தந்தையர் தினத்திற்காக பரிசு என்ன தரலாம் என்று மகள் கேட்டாள். புத்தகக் கடையில் கொஞ்ச நேரம் என்னை தனியே விட்டு வைக்குமாறு சொன்னேன். சனிக்கிழமை மாலை அன்று அத்தனை பேரை பார்ன்ஸ் அண்ட் நோபிள் கடையில் பார்த்ததில் மழையைக் கண்ட கலிஃபோர்னியா போல் மகிழ்ச்சி ஏற்பட்டது. இலக்கின்றி மேய ஆரம்பித்தேன்.
முதலில் புத்தம் புதிய அதிவிற்பனை நூல்களைப் பார்த்தேன்.
”Make Something Up: Stories You Can’t Unread By Chuck Palahniuk” அட்டைப்படம் கவர்ந்தது. ‘ஃபைட் கிளப்’ (Fight Club) எழுதியவரின் கதைத் தொகுப்பு. புகழ்பெற்ற பள்ளியில் படிக்கும் பிரகாசமான பதின்ம வயது மாணவர்கள் புத்தம்புது போதை மருந்தின் தாக்கத்தில் வீழ்ந்து கிடப்பதை ‘Zombies’ சொல்கிறது என்கிறார்கள். தந்தையின் அந்திமக் காலத்தின் கடைசி நிமிடங்களில் சொல்லக்கூடாத நகைச்சுவையை ஜோக்கடிக்க விரும்புவதை ‘Knock, Knock’ல் எழுதுகிறார். தன்னிடம் தசைப்பிடிப்பை நீக்க வரும் சாகக்கிடப்பவர்களுக்கு ‘விடுதலை’ அளிக்கும் ‘Tunnel of Love’ என பலதரப் பட்ட கதை இருப்பதாக உள் அட்டை சொல்லியது.
அடுத்தது “My Fight / Your Fight by Ronda Rousey”. கருப்பு வெள்ளைப் படம் கவர்ந்தது. பெண்களுக்கான சுய முன்னேற்ற நூல். எனக்கு எப்போதுமே ரஜினிகாந்த் பிடித்தேயிருக்கும் என்பது போல், இது மாதிரி உற்சாகப்படுத்தி, ஊக்கமூட்டும் வார்த்தைகளைச் சொல்லும் வாழ்கை அனுபவப் புத்தகங்களும் பிடித்தே இருக்கிறது. இரண்டு மூன்று அத்தியாயங்கள் வாசித்தேன். ‘ஏதாவது சாதிக்கணும்ப்பா…’ என்னும் எண்ணம் கரைபுரண்டோட வைக்கிறது. சகட்டு மேனிக்கு ஃபக் உபயோகிக்கிறார். அதை விட சரளமாகத் தோல்விகளைத் தாங்கிக் கொண்டு வெற்றிப் படிக்கட்டுகளை ஏறி இருக்கிறார்.
கதைப் புத்தகம் ஆச்சு; டானிக் பூஸ்ட் ஆச்சு; கடைசியாக கொஞ்சம் இலக்கிய அரட்டை + வம்பு.
Harold Bloom delivers the chosen ones unto the multitudes. (From left: Willa Cather, Edith Wharton, Edgar Allan Poe, Philip Roth, Ernest Hemingway, and James Baldwin.)
Harold Bloom எழுதிய “The Daemon Knows: Literary Greatness and the American Sublime”. ப்ளூம் – இந்தப் பெயர் எப்படி எனக்கு அறிமுகம் ஆனது?
வழக்கம் போல் செய்திகளில் அடிபட்டுதான் அறிந்துகொண்டேன். 2004ஆம் வருடம். நவோமி வொல்ஃப் (Naomi Wolf) உடைய உள்தொடயில் கைவைத்து பல்லிளித்து அத்துமூறிய இன்னொரு பேராசிரியர் என்ற வகையில்தான் தெரிய வந்தார். பெண்களைக் கருதுவது போல்தான் இலக்கிய மதிப்பீடுகளையும் முன்வைக்கிறாரோ என்னும் சர்ச்சை தொடர்ந்தது. 1994ல் இனம், நிறம், பால் அடிப்படையில் புத்தகங்களை வகைப்படுத்தி, பல தரப்பட்ட நூல்களை வாசிக்க வேண்டும் என்னும் கருத்தை ‘அழுகுணிக்காரர்களின் போதனாசாலை’ என்று இவர் கருதினார். அது இப்போது மாறி இருக்கிறதா என்பதை இந்த நூலை வாசித்தால் தெரியும்.
நூல்கள் ஆச்சு. அடுத்தது சஞ்சிகைகள்.
ஆங்கிலத்தில் வெளியாகும் பத்திரிகைகளைப் பார்த்தால், தமிழ் எழுத்துக்களைப் போல் எக்கச்சக்கம். தமிழில் வெறும் 26 எழுத்துக்கள் மட்டும் இருந்துவிட்டு, இத்துணை நூல்களும் காத்திரமான மாதாந்தரிகளும் வெளியாகிக் கொண்டிருந்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்!
பார்டர்ஸ் சென்றால் மட்டுமே வழக்கமாகப் புரட்டும், மெண்டல் ஃப்ளாஸ், நி.வொய்.ஆர்.பி., எல்லாம் இப்போது நூலகத்திலேயேக் கிடைப்பதால், அதை அப்படியே விட்டு வைத்தேன்.
லஃபாம்ஸ் குவார்ட்டர்லி மனிதநேயம், அருளுடைமை (philanthropy) குறித்து, சிறப்பிதழ் வெளியிட்டு இருக்கிறார்கள்.
காரல் மார்க்ஸ், பில் கேட்ஸ், கர்ட் வானகட் என்று பல முக்கியமான எழுத்தாளர்கள். ஏதன்ஸ், எகிப்து, பாரிஸ் என்று முக்கியமான நகரங்கள். தற்கால கருத்துருவாக்கிகள் – என பலதரப்பட்ட விஷயங்களைக் கோர்வையாக ஒரே நூலில் அடக்கி இருக்கிறார்கள்.
ப்ரமத்தீயஸ் (Prometheus) பற்றிய குறிப்பு கூட கவர்ந்தது. இந்த உலகின் முதல் பரோபகாரி. கிரேக்கத் தொன்மத்தில் மிகவும் புகழ்பெற்றவர். தேவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த தொழில்நுட்பமான ‘நெருப்பு செய்யும் கலை’யை உலகெங்கும் எடுத்துக் கொடுத்தவர். சாதாரண மனிதர்களுக்கும் தீ வளர்க்கும் வித்தையைக் கற்றுக் கொடுத்தக் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டார். பாறையில் கட்டப்பட்டு வைத்திருக்கப்பட்டார். ஒவ்வொரு நாளும் கொஞ்ச கொஞ்சமாக அவருடைய ஈரற்குலையை, கழுகுகள் உண்டு வரும். இந்தக் கதை கூட நமது ஊர் வேதங்களின் ’ப்ரா மத்’ (திருடுவது) என்னும் சொல்லில் இருந்து வந்திருக்கிறது. பிரா மத் செய்தவன் பிரமாத்தியஸ், என்னும் நாடகமும் இந்தக் கருப்பொருள் சார்ந்த வெளியீட்டில் இடம் பெற்று இருக்கிறது.
ஜப்பானில் வெளியாகும் ’குரங்குத் தொழில்’ (Monkey Business International) முழுக்க முழுக்க ஜப்பானிய மொழி எழுத்தாளர்களை மொழிபெயர்க்கிறது. தற்கால சப்பானிய இலக்கியத்தை அமெரிக்காவிற்கும் மேற்குலகிறகும் அறிமுகம் செய்கிறது. ஜப்பானிய எழுத்தாளர்களை அமெரிக்காவிற்கு அழைக்கிறது. வாசகர் சந்திப்புகளை ஏற்பாடு செய்கிறது. புனைவிலக்கிய கர்த்தாக்களையும், அவர்களின் மொழிபெயர்ப்பாளர்களையும், இவற்றை ஒருங்கிணைக்கும் வர்த்தகர்களையும், எல்லாவற்றையும் வெட்டி, ஒட்டி, கருத்துச் சொல்லும் எடிட்டர்களையும் ஒருங்கிணைக்கிறது. ஐந்து இதழ்கள் வெளியாகி இருக்கின்றன.
”நீங்க எப்படி வாழ வேண்டுமென்று போதிக்காமல், நான் ஆலோசனைகளை சொல்லித் தருவதை விட, உங்க வாழ்க்கை எப்படி நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற தீர்வுகளைத் தருவது முக்கியமானது” என்னும் கொள்கைப்படி மேக்ஷிஃப்ட் (Makeshift) நடக்கிறது. நைஜீரியாவின் குக்கிராமங்களில் வீட்டிலேயே தயாராகும் விமானங்களைச் சொல்கிறார்கள். மெக்சிகோவின் போதைக் கடத்தல்காரர்களோடு உலாவி, அதையும் பதிகிறார்கள். சீனாவின் கொந்தர்கள், எவ்வாறு சீனப் பெருஞ்சுவரை உடைத்து கணினி சுதந்திரத்தை நாடுகிறார்கள் என்பதையும் செய்திக் கட்டுரை ஆக்குகிறார்கள். பன்னிரெண்டு இதழ்கள் வெளியாகி இருக்கிறது.
