தேவதச்சன் கவிதை – உயிர்மை


வானவில்கள்

அது
நிறங்கள் அடர்த்தியாகிக்
கொண்டுவரும் வானவில். என்
வீட்டின்மேல் அழகாய் வட்டமிடத்
தொடங்கியது
“எவ்வளவு பெரிய வில். உள்ளே
வந்தால் வீடு
உடந்துவிடும்தானே” என்கிறார்கள்
உறவினர்கள்
“வில்லும் உடைந்துதானே
போகும்” என்கிறார்கள்
நண்பர்கள்
கண்ணில் வழிந்தோடு
குமிழிகளில்
தானே வளர்கிறது
சப்தத்தைக் கடந்த அன்பில் வில்
தோன்றித் தோன்றி மறையும் சாலைகளாக
வளைந்திருக்கும்
வானவில்லுக்குள்ளே
இருக்கிறது என் ஊர்.
ஊருக்குள்ளே இருக்கிறது
என் வீடு,
எப்போதும்
கதவுகள் மூடியிருக்கும்
என் சின்னஞ்சிறிய வீடு

கல் எறிதல்
ஆளாளுக்கு கல் எடுத்து
எறிந்தனர். என் கையிலும்
ஒன்றைத் திணித்தனர்

உள்ளங்கையை விரித்து
மலைத்தொடர் வடிவத்தில்
இருந்த கல்லைப் பார்த்தேன்

உற்று நோக்கினேன்
உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். ஓசையற்று
மலைத்தொடர் மறைந்தது

வெறுங்கையை வேகமாக
வீசினேன்.
விடைபெறும் முகமாகவும்
என்னையும்
தூக்கிச் செல்லேன் என்று
இறைஞ்சும் விதமாகவும்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.