது. மேல் சாதியின் அடக்குமுறைகளும் வரம்பு மீறல்களும் ஒதுக்கிவைத்தல்களும் நயன் தாரா என்னும் தோட்டக்காரக் குடும்பத்தின் மேல் செலுத்தப்பட்டு ஆதிக்க சக்திகளுக்குத் தீனி போடப்படுகிறது. (தலித், பெண்ணியம், விஜயகுமார் என்பதன் திருமாவளவன் குறியீடு, ஆடல்கலை/பழங்கலைகளுக்கான எதிர்ப்பு, தாழ்த்தப்பட்டோர் ஆசிரியைகளாக இருப்பதன் ஆதிக்க அதிர்ச்சிகள் என்று விளாசலாம்.)

    கற்றது கை byte அளவு; கல்லாதது internet அளவு என்பது போல் இன்னும் நான் கண்டுபிடிக்காத ஃபீலிங் எவ்வளவு சந்திரமுகியில் புதைந்து கிடக்கிறதோ…. வாருங்கள்… துழாவுவோம். நிச்சயம் ஏதாவது கிடைக்கும்.

    – பாஸ்டன் பாலாஜி

    (வேறொரு சமயத்தில் பிளவாளுமை என்னும் பெயரைக் கொடுத்து உதவிய ரமணிக்கு நன்றி)

  • பிட்ஸ் லொள்ளு

    விகடன் கொடுத்தது பிட்ஸ்
    நான் வழங்குவது லொள்ளு.

    கும்பகோணம் பகுதியில் கோயில் கோயிலாகப் பயணம் போகிறார் சினேகா. என்ன வேண்டுதலோ?!

    சரவணா செல்வரத்தினம் அண்ணாச்சி விளம்பரத்தில் தனக்கு பதிலாக – ப்ரியா மணி வர ஆரம்பிச்சுட்டாரே என்னும் பயமோ?

    சிறையில் இருந்தபடியே தன் வெளிநாட்டுப் பக்தர்களுக்காக பிரெஞ்ச், ஆங்கில மொழிகளில் பத்திரிகை நடத்தி வருகிறார் பிரேமானந்தா.

    சங்கர மடம் சந்தோஷப்படுகிறது

    சந்திரமுகி ரிலீஸானதும் மறுபடியும் கேரளா கிளம்புகிறார் ரஜினி… ஆயுர்வேத சிகிச்சைக்காக!

    தீவிர சிகிச்சை அளித்தாலும் படம் ஹிட்டாகாது என்கிறார் ரஜினி ரசிகர்.

    தன் கைக்கடிகார நேரத்தை எப்போதும் அரைமணி நேரம்முன்கூட்டி ஓடும்படி செட் செய்து வைத்திருக்கிறார் வைகோ.

    நேரத்தை வேகமாக்கினாலாவது, சீக்கிரமே திமுக தலைவர் பதவி கிடைக்காதா என்னும் நப்பாசைதான்?

    குழந்தைகள் படம் ஒன்றை எடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார் கமல்.

    அப்ப… மைக்கேல் மதன காமராஜன், அவ்வை ஷண்முகி, பம்மல் கே சம்பந்தம், மும்பை எக்ஸ்பிரஸ் எல்லாம் எதில் சேர்த்தி?

    அந்நிய முதலீடுகளைப் பெறுவதற்காக, அரசின் சார்பில் அடுத்த மாதம் அமெரிக்கப் பயணம் செல்கிறார் ஜெயலலிதா!

    மோடி மாதிரி இல்லாமல், விசா வழங்காவிட்டால், கடற்கரையில் உண்ணாவிரதத்தில் குதிச்சுடுவாங்க!

    ஏப்ரல் 10 & 14

    நன்றி: Yahoo Groups: Rajinidotcom Message 12651 :: ஷாஜஹான்

    புத்தாண்டு படங்கள் :: முதல் நாள் ரிப்போர்ட்


    சென்னையில் சந்திரமுகி


    Rajini attended function for K.Balachander :: ஒரு விழாவில் கவிஞர் வாலி சொன்னார். நான் எம்.எஸ்.வியை சந்திப்பதற்கு முன் சோற்றுக்கு அலைந்தேன். எம்.எஸ்.வி.யை சந்தித்தபிறகு சோறு சாப்பிட நேரமில்லை என்று. அதேமாதிரிதான் இந்த நான். வாழ்க்கையை பார்த்து பயந்தவன் இந்த சிவாஜிராவ். பாலசந்தர்சாரை சந்தித்தபிறகு அவர் என் பெயரை ரஜினின்னு மாத்திவச்ச பிறகு வாழ்க்கை என்னை பார்த்து பயந்தது. அதுதான் பாலசந்தர் டச். அவரிடம் எத்தனையோ கற்றுக்கொண்டிருக்கிறேன். ஒரு பெரிய மகான் 130 வருடம் வாழ்ந்தார். அவரிடம் நீங்கள் இப்படி ஆரோக்கியமாக வாழ்வதற்கு என்ன காரணம் என்றhர்கள். அதற்கு அந்த மகான் சொன்னார். வாழ்க்கையில் 3 ஒழுக்கத்தை கடைபிடித்தால்போதும் நீங்களும் அப்படி வாழ முடியும். அந்த 3 ஓழுக்கம் ஒன்று physical(உடல்ரீதியான ஒழுக்கம்), moral (உள்ள ரீதியான ஒழுக்கம்), spiritual (மத ரீதியான ஒழுக்கம்).

    உடல் ரீதியான ஒழுக்கம் என்பது உன் உடலை பற்றி தெரிந்துக்கொண்டு, அதில் என்ன நோய் இருக்கிறது என்பதை கண்டறிந்து அதை சீர்செய்து கொள்ள வேண்டும், மோரல் என்பது பெத்த அப்பா, அம்மாவை நன்றhக பார்த்துக்கொண்டு, தாய் நாட்டுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை ஜhஸ்தியாகவும் இல்லாம, கம்மியாகவும் இல்லாம, கரெக்டா செய்யணும், ஸ்பிருட்சவல் என்பது நீ இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன் எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் அந்த மதத்தின் கொள்கைகளை சரியாக கடைபிடித்து வாழ்வது. இந்த மூணும் சரியாக இருந்தால் நீயும் அப்படி வாழலாம்.


    Black tickets selling like hot :: கோயம்பேடு தியேட்டர் காம்ப்ளக்சில் “சந்திரமுகி’ டிக்கெட் 200 ரூபாய்க்கு பிளாக்கில் விற்கப்பட்டது. “மும்பை எக்ஸ்பிரஸ்’ டிக்கெட் நூறு ரூபாய்க்கு “பிளாக்’கில் விற்கப்பட்டது. விஜய்யின் “சச்சின்’ பட டிக்கெட் 100 ரூபாயிலிருந்து 125 ரூபாய் வரை “பிளாக்’கில் விற்கப்பட்டது.


    ரஜினி குடும்பம் :: “நேற்று மதியம் 2.30 மணி காட்சியின் போது ரஜினியின் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகனும் நடிகருமான தனுஷ் ஆகியோர் படம் பார்க்க வந்தார்கள். காரில் இருந்து இறங்கிய தனுஷை ரசி கர்கள் அலேக்காக தியேட்டருக்குள் தூக்கிக் கொண்டு போனார்கள். இந்த காட்சியை தியேட்டருக்கு வந்திருந்த ரசிகர்கள் ரொம்பவே ரசித்தார்கள்.”

    கல்கி தலையங்கம்

    Kalki Weekly :: போப் இரண்டாம் ஜான் பால் மறைவு மத எல்லைகளையும் தாண்டி, துயரத்தையும் இழப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. புஷ், பிளேர் தொடங்கி கார்பசெவ், காஸ்ட்ரோ வரை (சீனா உட்பட) உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இத்தனைக்கும் போப் ஆண்டவர் இந்தத் தலைவர்களுடன் எல்லா நேரங்களிலும் உடன்பட்டார் என்று கூற முடியாது. மனித உரிமைப் பண்பாளர் என்ற போதிலும், கத்தோலிக்க கிறிஸ்தவ மதக் கோட்பாடுகள் அனுமதியாத கர்ப்பத்தடை முறைகள், விவாகரத்து போன்றவற்றை இறுதிவரை கடுமையாக எதிர்த்தார். ஓரினச் சேர்க்கையையும் கருக்கலைப்பையும்கூட அடிப்படை உரிமைகளாகக் கோரி வருகின்ற மேற்கத்திய உலகில், போப் ஆண்டவரின் நிலை பழைமை வாதம்தான்!

    கம்யூனிஸத்தை மிக வெளிப்படையாகவும் கடுமையாகவும் நிராகரித்தார் போப். அவ்வாறாயினும் அவரால் இத்தனை தலைவர்களின் மதிப்பை எவ்வாறு பெற முடிந்தது ?… அதுவும் ஏதோ மரியாதை நிமித்தம் இரங்கல் செய்தி வெளியிடாமல், ஒவ்வொருத்தரையும் உணர்ச்சிப் பெருக்குடன் பேச வைத்துள்ளது போப் ஆண்டவரின் மரணம்.

    இந்த அரிய உணர்ச்சிப் பெருக்குக்குக் காரணம் போப் ஜான் பாலின் மனித நேயம்தான். கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதிலும் கத்தோலிக்கப் பழைமைவாதத்தைக் காப்பதிலும் எவ்வளவுக்கெவ்வளவு உறுதியாக இருந்தாரோ, அவ்வளவுக்கவ்வளவு தம்மோடு முரண்பட்டவர்கள் மீதும் அன்பு செலுத்தினார்.

    முரண்படுவோரையும் நேசிக்கும் இந்தப் பேரன்புதான் கிறிஸ்தவ மதத்துக்கு மட்டுமின்றி, அனைத்து மதங்களுக்கும் ஆணிவேர். இந்தப் பேரன்பு காரணமாகத்தான் தம்மைச் சுட்டுக் கொல்ல முயன்ற மெஹ்மட் அலி அக்(g)கா(ca)வையும் மன்னித்து, அன்போடு அரவணைத்து ஏற்றார் ஆண்டவர்.

    துருக்கி நாட்டுச் சிறையில் உள்ள அக்(g)கா(ca), போப்பாண்டவரின் மரணச் செய்தி அறிந்ததும் இறுதிச் சடங்குக்கு வரவேண்டும் என்று துடித்திருக்கிறான். தனக்கு அனுமதி கிடைக்காவிடில், தனது குடும்பத்தினர் யாரேனும் இறுதிச்சடங்குக்குச் சென்றே ஆக வேண்டும் என்று கூறியிருக்கிறான்.

    கிறிஸ்துவ மதக் கொள்கையைப் பின்பற்றி இங்கே அம்மதத்தின் மதபோதகர்கள் பலர் நுழைந்து, ஹிந்துக்களை மதமாற்றம் செய்து வருவது குறித்து பெரும் சர்ச்சை நிலவிக் கொண்டுதானிருக்கிறது. இந்த முறைகேடுகளுக்குக் கத்தோலிக்க கிறிஸ்துவத் தலைமை துணை போவது குறித்துப் பெருங்கோபமும் தார்மிக எழுச்சியும் நாட்டில் எங்கும் காணக் கிடைக்கிறது. ஆனால், இந்த எதிர்ப்புணர்வையும் மீறி, போப் ஆண்டவருக்குப் பல ஹிந்துக்களும் மனம் கசிந்து அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர்.

    கும்பகோணம் பள்ளி தீ விபத்து, சுனாமி போன்ற சோக நிகழ்வுகளின்போது வாடிகன் ஆதரவுக் குரல் கொடுத்திருக்கிறதே என்று பலர் மகிழ்கின்றனர். ‘பல்லாயிரம் ஆண்டுகளாக அமலில் இருக்கும் கத்தோலிக்க அமைப்பு இழைத்திருக்கக்கூடிய தவறுகள், அநீதிகளுக்கு போப் இரண்டாம் ஜான் பால் பொது மன்னிப்புக் கேட்டாரே!’ என்று நெகிழ்கின்றனர்.

    ஆனால், மக்களின் உணர்வுகளை மதித்து, இந்திய அரசு மூன்று நாள் அரசுமுறை இரங்கல் அறிவித்திருக்கிறது என்று நாம் கருதுவதற்கில்லை. அப்படி மக்களின் ஏகோபித்த ஆதரவு இந்த அறிவிப்புக்கு இருப்பதாகவும் தோன்றவில்லை. மத்திய அரசின் இந்தத் திடீர் அறிவிப்பு, மக்கள் உணர்வுகளின் அடிப்படையில் எழுந்ததல்ல. கிறிஸ்துவ மதத்தினரைத் திருப்திப்படுத்த, அரசியல் கண்ணோட்டத்தில் எழுந்திருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது. ஒரு மனிதாபிமானிக்குச் செலுத்தப்படும் மரியாதை எனில், அன்னை தெரஸாவுக்கு இப்படி ஓர் அறிவிப்பு இல்லையே!

    இதுநாள்வரை எந்த மதத்தின் எந்தவொரு (தேசிய அல்லது சர்வதேச) தலைவருக்கும் அறிவிக்கப்படாத அரசுமுறை இரங்கலை அறிவித்ததன்மூலம், சர்ச்சைக்குரிய ஒரு முன்னுதாரணத்தை வகுத்துவிட்டது மத்திய அரசு. மதச்சார்பின்மையின் கொடியைத் தூக்கிப் பிடிப்பதாக இதற்கு மத்திய அரசு விளக்கம் தரக்கூடும்… ஆனால் சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த ஹிந்து மதத் தலைவர் ஒருவருக்குத் தரப்படாத கௌரவம், போப் ஆண்டவருக்கு மட்டும் தரப்படுவது ஏன் என்கிற கேள்விக்கு, நியாயமான பதில் இல்லை.

    அந்த பதில் இல்லாத காரணத்தால், இந்த அரசிடம் மெய்யான மதச்சார்பின்மையும் இல்லை.

    போப் ஆண்டவரின் உயர்வை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. இந்தியாவின் மதச்சார்பின்மை என்பது சிறுபான்மையினரைத் திருப்திப் படுத்துவது என்ற போலித் தனமாகிவிடக் கூடாதே என்றுதான் நியாயமாகக் கவலை கொள்கிறோம்.