இலக்கியம் படித்து களைத்துப் போனது மூளை. கொஞ்சம் கலை வெளியீடுகள் பக்கம் ஒதுங்கினேன்.
கலையும் மருத்துவமும் ஒருங்கிணையும் புள்ளியை ஈஸோப்பஸ் (Esopus) சிறப்பிதழாகக் கொணர்ந்து இருக்கிறது. செம தடிமனான பத்திரிகை. ஐநூறு பக்கங்களுக்கு மேல் இருக்கும். எல்லாத் தாள்களும் கெட்டித் தாள். நடு நடுவே இடைச் செருகலாக பதாகைகள், அந்தக் கால மருத்துவக் குறிப்புகள், வெளியீடுகள். இந்த இதழுக்குப் பங்களிப்போர் பட்டியல் மேலும் மலைக்க வைக்கிறது: ஓவியக் கலைஞர்கள், அறுவை மருத்துவர்கள் போல் விதவிதமான வைத்தியர்கள், எழுத்தாளர்கள், மனநோய் வைத்தியர்கள், மனநலக் காப்பகக்காரர்கள், மனநல சிகிச்சை தருபவர்கள், சினிமாக்காரர்கள், பல் வைத்தியர்கள், செவிலிகள், கவிஞர்கள், பொறியாளர்கள், மருத்துவ கலன் தயாரிப்பவர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள், வைத்தியசாலை நிர்வாகிகள், மருத்துவமனை சிப்பந்திகள், இசை விற்பன்னர்கள், புகைப்பட நிபுணர்கள், உள்ளரங்கு வடிவமைப்பாளர்கள், இரத்தம் எடுப்பவர்கள், வரைபுத்தகம் எழுதுபவர்கள், பேராசிரியர்கள்…
புரட்ட புரட்ட சரித்திரமும், சிற்பமும், உருவாக்குதலும், இறப்பும், கருவியாக்கமும், உயிரும் நிறைந்து இருக்கிறது.
சபீல் ரஹ்மான் பெயரைப் பார்த்துதான் பாஸ்டன் ரிவ்யூ பத்திரிகையை எடுத்தேன். தற்கால செய்தியை அலசி இருந்தார்கள். ஒரு பிரச்சினை. அதைக் குறித்து ஒரு முக்கிய கட்டுரை. அதற்கு பத்து விதமான எதிர்வினைகளையும் மாற்றுக் கருத்துகளையும் வெளியிட்டு இருந்தார்கள்.
இன்றைய பொழுதில் வேலைக்காரர் இன்றி கொள்ளை இலாபம் சம்பாதிப்பதே இலட்சியம். கார்களே வைத்துக் கொள்ளாமல், கார் ஓட்டுனர்களையும் பணிக்கு அமர்த்தாமல், பில்லியன் பில்லியனாகப் புரட்டும் ஊபர் (Uber); ஹோட்டல்களை வைத்துக் கொள்ளாமல், தங்குமிடங்களையும் வாடகைக்கு எடுக்காமல், உலகெங்கும் விடுதிகளை நடத்தும் ஏர் பி அண்ட் பி (Airbnb); செய்தியார்களே இல்லை என்றாலும் உலகின் அனைத்து மக்களும் நொடிக்கு நொடி செய்தி அறிந்து கொள்ளும் தளமாக இயங்கும் ஃபேஸ்புக்; இதே போல் அலிபாபா, அமேசான், பே-பால் (Paypal) என பல நிறுவனங்கள் அசையாச் சொத்து வைத்துக் கொள்வதில்லை; ஊழியர்களையும் நியமிப்பதில்லை; அதனால், மிகக் குறைந்த விலையில் தங்கள் சேவையை, வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறார்கள்.
அரசாங்கம் எப்பொழுது மூக்கை நுழைக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்? மக்கள் நலன் பாதிக்கும் போது, அதற்கேற்ற சட்டதிட்டங்களை அரசு நிறைவேற்ற வேண்டும் எனக் கோருகிறோம். நாம் அதிகம் பணம் செலவழித்து, பொருள்களை வாங்கும்போது, நம்முடைய ஆதாயத்திற்காக அரசு, அந்த அநியாயக் கொள்ளைக்கார நிறுவனத்தைக் கட்டுப்படுத்தப் போராடுகிறோம்.
ஒரு பொருளின் விலையை மட்டும் பார்த்து, அந்தத் துறையில் போதிய அளவு போட்டி நிலவுகிறதா என்பதையும் கணித்துப் பார்த்து, முடிவெடுத்தது அந்தக் காலம். இன்றோ, அந்த நிறுவனம் எவ்வாறு தன் அசுரபலத்தை பிரயோகிக்கிறது, எவ்வாறு தன் வீச்சை பயன்படுத்துகிறது என்பதை ஆராய்ந்து, அதன் படி முடிவெடுப்பது அவசியம் என சபீர் வாதிடுகிறார். அமேசானுக்குப் போட்டியாக கூகுள் இருக்கலாம். ஆனால், அவர்களின் அரசியல் என்ன? தூரயியங்கி முதல் பிட் காயின் வரை எப்படி அவர்கள் தங்களுடைய நுகர்வோருக்கும், சிப்பந்திகளுக்கும், பொருள் விற்போருக்கும் ஆக்கபூர்வமான வகையில் இயங்குகிறார்கள் என்பதை ஆய்ந்தறிந்து, புரிந்து கொண்டு, அதற்கேற்ப சட்டவரையறைகளை உருவாக்க வேண்டும் என்கிறார்.
இணையம் என்றால் என்ன என்றே ரெஹ்மானுக்கு புரியவில்லை என்பது முதல் அனைவரும் தொழிலாளிகளாவும், உற்பத்தியாளராகவும், வர்த்தகராகவும் இருக்கும் திறமூல சமூகம் எவ்வாறு வருங்காலத்தில் இயங்கும் என்பது வரை பலதரப்பட்ட விமர்சனக் கட்டுரைகள் தொடர்கின்றன.
இப்பொழுது மண்டை மெல்ல ‘போதும்’ என்றது. இருந்தாலும் Trans/lation என்று சொன்னதால் விட்னெஸ் எடுத்தேன்.
இந்தியன் எக்ஸ்பிரெஸ், தினமணி, ஹிந்து போன்ற பத்திரிகைகள், தலையங்கங்கள் வெளியிடும். தேர்தல் நாளன்று வாக்கு சாவடிக்கு சென்று வரிசையில் காத்திருந்து அவசியம் வாக்களிக்க சொல்லும். ஆனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சொல்லமாட்டார்கள்.
இங்கே ‘இவருக்கு வாக்களியுங்கள்’ என்று வெளிப்படையாக சொல்லிவிடுகிறார்கள். உள்ளூர் கவுன்சில் தேர்தலில் துவங்கி, அமெரிக்க ஜனாதிபதி வரை எல்லோருக்குமே பரிந்துரை வழங்குகிறார்கள். நாளிதழ்கள் ஆதரவு தருபவர்கள்தான் ஜெயிப்பார்கள் என்பது நிச்சயமில்லை. ஆனால், மதில் மேல் பூனைகளை ஒரு பக்கமாக சாய்க்க, இந்த பத்திரிகை பரிந்துரை உதவுகிறது.
பெரிய அதிபர் தேர்தல்களில் இன்ன பத்திரிகை இன்ன கட்சி ஆளை தேர்ந்தெடுக்கும் என்பதை கணித்து விட முடிகிறது. ஆனால், உள்கட்சி தேர்தல்களிலும், எம்.எல்.சி. போட்டிகளிலும் யாரை சொல்வார்கள் என்பதை வாசகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்குகிறார்கள்.
இதிலும் மேலிடத்து ஊடுருவல் இருக்கிறது. பதிப்பாளருக்கு ஒருவரைப் பிடித்திருக்கிறது. ஆசிரியருக்கு இன்னொருவரைப் பிடிக்கிறது. நிருபர்கள் மூன்றாமவரை விரும்புகிறார்கள். எடிட்டரை விடுமுறையில் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, சந்தடி வெளியே தெரியாமல், சந்தில் தன்னுடைய விருப்பமான வேட்பாளரை ஆதரித்து தலையங்கம் வெளியிடுகிறார்கள் பத்திரிகை முதலாளிகள்.
நியு யார்க் மேயருக்கு டைம்ஸ் யாரை தேர்ந்தெடுக்கும் என்பது குறித்த கட்டுரை.
சித்த மருத்துவராய்ப் பணியாற்றும் இவர், சென்னையில் வசிக்கிறார். சில செய்திப் படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். 15-6-1974-இல் திருவெறும்பூரில் பிறந்தவர். இனவரை மருந்தியல் துறையில் (சித்த மருத்துவத் துறையில்) முனைவர் பட்ட ஆராய்ச்சி. இவர் 90களில் எழுதத் தொடங்கினார். ‘பனிக்குடம்’ எனும் இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்தார், பெண்சார் திரைப்படங்கள் குறித்துத் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். பெண்சார் திரைப்பட இயக்கமான ‘கண்ணாடி’யில் முனைப்பாகப் பங்கு கொண்டுள்ளார். சில செய்திப் படங்களின் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். தற்போது துணை இயக்குநராக இருக்கிறார். ஆங்கிலக் கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார்.
அவர் சிறந்ததொரு புகைப்படக் கலைஞர். காந்திக்கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையும் பாரதியார் ஆய்வகமும் நடத்திய “பாரதிக்குப் பின் : பெண்ணும் கவிதையும்” கருத்தரங்கில் “பெண்ணியக் கவிதை : அதன் கலைச்செயல்பாடும் சமூகப் பயன்பாடும்” தலைப்பில் பேசினார். இடிந்தகரை அணு உலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். 2011ல் Audi Ritz Icon விருது பெற்றார். சிவகாமியின், ‘கதவடைப்பு’ கவிதை நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார்.
இவர் கவிதைகளில் பிரமிளை நினைவூட்டும் உணர்வுத் தீவிரம் தெரிகிறது. தேவதேவனின் இயற்கை ஈடுபாடு ஆகிய பாதிப்பும் உண்டு. இருவரும் இவருக்கு ஆதர்சங்கள். K.M. இசை நிறுவனத்தின், ‘பெண் எழுச்சியை’ மையமாகக் கொண்ட “இரசாயன ரோஜாக்கள்” ஆல்பத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இஷ்ரத், ரிஹானாவின் குரல்களில் ‘என்னிலே மகா ஒளியோ!’ என்றொரு பாடல் எழுதியிருக்கிறார். இவருடைய கவிதைகளை கல்யாணராமனும் லஷ்மி ஹோம்ஸ்ட்ரமும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
பரதவர்களின் வாழ்வியலை ‘ஆழி சூழ் உலகு’ புதினத்தில் பதிவு செய்த ஜோ.டி. குரூஸ் வசனகர்த்தாவாகப் பணியாற்றியுள்ள ‘மரியான்’ திரைப்படத்தில், இரண்டாண்டுகளுக்கு மேலாக கவிஞர் குட்டி ரேவதியும் இணை இயக்குநராகப் பணியாற்றியதோடு ஒரு பாடலையும் எழுதியுள்ளார். இயக்குநர்களுக்கு திரைக்கதையை எழுதும் பணியைச் செய்து வருகிறார். சில திரைப்படங்களுக்கும், ஆல்பங்களுக்கும் பாடல்கள் எழுதுகிறார். மெல்ல, தான் இயக்கவிரும்பும் திரைப்படத்திற்கான பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வேன் என்கிறார்.
பெண் இயக்குநர்களுடன் இணைத்து, ‘விறலி விடு தூது’ என்னும் திரைத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். மூலக்கதை ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர், திரை இயக்குநர், திரைத் தயாரிப்பாளர் இவர்களை ஒருங்கிணைத்துத் திரைப் படைப்புகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதுதான் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மையான நோக்கம். ’விறலி’ என்றால் கலைகளை வளர்ப்பவள் என்பது பொருள்.
கடவுள் நம்பிக்கை இல்லாத இவர், கௌதம புத்தரின் ‘விபாஸனா’ என்ற யோகக்கலையின் மீது விருப்பம்கொண்டு அதைக் கடைப்பிடித்து வருகிறார்.
அவரின் குரலில், அவரைப் பற்றி:
” மலைகள் சூழ்ந்த இயற்கை சூழலில்தான் நான் வளர்ந்தேன். பதினைந்து வயது வரையில் எனக்கு திருவெறும்பூர் தவிர்த்து வேறு எந்த ஊருடனும் பெரிதாகத் தொடர்பு இல்லை. என்னுடைய அந்தக் காலகட்டங்களை முழுக்க முழுக்க திருவெறும்பூர்தான் ஆக்கிரமித்து இருந்தது. அங்குதான் நான் எட்டாம் வகுப்புவரை ஒய்.டபிள்யூ.சி.ஏ. எனும் தமிழ்ப் பயிற்றுப் பள்ளியில் படித்தேன். என்னுடைய இளமைப் பருவத்தில் எனக்குத் தேவையான நம்பிக்கையையும் தெம்பையும் அந்தப் பள்ளிதான் வழங்கியது. அங்கு இருந்த ஆசிரியர்கள் பள்ளிக் குழந்தைகளை தங்கள் குழந்தைகளாகப் பாவித்துக் கல்வி கற்பித்தனர். எங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே அப்படி ஓர் இணக்கமான சூழல் நிலவியது. கட்டுரை, பேச்சு என அனைத்து போட்டிகளிலுமே நான் பங்கெடுத்துப் பரிசுகள் பெற்றிருக்கிறேன். இன்றுகூட என்னால் 1,330 திருக்குறளையும் முழுதாகச் சொல்ல முடியும். இதற்கெல்லாம் காரணம், என் பள்ளி ஆசிரியர்கள்தான்.
திருவெறும்பூரில் எறும்பீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆதிச்சசோழன் காலத்தில் அவன் பெற்ற வெற்றிகளைத் தொடர்ந்து காவிரிக் கரையோரம் வரிசையாகக் கட்டிய பல கோயில்களில் இதுவும் ஒன்று. மாலை நேரங்களில் பள்ளி முடித்துவந்து உடை மாற்றிவிட்டு எறும்பீஸ்வரர் கோயில் வளாகத்தில் எங்கள் அப்பாவோடு நானும் என் தம்பி தங்கையும் நடப்பதை வழக்கமாகவே வைத்து இருந்தோம். அப்போது என் தந்தை எனக்கு சொல்லிக்கொடுத்த தேவாரமும் திருவாசகமும் அப்படியே என் மனதில் பதிந்துள்ளது. பொதுவாக எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், அந்த இலக்கியங்களில் இருந்த மொழிநடை என்னை மிகவும் ஈர்த்தது. எறும்பீஸ்வரர் கோயில் பற்றிப் பேசும் இந்த நேரம் எனக்குக் கோயில் பிரகாரத்தில் வீசும் காற்றின் சுகந்தம் நினைவுக்கு வருகிறது.
பி.ஹெச்.எல். டவுன்ஷிப்பில் இருந்த நூலகம் எனக்கு இன்றியமையாத ஒன்று. பள்ளியில் படிக்கும்போது பேச்சு, கட்டுரை போட்டிகளுக்குத் தேவையான தகவல்களைச் சேகரிக்கச் சென்றபோதுதான் அந்த நூலகம் அறிமுகம் ஆனது. கூடவே எழுத்தின் வழி சுஜாதாவும் பாலகுமாரனும் அறிமுகமானார்கள். சங்க இலக்கியங்களைத் தேடித்தேடி படிக்க ஆரம்பித்தேன்.
பி.ஹெச்.எல். போகும் அந்தப் பிரதான சாலையை என்னால் மறக்கவே முடியாது. ஏனெனில், அங்குதான் நான் முதன்முதலாக சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டேன். இன்றும் அந்த இடத்தைப் பார்க்கும்போது என்னால் அந்த நினைவுகளை மீட்க முடிகிறது.
எனக்கு அப்போது வசந்தி, ஜோதி, மீனா என மூன்று நெருங்கிய தோழிகள் இருந்தனர். நாங்கள் மூவரும் திருச்சியின் அழகை முழுதாக ரசித்தோம். 80-களின் இறுதியில் அப்படி எல்லாம் பெண் பிள்ளைகள் சுதந்திரமாக இருப்பது சாதாரண விஷயம் இல்லை. அந்த விஷயத்தில் என் அப்பா எனக்கு முழு சுதந்திரத்தை அளித்திருந்தார்.
என் அப்பா சுயம்புலிங்கம் பி.ஹெச்.எல். நிறுவனத்தில் ஒரு சாதாரண கடைநிலை ஊழியராகப் பணியாற்றியவர். இருப்பினும் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க மிகவும் பாடுபட்டவர். அப்படிப்பட்ட என் தந்தையை நான் கடைசியாகப் பார்த்தது திருவெறும்பூர் ரயில் நிலையத்தில்தான். நான் சென்னையில் இருந்தபோது அவர் மாரடைப்பால் இறந்துபோனார். அதன் பிறகு நான்கு வருடங்கள் திருவெறும்பூருக்கு வரவே இல்லை. ஏனெனில், அவருடைய ஞாபகங்கள் என்னை மிகவும் பாதித்து இருந்தது. நான் மிகவும் நேசித்த திருவெறும்பூரை அந்தக் காலகட்டத்தில் கொஞ்சம் வெறுத்திருந்தேன் எனச் சொல்லலாம்.
இன்றும் திருவெறும்பூர் திருவேங்கட நகரில் எங்களுடைய சொந்த வீடு இருக்கிறது. வேலை காரணமாக அடிக்கடி ஊருக்கு வரமுடியவில்லை என்றாலும், வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் தவறாமல் இங்குவந்து திருவெறும்பூரின் அழகை ரசிக்க நான் மறப்பதில்லை!”
2012 புத்தகக் கண்காட்சி
1. மாமத யானை – புதிய கவிதைத் தொகுப்பு (வம்சி வெளியீடு)
இது என்னுடைய ஆறாவது கவிதைத் தொகுப்பு! எத்தனை நூல்கள் வந்தாலும் கவிதை நூல் தரும் களிப்பை வேறு ஏதும் தர முடிவதில்லை!
கவிதைக்குள் தான், நான் என் முழு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் நிறைத்துத் தரமுடிகிறது! பல சமயங்களில், நான் கவிஞரின்றி வேறு யாருமல்ல என்று கூடத் தோன்றுகிறது! மற்ற எனது ஆளுமைகள் எல்லாம் அதை ஒட்டியிருக்கும் பிசிறுகள் தாம்! அடுத்தடுத்தக் கட்டத்திற்கான முந்தைய கட்டமாக ஒரு கவிதை நூல் மாறி, என் அகவெளியை உறுதிசெய்கிறது! உரமூட்டுகிறது! சகப் படைப்பாளிகளினும், வாசகர்கள் தாம் என்றும் என் ஊக்கமாயிருந்திருக்கிறார்கள்! எனக்கு நிழலாயிருந்திருக்கிறார்கள்! இந்தப் படைப்பும் அவர்களால் தான் சாத்தியமாயிற்று என்று நம்புகிறேன்!
2. ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப்பிரதிகள் – தம் உடலரசியலால் தமிழ் எழுத்தின் மரபை மாற்றியமைத்த தமிழ்ப்பெண் கவிதைகள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு (நாதன் வெளியீடு)
3. இந்தக் கோடைக்காலத்தை உனக்காகவே அழைத்துவந்தேன் – காதல் கவிதைகள் தொகுப்பு (ஆழி பப்ளிஷர்ஸ்)
4. முதல் காதல் அனுபவங்கள் – வெவ்வேறு படைப்பாளிகளின் உணர்ச்சிப்பூர்வமான முதல் காதல் அனுபவங்களின் தொகுப்பு (ஆழி பப்ளிஷர்ஸ்)
5. நிழல் வலைக்கண்ணிகள் – பெண்ணிய அரசியல் கட்டுரைகள் (வம்சி வெளியீடு)
– Book of feminist essays, predominantly discuss caste, gender and body.
பெண்ணியக் கட்டுரைகளளின் பெருந்தொகுப்பு. தமிழகத்தில் பெண் உரிமை கோரும் இயக்கங்கள், நிறுவனங்கள், தளங்கள், உரையாடல்கள் பலமுறை எழுந்தும் அவை முழுமையான வடிவம் எடுக்காதபடிக்கு, தனி நபர் அல்லது குழுவினரின் ஆதிக்கத்தால் தீவிரமாக ஒடுக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் அது சுயநலம், சுயலாபம் பொருட்டாகவே இருந்திருக்கிறது. இன்று அதற்கான விளைவுகளைப் பெருவாரியாக நாம் அனுபவித்தும் இறுக்கமான மெளனம் கடைபிடிக்கப்படுகிறது. அந்நிழல் வலைக்கண்ணிகளை எழுத்தின் வழியாக என் இடத்திலிருந்து பார்த்திருக்கிறேன். அவ்வலைக்கண்ணிகளை நாம் இனம் காண இந்நூல் ஒரு கையேடாக இருப்பின் மகிழ்வேன்!
6. யானுமிட்ட தீ – கவிதைத் தொகுப்பு (அடையாளம் வெளியீடு) (2010)
சாதியப்படுத்தப்பட்ட மூடுண்ட மனித உடலை இக்கவிதைகள் இயல்பூக்கத்துடன் திறக்கின்றன. உடலையே இயக்கமாக்கி அதை அதன் ஆதி நிலைக்குத் திருப்புகின்றன. தொல் அறத்தை மீட்டெடுக்கின்றன. வரலாற்றிலிருந்து உடலின் விடுதலை என்பது மோதலில் மட்டுமே நிகழ முடியும். அத்தகைய மோதலின் உக்கிரமான ஒரு புள்ளியில் இக்கவிதைகள் பீறிடுகின்றன. இதுவே இக்கவிதைகளை உயிர்த்துடிப்புடன் இயங்க வைக்கிறது.
7. ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’ (2000)
தொண்ணூறுகளில் கவனம் பெற்ற முக்கியமான கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இக்கவிதைகள் கோபம் கொள்கின்றன; காதல் வயப்படுகின்றன; காமம் துய்க்கின்றன.. வாழ்வின் வெம்மை பொறுக்க முடியாமல் போகும்போது நிழலைத் தேடும் மன நிலை, ஜீவிதத்தின் உயிர்த்துடிப்பு, பேரனுபவத்தை சுட்டிக் காட்டும் தன்மை; இருமை எதிர்வுகளை வெகு இயல்பாகப் படிமமாக்கிக் காட்டும் அழகியல் ஆகியவற்றுடன் இயங்கும் இக்கவிதைகள் தங்கள் அளவில் தனித்து நிற்கின்றன. ஆணால் வடிவமைக்கப்பட்டு பெண்ணுக்கு வழங்கப்பட்ட பெண் சிந்தனையைப் பார்த்து கெக்கலி கொட்டிச் சிரிக்கின்றன. புதிய சொல்லாட்சிகளும், புதுப்புது சொல்லிணைகளும், மின் தெறிப்பாய் தெரிந்து மறையும் படிமங்களும் இக்கவிதைகளை நினைவுகூறுமாறு செய்கின்றன.
8. ‘முலைகள்‘ (2002)
பெண்ணின் உடலரசியலைப் பேசும் இந்தப் பிரதி முலைகள் துடைத்தகற்ற முடியாத இரு கண்ணீர்த்துளிகள் என்று அறிவித்து பெண்ணை நுகரும் உடலாகப் பார்க்கும் ஆணாதிக்கப் பொதுப்புத்தியைத் தகர்க்கிறது. இத்தொகுப்பில் இயங்கும் கவிதை மனம் வாழ்க்கையின் முட்களில் சிராய்த்துக் கொண்டு கண்ணீர் வடிக்கிறது. அதே சமயத்தில் வாழ்வின் அதீதமான தருணங்களை போகிற போக்கில் தரிசிக்கவும் செய்கிறது. உத்வேகத்துடன் அலைவுறும் கவிதை மனம் விடுதலை வேட்கையுடன் இயங்கும் இக்கவிதைகளில் படிமங்கள் அழகாகக் கைகோர்க்கின்றன. இயல்பான தன்மையுடன் நடனமாடுகின்றன.
9. ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’
நவீன தமிழ்க்கவிதை வெளியில் பெண் குரல், பெண் உடல், உடலரசியல் போன்ற தளங்களில் ஒலிக்கும் ஒரு குரலை இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பதிவு செய்திருக்கின்றன. ஏக்கம், நிராசை,காமம், மரணம் போன்ற அனுபூதிகள் இக்கவிதை வரிகளில் சாகாவரம் பெற்று இயங்குகின்றன. இயற்கையின் மீதான அவதானிப்பு இக்கவிதைகளில் பெண்ணியத்தின் குறியீடுகளாக மிளிர்கிறது. பெண்ணிடமிருந்து விலக்கப்பட்ட சொற்களை இவை துணிந்து உச்சரிக்கின்றன. அந்தச் சொற்கள் ஆணாதிக்க மனத்தின் செவிப்பறைகளில் போய் மோதி அதிர்கின்றன. இதுவே இத்தொகுப்பை பிற கவிதைத் தொகுப்புகளிலிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டுகிறது.
10. ‘உடலின் கதவு’ கவிதை நூல் அடையாளம் பதிப்பகத்தால் மறு பதிப்பும் பெற்றுள்ளன.
ஆணாதிக்கச் சமூகத்துக்கெதிரான ஒரு பெண் மனத்தின் சீற்றம் இக்கவிதைகளில் தெறிக்கிறது.காமம், புணர்ச்சி,கருவுறுதல் என்று விரியும் குறியீடுகள் இந்தப் பிரபஞ்சத்தையே ஒரு பெண்ணின் உடலாகவும், ஒரு பெண்ணின் உடலையே பிரபஞ்சமாகவும் உருவகித்துக் காட்டுகின்றன. கவிதை வரிகள் தோறும் படிமங்களும், தொடர் உருவகங்களும் காட்டாற்று வெள்ளம் போல் பிரவகித்துப் பாய்கின்றன. சில தருணங்களில் வெள்ளம் வடிந்த பின் படியும் நுரையாய் மனத்தில் ஒட்டிக் கொள்கின்றன. கவிதையில் உற்பவிக்கும் உணர்ச்சிப் பெருக்கு கவிஞரிடமிருந்து வாசகனையும் தொற்றிக் கொள்ளும் அதிசயம் இந்தத் தொகுப்பில் சாத்தியப்பட்டிருக்கிறது.
11. கட்டுரை நூல் – காலத்தைச் செரிக்கும் வித்தை (2009)
12. முத்தத்தின் அலகு
ஆழி பதிப்பகத்தின் செந்தில்நாதன், என் காதல் கவிதைகளை நூலாக வெளியிட தொகுத்துத் தரக் கேட்டபோது, உண்மையில் அது ஒரு விநோதமான அனுபவமாகவே இருந்தது. ‘காதல்’ பற்றிய நமது சமூகத்தின் குரல்களும் தனிமனிதக் குரல்களும் எப்போதுமே முரண்பட்டிருக்கின்றன. நுணுகிப் பார்த்தால், ஒடுக்குமுறையை ஆதரிக்குமொரு மனம் தான் காதலை எதிர்க்கிறது! அல்லது, தன்னளவில் உருவான ‘காதல் உணர்வை’ எதிர் நபருக்குச் சரியான முறையில் தெரிவித்து, அதைச் சாத்தியப்படுத்திக் கொள்ள முடியாமல் போனவர்கள் தாம் காதலை எதிர்த்திருக்கிறார்கள்! இன்னொரு மனிதருடன் என்றால், அம்மனிதரின் குடும்பம், வர்க்கம், சாதி, மதம், மனம், உடல், நிறம் என எல்லா பேதங்களுடனும் மோத வேண்டியிருக்கிறது, இல்லையா! ஆனால், இதையெல்லாம் தாண்டி காதல் என்பது தனிமனித அளவில் மிகவும் தூய்மையா கவும் நேர்மையுடனும் உணர்ச்சிப்பூர்வமாகவும் இருக்கிறது!
என்னளவில் காதல் இன்னும் இன்றும் அழகானதாகவே இருக்கிறது! என் காதல் கவிதைத் தொகுப்பிற்கு, ‘முத்தத்தின் அலகு’ என்று பெயரிட்டிருக்கிறேன்.
13. ‘இடிந்த கரை’ நூல் – கடல், பெண்கள், கவிதைகள்
14. ‘முள்ளிவாய்க்காலுக்குப் பின்’ என்ற பெயரில் ஈழத்து இனப்படுகொலையை வைத்து புலம்பெயர்ந்த ஈழப் படைப்பாளிகள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
காதல் குறித்து:
நான் எப்பொழுதும் காதலின் பக்கம்.
எல்லா ஆண்களும் ஒரே மாதிரி தான் என்பதே என்னுடைய கருத்து என்றாலும், பெண்ணிடம் காதலை வெளிப்படுத்துவதில் மட்டும் தான் ஒருவரிடமிருந்து மற்றவர் வேறுபடுகிறார் என்பது என் முடிந்த முடிபு.
வீட்டில் ‘தந்தை அன்பின்’ போதாமையால், ‘சகோதர அன்பின்’ போதாமையால், ‘ஆண் அன்பின்’ போதாமையால் மகளின் காதல் வேகம் பெறுகிறது, வீர்யம் பெறுகிறது. காதல் வழியாக எல்லா ஆண்களிடமும், மகள் தந்தையைத் தான் தேடுகிறாள். தவறாகி, பிழையாகி, பின் ஏதோ ஒரு மட்டில் காதல் நிறைவாகும் வழிகளைத் தேடிக் கொள்கிறாள். தந்தையின் முழுமையான அன்பைப் பெறும் மகளும் காதலில் தன் தந்தையைத் தான் தேடிக் கொண்டிருப்பாள், ஆண்களில் காதலைத் தேடுவதற்குப் பதிலாக.
நான் எப்பொழுதும் காதலின் பக்கம். இன்னும் மானுடம் வெல்ல நம்மிடம் இருக்கும் ஒரே அறிவு காதலே. இதே வார்த்தைகளில் அம்பேத்கர் சொல்லவில்லை என்றாலும், சாதியை வெல்லவும் நம்மிடம் இருக்கும் ஒரே வெளிப்பாடு காதலே.
///ஆண்கள் எப்படி பெண்களைக் கொச்சைப்படுத்துகிறார்களோ பாலியல் உறுப்புகள் குறித்து எழுதுகிறார்களோ அதைப் போலத்தானே இவர்களும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்… இவர்கள் எப்படிப் பெண்ணியவாதிகளாக இருக்க முடியும் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். அதற்கு என்னுடைய பதில் என்னவென்றால் ‘நாங்கள் முன்வைக்கும் அரசியல் வேறு’என்பதாகும்.///
இதற்கு கவிஞர் சரியான பதிலை சொல்ல வில்லையோ என்று தோன்றுகிறது.
http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/I_Year/matt01/html/mat01007pp2b.htm
‘ஒளி சொட்டச் சொட்டக் குளித்து வந்தாய், பாதங்களில் வழிந்து பாதையெல்லாம் தீக்காயங்கள்’, ‘சுண்ணாம்பு வெயில்.. தன் ஒற்றைக் காலால் என் முகத்தின் மீது நடந்து சென்றது வெயில்’ என்பனபோன்ற அழகும் தீவிரமும் கொண்ட படிமங்களை இவர் கவிதைகளில் காணலாம். காலவெளி, பிரபஞ்ச ஓவியம், பாழ்விண், உட்குகை இருள், இருட்சுவர், காலாதீதம், உதிரநதி, புவனம் போன்ற சொல்லாட்சிகளும் படிமங்களும் பிரமிளின் செல்வாக்கைத் தெளிவாகக் காட்டுவன.
‘ஆண்டாள் தன் காதல்நோய் பற்றிப் பேசியதன் உணர்வுத் தொடர்ச்சியைப் பல நூற்றாண்டுகள் கழித்து ரேவதியிடம் கேட்கிறோம்’ என்கிறார் க.மோகனரங்கன். கவிதை சொல்லியின் பாலியல் அடையாளங்களுடன் தனித்துவமும் தீவிரமும் கூடிய பெண்குரலாக வருவது குட்டி ரேவதி கவிதை என்கிறார். சமூகத் தணிக்கைக்கு உட்படாத சுதந்திரமான ரேவதியின் மொழி, விமர்சனத்திற்கு உள்ளாகலாம் எனவும் அவர் குறிப்பிடுகிறார் (சொல் பொருள் மௌனம், ப.187)
ஊ) தலித்துகளைக் காப்பாற்றும் பொறுப்பு – கண்ணன் http://www.kalachuvadu.com/issue-91/kannottam.asp
உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பெரும் பான்மை ஆட்சி, தலித்-உயர்சாதிச் சமூகக் கூட்டணியால் ஏற்பட்டுள்ள பின்னணியில் ‘அவுட்லுக்’ ஜூன் 24, 2007 இதழ், தெற்கில் மேற்படி நிகழ்வு ஏற்படுத்தியுள்ள எதிர்வினைகளைச் செய்திக் கட்டுரையாக வெளியிட்டுள்ளது. இக்கட்டுரையில் கவிஞர் குட்டி ரேவதி மேற்கோள்காட்டப்பட்டுள்ளார். அவரது கருத்து இது:
”பிராமணர்கள் உத்தரப் பிரதேசத்தில் ஆதிக்கம் செய்யத் தொடங்கிவிடுவார்கள். அவர்கள் தலித்துகளை விழுங்கிவிடுவார்கள் . . . இது பற்றி கருத்துக் கூறும் நேரம் வரவில்லை.”
எ) SEA, OH SEA YOU ARE MY BODY – documentary PMANE
in the background of the evocative song Kadale, Kadale by famous Tamil Poetess Kutti Revathi set to tune by S. Sreekumar of M.B.S.Youth Choir.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு மக்களின் குரலாய் எழுதிய பாடல் இது. கேரளத்து நண்பர்கள் சதீஷ், அனிதா மற்றும் நண்பர்கள் இணைந்து இதற்கு பாடல் வடிவம் கொடுத்துள்ளனர். இசையமைப்பாளர் எஸ். ஶ்ரீகுமார் அவர்கள் இசை அமைத்துள்ளார்
ஏ) interview to Vani Viswanathan of the Spark magazine: http://www.sparkthemagazine.com/?p=4399
Language is the One Tool that can Liberate Women’s Bodies: Kutti Revathi
ஓ) ஒரு மேற்கோள்
“In writing about a woman’s body and its sexuality, one is also writing about the political history of the human body!”.
கொசுறு:
எழுத்தாளர் நிலையிலிருந்து, கட்சி அரசியல் நிலைக்கு நகர்ந்தது என்பது பெரும்பாலும் பெண் எழுத்தாளர்களுக்குத் தான் நடந்திருக்கிறது! சமூக அசைவின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படவேண்டும்! ஆனால், சமூகத்தின் அரசியல் ஊக்கத்தை மதிக்காத அப்பெண்கள், தன் சுயநிலைகளை மட்டுமே பொருட்படுத்தியவர்களாக இருந்த நிலை உள்ளங்கை நெல்லிக்கனி போல இன்று! எல்லா அரசியல் ஆதாயங்களையும் தன் தனிமனித கோபுரங்களை எழுப்பிக் கொள்ளவே பயன்படுத்தினர்! தி.மு. க. அரசியலின் அடித்தளம் ஆட்டம் கண்டிருக்கும் இந்நேரத்தில், அதில் ஈடுபட்டு முதுகெலும்பு இழந்தவர்கள், சமூகத்தின் பிற ஒடுக்கப்பட்டப் பெண்களின் குரலாய் மாறாத இந்த அரசியல் பெண்கள் இனி எப்படி தம் சமூகக் குரலை அடையாளப்படுத்துவார்கள்? ’அவர்கள் அறச்சீற்றம் கொண்டால் எத்தகையதொரு கேலிக்கூத்தாகிறது என்று சொல்லத்தேவையில்லை!”
கொசுறுக்கு கொசுறு:
‘தனித்த’ தமிழ்த்தேசியம் பேசுவோர் கொஞ்சம் எல்லாவற்றிலும் மிகையான உணர்ச்சிகளுடன் கொந்தளிப்பது, நடக்க இருப்பதையும் நடக்கவிடாமல் செய்துவிடுகிறது என்பதைப் பலமுறைப் பார்த்திருக்கிறேன். ‘தலித்தியம்’, அல்லது ‘சாதி மறுப்பியம்’ என்பதே தமிழ்த்தேசியம் என்று ஆகிவிடக்கூடாதே என்ற பதற்றம் தான் இந்தக் கொந்தளிப்பின் ரகசியம் என்பதையும் பலமுறைகள் உணரமுடிந்திருக்கிறது.
‘காமம் தாண்டி காதல்’ என்பதே கடுமையானதொரு சாதிய மனப்பான்மை. உடலை அவமதிக்கும் செயல். எப்படி தீண்டாமை உடலை அவமதிக்கிறதோ அதையே பின்பற்றும் ஒரு சாதிய மனநிலை தான் இது. காலங்காலமாக நம்மில் ஊறிய சாதிய மனநிலையே, ‘காமம் தாண்டிய காதல்’ என்ற கண்டுபிடிப்புகளை நிகழ்த்தத்தூண்டுகிறது.
தமிழ் இனம் – சாதி மறுப்பு = தமிழ்த்தேசியம், என்பதை பலரும் பல சமயங்களில் வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றனர்.
யாருக்கு இதனால் நட்டம்? நம்மைப் பிளவு படுத்திக் குளிர்காயும் சனாதனிகளுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியையும், கொண்டாட்டத்தையும் கொடுக்கும். தமிழகம் என்று தனியே ஒரு நாடு உருவானால் கூட, பின் இருக்கப்போகும் ஒரே பிரச்சனை நீங்கள் தாம்: தீண்டாமையின் புதிய வடிவமைப்பை, பெண் பாலியல் ஒடுக்குமுறையின் புதிய வழிமுறையை நீங்கள் செயல்படுத்துவீர்கள்!
இந்தியா சுதந்திரமடைந்து 67 ஆண்டுகளுக்குப்பின்னும் சாதிய வன்முறை பகிரங்கமாக, காட்டுமிராண்டித்தனத்தின் அடையாளமாக நடக்கிறது. தொடர்கிறது. சக மனிதனை மலம் அள்ள வைக்கிறோம். இசுலாமியர்கள் மீதான வன்முறைகளும் பாரபட்சமும் தொடர்கின்றன. பெண்கள் மீதான பாலியல் வன்முறை முன்னெப்பொழுதையும் விட தற்பொழுது அதிகமாயிருக்கிறது.
6400 சாதிப்பிரிவுகளையும் அதற்கான ஏற்றத்தாழ்வுகளையும் அது ஏற்படுத்தும் ஊழலையும் வைத்துக் கொண்டு ஒருமித்த இந்தியா என்று போற்றுவதும் பாராட்டுவதும் உணர்ச்சிப் பெருக்கெடுப்பதும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது இல்லையா? இது கண்டிப்பாக சுதந்திர இந்தியா இல்லை. இன்னொரு சுதந்திரத்திற்காக நாம் எல்லோரும் போராடவேண்டியிருக்கும் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்கிறேன்.
ங) ’இந்தியா டுடே’யின் ரஜினி சிறப்பிதழ் கட்டுரை http://kuttyrevathy.blogspot.com/2011/12/blog-post.html
– ‘நான் நம்பர் ஒன், என் புருஷன் நம்பர் டூ’ என்ற வசனமும் ரஜினி என்ற கதாநாயகனும்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை, ரஜினி என்ற கதாநாயகனின் ஆணாதிக்க வசனங்களைப் பற்றிய சிறிய அலசல்!
Breasts: (original ‘Mulaigal’ by Kutti Revathi), translated by N. Kalyan Raman
Breasts are bubbles, rising
In wet marshlands
I wondrously watched- and guarded-
Their gradual swell and blooming
At the edges of my youth’s season
Saying nothing to anyone else,
They sing along
With me alone, always:
Of Love,
Rapture,
Heartbreak
To the nurseries of my turning seasons,
They never once failed or forgot
To bring arousal
During penance, they swell, as if
straining
To break free; and in the fierce tug of
lust,
They soar, recalling the ecstasy of music
From the crush of embrace, they distil
The essence of love; and in the shock
Of childbirth, milk from coursing blood
Like two teardrops from an unfulfilled
love
That cannot ever be wiped away,
They well up, as if in grief, and spill over
இத்தகைய நிதானமான நேர்காணலை எடுக்கும் பணிக்கு நண்பர்கள் ரவிச்சந்திரன், பிரவீண், ராஜ், கஜேந்திரன், ஜே. ஜெய்கணேஷ் தங்களின் நிறைய நேரத்தைச் செலவழித்தார்கள். நான் முன்வைக்கும் அரசியல் நிலைப்பாடு குறித்தும், அதை நோக்கிய என் எழுத்துப் பயணம் குறித்துமான நேரடியான பதிலை திருத்தமானதோர் உரையாடல் வழியாக என்னிடமிருந்து பெற்றார்கள்! வழக்கத்திற்கு மாறாக, நிறைய நண்பர்கள் இந்நேர்காணலை வாசித்துவிட்டு தங்கள் வாழ்த்துகளையும் கருத்துக்களையும் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழியாகப் பகிர்ந்து கொண்டார்கள்.
என்னை ஒரு தனிமனிதராகப் பார்க்காமல், எழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாகவே என்னைப்புரிந்து கொண்டு, இதைத் தன் இணையத்தளத்தில் பதிப்பித்த, ‘தமிழ் ஸ்டுடியோ’ அருண் அவர்களுக்கும் என் நன்றி!
நியு யார்க்கரில் சினேலோ (Chinelo Okparanta) எழுதிய ”பென்ஜி” கதை வாசித்தேன். நாற்பதுகளைத் தாண்டிய பின்னும் மனைவியைத் தேடிக் கொண்டிருக்கும் குள்ளமாய், பணக்காரனாய், அம்மா கோந்தாக இருக்கும் ஆப்பிரிக்கனை பற்றிய கதை. மூன்று முக்கிய கதாபாத்திரங்கள். அம்மா, குள்ளப் பையன், அம்மாவின் புதுத் தோழி. நடுநடுவே வீட்டில் வேலைப் பார்க்கும் தோட்டக்காரரும், சிப்பந்திகளும் வந்து போகிறார்கள்.
பத்து… பன்னிரெண்டு வருடக் கதையை சிறுகதையில் கொடுக்கிறார். அம்மாவிற்கும் தோழிக்கும் நடுவே நடக்கும் உரையாடல், தோழிக்கும் பையனுக்கும் உரையாடல், கூடவே நிறைய சம்பவங்கள் என அமைதியாக நகர்கிறது. நைஜீரியா அறிமுகமாகிறது. முடிவெல்லாம் ஊகிக்க முடிந்தாலும் மனிதர்களின் குணாதிசயமும் சாமர்த்தியமும் சமரசமும் சுவாரசியமாக்குகிறது.
வெண்முரசு வாசித்து வரும் சமயத்தில் இந்தக் கதையும் வாசித்ததால், அந்தத் தோழி கதாபாத்திரத்தை சத்தியவதிக்கு ஒப்பிட்டுப் பார்த்தேன். பணக்கார நாற்பதுவயசுக்காரனை பீஷ்மராக வைத்துக் கொள்கிறேன். மகாபாரதத்திற்கு இப்படி ஒரு முலாம் பூசிப் பார்த்தால் மகாபாரதத்தின் சூட்சுமங்களை இன்னும் வெளிப்படையாக எழுத்தாளரும் விவரிக்கலாம். அந்த கதாபாத்திரங்களின் நிர்ப்பந்தங்களையும் நிராசைகளையும் வாசகரும் எளிதில் அணுகலாம்.
கதையில் இருந்து..
”பணம் போதலை போதவில்லையென் சிலர் எப்பொழுதும் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். அப்படி அலட்டுபவர்களிடம்தான் பணம் கொட்டிக் கிடக்கும். அல்லது பணம் குறைவாக இருப்போர்தான் செல்வச்செழிப்பில் இருப்பது போல் பாவ்லா காட்டுகிறார்கள் எனலாம். இந்த இரண்டு வர்க்கத்தில் அவள் எந்த ரகம்?”
விமான நிலையத்தில் காத்திருப்பது வேலையத்த வேலை. ஆனால், காத்திருக்காமல் இருக்க முடிவதில்லை.
பிரியமானவர் வருகைக்காக சில சமயம். நாம் விரைவாக சென்றுவிட்டால், மனதுக்கு இனியவரின் விமானமும் சீக்கிரம் வந்து சேர்ந்துவிடும் என்னும் நம்பிக்கையில் சென்று பார்க்கிறேன்.
வீட்டில் இருப்பவர்களை துரத்துவதற்காக சில சமயம், சீக்கிரமே கிளம்பி விமான நிலையம் சென்று விடுகிறோம். இன்னும் கொஞ்ச நேரம்தான்… பொறுத்துக் கொள் என்று மனதை சமானப்படுத்தி, சண்டை சச்சரவு தவிர்க்க இந்த அவசரம் பயன்படுகிறது.
நடுத்தர வர்க்கம் எப்பொழுதுமே பேருந்து நிலையத்திற்கோ இரயில் பயணங்களுக்கோ முந்தின நாளே போய் காத்திருக்கும் வழக்கம் உடையது. அதன் எச்சங்களும், விமான நிலைய வருகைக்கு கால்கோள் இட்டு, வேரூன்றி நிற்கிறது. கொஞ்சம் முன்னாடி போனால், முந்தின ஃப்ளைட்டிலேயே இடம் கிடைத்தாலும் கிடைக்கும்.
ஒரு மாமாங்கம் முன்பு ஜார்ஜ் புஷ்ஷும் ஒசாமா பின் லாடனும் செய்த கைங்கர்யத்தால் பதினைந்து நிமிடம் முன்னாடி போய் வானூர்தியில் உட்கார்வது எல்லாம் மலையேறிப் போயாச்சு.
இந்த மாதிரி ஊருக்கு முன்னாடியே கிளம்பி காத்திருக்கும் நேரத்தில் புத்தகக் கடையை மேய்வது ரொம்பவே பிடித்த விஷயம். மேக்சிம், எஃப்,எச்.எம், ஸ்டஃப் எல்லாம் வா…வா… என்று கிளுகிளுப்பூட்டினாலும், புதிதாக என்ன பிடித்திருக்கிறது என்று மேய்ந்ததில் http://www.complex.com/ & http://www.wallpaper.com/ ஈர்த்தது.
வடிவமைப்பு, செய்நேர்த்தி, உள்ளடக்கம், சொந்த சரக்கு, வித்தியாசம் காட்டி அடையாளப்படுத்துதல் என்று பல விதங்களில் கவர்ந்தது.
தமிழ்நாட்டு ஆண்களுக்கு செய்திகள் பார்க்கப் பிடிக்கும். தமிழ்ப் பெண்களுக்கு சீரியல் பார்க்கப் பிடிக்கும். இருவருக்கும் அரட்டை அரங்கம், விவாத மேடை, நீயா? நானா? போன்ற திண்ணைப் பேச்சு முழக்கங்கள் பிடிக்கும்.
தமிழ் பாப் கல்ச்சர் ரசனைகளை தொடர்ந்து கவனிப்பதால் எல்லாவற்றையும் பார்த்து வைப்பது போல் விஜய் டிவியின் ‘நீயா/நானா’ பார்த்தேன். அதுவும், தென்னக சிந்தனையாளர்களான ஞாநி, எஸ் ராமகிருஷ்ணன், பாஸ்கர் சக்தி, கடற்கரய், கவிதா முரளீதரன், குட்டி ரேவதி, ராஜகோபாலன், பாலா, சாரு நிவேதிதா, அபிலாஷ், சிவகாமி ஐ.ஏ.எஸ் போன்றோர் கலந்து கொண்டதால் இண்டெலக்சுவலாக, மாற்று சிந்தனையை முன்வைக்குமோ என்று ஆசையுடன் பார்த்தேன்.
நிறைய பட்டியல் போட்டார்கள். முன்பு உட்கார்ந்திருவர்களை வாய் நிறைய பாராட்டினார்கள். தனக்கு விருது கொடுத்தவர்களை உற்சாகமாக முன்வைத்தார்கள். வெகுசன ரசனையை விட்டு இம்மி பிசகாமல் ரசித்தார்கள்.
எஸ் ராமகிருஷ்ணன் கனடா ‘காலம்’ இதழை சிறந்த சிற்றிதழாக முன் வைத்தார். அவருக்கு இயல் விருது கிடைத்த போது காலம் பத்திரிகையை படிக்கும் வாய்ப்பை பெற்றிருப்பார்.
’அடவி’ சிற்றிதழுக்கு தந்த விருது எனக்கு புதிய பத்திரிகையை அறிமுகப்படுத்தியது:
பாஸ்கர் சக்தி வந்திருந்ததாலோ… என்னவோ… ஆனந்த விகடனை ஆஹா! ஓஹோ!! அற்புதம்!!! என்று பாராட்டினார்கள். எண்பதுகளின் மேட்டரை மறுபடி போடுவதால் இருக்கலாம். கிளுகிளுப்பாக செக்ஸ் தூவி எழுதுவதால் இருக்கலாம். சன் டிவி குழுமத்தின் குங்குமத்தை பாராட்ட முடியாது. எனவே, விகடனைப் பாராட்டும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கலாம். எஸ். ராமகிருஷ்ணனின் தொடர் வருவதால் இருக்கலாம். உண்மையான காரணத்தை குமுதம் ரிப்போர்ட்டர் ஆராயலாம்.
நல்ல திரைப்படமாக ‘சாட்டை’ படத்தைப் பாராட்டினார்கள். சரி… ‘அறஞ்செய விரும்பு’, ‘ஆறுவது சினம்’ என்று ஔவையார் போதனைகளை எடுத்தால்தான் ‘நீயா… நானா’ பேச்சாளர்கள் விரும்பி ரசிப்பார்கள் என்ற்றறிந்தேன்.
’அட்டகத்தி’ சிறப்பாக இருந்தது என்றார்கள். எண்டெர்டெயின்மெண்ட் என்று துளிக்கூட இல்லாத சினிமாவை எப்படி தைரியமாக முன்னிறுத்தலாம் என்பதை அறிந்தேன்.
இஸ்லாமியர்களை நல்லவர்களாக காண்பிப்பதால் ‘நீர்ப்பறவை’ பெஸ்ட் படம் என்றார் “சமநிலைச் சமுதாயம்” இதழின் எடிட்டர். வெளிப்படையாக பேசுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று அறிந்தேன்.
ஷா நவாசுக்கு அபிலாஷ் விருது கொடுத்தார். எல்லோரும் ஒரு கைத்தடியை அழைத்து வந்திருந்தார்கள். சில சாமிகள் வராத காரணத்தால் பூசாரிகள் வந்திருந்தார்கள். பேஸ்புக்கில் ஐம்பது நண்பர்கள் கூடியதை சாதனையாக சொன்னார்கள். நார்மலாக எதிரும் புதிருமாக விவாதம் நடக்கும். இந்த தடைவ எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தவர்களே முதுகு சொறிந்தார்கள். கிட்டத்தட்ட விஜயகாந்த நடிக்கும் விக்கிரமன் படம் பார்த்த சந்தோஷம். லட்டுவில் பூண்டும் வெங்காயமும் போட்டது போன்ற இனிப்பு.
வழக்கம் போல் எல்லோருக்கும் டோக்கன் போராளியான லாபியிஸ்ட் உதயகுமாருக்கு விருது தந்து நிகழ்ச்சியை பூர்த்தி செய்தார்கள்.
தமிழ்ப் படைப்பிலக்கிய உலகில் வரலாறு, சமூகம், நகைச்சுவை போன்றவற்றைப் போலவே ஆன்மீகத்திற்கும் மிக முக்கிய இடமுண்டு. ஆறுமுக நாவலர் தொடங்கி வேதநாயக சாஸ்திரியார், ரா. கணபதி, பரணீதரன், மணியன், லக்ஷ்மி சுப்ரமணியம் எனப் பலர் இதன் வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ளனர். இவர்கள் வரிசையில் மூன்று தலைமுறைகளாக எழுதி வருபவர் ஆர். பொன்னம்மாள். இவர், மே 21, 1937 அன்று சென்னை, திருவல்லிக்கேணியில் ராமசுப்ரமண்யம்-லக்ஷ்மி அம்மாள் தம்பதியினருக்கு மகளாகத் தோன்றினார். பள்ளிப்படிப்பு சென்னையில். ஏழு வயதில் தந்தையை இழந்தார். அதன் பின் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே இவரால் கற்க முடிந்தது. குடும்பம் கல்லிடைக் குறிச்சிக்குக் குடி பெயர்ந்தது. சிறுவயதில் படித்த அம்புலிமாமா, ஜில்ஜில், டமாரம், பாப்பா மலர், பாலர் மலர், கல்கண்டு போன்ற பத்திரிகைகள் இவரது வாசிப்பார்வத்தைத் தூண்டின. வளர வளர கல்கி, தேவன், பி.எஸ். ராமையா, எஸ்.வி.வி., எல்லார்வி, லக்ஷ்மி போன்றோர் எழுதிய நூல்கள் படிக்கக் கிடைத்தன. அவை இவரது அறிவை விசாலமாக்கியதுடன் எழுதும் ஆர்வத்தையும் தூண்டின.
தனது வீட்டைச் சுற்றி வசித்த குழந்தைகளுக்கு தினமும் கதைகள் சொல்வது வழக்கமானது. ‘தமிழ்நாடு’ இதழ் அறிவித்த சிறுகதைப் போட்டிக்கு சிநேகிதி ருக்மிணியின் தூண்டுதலால் ஒரு சிறுகதையை எழுதி அனுப்பினார். ஆசிரியரின் பாராட்டுதலுடன் ‘இரட்டைப் பரிசு’ என்ற அச்சிறுகதை பிரசுரமானது. தொடர்ந்து தமிழ்நாடு இதழிலேயே ‘அன்பு மனம்’, ‘வழிகாட்டி’, ‘இன்ப ரகசியம்’, ‘விதி சிரித்தது’, ‘கண் திறந்தது’, ‘சந்தேகப் பேய்’ போன்ற பல சிறுகதைகள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. 1958ல் எஸ்.எம்.சுப்ரமண்யத்துடன் திருமணம் நிகழ்ந்தது. குடும்பப் பொறுப்பு மிகுந்ததால் தொடர்ந்து எழுத இயலவில்லை என்றாலும் புத்தக வாசிப்பும் நேசிப்பும் தொடர்ந்தது. கணவர் ஒரு பத்திரிகை ஆர்வலராக இருந்ததால் பத்திரிகைகள், நாளிதழ்கள் வாசிக்கக் கிடைத்தன. கணவரின் உறுதுணையுடன் ஜோதிடம் மற்றும் சம்ஸ்கிருதத்தை நன்கு கற்றுத் தேர்ந்தார்.
1976ல் தினமணி நாளிதழ், குழந்தை எழுத்தாளர் சங்கப் போட்டி ஒன்றை அறிவித்தது. குடும்பச் சூழலால் அதுவரை எழுதாமலிருந்த பொன்னம்மாள் தனது குழந்தைகளின் தூண்டுதலால் ‘கடவுளின் கருணை’ என்ற சிறுகதையை எழுதி அனுப்பினார். அது பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் பரிசும் கிடைத்தது. தொடர்ந்து சில சிறுகதைகளயும் வானொலி நாடகங்களையும் எழுதிய போதும் முழுமையாக எழுத்தில் ஈடுபட இயலவில்லை. சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் எழுத ஆரம்பித்தார். 1983ல் இவர் எழுதிய ‘கருணை விழிகள்’ என்ற நாவல் தங்கப் பதக்கம் பெற்றது. அது பின்னர் கோகுலத்தில் தொடராக வெளிவந்து சிறுவர்களின் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தீவிரமாக எழுத ஆரம்பித்தார்.
இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கடவுளின் கருணை’யை பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டு ஊக்குவித்தது. இவர் எழுதிய ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ள ‘பாண்டுரங்க மகிமை’யை பிரபல கிரி டிரேடிங் நிறுவனம் வெளியிட்டது. தொடர்ந்து எழுதுமாறு அதன் உரிமையாளர் கிரி ஊக்குவிக்கவே பல நூல்களையும், ‘காமகோடி’ இதழுக்காகப் பல்வேறு, கதை, கட்டுரை, வரலாற்றுச் சம்பவங்களையும் எழுத ஆரம்பித்தார். குறிப்பாக இவர் குழந்தைகளுக்காக எழுதியிருக்கும் ‘கருணை விழிகள்’, ‘பறவைகள் பலவிதம்’, ‘பொன்மனம்’, ‘திருக்குறள் கதைகள்’, ‘பாட்டி சொன்ன கதைகள்’ (மூன்று பாகங்கள்) போன்ற 50க்கும் மேற்பட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கன. ‘ஸ்ரீமத் பாண்டுரங்க விஜயம்’, ‘சிவலீலை’, ‘நாராயணீயம்’, ‘தேவி திருவிளையாடல்’, ‘கருட புராணம்’, ‘நாலாயிர திவ்ய பிரபந்த விளக்கம்’, ‘பரமாச்சர்யாள் பாதையிலே’, ‘குரு ரத்னங்கள்’, ‘சத்ய சாயி வரலாறு’, ‘மகாபாரதக் கதைகள்’ போன்ற ஆன்மீக நூல்கள் பல பதிப்புகள் கண்டவையாகும். குறிப்பிடத்தக்க வகையில் சில நாடகங்களையும் பொன்னம்மாள் எழுதியிருக்கிறார். அவற்றில் சிலவற்றுக்குப் பரிசும் கிடைத்துள்ளது. குழந்தை இலக்கியம், ஆன்மீகம், நாவல், சிறுகதை, வாழ்க்கை வரலாறு என 90 நூல்கள் வரை எழுதியிருக்கும் பொன்னம்மாளின் படைப்புகளை வானதி பதிப்பகம், நியூ ஹொரைஸன் மீடியாவின் தவம் பதிப்பகம் போன்றவை தொடர்ந்து வெளியிட்டு ஊக்குவித்து வருகின்றன. இவரது நூல்களுக்கு தமிழக அரசுப் பரிசு, மத்திய அரசின் சிறந்த நூல் விருது, குழந்தை எழுத்தாளர்கள் சங்கப் பரிசு, ஏவிஎம்மின் தங்கப் பரிசு, ஸ்டேட் பாங்க் பரிசு, பபாசி விருது, குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா விருது போன்றவை கிடைத்துள்ளன.
“இன்றைக்கு டிவி மற்றும் பெரியவர்களின் ஒத்துழைப்பின்மை குழந்தை இலக்கியத்தை நசிய வைத்திருக்கிறது. குழந்தைகளும் சீரியல் பார்ப்பதற்கு ஃபோர்ஸ் செய்யப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் விளைவு குழந்தைகள் தங்களின் உலகத்தை இழக்கிறார்கள். முன்பு பெரியவர்கள் குழந்தைகளை ஒதுக்கும்போதோ, ஒதுங்கும்போதோ – புத்தகம் தோழன் ஆனது. புத்திசாலித்தனம் வளர்ந்தது. ஆனால், இன்று டிவி வீட்டுக்குள் வந்துவிட்டபின் நிலைமை மாறிப்போய் விட்டது” என்று கூறும் பொன்னம்மாள், “சிறுவர் இலக்கியத்தில் அழ. வள்ளியப்பாவுக்குப் பிறகு பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. அறிவியல் சமாசாரங்களை ஈ.எஸ். ஹரிஹரன் எளிய முறையில் கதைகள் மூலமாக சொல்கிறார். தாவரங்கள், மிருகங்கள் குறித்த வாண்டுமாமாவின் புத்தகங்கள் குறிப்பிடத்தக்கனவாய் இருக்கின்றன. மா.கோதண்டராமன் எழுதிய அறிவியல் கட்டுரைகள் ஆழமாகவும் சுவையாகவும் சிறுவர்களுக்கு ஏற்ற முறையில் இருக்கும். பூவண்ணன் நடைமுறைக்கு ஏற்ப புனைகதைகள் படைக்கிறார். சௌந்தர் எழுதும் குழந்தைகளுக்கான படைப்புகளும் அவசியம் சிறுவர்களின் புத்தக அலமாரியில் இருக்கவேண்டும். ஆனால் இன்று குழந்தை இலக்கிய வளர்ச்சி மிகவும் பின்தங்கியே இருக்கிறது” என்று வருந்துகிறார்.
இன்றைய சிறார் இதழ்கள் குறித்து, “குழந்தைகளே எழுதும் புதிர்கள், ஓவியங்கள் அவர்களின் திறமையை வெளிப்படுத்துகிறது. தமிழார்வத்தையும் வளர்க்கிறது. குழந்தைகளுக்கு மட்டும் நடத்தப்படும் சிறுகதைப் போட்டி, அறிவியல் போட்டி போன்றவையும் வரவேற்கத்தக்கன. சாதனை புரிந்தவர்கள், ரோல் மாடல்கள், பல்துறை விற்பனர்கள், உடல் ஊனமுற்றவர்கள் என பலரின் வாழ்க்கை குறிப்புகளும், சரிதைகளும் குழந்தைகளுக்கு ஊக்கம் கொடுக்கிறது. தூண்டுகோலாக அமைகிறது.” என்கிறார். “குழந்தைகள் ஈரமண். அனைத்து ஊடகங்களும் பத்து சதவீதமாவது முழுக்க முழுக்க வயதுவாரியாகக் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். பொறுமை, முன்னேற்றம், தன்னம்பிக்கை, அன்பு, பணிவு, சேமித்தல், ஆடம்பரம் தவிர்த்தல், நேரம் விரயமின்மை, காலங்கள் மாற்றம், கனவு, நம்பிக்கை போன்றவற்றை விதைத்து வருங்காலத்திற்குத் தயார் செய்ய வேண்டும்” எனச் சொல்லும் பொன்னம்மாளின் வேண்டுகோள் அவசியம் ஊடகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
இன்றும் இளைய தலைமுறையினருக்கு இணையாக எழுத்துப் பணியை மேற்கொண்டு வருகிறார் ஆர். பொன்னம்மாள். எழுத்தாளர், கட்டுரையாளர், விமர்சகர் பாஸ்டன் பாலாஜி இவரது மகன்.
மதுரை நியூ காலேஜ் ஹவுசில் கூட மிஞ்சியதை வைத்துதான் கொத்து பரோட்டா போடுவார்கள் என்பதை ஒப்ப சில பதிவுகளைப் பார்க்கும்போது நொந்து நூடுல்ஸ் ஆவதை பதிவு செய்யும் திட்டத்தில் முதல் என்ட்ரி: எழுத்தாளர் தாமரைமணாளன்
இந்தப் பரிந்துரைக்கு உங்கள் பதிவு உரித்தாக ஆறு காரணங்கள்:
ஜெயமோகன், சாரு போன்றோருடன் எடுத்துக் கொண்ட ஒளிப்படம் உங்கள் பக்கமுகப்பில் நேம்ட்ராப் செய்யவேண்டும்
விக்கிப்பீடியா தொகுப்பிற்குக் கூட லாயக்கில்லாத தகவல்கள் கொடுக்க வேண்டும்.
முன்னுமொரு காலத்திலே என்று துவங்க வேண்டும்.
ஜெனரலைஸேஷன் நிறைந்திருக்க வேண்டும்.
தற்கால முக்கிய எழுத்தாளர்களின் மோசமான படைப்புகளை அடையாளம் காட்டாமல், எப்பொழுதோ இறந்து, எழுந்து அடிக்க வராத சந்ததியைச் சார்ந்தவரை சாடும் படைப்பாக இருக்க வேண்டும்.
அழகாபுரி அழகப்பன், ஜெகசிற்பியன் என்று டங்குவார் கழன்றவர்களையும் கவனிக்கும் ஆழ்வாசகரின் அடர்த்தியான ஆக்கமாக வேண்டும்.
இந்த மாதிரி பதிவு படித்து அழுது தொலைப்பதற்கு பதிலாக,
கேபிள் சங்கரின் சினிமா விமர்சனத்தையோ, எட்ஜ் கருத்துப் பத்தியையோ படிக்கவும் …
ஆர்வி ஆலிவ் கிட்டரிட்ஜ் போன்ற ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கவும் …
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde