Tag Archives: Obama

அடுத்தாத்து ஆல்பர்ட் – மூக்கு சுந்தர்

* ஒபாமாவுக்கு கருத்துக்கணிப்பில் இருக்கும் இதே அளவு செல்வாக்கு வேறு ஒரு வெள்ளை இனத்து ஜனநாயகக்கட்சி அதிபர் வேட்பாளருக்கு இருந்திருந்தால் தேர்தல் முடிந்தது என்று பலகாலம் முன்னரே முடிவுகட்டி இருப்பார்ர்கள். மெக்கெய்ன் ஆதரவாளர்கள் இன்னமும் துள்ளிக் கொண்டு இருப்பதற்கும், நம்பிக்கை இழக்காமல் பேசிக்கொண்டிருப்பதற்கும் ஒபாமவின் இன அடையாளமே காரணம்.

* இந்தத் தேர்தலில் கட்சி சார்புள்ளவர்களை விட கட்சி சார்பற்றவர்களே முடிவை தீர்மானிக்கும் காரணிகளாகிறார்கள். அடுத்ததாக இளைய தலைமுறையினர் மற்றும் – முதன் முறை ஓட்டளிப்பவர்கள்

* 2000 ம் வருடத் தேர்தலில் மெகெயின் குடியரசுக் கட்சி வேட்பாளாராக முன்மொழியப்பட்டிருந்தால் எதிர்த்த எந்த ஜனநாயகக்கட்சி வேட்பாளரையும் கபளீகரம் செய்திருக்கும் அளவிற்கு தனிப்பட்ட செல்வாக்கு உடையவர்.

தவறான நேரத்தில் முன்மொழியப்பட்டிருக்கும் சரியான நபர் அவர். பாவம்.. !!

* ஒபாமா லேசுப்பட்ட ஆள் அல்ல. அட்டகாசமான EQ உள்ள பக்கா அரசியல்வாதி. அவருடைய நிர்வாகத்திறமை என்ன என்பதை காலம்தான் சொல்லும். தெரியாத பிசாசே மேல் என்று எடுக்கப்படும் முடிவே அவர் பெறப்போகும் அதிபர் பதவி.

* காலகாலமாக போரில் அசகாயம் புரிந்தவர்களை அரியணை ஏற்றும் நாடு அமெரிக்கா. பனிப்போருக்கு முந்தைய அமெரிக்க அரசின் ராணுவ நடவடிக்கைகளுடன் எச்சரிக்கை கலந்த செயல்பாடுகளும் இருந்தன. காரணம் சோவியத் அரசு. ஆனால் பனிப்போருக்கு பிந்தைய, ருஷ்யா சிதறுண்ட பிறகான காலகட்டத்திற்கு பிறகு, ராணுவ நடவடிக்கைகள் கேட்பார் இல்லை என்ற காரணத்தால் மிகுந்த அராஜகமான முறையில் மேற்கொள்ளப்பட்டன. இந் நிலையில் அமெரிக்க அதிபர், போரில் முனைப்பில்லாத/ விருப்பமில்லாத பேச்சு வார்த்தையில் அதிக நம்பிக்கை உள்ள ஒரு Diplomat ஆக இருப்பது அவசியமாகிறது.இந்த வட்டத்துக்குள் அட்டகாசமாக பொருந்தும் முகம் ஒபாமாவுக்கு

* எட்டுவருட புஷ் அரசின் தோல்வி அடைந்த பிடிவாத முகத்தை உலக அரங்கில் மாற்ற, மழுப்பலும் பசப்பலும் மிக்க அரசியல் முகம் தேவைப்படுகிறது. இதே முகம் உள்நாட்டு குழப்பங்களையும் சீர்செய்தால் வரலாறு படைக்கும் – கருப்பினத்தின் முதல் அதிபர் என்ற வரலாற்று மாற்றத்தோடு மெற்சொன்னதும் சேரும். ஆனால் ஒபாமாவினால் கருப்பர்களது இனரீதியிலான எண்ணங்களில் ஏற்படும் திருப்தி அளவுக்கு, அவர்களுக்கு ஆதரவான அவரது செயல்பாடுகளினால் வராது. கூடியவரை தன்னைப் பொதுவான அதிபராக காட்டிக் கொள்ள முயல்வதே நல்லது என்கிற இன்றைய அவரது என்ணம் பின்னும் தொடரும்

* சமயங்களில் சர்ச் பிரசங்கம் போல அமைந்துவிடும் ஒபாமாவின் உரை, மெகெயின் உடனான வாதப் பிரதிவாதங்களில் அடக்கமாக, கொஞ்சம் அலுப்பாகக் கூட இருந்தது. தான் ஒன்றும் பேசாமல் இருந்தாலே போதும், சர்ச்சைகளை தவிர்க்கலாம். உணர்ச்சிவசப்படுகிற , அங்க சேஷ்டைகளில் முகம் சுளிக்க வைக்கிற பெரியவர் பார்ப்பவர்களின் அதிருப்தியை சம்பாதிக்கும் வேலையை தானே பார்த்துக் கொள்வார் என்று அவர் நினைத்து இருக்கலாம். மொத்தத்தில் மூன்று டிபேட்டிலும் மெகெயின் தொற்றார். ஒபாமா அவரை ஜெயிக்கவில்லை.

* ஒபாமாவின் இனம், மதம், அவர் தொடர்புகள், அவருடைய அனுபவம், சம்பத்தப்பட்ட மெகெயின் கேள்விகள் எல்லாமே நெகடிவ் ஆயுதங்கள் என்று மீடியாவால் நிராகரிக்கப்பட்டதற்கு காலமே காரணம்.

மீடியாவின் செல்லப்பிள்ளைகளை மக்கள் நிராகரித்ததாக சரித்திரமே இல்லை- இத்துடன் அபரிமிதமான தேர்தல் நிதியும் சேர்ந்து விட ஒபாமாவின் தேர்தல் விளம்பர முயற்சிகள் வரலாறு காணாத வெற்றி – சம்யங்களில் திமுகவை ஞாபகப்படுத்துகிற தொண்டர் கட்டுமானம்.

* உள்ளூரில் திமுக/ அதிமுக போன்ற ப்ழுத்த பழங்களின் அமைப்புக்கு எதிராக விஜயகாந்துக்கு சாமரம் வீசும் நண்பர்கள் நியாயமாக சித்தாந்த ரீதியாக அதே எண்ண ஓட்டத்தின்படி புதியமுகமான பாரக்கிற்கு ஆதரவு அளித்திருக்க வேண்டும். என்னே அதிசயம். அவர்கள் ஆதரவு மெகெயினுக்குத்தான்.

விஜயகாந்துக்கு ஆதரவு அளிப்பது மு.க.வை எதிர்க்கவே என்பதும், . மெகெயினுக்கு ஆதரவு அளிப்பது லிபரலான ஒபாமாவை எதிர்க்கவே என்பதும் இந்த வலதுசாரி சிந்தனையாளர்களின் உலகளாவிய பார்வையாக இருக்கக்கூடும்.

* அதிகாரம் கைக்கு வந்தபிறகுதான் நிஜ ஒபாமா வெளிவருவார். அப்படி வராமல் போவது நம் அதிர்ஷ்டம் அல்லது என்னைப் பொன்றவர்களின் அபரிமிதமான எச்சரிக்கைக்கு தேவை இல்லாத உண்மையான நல்ல மனிதர் ஒபாமா.

* நவம்பர் நாலுக்காக உலகம் காத்திருக்கிறது. அமெரிக்கா ஒபாமாவுக்கு மகுடம் சூடினால் அது “வெள்ளை இனத்தவர்கள் இன அழுக்குகள் இல்லாது காலத்திற்கு தேவைப்பட்ட முடிவை எடுத்தார்கள்” என்பதற்காக உலகமே மனந்திறந்து அமெரிக்கர்களை தலையில் துக்கி வைத்து வைத்துக் கொண்டாடும் நாளாகி விடும்

பார்ப்போம்…!!!

மூக்கு சுந்தர்

இன்று இரவு மெகயின் ஏன் ஜெயிக்கக் கூடும்?

முதலில் வீடியோ பார்த்துவிடவும்: (இறுதி வரை பார்க்கவும்)

அமெரிக்காவில் ஈகோ முக்கியம். தோல்வி என்பது அகராதியில் கூடாது. இராக்கில் பின்வாங்கும் ஒபாமாவுக்கு வாக்கா? அல்லது வெற்றித் திருமகன் ஜான் மெகயினா?

போரில் சிறைபிடிக்கப்பட்டாலும் உள்ளந்தளராத உத்தமர் மெகயின் என்பது முதற் காரணம்.


அடுத்த வீடியோவும் அமெரிக்கர்களின் மனவோட்டத்தை சொல்கிறது:

நீங்கள் சம்பாதிக்கும் ஓரணாவில் இருந்து அரையணாவைப் பிடுங்கி, பிச்சையெடுப்பவருக்கு தரும் ஒபாமாவுக்கு ஓட்டா? அள்ளது சோம்பேறிகளை உழைத்து சம்பாதித்து முன்னேறச் சொல்லும் ஜான் மெகயினா?

கிடைக்கிற சம்பளத்தை சுளையாக வீட்டுக்கு எடுத்துப் போக சொல்பவரா? ஈட்டிக்கடைகாரராக பாதி பிடுங்கிக் கொள்பவரா?

மெகயின் வருமான வரிவிலக்கு தருவார் என்பது இரண்டாவது காரணம்.


தொடர்புள்ள இடுகைகள்:

1. அசலாக சொன்ன பத்து காரணங்கள்: ஏன் மெகயின்?

2. அமெரிக்க தேர்தல் களம், பாஸ்கர் – உயிரோசை:

மெகைனின் திட்டத்தைப் பொறுத்த வரை கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 35% இல் இருந்து 25% குறைப்பது, புஷ் தற்காலிகமாக அறிமுகப்படுத்திய வரிக் குறைப்பை நிரந்தரமாக்குவது, முக்கியமாக அரசாங்கத்தின் செலவைக் குறைப்பது முதலானவை பிரதான அம்சங்கள். ஈராக்கில் உள்ள ராணுவத்தை இப்போதைக்கு, திரும்ப அழைக்க முடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார் மெகைன்.

அமெரிக்க தேர்தல்: வெளியுறவுக் கொள்கை

ராஜேஷ் சந்திரா:

1. இராக்: ஒபாமா வந்தாலும் உடனடியாக வாபஸ் ஆரம்பித்துவிடுமா? அங்கு நிலை எப்படி இருக்கிறது? குர்துக்கள் தனி நாடாக்கிக் கொள்வார்களா? மெகயின் அதிபரானால் ஒபாமாவின் நிலையில் இருந்து எவ்வாறு சூழல் மாறுபடும்? ஆருடம் ப்ளீஸ்!

1a) ஒபமா வந்தால் : வாபஸ் ஆரம்பிக்காது. பிரச்சாரத்தில் இதுவரை ஒபாமா தெளிவாகத் தன் நிலையை விளக்கவில்லை. விரைவில் வெளியேறுவோம் என முழங்கி தென் மாகாணங்களை அவர் இழக்கத் தயாராக இல்லை (முக்கியமாக இராணுவத் தலைமையை).

1983-ல் லெபனானை விட்டு வெளியெறுவதற்கு ஒரு குண்டு வெடிப்பு போதுமானதாக இருந்தது. இராக்கில் அது இயலாது. காரணம்: எண்ணை வளம். அருகாமையில் இரான். அமெரிக்கப் ப்டைகள் வெளியேறினால் நிச்சயம் அந்தப் பிராந்தியம் 1800-களுக்குச் செல்லும் வாய்ப்புகள் நிறைய. பிரிட்டன் இரண்டாம் உலகப் போருக்குப் பின் செய்தத் தவறை அமெரிக்கா செய்யாது. இப்பொதைக்கு அமெரிக்கா அங்கே ஆப்பசைத்தக் குரங்கு.

ஒபாமா என்ன செய்ய வேண்டும்: செனட்டில் இருப்பது வேறு, ஜனாதிபதியாக இருப்பது வேறு என்று ஒபாமாவிற்கு முதல் நாளே தெரிந்து விடும் (இதுவரை தெரியாமல் இருந்தால்). எனவே வறட்டு ‘ராம்போ’ வசனங்களை எல்லாம் மூட்டைக் கட்டி வைத்து விட்டு இராக்கிய மித வாதிகளைக் கண்டறிய வேண்டும். அவர்களை இராக் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்.

இராக் நாடு மதப்பிரிவுகளில் மிகுந்த அக்கறை காட்டும் நாடு. இதனால் அனைத்துப் பிரிவினரயும் உள்ளடக்கிய ஒரு குழு பதவியில் இல்லாமல் மக்களை அணுக வேண்டும். தேவைப்பட்டால், முக்தாதா அல் சதர் போன்ற உக்கிரமான மதத் தலைவர்களையும் அந்தக் குழுவில் இடம் பெறச் செய்யவேண்டும். வரும் வன்முறைகளுக்கு அந்த மதத் தலைவர்கள் பொறுப்பு என சுட்ட வேண்டும். இதையும் மீறி அந்த மதத் தலைவர்களின் ஆட்கள் வன்முறையில் இறங்கினால் மக்களே புறக்கணிப்பார்கள். இவை அனைத்தும் பின்புலத்தில் நடக்க வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் சதாமிற்கு ஒரு மாற்றுதானே தவிர மக்கள் இன்னும் அதை ‘வரதராஜ பெருமாள்’ அரசாகத்தான் பார்க்கிறார்கள்.

அமெரிக்க அரசாங்கம் (அரசியல் செயல்களில்) முண்ணனியில் இருப்பதாகக் காண்பித்துக் கொண்டால் பிரிவினை/தீவிர வாதிகள் நிச்சயம் விரும்பமாட்டார்கள். இதன் பின் அமெரிக்கத் துருப்புகள் விலகல் ஆரம்பித்தால் நல்லது. நிச்சயம் இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகும்.

1b) அங்குள்ள நிலை: சதாம் இருந்த வரை செய்திகள் கசிந்தன. இப்போதைய அரசில் (?!) வெளி வருகின்றன. மற்றபடி ஆட்சி முறை அப்ப்டியே தான் இருக்கிறது. ஷியா, சுன்னி பிரிவினரிடயே ‘அமெரிக்கா எப்போ ஒதுங்குவான், நம்ம அடித்துக்கொண்டு சாகலாம்’ என்று காத்திருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் ‘இதெல்லாம் இருக்கட்டும், வடக்கே குர்துக்களின் தலையை எப்படி எடுக்கலாம்’ என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றபடி, பணத்துக்கு விலை போதல், இரு குழுக்களிடையே மோதல் உண்டாக்கி குளிர் காய்தல், வருங்காலத்தைப் பற்றி யோசிக்காமல் முட்டாள்களாகவே இருத்தல் என்ற typical அராபிய ஆட்சி முறை ஜோராக நடக்கிறது.

1c) குர்துக்கள் தனிநாடு பெறுவது இராக்கை விட துருக்கியின் கைகளில் தான் இருக்கிறது. துருக்கி இராணுவம் பலமானது (மற்ற அரபு நாடுகளோடு ஒப்பிடும் போது). இவர்களை மீறி வடக்கே இராக்கில் மட்டும் குர்துக்கள் தனி நாடு பெற முடியாது. துருக்கி நேட்டோவில் இருப்பதால் மேற்கத்திய வல்லரசுகள் சும்மா முனகிவிட்டு பேசாமல் போய்விடும்.

காஷ்மீரைப் போன்றது இந்தப் பிரச்சினை.

1d) மெக்கெய்ன் அதிபரானால்: ஆரம்பத்தில் மெக்கய்னிடம் இருந்த நம்பிக்கை போகப் போக நீர்த்து விட்டது. இராக் பிரச்சினக்கு, இவர் ஆட்சிக்கு வருவதும், டிக் செய்னி வருவதும் ஒன்றுதான். இயல்பாகவே மெக்கெய்ன் இராணுவ வீரர். இவரால் விட்டுக் கொடுத்து தொலை நோக்குப் பார்வையோடு இராக் மிதவாதத் தலைவர்களை அணுக முடியாது,

2. Africom: ஆப்பிரிக்காவில் மூக்கை நுழைப்பது ஜெர்மனி/ஜப்பானில் இருக்கும் நிரந்தர அமெரிக்க படை போல் சாதுவாக சமாதானமாக அமையுமா? அல்லது சவூதியில் புகுந்த அமீனாவாக இன்னும் சில குவைத்களையும் இராக்குகளையும் குட்டி போட்டு குழப்பத்திற்கு இட்டு செல்லுமா?

மத்தியக் கிழக்கு நாடுகளில் பட்ட சூட்டில் ஆப்பிர்க்காவில் அமெரிக்கா சர்வ ஜாக்கிரதையாகத்தான் இருப்பதாகக் கருதுகிறேன் (இதைப் பற்றி சொற்பமாகப் படித்த வரையில்). சொமாலியா மற்றும் சூடான் தவிர்த்து மிகப் பெரியப் பிரச்சினை இதுவரை இல்லை. எகிப்து அமெரிக்காவின் செல்லப் பிள்ளை.

லிபியா, சதாமுக்கு நடந்த மண்டகப்படியில் அரண்டுப் போய் கிடக்கிறது. மற்ற ஆப்பிரிக்க மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளிலும் தங்கள் இனத்திலேயே அடைந்துக் கிடப்பதாலும், அமெரிக்காவைப் பற்றி கவலைக் கொள்ளவில்லை.

3. லெபனான், பாலஸ்தீனம்: சுதந்திரம், விடுதலை போன்றவை ஹெஸ்பொல்லா, ஹமாஸ் என்று மொழியாக்கப்பட்ட நிலையை அமெரிக்கா தோற்றுவித்திருக்கிறது. நல்லதா/கெட்டதா? அடுத்து எங்கே ராஜா கவிழ்ந்து மக்கள் ராச்சியம் உதிக்கும்? உதிக்க வேண்டுமா?

மாலன்: பராக் ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்…

கறுப்பின அமெரிக்கர் ஒருவர் வெள்ளை மாளிகையில் குடியேறும் வாய்ப்பினைப் பெற்றார் என்ற ஒற்றைச் சரித்திர வரி ஒரு புள்ளி விபரமாக முடிந்துவிடுமா? அல்லது அமெரிக்காவிற்கும், உலகிற்கும் கூட, தேவைப்படும் ஒரு திருப்புமுனையாக மாறுமா?

ஒபாமாவினுடைய தேர்தல் வெற்றியை கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் ஊடகங்கள், முக்கியமாக இந்திய ஊடகங்கள், சித்தரிக்க விரும்புகின்றன. அங்கீகரிக்கப்பட்ட அடிமைத்தனம், பாரபட்சம், இனத்தைத் ‘தூய்மைப்படுத்தல்’ போன்ற இழைகள் கொண்ட அமெரிக்க வராலாற்றின் பின்னணியில் பார்த்தால் ஒபாமாவின் வெற்றி சிறப்பு மிக்கதுதான்.

அமெரிக்கக் கறுப்பினத்தவர்கள் இன ஒதுக்கலை எதிர்த்து மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்கள் போராடியது ஏதோ நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பல்ல, ஒரு தலைமுறைக்கு முன்னர்தான். இன்றும் கூட சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை உலக அளவில் மிக அதிகமாக (2.3 மில்லியன்) இருக்கும் நாடு அமெரிக்கா; அதில் 40 சதவீதம் பேர் கறுப்பினத்தவர்கள்.

ஆனால் ஒபாமாவின் வெற்றி முற்றிலும் இன ரீதியாக ஈட்டிய வெற்றியல்ல. அது ஒரு வகையில் அமெரிக்க நடுத்தர வர்கத்தின் ஆசைகள் விழைவுகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக அமைந்த வெற்றி. அதிபரை மையமாகக் கொண்ட அமெரிக்க அரசிய்ல் அமைப்பு பெருமள்விற்கு அங்குள்ள வணிக நிறுவனங்களின் பொருளுதவியைச் சார்ந்த அரசிய்ல் அமைப்பு. Corporate Funded) என்பது உலகறிந்த ரகசியம்.

இந்தப் பின்னணியில் மத்தியதர வர்க்கத்தின் குரலில் பேசும் ஒபாமாவின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் காரணமாகவே அதிபர் ஒபாமாவின் முன் நிற்கும் சவால்கள் வேட்பாளர் ஒபாமாவின் முன்னிருந்த சவாலகளைவிடக் கடுமையானவை. அவரே அவரது பிராசரத்தின் போது சொன்னதைப் போல, புஷ் இருந்த இடத்தில் ஒரு ஜனநாயகக் கட்சி வேட்பாளரை அமர்த்திவிடுவதன் மூலம் மட்டுமே தேவையான மாற்றங்களை ஏற்படுத்திவிடமுடியாது.

“உலகமயமான பொருளாதாரத்தில் சிலர் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு வளம் அடைந்திருக்கும் அதே வேளையில் மத்திய வர்க்க அமெரிக்கர்களது, மத்தியவர்க்கத்தை எட்டிவிட வேண்டும் எனக் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பவர்களது அமெரிக்கக் கனவு மேலும் மேலும் நழுவிப் போய்க் கொண்டிருக்கிறது” (“While some have prospered beyond imagination in this global economy, middle-class Americans — as well as those working hard to become middle class — are seeing the American dream slip further and further away,”) இவை அயோவா மாநிலத்தில் பிரசராத்தின் போது ஒபாமா சொன்ன வார்த்தைகள்.

ஒரு நிலைக்கு மேல் வளர்ச்சி அடையமுடியாமல் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் நடுத்தர வர்க்கத்தின் இந்த யதார்த்தத்தை ஒபாமா நன்றாக அறிந்திருக்கிறார். இதற்கான தீர்வு என்ன என்பதையும் அவர் சிந்தித்திருக்கிறார்:

இந்த “முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கும் வணிக நிறுவனத் தரகர்களுக்கு எதிராக நாம் எழாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை.மக்கள் எதைக் கேட்கவிரும்புகிறார்களோ அதை அல்ல, அவர்கள் என்ன அறிந்து கொள்ள வேண்டுமோ அதைச் சொல்கிற தலைமை ஏற்படாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை.” (“We’re not going to reclaim that dream unless we stand up to the corporate lobbyists that have stood in the way of progress. Unless we have leadership that doesn’t just tell people what they want to hear but tells everyone what they need to know.”)

இன்று அமெரிக்கப் பொருளாதாரம் இருக்கும் நிலையில் ஓபாமாவால் ‘ முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கும் வணிக நிறுவனத் தரகர்களு’க்கு எதிராக எவ்வளவு தூரம் ஓபாமாவால் செயல்பட முடியும்?அப்படி செயல்பட ஆரம்பித்தால் அவரால் எத்தனை நாளைக்குத் தாக்குப் பிடிக்க முடியும்? முதலீட்டை முதன்மையாகக் கொண்ட (Captalist) பொருளாதார அமைப்பில் ‘கார்ப்போரேட்’களை எதிர்த்து – எதிர்க்கக் கூட் வேண்டாம், புறக்கணித்து விட்டு- செயல்படுவது சாத்தியமா? சாத்தியமில்லை என்றால், ‘கை நழுவிப் போன கனவை’ மீட்டெடுப்பது எப்படி?

இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒபாமா தன் பிராசாரத்தைத் துவக்கியபோது, இராக் போருக்கு எதிரான மனநிலை அமெரிக்க மத்தியதர வர்க்கத்திடம் விரவிக் கிடந்தது. அதிலும் தங்கள் பிள்ளைகளை போர்முனைக்கு அனுப்பிவிட்டு நெருப்பின் மேல் நின்று கொண்டிருந்த தாய்மார்களின் நம்பிக்கை ஒபாமா பக்கம் நின்றது.

இன்று, பொருளாதாரம் உருகி ஓடும் நிலையில், இராக் யுத்தம் நாளிதழ்களில் காணாமல் போய்விட்டது. 16ம் பக்கத்தில் ஆறாம் பத்தியில் 10 செ.மீ செய்தியாகக் கூட இடம் பெறுவதில்லை. ஆனால் அந்த யுத்தம் மக்கள் மனதில் இப்போதும் இருக்கிறது. அந்தத் தாய்மார்கள் நெஞ்சில் அந்த நெருப்பு இப்போதும் கனன்று கொண்டிருக்கிறது. ஆரம்ப நாள்களில் தனது பிரசாரத்தின் போது இராக் யுத்தத்தை வன்மையாகக் கண்டித்துப் பேசி வந்தார். ‘இந்த யுத்தத்தை முதலில் இருந்தே எதிர்த்து வந்திருக்கிறேன்’ என்ற ரீதியில் அவரது பேச்சுகள் இருந்து வந்தன. ஆனால் அண்மைக்காலமாக பேச்சின் தொனி மாறி வருகிறது.

‘தாக்குதல் நடத்தும் படைகள் மெல்ல மெல்ல 16 மாத காலத்தில் மெல்ல மெல்ல விலக்கிக் கொள்ளப்படும்’ என்று சொல்லும் அவர் அதே மூச்சில், ‘எனினும் பயங்கரவதத்திற்கு எதிரான பாசறைகள்’ (bases against counter terror) அங்கே தொடர்ந்து நீடிக்கும் எனறும் சொல்கிறார். அதை விடத் திடுக்கிட வைக்கும் விஷயம், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானலும் யுத்தத்தை அதிகரிப்பேன் அவை ‘பயங்கரவாதத்திற்கு எதிரான மையமான புள்ளியாக’ விளங்கும் என்ற அவரது அறிவிப்பு.

இவற்றைக் கொண்டு பார்க்கும் போது அதிபர் ஒபாமா ஆட்சிப் பொறுப்பேற்றதும் சில அறிவிப்புக்களை – குவான்டநாமோ கொடுஞ்சிறையை மூடுவது, இராக்கிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவது போன்ற அறிவிப்புக்களை வெளியிடுவார். ஆனால் வெறும் அடையாள அறிவிப்புக்களாகவே (Tokenism)இருக்கும்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ வேறு ஏதோ ஒரு தேசத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.உலகில் உள்ள 195 நாடுகளில் 130 நாடுகளில் தன் ராணுவத்தை நிறுத்தி வைத்திருக்கும் நாடு அமெரிக்கா என்பதை நினைவில் கொண்டால் எந்த அமெரிக்க அதிபரும் சமாதானப் புறாவாக சிறகு விரிக்க முடியாது, பிணந்தின்னிக் கழுகாவே வட்டமுடியும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஒபாமா தனது ஆரம்ப நாட்களின் அடையாள அறிவிப்புகளுக்குப் பின் பொருளாதாரத்தின் பக்கம் தன் கவனத்தைத் திருப்புவார். வேலை வாய்ப்புக்களை அதிகரிக்கும் முயற்சிகளில் ஆர்வம் காட்டுவார். வசதிபடைத்தவர்களுக்கு அதிக வரி, மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் சலுகை, பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களின் சேமிப்பைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள், பலருக்கு மருத்துவக் காப்பீடு போன்ற சில திட்டங்களை அறிவிக்கலாம்.

ஆனால் அவற்றிற்கு அப்பால் பெரும் அற்புதங்கள் நடந்துவிடும் என நான் எதிர்பார்க்கவில்லை.

அற்புதங்கள் நிகழ்த்த அமெரிக்க அரசியல், அதன் அடிஆழத்தில் சுழித்தோடும் நீரோட்டங்கள் இடமளிக்காது. உலகெங்கும் உள்ள மத்தியதர வர்க்கத்து மனிதர்களைப் போல தனது கனவுகளுக்கும், யதார்த்தங்களுக்கும் இடையே ஒரு சம்ன்பாட்டைக் காணுவதிலேயே தனது ஆற்றல்களை செலவிட வேண்டிய ஒருவராகவே அதிபர் ஒபாமா ஆகக்கூடும்.

மாலன்

அரசியல் ஆழிப்பேரலை: மணி மு. மணிவண்ணன்

  • பொருளாதார வீழ்ச்சி.
  • பெட்ரோல் விலை எகிறல்.
  • ஜெனரல் மோட்டார்ஸ் தடுமாற்றம்.
  • அமெரிக்காவின் எதிரிகளின் ஏற்றம்.
  • மத்திய கிழக்கில் அமெரிக்கப் படையினரின் வலுவின்மை.
  • வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மை.
  • அமெரிக்க அதிபரின் மீது ஏமாற்றம்.

இத்தனையும் இருந்தும் தேர்தல் நாள்வரை ஆளுங்கட்சியின் வேட்பாளர் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் மக்களின் முழுநம்பிக்கையைப் பெறவில்லை.

இது மெக்கேன் ஒபாமா போட்டியைப் பற்றிய செய்தியல்ல.

28 ஆண்டுகளுக்கு முன்னர், 1980இல் அதிபர் கார்ட்டர் – ஆளுநர் ரேகன் போட்டியின் கடைசிவாரச் செய்தி.
“நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட இப்போது நல்ல நிலையில் இருக்கிறீர்களா? நல்ல நிலையில் இருக்கிறீர்கள் என்றால் ஆளுங்கட்சிக்கு வாக்களியுங்கள். இல்லை என்றால் எனக்கு வாய்ப்பளியுங்கள்.” இது குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோனால்டு ரேகனின் அறைகூவல்.

எதிர்க்கட்சி வேட்பாளர் உலக அரசியல் அனுபவமில்லாதவர். அவரைத் தேர்ந்தெடுத்தால், அணுவாயுதங்கள் வெடிக்கும் மூன்றாம் உலகப் போருக்கு ஆயத்தமாகுங்கள். இது ஆளுங்கட்சியான மக்களாட்சிக் கட்சியினரின் மிரட்டல்.

தேர்தல் நாளான நவம்பர் முதல் செவ்வாய்க்கு மூன்று நாள் முன்னர் வரை மக்கள் வேண்டா வெறுப்புடன் அதிபர் கார்ட்டரைத்தான் ஆதரித்தார்கள். ஈரானில் சிக்கியிருந்த அமெரிக்கப் பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் கார்ட்டரின் தோல்வி, 23% அடமான வட்டி வீதம், வேலையில்லாத் திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம், பெட்ரோல் சிக்கனப் படுத்தும் சின்ன கார் உற்பத்தியில் அமெரிக்க நிறுவனங்களின் தடுமாற்றம் இவை எல்லாவற்றையும் விட மூன்றாம் உலகப் போரை முடுக்கி விடுவதைப் போல சோவியத் யூனியனை மிரட்டிக் கொண்டிருந்த ரோனால்டு ரேகனைத் தேர்ந்தெடுக்க பயமாகத்தான் இருந்தது. ஆனாலும், அவர் போர் வெறியை விட அமெரிக்காவின் ஏற்றத்தைப் பற்றிய அவரது நம்பிக்கையும், உறுதியும் மக்களை ஈர்த்தது.

தேர்தலுக்கு முந்திய மூன்று நாட்களில் ஓர் அரசியல் பேரலை எழும்பியது. அந்த அலையின் தாக்கத்தில்தான் அரசாங்கம் என்பது மக்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை என்ற கொள்கை அமெரிக்க அரசியலின் தாரக மந்திரமாயிற்று. தனி மனிதர்கள், அவர்களது நிறுவனங்கள், அவர்கள் பொருளாதாரச் சந்தை, இவை அரசாங்கத்தின் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கப் பட்டால் மாபெரும் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற ஏயின் ரேண்ட் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்களில் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேனும் ஒருவர்.

1929இல் பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்குப் பின்னர் அரசாங்கம் கொண்டு வந்த எல்லாக் கட்டுக்கோப்புகளையும் உடைத்தெறியும் முயற்சியில் இவர்கள் ஈடு பட்டனர். அரசு விதிக்கும் வரி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை போகும் முதலீட்டைப் பறித்து சோம்பேறிகள் சுகமாக வாழ வழிவகுக்கும் போதைப் பொருள் என்பது இவர்கள் வாதம். ஏழ்மைக்குக் காரணம் சோம்பல் என்பது இவர்கள் கூற்று. எதிரி நாட்டுகளைக் கட்டுப் படுத்தவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவவும் மட்டுமே அரசாங்கம் தேவை என்ற பொருளாதார அடிப்படை வாதம் இவர்கள் அடிநாதம்.

1932-ல் அதிபர் பிராங்க்ளின் டெலினோ ரூசவெல்ட் உருவாக்கிய முற்போக்குக் கூட்டணியை உடைத்தெறிய இவர்கள் அதிபர் நிக்சன் தந்திரங்களைப் பயன்படுத்திப் பிற்போக்குச் சக்திகளைத் திரட்டி மாபெரும் கூட்டணி ஒன்றை அமைத்தார்கள்.

  • மதவாதப் பிற்போக்கு சக்திகள்,
  • இனவாதப் பிற்போக்கு சக்திகள்,
  • பொருளாதாரப் பிற்போக்கு சக்திகள்

இவை அனைத்தும் ஒரே கூடாரத்தில் ரேகன் தலைமையில் கூடின. ரூசவெல்ட் தலைமையில் உருவான முற்போக்கு அரசு அமைப்புகள் மக்களின் வரிப்பணத்தை அட்டை போல் உறிஞ்சிக் கொண்டு ஊழலில் ஊறியிருந்தது இவர்களுக்குச் சாதகமாக இருந்தது.

உழைப்பவர்களுக்கு வரி, சோம்பேறிகளுக்கு அரசு சலுகையா? என்ற இவர்கள் அறைகூவல் வரிகளை நம்பியிருந்த அரசாங்கத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்தது. “வரி விதி, செலவு செய்” என்பதுதான் மக்களாட்சிக் கட்சியின் கொள்கை என்று இவர்கள் கட்டிய பட்டம் இன்று வரை மக்களாட்சிக் கட்சியை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது. 1992-ல் அதிபரான பில் கிளின்டனும் கூட இந்தப் பேரலையின் தாக்கத்தை எதிர் கொள்ள முடியாமல் இவர்களோடு ஒட்டி உறவாடிக் கொண்டே முற்போக்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

ரேகனின் பேரலையை வானளாவ உயர்த்தும் முயற்சியில் எழுந்தவர்தாம் இன்றைய அதிபர் ஜோர்ஜ் டப்யா புஷ். ரேகனைப் போன்ற பேரலையில் ஆட்சிக்கு வராமல், தட்டுத் தடுமாறி ஆட்சிக்கு வந்தாலும் தன்னை ரேகனின் மறு அவதாரமாகக் கருதிக் கொண்டவர் டப்யா புஷ். ரேகனைப் போலவே அரசு அமைப்புகளைச் சற்றும் நம்பாதவர் இவர். வாஷிங்டன் மக்கள் வரிப்பணத்தில் வாழும் அட்டைகள் நிரம்பிய குட்டை என்பது இவர் கொள்கை.

ரேகன் கொள்கைகளின் அடித்தளமே ஆடத் தொடங்கியது இவரது ஆட்சியில்தான்.

“கடன் வாங்கு, செலவு செய்” என்ற இவரது பொறுப்பற்ற கொள்கையின் விளைவுகளப் பார்க்கும்போது “வரி விதி, செலவு செய்” என்பது மிகவும் பொறுப்பான செயல் என்றே தோன்றுகிறது. மக்கள் வங்கிக்கணக்குகளைப் பாதுகாக்கத் தனியார் நிதி நிறுவனங்களின் மீது ரூசவெல்ட் ஆட்சி விதித்திருந்த கட்டுப் பாடுகளை வெகுவாகத் தளர்த்தியதில் முன்னணியில் இருந்தவர்கள் டப்யா புஷ், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கேன், மற்றும் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன்.

என்னென்ன காரணங்களால் 1929 பங்குச் சந்தை வீழ்ச்சி பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்கு வழி வகுத்ததோ அதே காரணங்கள் மீண்டும் மேலெழுவதைப் பற்றிக் கவலைப் படாமல் கிளிப்பிள்ளை போல் அரசுக் கட்டுப்பாடுகள் தளர்ச்சி, செல்வந்தர்கள் வரி குறைப்பு என்ற மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தவர்கள் இவர்கள். இதில் உண்மையிலேயே பொருளாதார நிபுணரான ஆலன் கிரீன்ஸ்பான் அண்மையில் தனது கொள்கைகளால் அமெரிக்க, மற்றும் உலகப் பொருளாதார அமைப்புகள் அனைத்துமே நொறுங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதை உணர்ந்து, தன் கொள்கைகள் இந்த வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதை உணராமல் போய் விட்டதைப் பற்றி வருத்தம் தெரிவித்தார்.

ஆனால், டப்யா புஷ்ஷோ, ஜான் மெக்கேனோ இதைப் பற்றிப் புரிந்து கொண்டிருப்பதாகவோ, வருந்துவதாகவோ தெரியவில்லை. ஒபாமாவைப் பற்றிய மெக்கேனின் குற்றச்சாட்டு என்ன – “ஒபாமாவின் கொள்கை ‘வரி விதி, செலவு செய்’ – ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் வரி கூடும்” என்பதே. புஷ் – மெக்கேனின் ‘கடன் வாங்கு, செலவு செய்’ கொள்கையால் மக்களின் 401(k) ஓய்வுநிதிக் கணக்குகள் பேரிழப்புக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைப் பற்றி இவர்கள் வாயைத் திறக்க மாட்டார்கள்.

செப்டம்பர் 11 தாக்குதல் இவர்கள் கண்காணிப்பில்தான் நடந்தது. நியூ ஆர்லியன்ஸ் நகர் இவர்கள் ஆட்சியின் கீழ்தான் மூழ்கியது. ஓசாமா பின் லாடனின் முடியைத் தொடக்கூட இவர்கள் வக்கற்றவர்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களிலும் இவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஆட்சியின் கீழ்தான் பங்குச் சந்தையின் பெரு வீழ்ச்சியும், பொருளாதாரப் பெருவீழ்ச்சியும் தொடங்கியுள்ளன. இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் அரசாங்கக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதற்குப் பதிலாக அரசாங்கத்தையே தளர்த்தும் மனப்பான்மை.

இதை மாற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் எத்தைகைய மாற்றம்? மெக்கேனுக்கும், டப்யாவுக்கும் அரசாங்கத்தைப் பற்றிய கொள்கைகளில் வேறுபாடு இல்லை. கடன் வாங்கிச் செலவு செய்யும் கொள்கையிலும் வேறுபாடு இல்லை. புஷ்ஷுக்குப் பதிலாக மெக்கேன் வந்தால் மட்டும் பெரிதாக என்ன மாற்றம் இருக்க முடியும்?

ஆனால், மக்களாட்சிக் கட்சியின் கொண்டு வரும் மாற்றம் என்ன?

அதற்கு எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்ப்போம்.

1989-ல் டப்யா புஷ்ஷின் தந்தை ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் ஆட்சியின் கீழ் சான் ஃபிரான்சிஸ்கோ நகரம் நிலநடுக்கத்தால் விளைந்த சேதங்களால் திணறியது. முக்கியமான பல மேம்பாலங்கள் சுக்கு நூறாகின. அவற்றை மீண்டும் கட்டி முடிக்கப் பல ஆண்டுகளாகின. நகரத்தின் வளர்ச்சி மட்டுப் பட்டது. பின்னர் 1992-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகரம் இனக் கலவரத்தால் பற்றி எரிந்தது. நாட்டின் அதிபர் புஷ்ஷும் சரி, கலிஃபோர்னியா மாநில ஆளுநர் வில்சனும் சரி நகரத்தைக் காப்பாற்ற முன் வரவில்லை. லாஸ் ஏஞ்சலஸ் நாதியற்றுத் தவித்தது.

1994-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்குள்ளே நார்த்ரிட்ஜில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தால் மிகுந்த சேதம் அடைந்தது. நிலநடுக்கத்தின் சேதம் தெரிந்த சில மணி நேரத்துக்குள் அதிபர் பில் கிளின்டன் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் மீட்சித் திட்டத்துக்கு வழி வகுத்தார். அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் இவர்கள் அனைவரும் நிலநடுக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்போதும் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு விரைந்து மீட்சிப் பணிகளைத் தொடங்கினார்கள். சில மாதங்களுக்குள் நகரத்தின் உடைந்த மேம்பாலங்கள் மீண்டும் கட்டப் பட்டன. பெருவீதிகள் சீரமைக்கப் பட்டன. நில நடுக்கத்தின் அடையாளமே தெரியாத அளவுக்கு நகரமும் புத்துணர்ச்சி பெற்று வளரத் தொடங்கியது. நல்ல அரசாட்சி என்பதற்கு இலக்கணம் வகுத்தார் பில் கிளின்டன். அவரது ஆட்சியின் கீழ் அமெரிக்கப் பொருளாதாரம் பெரு வளர்ச்சி நிலையை எட்டியது. ஏனென்றால், அரசாங்கத்தின் தேவையை முற்றும் உணர்ந்தவர் அவர்.

2008 தேர்தலின் முக்கியக் கொள்கைப் போராட்டம் இதுதான். அரசாங்கத்தின் தன்மை என்ன? அதன் தேவை என்ன?

குடியரசுக் கட்சிக்காரர்கள், அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்கள் அரசியல் எதிரிகளைப் பழி தீர்த்துக் கொள்வார்கள். தங்கள் மத நம்பிக்கைகளை மேம்படுத்துவார்கள். ஊழல் செய்யும் பெரு நிறுவனங்களைச் செல்லமாகத் தட்டி அனுப்பி விடுவார்கள். ஆனால், வெளிநாட்டுக் கொள்கைகளிலும், பொருளாதாரக் கொள்கைகளிலும் கெட்டிக்காரர்கள் என்று எடுத்த பெயரைக் கெடுத்துக் கொண்டுவிட்டார்கள்.

மக்களாட்சிக் கட்சிக்காரர்கள், மக்களின் தனி வாழ்க்கையில் அரசாங்கம் குறுக்கிடுவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் வசதியுள்ளவர்கள் மீது வரி விதித்து வசதியற்றவர்களுக்கு வாழ்வு கொடுப்பது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை என்று நம்புபவர்கள்.

பொருளாதார வீழ்ச்சி சமயத்தில் இவர்கள் இருவரில் எவர் கொள்கை மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்?

1980-ல் கார்ட்டர் காட்டிய பூச்சாண்டிகளையும் மீறி மக்கள் ரேகனை வாக்குப் பேரலை மூலம் தேர்ந்தெடுத்தார்கள். 2008-ல் ரேகன் பேரலை வடியும்போது மெக்கேன் காட்டும் பூச்சாண்டிகளையும் மீறி ஒபாமா பேரலை எழுந்து கொண்டிருப்பது புலப்படுகிறது.

அமெரிக்க வரலாற்றிலேயே முக்கியமான தேர்தல் இது என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், அமெரிக்க வரலாற்றிலேயே மிக முக்கியமான தேர்தல் எட்டாண்டுகளுக்கு முன்னர் நடந்தது. புதிய ஆயிரத்தாண்டு தொடங்கும்போது தேர்ந்தெடுக்கப் பட்ட ஜார்ஜ் டப்யா புஷ்ஷின் திறமையின்மை அமெரிக்க வல்லரசின் சறுக்கலுக்கு வித்திட்டு விட்டது. கடந்த எட்டாண்டுகளில் அவர் செய்தவற்றின் பின் விளைவுகளில் இருந்து மீளப் பெரு முயற்சி தேவைப்படும்.

ஒபாமா அதிபராகத் தேர்தெடுக்கப் பட்டால் குறைந்தது அமெரிக்கச் சறுக்கல் நிதானப் படலாம். புஷ்ஷின் கொடுங்கோலாட்சியின் கடுமையான விளைவுகளால் வாடும் அமெரிக்கா மட்டுமல்ல உலகமே ஒபாமாவின் வெற்றியை வரவேற்கும்.

மணி மு. மணிவண்ணன், சென்னை, இந்தியா.

தமிழ்ப்பதிவுகளில் அமெரிக்க அதிபர் தேர்தல்

ஒரு அகதியின் நாட்குறிப்பு

அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியக்கூறுகள் மிகப்பிரகாசம் – பேராசிரியர் எரிக் அஸ்லானர் நேர்காணல் :: வீரகேசரி நாளேடு – 10/27

கேள்வி: இலங்கை போன்ற நாடுகளில் கடைசி நேர அனுதாப அலைகள் தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்துவது வரலாற்றில் நிருபணமாகியுள்ளது அந்தவகையில் தற்போது பின்னிலையிருக்கும் மக்கெய்னுக்கு சாதகமாக ஏதேனும் திடீர் திருப்பங்கள் ஏற்படச்சாத்தியமுள்ளதா?

:::
கேள்வி: இந்தத்தேர்தலுக்கு முன்னர் அதிகம் அறியப்படாத பராக் ஒபாமாவின் எழுச்சிக்கு காரணம் யாது?

பதில்:

  • ஒபாமா ஒரு ரொக் இசைக்கலைஞர் போன்று மக்களை வசீகரிக்கக்கூடிய அபார பேச்சாற்றல் மிக்கவர்
  • தேர்தலில் முன்பெல்லாம் அதிக நாட்டங்காண்பிக்காத இளைஞர் யுவதிகளை தேர்தல் பிரசார மேடைகளுக்கு இழுத்துவந்தமை அவரது வெற்றிக்கு காரணம்
  • இணையம் கைத்தொலைபேசி குறுஞ்சேவை உட்பட நவீன தொலைதொடர்பு சாதனங்களை மிக உச்சளவில் பயன்படுத்தியமையும் அவரது ஏற்றத்திற்கு காரணம்

ஏன் ஒபாமா வெற்றி பெற வேண்டும்?

– முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

மிகவும் நோயுற்றிருக்கும் அவருடைய தாய் வழிப் பாட்டியைப் பார்க்க ஹவாய்க்குப் போயிருக்கும் ஒபாமா தான் அமெரிக்கப் பிரஜை இல்லை என்பதற்கான ஆவணங்களை அழிக்கப் போயிருக்கிறார் என்ற வதந்தியைக் கிளப்பியிருக்கிறது.

:::

ஸ்பெயினைத் தோற்கடித்து கியூபாவை அமெரிக்கா தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. அது மட்டுமல்ல, பிலிப்பைன்ஸ், போர்ட்டரீகோ மற்றும் பசிபிக் கடலில் உள்ள குவாம் என்னும் தீவு ஆகியவற்றையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது.

:::

இந்திய பத்திரிக்கையாளர் எம்.ஜே. அக்பர் கூறுவது போல் உள்நாட்டைப் பொறுத்தவரை அமெரிக்கா ஜனநாயக நாடு என்றாலும் உலகைப் பொறுத்தவரை ஒரு சர்வாதிகாரி.

:::

அமெரிக்காவின் முழு ஆளுமையிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றிய பெருமை, மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைத்தான் சேரும்.

:::

தன் சிறு வயதில் இந்தோனேஷியாவின் ஜாகர்த்தாவில் வளர்ந்து வந்த போது எப்போதும் சண்டை போட அமெரிக்கா தயாராக இருப்பதையும், தன்னுடைய பொருளாதார அமைப்பை மற்ற நாடுகளின் மீது திணிக்க விரும்புவதையும், தன் நலனுக்காக ஊழல் நிறைந்த சர்வாதிகார்களை அமெரிக்கா ஆதரித்து வந்ததோடு அந்த நாடுகளில் நடக்கும் ஊழலைக் கண்டுகொள்ளாமல் இருந்ததையும் அறிந்ததாகவும் தன் புத்தகத்தில் கூறியிருக்கிறார்.


ஒளியேற்றுவாரா ஒபாமா

ஸதக்கத்துல்லாஹ், கடையநல்லூர்

அமெரிக்கத் தேர்தல் முடிவை விட அங்குள்ள மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது பொருளியல் பிரச்சினைக்கான தீர்வைத்தான். ஓராண்டுக்கு முன் அதிபர் தேர்தல் பிரசாரம் தொடங்கியபோது, அமெரிக்கப் பொருளியல் நிலைத் தன்மையோடு இருந்தது.


4. Conservative Tamils for McCain | Asian Americans for McCain

வாரயிறுதி விஐபி: மணிக்கூண்டு சிவா

1. ஒபாமாவிற்காக பிரச்சாரம் மேற்கொண்டபோது கிடைத்த ரசமான அனுபவங்களைப் பகிர முடியுமா? எந்த வீட்டிலாவது விருந்து கிடைத்ததா? ‘நாய்கள் ஜாக்கிரதை’ எச்சரிக்கை இல்லாத இல்லம்; அலாரம் அடித்த வீடு; உங்களைப் பிறிதொருவர் என்று நினைத்து குழம்பியவர்கள் — போன்ற சுவாரசியங்கள் ஏதாவது உண்டா?

எப்படி விருந்து கிடைக்கும்?! அடி கிடைக்காமல் இருந்தால் போதாதா? கிட்டதட்ட 60 வீடுகள் வரை சென்றேன். கிட்டதட்ட 90% சதவீத மக்கள் மெக்கயன் ஆதரவாளர்கள் போல! கதவை சாத்தாத குறை! நொந்து நூலாய் போனதான் மிச்சம்! நல்ல மற்றும் புதிய அனுபவம்!

நிறைய வீடுகளில் நாயும் மற்றும் பூனையும் இருந்தது! என் சட்டையில் ஓபாமா படத்தை பார்த்ததும் மடாரென்று ஓருவர் கதவை சாத்தியது என் மன கண்களை விட்ட அகல மறுக்கிறது!

2. ஒபாமாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு தங்களுக்கு கிடைத்ததா? புகைப்படம் எடுத்துக் கொண்டதுண்டா? அளவளாவும் வாய்ப்பு கிடைத்தால், ‘ஒரு கேள்வி கேட்கலாம்’ என்றால் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள என்ன வினா/பிரச்சினை/கேள்வி தங்கள் மனதில் தொக்கி நிற்கிறது?

எனக்கு ஆசைதான்! ஓபாமாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை! எனது நகரத்து அருகே அவருடையப் பிரச்சாரம் இருந்தது! அலுவலக வேலைக் காரணமாக அவருடைய பிரச்சாரத்திற்கு போக வாய்ப்பு கிடைக்கவில்லை! அப்படி அவரை பார்க்க கிடைத்தால் அவரிடம் மிகவும் பிரியமாக கேட்க விரும்பும் கேள்வி மூன்று.

கேள்வி ஓன்று : உங்களுக்கு அரசியல் வானில் மிகவும் பிடித்த எழுச்சி பேச்சாளர் யார்? ஏன்?

கேள்வி இரண்டு : நீங்கள் ஏன் ஹில்லாரி கிளிண்டனை துணை அதிபராக தேர்ந்து எடுக்கவில்லை? அப்படி எடுத்து இருந்தால் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தோணவில்லையா?

கேள்வி மூன்று : நீங்கள் அதிபர் ஆனவுடன் (ஆகிவிட்டால்) ஈழ மக்கள் மிகவும் ஏங்கும் நேசிக்கும் “தமிழ் ஈழத்தை” வாங்கி தருவீர்களா?

3. ஒபாமாவின் திட்டங்களினுள் எந்த கொள்கை தங்களை வசீகரிக்கவில்லை? எவ்வாறு அதை மாற்றியமைத்தால் தங்களை மேலும் கவர்ந்திருக்கும்?

அவருடைய எல்லா கருத்தகளிலும் முழு உடன்பாடு உண்டு!

4. சாதாரணமாக மாதத்திற்கொருமுறை சீட்டாட்டம், வருடத்திற்கொருமுறை பேச்சிலர்ஸ் பார்ட்டி என்று ஊர்சுற்ற கிளம்பினாலே வீட்டில் புகம்பம் வெடிக்கும். களப்பணியினால் குடும்பத்தில் குழப்பம் வந்ததா? எவ்வாறு சமாளித்தீர்கள்?

அரசியல் பணி / சமூகப் பணி / தமிழ்ச் சங்க பணி / வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை பணி/ எல்லாம் என் மனதிற்கு மிகவும் பிடித்த விசயம். என் வாழ்க்கை துணை இவை எல்லாவற்றிக்கும் முழு ஆதரவு தருகிறார் என்றும் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது!

5. 2008க்கான ப்ரைமரி தேர்தலில் எவரையாவது ஆதரித்தீர்களா? இதற்கு முந்தைய (2000/2004) அதிபர் தேர்தல்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதுண்டா? இந்த ஆண்டு ஓட்டு சேகரிக்க வீடு வீடாக சென்றதில் கைக்காசு செலவு உண்டா? அல்லது பஞ்சப்படியாக ‘ஒபாமா தேர்வுக்குழு’ ஏதாவது தருவதுண்டா?

2008 பிரைமரி தேர்தலில் நான் ஹில்லாரியை ஆதரித்தேன், காரணம் அவர் தந்தைப் பெரியார் சொன்னப் படி பெண்கள் எல்லாப் பொறுப்பிற்கும் வர வேண்டும். மேலும் ஹில்லாரி கடந்த வந்த பாதையில் அவர் அடைந்த துயரங்கள் அதிகம்! அவருடைய கனவு நிறைவேறவில்லை என்ற வருத்தம் எனக்கும் உண்டு!

ஓபாமா தேர்தல் பணிக்கு சென்ற பொழுது பைசா காசு செலவில்லை! மனமும். நேரமும் வேண்டும் அவ்வளவுதான்!

மிக்க நன்றி
மயிலாடுதுறை சிவா

(ஓபாமாவிற்காக ஒருநாள் – பதிவு)

வர்த்தகம், வன்முறை, வாசிப்பு, வருமானம் – செல்வன்

செல்வனின் முதல் பதிவின் தொடர்ச்சி:

3. ஒவ்வொரு அதிபரும் அவ்வப்போது பற்றிக்கொள்ளும் தீயை அணைப்பதிலேயே நேரங்கழித்து விடுகிறார்களா? ரேகனுக்கு ருசியா; புஷ்ஷுக்கு 9/11. கல்வி, உள்நாட்டு வன்முறை போன்ற பல முக்கிய பிரச்சினைகள் இந்தத் தேர்தலில் கவனம் பெறவில்லை. பொருளாதாரம் மீண்டாலும் கிரிமினல்களை தவிர்ப்பதற்கும் கல்வியை செறிவாக்குவதற்கும் எந்த மாதிரி தொலைநோக்கு திட்டங்கள் தேவை?

கிரிமினல்களை ஒழிப்பது எந்த நாட்டு அரசாலும் முடியாது. குற்றங்களை மட்டுப்படுத்த மட்டுமே முடியும். அதிக எண்ணிக்கையில் போலீசை பணிக்கமர்த்துவது மட்டுமே இதற்கு தீர்வல்ல. சமூக ரீதியிலான மாற்றங்களை நிறைய செய்ய வேண்டும்.

உதாரணம்: கருப்பருக்கெதிராக கருப்பர் நடத்தும் குற்றங்கள்.அந்த சமூகத்தில் கல்வி, வேலைவாய்ப்புக்களை அதிகரித்தால் இது தானாக குறையும்.

பொருளாதார மந்த நிலை காரணமாக அமெரிக்க மாநில அரசுகள் பல்கலைகழகங்களுக்கு அளிக்கும் நிதியுதவியை குறைக்கின்றன. நீண்டகால அடிப்படையில் இது தேசத்துக்கு நல்லதல்ல. இந்த விஷயத்தில் ஒபாமா பல்கலை மாணவர்களுக்கு அளிக்கவிருக்கும் உதவித்தொகை வரவேற்கத்தகுந்த திட்டம் தான்.

அமெரிக்க பல்கலைகழகங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாகுறையை போக்க வேண்டும். வேலைக்கு போகும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் பாடத்திட்டங்களையும், வகுப்புகளையும் அதற்கேற்ராற்போல் மாற்ற வேண்டும்.

நிதி மட்டுமே உடனடி பிரச்சனையாக தெரிகிறது.மற்றபடி அமெரிக்க பல்கலைகழகங்கள் உலகின் தலைசிறந்த கல்விக்கூடங்களே ஆகும். ஓரளவு உதவி செய்தால் அவையே தம்மை கைதூக்கி விட்டுக்கொள்ளூம்.

4. உலக வர்த்தகம்: ஒத்துழைக்கும் கொலம்பியாவோடு முரண்டு பிடிக்கும் ஒபாமா ஒத்துக் கொள்ளாத கொள்கை கொண்ட வெனிசுவேலாவோடு சரிசமமாக அமர்வேன் என்கிறார். ஏற்கனவே சட்டைப்பையில் அமர்ந்திருக்கும் கொலம்பியா போன்ற நாடுகளின் சொந்தப் பிரச்சினைகளை கண்டும் காணாமல் போவது அமெரிக்காவுக்கு ஷேமமா? புவிவெம்மையைக் கட்டுபடுத்தும் விதமாக நாப்ஃதாவை மீண்டும் பேரம் பேசுவது, அமெரிக்கத் தொழிலாளர் நலனுக்காக தென் கொரிய கார் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது என்று ஒபாமா முன்வைக்கும் கொள்கைகள், அமெரிக்காவை தனிமைப்படுத்துமா?

நாப்தாவில் தொழிலாளர் உரிமை, மற்றும் சுற்றுப்புர சூழல் காப்பு ஆகியவற்றை சேர்ப்பேன் என்கிரார் ஒபாமா. கொலம்பியாவில் தொழிலாளர் உரிமை சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் தான் அதனுடன் சுதந்திரவணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட போகிறேன் என்கிறார்.

இதெல்லாம் டெமக்ராடிக் கட்சியினரின் பெட் புராஜெக்ட்கள். அடுத்த நாடுகளை முதலில் இதுபோல் அமெரிக்கா வலியுறுத்துவது அவற்றின் உள்விவகாரங்களில் தலையிடுவது போல்தான். சுற்றுப்புற சூழலுக்கு செலவு செய்யும் அளவுக்கு கொலம்பியா, மெக்சிகோவிடம் நிதி இருக்கிறதா என்பதே கேள்விக்குறி. இது போன்ற பர்சனல் அஜெண்டாக்கள் அமெரிக்காவின் நலனுக்கு எள்ளளவும் உகந்ததல்ல.

5. நிதி கட்டுப்பாடு: மெகயின் என்னதான் சொல்கிறார்? கடந்த ஆண்டுகளில் ‘கட்டவிழ்த்துவிடு’ என்று தீவிரமாக இயங்கியதும், சடாரென்று பத்து நாளைக்கு முன் சடன் ப்ரேக் அடித்து, தன் நிலையை மொத்தமாக மாற்றியதும் என்பதாக இருப்பதில் எந்தப் பாதை இன்றைய நிலையில் வால் ஸ்ட்ரீட்டை வழிக்குக் கொண்டுவரும்?

ஆலன் கிரீன்ஸ்பான் காலத்து பப்பிள் எக்கானமியின் விளைவுகள் இன்று உணரப்படுகிறது. மெக்கெயின் மட்டுமல்ல, வேறு யாருமே அன்று நடந்த தவறுகளின் விளைவுகளை சரியாக யூகித்திருக்க முடியாது.

பான்னி மே, பிரட்டி மாக்கை கிரடிட் ஸ்கோர் சரியாக இல்லாதவர்கள், மற்றும் மைனாரிட்டி இனத்தவரை குறிவைத்து வீட்டுகடனுதவி அளிக்க செய்து டெமக்ராடிக் கட்சியினரின் ஓட்டுவங்கியை ஸ்திரப்படுத்திக்கொண்ட பில்க்ளின்டனை தான் வீட்டுகடனுதவி சந்தை சரிந்ததற்கு முதலில் குற்றம் சுமத்தவேண்டும்.

மெக்கெயின் பெயிலவுட் பாக்கேஜ் விவகாரத்தில் ஆடியது டிராமா. அது சரியாக வேலை செய்யவில்லை. மற்றபடி மெக்கெயினிடம் ஸ்திரமான பொருளாதார கொள்கை இல்லை. அலாஸ்காவில் கினறு தோண்டினால் எண்னை பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.

மொத்தத்தில் இந்த இருவர் மேலும் எனக்கு நம்பிக்கை இல்லை. 2012க்காக காத்திருக்கிறேன்.

நன்றி: செல்வன்.

வாஸந்தி: 'தமிழ்நாட்டிற்கும் ஒபாமா தேவை'

ஒபாமா: மாற்றத்தின் மந்திரச் சொல் : வாஸந்திஉயிர்மை

ஒபாமா எழுதியிருக்கும் The audacity of hope‘ என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அமெரிக்க அரசியலின் மிக அருமையான அதன் அலசலும் பட்சமற்ற விமர்சனமும் புதிய அறிவார்த்த முதிர்ச்சி மிகுந்த பார்வையும், அதில் தொனிக்கும் நேர்மையும் என்னை ஆட்கொள்கிறது.

:::

கருப்பர் என்பதால் பேச்சில் காழ்ப்பையோ, சரித்திர கால உள்ளார்ந்த வெறுப்போ பேச்சில் காண்பிப்பதில்லை.

::

அமெரிக்காவில் மட்டுமல்ல, இன்றைய தமிழ் நாட்டு அரசியல் சூழலிலும் மாறுபட்ட சிந்தனைக்கு ஒரு அவசரத் தேவை ஏற்பட்டிருகிறது.

  • கண்ணியமும் நாணயமும் மிக்க பரந்த உலகளாவிய பார்வைக்கு இடம் தேவை.
  • புதிய எழுச்சி மிகுந்த நேர்மையான பார்வை.
  • பலகாலமாக சித்தாந்தம் கொள்கை தமிழ் உணர்வு என்கிற போர்வையில் எழும் கூக்குரல்களும் அரங்கேறும் நாடகங்களும் மக்களுக்கு அலுத்துவிட்டன.
  • யாருக்காகக் குரல் கொடுக்கப் படுவதாகச் சொல்லப்படுகிறதோ அவர்களுக்கு நிச்சயம் உதவுவதாக இல்லை.
  • நாட்டுப் பற்று, மக்கள் நலன் என்பது வெற்று கோஷங்களில் நீர்த்துப் போகின்றன.
  • அரசியல் அரங்கில் இருக்கும் போட்டா போட்டிகளும் தலைவர்கள் ஒருவரை ஒருவர் நாகரீகமில்லாமல் சாடுவதும் சோர்வைத் தருகிறது.
  • எல்லாவிஷயங்களும், எல்லா துயரங்களும்- வெள்ளச் சேதம், சுனாமி சேதம், மனித உறிமை மீறலினால் அவதியுறும் இலங்கைத் தமிழர் பிரச்சினை என்ற எல்லாமே அரசியலாக்கப்பட்டு அவற்றில் சுயலாபத்தைத் தேடும் அவலமாகிவிட்டது.
  • உண்மையான மனித நேயக்குரல்கள் அடிபட்டுப் போகிண்றன.

நமது தலைவர்கள் ஏதோ ஒரு சக்கிரவியூகத்தில் மாட்டிக்கொண்டு அவஸ்தை படுவதுபோல இருக்கிறது.

முழுக்கட்டுரையின் பிரதி இனியொரு வலையகத்திலும் கிடைக்கிறது.

எங்கெங்கெ காணினும் ஒபாமா – விளம்பரத் தட்டிகள்

உந்திய உரல்: The Riff: Obama Poster Parodies Proliferate: 12 or so of the parodies inspired by the Obama “Hope” poster.

மூலம் வரைந்தவர் குறித்த பதிவு:The Phoenix > Museum And Gallery > Radical chic: “Fairey is one of the most famed street artists (the refined term for people who do what used to be known as graffiti) in the world. His work seems to be everywhere these days — and it actually is in the case of the iconic red-white-and-blue Barack Obama “Hope” poster that he produced this spring.”