Tag Archives: ஒபாமா

இந்தியாவில் இருந்து வந்தோர் எவரை ஆதரிக்கிறார்கள்?

இந்தியாவில் வசிக்கும் இன்னொரு தமிழரின் பார்வை:

“கமலாவா டிரம்பா என்பதை விட வெல்லப்போவது இலான் மஸ்க், பாலாஜி ஸ்ரீனிவாசன் முதலியவர்களின் conviction-ஆ அல்லது அமெரிக்காவின் (டிவி) ஊடகங்களின் கணிப்பு (எ) பிரசாரமா என்பதில்தான் எனக்கு அதிகம் சுவாரசியம்! என்னுடைய மற்றுமொரு கணிப்பு என்னவென்றால் அமெரிக்கவாழ் இந்தியர்கள் டிரம்ப் வருவதை (அவர் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரானவர் என்பதனாலேயே) விரும்பவில்லை. கமலாம்மா இந்தியர் என்பதைக் காட்டிலும் டிரம்ப் வந்தால் என்ன பண்ணித் தொலைவாரோ (னோ) என்பதுதான் அவர்களின் கவலையாக உள்ளது.”
———-

இனி என் பார்வை:

அமெரிக்க இந்தியர் கொள்கைப் பற்றாளர் கிடையாது.
அமெரிக்க இந்தியருக்கு மூன்றே குறிக்கோள்:
1. பணம் – பங்குச் சந்தையில் காசு பார்த்தல்
2. குழந்தை – அவர்களை ஒரு வழியாக்குதல்
3. சோம்பேறி – ஓய்வு, டிவி, வம்பு பேசுதல்

அவர் செங்கொடி ஏந்தி சித்தாந்தத்தைத் தூக்கிப் பிடித்ததில்லை.
அவர் அரியணையில் அமர்ந்து மார்கஸ் அரேலியஸ் (Marcus Aurelius) மாதிரி ‘தியானங்களின் சுருக்கம்’ சிந்திப்பதில்லை.
அவர் அரசியல் பற்றி கவலைப்படாத நடுத்தர வர்க்கம்.

அவருக்கு தங்கம் வேண்டும். திருட்டு டிவி வேண்டும். கிசுகிசு வேண்டும். கிளுகிளுப்பு வேண்டும். முகப்புத்தகமும் இன்ஸ்டா ரீலும் வேண்டும். விஜய்யும் அஜீத்தும் வேண்டும்.
சொல்லப் போனால் தமிழ்நாட்டில் வசிப்பதாகவே நினைப்பு.
அவருக்கு தமிழக அரசியல் விவரமாகத் தெரியும். அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கையோ உக்ரெயினுக்கான உதவிக்கான பின்புலமோ அறிய வேண்டிய ஆர்வமோ தேவையோ இல்லாத ஜந்து.

புலம் பெயர்ந்தோருக்கு எதிரானவர் டிரம்ப் என்பதே ஆதிசங்கரரை ‘மாயாவாதி’ எனத் திட்டுவது போல் அர்த்தமற்றது.
சட்டபூர்வமாக உள்நுழைந்தோருக்கு குடியுரிமை தருவதற்கு தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும் கமலா ஹாரிசும் இழுத்தடிக்கிறார்கள்.
அந்த மாதிரி எச்1.பி., பி1 விசாக்களில் வந்தவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் சட்டு புட்டென்று குடியுரிமைத் தருவதாக விவேக் ராமசாமியும் டொனால்ட் டிரம்ப்பும் உறுதியளிக்கிறார்கள்.

எல்லோருக்கும் இருபது டாலர் குறைந்த பட்ச ஊதியம் தருவதாக கமலா ஹாரிஸ் வாக்குறுதி அளிக்கிறார்.
அது வாங்க முடியாமல் அல்லாடும் அப்பாவி அத்துமீறி ஊடுருவல்வாதிகளை, அவர்களின் சொந்த ஊருக்கே திருப்பி அனுப்புவதாக வாக்குறுதி அளிக்கிறார் டிரம்ப்.

கமலா வழிப்படி பார்த்தால் ஏழைகளை உறிஞ்சும் சக்தி டெமொகிரட்ஸ் தான்.
டிரம்ப் வழிப்படி பார்த்தால் சட்டபூர்வமாக வசிப்போருக்கு சரியான சம்பளம் வரும் பாதைக்கான கால்கோள் இடுபவர் ரிபப்ளிகன் தான்.

முழு ராஜ்ஜியமும் கையில் இருந்த போதும் துப்பாக்கிகளைத் தடை செய்யும் திட்டமோ, புவி வெப்பமயமாதலைக் குறைக்கும் சட்டமோ இயற்றாத ஒபாமா போன்ற ஹாரிஸை நம்பும் இந்திய வம்சாவழியினர் அதிகம்.
அவர்கள் மாற்றத்தை விரும்பாதவர்கள்.
ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால் பங்குச் சந்தை சரியாது. பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும். ஆள் குறைப்பு நடக்காது.
நேற்று போல், நாளையும் இருக்கும்.

டிரம்ப் வந்தால் களை பிடுங்கப்படும். அரசாங்க ஊழியர் முதல் கடைநிலை இட்லி கடை எல்லோரும் ஓராண்டிற்காவது சிரம தசைக்கு உள்ளாவார்கள்.
ட்ரம்ப் ஆதரவாளர்கள் இந்த அறுவை சிகிச்சையை விரும்புகிறவர்கள்.
குற்றங்கள் குறைய வேண்டும் என நினைப்போர் டிரம்ப் பக்கம். குழந்தைகளுக்கு அறியா வயதிலேயே பாலியல் கல்வி கூடாது என நினைக்கும் பழமைவாத கலாச்சார காவலர்கள் டிரம்பின் பக்கம்.
முந்தா நாள் போல் நாளையும் இருக்கும்!

Generalization is the mother of all screwups.

கமலா ஹாரிஸ் என் ஜெயிக்க வேண்டும்?

நேற்றைக்கு டானால்ட் ட்ரம்ப் ஏன் வென்று விடுவார்.

இன்றைக்கு துணை ஜனாதிபதி வென்றால் என்ன நடக்கும்?

1. சட்டவிரோதமாக குடிபுகுந்தோருக்கு மன்னிப்பு; கள்ள்த்தோணியில் பின்வாசல் வழி நுழைந்தோருக்கு வேலைவாய்ப்பு; குறைந்த பட்ச ஊதியத்தில் உழைக்கும் வந்தேறிகளுக்கு குடியுரிமை + வாக்குரிமை சட்டங்கள். பென்சில்வெனியா, நெவாடா, விஸ்கான்சின், மிச்சிகன், வட கரோலினா, ஜியார்ஜியா, அரிசோனா – எல்லாவற்றிலும் டெமோகிராட் வாக்கு 2026ல் இரட்டிப்பாகும்.

2. பொர்த்தோ ரிக்கோ-வும் வாஷிங்டன் டி.சி. (கொலம்பியா மாவட்டமும்) மாகாணங்களாக அமெரிக்காவுக்குள் நுழையும், தற்போதைய ஐம்பது மாவட்டங்கள் 52 ஆக அதிகரிக்கும். டெமோகிரட்சுக்கு நாலு செனேட்டர்கள் ஜாஸ்தி கிடைப்பார்கள்.

3. இரான் நாட்டின் கைவிலங்கும் கால்தளையும் தளர்வுறும். இஸ்ரேல் நாடு கட்டுக்குள் கொணரப்படும். காசா பாலஸ்தீனமாக தனி நாடாக உருவாகும். உக்ரெயின் போர் இன்னும் அமர்க்களமாகத் தொடரும். கமலாவிற்கு அமைதிக்கான நோபல் தரப்படும்.

4. சீனாவின் ஷி ஜின்பிங் தன் பலத்தை பரிசோதிப்பார். வட கொரியாவை தகாத செயலுக்குத் தூண்டுவார். இந்த சோதனை பலபரீட்சையாக தாய்வான் நாட்டிலும் தெற்காசியாவிலும் ரத்தகளறி ஆகும். இந்தியாவையும் இந்த போரின் பாதிப்புகள் தொடும். அகண்ட வங்காளம் அல்லது சுதந்திர மேகாலயா அமையும்.

5. அணு சக்திக்கு ஜே! காற்றாலைகளுக்குப் பச்சைக் கொடி!! சூரிய ஆற்றல் அனைத்து வீடுகளுக்கும் ஆலைகளுக்கும் சென்றடையும் திட்டம். நிலக்கரிச் சுரங்கம் போன்ற புதைபடிம எரிபொருள்கள் முற்றிலும் மூடப்படும். சுத்தமான தூயசக்தி மட்டுமே அமெரிக்காவில் கிடைக்கும். புவி வெப்பமாதல் குறையும்.

6. LGBTQIA+ – தற்பாலினத்தவர், இருபாலீர்ப்பு, மாற்றுப் பாலினத்தவர், ஊடுபால், பால்புதுமையர், அல்பாலீர்ப்பு குறித்த பாடங்கள் மூன்றாம் வகுப்பிலேயே பள்ளிக்கூடத்தில் சொல்லித்தரப்படும். குழந்தைகளின் குழப்பங்களை பெற்றோர் அறியாமல் பார்த்துக் கொள்ளப்படும். மருவிய பால் என நினைப்போருக்கான அறுவை சிகிச்சை ரகசியமாக, இலவசமாக செய்யப்படும்.

7. லிஃப்ட், ஊபர், போல்ட், ஓலா, டோர்டாஷ் போன்ற அலுவல்சாரா பகுதிநேரத் தொழிலாளர்களுக்கு சங்கம் அமைக்கப்படும். டாக்ஸியை அழைப்பதற்கும் ஊபரைக் கூப்பிடுவதற்கும் எந்தப் பெரிய வித்தியாசமும் இல்லாமல் போகும். ஹோட்டல் அறைக்கும் ஏர்பிஎன்பி வீட்டிற்கும் எந்த வித பாகுபாடுகளும் இன்றி ஒரே மாதிரி அனுபவம் ஆகிவிடும்.

8. மருந்துகளின் விலை இன்னும் எகிறும். வீடற்றோருக்கும் நலிந்த சமூகத்திற்கும் சேமநலம் தாராளமாக்கப்படும். அனைவருக்கும் சிகிச்சை; எந்த நோய்க்கும் வைத்தியம் என்பது பணம்படைத்தோருக்கு மட்டுமல்லாமல், சாதாரணருக்கும் சாத்தியமாகும்.

9. ப்ராஜெக்ட் 2025 நிறைவேறாது. எங்கும், எதிலும் அரசாங்கத் தலையீடு; செவ்வாய் செல்லும் ஏவூர்தி, செயற்கை நுண்ணறிவு முதல் வேண்டப்பட்ட குணாதிசய மரபணுவால் அமைக்கப்பட்ட குழந்தைகள் வரை தொழில்நுட்பம் சுதந்திரமாக உலாவரும் சீனா முன்னேறிய நாடாகி விடும்.

10. இதெல்லாம் செய்ய வேண்டும் என ஆசைப்படுவார்; மசோதாக்களும் கொண்டு வருவார்; கொள்கை பரப்பும் செய்வார். ஆனால், காங்கிரசும், செனேட்டும், உச்சநீதிமன்றமும் எதையும் செய்ய விடாது. அரியணையில் பொம்மையாக வீற்றிருப்பார்.

ட்ரம்ப் ஏன் ஜெயித்து விடுவார்?

  1. ஏற்கனவே லோக்சபா (காங்கிரஸ் எனப்படும் ஹவுஸ் ஆஃப் ரெப்ரசேண்டேடிவ்ஸ்) அவரின் கட்சி கைவசம். செனேட் எனப்படும் மேல்சபையிலும் அவர்களே பெரும்பான்மை ஆகப் போகிறார்கள். ஜனாதிபதியும் ரிபப்ளிகன் ஆக இரண்டாண்டுகளாகவது இருக்கட்டும் என மாற்றம் வேண்டுவோரின் வாக்கு விழும்.
  2. வந்தாரை வாழவைக்கும் அமெரிக்கா – இப்பொழுது வந்தேறிகள் மேல் ஆத்திரம் கலந்த கலக்கத்தில் இருக்கிறது. கமலா இந்தியர் – புலம்பெயர்ந்தோர் தானே!? என எண்ணுவோரின் வாக்கு ட்ரம்பிற்குக் கிடைக்கும்.
  3. எங்கே பார்த்தாலும் வாய்க்கால் தகராறு; உலகெங்கும் குட்டி குட்டி சண்டைகள்; உக்ரெயின், இரான், இஸ்ரேல், சூடான், ஜோர்டான், லெபனான் – முடியலடா சாமீ. நிம்மதியா இருக்கணும்னா டொனால்டு வேணும்.
  4. வங்காளத்தில் போர் வேண்டாமா? மேகாலயா தனி நாடாக வேண்டாமா? தய்வான், கொரியா, மியான்மர், மாலி என உலகெங்கும் சின்னச் சின்ன சின்னாபின்னங்கள் உதயமாக வேண்டாம் என நினைக்கும் அமைதிப் பிரியர்களின் ஓட்டு டிரம்பிற்கு விழும்.
  5. பென்சில்வெனியா, நெவாடா, விஸ்கான்சின், மிச்சிகன், வட கரோலினா, ஜியார்ஜியா, அரிசோனா – எல்லாவற்றிலும் ஆண் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ‘என் இனமடா!’ வர்க்க வங்கி.
  6. காசு… பணம்… .துட்டு… மணி… மணி – நான்காண்டுகளுக்கு முன்பு பணவீக்கம் இப்படி கேவலமாக இல்லை. வேலையில்லா நிரந்தர அன்றாடங்காய்ச்சி திரிசங்கு தொங்கல் இல்லை. அப்பொழுது நல்லா இருந்தோம் என நினைக்கும் வெள்ளையினத்தோரின் ஆதரவு.
  7. குழந்தைகளை தகாத இடத்தில் தொடுபவர் பைடன்; எப்ஸ்டெயின் போன்ற மாமாக்களோடு லீலை நடத்தியவர்கள் டெமொகிரட்ஸ்; ஆட்சியில் இருந்தபோதே அராஜகம் செய்தவர் பில் க்ளிண்டன். ட்ரம்ப் அப்படியெல்லாம் அனுமதியில்லாமல் அத்து மீறாத அழகிய அமெரிக்கமகன் என நினைக்கும் பெண்டிர்.
  8. ஐம்பதாண்டுகள் முன்பு கருப்பர்கள் இருந்த நிலை என்ன… பெண்கள் ஒழுங்காக வேலைக்கு போகாமல் வீட்டில் சமைத்து போட்ட காலம் திரும்ப வருமா! நனவோடையில் மூழ்கிய ‘பழைய நெனப்புதான் பேராண்டி’ வாக்காளர்கள்.
  9. ட்ரம்ப் செய்யாத தவறு கிடையாது; மாட்டாத இடம் இல்லை; அவரின் அந்தரஙம் என்று தெரியாத எந்தப் புதிரும் இல்லை. அவர் பொல்லாதவன் + போக்கிரி + பில்லா II வேண்டும் என நினைப்போர்
  10. துணை ஜனாதிபதியாக கடந்த நான்காண்டுகளாக என்னக் கிழித்து விட்டார் கமலா ஹாரிஸ் என கடுப்பானோர்.

கொசுறு: இப்பொழுது இந்தக் கருப்பர் ஜெயித்தால் மிஷேல் ஒபாமா ஜெயிக்க வாய்ப்பு கிட்டாது என நினைக்கும் உள்வட்ட உயர்மட்ட குழு. கிடைக்கிற வரைக்கும் கொடுக்கிற காசை வாங்கி வைத்தால் ஈரண்டு கழித்து அடுத்த தேர்தலுக்கு அன்னை மிஷேலுக்கு உதவுமே!

மீண்டும் டொனால்டு டிரம்ப் வருவதற்கான கால்கோள்

அமெரிக்காவில் அடிக்கடி தேர்தல் நடக்கும்.

இந்தியாவில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை லோக் சபா தேர்தல். நடுவில் உள்ளாட்சி, இடைத் தேர்தல் எல்லாம் இருந்தாலும் ஒரு வாக்குப் பதிவு முடிந்து, அதற்கான வாக்கு எண்ணிக்கை முடிந்து, அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவர் தேர்தல் வாக்குறுதியை மசோதாவாக்க மக்களவை, மேல்சபை என்று அனுப்புவதற்குள் அடுத்த தேர்தல் முடிந்து அவரின் கட்சி பெரும்பான்மையை இழந்து பல் பிடுங்கப்பட்ட பாம்பாக இருக்கும்.

உலகின் பெரிய பொருளாதாரமாக சீனா வளர்ந்து நிற்கிறது. டொனால்டு டிரம்ப் இருந்த மட்டும் வாலைச் சுருட்டிக் கொண்டு அமெரிக்காவை ஆண்ட ருஷியா, ஜான் பைடன் வந்த பிறகு உக்ரைன் நாட்டை படையெடுத்து உலகா தாதா ஆகி நிற்கிறது. சமாதானம் செய்வது, நடுவராக இருப்பது எல்லாம் இந்தியாவின் கையில் இருக்கிறது. வட கொரியாவும் ஏவகணையாக விட்டுத் தள்ளுகிறது. வளைகுடாப் பகுதியில் ஈரான் பெரிய புள்ளியாக சர்வ வல்லமையுடன் கோலோச்சுகிறது.

இது அயல்நாடு சமாச்சாரம்.

உள்நாட்டில்… இன்னும் கேவலமான சூழல்!

வரலாறு காணாத பணவீக்கம். எகிறும் பெட்ரோல் விலை. வீடு வாங்க முடியாத சொந்த வளையில் குடிபுக முடியாத தலைமுறை. அமெரிக்காவைப் பார்த்தால் இங்கிலாந்தே தேவலாம் என்று சொல்லிவிடுவீர்கள்.

இந்த நிலையில் ஆளுங்கட்சியான டெமொகிராட்ஸ் – ஜனநாயகக் கட்சி தேர்தலை சந்திக்கிறது. அவர்கள் வைத்திருக்கும் ஒரே அஸ்திரம் – தனக்கான முடிவை பெண்களே எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் தேவையா? வன்புணரப்பட்ட மகளிர் உடலைக் கூட மசோதா போட்டு வேண்டாத மகவைப் பெற்றெடுக்க வைக்கும் அராஜகத்தை முன்வைத்து வாக்கு கேட்கிறார்கள்.

கருக்கலைப்பு என்பது சட்ட விரோதமானது என்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது. அதை ரத்து செய்து சட்டம் இயற்ற தங்களுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்கிறார்கள்.

எதிர்க்கட்சியான ரிபப்ளிகன் – குடியரசு கட்சி எந்த விஷயத்தைக் கையில் எடுப்பது என்று திணறும் அளவு தெரிவுகள். நிதி நிலைமையையும் பொருளாதார சரிவையும் முன் வைக்கிறார்கள். தட்டித் தடுமாறி நடந்து கொண்டு, குப்பாச்சு குழப்பாச்சு ஆக திணறிப் பேசி, எந்த முடிவையும் தீர்க்கமாக நடைமுறையாக்காத, கையாலாகாத ஜனாதிபதி ஜான் பிடன் தலைமையைச் சுட்டுகிறார்கள். டொனால்ட் டிரம்ப் மீண்டும் வந்து விடுவார் என்று நம்பிக்கை நட்சத்திரத்தைச் சொல்கிறார்கள். அமெரிக்காவின் எரிவாயுவையும் எண்ணெய் ஊற்றுகளையும் திறந்து டீஸல் விலையைக் குறைக்கிறோம் என்கிறார்கள்.

கிறித்துவ மதக் கொள்கைகளை கொடி பறக்க விடுவோம் என்னும் சித்தாந்தத்தின் பின்னணியில் வெள்ளையர்களும் கருப்பர்களும் ஒரே அணியாகத் திரண்டு இருக்கிறார்கள். கருச்சிதைப்பை எல்லா மாநிலங்களிலும் எப்பொழுதும் குற்றமாக்குவது… துப்பாக்கியை எங்கேயும் எவ்வாறும் எடுத்துச் செல்வது… பக்கத்து நாடுகளில் இருந்து கள்ளத்தோணிகளில் திருட்டுத்தனமாக அமெரிக்காவிற்குள் புகுபவர்களை குடியேற விடாமல் துரத்துவது… வருமான வரியைக் குறைப்பது… தற்பால் விரும்பிகள் குழந்தைகளைத் தத்தெடுக்க விடாமல் தடுப்பது… அள்ள அள்ளக் குறையாத சமூகக் கொள்கைகள்.

மாநிலங்களவை / ராஜ்ய சபா போன்ற செனேட் நிலைமை – 50 டெமோகிராட் மற்றும் 50 ரிபப்ளிகன் கட்சிக்காரர்கள்.
மக்களவை / லோக் சபா போன்ற காங்கிரஸ் நிலைமையும் இதே போல் இழுபறி தான். சற்றே சறுக்கினாலும் இப்போது இருக்கும் டெமோகிராட் (ஜனநாயகக் கட்சி) பெரும்பான்மையை இழந்து விடும்.

கடந்த இரண்டு வருடத்தில் டெமோகிராட் (ஜனநாயகக் கட்சி) காரகளால் ஒழுங்காக எந்த புதிய சட்டத்தையும் அமலாக்க முடியவில்லை. டொனால்ட் டிரம்ப் சதி செய்தார். அவருடன் இருந்தவர்கள் ஊழல் செய்தார்கள். அவர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார்கள் என்று நிரூபிப்பதில் மட்டுமே குறியாக இருந்தார்கள்.

சென்ற ஆட்சிக்காரர்களை குற்றஞ்சாட்டி ஆளுங்கட்சி ஜெயிக்க முடியாது. அடுத்த இரண்டாண்டுகளாவது ஜனாதிபதி ஜான் பிடென் அரசாட்சியிலும் நிர்வாகத்திலும் மக்கள் சேவையிலும் கவனம் செலுத்த வேண்டும்.

அதற்கான வாக்குப் பதிவு இன்று நடந்து முடிந்துவிட்டது.

இனி மேலாவது ஒழுங்காக ஆக வேண்டிய காரியங்களையும் உண்மையான பிரச்சினைகளுக்கான தொலைநோக்கு தீர்வுகளையும் உலக வெம்மையாக்கலையும் டெமோகிராட் (ஜனநாயகக் கட்சி) கையில் எடுக்குமா?

அல்லது பூச்சாண்டி டிரம்ப் வராரு என்று கிளிப்பிள்ளையாக புலம்பிக் கதறிக் கொண்டேயிருப்பார்களா?

அப்புறம் டிரம்ப் மீண்டும் உலகநாயகர் ஆவதை புடின் நினைத்தாலும் தடுக்க முடியாது!

கம்யூனிஸம் பேசுகிறாரா அமெரிக்க ஜனாதிபதி?

சென்னையில் மருந்தகங்களே மருத்துவராக மாறி நோயை குணப்படுத்துவார்கள். மேற்கத்திய உலகில் சட்டங்களும் திட்டங்களும் அதிகம். தெருமுக்கில் ஒற்றை அறையில் உங்களை நாடி பிடித்து குணப்படுத்தும் நம்பகமான ஐந்து ரூபாய் டாக்டர் கிடையாது.

அவசர அவசரமாக உடனடியாக சிகிச்சை பெற வேண்டுமானால் உயர்தரமான சேமநல காப்பீடு வேண்டும். அந்த மாதிரி முன் ஜாக்கிரதையாக இன்ஷூரன்ஸ் எடுக்காதவர்களுக்கு உடம்பு சரியில்லாமல் போனால் சொத்தையே எழுதி வைக்க வேண்டும்.

இதற்கெல்லாம் மாற்றாக ஒபாமா-கேர் வரப் பார்த்தது. மாஸசூஸட்ஸ் மாநிலத்தை முன் மாதிரியாக வைத்து உருவான சகலருக்குமான காப்புறுதி திட்டம் அது. பராக் ஒபாமாவின் காலத்திலேயே அது நீர்த்துப் போய் பேருக்கு காப்புறுதி கொடுத்தது. டொனால்டு டிரம்ப் வந்து அந்த ஹெல்த்-கேர் திட்டங்களை இன்னும் காலாவதியாக்கினார்.

அதில் விட்டதையும் தொட்டதையும் தற்போதைய அதிபர் பைடன் சட்டமாக்கப் பார்க்கிறார். எக்கச்சக்க விலை கொடுத்து வாங்க வேண்டிய மருந்துகளை சகாயமாக அணுகக் கூடிய விலையில் தர முயல்கிறார்.

அது சோஷலிசமா?

சமத்துவமா?

கம்யூனிஸம் பேசுகிறாரா அமெரிக்க ஜனாதிபதி?

லதா குப்பாவின் #சொல்வனம் கட்டுரையை வாசியுங்கள்.

This May Be Democrats’ Best Chance to Lower Drug Prices | Democrats Add Drug Cost Curbs to Social Policy Plan, Pushing for Vote #solvanam

சிரியா – ஒபாமா நலமா?

சிரியா பிரச்சினையின் 101 என்ன என்பதை பா ராகவன் தி ஹிந்துவில் எழுதுகிறார். சிரியா ஏன் திடீரென்று செய்திகளில் அடிபடுகிறது?

ஒபாமாவிற்கு இந்த மூன்று மாத காலம் சிரமதசை நடக்கிறது. இதற்கு மாற்றாக குரு பார்வை, சுக்கிர பலம் எல்லாம் கிடைத்தால் நன்றாக இருக்கும். குரு போன்ற முக்கிய கிரகம் பார்ப்பதுதான் சிரியா மீது போர்மேகங்கள் சூழ்வதற்கான அஸ்திவாரம்.

இந்த மாத இறுதியில் ஒபாமாவின் சேமநல காப்பீடு திட்டம் முழுவீச்சுடன் இயங்கப் போகிறது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் சகல அமெரிக்கருக்கும் உடல்நல பாதுகாப்பு திட்டத்தை முடக்க எதிர்க்கட்சி திட்டம் போட்டிருந்தது. இந்த மாதிரி தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு தலைவலி கொடுக்கும் ரிபப்ளிகன் கட்சியை எப்படி சமாளிப்பது? முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பது போல் குடியரசு கட்சிக்கு பிடித்தமான நாட்டுப்பற்றை முதலில் கையில் எடுத்தார் ஒபாமா.

ஸ்னோடென் கிடைத்தார். அவரும் உலக மகா ரகசியம் போல் அமெரிக்கா வேவு பார்க்கிறது என்பதை சொல்கிறார். தேசநலன், தீவிரவாதிகளை கண்காணித்தல், அமெரிக்காவை பாதுகாத்தல் போன்ற விஷயங்கள் செய்தியில் அடிபடுகின்றன. Tea party செயல்பாடுகளை வருமானவரித்துறை மூலம் ஒடுக்கியதில் இருந்து ஒபாமா மீள்கிறார். தேயிலைக் கட்சிகாரர்களின் கெடுபிடிகளை மறக்கடித்து கொடி காத்த குமரனாக பராக் ஒபாமா மிளிர்கிறார்.

கொஞ்ச நாள் போனதும் எட்வர்ட் ஸ்னோடென் பழைய செய்தியாகிப் போகிறார். மீண்டும் ஒபாமா கேர் தடுக்கப்பட வேண்டும் என்று போர் முரசு கொட்டுகிறார்கள் ரிபப்ளிகன் கட்சியினர். எப்படித் தப்பிப்பது? இப்பொழுது Wag the Dog சமயம். அமெரிக்காவே சண்டக்கோழி. இதில் மிகப் பெரிய சண்டியர்களாக குடியரசுக் கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அஸ்திரம்தான் ”போர்”. ஒபாமாவே அதை கையில் எடுத்தால்…?

ஒபாமா கேர் பின்னுக்குத் தள்ளப் படுகிறது. சேமநலத் திட்டத்தை தடுத்து நிறுத்துவதைப் பற்றி பேசுவதற்கு பதில் போர் மூண்டால் எவ்வளவு ஏவுகணை விற்கும்… எத்தனை எஃப்16 தயாரிக்கலாம்… என்று முட்டைக்கணக்கு போடத் துவங்கி இருக்கிறார்கள். பெட்ரோடாலரும் வலுக் கொண்டது. ரூபாயும் போன்ற இன்ன பிற நாணய மதிப்புகளும் வீழ்ச்சி முகம் கொண்டன. இது பொக்கீடு (பட்ஜெட்) சமயத்தில் ஒபாமாவின் கரத்தை வலுப்படுத்தும். அப்படி இல்லாமல், அப்பொழுதும் பால் ரையான் & மார்க்கோ ரூபீயோ கோஷ்டியினர் தர்ணா நடத்தினால், சிரியா மீது நிச்சயம் குண்டு விழும்.

அதெல்லாம் சரி… சிரியாவில் எண்ணெய் இருக்கிறது என்கிறதே கட்டுரை… எவ்வளவு இருக்கிறது? சுவத்துக் கீரை வழிச்சுப் போடுடி, சொரண கெட்ட வெள்ளாடச்சி என்போமே அது போல் உலகத்தின் மொத்த பங்கில் 0.4% (0.004)! அது சும்மா அடுப்பு பொங்கக் கூடக் காணாது.

இரு கோடுகள் – அமெரிக்க ஒற்றர் பராக் ஒபாமா

ஒபாமாவிற்கு சனியும் சரியில்லை. குருவும் சரியில்லை. வெளியில் இருந்து பார்ப்பதற்கு சிரமதசை நடப்பது போல் தோன்றுகிறது.

அசோசியேடட் பிரெஸ் என்ன செய்கிறது, யாரை அழைக்கிறார்கள், எவருக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்கள் என்று வேவு பார்த்திருக்கிறார். ஒன்றிரண்டு நாள்கள் அல்ல… அறுபது நாள்களுக்கு மேல் ஏ.பி. நடவடிக்கைகளை கண்காணித்திருக்கிறார்கள்.

இப்படி நீண்ட காலம் ஒருவரை ஒற்றறிய வேண்டுமானால் வாரண்ட் வாங்கி இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கிற்கு உட்பட்டு இந்த மாதிரி விஷயங்களை செய்திருக்க வேண்டும். அதெல்லாம் கடைபிடிக்கவில்லை. இத்தனைக்கும் AP நிறுவனம் முஸ்லீம் இல்லை. தீவிரவாதி இல்லை. அமெரிக்காவில் பன்னெடுங்காலமாக இயங்கி வரும் செய்தி ஸ்தாபனம். புகழ்பெற்ற ரிப்போர்ட்டர்களை உள்ளடக்கிய நான்காவது தூண்.

அவர்களைப் போய்… ஏன்?

ஒசாமா பின் லாடன் செத்த முதலாம் நினைவு நாளை அல்-க்வெய்தா பெரிதாகக் கொண்டாட விரும்பியது. ஏதாவது மிகப் பெரிய தீவிரவாதச் செயலை செய்து முடிக்க விரும்பியது. ஏமனில் இருந்து விமானத்தைக் கடத்தி இஸ்ரேல் போன்ற அணுசக்தி நிறைந்த தேசத்தில் நாசம் விளைவிக்க திட்டம் தீட்டியது. இந்த விமானத்தை ஓட்ட தேர்ந்தெடுக்கப்பட்டவர் அமெரிக்க உளவாளி. அவர் இந்த சதித் திட்டத்தை முறியடித்துவிட்டார். விமானத்தை ஹை ஜாக் செய்து சமர்த்தாக அமெரிக்க நண்பர் நாட்டிடம் ஒப்படைத்துவிட்டார்.

இவ்வளவு பெரிய திட்டம்! அமெரிக்க உளவாளி அல் குவெய்தாவிற்குள் இருக்கிறார். அவரும் இன்னொரு நிஜ தாலிபான் போராளியும் சேர்ந்து ஒஸாமா அஞ்சலி அழிப்புத் திட்டத்திற்கு செல்கிறார்கள். கூட வந்த தீவிரவாதிகளை வீழ்த்தி, இன்னொரு 9/11 தகர்ப்பு நடக்காமல் காப்பாற்ற வேண்டும்.

இத்தனையும் வெளியில் கசியாமல் இருக்க வேண்டும். கசிந்தால், இன்னொரு உலகப் போர் துவங்கும் அபாயம். இதற்காக சொல்லாமல் கொள்ளாமல் நிருபர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டுக் கொண்டே இருக்கலாமா?

Argo படம் பார்ப்பது போல் இருக்கிறது. உயிர்களைக் காப்பதற்காக அன்னிய நாட்டிற்குள் அத்துமீறி நுழைகிறோம். விஷயத்தை அறிந்த முந்திரிக்கொட்டை இந்தத் திட்டத்தை நிருபரின் காதில் கிசுகிசுக்கிறது.

அப்பொழுது செய்தியாக வெளியிட்டு, அப்பாவி உயிர்களை சாகடிக்க வேண்டுமா? அல்லது ஆறிய கஞ்சியான பிறகு நாளிதழில் மெதுவாக எழுத வேண்டுமா?

அனைத்து உண்மைகளையும் உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிப்பதால் என்ன பயன்? எல்லா விஷயங்களையும் பதுக்கி, ரகசியமாக டீல் போடுவதால் வரிப்பணம் கட்டும் குடிமகன்களின் அடிப்படை உரிமை பறிக்கப்படுகிறதா?

பிறரின் தொலைபேசிகளை காலவரையின்றி ஒட்டுக் கேட்கும் சட்டம் கடந்த ஜனாதிபதி புஷ் காலத்தில் இயற்றப்பட்டது. இராக்குடனும் ஆஃப்கானிஸ்தானுடனும் போர் நடத்திய காலத்தில் ஒற்றர்களைப் பாதுகாக்க இந்த சட்டத்தை பயன்படுத்தினார்கள். சண்டை முடிந்தபிறகு சட்டம் காலாவதி ஆகி இருக்க வேண்டும். ஆனால், நீட்டித்துக் கொண்டே வந்தார்கள், அதன் பின் அவ்வப்போது எதிர்க்குரலாக டெமோகிராட் குரல் ஒலித்தாலும் அரசியல் காரணங்களுக்காக ஒபாமாவும் இதை ஆதரித்து கிட்டத்தட்ட நிரந்தர சட்டமாகவே ஆக்கிவிட்டார்.

இப்பொழுது அசோசியேடட் பிரெஸ் மேட்டருக்கு பிறகு இரு கட்சிகளிடம் இருந்தும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பத்திரிகைகளை வேவு பார்க்க வேண்டுமானால், நீதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும் என்பதில் முனைப்பாக ஒருங்கிணைந்த குரல் கேட்கத் துவங்கியுள்ளது. யாரையும் எப்பொழுது வேண்டுமானாலும் கண்காணிக்கலாம் என்பதில் கொஞ்சம் லிமிடெட் மீல்ஸ் ஆக்கலாம் என்பதை ரிபப்ளிகன் கட்சியே ஒத்துக்கொண்டுள்ளது.

இவ்வளவும் ஒசாமா பின் லாடன் நினைவாஞ்சலி மேட்டரில் சி.ஐ.ஏ ரகசியமாக செயல்பட்டதை அசோசியேடட் பிரஸ் அம்பலப்படுத்தியதால் கிடைத்த ஆய பயன்.

தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால் உணரப்படும் என்பது போல் ரிபப்ளிகன் புஷ் காலத்தில் பயன்பட்ட சட்டம், டெமோகிராட் ஒபாமா காலத்தில் பிரச்சினையாக மாறியிருக்கிறது.

இதன் உச்சகட்டமாக எல்லாவற்றையும் மறைக்கவும் மறக்கவும் ஸ்னோடென் வந்து துப்பு துலக்கி ஃபேஸ்புக்கும், மைக்ரோசாஃப்ட் ஸ்கைப்பும், யாஹூவும் சீனாவின் ருஷியாவின் தகவல்களை வேவு பார்க்கின்றன என்றார்.

Obama 2nd Term start: State of the Union 2013

நேற்று ஒபாமா பேசினார்.

பிடித்த தலைவர்களின் பிடித்தமான கொள்கைகளை கேட்பது சுகம். அவை நிறைவேறாவிட்டாலும் கூட கேட்பது சுகம். நாளைக்கு எழுந்தால் இவற்றுக்கு எல்லாம் பலமான முட்டுக்கட்டை விழும் என்று அறிந்திருந்தாலும், தலைவரின் உணர்ச்சிகரமான உரையின் சாத்தியக்கூறுகளையும் வருங்காலம் குறித்த கனவுகளுக்காகவும் நேரலையில் பார்ப்பது சுகம்.

கூடை கவிழ்த்த மாதிரி சிகை அலங்காரத்துடன் மிஷேல் ஒபாமா. அவருக்கு ஒரு புறம் இறந்த காலம். இன்னொரு புறம் நம்பிக்கை காலம். பதினைந்து வயது மகளை தெருச்சண்டை துப்பாக்கிச் சூட்டிற்கு பலி கொடுத்தவர் ஒரு பக்கம் அமர்ந்திருந்தார். மின்ரத்து ஆன புயல் இரவில் பதினைந்து சிசுக்களை காப்பாற்றி கரை சேர்த்த செவிலி இன்னொரு புறம் அமர்ந்திருந்தார்.

ஒபாமா பேசியதில் பிடித்த மேற்கோள்கள்:

* கென்னடி சொன்னதாக, “சட்டசபைக்கு வருவது போட்டி போட்டு ஆட்சியைப் பிடிப்பதற்காக அல்ல; முன்னேற்றத்திற்காக கை கோர்ப்பதற்காகத்தான் அரியணை போட்டி.”

* ’நிறைவேற்ற இயலாத புதிய புதிய வாக்குறுதிகளை அரசாங்கம் கொடுக்க வேண்டாம்; ஆனால், ஏற்கனவே உறுதியளித்த சத்தியங்களைக் காப்பாற்ற வேண்டும்’

* ‘கட்டற்ற குண்டுகளை கட்டுப்படுத்தும் சட்டத்திற்கான உங்கள் வாக்குகளை நியூ டவுன் சிறார்கள், உங்கள் கடமையாக ஆக்கியிருக்கிறார்கள். ஏகே47 துப்பாக்கிகளால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோர் வாக்குரிமை கேட்கிறார்கள்.’

இவ்வளவு பேசினாலும், செயலாற்றாத காங்கிரசில்தான் சூட்சுமம் இருக்கிறது. அனைவருக்கும் குறைந்த பட்ச சம்பளத்தை உயர்த்தினால் பொருளாதார தடுமாற்றம் நிறைந்த சூழலில் பணவீக்கமும் பெருகும் என்பதை குடியரசு கட்சி அல்ல… ஒபாமாவின் டெமோகிரட்ஸே அறிவார்கள்.

நினைப்பது நல்லதுதான்; ஆனால், நடக்கவேண்டியது என்ன?

பராக் ஒபாமா ஏன் ஜெயிக்க வேண்டும்?

நான்கு வருடம் முன்பு ஒபாமாவின் தாரக மந்திரம் ‘மாற்றம்’. இன்றைக்கு மிட் ராம்னியின் மந்திரம் ‘அசல் மாற்றம்’.

சின்ன வயதில் சோறு ஊட்டும்போது அம்மா சொன்ன கதை நினைவுக்கு வருகிறது. பண்ணையார் வீட்டின் செல்லப் பிள்ளையை பாதுகாக்க கீரியை வளர்க்கிறார்கள். அப்பா வயலுக்கு வேலையாகப் போய்விட்டார். அம்மாவோ முற்றத்தில் பிசி. சமயம் பார்த்து நல்ல பாம்பு உள்ளே நுழைகிறது.

பாம்பைக் கண்ட கீரி, அதனுடன் சண்டை போட்டு குழந்தையைக் காப்பாற்றுகிறது. இந்த விஷயத்தை தன் எஜமானர்களுக்கு சொல்வதற்காக வாசலில் காத்திருக்கிறது.

இரத்தம் வழியும் வாயைப் பார்த்தவுடன் ஆத்திரம் கொண்ட தாயார், கீரியின் தலையில் தன் கையில் உள்ள குழவியைப் போட்டுக் கொல்கிறாள். குழந்தைக்கு என்னாச்சோ என்று பதறிக் கொண்டு வீட்டிற்குள் ஓடுகிறாள். அப்பொழுதுதான் உண்மை விளங்குகிறது.

குழந்தை பத்திரமாக தூளியில் உறங்குகிறது. தூளியின் அடியில் பாம்பு செத்துக் கிடக்கிறது. தன் மக்களை பாதுகாத்த பாதுகாவலனை தானே கொன்று விட்டோமே என்று அந்த அன்னை கதறுகிறாள்.

கீரியைப் போல் வாயில்லா ஜீவனாக ஒபாமா அமெரிக்க மக்களை பணக்கார வால் ஸ்ட்ரீட் பாம்புகளிடமிருந்து காக்க திட்டங்கள் இட்டு, சட்டமாக்கி வருகிறார். அதை அறியாமல், அமெரிக்க மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்து, அதன் பின்னர் வருத்தம் கொள்வாரோ என்னும் பதைபதைப்பு இருக்கத்தான் செய்கிறது.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஒபாமா என்ன சாதித்தார்?

முதல் கையெழுத்து எப்பொழுதுமே முக்கியமானது. அமெரிக்க ஜனாதிபதி ஆனதும் பராக் ஒபாமா பெண்களுக்கும் சம சம்பளம் கிடைக்க வழிவகுக்கும் திட்டத்தை தன்னுடைய முதல் கையெழுத்தின் மூலம் சட்டமாக்கினார்.

’இவன் திவாலாகிப் போவான். அவள் மஞ்சக் கடுதாசி கொடுப்பாள்’ என்று பின்னணியில் ஏலம் விட்டுக் கொண்டே, முகப்பூச்சில் அவர்களுக்கு கடும் நிதிச்சுமையைக் கொடுத்த பொருளாதார நிறுவனங்களைக் கட்டுக்குள் கொண்டு வரும் கண்காணிப்பு சட்டத்தை அடுத்து நிறைவேற்றினார்.

ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் புரிந்தால், வேலை போகும்; எந்தவித காப்பீடும் கிடைக்காது போன்ற ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கான திறப்புகளை இயற்றினார்.

கல்லூரிகளில் படிப்பதற்கான கடன் கிடைப்பதில் இடைத் தரகர்கள் இல்லாமல் ஆக்கினார்.

இளைஞர்களுக்கும் வசதியானோருக்கும் மட்டும் உடல்நல மருத்துவம். முதியவர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் முதுகு திருப்பல் என்பது போய் அனைவருக்கும் சுகாதாரம், எல்லோருக்கும் காப்பீடு, எவருக்கும் இன்சூரன்ஸ் என்பதை நிஜமாக்கினார்.

சுதந்திர சிந்தனையை எதிர்த்த ஒசாமா பின் லாடனை வீழ்த்தினார். முந்தைய ஆட்சியில் துவங்கிய இராக் போருக்கு முற்றும் போட்டார். முடிவில்லாத ஆப்கானிஸ்தான் சண்டையை எப்படி கைமாற்றி, சுயாட்சிக்கு கொணரலாம் என்பதற்கு வடிவம் கொடுத்தார்.

அராபிய நாடுகளில் கத்தியின்றி, ரத்தமின்றி, சத்தமின்றி மாற்றங்கள் கொண்டு வந்தார். அமெரிக்க படை வந்து இறங்க வில்லை. போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து பொதுமக்கள் சாகவில்லை. குடிமக்களே போராடினர். விடுதலை கேட்டனர். சர்வாதிகாரிகள் வீழ்ந்தனர். காந்தி என்ற சாந்த மூர்த்தி கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

எகிப்து, லிபியா, டுனிசியா… வீழ்ந்தது மன்னராட்சி. தொடரும் மக்களாட்சி சகாப்தங்கள்.

அமைதிக்கான நோபல் பரிசை சும்மாவா ஒபாமாவிற்கு கொடுத்தார்கள்!

இதெல்லாம் காலாகாலத்திற்கும் நின்று பேசும் சாதனைகள்.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டு காலமாக நடந்தவைதான் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது. கையாலாகாத, ஒன்றுக்கும் உதவாத தலைவர் என்னும் பிம்பத்தை ‘டீ பார்ட்டி’ ரிபப்ளிகன்களும் செல்வந்த மிட் ராம்னியின் தோழர்களும் அமெரிக்க வாக்காளர் மத்தியில் ஆழமாக நிலைநிறுத்தி இருக்கிறார்கள்.

ஒபாமா முன்னிறுத்தும் எந்த திட்டத்தையும் எதிர்ப்பது என்பது மட்டுமே குடியரசுக் கட்சியின் ’ஓர் அம்ச திட்டம்’.

முக்கிய நகரங்கள் அனைத்தையும் இரயில் பாதை மூலம் இணைக்கும் திட்டமா… முடியாது.

சரி… காரில்தான் செல்வோம் என்கிறீர்கள். அதற்கான எரிவாயு கக்கும் விஷத்தை கரியமில வாயுவைக் குறைத்து, குறைவான பெட்ரோலுக்கு நிறைவான தூரம் செல்லும் அதி-திறன் கார் தயாரிக்கும் திட்டமா… முடியாது.

வேண்டாம்… பள்ளிகளில் ஆசிரியர்களை அதிகரிப்போம். ஒரு வாத்தியாருக்கு இருபது மாணவர்கள் மட்டும் என்று வைத்துக் கொள்வோம். குழந்தைகளுக்கு அறிவியல் கற்பிப்போம் திட்டமா… முடியாது.

வலதுசாரிகளின் செல்லப்பிள்ளையான வரிக்குறைப்பு செய்வோம். குறைந்தபட்ச ஊதியத்தில் வாழ்பவர்களுக்கு வருமான வரியை நீக்குவோம்… முடியாது.

குறைந்த பட்சமாக… சாலைகளை பழுது பார்ப்போம். பாலங்களை சீர்படுத்துவோம்… முடியாது.

எதை எடுத்தாலும் முட்டுக்கட்டை. எந்த ஐடியா சொன்னாலும் ஒத்துழையாமை. இது மட்டுமே மிட் ராம்னி கட்சியின் செயல்பாடு.

இதற்கு நடுவிலும் சொங்கிப் போன அமெரிக்காவை தலை நிமிர வைத்திருக்கிறார் பராக் ஒபாமா. பங்குச் சந்தை குறியீடு முன்னேறுகிறது. வேலை தேடுபவர்கள் எண்ணிக்கை குறைகிறது. புதிதாக வேலை கிடைத்தோர்களின் சதவிகிதம் நாளொரு ஃபேர் அண்ட் லவ்லியும் பொழுதொரு பூஸ்ட்டுமாக வெற்றிக் கொடி கட்டுகிறது.

இவ்வளவு முட்டுக்கட்டை இட்டும் ஒபாமா தேர் ஸ்டெடியாக வீறுநடை போடுகிறது.

இதெல்லாம் ஒஹாயொ வாக்காளருக்கும் ஃபுளோரிடா பெருசுகளுக்கும் புரிந்ததா என்பது நாளைக்கு தெரிந்து விடும்.

’ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் நமக்கென்ன போச்சு? மிட் ராம்னி வந்தால் என்ன குறை?’

ராம்னிக்கு ஸ்திரமான கொள்கை இல்லை. எங்க ஊர் கவர்னராக இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்களை இப்பொழுது அவரே எதிர்க்கிறார். கிட்டத்தட்ட அன்னியன் அம்பி போல் நடந்து கொள்கிறார்.

ஒரு சமயம் ரோமியோவாக பெண்களுக்கு ஆதரவு தருகிறார். அடுத்த நிமிடம் அன்னியனாக மாறி, பெண்களை வன்புணர்ந்தால் கூட கருக்கலைப்பு கூடாது என்கிறா. அடுத்த நிமிடம் அம்பியாக மாறி ஜீஸஸ் என்ன சொல்லி இருக்கார்னா என்று கருட புராணம் பாடுகிறார்.

வந்த முதல் நாளே பழைய குருடி கதவைத் திறடி என்று ஒபாமாவின் ‘எல்லோருக்கும் உடல்நலக் காப்பீடு’ திட்டத்தை ரத்து செய்வேன் என வாக்குறுதி தந்திருக்கிறார்.

ஏற்கனவே பதினாறு ட்ரில்லியன் (கடைசி கணக்கின்படி $16,015,769,788,215.80) பட்ஜெட் பற்றாக்குறை. இதன் தலையில் இன்னும் இராணுவ செல்வழிப்பு என்கிறார். மில்லியனர்களுக்கு வருமான வரியை வாரி வழங்குவேன் என்கிறார்.

கூடிய சீக்கிரமே சீனாவும் ஜெர்மனியும் அகில உலகத்தின் முடிசூடா மன்னர்களாக கோலோச்ச வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் ராம்னிக்கு வாக்களிப்பார்கள்.

What I fear is genuinely worthy falling into the abyss; What I hate is ignorantly hopeful pushing them!

Mitt Romney or Barack Obama: 4 More Days or 4 More Years?

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது நவம்பர் ஆறாம் தேதி தெரிந்து விடும். ஜனாதிபதி ஆனவுடன் முதல் விருந்தை இந்தியாவிற்கு தந்து கௌரவித்த ஒபாமாவா? அல்லது பால்ய வயதிலேயே, இருபதாண்டுகளுக்கு முன்பே அவுட்சோர்சிங் செய்து இந்தியர்களின் கணக்குப்பிள்ளை சூட்டிகையை உலகுக்கு அறிவித்த மிட் ராம்னியா?

மிட் ராம்னியை அறிமுகம் செய்யுமுன் புகழ்பெற்ற மகாபாரதக் கதையை பார்த்து விடலாம்.

பாண்டவர்களில் மூத்தவர் தருமபுத்திரர் வீட்டில் விருந்து. ஏக தடபுடலாக ஆயிரக்கணக்கானோர் விதவிதமான உணவுகளை ருசித்து மகிழ்கிறார்கள். கை கழுவும் இடத்தில் அணில் ஒன்று புரண்டு புரண்டு குளிக்கிறது. முதுகுப்புறம் மட்டும் தங்கமாக ஜொலிக்கிறது. இந்த விநோதத்தை கிருஷ்ணர் சுட்டுகிறார். அணிலை அழைத்து எவ்வாறு அது தங்க நிறம் அடைந்தது என்று விசாரிக்கிறார்.

அது தன் பூர்வ கதை சொல்கிறது. ‘பக்கத்து குக்கிராமத்தில் ஏழை விவசாயி இருக்கிறார். தன் மனைவியுடனும் மகனுடனும் வசிக்கிறார். அன்றாடங்காய்ச்சி. தினசரி உணவை மூன்று பங்காக்கி உண்பார்கள். சாப்புடறப்ப கதவு தட்டற சத்தம். வாசலில் பிச்சை கேட்டு வந்தவனை உள்ளே அழைக்கிறார்கள். தங்கள் கஞ்சியை நான்காகப் பிரித்து ஒரு பகுதியை அவனுக்குக் கொடுத்தார்கள். போதாது என்றான். குடும்பத் தலைவன் தன் பங்கைக் கொடுத்தான். போதாது… இன்னும் வேண்டும் என்கிறான். மனைவியும் மகனும் தங்கள் சோறைக் கொடுக்கும் வரை விடாமல் கேட்டு சாப்பிட்டு விடுகிறான். அவன் கை கழுவிய தண்ணீர் என் மேல் பட்டதால் என் பின்புறம் தங்கமானது’ என்கிறது.

பராக் ஒபாமாவை எதிர்க்கும் மிட் ராம்னிக்கு இந்தக் கதை நிச்சயம் ரொம்ப பிடிக்கும்.

ஏழைகளின் வருவாயில் இருந்து கொஞ்சம் பங்கு போட்டு பணக்கார பிச்சைக்காரர்களுக்கு தர வேண்டும். அதன் மூலம் அவர்கள் கை கழுவி செலவழிப்பார்கள். அதனால் தளர்ந்த அமெரிக்கா முழுக்க தங்கம் மிளிறும் என்கிறார்.

கடந்த நான்காண்டுகளில் ஒபாமாவினால் அமெரிக்காவை பொருளாதாரத்தில் தலை நிமிர வைக்க முடியவில்லை என்பதே நிஜமான நிதர்சனம். படித்தவர்களுக்கு நல்ல வேலை எளிதில் கிட்டுகிறது. ஆனால், சராசரி அமெரிக்கருக்கு, பள்ளிப்படிப்பு முடிக்காதவருக்கு நிதிநிலைமையும் வாய்ப்புகளும் படு மோசம்.

சென்ற ஆட்சிக் காலத்தில் ஜார்ஜ் புஷ் போர் தொடுத்தார். அதனால், ஆவரேஜ் அமெரிக்கர்களுக்கு ஏதோ ஊழியம் கிடைத்தது. அதற்கும் முந்திய பில் கிளிண்டன் காலத்தில் இண்டெர்நெட் ஜாக்பாட் அடித்தது. எல்லோரும் கொழித்தார்கள். ஆனால், ஒபாமாவிற்கு பச்சை சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு சீரமைப்பிற்காக கோடானுகோடி வாரியிறைப்பு எதுவுமே கை கொடுக்கவில்லை. வேலையில்லா திண்டாட்டம் பெருமளவில் நீடிக்கிறது.

அமெரிக்கா முன்னேறுவது இருக்கட்டும். இந்தியாவிற்கு யார் வந்தால் நல்லது? தெற்காசியாவில் என்ன விதமான மாற்றங்கள் நிகழும்?

வங்காளம் கற்றுக் கொடுக்கும் இந்த ஊர் பல்கலைக்கழக பேராசிரியரை சந்தித்தபோது சொன்ன விஷயம் தோன்றியது. ‘சண்டை போட்டாத்தான் மதிப்பு. விடுதலைப் புலிகள் இருந்தவரைக்கும் எங்க டிபார்ட்மெண்டுக்கு நல்ல கவனிப்பு. அங்கே இருப்பவர்களை ஆராயணும்னு சொன்னால் போதும். டூர் அடிக்கலாம். தீவுகளில் சுற்றலாம். செம ஜாலியாக இருக்கும். இப்போ, அராபி கத்துக்கோ… தூய உருது பேசு என்று மாறிட்டாங்க’ என்றார்.

இந்தியாவைப் பொறுத்தவரை சமர்த்து நாடு. நாலு நாள் மின்சாரம் இல்லாமல் இருந்தாலும் சமாளிக்கிறார்கள். ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்திற்கும் இடையே உள்ள வருவாய் ஏற்றத்தாழ்வு அதிரடியாக வளர்ந்தாலும் அழுக்காறு கொண்டு வன்முறை பெருகுவதில்லை. அன்னா அசாரே உதித்தாலும் எகிப்து மாதிரியோ, சிரியா மாதிரியோ ஊதிப் பெரிதாக்க முடியவில்லை. ஷியா, சன்னி, குர்து, சூஃபி என்று இஸ்லாமை பிரித்தாளும் சூழ்ச்சியும் தேறவில்லை. சீனா ஆக்கிரமித்தாலும் விட்டுக் கொடுக்கிறார்கள். ஊர் புகுந்து பாகிஸ்தான் சுட்டுத் தள்ளினாலும் பொறுமை காக்கிறார்கள்.

இந்த மாதிரி தேமேயென்று அமைதி காக்கும் பூமி குறித்து அமெரிக்க அதிபர்கள் கவலை கொள்ள வேண்டாம். ஒன்று பிரச்சினையை உருவாக்கத் தெரிய வேண்டும். அது இஸ்ரேல் வழி. இன்னொன்று பிரச்சினையை வளர்க்கத் தெரிய வேண்டும். இது இரான் வழி. இரண்டிலும் பாரதம் செல்ல மாட்டேன் என்பதனால் இந்தியாவை இன்னொரு ஐரோப்பிய நாடாக, ஆஸ்திரேலியாவாக அமெரிக்கா கருதுகிறது.

ஸ்திரமான நண்பன். நம்பிக்கையான அடியாள். காலாகாலத்திற்கும் சேவகம். தலைமுறை விசுவாசம். சொன்னதெல்லாம் கேட்பவர்.

ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் இந்திய நிறுவனங்களின் அமெரிக்க வளர்ச்சியை ஒடுக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. இந்தியர்களை விசா தில்லுமுல்லு செய்ததாக இன்ஃபோசிஸ் குற்றஞ்சாட்டப்பட்டு அதன் மீது அபராதம் விதித்தார்கள். வெளிநாடுகளில் வேலைக்காரர்கள் வைத்திருந்தார்கள் நிதிச்சுமையை கூட்டினார்கள். இந்த மாதிரி நெருக்கடிகளை கூகிள், மைக்ரோசாஃப்ட் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் எதிர்த்தார்கள்.

இன்னொரு முறை பதவிக்கு வந்தால் ‘அமெரிக்கா அமெரிக்கருக்கே’ என்னும் சுதேசிக் கொள்கையை இன்னும் தீவிரமாக ஒபாமா அமலாக்குவார். மிட் ராம்னி தாராள சிந்தனை கொண்டவர். உலகெங்கும் வேலை வாய்ப்பு பெருகினாலும், அமெரிக்கா சுபிட்சமாகும் என்று நம்புபவர். மேலும், வர்த்தக பின்னணியில் இருந்து வருவதால், இந்த மாதிரி சின்ன விஷயங்களில் ஆர்வம் காட்டாமல், பெரிய பிரச்சினைகளில் கவனம் தருவார்.

சரி… யார் ஜெயிப்பார்கள்?

சென்ற முறை ஒபாமா வென்றதற்கு மிக முக்கிய காரணம், அவரின் பணம் திரட்டும் லாவகம். நின்றால் ஆயிரம் டாலர், பேசினால் லட்சம் டாலர் என்று கறந்து, அதை விளம்பரங்களிலும் வாக்கு சேகரிப்பிலும் செலவழித்து ஜெயித்தார்.

இந்த முறை அவ்ரின் எதிரி மிட் ராம்னியோ கோடானு கோடிக்கு சொந்தக்காரர். தன்னுடைய கைக்காசு, அவருடைய கோடீஸ்வர நண்பர்களின் மறைமுக காணிக்கை மூலமாக பராக் ஒபாமாவை விட பத்து மடங்கு முதல் போட்டு தலைவலியாக போட்டியிடுகிறார்.

எனினும், பணம் மட்டுமே வாக்குப்பெட்டிகளை நிரப்புமா என்ன!