Daily Archives: ஜனவரி 10, 2012

Dalit leader of Tamil Nadu Pasupathi Pandian, the founder of Marutham Makkal Munnetra Kazhagam party is Dead


தேவேந்திர குல கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன், இன்று இரவு 9 மணியளவில் திண்டுக்கல் பக்கம் நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் 3 பேர் கொண்ட மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார்.

உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்தது.

இவரது சொந்த ஊர் தூத்துக்குடி பக்கமுள்ள தாளமுத்து நகர். இங்குதான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு குண்டு வீசியும், வெட்டியும் கொல்லப்பட்ட இவரது மனைவி வழக்கறிஞர் ஜசீந்தா பாண்டியன் உடல் அடக்கம் செய்யப்பட்டு சமாதி வைக்கப்பட்டுள்ளது.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரை ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு, அந்த பெயரில் தனிப்பட்டியல் உருவாக்க வேண்டுமென தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் சார்பில் இவர் வலியுறுத்தினார்.

பசுபதி பாண்டியன், தென்தமிழகம் நன்கு அறிந்த தலித் சமுதாய தலைவர். ஆரம்பத்தில் டாக்டர் கிருஷ்ணசாமியுடன் இணைந்து செயல்பட்டவர். அம்மன்புரம் வெங்கடேச பண்ணையாருடன் (திமுக-வின் முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வியின் கணவர்) ஏற்பட்ட மோதல்களின் காரணமாக திண்டுக்கல் சென்ற இவர், கடந்த சில வருடங்களாகவே, மீண்டும் தென் மாவட்டங்களில், தனது சமுதாய நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வந்தார். பல்வேறு அரசியல் ரீதியான போராட்டங்கள், உண்ணாவிரதம், பொதுக்-கூட்டம் என்று தலித் சமுதாய மக்களின் கவனத்தைத் தன்பால் மீண்டும் திருப்பிவிட முயன்றார்.

Video taken in Nakkasalem_perambalur district: Dhevendra kula vellaalar commuinty board and flag hosting with Maaveeran. Pasupathi Pandian on 22.08.2010.

தேவேந்திர-குல வேளாளர் கூட்டமைப்பு, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, ராம-நாதபுரம், சிவகங்கை, திருச்சி ஆகிய 7 தொகுதிகளில் ஜாதி செல்வாக்குடன் இருக்கிறது.

தியாகி இமானுவேல் சேகரனின் நினைவுநாளை தமிழ்ச் சமூகங்களின் சமத்துவ நாளாக அரசு அறிவித்து ஆண்டுதோறும் விழா நடத்த வேண்டும் என்றும் பசுபதி பாண்டியர் போராடினார்.

சி. பசுபதி பாண்டியன் பேச்சில் இருந்து:

“எங்களுடை பூர்வீகத் தொழில் விவசாயம். இந்தியாவில், தமிழகத்தைத் தவிர விவசாயம் செய்யும் மக்களை யாரும் எஸ்.சி. என அழைக்கவில்லை. எங்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை.

எங்களுடைய மக்கள் தொகையைக் கணக்கிட்டு விகிதாசார அடிப்படையில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தமிழன் என்ற மரியாதையை எங்களுக்கு வழங்கினால் போதும். பல்வேறு ஜாதிக் கலவரங்களால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு மிகவும் இழப்புகளைச் சந்தித்து விட்டோம்.

தில்லியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிறகும், ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து எங்களுடைய தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை நீக்காவிட்டால், ஒரு லட்சம் பேர் இஸ்லாத்துக்கு மாறுவதைத் தவிர வேறுவழியில்லை.

தமிழகத்தில் பல இடங்-களில் ஜாதிக் கலவரத்திற்கு கிருஷ்ணசாமிதான் காரணமாக உள்ளார், மதுரை உத்தம-புரத்தில் நடந்த கலவரத்தில் சுரேஷ் என்ற வாலிபர் துப்பாக்கிச் சூட்டில் இறந்து போனார். மாஞ்சோலை பிரச்னைக்காக கிருஷ்ணசாமி நடத்திய ஊர்வலத்தில், 17 பேர் இறந்து போயினர். அங்கு ஏற்பட்ட கலவரத்தால் தலித் மக்களுக்கு என்ன லாபம்? இலங்கைத் தமிழர் பிரச்னை பற்றி எரியத் தொடங்கிய நேரம் அதனை சற்றுத் திசை திருப்பவே அந்தக் கலவரம் பயன்பட்டது.”

பாட்டி – கோணங்கித்துவம்

முந்தைய ட்வீட்ஸ்: பராக்கபுரி – தேஸித்துவம்

BJP leader Sukumaran Nambiar dies in Chennai

சுகுமாரன் நம்பியார் காலமானார்

சென்னை, ஜன. 8: பாஜக முக்கியத் தலைவர்களில் ஒருவரான எம்.என். சுகுமாரன் நம்பியார் (64) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலை மாரடைப்பால் காலமானார்.

பழம்பெரும் வில்லன் நடிகர் எம்.என். நம்பியாரின் மகனான இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பெர்க்லி ஆர்ம்ஸ்ட்ராங் கல்லூரியில் பி.பி.ஏ., எம்.பி.ஏ. பட்டமும், கலிபோர்னியாவில் உள்ள சர்வதேச உறவுகளுக்கான ஜான் ஜோஸ் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டமும் பெற்றவர்.

கராத்தே போன்ற தற்காப்பு கலைகளில் நிபுணரான இவர், இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினருக்கு தற்காப்புப் பயிற்சி அளித்துள்ளார்.

வெற்றிகரமான தொழிலதிபராக செயல்பட்ட அவர் 1980-ல் பாஜகவில் இணைந்தார்.

பரபரப்பான நடிகரின் மகனாக, பெரிய தொழிலதிபராக இருந்தபோதும் சாதாரண தொண்டராக கட்சிப் பணியில் ஈடுபட்டார். தனது உழைப்பால் அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களின் நன்மதிப்பை பெற்றார். பாஜகவில் அறிஞர் அணித் தலைவர், அகில இந்தியப் பொருளாளர் போன்ற பொறுப்புகளை வகித்த அவர், 2010 முதல் அகில இந்திய செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.

மத்திய அமைச்சராக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் மரணமடைந்ததைத் தொடர்ந்து 2001-ல் நடைபெற்ற திருச்சி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 2004 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

2004-க்குப் பிறகு கட்சிப் பணியைவிட சமுதாயப் பணியில் அதிக ஆர்வம் காட்டினார்.

சுவாமி தயானந்த சரஸ்வதியால் தொடங்கப்பட்ட தர்ம ரக்ஷண சமிதி என்ற அமைப்பின் பொறுப்பாளராக ஆன்மிக, சேவைப் பணியில் ஈடுபட்டார்.

உலக கலாசார இணக்க மையம் (ஜி.எப்.சி.எச்.) என்ற அமைப்பின் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக இந்து ஆன்மிக, சேவை கண்காட்சியை சென்னையில் நடத்தினார். சென்னையில் சனிக்கிழமை (ஜன. 7) பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் திருச்சியில் ஏப்ரல் 27, 28 தேதிகளில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டுக் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது திடீர் மரணம் பாஜக தலைவர்களையும், தொண்டர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பரான இவர், 1999, 2004-ல் அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட முக்கிய காரணமாக இருந்தார்.

திங்கள்கிழமை காலை 10 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும். பாஜக தலைவர் நிதின் கட்கரி, வெங்கய்ய நாயுடு, இல. கணேசன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளனர்.

சுகுமாரன் நம்பியாரின் மறைவை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

அளிப்பான் அந்தரங்கம்: எப்பொருள் – மெய்ப்பொருள் – உட்பொருள்

கட்டுரை அசலாக வெளிவந்த சொல்வனம்.காம் தளத்திற்கு நன்றிகளுடன்

ஐஐடியிலும் ஐஐஎம்மிலும் நான்கு வருடம் படித்து தேறி வருபவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்வது ஒரு ரகம். பிளஸ் டூ முடித்தவர்களை அப்படியே அள்ளிக் கொண்டு போய், தனக்கு வேண்டியதை மட்டும் சொல்லிக் கொடுத்து, வியாபர நுணுக்கத்தின் தேவைக்கு ஏற்றவாறு பாடங்களை வடிவமைத்து, அனுபவமும் இரண்டு சொட்டு சேர்த்து, தன் நிறுவனத்தின் நெளிவு சுளிவுக்கேற்ப வளைய வைத்து வார்ப்பெடுப்பது இன்னொரு கலை.

ஐபிஎம் (IBM), எச்.பி. (HP), டெல் எல்லாம் முதல் ரகம். அமேசானும் ஃபேஸ்புக்கும் முன்னேறும் இரண்டாவது ரகம்.

முதல் ரகத்தில் நம்பகத்தன்மை இருக்கும். கடுமையான பரீட்சைகளுக்குப் பிறகு தேர்வாகி வெளியில் வந்தவற்றையே நாம் வாங்குகிறோம். ஃபேஸ்புக்கிலோ ஒரு தடவை ஸ்டேட்டஸ் அப்டேட் போட்டுப் பார்ப்போம். இரண்டு நிமிடம் கழித்தும் அது தோன்றாவிட்டால், அதையே மீண்டும் போடுவோம். இரண்டு தடவை வந்தால் கூட பரவாயில்லை.

ஆனால், எச்.பி.க்களை பெருவிலை கொடுத்து வாங்கிப் போடும் வங்கிகளில் இந்த மாதிரி இரண்டு தடவை வரவு கழித்தலோ பற்று கூட்டலோ கூடவே கூடாது. தரம் இங்கே அதிமுக்கியம்.

முதலாம் ரக ஐபிஎம்-களில் முஸ்தீபுகள் அதிகம். முதலீட்டு செலவு நிறைய ஆகும். பரிசோதனை எல்லாம் செய்யாமல், முன் வைத்த காலை பின் வைக்காமல் நுழைய வேண்டும். நேற்று ஆர்குட்; இன்றைக்கு கூகிள் பிளஸ்; நாளைக்கு கிரோம் என்று மாறும் தட்பவெப்பத்திற்கேற்ப ஆய்வகமாக, இரண்டாவது ரகம் இயங்குகிறது.

அயலாக்கம் x கிளைத் துவக்கம்

1990களின் இறுதியில் அமெரிக்க நிறுவனங்கள் அவுட்சோர்சிங்கைக் கண்டு பயப்படாமல் களத்தில் குதித்த காலம். அதுவரை “இந்தா பிடிச்சுக்கோ! இருநூறு டாலரோ… முன்னூறு டாலரோ!” என்று கணக்கு பார்க்காமல் இன்ஃபோசிஸ்களுக்கும் விப்ரோகளுக்கும் டி.சி.எஸ்.களுக்கும் அள்ளி விட்டுக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச காலம் சென்றபின் “இதே வேலையை உங்க நாட்டில் போய் செய்தால், இரண்டு சதவீதம் தள்ளுபடி கிடைக்குமா?” என்று பேரம் பேசினார்கள்.

புது நூற்றாண்டு பிறப்பதற்கு முன் பழைய உத்தி, தூசி தட்டப்பட்டு மறு வாழ்வு கண்டது. அன்று பருத்தி ஆலை ஏற்றுமதி; காலணித் தொழிற்சாலைகளை சீனாவிலும் தெற்காசியாவிலும் துவங்குதல்.

இப்பொழுது கணினி நிபுணர்களுக்காக இந்தியாவிலேயே கிளை தொடங்குதல். பெரு நிறுவனங்கள், தொழில் நுட்ப முதலாளிகள் என்று எந்த வட்டத்திற்குள்ளும் அடங்காமல், அனைத்து மேற்கத்திய பிரகிருதிகளும், இந்தியாவில் கணினி நிபுணர்களைக் கொண்டிருக்கிறார்கள்.

இடைத்தரகர் வேண்டாம்; காண்ட்ராக்டர்களை, மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்த வேண்டாம்; பொட்டி தட்டுபவர்களும் விட்டேத்தியாக இல்லாமல், பொறுப்பாக இருப்பார்கள்.

நிரலி எழுதுபவர்களிடமே இந்தப் பரிவு என்றால்…

இப்பொழுது அந்த நிரலிகளை இயக்கும் சர்வர் என்றழைக்கப்படும் அளிப்பான்கள்களுக்கும் – முழு வடிவமைப்பும் உள்கட்டுமானமும் கொண்டு இயங்க நினைக்கிறார்கள்.

முதலீடு முடக்கம் x சில்லறை வணிகம்

ஆயிரம் ஹெக்டேருக்கு அரிசியும் பணப்பயிரும் விதைப்பார்கள். இப்பொழுது ஆப்பிள் போடுகிறார்கள். ஐபோன், ஐபேட் பயனர்களுக்கு ஐக்ளௌட் (மேலும் வாசிக்க: http://solvanam.com/?p=14812) தருகிறது ஆப்பிள். நமது புகைப்படங்கள், விழியங்கள், டாரெண்ட்டில் தரவிறக்கிய திரைப்படங்கள் எல்லாவற்றையும் இணையத்தில் சேமித்து வைக்கலாம்.

ஆப்பிள் மட்டுமல்ல… மைக்ரோசாப்ட், அமேசான், கூகிள் போன்றோர், என்னைப் போன்ற நுகர்வோருக்கு இந்த வசதியை செய்து தருகிறது. என்னை வேலைக்கு வைத்திருக்கும் பெரு நிறுவனங்களுக்கு இதே வசதியை அதே நிறுவனங்களும் ராக்ஸ்பேஸ், சேல்ஸ்ஃபோர்ஸ் போன்றோரும் சினிமாஸ்கோப் முப்பரிமாண பிரும்மாண்டமாக இயக்குகிறார்கள்.

இதில் என்ன வசதி?

அ) ‘வை திஸ் கொலவெறி டீ’ வெளியாகும் சமயத்தில் திடீரென்று அளிப்பான்களின் தேவை அதிகமாகிறது. உடனடியாக, விநாடிகளில் அளிப்பான்களைக் கூட்டலாம்; குறைக்கலாம்.

ஆ) புதிதாக வெளியிடும் நிரலிகளை, சோதித்துப் பார்க்கலாம்.

இ) பத்தாயிரக் கணக்கில் செலவு செய்யும் முதலீடு கிடையாது. பத்து டாலர் தள்ளினால் போதுமானது. அதிவிரைவு அளிப்பான்கள், ஆயிரம் கொடுப்பார்கள். சிறுவணிகர்களுக்கு கந்து வட்டியில் கணினிகள் வாங்கும் நிலையை விட்டு விடுதலை.

மேகம் – கிளவுட்

2000-ம் ஆண்டு வருகிறது… y2k என்று ஓடினார்கள்; அவுட்சோர்சிங் செய்தால் மட்டுமே சேமிக்க முடியும் என்று ஓடினார்கள்; எல்லோரும் செல்பேசி கொண்டே இயங்குகிறார்கள் என்று ஐபோன் அப்ளிகேஷனுக்கு ஓடினார்கள்.

இன்றைய தாரக மந்திரம் – கிளவுட்.

விண்டோஸ் கொண்ட கணினி வேண்டுமா? எத்தனை வேண்டும்? எவ்வளவு நாளுக்கு வேண்டும் – மேகத்திற்கு செல்லுக.

என்னது… விண்டோஸ் எல்லாம் வேண்டாம். நூறு இண்டெல் சில்லு கொண்ட சக்தி மட்டுமே வேண்டுமா? – மேகத்திற்கு வருக.

எனக்கு தேவதர்ஷினி நாயகியாகக் கொண்ட சீரியல் பிடிக்கும். கே பாலச்சந்தர் இயக்கினால் நல்லது. ஜெயமோகனின் காடு நாவலை கதையாகக் கொண்டிருக்க வேண்டும்; ஆனால், அவரின் வசனம் இயல்பாக இருக்காது; பா ராகவனை வசனம் எழுத வையுங்கள். என்னால் இந்த வாரம் மட்டும்தான் பார்க்க முடியும். என்னிடம் கேபிள் கிடையாது. எனவே, ஐந்து நாளைக்கு மட்டும் தூர்தர்ஷனில் ஒளிபரப்புங்கள் என்று கேட்பது போல் எதை வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும், எப்பொழுது தேவையோ அப்பொழுது வாங்கிக் கொள்ள விழைகிறீர்களா – கிளவுடுக்கு வாங்க.

கொஞ்சம் சீரியசாகக் கணக்குப் போட்டுப் பார்க்க விரும்புபவர்களுக்கு: http://spreadsheets.google.com/ccc?key=0AgWfa8v6EGzjdElXQVFzU1plSXdEQmVHZ3M5YjlsNVE&hl=en&authkey=CM_RzL0E

நீங்கள் மாதத்திற்கொருமுறை மதுரையில் இருந்து சென்னை சென்று வருகிறீர்கள். அதற்காக பேருந்தை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனால், தினசரி திண்டுக்கல் வரை போய் வந்தால், டூ வீலராவது சொந்தமாக வைத்துக் கொள்வோம்.

அன்றாடம் ஏதாவது பயன் இருக்குமா? – வாங்கிப் போடு.
என்றாவது எதற்காவது மட்டுமே உபயோகமா? – வாடகைக்கு எடு.

எச்.பி.யிடத்திலும் ஐ.பி.எம்.மிடத்திலும் எங்களுக்கு இந்த மாதிரி தேவை. இதற்கு ஏற்ற மாதிரி வண்டி செய்து கொடு என்று கேட்டு கேட்டு, அலுத்துப் போன ஃபேஸ்புக், அமேசான்கள், தாங்களே டாட்டா நானோக்களை வடிவமைத்ததுடன், அவற்றை வாடகைக்கும் விடுகிறார்கள்.

கலிபோர்னியா பக்கம் அளிப்பான்களின் பலு அதிகரிக்கிறதா? பலு அதிகரித்தால் அளிப்பான்களின் உஷ்ணம் உச்சத்தை அடையும். உஷ்ணம் அதிகரித்தால், குளிரூட்டிகளின் வேலையும் அதிகரிக்கும். குளிரூட்டிகளினால், மின்கட்டணமும் எகிறும்.

அளிப்பான் அறையில் கிட்டத்தட்ட ஒரு டிகிரி பாரன்ஹீட் ஏறினால், மின்கட்டணத்தில் நான்கு சதவிகிதம் ஜாஸ்தி கட்டவேண்டிய நிலை. அதற்கு பதிலாக, அளிப்பான்களின் வேலையை இன்னொரு ஊருக்கு திசை திருப்பி அனுப்பி வைக்கும் நுட்பத்தை கூகிள் கையாள்கிறது.

சாதாரணமாக பக்கத்து ஊருக்குப் போ; அங்கே இருக்கும் அளிப்பான்கள் மூலமாக தகவல் அனுப்பு. ஆனால், பக்கத்து ஊர் அளிப்பான் அறையில் வெப்பம் ஏறி விட்டதா? கொஞ்சம் தள்ளிப் போய், அடுத்த கட்ட அளிப்பானிடமிருந்து தகவல் பெற்றுக் கொள்.

இரண்டு லட்சம் வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை கூகிள் மட்டுமே பயன்படுத்துகிறது. இந்த நுட்பத்தினால் மட்டும் பில்லியன் கணக்கில் மின்கட்டணம் குறைகிறது.

தொடர்பான விழியம்:

முகப்புத்தகம் x கூகிள்

கணினி என்று எடுத்துக் கொண்டால்…

அதற்குள்ளே இண்டெல் அல்லது ஏ.எம்.டி. (AMD) சில்லுகள்; அவற்றிற்கு ஊட்டம் கொடுக்க கிராஃபிக்ஸ் கார்டுகள்; அதை இயக்க, சக்தி கொடுக்கும் மின்விசை அளிப்பு; இவற்றை எல்லாம் காற்றோட்டமான பெட்டியில் அடைக்கும் அடிச்சட்டம்; அதை அடுக்கு அடுக்காக கட்டு கட்டாக வரிசைப்படுத்தும் வடிவமைப்பு; இதற்கான மின்சார திட்டம்; குளிர்காலத்தில் வெப்பமும், கோடை காலத்தில் குளிரூட்டமும் தரும் சூழல்; மின்கட்டணம் எகிறாத கட்டிடக் கலை ஆக்கம்.

இவையனைத்தும் தொலைதூரத்தில் இருந்து நிர்வகிக்கும் வல்லமை; தொல்லை தராமல் கூட்டவும் குறைக்கவும் மாற்றவும் முடியும் திறமை.

இவ்வளவு நுட்பங்களையும் பொதுவில் வைத்திருக்கிறது ஃபேஸ்புக். (மேலும்: http://opencompute.org/)

சாதாரணமாக இந்த மாதிரி முன்னோடி பொறியியல் சமாச்சாரங்களை கூகிள் பகிரும்; மைக்ரோசாஃப்ட் கட்டிக் காக்கும். ஆனால், மைக்ரோசாஃப்ட் கூட தங்கள் மேக (அசூர்: http://www.theregister.co.uk/2009/09/25/microsoft_chillerless_data_center/) தரவு மையங்களுக்கான விவரங்களை வெளிக்காட்டுகிறது.

சர்வருக்கேற்ற மென்பொருளா? மென்பொருளுக்கேற்ற சர்வரா?

சரவண பவனுக்கு சென்றால் சகலமும் கிடைக்கும். கொஞ்சமாய் பசிக்கிறதா? மதியம் இரண்டு மணிக்குக் கூட இட்லி சாப்பிடலாம். இன்னும் கொஞ்சம் பசியா? மினி மீல்ஸ் கிடைக்கும். அகோறப் பசியா? அன்லிமிட்டட் சாப்பாடு உண்ணலாம்.

ஆனால், பக்கத்து சந்தில் மாமி மெஸ் இருக்கிறது. திங்கள் கிழமை என்றால் தோசையும் சட்னியும் சாம்பாரும் மட்டுமே கிடைக்கும்; செவ்வாய் போனால் சப்பாத்தி + தால். வெரைட்டி இல்லாவிட்டாலும், மாமி மெஸ் ருசியே தனி.

முதல் பாணியில், சரவண பவன் போல் சகல வசதிகளுடனும் எச்.பி., டெல் போன்ற வணிகர்கள் சர்வர் கொடுக்கிறார்கள். இட்லிக்கும் அதே சாம்பார்; சாதத்திற்கும் அதே சாம்பார் என்பது மாதிரி விண்டோஸ் ஆஃபீஸ் இயக்குவதற்கும் அதே சர்வர்; ஆரக்கிள் டேட்டாபேஸ் இயக்குவதற்கும் அதே சர்வர்; ஆங்ரி பேர்ட்ஸ் விளையாடுவதற்கும் அதே சர்வர்.

வீட்டு சாப்பாடு மாதிரி தினம் தினம் மாறும் வேண்டுதலுக்கேற்ப, ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஸ்பெஷலாக செய்து தரும் சர்வர் நுட்பத்தை ஃபேஸ்புக் விரும்புகிறது.

என்னுடைய நண்பர்களின் ஸ்டேட்டஸ் எனக்குத் தெரிய வேண்டும். கடைசியாகப் பார்த்த இடத்தில் இருந்து பார்க்கக் கிடைத்தால் போதுமானது. பத்து மாதங்களுக்கு முன்பு ஜூலையில் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதை பெரும்பாலும் தினசரி தேடிக் கொண்டிருக்க மாட்டேன். நேற்று என்ன நடந்தது என்பது க்விக்காக திரையில் தோன்ற வேண்டும். பழையதைத் தேடி வினவினால், பொறுமையாகக் காத்திருக்கும் தயார் நிலையில் இருப்பேன்.

எச்.பி., டெல் ஆகியோர் நேற்றைய விஷயத்தைத் தேடினாலும் அதே நேரம்; பத்து வருஷம் ஆகிப் போனதை விசாரித்தாலும் ஒரே நேரம் என்று கட் அண்ட் ரைட்டாக பேசுகிறார்கள். ஃபேஸ்புக்கிற்கும் கூகிளுக்கும் இது தோதுப்படவில்லை. தாங்களே சமைத்து, அதற்கான ரெசிப்பியையும் உலகுக்கு ஓதுகிறார்கள்.

பங்குச்சந்தையில் ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்கிற்கு இது ஐ.பி.ஓ. எனப்படும் (மேலும்: http://online.wsj.com/article/SB10001424052970203935604577066773790883672.html) பங்குச்சந்தையை நாடும் காலம். அதற்காக பல அஸ்திரங்கள். ஒரு புறம் வாடிக்கையாளர் எண்ணிக்கை பலத்தைக் காட்டுகிறது. இன்னொரு புறம் அந்த வாடிக்கையாளர், எத்தனை மணி நேரம் ஃபேஸ்புக்கிலேயே கட்டுண்டு கிடக்கிறார் என்று புள்ளிவிவரம் திரட்டுகிறது. அதே சமயம், இது தவிர எங்களிடம் நில புலம் போன்ற அளிப்பான் – கடல் போல் அசையா சொத்தாக குவிந்து கிடக்கிறது என்பதையும் முன்வைத்து, முதலீடு கோருகிறது.

அது சரி… இத்தனை அளிப்பான்கள் எதற்கு தேவை?

இன்றைக்கு எல்லோரும் பேஸ்புக்கை நாடுகிறோம். பாமாயில் கொடுக்கும் ரேஷன் கடை க்யூவாக, பேஸ்புக்கில் புதிதாக என்ன கருத்து வந்திருக்கிறது, எங்கே குழு அமைகிறது என்று பழியாய் கிடக்கிறோம். ஆனால், நாளைக்கே கூகிள் பிளஸ் என்று வேறு எங்காவது சென்று விட்டால்?

அந்தக் காலத்தில், உங்களில் பழைய தகவல், அப்பொழுது வலையேற்றிய நிழற்படங்கள், உளறிய கருத்துகள், விரும்பிய லைக் தொகுப்புகள் எல்லாவற்றையும் பத்திரமாக சேமித்து வைத்து, விளம்பரதாரர்களிடம் விற்க நினைக்கிறது ஃபேஸ்புக்.

750 மில்லியன் வாடிக்கையாளர்களின் நுணுக்கமான விவரங்கள், காலங்காலமாக ஒருங்கிணைக்கத்தான் இத்தனை அளிப்பான்கள்.

ரகசிய அளிப்பான் x திறமூல கணினி

ஃபேஸ்புக்கிற்கு தேவையான மென்பொருளை ஃபேஸ்புக் எழுதிக்கொள்கிறது. அப்படியானால், பேஸ்புக்கிற்கு தேவையான வன்பொருளை மட்டும், ஏன் ஐ.பி.எம்.மும், ஆரக்கிளும், எச்.பி.யும், டெல்லும் செய்துதர வேண்டும்?

தாங்கள் எழுதும் மென்பொருளுக்கு ஏற்ற வன்பொருள் வழங்கியை வடிவமைக்க விரும்புகிறார்கள். வன்பொருள் நிறுவனங்களான டெல், எச்.பி. போன்றோர், பொதுவான வழங்கிகளையே தயார் செய்கிறார்கள்.

ஒரே அளவில் அனைத்து உள்ளாடைகளையும் தயார் செய்து, சீனாக்காரரிடமும் கொடுக்கிறார்கள்; அமெரிக்காவின் போஷாக்கானவர்களிடமும் கொடுக்கிறார்கள். எப்படி பொருந்தும்?

2004களிலேயே இந்தப் பிரச்சினைகளை கூகிள் எதிர்கொண்டது. வண்ணமயமாக, விருப்பத்திற்கேற்ப, பயன்பாட்டுகேற்ப, வன்பொருள் வளைந்து கொடுக்க வடிவமைக்க ஆள் போட்டார்கள். தாய்வானுக்கும் தாய்லாந்துக்கும் ஆளனுப்பி சி.பி.யூ முதல் மதர்போர்டு வரை கொள்முதல் விலையில் சல்லிசாக வாங்கினார்கள்.

அமெரிக்காவில் ஆயிரமாயிரம் ஏக்கர் நிலம் வாங்கி, வழங்கிப்பண்ணைகளுக்கு கூகிள் கால்கோள் இட்டது.

அண்ணன் எவ்வழி; பேஸ்புக் அவ்வழி என்று அளிப்பான்-பண்ணைகளை, இப்பொழுது ஃபேஸ்புக்கும் துவங்கி இருக்கிறது.

தங்களின் சிட்டிவில், ஃபார்ம்வில், ஜாம்பிலாண்ட் போன்ற விளையாட்டுகளுக்கான நுட்பத்திற்கேற்ற கணினி வடிவமைப்பு; ஐபோனில் முகப்புத்தகம் தெரிவதற்கான சிற்ப்பு வழங்கி வடிவமைப்பு; செய்தியோடை மற்றும் மாற்றுத் தளங்களில் பகிர்வதற்கான அளிப்பான் வடிவமைப்பு என்று செயல்பாட்டுகேற்ப மாற்றியமைத்து தெரிவு செய்கிறார்கள்.

இவற்றையெல்லாம் கூகிள் போல் கமுக்கமாக வைக்காமல், பகிரங்கமாக படம் போட்டு விளக்குகிறார்கள். எழும் பிரச்சினைகளை பிரசங்கம் செய்கிறார்கள். நாலு பேர் எட்டு விதமாக தீர்வு கொடுக்கிறார்கள். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, அடுத்த தலைமுறைக்கான வழங்கிநுட்பத்தை மேம்படுத்துகிறார்கள்.

அப்படியானால், எச்.பி., டெல் போன்ற கணினி வன்பொருள் நிறுவனங்களின் கதி? அவர்களும் இதே போன்ற வழங்கி நுட்பத்திற்கு மாறலாம்; மேகதூதராக கிளவுட் கம்ப்யூட்டிங்கில் இறங்கலாம்.

ஃபேஸ்புக் அடிபற்றி, ஈ-பே, நெட்ஃப்ளிக்ஸ், சீனாவின் பைடூ, மொசில்லா எல்லாரும் இந்தப் பாதையில் காலடி வைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இன்னும் கூட உங்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லையா?

அமெரிக்க வீட்டுச்சந்தை வீழும் என்றும் மனை விற்பகத்திற்கான கடன் ஏமாற்றப்படும் என்றும் ஆருடம் சொல்லி, அந்த ஆருடத்தின் மீது ஊகச் சந்தையில் பந்தயம் கட்டிச் சூதாடி பெரும்பணமும் ஈட்டிய கோல்ட்மன் சாக்ஸ் இந்த ஓபன் கம்ப்யூட் – திறமூல வழங்கி நுட்பத்தில் பிரதான இயக்குநராக சேர்ந்துள்ளது போதாதா?

இணையத்தில் திருடுவதும் அதைத் தடுப்பதற்குமான சட்டம் குறித்து சமீபத்தில் வாசித்த சுவாரசியமான கட்டுரை: சங்கைப் பிடிக்கும் சோபா (SOPA)