Category Archives: Tamil Blog

சனி காலையில் நடுத்தர வர்க்கத்தின் பதுங்கியிருக்கை

Theater_Cinema_Waiting_Cars_TV_Series_Reality_Television_New_Yorker_Cartoons_3D_Projection

“This one’s just like being at a real theatre.”

கார் ரிப்பேருக்காக காத்திருக்கும் உணவகத்தில் பார்த்தவை.

1. கணினியோடு வருபவர்கள் ஒதுக்குப்புறமாக, தனியறையில் பதுங்குகின்றனர்

2. பார்ப்பதற்கு பசுமையான இல்லத்தரசிகள் வந்தால் கவுண்ட்டருக்கு பக்கத்தில் எல்லோரும் புழங்கும் காபி மெஷின் பக்கத்திலேயே நடுநாயகமாக அமர்கின்றனர்.

3. தினசரியும் அச்சுப் புத்தகமும் வைத்திருப்போர், ஜன்னலோரமாக, புறமுதுகிட்டு உட்கார்கின்றனர்.

4. சிறுவயதினருடன் வருவோர் சோபாவில் பக்கவாட்டில் உட்கார்ந்தாலும், ருஷியாவும் அமெரிக்காவும் போல் ஒரு உரையாடல் கூட இல்லாமல், ஒருவர் கைபேசியிலும், இன்னொருவர் விட்டத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

5. மடிக்கணினிகள் காலாவதியானவை. எல்லோருக்கும் கைக்கு அடக்கமாக சிலேட்டுடன் திரிகின்றார்கள்.

6. அற்பத்திற்கு பவுசு வந்தால் அ.ரா.கு.பி. என்பது போல், தலையில் தொப்பியுடன் ஏன் உலாவருகின்றனர்?

எல்லாரையும் வேடிக்கை பார்க்க வருபவர்கள் எங்கு உட்காருகிறார்கள்?

பூதாகாரமான 17 இன்ச் கம்ப்யூட்டரை தங்கள் முன் மறைத்துக் கொண்டு, ஃபேஸ்புக்கில் புரட்சி செய்துகொண்டு, சி.என்.என்.னில் கத்தும் டிவி செய்திகளைப் புறக்கணித்து – பதிவெழுதுகிறார்கள்.

A Blogger, a Writer and a Tamil Sangam

New_Yorker_Cartoons_Moses_NOT_Thou_Ten_Commandments_Negative_Positive_Do_Jews

“Now, how about some affirmations to balance all this negativity?”

“Appreciation is a wonderful thing: It makes what is excellent in others belong to us as well.” – Voltaire

சமீபத்தில் ஒரு சர்ச்சை. சர்ச்சையில் சிக்கிய மூன்று தரப்பினருமே விளம்பரப் பிரியர்கள்.

அதில் முதல் தரப்பினர் ஒரு நகரத்தின் மேயர் போன்றவர். தொழிற்சங்கத்திற்கும் அனுதாபி. தொழிலாளிகளை உறிஞ்சும் முதலாளிகளின் ஆதரவும் அவர்க்குத் தேவை.

இரண்டாம் தரப்போ சங்கம் வைத்து தங்கள் சொற்ப ஊதியத்தில் தங்களுக்கு முக்கியமாகப்பட்டதை முன் செலுத்துகிறவர்கள்.

கடைசியாக நம்முடைய பார்வையாளர், வாக்காளர் தரப்பு வருகிறது. அவர் ஓட்டுச்சாவடிக்கு செல்லமாட்டார். எதை எடுத்தாலும் நொட்டை சொல்வார். ஆயிரம் குற்றங்களை அம்பாக திசையெட்டும் எறிந்தால், அவற்றில் பத்தாவது சரியாக குறியை அடிப்பதால் ”நிபுணர்” என்னும் பட்டம் பெற்றிருப்பார். நாளிதழை தினசரி வாசிப்பார். ஆனால், அதை ஆராய மாட்டார். மாதந்தோறும் பத்து புத்தகங்களை நூறு சினிமாக்களை பார்ப்பார். ஆனால், அவற்றைப் புரிந்து கொள்ள முயலமாட்டார்.

மேயருக்கு இந்த இருவருமே முக்கியமானவர்கள். தொழிற்சங்கத்தில் இருந்து சந்தா வர வேண்டும். பார்வையாளரிடமிருந்து வாக்கு வர வேண்டும். முதலாளிகளிடமிருந்து வாழ்க்கை ஆதாரம் வேண்டும். யாராவது ஒருவரின் கை ஓங்கினால் எங்காவது ஒரு mockingbirdஐ போட்டுத்தள்ளுவார்.

mockingbirdஐ கொல்வது என்றால் என்ன? To Kill a Mockingbird நூலில் வருவது போல் mockingbirdஐ கொல்வது என்றால் அப்பாவியாக இருப்பவரை வில்லத்தனம் செய்து மோசமானவராக மாற்றுவது.

“Mockingbirds don’t do one thing but . . . sing their hearts out for us. That’s why it’s a sin to kill a mockingbird.”

தமிழ் மின் இதழ்: ஒரு பார்வை

தமிழ் மின்னிதழ் பிடிஎஃப் வடிவில் வருகிறது. இது போன்ற முயற்சிகளுக்கு 2003ல் தமிழோவியம் தீபாவளி, பொங்கல், ஆண்டு விழா சிறப்பிதழ் மலர்களையும் ஸ்ரீதர் நாராயணன் தயாரித்த பண்புடன் மடலாடற் குழும சிறப்பிதழ்களையும் முன்னோடியாகப் பார்க்கிறேன்.

Tamil_Magazine_Specials_issues

எழுத்தாளர்களுக்கு சிறப்பிதழ் கொண்டு வருவது நல்ல விஷயம். ஆனால், கருப்பொருள் சார்ந்து, ஒரே ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு இரு பக்க எண்ணங்களையும் மாற்றுக் கருத்துக்களையும் ஆழமாக அலசுவது அதனினும் சாலச் சிறந்தது.

அந்த மாதிரி ஏன் — தமிழ் மேகசின், பதாகை போன்ற தமிழில் வரும் சிற்றிதழ்கள் செய்வதில்லை?

இதழை வெளியிட்ட ‘காலச்சுவடு’ கண்ணன் இவ்வாறு சொல்லி இருக்கிறார்:

பெருமாள் முருகன் சிறப்பிதழாக, அவர் படைப்புகளை விவாதித்து இந்த இதழ் வெளிவருவது பெரு மகிழ்ச்சி.

நிஜமாகவே பெருமாள் முருகனை அலசி ஆராய்ந்து இருக்கிறார்களா அல்லது

  • புத்தக அறிமுகம்,
  • அவர் எழுதிய நாவலை விதந்தோதுதல்,
  • ஏற்கனவே இணையத்தில் கிடைப்பதை வைத்து வாந்தியெடுத்தல்,
  • கதைச் சுருக்கத்தை மட்டும் சொல்லி விமர்சனம் என்று பஜனை செய்யுதல்,

போன்றவை மட்டுமே செய்துவிட்டு

  • சம காலத்தின் மற்ற ஒப்புமையான படைப்புகளுடன் சீர்தூக்கி அலசுதல்,
  • எழுத்தாளனின் வளர்ச்சி: துவக்க காலப் படைப்புகளுக்கும் பிற்கால ஆக்கங்களுக்கும் இடையே உள்ள ஒப்பீடு,
  • எழுத்தாளரின் சிறுகதைகளுக்கும் நெடுங்கதைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் / ஒற்றுமைகள்,
  • எழுதியவரின் நடை, கதைக்கரு, களன், உத்தி போன்றவை சார்ந்த குறுக்குவெட்டுத் தோற்றம்,

போன்றவையும் அலசப்பட்டிருக்கிறதா என்று இனிதான் ஆராய வேண்டும்.

இப்போதைக்கு புறத்தோற்றம் பற்றிய குறிப்புகள். புறத்தோற்றம் ஏன் முக்கியம் ஆகிறது?

மத நம்பிக்கையாளருக்கு அந்த மதத்தின் சின்னங்கள் முக்கியம். இஸ்லாமியருக்கு தொப்பியும் தாடியும். வைணவருக்கு திருமண். பௌத்தருக்கு அவர்களின் சிவப்பும் ஆரஞ்சும் கலந்த வஸ்திரம். இறைவரை பின்பற்றுவர்களுக்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று விட்டுவிட்டாலும், கல்யாணம் / காட்சி என்றால் ஒவ்வொருவருக்கும் ஒரு உடை பாவனை இருக்கிறது. மோதிரம் மாற்றிக் கொள்வது, வேட்டி கட்டுவது என்று ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அலங்காரம் தேவைப்படுகிறது.

இவ்வளவு ஏன்? கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு கோடைகாலத்தில் கடற்கரைக்கு சென்றால், எப்படி எடுத்துக் கொள்ளப்படும்? ஒன்று அங்கிருக்கும் பிகினி அழகர்களை தரிசிக்க வந்த பரதேசி என நினைத்து தர்ம அடி வழங்கப்படும். இரண்டாவது, அத்தனை வெயில் அடிக்கும் அந்தச் சூழலுக்கு, அவ்வளவு தடிமனான மேலாடை தேவை கிடையாது.

“தமிழ் பத்திரிகை”யின் வடிவமைப்பும் சோபையாக இருக்கிறது. அட்டைப்படம் எடுப்பாக இருப்பது போல், பிடிஎஃப் கோப்பின் உள்ளே, சுவாரசியமான, கவர்ச்சியான, பக்க அமைப்பு கிடைக்கவில்லை.

Layout_woes_Thamizh_Magazine_Pages_Titles_Headings_Headers

– தலைப்புகளுக்கு சிறிய எழுத்துரு, அதே தடிமனில் எழுத்தாளரின் எழுத்துரு என்று ஏனோ தானோ என்று அவசரகதியில் போட்டிருக்கிறார்கள்.

– ஒவ்வொரு கட்டுரையும் தனித் தனிப் பக்கங்களில் துவங்காமல், முந்தைய கட்டுரை முடிந்த சடுதியில், அடுத்த கட்டுரை, முக்கால் பக்கத்தின் இறுதியில் உட்கார்ந்து இருக்கிறது.

– கவிதா முரளிதரனுக்கு பெருமாள் முருகனை விட மிகப் பெரிய புகைப்படம் போட்டு இருக்கிறார்கள். சுரேஷ்கண்ணன் போன்ற ஆண்களுக்கு தபால்தலை அளவு ஒளிப்படம் கூட கிடையாது.

– திடீரென்று @iAgarshana எல்லாம் வருகிறது. அது ஃபேஸ்புக் முகவரியா, எல்லோருக்கும் இது போல் சுட்டல் உண்டா, எந்த வலையகத்தின் உரல் இது என்று எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை. இந்த மாதிரி இடங்களில் இந்தப் படைப்பு குறித்த சிறு முன்னோட்டத்தையும் அது எந்த மாதிரி ஆக்கம் (புனைவு, கட்டுரை, டிவிட் தொகுப்பு) என்பது குறித்த அறிமுகமும் அவசியம். அவை போன்ற எதுவும் இல்லாமல், அந்தப் படைப்பும் மேலெழுந்தவாரியாக சேமிக்கப்பட்டிருக்கிறது. கண்டதையும் கண்ட மேனிக்குத் தொகுக்க, இது நோட்டு புத்தகம் அல்ல. காலாண்டுக்கு ஒரு முறை வரும் அச்சிதழ். அதற்குரிய சிரத்தையும் பொறுப்புமில்லாமல் வெளியாவது உள்ளடக்கத்தையே ஏளனம் செய்கிறது.

No_Author_Notes_Who_Is_This

– மேலே இருக்கும் பக்கத்தின் இறுதியில் ஒருவரின் ஒளிப்படம் இருக்கிறது. அவர் யார்? அவரின் கதையை எப்படி இந்த இதழுக்குத் தேர்ந்தெடுத்தார்கள்? எழுதியவரே அந்தக் கதையை ‘தமிழ்’ மின்னிதழுக்காக மொழிபெயர்த்தாரா? ஏன் இந்தப் புனைவை மொழிபெயர்த்தார்? இப்படி எதுவும் இல்லாமல், ‘எடுத்தோமா… சிரைத்தோமா!’ என்பதற்கும் வலைப்பதிவில் கண்டதையும் கிறுக்குவதற்கும் என்ன வித்தியாசம்?

How_was_This_Created

– அதே போல் இந்தப் படத்தையும் எடுத்துக் கொள்ளலாம். நாகராஜ் இதை எவ்வாறு உருவாக்கினார்? அவரே வரைந்தததா? எந்த வகை உத்திகளை வைத்து எத்தனை கால அவகாசத்தில் இந்தப் படத்தை உருவாக்கினார்? ஃபோட்டோஷாப் போன்ற கருவிகளை உபயோகித்தாரா? தாளில் வரைந்தாரா? நாகராஜின் மற்ற படைப்புகள் எங்கே கிடைக்கும்?

– சுதந்திரம் என்று பக்கத்திற்கு பக்கம் அடிக்குறிப்பு இட்டிருக்கிறார்களே… எது சுதந்திரம், எப்பொழுது சுதந்திரம், யாருக்கு சுதந்திரம், எதற்கு சுதந்திரம் என்று ஒரு குவிமையம் கிடைக்காமல், தமிழ் சினிமாவிற்கு தமிழில் தலைப்பு வைப்பது போல், இந்த இதழுக்கும் ஏதோவொரு தலைப்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாவது இதழை வெளியிட்டிருக்கும் மனுஷ்யபுத்திரன் இவ்வாறு சொல்கிறார்:

சமீபத்தில் ஒரு நேர்காணலில் தமிழில் சிற்றிதழ் இயக்கதிற்கு எதிர்காலம் இருக்கிறதா? என்று என்னிடம் கேட்டார்கள். நான் அதற்கு ‘நிச்சயம் இருக்கிறது. ஆனால் அச்சு வடிவிலான சிற்றிதககள் பெருமளவு மறைந்து அவை இணைய இதழ்களாக நீடித்திருக்கும்’ என்று சொன்னேன். இந்த இதழை பார்க்கும்போது அந்த எண்ணம் வலுப்படுகிறது. பத்திரிகை நடத்துவதன் லெளகீக கஷ்டங்கள் இல்லாமல் படைப்பு சார்ந்து மட்டும் ஒரு இதழாளன் முக்கிய கவனம் செலுத்த இந்த தளம் பெரிதும் பயன்படும்.

ஞாநி இவ்வாறு எழுதுகிறார்:

மின்னிதழ்களையும் படைப்பாளிக்கும் வாசகருக்கும் இடையே இருக்கக்கூடிய அச்சிடுபவர், விநியோகஸ்தர், கடைக்காரர் என்ற சக்திகளைத் தவிர்த்து நேரடியாக உறவு கொள்ள உதவும் முக்கிய வடிவமாகவே நான் பார்க்கிறேன். இந்த முயற்சியில் எந்த வணிக சமரசமும் ஊடுருவாமல் இயங்கும் வசதி படைப்பாளிகளுக்குக் கிட்டுவது என்பது மிக முக்கியமான மாற்றமாகும். நவீன தொழில்நுட்பம் என்பது வணிக நுகர்வுக் கலாசாரத்துக்குத்தான் பயன்படும் என்ற புரிதலையும் இது மாற்றியமைக்கிறது. இதழ் நடத்துதல், படம் எடுத்தல் ஆக்கியவற்றையெல்லாம் மேலும் ஜனநாயகப்படுத்துகிறது. எனவே இதை நாம் எல்லாரும் வரவேற்கவேண்டும்.

– எல்லாமே தெரிந்த, புழக்கமான பெயர்கள், இணையப் பிரமுகர்கள். இந்த மாதிரி பிரபலங்களை மட்டும் வைத்து மின்னிதழ் எதற்காக நடத்த வேண்டும்? அறியாத எழுத்துக்களை, புகழ் பெறாத எழுத்தாளர்களை, தெரியாத ஆக்கங்களை முன்னிறுத்துவதற்கு சிற்றிதழ் வாயிலாக இருக்க வேண்டும். அச்சிதழ்கள் போல், நாலாயிரம் ஃபாலோயர்ஸும் நாற்பது வலைப்பக்க வாயிலும் கொண்டவர்களை வைத்து வாந்தி எடுக்கக் கூடாது.

சம காலத்தில் ஆங்கிலத்தில் வெளிவரும் சில பத்திரிகைகளை இங்கு ஒப்பிட்டு பார்க்கலாம். கீழே ஆறு பத்திரிகைகளின் சமீபத்திய இதழ்களின் முகப்பும் அமைப்பும் பார்க்கலாம்:

PN_Review_Literary_Quarterly_Essay_Weekly_Issues_Magz_Magazines

தமிழ் மின்னதழின் ஆசிரியர் சரவணகார்த்திகேயன் இவ்வாறு சொல்கிறார்:

அச்சிதழில் ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டித்தான் குறிப்பிட்ட படைப்பை அடைவோம். ஒருவேளை உள்ளடக்கம் கொடுக்கப்பட்டிருந்தால் அதன் மூலம் பக்க எண்ணை அறிந்து கொண்டு குறிப்பிட்ட படைப்புக்குத் தாவலாம். இது வரை தமிழ் இதழிலும் சாத்தியம். உள்ளடக்கம் கண்டு, பக்க எண் அறிந்து, நீங்கள் பயன்படுத்தும் PDF reader-ல் பக்க எண் கொடுத்தால் அழைத்துச் சென்று விடும். ஹைப்பர்லிங்க் கிடையாது! (சேர்ப்பது சுலபமெனினும் தவிர்த்தேன்.)

சுருங்கச் சொன்னால் ஓர் அச்சு இதழை நீங்கள் எப்படிக் கையாள முடியுமோ அப்படியே இதையும் கையாள வேண்டும்.

இந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. ஓலைச்சுவடியில் ஒற்றெழுத்து இல்லாமல் எழுதினோம், நாலு வரி மட்டுமே எழுதினோம் என்று இன்றும் தொங்கிக் கொண்டிருக்கவில்லை. நவீன சாதனங்களை, புதிய நுட்பங்களை, வசதியான வடிவங்களை கையாள்கிறோம். கியாஸ் அடுப்பு வந்தபிறகும் கரி அடுப்பில்தான் சமைப்பேன் என்று அடம்பிடிப்பது முட்டாள்தனமானது.

எழுதுபவர்களுக்கு காசும் தரமாட்டேன்; எழுதியவற்றை வெளியிடுவதிலும் புதுமை செய்ய மாட்டேன்; எழுதுபவர்களிலும் புதியவர்களை அடையாளம் காட்ட மாட்டேன்; எழுதப்படும் கருத்திலும் சிதறலாக, கிடைப்பதை வைத்து ஒப்பேற்றுவேன் – என்ற முன்முடிபை இதன் தயாரிப்பாளர்கள் கைவிட வேண்டும்.

அன்பர்களுக்கு நான் மீண்டும் நினைவூட்ட விரும்புவது ஒன்றைத் தான். தற்போதைக்கு தமிழ் தீவிர இலக்கிய இதழ் அல்ல; போலவே வெகுஜன இதழும் அல்ல. இடைப்பட்டது. ஆனால் இதன் எதிர்காலப் பயணம் தீவிர இலக்கிய இதழ் என்பதை நோக்கியதாகவே இருக்கும். அதுவரை கசியவிருக்கும் சுஜாதாத்தனங்களை தீவிரர்கள் பொறுத்தருளலாம்.

இந்த இதழில் எழுதியவர்களில் பார்த்தவுடன் பரிச்சயமான வலை / அச்சுப் பத்திரிகைப் பெயர்கள் சிலவற்றை இங்கு சொல்லிப் பார்க்கிறேன்
– கவிதா முரளிதரன்
– சுரேஷ் கண்ணன்
– கிருஷ்ண பிரபு
– லேகா
– கவின் மலர்
– நர்சிம்
– யுவகிருஷ்ணா
– அதிஷா
– என் சொக்கன்
– முரளிகண்ணன்
– எஸ்.கே.பி. கருணா
– ஜிரா

இதழ் பெரும்பாலும் என் உழைப்பில் மட்டுமே வெளியாகப் போகிறது என்பதால் லேஅவுட் எளிமையானதாகவே அமையும். படைப்பிற்குப் பொருத்தமான‌ ஓவியம், புகைப்படம் சேர்த்திருக்கலாம் எனக் குறைப்பட வேண்டாம்.

‘செய்வன திருந்தச் செய்’ என்பது ஆத்திச்சூடி. வேலையை எடுத்துக் கொண்டால் அதில் நம்முடைய 100% மின்ன வேண்டும். சால்ஜாப்பு சொல்வதை விட்டுவிட்டு, பொருத்தமான நபர்களிடம் பொறுப்புகளை பகிர்ந்தளித்தல், ஆக்கங்களில் மேலும் செப்பனிடுதலை — அதே இதழில் வெளியாகும் சக படைப்பாளிகளிடம் கருத்து கேட்டு செதுக்குதல் என்று இந்த விஷயம் மேன்மையுற வேண்டும்.

ஜெயமோகன் இவ்வாறு எழுதுகிறார்:

இணையத்தில் உதிரி குறிப்புகளாக வெளியாகிக்கொண்டிருக்கும் எழுத்துக்களை ஒரே இடத்தில் பிரசுரிப்பது இதன் நோக்கம். பொதுவாக இணையதளம் என்பதே இணையஇதழாக இங்கே கொள்ளப்படுகிறது. ஆனால் இவ்விதழ் இணையம் மூலம் வாசிக்கக் கிடைக்கும் இதழ். தரவிறக்கம் செய்தோ நேராகவோ வாசிக்கலாம்.

இணையத்தில் கிடைக்கும் வலைப்பதிவு ஒருங்கிணைப்பாளர்களையும் திரட்டிகளையும் இணையப் பத்திரிகைகளையும் பார்க்கலாம்:

இவை எல்லாம் விகடன் மாதிரி ஒரே தரத்தில், கொள்கையோடு இயங்காவிட்டாலும், அட்டையில் ஏமி ஜாக்ஸனின் கவர்ச்சிப்படம் போட்டுவிட்டு, நடிகையின் பாகங்களை மறைக்குமாறு ‘மதுவருந்தி சீரழியும் தமிழன்’ என்று போலி பம்மாத்துகளில் ஈடுபடுவதில்லை.

கீழே விகடனின் ஃபேஸ்புக் பக்க உரையாடலும் சாம்பிள் அட்டைப்படமும்:

AV_Tamil_Magazine_Porn_Anandha_Vikadan_Timepass_Online_Vikatan_Com

ஆனந்த விகடன் மாதிரி இதழ்களுக்கு அகம் போன்ற மின்னிதழ்கள் நல்ல மாற்று என்பதில் விகடன் குழுமத்திற்கே சந்தேகம் இருக்காது. ’தமிழ்’ இதழை விட, வடிவமைப்பில் ‘அகம்’ போன்ற மின்னிதழ்கள் மிளிர்கின்றன என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது

மீண்டும் பெருமாள் முருகன் + சுதந்திரம் + தமிழ் மின்னிதழ் விமர்சனத்திற்கே வருவோம்.

தமிழில் வரும் சிற்றிதழ்கள் என்று தமிழ் ஸ்டூடியோ பக்கத்தில் இவற்றைச் சொல்லி இருக்கிறார்கள்:

  1. அணங்கு
  2. அணி
  3. அதிர்வு
  4. அநிச்ச
  5. அம்ருதா
  6. ஆக்காட்டி | aakkaddi.com
  7. ஆயுத எழுத்து
  8. இனிய நந்தவனம்
  9. இனிய ஹைக்கூ
  10. உங்கள் நூலகம்
  11. உயிர்மை
  12. உழைப்பவர் ஆயுதம்
  13. உன்னதம்
  14. கணையாழி
  15. கதை சொல்லி
  16. கலை
  17. கல்வெட்டு பேசுகிறது
  18. கவிதாசரண்
  19. கனவு
  20. காலச்சுவடு
  21. காலம்
  22. கிழக்குவாசல்
  23. குழலோசை
  24. கூட்டாஞ்சோறு
  25. சமரசம்
  26. சோலைக்குயில்
  27. சௌந்தரசுகன்
  28. தச்சன்
  29. தமிழ் நேயம்
  30. தமிழ் பணி
  31. தலித்முரசு
  32. தாமரை
  33. தாய்மண்
  34. திரை
  35. தீராநதி
  36. தை
  37. நடவு
  38. நம் உரத்த சிந்தனை
  39. நவீன விருட்சம்
  40. நறுமுகை
  41. நிழல்
  42. படப்பெட்டி
  43. பன்முகம்
  44. புதிய பார்வை
  45. புதிய புத்தகம் பேசுது
  46. புதுகைத் தென்றல்
  47. புதுவிசை
  48. பெண்ணியம்
  49. மண்மொழி
  50. மலர்
  51. மீண்டும் கவிக்கொண்டல்
  52. முகம்
  53. மெய்யறிவு
  54. யாதும் ஊரேமது
  55. வடக்கு வாசல்
  56. வல்லினம்
  57. விழிப்புணர்வு

இவற்றில் பல – இன்று வெளியாகவில்லை. இவற்றில் சில பெரும் குழுமங்களான குமுதம் போன்றவற்றில் இருந்து அதற்கான நிதியாதாரங்களுடன் வெளியாகின்றன. இவற்றில் – மனுஷ்யபுத்திரன் வெளியிடும் உயிர்மை போல் சில பத்திரிகைகள் அரசியல் கட்சி சார்பானவை. அவற்றின் கொள்கைகளை, தலைவர்களை, சித்தாந்தங்களை – விமர்சன நோக்கு இல்லாமல் முன்னிறுத்தி வெளியிடப்படுபவை.

ஆனால், பலவும் தனி மனிதரின் விருப்பத்தால் உண்டாகுபவை. அவற்றில் காணக் கிடைக்காத நேர்த்தியும் வெரைட்டியும் இணைய இதழ்களில் கிடைக்க வேண்டும். அச்சுக்குரிய நிர்ப்பந்தந்தங்களும் பொருட்செலவும், வலைவெளியில் கிடையாது.

No_Images_where_they_are_required_No_Notes_All_Caps_Wiki_Style_Entry

– விக்கிப்பிடியா போன்ற இந்தப் பக்கத்தின் அவசியம் என்ன? ஆங்கில எழுத்துக்களை எல்லாம் பெரிய அப்பர்கேஸ் எழுத்துக்களாகவே போடுதல் போன்றவை சிறிய பிழைகள். காலச்சுவடு ஆசிரியர் குழுவில் எப்போது இணைந்தார் போன்ற தகவல் விடுபடுதல்கள் இன்னும் ஆபத்தானவை. எளிதில் தவிர்க்கக்கூடியவை.

– மோசமான புற உருவத்தை வைத்து அகத்தை மதிப்பிட முடியாது. முழுக்க படித்துவிட்டு, உள்ளடக்கத்தின் செறிவை தனியாக எழுத முயல்கிறேன்.

நான் எழுத நினைப்பதை எல்லாம், ஜெயமோகன் எண்ணியும் எழுதியும் வைத்திருக்கிறார்:

பெரும்பாலான இணைய இதழ்களில் எதுவும் வெளியாகும் என்ற நிலை உள்ளது. அதை அதன் ஆசிரியர்களே வாசிப்பதில்லை. அதில் ஒரு தேர்வு இல்லை. விளைவாக ஏராளமான தரமற்ற பக்கங்கள் முன்வைக்கப்படும்போது வாசகன் காலப்போக்கில் சலித்து விலகிவிடுகிறான்

சமீபத்தில் வாசித்த ஆங்கில சிறு பத்திரிகைகள், குறுகிய வட்டத்திற்குள் வெளியாகும் சஞ்சிகைகள் குறித்த என்னுடைய பதிவு: நூலகம் – 2015 புத்தகங்கள்

குரான்படி நடக்கும் இஸ்லாமியர் யார்?

ஐஸிஸ் பிடியில் இருந்து தப்பித்து வந்த இருபத்தியோரு யெஸிடி பெண்களுடன் ருக்மிணி கலிமாக்கி அவர்களுக்கு பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை நியு யார்க் டைம்ஸில் எழுதியிருக்கிறார். முஸ்லீம் இறையியலின்படி பெண்களை அடிமையாக நடத்துவது மட்டுமல்ல, வன்புணர்வையும் மதக் கடமையாக மேற்கொள்ளவேண்டும் என்பதை ஐஸிஸ் சட்டமாக வைத்திருக்கிறது.

போரின் போது பெண்கள் வன்முறைக்கு உள்ளாவது புதிது இல்லை. ஐ.நா. செயலர் பான் கி மூன் மாதந்தோறும் மன்னிப்புக் கேட்டுகொள்வது மாதிரி ஐ.நா. அமைதி காக்கும் படைகள் முதற்கொண்டு எந்த நாட்டு இராணுவம் அன்னிய நாட்டிற்குள் நுழைந்தால் – பெண்கள் மீது அத்துமீறல் சகஜமாக நிகழ்த்தப்படுகிறது. 2011ல் ஐக்கிய நாடுகள் சபை வெளியிடும் செய்தித்தாளில் இதுதான் தலைப்புச் செய்தி: “காங்கோவிலும் லைபீரியாவிலும் ஐ.நா. அமைதிப்படை மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் குறையத் துவங்கியிருக்கின்றன”

ஆனால், ஐஸிஸ் போர்க்குற்றமாக பெண்கள் மீதான வன்முறையை நடத்துவதில்லை. ஒரு ஊருக்குள் நுழைகிறார்கள். அந்த ஊரை ஆக்கிரமிப்பதற்கான முதல் படியாக, அந்த சிற்றூரில் இருக்கும் சிறுமிகளையும், பெண்டிர்களையும், லாரி லாரியாக அபகரிக்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் அனைவரிடமும் தங்களின் கேள்விப் பட்டியலில் இருந்து விடை கேட்டு குறித்துக் கொள்கிறார்கள். எப்போது மாதப்போக்கு வந்தது போன்ற அந்தரங்கங்களையும் விடாமல் ஒவ்வொன்றாக சொல்லச் சொல்கிறார்கள். ஏனென்றால் கருவுற்றிருக்கும் தாயை பலாத்காரம் செய்யக் கூடாது என்று இறைதூதர் காலத்தில் இருந்த வழக்கத்தை இன்றும் பின்பற்றுவதே காரணம்.

பிறகு, அந்தப் பெண்களை அடிமை ஏலம் விடுகிறார்கள். அடிமையைப் பெற்றுக் கொண்டவரின் கடமை என்ன? முதலில் நமாஸ் செய்யவேண்டும். தொழுகை முடிந்தவுடன் பன்னிரெண்டு வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்யவேண்டும். அதன்பின் குளித்துவிட்டு, மீண்டும் நமாஸ் செய்து இறைக்கடமையை முடித்துக் கொள்ள வேண்டும். அதன் பின், மீண்டும் அந்த குழந்தை விற்கப்படுகிறார்.

யெஸிடிகள் மீது இன்னும் கோபத்துடன் இந்த வன்முறையை ஐஸிஸ் செலுத்துகிறது. கிறித்துவர்கள் போல், இஸ்லாமியர்கள் போல் ஒரு இறைவர், அவர்களின் தூதர் என்று ஒற்றைப்படையில் இல்லாமல், ஏழு தெய்வங்களை யெஸிடிகள் வணங்குகிறார்கள். அவர்களின் புனித நூல் குரான் போல் பைபிள் போல் எழுத்தில் இல்லாமல், வழிவழியாக முன்னோர்களின் வாய்ப்பேச்சு மூலமாகவே தலைமுறை தாண்டி ஓதப்பட்டு வருகிறது. இதைக் கண்டு ஐஸிஸ், பன்கடவுள் கொண்ட சமூகம் மீது நபிகள் நாயகம் காலத்தில் விளங்கிய நிலையை விரிவாக எடுத்தோந்தும் நூல்களை வெளியிட்டிருக்கிறது. நபிகளும் அவர்களின் தோழர்களும் எவ்வாறு பலதெய்வ வழிபாடு செய்தவர்களை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கினார்கள் என்பதை வழிகாட்டி விளம்பரமாக வெளியிட்டு தங்களின் கோரத் தாக்குதலைத் தொடர்ந்து முன்னெடுக்கிறது.

இன்னும் இந்த நிலையில் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட யெஸிடி பெண்களை கொத்தடிமைகளாக ஐஸிஸ் வைத்திருக்கிறது. இவர்களை எப்படி விற்க வேண்டும், நபிகள் காலத்தில் நடந்த தொன்மையான வழக்கப்படி எவ்வாறு பலாத்காரம் செய்வது, அடிமை வர்த்தகத்தில் ஐஸிஸ் அரசிற்கு எவ்வளவு வரிகட்ட வேண்டும் என்பதை தங்களின் பிரதேசத்தில் சட்டமாக்கி இருக்கிறார்கள்.

முழுக் கட்டுரையை இங்கே வாசிக்கலாம்.

முடங்கிய கடல் நீரும் எல்லைகளில்லா அலைகளும்

கார்ஸன் கழிமுகம் கவிதையை பார்க்கும்போதே கடற்கரையைப் பார்ப்பது போல் இருக்கும். சில சமயம் ஜோராகத் தெரிகிறது. சில சமயம் காணாமல் போய் விடுகிறது. கண்ணில் பார்க்கும் எல்லாவற்றையும் விவரிக்கிறார்.

பார்ப்பதை புரிந்துகொள்வதுதானே மூளையின் வேலை? மனிதரின் மனதில் உதிக்கும் எண்ணங்களும் இயற்கையோடு உறவாடும் சிந்தனைகளும் எங்கு ஒருங்கிணைகின்றன? இந்தப் படைப்பே இயற்கையின் படைப்பா அல்லது அறிவால் உதித்த கற்பனையா?

இயற்கை என்றால் இயற்கை எய்துவதும் இயற்கையின் பங்குதானே… எப்போது மரணம் வரும் என்று சொல்ல முடியாதபடி சடாரென்று மரணம் நிகழும். அதுபோல் சுற்றுப்புறச் சூழலும் பாதிப்படைந்து மரணம் அடையுமா? அல்லது மெல்ல மெல்ல நச்சுப்பொருள் போட்டு உடலில் பாதகம் வருவது போல் இயற்கையும் மெதுவாகத்தான் இறக்கிறதா?

பார்ப்பதையெல்லாம் எவ்வளவு தூரம் உணர்ந்து அறிந்து வைத்திருக்கிறோம்?

இந்த ஆக்கத்தை தேர்ந்தெடுத்தவருக்கும், மொழியாக்கம் செய்தவரும் நன்றிகள்.

அனைவரையும் கண்காணிக்கும் அன்பான கிருபை கொண்ட கருவிகள்

நன்றி: Richard Brautigan: All Watched Over By Machines Of Loving Grace

நான் யோசிக்க விரும்புகிறேன் (எவ்வளவு
சீக்கிரமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது!)
தன்னியக்க கட்டுப்பாட்டில் இயங்கும் பசும் புற்றரை
அங்கே பாலூட்டிகளும் கணினிகளும்
ஓருவருக்கொருவர் ஒத்தாசையாக ஒன்றாக
நிரல்நெறி இணக்கத்துடன்
நன்னீர் போல்
நிர்மலமான வான்வெளியைத் தொடும்.

நான் யோசிக்க விரும்புகிறேன்
(தயவு செய்து… இப்போதே!)
தன்னியக்க கட்டுப்பாட்டில் இயங்கும் வனாந்திரம்
கற்பகதரு மரங்களும் கணிப்பொருள்களும் நிரம்பியிருக்க
மனக்கவலையின்றி மான்கள் சஞ்சரிக்க
கணிப்பொறிகளைக் கடந்தால்
அங்கே கான்முகம் போல்
சுழலும் மொட்டுகள் அரும்பும்.

நான் யோசிக்க விரும்புகிறேன்
(அப்படித்தான் இருக்கவேண்டும்!)
தன்னியக்க கட்டுப்பாட்டில் இயங்கும் சுற்றுப்புறச் சூழியல்
நம் பயனில் வேலையில் இருந்து விடுதலை கிட்ட
இயற்கையுடன் மீண்டும் இணைய
நாம் பாலூட்டியாக திரும்ப மாற
சகோதரன்களும் சகோதரிகளுமாய் இருக்க
அன்பான கிருபை கொண்ட கருவிகள்
அனைவரையும் கண்காணிக்கும்.
Nongirrnga_marawili_baratjula_2014_Cybernetics_Forest_Ecology

என் குறிப்புகள்

இந்த ஆக்கம் 1967ல் எழுதப்பட்டது. அப்போது உடோப்பியக் கனவுகள் இருந்தால் சரி. கம்ப்யூட்டரும் காட்டு விலங்குகளும் கைகோர்த்துக் கொண்டு சந்தோஷமாய் வாழுகின்றன என்று எண்ணியிருக்கலாம்.

ஐம்பதாண்டுகள் கழித்துப் பார்த்தால், மனிதன் + முதலியம் ==> முடிந்தவரை குப்பை போடுகிறது. தொழில்நுட்பம் என்பது வேவு பார்ப்பதற்கும், ஒற்றறிவதற்கும், ரகசியமாய் கண்காணிப்பதற்கும், அடுத்தவரின் பொருள்களைத் திருடுவதற்கும், உலகளாவிய உளவுக்கும் நேர்மையாய் இருக்கிறது.

மீண்டும் 1967ல் இருந்த நிலையைப் பார்க்கலாம். இணையம் கிடையாது, உலகளாவிய செல்பேசி பயன்பாடு கிடையாது. ருஷியாவுடன் பிரச்சினைகள் இருந்தாலும், இன்னுமொரு உலகப்போர் மூளும் அபாயம் கிடையாது. ஐஸிஸ் கிடையாது. எல்லோர் கையிலும் ஐபோன் கிடையாது. கணினிக் கழிவுகள் கிடையாது.

அந்தக் காலகட்டத்தில் பறக்கும் கார்கள், சூரியசக்தியில் ஓடும் வீடுகள், பசுமைப் புரட்சி, கூட்டுறவு என நினைத்து எழுதியிருப்பார். இன்று?

இயல் விருது – 2015: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்

ரவிச்சந்திரிகா

Jeyamohan_Writers_A_Muttulingam_Iyal_Awards_Tamil_Literary_Garden

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதினைந்தாவது இயல் விருது விழா வழமைபோல ரொறொன்ரோவில் யூன் 13ம் தேதி ராடிஸன் ஹொட்டலில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு கனடிய எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான திரு டேவிட் பெஸ்மொஸ்கிஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது பா. ஜெயமோகன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நவீனத் தமிழின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகத் திகழும் திரு ஜெயமோகன் அவர்கள் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் விமர்சனங்கள், நாடகங்கள், சினிமா என பல தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

திரு ஜெயமோகன் தன்னைத் தீவிரமாகப் பாதித்த தனது பெற்றோர்களின் மரணங்களை நினவு கூர்ந்து, அதில் இருந்து தனது உரையை “வாழ்க்கையை ஒரு கணமேனும் வீணாக்காது வாழ்வது எப்படி?” என்று விரித்தெடுத்து பேசினார்.

கடுமையான மனக் கொந்தளிப்புக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் ரயில் தண்டவாளங்களில் நடந்து செல்கிறார். அற்புதமான சூரிய ஒளி பரவுகிறது. புதர்களில் ஒரு புழுவைக் காண்கிறார். ஒளி ஊடுருவும் உடல் கொண்ட புழு அது. அந்தத் தருணம் அதன் முழு உடலே ஒளியாக அதன் உச்சத்தை அவர் அறிகிறார். “உச்சகட்ட நெருக்கடியில் இயற்கை புன்னகைக்கும்” என்றுணர்ந்து “இனி ஒருபோதும் வாழ்வில் சோர்வடைவதில்லை. ஒரு கணத்தையேனும் வீணாக்குவதில்லை.” என்று அந்த நிமிடம் முடிவெடுக்கிறார். இன்று வரை பயணமும் எழுதுவதுமாக என் வாழ்க்கையை சோர்வின்றி வாழ்கிறேன் என்று குறிப்பிட்டார்.

. 1981 இல் உயர்கல்வியைப் பாதியில் நிறுத்தி இரண்டு வருடங்கள் துறவியாக அலைந்ததைக் கூறினார். காசியில் இருந்து டேராடூன் செல்லும் ரயிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது யாத்ரீகர்கள் பத்துப் பேர் ஏறுகிறார்கள். ஏறின கணம் தொடக்கம் கிருஷ்ணனைப் பாடுகிறார்கள். ரிஷிகேஷ் சென்று அடையும் வரை பாடிக் கொண்டே இருக்கிறார்கள்.

அவர்கள் அனைவரும் தம்மை ராதைகளாக உணர்கிறார்கள் என்று இவர் புரிந்து கொள்கிறார். எப்போதும் ஆடலும் பாடலும் கொண்டாட்டமுமாக இருக்கிறது அவர்கள் வாழ்க்கை. “தங்கத் தட்டில்தானே கிருஷ்ணமதுரம் வைக்க முடியும்” என்று அவர்கள் சொல்வது இவரிடம் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கியதாக கூறினார். அன்றிலிருந்து சோர்வில்லாத, துக்கமில்லாத வாழ்க்கையை வாழுகிறேன். எப்போதும் பயணம் செய்வதும், எழுதுவதுமான வாழ்க்கை என்னுடையது என்று கூறினார்.

இயல் விருதைத் தொடர்ந்து மற்றைய விருதுகளும் வழங்கப்பட்டன:

  • புனைவு இலக்கியப் பிரிவில் “கனவுச்சிறை” நாவலுக்காக தேவகாந்தனுக்கும்
  • “நஞ்சுண்டகாடு” நாவலுக்காக குணா கவியழகனுக்கும்
    அபுனைவு இலக்கியப் பிரிவில் ‘கூலித்தமிழ்” நூலுக்காக முத்தையா நித்தியானந்தனுக்கும்,
  • “ஜாதியற்றவளின் குரல்” நூலுக்காக ஜெயராணிக்கும் விருதுகள் வழங்கப் பட்டன.
  • சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருதை “மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” நூலுக்காக கதிர்பாரதி பெற்றுக் கொண்டார்.
  • மொழிபெயர்ப்பு பிரிவில் “யாருக்கும் வேண்டாத கண்” நூலை மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்த கே வி சைலஜாவும்,
  • “Madras Studios – Narrative Genre and Idelogy in Tamil Cinema” நூலுக்காக சுவர்ணவேல் ஈஸ்வரன் பிள்ளையும் விருதுகள் பெற்றனர்.
  • மாணவர் கட்டுரைப் போட்டியில் சிறந்த கட்டுரைகள் இரண்டு தேர்ந்தெடுக்கப் பட்டு, வாசுகி கைலாசம், யுகேந்திரா ரகுநாதன் விருது பெற்றார்கள்.
  • சுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட ’கணிமை விருது’ முத்தையா அண்ணாமலைக்கு வழங்கப் பட்டது.

இந்த விழாவுக்கு பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் ஆர்வலர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள். திருமதி உஷா மதிவாணனின் நன்றியுரையைத் தொடர்ந்து இனிய சிற்றுண்டி வழங்கப் பட்டு அந்தச் சனிக்கிழமை மாலை இனிதே நிறைவடைந்தது.

Jeyamohan_Writers_Author_Event_Iyal_Awards_Tamil_Literary_Garden


B. Jeyamohan who has made significant contributions in the last 28 years. He has written 13 novels, 11 short story collections and 50 essay collections. He has also penned scripts for Tamil and Malaiyalam movies Kasthoori Maan, Angaadith Theru, Naan Kadavul, Neer Paravai, Aaru Melukuvarththikal, Kadal, Kaaviya Thalaivan, Ozhimuri, Kaanchi, that were well received. The award was presented by Mr. David Bezmozgis. The award was sponsored by Bala Cumaresan and Vaithehi from the very inception of the organization.

In addition to the Lifetime Achievement Award, the following awards were also presented. Fiction awards went to Devakanthan for his novel ‘Kanavuchirai” and to Kuna Kaviyalakan for “Nachundakadu”. Nonfiction awards were given to Muthiah Nithiyananthan for his book ‘Kooliththamil” and Jeyarani for “Jaathiyatravalin Kural.” The Poetry award was given to Kathirbharathi for his collection of poems ‘Mesiyavukku moondru machangal”

Award for ‘Information Technology in Tamil’ given in honour of Sundara Ramaswamy was awarded to Muthiah Annamalai and the student essay contest awards were shared by Vasuki Kailasam and Yugendra Ragunathan. The translation awards were given to K. V. Shylaja for ‘Yaarukkum vendatha kan” translated from Malaiyalam to Tamil and Swarnavel Eswaran Pillai for his book “Madras Studios – Narrative Genre and Ideology in Tamil Cinema.”

நூலகம் – 2015 புத்தகங்கள்

தந்தையர் தினத்திற்காக பரிசு என்ன தரலாம் என்று மகள் கேட்டாள். புத்தகக் கடையில் கொஞ்ச நேரம் என்னை தனியே விட்டு வைக்குமாறு சொன்னேன். சனிக்கிழமை மாலை அன்று அத்தனை பேரை பார்ன்ஸ் அண்ட் நோபிள் கடையில் பார்த்ததில் மழையைக் கண்ட கலிஃபோர்னியா போல் மகிழ்ச்சி ஏற்பட்டது. இலக்கின்றி மேய ஆரம்பித்தேன்.

முதலில் புத்தம் புதிய அதிவிற்பனை நூல்களைப் பார்த்தேன்.

”Make Something Up: Stories You Can’t Unread By Chuck Palahniuk”Make-Something-Up அட்டைப்படம் கவர்ந்தது. ‘ஃபைட் கிளப்’ (Fight Club) எழுதியவரின் கதைத் தொகுப்பு. புகழ்பெற்ற பள்ளியில் படிக்கும் பிரகாசமான பதின்ம வயது மாணவர்கள் புத்தம்புது போதை மருந்தின் தாக்கத்தில் வீழ்ந்து கிடப்பதை ‘Zombies’ சொல்கிறது என்கிறார்கள். தந்தையின் அந்திமக் காலத்தின் கடைசி நிமிடங்களில் சொல்லக்கூடாத நகைச்சுவையை ஜோக்கடிக்க விரும்புவதை ‘Knock, Knock’ல் எழுதுகிறார். தன்னிடம் தசைப்பிடிப்பை நீக்க வரும் சாகக்கிடப்பவர்களுக்கு ‘விடுதலை’ அளிக்கும் ‘Tunnel of Love’ என பலதரப் பட்ட கதை இருப்பதாக உள் அட்டை சொல்லியது.

ronda-rousey-when_things_Get_Bad_Back_Cover_Motivation_Inspiration

அடுத்தது “My Fight / Your Fight by Ronda Rousey”. கருப்பு வெள்ளைப் படம் கவர்ந்தது. பெண்களுக்கான சுய முன்னேற்ற நூல். எனக்கு எப்போதுமே ரஜினிகாந்த் பிடித்தேயிருக்கும் என்பது போல், இது மாதிரி உற்சாகப்படுத்தி, ஊக்கமூட்டும் வார்த்தைகளைச் சொல்லும் வாழ்கை அனுபவப் புத்தகங்களும் பிடித்தே இருக்கிறது. இரண்டு மூன்று அத்தியாயங்கள் வாசித்தேன். ‘ஏதாவது சாதிக்கணும்ப்பா…’ என்னும் எண்ணம் கரைபுரண்டோட வைக்கிறது. சகட்டு மேனிக்கு ஃபக் உபயோகிக்கிறார். அதை விட சரளமாகத் தோல்விகளைத் தாங்கிக் கொண்டு வெற்றிப் படிக்கட்டுகளை ஏறி இருக்கிறார்.

கதைப் புத்தகம் ஆச்சு; டானிக் பூஸ்ட் ஆச்சு; கடைசியாக கொஞ்சம் இலக்கிய அரட்டை + வம்பு.

Harold Bloom delivers the chosen ones unto the multitudes. (From left: Willa Cather, Edith Wharton, Edgar Allan Poe, Philip Roth, Ernest Hemingway, and James Baldwin.)

Harold Bloom delivers the chosen ones unto the multitudes. (From left: Willa Cather, Edith Wharton, Edgar Allan Poe, Philip Roth, Ernest Hemingway, and James Baldwin.)

Harold Bloom எழுதிய “The Daemon Knows: Literary Greatness and the American Sublime”. ப்ளூம் – இந்தப் பெயர் எப்படி எனக்கு அறிமுகம் ஆனது?

வழக்கம் போல் செய்திகளில் அடிபட்டுதான் அறிந்துகொண்டேன். 2004ஆம் வருடம். நவோமி வொல்ஃப் (Naomi Wolf) உடைய உள்தொடயில் கைவைத்து பல்லிளித்து அத்துமூறிய இன்னொரு பேராசிரியர் என்ற வகையில்தான் தெரிய வந்தார். பெண்களைக் கருதுவது போல்தான் இலக்கிய மதிப்பீடுகளையும் முன்வைக்கிறாரோ என்னும் சர்ச்சை தொடர்ந்தது. 1994ல் இனம், நிறம், பால் அடிப்படையில் புத்தகங்களை வகைப்படுத்தி, பல தரப்பட்ட நூல்களை வாசிக்க வேண்டும் என்னும் கருத்தை ‘அழுகுணிக்காரர்களின் போதனாசாலை’ என்று இவர் கருதினார். அது இப்போது மாறி இருக்கிறதா என்பதை இந்த நூலை வாசித்தால் தெரியும்.

நூல்கள் ஆச்சு. அடுத்தது சஞ்சிகைகள்.

ஆங்கிலத்தில் வெளியாகும் பத்திரிகைகளைப் பார்த்தால், தமிழ் எழுத்துக்களைப் போல் எக்கச்சக்கம். தமிழில் வெறும் 26 எழுத்துக்கள் மட்டும் இருந்துவிட்டு, இத்துணை நூல்களும் காத்திரமான மாதாந்தரிகளும் வெளியாகிக் கொண்டிருந்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்!

பார்டர்ஸ் சென்றால் மட்டுமே வழக்கமாகப் புரட்டும், மெண்டல் ஃப்ளாஸ், நி.வொய்.ஆர்.பி., எல்லாம் இப்போது நூலகத்திலேயேக் கிடைப்பதால், அதை அப்படியே விட்டு வைத்தேன்.

லஃபாம்ஸ் குவார்ட்டர்லி மனிதநேயம், அருளுடைமை (philanthropy) குறித்து, சிறப்பிதழ் வெளியிட்டு இருக்கிறார்கள்.

Lapahams_Quartterly_Philanthropy

காரல் மார்க்ஸ், பில் கேட்ஸ், கர்ட் வானகட் என்று பல முக்கியமான எழுத்தாளர்கள். ஏதன்ஸ், எகிப்து, பாரிஸ் என்று முக்கியமான நகரங்கள். தற்கால கருத்துருவாக்கிகள் – என பலதரப்பட்ட விஷயங்களைக் கோர்வையாக ஒரே நூலில் அடக்கி இருக்கிறார்கள்.

ப்ரமத்தீயஸ் (Prometheus) பற்றிய குறிப்பு கூட கவர்ந்தது. இந்த உலகின் முதல் பரோபகாரி. கிரேக்கத் தொன்மத்தில் மிகவும் புகழ்பெற்றவர். தேவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த தொழில்நுட்பமான ‘நெருப்பு செய்யும் கலை’யை உலகெங்கும் எடுத்துக் கொடுத்தவர். சாதாரண மனிதர்களுக்கும் தீ வளர்க்கும் வித்தையைக் கற்றுக் கொடுத்தக் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டார். பாறையில் கட்டப்பட்டு வைத்திருக்கப்பட்டார். ஒவ்வொரு நாளும் கொஞ்ச கொஞ்சமாக அவருடைய ஈரற்குலையை, கழுகுகள் உண்டு வரும். இந்தக் கதை கூட நமது ஊர் வேதங்களின் ’ப்ரா மத்’ (திருடுவது) என்னும் சொல்லில் இருந்து வந்திருக்கிறது. பிரா மத் செய்தவன் பிரமாத்தியஸ், என்னும் நாடகமும் இந்தக் கருப்பொருள் சார்ந்த வெளியீட்டில் இடம் பெற்று இருக்கிறது.

Monkey_business_Mag_Stanford_Creative

ஜப்பானில் வெளியாகும் ’குரங்குத் தொழில்’ (Monkey Business International) முழுக்க முழுக்க ஜப்பானிய மொழி எழுத்தாளர்களை மொழிபெயர்க்கிறது. தற்கால சப்பானிய இலக்கியத்தை அமெரிக்காவிற்கும் மேற்குலகிறகும் அறிமுகம் செய்கிறது. ஜப்பானிய எழுத்தாளர்களை அமெரிக்காவிற்கு அழைக்கிறது. வாசகர் சந்திப்புகளை ஏற்பாடு செய்கிறது. புனைவிலக்கிய கர்த்தாக்களையும், அவர்களின் மொழிபெயர்ப்பாளர்களையும், இவற்றை ஒருங்கிணைக்கும் வர்த்தகர்களையும், எல்லாவற்றையும் வெட்டி, ஒட்டி, கருத்துச் சொல்லும் எடிட்டர்களையும் ஒருங்கிணைக்கிறது. ஐந்து இதழ்கள் வெளியாகி இருக்கின்றன.

Makeshift_Magazines_Covers_Law_Order

”நீங்க எப்படி வாழ வேண்டுமென்று போதிக்காமல், நான் ஆலோசனைகளை சொல்லித் தருவதை விட, உங்க வாழ்க்கை எப்படி நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற தீர்வுகளைத் தருவது முக்கியமானது” என்னும் கொள்கைப்படி மேக்‌ஷிஃப்ட் (Makeshift) நடக்கிறது. நைஜீரியாவின் குக்கிராமங்களில் வீட்டிலேயே தயாராகும் விமானங்களைச் சொல்கிறார்கள். மெக்சிகோவின் போதைக் கடத்தல்காரர்களோடு உலாவி, அதையும் பதிகிறார்கள். சீனாவின் கொந்தர்கள், எவ்வாறு சீனப் பெருஞ்சுவரை உடைத்து கணினி சுதந்திரத்தை நாடுகிறார்கள் என்பதையும் செய்திக் கட்டுரை ஆக்குகிறார்கள். பன்னிரெண்டு இதழ்கள் வெளியாகி இருக்கிறது.

Esopus_22

இலக்கியம் படித்து களைத்துப் போனது மூளை. கொஞ்சம் கலை வெளியீடுகள் பக்கம் ஒதுங்கினேன்.

கலையும் மருத்துவமும் ஒருங்கிணையும் புள்ளியை ஈஸோப்பஸ் (Esopus) சிறப்பிதழாகக் கொணர்ந்து இருக்கிறது. செம தடிமனான பத்திரிகை. ஐநூறு பக்கங்களுக்கு மேல் இருக்கும். எல்லாத் தாள்களும் கெட்டித் தாள். நடு நடுவே இடைச் செருகலாக பதாகைகள், அந்தக் கால மருத்துவக் குறிப்புகள், வெளியீடுகள். இந்த இதழுக்குப் பங்களிப்போர் பட்டியல் மேலும் மலைக்க வைக்கிறது: ஓவியக் கலைஞர்கள், அறுவை மருத்துவர்கள் போல் விதவிதமான வைத்தியர்கள், எழுத்தாளர்கள், மனநோய் வைத்தியர்கள், மனநலக் காப்பகக்காரர்கள், மனநல சிகிச்சை தருபவர்கள், சினிமாக்காரர்கள், பல் வைத்தியர்கள், செவிலிகள், கவிஞர்கள், பொறியாளர்கள், மருத்துவ கலன் தயாரிப்பவர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள், வைத்தியசாலை நிர்வாகிகள், மருத்துவமனை சிப்பந்திகள், இசை விற்பன்னர்கள், புகைப்பட நிபுணர்கள், உள்ளரங்கு வடிவமைப்பாளர்கள், இரத்தம் எடுப்பவர்கள், வரைபுத்தகம் எழுதுபவர்கள், பேராசிரியர்கள்…

புரட்ட புரட்ட சரித்திரமும், சிற்பமும், உருவாக்குதலும், இறப்பும், கருவியாக்கமும், உயிரும் நிறைந்து இருக்கிறது.

BR-MayJune2015_cover-medium

சபீல் ரஹ்மான் பெயரைப் பார்த்துதான் பாஸ்டன் ரிவ்யூ பத்திரிகையை எடுத்தேன். தற்கால செய்தியை அலசி இருந்தார்கள். ஒரு பிரச்சினை. அதைக் குறித்து ஒரு முக்கிய கட்டுரை. அதற்கு பத்து விதமான எதிர்வினைகளையும் மாற்றுக் கருத்துகளையும் வெளியிட்டு இருந்தார்கள்.

இன்றைய பொழுதில் வேலைக்காரர் இன்றி கொள்ளை இலாபம் சம்பாதிப்பதே இலட்சியம். கார்களே வைத்துக் கொள்ளாமல், கார் ஓட்டுனர்களையும் பணிக்கு அமர்த்தாமல், பில்லியன் பில்லியனாகப் புரட்டும் ஊபர் (Uber); ஹோட்டல்களை வைத்துக் கொள்ளாமல், தங்குமிடங்களையும் வாடகைக்கு எடுக்காமல், உலகெங்கும் விடுதிகளை நடத்தும் ஏர் பி அண்ட் பி (Airbnb); செய்தியார்களே இல்லை என்றாலும் உலகின் அனைத்து மக்களும் நொடிக்கு நொடி செய்தி அறிந்து கொள்ளும் தளமாக இயங்கும் ஃபேஸ்புக்; இதே போல் அலிபாபா, அமேசான், பே-பால் (Paypal) என பல நிறுவனங்கள் அசையாச் சொத்து வைத்துக் கொள்வதில்லை; ஊழியர்களையும் நியமிப்பதில்லை; அதனால், மிகக் குறைந்த விலையில் தங்கள் சேவையை, வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறார்கள்.

அரசாங்கம் எப்பொழுது மூக்கை நுழைக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்? மக்கள் நலன் பாதிக்கும் போது, அதற்கேற்ற சட்டதிட்டங்களை அரசு நிறைவேற்ற வேண்டும் எனக் கோருகிறோம். நாம் அதிகம் பணம் செலவழித்து, பொருள்களை வாங்கும்போது, நம்முடைய ஆதாயத்திற்காக அரசு, அந்த அநியாயக் கொள்ளைக்கார நிறுவனத்தைக் கட்டுப்படுத்தப் போராடுகிறோம்.

ஒரு பொருளின் விலையை மட்டும் பார்த்து, அந்தத் துறையில் போதிய அளவு போட்டி நிலவுகிறதா என்பதையும் கணித்துப் பார்த்து, முடிவெடுத்தது அந்தக் காலம். இன்றோ, அந்த நிறுவனம் எவ்வாறு தன் அசுரபலத்தை பிரயோகிக்கிறது, எவ்வாறு தன் வீச்சை பயன்படுத்துகிறது என்பதை ஆராய்ந்து, அதன் படி முடிவெடுப்பது அவசியம் என சபீர் வாதிடுகிறார். அமேசானுக்குப் போட்டியாக கூகுள் இருக்கலாம். ஆனால், அவர்களின் அரசியல் என்ன? தூரயியங்கி முதல் பிட் காயின் வரை எப்படி அவர்கள் தங்களுடைய நுகர்வோருக்கும், சிப்பந்திகளுக்கும், பொருள் விற்போருக்கும் ஆக்கபூர்வமான வகையில் இயங்குகிறார்கள் என்பதை ஆய்ந்தறிந்து, புரிந்து கொண்டு, அதற்கேற்ப சட்டவரையறைகளை உருவாக்க வேண்டும் என்கிறார்.

இணையம் என்றால் என்ன என்றே ரெஹ்மானுக்கு புரியவில்லை என்பது முதல் அனைவரும் தொழிலாளிகளாவும், உற்பத்தியாளராகவும், வர்த்தகராகவும் இருக்கும் திறமூல சமூகம் எவ்வாறு வருங்காலத்தில் இயங்கும் என்பது வரை பலதரப்பட்ட விமர்சனக் கட்டுரைகள் தொடர்கின்றன.

இப்பொழுது மண்டை மெல்ல ‘போதும்’ என்றது. இருந்தாலும் Trans/lation என்று சொன்னதால் விட்னெஸ் எடுத்தேன்.

Witness_Lit_Magz_Online_Issues_Translation

வாசியுங்கள்.

ஜெயமோகன் அமெரிக்க வருகை

விதுரர்களின் வீடுகள்

மகாபாரதத்தில் புகழ் பெற்ற கதை இது.

கௌரவர்களின் தலைநகரமான ஹஸ்தினாபுர நகரத்திற்கு பகவான் கிருஷ்ணன் வருகிறார். நீண்ட பயணத்திற்கு பின் களைப்போடு காணப்படுகிறார் கிருஷ்ணன். எல்லோரும் அவரவர் வீட்டிற்கு அழைக்கிறார்கள்.

விஷ்ணு சஹஸ்ராமம் அருளிய பிதாமகர் பீஷ்மர் அழைக்கிறார்: “என் வீட்டில் தங்குவாயா கிருஷ்ணா?”

அரசன் துரியோதனன் சொல்கிறான்: “நல்ல விருந்தைத் தயார் செய்திருக்கிறேன். சகல சௌகரியங்களும் செய்திருக்கிறேன். பட்டு மெத்தையோடு, கச்சேரிகளும், நடன நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்திருக்கிறேன். எங்கள் அரணமனைக்கு வா கிருஷ்ணா!”

பிருஹஸ்பதியின் அவதாரமான துரோணாச்சாரியார் சொல்கிறார்: “உன் ஆத்ம நண்பன் அர்ஜுனனின் குருவான என் வீட்டிற்கு வாயேன்… கிருஷ்ணா!”

வேத வியாசர் போன்று சப்தரிஷிகளில் ஒருவரான ஆச்சாரியார் கிருபரும் தன் இல்லத்திற்கு அழைக்கிறார்.

முற்பிறவியில் மகாவிஷ்ணுவின் மிகச்சிறந்த பக்தனான பிரகலாதனாக இருந்த பாலிகன் அழைக்கிறார்.

அந்த வீதியின் மூலையில் இருக்கும் சிறு குடிலைக் காண்பித்து, “அந்த வீடு யாருடையது?” என்று கிருஷ்ணர் கேட்கிறார். ”அது உன்னுடைய வீடு.” என்கிறார் விதுரர். அங்கே தங்கப் போவதாக கண்ணன் அறிவிக்கிறார்.

அங்கே சென்று விதுரரின் மனைவி அளித்த வாழைப்பழத் தோல்களை உண்டதாகக் கதை வளரும். அவ்வாறு பல பெரிய பெரிய அழைப்புகள் இருந்தாலும், அவர்களையெல்லாம் விட்டு விட்டு, எளியவர்களின் வீடுகளில் ஜெயமோகன் தங்கத் திட்டமிட்டு இருக்கிறார்.


JeMo-writer-jayamohan-tamil-authors-Jeyamohan

पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति ।
तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मनः ॥९- २६॥

பத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் யோ மே ப⁴க்த்யா ப்ரயச்ச²தி |
தத³ஹம் ப⁴க்த்யுபஹ்ருதமஸ்²நாமி ப்ரயதாத்மந: || 9- 26||

ய: ப⁴க்த்யா = எவர் அன்புடனே
பத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் = இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும்
மே ப்ரயச்ச²தி = எனக்கு அளிப்பவன் ஆயின்
ப்ரயதாத்மந: = முயற்சியுடைய அவர்
ப⁴க்த்யுபஹ்ருதம் = அன்புடன் அளித்த
தத் அஹம் அஸ்²நாமி = அவற்றை நான் அருந்துகிறேன்

இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடைய அன்னவன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான்.


இந்த முறை அமெரிக்க வருகையின் போதும் பாஸ்டனிலும் மூன்று நாள் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார். ஜூன் 23 மாலை முதல் ஜூன் 26 காலை வரை நியு இங்கிலாந்து பகிதியில் இருப்பார். அவரை சந்திக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.

மற்ற இடங்களுக்கான முடிவுறாத இறுதி பயணத் திட்டம்:
ஜூன் 26, 27, 28 (வெள்ளி – ஞாயிறு) – வாஷிங்டன் டிசி
ஜூன் 29, 30 & ஜூலை 1 – நியு ஜெர்சி, நியு யார்க்
ஜூலை 2 & 3ஃபிலடெல்ஃபியா, பென்சில்வேனியா
ஜூலை 4கனெக்டிகட்
ஜூலை 5 முதல் 10 – டொலீடோ, டெட்ராய்ட், மிச்சிகன், பிட்ஸ்பர்க்
ஜூலை 11,12,13ராலே, வடக்கு கரோலினா
ஜூலை 14 முதல் சான் ஃபிரான்சிஸ்கோ

தொடர்புடைய பதிவுகள்:

ஜெயமோகன் வலையகம் :: கனடா – அமெரிக்கா பயணம்: இயல் விருது பெறுவதற்காக நான் வரும் ஜூன் 10 அன்று கனடா கிளம்புகிறேன். 11 டொரெண்டோவில். 13 அன்று இயல்விழா. இருபத்தைந்து வரை கனடா.


சென்ற 2009ல் வருகை புரிந்த போது:

1. 9 more Meet the Author Jeyamohan Events: Listings | ஜெயமோகன் நிகழ்ச்சிகள்

2. பாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழுத்தாளர் ஜெயமோகன் | புகைப்படங்கள்

3. ஜெயமோகனின் பன்னிரு முகங்கள் | பயணத்தின் போது எடுத்த படங்கள்

4. அமெரிக்கா: ஜெயமோகன்.இன்

5. அமெரிக்கா திட்டம்..: 2009 புறப்பாடு

6. அமெரிக்கா பயணம்: 2009 – jeyamohan.in

7. Interview with Jeyamohan: Videos & Audio Chat | வீடியோக்கள், ஒலிக்கோப்புகள், நேர்காணல் பதிவுகள்

8. Obla Vishvesh :: Three days with Jayamohan | ஆங்கிலப் பதிவு

9. ஃப்ளோரிடாவில் ஜெயமோகன் | சிறில் அலெக்ஸ் – புகைப்படக் கோப்புகள்

10. ஆல்பெனியில் எழுத்தாளர் ஜெயமோகன் | ஓப்லா விஸ்வேஷ்

JeMo-Fiction_Novelist-jayamohan-tamil-authors-Jeyamohan

IBM Layoffs

அது 1787ஆம் ஆண்டு. ருஷியாவின் ராணியாக இருந்த பேரரசி காதரின், போர் நடந்திருந்த பிரச்சினை பூமிகளைப் பார்வையிடச் சென்றார். கிரைமியாவில் அப்பொழுதுதான் சண்டை முடிந்து சமாதானம் அரும்ப ஆரம்பித்திருந்தது. தன்னுடைய தூதர்களுடனும் அமைச்சர்களுடனும் புடை சூழ இரண்டாம் காதரின் திக்விஜயம் துவங்கினார். கிரைமியாவில் ருஷியர்களை குடியமர்த்துவதில் ஏற்படும் முன்னேற்றங்களை அறிவது இந்தப் பயணத்தின் முதல் நோக்கம். அமைதி தவழ்ந்து எல்லாம் சொர்க்கமாக மாறுகிறது என்பதை உலகிற்கு பறை சாற்றுவது உப நோக்கம்.

பேரரசியாருடன் கிரெகரி பொட்டம்கின் என்பவரும் உடன் உறுதுணையாக வந்திருந்தார். இந்தப் பகுதியின் அறிவிக்கப்படாத ராஜாவாக இருந்த பொட்டம்கினுக்கு சில சிக்கல்கள் இருந்தன. போர் முடிந்தவுடன் எந்தவித ஆதாரமும் இல்லாத பகுதியில் புதிதாக குடிபுக ருஷியர்கள் தயாராக இல்லை. அந்தப் பகுதிகள் பாலைவனம் போல் காட்சி தந்தன. ஆனால், அரசியாருக்கோ புறக்காட்சி முக்கியம். அரசி பவனி வரும்போது அந்தப் பகுதிகள் மினுக்க வேண்டும். மக்கள் நிறைந்து புழங்க வேண்டும். குட்டி நகரங்கள் வேண்டும்.

என்ன செய்வது?

தன்னுடைய ஆட்களை அழைத்து அடுத்து செல்ல இருக்கும் இடத்தை முன்பே ஓதி விடுவார். அவர்களும் அந்தப் பகுதிக்கு சென்று காலனி அமைத்து, நல்லதொரு கண்கவர் காட்சியை காதரின் அரசியாருக்கு தந்து விடுவார்கள். இரவில் பொட்டம்கின் உடன் அரசியார் சல்லாபிக்கும்போது அவர்கள் போக இருக்கும் அடுத்த ஊருக்கு அதே குழுவினர் மாறுவேடம் தரித்து, தங்களின் குடிசைகளையும் குடில்களையும் போட்டு ஏமாற்றும் வித்தையைத் தொடர்ந்தார்கள்.

பொட்டம்கின் மீது அரசியாருக்கு பெருமகிழ்ச்சி உண்டானது. செல்ல்மும் இடமெல்லாம் கிராமங்களும் உள்கட்டமைப்புகளும் நிறைந்திருப்பதை செய்து காட்டிய பொட்டம்கின் கல்லா நிரம்பி வழிந்தது. ஆனால், ரஷியாவின் வீழ்ச்சி இங்கேதான் துவங்கியது.

Oil on canvas portrait of Empress Catherine the Great by Russian painter Fyodor Rokotov_Wiki

ஐ.பி.எம் நிறுவனமும் கடந்த பல்லாண்டுகளாக இலாபத்தை தங்களுடைய கணக்குப் புத்தகத்தில் காட்டி வருகிறது.

பங்குச்சந்தையில் இயங்கும் ஒவ்வொரு நிறுவனமும் வருடத்திற்கு நான்கு முறை தங்களுடைய வரவு-செலவு பொதுமக்கள் முன்னும், முதலீட்டாளர்கள் முன்னும் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறே ஐ.பி.எம்.மும் வெளிப்படையாக தங்களுடைய இலாபம் ஈட்டும் பிரிவுகளையும், அதிக வளர்ச்சி அடைந்த துறைகளையும் விரிவாக சொல்லி வருகிறார்கள்.

150 பில்லியன் டாலர்களுக்கு மதிப்பிடப்படும் கம்பெனி, அதில் 25 பில்லியனை தன்னுடைய பங்குகளை வாங்கவோ, ஈவுத்தொகை (டிவிடெண்ட்) விநியோகிக்கவோ செலவழிக்கிறது. இருபதாண்டுகளுக்கு மேலாக இதே வித்தையை பயன்படுத்தி தன்னுடைய பங்கு மதிப்பீட்டை, ஒவ்வொரு காலாண்டு அறிக்கையின்போதும் உயர்த்திக் காட்டி வருகிறது.

IBM_Shares_Buyback_Stocks_Markets_Wall_Street_Prices_EPS

எடுத்துக்காட்டாக ஒரு சிறிய கணக்கைப் பார்க்கலாம்.

ஐ.பி.எம்.மின் பங்குகள் 1,100 பங்குகள் சந்தையில் உலவுகின்றன. இந்தக் காலாண்டில் 55 டாலர்களை நிகர இலாபமாக ஈட்டி இருக்கிறார்கள். அதன்படி, ஒரு பங்கிற்கு ஐந்து பைசா இலாபம் என கணக்கிடலாம்.

அதாவது, 55 / 1100 = 0.05

ஆனால், ஐந்து பைசாவிற்கு பதில், ஆறு பைசா இலாபல் காட்ட வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? இருநூறு பங்குகளை திரும்பப் பெற்றுக் கொண்டு விடுவார்கள். இப்பொழுது 1,100 பங்குகளுக்குப் பதிலாக 900 பங்குகளே சந்தையில் இருக்கும்.

அதாவது 1,100 – 200 = 900

இப்பொழுது அதே 55 இலாபம் ஈட்டினால் ஒவ்வொரு பங்கிற்கும் அதிக இலாபத்தைக் கணக்காக காட்டலாம்: 55 / 900 = 0.061 = 6.1 பைசா.

இலாபம் அதிகரிக்கவில்லை. ஆனால், வெளியே உலவும் பங்குகளின் படி பார்த்தால், ஒவ்வொரு பங்கிற்கும் அதிக மதிப்பு என கணக்கு வித்தை மூலம் காட்டலாம். இதே நுட்பத்தை 1994 முதல் ஐ.பி.எம். செய்கிறது.

கூகுள் நிறுவனம் தன்னுடைய பங்கு உரிமையாளருக்கு நயா பைசா கூட ஈவுத்தொகையாக விநியோகிப்பதில்லை. டிவிட்டர் போல், அமேசான்.காம் போல் நஷடத்தில் இயங்காவிட்டாலும், தன்னுடைய இலாபம் அனைத்தையும் ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மீண்டும் முதலீடாக தங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்கிறது.

பங்குதாரரிடம் கொடுத்து, அவர் செலவழிப்பதை விட, தாங்களே சேமிப்பில் வைத்திருந்து, தானியங்கியாக ஓட்டும் கூகிள் கார் போன்ற நவீன கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துவதால், அதே பணம் பன்மடங்காகப் பல்கிப் பெருகும் என்பது இதன் தாத்பர்யம். ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் கூட வெகு சமீபம் வரை ஈவுத்தொகையை எப்பொழுதும் தன்னுடைய பங்குதாரர்களுக்கு விநியோகித்ததில்லை. அடுத்த தலைமுறை எக்ஸ்-பாக்ஸ், புத்தம் புதிய ஐ-வாட்ச் போன்றவை உருவாக்கி, தங்களைத் தாங்களே உருமாற்றிக் கொள்வதால், அதற்கான அவசியமும் ஏற்பட்டதில்லை.

தன் மீது தனக்கே நம்பிக்கை இல்லாத நிறுவனங்களும், பங்குதாரரை சுண்டி இழுக்கும் கவர்ச்சியாக பணத்தைத் தூண்டில் போடும் நிறுவனங்களும், பாரம்பரியமான அந்தக் கால பழக்கவழக்கங்களைக் கொண்ட வட்டி போடும் நிதி நிறுவனங்களும் காலாண்டு தோறும் ஈவுத்தொகை கொடுக்கிறது. அந்த வர்க்கத்தில், தொழில் நுட்பம் போன்ற நொடிக்கு நொடிக்கு புது அரிதாரம் கோரும் துறையில் இயங்கும் ஐ.பி.எம். அங்கம் வகிப்பது ஆச்சரியமளிக்கும் விஷயம்.

ஆண்டுக்கணக்காக, இவ்வாறு கணக்குப்பதிவில் ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு, மாட்டைத் தூக்கி மந்தையில் போட்டு ஒருவாறாக இலாபக் கணக்கைப் பதிந்தாலும், தொலைநோக்கில் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த செய்முறைகள் அவநம்பிக்கையை உருவாக்கியது. அவர்கள் மெல்ல ஐ.பி.எம். பங்குகளை விற்றுவிட்டு, புதிய தலைமுறையான ஃபேஸ்புக், சேல்ஸ்ஃபோர்ஸ் என மாறத் துவங்கினர்.

Bllomberg_Business_Week_IBM_Blue_Bloods_CEOs_Rometty_Leaders_Presidents_Management_Faces_Timeline

இப்பொழுது கத்திரி போடும் தருணம். பட்ஜெட்டில் மட்டும் அல்ல. அளவுக்கதிமாக விஞ்சி குவிந்து நிற்கும் ஐபிஎம் பணியார்களையும் கத்திரி போட்டுக் குறைக்கும் படலம். இந்தியாவில் டி.சி.எஸ். செய்தது போல், மிகப் பெரிய அளவில் ஆள்குறைப்பு துவங்கி இருக்கிறது. நாலே கால் இலட்சம் ஊழியர்களைக் கொண்ட உலகளாவிய படையில் இருந்து ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோரை துரத்துகிறார்கள். நால்வரில் ஒருவர் நீக்கப்படுகிறார்.

இது ஐ.பி.எம் ஊழியர், அவர்களுடைய அரட்டைத் தளத்தில் எழுதிய பதிவு:

பதினான்கு வருடமாக ஐ.பி.எம்.மில் வேலை பார்க்கிறேன். என்னுடைய கடைசி நாள் ஃபெப்ரவரி 27. என் வயது 58. சட்டப் பிரிவில் இருக்கிறேன். தலைசிறந்த பணியாள் என்பதில் இருந்து கடுமையான பணியாள் என்று கடந்த சுற்றில்தான் கீழிறக்கப்பட்டேன். கடந்த காலாண்டில் மட்டும் நூறு மில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள ஒப்பந்தங்களை முடித்துக் கொடுத்தேன். ஒரே ஒரு பட்டுவாடா. ஆறு மாதம் பணியில் இருந்தால், அதற்கு ஒப்பாக ஒரு வார சம்பளம் தந்து அனுப்புகிறார்கள். அதிகபட்சமாக 26 வார சம்பளம்தான் தருகிறார்கள். வேலையில் இருந்து துரத்தப்பட்ட நாள் முதலாக ஆறு மாதம் வரை உடல்நல காப்பீடு கொடுக்கிறார்கள்.

இவருக்குக் கிட்டத்தட்ட ஆறு மாத/அரை வருட சம்பளம் கிடைத்திருக்கும். அதாவது, அடுத்த ஆறு மாதத்திற்கு அவர் எந்தப் பணியும் செய்யவேண்டாம். வெறுமனே, புதிய வேலையைத் தேடிக் கொண்டால் போதுமானது.

திருமலை படத்தில் விஜய் பேசும் “வாழ்க்கை ஒரு வட்டம்டா! இங்க ஜெயிக்கிறவன் தோப்பான்; தோக்கிறவன் ஜெயிப்பான்!” பன்ச் வசனம் உங்களுக்கு நினைவுக்கு வரலாம். அமெரிக்காவில் ஐந்தாண்டிற்கு ஒரு சுழற்சி எப்பொழுதும் இருக்கிறது. அது சிறிய புயல் மட்டுமே. பத்தாண்டிற்கு ஒரு முறை சுனாமிப் பேரலையே அடிக்கிறது. அந்த சமயத்தில் கணக்குப் புத்தகங்களில் பெரும் நஷ்டங்களைப் போட்டு, நிறுவனத்தையே புரட்டிப் போட்டு, அரசியலில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தி, மொத்தமாக சாதாரணர் முதல் பெருந்தலைகள் வரை மாற்றங்களை உணர வைத்து போகி கொண்டாடுகிறார்கள்.

ஆனால், இது மட்டுமா இப்போதைய இந்த ஐ.பி.எம். வீழ்ச்சிக்கு மூலகாரணம்?

அது 2012ஆம் ஆண்டு. அமெரிக்காவின் சி.ஐ.ஏ.விடம் எக்கச்சக்கமாக தகவல்கள் குவிந்த சமயம். எட்வர்ட் ஸ்னோடென் சொல்லிய மாதிரி இணையத்தின் மூலை முடுக்கில் இருந்து எல்லா விஷயங்களையும் துருவிய சமயம் அது. அவர்களின் கணினிகளில் இடம் போதவில்லை. தேவைக்கேற்ப கூட்ட வேண்டும்; அலசி ஆராய்ந்து கடாசிய பிறகு கணினிகளைக் குறைக்க வேண்டும். உங்களில் யாரல் செய்ய முடியும் என எல்லோரிடமும் கேட்டார்கள்.

முதல் சுற்றில் ஐந்து பேர் தேர்வானார்கள். இன்றளவிலும் கூகுள் நிறுவனத்திடம் சொல்லிக் கொள்ளும்படியான, நம்பகமான, ஸ்திரமான மேகக் கணி அமைப்பு கிடையாது. அவர்கள் நிராகரிக்கப் பட்டார்கள். இறுதிச் சுற்றில் இரண்டே நிறுவனங்கள். ஒன்று பழம் பெருச்சாளியான அமேசான். இன்னொன்று நேற்றைய 2011 மழையில் 2012ஆம் ஆண்டில் முளைத்திருந்த ஐ.பி.எம். அப்படித்தான் சிஐஏ அவர்களை நோக்கியது. ஐந்தாண்டுகளுக்கு மேலாக உலகெங்கும் பல்வேறு கணினிகளை திறம்பட மேய்க்கும் அமேசானா? அல்லது இப்பொழுதுதான் களத்தில் குதித்திருக்கும் அனுபவமில்லாத ஐ.பி.எம்.மா?

பத்தாண்டுகளுக்கான காண்டிராக்ட். அறுநூறு மில்லியன் டாலர்கள் பெறுமான ஒப்பந்தம் அமேசானுக்குக் கிடைத்தது. ஏற்கனவே நோக்கியாவும் ஃபைஸர் (Pfizer) மருந்து நிறுவனமும் உபயோகிக்கும் அமேசான்.காம் மேகக்கணினியத்திற்கும் எவருமே பயன்படுத்தி நிரூபிக்காத ஐ.பி.எம்மின் மேகக் கணினியத்திற்கும் நடந்த போட்டியில், ஐ.பி.எம். சல்லிசான விலையில் முடித்துக் கொடுப்பதாக ஒப்பந்தப்புள்ளி கொடுத்திருந்தும், அதிக விலை கேட்ட அமேசான்.காம் வென்றது.

பாதி விலைக்கு தாங்கள் கொடுத்த டெண்டரை சி.ஐ.ஏ. நிராகரித்ததை எதிர்த்து, ஐ.பி.எம். வழக்குத் தொடுத்தது. எழுபதுகளில் ஒரு முதுமொழி உலவியது: “என்னவாக இருந்தாலும் ஐ.பி.எம் நிறுவனத்தின் கணினியை வாங்கு. உன்னை முதலாளிகள் வாழ்த்துவார்கள். காரியம் கைகூடும்!” அந்தப் பழமொழி இப்போது ஐ.பி.எம். நிறுவனத்திடம் கொடுத்தால் காரியம் குட்டிச்சுவராகும் என்று மாறிப் போய் இருக்கிறது.

ஏன்?

– எங்கே சிக்கனமாக இருக்க வேண்டும் என்று ஆராயாமல் எல்லாவற்றிலும் கஞ்சத்தனம் பார்த்தது
– வேலை பார்ப்பவர்களிடம் உண்டாக்க வேண்டிய உத்வேகத்தை ஊட்டாத நிலை
– எவரை எதற்காக நீக்குகிறோம் என்று தெரியாமல், அரசியல் காரணங்களால் பணிநீக்கம்
– தொழில் நுட்ப வளர்ச்சியில் அக்கறையின்மை
– பூதாகரமான நிறுவனம்
– பிற புகழடையும் கண்டுபிடிப்புகளையும் நிறுவனங்களையும் வாங்குவதன் மூலமே வளர்ச்சி காண்பிப்போம் என்னும் கொள்கை
– கணக்கு காட்டி, பணத்தை சேமிப்பதன் மூலம் தாற்காலிக இலாபம் காண்பிக்கும் நோக்கம்

இவை ஒவ்வொன்றையும் விரிவாகப் பார்ப்போம்.

Cloud_Bluemix_CIA_AWS_EC2_Azure_SForce_SAP_Google_Storage_Costs_amazon_versus_ibm