சாப்பாட்டு நிகழ்ச்சியைக் கூட புதிய தலைமுறை டிவியின் ‘கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு’ செய்முறை விளக்கமாக சுருக்காமல், ‘நீங்கள் கேட்ட பாடல்’ விஜயசாரதி போல் தகவல் அடுக்கும் சாதனமாக மாற்றி இருக்கிறது.
சமீபத்தில் கலிஃபோர்னியா சென்று வந்ததில் இருந்து பனை மரம் மீது பாசம் கலந்த ஆர்வம் தொற்றிக் கொண்டிருந்தது. இந்த சமயத்தில் சமீபத்தில் ’சோற்று சரித்திர’த்தத்தை பனை மர ஸ்பெஷலாக்கி இருந்தார்கள்.
பனம்பழ புட்டு, வீட்டுக்கு மேலே பனை ஓலை, பனங்கிழங்கு ஃப்ரை என்று இத்தனை உபயோகங்களை ஆதிகாலத்தி தமிழர் கண்டு பிடித்திருக்கிறாள்! மரமாக வளர வைத்து பயன்படுத்துகிறாள். குட்டிச் செடியாகவே எடுத்தும் உபயோகிக்கிறாள்.
இன்றைய சமூகம் இணையத்தைக் கொண்டு சின்ன சின்ன சேவைகளை அறிமுகம் செய்வது போல் அன்றைய நாகரிகம் இயற்கைப் பொருள்களை வைத்து புதுப் புது பயன்களை கண்டுபிடித்துக் கொண்டே இருந்திருக்கிறது.
அழிந்து போகும் பழங்கால கலைவடிவம்: முப்பாட்டனுக்கு முந்தைய காலத்து பழக்கம். தேவதாசியர்கள் அபிநயித்து நடத்திக் காட்டிய கலை வடிவம். இன்று முனைவர்களும் பேராசிரியர்களும் நாடக ஆர்வலர்களும் வைணவப் பெருந்தகைகளும் ஒன்று சேர்ந்து மறுபடி மீட்டெடுத்து இருக்கிறார்கள்.
நடனம் + இசை + செவ்வியல்: எண்பது வயது தேவதாசியிடம் இருந்து செவிவழிப் பாடல்களை செம்மையாக்கி, விடிய விடிய பன்னிரெண்டு மணி நேர கூத்து வடிவத்தை இரண்டு மணித்துளிகளாக சுருக்கி, பொருத்தமான அரங்க வல்லுநர்களைக் கோர்த்து, நடிக்க வைத்து, முற்றிலும் இலவசமாக பரவசமாக்கினார்கள்.
தேவதாசி + பெண்ணியம்: ஆண் வேடத்தையும் பெண்களே ஏற்று நடிக்கிறார்கள். நாயக நம்படுவானுக்கும் நாராயணனுக்கும் நம்பிக்கும் பெண்களே ஹீரோவாக வேடம் கட்டுகிறார்கள். வாழ்வில் அனுதினமும் அரக்கர்களை தரிசிப்பதால், வில்லன் பிரும்ம ராக்கதனுக்கு, அசல் ஆண் அரங்கேறுகிறார்.
விஐபி: ‘கண்டு கொண்டேன்’² வில்லி அனிதா ரத்னம், கூத்துப்பட்டறையின் நிறுவனர்களில் ஒருவரான நா.முத்துசாமி, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, நாடகத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்த பேராசிரியர் ராமானுஐன், இராமானுஜர் ஆவணப்படம் உண்டாக்கிய அண்ணாமலை, ‘சென்னைஆன்லைன்.காம்’ அண்ணாகண்ணன் என்று பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. விரிவாக கானா பிரபா மாதிரி அளவளாவ ஆசை மட்டுமே; சரக்கில்லை.
நாடக விமர்சனம்: நடுவில் ஜெட்-லாக் பழிபோடலினாலோ அல்லது ‘அகோ வாரும் பிள்ளாய்’ உரையாடலினாலோ அல்லது ஒரே மாதிரி அபிநயப் பாடல்களினாலோ கொஞ்சமாய் கண் சொருகியது உண்மை.
எது தூள் + ரசனை ஜோர்?
ஜனரஞ்சகமாக பல்வேறு கதாபாத்திர அறிமுகங்கள் எவ்வாறி மேடை ஏறும், எங்ங்னம் கொணரப்படும் என்பதை சொன்னார்கள்.
திருக்குறுங்குடி திரு வடிவழகிய நம்பித் திருக்கோவில் கைங்கர்யமான
கைசிக புராண நாடகம்
பிறவித்துயரிலிருந்து ஈடேற எளிதான வழி எது எனப் பூமாதேவி கேட்க, இசைத்தொண்டே வழி என்று ஸ்ரீவராகப் பெருமான் திருவாய் மலர்ந்தருளியது கைசிக புராணம். இதைக் கேட்ட பூமாதேவி ஆண்டாளாக அவதரித்து பூமாலையுடன் பாமாலையும் சூட்டி திரு அரங்கனை மணந்தார்.
ஸ்ரீ வராக புராணத்தில் உள்ள இந்த புராணத்தை கார்த்திகை மாதம் சுக்லபட்ச கைசிக ஏகாதசி முடிந்த துவாதசி காலையில் வைணவக் கோயில்களில் ஸ்ரீ பராசர பட்டர் வியாக்கியானத்துடன் பாராயணம் செய்து வருகிறார்கள். கைசிக ராகத்தின் பலனைச் சிறப்பித்துக் கூறுவதால் கைசிக புராணம் என்று பெயர் பெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரிக்கு 10 கி.மீ. தொலைவில் உள்ள மகேந்திர கிரி அடிவாரத்திலுள்ள திருக்குறுங்குடியில் நம்படுவான் சரிதம் நடைபெற்றதால் அப்பதியிலுள்ள வடிவழகிய நம்பி சன்னதியில் கைசிக ஏகாதசியன்று இந்நாடகம் நடித்துக்காட்டும் கைங்கர்யமாக நடைபெற்று வருகிறது.
மீட்டுருவாக்க முயற்சி
ஐநூறுக்கும் மேலான ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நாடகம் அதன் முழுவலிமையையும் இழந்து நின்றது. சங்கரக்கம்பர், நாராயணன், குறுங்குடி காந்தம்மாள், நம்பி போன்ற பாரம்பரியக் கலைஞர்களின் கைங்கர்ய உள்ளம் ஓரளவேனும் நடைபெறும் அளவில் இம்மரபைக் காத்து வந்தது.
திருக்குறுங்குடி நம்பி திருக்கோவில் பொறுப்பில் டிவியெஸ் (TVS) குடும்பத்தினர் பங்கேற்றதும் அக்குடும்பத்தில் ஒருவரான நாட்டிய வல்லுநர் திருமதி. அனிதா ரத்னம் அவர்களது உதவியும், முயற்சியும் இந்நாடகத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தது.
திரு நாராயண அய்யங்காரின் தத்துவார்த்த ஆலோசனை, பேராசிரியர் சே இராமானுஜத்தின் ஆய்வு மற்றும் வழிகாட்டல், கலைமாமணி பா. ஹேரம்பநாதனின் வடிவாக்கம் ஆகியவை நம்பி திருக்கோவிலில் பத்து ஆண்டுகளாக இத்திருசேவையைத் தொடர வழி செய்துள்ளன.
நம்படுவான் சரிதம்
பாணர் குலத்தில் பிறந்த சிறந்த வைணவ பக்தரான நம்படுவான் தினசரி இரவில் திருக்குறுங்குடி நம்பியை இசையால் பாடிப் புகழ்வதை தமது கைங்கர்யமாகக் கொண்டவர்.
கார்த்திகை மாதம் சுக்கில பட்சம் கைசிக ஏகாதசியன்று நம்படுவான் உண்ணாது உறங்காது விரதங்காத்துப் பெருமாளை சேவிக்க இரவில் வரும்போது, பிரம்ம ராக்ஷசன் ஒருவனால் வழி மறிக்கப்படுகிறார்.
கொன்று தின்று பசி தீர்த்துக் கொள்ள வந்த அந்த ராஷசனிடம், தான் பெருமாளை சேவித்து விட்டுத் திரும்பி வருவதாகப் பல சத்தியங்கள் சொல்லியும் ஏற்காதபோது, பெருமாள் மீதே சத்தியம் செய்து அனுமதி பெறுகிறார்.
பெருமாளைப் பாடி பிரியாவிடை பெற்றுத் திரும்பும் போது வடிவழகிய நம்பியே கிழவராக வந்து சோதிக்க எண்ணி, இராட்சனிடம் திரும்பிப் போகாமல் தப்பித்துச் செல்லும்படி நம்படுவானிடம் கூறுகிறார். ஆனால் நம்படுவானோ சத்தியம் தவறாமல் இராஷஸனிடமே மீண்டும் வருகிறார்.
ஆனால் ராக்ஷஸன் அவரை உண்பதற்குப் பதில் அவரது புண்ணியத்தில் குறிப்பாக கைசிக ராகத்தில் பெருமாளைப் பாடிக் கிடைத்த புண்ணியத்தில் எள்ளளவாவது தருமாறு கெஞ்சுகிறான். அந்தணர் காலத்தில் சோம சர்மாவாக பிறந்த அந்த இராக்கதன் அகந்தையால் யாகத்தில் மந்திரத்தைத் தவறாகச் சொன்னதால் இராட்சனாக சபிக்கப்பட்டான்.
சாப விமோசந்த்திற்காக நம்படுவானின் கைசிக ராகப் புண்ணியத்தைப் பெறக் காத்திருப்பதாகக் கூறி நம்படுவானின் அடிகளில் விழுந்து வணங்குகிறான். நம்படுவானும் இரக்கப்பட்டு தனது பாட்டின் பலனைத் தந்து அவனுக்கு விமோசனம் கொடுத்து நம்பியின் திருவடிகளை அடையச் செய்தார்.
மீட்டுருவாக்கத் திருத்தொண்டும் பங்கேற்பும்
அரங்கில் நம்படுவான் கைவாரம்: கலைமாமணி குரு பி ஹேரம்பநாதன் நம்படுவான்: முனைவர் சுமதி சுந்தர்
திருமதி எம் ராஜகுமாரி பிரம்மராட்சஷன்: திரு எஸ். கோபி நம்பிக்கிழவர்: குமாரி எம்.ஏ. அருணோதயம் துணைப்பாத்திரங்கள்: குமாரி. தமிழ்மதி, குமாரி ஜோதி
இசையில் நட்டுவாங்கம்: திரு எச் ஹரிஹரன் பாட்டு: திருமதி எஸ் லலிதா
திருமதி எஸ் பானுமதி குழல்: திரு என் கிரீஷ்குமார் மிருதங்கம்: திரு என் ஆர் மணிகண்ட தீட்சிதர் நாதஸ்வரம்: திரு அருண்குமார் தவில், சுத்தமத்தளம்: திரு டி செந்தில்குமார்
வல்லுநர் ஆலோசனையில் தத்துவம்: திரு உ.வே திருநாராயண ஐயங்கார் அரங்க இயல்: கலைமாமணி நா முத்துசாமி பனுவல்: முனைவர் ம வேலுசாமி இசை: பேராசிரியர் ம வைத்தியலிங்கம்
முனைவர் அரிமளம் பத்மனாபன்
ஆவணப்படுத்துதலில்
முனைவர் கு. முருகேசன்
திரு எஸ் ஏ கன்னையா
நிர்வாக ஒருங்கிணைப்பு: திரு ஆர் நாகராஜன்
திரு ஜி ராஜமாணிக்கம் உதவி: திரு ஜி விஜயகுமார்
வடிவமைப்பு: கலைமாமணி பி ஹேரம்பநாதன்
வழி நடத்துநர்: பேராசிரியர் சே இராமானுஜம்
கலையாக்க ஆலோசகர் மற்றும் தாளாளர்: கலைமாமணி திருமதி அனிதா ரத்னம்
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde