Tag Archives: Notes

ஜெயமோகனின் தொராண்டோ வருகை

எழுதியவர்: வெங்கட் (24 Oct 2001)

எழுத்தாளர் ஜெயமோகன் சற்றேறக்குறைய மூன்று வாரங்களை கனடாவில் கழித்துவிட்டு இல்லம் திரும்பியிருக்கிறார். இந்தப் பயணம் அவருக்கு நல்ல அனுபவங்களைத் தந்திருக்கும் என நம்புகின்றேன். அவரது அமெரிக்கப் பயணம் மாடிமோதும் விமானங்கள், மடித்த அஞ்சல்களில் வரும் வியாதிகள் இன்னபிற எதிர்பாராத காரணங்களால் நிகழாமற் போயிற்று. அமெரிக்காவின் இழப்பு; கனடாவின் இலாபம். அவர் நிறைய நாட்களை எங்களுடன் செலவிட்டுச் செல்லமுடிந்தது.

  • எழுத்தாளர் முத்துலிங்கம்
  • மகாலிங்கம்
  • காலம் செல்வம்

இன்னும்பிற ஈழத்து நண்பர்கள் அவரது பயணத்தை ஒருங்கமைத்திருந்தார்கள். கடந்த 21ம் தேதி ஜெயமோகன் வாசகர்களைச் சந்தித்தார்; மழை ஞாயிறு. சந்திப்பு என்னுடை இல்லத்திலிருந்து நடை தொலைவில்தான் (நல்லதாகப் போயிற்று, ஒண்டாரியோவின் கடுமையான வாகன ஓட்டுநர் அனுமதி விதிகளினால் நான் நாள்வரை காரிருந்தும் “கால்நடைதான்”).

காலை 10 மணி முதல் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் காலம் செல்வத்தால் “வாழும் தமிழ்” சார்பாக நிர்வகிக்கப்பட்டது. நம்பமுடியவில்லை; கண்காட்சியில் குறுந்தொகை முதல் நேற்று வந்த புளியமரத்தின் கதை மறுபதிப்பு வரை – கிட்டத்தட்ட 700 – 800 புத்தகங்கள்..

அடியேனுக்கு ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்து போன்ற அருகிவரும் புத்தகங்கள் சில கிட்டின. இன்னும் சொல்புதிது, எக்ஸில், சதங்கை போன்ற எண்ணிலா சிற்றிதழ்கள். நண்பகலில் ஜெயமோகன் வாசக நண்பர்களுடன் விருந்துண்டார். (அடியேன், கரகரத்த தொண்டையுடன் குடைகீழ் இல்லம் வந்து மிளகு ரசம்-சாதம்).

பிற்பகலில் சந்திப்பு களை கட்டியது. ஜெயமோகனைப் பற்றி சம்பிரதாயமான அறிமுகம் எழுத்தாளர் மகாலிங்கம் அவர்களால் (அந்த அறிமுகத்தின் தேவையின்மை விரைவிலேயே தெரியவந்தது). ஜெயமோகன் விமர்சன மரபும் – தொடர்பும் எனும் தலைப்பில் உரையாற்றினார். தமிழ் விமர்சன மரபை மூன்று பெரும் வகைகளாகப் பகுத்து விரித்துரைத்தார்.

  1. மரபுவழி விமர்சனம் (Geneological criticism – உ-ம் தளையசிங்கம்),
  2. எதிர்வினை விமர்சனம் (Dialectical Criticism, உ-ம் கா.நா.சு / கைலாசபதி)
  3. குழப்பநிலை விமர்சனம் (Chaotic criticism, உ.ம் ஜெயமோகன்).

இறுதியில் ஒரு வாசகன் இவையெல்லாம் கடந்து தன் சுய அனுபவத்தினால் மதிப்பீடு செயதலே எல்லாவற்றிலும் காட்டிலும் சிறந்தது என்பதற்கான விளக்கங்கள். ஜெயமோகன் ஒரு நல்ல ஆசிரியர் என்றுதான் கூறவேண்டும். மிகவும் தெளிவான ஆற்றொழுக்கு உரை.

தொடர்ந்து கேள்வி-பதில் என்று அறிவிக்கப்பட வாசகர்கள் மத்தியில் மௌனம். மெதுவாக ஒரு முதிர்ந்த வாசகர் தன்னை இலக்கிய ஆர்வலனில்லை என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஜெயமோகனை ஏன் தமிழ்நாட்டுப் பல்கலைகள் ஆசிரியராகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என வினவினார். மடை திறந்தது; தொடர்ந்து சரமாரியாகக் கேள்விகள்.

அவரது விமர்சனக் கோட்பாடுகள் தொடங்கி, படைப்புகள் குறிந்தவை – மிகவும் வலுவான கேள்விகள்; உறுத்தாத குரல்களில்.

அப்பொழுதான் வாசகர்களின் வீச்சை நான் அறியத்தொடங்கினேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. அரசியல், தனிநபர் குறித்த கேள்விகள் எவையும் கேட்கப்படவில்லை – முற்றிலும் கலை, இலக்கியம் சார்ந்தனவையே.

“இலக்கியம் சலனத்தைத்தான் உண்டுபண்ணுகின்றது – அது முன்னோக்கிச் செல்வதில்லை”

எனும் அவரது கருதுகோளையும், “மொழி மனிதனின் கருவி” என்ற என்னுடைய புரிதலின் மீதானதுமான கருத்துப் பறிமாறல்களில் அடியேனும். இரண்டு விடயங்களிலும் நாங்கள் ஒருமிக்கப்போவதில்லை என்று ஒருமித்து உணர்ந்துகொள்ள அவற்றிலிருந்து எளிதாக விலகவும் முடிந்தது.

(மொழி – கருவி பற்றி அவர் முன்வைத்த கருத்து தற்கால மொழியியல் கோட்பாடுகளைச் சார்ந்தது என்றும்; அவரது ஆழ்மனத்தில் அதில் குறையிருப்பதாகப் படுவதாகவும் சொன்னார்)

நான் தமிழகத்தில் எந்த இலக்கியக் கூட்டங்களுக்கும் அதிகம் போனதில்லை. (அதிக பட்சம் ஆறு அல்லது ஏழு பேருக்குமேல் தாண்டாதவைதான் என்னுடைய அனுபவங்கள்). எனினும் சிற்றிதழ்களில் படிக்கும் இலக்கியக்கூட்டம் பற்றிய விபரங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.

அதிசயமான உண்மை; ஒரு வடதுருவ மூலையில், மழை வலுத்த ஒரு ஞாயிறு மதியத்தில் ஒரு தீவிர எழுத்தாளர்/விமர்சகருடன் மதிய உணவு அருந்தவும், தொடர்ந்து அவரது உரையைக் கேட்டு விவாதிக்கவும் பதினைந்து கனேடிய டாலர்கள் கட்டணத்தில் அறுபது பேர்கள். – வாழும் தமிழென்னும் நம்பிக்கை என்னுள் இலையுதிர் காலத்தில் துளிர்க்கிறது.

இக்கூட்டத்திற்கு முதல் வாரம் அடியேன், ஜெயமோகனை திரு. முத்துலிங்கம் அவர்களது இல்லத்தில் சந்திக்க முடிந்தது. ஒரு முறையான நேர்காணலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அது – திசை திரும்பிய கருத்துச் சிதறல்களாக முடிந்தது.

சென்ற புதனன்று இரவு திரும்பவும் ஜெயமோகனைச் சந்திக்க முடிந்தது – இம்முறை என்னுடைய இல்லத்தில். என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பொறுமையாக பதிலிறுத்தார். (நான் எப்பொழுது நான்கு ஒலிநாடாக்களை அச்சிலேற்ற முடியும் என்று தெரியவில்லை).

அவருடைய பல பதில்களும் கருத்துக்களும் இன்றைய “பாஷன்”-சார்ந்த இலக்கியவாதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இறுக்கம் அதிகமில்லாத அவரது நட்பு –

  • இலக்கியம்,
  • மரபு,
  • இவடிவம்,
  • காவியம்,
  • புனைகதைகள் விடுத்த இலக்கியங்கள்,
  • அறிவியல் புனைவுகள்

போன்று இன்றைய இலக்கியவாதிகளால் மறுக்கப்படும் அல்லது ஒதுக்கப்படும் பல விடயங்களைப் பற்றி எளிதாகக் கேள்விகள் கேட்கமுடிந்தது.

எந்த ஒரு போக்கினாலும் பாதிக்கப்படாமல் தன்னுடைய ஆளுமையை முற்றாகத் தனித்துவப்படுத்திச் செதுக்கிக் கொண்டுள்ளார் ஜெயமோகன்.

கிட்டத்தட்ட இரவு பதினொன்றரைக்கு – வற்றல் குழம்பு, சகிதமாக ஒரு நல்ல கும்பகோணம் சமையலை அவருக்கு அளித்து இல்லத்தையும் அவரது துணைவியாரையும் (எங்க ஊர்தாங்க – பட்டுக்கோட்டை) நினைவுபடுத்திவிட்டோம். ஜெயமோகன் வாங்கிவந்த மலர்க்கொத்து இன்னும் என் இல்லத்தின் நடுவில். ஒரு நல்ல நட்பின் தொடக்கம் என ஆழ்மனம் பரவசப்படுகின்றது.

அன்புடன்
வெங்கட்
தொராண்டொ

10 bullet points about, on, with Writer Jeyamohan

ட்விட்டரில் கதைத்தது

1. Chatted with JM abt அணியம் – வறீதையா கான்ஸ்தந்தின். Used to love Tilapia recipes; now getting a guilty feeling while eating the fish. #Books

2. Chatting with Jeyamohan on Tamil TV Media, Nandigram, Ilaiyaraja, Paula Coelho, H1b, Australia, home bldg., Movies. Anything but Ilakkiyam.

3. Probably my happiest moment as a computer type-writer. JeMo also uses phonetic keyboard layout for his jet speed blogs, writing in Tamil.

4. Inspired Quote: There r 3 reader types: 1. Who philosophizes with Vishnupuram; 2. hu adore ‘பின் தொடரும் நிழலின் குரல்’; 3. The bloggers #JM

5. Muttulingam: பிரியாவிடையில் தரப்படும் பரிசு விலைமதிப்பற்றது. Why? அது ஒன்றை எதிர்பார்த்துக் கொடுக்கப்படுவது அல்ல. (அஞ்சலிக்கும் பொருந்துமா?)

6. கண்ணதாசனுக்கும் வலம்புரி ஜானுக்கும் குறிப்பெடுத்து இலக்கியவாதியானது அந்தக்காலம். சாரதியாக வண்டியோட்டும் கைடுகள் ப்ளாகராவது இணையக்காலம். #Lit

7. Draft notes for a blog post on #JM meet: State of Eelam, Tamil Movie director working styles, what does JeMo read, Cauvery Water management.

8. Yesterday’s #JM chats: ஜெயகாந்தன் சபையிலும் சுந்தர ராமசாமி இல்லத்திற்கும் ஆறு தரிசனங்கள்; ஞானம் x கர்மம்; Translations of lit works; Ve.Saa.

9. @dynobuoy Liked ur https://twitpic.com/9moal Jeyamohan’s one liner on US was something along these lines + environment impact of consumerism

10. #JM compliment for me: ‘உங்க வாய்ஸ் டப்பிங்குக்கு ஏற்ற ஒண்ணு. உங்க உருவத்துக்கும் குரலுக்கும் சம்பந்தமேயில்ல. நல்ல கட்டையான ஆம்பளக் குரல்.”

ஜெயமோகன்: சில குறிப்புகள்

இணைய அறிமுகம், சிறுகுறிப்பு, தகவல் கட்டுரை: Jeyamohan Links: Issues, Controversy, Opinions, Interviews, Fiction « Tamil Archives

வார்த்தைகளின் விளிம்பில்: எழுத்து – ஜெயமோகன் – தொடர்

இன்றும் வலைபதிவர்கள் மட்டுமல்லாமல், சமகால எழுத்தாளர்களுக்கும் ஆதர்சம் சுஜாதாதான். அவர் மேம்போக்காகக் கூறிச் சென்ற வாக்கியங்களை, வேதமாகக் கொண்டவர்கள் நாம். இப்போதும் என்னால் அவர் எழுதிய பல போதனைகளை (க்யூவில் நிற்கும்போது புத்தகம் எடுத்துச் செல்லுங்கள்!) நினைவு கூற முடியும். அவர் minimalist திறமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது.

இப்படிப்பட்ட பெருமைகள் ஜெயமோகனுக்குக் கிடையாது.

குழந்தைகளைப் பற்றி பேசும்போது, ‘அவனோடயும் இவளோடயும் கம்பேர் செய்து பார்க்காதே’ என்போம். சொல்லிவிட்டு, முதல் ரேங்க், கூடப் படிக்கிறவனுக்கு வரும்போது உனக்கு மட்டும் என்ன கேடு? என்றும் தொடர்வோம். எழுத்தாளர்களை ஒப்பிடக் கூடாது. அப்படி சொல்லிவிட்டு, ஜெயமோகனை நான் படித்த வேறு சிலரோடு ஒப்பிட்டுப் பார்த்தால்:

  1. சுந்தர ராமசாமி: ஜே.ஜே சில குறிப்புகள் போல் path breaking; கூட முதல் வாசிப்பிலேயே புரிந்தாலும், வாசகருக்குக் கிடைக்கும் சுவையில் மயங்கி மீண்டும் வாசிக்க அழைப்பது; இதெல்லாம் ஜெமோ-விடம் எனக்கு கிடைக்கவில்லை.
  2. அசோகமித்திரன்: படிக்க கூடிய சைஸ்; ‘கரைந்த நிழல்கள்’ ஏழ்மையைக் காட்டினாலும் ஆனந்த விகடன் சந்தாதாரர் நெருங்கக் கூடிய மாதிரி போகும். ‘காடு’ மாதிரி முன்னுரைகள் பயமுறுத்தாது.
  3. இந்திரா பார்த்தசாரதி: விஷயம் நிறைய தெரிந்தாலும் ஓவர்-ரைட்டிங் இருக்காது. சட்டு புட்டுனு மேட்டருக்கு வருவார். கதாபாத்திரங்கள் எல்லாமே அறிமுகமானவை என்றாலும் அனைத்தும் நீண்ட நாள் ஒட்டிக் கொண்டு விவாதம் எழுப்பும்.
  4. கௌதம சித்தார்த்தன்: கிராமியக் களம். கிட்டத்தட்ட ஜெயமோகன் சிறுகதை மாதிரி மெதுவான ஆரம்பம் என்றாலும் ஈர்க்கும் கதையமைப்பு; துள்ளல் ஓட்டம்; குறியீடு கொண்டிருந்தாலும் துருத்திக் கொண்டு நிற்காது. அதாவது அதிகம் பேசப்படும் ‘டார்த்தீனியம்‘ மாதிரி இவரும் கலக்கல் படைப்பு பல கொடுத்துள்ளார். ஏனோ, சவுண்ட் விடுவதில்லை.
  5. சுதேசமித்திரன்: ஒரு தேர்ந்த சிறுகதையாசிரியர், எவ்வாறு அடுத்த கட்டமாக நெடுங்கதைக்கு மாறுவது என்பதை இவரிடம் பார்க்கலாம். இரண்டு இலக்கிய ஃபார்ம்களிலும் என் மனதைக் கவர்ந்தவர். இ.பா மாதிரியே தெரிந்த விஷயங்களின் இருண்மையை தெரியாத, யாரும் சொல்லத் துணியாத வகையில், அட்வைஸ் மழையாக்காத விதத்தில் லாவகமாக இடுபவர்.
  6. எஸ் ராமகிருஷ்ணன்: இவருடைய சிறுகதைகள் are much much better presented than his நாவல். நாவல் என்று வந்தால் காப்பியமாக, காவியமாக, பக்கம் பக்கமாக போக வேண்டும் என்பதை ஜெயமோகன் மாதிரி வலுக்கட்டாயமாக வைத்துக் கொண்டிருக்கிராரோ என்னும் சந்தேகம் வரவைப்பவர். At least, ஜெயமோகனாவது ‘பின் தொடரும் நிழலின் குரல்’ போன்றவற்றில் அலுக்கவைக்கமாட்டார். ஆனால், ஜெமோவின் ‘லங்கா தகனம்’, ‘பத்ம வியூகம்’ போன்றவற்றை விட இவரின் comparable கதைகள் என்னைக் கவர்ந்தது.
  7. அ. முத்துலிங்கம்: முதல் வாசிப்பிலேயே சொக்குப்பொடி போடுபவர். எதார்த்தத்துடன் வன்முறை காட்டாத அங்கதம் கொடுப்பார். அன்றாட வாழ்வில், மேட்டுக்குடி வாசகர் பார்த்திருக்கக் கூடிய சம்பவங்களைச் சொன்னாலும் சுவாரசியமாகச் சொல்பவர்.
  8. நகுலன்: One of a kind. எழுத்து புரியும்; அணுக முடியும். அனுபவத்திற்கேற்ப, சமயத்திற்கேற்ப அசாத்தியமாகவும் தத்துவமாகவும் அசை போடக் கூடியதாகவும் இருக்கும்.
  9. பாவண்ணன்:எது எழுதினாலும் ‘நன்றாக இருக்கும்’ என்னும் consistency. ஆர்ப்பாட்டமின்மை. அறியாத விஷயங்களை சொல்லிக் கொடுக்கிறேன் பார் என்னும் அகம்பாவமின்மை. எழுத்தில் அசோகமித்திரனிடம் பணிவு கலந்த விட்டேற்றித்தனம் தெரியும் என்றால், இவரிடம் அடக்கம் மட்டும் தெளிந்த ஆர்வம் ததும்பும்.
  10. சுஜாதாவைக் குறித்து ஏற்கனவே நிறைய சொல்லியாச்சு.

இப்படி தமிழுக்கு 10 பேர் வைத்துக் கொண்ட மாதிரி நோபல் விருது வென்றவர்களையும், நான் வாசித்த ஆங்கிலப் பெருசுகளான, நய்பால், சல்மான் ருஷ்டி, கோட்ஸி போன்றோருடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஜெயமோகனுக்கேயுரிய தனித்துவ இலக்கிய குணங்கள் என்று பார்த்தால்.

  1. சுஜாதாவிற்கு பின் வெரைட்டி. கேட்டதும் எழுதிக் கொடுக்கும் வேகம். சினிமா, சிறுகதை, சங்க இலக்கியம், பக்தி (ஆன்மிகம்?) சகலமும்!
  2. சுந்தர ராமசாமியிடம் கருத்து கேட்டால் பேசினால் முத்து உதிர்ந்திருமோ என்றுதான் இருக்கிறது. இன்றைய 140 எழுத்து அடக்குமுறை ட்விட்டர் காலத்தில் கூட ஜெயமோகனிடம் சுருக்கமின்மை. இது பெருகி வரும் சிறு பத்திரிகை பதிப்பாளருக்கு வசதி.
  3. சாரு நிவேதிதாவிற்கு எதைப் படிக்க வேண்டும் என்று தெரிந்திருந்தால், ஜெமோவிற்கு அதைப் படிக்கும் பொறுமையும், வாசித்த பிறகு, takeawaysஐ தன்னுடைய பாணியில், இந்திய கலாச்சார தர்க்கம் கொண்டு விளக்க முடிவது.
  4. அனுபவம். எந்த எழுத்தாளர் இங்கே சாமியார்களுடனும், பிச்சைக்காரர்களுடனும், புத்தகம் வாசிக்கும் பெருமக்களால் இன்ன பிற அசூயை கொண்டு ஒதுக்கப்படுபவர்களுடனும் வாழ்ந்திருந்துவிட்டு எழுத முடிகிறது?
  5. பிற மொழித் தேர்ச்சி: அமெரிக்காவில் இருந்து கொன்டு ஆங்கில இலக்கியங்களையும், மேல்நாட்டு சஞ்சிகைகளையும், அந்த ஊர் ஊடகங்களின் மாற்றுப் பார்வையும் தெரியவரும்போது மனது விசாலமடைகிறது. இதுவெல்லாம், சிறுவனாக இருந்தபோதே கிடைத்த சூழல்.
  6. தொன்மம், மரபு போன்றதெல்லாம் எழுதக்கூடாதவை; taboo போல் தூரம்னா பார்த்த சமயத்தில் அதையெல்லாம் புதுப்பிக்கத் தெரிந்தவர்.
  7. Convention இதுதான். இப்பொழுது இதுதான் in-thing என்பதால் செவ்வியல் outdated; மார்க்சியமும் மாய எதார்த்தமும் மட்டுமே எழுதவேண்டும் என்று peer pressureகளுக்கு உள்ளாகாமல் ட்ரென்ட் செட்டராய் இருப்பது.
  8. நகைச்சுவை இல்லாத ஆக்கம் பிரசங்கியின் உரை; நகைச்சுவை மட்டுமே கொண்ட இலக்கியம் சிரிப்பாக அர்த்தமிழக்கும் அபாயம் உண்டு. இரண்டையும் கலக்கத் தெரிந்தவர்.
  9. தன்னை முன்னிறுத்திக் கொள்வது; ‘விஷ்ணுபுரம்‘ எழுதியபிறகு, என்னைப் போல் பலரும் ‘என்ன இருக்கு இதில!?’ என்று புறந்தள்ளும்போது சினம் தலைக்கேறாமல் விளக்கிப் பேச வேறு எந்த தமிழ் எழுத்தாளருக்கும் பொறுமையும் வாதத்திறமையும் நேரமும் படைப்பூக்கமும் இருக்காது.
  10. ஒரே கதையை விதவிதமாய் எழுதியவர் பலர். வண்ணதாசன், கி.ராஜநாராயணன் உட்பட பலரும் அயற்சி தருபவர்கள். தொகுப்பை வாங்கினால், வருடத்திற்கொன்றாய் படிப்பது உசிதம். ஜெயமோகனிடம் இந்த ரிஸ்க் இல்லை.

Books

எட்டு வயது மகளின் அரை மணிநேரப் பொழுதைப் போக்க புத்தகங்களைக் குறித்து சிறுகுறிப்பு வரைய சொன்னதன் விளைவு:

Books are interesting because they can bring you into a imaginary world. For example pretend you have never played soccer and you wanted to see what soccer was like so you decided you were going to read a book about soccer and suddenly it feels like you have played soccer after you read the book. From my school library I brought a book called “Punished”! I already read 1 chapter and I can not wait until the next chapter. That made me feel books I read are fiction books. I always daydream and If I read non-fiction books I only read nocturnal or biography books.

காதலர் தினக் கதைகள்

Happy Valentines Day!

அன்பர் தினத்திற்காக என்ன வாங்கிக் கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டே விலுக் விலுக்கென்று நடந்தபோதுதான் அது நடந்தது. நடந்தால்தான் பரவாயில்லையே! கால் வழுக்கி கீழே உடல் விழ, வலது கை அதிரடியாகத் தாங்கி தோள் கொடுத்தது.

சமாளித்து பயணத்தைத் தொடர்ந்தேன்.

நண்பரிடமும் இந்த வீர சாகச விழுந்தெழுந்த கதையை சொன்னேன். எங்களுக்கு அறிமுகமான இன்னொரு நண்பருக்கு நிகழ்ந்ததை விவரிக்க ஆரம்பித்தார்.

மனைவி ஊருக்கு புதுசில்லை. என்றாலும் ஆனைக்கும் அடி சறுக்கும் அல்லவா? பனியில் தவறி விழுந்திருக்கிறார். சுற்றும் முற்றும் எவரும் பார்க்கவில்லையே என்று உறுதி செய்துவிட்டு அசால்ட்டாக அப்படியே விட்டும் விட்டார்.

இரண்டு வாரம் கழித்து தலைவலி, மண்டையிடி. மருத்துவரிடம் போனால் எம்.ஆர்.ஐ, ஸ்கேன் செய்து தலையில் கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. பனியில் விழுந்ததனால்தான் என்று டாக்டர்கள் சந்தேகிக்கிறார்கள்.

பனியில் பார்த்து நடந்து கொள்ளவும்.

~oOo~

முன்னே பின்னே புஷ் அப் செய்து மூன்று வருடமாவது ஆகிப் போயிருக்கும். ‘காக்கி சட்டை’ கமலாக ஒற்றைக் கை புஷ் அப் எடுத்த தோள் பட்டை வலித்துக் கொண்டிருந்தது.

காந்தாரி பரம்பரையில் வந்த மனைவி சும்மா விடுவாரா?

பார்வையற்ற திருதராட்டிரனுக்காக கண்ணைக் கட்டிக் கொண்டாள் காந்தாரி. கை வலியால் பாதிக்கப்பட்ட கணவனுக்காகவோ, என்னவோ!?

கார் கதவை சாத்தும்போது கையை வைத்து சாத்திக் கொண்டு விட்டாள். விரல் நகம் பெயர்ந்து உதிர, உதிரமும் கொட்டுகிறது. எனக்கு கால்கட்டு போட்டார்கள். அவளுக்கு இப்போது விரல்கட்டு.

பட்ட காலே படும்; லே ஆஃப் ஆன குடியே டவுன்சைஸ் ஆகும் என்று பெரியோர்கள் அன்றே பழமொழிந்து இருக்கிறார்கள்.

~oOo~

இந்த சம்பவத்தையும் மதிய உணவில் சம்பாஷித்தோம். இன்னொரு நண்பர் தன் அம்மாவிற்கு செருமனி நிகழ்த்திய கொடூரத்தை நினைவு கூர்ந்தார்.

லுஃப்தான்ஸா சென்னையில் இருந்து ஃப்ரான்க்ஃபர்ட் கொண்டுவிட்டிருக்கிறது. ஏழு எஸ்கலேட்டர், ஆறு செக்யூரிடி செக் முடித்துவிட்டாள் அவரின் அன்னை.

கடைசியாக லிஃப்ட்.

எலிவேட்டரில் பாய்வதற்காக தன் மெல்லிய கையை நடுவில் வீசிப் பார்க்க, லிஃப்ட் கதவு மூடிக் கொண்டு, விரல்களை பதம் பார்த்து விட்டது.

குருதி கொட்ட கொட்ட, முதலுதவி கேட்டிருக்கிறார். ‘விமான நிலைய ஊழியருக்கு அடிபட்டால்தான் ஃபர்ஸ்ட் – எயிட்; உங்களுக்கு நோ எயிட்’ என்று ஜெர்மானிய ஊழியர்கள் நிராகரித்துவிட்டார்கள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக ‘Defibrillator இருக்கிறது! வேண்டுமா?’ என்றும் கரிசனையோடு விசாரிக்கிறார்கள்.

கூடவே, இரண்டு பெரிய ஃபாரம்களை நீட்டி, கையெழுத்தும் கோரி இருக்கிறார்கள். கையொப்பம் இட்டால்தான், பாஸ்டனுக்குப் பறக்கும் விமானத்தில் ஏற முடியும். அதாகப்பட்டது, ‘உங்களுக்கு விமானத்தில் அடிபடவில்லை; அதற்கு முன்பே பாதிக்கப்பட்டு விட்டீர்கள்! எங்களுக்கும் உங்கள் உடல் சேதத்துக்கும் எந்தப் பொறுப்பும் கிடையாது!’

கைகுட்டை எடுத்து ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுத்து வலது கை இழந்த ஏழு மணி நேரப் பயணத்திற்கு பின் பாஸ்டன் வந்தவுடன் நேரே எமர்ஜென்சி சென்றிருக்கிறார்கள்.

‘உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்றுதானே வள்ளுவப் பெருந்தகை சொல்லி விட்டுப் போயிருக்கிறார். சேவை நிறுவனங்களுக்கும், விமான நிலையத்திற்கும், தொலைதூர பயணிகளுக்கும் விரல் நெகிழ்ந்தாலும் பொருந்தும் என்று சொல்லவில்லையே!

எனவே, லிஃப்ட்டுக்குள் நுழையும் அவசரத்தில் கையை நீட்டாதீர்கள். அதுவும் லுப்தான்சாவில் பயணித்து ப்ரான்க்பர்ட்டில் நீட்டவே நீட்ட வேண்டாம்.

~oOo~

மீண்டும் சொந்தக் கதைக்கே வந்து விடுவோம்.

வருத்தந் தரும்மெய்யுங் கையில்
    தழையும்வன் மாவினவும்
கருத்தந் தரிக்கும் நடக்கவின்
    றைய கழல்நினையத்
திருத்தந் தருளும் திகழ்கச்சி
    ஏகம்பர் சீர்க்கயிலைத்
துருத்தந் திருப்பதன் றிப்புனம்
    காக்கும் தொழிலெமக்கே.

எமக்குத் தொழில் ட்விட்டர் அடிப்பது, ப்ளாகில் பின்னூட்டம் இடுவது, விவாதத்தில் வம்பு தேடுவது என்று தேமேன்னு இருந்தவனை பாத்திரம் தேய்ப்பது, சமைப்பது என்று பொறுப்பு கூட்டினார்கள்.

ஆடலுடன் பாடல் போல் படத்துடன் பப்படம் பொரிப்பது எப்படி என்று எழுதியவரை கிண்டல் செய்ததன் கர்மபலனோ? டிஷ்வாஷர் போட்டால் உலகம் வெம்மையாகிறது என்று ஒப்பாரி கட்டுரை எழுதியதற்கான பழிக்குப் பழியோ? Frozen vegetables வாங்குபவரை ஃப்ரெஷ்ஷாக வாங்கி, கட் செய்தால்தான் சத்து என்று மிரட்டியதற்கான கை மேல் பலனோ? மினிமம் – ஒக்க கூட்டு, தோ கறி, மூன்று கோர்ஸ் இருந்தால் மட்டுமே பசியாறுவேன் என்று முனிசிரேஷ்ட வாழ்க்கையின் சாபமோ?

இரண்டு நாள் சமைத்தால் போதும். ஐந்தாண்டு வலைப்பதிந்த அனுபவமும் பத்தாண்டு இலக்கியம் வாசித்ததின் ஆய பயனும் ஒருங்கே சித்திக்கும்.

~oOo~

கல்யாணத்திற்கு முன் என்னுடைய சமையல் சம்பிரதாயமானவை. ஃப்ரென்ச் ஃப்ரைஸ் கொண்டு கறி செய்வோம். ஆனியன் ரிங்ஸ் சாம்பாரும் கிடைக்கும்.

கைக்குக் கிடைத்த பதார்த்தத்தைக் கொண்டு வழக்கமான சிஷ்ருஷைகளை அரங்கேற்றி சமையல் நடக்கும். எல்லாவற்றுக்கும் தாளித்துக் கொட்ட வேண்டும். சாம்பாரோ, ரசமோ, கூட்டோ — எதுவாகினும் கவலை வேண்டாம். எல்லாவற்றிலும் பெருங்காயம் முதல் சிக்கன் மசாலா வரை சகலமும் மிதக்கும்.

எது செய்தாலும் ஒரே ஸ்டான்டர்ட்; அதே டேஸ்ட். யார் நளபாகப் பொறுப்பெடுத்துக் கொண்டாலும் மாறி விடாத சுவை; சிம்பிள் சூத்திரம். எல்லாவற்றையும் போடு; நாலு கலக்கு கலக்கு. நிறைய காரம் போடு. இதுதான் ட்ரேட் சீக்ரெட்.

வந்த புதிதில் மனைவிக்கு இதை செய்து போட்டு மிரளவைத்ததுதான். இன்றளவிலும் ‘அவன் வெண்பொங்கல் எக்ஸ்பர்ட் ஆக்கும்!’ என்று செல்லமாய் வஞ்சப் புகழ்ந்து ஒதுக்கி வைத்திருக்க செய்தது.

‘இப்படித்தான் இருக்க வேணும் சமையலு’ என்று மைக்ரோ மேனேஜ் செய்து, அடுப்பங்கரையிலே மேற்பார்வையிட்டு, ஒவ்வொன்றையும் எப்படி பொறுமையாக பாதி சூட்டில் வைத்து வேக வைக்கவேண்டும் என்று பாலபாடம் எடுத்ததில் மனைவிக்கு சமையலே மறந்திருக்க வேண்டும்.

இப்பொழுதெல்லாம் மைரோவேவ் டின்னர் மாதிரி வருமா? இன்று பீட்சா சாப்பிடலாமா என்று மார்க்கெடிங் செய்து பார்க்கிறேன். சமையலை விட சந்தைப்படுத்தல் சுளுவானது.

~oOo~

சமைத்தேன் என்பதற்கான சாட்சியாக கீழே கொண்டைக்கடலை சாம்பார் கிடைக்கிறது. கூடிய விரைவில் ரெஸிபியுடன் சந்திக்கிறேன்.

kondai-kadalai-sambar-chick-peas-gravy-garbanzo-beans-recipes

நான் வித்யா: புத்தகம்

ஏற்கனவே நிறைய விமர்சனம் படித்து இருந்தாலும், பால் மாற்றிக்கொண்ட சிலரோடு பழகி இருந்தாலும், நான் சரவணன் வித்யா, எடுத்தவுடன் கீழே வைக்க முடியாத அளவு பதைபதைப்பான நடையுடனும் வீரியத்துடனும் எழுதப்பட்டிருக்கிறது.

அவசியம் வாசிக்கவும்.


ஆசிப் மீரான்

‘கோத்தி’யாக உலாவரும் சரவணன் தனது ‘நிர்வாணத்து’க்காக ஆந்திரா செல்லும் பகுதியிலிருந்து துவங்கும் அவரது சுயசரிதையில் அவருக்கேற்பட்ட அவமரியாதைகள், துணிச்சலோடு செயல்பட்ட தருணங்கள், அதையும் மீறி காரணமின்றி மிதிக்கப்பட்ட தருணங்கள், எதிர்கொண்ட சவால்கள், உதவிய நண்பர்களின் மீதிருக்கும் அன்பு, தங்களில் ஒருத்தியாக ஏற்றுக்கொண்ட திருநங்கை தோழிகள், திருநங்கைகளின் எழுதப்படாத சட்டம், திருநங்கைகளின் நானிகள், திருச்சி, சென்னை, பூனா, ஆந்திரா, மதுரை சென்னை என்று அலைக்கழித்த வாழ்க்கையில் கடந்து போன சம்பவங்கள், சந்தித்த அவலங்கள் என்று உயிர்வலியைச் சொல்லும் புத்தகம் இது.

“சாத்தான்”குளத்து வேதம்


இகாரஸ்

வாசித்ததும் மனசு கனத்துப் போனது என்று சொன்னால் அது க்ளிஷே ஆகப் பார்க்கப் படுமோ என்று தோன்றுகிறது.

கணிப்பொறி அறிவியலில் இளநிலைப் பட்டமும், மொழியியல் பாடத்தில் முதுகலையும் படித்துவிட்டு, நாடகத்துறையில் ஈடுபாடு கொண்ட ஒருவர், தன்னுடைய ஆண் என்கிற அடையாளத்தைத் துறக்க மேற் கொண்ட முயற்சிகளையும், துறந்த பின்னர் சமூகம் அவரை எதிர் கொண்ட முறைகளையும், சந்தித்த வன்முறைகளையும், நிராகரிப்புகளையும் உள்ளடக்கி எழுதியிருக்கும் இந்த தொகுப்பு, தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் ஒரு மைல்கல்.

Prakash’s Chronicle 2.0


கிருத்திகா

மிகவும் சுயம் சார்ந்த உணர்ச்சிகளையும் அதற்கான ஜீவ மரணப்போராட்டத்தையும் எந்த வித சுய பச்சாதாபமும் இன்றி மிகத்தெளிவாக அதே சமயம் புனைவுகளின் சாயல்களின்றி ஓர் கம்பீரமான் எழுத்து நடையில் படைத்துள்ளார். “Non fiction/Autobiography” என்ற பிரிவின் கீழ் இந்தப்புத்தகம் தொகுக்கபட்டிருந்தாலும், இது அவரது சொந்த வாழ்க்கையாக மட்டும் கருதப்படாமல் மொத்த திருநங்கைகளின் ஒரு வாழ்வியல் போராட்டத்தை விளக்கும் விதமாக அமைந்திருப்பது இந்த புத்தகத்தின் வெற்றிக்கு ஒரு வித்து.

வடிகால்


பத்ரி

இதை எழுதும்போது வித்யா எத்தனை மனச்சங்கடங்களை அனுபவித்திருப்பார் என்பதை வாசிக்கும்போது என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

திருநங்கைகள் குறித்து நமக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றுமே இல்லை என்று நிராகரித்துவிடுகிறது இந்தப் புத்தகம். கஷ்டம் என்றும் துன்பம் என்றும் துயரங்கள் என்றும் ஆண்களும் பெண்களும் சொல்வதெல்லாம் உண்மையில் கஷ்டங்கள்தானா, துன்பங்கள்தானா என்று வாசித்ததும் நம்மைக் கேட்கவைக்கிற தன்மை இந்நூலின் முக்கிய அம்சம்.

எண்ணங்கள்


சுரேஷ் கண்ணன்

சு.சமுத்திரத்தின் ‘வாடாமல்லி’ என்கிற நாவல். ‘பெரும்பாலும் ஒரு ஆணுக்குள் சிறைப்பட்டிருக்கிற பெண்மைதான் ஒரு காலகட்டத்தில் விழித்தெழுந்து ஆண்மையை மறுதலித்து உச்சநிலையில் திருநங்கையாக உருமாற வைக்கிறது’ என்கிற அரைகுறையான புரிதலே அப்போதுதான் ஏற்பட்டது.
:::

‘என்னைத் தவிர எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்களோ’ என்கிற தாழ்வுணர்ச்சி பெரும்பாலோருக்கு தோன்றுவதைப் போலவே எனக்கும் அவ்வப்போது தோன்றுவதுண்டு. துக்ககரமான மனநிலையில் ‘எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறேன்” என்று வாழ்க்கையை திரும்பிப்பார்க்கும் போது சுயபரிதாபம் மனமெங்கும் நிறைந்து வழியும்.

பிச்சைப்பாத்திரம்


புத்தகப்பார்வை

நான்கு பேர் வரிசையாக ஓரிடத்தில் அமர்ந்திருந்தார்கள். அவர்களுள் மூன்று பேர் வாட்டசாட்டமாக, விறைப்பாக இருந்தார்கள். ஒருவன் மட்டும் கொஞ்சம் சாது போல் தெரிந்தான். பொதுவாக முரடாகத் தோற்றமளிக்கும் ஆள்களைத் தவிர்ப்பது என் வழக்கம். எனவே, அந்த மூவரைத் தவிர்த்துவிட்டு நான்காவதாக இருந்த அந்தச் சாது நபரிடம் போய்ப் பிச்சை கேட்டேன்.

தந்தார். இரண்டு ரூபாய். அவர் தமிழர்தான். எனவே, இயல்பாக ஓர் உரிமை எடுத்து ‘என்ன தமிழ்க்காரரே, ஒரு அஞ்சு ரூபா தரக்கூடாதா?’ என்று கேட்டேன்.

நான் வாக்கியத்தை முடித்திருக்கவில்லை. சற்றும் எதிர்பாரா விதத்தில் பளாரென்று கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. நிலை குலைந்து போனேன்.


இறுதிப் பகுதி

எனக்குத் தெரிந்து இந்தியாவில் இயங்கும் ஒரு தொண்டு நிறுவனமும் திருநங்கைகள் பிச்சை எடுப்பதிலிருந்தோ பாலியல் தொழில் புரிவதில் இருந்தோ மீள்வதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுத்ததில்லை. ‘நீ பாலியல் தொழிலே செய்; ஆனால் பாதுகாப்பாகச் செய்’ என்கிற போதனை ஒருவர் வாழ்வில் என்ன மறுமலர்ச்சியை உண்டாக்கும் என நினைக்கிறீர்கள்? வெறும் அபத்தம்.
:::
திருநங்கைகளில் பலர் விநோதமாக நடந்துகொள்வதும், உரக்கப் பேசி நடுவீதியில் தர்ம சங்கடம் உண்டாக்குவதும், பாலியல் தொழிலுக்கு வலிய அழைப்பதும், ஆபாசமாக பேசி அருவருப்பூட்டுவதும், முற்றிலும் அவர்களின் தற்காப்புக்காக மட்டுமே என்று நான் சொன்னால், தயவு செய்து நம்புங்கள். அதுதான் உண்மை.

பாதுகாப்பற்ற சமூகத்தில், எங்களுக்கான குறைந்தபட்ச பாதுகாப்பை நாங்கள் இவ்வாறெல்லாம் செய்துதான் உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. உடல் வலிமை மிக்க முரட்டு ஆண்கள் வம்புக்கு வந்தால், எங்களால் எதிர்த்து நிற்க முடியாது. பணிந்துபோகவும் விருப்பமில்லாவிட்டால், அருவருப்புணர்வை உருவாக்கி அவர்களை விலகிச் செல்ல வைப்பதே எங்களுக்குத் தெரிந்த வழி.
:::

விளிம்புநிலை பிரதிநிதி ஒருவரின் நூலை பதிப்பிக்க முன்வந்ததற்காக கிழக்கை நாம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.


பேட்டி

மனதால் ஏற்றுக் கொண்டாலும், வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதற்கு சமூகமும், சமூக நியதிகளுமே காரணமாக உள்ளது. முதலில் வீட்டில் ஒரு திருநங்கை இருப்பது அவ்வீட்டிற்கான அவமானசின்னமாக கருதப்படுகிறது. இது உறவுகள் மத்தியில் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. சகோதர/சகோதரிகளின் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு தடையாகிறது. உதாரனத்திற்கு சொல்வதென்றால், ஒரு குடும்பத்தில் திருடன், கொலைகாரன் போன்ற குற்றவாளி இருந்தால் எத்தகைய இருக்கமான சூழல் நிலவுமோ அதைவிட மோசமான விளைவுகளை எங்கள் குடும்பம் சந்திக்க நேர்கிறது. மட்டுமன்றி தன்னால் தன் குடும்பத்திற்கு எந்த லாபமும் இல்லை ஆனால், அவமானம் மட்டும் நேர்கிறது என்ற குற்றவுணர்வும் எங்களை வெளியேற்றுகிறது.

சட்டமும், சமூகமும் ஏற்றுக் கொண்டால் குடும்பம் தானாகவே எங்களை ஏற்றுக் கொள்ளும்.

பார்வைகள்: கேப்பங்கஞ்சி with கவிதா


ஆழியூரான்

26 வயதென்பது வாழ்வை தொடங்க வேண்டிய வயது. சுய சரிதை எழுத வேண்டிய வயதல்ல. ஆனால், இதற்குள் லிவிங் ஸ்மைல் கடந்து வந்திருக்கும் வலி மிகுந்த பாதை, ரணங்களை மட்டுமே அவருக்கு வழங்கியிருக்கிறது.
:::
‘கண்ணாடி எல்லோருக்கும் அவரவர் ஸ்தூல உருவத்தை மட்டுமே பிரதிபலிக்க, திருநங்கைகளுக்கு மட்டும் அவர்களின் மனத்தை, உள்ளே கொந்தளிக்கும் உணர்வுகளை, உள்ளார்ந்த அவர்களுடைய பெண்மையை ஒரு சித்திரமாக மாற்றி கண்ணெதிரே காட்டும். இதை மற்றவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது. உங்களுக்கு முகத்தையும், எனக்கு முகத்துக்குப் பின்னால் உள்ள மனதையும் காட்டும் கருவி அது. எனக்கு என்றால் எங்களுக்கு.. எங்கள் எல்லாருக்கும்.!’

நடைவண்டி


லிவிங் ஸ்மைல் சுயசரிதையில் என்னை மிகவும் பாதித்த சில வாழ்க்கைச் சிதறல்:

எல்லாவிதமான கஷ்டங்களையும் சகித்துக் கொண்டு விடலாம். எப்போதாவது நாம் ஓர் அனாதை என்று தோன்றிவிடுமானால் பெரிய பிரச்னை. சுய இரக்கம் ஒரு வலுவான விஷம். [பக். 135]

திருநங்கைகளிடம் வியாபாரம் செய்தால் என்ன? பொருள் முக்கியமா? விற்போர் முக்கியமா? இது என்ன மனோபாவம் என்று எனக்குப் புரியவே இல்லை.

கைதட்டிப் பிச்சை எடுத்தபோது கூடக் காசு தர முன் வந்தவர்கள், வியாபாரம் என்று வந்தபோது, வேறுபக்கம் திரும்பிக் கொண்டார்கள். ஒரு நாளைக்கு ஒரு முரையாவது ‘உழைச்சு திங்க வேண்டியதுதானே! போங்க போங்க’ என்று விரட்டிய மகராசன் யாரும் அந்த ரயில்களில் ஏனோ வரவில்லை. [பக். 153]

யோசித்துப் பார்த்தால் என் பிரச்னைகள் எல்லாவற்றுக்கும் நானேதான் காரணமாக இருந்துவந்திருக்கிறேன். நானே விரும்பித் தேடிக் கொண்டவைதான் எல்லாம். இன்னொருத்தரைக் குறை சொல்ல முடியாது.

ஆனால், என் தேவைகள், என் இருப்பு, என் வாழ்க்கை அடுத்தவர்களுக்குப் பிரச்னை தரக்கூடியவையாக அமைவதற்கு நானா காரணம்? புனே எனக்குப் பிடித்திருந்தது. முக்கியமாக அங்கு எனக்கு கிடைத்த சுதந்திரம். ஒரு பெண்ணாக சுதந்தரமாக வலையவர முடிந்ததில் இருந்த ஆனந்தம். ஆனால் அங்கு நான் பிச்சை எடுக்கவோ, விபசாரம் செய்யவோ மட்டும்தான் முடியும். இரண்டுமே எனக்குப் பிடிக்காதபோதுதான் புனேவை விட்டு வெளியேற முடிவு செய்தேன். [பக். 164]

அவரது பழைய சிறு லெண்டிங் லைப்ரரி இப்போது அதிநவீனமாகிவிட்டிருந்தது. உலகம் ரொம்பத்தான் வேகமாக முன்னேறுகிறது என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அவரால்தான் என் முடிவை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. [பக். 168]

இது என்ன வாழ்க்கை என்று புரியவேயில்லை. எல்லாமே நிச்சயமற்றதாக இருந்தது. வேலை கிடைக்கலாம். கிடைக்காமல் போகலாம். தங்க ஓரிடம் கிடைக்கலாம். அதுவும் கிடைக்காமல் போகலாம். ஊர் உறவுகள், சொந்தங்கள் அனைவரும் இருந்தாலும் இல்லாதது போலவே சமயத்தில் தோன்றுகிறது. [பக். 179]

“போற வர்ற வழியில யாராவது உங்களைக் கிண்டல் பண்ணா எப்படி எடுத்துக்குவீங்க?”
சிறிய புன்னகையோடு ஆரம்பித்தேன். “ஒண்ணும் பிரச்னை இல்லை சார். அதெல்லாம் பழக்கமானதுதான். இப்பக்கூட வர்ற வழியில ஆட்டோ ஸ்டாண்ட்லேருந்து கிண்டல் சத்தம் கேட்டுது. நான் நேரா அவங்ககிட்டயே போயி ஆட்டோ வருமான்னு கேட்டேன். உடனே சைலண்ட் ஆயிட்டாங்க. ‘எங்க மேடம் போகணும்’னு மரியாதையாத்தான் கேட்டாங்க. எந்தப் பிரச்சினையும் இல்லாமப் பத்திரமா கொண்டுவந்து இறக்கி விட்டுட்டான். நாம நடந்துக்கற விதத்துலதான் சார் இருக்கு. அதையும் மீறி கிண்டல் பண்றவங்க எல்லா இடத்துலயும் இருக்கத்தான் செய்வாங்க. அதுக்கெல்லாம் கவலைப்பட்டுக்கிட்டிருக்க முடியாதே சார்? சமாளிச்சித்தான் ஆகணும்.” [பக். 190]

எனது உரிமை. என் பெயரை நான் மாற்றிக்கொள்வதற்கான உரிமை. அதற்காக த.எ.அ. துறையிலிருந்து, → தாலுகா அலுவலகம், → வழக்கறிஞர் அலுவலகம், → மதுரை அரசு மருத்துவமனை என்று அலைந்து அலைந்து அதிகபட்ச அலுவலக விடுமுறையும் எடுத்தாயிற்று. நியுமராலஜி, மதமாற்றம், பெயர் ராசிக் காரணங்களுக்காக ஒரே மாதத்தில் இந்த தேசத்தில் ஒருவர் தம் பெயரை மாற்றிக் கொண்டுவிடலாம்.எத்தனையோ அரசியல் தலைவர்களே மாற்றிக் கொள்ளவில்லையா? ஆனால் என் தேவைக்காக என் உரிமைக்காக என் பெயரை நான் மாற்றிக்கொள்ள விரும்பியபோது அதற்காக ஒன்றரை வருடங்கள் அலைக்கழிக்கப் பட்டேன். [பக். 208]

பெண்களை இழிவாகக் கருதும் சமூக அமைப்பில், ஆணாகப் பிறந்த நபர் பெண்ணாக மாறுவதென்பது ஆண்வர்க்கத்துக்கும், ஒட்டுமொத்த ஆண்மைக்குமான அவமானம் என்ற தட்டையான ஆணாதிக்க சிந்தனையே திருநங்கைகளைப் பெண்ணாக ஏற்கமுடியாமைக்குக் காரணமோ? ஆணிடம் அடிமைப்பட்டே வாழ்ந்து பழகிவிட்ட சில பெண்களும் இதே சிந்தனைக்குப் பழகிவிடுகிறார்கள். [பக். 212]


வாசக அனுபவம்:

  • ‘நான் யார்?’ என்னும் தேடலை அப்படியே பகிர்ந்து கொள்வதில் அனைத்து தமிழ் எழுத்தாளர்களுக்கும் பிரச்சினை உண்டு. லிவிங் ஸ்மைல் விதிவிலக்காக தன் உள்ளத்தை அப்படியே சொல்கிறார்.
  • வறுமையில் வாடுவோர் படும் கஷ்டமும் உண்டு. படிப்பிற்கு பெரும் முக்கியத்துவம் தரும் நடுத்தர வர்க்க ஆசையின் பிரதிபலிப்பும் கிடைக்கிறது. இதை எல்லாம் புனைவில் படித்து சுரணை மங்கிப் போன சமயத்தில் சுயசரிதை என்பதே சுளீர் என்று உறைக்கிறது.
  • விதி‘ திரைப்படத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததற்காக பூர்ணிமா (ஜெயராம்) பாக்யராஜிடம் தர்மசங்கடமான கேள்வி விழுவதற்கு — பார்வையாளர் வருத்தப்பட்டு கொஞ்சம் போல் முன்னேறியும் ஆகிவிட்டது. எப்போது அந்த சினிமா, அன்றாட வாழ்க்கையில் அரவாணிகளை நோக்கி ஈவிரக்கமற்ற வினாக்களைத் தொடுப்பதை எல்லாம் திரைக்கதை ஆக்கும்?
  • இன வரைவியல் என்று ஆவணப் படம் போல் மூன்றாம் மனித ஆய்வுப் பார்வை அல்லாத, நிசமாகவே நாமறிந்த ஒருவரின் துன்பங்களையும் மனவோட்டத்தையும், ஆசாபசங்களையும் ஒருங்கே பதியவைக்கிறது.
  • She pulled herself out of the abyss and found her way to stability, but the redemptive narrative isn′t what carries the book. It is Living Smile’s brutal honesty in evaluating her life, introspective dual identity and at times painfully direct memoir of the relationships. Her refreshing penchant for straight talk keeps you reading, even when you are dreading the consequences of her choices.
  • Things I’ve Been Silent About போல் குடும்ப விஷயங்களை ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக பேசுவதற்கு தைரியமும் மனப்பாங்கும் பக்குவமும் வேண்டும். வித்யாவிற்கு எல்லாம் இருக்கிறது. வாழ்த்துகள்!

ஸ்மைல் பக்கம்